காலாண்டிதழ்

கடல் கொள்ளும் கோவில் – பாவண்ணனின் ‘வெளியேற்றப்பட்ட சிறுகதை’ தொகுப்பை முன்வைத்து

நரோபா

pavannan

பாவண்ணன் தமிழில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் முக்கிய இலக்கிய ஆளுமை. கவிதையில் துவங்கி, சிறுகதை, நாவல், குறுநாவல், மொழியாக்கம், விமர்சனம், அனுபவ கட்டுரை என எழுத்தின் எல்லா வகைப்பாடுகளிலும் கணிசமாக எழுதியவர். பாவண்ணன் சிறுகதைகள் வாழ்வின் பல்வேறு தளங்களில் எழுகின்றன. அவருடைய ஏழு லட்சம் வரிகள் தொகுப்பை ஒரு உதாரணமாக கொள்ளலாம். நாமறிந்த பாவண்ணன் அல்ல அவர் என தோன்ற செய்யும் அளவுக்கு தொன்மங்களையும் நாட்டார் கதைகளையும் கையாண்டிருப்பார். மனம் பற்றிய கூர்மையான அவதானங்களை சொல்லும் உளவியல் கதைகளையும் எழுதி இருக்கிறார். அவருடைய சிறுகதையுலகம் மிகவும் பரந்ததாகவே இருக்கிறது.

அகரம் வெளியிட்ட வெளியேற்றப்பட்ட குதிரை தொகுப்பில் உள்ள ஒன்பது சிறுகதைகளை கொண்டு பாவண்ணனின் படைப்புலகை நெருங்குவதற்கான முயற்சியே இக்கட்டுரை.

அவருடையவெளியேற்றப்பட்ட குதிரைகதை திசைமாறிய கூடைபந்து வீரனின் வாழ்வை சொல்கிறது. ராஜசேகரன் அவன் விரைவின் காரணமாக குதிரை என அழைக்கபடுகிறான். அவனுடைய அசாத்திய திறமை அபார வெற்றிகளை சாதனைகளை ஈட்டி தருகிறது. அரசியல் காரணங்களால் தேசிய அணியில் ஒதுக்கபடுகிறான். விரக்தியில் மதுவை நாட ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக எத்தனை விரைவாக உச்சம் அடைந்தானோ அதைவிட விரைவாக பாதாளத்தில் வீழ்கிறான். அவன் மீது அக்கறைகொண்ட தியாகராஜனின் வழியாக தென்படும் ஒளிகீற்றை பற்றி மீண்டும் ஏற முயல்கிறான். ராஜசேகரனின் பள்ளிகால பயிற்சியாளர் தங்கராஜ்ஓடுடா ஓடு..குதிரை மாதிரி ஓடணும்என்கிறார். விளையாட்டை தவிர ஏதும் தெரியாததை எண்ணி வருந்துகிறான். பந்தய குதிரைகள் போட்டியில் ஓடுவதை தவிர வேறேதும் அறியாதவை. மனிதர்கள் பந்தய குதிரைகளாகவே தயார்படுத்த படுகின்றனர். கதையில் ;மரம்; மற்றுமொரு குறியீடாக வருகிறது. கோவிலுக்கருகே பயணற்ற மரங்கள் வெட்டப்பட்டு தியான மண்டபம் எழுப்பபடுவதை அறிகிறான். தியாகராஜனும் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மரத்தை வேட்டத்தானே வேண்டும் என வேறொரு உரையாடலில் யதார்த்தமாக சொல்கிறார். கதையின் இறுதியில் அவன் தன்னை முடித்து கொள்வதற்கு முன் கோவிலில் வெட்டப்பட்ட மரங்களை நினைத்து கொள்கிறான். ஓடிக்கொண்டே இருக்கும் குதிரைநின்று இடையூறு செய்யும் மரம் எனும் இரண்டு படிமங்களுக்கு ஊடாக பயணிக்கிறது கதை. குதிரையாக தன்னை உணர்ந்தவன் இறுதியில் தன்னை இடையூறு செய்யும் மரமாக காண்கிறான். ஆகவே தானும் அப்புறபடுத்தப்பட வேண்டும் எனும் முடிவுக்கு வந்துவிடுகிறான். குதிரை தன்னை தானே வெளியேற்றி கொண்டது. மதுவின் ஈர்ப்பை விவரித்தல், இயற்கையை நோக்கி கைகூப்பி வணங்கும் கோபுரம் போன்ற விவரணைகள் கதைக்கு வலு சேர்க்கிறது. ராஜசேகரனுக்கும் மனைவிக்குமான உறவு, அவன் கொள்ளும் குற்ற உணர்வு, மகளுக்கும் அவனுக்குமான சிநேகம், துவக்கத்தில் இறுக்கமாக இருக்கும் மனைவி இறுதியில் அவனை ஏற்றுகொள்ளும் மனநிலைக்கு வருவது ஆகியவை அழகாக பதிவாகிறது. சாக்கடையாக தன்னை அவன் கருதிக்கொள்ளும் மனபோராட்டங்கள் ஊசலாட்டங்கள் கதையை மேலும் நெருக்கமாக உணர செய்கிறது. மரணத்திற்கு முன்னர் மீண்டும் அவன் அந்த மரத்தை எண்ணிகொள்வது கதையை ஒரு மாற்று குறைத்து விடுகிறது என தோன்றியது. ‘இந்த படிமம் இதற்காகத்தான்என செருகி வைத்த உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.

இந்த மரம் எனும் படிமம் இதே தொகுப்பில் உள்ள வேறு இரண்டு கதைகளிலும் பயன்படுத்தபடுகிறது. ‘ஒரு முடிவுக்கு பிறகுகதையில் மாலதியும் ராகவனும் ஒருவருட மணவாழ்க்கை கசந்து மனமுவந்து பிரிய எண்ணுகிறார்கள். அதை அறிவிக்க கூட்டப்பட்ட விருந்தில் மாலதிக்கு சிறுவயதில் கேள்விப்பட்ட கதை நினைவுக்கு வருகிறது. ஏழை பெண்ணொருத்தி ஒரு மந்திரம் மூலம் மரமாகும் வரம் பெறுகிறாள். மரமாகி பூத்து குலுங்கி பூக்களை சேகரித்த பின்னர் மீண்டும் பெண்ணாகி விடுகிறாள். இதையறிந்து அவள் மீது மையல் கொண்டு மனம் புரிகிறான் ஒருவன். இந்த உருமாற்றம் அவனை கிறங்கடிக்க செய்கிறது. ஒரு அக்கறையற்ற தருணத்தில் கணவனின் அலட்சியம் காரணமாக மரமாகவே உறைந்து விடுகிறாள். மன்மறைந்து காற்றில் கலந்து அவன் மரத்திடம் மன்றாடுகிறான். இந்த கதையில் வரும் மரமாக மாலதி தன்னை உணர்கிறாள். உணர்சிகளற்று உறைந்த மரம்.

மற்றொரு கதையானமரம்தந்தையின் உக்கிரமான நினைவுகளை அவரது வன்மத்தை சொல்கிறது. செல்லமாக வளர்ந்த மகள் காதல் திருமணம் புரிந்துகொண்டதை தாங்க முடியாமல் துரத்தி துரத்தி அவர்களை அழிக்க முயலும் வன்மத்தை சுமந்தலைந்து பித்தேறி அழிகிறார். மகனின் பார்வையில் சொல்லப்படும் கதை தந்தையிடம் தான் மட்டுமே அறிந்த ரகசியத்தை பற்றி கேட்க துணியாதது குறித்து குற்ற உணர்வு கொள்வதோடு முடிகிறது. “காற்றின் விசையில் நாலு திசைகளிலும் கிளைகள் இழுபட்டு ஆடிக்கொண்டிருந்தாலும் உறுதி குலையாமல் நின்றிருந்தது மரம். கண்ணுக்குத் தெரியாத ஒரு யுத்தத்தை அது காற்றோடு நிகழ்துவதைப்போல இருந்தது. காற்றின் தந்திரம் கிளைக்குப் புரியவில்லை. கிளைகளின் உறுதி காற்றுக்குப் புரியவில்லை. முன்னும் பின்னுமாக அலைகழிக்கபட்டாலும் ஆயாசமில்லாமல் ஊக்கத்துடன் அசைந்து கொண்டிருந்தன கிளைகள்

மரம்காற்று தேக்கத்தையும் நெகிழ்வையும் சொல்லி செல்கிறது. மற்றொரு எல்லையில் நிலைத்தலையும் அலைகழிப்பையும் சுட்டுகிறது. ஒரே படிமத்தின் நேர்மறை எதிர்மறை பயன்பாடுகளை ஒரு தொகுப்பிலேயே கண்டடைவது சுவாரசியமான அனுபவமாக இருக்கிறது.

சினிமா இயக்க வேண்டும் என பதிமூணு ஆண்டுகளாக கனவு கொண்டிருப்பவனும் ஒரு எல்..சி ஊழியனுக்கும் இடையிலான உரையாடல் தான் இந்தக்கதை. மகாபலிபுரத்தில் வானவில்லின் பின்புலத்தில் கதை துவங்குகிறது. இயக்குனராக முயற்சி செய்யும் குலசேகர் ஆரவமுடன் பேசுகிறான். பாலு கேள்விகளை கேட்கிறார். சினிமா மீது எப்படி ஆர்வம் வந்தது? அவன் பட்ட துயரங்கள் என உரையாடல் விரிகிறது. அவனுடைய திரைக்கதைகளை சுருக்கமாக சொல்கிறான். விருதுகள் பெற்ற பின்னர் அளிக்க வேண்டிய நேர்காணல் வரையும் யோசித்து வைத்திருக்கிறான். திரைக்கதைகள் சுவாரசியமானவை. இந்த கதையை அவன் கூறும் வாழ்க்கை நிகழ்வுகளையும் திரைக்கதைகளையும் சேர்த்து வாசிக்க வேண்டும் என தோன்றியது.

இருவரின் மாறுபட்ட பின்புலங்கள், ரசனைகள் வாழ்க்கை ஆகியவை ஏறத்தாழ எதிரெதிர் புள்ளிகளில் நிற்கின்றான. பாத்திரங்களை எதிரெதிர் துருவங்களாக அமைந்துள்ளன. பொதுவாகவே பாவண்ணனின் கதைகளில் துருவங்களுக்கு இடையிலான ஊடாட்டம் இருப்பதாக தோன்றியது. மற்றொரு கதையானதெளிவில்இது நுட்பமாக வெளிப்படுகிறது. பிரதான கதை மாந்தர் ராதாவிற்கும் ஜெயந்திக்கும் இடையிலான ஒற்றுமையும் விலகலும் புலப்படுகிறது. இந்த தொகுப்பின் மிக சிறந்த கதைகளில் ஒன்று. திருமணமாகி சில மாதங்களில் கர்பிணி மனைவியை விட்டுவிட்டு வேலை விஷயமாக வெளிநாடு சென்ற கணவன். தனிமையில் வாடும் மனைவி தனது தேர்வு சரிதானா என எண்ணி குழம்புவதும், தனது முந்தைய காதலனின் நினைவுகளால் அலைகழிவதும் என நவீன வாழ்வின் மிக முக்கியமான சிக்கலொன்றை பேச முயல்கிறது கதை. ராதா அகாலத்தில் எழுந்து கணவனோடு பேசுகிறாள். குறுகிய கால மண வாழ்வின் தருணங்களை அவன் தினமும் மீண்டும் மீண்டும் மீட்டுகிறான். அவனுடைய நினைவாற்றல் ராதாவிற்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. மிரட்சியை கூட அளிக்கலாம். ஒருவகையில் இவ்வுறவின் மீதான கவனமின்மை, முந்தைய உறவிலிருந்து பூரணமாக மீளாததும் கூட காரணமாக கொள்ளலாம். ராதாவின் தோழி ஜெயந்தியும் கர்பிணி தான். அவளது கணவரும் வெளிநாட்டில் தான் வாழ்கிறான். ஆனால் ஜெயந்தி தனிமையில் இல்லை. அவளுடன் அவளது மாமியாரும் மாமனாரும் வாழ்கிறார்கள். பூங்கா நடைபயிற்சியின் போது அற்புதமாக பாடல்கள் பாடும் சிறுமிகளுக்கு பள்ளி கட்டணத்திற்கு தயக்கமின்றி ராதாவால் ஐநூறு ரூபாய் அளிக்க முடிகிறது. ஜெயந்திக்கு அளிக்க மனமிருந்தாலும்அது ஒன்றும் அவளுடைய பணம் அல்லஎன்பது சொல்லபட்டிருக்கிறது. கல்வி கற்று வேலையில் இருப்பவள் ராதா. பிள்ளை சிகப்பாக பிறக்க வேண்டும் என புகுந்த வீட்டாரின் நிர்பந்தத்தை எண்ணி மருளும் ஜெயந்தி என இருவரின் குணாதிசயமும் கதையின் முடிச்சுக்கு வலு சேர்க்கிறது. ராதா சந்தானத்தை எண்ணி குழம்புகிறாள். இசையாக அவன் நினைவுகள் அவளுள் எழுந்து அவளை கொந்தளிக்க செய்கிறது. ஜெயந்தி தன்னை நேசித்த ராகவனையே திருமணம் செய்து கொண்டிருந்தால் ஒருவேளை நிம்மதியாக இருந்திருக்கலாமோ என வெளிப்படையாக வருந்துகிறாள். கருக்கிருட்டில் ராதாவை அலைகழித்த குயிலோசைகள் புலர்ந்த பின் காணாமல் போய்விடுகின்றன. “எதிலும் தெளிவு வேண்டும்குழப்பிக்கொள்ள வேண்டாம் என ஜெயந்திக்கு ஆலோசனை வழங்கிவிட்டு புன்னகைத்து மீண்டும்தெளிவு வேண்டும்என தனக்கே சொல்லிகொள்கிறாள். நாளையும் கருகிருட்டு வரும், அதன் பின்னர் விடியலும் வரும். அவிழ்க்க முடியாத முடிச்சுகளை போட்டபடியும் அதற்காக ஏங்கியபடியும் தான் வாழ்ந்தாக வேண்டும். மீண்டும் மீண்டும் அவநம்பிக்கையைகளையும், அவைகளை எதிர்கொள்ளும் சால்ஜாப்புகளையும் உருவாக்கிக்கொள்ளத்தான் வேண்டும்.    

இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளநித்யாநேரடியான எளிய கதை. ஆனால் அதன் சித்தரிப்பின் வலிமையாலும், அது அளிக்கும் துயரத்தாலும் மனதை மிகவும் தொந்திரவு செய்யும் கதையும் அதுவே. ஒரு அனாதை இல்லத்தில் வளரும் குழந்தை மீது அங்கு வரும் தம்பதியினர் கொள்ளும் பரிவை சொல்கிறது. மரணபடுக்கையில் இருக்கும் நித்யாவையும் அவளுடைய நண்பர்களையும் மகாபலிபுரம் அழைத்து செல்கிறான் ரவி. இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள இரண்டு கதைகளில் மகாபலிபுரம் ஒரு படிமமாக துலங்குகிறது. “எட்டு திரைக்கதைகளும் ஒரு நேர்காணலும்கதையில் குலசேகர் எழுதும் திரைக்கதைகளில் ஒன்றில் மகாபலிபுரத்தை பற்றிய குறிப்பிருக்கிறதுஇந்தக் கரையில பல கோயில்கள கட்டனான் பல்லவ மன்னன். கடலுக்கு ஏதோ பொருமல். அகங்காரம். தனக்கு நெருக்கமா நிக்கறதுக்கு இதுக்கு என்ன தகுதின்னு நெனைக்கற மாதிரி. காலங்காலமா இந்த கோயிலகள பாத்து பொருமிகிட்டே இருக்குது. உன்ன விடமாட்டேன்னு கோயிலகள பாத்து ஒவ்வொரு நிமிஷமும் பாஞ்சிகிட்டே இருக்குது. நூற்றாண்டு கணக்கா தொடருது இந்த பாய்ச்சல். ஒவ்வொரு கோயிலா விழுங்கி சிரிச்சுகிட்டே இருக்குது கடல். இன்னும் நீதான் பாக்கி சத்தமா ஒரு அகங்காரச் சிரிப்பு கேட்டுகிட்டே இருக்குது. அழியப் போறத பத்தி எந்த கவலையும் இல்ல, இருக்குறவரைக்கும் எப்படி இருக்குறேன்ங்கறதுதான் முக்கியம்னு உறுதியா நிக்குது கோயில்.” என்கிறார்.

நோயுற்றிருக்கும் நித்யா மீண்டும் மீண்டும் மகாபலிபுர கோயிலை கடல் கொண்டு சென்றுவிடும் என அஞ்சுகிறாள். இப்போது போய் பார்த்தாலும் கூட என்றேனும் ஒருநாள் அது கடலால் கொண்டு செல்லப்படும் என அஞ்சுகிறாள். ரவிமூழ்குவதும் மூழ்காததும் வேற பிரச்சனை..நாம் சென்று பாத்து வரலாம்என்கிறான். தன்னை அக்கோவில் இடத்தில் வைத்து பார்க்கும் நித்யா அவள் அஞ்சும் ஆற்றலால் கொண்டு செல்ல படுகிறாள். ஒரு குழந்தை மரணத்தை எப்படி எதிர்கொள்கிறது? அவளுக்கு எத்தனை குழப்பமாக இருக்கும். காரண காரியங்களை விளக்கி கொள்ளும் நிலையில் அவளில்லை

ரத்தம்தந்தைமகள் உறவை மிக நுட்பமாக பதிவு செய்கிறது. தாயுமானவனாக தன் மகனையும் மகளையும் வளர்க்கும் தந்தை அகால மரணமடைகிறார். அதை அவருடனேயே நெருக்கமாக வளர்ந்த மகளால் ஏற்றுகொள்ள முடியவில்லை. தன் குருதியில் அவர் இருக்கிறார் என கீறி காண்பித்தபடியே இருக்கிறாள். ரத்த உறவுள்ள மகன் தந்தையின் இடத்தை நிரப்ப முடியும் சாத்தியத்தை சொல்லி முடிகிறது கதை. ‘ரத்தம்கதையில்  ஒருவகையான தந்தைமகள் உறவை காட்டும் பாவண்ணன் நேரெதிராக அகங்காரமும் வன்மமும் பழிவாங்கும் வெறியும் நிறைந்த தந்தைமகள் உறவைமரம்கதையில் கையாள்கிறார். ரத்தம் நகரத்து நவீன தந்தையையும் மரம் நிலபிரபுத்துவ கிராமத்து தந்தையையும் சித்தரிக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

ரத்தம்ஒருவித உளசிக்கலை சித்தரிக்கிறது எனில்அழைப்புவேறுவித சிக்கலை நுட்பமாக சித்தரிக்கிறது. ஒன்றரை வயது குழந்தையின் மரணத்தை தாங்க முடியாமல் புத்தி பேதலிக்கிறாள் அந்த அன்னை. அனாதை இல்லத்தில் வளரும் அவள் படித்து அடைந்த வேலையை இழக்கிறாள். ஆனால் பணியில் இருப்பதாகவே கற்பனை செய்து கொள்கிறாள். வாயிலில் அவளை அழைத்து செல்ல வண்டி நிற்பதாக ஒவ்வொரு நாளும் எண்ணுகிறாள். அவளுக்கு மட்டுமே ஒலிக்கும் அழைப்புமணி அவளை உசுப்புகிறது. அவள் அதை நோக்கி சென்றபடி இருக்கிறாள். இறுதியில் மீள முடியாத தொலைவுக்கு சென்று விடுகிறாள். இந்த கதை மனபிறழ்சியை அச்சமூட்டும் அளவிற்கு நுட்பமாக சித்தரித்து வாழ்வின் மிகக் குரூரமான எல்லையில் சென்று முடிகிறது.

பார்வைகதையும் ஒருஇல்லத்தைகளமாக கொண்டது. பார்வையற்ற ஒரு பெண் பார்வையடைய கொள்ளும் தடுமாற்றத்தை பதிவு செய்கிறது. பார்வையடைந்த ஒரு தோழியும் அவளுடன் இருக்கிறாள். பார்வையற்ற பெண் எழுதும் கவிதைகளில் ஆச்சரியமாக வண்ணங்களும் உருவங்களும் நிறைந்திருக்கின்றன என்றொரு அவதானத்தை வைக்கிறார்.

மகாபலிபுரம்கடல், மரம்காற்று, ஆகிய இந்த இரு படிமங்களும் ஒரே கேள்வியின் இரு வடிவங்களாக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. அலைகழிபவை நிலை பெறவும் நிலைபெற்றவை தேங்கி நிற்காமல் இருக்கவும் விழைகின்றன

அவருடைய கதை மாந்தர்கள் பரிவுள்ளவர்கள். ராஜசேகரனும் சரி, அவனுக்கு உதவும் தியாகராஜனும் சரி, பாலுவும், குலசேகரும், ரவியும், சித்ராவும், ராமமூர்த்தியும் கருணையை சுரக்கிறார்கள். நித்யா, பார்வை, அழைப்பு ஆகிய மூன்று கதைகளிலும்இல்லங்கள்வருகின்றன. அவை நல்லவர்களால் நடத்தபடுகின்றன. நல்லவர்களையே உருவாக்கவும் செய்கின்றன. இந்த தொகுப்பில் உள்ள பாவண்ணனின் கதைகளின் அடிநாதமாக நான் இதையே காண்கிறேன். அவரை மீண்டும் மீண்டும் ஒரு கேள்வி எழுகிறது. ஏன் நன்மை வீழ்கிறது? வீழ்ச்சி தவிர்க்கவியலாதது என்றே மீண்டும் மீண்டும் அவர்கள் வாழ்ந்து காட்டி சொல்கிறார்களா? ‘ஏன்எனும் ஒற்றை கேள்வி, ஒரு மன்றாடல் இக்கதைகளின் வழியாக நம்முள் எழுகிறது. மறுபக்கம் வீழ்ச்சி தவிர்க்கவியலாதது தான் ஆனால் அதற்காக அதை அஞ்ச வேண்டியதில்லை, அஞ்சி ஒடுங்க வேண்டியதில்லை. இருக்கும் வரை வாழ்க்கையை அழகாக்கிகொள்ளவும் அர்த்தமாக்கிகொள்ளவும் முடியாதா? என கேட்கிறது.    

இந்த கதைகள் பெரும்பாலும் அதன் களம் சார்பாக, பேசுபொருள் காரணமாகவோ அல்லது மொழியின் விளைவாகவோ, ஒருவித திரைக்கதை அம்சம் கொண்டுள்ளதாக தோன்றியது. ‘சினிமாடிக்ஆக இருப்பது எதிர்மறையான விஷயமா என்றால் இல்லை. ஆனால் அது கதையை ஒரு வரையறைக்குள் கட்டிவிடுகிறது. குறிப்பிட்ட ஒரு திசையில் பயணிக்க வாசக மனம் வலியுறுத்தபடுகிறது. நுட்பமான விவரணைகளும் களமும் கொண்ட கதைகளும் கூட இறுதியில் இத்திசையில் தேர்வது ஒரு பலவீனம் என்றே எண்ணுகிறேன்

ஒட்டுமொத்தமாக ஒன்பது கதைகள் கொண்ட இத்தொகுப்பில்வெளியேற்றப்பட்ட குதிரை’, ‘நித்யா’, ‘அழைப்பு’, ‘மரம்ஆகிய கதைகள் உக்கிரமான இழப்புகளை துயரங்களை பேசுகின்றன. ‘ஒரு முடிவுக்கு அப்பால்’, ‘பார்வை’, ‘எட்டு திரைக்கதைகளும் ஒரு நேர்காணலும்’, ‘ரத்தம்ஆகிய கதைகள் நம்பிக்கையுடன் முடிகிறது. இத்தொகுப்பினுடைய முன்னுரை முக்கியமானது. ஒரு மழை காலத்தில் சாளரத்தருகே அமர்ந்து தெருவில் பெருக்கெடுத்து ஓடும் நீரை பார்க்கிறார். அங்கிருந்து அவருடைய மகன் இளவயதில் கப்பல்விட்ட அனுபவம் நினைவுக்கு வருகிறது. காகித கப்பல்கள் சற்று தூரம் நீரில் பயணித்து மூழ்கிவிடுகிறது அல்லது கரையில் தரைதட்டி நின்றுவிடுகிறது. அங்கிருந்து அவருடைய மனம் நதியில் ஓடும் ஓடத்திற்கு தாவுகிறது. நதிவழி பயணம், எதிர்வழி பயணம் என இரு வாய்ப்புகள் உண்டு. எது பாதுகாப்பானது எனும் கேள்வியை எழுப்புகிறார்? ‘எந்தப் பயணத்திலும் பாதுகாப்புக்கும் பாதுகாப்பின்மைக்கும் சம அளவு வாய்ப்பிருப்பதாகவே தோன்றியது.’ என எழுதுகிறார்.

ஒரு தொகுப்பை மட்டும் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக பாவண்ணனை வகுத்துவிட முடியாது என்றாலும் அவருடைய படைப்புலகின் சில அக்கறைகளை கவனிக்க முடியும் என்றே எண்ணுகிறேன். பாவண்ணனை காலகிரம்மமாக காலந்தோறும் அவருடைய படைப்புலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை வாசிக்கும் போது அவருடைய முக்கியத்துவம் புலப்படகூடும்.

  

      

பாவண்ணன் என்ற ஒர் எழுத்துப் போராளி

நாகரத்தினம் கிருஷ்ணா

P2

“புதுச்சேரி வாழ்க்கையை சமூக எதார்த்த நோக்கில் சித்திரிக்கும் நாவல்களைப் படைப்பதில் குறிப்பிடத் தக்கவர் பாவண்ணன் ஆவார்.” என்கிறார் தேவமைந்தன்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள்: சிறுகதைகள் கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகளென படைப்புலகின் அவ்வளவு வடிவங்களிலும் ஆழமான ஞானம்கொண்ட மனிதர். தமிழ்ப்படைப்புலகில் பாவண்ணனுக்கென்று தனித்த இடமுண்டு. அந்த இடத்தை இன்று நேற்றல்ல என்றைக்கு எழுத்துலகில் அவர் காலடியெடுத்துவைத்தாரோ அன்று தொடக்கம் கட்டிக்காத்து வந்திருக்கவேண்டுமென்பது என்பதென் அனுமானம். ஆனால் அதனைக் தக்கவைத்ததில் எழுத்தாளர் பாவண்ணனைக் காட்டிலும்;  நல்ல குடும்பத் தலைவராக, அரசு ஊழியராக, சமூகத்தை உளமார நேசிப்பவராக இருக்கிற பாவண்ணன் என்கிற மனிதருக்குப் பெரும் பங்கிருக்கிறது. தமிழ்ப் படைப்பிலக்கிய துறையில் சொந்த வாழ்க்கையில் ஒரு நேர்க்கோட்டைக் கிழித்து அதனின்று ஓர் மி.மீட்டர் கூட பிறழாமல் நடப்பதைக் கொள்கையாகவே ஏற்றுக்கொண்ட மனிதர். அவரைப்போலவே அவரது இலக்கிய ஆளுமையும் எளிமையானது, பகட்டிலிருந்து விலகி நிற்பது; எதார்த்த சமூகத்தை, அதன் பங்காளிகளைக் குறிப்பாக இந்தியச் சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கிற நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வனுபங்களை, அவற்றின் ஈரத்துடன், கவிச்சி போகாமல் பொத்தி வைத்து படைப்புதோறும் மணக்க மணக்கச் சொல்லத் தெரிந்தவர். எழுத்துவேறு வாழ்க்கைவேறு என்றில்லாமல் இரண்டையும் ஒன்றாகப் பார்க்கிற படைப்பிலக்கியவாதிகள் இங்கு அபூர்வம். பாவண்ணன் அத்தகைய குறிஞ்சிப்பூக்களிலொருவர். தமிழ்ச்சூழலைச் புரிந்துகொண்டு எந்தக் குழுவினரையும் சார்ந்திராமல் படைப்புண்டு தானுண்டு என ஒதுங்கி இருக்கத் தெரிந்த சாமர்த்திய சாலியுங்கூட.

