– ஆர். அஜய்-
- நிலவில் பூத்த முல்லை – உ.வே.சா.
தலைப்பு கட்டுரையில் ‘பத்துப் பாட்டை’ தேடி அலைகிறார் உ.வே.சா. ஒரு ஊரில் இரவு நேரத்தில் சுவடி கிடைக்கிறது. நிலவொளி மட்டுமே உள்ள இடம். அவசர அவசரமாக சுவடிக்கட்டை பிரிப்பவரின் கண்ணில் ‘முல்லைப் பாட்டு’ படுகிறது, நிலவில் முல்லை பூக்கிறது.
புனைவின் சாயல் கொண்ட பல நிகழ்வுகள் இந்த நூலில் உள்ளன. வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் பிறந்து சொத்து அனைத்தையும் ஜப்தியில் பறி கொடுத்து, தன்னிடமுள்ள- அன்று விற்றிருந்தால் கணிசமாக தொகை கிடைத்திருக்கக்கூடிய – சுவடிகளை இலவசமாக விட்டுச் சென்ற, இறுதிவரை தன் பெயரைச் சொல்லாதவர் பற்றிய பதிவு சிறுகதையாக மாறக் கூடியது. இவை ‘உண்மை புனைவை விட புரிந்து கொள்ள கடினமானது’ என்பதை மீண்டும் நிரூபிக்கின்றன.
திருமணமான மாணவர்கள் தங்கள் செலவுக்காக தந்தை கொடுப்பது போதாமல், மாமனாரை அதிகாரம் செய்து பணம் பெற்றுக்கொள்வது அன்றைய சமூகச் சூழலை, கடந்து போன காலத்தை குறித்த ஒரு சித்திரத்தை அளிக்கிறது என்றால் வகுப்பறைகளில் மாணவர்களின் குறும்பு சில இடங்களில் காலம் அப்படியே உறைந்துள்ளதைச் சுட்டுகிறது.
இறுகிப் போகாத, இன்னும் வாசகனுக்கு அணுக்கமாக இருக்கும் புன்சிரிப்பை உருவாக்கும் நடையும், உள்ளன. ‘சீவக சிந்தாமணியின்’ செய்யுள்களில் ஒரு வரி குறித்து குழம்பிக் கொண்டிருக்கிறார். அந்த காலகட்டத்தில் முதியவரொருவர் அவர் இல்லத்தில் அவ்வப்போது வந்து உண்பது வழக்கம். எப்போதும் போல் அவர் புலம்பிக்கொண்டே இருக்க, உ.வே.சா வழக்கம் போல் ‘சிறிதும் சிரத்தை’ இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்ததை விவரிக்கிறார். பேச்சுவாக்கில் கிழவர் ஏதோ பழமொழி சொல்ல, அது சீவக சிந்தாமணியில் உ.வே.சாவிற்கு சந்தேகம் உள்ள பகுதியோடு தொடர்புடையது. உடனே உற்சாகமாகும் உ.வே.சா கிழவரிடம் பேச்சு கொடுத்து தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்கிறார்.
தனக்கு நேர்ந்த அனுபவங்களை விலகலோடு பார்க்கும் மனநிலையும் அவருக்கு உள்ளது. வார இறுதிகளில், மற்றும் பிற விடுமுறை நாட்களில், அவர் வீட்டில் இருந்ததாகவே தெரிவதில்லை, பெரும்பாலும் ஏதேனும் தொலைவில் உள்ள ஊருக்கு சுவடி தேடி செல்கிறார். சுவடி தேடிச் சென்ற இடத்தில் அங்கிருப்பவர் இவரை கவனிக்காமல் இருப்பது போல் பாவனை செய்ய அதை பொருட்படுத்தாமல் அங்கேயே நின்றிருந்ததை எந்த சுயபச்சாதாபமும் இல்லாமல் விவரிக்கிறார்.
