சிறப்பிதழ்

பாவண்ணன் சிறப்பிதழ் – பொறுப்பாசிரியர் குறிப்பு

IMG_35890127086157எங்கோ எப்போதோ கேட்டது இது – எழுதும்தோறும் எழுத்தாளன் கனிந்துவிடுகிறான்; படிக்கும்தோறும் வாசகன் அந்த எழுத்தாளராகவே மாறிவிடுகிறான்.  எழுத்து அப்படியேதான் இருக்கிறது போலும். காற்றில் கலந்திருக்கும் மின்காந்த அலைகள் போல ஏதோ ஒரு விதத்தில் கலைஞனும் அவனது கலையும் இணைந்துவிடும் வித்தை நடந்தபடி தான் உள்ளது. அது ஒரு இறுமாப்பு தருணம். அதே சமயம், தான் ஒரு கருவி மட்டுமே எனும் பாதுகாப்பற்ற உணர்வு தொற்றிக்கொள்ளும் நேரம். சிறந்த கலைஞர்களை என்றும் துரத்தும் நிழல்கள் இவை. அவர்களது படைப்பு வாசிக்கப்படுகிறது எனும் எண்ணமே இச்சிறு சலனங்களிலிருந்து விடுபட முதல் வழியாகும். ஊக்கத்துக்கு உதவும் ஒவ்வொரு வழியும் கலைச் செயல்பாடுகளின் முதுகெலும்பாகும்.

எழுத்தாளர் பாவண்ணனுக்கு சிறப்பிதழ் செய்யலாம் எனும் யோசனையை தெரிவித்தபோது மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு செயல்புரியத் தூண்டிய பதாகை ஆசிரியர் குழுவுக்கு நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி.  அச்சிதழில் தகுந்த தளம் அடையப்பெறாதவர்கள் இணையத்தில் தமிழ் புழங்கத்தொடங்கியபோது பேருவகை அடைந்தனர். ஆனால் அவர்களது மகிழ்ச்சியில் மண் விழுந்ததுபோல தமிழ் இணையம் அடையாளமிலிகளின் கூடாரமாக ஆகிப்போனது. தமிழ் தத்துவ மரபின் ஆதி சூத்திரம் போல இருந்தும் இல்லாத நிலை. அதனால்  இலக்கியத்தில் தொடர்ந்து தன் பங்களிப்பை அளித்துவரும் எழுத்தாளருக்காக ஒரு தரமான இணைய இதழ் பல பக்கங்களை ஒதுக்குவது என்பதும் சிறப்பிதழ் வெளியிட தயாராக இருக்கிறது என்பதும் பாறைப் பிளவில் பூவைப்போல அபூர்வ தருணம். இதை சாத்தியமாக்கிய பதாகை இணைய நண்பர்களுக்கு மீண்டும் ஒரு நன்றி.

எங்கள் கோரிக்கை ஏற்று வெளிவரவிருக்கும் பாவண்ணன் எழுதிய புத்தகத்தின் முன்னுரையை எங்களுக்கு அனுப்பிய காலச்சுவடு பதிப்பகத்தாருக்கும் வெளியிட அனுமதியளித்த எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

சிறப்பிதழுக்குத் தேவையானவற்றை நண்பர் சுனில் கிருஷ்ணன் முன்னரே தெரிவித்திருந்தார். சு.வேணுகோபால் சிறப்பிதழின் முன் குறிப்பில் அவர் விரிவாகவே இதைப் பற்றி எழுதியுள்ளார். சிறப்பிதழ் எழுத்தாளருடனான விரிவான நேர்காணல் (இந்த இதழில் அது மடல்காணல்), எழுத்தாளரின் ஆக்கங்கள் பற்றி விரிவான கட்டுரைகள் ஆகிய இரண்டும் கட்டாயம் இருக்க வேண்டும் என்றார். முதலில் எழுத்தாளர் பாவண்ணனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது எவ்விதமான தயக்கமும் இல்லாமல் உடனடியாக தனது சம்மதத்தைத் தெரிவித்ததோடு இன்று வரை நாங்கள் கேட்ட எல்லாவிதமான தகவல்களையும் தந்து ஊக்கப்படுத்தி வந்திருக்கிறார். அவருக்கு பதாகை இணைய இதழ் சார்பில் ஆகப்பெரிய நன்றி.

பதாகை இணைய இதழுக்குத் தொடர்ந்து படைப்புகள் அனுப்பியும் விமர்சனங்கள் சொல்லியும் ஊக்கப்படுத்தும் எழுத்தாளர்களைத் தொடர்பு கொண்டு பாவண்ணன் சிறப்பிதழ் பற்றி சொன்னபோது பலரும் தங்கள் படைப்புகளை உடனடியாக அனுப்பினர். நண்பர்களின் உதவியால் பெரிய அளவு நாங்கள் கோராமலேயே கட்டுரைகள் உடனடியாகக் கிட்டின. எழுத்தாளர் பாவண்ணனின் எழுத்து மீது பிரியம் கொண்ட வாசகர்கள் தாங்களாகவே முன்வந்து நண்பர்களிடம் வாங்கிய கட்டுரைகள் பலதும் இங்கு உள்ளன. அவர்களுக்கு எங்கள் உள்ளம் நெகிழ்ந்த நன்றிகள் பல.

மூத்த எழுத்தாளர் விட்டல் ராவ் அவர்கள் இந்த சிறப்பிதழ் பற்றி கேள்விப்பட்ட எழுத்தாளர் பாவண்ணன் மீதிருக்கும் அன்பால் உடனடியாகக் கட்டுரை அனுப்பிவிட்டார். அவரது அன்பிற்கும் ஆசிகளுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அதே போல திருஞானசம்பந்தம் அவரது தனிச் சேகரிப்பில் இருந்த அற்புதமானப் புகைப்படங்களை நாங்கள் கேட்காமலேயே எங்களோடு பகிர்ந்துகொண்டதும் நெகிழ்ச்சியான தருணம். இத்தனை நண்பர்கள் ஊர்கூடி இந்த சிறப்பிதழை நடத்தியுள்ளதை எண்ணி மனம் பூரிப்படையாமல் இருக்க முடியவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகியிருக்க வேண்டிய இந்த சிறப்பிதழ் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு ஒரு மாதம் தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து பத்து நாட்கள் மழையிலும், ஏரிகள் உடைந்து வீட்டுக்குள் புகுந்த நீரின் சேதங்களினாலும் திண்டாடிப்போன சென்னை, கடலூர் பகுதிகளின் பாதிப்பிலிருந்து மீட்பதற்காக தங்கள் நலனையும் பாராது உழைத்த இதயங்கள் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளையும் பதாகை இணைய இதழ் சார்பாகத் தெரிவிக்கிறோம்.

முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுத்திலும் வாசிப்பிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதோடு மட்டுமல்லாது எப்போதும் புது எழுத்தாளர்களின் அறிமுக எழுத்தையும் படித்து ஊக்குவிப்பதில் முதன்மையாகச் செயலாற்றும் எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கு வாசக நன்றியாக இந்த இதழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செய்நேர்த்தியில் பங்கு கொண்ட அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

கந்தோபாவையும் ஜெஜூரியையும் பற்றி முப்பத்தாறு குறிப்புகள்: அருண் கொலாட்கரின் ஜெஜூரியை முன்வைத்து

வேணுகோபால் தயாநிதி

1. குலசாமியின் ஆங்கிலப் பிதற்றல்கள்

“A great age of literature, is perhaps always a great age of translations; or follows it“
-Ezra Pound, 1917

கல்லூரி நாட்களில் ஆங்கிலத்துறையின் சேகரத்திலிருந்து தட்டச்சுப்பிரதியாக வாசித்திருந்த யஷ்வந்த்ராவ், பூசாரி, கிழவி, தாழ்ந்த கோயில் ஆகிய கவிதைகள் மெல்லிய கோட்டுருவம் போல  நினைவில் இருந்தன. ஜெஜூரியின் கவிதைகள் பற்றி ஒரு ஆங்கிலப் பேராசிரியர் எழுதியிருந்த கட்டுரை ஒன்றையும் வாசித்தநினைவு.  ஆனால் சமீபத்தில் மீண்டும் வாசிக்கும் வரை இக்கவிதைகளை விடவும் கொலாட்கரின் பெயரை என் நினைவில் நிறுத்தியிருந்தது ஏதோவொரு ஆங்கில இதழிலோ நாளேட்டிலோ பார்த்திருந்த அவரின் புகைப்படம் என்பது ஆச்சரியம்.  

08fe9-arunkolatkar2b2528madhu2bkapparath2529பிரியமானதொரு பாசப்பிராணியைப்போல கணிசமான இடத்தை உரிமையுடன் எடுத்துக்கொண்டு, நான்கு மணிக்கும் சற்று தாண்டி விட்ட நேரத்தை   காட்டிக்கொண்டிருக்கும் புராதன இங்கிலாந்தை நினைவுறுத்தும் பாணியிலான சுவர்க்கடிகாரம். தனக்கு இணக்கமான ஒன்றில் ஆழமான சந்தேகத்தை கண்டறிந்தபின் அதன் காரணத்தை பரிசீலனை செய்பவரைப்போல, ஏதோ ஒரு காரணத்தால் அதை வெளிப்படுத்த முன்வரமுடியாதவரைப் போல, கைகளை கோர்த்துக் கொண்டும், தயக்கமான பார்வையுடனும், கரிய ஆடையில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேநீர் கோப்பைகள் சூழ்ந்த மேசையில் அவர் அமந்திருக்கும் படம். 

மேற்கத்திய பாணியின் நவீனம், கறாறான துல்லியம், எதற்கும் விட்டுக்கொடுக்காத சமரசமின்மை, அப்படி ஒரு கொள்கை நிலைப்பாட்டையும், அப்படி ஒரு கொள்கை நிலைப்பாட்டிற்கான அவசியத்தையும் வலியுறுத்திக் கொண்டிருக்கும் எளிமை. ஒருவகையில் அந்த கடிகாரத்தையே ஒரு குறீயீடாக்கி இதைப் போன்றதுதான் தன் ஆளுமை என எதிர்காலத்துக்கு நினைவுறுத்த அவர் எண்ணியிருப்பாரோ, என்று நினைக்கத் தூண்டும்படியான படம். மும்பை காலா கோடாவின் வேசைட்இன் உணவகத்தில் 1995ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்று பிறிதொரு நாளில் அறிய நேர்ந்தது.