பாவண்ணனைக் கொண்டாட இரண்டு காரணங்கள் எனக்கிருக்கின்றன. முதலாவதாக தமிழில் சிறுகதையென்றதும் மேற்குலகப் படைப்புகளுக்கு இணையாக எனக்கு நினைவுக்குவருகிற ஒரு சில எழுத்தாளர்களில் பாவண்ணனும் ஒருவர். இவர்கள் கதைகள் மானுடம்சார்ந்த பிரச்சினைகளை, பொறுப்புள்ள மனித மனத்தின் கவலைகளைக்கொண்டு  அளவிடுபவையாக இருக்கின்றன. பாவண்ணனைப்பற்றி எழுத விரும்பியதற்கு இரண்டாவது காரணம், அவர் என்னைப்போலவே தமிழ்நாட்டைச்சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்துக்காரர்,  வாழ்க்கையின் பெரும்பரப்பை புதுச்சேரியோடு பிணைத்துக் கொண்டவர்.

நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் சிறுகதைகள் என சாதனைகளைக் குவித்திருந்தபோதிலும் ஒளிவட்டத்தைத் தவிர்த்து அமைதிதவழும் முகமும் வசீகரமான குறுநகையுமாக அவரை முதன்முறை நான் அவரைக் கண்டது மறக்கவியலாது. எவ்வித பந்தாவுமின்றி, சினேகிதப் பாங்குடன் கைகுலுக்க முன்வந்தபோது உயர்ந்த அவரது மனிதம் இன்றுவரை குறையின்றி மனதில் நிலைத்திருக்கிறது.    

பாவண்ணன் கதைகள் குறிப்பாக சிறுகதைகள்:

நவீன இலக்கியத்தில் இன்றைய தேதியில் சிறுகதைகளை அதிகம் காண நேர்வதில்லை. இன்று வெளிவரும் புனைகதை வடிவங்களில் சிறுகதை தொகுப்புகள் எத்தனை, நாவல்கள் எத்தனை என்பதை ஒப்பிட்டுபார்த்து சிறுகதை எழுத்தாளர்கள் அருகிவருவதைத் தெரிந்துகொள்ளலாம். சிறுகதைக்குரிய பண்புகள் அனைத்தையும் நாவல்கள் எடுத்துக்கொண்டுவிட்டன என்பதும் ஒருகாரணம். ஒரு நல்ல சிறுகதை என்பது வாசித்துமுடித்ததும் நிறைவைத் தரவேண்டும், வாசகரிடத்தில் ஆசிரியர் சொல்லவந்தது முள்போல தைத்திருக்க வேண்டும், ஏன் அப்படி எழுதினார் என்ற கேள்வியை எழுப்பவேண்டும். பாவண்ணன் சிறுகதைளில் பெரும்பாலானவற்றிடம் இப்பண்பினைக் காண்கிறோம். விவரிப்புகளைக் குறைத்து, சிக்கனமாக வார்த்தைகளைக் கையாண்டு எதார்ந்த உலகிலிருந்து அதிகம் விலாமல் கதை சொல்லும் பாணி அவருடையது. அவரது சிறுகதைகளில் சிலவற்றை இக்கட்டுரைக்காகத் திரும்பவும் வாசித்த இத்தருணத்திலும் மனதில் நிற்பவையாக இருப்பவை.  வண்ண நிலவன், வண்ணதாசன் போன்ற தமிழ்ச்சிறுகதை ஓவியர்கள் தீட்டும் சித்திரங்களுக்கு இணையானவை அவை.

சூறை

வருவாயற்றுப்போன இரயில்வே ஸ்டேஷனை, நிர்வாகம் மூட நினைக்கிறது. ஸ்டேஷன் மாஸ்டராக பொறுப்பேறிருக்கும் கதை சொல்லி பல ஆண்டுகளுக்கு முன்பாக அதே ஸ்டேஷனில் பணியாற்றியவர். “அப்பொழுதெல்லாம் இப்படி இல்லை. பார்க்கும் போதே ஆர்வத்தைத் தூண்டும் செந்நிறத்தில் ஸ்டேஷன் கட்டிடம் நின்றிருக்கும் முகப்பில் மஞ்சள் நிறப் பெயர்ப்பலகை. கரிய வர்ணத்தால் முன்று மொழிகளில் எழுதிய ஊரின் பெயர். ஏழெட்டு சிமெண்ட் பெஞ்சுகள். இரும்புக் கிராதிகள். மறுபுறம் பெரிய கூட்ஸ் ஷெட். பக்கத்தில் இந்தியன் ஆயில் டேங்க். கசகசவென்று சதா நேரமும் ஒரு கூட்டம். இன்றோ சூறையாடப்பட்டுப் பாழான ஒரு புராதன இடம் போல முள்ளும் புதரும் மண்டிக் கிடக்கிறது. குதிரை வண்டிகளும் மாட்டு வண்டிகளும் இருந்த இடத்தில் நாய்கள் படுத்துக் கிடக்கின்றன”  என்கிற ஒப்பீட்டுடன் கதை தொடங்குகிறது. செல்லரித்த பழைய நிழற்படத்தையொத்து நிற்கிற கட்டிடமும் பிறவும் ஊர்மக்களால் எப்படி கபளீகரம் செய்யப்படுகிறது என்பதுதான் கதை.  விட்டகுறை தொட்டகுறையென்று ஸ்டேஷனிடத்தில் தீராத காதல்கொண்டிருக்கும் கதைசொல்லிக்கு அந்த ஸ்டேஷனுக்கு அப்படியொரு தண்டனையை (நிரந்தரமாக மூடும்) தர மனம் ஒப்புவதில்லை. மூடப்படாலிருக்க நியாயங்களைத் தேடுகிறார். அந்நியாயங்களைப் பட்டியலிட்டு உயரதிகாரிகளுக்கு அறிக்கையாக அனுப்பவும் செய்கிறார்.  ஆனால் இரயில்வே நிர்வாகத்திற்கு இவர் முன்வைக்கும் நியாயங்களைக் காட்டிலும், அந்த ஸ்டேஷனின் வரவு செலவு கணக்கு தரும் உண்மை பெரியது. அதனைக்கூட கதைசொல்லியால் சகித்துக்கொள்ள முடிகிறது  ஆனால் கண்னெதிரே ஸ்டேஷன் கொள்ளை போவதை வேடிக்கைப் பார்ப்பதன்றி வேறெதுவும் செய்ய இயலாத தனது கையாலாகதத்தனத்தை  சகிக்க முடிவதில்லை.  ஸ்டேஷன் மாஸ்ட்டரின் குமுறல் தீயில் எண்ணை வார்ப்பதுபோல, ஸ்டேஷனில் வேலைசெய்யும் ஊழியர்களின் அவலக்குரல்:

“அம்முவரிடமும் விஷயத்தைச் சொன்னேன். அதிர்ந்து போனார்கள் அவர்கள்.

என்ன சார் இப்பிடி செய்றாங்க. புள்ளகுட்டிக் காரங்கள இப்பிடித் தூக்கியடிச்சா என்ன செய்றது சார் ? என்று முறையிட்டார்கள். எனக்கும் கோபமாய்த் தான் இருந்தது. எதுவும் செய்ய இயலாத வெற்றுக்கோபம்.

போவ முடியாதுன்னு சொன்னா என்ன சார் செய்ய முடியும் அவுங்களால ? என்றான் ஒருவன்.

சேங்க்ஷன் போஸ்ட்டயே ரத்து செஞ்சிட்டப்புறம் சம்பளம் வாங்க முடியாதுப்பா என்றேன் நான்.

அப்ப எங்க கதி ?

போய்த்தான் ஆவணும்”

இதற்கும் கூடுதலாக பிரச்சினையின் ஆழத்தை, ஏமாற்றத்தை வாசகர்களிடம் கொண்டு செல்லமுடியுமா என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்டமனித மனங்களில் இவரும் பயணித்து  வெகு உருக்கமாகத் தீட்டியிருக்கிறார். அதுபோலவே தமது நினைவுகளில் தேங்கிக்கிடக்கும் தடயங்கள் சிறுகச் சிறுக தம் கண்னெதிரிலேயே அழிக்கப்படுவதை கண்டு குமுறும் ஸ்டேஷன் மாஸ்டரின் விரக்தியும், ஏமாற்றமும் மிக அழகாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது:.   

“சரக்குக்கூடம் பிரிக்கப்பட்ட இடத்தில் ஊர்ப் பெரிய மனிதர் ஆடுகளையும் மாடுகளையும் கொண்டு வந்து கட்டினார். தொடர்ந்து மற்றவர்களின் மாடுகளும் இளைப்பாறத் தொடங்கின. மாடுகளுக்கு அங்கேயே தீவனம் தரப்பட்டது. எங்கும் சாணம் குவியத் தொடங்கியது. அறையில் அரைமணி நேரம் கூட உட்கார முடியாது.

சாணத்தின் வீச்சமும் முத்திரத்தின் வீச்சமும் திணற வைத்து விடும். கழிவுகளில் உட்கார்ந்து வரும் ஈக்களும் வண்டுகளும் அறைக்குள் சுதந்தரமாக வந்து ரீங்கரிக்கும். கரிய பருத்த அவ்வண்டுகளைக் கண்டதுமே நான் அச்சம் கொள்வேன். மேலே உட்கார்ந்துவிடக் கூடாது என்று அவற்றைச் சூசூ என்று விரட்டியபடியே இருப்பேன். இரவு நேரங்களில் மனிதர்களும் உபாதைகளுக்கு ஒதுங்கும் இடமாகி விட்டது அது. திரும்பிப் பார்க்கக்கூடக் கூசும் அளவுக்கு அந்த இடத்தின் தன்மையே மாறிப்போனது”.

என்கிற விவரக் குறிப்பு ஸ்டேஷனின் மரண சாசனம், கைவிடப்பட்ட நோயாளியின் இறுதி நிமிடங்களை நினைவூட்டும் காட்சி. அவரது சிறுகதைகளில் “சூறை” எனக்கு மிகவும் பிடித்ததொரு சிறுகதை.

பிரந்தாவனம்

இக்கதையும் அவரது ஏனையக் கதைகளைப்போலவே நடுத்தரக் குடும்பத்தை மையமாகக்கொண்டது. பொம்மைக்கு உருகும் ஒரு பெண்மணி, எதற்கும் கணக்குப் பார்க்கும் ஒரு கணவன், கணக்கைப் புரிந்துகொள்ள காட்டும் அக்கறையில் நூற்றில் ஒருபங்கு அக்கறையைக்கூட மனைவியின் உணர்ச்சிகளிடம் காட்டாதவன். கிராமத்திலிருந்து அழைத்துவரப்பட்டு அவர்கள் ஆதரவில் கல்வியைத் தொடருகிற கதைசொல்லியான ஒரு சிறுவன். இவர்கள் மூவரும்தான் கதை மாந்தர்கள். சிறுவனும் அவன் அண்ணியென அன்போடு அழைக்கிற பெண்மணியும் ஒரு நாள் கடைக்குப் போகிறார்கள். போகிற நாளில் வண்டியில் பொம்மைவைத்து விற்கப்படுகிற கடையொன்றை பார்க்க நேரிடுகிறது.  அவ்வண்டியிலிருந்த கிருஷ்ணன் பொம்மை அவ்பெண்மணியை ஈர்க்கிறது: “தலையில் மயில் இறகோடு சிரித்துக்கொண்டு இருந்தது குழந்தை கண்ணன் பொம்மை. அச்சு அசலான கண்களைப் போல பொம்மைக் கண்களில் ஈரம் ததும்பி இருந்தன. இதோ இதோ என்று விரலைப் பற்றிக்கொண்டு கூடவே ஓடிவந்துவிடும் குழந்தையைப் போல இருந்தது. பொம்மையின் அழகைக் கண்ட மகிழ்ச்சியில் அண்ணியின் முகம் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது” எனக் கதையாசிரியர் எழுதுகிறபோது  கதையில் வரும் அண்ணிக்கு மட்டுமல்ல வாசிக்கும் நமக்குங்கூட பொம்மையிடத்தில் காதல் வருவது இயல்பு. பொம்மையை வாங்கத்துடிக்கும் அப்பெண்மணியின் ஆசைகளுக்குப்பின்னே பல தருக்க நியாயங்கள் இருக்கின்றன. பொம்மையை வாங்கி வீட்டிற்குக்கொண்டுவந்து அவ்வப்போது கொஞ்சி மகிழ நினைக்கிறாள். பேரம்பேசி பொம்மையை வாங்குவதில் பிரச்சினையில்லை. ஆனால் செலவுக்கணக்கில் கறாராக இருக்கும் கணவனை எப்படி சமாளிப்பது? பொம்மையை வாங்க பணத்திற்கு எங்கே போவது? வீட்டுசெலவில் அதை மூடிமறைக்கலாம் என்றாலும், அதையும் கண்ணில் விளக்கெண்ணைகொள்டு கண்டுபிடித்து ஏன் எதற்கென கேள்விகேட்கும் கணவனுக்கு என்ன பதில் சொல்வது? என்கிற அறிவின் கேள்விகளையெல்லாம் உணர்ச்சி அலட்சியம்செய்து, கதைசொல்லியின் யோசனையின் தெம்பில் பொம்மையை வாங்கிவிடுகிறாள். பொம்மைக்கான செலவை அழுக்கு சோப்பு வாங்கியதாகக் கணக்கும் காட்டுகிறாள். கணவனின் கழுகுக் கண்கள் வீட்டிற்கு ‘எட்டு’ரூபாய் செலவில் வந்திருக்கும் பொம்மையை அறியாமலேயே அழுக்கு சோப்பிற்கு அந்த மாதம் கூடுதலாகச் செலவிட்ட தொகை அநாவசியம் என கண்டிக்கிறது. குருட்டு தைரியத்தில் வாங்கப்பட்ட பொம்மையை அலமாரியில் ஒளித்து வைத்து வேண்டுமென்கிறபோது, கணவனுக்குத் தெரியாமல் எடுத்துப்பார்த்து மகிழலாம் என்பதுதான் பெண்மணியின் திட்டம். பொம்மைமீது அவள் செலுத்தும் அன்பும், எந்த நேரத்திலும் குட்டுவெளிப்படலாம் என்ற நிலையில் அவள் மனம் படும் பாடும், சிறுவனின் இக்கட்டான நிலமையும் பாவண்ணன் ஒரு தேர்ந்த கலைஞன் என்பதைப் பறைசாற்றும் படிமமாக கதைச் சொல்லப்படுள்ளது.

