உரையாடல்

மடத்து வீடு- ராம் செந்திலிடம் சில கேள்விகள்

  1. விடலை ஜிலுஜிலுப்புகள் மட்டுமே கொண்ட சிறுகதைகள் தமிழில் மலிந்து இருக்கின்றன. முதற்பார்வைக்கு இந்த “மடத்து வீடு”ம் அப்படித்தான் தோன்றுகிறது. கதையின் மையம் அதையும் தாண்டி வாசக பார்வைக்கு வேறு எதுவும் வைக்கிறதா?

‘முதற்பார்வைக்கு’, என்று தெளிவாக வரையறுத்ததற்க்கு நன்றி. கதையின் மையத்தை படிப்பவர்கள் கண்டடைவார்கள் என்று நம்புகிறேன். அவர்களே சொல்வதுதான் சரி என்று நினைக்கிறேன். இந்தக் கதையை படித்த என் நண்பர் ஒருவர் இப்படி சொன்னார். காமம் மனிதர்களை வேட்டையாடுகிறது. முற்றா இளம்புல்லை, முதிய பசு நாவால் தடவி இன்புறுவதைபோல், முடிவதாயில்லை காமம். பெண்ணுடலை காமத்துய்ப்புக்கான விளைபொருளாய் மட்டும் காணும் கண்களில், உணர்வுகளும், காயங்களும் படும் தருணங்களும் உண்டல்லவா? அப்படி ஒரு தருணமே இந்த கதையின் மையம் என்றார், இருக்கலாம்.

  1. இந்த மையக்கருத்துக்கான inspiration, உத்வேகம் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?

நான் பார்த்த மனிதர்களிடமிருந்தே இந்த கதை உருவாகியது. திருமண வயதைத் தாண்டிய பின்னரும், தமது கனவுகளை உண்டு செரித்தபடி தனித்திருக்கும் பெண்கள், அவர்களுக்கு கிடைக்கும் வெளி, அந்த வெளியை பயன்படுத்திக்கொள்ளதான் எத்தனை வேடங்கள், சாதனங்கள். தீராப்பசியுடன் தனித்திருக்கும் மிருகமென காமம் என் மனதில் படிமம் கொள்கிறது. அந்த மிருகத்தின் நுட்பங்களும் தந்திரங்களும் சொல்லித் தீராதவை. அவையே இந்த கதை எழுவதற்க்கான உத்வேகமாக அமைந்தது.

  1. சிங்கப்பூர் இலக்கியம் பற்றி அண்மையில் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகள் கவனிக்கத்தக்கவை. அந்தக் கட்டுரைகளில் அவர் எழுதியவற்றில் எது உங்களுக்கு முக்கியமாகத் தெரிகிறது, ஏன்?- ஒன்றே ஒன்று மட்டும் சொன்னால் போதும்.

ஜெயமோகன், இலக்கியம் குறித்து எழுதிய எல்லா கட்டுரைகளுமே ஒரு துவக்க நிலை எழுத்தாளனுக்கு, இலக்கிய வாசகனுக்கு முக்கியமானவை. ஜெயமோகனின் சிங்கப்பூர் பயணத்தில் விளைந்த மிக முக்கிய நன்மை என்று இந்த கட்டுரைகளை கூறுவேன். அந்த கட்டுரைகளில் எனக்கு முக்கியமாக தெரிந்த ஒன்றை மட்டும் சொல்வதென்றால், ஏன் ஒரு கதை எழுதப்படவேண்டும் என்கிற நோக்கம் பற்றி அவர் கூறும் கருத்து. உணர்வு ரீதியாக, அறிதல் ரீதியாக முன்பில்லாத ஒன்றைச் சொல்வதே நல்ல சிறுகதை என்று சொல்கிறார். வெற்று கிண்டல்களையும், அன்றாட நிகழ்ச்சிகளையும், பொது உண்மைகளையும் சொல்லி முடிவது எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை.  மிகச்சிறந்த சிறுகதையாளர்கள் எழுதிச்சென்ற மொழியில் நாம் எழுதுகிறோம் என்கிற கவனம் எழுத வருபவர்களுக்கு தேவை என்று நினைக்கிறேன். எழுதும் கதைகள் கலையாக அடையப்போகும் வெற்றி/தோல்வி பற்றி பதட்டம் தேவையில்லை. ஆனால், நேர்மையான நோக்கம் முக்கியம் என்று கருதுகிறேன்.

  1. நீங்கள் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர்கள், விரும்பி வாசித்த படைப்புகள் சில?

ஜெயமோகன், அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி, எஸ். ராமகிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களை தொடர்ந்து படிக்கிறேன். இளம் எழுத்தாளர்களில், கே.என். செந்தில், இசை, போகன் சங்கர் போன்றவர்கள் விருப்பமானவர்களாக இருக்கிறார்கள்.

டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’, தாஸ்தோவெஸ்கியின் ‘கரம்சோவ் சகோதரர்கள்’, ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’, ‘கொற்றவை’, ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’, க.நா.சுவின் ‘பொய்த்தேவு’ முதலிய நாவல்கள் என்னுள் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியவை.

