காலாண்டிதழ்

பாவண்ணன் – தொடர்ச்சியின் சுவடுகள்

ஶ்ரீதர் நாராயணன்

paavannan

‘உலகு கிளர்ந்தென்ன உருகெழு வங்கம்’ என்று மருதன் இளநாகனாரின் பாடல் (பாலைத்திணையில்) ஒன்று இருக்கிறது. ஒட்டுமொத்த உலகும் கிளர்ந்து எழுந்து ஒரு கப்பலில் ஏறிக் கொண்டது போன்றதொரு சித்திரம். விவிலியத்தில் வரும் நோவாவின் கப்பல் போல. உண்மையில் அப்படியொன்று சாத்தியமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் பார்க்கும் விஷயங்கள், சம்பவங்களை எல்லாவற்றையும் எழுத்தில் ஏற்றி பெரும் படைப்புலகை நிர்மாணிக்கும் சக்தி படைப்பாளிக்கு உண்டு. அதை பாய்விரித்தோடும் கப்பல் போல வாசக பரப்பிடையே தொடர்ந்து எழுதிச் செல்லும் திறன் ஓர் எழுத்தாளனுக்கான வசீகரம். வெறும் குறுகுறுப்போடு கடந்து போகும் வாசிப்பு சுவாரசியத்திற்காக எழுதப்படாமல், ஒரு தொடர்ச்சியின் சுவடுகளை பதிவு செய்யும் அக்கறையோடு எழுதப்படுவதுதான் பாவண்ணனின் எழுத்துலகம். ஒரு காலத்தின் தொடர்ச்சியை, ஒரு கலாச்சாரத்தின் தொடர்ச்சியை, ஒரு தலைமுறையின் தொடர்ச்சியை, மொழியின் தொடர்ச்சியை ஆரவாரமில்லாத நடையில் பதிந்து கொண்டு போகிறார் பாவண்ணன். ஐந்தாறு வருடங்கள் முன்னர் சிங்கப்பூரிலோ வேறெங்கோ ஒரு தமிழர் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தது. அப்போது ஒரு பத்திரிகை ஆசிரியர் ‘இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சார்பா பாவண்ணன் இடம்பெற்றிருக்க வேண்டும். அவரொரு மொழித் தூதுவர்’ என்று தனிப்பேச்சில் குறிப்பிட்டார். முற்றிலும் உண்மை. பாவண்ணன் என்னும் பாஸ்கர், இளவயதில் பணிநிமித்தமாக கர்நாடகத்திற்கு புலம்பெயர வேண்டியிருந்தது. அதன் பிறகு கன்னடம் கற்றுக்கொண்டு, பெருமுயற்ச்சியுடன் பல கன்னட ஆக்கங்களை, நாவல்களை, தலித் எழுத்துகளை, நவீன இலக்கிய முயற்சிகளை, கவிதைத் தொகுதிகளை, தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார். கிரீஷ் கர்னாட் மற்றும் ஹெச் எஸ் சிவப்பிரகாஷ் போன்றோரின் பல நாடகங்களும் தமிழில் வாசிக்கக் கிடைத்தற்கு பாவண்ணன் முக்கியக் காரணம்.

வசிக்குமிடத்து மொழியின் இலக்கிய பரப்பை இவ்வளவு விரிவாக தாய்மொழிக்கு கொண்டு வருவது மூலம் அவர் இரண்டு மொழிகளுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது. அதற்கு மகுடம் வைத்தது போல பைரப்பாவின் ‘பருவம்’ நாவலின் மொழிபெயர்ப்பிற்கு சாகித்ய அகதெமி விருது அமைந்தது. இந்தக் காலக்கட்டத்தில் அவர் தமிழிலும் தீவிரமாக புனைவுகள் மற்றும் கட்டுரைகள் எழுதிக் கொண்டேதான் இருந்திருக்கிறார். எழுதுவது தவிர வேறெந்த விளம்பரமும் இல்லாமல் இருக்கிறார். தன்னுடைய ‘சுவரொட்டிகளின் நகரம்’ என்ற கவிதையில், பொருளற்ற வார்த்தைகளும் கூச்சந்தரும் குழைவுகளும் எப்படி ஒரு நகரத்தின் தன்மையையே மாற்றி விடுகின்றன என்று கூறியிருப்பார். தன்னைச் சுற்றிலும் இருக்கும் நகரம் முழுவதுமாக ஒரு சுவரொட்டியாக மாறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் துயரம் அக்கவிதையில் தெரியும்.

அந்தப் பொருளற்ற வார்த்தைகள்
அந்தக் கூச்சந்தரும் குழைவுகள்
அந்தப் பச்சையான முகஸ்துதிகள்
நாக்குத் தொங்க வாலாட்டிக் குழையும்
நாய்போல நிற்கிறது ஒவ்வொரு எழுத்தும்

மெல்ல மெல்ல இந்கரமே
ஒரு சுவரொட்டி போல மாறிக் கொண்டிருக்கிறது

அதையே சற்று விரித்து, ‘சுவரொட்டி சொக்கலிங்கமாக’ விகடனில் சிறுகதையாக எழுதியிருந்தார். கண்ணைக்கு குத்தும் பொருளற்ற சுவரொட்டிகளிடையே, சமூகத்திற்கு சேதி சொல்லும் பெரியப்பா சொக்கலிங்கத்தையும் பாவண்ணனின் படைப்புக் கண்கள் தவறவிடவில்லை. ஒரே செயலின் இருப்பக்கத்தையும் அவரால் தன் எழுத்தில் கொண்டு வர முடிகிறது. ‘சுவரொட்டி’ சிறுகதையில் ஓரிடத்தில் சொக்கலிங்கம் தன்னையே ஒரு நடமாடும் சுவரொட்டியாக மாற்றிக் கொண்டு கடற்கரையில் பாலிதீன் பைகள் விற்பதை தடுக்க பாடுபடுவார். அந்த சாத்வீகமான போராட்டத்தை, கடற்கரை கடை முதலாளிகள்க் கூட்டம் முதலில் கேலியாலும், பிறகு புறக்கணிப்பாலும், அதன் பிறகு வன்முறையாலும் எதிர்கொண்டு, பிறகு தோற்றுப்போவார்கள். ஒரு எதிர்பாரா தருணத்தில் இறந்துவிட்ட சுவரொட்டி சொக்கலிங்கத்தை, மின்மயானத்திற்கு கொண்டு சென்று, தானே கொள்ளிவைத்துவிட்டு வீடு திரும்புவார் கதைசொல்லி. திரும்பும் வழியில், நகரெங்கிலும் காணும் போஸ்டர்களில் எல்லாம் கதைசொல்லிக்கு,, சொக்கலிங்கத்தின் முகம்தான் பிரகாசமாகத் தெரியும். இத்தேசத்தில் காந்திய சிந்தனை என்று மங்காது தொடர்ச்சியாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்பதை பதிவு செய்யும் படைப்பு அது.

paaimarakappal01

காந்தியின் தாக்கத்தை பாவண்ணனின் எழுத்தில் பல இடங்களில் பார்க்கலாம். ‘பாய்மரக் கப்பலில்’ முத்துசாமி கவுண்டனின் அண்ணன் மகன் காந்தியவாதியாக உருவெடுக்கிறார். இத்தனைக்கும் அதே முத்துசாமிக் கவுண்டனின் சகோதரன் ஒரு நொடி உணர்ச்சி வேகத்தில் உற்றாரைக் கொன்று போட்டு ஜெயிலுக்கு போவதாகவும் ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்கும். இரண்டு முனைகளுக்கும் இடையேதான் இந்த நிலத்தின் காதைகள் பலதும் எழுதப்பட்டிருக்கின்றன. அந்தக் கோர சம்பவத்தில் மனைவி வனமயிலை இழந்ததும் நாவாம்ப்பாளை ‘நடுவீட்டுத்தாலி’யுடன் மறுமணம் கொள்கிறார் முத்துசாமி. புரோகிதன் கவுண்டன் வந்து திருமணம் நடத்தி வைக்கும் புதுச்சேரி கவுண்டர் சமூக வழக்குகளை ஆங்காங்கே தெரிந்து கொள்ள வாய்க்கிறது. பிரான்சின் காலனியாதிக்க எச்சத்தினால் ஆட்பட்டு ஃப்ரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து பாரிஸுக்குப் போகும் முனுசாமியும், இந்த ஊரிலேயே ஆன்மிகத்தில் தொலைந்ந்து போகும் ரங்கசாமியும் புதுச்சேரி நிலத்தின் வரலாற்றை சற்று கோடிட்டு காட்டுகின்றார்கள்.

கதையின் தொடக்கத்தில், கோர்க்காட்டு அமாசைக் கிழவரும், முத்துசாமிக் கிழவரும் கடந்த காலத்தை பற்றி மிகவும் ஆதுரமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். கதை முடியும்போது கிழவர் தத்துப்பேரனான பிச்சாண்டியுடன் சேர்ந்து நிலத்தின் மீதான தன் நம்பிக்கயை மீட்டெடுக்கிறார். நான்கு தலைமுறைகளுக்கு இடையேயான சமூக வரலாற்றை முன்-பின்னாக சொல்லிச் செல்கிறது. ஒரு புராண காலத்து வீரனாக வாழ்ந்து, நாடி ஒடுங்கி விழுந்துவிட்ட முத்துசாமிக்கு அந்த நிலத்தின் மீதான நேசம்தான் உயிரை ஒட்ட வைத்து கொண்டிருக்கிறது. முதலில் ரெட்டிகளால் நிலம் பிடுங்கப்படும்போதும், பிறகு பார்த்தசாரதி ஐயரிடம் குத்தகைக்காக கிடந்து தவிக்கும்போதும் அதே நிலத்தின் மீதான் காதல்தான் முத்துசாமியை நிலை நிறுத்துகிறது. திருக்குறளில் ‘இடனறிதல்’ அதிகாரத்தில் ஒரு குறள் வரும். கடலோடும் நாவாயும், நிலத்தில் ஓடும் நெடுந்தேர்ப் பற்றியும் ஒப்பிட்டுச் சொல்லும் குறள் அது. முத்துசாமி நிலம் மீதான பயணம், பாய்மரக்கப்பல் போல மொழி ஆதிக்கம், சாதி ஆதிக்கம், அரசியல் ஆதிக்கம் என்று அலைக்கழிக்கப்பட்டு சென்று கொண்டிருந்தது என்று வாசிக்கும்போது அந்தக் குறள்தான் நினைவிற்கு வந்தது. இடமறிந்து செயலாற்ற வேண்டும் என்னும் வள்ளுவ கூற்றை சற்று மாற்றி, இடம் மாற்றி செயலாற்றுவதன் மூலம்தான் ஒருவன் வரலாற்றில் நிலைப்பெற முடியும் எனக்கூறும் நாவல் பாய்மரக்கப்பல்.

தொடர் இயக்கம் வழியே மட்டும் ஒரு படைப்பாளி வாழ்ந்து கொண்டிருக்க முடியும். அது சாமானியப்பட்டதல்ல. ஒவ்வொரு முறையும் பரீட்சிக்கப்படும் எழுத்தை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். தன்னைச் சுற்றியிருக்கும் புறவுலகின் பாதிப்புகளுக்கு தன்னைத் தொடர்ந்து ஒப்புக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒருவரால்தான், அதை அழகுணர்ச்சியோடும் சமூக அக்கறையோடும் மீட்டெடுத்து நமக்கு அளிக்க முடியும். பாவண்ணனின் சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் ‘கிணற்றுக்குள் விழுந்து கிடக்கும் மரப்பாச்சி பொம்மைகள் போல நினைவுகள் அவருள்ளே ஊறிக் கொண்டேயிருக்கின்றன’.

வளவனூரில் இருக்கும் ஏரிப் பற்றி ஒரு கட்டுரையில் விரிவாக பதிகிறார். தென்பெண்ணை ஆறு நிரம்பியதும் வளவனூர் ஏரிக்கு நீர் வரத்தொடங்கி விடுகிறது. ஒருமுறை நிரம்பினால் ஆறு மாதஙளுக்கு நீர் ததும்பியபடி இருக்கும். சிறுவர்களின் கணக்கில் காலாண்டு தேர்வுக்கு நிரம்பத் தொடங்கும் ஏரி முழு ஆண்டுத் தேர்வு சமயம் வரை நிரம்பியபடித்தான் இருக்கும். ஏரியில் புரளும் புதுவெள்ளத்தோடு போட்டிப் போடும் சிறுவர்கள் பற்றிய விவரணைகள் நம்மை அக்காலத்திற்கே இட்டுச் செல்கின்றன. மதுரை பசுமலைக் கண்மாயில் நண்பர்களுடன் நான் போட்ட குதியாட்டங்களூம், கலைநகர் பக்கம் பட்டிமேட்டில் விவசாயக் கிணற்றில் குதித்தோடிய அனுபவங்களையும் ஒப்புநோக்கி பார்த்து மகிழ்ந்த வண்ணம் வாசித்துக் கொண்டு வந்தேன். நடுவே அவருடைய பள்ளித்தோழி சரஸ்வதி ‘நீ குளிக்கப் போகலியா? உனக்கு நீச்சல் தெரியாதா? உனக்கு நான் நீச்சல் கத்துக் கொடுக்கவா?’ என்றெல்லாம் விடாமல் கேட்டுக் கொண்டிருக்கிறாள். இவருக்கு விருப்பம் இல்லாததால், ஏமாற்றத்தால் சுணங்கிப் போய், திரும்பிப் போய்விடும் சரஸ்வதியுடன் இவருடைய நீச்சல் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் போய்விடுகிறது. சரஸ்வதியிடம் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தால் பாவண்ணனிடமிருந்து இன்னொரு நாவல் கிடைத்திருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக அவருடைய நண்பன் பழநியின் தம்பி சேகர் அந்த ஏரியில் மூழ்கிப் இறந்து போய்விட அந்த ஏரியின் அமைதி அமானுஷ்யமாக மாறுகிறது.

‘துங்கபத்திரை கட்டுரைகளில்’ அதே ஏரி வறண்டு போய் கிடக்கும் அவலத்தையும் பதிவு செய்கிறார். அவரைச் சுற்றி இருக்கும் நிலங்களும், நீர் நிலைகளும், நதிகளும் தங்களுக்குள் ஒருபகுதியாக அவரைக் கொண்டிருக்கிறது என்பது இப்படியான தொடர் பதிவுகளில் தெரிகிறது. வற்றிப்போயிருக்கும் ஏரியைப் பற்றி குறிப்பிட்ட ‘வாழ்க்கை எனும் சுமை’ கட்டுரை பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது. இதே புள்ளியைத் தொட்டு ‘தீராநதி’ பேட்டியில் ‘சீதையின் துயரம்தானே ராமாயணம், கண்ணகியின் துயரம்தானே சிலப்பதிகாரம், குந்தி, திரோபதை, சுபத்திரை என்ற மூன்று தலைமுறைப் பெண்களின் துயரம்தானே மகாபாரதம்’ என்று குறிப்பிடுகிறார். இந்த பரிவான பார்வையை அவருடைய படைப்பெங்கும் தொடர்ந்து காண முடிகிறது. ‘வாழ்க்கையில் ஒரு நாள்’ எனும் சிறுகதையில் சண்முகவேலன் தொடர்ந்து கொந்தளிக்கும் மனநிலையுடனே இருக்கிறான். அவனுக்கு வாய்த்திருக்கும் தனித்துவ குரல்வளமும், அதன் குழைவும் அதன் வனப்பும் பற்றி பலரும் சிலாகிக்க எப்படியாவது சினிமாவில் சேர்ந்து புகழ் பெற்றுவிட வேண்டும் எனும் தணியாத ஆர்வம். அதற்கான தொடர் முயற்சிகள் தோல்வியில் முடியும்போதெல்லாம் அவனுக்கு ஆற்றாமை மேலோங்குகிறது. அவனுக்கு வரமாக வாய்த்த குரல்வளமே அவனுனை கொந்தளிப்பிலும், ஆற்றாமையிலும் ஆழ்த்தி விடுகின்றன. இந்த முடிவில்லாத சுழலிலிருந்து சண்முகவேலன் விடுதலை பெறும் இடம், வாசிக்கும் நம்மையும் ஆட்கொண்டு விடுதலை பெற்றுத்தருகிறது.

pavannan

கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து வருட தொடர் இயங்குதலுக்கு அப்புறமும் பாவண்ணனின் படைப்புகள் பற்றி கவனம் தந்து பேசும் தரப்புகள் அதிகமில்லை. ஆனால் அவர் அப்படி தன்னை தேங்கச் செய்துகொள்ளாமல் அடுத்த தலைமுறையின் செயல்பாட்டையும் கூர்ந்து கவனித்தபடிதான் இருக்கிறார். அவர் எழுதத் தொடங்கியபோது பிறந்தேயிராத சில புதியவர்களை அவர்களின் ஆரம்ப நிலையிலேயே கவனித்து ஊக்கப்படுத்தும் விழைவைக் கொண்டவராக இருக்கிறார். ‘திண்ணை’ இணையதளத்தில், ‘எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் இரண்டாண்டுகள் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தார். தமிழ் இலக்கியம் படிக்க வரும் புதிய வாசகனுக்கு ஒரு வாசலாக அந்த கட்டுரைத் தொகுப்பு இருக்க வேண்டும் என விருப்பப்பட்டு எழுதினார். சமீபத்தில் எழுத்தாளர் ‘சார்வாகன்’ மறைந்தபோது அவரைப் பற்றிய மிகச்சில பதிவுகளில் முக்கியமானதாக பாவண்ணனின் கட்டுரைதான் அமைந்திருந்தது. புதியவர்களுக்கான அறிமுகமும், பழையவர்களுக்கான அடையாளமுமாக இந்த இலக்கிய தொடர்ச்சியை நிகழ்த்திக் கொண்டிருப்பவர் பாவண்ணன்.