‘முள்’

‘முள்’ சிறுகதையும் பாவண்ணன் கதைகளில் மிக முக்கியமானது. பொதுவாக பாவண்ணன் தன்மை கதை சொல்லலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருக்கிறார். இக்கதையும் அதற்குத் தப்பவில்லை. கதை சொல்லியான இளைஞன் தன்னிலும் மூத்தவயதுகொண்ட சகஊழியரை அண்ணன் என அ¨ழைத்து அவருடையக் குடும்பத்தோடு நெருங்கிப்பழகுகிறான். அந்த வீட்டுப் பெண்மணியை அண்ணி யெனவும், அவ்வீட்டுப் பிள்ளைகள் இவனை சித்தப்பா என்று அழைத்தும் அன்யோன்யமாகவே பழகுகிறார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்தவீட்டிற்குச் சென்று அவர்கள் வீட்டுப் பிள்ளைகளோடு சந்தோஷமாக வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறான். அந்தச் சந்தோஷத்தை குலைப்பதுபோல, ஊழியரின் சொந்தத் தம்பி தனது மனைவி, குழந்தையுடன் வெளிநா¡ட்டிலிருந்து வருகிறான்.  சொந்தத் தம்பி வந்திருக்கிற நிலையில், இவன் யார்? அவ்வீட்டில் அவனுக்குரிய இடம் எது? என்ற கேள்விகள் எழுகின்றன. இப்ப்டியொரு பிரச்சினையைக் கருவாகக்கொண்டு தமிழில் கதை எழுதுகிறவர்கள் அபூர்வம். இப்படியொரு கதைக் கருவை கையாண்டிருக்கிறாரே என்பதற்காக மட்டும் பாவண்ணைப் பாராட்டவில்லை. அப்பிரச்சினையை மையமாக வைத்து கதைசொல்லியின் அண்ணனாக இருக்கிற சக ஊழியர், அவர் மனைவி, வீட்டுப் பிள்ளைகள், வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தம்பி மனைவி இப்படி வெவ்வேறு மனிதர்களின் வினைகளையும் எதிர்வினைகளையும் கொண்டு எதார்த்த உலகை காட்சிப்படுத்தியிருப்பதற்காகவும் பாராட்ட வேண்டியிருக்கிறது.    

பாவண்ணைன் படைப்பு மாந்தர்கள்

இவர் படைப்பில் இடம்பெறும் மனிதர்கள் மேல்தட்டுமக்களா, மெத்த படித்த வர்க்கமா என்றால் இல்லை. பரம ஏழைகளா என்றால் இல்லை. ஆனால் அவர்கள் விவசாயிகளாக இருப்பார்கள், ஆலைத் தொழிலாளிகளாக இருப்பார்கள். வாழ்வை அதன் போக்கிலே அனுசரித்துபோகிற வெகுசன கூட்டத்தின் பிரதிநிதிகள், அலங்காரமற்ற மனிதர்கள். கள்ளங்கபடமின்றி உரையாடத் தெரிந்தவர்கள். விழுப்புரம், கடலூர், புதுச்சேரி நகரங்களில் அல்லது அதையொட்டிய பகுதிகளில்  காண்கிற வெள்ளந்தியான மனிதர்கள்.

” ‘காலையில மொடக்கத்தான் கீரை பறிச்சிட்டு வந்து குடு’னு ராத்திரி கேட்டாரு. வாக்கிங் போனப்ப ஏரிப் பக்கத்துலேர்ந்து பறிச்சியாந்தேன். குடுக்கறதுக்காக வந்து எழுப்புனா, கொஞ்சம்கூட அசைவே இல்லடா. தொட்டா ஐஸ் கட்டியாட்டம் சில்லுனு இருந்திச்சி. ஓடிப் போயி டாக்டரக் கூட்டியாந்து காட்டுனேன். பாத்துட்டு ‘ராத்திரியே உயிர் பிரிஞ்சிடிச்சி’னு சொன்னாரு” “கடேசியா ஒரு தடவ மூஞ்சியப் பார்த்துக்குறவங்க பாத்துக்குங்க” –  (சுவரொட்டி )

நெனப்புதான் பொழப்பைக் கெடுக்குது’ என்று குத்தலாகப் பதில் சொன்னார் சித்தப்பா. “நாய குளிப்பாட்டி நடு ஊட்டுல வெச்சாலும், அது வாலக் கொழச்சிக்கினு போற எடத்துக்குத்தான் போவுமாம். பணத்த கண்ணால பார்த்ததும் மாணிக்கம் பயலுக்குப் பழைய ஞாபகம் வந்திருக்கும். தண்ணியடிச்சிட்டு எங்கனாச்சும் ரோட்டுல உழுந்து கெடப்பான்.’ -( தாத்தா வைத்தியம்)

“இன்னாடா சங்கமாங்கி ஆடுன்னா ஆடறதுக்கு நீ வச்ச ஆளாடா அவுங்க” என்று அவள் குரல் உயர்கிறது. லுங்கிக்காரன் இந்தத் தாக்குதலைச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. “மார்ல கைவச்சிப் பேசற அளவுக்கு ஆயிடுச்சாஸ என் சாண்டா குடிச்சவனே, போடா போய் ஒங்காத்தா மார்ல கைவச்சி ஆடச் சொல்லுடா இல்லன்னா ஒங்கக்கா மார்ல கைவச்சி ஆடச் சொல்லு” என்று கைநீட்டிச் சொல்கிறாள். “என்னமோ ரெண்டுங்கெட்டானுங்க நாலு ஆட்டம் அடி ரெண்டு காசு சம்பாரிக்க வந்தா திமிராடா காட்டற திமிரு” என்கிறாள். ( வக்கிரம்)

இப்படி உரையாடலில் அக்காலத்தில் தென் ஆற்காடு, வட ஆற்காடு என அழைக்கப்பட்ட பிரதேசங்களில் ( எனக்கு இன்னும் கடலூர், விழுப்புரம், திருவண்னாமலையென  நீளும் பட்டியலில் அத்தனைப் பிடித்தமில்லை) காணும் வட்டார வழக்குகள், கதையில் வரும் பெயர்கள் உட்பட (உ.ம். ‘மண்ணாகட்டி’)  எனக்குப் பிடித்தமானவை.

மேற்குலகில் திறனாய்வாளகள் ஒரு படைப்பாளியை அவன் படைத்த படைப்பு, படைப்பில் இடம்பெறும் மாந்தர்கள், கதை நடைபெறும் தளம், கதைமாந்தர்களின் உரையாடல், கதைசொல்லல்  ஆகியவற்றை ‘Being there’  என்ற சொல்லுடன் இணைத்துப் பார்ப்பார்கள். அச்சொல்கொண்டே அப்படைப்பாளியை மதிப்பிடவும் செய்வார்கள். பாவண்ணனும் தனது படைப்பிலக்கியத்தில் வடிவம் எதுவாயினும் ‘Being there’ ஆக உருமாற்றம் பெறுகிறார். கதையென்றால் கதைசொல்லியாக கதைமாந்தராக, கதைக்களனாக அதற்குள் அவரே எங்கும் நீக்கமற நிறைந்துவிடுகிறார், கட்டுரைகளிலும் இதுதான் நடக்கிறது. அதிகம் தன்னிலையில் சொல்லப்படுவது காரணமாக இருக்கலாம், கதைமாந்தர்களைக் கதை மாந்தர்களாகப் பார்க்க முடிவதில்லை. பாத்திரங்களைக் கடந்து ஆசிரியர் முன்வந்து நிற்பது ஒரு குறை. இருந்தபோதிலும் கிராமப்பின்புலத்திலிருந்து வந்திருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் தெரிந்த மனிதர்களாக, இதற்கு முன்பு எங்கோ பார்த்ததுபோன்ற (déjà vu) தோற்றத்தை அவருடைய படைப்பு மாந்தர்கள் தருவது சிறப்பு. அடுத்ததாக அவரது படைப்புகளில் காணும் உயர்பண்பு: ‘கலை மக்களுக்காக’ என்ற நம்பிக்கையில் எழுதுகோலை கையில் எடுத்திருப்பது. வடிவங்கள் எதுவாயினும் பாவண்ணன் எழுத்துக்கள் அல்லது அவரது படைப்புகள் கருவாக எடுத்துக்கொள்கின்ற பிரச்சினைகள் தனிமனிதனைக்கடந்து பொது நியாயத்தின்பாற்பட்டவையாக இருப்பது அவற்றின் தனித்துவம்.

பாவண்ணன் ஒர் எழுத்துப் போராளி

போராளி என்பவன் யார்? வாய் மூடி கிடப்பவனல்ல; ஆமாம் போடுபவனல்ல; அநீதிக்கு வழிவிட்டு ஒதுங்கி செல்பவனல்ல; தனக்காகப் போராடுபவனல்ல. வேறு யார், அவர்கள் எப்படி இருப்பார்கள்?  அவர்கள் எழுத்தாளர்களெனில்  பா.ஜெயப்பிரகாசம், பாவண்ணன் போல இருப்பார்கள் சத்தமின்றி இயங்குவார்கள். சமூகத்திற்குத் தீங்கு என்றால் ஆயுதமின்றி, ஆர்பாட்டமின்றி அமைதியாகப் புரட்சியில் இறங்குவார்கள். இருவருமே பார்க்க சாதுவானவர்கள், ஆனால் எழுத்தென்றுவந்துவிட்டால் அவர்கள் எடுக்கிற விசுவரூபத்திற்குமுன்னால் அநீதிகள் சிறுத்துபோகும். வாடா போடா என எதிரியுடன் அடிதடியில் இறங்கும் இரகமல்ல, அன்பாய்த் தோளைத்தொட்டு திருத்த விரும்புபவர்கள், நவீன படைப்பிலக்கிய இலக்கணத்திற்கு மாறாக நீதியை இலைமறைகாயாக வலியுறுத்த முனைவர்கள்.

பாவண்ணன் எழுத்துக்களில் சமூக அக்கறையைத் தவிர வேறு நோக்கங்களில்லை.  படைப்பிலக்கியத்தின் வடிவம் எதுவாயினும் தமது மேதமையை உறுதிபடுத்தும் எண்ணங்களும் கிடையா. கண்களை அகல விரித்து வாசகர்கள் பிரம்மிக்கவேண்டும், ரசிக மனங்களைக் கிறங்கச் செய்யவேண்டும் என்பதுபோன்ற ஆசைகளும் இல்லை. மாறாக பாலீதீன் பைகள் கூடாது, மணற்கொள்ளைத் தடுக்கப்படவேண்டும், குடியிலிருந்து அடித்தட்டு மக்கள் விடுபடவேண்டும், திருநங்கைகளை சிறுமை படுத்தும் மனிதர்களை கண்டிக்க வேண்டும், முதியவர்களை அரவணைக்க வேண்டும், பூமியெங்கும் மரங்களை நடவேண்டும்,  காடுகளைப் பராமரிக்கவேண்டும் என்பது உயரிய குறிக்கோள்கள் இருக்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் கலை மக்களுக்கானதென்கிற சிந்தனை அவசியம். அந்த ஒரு காரணத்திற்காகவே பாவண்ணனைக் கூடுதலாக நேசிக்கலாம், அவரை எழுத்துப்போராளியென அழைக்கவும் அதுவே காரணம்.

———————-

எழுத்து வேறு, வாழ்க்கை வேறல்ல…

ஜெயஸ்ரீ ரகுராமன்

P3

நானும், ரகுவும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். ரகு தான் வாசிப்பதை ரசனையுடன் பகிர்ந்துகொள்வதில் சமர்த்தர். கணையாழியில் பாவண்ணன் எழுதிய கதை ஒன்றை (சிலம்பம் சொல்லித்தரும் ஆசிரியர் பற்றியது) மிகவும் ரசனையோடு வாசித்துக் காண்பித்தார். “இவர் இந்தப் பக்கம் வளவனூர்க்காரராகத்தான் இருப்பார்போலஎன்று சொல்லி ரசித்து ரசித்து வாசித்தோம். அதன் பிறகு பாவண்ணனின் சிறுகதைத் தொகுதிகளை வாங்க ஆரம்பித்தோம். ‘அடுக்கு மாளிகைஎன்ற கதையைப் படித்துவிட்டு நெகிழ்ந்துபோய் நானும், ரகுவும் கண்ணீர் கசிய சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். அக்கதையை எங்கள் குழந்தைகளுக்கும் (சிறுவர்களாய் இருந்தார்கள் இருவரும்) வாசித்துக் காண்பித்தோம்; அவர்களுக்கும் அழுகையே வந்துவிட்ட்து. வாசிப்பின் மூலமே நாங்கள் அறிந்த பாவண்ணனை நேரில் சந்திப்போம்; நண்பர்களாவோம் என்று அப்போதெல்லாம் நினைத்துப் பார்த்ததேயில்லை.