இந்தியர்கள் ஆங்கிலத்தில் கவிதைகள் புனைய ஆரம்பித்து நூற்றாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. என்றாலும் இந்திய ஆங்கிலக் கவிதைகளின் வடிவங்கள் தமிழில் அநேகமாக இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

தாகூரின் கீதாஞ்சலி நோபல் பரிசு பெற்று நூறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்றும் கூட அதை தமிழ்க்கவிதைகளின் மீது ஆதிக்கம் செலுத்துகிற அல்லது ஆதிக்கம் செலுத்திய ஒரு படைப்பாக சொல்ல முடியுமா என்பது சந்தேகமே. வேற்று மொழிப்படைப்புகளுள் குறிப்பிடும்படி தேர்ச்சியுடைய என் தலைமுறை வாசகர்களுள் பெரும்பாலானோர் கீதாஞ்சலியை வாசித்வர்கள் அல்ல என்பது மட்டுமல்ல. ஷேக்ஸ்பியர், வோர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, ராபர்ட் பிரவ்னிங் ஸில்வியா பிளாத் அளவுக்குக்கூட சமகால தமிழ் இலக்கிய உலகுக்குள் தாகூர் பிரபலமாகாதது, வாசிக்கப்படாதது ஏன் என்பதும் ஆய்வுக்குரியது (கீதாஞ்சலியின் இலக்கிய இடம் என்ன என்பது அதனளவில் வேறொரு தனி விவாதம்).

இந்நிலையில், மராத்திய கவிஞர் கொலாட்கர் பற்றி தமிழில் எழுதப்பட்டது மிகவும் சொற்பமே என்பது ஆச்சரியமான விஷயமல்ல. பனிவிழும் டிசம்பர் மாலை ஒன்றில், தில்லியின் இந்தியா இண்டர்நேஷனல் செண்டரில் சந்தித்தது பற்றி கவிஞர் சுகுமாரன் எழுதியுள்ள கட்டுரை, ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டுமணிநேர சந்திப்பை மையமாகக் கொண்டு கெளரி ராம்நாரயணன் எழுதிய கருப்புக் குதிரை நாடகம் பார்த்ததைப்பற்றி இரா. முருகன் திண்ணையில் எழுதியதுமான கட்டுரை. என் ஒட்டு மொத்த வாசிப்பிற்கு எட்டியவரை தமிழில் கிடைப்பவை, இவை மட்டுமே.

ஒப்பீனியன் லிட்டரரி குவார்ட்டரியில் 1954 ஆம் ஆண்டு வெளியாகி பரவலாக கவனம் பெற்றது ஜெஜூரி. மரபுக்கவிதையின் சம்பிரதாயமான அலங்காரங்களை நிராகரித்தும், விரித்துச் சொல்லும்படி சிறப்பான ரகசியங்கள் ஏதுமற்றும், நேரடியான நடையில் எழுதப்பட்ட வெளிப்படையான கவிதைகள் என்ற அடிப்படையிலும், ஆங்கில உலகில் பரவலாக விவாதிக்கபட்ட படைப்பு என்றவகையிலும், இவைகளைப்பற்றி புதிதாக சொல்ல அநேகமாக ஏதுமில்லை. எஸ். கே. தேசாய், அக்சய் தோத், ரவீந்ர கிம்பஹ்னே, எம்.கே. நாயக், பாலச்சந்ர நெமெடே, சுபங்கி ராய்கர், அம்ரஜீட் நாயக், பூர்ணிமா, பார்த்தசாரதி தொடங்கி புரூஸ் கிங், எம்மா  பேர்ட்,   அஞ்சலி நெர்லேகர்,  லெட்டிஷியா ஜெக்கினி வரையிலான ஆய்வாளர்கள் பலரும் எழுதியுள்ள விவாதங்கள் ஜெஜுரியின் அளவை ஒப்பிட பல மடங்குகள் அதிகம், என்பதேகூட இதன் ஆகிருதிக்கு ஒரு சான்று.

சில முன்முடிவுகளோடுதான் இக்கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். வழமை போல அடிக்குறிப்புகள், பின் இணைப்புகள், நூற்பட்டியல்கள் ஆகியவை இல்லாமல் எழுதவேண்டும் என்பது அவற்றுள் முக்கியமானது. பிரான்ஸிலிருந்து இந்தியாவுக்கு வந்து கொலாட்கரின் சுற்றத்துடன் தங்கியிருந்து உரையாடி அவரின் ஒட்டுமொத்த கவிதைகள், கடிதங்கள், நாட்குறிப்புகள், கைப்பிரதிகள் ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து லெட்டிஷியா ஜக்கீனி எழுதிய நவீனத்துவத்தை வரலாற்றுப்படுத்துதல், அருண் கொலாட்கரும் இந்தியாவின் இலக்கிய நவீனத்துவமும் (Bloomsbury publishers, London), சுபாங்கி ராய்க்கர் தொகுத்த ஜெஜூரிவிமர்சனமும் பார்வைகளும் (Prachet Publications, Pune) ஆகிய இருநூல்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

2. அறுவை மேசையில் மல்லாந்திருக்கும் கவிஞன்

தான் பிறந்து வளர்ந்த மண், சூழல், அதன் கடவுள், கோயில், வைதீகங்கள், சம்பிரதாயமான சடங்குகள் இவற்றிலிருந்து விலகி அந்நியமாகி நிற்பது கொலாட்கரின் குரல். தன்னுடையதை எட்டுக்கை அம்மன் குடிகொண்டுள்ள தாழ்ந்த கோயிலின் பூசாரிக்கு கையளித்துவிட்டபடியால் தன் சகோதரர் மகரந்திடம் தீப்பெட்டியை இரவல் வாங்கிக்கொண்டு, கோயிலுக்கு வெளியே சென்று சார்மினார் சிகரெட்டை பற்ற வைப்பது போல இயல்பானது இந்த விலகல். புனிதப் பயணமாக, பிரார்த்தனை செய்பவராக அல்லாமல் சும்மா சுற்றிப் பார்ப்பவராக தன்னை நிறுத்திக்கொள்ளும் கவிஞர், காட்சிகளையும் நிகழ்வுகளையும் ஒரு எளிய அவதானமாக ஏற்றுக்கொண்டு, அனுபவமிக்க பயணியைப்போல நிதானத்துடன் புன்னகைத்தபடி கடந்துசெல்கிறார்.

தர்க்கம், பகுத்தறிவு ஆகிய விசைகளின் வழி இயங்கும் இதன் கவித்துவம் அதன் இயல்பான கருவிகளாக பூடகமான அங்கதம், சற்று கசப்பேறிய வெளிப்படையான கேலி, நுட்ப வர்ணனைகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டுள்ளது. மேலோட்டமாகப் பார்க்கையில் தீவிரமான பகுத்தறிவுவையும், நாத்திக வாதத்தையும் முன்னெடுப்பது போன்ற தொனி தென்பட்டாலும் இக்கவிதைகளை ஆழமாக புரிந்துகொள்ள, இவற்றை எழுதிய காலகட்டத்தில் இதன் கவிஞன் எதிர்கொண்டிருந்த இருத்தலியல் நெருக்கடிகளையும் கொந்தளிப்பான வாழ்க்கையின் பின்ணணியையும் அறிந்துகொள்வது அவசியமானது.

தன் தந்தையாரின் எதிர்ப்புக்கும் வருத்தத்திற்கும் எதிராக ஜெ.ஜெ ஓவியக்கல்லூரியின் படிப்பை கைவிட்டு தன் ஓவியத் திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து, கலைக்காக வாழ்க்கையை தழுவும் பொஹீமிய லட்சியவாதத்துடன் வாழ்க்கை நடத்த முயன்ற கொலாட்கர், நவீன ஓவியங்களுக்கு ஆதரவாளர்களோ சந்தையோ இல்லாத நிலையில் வாழ்வாதாரத்தின் தேவைகளை ஈடுகட்ட முடியாமல் 1953ஆம் ஆண்டு வாக்கில் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளானார். நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட வீடுகளிலும் வாடகைக்கு எடுத்த ஒற்றை அறைகளிலும் அவர் அரைப்பட்டினியில் நாள்களைக் கடத்திக்கொண்டிருந்த காலம் அது.

