கம்பன்

வ.வே.சு ஐயர் எழுதிய ‘காவிய ரசனைச் சுவை’

வ.வே.சு ஐயர் தனது கம்பராமயண ஒப்பியல் ஆய்வுக்கு முன்னுரையாக எழுதிய காவிய ரசனை சட்டகம் பற்றிய கட்டுரை (தட்டச்சு உதவி – ரா. கிரிதரன்).

காவிய இலக்கணத்தை நிர்ணயிப்பதில், பாரத தேசத்து இலக்கண ஆசிரியர் நமக்குத் தெரிந்தமட்டில் விவரிக்காமல் விட்டு விட்ட சில அம்சங்களை மேனாட்டு இலக்கண ஆசிரியர் விஸ்தாரமாக விவரித்திருக்கிறார்கள். நம் நாட்டு இலக்கண ஆசிரியர் பொருள் யாப்பு அணிகளைப் பற்றி நன்றாக ஆராய்ந்திருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அலங்கார சாஸ்திரத்தை நம் நூலாசிரியர் ஆழமாக ஆய்ந்திருக்கிறார்கள் என்பதிலும் ஐயமில்லை. ஆனால், காவிய சமக்ரத்தைப் பற்றின ஆராய்ச்சிகள் இதுவரை வந்திருக்கும் நூல்களில் விஸ்தாரமாகக் காணப்படவில்லை. பெருங்காப்பியத்தில் என்ன என்ன விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று இலக்கணங்களில் ஓர் பெரிய ஜாபிதா காணப்படும். ஆனால் காவியம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், என்ன என்ன இலக்கணங்கள் பெருங்காப்பியத்துக்கு இன்றியமையாதவை, பெருங்காப்பியங்களின் போக்குக்கும் ஏனைய காவியங்களின் போக்குக்கும் என்ன வித்தியாசம், என்ற விஷயங்கள் நம் இலக்கணங்களில் விசாரிக்கப்படவில்லை. மேலை நாடுகளில் அரிஸ்தோத்தலன் காலம் முதற்கொண்டு இலக்கண நூலாசிரியர் காவிய அமைப்பைப் பற்றிப் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் வெளியிட்டிருக்கிறார்கள். நம்மவர் காட்டிலுள்ள மரங்களைத் தனியே கவனித்துக்கொண்டு வந்து அரணியத்தை மறந்து விட்டார்கள்; மேனாட்டவர் மரங்களை கவனித்ததோடு கூட அரணியத்தைப் பற்றியும் விசேஷமாக ஆராய்ச்சிகள் செய்துள்ளார்கள்.

காவிய சமக்ர இலக்கணத்தை தாண்டி கவி தனது அலங்கார இலக்கணத்தில் பாவிக அணியை வர்ணிக்கும் போது சில வார்த்தைகளில் சொல்லி முடித்து விடுகிறான். அரிஸ்தோத்தலன், ஓராஸியன், புவாலோ, வீதா, பெயின் முதலிய மேனாட்டு இலக்கண ஆசிரியர்கள் விரிவாகச் செய்துள்ள ஆராய்ச்சியைப் பற்றி இங்கு ஓரிரண்டு வார்த்தைகள் சொல்லுவது பொருந்தும். அவ்விலக்கணக்காரர்களுடைய பிரதான அபிப்ராயம் என்னவென்றால்,

ஓர் பெருங்காப்பியம், அனேக அவயங்கள் சேர்ந்ததாயினும் ஒரு ஜீவப் பிராணியைப் போல ஓர் தனிப்பிண்டமாயிருத்தல் வேண்டும். தலை, இடை, கடை என்ற பாகுபாடும், அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது ஏகம் என்கிற உணர்ச்சியும் அக்காவியத்தில் தோன்ற வேண்டும். ஒவ்வொரு அவயமும் தன் தனக்கு முன்னே உள்ள அவயத்தோடும், பின்னேயுள்ள அவயத்தோடும் பிணைக்கப் பெற்று ஒன்று என்கிற உணர்ச்சியை வளர்க்க வேண்டும்.