கடலூரில்இலக்கியச் சோலைஎன்ற அமைப்பை நடத்திவரும் எழுத்தாளர் வளவ. துரையன், ‘பாவண்ணனின் படைப்புலகம்பற்றி 28/10/2000 அன்று ஒரு முழுநாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்ச்சியின்போதுதான் பாவண்ணனைப் பார்த்தோம். அவர் தன் ஏற்புரையை வழங்கும் நேரத்திற்குத்தான் என்னால் போக முடிந்தது. எழுத்தாளர்கள் என்றால் நெருங்கவே முடியாதவர்களாக இருப்பார்கள்; நாம் பேச முடியுமா?என்றெல்லாம் மனத்தில் அச்சமும், தாழ்வுணர்ச்சியும் தோன்றின. ஆனால், அவர் ஏற்புரையைத் தொடங்கிய விதமே அவருடைய எளிமையான, நெகிழ்ச்சியான மனதைக் காட்டிவிட்ட்து. அப்போதே கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியிருந்தன; பல சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகள் என அவருடைய  புத்தகங்கள் எத்தனையோ வெளிவந்திருந்தன. அதனால்தானே அவர் படைப்புலகத்திற்கான விழாவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது? ஆனால் மனதில் அப்படியெல்லாம் பெரிய பயத்தை ஏற்படுத்தாமல், ‘இப்படியும் ஒரு மனிதரா?என்ற ஆச்சரியமே மனதில் நின்றது. அவருக்கான அந்நிகழ்ச்சியும், ஏற்புரையின்போது அவர் குரல் நெகிழ்ந்து, கண்கள் பனித்த காட்சியுமே மனதில் உறைந்துவிட்டன. அந்த அசைபோடலின் விளைவாக நாங்கள் ஒரு கடிதம் எழுதினோம். நம்பவே முடியாதபடி, அடுத்த ஐந்தாம் நாள் பதில் கடிதம் வந்துவிட்டது. அதன் பிறகு எத்தனையோ கடிதங்கள், சந்திப்புகள். எல்லாவற்றிலும் இலக்கியம் மட்டுமல்லாது, ஒரு தாயின் பரிவுடனான அன்பு, கரிசனம், வாழ்க்கை பற்றிய வழிகாட்டுதல்கள் (எவ்வித அறிவுரைத் தொனியும் இன்றி) என எல்லாமே இருக்கும்.

எப்போதெல்லாம் கடிதம் எழுதுகிறோமோ, அப்போதெல்லாம் உடனே பதில் வரும்; ஆச்சரியமாக இருக்கும். ஒரு பக்கம் அலுவலகப் பணி; மறுபக்கம் எழுத்து, வாசிப்பு; இன்னொரு பக்கம் சொந்த பந்தங்கள் என்று குடும்ப வாழ்க்கை. இவை எதையுமே அவர் ஒன்றுக்காக மற்றொன்றை விட்டுக்கொடுத்ததே இல்லை. எல்லாவற்றிற்கும் எப்படி இவருக்கு நேரம் கிடைக்கிறது? என ஆச்சரியப்பட வைக்கும் அவரது பணிகள்.

புத்தகங்களைப் படித்தால் விமர்சனம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் அவரிடமிருந்தே எனக்கு வந்தது எனச் சொல்லலாம். 2003ல் அவருடையஎனக்குப் பிடித்த கதைகள்என்ற தொகுப்பு வெளிவந்தது. தனக்குப் பிடித்த கதைகளாக நல்ல சிறுகதைகளை அடையாளப்படுத்தியவர், கதைகளின் நுட்பமான விஷயங்களை எடுத்துக் கூறியிருப்பது சிறுகதைகளை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற புரிதலைத் தந்தது. 2004ல் வெளிவந்தஆழத்தை அறியும் பயணம்தொகுப்பின் மூலம் என் போன்ற வாசக நண்பர்களுக்குப் பரிச்சயமே இல்லாத பழம்பெரும் தமிழ்ப் படைப்பாளிகளையும், புலம் பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளையும், அயல்மொழி எழுத்தாளர்களின் கதைகளையும் அறிமுகப்படுத்தியவர் பாவண்ணனே. இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா வளவனூரில் நடைபெற்றபோது, அப்புத்தகம் பற்றிப் பேச வாய்ப்பளித்து, எனக்கும் புத்தகங்கள் குறித்துப் பேச வரும் என்னும் தன்னம்பிக்கையை ஊட்டியவர் இவரே. பல வருடங்கள் கழித்து அந்நிகழ்ச்சியின் வீடியோ பதிவைப் பார்க்கும்போது, நான் பேசும்போது எவ்வளவு பதற்றமாக இருந்தேன், என் தொண்டைக்குழி எவ்வளவு உருண்டது என்று தோன்றும். இப்படியிருந்த என்னைத் தன்னம்பிக்கையூட்டி வளர்த்தவர் பாவண்ணன் அல்லவா?எனும் நினைப்பு, கண்ணோரம் நீர் துளிர்க்க வைக்கிறது.

”’ஒரு படைப்பை எவ்வாறு அணுகுவது?என்கிற கேள்விக்கான விடையில் இளம் வாசகர்கள் ஓரளவாவது தெளிவுள்ளவர்களாக இருப்பது நல்லது; இப்பயிற்சி, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கிட்டுகிற வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ள நிலையில் மூத்த வாசகர்களின் அனுபவப் பகிர்வுகளையே இளம் வாசகர்கள் நம்பி, நாடி வர வேண்டியிருக்கிறது. கேட்டுத் தெரிந்து கொள்வதில் எவ்விதப் பிழையுமில்லை; சொல்லிச் செல்வதில் மூத்தவர்களுக்கு எவ்வித இழப்புமில்லை. உண்மையில் இதை ஒரு கடமையாகவே மூத்த வாசகர்கள் செய்வது நல்லதுஎன்பவை தன்னுடையவழிப்போக்கன் கண்ட வானம்என்ற கட்டுரைத் தொகுதியில் பாவண்ணன் குறிப்பிட்டுள்ள வரிகள். இவ்வரிகளை அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும்.

2004ல் வெளிவந்தஎழுத்தெனும் நிழலடியில்என்ற கட்டுரைத் தொகுப்பு, முதுபெரும் எழுத்தாளர்களை அவர்களின் படைப்புகளின் வழியே இளம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒன்று. ‘ஆயிரம் மரங்கள்; ஆயிரம் பாடல்கள்என்ற புத்தகம் (2004) கன்னட இலக்கிய உலகை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கோடு அமைந்ததே.

நூலகத்திற்கோ, புத்தகக் கண்காட்சிக்கோ செல்லும் முன், வாசிக்க வேண்டிய புத்தகங்கள் பற்றிக் கேட்டால் எப்போதுமே தயாராக ஒரு முழுநீளப் பட்டியலே தருவார். மடை திறந்த வெள்ளமென தன் ஞாபகத்திலிருந்தே சொல்லும் அவரது திறனைக் கண்டு நான் வியக்காத நாளேயில்லை.

நல்ல கதை, நல்ல கவிதை, நல்ல நாவல், நல்ல சினிமா என எல்லாவற்றிலும் நல்ல கூறுகளை எடுத்துச் சொல்வதில் அவருக்கு நிகர் அவரேதான். கடிதங்களுக்கு உடனடியாகப் பதில் எழுதுவதைப் போலவே, தான் படிக்கின்ற நல்ல புத்தகங்களுக்கு உடனடியாக விமர்சனம் எழுதி, அடுத்தவர்களும் அப்புத்தகங்களைத் தேடிப் படிக்கத் தூண்டுபவராய் இருக்கிறார். ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தபின் அவரிடம் அது குறித்துப் பேசினால், “உடனே ஒரு கட்டுரையாக்குங்களேன்என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அவருடைய மேடைப் பேச்சுக்கள் கூட எப்போதும் கட்டுரை வடிவிலேயே எழுதப்பட்டிருக்கும். நான் இது பற்றிப் பேசப் போகிறேன்என்று அவரிடம் பொதுவாக எதையேனும் பற்றிக் கூறினால், “அப்படியே ஒரு கட்டுரை ஆக்கிடுங்கஎன்று அவர் சொல்லத் தவறியதேயில்லை; தவறுவதேயில்லை.

சங்க இலக்கியங்கள், புராண இதிகாசங்கள் என எதைப் பற்றிச் சந்தேகங்கள் கேட்டாலும் அவரிடமிருந்து உடனடியாகப் பதில் வரும். அவருடைய ஞாபக சக்தி கண்டு நான் பலமுறை ஆச்சரியத்தில் மூழ்கிப் போயிருக்கிறேன். சில சமயம் ஏதாவது ஒரு விஷயம் பற்றிக் கேட்டவுடன் பதில் சொல்ல முடியாவிட்டால்கூட அதைத் தேடிப்பிடித்து, அது சம்பந்தமாக நாமே மறந்திருந்தாலும், “அன்னைக்குக் கேட்டீங்க இல்லையா?என்று ஆரம்பித்துப் பேசும் அவருடைய நேர்மையும், ஈடுபாடும் வியக்க வைத்திருக்கிறது. அவருக்குத் தெரியாத ஒரு விஷயமாயிருந்தால், “எனக்கு அது கவனமில்லம்மாஎன்று சொல்லக்கூடிய நேர்மையும் அவரிடம் மிகவும் பிடித்த குணம்.

பாவண்ணன் கொடுத்து, சிவராம காரந்த்தின் சில நாவல்களைப் படித்தோம். எங்கள் வீட்டில் இருந்த பாட்டிமண்ணும் மனிதரும்எனும் நாவலைப் படித்துவிட்டுப் பாவண்ணனிடம் அதுபற்றிப் பேசும்போதெல்லாம் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டிருப்பார். நானும், ரகுவும் கதைகள், நாவல்கள், சினிமா என்று எதையாவது பேசும்போதெல்லாம் எங்களால் எவ்விதத் தயக்கமுமின்றி பாவண்ணனுடன் பேச முடியும். ஏனெனில், ‘நம்மைக் குறைத்து மதிப்பிட்டு விடுவாரோஎன்ற தயக்கம் அவருடன் பேசும்போது இருப்பதே இல்லை. ‘சேஇதுகூட உங்களுக்குச் சரியாப் புரியலைஎன்ற தொனியில் அவர் எப்போதும் பேசவே மாட்டார். தன்னுடைய கருத்துக்களையும் சொல்லி, “இது ஒரு கோணம்; அது ஒரு கோணம்என்பார் அழகாக. அவர் சொன்ன பிறகு நமக்குச் சரியான புரிதல் வரும். பாவண்ணனுடன் நட்பான பிறகு, நாங்கள் படைப்புகளை அணுகுவதற்கு நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம் என்றே சொல்ல வேண்டும்.

எங்களுக்கு அடுத்தது எங்களுடைய 20 வயது மகன் தன்னுடைய வலைப்பதிவுகளை அவரிடம் பகிர்ந்து கொள்கிறான். அவனுக்கும் தன் விமர்சனங்களையும், உற்சாகத்தையும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். சங்க இலக்கியமும் அவரால் பேச முடிகிறது; கிரிக்கெட்டும் பேச முடிகிறது.

எங்கள் நண்பர் ஒருவர், தன் மகன் பாவண்ணனின் கதை ஒன்றைப் படித்து ரசித்தான் என்று அவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்; உடனே அந்தப் பையனைத் தொடர்பு கொண்டு அவனோடு பேசியிருக்கிறார் பாவண்ணன். இங்கு இதைச் சொல்வதற்கான காரணம், தலைமுறை வித்தியாசமில்லாமல் பாவண்ணனால் அனைவரிடமும் எளிமையாகப் பழகவும், பேசவும் முடியும். அவருடைய குரலிலேயே அன்பு வழிந்தோடும்.

சொல்லப்போனால், இலக்கியத்தில் மனித வாழ்க்கையைத் தேடுபவர் அவர். இலக்கியம் நம்மைப் பண்படுத்தும் என்ற அசையாத நம்பிக்கை கொண்டிருப்பவர்; அதையே எல்லோருக்கும் சொல்பவர். அன்பும், அதனைப் பகிர்தலும், விட்டுக் கொடுத்தலுமே வாழ்க்கை என்பதைக் கடைபிடிப்பவர்; அதையே தன் படைப்புகளின் மூலமும், வாழ்க்கையின் வழியாகவும் சொல்லி வருபவர். எழுத்துக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் வித்தியாசமின்றி வாழும், அன்பும் எளிமையும் இணைந்தேயிருக்கும் ஒரு ஆளுமையை நண்பராய் நாங்கள் பெற்றிருக்கிறோம் என்பதை நினைந்து, நினைந்து பெருமிதம் கொள்கிறோம்.

எளிமையில் மிளிரும் கலைஞன்

ரமேஷ் கல்யாண்

Jpeg

பாவண்ணனின் கதைகள் அனைவருக்குமானது. அனைவரைப் பற்றியுமானது. அவரது கதைமாந்தர்கள் சாதாரணமானவர்கள். எளியவர்கள். அவரது கதைகள் நம் தோளில் கைபோட்டபடி பேசிச் செல்பவை. அவற்றை வாசிப்பதில் நாம் கொள்ளும் நிறைவுக்கும், நெருக்கத்துக்கும் முக்கியமான காரணங்களில், அவர் ஒரு மிக நல்ல, தேர்ந்த வாசகர் என்ற காரணத்தைத்தான் முதலாவதாக கருதுகிறேன். நன்றாக ருசித்து சாப்பிடத் தெரிந்த ஒருவரால்தான் நன்றாக சமைக்கவும் முடியும்.

