கவிதையும் கேள்வியும்

கவிதையும் கேள்வியும்

கடந்த ஆறு வாரங்களாக றியாஸ் குரானா அவர்கள் பதாகையில் வாரம் ஒரு கவிதையும் எழுதி வந்திருக்கிறார். பதாகைக்குப் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார், பதாகையைப் புதிய தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

கவிதைகள்-

அதிகாலை ஒரு வெள்ளைக்கதவு

நினைவு தேன்கூடு

கறுப்புப் பெட்டி

தோன்றி மறையும் வர்ணங்களாலான படுக்கையறை ஒவியம்

Z – கனவில் நடிக்க ஆள் தேவை.

காத்திருப்பவருக்கும் காத்திருக்கச் செய்தவருக்கும் இடையில் பெய்த மழை

கட்டுரைகள்- 

கவிதையும் வாசக மனநிலையும்

கவிதையின் உண்மைகள்

கற்பனையும் மொழியும்

தமிழ் கவிதை வடிவம்

‘கவிதை மொழியைப் பெருக்குகிறது’

கவிதையின் நகர்வுகள் – இனி என்ன? 

கவிதை குறித்த அவரது கருத்துகள் மாறலாம், கவிதையின் வடிவம் மாறலாம், ஆனால் என்றும் மாறக்கூடாத நற்பண்புகள் அவரிடம்  உள்ளதை அண்மைய மாதங்களில் உணர்ந்தோம். உடல்நிலை உட்பட பல பிரச்சினைகளுக்கு இடையே பதாகையில் எழுதிய திரு றியாஸ் குரானா அவர்களுக்கு நன்றிகள்.

கவிதையின் நகர்வுகள் – இனி என்ன?

றியாஸ் குரானா

பதாகை – நாலடியார், இன்னா நாற்பது இனியவை நாற்பது, கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி – என்று ஏராளமான நீதி நூல்கள் தமிழ் கவிதை மரபில் இருக்கின்றன. இவற்றை நாம் செய்யுட்கள் என்று வகைமைப்படுத்துகிறோமே தவிர, கவிதைகளாகக் கருதுவதில்லை. இது நம் மரபிலிருந்து நம்மைத் துண்டிப்பதாகாதா? எது கவிதை என்று கேட்பதைவிட, எப்படிப்பட்ட கவிதை என்று கேட்பது நம் புரிதலுக்கு உதவுவதாக இருக்குமா? பாடல்களையும் செய்யுட்களையும் கவிதையல்ல என்று விலக்கி வைப்பதற்கான தேவை என்ன?

றியாஸ் குரானா – உங்கள் கேள்வியை நான் விளங்கிக்கொண்ட வகையில் இதற்கு பதில் முயற்சிக்கிறேன். செய்யுள் மற்றும் பாடல் போன்றவைகள் எல்லாம் கவிதையின் வேறு வகையினங்கள்தான். அதாவது, கவிதைக் குடும்பத்தைச் சேர்ந்தவைதான். கவிதை மரபென்பது, இப்படி பல வகையினங்களை உள்ளடக்கிய ஒன்று. அவைதான் உண்மையில் தமிழ் கவிதையின் தொடர்ச்சி. இன்று புதுக்கவிதை எனச் சொல்லுவதோ அல்லது நவீன கவிதை எனச் சொல்லுவதோ தவிரவும், என்னைப் போன்றவர்கள் இன்னும் சற்று மேலேபோய் நவீனம் கடந்த கவிதை எனச் சொல்லுபவைகளோ தமிழ் கவிதை மரபைச் சேர்ந்தவை அல்ல. ஆயினும், இந்த கவிதைக் குடும்பத்திற்குள் சேர்த்துக்கொள்ளக்கூடிய புதிய வகையினங்கள் இன்று தமிழ் மனதினதும், தமிழ் கவிதை பாரம்பரியத்தினதும், தமிழ் நிலவியலினதுமான உள்ளீடுகளை தனக்குள் அடிப்படையில் வைத்துக்கொண்டு, கவிதைக்கான கற்பனைச் செயலை உலகளாவியதாக ஆக்கிவிட்டிருக்கிறது. இது தனித்துவமும், பன்மைத்துவமும் கவிதை வெளியில் இணைந்து செயற்படுவதாகும். (more…)