2015 புத்தக வெளியீடுகள்: பிரக்ஞை பதிப்பகம்

பிரக்ஞை பதிப்பகம்

இவ்வருட புத்தக கண்காட்சிக்கு ‘பிரக்ஞை’ வெளியீடாக வரவிருக்கும் புத்தகங்களைப் பற்றி தமிழ்ப்பெண் விலாசினியுடன் பதாகை நிகழ்த்திய மினஅஞ்சல் உரையாடல்.

நல்ல புத்தகங்களை தங்கள் பதிப்பகம் வழியே கொண்டு வரவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயலாற்றும் பிரக்ஞை பதிப்பகத்தாரின் முயற்சிகள் வெற்றி பெற உளங்கனிந்த வாழ்த்துகளை பதாகை தெரிவித்துக் கொள்கிறது.

பதாகை: உங்கள் பதிப்பகம் எத்தகைய புத்தகங்களைப் பதிப்பிப்பதில் கவனம் செலுத்துகிறது? அதன் நோக்கங்கள் என்ன?

பிரக்ஞை: நல்ல புத்தகங்கள் ‘பிரக்ஞை’ வழி வர வேண்டும். இதுதான் முதலும் முற்றுமான குறிக்கோள். ஆனால், இப்பதிப்பகம் தொடங்கலாம் என்று திட்டமிட்டபொழுது நண்பர் திரு பி.என்.எஸ் பாண்டியனுக்கும் எனக்கும் தோன்றிய முதல் விஷயம், இதுவரை வந்த பல நல்ல புத்தகங்கள், இன்றைய தேதியில் படிப்பதற்குக் கிடைக்காத புத்தகங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பது. அதனால் முதல் முயற்சியாக, கொஞ்சம் கடினமான பரிசோதனைதான் என்றாலும், நல்ல பழைய புத்தகங்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்தோம். முதலில் நான்கு புத்தகங்களைக் கொண்டு வர முயன்றோம். நான்காவது புத்தகத்தைக் கொண்டு வருவதில் சில பிரச்சனைகள் இருந்ததால், இந்த முறை சென்னை புத்தகச் சந்தைக்கு மூன்று புத்தகங்கள் கொண்டுவருகிறோம். அடுத்தடுத்து, இந்த வருடத்திற்குள் இன்னும் சில புத்தகங்கள் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். (more…)

மாதொருபாகனைத் தொடர்ந்து – பெருமாள்முருகன்

– உரையாடல்: எழுத்தாளர் பெருமாள்முருகன்

Alavayan arrhanari

மிழிலக்கியம் பயின்ற அரசுக்கல்லூரி விரிவுரையாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பெருமாள் முருகன் தமிழிலக்கியத்தின் முக்கியமான அடையாளமாக விளங்கிவருபவர். மக்கள் கலாச்சார கழகம் வழியே மார்க்சிய ஈடுபாட்டு கொண்டவர், இலக்கிய பங்களிப்பாக ஏறுவெயில், திருச்செங்கோடு, கூளமாதாரி, மாதொருபாகன், பீக்கதைகள், நீர் மிதக்கும் கண்கள், நிழல்முற்றத்து நினைவுகள் என்று பெருமளவு கொங்குநாட்டு வட்டாரத்து வரலாற்றை ஏழு நாவல்கள், நான்கு சிறுகதை தொகுப்புகள், நான்கு கவிதை தொகுப்புகள், எட்டு கட்டுரை நூல்கள் மற்றூம் மொழிபெயர்ப்புகள், தொகுப்புகள் என்று மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார். சூழலை மீறி செயல்படும் உத்வேகத்துடன், திசைதெரியாத பெருங்குகைக்குள் வாசிப்பு என்னும் விளக்கோடு தொடர்ந்து பயணப்படுவதாக சொல்லும் பெருமாள் முருகனின் பயணத்தின் அடுத்த அடையாளமாக இரு புதிய நாவல்களை – ஆலவாயன் மற்றும் அர்த்தநாரி – 2015 புத்தக வெளியீட்டு விழாவிற்கு காலச்சுவடு கொண்டு வருகிறது. அதையொட்டி அவரோடு பதாகை நடத்திய மின்அஞ்சல் உரையாடல்.

பதாகை: நிலத்தை துறந்து மொழியைப் பற்றிக் கொண்ட தலைமுறையின் முதல் பதிவாக ‘ஏறுவெயில்’ நாவலை உருவாக்கினீர்கள்.  ஆறு நாவல்களுக்கு பிறகு ஆலவாயனையும் அர்த்தநாரியையும் உருவாக்கும்போதும் அதே தவிப்பை உணர்கிறீர்களா? ஒருவிதமான நிறைவை நோக்கி நகர்வதாக நினைக்கிறீர்களா?