அவருடைய முன்னுரைகள், கட்டுரைகள் போன்றவற்றில் அவர் தன் வாசிப்பு அனுபவத்தை நமக்கானதாக விரித்துப் பகிர்வதைக் காண முடியும். கநாசுவின் பொய்த்தேவு நாவலுக்கு அவர் எழுதியிருக்கும் முன்னுரை இதன் சாட்சி. சிறுகதை, குறுநாவல், நாவல், கவிதை, கட்டுரை என்று அனைத்திலும் பங்களிப்பு செய்திருக்கும் தமிழின் முக்கியமான எழுத்துக் கலைஞர்களில் ஒருவர். தன் அனுபவங்களை, தன் பார்வையில் கண்டவற்றை, கண்டடைந்தவற்றை – கலாபூர்வமாக பதிவுசெய்து கொண்டே போகிறார். வடிவங்களை எழுத்துக்கள் தீர்மானித்துக்கொள்கின்றன.

புதையலைத் தேடிஎன்ற நூல் அவர் படித்த புத்தகங்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. புத்தகங்களை வாசிப்பனுபவமான கட்டுரை மூலமாக அறிமுகப்படுத்தும் வகை எழுத்துகளின் முன்னோடிகளில் இவர் முக்கியமானவர். புத்தகத்தை தேடிப் படிப்பதில் பாவண்ணனின் தீவிர ஆர்வத்துக்கு ஒரு சோறு பதம்,ஒரு புதையலைத் தேடிஎன்கிற அவரது கட்டுரை.

கநாசுவின், தமிழ் வாசகன் படிக்க வேண்டிய புத்தகங்கள், என்ற பட்டியலைப் படித்து, ஒவ்வொன்றாக சென்று தேடித்தேடி இரண்டாண்டுகளில் அனைத்தையும் படித்து விடுகிறார். ஆனால் ராஜன் எழுதியநினைவு அலைகள்என்கிற புத்தகம் மட்டும் கிடைக்கவில்லை. யாரைக் கேட்டாலும். எந்த நூலகம் போனாலும் கிடைக்காமல் போகிறது. பிறகு அந்த ஏமாற்றத்துடனேயே முப்பது ஆண்டுகள் கழிகிறது. உப்புச் சத்தியாக்கிரகம் பற்றிய குறிப்புக்காக புத்தகங்களை தேடுகையில் ஒரு கட்டுரையில்தியாகிகள் ராஜன் வீட்டிலிருந்து கிளம்பினார்கள்என்று ஒரு வரி வருகிறது.  ஆனால் இந்த ராஜன் அந்த ராஜன்தானா என்று தெரியாமல் தவிக்கிறார். பிறகு அசோகமித்திரன் ஒரு கட்டுரையில் ராஜனைப் பற்றி எழுதியிருப்பதை பார்த்துவிட்டுஅவர் இவர்தான் என்று நிம்மதியடைகிறார். பிறகு முகம்மது யுனுஸ் எழுதிய பர்மா குறிப்புகள் புத்தகத்தில ராஜன் ஒரு மருத்துவர் என்றும் மரியாதைக் குறைவால் மனம் வாடி பர்மாவை விட்டு வெளியிறினார் என்பதையும் படிக்கும்போது பாவண்ணனுக்கு ஆவல் அதிகமாகிறது. மறுபடி தேடுகிறார். ஒரு நாள் பெங்களுர் தமிழ்ச்சங்கத்தில பழைய புத்தக குப்பைகளைப் புரட்டுகையில் புழுதிபடிந்த அட்டையுடன்நினைவு அலைகள்கிடைக்கிறது. புதையல் கிடைத்துவிட்டது என்று உடனே நூலகரிடம் சென்றுநான் எடுத்த புத்தகத்துக்கு பதிலாக இதை மாற்றித்த தாருங்கள்என்கிறார். நூலகர் அது முடியாது. அதற்கு இன்னும் பதிவுஎண் போடப்படவில்லை. எண்கள் இட்டு அடுக்கியபின் பிறகு வந்து எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுகிறார். மறுபடி அதை தேடிச் செல்லும்போது புதிய அடுக்குகள் உள்ளன. ஆனால் அதைக் காணவில்லை. பிறகு சில மாதம் கழிந்து நண்பரிடம் முப்பது ஆண்டுகளாக தொடரும் இந்த ஏமாற்றத்தைப் பற்றி சொல்லுகையில் அவர் கவலைப்படாதீர்கள். புது அச்சில் தயாராகிறது என்று சொல்லி வெளிவந்தவுடன் இவரிடம் தருகிறார். இவர் படித்து முடிக்கிறார். எப்படியிருக்கிறது அவருடைய தேடிலின் இந்த ஒரு சோற்றுப் பதம்!

இவர் ஒரு கவிஞர் கூட. அதற்கும் அவரது ரசனையும் வாசக ஈடுபாடுமே காரணம். அவரது மனம் வரைந்த ஓவியம்தொகுப்பில், நவீன கவிதைகள் பலவற்றை அறிமுகம் செய்து பேசும் கட்டுரைகள் மூலமும் நாம் இதை அறிய முடிகிறது.

அவருடைய கதைகளில் அவர் கதைச் சூழலில் தன்னைக் கரைத்துக் கொண்டு,  அப்படி இருந்தும் அதற்குள் இருந்தபடியே சற்று விலகி நின்று பார்த்து அதைச் சொல்லும் பார்வை ஒன்று இருப்பதையும் காண முடியும்.  இது ஒரு வித்யாசமான ஆரோக்யமான பார்வையும் உத்தியும் கூட. இதனால், நம் அனுபவத்தின் ஏதோ ஒரு துளியை அவரது கதைகளில் நாம் அடையாளம் காண முடியும் அல்லது நெருக்கமாக உணர முடியும். ஒரு புகைப்படத்தில் காற்றில் யதேச்சையாக தனியாக பிரிந்து அசையும் கூந்தல் பிரி, முகத்தின் மேல் விழும் நிழல் ஒளி கலவை, புகைப்படத்தை ஒரு பிரத்யேக அழகியல் நிலைக்கு கொண்டுபோகும் யதேச்சை போல நாம் காண முடியும் சக மனிதர்களில் இயல்பில் ஏதோ ஒன்று தனியாக கவனப்படுத்த முடியும் படி அமைத்து கதையை அழகியலுக்கு அருகே கொண்டு போய் விடும் எழுத்து லயம் இவரிடம் காணமுடிகிறது.

அனுபவத்தை கட்டுரையாக்கலாம். கதையாக்கலாம். கவிதையாக்கலாம். ஆனால் அதனதன் வடிவங்களை நிர்ணயிப்பதோ, அதற்கான அலைவரிசையில் சொல்வதோ சவாலானதொரு விஷயம். கொஞ்சம் சறுக்கினாலும் ஒன்று வேறொன்று போல நழுவிவிடும். ஆனால் அப்படி ஆகாமல் அதை அதாகவே தருவதுதான் எழுத்தாளுமை. அசோகமித்திரனிடம் இந்த மென்நுட்பத்தைக் காணமுடியும். பாவண்ணனிடமும் இதைக் காணமுடியும்.

உதாரணத்திற்கு  வார்த்தைஇதழில் இவர் எழுதிய ஏரியின் அமைதிஎன்ற கட்டுரை. தாம் பார்த்துப் ரசித்த ஏரியைக் கண்டு, அதன் அசைவின்மை ஒரு மரணத்தை நினைவூட்டி அச்சப்பட வைக்கும் நொடியை அதில் காட்டி இருக்கும் நல்ல படைப்பு அது. ஏரி ஒரு நீர் நிலையாக நம்முடனே வாழ்கிறது. அதன் அசைவுகள் அதற்கு ஒரு உயிர்ப்பை ஊட்டியபடியே  இருக்கின்றன. ஆனால் நீரில் மூழ்கி நண்பனின் மரணம் ஒன்றை கண்டபிறகு அதன் குளிர்ச்சி மிகுந்த முகம் அச்சமூட்டுவதாய் நெளியும். முகத்தில் அடிக்க கைகளால் நீரை அள்ளும்போது ஏரியைப்பார்த்தேன். எல்லாம்  தெரிந்தும் எதுவும் தெரியாத பாவனையில் அசைவே இல்லாமலிருந்தது ஏரி. அமைதியான அதன் முகத்தை முதன்முதலாக அச்சத்துடன் பார்த்தேன்என்பது கடைசி பத்தி. “அமைதி“ – “அச்சம்என்ற இருதுருவங்களை ஒரே வாக்கியத்தில் வைத்து அதன் இடைவெளி தரும் அனுபவத்தை நம்மிடம் தந்துவிட்டுப் போய்விடுவதைப் பாருங்கள்.  சமீப சென்னை வெள்ளத்தில் நீரின் பெருக்கை கண்டபோதுகுழந்தைகள் குழாய் தண்ணீர் பெருகுவதை கண்டும் கூட அச்சப்படும் நிலை என்று பதிவுகளைப் படித்தபோது பாவண்ணனின் இந்த ஏரி எனக்கு நினைவுக்கு வந்தது.

அவருடைய நல்ல சிறுகதைகளில் ஒன்று விகடனில் வந்திருந்த  ‘காணிக்கை‘. இசையின் பின்னணி இல்லாமல் வசனங்கள் இல்லாமல் வாழ்வில் அன்பைப் பற்றிய குறும்படம் ஒன்றின் உச்சக் காட்சியை ஒத்திருக்கும் இந்த கதையின் இறுதிப் பகுதி. திரும்ப திரும்ப என்னைப் படிக்கவைத்த கதை இது. அதில் காட்டுப் பகுதியில் நடக்கும்போது அவ்வப்போது கூவிக்கொண்டு கிளைகள் தாவியபடி கூடவே வரும் குயில் கூட ஒரு பாத்திரம். ஆனால் அது வாசகன் கண்களில் படாது. 

இந்த கட்டுரை போனால் போகிறதுஅந்த கதையை உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும்.

ஐயனார் கோவில் முடி இறக்கி காணிக்கை செலுத்துவதற்கு கணேசன் தன் மனைவி மற்றும் மகளுடன் இறந்துபோன தன் அம்மாவின் நினைவுகளை சுமந்தபடி.கோவிலுக்கு வந்து போகிறான். பழைய நினைவுகளும், சிறுபிராய தருணங்களும், அம்மாவின் மரணமும், தற்போது பெருகியுள்ள குடும்ப நினைவுமாக ஒன்றையொன்று தழுவியபடி செல்லும் சிறுகதை.  பொங்கல் அடுப்பு எரிந்து கொண்டிருக்க பம்பைக்காரனுடன் வந்து மர நிழலில் ஓய்வெடுத்து பிறகு தலைமுடியில் நீர் தெளிக்கும்போதுஐயனாரப்பனை நினைச்சிக்கப்பாஎன்று நாவிதன் சொல்லும்போது அவனுக்கு அம்மாவின் நினைவு வருகிறது. இந்த ஒரு வரியில் அவர் அம்மாவை எந்த இடத்தில் வைத்திருக்கிறார் என்று சொல்லிவிடுகிறார். மழிக்கப்பட்டு முடிக்கற்றைகள் விழும்போது அம்மாவின் நினைவு. எதற்கெடுத்தாலும்  என் குழந்தையை உடல் நலம் நன்றாக ஆக்கிவிடு அய்யனாரப்பா.. படையல் வைக்கிறேன்  என்று மஞ்சள் துணியில் நாணயத்தை காணிக்கை முடிந்து  வேண்டிக்கொள்ளும் அன்பு நிறைய ததும்பும் அம்மா அவள்.

அம்மாவுடனான் தன் சிறுபிராய நினைவு வருகிறது. எந்த சின்ன குழந்தையை கண்டாலும் கன்னத்தை கிள்ளி முத்தமிடும் அம்மாவிடம்உன் விரலையே நீ முத்தம் கொடுத்துக் கொள்கிறாயே“..என்று கேட்கும்போதுஉங்க அப்பனுக்கும் உனக்கும் நான் என்ன செய்யறேன்னு கவனிக்கறதே வேலையா போச்சுஎன்று செல்லமாய் விரட்டுவாள் அம்மா. “எனக்கும் அப்படி முத்தம் கொடுஎன்று சிறுவனாயிருந்த தான் கேட்கும்போதுவெறகுக் கட்டையால அடிப்பேன். போய் படிக்கற வேலைய பாருஎன்று துரத்துவாள். அடம் பிடிக்கும் மகனிடம்எதுக்குடா இப்பிடி ஒட்டாரம் புடிக்கிறஎன்று கேட்டுவிட்டு கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்துவிட்டுப் போவாள். இந்த நினைவு நிழலாடி முடியும்போது முடி மழிப்பும் முடிந்துவிடுகிறது.அய்யே அப்பா. மீசை இல்லாம நல்லவே இல்ல. எப்படி ஆபீஸ் போவேஎன்று கிண்டல் செய்கிறாள் மகள். சேவலையும் பூஜைப் பொருளையும் எடுத்துக் கொண்டு கோவிலை நோக்கி நடக்கிறார்கள்.  நோயில் விழுந்து உடலெல்லாம் குழாயும் மருந்துமாக அம்மா தீவிர சிகிச்சை பலன் இன்றி இறந்து போனது நினைவுக்கு வருகிறது. அப்போது ஒரு குயில் கூவுகிறது. அது அம்மாவின் குரல் என்று நம்பி அதைத் தேடுகிறான். மகள் விரல் காட்டும் திசையில் பார்க்கிறான். குயில் தெரியவில்லை. குரல் மட்டுமே கேட்கிறது. நடந்து வருகையில் இந்த காணிக்கை செலுத்துவதற்கான காரணத்தை மனைவியுடன் செய்த உரையாடலை மனம் அசைபோடுகிறது. 