அரசியல் சாய்வுகள் இல்லாத சர்ச்சைகளுக்கு வழிகோலாததொரு நிச்சலனமான எழுத்து இங்கு அவ்வளவாக ஆர்வம் ஏற்படுத்துவதில்லை. எந்த துறைகளிலும் இப்படியானதொரு தொடர் உழைப்பு பிறரிடம் ஒரு மரியாதையாவது ஏற்படுத்தும். ஆனால் தமிழில் தொடர்ந்து எழுதுகிறவர்களின் நிலை வேறு. இன்றைய பரந்து விரிந்த சமூக வலைத்தளத்தில், சினிமா பங்களிப்பு, அரசியல் நிலைப்பாடு, செல்வாக்குத் திறன் போன்ற காரணிகளால் மட்டுமே எழுத்து எடைபோடப்படுகிறது. தீவிர வாசிப்பற்ற, இலக்கிய உலகின் போக்குகளைப் பற்றி அடிப்படைப் புரிதல் இல்லாத, திருகல் பார்வையுடன் ஆவலாதி கூட்டும் குழு அரசியல்களால் நிறைந்திருக்கும் சூழலில், ஓரளவுக்கு நல் வாசிப்பைப் தங்கள் உள்ளே அடைகாத்து வரும் சில நல்ல நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போன்ற பல சிறப்பிதழ் முயற்சிகள் மூத்த படைப்பாளிகளையும், அவர்களை போற்றும் அடுத்த தலைமுறைக்கும் ஊக்கமாக அமைய வேண்டும்.

பாவண்ணனின் பாய்மரக்கப்பல், கலப்படமில்லாத படைப்பூக்கம் என்னும் காற்றை சக்தியாகக் கொண்டு, என்றென்றும் கடலோடிக் கொண்டிருக்க வாழ்த்துகள்.

பாவண்ணனின் பயணம்

எம். கோபாலகிருஷ்ணன்

காலச்சுவடு வெளியிடும் பாவண்ணன் சிறுகதை தொகுப்பின்  முன்னுரை

உலகமொழிகளின் மகத்தான இலக்கியங்கள் யாவுமே மனித உறவுகளின் மர்மங்களைக் களையவும் கண்டுணரவுமே தலைப்படுகின்றன. மனித உறவுகளின் ஒளிமிகு வடிவெங்களென தாய்மையும் காதலும் கருணையும் பிரகாசிக்கும்போது அவற்றின் மறுபக்கமாகக் கயமையும் துரோகமும் வன்மமும் அச்சுறுத்துகின்றன. பல சமயங்களில் மேன்மைகளின் முகப்பூச்சுடன் சிறுமைகளே கோலோச்சுகின்றன. மனிதனின் மனம் ஏற்கும் பாவனைகள் பலவும் முன்னுதாரணங்கள் அற்றவை. தனித்துவமானவை. அச்சத்தையும் பயங்கரத்தையும் விதைப்பவை. உறவுகளை அது அணுகும் விதம் வகுத்திட இயலாத சிக்கல்களைக் கொண்டது. மனித மனதின் இருளினூடே எப்போதும் பயணிக்கும் கலை கண்டடைய விழைவது, அந்த இருளில் எங்கேனும் புதைந்திருக்கும் ஒளியின் சிறு துகளையே. அக்கினிக் குஞ்சுபோல மீச்சிறு உரு கொண்டபோதும் அவ்வொளியே இருளைப் போக்கவல்லது. கருணை எனும் அவ்வொளியே மனிதனைப் பிற உயிர்களின்று தனித்துவப்படுத்துகிறது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் ஆன்மிக ஞானம் அவ்வொளியிலிருந்து பிறந்ததே. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழ் மெய்யியல் அதிலிருந்து தளைத்ததே.

உலகெங்கிலும் உள்ள மதங்களும் மார்க்கங்களும் ஞானிகளும் ஆன்மிகவாதிகளும் மனித வாழ்வின் உய்விற்கு வழியாக உபதேசித்திருப்பது கருணையின் பல்வேறு விதமான பாதைகளையே. அத்தகைய கருணையின் ஒளிகொண்டு உருவான உறவுகளின் சித்திரங்களே பாவண்ணனின் சிறுகதை உலகம்.

***

1980களில் வேலையின்மை என்பது ஒரு சமூக அடையாளமாகவே இருந்தது. முதல் தலைமுறை பட்டதாரிகள் பலரும் வேலையின்மையின் பொருட்டு இடம்பெயர நேர்ந்தது. குடும்பத்தைப் பிரிவது என்பது அதுவரையிலும் யோசித்திராத ஒன்று. ஆரம்பக்கல்வி முதலே விடுதிகளில் குழந்தைகளை ஒப்படைத்துவிடும் இன்றைய நாகரிகம் தொடங்கியிராத காலம் அது. பசியோடும் வறுமையோடும் போராடி, படித்து, பெரும் போராட்டத்துக்குப் பின் கிடைத்த வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பளம் வாங்கும் சந்தர்ப்பத்தில் ஆளாக்கிய அப்பாவும் அம்மாவும் அருகிலிருக்க மாட்டார்கள். மொழி அறியாத ஊரில் முகம் தெரியாதவர்களோடு பகிர்ந்துகொள்ளும் அறையின் தனிமையில் மனம் திரும்பத் திரும்ப ஊரையும் உறவுகளையுமே நாடியோடும்.

இதே காலகட்டத்தில்தான் தமிழ் இலக்கியத்தில் சிறுபத்திரிக்கைகளின் எழுச்சியும் நிகழ்ந்தது. தீபம், கணையாழி தொடங்கி ஏராளமான சிறுபத்திரிக்கைகள் அங்கங்கே தோன்றி மறைந்தபடியே இருந்தன. இங்கே இனி, நிகழ், மீட்சி என நீண்ட பட்டியல் உண்டு. தமிழ்ச் சிறுகதையாளர்களின் வரிசையில் புதிய பெயர்கள் பலவும் இடம்பெறத் தொடங்கியதும் இப்பத்திரிக்கைகளின் வழியாகவே. பம்பாயிலிருந்து நாஞ்சில் நாடனும் ஹைதராபாத்திலிருந்து சுப்ரபாரதிமணியனும் பெங்களூரிலிருந்து பாவண்ணனும் எழுத்தின் வழியே தொலைவையும் இழந்த மனிதர்களையும் மீட்க முனைந்தார்கள். பிறந்து வளர்ந்த ஊரும் அதன் மனிதர்களும் சூழல்களும் வாசனையோடும் நிறங்களோடும் அவர்களின் கதைகளாகின. வேறிடத்தில் வேற்று மனிதர்களின் நடுவில் இருந்து இழந்துபோன உறவுகளை நினைவுகளை எழுத்தின் வழியாக மீட்டெடுக்க முனைந்தனர். ரயில்வே ஸ்டேஷன், ஆலமரம், ஏரிக்கரை, வேலங்காடு, தென்னந்தோப்பு என கிராமத்தில் ஓடியாடிக் குதூகலித்த இடங்களும் சுக்குக்காப்பிக்காரர், ஆப்பக்காரக் கிழவி, குதிரைவண்டித் தாத்தா, தோட்டக்காரப் பெரியவர், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், கிராமத்துப் பெரிய மனிதர்கள், எளியவர்கள், ஏழைகள் என்று பல்வேறு தரப்பட்ட மனிதர்களும் வாழ்வில் தாம் கண்டு, அனுபவித்த அவமானங்கள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், வறுமை, அகங்காரம், பொறாமை, விரோதம், தடுமாற்றம், தவிப்பு என உணர்வுகளும் மேலெழுந்து கதையுலகை நிறைத்திருந்தன.

***

பாவண்ணனின் முதல் சிறுகதை தீபம் இதழில்  1982ஆம் ஆண்டில் வெளியானது. எந்தத் தொகுப்பிலும் சேர்க்கப்படாத அக்கதையின் பிரதிகூட இப்போது கைவசம் இல்லை. 1987ஆம் ஆண்டில் முதல் சிறுகதைத் தொகுப்பு “வேர்கள் தொலைவில் இருக்கின்றன” காவ்யா வெளியீடாக பிரசுரம் பெற்றது. அவருடைய பதினாறாம் சிறுகதைத் தொகுப்பான ‘பாக்குத் தோட்டம்’ 2014ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது. 33 ஆண்டுகால நீண்ட சிறுகதைப் பயணத்தில் பாவண்ணன் எழுதியுள்ள கதைகளின் எண்ணிக்கை 184.

மேலோட்டமாகப் பார்த்தால் இத்தொகுப்பு பாவண்ணனின் 33 ஆண்டுகால சிறுகதைப் பயணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தருணங்கள் என்றே பொருள்கொள்ள முடியும். உண்மையில் இது ஒரு தலைமுறையின் பயணம். சிக்கல்களும் புதிர்களும் நிரம்பிய உறவுகளினூடாக நிகழ்ந்திருக்கும் கரடுமுரடான பயணம். இதன் பாதையில் தொடர்ந்து வரும்போது பாவண்ணனின் பயணத்தை மூன்று நிலைகளாக வகுத்துவிட முடியும். ஒன்று, இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு. நமது வாழ்வின் அதிமுக்கியமான மையமாகிய இந்த உறவிலிருந்து மனிதன் எத்தனை விலகி வந்திருக்கிறான் என்பதையே இன்றைய இயற்கைச் சீரழிவுகளும் புவியியல் மாற்றங்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. இயற்கையுடனான மனிதனின் உறவு இயல்பானது. தன்னிச்சையானது. எளிமையானதும்கூட. அன்றாடம் நாம் காணும் மரங்கள், செடிகள், பூக்கள், பறவைகள், விலங்குகள், வானத்தின் நிறங்கள், காற்றின் விதங்கள் என்று அனைத்துமே அந்த உறவின் வெளிப்பாடுகளே. இன்று நம் நினைவில் மட்டுமே எஞ்சி நிற்கும் மரங்களின், பறவைகளின், பூக்களின் எண்ணிக்கையை யோசித்துப் பார்த்தாலே இன்றைய வாழ்வு இயற்கையிலிருந்து எத்தனை தொலைவு விலகி வந்துள்ளது என்று நம்மால் புரிந்துகொள்ள முடியும். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவு என்பது வாழ்வின் ஒரு அம்சமாக இருந்தது என்பதையே பாவண்ணனின் கதைகள் அழுத்தமாகச் சுட்டி நிற்கின்றன. அவரது கதைகளில் இடம்பெறும் நிலமாகட்டும் பறவைகளாகட்டும் தாவரங்களாகட்டும் அனைத்துமே சூழல்களை நிறுவுவதோடு நின்றுவிடாது கதாபாத்திரங்களின் மனவோட்டத்தோடு சேர்த்து அடையாளப்படுத்துமளவுக்கு முக்கியத்துவம் கொண்டுள்ளன. அவரது கதைகள் பலவற்றின் தலைப்புகளுமே இதை அடையாளப்படுத்துகின்றன (ஒற்றை மரம், இரண்டு மரங்கள், நெல்லித்தோப்பு, செடி, தனிமரம்) மண்ணின் மீதான பற்றுதலும் மனிதர்களின்பாலான பந்தமும் இயற்கையுடனான மனித உறவின் நீட்சியே.

பாவண்ணனின் சிறுகதை உலகின் அடுத்த படிநிலை மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு. கிராம அமைப்பு என்பதே ஒருவர் மற்றொருவரைச் சார்ந்து அல்லது அனுசரித்து வாழும் ஒரு முறையை வகுத்திருந்தது. மனிதர்களுக்கு இடையேயான உறவு இன்றியமையாத ஒன்றாக இருந்தது. இதிலிருந்தே சமூகத்தின் பல மதிப்பீடுகள் கிளைத்தன. சமூகத்தின் எளிய மனிதர்களைக் கரிசனையுடன் காணும் பார்வை இத்தகைய உறவின் ஊற்றிலிருந்தே உருவாகிறது. இயற்கையுடனான உறவிலிருந்து விலகி வந்துவிட்டது போலவே இன்று சக மனிதனுடனான உறவிலிருந்தும் நாம் மெல்லமெல்ல விலகி நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொண்டோம். ‘பசிக்குதுப்பா’ என்று உடல் வளைத்துச் கெஞ்சலுடன் யாசித்து நிற்கும் மூதாட்டியையோ சிறுமியையோ சிறிதும் பொருட்படுத்தாது சிக்னல் விளக்கில் கண்வைத்துக் காத்திருக்கும் சுரணையற்ற தன்மையை நாம் அடைந்துவிட்டோம்.

மனித உறவுகள் ஒவ்வொன்றும் தனித்துவம் கொண்டவை. தீராத மர்மங்களையும் திகைப்பூட்டும் சமரசங்களையும் உலகின் நிருபிக்கப்பட்ட சமன்பாடுகளுக்குள் சிக்காத விநோதங்களையும் தொடர்ந்து முன்வைத்தபடியே இருப்பவை. பாவண்ணனின் பல கதைகளும் உறவின் சிக்கல்களையும் சிடுக்குகளையும் உள்ளீடாகக் கொண்டவை (பலி, கையெழுத்து, வரிசை, வதை, அடுக்கு மாளிகை, உறவு, முள், கூட்டாளிகள், மரம், கழிமுகம்) விசாலமான பார்வையும் ஈரமான அணுகுமுறையுமே புறவுலகின் ஒவ்வொரு அசைவையும் அர்த்தப்படுத்துபவையாக இருக்கமுடியும். முன்முடிவுகள் இல்லாத, எவர்பொருட்டும் சாய்வற்ற பார்வையைக் கொண்டு அணுகும்போதே உறவுகளின் பரிமாணங்களை அவற்றின் எல்லா சாத்தியங்களுடனும் கண்டடைய முடியும். கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் தம்மளவிலான நியாயங்களை முழுமையாக முன்வைப்பதன் மூலமே பூரணமான புரிதலை அடையமுடியும்.

அடுத்தவர் மீதான கரிசனத்தை வைத்தே அன்றாட பாடுகளுக்காக மனிதர்கள் ஏற்கும் பாரங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். எளிய மனிதர்கள் ஒவ்வொரு பொழுதுக்கும் வாழ்வைக் கடத்த மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் சொல்லி மாளாதவை. அடைக்கலம், வெளியேற்றம், வண்டி, பயணம், சாயா, வழி, நொண்டிப் பறவைகள், வதைபடும் தினங்கள், சிலுவை, மீரா, சாட்சி, கீரைக்காரி, சட்டை, முடியவில்லை, பாம்பு, நெருப்பு வளையங்கள் உள்ளிட்ட கதைகளின் வழியே அவ்வாறான சில அபூர்வமான சித்திரங்களைப் பாவண்ணன் நுட்பமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். வெறுமனே வேடிக்கை பார்ப்பவனின் சித்தரிப்பாக நின்றுவிடாமல் அவர்களது வலியையும் இருப்பையும் உள்ளார்ந்த அக்கறையுடன் புரிந்துகொள்ளும் முனைப்பு இக்கதைகளைச் செறிவாக்கித் தந்துள்ளன.

மூன்றாவது நிலை இயற்கையுடனான உறவிலிருந்தும் மனிதர்களுடனான உறவிலிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொண்டு தனிமனிதனாக மட்டுமே சுருக்கிக்கொண்டிருக்கும் நிலை. நம்மைச் சுற்றி நாம் காணும் பெரும்பான்மை வாழ்வு தனிமனிதனை மையப்படுத்தியதே. தன்னைச் சுற்றி நிகழும் உலகைக் கவனிக்கத் தேவையுமில்லை, பொழுதுமில்லை. மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் தொலைத்துவிட்டு சுயநலத்துடன் இன்றில் இப்பொழுதில் மட்டுமே ‘இருந்து’கொண்டிருக்கும் நவீன வாழ்வின் அவசரச் சித்திரங்களாய் அமைந்த கதைகள் அடையாளம், பாதுகாப்பு, அடைக்கலம், மீரா, காலத்தின் விளிம்பில் போன்றவை.

அடுத்தவர் மீதான அக்கறையில்லாத வாழ்வு என்பது அனைவரின் மீதும் இன்று நிர்ப்பந்திக்கப்பட்ட ஒன்று. நவீன தொழில் நுட்ப வசதிகளும் அனைத்துத் தனி அடையாளங்களையும் பொது அடையாளங்களுக்குள் கரைத்துவிடும் உலகளாவிய போக்கும் நம்மை அப்படி வழி திருப்புகின்றன. இருப்பினும் சிலர் தனித்துவத்துடன் உலகின் அனைத்துப் போக்குகளுக்கு நடுவிலும் தமக்கான குணம் மாறாமல் இருக்கவே செய்கிறார்கள். அத்தகையோர் அபூர்வமானவர்கள். பிரயாணம், கூடு, வைராக்கியம் போன்ற கதைகளில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் அப்படிப்பட்ட தனித்துவங்களுடன் உலகப் பொது நியதியிலிருந்து தம்மை விலக்கிக்கொண்ட மனிதர்கள். இப்படிப்பட்டவர்களை நம்மால் ஒருகணம் வியப்புடன் பார்க்கவும் நம்மால் இப்படியெல்லாம் இருக்க முடியாதுப்பா என்று அவசரமாய் விலகிவிடவுமே முடிகிறது.

தெருவில் கூடிவிளையாட முடியாத ஒரு தலைமுறைதான் அடுத்த வீட்டுக்காரனைப் பற்றிய குறைந்தபட்ச அக்கறையில்லாமல் தான், தன் சுகம் என்று ஓடிக்கொண்டே இருக்கிறது. விளையாட்டும் வேடிக்கையும் துள்ளலும் மிக்க சிறுவர்களின் உலகம் மிக எளிமையானது. ஒப்பனைகளற்றது. அன்றாடங்களின் நெருக்கடிகளிலிருந்தும் அவஸ்தைகளிலிருந்தும் நம்மை நாம் ஆசுவாசப்படுத்திக்கொள்வது சிறுவயது நினைவுகளின் நிழல்களிலேயே. உப்பு, கூண்டு, சின்னம், ராஜண்ணா, வெளியேற்றப்பட்ட குதிரை போன்ற கதைகளில் கோலி, பம்பரம், கிட்டிப்புள், சடுகுடு, தாயம், சுங்கரைக்காய், ஏழாங்காய், பல்லாங்குழி போன்ற எண்ணற்ற  சிறுவயது விளையாட்டுக்கள் பலவற்றையும் நினைவுபடுத்துகின்றன. இன்றைய சிறுவர்களின் உலகம் இழந்துவிட்ட புறவுலகின் அழகுகளை, தோழமையின் ஆழங்களை இக்கதைகள் ஏக்கத்துடன் சுட்டி நிற்கின்றன.