இரு நிகழ்வுகள். மணிமேகலையில் ‘கும்மாயம்’ என்ற சொல்லின் அர்த்தத்தை தேடுகிறார். கும்பகோணத்தில் ஒரு கோவிலுக்கு செல்பவருக்கு பட்டாச்சாரியார், பல பிரசாத சிற்றுண்டிகளை தருகிறார். அவற்றின் பெயர்களை கேட்கும் உ.வே.சா, ஒன்றின் பெயர் ‘கும்மாயம்’ என்று கேள்விப்பட்டதும் உணவை மறுக்கிறார். அச்சிற்றுண்டி நாவிற்கு தந்த சுவையை விட, அந்தப் பெயர் காதில் விழுந்தபோது உருவான சுவையே சிறந்தது என்கிறார். வில்லி பாரதத்தில் ‘செண்டை’ என்ற சொல் ஒரு செய்யுளின் உபயோகிக்கப்பட்டுள்ள விதம் ‘பூச்செண்டை’ குறிக்காது என்று தெரிந்தாலும் வேறெதை குறிக்கிறது என்று அதன் அர்த்தத்தை தேடுகிறார். கோவிலொன்றில் தரிசனத்தின்போது, பெருமாள் கையிலிருந்த ஆயுதத்தை பார்ப்பவர் அது என்னவென்று கேட்க, ‘செண்டு’ என்கிறார் அர்ச்சகர். உ.வே.சா அகக்கண்ணில் திரௌபதியை இழுத்து வரும் துச்சாதனன்தான் இப்போது தெரிகிறான். அவர் சந்தேகம் தீர்கிறது. அறுசுவை உணவை விட, இறை தரிசனத்தை விட அவற்றின் மூலம் தன் சந்தேகங்கள் தீர்ந்ததே அவருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்.
அன்றாட லௌகீக வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும், அப்போது என்ன செயல் செய்து கொண்டிருந்தாலும் அவர் மனம் உள்ளூர இலக்கியங்கள் குறித்தே யோசித்துக் கொண்டிருந்துள்ளது.
2. The Ancestor’s Tale – Richard Dawkins.
டாக்கின்ஸின் சரளமான நடையில் நமது பரிணாம வளர்ச்சியின் பாதையை அறிய உதவும் சுவாரஸ்யமான பயணம் இந்த நூல். என்னைப் போன்ற பொது வாசகர்களையும் அன்னியப்படுத்தாமல், அதே நேரத்தில் தான் சொல்லும் விஷயத்தை மிகவும் எளிமையாக்கி நீர்த்துப் போகச் செய்யாமலும் கம்பி மேல் நடக்கும் வித்தை டாக்கின்ஸ்சுக்கு புதிதல்ல. அதே நேரத்தில் ஓரளவுக்கு மேல் எளிமைப்படுத்த முடியாத துறைசார்ந்த நுணுக்கமான விஷயங்கள் சம்பந்தப்பட்ட சில இடங்களில், இவை பொது வாசகருக்கு கடினமாக இருக்கலாம், எனவே அடுத்த ‘சில’ பக்கங்களை நீங்கள் கடந்து செல்லலாம், அதனால் இழப்பு இருக்காது என்றும் சொல்லி விடுகிறார். இவையும் பொதுவாசகனுக்கு உதவுவதோடு அவன் குறைந்தபட்ச தயாரிப்பு செய்து கொள்ளவும் உதவுகின்றன.
முற்றிறுதியாக பல விஷயங்களை சொல்பவர், அனைத்திற்கும் பதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்ற தரப்பை எடுப்பதில்லை. அறிவியல் இன்னும் இறுதி முடிவுக்கு வராததையும் குறிப்பிட்டு அவை குறித்த தன் யூகங்களையும் (இவை யூகங்கள் மட்டுமே என்பதையும் வெளிப்படையாக) கூறுகிறார். உதாரணமாக நம் பரிணாம வளர்ச்சியில் இன்னொரு கிளையான, நம் பங்களிகளான, நியாண்டர்தால்கள், அவர்களுக்கும் நமக்கும் இருந்திருக்கக்கூடிய உறவு பற்றி அவர் குறிப்பிடும் சில கருத்துக்கள். இந்தப் புத்தகம் வெளிவந்தபின் இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு ‘நியாண்டர்தால்களுக்கும் நமக்குமான உறவுக்கான சான்றுகள் மரபணு சார்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
Backward chronology and forward chronology are each good for different purposes. Go backwards and, no matter where you start, you end up celebrating the unity of life. Go forwards and you extol diversity.’