அம்மா இறந்த பிறகு ஒரு நாள் மனைவியிடம் பேசிக்கொண்டிருக்கிறான். அம்மாவுக்கு உடல் நலம் மோசமாகும்போது  அவள் தனது கையை பிடித்துக் கொள்ளும்போது இவன் மனம் நெகிழ அய்யனார் கோவிலில் வந்து இவள் பிழைத்துவிட்டால் முடி காணிக்கை தருவதாக வேண்டிக் கொண்டதை மனைவியிடம் சொல்கிறான். “இதில் எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இல்லையேஎன்று அவள் ஆச்சரியமாக கேட்கும்போதுஇப்போதும் கூட இல்லைதான். ஆனால் அந்த சமயம் அப்படி தோன்றிவிட்டதுஎன்கிறான். வாழ்வின் மகத்தான ஒரு உண்மையை மிக எளிதான ஒரு உரையாடலில் சொல்லிவிடும் அற்புதம் இங்கு நிகழ்வதை கவனியுங்கள். இதற்கு சிகரம் வைக்கும் வரி அடுத்து வருகிறது. ஆனாலும் அம்மா இறந்து விட்டாள் அல்லவா. ஆகவே எதற்காக காணிக்கை செலுத்தவேண்டும் என்று கேட்கும்போது மனைவி சொல்கிறாள் இது என்ன வியாபாரமா. காணிக்கை என்றால் செலுத்திவிட வேண்டியதுதான் முறை என்கிறாள். அதனால் இன்று கோவிலுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை நினைத்துக்கொள்கிறான்.

ஐயனார் கோவிலுக்கு போகும் வழி எங்கும் குயிலின் குரல் கிளைகள் இடையே விட்டு விட்டு கேட்கிறது. அவனால் ஒரு முறையும் அதை கண்ணால் காண இயலுவதில்லை. அது அம்மாவின் குரல் என்பதை அவன் மட்டுமல்ல வாசகனே நம்பத் தொடங்கி விடுகிறான். பூசாரி கூடஅம்மா வரலையா?“ என்று கேட்டு பிறகு வருந்தி மகராசி என்று வாழ்த்தி இதெல்லாம் நம் கையில் இல்லை என்று சமாதானித்து பூஜை செய்கிறான். பிறகு வெளியே வந்துஇதோ பாருப்பா என்று மகள் குயிலை காட்டுகிறாள் அப்போதும் இவன் கண்ணுக்கு தெரியவில்லை. அப்பா தெரியாதது போல் நடிக்கிறார்என்று மகள் கிண்டல் செய்கிறாள். 

அப்போது மனைவி அவரை அப்படி சொல்லாதே. அவர் அப்படியான ஆள் இல்லைஎன்று சொல்லிநான் சொல்றது சரிதானேஎன்று அவனைப் பார்த்துக்கொண்டே கேட்கிறாள். இவனுக்கு அம்மாவின் நினைவு பொங்கியபடியே இருக்கும்போது, பேசிக்கொண்டிருந்த மனைவி சட்டென ஒரு நொடியில் அவனது கன்னத்தை கிள்ளி விரல் முத்தம் கொடுக்கிறாள். உடல் சிலிர்க்க மனைவியை புதியதாக பார்க்கிறான். அம்மாவின் அன்பு என்பது மனைவியின் கை மூலம் இடம் மாறும் ரசவாதத்தை நிகழ்த்தும் அற்புதமான கணம் இது. காரில் ஏறியபின் அவனது கையைத் தன் கைக்குள் பொத்திக் கொள்கிறாள் என்று கதை முடிகிறது. 

வெறும் அம்மா செண்டிமெண்ட் கதையாக இல்லாமல் அன்பு, நம்பிக்கை, உறவு, நெகிழ்ச்சி என்று பன்முகத்தை சொல்லிப் போகும் எளிமை இவரது பெரும் பலம். அசோகமித்திரனை பற்றி சொல்லும்போது அவரது எளிமை நம்மை ஏமாற்றி விடக்கூடியது என்று ஜெயமோகன் சொல்வார். அதையே பாவண்ணனுக்கும் பொருத்தலாம். 

சமீபமாக விகடனில் வெளிவந்த கதையில் கோழியை விற்கும் சைக்கிள்காரன் பற்றிய சித்திரத்தை அணுக்கமாக சொல்லி இருப்பார்.  இருவாட்சி இலக்கிய இதழில்ஒளிவட்டம்என்ற சிறுகதையில் மேடை நாடகத்துக்கு ஒளியமைப்பு செய்யும் ஒருவரின் வாழ்க்கையும் அதில் அவர் மரணமும் பற்றி சொல்லி இருப்பார். அதே போல தளம்  இலக்கியச் சிற்றிதழில்கண்காணிப்பு கோபுரம்என்ற சிறுகதையில் ஒரு காட்டின் கண்காணிப்பு கோபுரத்தில் காவல் தனிமையில் வேலைசெய்யும் அஜய் சிங்கா என்ற சிப்பாய் பற்றிய சித்திரத்தை தந்திருப்பார். சிலிகுரியில் வேலை செய்தவன். மேலதிகாரியின் காலணியை துடைக்க மறுத்ததால் கீழ்ப்படிய மறுத்தவன் என்று சொல்லி தண்டனையாக இங்கு அனுப்பிவிட்டதைச் சொல்லியிருப்பார். படிப்பதற்கு செய்தித்தாள் கூட இல்லாமல் இருக்கும் அந்தக் காட்டில் இருக்கும் சிங்காவுக்கு பேழைய பேப்பர் கடைக்கு சென்று பத்துகிலோ இந்தி செய்தித்தாட்களை அனுப்பி வைப்பதாக இருக்கும் இடம் தண்டனைத் தனிமையின் உக்கிரத்தை சொல்லும். நம்முடைய பார்வையில் பட்டு புத்திக்குள் நுழையாத சில விஷயங்களை இவர் கதைக்களன் ஆக்கிவிடுவது இவரிடம் உள்ள விசேஷம்.

இவருடைய நதியின் கரையில் கட்டுரை ஒன்றில் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் வரும் கர்நாடக மலைப் பகுதியான ஆகும்பே வில் நடந்த ஒன்றை சொல்லி இருப்பார். பலரும் மாலை வேளை நெருங்கி ஆனால் இருள் படரும் முன்பே அந்த மலைப்பகுதிக்கு சென்று சூரியன் மேற்கில் விழும் அழகை காண விரைவார்கள். காட்டுப் பகுதியும் குறைந்த நடமாட்டமும் உள்ள மாலையில் தான் வரும் வண்டியிலேயே ஒரு இளம் ஜோடிகள் உல்லாசமாக சிரித்து வரும் இளமையை ரகசிய நெருக்கத்தை சொல்வார். அஸ்தமனம் பார்க்கும் கூட்டத்தைப் பற்றி சொல்வார். மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுவிடுபவர்களை தேடிக் கண்டு பிடிப்பதையே ஒரு தொழிலாக இருக்கும் ஒரு ஆளைப் பற்றி குறிப்பிட்டு, தான் இருபது நிமிடத்துற்கு முன்பு பார்த்த அந்த ஜோடிகளை தேடி அந்த ஆள் புறப்படுவதாக  சொல்லியிருப்பார். “ஒரு மனிதரும் சில வருஷங்களும்குறுநாவலில் ரங்கசாமி நாய்க்கர் பாத்திரத்தைப் படிக்கையில், முதல்மரியாதை சிவாஜி இதிலிருந்து வந்தவரா என்று தோன்றும்.

சங்கத் தமிழ், நவீனம், நாடகம், நவீன கவிதை, ஐரோப்பிய மேற்கத்திய இலக்கியம், கன்னட இலக்கியம் உட்பட பல்வகை இலக்கியங்களை வாசித்து ருசித்தவர். அதை மிக சுவாரசியமாக பகிர்ந்துகொள்ளக் கூடியவர்.

நவீன சிறுகதை வடிவங்களில் கதையின் உள்ளடக்கம் எப்படி தன்னை விரித்துக் கொள்கிறது என்பதில் உள்ள நுட்பமும், அது வாசகனை உள்ளிழுத்துக் கொள்ளும் விசையும், மணலில் விழும் நீர் உள்ளூறி அதன் ஈரம் உள்ளுக்குள் இருப்பது போன்ற வாசக மனநிலையை உண்டாக்குவதும் முக்கியமானவை. அவ்வகையில் அத்தகு நிறைவை இவருடைய பல கதைகள் தருகின்றன.

அவரைப் போல அவர் எழுத்தா, அவர் எழுத்தைப்போல அவரா எனும்படிக்கு அவரது உலகம் நட்புடன் இழைந்த எளிமையானது. அவரது படைப்புகளைப் படித்துவிட்டு அவரை நேரில் சந்தித்தபோது திகைக்க வைக்கக்கூடிய எளிமையாக அவர் இருந்தார். எவ்வளவு தூரத்தையும் பேசிக்கொண்டே, நடந்தே கடந்துவிடக்கூடியவர். ஆழமாகவும், நிதானமாகவும் யோசித்து அனுபவித்து எழுதவும் பேசவும் கூடியவர். குடியாண்மைப் பணித் தேர்விற்கு முயன்றவர் என்பதிலிருந்தே இவரது அர்ப்பணிப்பு உணர்வு தெரியவரும்.  மட்டுமின்றி, தமிழரான இவர் பெங்களுர் வந்தபிறகு கன்னடத்தை ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டு, இலக்கியங்களைப் படித்து அவற்றின் சாரங்களை தமிழுக்கு மடைமாற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கும் முக்கியமான ஆளுமை.

மூலப்படைப்பாளியாக இருந்துகொண்டும், தாம் படித்தவற்றை கட்டுரைகளாக எழுதுவதில் செலவிடும் நேரத்தை கணக்கிட்டால், இவர் செய்யும் பணியின் முக்கியத்துவத்தை உணரலாம். அவர் தனது படைப்புகளை இறுக்கமான நேரத்தேவைகளுக்கு இடையில் செய்து கொண்டிருந்தாலும் நல்ல புத்தகத்தை படித்த உடன் அது பற்றி பகிர்ந்து கொள்ளும் ஆவல் மதிக்கப்பட வேண்டியது.  உதாரணத்திற்கு உப்புவேலி பற்றி இவர் எழுதிய உடனடிக்கட்டுரைஇப்படி பலவற்றை சொல்லலாம்.

நிகழ் இலக்கிய சமூகத்தில் அவர்மீது படவேண்டிய நியாயமான வெளிச்சம் இன்னும் முழுமையாகப் படவில்லையே  என்ற எனக்கிருக்கும் ஏக்கம் பலருக்கும் இருக்கும் என்றே நம்புகிறேன்.  அதுகுறித்து பற்றற்ற அல்லது வேதாந்த மனநிலை ஒன்று அவருக்கு வாய்த்திருக்கக் கூடும். ஆனால் நாம் அவரது எழுத்துகளைக் குறித்து பேசும் வாய்ப்புகளை இவ்வகைப் பதாகைகள் மூலம் உயர்த்திப் பிடிக்கவேண்டும். அது ஒரு இலக்கிய வாசக சுகம். 

(இந்த கட்டுரையை எழுதி முடித்த பின் பாவண்ணனுக்கு இலக்கியத் திருவிழா விருது கிடைத்திருப்பதாக செய்தி கிடைத்தது. நன்நிமித்தத் துவக்கமாக கொள்வோம். அவரைப் பாராட்டுவோம். )

நல்லோர் பொருட்டு – பாக்குத்தோட்டம் சிறுகதைத் தொகுப்பு பார்வை

paakkuthotam-1

லண்டனில் பனிமூட்டம் நிறைந்த நாள் ஒன்றில் குடும்பத்துடன் ஆலயத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன். நாற்பதடி தொலைவுக்கு மேல் இருந்தவை எல்லாமே பனித்திரையால் மறைக்கப்பட்டிருந்தன. ‘பனி மூட்டத்தில் அருகிலிருப்பவை மட்டும் நம் கண்ணுக்குத் தெரிவதும் தொலைவில் உள்ளவை தெரியாததும் ஏன்’ என என் மகன் கேட்டான். வழக்கம் போலவே என் மகளும் அந்தக் கேள்வியை தனதாக்கி ‘ஆமா ஏன்?’ என்றாள். பனிமூட்டத்தை வலைகள் போன்ற திரைச் சீலைகளுக்கு ஒப்பிட்டு விளக்கினேன். ஒன்றோ இரண்டோ மெல்லிய திரைச்சீலைகள் நம் பார்வையை அதிகம் மறைப்பதில்லை. ஆனால் தூரம் செல்லச் செல்ல பல திரைச் சீலைகள் ஒன்றன்பின் ஒன்றாய் போடப்பட்டிருக்கும்போது அவை வலைபோல துவாரங்கள் உள்ளவையாய் இருந்தாலும் பல அடுக்குகளாய் இருக்கும்போது பார்வையை மறைக்க ஆரம்பிக்கின்றன.

மனிதக் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு குறிப்பாக பல்வேறு வகையான மக்களும் கூடும் இடங்ககளுக்குச் செல்லும் போதும் அந்தத்திரளில் எத்தனை மனித வாழ்க்கைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன எனும் எண்ணம் நமக்கு வந்துபோகும். அங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் பல்லாயிரம் அனுபவங்கள் வழியே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை உள்ளது. நம் அருகே இருக்கும் வாழ்க்கையை நாம் நேரடியாக கவனிக்கிறோம். தொலைவில் உள்ளவற்றை திரைச் சீலைகள் அல்லது பனிமூட்டங்கள் மறைக்கின்றன. நாமே நம்முன் இட்டுக்கொள்ளும் திரைச் சீலைகள். அவரவர் தங்களைச் சுற்றி போட்டுக்கொள்ளும் திரைச்சீலைகள்.  கருத்துக்கள், நம்பிக்கைகள், காலம், தூரம் எனும் பனிமூட்டங்கள் நம் கண்களுக்கு பிறரின் வாழ்கையை மறைத்துக்கொண்டே இருக்கின்றன. தனது “பாக்குத்தோட்டம்” சிறுகதைத் தொகுப்பில் பத்து சிறுகதைகளின் வழியே பனிமூட்டம் மெல்ல விலகும்போது கிடைக்கும் காட்சிகளாக பத்து வாழ்கைகளை, அவற்றின் சில கணங்களை நமக்குக் காணத்தருகிறார் பாவண்ணன்.