பெரும்பாலும் மும்பையின் புறநகர் பகுதிகளில் வாழ்ந்தாலும் இரண்டு ஆண்டுகள் சென்னையிலும் குடியிருந்தார். அலுவலக பணியாளனாகவும், தந்தி அலுவலக உதவியாளராகவும்,  மரத்தாலான விளையாட்டு சமான்கள், களிமண் பத்திரங்களுக்கு வண்ணம் தீட்டுபவராகவும் பல்வேறு சிறிய உத்தியோகங்களை ஏற்றுக் கொள்பவராகவும் இருந்தார். பழைய செய்தித்தாள்களை சேகரித்து விற்று அதை வைத்து திரையரங்குகளுக்கு செல்வதே அவரின் முக்கிய பொழுதுபோக்காக இருந்தது.  இந்திலையில் மும்பையை விட்டு வெளியேறி அம்பாதாஸ் என்ற ஓவிய நண்பருடன் மேற்கு மகாராஷ்டிராவில் அலைந்து திரிந்து இரண்டு மாத நடைப்பயணம் மேற்கொண்டு தன் தனிவாழ்க்கையை மையமாக்கி அவர் எழுதிய பயணக்கவிதைகளுள் ஒன்றான,

கல்யாண் நக்குவதற்கு
ஒரு வெல்லக்கட்டி கொடுத்தது
அருவி கொண்ட பெயரில்லா
கிராமம் ஒன்று
என் போர்வையை வாங்கிக்கொண்டு
வெறும் தண்ணீரில் விருந்தளித்தது
பின் அரசிலை படிந்த பற்களோடு
நாசிக் வந்தடைந்து
ரொட்டியும் கொத்துக்கறியும் வாங்க
என் துக்காராமை விற்று விட்டேன்.
-(வந்ததும் போனதும், துக்காராம்)

மற்றும் மேற்கத்திய இசை கற்றுக்கொண்டு அவரே இயற்றிப் பாடியநான் ஒரு ஏழை, ஏழையின் ஊரிலிருந்து வருகிறேன்என்ற ஆங்கிலப்பாடல், ஆகியவற்றின் வழி கவியின் ஆளுமையை  கற்பனை செய்ய முயலும்போது, இங்கிலாந்தை நினைவுறுத்தும் பாணியிலான கடிகரத்தின் முன் அமர்ந்திருக்கும் கொலட்கரின் உருவத்துடன், ஏதோ ஒரு துயரச் சம்பவத்தின் கசப்பை எண்ணிக்கொண்டு, அதற்கு பொறுப்பாளியாக எதிரே நிற்பவரை அடையாளங்கண்டு விட்டது போன்ற பார்வையுடன் புராதான கட்டிடம் ஒன்றின் உயரத்தில் அமர்ந்திருக்கும் விக்கிரமாதித்யனின் சாயலும் படிந்துவிட, ஒரு வகையில் எனக்கும் என் குலதெய்வத்திற்குமான வழக்கு என்ற தலைப்பு கூட இத்தொகுதிக்கு பொருந்துகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

கூடவே, விக்கிரமாதித்யனின் கீழ்க்கண்ட வரிகளும் நினைவுக்கு வருகின்றன

vikramadityanமாமிசம் தின்னாமல்
சுருட்டுப் பிடிக்காமல்
பட்டை யடிக்காமல்
படையல் கேட்காமல்
உக்ரம் கொண்டு
சன்னதம் வந்தாடும்
துடியான கருப்பசாமி
இடையில் நெடுங்காலம்
கொடைவராதது பொறாமல்
பதினெட்டாம்படி விட்டிறங்கி
ஊர்ஊராகச் சுற்றியலைந்து
மனிதரும் வாழ்க்கையும்
உலகமும் கண்டு தேறி
அமைதி கவிய
திரும்பி வந்தமரும்.

***

பள்ளியில் ஆங்கிலம் கற்றாலும் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தில் மராத்தி மட்டுமே பேசி வளர்ந்து பதினாறு வயதுக்கு மேல் தான் முறையாக ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார் கொலாட்கர். ஆகவே அதற்கு முந்தைய இளம் பிராயத்தில் அவர் வாசிப்பின் பின்புலம் எவ்விதமாக இருந்திருக்கும் என்றறிய நான் ஆர்வம் கொண்டதுண்டு.

பணி நிமித்தமாக இங்கிலாந்து சென்று திரும்பும்போது தன் தகப்பனார் தாத்யா கொலாட்கர் கொண்டு வந்திருந்த புத்தகங்களுள்,  ஆக்ஸ்போர்ட் நவீனக்கவிதைகள் தொகுப்பை (The Oxford Book of Modern Verse) குறிப்பிடும் கொலாட்கர் இப்படிச்சொல்கிறார். 

அவ்வப்போது அப்பாவின் அலமாரியில் இருந்து எடுத்து தூசுதட்டி மீண்டும் அலமாரியில் வைக்கும் பல புத்தகங்களுள் ஒன்றாக அது இருந்தது.  ஏறக்குறைய வீட்டிலிருந்த கடவுள் விக்கிரங்களுக்கு நடக்கும் சடங்கைப்போன்றது அது. எனக்கு மிகவும் பிடித்தமான அப்புத்தகம் பிறகு வழிபடும் புத்தகமாகவும் ஆனது. அதில் W.H. ஆடன், W.B. யேட்ஸ், T.S. எலியட், G.M. ஹாப்கின்ஸ் ஆகியோரின் கவிதைகள் இருந்தன. அதெல்லாம் கவிதைகள் என்பதே எனக்குத் தெரியாது. ஆனால் அவை விஷம் போன்றவை. நான் பார்தவற்றிலேயே ஒரு பக்கத்திற்கு மிகச்சில சொற்களே அச்சிடப்பட்ட புத்தகம் அது மட்டுந்தான். ஆகவே அச்சொற்கள் மிகவும் முக்கியமானவையாக இருக்கவேண்டும் என்பது எனக்கே கூட (அந்த வயதில்) தெரிந்திருந்தது.

vikramadityanமராத்தியிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதியதுடன் எழுபதுகளின் மேற்கத்திய ராக் அன் ரோல் வகை இசையின் மீதும் பீட்டில்ஸ், எல்விஸ் பிரஸ்லி ஆகியோரின் இசையில் விருப்பம் கொண்டவராகவும் ஆகி ஏறக்குறைய பாப் டிலனையோ அல்லது பிரான்ங்க் ஸாப்பாவையோ ஒத்த தோற்றம் கொண்டவராக மாறியிருந்தார். 1977 ஆம் ஆண்டில் டெபோனாயர் பத்திரிக்கையில் அவரை பேட்டி கண்ட டேரில் டிமாண்டெ கொலாட்கரைப்பற்றி கூறுகையில்: பரட்டை தலையுடனும் முரட்டு கோட்டுடனும் வந்திருந்த அவரைப்பார்க்க பத்திரிகையில் வந்த கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த புரட்சியாளரைப்போல இருந்தார். அவரை மராத்தியிலும் ஆங்கிலத்திலும் நிறுவிக்கொண்ட கவிஞர் என்று சொல்வது சிரமம். நீளமான தாடியுடனும் தொங்கு மீசையிலும் பார்க்க கலிபோர்னியாவின் ஒரு லூசுத்தனமான நடுவயது ஹிப்பியைபோல இருந்ததுஎன்கிறார்.

விளம்பரத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர் என்றாலும் மக்கள் கூட்டத்தின் முன் நின்று பேசுவது பற்றி அவருக்கு இருக்கும் அசௌகர்யமும், சம்பிரதாயமான கூடுகைகள், அரங்கங்கள் மீது அவருக்கிருந்த விலக்கமும் அவர் கவிதையின் குரலுக்கு நெருக்கமானவை.  1989ஆம் ஆண்டு போபாலில் நடந்த உலக கவிதை விழாவில் ஆங்கில கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான டேனியல் வெய்ஸ்பாரின் வேண்டுகோளை நிராகரித்து, இலக்கியம் பற்றி பேசவிரும்பாத தன் இயலாமையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபின், கவிதைக்கு குறிப்புகள் அறிமுகம் அல்லது எவ்வகையான விளக்கமும் தர மறுத்து, ‘என் வேலை எழுதுவது மட்டுமே, பூசி மெழுகுவது அல்லஎன்றார். கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து, மேலும் இரண்டு கவிதைகள் வாசிக்கிறேன் அல்லது வேறு யாரையாவது பதிலளிக்க சொல்கிறேன் என்று எதிர்வினையாற்றினார். எனக்குத்தெரிந்த ஒரே பதில் சொல்லும் முறை கவிதை எழுதுவது மட்டுமே. என்னைப்போன்ற எதையும் சொல்ல மறுப்பவர்கள் தேவைப்படும் கருத்தரங்குகள் எங்காவது நிச்சயம் இருக்கும், என்று தன் நாட்குறிப்பிலும் எழுதுகிறார்

அவரின் தனிவாழ்க்கையின் பின்ணனியில் வைத்துப்பார்த்தால்என் மண்ணை விட்டு வெளியேறியவன், நான் தேசமில்லா குடிமகன்என்ற துக்காராமில் வரும் வரிகளையே அவரின் சுயபிரகடனமாக எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. அந்நியமாதலை பாடுபொருளாகக் கொண்ட கவிதைகளில் மிகுந்து வரும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளோ ஆவேசமோ, வலியோ வேதனையோ ஆற்றாமையோ துயரமோ காணக்கிடைப்பதில்லை என்பது இக்கவிதைகளை தனிப்படுத்திக் காட்டுவது. பிற்காலத்தில் மும்பையின் உயர் நடுத்தரவகுப்பு வாழ்க்கையில் இருந்தபோதும் தொலைபேசி கூட வைத்துக்கொள்ளவேண்டாம் என்று முடிவெடுத்துவிட்ட தனிமை விரும்பி என்று அவரைப்பற்றி வாசித்தபோது ஆச்சரியம் ஏதும் ஏற்படவில்லை. இக்கவிதைகளில் ஊடாடி நிற்கும் கதைசொல்லியின் மனநிலை அதுதானே?

***

கிழவி என்ற தலைப்பிலான கீழ்க்கண்ட கவிதையையே இத்தொகுதியில் ஓடும் இழையோடும் உணர்வு நிலையின் மைய ஊற்றாக சொல்லலாம்.

கிழவியொருத்தி
உங்கள் சட்டையை பிடித்துக்கொண்டு
கூடவே வருகிறாள்.
ஐம்பது பைசா கொடுத்தால்
குதிரைலாட கோயிலுக்கு
கூட்டிப்போவேன் என்கிறாள்.
நீங்கள் ஏற்கனவே பார்த்ததுதான்
என்றாலும்
இடறிக்கொண்டு
பிடியை இறுக்கி
கூடவே வருகிறாள்.
கேலிக்கூத்தை நிறுத்த
அவளை எதிர்கொள்ளுகையில்,

என்னைப் போன்ற கிழவியொருத்தி, இந்தப்பாழும் மலைக்காட்டில், வேறு என்னதான் செய்யமுடியும்? என்று வயதாகி கிழவியானது மட்டும்தான் தன் பிரச்சினை, என்பதைப்போல அவள் கேட்கும் இடம் நுட்பமானது. இந்தக் கேள்வியை பின் தொடர்ந்து செல்வது படைப்பாளியின் மனோதர்மத்தை புரிந்து கொள்ள அவசியமானது.