இந்த மூன்று நிலைகளையும் கடந்து நிற்கும்போது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மதிப்பீடுகளையும் முறைமைகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டியுள்ளது. இந்த மதிப்பீடுகளுக்கும் அறங்களுக்கும் உதாரணமாகக் காட்டப்படும் காவிய மாந்தர்களை, சரித்திரச் சம்பவங்களைப் புதிய கோணத்தில் அணுகி விமர்சிக்கவேண்டிய தேவையும் உருவாகிறது. கடந்த காலம் மீள்பார்வைக்கு உட்படுகிறது. நாம் நன்கறிந்த புராண மாந்தர்களையும் இதிகாச நிகழ்வுகளையும் இன்றைய பார்வையில் அணுகும்போது புதிய திறப்புகளும் புரிதல்களும் சாத்தியமாகின்றன. அன்னை, கண்கள், வெள்ளம், தங்க மாலை, திரை, புதிர், ஏவாளின் இரண்டாம் முடிவு, ஏழுலட்சம் வரிகள்அல்லி, ரணம், சுழல், வாசவதத்தை, முற்றுகை ஆகிய கதைகளின் வழியாக பாவண்ணன் காட்டும் சரித்திர நிகழ்வுகள் புதிய கேள்விகளுடன் முன் நிற்கின்றன. காவியங்களும் இதிகாசங்களும் எப்போதும் புதிய வாசிப்புக்கும் பொருள்படுத்தலுக்கும் விமர்சனங்களுக்கும் விரிவான அளவில் இடம் தருபவை. காலம் தாண்டியும் தம்மளவில் அவை கொண்டிருக்கும் செறிவும் இடைவெளிகளுமே அத்தகைய பார்வையை சாத்தியப்படுத்துகின்றன.

சமூகத்தின் ஓர் அங்கமாக இருந்த மனிதன் அனைத்திலிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொண்டு தனித்தவனாக, தனக்கான உலகத்தில் தான் மட்டுமே இருக்கும்போது அவன் மீது இரண்டுவிதமான அழுத்தங்கள் உருவாகின்றன. தனது கடந்த காலம் அவனுள் உருவாக்கி வைத்துள்ள வாழ்க்கை சார்ந்த பார்வையை, மதிப்பீடுகளை அவனால் முற்றிலும் உதறிவிட முடியவில்லை. அதேசமயத்தில் இன்றைய நவீன வாழ்வின் நிர்ப்பந்தங்களுக்கேற்ப எதையும் பொருட்படுத்தாதவனாக தன்னை நிறுவிக்கொள்ள வேண்டிய தேவைக்கும் ஆட்பட்டிருக்கிறான். இந்த இரண்டுக்கும் நடுவில் சரிகளும் தவறுகளும் இடம் மாறி குழப்பமான ஒருநிலைக்குத் தள்ளப்படுகிறான். இந்த அழுத்தம் அவனை நோய்மையில் கொண்டு தள்ளுகிறது.

நவீன மருத்துவத்தின் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் இணையாக அதன் அசுரத்தனமும் நோய்களின் பெருக்கமும் பெரும் சவால் விடுத்தபடியேதான் உள்ளன. மரணத்தை வெல்லும் முனைப்பும், முடியாதபோது அதை ஒத்திப்போடும் முயற்சியுமே மருத்துவத்தின் சாத்தியம். எல்லாவற்றையும் தாண்டி விடைகாண முடியாத புதிரென மரணம் பல புதிய நோய்களின் வழியாகத் தன்னைப் புதிய வடிவில் வெளிப்படுத்திய வண்ணமே உள்ளது. பூனைக்குட்டி, நித்யா, அழைப்பு உள்ளிட்ட கதைகளில் காணும் நோய்மையின் விநோதங்கள் நவீன வாழ்வைக் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.

***

பாவண்ணனின் ஆரம்பகாலக் கதைகள் பலவும் உறவுகள், சகமனிதர்கள், நண்பர்கள், அன்றாட வாழ்வின் சுமைகள் அதன் வலிகள் என்று அன்றைய காலகட்டத்தின் கறுப்பு வெள்ளைப் படங்களாக அமைந்துள்ளன. சொந்தங்களை சொந்த மண்ணை நீங்கிய மனம் அவற்றின் ஒவ்வொரு அங்கத்தையும் மன அடுக்கிலிருந்து ஒவ்வொன்றாய்த் தொட்டெடுத்து மீட்டிப் பார்க்கும் பேரனுபவமே கதைகளாகியுள்ளன. வேர்கள் தொலைவில் இருக்கின்றன, வெளியேற்றம், நேற்று வாழ்ந்தவர்கள் என்று தலைப்புகளே துயரம் சுமந்து நிற்கின்றன. ஆனால் காலம் மெல்ல மெல்ல இந்தப் பார்வையை முன்னகர்த்துகிறது. தொலைந்துபோன அல்லது தொலைவும் வேறிடமும் பிரித்து வைத்திருக்கும் உறவுகளை அருகிலிருக்கும் மனிதர்களிடம் கண்டடைய முனைகிறது மனம். உறவுகளிடம் தளையத் துடிக்கும் மனம் பற்றுகோல் தேடி அலைந்து எல்லா உறவும் எமதுறவே எனும் பேரனுபவத்தை அடைகிறது. நவீன வாழ்க்கை நமக்குள் ஏற்படுத்திய மாற்றங்களை அதன் விளைவுகளைக் காட்சிப்படுத்தத் தொடங்குகிறது. உறவுகள் சார்ந்தும் மதிப்பீடுகள் சார்ந்தும் வாழ்வின் பார்வை மாற்றம் பெறுகிறது.

உடைபடும் உறவுகள், சீர்கெட்ட மதிப்பீடுகள், எல்லைகள் வகுத்த பிரிவுகள், இயற்கையிலிருந்து முற்றிலுமாக விலகிய இயந்திரமயமான வாழ்வு என எத்தனையோ சங்கடங்களும் சந்தர்ப்பங்களும் எல்லாவற்றையும் கடந்து ஓடிக்கொண்டே யிருக்கின்றன. ஆனால் இத்தனைக்கும் நடுவில் நம்பிக்கையுடன் ஒன்று மட்டும் தீவிரத்துடன் அதிர்ந்தபடியே உள்ளது. இப்பயணம் முழுக்க அது தன் வலிமையை இழக்கவில்லை. தடம் மாறவில்லை; தடுமாறவுமில்லை. சக மனிதர்களின் மீதான அக்கறையும் இயற்கையின் மீதான கரிசனமும் கூடிய ஆன்மிகமே அது. அந்தப் பிரதேச எல்லைகளையும், மொழி வேற்றுமைகளையும் இன பேதங்களையும் கடந்த அந்த ஆன்மிகத்தின் குரல் பாவண்ணனின் கதை உலகம் முழுக்கத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. இத்தனை இழிவுகளுக்கும் அழிவுகளுக்கும் பிறகும் இவ்வுலகம் வாழத்தகுந்ததாக அமையும், அதற்கான சாத்தியங்கள் மனித மனத்தில் குடிகொண்டிருக்கின்றன என்ற பலத்த நம்பிக்கையை மனிதனுக்குள் மனிதனை மட்டுமே காணும் தூய ஆன்மிகத்தின் வழியாக பாவண்ணனின் கதைகள் அழுத்தமாகப் பறைசாற்றியபடியே உள்ளன.

கோவை, எம்.கோபாலகிருஷ்ணன்

10.08.2015

விளை நிலமும் வேரடி மண்ணும்: பாவண்ணனின் படைப்பாளுமை

திருஞானசம்பந்தம்

IMG_20140727_144132

வயல்வெளிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் பரப்பு அற்புதமாக காட்சி  தரும் ஓவியம் போன்றது. ஒவ்வொரு கணமும் சூரியனின் ஒட்டத்திற்கேற்ப தன் வண்ணத்தையும் அழகையும் மாற்றி மாற்றி காட்சி தரும். சேற்றின் மேற்பரப்பில் மண்புழுக்கள் பயணித்த கோடுகள் வளைந்தும் நெளிந்தும் உருவாக்கும் கோட்டோவியங்கள் வயலெங்கும்  நிரம்பியிருக்கும்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையையும் மற்ற கடலோரப் பகுதியையும் திருப்பிப் போட்ட அடர்பெரும் அடைமழையின் ஓதமாக எங்கள் கிராமப் பகுதியிலும் ச்ற்றே பெய்ததால் நெல் நடவு இந்த போகத்தில் சாத்தியமாயிற்று. நெல் வயல் மனித மனம் போன்றே  விசாலமானது. ஆயிரமாயிரம் இரகசிய விதைகளைத் தன்னுள் பொதிந்து  வைத்திருக்கும். அது பயிரோடு சேர்த்து களையையும் வளர்த்தெடுக்கும். அதற்கு பயிரும் களையும் ஒன்றே. பாரபட்சம் பார்க்காதது. வயல் தாய். தாய்க்கு தன் பிள்ளைகளில் பேதம் பார்க்கத் தெரியாது. எல்லாப் பிள்ளைக்கும் ஒன்றே   போல்  தன் முலை சுரக்கும்.

வயல்தான் நம் தாய். மொழிதான் நாம் வளரும் வயல். நம்மை வளர்க்கும் வயல். எனவே நம் மொழியும் நமக்குத் தாயாகிறாள்.

எழுத்தாளர் பாவண்ணனின் படைப்புகள், தமிழின் நவீன இலக்கிய வயல்வெளி பரப்பின் எல்லா திசைகளிலும் படர்ந்திருக்கிறது. பாவண்ணனின் படைப்புகள் தமிழ்நாட்டின் வட மாவட்ட/பாண்டிச்சேரி மண்ணில் வேர்விட்டு, கர்நாடக நிலப்பரப்பின் வளர்ச்சி மற்றும் வாழ் நிலைகளை தன் அநுபவத்தில் உள்வாங்கி, ஒட்டு மொத்த இந்திய மரபின் கலாசார பிண்ணனியை உள்ளடக்கிய எழுத்தாக பரிணாமம் பெற்றிருக்கிறது. அவர் வயலில் எல்லாமும் விளையும். நெல் மட்டுமல்ல, எள்ளும், கொள்ளும், புல்லும் வளரும். ஒவ்வொரு படைப்பும் தமிழுக்கு அறுவடைதான்.

காலத்தின் காலடிச் சுவடுகளில், அன்றாட வாழ்வின் அர்த்தங்கள் மட்டுமல்ல அர்த்தமின்மையின் எச்சங்களும் தொடர்ந்து பயணிக்கின்றன. பயணத்தின் ஒவ்வொரு சிறு கணத்தையும், அதன் ஆகச் சிறந்த வனப்புகளின், வலிகளின் அநுபவப் பதிவுகளையும் செதுக்கியபடி கதை, நாவல், கட்டுரை, விமர்சனம், கவிதை என்று எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.

எல்லா கதைகளிலும் அவர் இருக்கிறார். அப்பாவின் அடிக்கு பயந்த சிறுவனாக, வெறும் கருங்கல் தொட்டியாக மாறும் மாயத்தை கண்டு அதிசயிக்கும் பள்ளிக் கூடம் போகும் மணவனாக, குடிசைத் தீயில் தன் பெற்றோரையும் கனவுகளையும் பறி கொடுத்து அநாதையாக நிற்கும் திக்கற்ற இளைஞனாக, பாக்குத்தோட்டத்தையும் தந்தையையும் இழந்து குடும்ப பாரம் சுமக்கும் யட்சகான ஹெக்டேவாக, பெரியம்மாவாக, தாயாக பிள்ளையாக, ஓவியனாக, சாமியாக, செடியாக, தோப்பாக…. இருக்கிறார். காலத்தின் முன்னும் பின்னுமாக கூடு விட்டு கூடு பாய்ந்து, தன் அநுபவங்களை முன் வைக்கும் கதைகள்.

கதைகளில் வரும் பாத்திரப் படைப்புகள் புனையப்பட்டவை  என்றாலும், நம்முடன் வாழும் எளிய மனிதர்கள். எங்காவது ஒரு ஓரத்தில் சிறு அன்பிற்காகவும், ஆதரவுக்காகவும் அரவணைப்புக்காகவும் ஏங்கும் உயிர்கள். பெரும்பாலும் அவர்களின் ஏக்கம் நிறைவேறுகிறது. யாராவது கைகொடுத்து தூக்கி விடுகிறார்கள். முடியாத போது அவர்களுக்காக கண்ணீர் விடுகிறார்கள். அவர்களின் கண்ணீர் உண்மையானது. வாழ்வின் மீதான அவநம்பிக்கையை தகர்த்து நம்பிக்கையின் துளிர்களை முகிழ்க்கச் செய்கிறது.

மகாபாரதத்தின் மாந்தர்களை கதைப் பொருளாகக் கொண்டு எழுதாத எழுத்தாளர்களே இந்தியாவில் இல்லை  எனலாம். பல நூறு கதைகளை பல நூறு எழுத்தாளர்கள் மீண்டும் மீண்டும் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். பாவண்ணனின் மொழியாக்கத்தில் வந்த எஸ்.எல்.பைரப்பாவின் பருவம் என்ற மகாபாரத நாவல் தமிழில் நிகழ்ந்த ஒரு மகத்தான முயற்சி. இதன் பின்னணியில்,2001-ல் வெளியான ஏழு லட்சம் வரிகள் என்ற தொகுப்பு, புராணத்தின் அடிப்படைக் கதைகளின் சிறுசிறு முடிச்சுகளை முன்வைத்து எழுதப் பட்ட கதைகள். அந்தக் கதைகளில், மாவீர்ர்கள், சக்ரவர்த்திகள், காவிய நாயகர்கள், மாமுனிவர்கள், பெருங்கவிஞர்கள் நம்முடன் வந்து பேசுகிறார்கள். தாங்க முடியாத வலிகளின் ரணங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

குணாட்யர் மிகுந்த மன வலியோடு அரசவையிலிருந்து திரும்பி காட்டில் இருக்கும் தன் குடிலுக்கு வருகிறார். பைசாச மொழியில் எழுதப்பட்ட முதல் மாபெரும் காவியம். ரத்தத்தால் எழுதப்பட்டது. இவை இரண்டுமே தீட்டுகள். ஏற்க முடியாது. தத்துவ சாஸ்திரப்படி காவியத்தை அரங்கேற்ற முடியாது என்று முடிவாகச் சொல்லி விட்டார்கள். இதுவரை யாராலும் செய்ய முடியாத மாபெரும் சாதனை. ஏழு லட்சம் வரிகள். தன் ரத்தத் துளிகளைத் தொட்டுத் தொட்டு எழுத்தாணியால் சுவடிகளில் எழுதி முடித்தவை. சமஸ்கிருதம் ஒலிக்கும் அவையில், பைசாச மொழிக் காவியம் தீண்டத்தகாத மொழியாக ஒதுக்கப்படுகிறது.

paruvam-06867

காவியத் தீட்டு. ஒற்றை வார்த்தையால் ஒரு மொழியையும் மக்களையும் எப்படி தள்ளி வைக்க முடிகிறது? இரவெல்லாம் எண்ணி எண்ணி தவிக்கிறார். சீடர்கள் மனம் குமைகிறார்கள். காவியம் படைத்த அதி உன்னத, ஆனந்த பித்து நிலையினை மனம் மீண்டும் அசை போடுகிறது. பைசாச மொழியின் மக்களைத் தன் கண் முன்  நிற்க வைத்து பார்க்கிறார். அவர்களின் கபடற்ற முகமும் சிரிப்பும் அசைந்தாட இரவில், நிலவில் குடிலை விட்டு வெளியே வந்து வானத்தில் மின்னும் நட்சத்திரங்களை பார்த்தபடி கண்ணீர்  வடிக்கிறார். தீட்டு என்ற ஒரு சொல் அவரை வாட்டுகிறது. அப்போது தூரத்தில் பாதி இரவில் எழுந்த தன் குழந்தையைத் தூங்க வைக்க ஒரு தாய் பைசாச மொழியில் பாடும் தாலாட்டு கேட்கிறது. மொழியின் இசையும் தாயின் அன்பும் குணாட்யரின் மனதை பொங்க வைக்கிறது.

இவ்வளவு அற்புதமான மொழியை தீட்டென்னும் சாயம் பூசித் தள்ளுகிறார்களே என்கிற சோகம் மனத்தில் தைத்தது.

மெல்ல இருட்டுத் திரை விலகத்  தொடங்கியது.வெளிச்சம் படர ஆரம்பித்தது. திடுமென குணாட்யருக்கு மனம் பொங்கி, இக்காவியத்தை அரங்கேற்ற வேண்டிய இடம் இந்தக் காடுதான் என்றும், இந்த நேரம் தான் என்று தோன்றிய கணம் அவர் மனத்தில் பெரும் விடுதலையுணர்வு  தோன்றியது. அருகிருக்கும் குளத்தில் மூழ்கி எழுந்து குடிலை அடைந்து ஈரத் தோலாடையுடன் அக்கினி குண்டத்தின் முன் உட்கார்ந்தார்.

நெருப்புக்கு தீட்டு இல்லை. தன் காவியத்தின் முதல் சுவடியை எடுத்து வாசித்தார். காவிய ஓசையில் காடே ஸ்தம்பித்ததுகாட்டு விலங்குகள் அவரை நோக்கி வந்தனபறவைகள் பறக்க மறந்தன. மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நின்றனர். வாசித்து முடித்ததும் நெருப்புக்கு அவிசாக்கினார். அரசர் வந்து அவர் காலடியில் வீழ்ந்து மன்னிப்பு கோருவதற்குள் ஆறு லட்சம் வரிகள் நெருப்புக்கு இரையாயின. அவர்  தன் காவியத்தை எரிக்கவில்லை. மக்களை, மக்களின் மொழியை ஒதுக்கிய ஆணவத் தீட்டை எரித்தார். அகங்கார அறியாமைத் தீட்டை எரித்தார். இன்றும் நாம் எரிக்க வேண்டிய தீட்டுக்கள் மீதமிருக்கின்றன.