சைக்கிளில் கூடைகட்டி கோழி விற்பவரின் மகன், பால் வியாபாரியின் குடும்பம், கல்லைக் குடைந்து தொட்டி செய்பவர், திருக்குறளை திருந்தச் சொல்லும் ஒரு இஸ்திரிக்காரர், அரச இலையில் படம் வரைந்து தெருவில் விற்கும் கலைஞர், மேடை நாடகத்துக்கு ஒளியமைப்பு செய்பவர் என  பல்வேறு வாழ்கைகளை பாக்குத்தோட்டம் தொகுப்பில் காணமுடிகிறது. ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞரின் புகைப்படத் தொகுப்பை திறந்து முகங்களை, நிலக்காட்சிகளை, சூழலை காண்பதைப் போல பாக்குத்தோட்டம் தரும் அனுபவம் அமைந்துள்ளது.

இந்தத் தொகுப்பின் முதல் கதை ‘சைக்கிள்‘. முதல் வாசிப்பில் எளிதாகத் தோன்றும் கதை. சைக்கிளில் கூடை வைத்து கோழிகளை எடுத்துச் சென்று விற்பவர்களின் சித்திரம் எத்தனை பழமையானதாய் இன்று தோன்றுகிறது? அது ஒரு மறைந்தே போன காலத்தின் சித்திரம். அநேகமாய் இருபது வருடங்களுக்கு முந்தையதாய் இருக்கலாம். கோழி விற்பவரின் மகனுக்கும் சைக்கிளுக்கும் ஒரு உறவு அல்லது பகை உள்ளது. அவனால் சைக்கிள் கற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவன் தந்தை வற்புறுத்துகிறார், தெருவில் போட்டு அடிக்கிறார். அவர் தந்தையின் நண்பர் ‘அப்துல்லா மாமா’ அன்பாக சொல்லித் தருகிறார். ஆனாலும் சைக்கிள் கற்றுக்கொள்வதில் ஒரு பிரத்யோகமான சிரமம் அவனுக்கு இருக்கிறது. படிப்பில் கெட்டிக்காரன் அவன். அவனது தந்தை நம் கலாச்சாரத்தின் தேய்வழக்கான பொறுப்பற்ற குடிகார ஓடுகாலி. கதையின் இறுதியில் அப்பா ஓடிப்போகிறார். சைக்கிளை விற்று அவன் படிப்புக்கு பணம் கட்ட உதவுகிறார் அப்துல்லா மாமா. அவனுக்கு பிறர் சைக்கிள் ஓட்டும்போதெல்லாம் ஒரு ஏக்கம் தோன்றுகிறது. கதையின் முடிவில் தெருவில் சைக்கிளில் ஒருவர் மணியடித்துச் செல்லும்போது அவன் முகம் மாறுகிறது. இங்கிருந்து கதையை மீள்வாசிப்புசெய்தால் சைக்கிள் ஒரு குறியீடாக மாறிவிடுகிறது. அது அவன் வாழ்க்கையில் இருந்ததும் இல்லாததுமான தந்தையைச் சுட்டும் ஒன்றாகிறது. அவனது கனவுகளுக்கு எதிரான ஒன்றை சுட்டும் ஒன்றாகிறது. ஒருவன் கோழி வியாபாரி ஆவதற்கும் படித்து பட்டம் பெறுவதற்கும் இடையேயான அசாதாரணமான மெல்லிய வித்தியாசத்தை சைக்கிள் சுட்டிக்காட்டுகிறது.

இரண்டாவது கதை ‘கல்தொட்டி‘  பால் வியாபாரி ஒருவரின் மகன் சொல்லும் கதை. அவன் வீட்டில் அவனும் அவன் தந்தையும் தவிர அனைவரும் பெண்கள். இரண்டு அத்தைகள், ஆயா மற்றும் அம்மா. மாடுகளை பராமரிப்பதும் பால்கறந்து வைப்பதும் பெண்களின் வேலை. அதை மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரம் செய்வது அவன் தந்தையின் தொழில். கதைசொல்லும் சிறுவனுக்கு பால் கணக்கெழுதும் வேலை. அவன் தந்தை கண்டிப்பான மனிதர்.  ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்த ஒருவர் கதையில் நுழைகிறார். அவர் முன்பு வேலைக்கு இருந்த பண்ணையாரின் பிள்ளைகள் பசுவை விற்றுவிட்டு பஸ்ஸை வாங்கி ஓட்டியதால் அவருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. கல்லைக் குடைந்து தொட்டி செய்வது அவரது வேலை. கதையின் துவக்கத்திலேயே கன்றுக்குட்டி மண்தொட்டியை உடைத்துவிட்டதால் கல்தொட்டியின் தேவை இன்றியமையாததாகிறது. கதைசொல்லியின் தந்தை தயக்கத்துடன் ஒப்புக்கொள்ள அந்த மனிதர் அந்த வீட்டின் பின்பக்கத்தில் தங்கி கல்தொட்டி செய்யும் வேலையில் ஈடுபடுகிறார். இறுகிக் கடுமையாகி பயனற்று கிடக்கும் ஒரு கல் மெல்ல மெல்ல உடைந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருளாக, தொட்டியாக மாறி வருவதை அந்தக் குடும்பமே வேடிக்கையுடன் பார்க்கிறது. மெல்ல மெல்ல கல்தொட்டி உருவாகி வரும்போதே சின்னச் சின்ன உரையாடல்கள் வழியே கதைசொல்லி சிறுவனுக்கும் கல்தொட்டி செய்பவருக்கும் நட்பு வளர்கிறது. அவர் தனக்கு கொடுக்கப்பட்ட வேலைக்கும் மேலே சென்று அந்தச் சிறுவன் ‘வெள்ளைக்கார துரைகளைப்போல’ குளிப்பதற்கு ஒரு குளியல் தொட்டியையும் செய்து கொடுக்கிறார். ஆங்கிலத்தில் ‘ஃபீல் குட்’ என அழைக்கப்படும் இதமான கதையின் முடிவில் அந்தத் தொழிலாளி திடீரென பைசல் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகையில் அந்த வீடே உறைந்து நிற்கிறது. சட்டென ஒரு சோகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. ‘கல்தொட்டி’  இந்தத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை. அதன் பாத்திரங்களின் எளிமை வியப்புக்குரியது . கதை முடிகையில் ஏற்படும் சோகம் பிரிவின்பாலா அல்லது ஏழ்மையின்பாலா என்பது வாசகரே கண்டடைய வேண்டியது.

பாக்குத்தோட்டம்‘ எனும் தலைப்புடைய கதை கர்நாடக பாரம்பரிய நிகழ்த்து கலையான யட்சகானத்தை ரசிக்கும் மூவரின் கதை. கதை சொல்லி, அவரது சக ஊழியர் மற்றும் கிராமத்துச் சிறுவன். இம்மூவரையும் இணைக்கும் புள்ளி யட்சகானம். அது கதாகாலட்சேபம் போன்றதொரு கலை. யாராவது ஒருவருக்கு மட்டுமே விடுப்பு அனுமதி என மேலாளர் சொல்ல. கதைசொல்லியை தன் கிராமத்துக்குச் சென்று யட்சகானம் காண வாய்ப்பளிக்கிறார் சக ஊழியர். கதைசொல்லி கிராமத்துக்குச் சென்று நண்பரின் வீட்டிலேயே தங்கி யட்சகானம் காண்கிறார். அங்கே கிராமத்துச் சிறுவர்கள் பொழுதுபோக்காய் யட்சகானத்தை பழகுவதைக் காண்கிறார். அதில் மிக தத்ரூபமாக நடித்த தலைமைச் சிறுவனோடு உரையாடுகிறார். அப்போது அவன் ‘பாக்குத்தோட்டத்தின்’ கதையை சுருங்கச் சொல்கிறான். அவன் ஏழைச் சிறுவன். அவன் ஏழ்மைக்குக் காரணம் பாக்குத்தோட்டம். அதையும் பிற சொத்துக்களையும் அவனது மூதாதை ஒருவர் சூதாட்டத்தில் இழந்துவிடுகிறார். ஒரு குடும்பத்தின் ஏழ்மை இன்னொருவ‌ரின் செல்வம். அந்த இன்னொருவர் தன் சக ஊழியர் என அறியும்போது கதைசொல்லியின் மனம் திடுக்கிடுகிறது. விழாவின் கடைசி நிகழ்வு திரௌபதி வஸ்திராபரணம். அது கதைசொல்லியை மிகுந்த சங்கடத்துக்குள்ளாக்குகிறது. பல நூற்றாண்டுகளாக நம்மிடையே சொல்லப்படும் ஒரு கதை இன்றும் நம்மிடையே காணக் கிடைக்கிறது. அந்த மாபாரதக் கதையின் மாந்தர்களை தன் கண்முன் நேரடியாகக் காண்கிறார். யட்சகானம் காலத்தின் மேடையில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது அதில் அவரும் ஒரு பாத்திரம் என உணர்கிறார்.

பாக்குத்தோட்டம் தொகுப்பில் வரும் கதாபாத்திரங்கள் எளிமையானவர்கள். மைய பாத்திரங்கள் எல்லாமே ஏதோவொரு திக்கற்ற நிலையில் இருப்பவர்கள் மேலும் அவர்களுக்கு மனமுவந்து உதவி புரியும் நல்லவர்கள் அல்லது அவர்கள் மீது பரிவு காட்டுபவர்கள். அப்துல்லா மாமாவில் துவங்கி இங்கலீஷ் சார் வரைக்கும் ஆதரவற்றவர்களுக்கு தன்னலம் பாராமல் உதவுபவர்களின் கதைகளே இத்தொகுப்பிலுள்ளன. அவர்கள் பொருட்டே இக்கதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன எனலாம். மனித மனங்களின் அவலங்களையும் இருண்ட பக்கங்களையும் யதார்த்த வாழ்வின் கொடூரங்களையும் மட்டுமே ஊடகங்கள் வெளிச்சம் காட்டும் இந்நாட்களில் இந்தக் கதைகளை வாசிக்கும்போது அவற்றின் நம்பகத்தன்மை குறித்த அவநம்பிக்கை மிக இயல்பாக எழுகிறது. உண்மையிலேயே இன்றும் தன்னலம் பாராமல் பிறருக்காக மெனக்கெடுபவர்கள் இருக்கிறார்களா? ஆம் என்பதுவே பாவண்ணனின் பதிலாக இருக்கும். பத்தில் எட்டு கதைகள் மானுடம் மீது நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளன. மிக எளிதாக சாதாரண ‘நல்லொழுக்கக்’ கதைகள் என வகைப்படுத்தப்பட தகுதியான இந்தக் கதைகளை பாத்திரப் படைப்பின் மூலமும், காட்சி விவரிப்பின் மூலமும் பாவண்ணன் இலக்கியமாக மாற்றியுள்ளார்.

பாக்குத்தோட்டத்திலேயே நாடகத்தனமாக தோன்றிய கதை ‘பெரியம்மா‘. இதிலும் ஆதரவற்றவர்கள் அவர்களுக்கு உதவுபவர்கள் என்று கதை சென்றாலும் முழுக்க முழுக்க மனிதனின் நன்மைத்தனத்தை மட்டுமே கொண்டு கதைகள் எழுதப்படும்போது அவை சிக்கலற்றவையாக, வாசிக்க சுவாரஸ்யமற்றவையாக மாறிவிடும் சாத்தியம் உள்ளது.  மிகுந்த ஒளியும் குருடாக்குவதுதான்.

பாக்குத்தோட்டம் தொகுப்பில் நான் பெற்றது பல வண்ண வாழ்கைகளின் சித்திரங்கள். அவற்றின் நிதர்சன சிக்கல்கள்.  மனம் சோர்ந்து கைவிடப்படும் சில மனிதர்களின் வாழ்கையில் ஒரு பிடிகிளை கிட்டும் தருணங்களின் விவரிப்புகள். இலக்கியம் என்பது காம குரோத பேதங்களை மட்டுமல்ல அன்பையும், தன்னலமற்ற செயல்களையும்  பேச முடியும் என்பதற்கான ஆதாரங்கள் இந்தக் கதைகள். தேடுபவன் கண்டடைவான் எனும் நம்பிக்கையை விதைக்கும் கதைகள்.

அமெரிக்க அப்பாச்சே செவ்விந்தியர்களின் குடித்தலைவர்களில் பிரசித்தி பெற்றவராகிய ஜெராணிமோவை வெள்ளையர்கள் ஒரு வினோத கண்காட்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அவரும் ஒரு காட்சிப்பொருள் என்பது வேறொரு சுவாரஸ்யம் என்றாலும் அவர் அங்கே இரு துருக்கியர்கள் வாள் சண்டையிடுவதைக் கண்டு வியக்கிறார். தன் வாழ்நாள் முழுக்க தீவிர சண்டைகளை இட்டு பல நூறுபேரைக் கொன்ற ஜெராணிமோவிற்கு அந்தச் சண்டைக் காட்சி வியப்பூட்டுவதாக இருப்பதற்குக் காரணம் அந்த வாள் வீரர்கள் ஒருவர் இன்னொருவரை காயப்படுத்துவதில்லை. அவர்களின் இலக்கு மற்றவரின் தலையை தன் வாளால் தொடுவது மட்டுமே. ஜெராணிமோவிற்கு இரத்தமில்லாத வாள் சண்டை மிக வினோதமானதும் ஆச்சர்யமூட்டுவதுமாயுள்ளது. அதே உணர்வே பாக்குத்தோட்டம் தொகுப்பு எனக்களித்தது. பாவண்ணன் இரத்தமின்றி வாழ்சுழற்றத் தெரிந்த வீரர்.