பஞ்ச தந்திரக் கதை, விக்ரமாதித்தன் கதை, மதன காமராஜன் கதை, அராபியக் கதை முதலிய கதைகளை ஒரு பக்கமும், அரிச்சந்திர புராணம், கந்த புராணம், ராமாயணம் முதலிய காவியங்களை ஓர் பக்கமும் வைத்துச் சீர்தூக்கிப் பார்த்தால் நாம் மேற்காட்டிய இலக்கணத்தின் கருத்து விளங்கும். பின் சொல்லிய மூன்றிலும் ஒரே ஒரு வஸ்து தான் காவியமாக எழுதப்படுகிறது. இவற்றுள் அனேக உப கதைகள், வர்ணனைகள் உபாக்கியானங்கள் வருகின்றன என்பது வாஸ்தவம். ஆனால் இவை அனைத்தும் கதையின் மத்திய சம்பவத்துக்குத் துணையாக நிற்கின்றன. மத்திய சம்பவத்துக்கு வித்தாகவோ, மத்திய சம்பவத்தினின்று இயற்கையாக விளைந்த விளைவாகவோ விளங்குகின்றன.

முன் சொல்லப்பட்ட நூல்களோ அவை செய்யுள் நூல்கள் அல்ல என்பது ஓர் பக்கமிருக்க,, தனிக் கதைகளின் கேவலம் சேர்க்கையே ஆகும். அவைகளில் மத்திய சம்பவத்திற்கும் கதைகளுக்கும் உள்ள சம்பந்தம் மிக மிக லேசானது – அதைச் சம்பந்தம் என்று கூட சொல்லத் தகாது. மகா காவியத்தின் பகுதிகளுக்கோ இத்தகைய ஒட்டின்மை இராது. அவற்றின் சம்பந்தம் ஜீவ சம்பந்தம். உபக்கியானங்கள் முதலிய புற அணிகள் பெருங்காப்பியத்தினுள் அளவுக்கு மீறி இரா, மற்ற உறுப்புகளெல்லாம் காவியத்துக்கு அகத்துறுப்புக்களாகவே விளங்கும்.

அவ்வுறுப்புகளில் எதை எடுத்து விட்டாலும் கதை ஊனமாகிவிடும்.

பாவிக அணி என்று நாம் கூறுவதை மேனாட்டவர் ஆர்க்கிதெக்தோனிக்ஸ் (ARCHITECTONICS) என்கிறார்கள். இப்பதத்துக்கு ரசனை அல்லது காவிய நிர்மாணம் எனப் பொருள் கொள்ளலாம். இது மனைச் சிற்ப நூலினின்று எடுக்கப்பட்ட பெயராகும். ஓர் அரண்மனையையோ கட்டடத்தையோ கட்டுவதற்கு அனந்த கோடி ரீதிகள் உண்டு. ஆனால் சில ரீதிகள்  தாம் கட்டடத்துக்கு அழகு தரும். பெரும்பாலானவை வானத்தையும் சூரிய ஒளியையும் மூடுமே ஒழிய செளந்தரிய உணர்ச்சியை திருப்தி செய்யா. அப்படியே ஓர் காவியத்தைப் பல மாதிரி எழுதலாம். நள சரித்திரம், ராமாயணம், பாரதம், அரிச்சந்திர புராணம் முதலிய காவியங்களெல்லாம் அவ் அவ் ஆசிரியர்களின் மனோதர்மத்துக்கு ஏற்றபடி எழுதப்பட்டுள்ளன. சில சம்பவங்களைச் சிலர் விரிக்கிறார்கள். மற்றவற்றைச் சுருக்கி விடுகிறார்கள். வேறு சிலர் முற்சொல்லியவர்க்கு மாறாகச் செய்கிறார்கள். சிலர் சில சம்பவங்களை எடுத்து விட்டு புது சம்பவங்களைப் புகுத்துகிறார்கள். ரசிகனுடைய மனதிற்குத் திருப்தி உண்டாகும்படி எந்த கவியின் அமைப்பு அமைந்திருக்கிறதோ அவனைத்தான் ரசனையில் சிறந்தவன் என்று சொல்லலாகும். சொல்லப்போனால் பெருங்காப்பியங்களுக்கு ரசனையே இன்றியமையாதது. ரசனா சுகம் இல்லாமல் வேறு எந்த சுகம் இருப்பினும் பெருங்காப்பியங்கள் பெருமையுள்ளனவாகா.