போர்க்களம் என்று ஒரு கதை. பாற்கடலைக் கடைந்து அமுதெடுக்கும் வேலை. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே சம உழைப்பு, சம பங்கு ஒப்பந்தம். எல்லோருக்கும் அமரர்ஆகத் துடிக்கும் பேராவல். அமுதக் கலசம் கைவசப்பட்டதும் பங்கீட்டில் குழப்பம். மோகினி வேசம் போட்டு ஒட்டு மொத்த அசுரர் குலத்திற்கே துரோகம் இழைத்தவனின் சுயம் உலகறிந்த கதை. எத்தனை ஒப்பந்தம் எழுதினாலும், அதைச் சட்டமாக இயற்றினாலும், எத்தனை பட்டியலிட்டு பங்கு கொடுப்பதாக நடித்தாலும் துரோகம் இன்று வரை தொடர்கிறது. உண்மை ஒருபோதும் அழிவதில்லை. ஆனால் அதை திட்டமிட்டு நூற்றாண்டுகளாக மறைக்க முடியும் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பாவண்ணனின்இலக்கிய பரிணாம வளர்ச்சியில், மனித வாழ்வின் அனைத்து உணர்வுகளையும், அது  நிகழும் சூழலையும் தொடர்ந்து பதிவு செய்திருக்கிறார். அவரின் படைப்புகளும், படைப்போடு இணைந்த படைப்பூக்கச் செயல்பாடுகளும் புதிதாக எழுத வருபவர்களுக்கும், வாசகர்களுக்கும் எப்போதும் தொடர்ந்து உற்சாகத்தையும் நெருக்கத்தையும் கொடுப்பதாகவே அமைந்திருக்கிறது. அவரின் படைப்பாளுமை தமிழ் கூறும் மக்களுக்கு விளை நிலமாகவும், மொழிக்கு வேரடி மண்ணாகவும் இருக்கும் என்பது என் திடமான நம்பிக்கை. நம் தாய்மண் நம்மை ஒருபோதும் கைவிடாது.

                                   

மண்ணில் படரும் மலர்கள் – பாவண்ணன் புனைவின் மீதொரு வெளிச்சக் கீற்று

ரா கிரிதரன் 

நிர்மால்யா மற்றும் ஜெயமோகனுடன்

மேல்நோக்கிப் பொழிந்தவை

கடந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளாகத் தமிழிலக்கியத்தில் தொடர்ந்து உயிரோட்டத்தோடு இயங்கி ஒவ்வொரு தளத்திலும் தனது முத்திரையைப் படைத்து வருவதில் எழுத்தாளர் பாவண்ணனுக்கு நிகரானவர்களது எண்ணிக்கை கைக்குள் அடங்கிவிடும். கவிதை தொடங்கி சிறுகதை, நாவல், கட்டுரை, மொழியாக்கம், சிறார் இலக்கியம் என எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து ஒளி குன்றாது எழுதி வருபவர். வெங்கட் சாமிநாதன் முதற்கொண்டு பல விமர்சகர்களும் பாவண்ணன் எழுத்துகளை அடையாளம் கண்டுள்ளனர். கன்னட இலக்கியத்திலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்து அறிமுகப்படுத்தியவர். தனது வேலைக்காக மொழி தெரியாத கர்நாடக மாநிலத்துக்குச் சென்றவர் முறையாக கன்னடத்தைப் படித்ததோடு மட்டுமல்லாது அன்றாடப் பேச்சு வழக்கிலும் கையாண்டு தமிழுக்கு இணை மொழியாக அதனை தரித்துக்கொண்டவர். எண்பதுகளில் கன்னட தலித் இயக்க எழுச்சியோடு எழுந்த கன்னட இலக்கியத்தை உடனுக்குடன் அறிமுகம் செய்ததோடு மட்டுமல்லாது கர்னாடக மாநிலத்தின் மூத்த மற்றும் சமகால கலைஞர்களோடு தொடர்பு வெளியை ஏற்படுத்தி தமிழுக்கு அறிமுகம் செய்தவர். ஆனாலும் பாவண்ணனின் இந்த பங்களிப்பு விமர்சகர்களிடையே இன்றுவரை பெரிய கவனத்தைக் கவரவில்லை. 2005இல் பைரப்பாவின் மகாபாரத மறு ஆக்கமான ‘பருவம்‘ நாவலுக்கு மொழிபெயர்ப்புக்கான சாஹித்திய அகாதெமி பரிசு வெல்லும் போது ஏற்பட்ட சலனத்தோடு அவரது பிற மொழியாக்கங்களும் உடனடியாகக் கவனத்தில் வந்திருக்கவேண்டும். தொன்னூறுகளின் மத்தியிலும் இறுதியிலும் தலித் இலக்கியம் தமிழில் உச்சகட்டத்தை அடைந்த சமயத்திலேனும் அவரது கன்னட மொழியாக்கங்கள் கவனத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் கன்னடத்தில் வெளியான தலித் முன்னோடி எழுத்துகளை அவர் தொடர்ந்து தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்திருந்தார். அப்பிரக்ஞை வளர்ந்திருந்தால் கன்னட மொழியின் வளமையும் புது கருத்துக் களமும் தமிழுக்கு வந்து சேர்த்திருக்கும்.

பாவண்ணன் உருவாக்கிய ஏராளமான ஆக்கங்கள் இன்றும் விமர்சகர்களின் முழுமையான ஆய்வுக்காகக் காத்திருக்கின்றன. நீண்ட காலம் எழுதுபவர்கள் ஓரிரு படைப்புகளின் வெற்றி உருவாக்கும் கூண்டுக்குள் அவர்களாகவே சிக்கிக் கொள்பவர்களாக ஆகிறார்கள். வாசகர்களும் விமர்சகர்களும் சட்டெனத் தொகுத்துக் கூறும்படியாக அவர்கள் படைப்புத் தொகுதிகள் இருப்பதில்லை. அதனால் மேலேழுந்தவாரியான ஒற்றை வரி விமர்சனங்கள் இவ்வகை எழுத்தாளர்களின் படைப்புகளை சரியாக வகுத்துக் கூறுவதில்லை. கூர்ந்த இலக்கிய அளவுகோளும் அவதானிப்பும் கொண்ட விமர்சகர் அவரது பெரும் படைப்புத் தொகுப்பிலிருந்து கவனம் கொள்ளவேண்டிய ஆக்கங்களை அடையாளம் காண வேண்டியது அவசியமாகிறது. தி.ஜானகிராமன், வண்ணதாசன், பூமணி போன்ற படைப்பாளிகளைப் போல அழகியலும் இயல்புவாதமும் முயங்கி நிற்கும் பல படைப்புகளைத் தந்தவர் என அறியப்பட்ட இடத்திலிருந்து எழும்பி இந்திய தொன்மங்களின் மறு ஆக்கம், வரலாற்றுக்கதைகள் (“நிகழ்காலக் காட்சிகள் அளித்த மன எழுச்சியால் இறந்தகாலத்தைத் தேடிப்போன கதைகள்” – பொம்மைக்காரி, சிறுகதைத் தொகுப்பு),  நாட்டாரியக் கதைகள் போன்றவற்றை எழுதியவர் எனும் இடத்துக்கு சென்று அவரது புனைவுலகை அலச வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால் கீழத்தியத் தத்துவத்தேடல் அவரை மரபுக்குள் இழுத்துச் சென்றிருக்கிறது, தொன்மங்களை மீளச்சொல்லச் செய்திருக்கிறது. இருள் பிரிந்ததும் அரும்பிய சுடரொளியும் அதன் வெளிச்சத்தை சக மனிதர் மீது போட்டுப்பார்க்கும் பார்வையும் கொண்ட கதைகள் எனும் நோக்கில் மட்டுமே பார்க்காமல் புனைவின் சாத்தியங்களை பலதிசைகளிலும் நெருங்கிப்பார்த்த கலைஞராக பாவண்ணனை அணுக வேண்டிய அவசியம் உள்ளது.

பாவண்ணனின் படைப்புப் பார்வை

பாவண்ணன் எழுதத்தொடங்கிய எண்பதுகளின் காலகட்டத்தை தமிழ் நவீனத்துவத்தின் அந்திமக்காலம் எனப் பொதுவாக வகுக்க முடியும். நவீனத்துவ விமரிசனத்தின் நேரடியானத் தாக்கத்தை அவரது ஆரம்பகாலக் கதைகளில் காண முடிகிறது. சொல்லப்போனால் 1987 இல் வெளியான அவரது முதல் நாவலான  வாழ்க்கை ஒரு விசாரணை” கூறுமுறை அளவில் மிகக் கறாரான யதார்த்தத் தளத்தை மீறாத கதையாகவே தெரியும். தம்முன் தெரிந்த அனுபவ தர்க்கத்தை எள்ளளவும் மீறாத போக்குடைய நிகழ்வுகளின் தொகுப்பு. நம் கையை மீறிய விசையினால் மனித வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் அலையும் சித்திரம் அதில் கிடைக்கும். மிகத் துல்லியமான நவீனத்துவப் படைப்பு. “வேர்கள் தொலைவில் இருக்கின்றன” எனும் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பின் கதைகளும் பெயரைப்போலவே திசையறியா விதியின் கைகளால் கைவிடப்பட்டோரின் கதைகளாகவே தெரியும். அங்கிருந்து 2003இல் அவர் எழுதி விமர்சகர்களால் சிலாகிக்கப்பட்ட “கடலோர வீடு” சிறுகதையின் பயணம் அவரது படைப்பு மனதின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

bommaikari

அனுபவ தர்க்க உண்மையை மட்டுமே பதிவு செய்வதும் மனித வாழ்வே அவலத்தின் அல்லது இயலாமையின் உறைவிடமாகத் தொனிக்கும் பார்வையிலிருந்து உள்ளுணர்வு சார்ந்த அழகியல் நேர்த்தி கொண்ட பார்வைக்கு சிறுகதைப்பயணம் அவரை செலுத்தியுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தின் நவீனத்துவம் மறைந்து பின்நவீனத்துவமும், ஒடுக்கப்பட்ட இனக்குழுக்களின் கதைகள், பாலினங்களைப் பற்றிய அடையாள இலக்கிய காலகட்டமும் வந்து படர்ந்தன.

“கடலின் முன்னிலையில் நிற்கும் போதெல்லாம் என் மனம் தயக்கமும் தடுமாற்றமும் கொள்ளும். பார்வையால் அளக்கமுடியாத அகலமும் நீளமும் கொண்ட கடலை வெகுநேரம் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. கண்கள் தத்தளிக்கத் தொடங்கிவிடும். பார்வை வழியே அக்கடல் உடலுக்குள் இறங்கி படீரென ஒரு அலையாக மோதும். ரத்தம் துள்ளியடங்கும். கடலுக்குள் இறங்கி அலையோடு அலையாக மாறிவிடத் துடிக்கும். ஆழ்மனத்திலிருந்து ஒரு கட்டளை பிறந்து எக்கணமும் என்னைத் தூண்டிவிடக்கூடும் என்று தோன்றும். அந்தத் தடுமாற்றம் மிகவும் பழகிய ஒன்று.” (கடலோர வீடு)

பாவண்ணனின் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்கள் அவரது படைப்புகள் நிகழும் களம் நம் முன்னே கிடக்கும் யதார்த்த உலகம் என்பதை உணர முடியும். சொல்லப் போனால் மிகவும் அடிப்படையான யதார்த்த ஒழுங்குகளை அடைய விரும்பும் பாத்திரங்களை அவர் அதிகம் படைத்துள்ளார். புற உலகின் சமநிலையின்மையால் யதார்த்த வாழ்வோடு பொருந்தி வாழ முடியாதவர்கள். ஆழ்மனதில் தீவிரமான கனவைக் கட்டிச் சுமப்பவர்கள். அந்தக் கனவுக்குள் சுழன்று தங்களைத் தொலைத்தவர்கள். அவர்களுடனேயே வாழும் பிற மனிதர்களை விட வேறொரு உலகில் வாழ்பவர்களாகவே அறியப்படுபவர்கள். இந்த கனவு நிலையில் வெளிப்படும் ஆழ்மனக் குழப்பங்களையும், தங்கள் முரணை விட்டும் வெளியேற முடியாது தவிப்பவர்கள்.

“வெளிச்சம் மண்ணைத் தொடும் நேரத்தில் மரக்கிளைகளில் வந்து அமர்ந்த காகங்கள், தரைநெடுக அம்மா பிய்த்துப்போடும் இட்லித் துண்டுகளைக் காணாமல் குழந்தைகள் கதறுவதுபோல இடைவிடாமல் அலறின. பிறகு கோழிகள் வந்தன. நாய்கள் வந்து வளைய வளைய சுற்றிவிட்டு சென்றன. வாடிக்கையாளர்கள் வந்து வெறும் வாசலை நிமிர்ந்து பார்த்துவிட்டுப் போனார்கள். பள்ளிக்கூடத்தில் சாப்பாட்டு மணியடித்ததும் சிறுவர்கள் கூட்டமாக வந்து முற்றத்தில் நின்று பார்த்துவிட்டு தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு சென்றார்கள். வழிப்போக்கர்களும் பிச்சைக்காரர்களும் “இட்லிக்காரம்மா இட்லிக்காரம்மா” என்று அழைத்துப்பார்த்துவிட்டு ஏமாந்து போனார்கள்” – [“அம்மா” சிறுகதை]

மனிதர்கள் மீது அளவிடமுடியாத பிரியமும் அவர்களது வாழ்க்கை மீதூறும் கரிசனமும் பாவண்ணனின் படைப்புலகில் இயங்கின்றன. அவரது நட்பு வட்டத்தை கவனிக்கும்போது ஒரு படைப்பாளியாக அவரை இயக்குவதும் இந்த காதல் தான் எனத் தோன்றுகிறது. எதையும் உடனடியாக அடையாளப்படுத்தி அரவணைக்கும் அன்பு அல்ல. மாறாக ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் அதனதன் இயல்பில் படைப்பு அழகியல் சந்திக்கும் புள்ளிகள் சுட்டிக்காட்டும் இடமாக அவரது புனைவு இயங்குகிறது. “வாழ்க்கை ஒரு விசாரணை” நாவலில் காளியும், ப்ளாஸ்டிக் ஃபேக்டரி எரிந்ததில் தன் சுயநிலை இழக்கும் அத்தையும் (“பொம்மை“) , “ஒற்றை மரம்” பெண்ணின் சாவில் மனித மனதின் கீழ்மையையும் உன்னதத்தையும் கண்டுகொள்ளும் தாயும் காட்டும் தரிசனம் மெய்ஞான உலகின் இயல்பைத் தக்கவைத்திருக்கும். இந்த இயல்பே கூட அவரது படைப்புகளை ஒளிரும் சுடரின் வழிகாட்டலை ஏந்தி நிற்கும் தருணங்களாக அமைத்திருக்கின்றன. வாழ்வின் கரிய பக்கத்தையும், அவலத்தையும் சுட்டும் இடத்திலும் அவரது மனம் ஏதோ ஒரு மேன்மையைத் தொட்டுக்காட்டுகிறது. “கரைக்கக் கரைக்க நிரம்பிக்கொண்டே இருக்கிற நெஞ்சின் பாரத்தைத் தொடர்ந்து கரைப்பதற்காக பாடுவது மட்டுமே அவன் வாழ்வாகிவிட்டது. மிச்சமிருக்கும் உயிரின் சுடர் அணையும்வரை அவன் பாடிக்கொண்டே இருப்பான்” (தளும்பும் மனம் முன்னுரை).

உச்சகட்டமான வெறுப்புணர்வை சொல்லிச்செல்லும் கதைகளில் கூட அவரது பிற பாத்திரங்களின் இயல்பால் ஒரு சமநிலை கூடிவிடுகிறது. ஒரு வாசகராக கதையின் முழுமையை நம்மால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தால் விமர்சகரின் அளவுகோலின்படி குறிப்பிட்ட சுவைக்கு ஒரு மாற்று குறைவோ என எண்ண வைப்பதும் இதனால் தான். வாழ்வின் கரிப்புச் சுவையும் அங்கதமும் வெளிப்படும் அவரது சில கதைகள் முழுமையாக அமையாததும் இந்த ஒரு அம்சத்தினால் தானோ என்றும் நினைக்க வைக்கிறது.

என்னை மிகவும் பாதித்த “வைராக்கியம்” சிறுகதையில் இந்த முரண் நிகழ்வதை வாசகர்கள் உணர் முடியும்.

“மழ நிக்கவே இல்ல. வெறி தணிஞ்சதும் அவன் வேற பக்கமா போய் படுத்துகிட்டான். அந்த மழ சத்தத்தையே வெகுநேரம் கேட்டுகினு படுத்துருந்தேன். கொஞ்ச நேரம் இந்த உலகத்துலயே நான் இல்ல. சட்டுனு பித்து புடிச்சாப்புல ஒரு வேகம் நரம்புங்கள ஒரு முறுக்கு முறுக்கிச்சி. எழுந்து உக்காந்து குடிசைக்குள்ள பாத்தன். கோழிக் குஞ்சுங்களாட்டம் புள்ளங்க ஒரு பக்கம். கெடாவாட்டம் இவன் இன்னொரு பக்கம். திடீர்னு ஒரு யோசன. அப்படியே துள்ளி எழுந்து பொடவய சரியா கட்டனேன். தலமுடியா கொண்டயா சுருட்டி கட்டிகினு பக்கத்துல இருந்த கல்ல பார்த்தேன் கூட வேலிருந்து உழுந்த கல்லு. அத தூக்கி ஓங்கி ஒரே போடா அவன் தலயில போட்டன். ஆன்னு ஒரு சத்தம். மழயில அது பெரிசா கேக்கல. ஏதோ சொல்ல வந்து அப்படியே அடங்கிட்டான். கண்ணுங்க அப்படியே நட்டுகிச்சி. பஸ்ல அடிப்பட்டு உழுந்து நாய் மாதிரி..”