அவள் கிழவியாக இல்லாமல் இருந்தபோது முரளி என அழைக்கப்படும் கோயிலின் தேவதாசியாகவும் விபச்சாரியாகவும் இருந்திருப்பதற்கான முகாந்திரத்தை யூகித்து, அவளை இது போல நிலைக்கு ஆளாக்கி கைவிட்டுவிட்ட சமூக ஏற்புடமைகள், ஆச்சாரங்கள், புராதான நம்பிக்கைளுக்கு எதிராக வெகுண்டெழும் கவிஞன், ஏதோ ஒரு வகையில் தன்னையும் குற்றவாளியாக உணரரும் கணத்தின் இயலாமையில் கிழவியின் கேள்விக்கு பதிலளிக்க திராணியில்லதவனாக நிற்கிறான். பெற்றோர்களால் கந்தோபாவின் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆணாக இருந்திருந்தால், ’புலிஎன்றழைக்கப்பட்டு (வாக்யா எனும் சொல்லுக்கு மராத்தியில் அப்படியும் ஒரு பொருள் உண்டு) கந்தோபாவின் வழிபாட்டுக்கு அத்தியாவசியமான மஞ்சள்பொடியை புலித்தோலால் செய்யப்பட்ட பையில் வைத்துக்கொண்டு கோயிலுக்காக எண்ணெயை யாசகம் கேட்டுக்கொண்டிருந்திருப்பான்.

அவள் முகத்தில் தோன்றி
நரம்புகளைத் தாண்டி
உடலெங்கும் ஓடும்
விரிசல்களை பார்க்கையில்
மலைகள் சரிகின்றன
கோயில்கள் சரிகின்றன
வானமே இறங்கி வருகிறது
தனித்து நிற்கும் கூனியின்
உடையாத உறுதியில்
கண்ணாடித் தட்டைப்போல
கலகலத்து
இறுதியில்
அவள் கையில் வைக்கப்படும்
ஒரு சிறு நாணயமாக
சுருங்கி விடுகிறீர்கள்.

என்ற காட்சியில் கிழவியின் தட்டில் கையளிக்கப்படும் சிறு நாணயமாக சுருங்கிவிடுவது கவிஞன் மட்டுமல்ல. கிழவியின் நிலைக்கு ஏதோ ஒரு வகையில் காரணமான சமூக ஏற்புடமைகள், ஆச்சாரங்கள், புராதான நம்பிக்கைகள் ஆகியவையும்தான் என்பதை புரிந்துகொண்டால், இதன் கையறு நிலையில் கவிஞன் கொள்ளும் ஆற்றாமையையும் அதை வெளிப்படுத்த அவன் கண்டடையும் அங்கதத்தையும் நுண்ணிய கசப்பையும் புரிந்துகொள்ள முடியும். ஜெஜூரியின் வைதீகங்கள் மீது கவிஞனுள் ஏற்பட்ட கசப்பு நையாண்டியாக மாறி, கோயிலை விட்டு, ஜெஜூரி நகரையும் தாண்டி ரயில் நிலையத்துக்கு வந்த பின்னும் நீடித்து,

புனிதப் பாத்திரங்களைக் கழுவும்
திருப்பணிக்கு திரும்புகிறான்
கோப்பை தட்டுக்களை கழுவுதல்
இவற்றுடன் தொடர்புடைய
இன்ன பிற சடங்குகளை
தொடர்ந்தபடி.
கடிகாரத்தின் முன்
ஒரு கிடா வெட்டலாம்
தண்டவாளத்தின் மேல்
தேங்காய் உடைக்கலாம்
கைகாட்டிக்கு சேவலின் இரத்தம் படைக்கலாம்
ஸ்டேஷன் மாஸ்டருக்கு பாலாபிஷேகமும்
முன்பதிவு செய்யும்
குமாஸ்தாவுக்கு
தங்கத்தில் ஒரு ரயில் சிலையும் தர
சத்தியம் செய்யலாம்

என்று தேநீர் நிலையத்து கத்துக்குட்டியையும் ரயில் நிலையத்தையும் வர்ணிக்கும்போது கூட அவனுள் எஞ்சி நின்று விடுவதையும் காணலாம். சிதிலமடைந்த கோயில், சரிந்த கூரையின் கருவூலம், வண்டல் மண்ணை மட்டுமே கொண்ட நீர்த்தேக்கம், நீரின்றி வரண்ட குடிநீர்க் குழாய், இளம் வயதில் கந்தோபாவின் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்டு வயதுவந்தபின் விபச்சாரியாக மாறும் கோயிலின் பெண் தாசிகள் (முர்ளி) யாசகர்களாக மாறும் ஆண் சேவகர்கள் (வாக்யா), என பாடுபொருள்கள் எல்லாவற்றின் மீதும் வலைபோல பின்னி இக்கைவிதைகள் அனைத்தையும் கோர்க்கும் நுண்ணிய இழையாகவும் செயல்படுவது கவிஞனின் இந்த நுண்ணிய கசப்புதான். கடந்து, ஞானயோகியாக நின்று சடங்குகளையும் வழிபாடுகளையும் சற்று எகத்தாளத்துடன் பார்க்கும் முதிர்ந்த ஒரு வேதாந்தியின் கேலியும் கூடத்தான் அது

பலவித எண்ணங்களாலும் அலைக்கழிக்கப்பட்டு ஆயாசத்துடனும் குழப்பத்துடனும் கனவில் நடப்பதைப்போல கோயிலை விட்டு வெளியேறி வரும்போது மரபான நம்பிக்கைக்கும் முற்போக்கு எண்ணங்களுக்கும் இடையில் அகப்பட்டு நிற்கும் நிலையை,

ஜெஜூரி ஒருபுறம்
ரயில் நிலையம் மறுபுறம்
வழியில் இரண்டுக்கும் நடுவே வந்தபின்
கனவில் இருப்பது போல.
செய்வதறியாது
நிற்க வேண்டியதுதான்.
இருபுறமும் தட்டுகள் சமநிலைப்பட்டபின்

என்கிறார். இருபக்கமும் தட்டுகள் சமநிலைப்பட்டபின், ஏற்கவும் இழக்கவும் முடியாமல், அசையாமல் நிற்கும் முள்ளாகி என கவிஞர் இங்கு குறிப்பிடுவது உண்மையில் எது?  அவர் குறிப்பிடும் இரு தட்டுகள் என்னென்ன? ஒரு தேங்காய், பாக்கெட்டில் பூசாரி ஒருவரின் முகவரி அட்டை, மற்றும் தலைக்குள் இடிக்கும் சில கேள்விகளுடனும் நிற்கும் ஊசலாட்டத்தை, குழப்பத்தை அஞ்சித்தான், ரயில் நிலையம் வரும் வழியில் தானியம் எடுத்த அலகுடன் கோழிகளும் சேவல்களும் ஆடும் நடனத்தை பார்த்துக்கொண்டு நிற்கும்படி கவிஞனின் மனம் தன்னைத்தானே மடை மாற்றிக் கொள்கிறதா

உறுமிக்கொண்டு சரியும் சாலை, பூனையைப்போல/ புன்னகைத்து/ யாத்ரீகனை/ உயிரோடு உண்ணும் பற்களுடன், ஆகிய வரிகளில் இடம் மாறிய வர்ணனையாக சுட்டப்பெறும் பேருந்தையும் பூசாரியையும் போலவே, கண்ணாடியின் ஜோடியில் பிளக்கப்பட்ட முகம் என்ற வரியில் குறிப்பிடப்படும் பிளவு கவிஞரின் தத்துவ நிலைப்பாட்டின் பிளவும்தான் என்றும், இரண்டு தலைகொண்ட நிலைய அதிகாரி, கடவுள் எது/ கல் எது/ என்று பிரிக்கும் கோடு/ மிகவும் மெல்லியதுஆகிய பிரயோகங்கள் இடம் மாறிய வர்ணனைகள் என்றும் ஏன் சொல்லக்கூடாது?

மேற்கத்திய நாகரிகத்தின் வழி சிந்திக்கின்ற ஆனால் நாத்திகன் என்று முற்றிலும் வரையறுத்துவிட முடியாத முற்போக்கு நகரவாசியின் மனநிலைக்கும், பாரம்பரியமான மரபின் நம்பிக்கைக்கும் இடையேயான உரையாடலாகவும் இத்தொகுதியை கூற இயலும். பக்திக்கும் பகுத்தறிவுக்கும் இடையே கறுப்பு வெள்ளை என அறுதியிட்டு வரையறுத்து சொல்ல முடியாதபடிக்கு இருந்திருக்க முடியும் என்றுதான் கவிஞரின் மனநிலையை சொல்லத் தோன்றுகிறது. இந்தியன் லிட்டரரி ரிவ்யூ நேர்முகத்தின் போது (1978) நீங்கள் கடவுளை நம்புபவரா? என்ற கேள்விக்கு, நான் அந்தக்கேள்வியை எனக்குள் கேட்டுக்கொள்வதில்லை. கடவுள் நம்பிக்கை பற்றி இந்தப்பக்கமோ அந்தப்பக்கமோ நிலைப்பாடு எடுக்க வேண்டியதன் கட்டாயம் எனக்கு இல்லை, என்ற கவிஞரின் பதிலுமே கூட இக்கூற்றுக்கு மேலும் வலுச் சேர்ப்பது.