காத்திருப்பவருக்கும் காத்திருக்கச் செய்தவருக்கும் இடையில் பெய்த மழை

றியாஸ் குரானா

மழை மெல்லத் தொடங்குகிறது
துாறி பின் கற்களைப்போன்ற
தண்ணீர்த்துளிகளை வீசத்தொடங்குகிறது
வழமைபோல
மழை நீடித்தால் எப்படி
அதைக் கடந்து செல்வது
மழையின் அருமையையும்
கூதலின் நீண்ட ஆதரவையும்
மரங்களில் இறங்கும் அழகையும்
முணுமுணுக்கும் அதன் குடும்பப் பாடலையும்
நினைவிலேற்றி
மழையை கடந்துவிட முடியாது
அது சலிப்பை தந்துவிடும்
ஓய்ந்துவிடத் தயாராகிறது
அதை நான் விரும்பவில்லை
காத்திருக்கும் ஒருவருக்கும்
காத்திருக்கச் செய்தவருக்கும்
இடையே ஓயாமல் பெய்விக்கிறேன்
காத்திருப்பவரின் பக்கத்தில்
துாறச் செய்தும்,
மற்றப்புறத்தில் பெரும் மழையாகவும்
நீடிக்கச் செய்கிறேன்.
இருவருக்கிடையிலும்
மழை புதிய அர்த்தத்தை
துளிகளாக கொட்டுகிறது
காலங்கள் நீளுகின்றன
மழை என்ன செய்கிறதென
கண்காணிப்பதற்கு
ஜன்னலைத் திறந்து பார்க்கிறேன்
நெடுநாட்களாக மழை வராததால்
எங்கோ இருந்து எழுந்து
மழை தேடி வந்துகொண்டிருக்கிறது
ஒரு பூந்தோட்டம்.
திறந்து பார்த்த ஜன்னல்
நிரந்தரமானதல்ல
எப்போதாவது மாத்திரம் தோன்றுவது
இதை நீங்கள் எப்படியும் வாசிக்க முடியாது
ஜன்னல் இருந்தால்
திறந்து பார்க்கலாம் அவ்வளவுதான்.

‘கவிதை மொழியைப் பெருக்குகிறது’

றியாஸ் குரானா

பதாகை –  கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகள் அனைத்தையும் கேட்டுவிட்டது போல் இருக்கிறது. இதுவரை இதைப் பேசியிருக்கிறோமா பாருங்கள் – கதை, கவிதை, கட்டுரை என்று எழுத்துப்பணியே ஒரு விளிம்புக்குப் போய்விட்டச் செயல்பாடாகத் தெரிகிறது, எங்கும் எத்தகைய தாக்கமும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. இது தவிர, கவிதையே மொழியைப் புதுப்பிக்கிறது என்று சொல்கிறார்கள். உண்மையில் இன்று மொழியின், எழுத்தின் இடம்தான் என்ன?

றியாஸ் குரானா – எழுத்துப் பணி என்பது ஒருபோதும் விளிம்பு நிலைக்குச் சென்றுவிடாது என்றே கருதுகிறேன். நாம் சிந்திப்பதே மொழியால்தான், ஆக மொழியாலான எந்த நிகழ்வுகளும் விளிம்பு நிலைக்குச் சென்றுவிடாது. அப்படிச் செல்லுமானால், நாம் சிந்திப்பதை நிறுத்திவிட்டோம் என்றுதான் அர்த்தம். ஆனால் குறித்த வகையான எழுத்து விளிம்பு நிலைக்கு போக வாய்ப்புள்ளது. விளிம்பு, என்றும் மையம் என்றும் நாம் பேசவும், அதன் அரசியல் உள்ளீட்டை முதன்மைப்படுத்தவும் பின்நவீன கருத்து நிலைகளே நமக்கு உதவின. இந்த மையம் விளிம்பு என்பது எதிர் எதிர் நிலைகளில் வைத்துப் புரிந்துகொள்ளப்பட வேண்டியது என்றும், விளிம்பின் பக்கம் சாய்வாக கரிசனம் கொள்ள வேண்டும் என்றும் அது தூண்டியது. ஆனால் எழுத்தைப் பொறுத்தவரை அப்படி இல்லை. அது ஒரு போதும் விளிம்பு நிலைச் செயற்பாடு அல்ல. (more…)

Z – கனவில் நடிக்க ஆள் தேவை.

றியாஸ் குரானா

 

நாங்கள் வந்து பார்த்ததிலிருந்து,
கனவுக்குள்ளே அதிக நேரம் காத்திருக்கிறார்
மிகத் தொலைவுக்கு அப்பால்
மீண்டும் அந்த தெரு தொடங்கலாம்
கீழே தண்ணீர்
வேறு எதுவும் அங்கில்லை
கூப்பிட்டேன்
கனவிலிருந்து திரும்பி வருகிறார்.
கனவில் வந்தவர்,
உங்கள் அனைத்துக் கனவிலும்
தானே நடிக்க விரும்புவதாகவும்
அனுமதி தரும்படியும் கேட்டுக்கொண்டார்
பிறகு அவரோடு பேச இருக்கிறேன்.

கனவில் நடிக்க ஆள் தேவை.

ஒரேயொரு நிபந்தனை
இதற்கு முன் நடித்த கனவுகளில்
ஏதாவதொன்றை
நடித்துக் காட்ட வேண்டும்.
அதுவும், பெண்ணின் கனவு என்றால்
முன்னுரிமை வழங்கப்படும்.

நடுவர்களாக இருப்பவர்களை
விரைவில் அறிவிப்பேன்.

நடுவர்கள் தேவை.