காவிய ரசனையை மகா வித்துவான் ஒருவருடைய விஸ்தாரத்துக்கு ஒப்பிடுவோம். எல்லா வித்துவான்களும் ஏழு ஸ்வரங்களைத்தான் – அல்லது அர்த்த ஸ்வரங்களையும் சேர்த்துக்கொண்டால் இருபத்திரண்டு ஸ்வரங்களைத்தான் – கையாள்கிறார்கள். இந்த ஸ்வரங்கள் துவாரா நவரஸங்களைத்தான் ஊட்டுகிறார்கள். ஆனால் ஒரு வித்துவானுடைய ஆலாபனத்துக்கும், இன்னொரு வித்துவானுடைய ஆலாபனத்துக்கும் ஒரு பாடகன் ஒரு கீர்த்தனை பாடுவதற்கும் இன்னொருவன் அதே கீர்த்தனையைப் பாடுவதற்கும் எத்தனை பேதம்! ஒருவன் ராகத்தின் ஸ்வரங்களில் யாதொரு அபஸ்வரத்தையும் கொண்டு வந்து கலக்காமல் பாடி விடுகின்றான். ராகம் பிழையின்றி சாஸ்திரரோக்தமாகப் பாடப்பட்டிருக்கும். லயத்தில் யாதொரு பிசகும் இருக்காது. கேட்போர் ‘சபாஷ்’ என்று சொல்லிக்கொண்டும் சிரக்கம்பம் செய்து கொண்டும் கேட்பார்கள். ஆனால் அவர்களுடைய இருதயத்தில் யாதொரு சலனமும் ஏற்பட்டிராது. அலை வந்து மோதியும் அசையாத பாறை போல் அவர்களுடைய இருதயமும் அப்படியே இருந்துவிடும். இன்னொருவன் வருகிறான். அதே ராகத்தைப் பாடுகிறான். ஆனால், எல்லாரும் அமுத மழையில் சிக்கி அகப்பட்டவர்கள் போல் ஆகி விடுகிறார்கள். அவரவர்களுடைய சமஸ்காரத்திற்கேற்றபடி அவரவர்களுடைய இருதயம், மந்த மாருதத்தில் ஊசலாடும் பூங்கொம்பர் போலவும், சிற்றலைகளால் அசைந்தாடும் தாமரை போலவும், கருப்பஞ் சாற்றில் கரையும் கற்கண்டைப் போலவும், அக்னியின் நெகிழ்ந்து உருகும் மெழுகைப் போலவும் , தங்கத்தைப் போலவும் ஆகிவிடுகிறது.

அவர்களுடைய மனது புதிய உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கிவிடுகிறது. மனோ லோகத்தில் சித்திரத்துக்கு மேல் சித்திரம் தோன்றிக்கொண்டே வருகிறது. அவர்கள் லயப்பட்டு, வயப்பட்டுப் போய் விடுகிறார்கள். இந்தக் கலைஞனுக்கும் முன் சொல்லப்பட்ட கலைஞனுக்கும் உள்ள வித்தியாசம் இவனிடம் கனிவு இருந்தது, அவனிடம் அது இல்லை. ஆனால் அது மாத்திரமில்லை இவனுடைய பாட்டின் அமைப்பு மனோஹரமாக அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆவிருத்தமும் அதற்கு முன்னே பாடப்பட்ட ஆவிருத்தத்தனின்று இயற்கையாக வளர்ந்த வளர்ச்சியாகும்; அதே மாதிரி தனக்குப் பின்னே வரப் போகும் ஆவிருத்தற்குத் தோற்றுவாயும் ஆகும். ஒவ்வொரு ‘சங்கதி’யும் அந்தந்தப் பதங்களை அலங்கரிக்க விழுந்த அலங்காரமாகுமேயன்றி, பதங்களையே முழுக்கி மூடிவிடும் வெறும் சப்த சாலங்களாகா. ஒவ்வோர் ரசமும் போதிய அளவு விஸ்தரிக்கப்பட்டு இயற்கையான சோபானங்கள் வழியாக அதனோடு பொருந்தக்கூடிய வேறொரு சுவைக்கு வழிகாட்டிக் கொண்டு போகும். கடைசியாக எல்லா ஆவிருத்தங்களும் எல்லாச் சுவைகளும் இன்னலன் தெரிய வல்லாருடைய இருதயம் லயித்துப் போகும். ஓர் சமஷ்டி உணர்ச்சியை உண்டாக்கும்.