3. படிகத்தின் நீரோட்டம் 

”கவிதை வாசிப்பது என்பது கண்களால் கேட்பது;
கவிதை கேட்பது என்பது காதுகளால் காண்பது” (ஆக்டோவியா பாஸ், 1967)

முன்னோடிக் கவிஞரான பி, மார்த்தேக்கர் போலவே மராத்தியின் முக்கியமானவராக கருதப்படுபவர் கொலாட்கர். ஆனால் அதுவரையிலான அவரின் மராத்தியக் கவிதைகள் அப்படியொன்றும் பிரமாதமானவை அல்ல. டி.எஸ். எலியட்டுக்கு பாழ் நிலத்தைப்போல கொலாட்கருக்கு ஜெஜுரி, என்று வைத்துக்கொண்டால் பாழ் நிலத்தின் முந்தைய கவிதைகளின் காணமுடியும் அதன் சாத்தியத்தைப்போல கொலாட்கரின் மராத்தியக் கவிதைகளிலும் ஜெஜூரியின் சாத்தியங்களை காண முடியும் என்று எஸ். கே தேசாய் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

முதல் முறையாக கொலாட்கர் ஜெஜுரிக்கு சென்து 1963 ஆம் ஆண்டில், தன் நண்பரும் மராட்டிய நாவலாசிரியருமான மனோகர் ஓக், சகோதரர் மகரந்த கொலாட்கர் ஆகியோருடன். இவர்கள் இருவரின் பெயர்களிலும் தலா ஒரு கவிதையும் இத்தொகுப்பில் இடம்பெறுகிறது. என்றாலும் நூலின் மையமாக இருப்பது கொலாட்கரின் எண்ன ஓட்டம் மட்டுமே. நிகழும் இடத்தின் அடிப்படையில் இக்கவிதைகளை கீழ்க்கண்டவாறு வகுக்கலாம்.

  • ஜெஜூரி நோக்கிய பயணமும், சென்றடைதலும் (கவிதைகள் எண் 1 &2 ),
  • கார்ஹே பதார் என்ற 10 ஆம் நூற்றாண்டு பழமையான மையக்கோயில், தாழ்ந்த கோயில், குதிரைலாட கோயில் ஆகியவற்றை காணுதல் (கவிதைகள் எண் 3 – 13),
  • மலைப்பாதையின் வழியே 3 கி.மீ தொலைவு நடந்து கீழிறங்கிச் சென்று பெஷாவாக்கள் கட்டிய நீர்த்தேக்கத்தை தாண்டி 11ஆம் நூற்றாண்டு கோயிலை காணுதல் (கவிதைகள் எண் 14 – 23),
  • வளாகத்திலேயே இளைய 14, 15 ஆம் நூற்றாண்டு நிர்மாணிக்கப்பட்ட இன்னொரு கோயிலையும் அருள்மிகு யஷ்வந்த்ராவ் குடிகொண்டுள்ள சுற்றுப்பிரகாரத்தையும் பார்வையிடல் (கவிதை எண் 24 – 28),
  • இன்னும் கீழிறங்கி மலையின் அடிவாரத்தில் உள்ள ஜெஜூரி நகர் அடைந்து அதன் வழி செல்லல் (கவிதை எண் 29 -30),
  • ஜெஜூரி நகரை விட்டு வெளியேறி ஊர்க்கோடியில் உள்ள புகைவண்டி நிலையத்தை அடைதல் (கவிதை எண் 31),
  • ரயில் நிலையத்து அனுபவங்கள் (கவிதைகள் 32 -36) –என,

தார்ப்பாய் மடல்கள் கீழிறக்கப்பட்ட மாநில போக்குவரத்துக்கழக பேருந்தில் அதிகாலையில் ஜெஜூரிக்கு புறப்படுவது முதல் மாலையில் ரயில் நிலையத்தை அடைவது வரையிலான அனுபவங்கள் பயணத்தின் வரிசைக் கிரமத்திலேயே கவிதைகளாக வருகின்றன.

ஒரு சிற்பக் கூடத்தில்
மைல்கல் ஒன்று
வான் பார்த்துக் காட்டிற்று
நாற்பதென்று – என்று ஞானக்கூத்தனைப் போல

அது வாசல்படி அல்ல
பக்கவாட்டில் கிடக்கும் தூண்.
ஆம் தூண்தான் அது.

என தன் இருப்பை பொருத்தமற்ற சூழலின் குறியீடாய்கண்டு எதிர்காலமில்லை, இறந்த காலத்துடன், இணைப்பு ஏதுமில்லை, இஃதொரு, நிகழ்காலச் சிலேடை என்று பட்டாம்பூச்சியில் வருவதைப்போல கடந்த காலத்திலிருந்தும் அதன் அறிவிலிருந்தும் முற்றிலுமாக விடுவித்துக்கொண்டு, ஒரு துளி மஞ்சள்அவ்வளவுதான் என்று சொல்லும்படி தன் இருப்பை எளிமையாக்கி குறுக்கிக்கொண்டு நேரடியாகவும் வெளிப்படையாகவும் உரையாடுபவை இக்கவிதைகள். (ஒன்றைப்புரிந்துகொள்ள அதனுடன் வாழ வேண்டும், உற்றுநோக்கவேண்டும், கற்றுக்கொள்ளுதல் என்பது நுண்மையாக உணர்தல்.  கடந்தகாலத்திலிருந்து நீள்வதைப்போல ஏற்கனவே ஒரு கருத்து இருக்கும் நிலையில் ஒன்றை நுண்மையாக உணரமுடியாதுஎன்ற கிருஷ்ணமூர்த்தியின் பிரகடனத்திற்கு கட்டுப்பட்டது போல இக்கவிதைகள் அமைந்துள்ளன என்ற அவதானம் ஏற்கனவே சொல்லப்பட்ட ஒன்று).

எந்நிலையிலும் மனிதனா அல்லது கடவுளின் அவதாரமா என்பதை மட்டும் கண்டு அறியும் அளவுக்கு வலது விழியை மட்டும் திறந்துபார்க்கும் முதிர்ந்த அலட்டிக்கொள்ளாத நிதானம், அது வாசல்படி அல்ல, பக்கவாட்டில் கிடக்கும் தூண், ஆம் தூண்தான் அது என்று சொல்ல முடிகிற தன்னம்பிக்கை.

ஒரே நேரத்தில் ஞானியையும் பாமரனைபோல, எவேறெதுவும்  இல்லை நூற்றாண்டு கால வண்டல் தவிரஎன்று சொல்ல முடிகிற சொற்சிக்கனம், மதிய வெய்யிலில் ஆதரவற்று நிற்கும் எலும்புக்கூடு போல மெலிந்த கிழவியை வெய்யில் நேரத்தில் சந்திக்க நேர்ந்ததை, கண்களுக்கு பதில் துப்பாக்கியால் சுட்டது போன்ற குழிகள் என்றும், (சாலையோரத்தில் நிற்கையில்) சாலையின் குழியில் முட்டி மோதி லொடலொடத்து உறுமியபின் கண்களில் நீல வண்ணத்தை பாய்ச்சிக்கொண்டு தாண்டிச்சென்ற பேருந்து என்றும், வார்த்தைகளில் புகைப்படமெடுக்கும் காட்சித்தன்மையின் துல்லியம்.

இடிந்த ஆஞ்சநேயரின் கோயிலில் தன்குட்டிகளுடன் வாழ  முடிவெடுத்துவிட்ட தெருநாய்;  தன் எல்லையைத் தாண்டிச்  சென்றுவிட்ட கருப்பு நிறக் காதுகள் கொண்ட அதன்  நாய்க்குட்டி,  திரிசூலத்தின் நீண்ட நடுப்பிளவில் சுருண்ட வாலை நிமிர்த்திக்கொண்டு  பொங்கி வழியும் கருநிறக் குருதி போல  இறங்கி வரும் கோவில் எலி,  கொடிய மலைகளை தன் சிறகுகளுக்குள் கொண்டு வினாடியைப்போல இரட்டித்து தன்னுடலையே கீலாக்கி நிகழ்காலச் சிலேடையாக மூடித்திறக்கும் வண்ணத்துப் பூச்சி; கோயில் போல தோற்றமளிக்கும் மாட்டுத்தொழுவத்தில் அகன்ற கண்கள் கொண்டு திரும்பிப் பார்க்கும் கன்றுக்குட்டி; இவைகளின் வழி வழிந்தோடும் வாழ்க்கை, அதன் உயிர்த்துடிப்பின் நேர்த்தியை மிகக்குறைந்த சொற்களின் வழி வடிக்க முடிந்த நேர்த்தியின் எளிமை.

பீயுருட்டி வண்டும், தன் குட்டிகளுடன் உள்ள தெருநாயும் வாழிடமாக ஏற்றுக்கொண்ட வழிபாட்டுக்கு வழியில்லாத இடம்தான் என்றாலும் இங்கே கடவுள் குடியிருக்கவில்லை என்று சொல்ல முடியாதல்லவா? என்று அத்வைத நோக்கில் சமாதானம் கொள்கிற வேதாந்தியின் மனநிலை.

நீ யாராக இருந்தாலும் சரி பெண்/ பிராமின், சலவைக்காரன், அல்லது/ என்னவாக இருந்தாலும்/ வித்தியாசம் ஏதுமில்லை, என்று இன்னொரு கவிதையில் சொல்வதைப்போல. பூசாரியையும் பூசாரியின் மகனையும், பீயுருட்டிவண்டையும், கோயில் எலியையும் ரயில் நிலைய நாயையும், சோளக்கொல்லையில் தானியம் எடுத்த அலகுடன் தன் நான்கு மடங்கு உயரத்திற்கு குதிக்கும் சேவலையும் கோழியையும், கோயிலின் கன்றுக்குட்டியையும் கந்தோபநாதருக்கு சற்றும் குறையாத சமத்துவத்துடன் வைத்துப்பார்க்க முடிகிற சமத்துவத்தின் விரிவு, போன்ற அம்சங்களை இத்தொகுதியின் முக்கியமான ஓட்டங்களாக கூறலாம்.

