கவிதையும் கேள்வியும்

கலைக்கப்படும் அமைதி

 நந்தா குமாரன்

சித்தப்பா
பின்னால் எரிந்து கொண்டிருக்கிறார்
Tata Sumo-விற்குள் நான்
தம்பியின் கைகளைப் பற்றியபடி
முன் இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்
பின் பக்கமிருந்து பாட்டியின்
அழுகுரல் கேட்கிறது
“எம் புள்ளைகள தகப்பனில்லாத
அனாதைகளாக்கிட்டு போயிட்டீங்களே”
Driver கூடப் புலம்புகிறார்
“நீங்க அழுதுட்டீங்க
என்னால உள்ளயும் சொல்ல முடியல
வெளியவும் சொல்ல முடியல சார்”
முந்தின தினம் மருத்துவமனையில்
நிகழ்ந்தவை நினைவிற்கு வருகின்றன
தங்கை Car-இல் இருந்து இறங்குகிறாள்
என்னை நோக்கித் திரும்புகிறாள்
“அண்ணா … அண்ணா …
அப்பாவுக்கு என்ன ஆச்சு அண்ணா …
அண்ணா அப்பா எங்கே அண்ணா …”
ஆறுதலுமில்லாமல் மாறுதலுமில்லாமல் நான்
“இனிமேல அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது”
“அண்ணா … அண்ணா … Please … Please …
இப்படியெல்லாம் சொல்லாதீங்க அண்ணா …
ஆண்டவா அப்பாவுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது”
“Office-லையே நேர்மையானவர்னு பேரெடுத்தவருங்க”
“எங்கே போனாலும் நடந்தே சலிப்பாரு”
சித்தியின் தேம்பல் நெஞ்சை அறுக்கிறது
“என் தம்பி கல்யாணத்துல இப்படி ஆகியிருச்சே … ஐயோ …”

‘அமைதியைக் கலைக்காமல் தத்துவத்தை போதிப்பது எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை’
– ஸ்பினோஸா

உயிரோசை
06.10.2008
Issue No. – 6​

ooOoo

இதுவரை நீங்கள் எழுதிய கவிதைகளை எப்படி பார்க்கிறீர்கள்? இனி எப்படிப்பட்ட சவால்களை எதிர்கொள்ள விரும்புகிறீர்கள்?

இந்தக் கவிதையை விளக்கத் தேவையில்லை. இதன் சோகம் உடனடியாகப் புரிந்துவிடுகிறது. இப்படிப்பட்ட கவிதைகளே விரிந்த வாசகர் பரப்பை உருவாக்குகின்றன.

“-[மைனஸ் ஒன்]1” கவிதைத் தொகுதியில், பகடி, தத்துவம், ஹைக்கூ, விஞ்ஞானப் புனைவு, அதீதக் கற்பனை, படிமம், குறியீடு, முரண் நகை, இருண்மை என பலதரப்பட்ட வடிவங்களை முயற்சித்திருக்கிறேன். லிமரிக் மற்றும் வெண்பாக்கள் தான் அதில் இல்லை. புதிர் தன்மை கொண்ட அரூப வடிவிலான இருண்மைக் கவிதைகளின் வசீகரம் என்னை எப்போதும் கவர்ந்ததாகவே இருக்கிறது. ஆனாலும் எளிமையாக, உடனடிப் புரிதலுடன், நேரடி உரையாடல் வகையிலான கவிதைகளையே இப்போது அதிகம் எழுத விரும்புகிறேன். கவிதையின் அடுத்த கட்டம் என்பது ஒரு நீண்ட கட்டுரைக்கான விஷயம். சுயகழிவிரக்க வார்த்தைகளைத் தவிர்க்க இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

கவிதை வாசிப்பு மனநிலை

நந்தா குமாரன்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சன்னிதிக்கு, சுகப்பிரசவ வேண்டுதல் நிறைவேற்றும் பொருட்டு வாழைத்தார் படைக்க, 2009இல் குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்பொழுது இந்தக் கவிதையின் தலைப்பும் சில வரிகளும் (மழைஉளி செதுக்கிய மேகவிக்ரஹ பிரதிஷ்டை) தோன்றின. பின் பெங்களூர் திரும்பியதும் கவிதையை முழுவதுமாக எழுதி முடித்தேன். இந்தக் கவிதையின் அடிநாதம் பிறப்பு / படைப்பு / ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குப் போவது, என்பதெல்லாம் சொல்லாமலே புரியும் என நினைக்கிறேன்.

nundhaa2

கேள்வி – “கவிதை வாசிக்கப் பழகும் புதுவாசகன் மேற்கொள்ள வேண்டிய மனநிலை எத்தகையதாக இருப்பது நல்லது?
உங்கள் கவிதையை அணுகுவது / புரிந்து கொள்வது எப்படி என நாசூக்காகக் கேட்கிறீர்கள். இது குறித்துப் பேசும் முன் …