அதே மாதிரித்தான் ஒரு காவிய ரசனையும். காவியத்தின் தனித்தனிப் பாகங்களிலுள்ள இன்சுவை ஒரு பக்கமிருக்க, பாகத்தும் பாகத்துக்கும் உள்ள பொருத்தம் அழகாக இருப்பதோடு காவியமானது நம்ம சமஷ்டீகரணத்தைப் பெற்றிருக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு இந்த சஷ்டீகாரம் அழகாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு காவியமானது ரசிகருடைய இருதயத்தைக் கவர்ந்து எல்லாரும் விரும்பத்தக்கதாகும்.

கம்பராமாயணத்தில் உள்ள ரசனைச் சுவை மிகவும் உயர்ந்தது. ரசிகருடைய அறிவுக்கு அது அமுதமாக நிற்கின்றது. கம்பராமாயணத்தின் ரசனைச் சுவையை உணராமல் மற்ற சுகங்களை மாத்திரம் உணருகிறவர்கள் அதன் சுவையில் செம்பாதிக்கு மேல் இழந்து விடுகிறார்கள். ராமாயணத்தின் அழகை விஸ்தரிக்கிறவர்கள் ஒவ்வோர் செய்யுளின் அழகைத்தான் எடுத்துக்காட்டுகிறார்கள். ராமாயணத்தை ஓர் சிற்பியால் சமைக்கப் பெற்ற அரண்மையாகப் பாவித்து, அவ்வரண்மனையின் ஒவ்வோர் அவயத்துக்கும் மற்ற அவயங்களுக்கும் உள்ள பொருத்தத்தையும், அவயங்களுக்கும் அரண்மையின் சமக்ர அமைப்புக்கும் உள்ள பொருத்தத்தையும் வியக்தீகரித்து எடுத்துக்காட்டும் விமர்சனங்கள் இதுவரையில் வெளிவரவில்லை.

 

கல்லிடைப் பிறந்து கடலிடைக் கலந்து உயிரன உலாயதன்றே!

ரா கிரிதரன்

கடந்த வாரம் உணவு இடைவேளை நடைக்காக வழக்கமான தேம்ஸ் நதிக்கரையைத் தவிர்த்து கூழாங்கற்கள் பாவித்த சிறுதெருக்கள் வழியாக நடந்துகொண்டிருந்தேன். நடைபாதை ஓரத்தில் வயதான இரு தம்பதியினர் தொலைநோக்கி வழியாக சற்று தொலைவில் தெரிந்த டேட் கலைக்கூடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து செல்லும்வரை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தேன். தொலைநோக்கி வழியாகப் பார்ப்பதும், தங்களுக்குள் ஏதோ பார்வையைப் பகிர்ந்து சிரிப்பதுமாய் இருந்தனர். கடந்து செல்லும்போது அவர்களில் மூத்தவராகத் தெரிந்த பாட்டி `ஹாங்` என்று தேக்கிவைத்த சத்து எல்லாத்தையும் வெளிப்படுத்தினார். இருவரும் ஆரவாரமாய்க் கட்டிப்பிடித்துக்கொண்டனர். எனக்கு ஆர்வம் தாங்கவில்லை. யாருமே இல்லாத சாலையில் நின்றபடி அப்படி என்ன யுரேக்கா கண்டுபிடிப்பு எனப்பிடிபடாமல் கேட்டேவிட்டேன்.

`சிட்டி ஃபால்கன் இஸ் ஃபீடிங் தி பேபிஸ்`, என்றார். வல்லூறு ஊட்டிவிடுவதில் என்ன ஆச்சரியம்?

`நகரத்தில் வல்லூறைப் பார்ப்பது கடினம். அப்படியே பார்த்தாலும் அவை கட்டிடங்களுக்கு உயரே தங்கள் குஞ்சுகளைக் காப்பாற்றாது. தேம்ஸ் நதியைச் சுற்றியிருக்கும் பல தீவுகளிலுள்ள மரங்களில் பாதுகாப்பாக வைத்திருக்கும். நான் நாற்பது ஆண்டுகளாகப் பார்த்துவருகிறேன். இப்போது டேட் மாடியில் குஞ்சுகளோடு வருகிறதென்றால் என்ன அர்த்தம்? ` (more…)