தமிழில் நவீனத்து கவிதைகளை உருவாக்கிய முன்னோர்களான க.நா.சு,  ஞானக்கூத்தன் ஆகியோரின் கவிதைகளுடன் ஜெஜூரியை ஒப்புமைப்படுத்தி நவீனத்துவ கவிதையின் அடிப்படைக் கூறுகள் என்று கூறும்படியான ஆதாரமான ஒருமைகளை ஆராய்ந்தால்,

உலகம் உய்ய
அறிஞர்கள் ஞானம் பெற
ஓயாத நடனம் ஆடி
இன்று ஓய்ந்துவிட்டான்
நடராஜன்.
இப்போது அவன்
ஆடுவது
குண்டுக் கொசு விரட்ட (க.நா.சு)

மதுரை மீனாஷியின்
கன்னிமை கழியும் போது
அகத்தியன் மேற்கே வருவான் (க.நா.சு)

நீலநிறக் குதிரையில்
பள்ளத்தாக்கை
ஒரே குதியில் தாண்டிக் குதித்தார்
கந்தோப நாதர் (குதிரைலாடக் கோயில்)
வாகனம் தூக்கிக் கொண்டு
தீவட்டி பிடித்துக்கொண்டு
வாத்தியம் இசைத்துக்கொண்டு
பலூன்கள் விற்றுக்கொண்டு
தெருக்காரர் ஊர்வலத்தில்
இருப்பதால் நஷ்டப்பட்டார்
எங்களூர் அரங்கநாதர் (ஞானக்கூத்தன்)

நெருக்கியடித்துக் கொண்டு
அடுக்கடுக்காக அலமாரி முழுக்க
நிறைந்திருக்கிறார்கள்
தங்கநிறக் கடவுளர்கள்

வெட்டப்பட்ட தலையங்கங்கள்
நித்திய வாலிப வாக்குறுதிகளின்
பின்னால் இருந்தபடி
எட்டிப்பார்க்கிறார்கள்

பங்குச்சந்தை நிலவர
பத்திகளுக்கு அப்பாலும்
பார்க்கலாம் நீங்கள்
தங்கநிற கடவுளர்களை (அலமாரி, கொலாட்கர்)

எடுத்த பொற்பாதத்தின் அருகே
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டியைத்
தவறியும் இடறி விடாமல்
ஆடிக் கொண்டிருக்கிறார்
மேசை நடராசர் (ஞானக்கூத்தன்)

என்று தனிமனிதனை, அவன் நம்பிக்கைகளை, ஆளுமையை மட்டுமல்ல. ஒரு சமூகத்தின் வழிபாட்டு மையமாக வீற்றுள்ள இறையையுமே நகையாடி கேலிப்பொருளாக்குதல்,

நாலு தலைக்காரன்
அற்புத நாக்குக்காரன்
நாலு தலைக்குள்ளும்
நாக்குகள் நான்கிருக்கும்
நாக்குகள் ஒன்றுக்குள்ளே
நல்லதாய்ப் பூவிருக்கும் (ஞானக்கூத்தன்)

ஒருவீட்டின் மூலையை
இடவலமாய் மாற்றிச்சென்று
தன் தடத்தில்
அசையாமல் நின்றபின்
விருட்டென
ஏறிச்செல்கிறது
மேல்நோக்கி.
சுவரோடு ஒட்டி நின்று
இரட்டித்து
மீண்டும் முறுக்கித் திரும்பி
நிறுத்தத்திற்கு வருகிறது
திடீரென. (நீர் வழங்கல், கொலாட்கர்)

என்று வரைபடத்தைப்போல காட்சி நுட்பத்தின் சித்திரத்தை நிறுவுதல்,

மூ
ணு

ரி
சை
க்யூ
நிற்க (க.நா.சு)

vikramadityan

(ஜெஜூரிக்கும் ரயில் நிலையத்திற்கும் இடையே)

தொடர்ந்து பி
ளந்து தொ
டர்ந்து வா
ளாலறுத்
துத் துண்
டுதுண்
டுதுண்
டுதுண்
டாக்கிக் கி
ளைமு
றித்துப் பூ
சிதறி இ
லை சிதறி (ஞானக்கூத்தன்)

என்று சொற்களால் விவரிக்க முயன்று, அவை சுட்டும் அர்த்தங்களின் நிறைவின்மையில் தூண்டல் பெற்று, மொழியின் ஆதார விதிகளையும் தாண்டிச்சென்று, சொற்களின் பூத உடலிலும் காட்சியின் ஒழுங்கின்மையை ஏற்றிவைத்து விடுதல் (இந்த உத்தி பிற்பாடு, படியில் இறங்கினாள், றங்கினாள், ங்கினாள், கினாள், னாள், ள்என்று வணிக இதழ்களுக்கும் வந்து சேர்ந்தது). 

ஒரு காலத்தில் குரங்குகள் நம்மைப் போலவே
பேசின என்று நம்பப் படுகின்றது. (ஞானக்கூத்தன்)

ஜெஜூரியின் கற்கள்
திராட்சையைப்போல இனியவை
என்ற சைதன்யா
ஒரு கல்லை
தன் வாயிலிட்டு
கடவுள்களாக
உமிழ்ந்தான். (சைதன்யா, கொலாட்கர்)

‘அப்படியா, அதிர்ச்சியான செய்தி!
ஏன் முன்பே சொல்லவில்லைஎன்னிடம்?
தயாராகுங்கள் விருந்துக்கு.
அந்த காவல் நாய்க்கு
ஞாபகம் இருக்கும்படி
பாடம் கற்பிக்கிறேன் நான்’
என்றார் புலிராஜா. (அஜாமிலனுன் புலிகளும், கொலாட்கர்)

என்று கற்பனையில் மட்டுமே நடக்க முடிகிற சம்பவங்களை பயன்படுத்தி மிகுபுனைவாக்கி காட்டல், என்று பல பொதுமையான கூறுமுறைகளை வரிசைப்படுத்தலாம் என்றாலும் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன், வெந்து தணிந்தது காடுஎன்று காலத்தால் கொலாட்கருக்கும் முந்திய மூதாதையின் நவீனக்கவிதை உதாரணம் தமிழில் உண்டு.

4. பிரக்ஞையின் பூதக்கண்ணாடி

பாடுபொருளிலிருந்து முடிந்தவரை தன்னை விலக்கி, உணர்வெழுச்சியின் வெள்ளத்தில் இறங்கிவிடாமல் கரையில் தன்னை நிறுத்திக்கொண்டு, கூர்மைப்படுத்தி பெருக்கிக்கொண்ட பிரக்ஞையின் பூதக்கண்ணாடி வழி ஒரு ஆய்வாளனின் நிதானத்தோடு பாடுபொருளை அணுகும்போது கைவசப்படும் படைப்பில் நவீனத்துவத்தின் (Modernism) கூறுகள் மேலோங்குகின்றன. புறவயம், நேரடித்தன்மை, கறாறான வடிவ நேர்த்தி, வெளிப்படைத்தன்மை, ஆகியவற்றை ஆகப்பெரும் சாத்தியங்காளக்கொண்டு இயங்குவது இதன் அழகியல். தன்னை எழுத்திலிருந்து துண்டித்துக்கொண்ட மனநிலையின் தொடர்பின்மை, பிரக்ஞையை முழுதுமாக எரியவிட்டு அதன் ஒளியில் எண்ணங்களின் ஓட்டத்தை நேர்த்தியாக கோர்த்துக்கொள்ளும் கவனம் ஆகியவை இதன் இயங்கு விசைகள்.

பகட்டான ஒலியமைவுகள், ஆடம்பரமான ஆபரணங்கள் தரித்து கம்பீரமாக அரங்கேறி நிற்கும் விக்டோரிய பழங்கவிதைகளுக்கு பழகிய ஆங்கில வாசகர், நவீனக்கவிதையின் வீச்சும் சுவையும் பரிச்சயமில்லாத நிலையில், சம்பிரதாயமான அலங்காரங்களை முற்றாக துறந்துவிட்டு பேச்சுவழக்கின் உரைநடைக்கு அருகில் வரும் எளிமையின் உருவமாகி, எவ்வித ஆரவாரமுமின்றி மரத்தடியில் அமர்ந்திருக்கும் கிழட்டுத் துறவியைப்போன்ற இத்தொகுதிக்குள் நேரடியாக வந்துசேரும்போது, இவை உண்மையிலேயே கவிதைதானா? என்று அதிர்ச்சியடைவதும், இவ்வரிகளை கவிதையக்குவது எது? என்று தடுமாற்றம் கொள்வதும் சாத்தியமே.

நேர்மாறாக, தன் கவிதைகளை எவ்வளவு தூரம் தீர்மானமானவை, முழுமையானவை, மாற்றங்களுக்கு அப்பாற்பட்டவை என்று கொலாட்கர் கருதினார் என்பது ஆச்சரியமளிப்பது. கவிதையில் சமரசங்கள் செய்யவேண்டி வருமோ என அஞ்சி உயிரோடிருந்தவரையிலும் ஆக்ஸ்போர்ட் பல்கலை பிரசுரம், பெங்குயின் பிரசுரம் போன்ற பெரும் நிறுவனங்களிடமிருந்து தேடி வந்த வாய்ப்புகளை முற்றாக மறுத்திருக்கிறார்.

ஜெஜூரியை ஆங்கிலத்தில் வெளியிட்ட கொலாட்கரின் நெருங்கிய நண்பரும் பதிப்பாளருமாரான அசோக் ஷஹானேயின் கிளியரிங் ஹவுஸ் பதிப்பகம் அதை மாராத்தியில் வெளியிட்டது 2010ஆம் ஆண்டில். தாய் மொழியாக இல்லாத நிலையில் ஆங்கிலத்தில் எழுதுவது, தன்னை தன் எழுத்திலிருந்து அந்நியப்படுத்திக்கொள்ளும் விலகலை எளிமைப்படுத்துவதுடன் புறவயத்தன்மை கூடிவரும் இயல்பான லாவகத்தையும் கையளிக்கிறது என்பதால் இதைப்போன்ற ஒரு தொகுதியை எழுத அவர் ஆங்கிலத்தை தேர்ந்தெடுத்தது இயல்பானதே. ஆனால், மராத்தியக்கவிஞரின் இந்நூலை மராத்தியில் மொழிபெயர்த்து வெளியிட 30ஆண்டுகள் தேவைப்பட்டன என்பது ஆச்சரியமே.