வைராக்கியம் கதை முழுவதும் மிகத் தீவிரமான வெறுப்புணர்வு நம்மைத் தூண்டிவிட்டபடி இருக்கும். கொலை செய்பவளின் மாமனாரின் மேன்மை உணர்வால் அந்த வெறுப்பு சமன்பட்டுவிடும். அதுவே அக்கதையின் உச்சமுடிச்சாகவும் அமைந்திருக்கும்.

பாவண்ணனின் சிறுகதை உலகம்

பாவண்ணன் சிறுகதைகளைப் பற்றி நினைக்கும்தோறும் செடிகளின் பற்றிப்படரும் இயல்பு ஒரு காட்சியாக என் கண்முன்னே நிற்கும். என் தோட்டத்தில் வைத்திருந்த மல்லிகைச் செடி தொட்டியிலிருந்து தழைத்து கனம் தாங்காது கிளைகளை தரையில் சாய்த்திருந்தது. கவனிக்காது விட்ட நாட்களில் கிளையின் அடிப்பாகம் பூமிக்குள் புதைந்திருந்தது. சில நாட்களில் தொட்டியிலிருந்து ரெண்டடி தள்ளியிருக்கும் மண்ணிலிருந்து மல்லிகை செடி துளிர் விடக்கண்டேன். மண்ணுக்கடியில் புதைந்த கிளை படர்ந்திருந்ததைப் பார்த்ததும் வியப்பாயிருந்தது. பற்றிப்படர்வதிலும் தனதென நினைத்து அழுக்கும் சருகும் குவிந்த இடத்திலிருந்து முளைப்பதுமாய் செடிகளுக்கு இருக்கும் ஜீவத்துடிப்பு பரவசம் கொடுக்கும் அனுபவம். பாவண்ணன் உலகில் தெரியும் கதாபாத்திரங்களுக்கும் இந்த குணாதிசயம் உண்டு. நிராயுதபாணியாக சகல கொடுமைகளையும் அனுபவிப்பவர்கள் கூட மனித மனதின் ஈரத்தை ஒரு நொடி அனுபவித்ததுமே புத்துயிர் ஊட்டப்பட்டது போல துளிர்க்கிறார்கள்.

பாவண்ணனின் சிறுகதைகளைப் படித்தவர்கள் மனதில் முதலில் படிவது அவரது அப்பட்டமான எழுத்து முறை தான். வாழ்க்கை பற்றிய நேர்ப்பதிவுகளாக அவை நமக்குக் காட்சியளிக்கும். அவரது பெரும்பாலானக் கதைகள் யதார்த்தத் தளத்தில் எழுதப்பட்டவை. கதை சொல்லி வழியாக அல்லாமல் கதை நம்முன் நிகழும். உடனடியாக நமக்குத் தோன்றுவது கு.அழகிரிசாமியின் புனைவுலகு. கு.அழகிரிசாமி எழுதிய கதைகளின் நேரடியானத்தன்மை ஒரு யதார்த்தத் தளத்தை உருவாக்கினாலும் இடர் மிகுந்த மனித வாழ்வின் மீது நேரடியாகப் பற்று வைத்தவர். ராஜா வந்திருக்கிறார் கதை போல பல கதைகளில் துயர் மிகு சித்திரத்திலிருந்து ஒரு ஒளி பொருந்திய வாழ்க்கைக்கான கனவை அவரால் விதைக்க முடிந்தது. பல கதைகள் தனிமனித அனுபவங்களிலிருந்து விடுபட்டு மானுட மொத்தத்துக்குமான தரிசனமாக மாறியிருந்ததை பல விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த அழகியல் ரீதியைப் பொருத்தவரை கு.அழகிரிசாமியின் நேரடியான பாதிப்பு பாவண்ணன் புனைவில் தென்படுகிறது.

pavannan

வர்ணனைகளிலும் விவரிப்புகளிலும் புத்திசாலித்தமான காய் நகர்த்தல்கள் இல்லாததால் சில சமயம் நேரடியாக கதையை விவரிக்கும் போக்கு காணப்படும். இதனாலேயே சில வரிகளில் முழுமை நோக்கிய தாவல்களோ, தத்துவ தரிசனங்களோ உடனடியாகத் தென்படுவதில்லை. பாவண்ணன் காட்டும் உலகம் ஒரு தனிமனிதனின் அன்றாடப் பிரச்சனை வழியாக வாசகர்களுக்குக் கடத்தப்படுகிறது. பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் சிறுவன் ஒவ்வொரு அறையாகச் சென்று தனது அக்காவைத் தேடுவது போல கதாசிரியரும் சிக்கிக்கொண்ட நூல்கண்டு வாழ்க்கையை அறிமுகப்படுத்துகிறார். இங்கு அறிமுகப்படுத்துகிறார் எனும் வார்த்தை முக்கியமானது. அவர் எந்நிலையிலும் வாழ்க்கையை ஆராய்வதில்லை. தத்துவம், வரலாறு, சமூகவியல், கடவுள் என எந்த சிந்தனைக்குப் பின்னாலும் ஒளிந்துகொண்டு அவர் கதாபாத்திரங்களின் வாழ்வை அலசுவதில்லை. அதில் பெரும்பாலும் பாவண்ணன் விருப்பமில்லாதவராகவே தென்படுகிறார் (மரபை மறு ஆக்கம் செய்யும் கதைகளைத் தவிர்த்து). இப்படி வாழ்வின் அர்த்தத்தை ஆவேசமாகத் திணிக்க முற்படாததால் கதாபாத்திரங்களின் போக்குப்படி கதையின் தரிசனம் யதார்த்தமாக விரிகிறது. இது பாவண்ணன் புனைவின் மிகப்பெரிய பலம். இதுவே நாடகீய தருணங்களைக் குறைத்து அவரது கதைகளை பலவீனமாக ஆகும் தருணங்களும் உண்டு.

சொல்லப்படும் கதைகளின் வழியாக ஒரு வாழ்க்கை தருணம் வெளிப்படுவதால், பாவண்ணன் கதைகள் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக மிகையாக எதையும் சொல்வதில்லை. கதாபாத்திரங்களின் அகச் சிக்கல்கள் எவ்விதமான முடிவையும் எட்டாது சுவரில் முட்டி நிற்கும் தருணங்களையும் அவர் சிறுகதைகளாக ஆக்குகிறார். வாழ்க்கையின் ஆட்டத்துக்குத் தகுந்தபடி ஆடும் பாவைகளாக மனிதர்களை சித்தரிக்கும் தருணங்களில் மானுட விழுமியங்கள் கதாபாத்திரங்களுக்கு மீட்சி அளிக்கின்றன.

உதாரணத்துக்கு , மருத்துவமனையில் கற்பழிக்கப்பட்ட மகளுக்காக ரத்தம் சேகரிக்க வந்திருந்த கிராமத்துத் தாயின் கதையைச் சொல்லலாம் (‘ஒற்றை மரம்‘ – பொம்மைக்காரி தொகுப்பு). பாவண்ணன் எழுதிய மிகச் சிறப்பான கதைகளில் இதுவும் ஒன்று. சொன்னதையே அரற்றும் தாய்க்கு சீர்குலைந்த பெண்ணைக் காப்பாற்றும் வழி தெரியவில்லை. கற்பழித்ததில் ரத்தப்போக்குக் கூடிப்போனது மட்டுமல்லாது நினைவும் இழந்துவிட்டாள் மகள். நகர்ப்புற மருத்துவமனை ஆழ்கவனச் சிகிச்சைப் பிரிவில் ரத்தம் கொண்டு வராமல் சிகிச்சை தொடங்க மாட்டோம் எனச்சொல்லும்போது கிராமத்துக் கிழவிக்கு மனம் அவர்கள் சொல்வதில் லயிக்கவில்லை. ரத்தம் வேணும் என்பது மட்டுமே அவளது புலம்பல். அங்கு உதவிக்கு வரும் சிவாவுக்கு இது குற்ற உணர்வைத் தூண்ட அவர் ரத்தம் வாங்குவதற்குக் கிளம்புகிறார். காலை வருவதற்குள் பெண் இறந்துவிடுகிறாள். அம்மா கடைசியில் கும்பிடும் காட்சியில் எழுப்பப்படும் மானுட அவலம் கதையை மிகச் சிறந்ததாக ஆக்குகிறது. ஓரிரவு நம்பிக்கை கொடுத்து கூடவே நின்றிருந்த முன்பின் அறிமுகமில்லாதவரை பார்வையிலிருந்து மறையும்வரை அவளால் கும்பிட்டபடியே இருக்க மட்டுமே முடிகிறது. நெகிழ்வின் உச்சகட்டத்தை பாவண்ணன் இக்கதையில் அடைகிறார்.

கையறுநிலையின் பல படிநிலைகளை தனது கதைகளில் காட்டியுள்ளார் பாவண்ணன். ஒற்றை மரம் போல ‘பொம்மைக்காரி‘ கடந்த பத்தாண்டுகளில் தமிழ் இலக்கியத்தில் வெளியான மிகச் சிறப்பான சிறுகதை. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் இயல்புவாதக் கதையில் பல ரகங்களை எழுதிப்பார்த்ததோடு மட்டுமல்லாது மரபுக்கதைகளின் மறு ஆக்கங்களிலும், பல செவ்வியல் பாணிக்கதைகளும் எழுதியதில் தனக்கென ஒரு அழகியலை பாவண்ணன் கைகொண்டிருக்கிறார். அதற்கு மிகச் சிறப்பான உதாரணம் ‘பொம்மைக்காரி‘. சிறுகதையின் உச்சத்தை மிகக்கச்சிதமாக சென்றடைந்த ஒரு ஆக்கம். வள்ளியும் மாரியும் பொம்மை செய்து ஊர் சந்தைகளில் விற்பவர்கள். கணவன் எது கேட்டாலும் வாய் திறவாதிருக்கும் வள்ளி மீது மாரிக்கு மிகுந்த எரிச்சல் உண்டு. வாய் திறந்து பதில் சொன்னாலும் “வாய வளக்காதபடி தேவடியா முண்ட” என கைநீட்டவும் செய்வான். அவனுடன் தொழிலுக்குப் போகும்தோறும் அவள் பயத்துடனேயே இருப்பாள். தன் மீதிருக்கும் கோபத்தை அவளால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதுவும் அவன் கள் குடித்திருந்தால் வசவுடன் அடியும் விழும். சிங்கத்துடன் வாழும் மான் போல அவள் பயத்துடனேயே வாழ்கிறாள். அவனது நிலையும் ஒன்றும் மதிக்கத்தக்கதாக இல்லை எனும்போது வெளியே கீழ்த்தரமாக அவமதிக்கப்படும் அவனது கோபத்தின் மீது ஒரு இயலாமை கூடுகிறது. பக்கத்து ஊருக்கு தொழில் நிமித்தம் செல்பவர்கள் அங்கிருக்கும் ஊர்க்கார இளைஞர்களால் வம்பிழுக்கப்படுகிறார்கள். காட்டைத் தாண்டி ஓடிவரும் அவர்களைத் துரத்தி மாரியை அடித்துப்போடுகிறார்கள். ஒருவன் மட்டும் வள்ளியைத் தேடி கண்டுபிடித்து உடலுறவு கொள்கிறான். போகும்போது முகத்தில் ஒரு முத்தமிட்டுச் செல்கிறான்.மாரியைத் தூக்கி வந்தபின்னும் அவனிடம் இதைப் பற்றிச் சொல்லாது இருக்கிறாள். குற்ற உணர்வு தாங்காது தற்கொலை செய்துகொள்ளப்போகும் ஆற்றில் கழுத்தளவு நீர் இருக்கும்போது ஒரு நொடி சிலிர்ப்பில் அந்த முத்தம் அவளது நினைவுக்கு வருகிறது. தனது எல்லா கஷ்டத்தையும் அந்த முத்தம் துடைத்துவிடுவதாக எண்ணிக்கொள்கிறாள். இந்த இடத்தில் வாசகனுக்கு மிக இயல்பான பரிவு கூடுகிறது. பிற பாணி எழுத்தாளரின் கையில் இந்த இடம் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக மிகக் கொச்சையாக வெளிப்பட்டிருக்கும். ஆனால், இந்த முடிவைக் கடக்கும் வாசகன் வள்ளி மற்றும் மாரி இருவரின் மீதும் அளவுகடந்த பரிவு ஏற்பட்டுவிடும் என்பதே கதாசிரியனின் வெற்றி.

முன்னர் சொன்னதுபோல ஒரு கதையினூடாக மனம் கொள்ளும் சமாதானங்களின் பல படிநிலைகளை பாவண்ணனால் மிக இயல்பாகக் காட்டமுடிகிறது. இது ஒருவித அக விடுதலைக்கானப் போராட்டம். மனிதனைச் சூழ்ந்துள்ள சமூகப்படிநிலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என மனிதர்களை இணைப்பதற்காக ஏற்படுத்திய ஒவ்வொரு அமைப்பும் முதலியத்தின் பிடியில் சிக்கி அவனைக் கீழ்மையில் தள்ளுவதற்காகப் பயன்படுகிறது என்பதைக் காட்டும் பல கதைகளை உருவாக்கியுள்ளார். எவ்விதமான முயற்சிகளும் அல்லாது கதையின் போக்கில் மிக இயல்பான படிமங்கள் உருவாவதால் அவை மேலதிக விளக்கத்தை கோரி நிற்பதில்லை. உதாரணமாக, பொம்மைக்காரி கதையில் வரும் மாரியின் புற வாழ்வில் எப்படிப்பட்ட அவமானங்களை சந்தித்து வீடு திரும்புகிறான் எனும் சித்திரம் நமக்குக் காட்டப்படுதில்லை (ஒரு முறை அவர்கள் இருவருமாகத் தொழிலுக்குச் செல்கிறார்கள் – அவள் கற்பழிக்கப்படுகிறாள்). ஆனால் அவனது ஆழ்மனம் வெறுப்பால் ஆனதை நம்மால் உணர முடிகிறது. அந்த வெறுப்பே அவள் மீதான அதிகாரமும் வன்முறையுமாக மாறுகிறது. அவனால் முடிந்தது அது மட்டும் தான். கோபமாகத் துரத்தும் இளைஞர்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளத் தெரிவதில்லை. அடிபட்டு வீழ்கிறான்; கற்பழிக்கப்பட்ட வள்ளி அவனைத் தூக்கி வீட்டுக்கு வருகிறாள். வாழ்க்கை மீதான வெறுப்பு மட்டுமே அவனிடம் தெரிகிறது. அவன் ஆட்டுவிப்பதுக்கு ஏற்றார்போல வள்ளியும் ஆடும் ஒரு பொம்மைக்காரி தான். அந்த பொம்மைக்கென ஒரு தனி உணர்வும் உள்ளது என்றோ பரிவும் காட்டவேண்டிய தேவை இருக்கிறது என்றோ மாரி உணர்வதில்லை. கள்ளு குடித்தபின் மிருகத்தனமாக உடலுறவு கொண்டுவிட்டு பீடி பிடிக்கச் செல்கிறான் (கள்ளும் பீடியும் அவன் விரும்பிப் பெற்ற பழக்கங்கள் அல்ல, வெளியூரில் தொழில் நிமித்தம் செல்லும் நேரத்தில் பிற வியாபாரிகளிடமிருந்து பெற்றுக்கொண்டது என்கிறார் ஆசிரியர் – இதிலும் ஒரு சமூகத் திணிப்பு உள்ளது. சமூக எதிர்ப்புக்கான ஒரு செயல்). இதே போன்ற இயலாமை கூடியதில் உணர்வு பீறிடும் ‘பூனைக்குட்டி‘ கதையில் இது சரியாக எடுபடவில்லை என்பதையும் வாசகர்கள் உணரலாம்.

சிறுகதைகளில் செவ்வியல் பாணியிலும், மரபை மறு ஆக்கம் செய்யும் கதைகள் பலவற்றை அவர் எழுதியிருப்பதை வாசகர்கள் அறியாமலேயே இருக்கக்கூடும். புது வாசகர்களுக்கு சமூக யதார்த்தக் கதைகள் வழியாகவே பாவண்ணன் படைப்புகளுக்கு அறிமுகம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். அதற்கு ஏற்றார்போல இணையத்தில் தமிழ் படிப்போர் பலருக்குக் கிடைக்கும் அவரது கதைகள் யதார்த்த பாணிக் கதைகளே. இதில் பாவண்ணன் தனி முத்திரை பதித்துள்ளார் என்றாலும் செவ்வியல் பாணியிலும், வரலாற்றை மறு ஆக்கம் செய்யும் கதைகளிலும் தனித்தடம் பதித்துள்ளார் என்றே சொல்லமுடியும்.