-[மைனஸ் ஒன்]1: விடுபட்ட முன்னுரை

கொந்தளிப்பிற்குச் சற்று முன் அணைக்கப்படும் எரிமலைக் குழம்பைத் தேநீராகப் பருகும் உதாசீனத்தையும், எல்லோரும் உறங்கிய பிறகு கிடைக்கும் தனிமையான அமைதியின் நிம்மதியையும், சதா கொண்டாட்டத்தின் மீதே மிதக்க விரும்பும் உயிரின் ஏக்கத்தையும், வெளிப்படுத்தும் இக்கவிதைகளின் வாசகர் படைத்தவரல்லாது வேறொருவர் என்றாகும் போது அந்தப் புதிய வாசகருக்கு இந்த மொழி-நடை சிக்கலாகவும் அதனாலேயே சவாலாகவும் அமைந்துவிடுகிறது. வாசகர் வேண்டிய அர்தத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தை அளிக்கும் இக்கவிதைகள் நுண்புல நிலையில் இயங்குகின்றன. பலவகைப்பட்ட கவிதைகளையும் பரீட்சார்த்த ரீதியில் அணுகிப் பார்க்கும் இந்தப் பயணத்தில் பங்கு கொள்வதும் வெறுமனே வேடிக்கை பார்ப்பதும் அவரவர் விருப்பம். இவற்றின் மர்மங்களைத் திறக்கும் சாவிகளை வாசகரே தயாரித்துக் கொள்ளலாம். புனைவின் சுதந்திர வெளியை முழுவதும் அளந்து காட்ட முயலும் இக்கவிதைகள் படிமங்களாலும் கற்பனைகளாலும் ஒரு விநோத உலகின் இருப்பை உருவாக்கி அதை சாத்தியப்படுத்த வாசகரின் புத்தி பரிமாணத்தைச் சார்ந்து கிடக்கின்றன. ஒரு சித்திரமோ ஒளிப்படமோ முற்றிலும் வெளிப்படுத்தாமல் விடும் அதே ரகசிய அனுபவங்களை அமானுஷ்யமாகவோ அரூபமாகவோ இக்கவிதைகள் தருகின்றன; கனவில் நகரும் பிம்பங்களையும் பிரதியெடுத்துவிடுகின்றன.

கவிதைகளே பரவாயில்லை … சும்மா பயம் காட்டாதே என்கிறீர்களா … எனக்கே சற்று கூடுதலாகத் தான் தெரிந்தது, அதனால் தான் முன்னுரை வேண்டாம் என விட்டேன். இருண்மையான கவிதைகளை வாசிக்க எனக்குத் தெரிந்த ஒரு சூத்திரம் – புரிந்து கொள்வது என்பதை ஒரு நோக்கமாகக் கொண்டு அணுகாமல் அனுபவித்தல் என்ற திறந்த மனதோடு அணுக வேண்டும். சுயபரிசோதனை மற்றும் நினைவுகூறல் என்ற இரு முறைகளில் கவிதைகள் எழுதப்படலாம். நினைவுகூறல் வகைக் கவிதைகளில் ஒரு வாசகர் தன்னைத் தேடிக் கண்டடைவது எளிது … ஏனெனில் அவை வாசகரின் வாழ்வு மற்றும் அனுபவங்களை ஒரு ஏக்கமான நினைவாக மீட்டுத் தரும். ஆனால் சுயபரிசோதனை வகைக் கவிதைகள் கவிஞரின் அல்லது கவிதையின் பாடுபொருளின் உட்புற அகக் காட்சிகளாக விரிபவை. அவ்வகைக் கவிதைகள் முதல் முறை வாசகரை ஒரே வாசிப்பில் உடனடியாகத் தூண்டிவிடத் தவறலாம். ஆனால் தேர்ந்த வாசகர் இது தெரிந்து தான் இதற்குத் துணிந்து தான் உள்ளே வருவார். நேரடித் தன்மை கொண்ட கவிதைகளின் அழைப்பு விடுத்தல் பாணி, அரூபக் கவிதைகளில் குறைவு தான். கதவு சாத்தித் தான் இருக்கும், திறந்து கொண்டு தான் உள்ளே போக வேண்டும். வாசல் கதவைத் திறந்த வைத்து வாங்க வாங்க என்று எல்லாக் கவிதைகளும் சொல்லாது தான். ஆனால் நட்புணர்வோடு உங்களை அணுகும் பல கவிதைகளை இந்த மைனஸ் ஒன் தொகுப்பிலேயே காண முடியும். முற்றும் விளங்க வேண்டும் என முயற்சிக்கத் தேவையில்லை. ஒரு அளவிற்கு மேல் புரிந்து கொள்ள முயல்வது கட்டுடைத்துப் பார்ப்பது தேவையில்லை. புரிதலை எங்கே நிறுத்த வேண்டும் என்ற தெரிவு ஒரு வகை புத்திசாலித்தனமே. கவிஞர் சொல்வதைத் தான் வாசகர் புரிந்து கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமுமில்லை. தவறாகக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால் என்னை வந்து கேட்டால் அது அப்படி இல்லை அல்லது அப்படியும் இருக்கலாம் என்று நான் மையமாக மறுத்துவிடவும் கூடும்.