எளிமை, குறும்புத்தனம், உணர்ச்சியை அதிகம் வெளிக்காட்டாமை என அமித் செளதுரி வர்ணிக்கும் கொலாட்கரின் ஆளுமையையே அவரின் கவிதைகளுக்கும் பொருத்தி சொல்லமுடியும். ஒவ்வொரு கவிதையிலும் இழையோடும் துடுக்குத்தனமான வர்ணணைகளும் வஞ்சப்புகழ்ச்சியான உணர்ச்சிகளை வெளிக்காட்டாத சித்தரிப்புகளும் புகைப்படமெடுப்பது போல காட்சியை நம் கண்முன் நிறுத்துகின்றன. முறையாக ஓவியம் பயின்று விருதுகள் பெற்ற தொழில்முறை வரைபட கலைஞராகவும் ஓவியராகவும் பணியாற்றிய கொலாட்கரின் பின்புலம் இந்த நுண்மையின் தெளிவை அடைவதற்கு உதவியிருக்குமா?  வாழ்க்கையிலிருந்து விலகி தன்மீது சுமத்திகொண்ட அந்நியத்தன்மை, தன் சமூகத்தின் கருத்தியலில் இருந்து துண்டித்துக்கொண்டு தன்னை வெளியேற்றிக்கொண்ட மனநிலை, ஆகியவையே கூட நவீனத்துவத்தின் அழகியல் சாய்வுள்ள நிலைகள்தானே. இம்மனநிலை, இத்தொகுதியை எழுத தேவைப்பட்ட அழகியலை அவருக்கும் இயல்பாக கைவரப்பெறும் ஒன்றாக ஆக்கியிருக்குமா

இக்கவிதைகளில் சாத்தியமாகியிருக்கும் காட்சி அனுபத்தின் நேர்த்தியையும் கவிஞரின் பின்னணியையும் பற்றி யோசிக்கையில் வாசகருக்குள் இக்கேள்விகள் எழுவது இயல்பானதே.

***

சமூக ஏற்புகளை எள்ளி நகையாடி, அவை தாங்கி நிற்கும் வரலாற்றையும் நம்பிக்கைகளையும்  புறக்கணித்து நிராகரித்து, பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு எதிராக நிற்கும் சொரணையின்மையே இதன் பெரும் குறைபாடு என இலக்கிய ஆய்வாளர்கள் சிலரை எண்ணச்செய்வது ஜெஜுரியின் இன்னொரு முகம்

1976ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்கப்பட்ட இத்தொகுதி கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது. கோலாப்பூரில் பிறந்து மராத்தி மொழி கற்ற மராத்திய கவிஞர் எதற்காக ஆங்கிலத்தில் எழுதவேண்டும்? என்று மராத்தியின் முன்ணனி எழுத்தாளரான பாலச்சந்த்ர நிமாடே அன்றே கோபத்துடன் எழுதினார். அயல் மொழியில் நிற்க வேண்டும் என்பதற்காக தாய் மண்ணின் நிதர்சனங்களை துறந்து விட்டதாக கொலாட்கர் குற்றம் சாட்டப்பட்டார். “கொலாட்கரின் ஜெஜூரியில் இருப்பதும் இதைப்போன்ற மூடத்தனமே. மும்பையிலிருந்து வார விடுமுறையில் வரும் சுற்றுலாப்பயணியைப்போல், ஏழை யாத்ரீகர்கள், பிச்சைக்காரர்கள், பூசாரிகள் மற்றும் கோயிலின் சந்தோஷமாகத் திரியும் குழந்தைகள் அனைவர் மீதும் கருணையின்றி, ஒரு பாறையை சுரண்டினாலும் புராணம் கிளம்பும் என்று எழுதுகிறார். எல்லாவற்றையும் பாறைகளில் சேமித்து வைப்பதைப்போலத்தான் புராதான கலாச்சாரம் அவர் பயன்படுத்தும் ஆங்கிலத்தையும் சேமித்து வைக்கிறது. ஜெஜூரியின் யாத்ரீகம் ஒன்றும் ஜுகூ கடற்கரையின் மது விருந்தைப்போல கேவலமானதல்ல என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும். மராத்தியில் இதைப்போன்ற கீழ்த்தரமான சொல்லாடல்களை காணமுடியாது. ஏனென்றால் மாராத்திய மொழியில் சேகரமாகிய வரலாறு கந்தோபாவின் யாத்ரீகர்ளை புகழ மட்டுமே செய்கிறது.

மொழியியல் உணர்வுக்கு அடிப்படையாகவும் அதன் ஸ்திரத்தன்மைக்கு ஆதாரமாகவும் இருப்பது கலாச்சார உணர்வு. இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் அவர்களின் முதல் கலாச்சாரத்தால் வடிவமைக்கப்பட்டவர்கள் அல்ல, அதைவிடவும் குறைவாகவே அவர்களின் முதல் மொழியால் வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அவர்களின் மொழியியல் கலாச்சார தொடர்புறுத்தல்களை குறையுள்ளதாக்குகிறது.  அந்நிய மொழியை புனைவு எழுத்துக்கு பயன்படுத்தும்போது நம் கலாச்சார குறையை இன்னும் கீழிறக்குகிறோம். இதைப்போன்ற எழுத்துமுறை ஆங்கில உலகிற்கு இந்தியத்தன்மையை சேர்க்குமா என்பதே ஐயத்திற்குரியது, “-என்று பாலச்சந்ர நிமாடேயை மையமாகக்கொள்வது ஜெஜூரியின் மீதான விமர்சனத்தின் முதலாவது கோணம்.

வைதீகங்களுக்கும் பண்டைய நம்பிக்கைகளுக்கும் சமூக ஏற்புக்களுக்கும் எதிராக நிலைப்பாடு எடுத்துக்கொண்ட கொலாட்கரின் குரலை, ’முற்போக்கின் அறிவார்ந்த வாதம் மற்றும் சந்தேகம் ஆகியவற்றின் விசைகளால் மழுங்கடிக்கப்பட்ட, மரபின் மரபார்ந்த கலாச்சாரத்தின் வேர்களை காணத்தவறிய கவிஞனின் இயலாமைஎன்று அக்ஷய் தோத் வர்ணிப்பதுபோல வகைப்படுத்திக் கொள்வது அதன் ஒரு தரப்பு.

ஆங்கிலம் நம் மரபை திரிபடையச்செய்துவிட்டது. ஆனால் ஆங்கிலம் நம் மரபை நாமே காணவும் வழி செய்துள்ளது. ஆங்கிலமே நம் மறுபக்கம். அதன் வழியாக நுழைந்து நாம் மீண்டும் நம் மரபுக்கே வந்துவிட்டோம் என்ற ஏ.கே. ராமானுஜனின் வரிகளின் வழியாகச் செல்வது, அதன் இரண்டாவது கோணம்.

ஜெஜூரியின் இலக்கிய இடம் நிலைகொள்வது இந்த இருவேறு கோணங்களும் சந்திக்கும் நுட்பமானதொரு புள்ளியில். கொலாட்கரின் மொழியில் சொல்வதானால், தீர்க்கதரிசனங்களைப் போல் நீளும் தண்டவாளங்கள் சந்திப்பதுபோலத் தோன்றும் அடிவானத்தின் ஒரு புள்ளியில்.

நிறைவின்மையின் வழியே…

ஸ்ரீதர் நாராயணன்

su_venugopalan

தூர்தர்ஷனில் ஒரு காலத்தில் உலகப்புகழ்பெற்ற சிறுகதைகளை தொலைக்காட்சித் தொடராக செய்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். தாகூர், சகி (H H Munroe), செக்காவ், ஓ ஹென்றி, சுந்தர ராமசாமி, முன்ஷி பிரேம்சந்த் என்று பலரின் கதைகளை நேரடியாக திரையில் பார்க்கும் அனுபவம் வாய்த்தது. அதிலொரு கதையில் (பெயர் நினைவில்லை) ஓர் ஏழைச்சிறுவன் பிரபல எழுத்தாளர் ஒருவரின் புத்தகங்கள் நிறைந்தப் பெட்டியை தூக்கிக் கொண்டு செல்ல உதவுவான். ‘இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது’ என்று அந்தச் சிறுவன் கேட்க, அவர் ‘உன்னைப் போன்றவர்களைப் பற்றி நான் எழுதிய புத்தகங்கள்’ என்பார். சிறிய தயக்கத்திற்குப் பின்னர் அவன் ‘அந்தப் புத்தகங்களினால் எங்களுக்கு என்ன பயன்’ என்றுக் கேட்பான். அப்போதுதான் அவர் தான் யாருக்காக எழுதினோமோ அவர்களிடமிருந்து மிகவும் தள்ளிப் பிரிந்து வந்துவிட்டோம் என்பதை உணர்வார். அந்த எளிய மாந்தர்களின் வாழ்வியல் சிக்கல்கள் எல்லாம் அவருடைய எழுத்திற்கான கச்சாப்பொருளாக மட்டுமே இருந்திருக்கிறது. எழுதுபவன், வாசகன் என்ற இரு நிலைகளைக் கடந்து, எழுத்தின் பேசுபொருளான சமூகத்திற்கான பயன் என்று ஒரு நிலை உருவாகும்போதுதான் அந்த எழுத்து உயர்நிலையை அடைகிறது. அப்படியானதொன்றுதான் சு வேணுகோபாலின் படைப்புலகம்.

சு வேணுகோபாலின் படைப்புலகம் எனக்கு அறிமுகமானது ‘களவு போகும் புரவிகள்’ சிறுகதை வழியாகத்தான். பிரபல எழுத்தாளர்கள் பலரின் ‘முக்கியமான படைப்புகள்’ பட்டியலில் தவறாமல் இடம்பெற்ற சிறுகதை அதுவென்பதால், தேடிப்பிடித்து படிக்கும் ஆர்வம் உண்டானது. கன்னட தேவாங்க சமூகத்தினரின் வழிபாட்டுத்தலமான சௌடம்மா கோவிலின் புரவி திருவிழாவை பின்புலமாக கொண்ட மாயயதார்த்த கதை. கச்சிதமான வடிவமைப்புடன், புதிர்த்தன்மையோடு சொல்லப்பட்ட கதை. எதிரிநாட்டு ராஜதந்திரி கணக்கில் மாயவித்தை செய்து புரவிகளை களவாடிப் போகும் தொன்ம வரலாற்றை கூத்துக்கலையாக, தற்கால திருவிழா கொண்டாட்டத்தோடு கூடிக் களிக்கிறார்கள் ஊர் மக்கள்.