சமீபத்தில் வந்த கதைகளில் ‘வெள்ளம்‘, ‘தங்கமாலை‘, ‘பிரயாணம்‘, ‘கனவு‘, ‘இன்னும் ஒரு கணம்‘ போன்றவை மரபை மறு ஆக்கம் செய்யும் கதைகள் என்று சொல்வதை விட காலத்தின் பின்னோக்கிச் சென்று மனிதனின் அடிப்படை விழுமியங்களை அலசிப்பார்ப்பவை எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும். மரபு பற்றிய செவ்வியல் பாணிக்கதைகள் எனும்போது அவை ஒரு காலகட்டத்தின் தத்துவங்களை மானுட தரிசனமாக அடையாளம் காட்டிப் பழக்கப்பட்டவை எனலாம். பாவண்ணன் செய்வது நாட்டார் காவியங்களில் செய்வது போன்று கதாபாத்திரங்களின் அக புற அலைச்சல்களை பதிவிடும் வாழ்க்கை குறிப்புகளாகும். செழுமையான கதாபாத்திரங்களின் அக ஊசலாட்டத்தைப் பற்றிப் பேசும்போது (‘சூரபுத்திரன்’ – வெள்ளம் கதையில், ‘முசே’ – பிரயாணம்) அவை மிக இயல்பாகவே மானுட அடிப்படை விழுமியங்களை நோக்கிச் செல்கிறது. இன்னொரு வழியில் சொல்வதானால், கதாபாத்திரங்களின் வாழ்க்கை சார்ந்த தத்துவங்கள் எவ்விதமான சிந்தனை மரபையும் ஒட்டி இருப்பதில்லை. அவை மனிதர்களுக்கு இடையே நடக்கும் உரசல்களையும், இணைப்புகளையும் சார்ந்த சித்தரிப்புகளாக அமைந்திருக்கின்றன. கருத்துகளை விட கதாபாத்திரங்களை வாசகர்களுக்கு துல்லியமாகக் காட்ட இது வழிவகுத்திருந்தாலும் ஒவ்வொரு காலகட்டமும் அதில் புழங்கும் கருத்து சார்ந்த விழுமியங்களின் பதாகை எனும் சாத்தியத்தை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுகிறது. இதனால் சில வரலாற்றுக் கதைகள் உயிரோட்டமானப் பார்வையைத் தராமல் விலகிவிடுகின்றன.

உதாரணமாக, ‘வெள்ளம்‘ சிறுகதை, தாரணி எனும் அப்சரஸ் அழகில் மயங்கும் பிக்கு மாணவன் சூரபுத்திரனின் குழப்பத்தைக் காட்டுகிறது. ஜென் கவிதைகளிலும், புத்தமதக் கதைகளிலும் பலவாறு புழங்கிய தத்துவ தரிசனமான ‘ஆசையைத் துறத்தல்’ எனும் நிலைக்கு எதிரானக் கதை. மிக எளிமையானக் கதையும் கூட. வெள்ளத்தில் நீரின் நிலை உயர்வது போல தாரணியின் உடல் அசைவுகளுக்குத் தன் மனதைப் பறிகொடுக்கும் சூரபுத்திரன் வழியாகச் சொல்லப்படும் தரிசனம் எது எனும் குழப்பம் வாசகனுக்குத் தோன்றாமல் இருக்காது. சூரபுத்திரன் தன் மனதை முழுவதுமாக இழக்கும் சித்திரம் ஒரு அனுபவம். ஆனால் அங்கிருந்து கதை அந்தளவிலேயே நின்றுவிடுகிறது. ஜென் படிமமாக மாறாமல், கதையை ஒரு வாழ்க்கை சித்தரிப்பாக மாற்றியதால் வரும் எளிமைப்படுத்தலின் சிக்கல். ஆனால், இதே ‘பிரயாணம்‘ கதையின் முடிவில் வீரப்பனுக்குக் கேட்கும் முசேவின் குரல் இறக்கும் மனிதரின் குரல் மட்டுமல்ல, அது ஒருவிதத்தில் மானுட இனத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனை மனிதன் ஏதோ ஒரு காரணத்தால் அடிமைப்படுத்தியிருக்கும் அதிகாரத்தையும் எதிர்த்து உடைக்கும் குரல். முசே-வீரப்பாவைப் பொருத்தவரை அது ஒரு முடிவு. ஆனால் உண்மையில் சாதாரணனான வீரப்பாவின் வாழ்வின் ஒரு பிரெஞ்சு குவர்னர் காட்டிய பரிவு பல தலைமுறைகள் நினைவு வைத்திருக்கும் கதை. காலப்போக்கில் அது கட்டுக்கதையாக மாறும் சாத்தியம் வரலாற்றில் உண்டு என்றாலும் அதிகாரத்துக்கும் வன்முறைக்கும் மட்டுமே பெயர் போன பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிரான குரலாக முசேவைப் பார்க்க முடியும்.

பாவண்ணனின் புனைவு நடை

பாவண்ணனின் புனைவு நடை பற்றிப் பேசும்போது நாம் அவரது சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எனத் தனித்தனியாகப் பேசவேண்டியுள்ளது. நவீனத் தமிழ் சிறுகதை களங்ளில் மிக நுட்பமான இடங்கள் பலவற்றை எழுதியிருக்கிறார். இரண்டாயிரம் பக்கங்களுக்கும் மேலாக வரும் அவரது முன்னூறு சிறுகதைகளில் பல பரவலான வாசக கவனத்தை ஈர்த்திருந்தாலும், ஒரு கலைஞனாக அவரை முன்னிறுத்தும் கதைகள் இன்னும் கண்டடையப்படாமல் இருக்கின்றன என்றே நினைக்கிறேன். முப்பது வருடங்களாகத் தொடர்ந்து சிறுகதை சூழலில் ஈடுபடுபவரது கதைகளை விமர்சகர்கள் இன்னும் விரிவாக ஆராயவில்லையோ எனத் தோன்றும்படியாகப் பலவித பாணிகளில் எழுதிய கதைகள் வாசக கவனத்துக்கு அதிகம் வரவில்லை. இயல்புவாத எழுத்தில் ஆழமாகத் தன் முத்திரையைப் பதிப்பவராக அறியப்பட்டவர் பல வரலாற்றுப்புனைவுகளும், நாட்டாரிய மறுவாக்கங்களும் எழுதியுள்ளார்.

“திடீர்னு ஒரு நாளு ராத்திரில பேயறஞ்சாப்புல வந்து நின்னா. துணிங்க ஒரு நெலையில இல்ல. கிழிஞ்சி கந்தலா தொங்குது. ஒடம்புல ஒரே புழுதி. ரத்தம். கேவி கேவி அழுவறாளே தவுத்து பேச்சே வரல. என்னாடி பூரணி என்னாடி பூரணின்னு உலுக்கறன். ஒரு வார்த்த அவளால பேச முடியலை. நாம கேக்கறதே அவ நெஞ்சுக்குள்ள போவலை. பூவாட்டம் என் பொண்ண வச்சிருந்தேன். எந்த முண்டச்சி பெத்த தறுதலைங்களோ நான் பெத்த அல்லித்தண்ட ஆழும் பாழும் அவ்வாறும் சிவ்வாறுமா ஆக்கிட்டானுங்க. ஆதரவு இல்லாத சிறுக்கி நானு. யாருகிட்ட போய் நாயம் கேக்கறது சொல்லு. அந்த ஐயனாரப்பந்தான் எல்லாத்துக்கும் கூலி குடுக்கணும்”, எச்சிலைக் கூட்டி விழுங்கும் போது அந்த அம்மாவின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது – (ஒற்றை மரம், பொம்மைக்காரி தொகுப்பு)

“ஆசையும் அதிர்ச்சியும் கலந்து மின்னும் அவன் கண்களில் குனிந்து முத்தமிட்டாள் அவள். உதறித் தள்ளிவிட்டு தன்வழியே செல்லப் பரபரபத்த அவன் கைகளோடு தன் கைகளைக் கோர்த்து இழுத்துத் தழுவினாள்.தழுவிய நிலையிலேயே புதர்களின் உட்பகுதியை நோக்கி நடந்தார்கள். கால்கள் அசைய மறுப்பதுபோல கனத்த கணத்தில் தரையில் சாய்ந்தார்கள்.காலகாலமாக அவனை அறிந்தவள்போல இடைவிடாமல் பலவிதமான உணர்ச்சிகளைக் காட்டிப் பேசினாள் அவள். குழைந்தாள். கொஞ்சிகொஞ்சிச் சிரித்தாள். மாறிமாறி முத்தமிட்டாள். இறுதியில் தன் உடலை அறியும்படி செய்தாள். தசைகளும் நரம்புகளும் பின்னிப்பிணைந்த இந்த உடனுக்குள் காணக்கிடைக்காத மாபெரும் புதையலைக் கண்ட ஆனந்தமும் பரவசமும் அவன் கண்களில் அலைமோதின” (வெள்ளம் சிறுகதை)

மேலே உள்ளது அவரது கதைகளின் இருவேறு புனைவு நடை. கூறுமுறையில் கதையின் இயல்பை ஒட்டி நிற்பவை. ஒன்று உச்சகட்ட உணர்ச்சி நிலையில் நாடக தருணத்தைக் காட்டும் சித்தரிப்பு. மற்றொன்று, மிக நிதானமாகத் தன்னை மறந்து கூடும் இரு உயிர்களின் காட்சியமைப்பு. நிகழ்ச்சிகளை மிக விரிவாக விவரித்து பலவிதமான உணர்ச்சிகளை கதையின் போக்கில் காட்டிச் செல்வது பாவண்ணனின் பாணி. ஒரு கடைத்தெருவோ, இயற்கைக்காட்சியோ புற இடத்தை ஸ்தாபிப்பதற்காக அவர் அவற்றை இணைப்பதில்லை. மாறாக, கதையின் தீவிரத்தைக் கூட்டவும், கதாபாத்திரங்களின் அக உணர்வுகளை பிரதிபலிக்கும் நோக்கத்துடனுமான புற உலக சித்தரிப்பு இயல்பாக அமைந்துவிடுகிறது. இதனாலே இயல்பை மீறிய தத்துவத்திணிப்பு அல்லது ஆன்மிக சித்தரிப்பை அங்கு நாம் காண்பதில்லை. இதனாலேயே பல கதைகளில் உச்சகட்ட முடிச்சு மிகப்பெரிய திருப்பங்களாகவோ வாசகர்கள் தங்கள் மனதில் உருவாக்கிய முடிவை முழுவதுமாகப் பூர்த்தி செய்வதுவாகவோ இருப்பதில்லை. கதாபாத்திரங்களின் இயல்பான வழக்கப்படி நடப்பதே கதையின் முடிவாகவும் இருந்துவிடுகிறது. இது பாவண்ணன் உலகம் உருவாக்கும் இயல்போடு ஒத்துப்போவதால் சிறுகதையின் நடையை பல இடங்களில் சுவாரஸ்யம் கூட்டாமல் நகர்வது போலத் தோன்றும்.

பாவண்ணன் சிறுகதை நடை அவரது உடனடி முன்னோடிகளான சுஜாதா, ஆதவன் போன்ற நவீன எழுத்தாளர்களின் சாயலை சாராத ஒன்று. நவீன புனைவு நடை எனும்போது நாம் அதில் உடனடித்தன்மையையும், நிகழ்வுகளைத் தாவுவதில் இருக்கும் துரிதத்தையும், சுருங்கச் சொல்லும் மொழியையும் பிரதானமாகக் கூறுகளாகக் கொள்ளலாம்.பாவண்ணனின் உலகில் இப்படிப்பட்ட நவீன புனைவு நடை விரவியிருந்தாலும் அவரை ஒரு ஸ்டைலிஸ்டாக வாசகர்கள் பார்ப்பதில்லை. வேடிக்கைகளை அவர் செயற்கையாகப் புகுத்துவதில்லை. மனித வாழ்விலிருந்து சந்தோஷம், துயரம், நிலையாமை அம்சங்களை இயல்பாகக் காட்டுவதில் கதைக்களனோடு சேர்ந்த நவீன நடை உருவாகிவிடுகிறது. சிறிய வாக்கியங்களில் சுருங்கச் சொல்லாமல் ஒரு முழுமையான சித்திரத்தைக் காட்ட முயல்கிறார். ‘ஒற்றை மரம்‘ கதையில் வரும் தாய் கதை நெடுக புலம்பித் தீர்க்கிறார். திரும்பத் திரும்ப ஒரே போன்றதொரு ஒப்பாரி. ஆனாலும் அதை சுருங்கச் சொல்லி பாவண்ணன் கடப்பதில்லை. இயல்பில் நம்மை சுற்றியிருப்போரது உள்ளார்ந்த உணர்ச்சியை ஒவ்வொரு முறையும் வார்த்தைகளில் காட்டுகிறார். நவீன பாணியில் வெட்டிச் செல்லும் யுத்திகளில் மனம் தோய்ந்தவர்களுக்கு பாவண்ணனின் இந்த கதை கூறும் பாணி வாசிப்பைத் தடை செய்யலாம். கதை காட்டும் உலகுக்குள் வாசகன் ஓரளவு பயணம் செய்தபின்னரே அவனால் அதோடு ஒன்றமுடிகிறது. இதை எதிர்மறை அம்சமாகப் பார்க்கும் விமர்சகர்கள் இருக்கிறார்கள். வாசகர்களும் இவ்விதம் கூறப்படும் கதையில் வாசிப்பின்பம் இல்லை எனக்கூறக்கூடும். திட்டவட்டமான முடிச்சுகளையும், காய்நகர்த்தல்களையும் கொண்டிராது வாழ்வை அதன் போக்கில் பதியும் பாணியால் நம் கற்பனையில் இருக்கும் உச்சகட்டத் திருப்பங்கள் கதையில் இருக்காது. இதனால் வேகமாகப் பக்கங்கள் திரும்பும்படியாக இல்லாத கதைகள் சில இருக்கலாம், ஆனால் நிச்சயமாக சரிவராமல் போன கதைகள் மிகக் குறைவே.

பாவண்ணன் படைப்பின் அழகியல்

பாவண்ணன் வாழ்க்கையிலிருந்து கதைகளை எடுக்கும் கலைஞர். அவரது கதாபாத்திரங்களில் கதைசொல்லிகள் மிகவும் குறைவு. பெரும்பாலானவர்கள் கதாபாத்திரங்களாக வாழ்பவர்கள். அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி பெரிய கனவுகளும், அதீத பேராசையும் இல்லாதவர்கள். பெரும்பான்மையானவர்கள் தங்களுக்கு இடப்பட்ட வாழ்க்கையை அதிக அலட்டல் இல்லாமல் கழிப்பவர்கள். இதனாலேயே இக்கதைகள் காட்டும் தத்துவ தரிசனங்கள் வெளிப்படையாக விவாதிக்கப்படுவதில்லை. மிகவும் உணர்ச்சிகரமான மனிதர்களாக வருபவர்கள்கூட தங்கள் விதி இதுதான் என்றோ, அல்லது தங்களுக்கு நிறைவு தரும் வாழ்வை எட்டிப்பிடிக்க எண்ணியபடியோ காலத்தைக் கழிப்பவர்கள். இதனால் கதை படிக்கும்தோறும் கதாபாத்திரங்கள் அனைவரும் தன்னிச்சையாக உருவாகி வருகிறார்கள்.

புராண மறு உருவாக்கங்களிலும், பிரெஞ்சு காலனிய காலக் கதைகளிலும் பாவண்ணன் ஒரு இறுக்கமான கூறுமுறையைக் கைகொள்கிறார். மொழியிலும் அவர் தனது இயல்பான நெகிழ்வுத்தன்மையை கைவிடுகிறார். உண்மையான கதாபாத்திரங்களைப் பற்றிய கதைகளில் அவர் எல்லை மீறாது புனைவு சாத்தியத்தைக் கையாளவேண்டும் எனும் ஜாக்கிரத்தன்மையோடு செயல்படுவதாக தோன்றுகிறது. பாத்திரங்களின் குணவார்ப்பில் அதீத கவனமும், பண்டைய கால புற சித்தரிப்புகளை வாசகர்களிடம் கடப்பதற்காக மொழியில் கொண்ட நேர்த்தியும் பல நல்ல வகைமாதிரிகளை உருவாக்கிவிடுகிறது. உண்மை கதாபாத்திரங்களைப் பற்றி அச்சுபிசகாமல் எழுதுவது சவாலான காரியம் மட்டுமல்ல. ஆசிரியனின் புனைவு சாத்தியங்களைக் குறுக்கிவிடும் அபாயமும் அதில் உண்டு. பிரபஞ்சனின் வரலாற்று நாவல்கள் ஒரு குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வராததற்கு இந்த காரணமும் முக்கியமானது. அவரது ஆனந்தரங்கப் பிள்ளை, சுப்பையா போன்றவர்களைப் பற்றிய வரலாற்று நாவல்களை இப்போது வாசிப்பவர்கள் இதைக் கண்டறியலாம். இந்த எல்லைகளை பாவண்ணன் உடைத்திருக்கிறார். அதற்கு அவரது கற்பனையும், புனைவு மொழியும், இலக்கிய அறிவும் அதி உபயோகமாக இருந்திருக்கிறது.

எந்தொரு கருத்தியலையும் சாராது எழுதுவதால் பாவண்ணனின் கதைகளில் ஆழ்மனதைத் தொடும் அம்சங்கள் நிரம்பியுள்ளன. வாழ்க்கையைச் சார்ந்த அடிப்படையான கேள்விகளை எழுப்பிக்கொள்வதை இவரது கதைகளில் அதிகம் பார்க்க முடியாது. வாழ்வோடு போராடும் கதாபாத்திரங்களின் அலைச்சல்கள் இருப்பதால் எவ்வொரு கருத்தியலும் இக்கேள்விகளுக்கு பதிலாக அமையாது என்பது அவரது ஆரம்பகட்ட படைப்புகளிலிருந்து காண்கிறோம். ‘வாழ்க்கை ஒரு விசாரணை‘ நாவலில் வரும் காளியின் அலைக்கழிவுகளுக்கும் அதீத கழிவிரக்கத்துக்குமுண்டான அவனது வாழ்க்கைக்கும் பதில் தேடி எந்தொரு கருத்தியலையும் ஆசிரியர் சென்றடையவில்லை. கடவுள் சார்ந்தும் சாராதுமான எவ்விதமான அமைப்புகளையும் ஆசிரியரோ கதாபாத்திரங்களோ சென்று சேர்வதில்லை. அவை வாழ்க்கை எனும் சர்வவல்லமையின் விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் போராட்டங்கள் மட்டுமே. இதனாலேயே படிமங்களும் அக ஓட்டங்களும் மிகக் குறைவாகவே பயன்பட்டிருக்கின்றன. மொழி சார்ந்த நுட்பங்கள் தேடும் வாசகர்களுக்கு பாவண்ணன் சிறுகதை அழகியலில் பெறக்கூடியது அதிகமில்லை.