என் பரிந்துரையாக தமிழ் நவீன கவிதைகள், கவிஞர்களின் வகைமைகள், வாசிப்பு முறைகள் குறித்து விவாதிக்கும் / விவரிக்கும் பின்வரும் உரைகளை வாசித்துப் பார்க்கலாம்:

1) உலகெல்லாம் சூரியன் – கலாப்ரியா – கவிதைத் தொகுதிக்கு சுஜாதா எழுதிய முன்னுரை
2) தோற்றப் பிழை – யுவன் சந்திரசேகர் (எம்.யுவன்) – கவிதைத் தொகுதிக்கு யுவன் சந்திரசேகர் எழுதிய கவிதை புரியும் கணம் முன்னுரை –http://jyovramsundar.blogspot.in/2010/02/blog-post_22.html
3) அதீதனின் இதிகாசம் – பிரேம் ரமேஷ் – புத்தகத் தொகுதிக்கு யவனிகா ஶ்ரீராம் எழுதிய முன்னுரை
4) ஜென்மயில் – பிரம்மராஜன் – கவிதைத் தொகுதிக்கு ஆனந்த் எழுதிய முன்னுரை
5) கவிதைக்காக – ஞானக்கூத்தன்
6) கலாச்சாரம்: அ-கலாச்சாரம்: எதிர்-கலாச்சாரம் – நாகார்ஜீனன்
7) வார்த்தையின் ரஸவாதம் – பிரம்மராஜன்
8) பிரம்மராஜன் கவிதைகள் – நகுலன் http://www.thenkoodu.in/manage_blogs.php?blogid=27301&url=azhiyasudargal.blogspot.com/2012/06/blog-post_23.html

ரெண்டாம் காலம்

நந்தா குமாரன்

 

வானவிழ் மழைவழி
தரையுமிழ் மரவடி
மஷ்ரூம்கள் மலர்ந்த
விழிஎழும் பாதையில்
மழைஉளி செதுக்கிய
மேகவிக்ரஹ பிரதிஷ்டை
காண வந்தவன் கண்கோப்பைகளில்
ரஷ்ய சாராயமும் இந்திய இளநீரும்
ப்ராகலி மேன்சூரியன் பொரியல் தின்னும்
அவன் மாமனிதன் எழுதும் காவியத்தில்
இயந்திரக் குப்பை அள்ளும்
மனித ஸ்பரிசம் மறந்த கைகள்
மடக்கி நீட்டிக் காட்டும்
ஆகாயம் மூச்சு விடும் அதில்
“விண்னெழும் புள்ளு”

விரும்பி வாசிப்பவை

நந்தா குமாரன்

nundhaa

“நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிஞர்கள் யார், விரும்பும் கவிதைகள் எப்படிப்பட்டவை?”

முதலில் இந்த “மழை கேட்டல்” கவிதையைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். இது “கணையாழி” பத்திரிக்கையில் April 1998இல் வெளியானது. அப்போது ஞானக்கூத்தன் கவிதைத் தேர்வு செய்து கொண்டிருந்தார். பின்னர் ஒரு தினம் அம்பலம் இணைய அரட்டையில் சுஜாதா இந்தக் கவிதை தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னார்.

இப்போது கேள்விக்கு வருவோம். வழக்கமான பதில் தான், எனினும் சொல்கிறேன். நம் ஜனத்தொகையில் பாதி பேருக்கு மேல் கவிஞர்களாகவே பிறப்பெடுக்கிறார்கள், எழுதியும் குவிக்கிறார்கள். எனவே நாம் படிப்பவற்றுள் பாதிக்கு மேல் கவிதையாகவே இருக்கும் … நாம் விரும்புகிறோமோ இல்லையோ கவிதையை வாசிக்காமல் இருக்க முடியாது. கவிதைக் கடல் என்பதை விட இங்கே இருப்பது கவிஞர்களின் கடல் என்பது தான் பொருத்தம். நல்ல வேளை புத்திசாலித்தனமாக “விரும்பி வாசிக்கும்” எனக் கேட்டீர்கள். (more…)

மழை கேட்டல்

நந்தா குமாரன்

வழக்கம் போலவே
அது விழுந்ததும்
விமர்சனங்கள் எழுந்தன
அக்கறையில்லாமல் அது
Asbestos Sheetகளை
அவசரமாக வாசித்துக் கொண்டே போனது
அவ்வப்போது கேட்ட அசரீரிகளை
துக்க செய்தி கேட்டது போல பயந்தார்கள்
மண்ணில் வெடித்தது
தூள் தூளாய் சரிந்தது
கிணற்றில் குதித்தது
நீரோடு நீர் மோதும்
குதூகலக் குரல்
ஒளி வடிவங்களாய் விரிந்தது
அடுத்த பாடல்
ஜன்னல் கண்ணாடியில் அரங்கேறியது
அதன் நோக்கமற்ற ஒழுகலின்
உராய்வு ஓசை கேட்க
என் காதுகளைத் தீவிரப்படுத்தினேன்
கடைசி தீக்குச்சியைப் பற்ற வைக்கும்
கவனத்தோடு.

கணையாழி
April 1998