பெருமாள்முருகன்: ஏறுவெயிலை எழுதியபோது தயக்கமும் பயமும் கொண்டிருந்தேன். நாவல் நமக்கு வருமா, எழுத்துப் பயிற்சி நாவல் எழுதப் போதுமா, மாபெரும் நாவல்கள் இருக்கும் மொழியில் பிரசுரத்துக்குத் தகுதியான அளவிலேனும் எழுத இயலுமா என்றெல்லாம் தயக்கம். திசைவழி தெரியாத பெருங்குகை ஒன்றுக்குள் புகுந்து செல்லும் பயமும் இருந்தது. வாசிப்பு என்னும் விளக்கின் துணை ஒன்றைக்கொண்டே உள்ளே சென்றேன். எதிலாவது மோதும்போது பயணத்தை நிறுத்துவேன். சோர்வும் சலிப்பும் தோன்றிப் பின்வாங்கத் தூண்டும். துணிவைப் பெற்று மேற்செல்லச் சில நாட்கள் ஆகும். எங்கிருந்து வந்தது என்று தெரியாத ஒருவகையான அசட்டுத் துணிச்சலே என்னைச் செலுத்தியது. உண்மையில் அதை எழுதிய காலம் தவிப்பு மிகுந்த காலம்தான். இப்போது அத்தகைய தயக்கமும் பயமும் இல்லை. ஆனால் அசட்டுத் துணிச்சலே இப்போதும் செயல்படுத்துகிறது. இது கொஞ்ச தூரம் நடந்து வந்துவிட்டதால் ஏற்பட்டிருக்கும் அசட்டுத் துணிச்சல் என்று புரிகிறது. நிறைவை நோக்கிய நகர்வு  என்று சொல்ல முடியுமா? அப்படி ஒரு நிறைவைக் கண்டடைவது சாத்தியமா? இன்னும் எவ்வளவோ பயணப்படும் பேராசை இருக்கிறது. நிறைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்றே நினைக்கிறேன். (more…)

2015 புத்தக வெளியீடுகள் – பேயோன்!

– உரையாடல்: பேயோன்

  துண்டிலக்கியம் என்ற வகைமை தமிழிலக்கியதற்கு இவர் அளித்த கொடை எனக் கொள்ளலாம். ஏறத்தாழ ஏழு வருடங்களாக இணையத்தில் இடையறாது எழுத்தாளராக இயங்கி வருபவர், உண்மையில் ஒரு புனைவு பாத்திரமாகத்தான் உருவாக்கப்பட்டவர். இவருடைய படைப்புகளைப் போலவே இவரும் சட்டகங்களை உடைத்துக் கொண்டு புனைவையும் தாண்டி நிலையான ஆளுமையாக உருவெடுத்திருக்கிறார். 2015ம் ஆண்டு ஜனவரி புத்தக கண்காட்சியை முன்னிட்டு, நாம் அவரிடம் இருந்து என்ன படைப்புகளை எதிர்பார்க்கலாம் என்று சிறு உரையாடல்.

பதாகை: இணையத்தில் ஒரு புனைவு பாத்திரமாக அரங்கேறிய புதிதிலேயே, அவ்வருட புத்தக கண்காட்சியில் உங்கள் துண்டிலக்கிய தொகுப்பை அச்சு பிரதியாக கொண்டு வந்தீர்கள். இப்போது ஆனந்தவிகடன் புகழ் பேயோனாகிய பிறகு இணைய வெளியீடு மட்டும் போதும் என்று நீங்கள் ஒதுங்கியிருப்பதன் காரணம் என்ன?

பேயோன்: என்னுடைய அபிமானப் பதிப்பாளரின் சுமையைக் குறைக்கத்தான். ஆழி பதிப்பகம் சிறு முதலீட்டில் நடத்தப்பட்டுவரும் பதிப்பகம். பதிப்பாளர், நண்பர் செ.ச. செந்தில்நாதன் இப்போது அரசியலிலும் தீவிரமாகிவிட்டதால் அவர் புத்தகங்களை கவனமாகத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறார். எனவே செப்டம்பர் வந்ததும் அவரைத் தொலைபேசியில் அழைத்து ‘இந்த முறை என்ன டைட்டில்ஸ் போடறதா இருக்கீங்க?’ என்று நைச்சியமாகக் கேட்கும் பழக்கத்தைச் சென்ற ஆண்டிலிருந்தே விட்டுவிட்டேன். ஆழியில் கிடைத்த சுதந்திரம் வேறு எந்தப் பதிப்பகத்திலும் எனக்குக் கிடைக்காது என்று தோன்றியதால் இணையத்தில் மட்டுமே வெளியிடுவது என்று முடிவு செய்தேன். இணைய எழுத்தாளன் என்ற அடைமொழி கொஞ்சம் வசவு மாதிரி இருப்பதால் அதை நான் விரும்புவதில்லை என்றாலும் இப்போது நான் அப்படித்தான் ஆகியிருக்கிறேன். ‘ஃபேஸ்புக் எழுத்தாள’னாக இருப்பதற்கு இது மேல். (more…)