என்று நூலின் ஆரம்பத்தில் டாக்கின்ஸ் அழகாகச் சொல்வதில் உள்ள பரவசத்தை நூல் முழுதும் உணர முடிகிறது.
- Letters to a Nation – Nehru’s letters to his chief ministers
தன் இலட்சியங்கள் மற்றும் மனசாட்சிப்படி உறுதியாக இருந்த, அதே நேரத்தில் பிடிவாதமாக இல்லாமல் எப்போதும் மாற்று தரப்புடன் உரையாடலில் ஈடுபட தயாராக இருந்த ஜனநாயகவாதியை இந்த கடிதங்களில் காண்கிறோம். “I cannot advise you because the responsibility is yours and you have to judge finally”, “,”I would like you to give some thought in your province also to the question of the reorganization of the government machinery with a view to seeing whether it is functioning at the maximum possible level of efficiency,” போன்ற வரிகள் இந்தக் கடிதங்களில் அடிக்கடி வருவது, கூட்டாட்சி முறையில் அவருக்கிருந்த நம்பிக்கையை உணர்த்துகிறது. தரையில் கால் பதித்தபடி வானத்தை தொடும் கனவில் -இரண்டிற்கும் உள்ள முரண்பாடை எப்போதும் சமன் செய்தபடி – உள்ளவரும் இந்த கடிதங்களில் இருக்கிறார் . திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் காலதாமதங்களை, தடங்கல்களை எதிர்கொண்டு பல்வேறு பிரிவினைகளால் வெவ்வேறு திசைகளில் இழுக்கப்படும் தேசத்தை பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ஜனநாயக வளர்ச்சிக்கும் இட்டுச் செல்ல முயன்ற ஒரு தலைவர் இக்கடிதங்கள் மூலம் நமக்குத் தெரிகிறார். அனைத்தையும் விட, “I have supreme faith in India, a faith which transcends even an accumulation of faults and futilities on our part” என்ற ஒரு கடிதத்தில் குறிப்பிடும், எந்தச் சூழலிலும் மேம்பட்ட இந்தியா குறித்த தன் கனவை, நம்பிக்கையை இழக்காத ஒருவர்தான் நூல் முழுதும் உள்ளார்.
- To the Brink and Back – Jairam Ramesh
1991ல் தாராளமயமாக்கத்தின் முதல் அடிகளை நரசிம்ம ராவும், மன்மோகன் சிங்கும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது தொழில்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ரெட்டி மற்றும் , MoS ரங்கராஜன் குமாரமங்கலத்துடனான அது குறித்த பேச்சுவார்த்தைகளில் முட்டுச் சந்தில் நிற்கிறார்கள். மன்மோகன் சிங் குமாரமங்கலத்தை சந்தித்து அவர் தந்தை குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டு நாட்டின் நலனிற்கான மாற்றங்களை அவர் ஏற்றுக்கொண்டிருப்பார் என்று விளக்குகிறார். இந்த சந்திப்பு முடிந்து வெளியே வரும் குமாரமங்கலம் ‘Yaar, Sardar ne kamaal kar diya‘ என்று ரமேஷிடம் சொல்கிறார். உரையாடல் அடுத்து சுமூக முடிவை எட்டுகிறது என்பது நமக்கு புரிகிறது. மன்மோகன் சிங் குறித்து இப்போது பொது புத்தியில் படிந்திருக்கும் எண்ணத்திற்கு நேர்மாறான நிகழ்ச்சி இது.
80களின் ஆரம்பத்தில் தாராளமயமாக்கம் குறித்து எடுக்கப்பட்ட முயற்சிகளில் ஆரம்பித்து, 91ம் பெரும் கொந்தளிப்பான சூழலில் அது அமலுக்கு கொண்டு வரப்பட்டதை இத்தகைய திரைக்கு பின்னால் நடந்த விஷயங்களோடு ரமேஷ் சொல்கிறார்.
