மேலே சில பறவைகள்
– கால சுப்ரமணியன்
சூரியன் கூட
மேற்கில் மறைந்தான்.
நேரத்தோடு
கூடு நோக்கி
பறந்து சென்றன நாரைகள்.
கீழே
இன்னும் வேலை முடியாத மனிதர்கள்
அக்கம் பக்கம் பார்த்து
(மேலே பார்க்க அவகாசமற்று)
ஆட்கள்
மிருகங்கள்
வாகனங்கள்
இல்லையென்று நிச்சயித்துக் கொண்டு
பாறைகளைப் பிளக்க வெடியை வெடித்தனர்.
சப்த அதிர்ச்சியில்
ஒரு கணம்
அரண்டு
தயங்கிக்
குழம்பிச்
சிதறி
மீண்டும் தன் வழியே வரிசைகொண்டு
சாவகாசமாய்
மிதந்து சென்றன பறவைகள்