பாவண்ணனின் செவ்வியல் கதை பாணி

அன்றாட உலகு சார்ந்த விழுமியங்களையும், நவீன மனது அடையும் சிக்கல்களையும் தாண்டிய பெரு வினாக்களையும், மானுட பண்பாடு கடந்த இடர்களையும் சொல்லமுயன்ற கதைகள் எழுதியவராக பாவண்ணன் பொதுவாக அறியப்படுவதில்லை. அவர் எழுதிய “ஏழு லட்சம் வரிகள்” நமது புராணத்தையும் பண்பாட்டையும் மறு ஆக்கம் செய்கிறது. “இன்னும் ஒரு கணம்” , “வெள்ளம்” போன்ற கதைகள் நமது புராண தத்துவ விழுமியங்களின் மீது ஒரு தேடலாக, பாவண்ணன் சொல்வது போல நவீன கேள்விகளுக்கான பதிலை  மரபில் துழாவித் தேடும் கைகளாக செயல்படும் கதைகள். நவீனத்துவக் கதைகள் தனிமனிதனின் தேடல்களை சமூகத்தின் அச்சாணியாகக் கருதும் பண்புடையது என்றால் செவ்வியல் கதைகள் வாழ்வை ஒரு ஒட்டுமொத்தத் தொகுப்பாகக் காண்கிறது. துரியோதனன் கிருஷ்ணை சுயம்வரத்தில் படும் வேதனையை மாறும் கணத்தை ஒரு ஒட்டுமொத்த இதிகாசத்தின் மீது கவிழும் குடையாகக் காட்டும் புனைவுக்கதை.

“கிருஷ்ணையின் மூச்சுக்காற்றும் வியர்வை மணமும் நுகரக்கூடிய நெருக்கத்தில் இருப்பவைபோலத் தோன்றின. காந்தமாக ஈர்த்த்ன அவண் கண்கள். காதோரத்தில் அலைந்தது குழல்கற்றை..எல்லாமே எதிரிலேயே காண்பதைப்போல தோற்றம் தந்து மறைந்தன.அடுத்த கணமே ஒரு யானை தும்பிக்கையால் வளைத்தெடுத்துப் பூமியில் வீசியதைப் போலத் தரை மீது விழுந்தான் துரியோதனன்” [ இன்னும் ஒரு கணம்]

நமக்குத் தெரிந்த கதை என்றாலும் படிமங்கள் மூலம் ஒரு இதிகாச தருணத்தை ஆழத்துக்குச் செலுத்துகிறார். இக்கதையைப் படிக்கும் வாசகர்கள், துரியோதனன் கிருஷ்ணையை மணந்திருந்தால் மகாபாரதம் நமக்குக் கிடைத்திருக்காதோ என எண்ணத் தோன்றும். ஆனால் வரலாறும், புராணமும் அத்தனை எளிமையான முடிச்சில் இயங்கும் வலையல்ல என்பதை பாவண்ணன் தனது கதையின் மூலம் புனைவாக்குகிறார். இப்படியான எண்ணற்ற தருணங்களால் நெய்யப்பட்ட சிலந்திவலை போன்றது அது. அதன் பாரம் ஒவ்வொரு புள்ளியிலும் அமைந்திருக்கிறது. மகாபாரதக் கதைகளை முன்வைத்து ஜெயமோகன் எழுதிய சிறுகதைகள் இணைப்பண்பாட்டு தொகுப்பு என்றால் பாவண்ணன் அவரது செவ்வியல் கதைகள் மூலம் பண்பாட்டு சித்திரிப்பின் பல வகை மாதிரிகளை உருவாக்கியுள்ளார். புத்த பள்ளிகளில் தத்துவம் பயிலும் ஒரு பிக்குவின் அகச்சஞ்சலங்கள் “வெள்ளம்” கதையாகிறது. இப்படியாக ஏழு லட்சம் வரிகள் தொகுப்பு பல தொன்ம தரிசனங்களை மறு ஆக்கமாக்குகியுள்ளது.

இந்த நேரத்தில் சமீபத்தில் எழுதப்பட்டு வரும் வெண்முரசு நாவல் வரிசையுடன் ஒரு ஒப்பீடு செய்வது இருவித பாணிகளை வாசகர்கள் புரிந்துகொள்ள உதவும். பாவண்ணன் தொன்மங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நம்முன் மீண்டும் நிகழ்த்திக் காட்டுகிறார். ஆனால் அவற்றை கலைத்து மீண்டும் அடுக்குவதில்லை. அதிலுள்ள தேடல்களையும், சமூக விழுமியங்களையும் மறு பரிசீலனை செய்வதில்லை. வெண்முரசு போன்ற பண்பாட்டுப் புனைவு நூல்களில் கையாளப்படும் ஒட்டுமொத்த தொகுக்கும் தன்மை பாவண்ணனின் இக்கதைகளில் கிடைப்பதில்லை. அவை நாமறிந்த கதைகளை ஒரு குவிமையத்தை நோக்கி கச்சிதமாக எடுத்துச் செல்லப்படும் கதைகள். உதாரணத்துக்கு, துரியோதனனும் கர்ணனும் கிருஷ்ணை சுயம்வரத்தில் பங்கெடுக்கும் சமயத்தில் இயல்பாக எழும் சில பண்பாட்டுச் சூழல்களுக்குள் கதை செல்வதில்லை. சிறுகதையாகச் சொல்லப்படுவதால் அது ஒரு மையத்தை நோக்கி கச்சிதமாகச் சென்று முடிகிறது. அதாவது புராணமும் தொன்மும் நம்முன் மீண்டும் நிகழ்த்தப்படுகின்றன. அக்கதையின் தேடல் விரிவான சமூகம் மற்றும் பண்பாட்டு சூழலின் பின்புலத்தில் நடப்பதில்லை.

பாவண்ணன் பிரெஞ்சு ஆண்டுவந்த புதுச்சேரி பகுதிகளை மையமாகக் கொண்டு பல வரலாற்றுப் புனைகதைகளை எழுதியுள்ளார். இக்கதைகளும் விரிவான சமூகத்தளத்தில் வைத்துப்பேசப்படாமல் இருந்தாலும் வரலாற்றுப்புனைவுக்காக கச்சிதமான பாணியை உருவாக்கிவைத்திருப்பதாகத் தோன்றுகிறது. மிகச் சிறந்த உதாரணக்கதைகள் – “கண்கள்“, “தங்கமாலை“, “பிரயாணம்“.

வரலாற்று நாயகர்களுக்கு காலம் தாண்டியிருக்கும் புகழுக்கான காரணங்கள் அவர்களது செயல்களின் தன்மை பொருத்து அமைவது. வரலாற்றில் பதியப்படும் அக்கதைகள் நாயகர்களின் செயலுக்கு ஏற்றார்போல பல வடிவங்கள் எடுத்துத் தொன்மங்களாக மாறிவிடும். வரலாற்றை புனைவாக்கும்போது  இத்தொன்மங்களிலிருந்து கதைகளைப் பிரிக்கும் கலை மிகமுக்கியமான அம்சம். அத்தொன்மங்களையும்,கதைகளையும் அப்படியே நிகழ்த்திக்காட்டுவது செய்நேர்த்தியுள்ள கதையாகலாம் ஆனால் அதில் வாசகன் செல்லக்கூடிய ஆழம் குறைவாகவே இருக்கும். ஒரு படைப்பை வாசிக்கும்தோறும் வாசகன் தன்னைத் தொகுத்துக்கொள்கிறான், தனது அற உணர்வை மறுபரிசீலனை செய்கிறான். வரலாற்றுக்கதையில் வாசகன் அவனுக்குத் தெரிந்த புராணத்தோடு அக்கதையை அணுகுகிறான் எனும்போது தொகுத்துக்கொள்ளும் இடைவெளியை அளிக்கும் கதைகள் அவனை ஆழமாக பாதிக்கின்றன.

கண்கள்” கதை கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை வரலாற்று சம்பவத்திலிருந்து எழுதப்பட்டது. ஆனால் மிக ஜாக்கிரதையாக தொன்மத்தின் மாயவலைக்குள் வீழாமல் பாவண்ணன் அக்கதையை வாழ்வின் விசாரணையாக மாற்றியுள்ளார். புதுச்சேரி ஆயி மண்டபத்தின் சரித்திரம் அறிந்தவர்களுக்கு அக்கதை ஒரு ராஜாவின் அற உணர்வைப்பற்றிய நாடகீய தருணமாகக் காட்சியளிக்கும். ஆனால் ஆயியின் குளத்தை பாவமன்னிப்புத் தேடி அலையும் நிம்மதியற்ற மனமாக உருவகப்படுத்தியதில் அக்கதை பல பரிமாணங்களை அடைகிறது. கண்டாமணியின் ஓசையைக் கேட்கும்தோறும் மனநிம்மதியை இழக்கும் தி.ஜானகிராமனின் கதையைப் போல இக்கதையில் பலாப்பழ வாசனையையும், குளத்தையும் நாம் காண்கிறோம். காலந்தோறும் மாறிவரும் அற உணர்வுகளைத் தனது கண்களால் சதா அலசுவதாக அக்குளம் ராயருக்குக் காட்சி அளிக்கிறது. இந்த குளத்தைக் கண்களாக மாற்றி நாம் புதுச்சேரியின் பிரெஞ்சு காலனியாதிக்கத்தையும் அலசமுடியும், பெஞ்சமின் முசே [“பிரயாணம்“] மனசாட்சியாக ஐரோப்பாவரை துரத்தும் விசையாகவும் கொள்ள முடியும்.

“சத்திரத்தில் ஏதோ ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பலாப்பழங்களின் மணம் மூக்கைத் துளைத்தது. தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த ரகுராயரின் மனதில் உடனடியாக பாவங்களையும் பலாவையும் மறைக்கமுடியாது என்ற எண்ணம் எழுந்தது” [கண்கள்]

ஹம்பி நகரிலிருந்து வெளியேறும் கவிராயர் விஜயநகர் சாம்ராஜ்ஜியத்தின் அழிவுக்கான காரணத்தை புதுச்சேரியின் ஆயி மண்டபத்தின் அறப்பிழைவில் கண்டுகொள்கிறார். சாபத்தின் நிழல் நீளும் தூரத்தை யாராலும் கணிக்கமுடியாது. கண்கள் கதையில் தொடங்கும் இந்த நிழல் பிரயாணம் கதையில் பெஞ்சமின் முசேயின் மூச்சில் அடங்குகிறது. பெஞ்சமின் முசே பாரீஸிலிருந்து குவர்னராக எல்லைப்பிள்ளைச்சாவடி வருகிறார். அதிகாரத்தின் வன்முறைக்குப் பழக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டுகொள்ள அவருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் கொடுமைகளைச் இந்த சிறுமண்ணில் களைய அவர் எடுத்துக்கொள்ளும் பயணம் இது.

இந்த இரு கதைகளிலும் தொன்மங்களிலிருந்து எடுத்தாளப்படும் புனைவு தருணங்கள் இல்லை. சொல்லப்போனால் அரசு அதிகாரத்தின் கச்சிதமான இழையை இருவித ஆட்சியாளர்களின் வரலாற்றிலிருந்து உருவாக்கியுள்ளார். இப்படிப்பட்ட ஆக்கங்களைப் படிக்கும்போது பிரபஞ்சன் எழுதிய வரலாற்றுப்புனைவுகளிலிருந்து வரலாற்று எழுத்து எந்தளவு மாறியுள்ளது என்பதை வாசகன் அறிந்துகொள்ளமுடிகிறது. கம்யூனிஸ்ட் சுப்பையா, பாரதியார், குவர்னர் தூப்ளே, துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளை போன்ற பல வரலாற்றுப் பாத்திரங்களைக் கொண்டு வரலாற்றுப்புனைவுகளை உருவாக்கிய பிரபஞ்சன் கற்பனையில் செய்யாத பாய்ச்சல்களை இக்கதைகளில் நாம் காண்கிறோம். அதுமட்டுமல்லாது விரிவான சமூக/ வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ளதால் வரலாற்றில் இல்லாத சாத்தியங்களை பாவண்ணன் தனது கற்பனையினால் நிரப்பியுள்ளதைப் பார்க்கிறோம். ஒரு வரலாற்றுப் பாத்திரத்தின் மீது படிந்து போயிருக்கும் தொன்மங்களையும் வீரக்கதைகளையும் தாண்டி மனித வாழ்வின் விழுமியங்களையும், அடிப்படை உணர்வு நிலைகளையும் ஆராய்கிறார் பாவண்ணன். பிரபஞ்சனின் வரலாற்றுப்புதினங்கள் இத்தொன்மங்களை வேண்டிய மட்டும் பிடித்துக் கொள்வதால் கதாபாத்திரங்களின் அக உணர்வுகளுக்குள் செல்வதற்குப் பெரும் தடையாக அமைந்துள்ளது. “கண்ணீரால் காப்போம்” – பிரபஞ்சனின் வரலாற்று நாவலில் வரும் வ.வே.சு ஐயர், சுத்தானந்தபாரதி,திரு.வி.க போன்றோரின் சித்திரத்தை படிக்கும் வாசகன் தமிழ் இலக்கியத்தில் வரலாற்றெழுத்தின் இந்த நகர்வைக் கண்டுகொள்வான்.

பாவண்ணன் உலகில் மண்ணும் மரபும்

பாவண்ணனின் கதைகளை ஒருசேரப் படிப்பவர்களுக்கு அவர் மனிதனின் இயல்பான நன்னடத்தை மீது அளவுக்கதிகமான அபிமானம் கொண்டிருக்கிறாரோ எனத் தோன்றும். அது ஓரளவுக்கு உண்மையும் கூட. பாவண்ணனின் மண்ணான வட ஆற்காட்டுப்பகுதி மக்களின்  ஓரளவு செழிப்பான விவசாய நிலமும், நகர்ப்புறத்தின் அண்டையில் இருப்பதால் விளையும் வர்த்தக கொடுக்கல்வாங்கல்களும் அவர்களது வாழ்வோடு பிணைந்திருக்கும் ஒன்று. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செஞ்சி, புதுவை இடங்களின் வளமான நிலப்பகுதி இருந்தாலும் நிலக்கடலை, மிளகாய், சம்பா போன்ற விளைச்சல்களால் வருடம் முழுவதும் தொடர்ந்த மகசூல் உள்ள நிலம். அதிக மழைநீரையும் எதிர்பாராததால் வறட்சி குறைவாகக் காணப்படும். கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகளாக தெலுங்கு நாயக்கர்களும், தஞ்சை மராத்தியர்களும், சுல்தான்களும் ஆண்ட நிலம் என்பதால் நில உடைமையாளர்களில் பலர் வேற்றுமொழிக்காரர்களாகவும், அருகிலிருக்கும் புதுவை, சென்னை போன்ற இடங்களோடு வர்த்தகத் தொடர்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பாவண்ணன் கதைகளில் வரும் பெரும்பான்மையானவர்கள் சிறு நிலக்காரர்கள் அல்லது நிலச்சுவாந்தார்களுக்கு மாட்டு லாடம் அடிப்பது, தோட்டவேலை செய்வது போன்ற சிறுவேலை செய்பவர்கள். ஓரளவு நகரப்புற ஞானம் உள்ளவர்கள் ஆனால் அச்சுகங்களை எட்டிப்பிடிக்க முடியாதபடி அவர்களது வருமானம் அமைந்திருக்கும். பணச்சேகரிப்பை தலைமுறைகளின் வளர்ச்சிக் குறியீடாகப் பார்ப்பவர்கள்.

வாழ்க்கை ஒரு விசாரணை – நாவலில் வரும் வடிவேலு தாத்தா, வட ஆற்காட்டுப்பகுதி கதைளை சொல்லிச் செல்லும்போது நிலம் கைமாறும் முரணைப் பற்றிப் பேசுகிறார்.முன்னூறு வருடங்களாக தெலுங்கு, மராத்தி பேசும் முதலாளிகளிடமிருந்த நிலம், நில உச்சவரம்பு சட்டத்தின்படி மெல்ல கிராமங்களில் வேலை பார்த்தவர்கள் கைக்கு வருகிறது. அங்கிருந்து புது தலைமுறை ஆட்கள் வர்த்தகத்துக்காக புதுவை, சென்னை, கடலூர் செல்கிறார்கள். நில உரிமையாளர்களுக்கு அதிகாரம் குறையும்போது ஏற்படும் சிக்கல்களைப் பேசும் கதைகள் [அடைக்கலம்], ஜாதியை மீறும் காதல் திருமணங்களின் கருணைக்கொலை [ கனவு ] என மொழி, ஜாதி, பணவசதி என கடந்த நூறு வருடங்களில் கிட்டத்தட்ட தலைகீழாக மாறிய அடையாளங்களை உடைய சமூகத்திலிருந்து வரும் கதாபாத்திரங்கள் நிரம்பிய கதைகள்.