நாம் காணும் நரசிம்ம ராவ், சிங் மற்றும் ரமேஷ் போல இயல்பாகவே தாராளமயமாக்கம் குறித்த நேர்மறை எண்ணங்கள் கொண்டவர் அல்ல, சூழ்நிலையால் அதை நோக்கி தள்ளப்பட்டவர். கட்சியிலேயே அதற்கு பலத்த எதிர்ப்பை சந்தித்தவர். இந்த பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போது, தாராளமயமாக்கம் அமல்படுத்துவதில் சிங் போன்றவர்களின் திட சித்தத்தை விட ராவ் உறுதியாக இருந்ததே பெரிய விஷயமாக இப்போது தோன்றுகிறது. ஆனால் ரமேஷ் அதை உணர்ந்து போல் தெரியவில்லை அல்லது அதை ஒப்புக்கொள்ளவில்லை. ராவ் சமரசம் செய்ய நேரும் போதெல்லாம் அதை அவரின் தனிப்பட்ட தோல்வியாக சித்தரிக்கிறார். ஆனால் வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் நரசிம்ம ராவை தள்ள காங்கிரஸ் செய்த முயற்சிகள் பெருமளவில் வெற்றி பெற்று விட்ட நிலையில் அவருக்கான இடத்தை இந்த நூலில் ரமேஷ் அளிப்பது வரவேற்க்கத்தக்கது.
- The Complete Adventures of Feluda – Volume 1&2 – Satyajith Ray
சிறார், வளரிளம் பருவத்தினருக்காக எழுதப்பட்ட துப்பறியும் கதைகள் என்றாலும், குற்றங்களின் முடிச்சுக்களை கட்டமைப்பதும், வாசகனை ஏமாற்றாமல் போலி துப்புக்களோடு புதிருக்கான விடையையும் அவன் முன் வைப்பதும், இறுதியில் நுட்பமாக முடிச்சவிழும்போது அவனை – கண் முன் இருந்த விடையை கவனிக்காமல் இருந்ததற்காக – வியப்படைய செய்வதும் இவற்றை பெரியவர்களுக்கான கதைகளாகவும் ஆக்குகின்றன. டார்ஜிலீங்கின் பனிப்பொழிவும், எப்போதும் மெல்லிய மழை பெய்து கொண்டிருக்கும் திபெத்தும், காசியின் கங்கைக்கரை சித்திரங்களும், ராஜஸ்தானின் ஒளி வீசும் மணற்பரப்பும், வட இந்திய பழங்கால கோட்டைகளும் உருவாக்கும் விரிவான நிலவியலை பெரும்பாலான குற்றப்புனைவுகளில் காண இயலாது. எனினும் இந்தக் கதைகளுக்கான உத்தேச வாசகப்பரப்பு சிறார், வளரிளம் பருவத்தினர் என்பதால், இவற்றை ‘தூய்மையாக’ – ஆண்-பெண் உறவுப் பிறழல்கள், ரத்த விரயம், அதீத வன்முறை போன்ற குற்றப்புனைவின் சம்பிரதாய அம்சங்கள் இல்லாதிருப்பது – வைத்திருக்கிறார் ரே. குறிப்பாக முதல் தொகுதியில் பெண்களே இல்லை என்று சொல்லலாம்.
இந்த தூய்மையின் தாக்கம் எந்தளவுக்கு உள்ளதென்றால், இரண்டாம் தொகுதியின் ஒரு கதையில் ‘அழகாக இருந்தார்’ என்று ஒரு பெண்ணை பற்றிய ஒற்றை வரி வர்ணனை வாசகனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கக்கூடும். இது குறித்து தன் முன்னுரையில் குறிப்பிடும் அவர், பெரியவர்கள் இவற்றைப் படிக்கும்போது இவற்றின் வாசகப் பரப்பை நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார்.
- அசோகமித்திரன் கதைகள் மறுவாசிப்பு –
மொத்தமாக இல்லாமல், குறிப்பாக இவற்றை படிக்க வேண்டும் என்ற நோக்கமில்லாமல் வாசிக்கப்பட்ட கதைகள். தனது சானட் ஒன்றில் ஷேக்ஸ்பியர் ஒரே அகத்தூண்டுதலைப் பற்றி ஏன் பாடுகிறேன் என்ற கேள்வியை எழுப்பி
“For as the sun is daily new and old,
So is my love still telling what is told”
என்று முடிக்கிறார். ஒவ்வொரு நாளும் சூரியனை புதிதாக பார்ப்பது போல், ஒவ்வொரு மறுவாசிப்பிலும் ஏதேனும் புதிதாக பெற்றுக் கொள்ள இந்தக் கதைகளில் உள்ளது.
Like this:
Like Loading...