“ஒருதரம் மெட்ராசுக்குப் போய் வந்தவன் எண்ண ஆடற மிஷினைப் பார்த்திட்டு அது மாதிரியே இந்த ஊர்லயும் வாய்க்கணும்னு அலைஞ்சான். மணியக்காரு, கணக்குப்புள்ளயார் யாரயோ பார்த்து எல்லார் வாயயும் பணத்தால அடச்சி மேற்கால பெரிய அளவுக்கு பொரம்போக்குல நெலத்த வளச்சான் கேக்கறவங்களுக்கு ஒண்ணும் சொல்லலைகடசில மெட்ராஸிலேர்ந்து மிஷின் வந்திச்சு..அன்னிலேர்ந்து செக்குக்காரங்க வாய்ல மண்ணு. ஒரு செக்கு ரண்டு செக்கு வச்சிருந்தவன்லாம் பெரிய மனுஷங்கற காலம் மலையேறிப்பூடுச்சி. ஈ ஓட்ட ஆரம்பிச்சிட்டானுங்க. சொத்து அப்படியே கைமாறிடுச்சு” [வாழ்க்கை ஒரு விசாரணை]

“நடுராத்திரி வரைக்கும் இருந்த தணல் தணிஞ்சதுக்குப்பறமா எடுத்து வெளியில போட்டாங்க. ஒடம்பே இல்ல. கரிஞ்ச கட்ட. உருட்டிகினே வந்து தோப்புலயே ஒரு பள்ளத்தத் தோண்டி பொதச்சிட்டாங்க. சாதுப்பெரும தெரியாத சனியனே சனியனேன்னு அதும்மேல துப்பி செருப்பாலயே மிதிச்சாரு தாத்தா..” [கனவு]

கண்ணுக்கெதிராக வர்த்தகத்திலும், சமூக அடையாளத்திலும் திடுமென மதிப்பைப் பெற்ற ஜாதியைப் பார்த்து ஏற்படும் பொறாமை, நகரமயமாக்கத்தின் வசதிகளைப் பரவலாகப் பெற முடியாததில் இருக்கும் ஏக்கம், வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் குலக்கதைகள் மூலமாக ஒரு பிராந்தியத்தை அடையாளப்படுத்துவதை தொடர்ந்து புனைவில் எழுதிக்காட்டியிருக்கிறார். வட்டாரக் கதைகள் எனும்போது உலர்ந்துபோன வாழ்வில் சிறு கீற்றைக் காட்டுவதோடு நில்லாமல் ஒரு தன்னெழுச்சி மூலம் கதாபாத்திரங்களுக்கு அகவிடுதலை அளிக்கவும் செய்கிறார் – ‘’மீண்டும் மீண்டும் தன்னை முத்தமிட்டபடி இருப்பதுபோன்ற எண்ணம் மனதில் பொங்கியது. அவள் வேதனையெல்லாம் அந்த முத்தம் அழுத்தித் துடைத்துவிடுவதைப்போல இருந்தது” – என தன்னைக் கெடுத்தவனையும் புருஷனின் வன்முறையையும் ஒரு தட்டில் நிறுத்தி பொம்மைக்காரியை தற்கொலையிலிருந்து காக்கிறது. மிகத் தீவிரமாகச் சொல்லப்பட்ட பொம்மைக்காரி கதை பாவண்ணனின் புனைவு அழகியலுக்கு ஒரு உச்சத்தைக் கொடுக்கும் கதை. அவரது அழகியலை திட்டவட்டமாக நிறுவும் கதையாகவும் உள்ளது.

Jpeg

பாவண்ணனின் கதைகளில் இயல்பாகவே படிமங்கள் உருவாகி வருவதை முன்னர் பார்த்தோம். ஜெயமோகன் ஒரு கட்டுரையில் – ஒரு வாசனையில் மனிதரையும் அந்த மனிதரைச் சார்ந்த உறவுகளையும் புனைவுக்குள் கொண்டு வர முடியும், என வண்ணதாசன் புனைவு பற்றி தெரிவித்திருப்பார். பாவண்ணனின் கதைகளில் வரும் மனிதர்களை நல்லவர் கெட்டவர் எனத் தரம் பிரித்துப்பார்க்க நமக்கு அனுமதி இல்லை. கதையில் வரும் மனிதர்களும் அவர்களுடன் ஒட்டும் உறவுமாக இருக்கும் தொடர்புகளும் இந்த வாழ்வை தவமாக, வரமாக, சாபமாகக் கொள்ளும் நிலையிலிருந்து விடுபட எண்ணுபவர்கள். வாழ்க்கை ஒரு விசாரணை நாவலில் வரும் காளி, கனவு கதையில் வரும் விஸ்வநாதன், பிரெஞ்சு துபாஷி வீட்டில் திருடச்செல்லும் பொம்மையார்பாளையும் வீரமுத்து அனைவரும் சந்திக்கும் ஒரு புள்ளியாக இது இருக்கிறது. பாவண்ணனின் வாழ்க்கைப் பார்வையில் அவர்களுக்கான விடுதலை நிலை என்பது கொடுக்கப்பட்ட வாழ்வை போராடாமல் ஏற்றுக்கொள்வதிலேயே அமைந்திருக்கிறது. ”பறவைகள்” கதையில் வரும் முதியோர் இல்லம் போல இம்மனிதர்கள் அடைய நினைக்கும் இடமும் இன்னொரு கூண்டு மட்டுமே என்பதை உணராமல் இருப்பவர்கள். பொம்மைக்காரி போல செல்ல நினைக்கும் இடமும் கூண்டே எனும் தரிசனத்தை அடைந்துவிட்டால் தங்களைச் சுற்றியிருக்கும் அவலத்திலும் ஒளிகீற்றைக் கண்டுகொள்வார்கள்.

பாவண்ணன் பலதரப்பட்ட கதைகளை எழுதிய கலைஞனாக அடையாளம் காணப்படவேண்டியது மிகவும் அவசியம். இக்கட்டுரையில் அவரது தமிழ் புனைவை மட்டுமே பிரதானமாக அலசியுள்ளோம். மொழியாக்கத்தில் அவரது சாதனைகள் இதற்குச் சமானமானவை. கன்னட மொழியாக்கங்களில் அவர் செய்த சாதனையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் படைப்பாளிகள் இன்றும் வரவில்லை. முறையாக கல்விமுறையில் பயிலாமல் தன்னிச்சையாகக் கற்றுக்கொண்டே செவ்வியல் ஆக்கங்கள் தொடங்கி வட்டார மொழிகளைக் கையாளும் தலித் இலக்கியம் வரை அவரால் கன்னடத்திலிருந்து மொழியாக்கம் செய்யமுடிகிறது. மொழியாக்கங்களும் தமிழ் புனைவுகளும் அவரை மொழிவெளியின் சாத்தியங்களை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கிறது எனலாம். தொடர்ந்து சிறார் நாவல்கள், கன்னட கவிதை இலக்கியம் எனும் புது திசைகளில் பயணம் செய்யும் பாவண்ணனை நினைக்கும்தோறும் வேலி ஓரங்களில் எதிர்பாராத இடைவெளிகளில் பூக்கும் செடிகள் நினைவுக்கு வருகின்றன. பாவண்ணன் சொல்வது போல, பசவண்ணரின் வசனங்களில் வரும் வரி – எங்கோ மாமரம். எங்கோ குயில். எல்லாவற்றையும் இணைப்பது எதுவோ?

பாவண்ணன் – ஓர் ஆச்சர்யம்

ரகுராமன்

IMG_35890127086157

ஆம்…! பாவண்ணன் ஓர் ஆச்சர்யமான மனிதர்தான். முன்னணித் தமிழ் எழுத்தாளர்கள் பலர் ஏதோ ஒரு வகையில் பல வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம். எழுத்துக்கள் வழியாக மட்டுமே பாவண்ணனை அறிந்து, நண்பராய் ஆன பிறகு அவர் ஓர் ஆச்சர்யம் என வாசக நண்பர்களால் உணர முடியும். இருபத்தைந்திலிருந்து முப்பது ஆண்டுகளுக்குள்ளான இலக்கிய வாழ்க்கையில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகளையும், மூன்று கவிதைத் தொகுப்புகளையும், இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுதிகளையும், இரண்டு குறுநாவல்களையும், இரண்டு குழந்தைப்பாடல் தொகுதிகளையும் இலக்கிய உலகத்திற்குத் தந்திருக்கிறார். சொந்தப்படைப்புகள் மட்டுமல்லாது, கன்னடத்திலிருந்து மிக முக்கியமான படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது?என்று பலர் எண்ணலாம். வாசகராய் இருந்து நண்பராய் ஆன என்னால், அந்த ஆச்சர்யத்திலிருந்து வெளிவரவே முடியவில்லை.

அவருடைய அலுவலக வேலைகள், அவற்றுக்கே உரித்தான கெடுபிடிகள் என அத்தனையையும் தாண்டி இவ்வளவு படைப்புகளை எப்படி அவரால் கொடுக்க முடிகிறது என்பது ஆச்சரியம்தானே? ஒரு கடிதம் எழுதுவதற்கோ, ஒரு மின்னஞ்சல் அனுப்புவதற்கோ கூட நேரமில்லை என்று சொல்பவர்களுக்கு மத்தியில், தன்னுடைய அலுவலகப் பணி, குடும்ப பணிகள் எதையும் சமரசம் செய்து கொள்ளாமல் எழுத்துப் பணியிலும் குறைவற்றுச் செயலாற்றுபவர் ஒருவகை ஆச்சரியம்தானே?

பாவண்ணனின் படைப்புகளில் எது பிடிக்கும் என என்னை நானே கேட்டுக் கொண்டபோது கிடைத்த வரிசை கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், புராணப் பின்னணியில் புனைவு செய்யப்பட்ட சிறுகதைகள், கவிதைகள் என்பதாகும்.

தினமணிநாளிதழில் இவருடைய கட்டுரைகளைப் படித்தவர்களுக்குத் தெரியும், ஒரு சிறிய நிகழ்வை எப்படி அவர் அழகான கட்டுரையாக்குகிறார் என்று. அயல்நாட்டில் நடந்த கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி வெற்றி பெற்றது. பாவண்ணனின் கவனத்தைக் கவர்ந்தது அம்மைதானத்தில் இருந்த ஒரு மரம். அதை வைத்துப் பசுமை, மரம் வளர்த்தல் என அவர் எழுதிய அக்கட்டுரை மறக்கவே முடியாதது.

புத்தக விமர்சனக் கட்டுரைகளும் குறிப்பிடத்தகுந்தவை. பாவண்ணன் விமர்சனம் எழுதினாலோ, அறிமுகம் செய்தாலோ அப்புத்தகத்தை நிச்சயம் படிக்கலாம் என்றே தோன்றும். அவருடைய கட்டுரைத் தொகுதிகளைப் பற்றி இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இலக்கியங்கள் நேரடியாகப் பயனையோ, போதனையையோ அளிப்பது அல்ல என்றும், புத்தகங்களில் வாழ்க்கைக்கான ஏதோ ஒன்று, வாசிப்பவரின் அகத்தைத் தூண்டுவதாய் ஒளிந்து கிடக்கிறது என்றும் சுட்டிக் காட்டுபவர்; வாசிப்பும், அதில் தோய்தலும் ஒரு விதத்தில் வாழ்க்கையின் தேடல் என்று சொல்பவர்; எந்த ஒரு கதையையும், நாவலையும், இலக்கியத்தின் எந்த வடிவத்தையும் வாழ்வியல் அனுபவங்களோடும், சமூக வாழ்க்கையோடும் பொருத்திப் பார்த்து விடைகாண முயற்சிப்பவர்.தான் சந்திக்கின்ற மனிதர்கள், நிகழ்வுகள் போன்றவை மனத்தில் எழுப்பும் கேள்விகளை, தன் மனத்தில் அவர்கள்/அவை ஏற்படுத்திய தாக்கத்தை எவ்வித ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும் இன்றி, தத்துவக் கோட்பாடுகளாகவோ, ஆத்ம விசாரமாகவோ பதிவு செய்யாமல், சாதாரணமாக எளிய முறையில் பதிவு செய்திருப்பார். தன்னுடையதீராத பசி கொண்ட விலங்குஎன்ற தொகுப்பில். இத்தொகுப்பில் இடம்பெற்றிருப்பவை கட்டுரைகள் போலத் தோன்றினாலும், அவையனைத்துமே சிறுகதைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஏற்படுத்துபவை. ‘தரைக்கு இழுக்கும் அதிர்ச்சிஎன்ற கட்டுரை நெஞ்சை உலுக்கக் கூடியது. தன் தந்தைக்குக் கொள்ளி வைக்கத் தீச்சட்டியுடன் நிற்கும் சிறுவன், பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் பிணத்தைச் சுமந்து செல்லும் தந்தை, காசநோயில் மனைவியை இழந்த கணவன், வரதட்சிணைக் கொடுமையால் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொள்ளும் அவரது மகள் என மரணத்தின் பல வடிவங்களைப் பேசும் இக்கட்டுரை நெஞ்சைக் கனக்க வைக்கும். ‘இலட்சத்தில் ஒருத்தி’, ‘ஒரு தாயின் கதைபோன்ற கட்டுரைகள் கண்ணீர் வரவழைக்கும்.

எனக்குப் பிடித்த கதைகள்என்ற கட்டுரைத் தொகுப்பில் அவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை முதல் பகுதியாகவும், அவர் சொல்ல வரும் சிறுகதையைப் பற்றி இரண்டாம் பகுதியிலும் சொல்லியிருப்பார். இத்தொகுதியைப் படித்த பிறகு அக்கதைகளைத் தேடிப் படித்திருக்கிறேன். இதைப்போலவே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவைஆழத்தை அறியும் பயணம்’, ‘வழிப்போக்கன் கண்ட வானம்’, ‘மலரும் மணமும் தேடிஆகிய புத்தகங்கள். மலரும் மணமும் தேடிதொகுப்பில் தல்ஸ்தோய், தஸ்தாயெவ்ஸ்கி போன்றோரின் எண்ணூறு பக்க நாவல்களை இரண்டு அல்லது மூன்றே பக்கங்களில் விவரித்திருப்பார். அவர் கட்டுரைகளில் தரும் சில விளக்கங்கள் அவருடைய படைப்பு மற்றும் படிப்புத் தேர்வு என்ன என்பதை உணர்த்திவிடும். என் மனம் கவர்ந்த வரிகள் சில இங்கே:

  • இப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று வலியுறுத்துவது இலக்கணம்; அப்படி இருக்க முடியாமல் போவதன் அவஸ்தைகளைப் பேசுவது இலக்கியம்
  • மன்னிப்பைப் போதிக்கிறது சீர்திருத்தம்; மன்னிக்க இயலாத மனச்சீற்றங்களையும், மன்னிப்பைப் பெற இயலாத குற்ற உணர்ச்சிகளையும் படம் பிடிக்கிறது இலக்கியம்
  • பாவனையான பதில்களுடன் கிடைத்த ஆனந்தத்தில் திளைக்கிறது தினசரி வாழ்க்கை; அசலான பதில் உறைந்திருக்கும் புள்ளியை நோக்கி இருளடர்ந்த மனக்குகையில் பயணத்தைத் தொடங்குகிறது இலக்கியம்

ஒரு முன்னணி படைப்பாளியாக இருக்கும் அதே நேரத்தில் இத்தனை புத்தகங்களைப் படித்து, அவற்றின் அழகு, மையம், படிம அழகு, அவற்றின் பலம், பலவீனம் எல்லாவற்றையும் எவ்விதச் சாடல் தொனியும், மேதாவித்தனமுமின்றி நிதானமாய் எடுத்துச் சொல்லவும் முடிகிறது என்பது எப்போதுமே எனக்கு ஆச்சர்யம்தான்.

கன்னடத்திலிருந்து முக்கியமான படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்த பெருமை பாவண்ணனுக்குண்டு. பொதுவாக இவரது படைப்புகள் அன்பைப் பற்றிப் பேசுவதாகவும், வாழ்வின் விளிம்பு நிலை மக்களைப் பற்றிப் பேசுவதாகவும் அமைந்திருக்கும். சமூக அக்கறை கொண்ட இவர் சித்தலிங்கையாவின்ஊரும் சேரியும்’, அரவிந்த மாளகத்தியின்கவர்மெண்ட் பிராமணன்ஆகிய சுயசரிதைகளையும், ‘புதைந்த காற்றுஎன்ற தொகுப்பையும் மொழிபெயர்த்துள்ளார். கிரீஷ் கர்னாடின் சிறந்த நாடகங்களானஅக்னியும், மழையும்’, ‘பலிபீடம்’, ‘நாகமண்டலம்போன்றவற்றை மொழிபெயர்த்துள்ளார். கன்னடத்தின் சிறந்த சிறுகதைகளைநூறுசுற்றுக் கோட்டைஎன்கிற தொகுப்பாகவும், ‘நூறு மரங்கள், நூறு பாடல்கள்என்ற கன்னட வசன கவிதைத் தொகுப்பையும், ‘வட கன்னட நாட்டுப்புறக் கதைகள்என்ற நாட்டுப்புறக் கதைத் தொகுப்பையும் கொண்டுவந்துள்ளார். எல்லாவற்றிற்கும் மணிமகுடம் சூட்டியது போல எஸ்.எல்.பைரப்பாவின்பர்வாஎன்ற கன்னட நாவலைப்பருவம்என்ற பெயரில் மொழிபெயர்த்தது மிகப்பெரிய விஷயம் என்றே சொல்லலாம். இதற்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார். தனது சொந்தப் படைப்புகளோடு இத்தனை மொழிபெயர்ப்புகளையும் மேற்கொண்டிருக்கிறார் என எண்ணும்போதெல்லாம் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே நான் செல்கிறேன்.

அவருடைய தொன்மங்களைப் புனைவுகளாக்கும்க லையைக் கண்டு எப்போதுமே ஆச்சர்யப்பட்டுப் போய்விடுகிறேன். அச்சிறுகதைகளின் நடையும், மொழியுமே அலாதி சுகம். ‘போர்க்களம்’, ’புதிர்’, ‘வாசவதத்தை’, ‘குமாரவனம்’, ‘பிரிவு’, ‘அல்லி’, ‘அன்னை’, ‘சாபம்’, ‘சுழல்’, ’இன்னும் ஒரு கணம்என அடுக்கிக்கொண்டே போகலாம்.

கவிதைகளில் இவர் காட்டும் படிமங்களும், உவமைகளும், உரைநடை இலக்கியத்தில் சிறந்தவராய் இருக்கும் இவரால் எப்படி கவிதைகளிலும் பரிமளிக்க முடிகிறது என்பது ஒரு பெரிய ஆச்சரியம்!

இத்தனை எழுத்துக்களுக்கும் சொந்தக்காரராக இருக்கும்போதிலும், எப்போதும் நட்பு  குறையாமல் பேசிப் பழகுவது பாவண்ணனுக்கு மட்டுமே உரியது எனும் ஆச்சரியத்தை அவருடன் நட்பு பாராட்டும் ஒவ்வொருவரும் உணர முடியும். அவருடைய உயர்வு எதுவோ நம்மால் அதை எட்ட முடியாது என்று எப்போதுமே நான் தலையுயர்த்திப் பார்க்கும் ஓர் எளிமையின் வடிவான ஆச்சர்யம் பாவண்ணன்!