கதிரைய்யனின் குதிரைகள் களவுபோனதால், ஊருணியில் குளித்துவிட்டு வந்த சௌடம்மா, காலத்திற்கும் இடுப்பிலிருக்கும் தன் உடைவாளோடு (ஜமுதாடு) அப்படியே தெய்வமாகிப் போகிறாள். பாரம்பரியம் என்றால் அப்படியேத்தான் நடக்க வேண்டும் என்று நாடகீய சடங்குகளின் ஒருபகுதியாக ‘பொட்டு கட்டி வம்சாவழி ஆள் வந்தால்தான்’ குடத்தில் குத்தியிருக்கும் ஜமுதாடு நிற்கும் என்று அணைக்கரைப்பட்டிவரை போய் ஆளைக் கூட்டி வரச்செய்கிறார்கள். காலத்திற்கும் தன் பிறப்பால் ஏற்றப்பட்ட கறையை அழிக்க முடியாத வேதனையோடு அவர் வர, ஊராரின் மனநிறைவிற்கேற்ப சாங்கியங்கள் நிகழ்த்தப்படுகின்றன. மாயயதார்த்த புனைவில் சமகால சமுதாய பிரக்ஞையை விட்டுவிடாத இடம்தான் எழுத்தாளனின் ஆன்மாவை நமக்கு புரியவைக்கிறது. பாரம்பரிய கொண்டாட்டங்களை ஆவணப்படுத்துவதாக மட்டுமல்லாமல் அதில் இருக்கும் அவலத்தை சிறு கோடிழுத்துக் காட்டுகிறார். பள்ளத்தை நோக்கிப் பாயும் நதி போல, சமூகத்தின் நிறைவின்மையை, அதன் இருள்பகுதிகளை தொட்டுக் காட்டும் எழுத்து சு வேணுகோபாலுடையது.

மூன்று நாவல்களும், நூற்றுக்கு பக்கமான சிறுகதைகளும் எழுதியிருக்கும் சு வேணுகோபாலின் படைப்பூக்கத்திற்கும் அந்த நிறைவின்மைதான் அடித்தளமாக இருக்கிறது. இன்றைய தமிழ் புனைவிலக்கிய சூழலில் அதிகம் கைக்கொள்ளப்படாத நெடுங்கதைகள் எனப்படும் குறுநாவல்களும் நிறைய எழுதியிருக்கிறார். அவருடைய பெரும்பாலான படைப்புகள் நேரடியாக தொகுப்புகளுக்கு என எழுதப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது பெருவணிக பத்திரிகை / ஊடக பாதைகளின் அரசியலிலிருந்து ஒதுங்கி விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்களை முன்வைத்து எழுதுகிறார் எனத் தெரிகிறது. இதற்கு தோதாக தமிழினி பதிப்பகமும் அவருக்கு உறுதுணையாக இருந்து வருவது முக்கியத்துவம் வாய்ந்தது.

‘ஒரே அமர்வில் ஒரு நெடுங்கதையை எழுதி முடித்துவிடுவேன். ‘பால்கனிகள்’ குறுநாவல் இரண்டு இரவு ஒரு பகல் காலத்தில் எழுதப்பட்டது. மனதில் இருப்பதை எழுதி முடிக்காவிட்டால் என்னால் உறக்கம் கொள்ள முடியாது’ என்று ஹிந்து நாளிதழிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார். பெரும் கதைப்பின்னலுடன், வரலாற்று பின்புலத்தில், ஒட்டுமொத்த தரிசனம் (vision) அளிக்கும் நாவல்களை விட, ஒரு முரணை முன்வைத்து நறுக்குத் தெறித்தார்ப்போன்ற வடிவத்தில் எழுதப்படும் சிறுகதைகளை விட, சு வேணுகோபாலின் படைப்பூக்கம் திறனுடன் வெளிப்படுவது நெடுங்கதை வடிவத்தில்தான் எனச் சொல்லலாம்.

தோற்றுப்போன விளையாட்டு வீரனான வடிவேல், சுற்றமும் உறவினரும் வெறுத்து, சமூகத்தால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தன்பால் ஈர்ப்புக் கொண்ட கிஷ்டன், ஆதிக்க சமூகத்தால் ஒடுக்கப்பட்டும் நாவிதன் பழனி, நல்லாசிரியர் விருது பெற்றாலும் தன்னுடைய கீழ்சாதி முத்திரையை தொலைக்க முடியாத பரமன் என்னும் ராமமூர்த்தி என்று அவருடைய கதை மாந்தர்கள் எல்லோரும் ஏதோ ஒரு நிறைவின்மையால் துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஒப்பனையின்மை, பாத்திரங்களுக்கான படைப்பு நேர்மை, செறிவான பின்புல சம்பவங்கள், தேய்வழக்கு அல்லாத புதிய கோணங்கள், தகர்த்தெறிய முடியாத சமூகத்தளைகள் என்று தனித்துவ குணங்களோடு அவை காணப்படுகின்றன.

கதைப் போக்கில் சொல்லப்படும் சம்பவங்கள் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக அழுத்தம் கூடிப் போய் தொனி மாறிவிடக்கூடாது என்பதில் கட்டுக்கோப்பாக செயல்பட்டிருக்கிறார் கதையாசிரியர். அதற்காக சொல்லப்பட வேண்டியது சொல்லப்படாமலும் போய்விடக் கூடாது. கிஷ்டனின் கதை முழுவதும் திவ்யாவின் பார்வையிலேயே சொல்லப்படுகிறது. அவனுடைய ஆண் சொந்தங்களான அண்ணனும், மச்சான்மார்களும் அவனிடமிருந்து விலகி நிற்பதையே முயன்று செய்கிறார்கள். ஊர்த் திருவிழாவில் தன்னை முழுவதுமாக பெண்ணென்று வெளிப்படுத்திக் கொண்டு வந்து நிற்பவனை அடித்துத் துரத்துவதில் குறியாக இருக்கும்போது அவர்களுடைய பழைய அநியாயங்களை போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போகிறான். ‘நல்லா இருந்த காலத்தில் என்னை நாசமாக்கினவன் நீதானடா’ என்று தன் மாமாவைப் பார்த்து உக்கிரத்தோடு சொல்கிறான். இந்த ஒப்பனையற்ற நடை வழியேத்தான் சு வேணுகோபாலால் ‘உள்ளிருந்து உடற்றும் பசி’ போன்ற புனைவுகளை எழுதிவிட இயலுகிறது.

‘என்னைச் சுற்றியிருக்கும் பெண்கள் நாளும் சொல்லும் கதைகள் வழியேத்தான் என் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது’ என்று தன்னுடைய கிராமத்து வாழ்க்கையைப் பற்றி இந்து நாளிதழுக்கான பேட்டியில் சொல்கிறார். திசையெல்லாம் நெருஞ்சி நெடுங்கதையில் குழந்தை மேல் மாரியாத்தாள் வந்துவிட்டதால் (அம்மை போட்டிருப்பதால்) ஊர்க்காரர்கள் கருணைக் காட்டினாலும், ‘என்னதான் இருந்தாலும் அம்பட்டையன் சம்சாரிய எட்டி உதைக்கலாமா’ என்று சடைத்துக் கொண்டு போட்ட தீர்ப்பை திருப்பி எடுக்க மாட்டார்கள் என்பது பழநி வழியாக மெள்ள மெள்ள படிக்கிறவர்களுக்கு கடத்திக் கொண்டே வருகிறார். இறுதியில் தீவன படைப்பை நெருப்பிலிட்டு கொளுத்திவிட்டு ஊரைவிட்டு ஓடிப்போகும்போது பழநியைச் சுற்றி அத்தனை வாசல்களையும் அடைத்து வைத்திருக்கும் ஆதிக்க சமூகத்தின் மேல் நமக்கும் நம்பிக்கை அற்றுப் போய்விடுகிறது. எவ்வித ரொமாண்டிசசமும் இல்லாத ஒப்பனையற்ற கதை சொல்லும் முறை.

ஆனால் பாத்திரங்களுக்கான படைப்பு நேர்மையை கைவிட்டுவிடுவதில்லை. ஊர் ஒதுக்கி வைக்கும் முன்னர் பழநி கைத்தோரத்துப் பையனாக ஓடிஓடி ஊராருக்கு உதவி செய்திருக்கிறான். அக்காலத்தில் ஆண்டியப்பப் பிள்ளை கிணத்துமேட்டிலிருந்து பூசணி பறித்துத் தந்திருக்கிறார். ராமுத்தேவர் சுரைக்காய் பறித்துக் கொடுத்திருக்கிறார். வீடு வீடாகப் போய் அரிசி, பருப்பு, புளி, நவதானியங்கள் வாங்கி வந்திருக்கிறான். ஆனால் இப்போது அம்மை போட்ட பையனுக்காக ஒரு வாழையிலையை அறுத்துக் கொண்டு போக முடியாதபடி திமிரெடுத்த அம்பட்டப்பயலாக ஆகிவிட்டோமே என்று பழநிக்கு மனது துவண்டு போகிறது. ஊர்க்காரர்கள் அத்தனை பேருக்கும் வெட்டி வாரிப்போட்ட மயிர்குப்பை நிறைந்த அம்பட்டங்குழிப் போலத்தான் அவன் வாழ்க்கையும் ஆகிவிட்டிருந்தது.

‘நமக்கு வேண்டப்பட்டவர்கள் எல்லாம் இருந்தும் துரத்தி விட்டுட்டாங்கன்னு மனங்கோணாதப்பா’ என்று பழநிக்கு ஆறுதல் சொல்லும் சம்சாரிகளும் இருக்கிறார்கள். ஆனால் நிலையழிந்த மனிதனின் மனம்தான் கொடூரமான ஆயுதம் என்பது போல மல்லையாவின் வன்மம் பழநி திரும்பும் இடமெல்லாம் நெருஞ்சியாக நிறைந்திருக்கிறது. வேறுவழியில்லாமல் அந்த நெருஞ்சிக் காட்டைக் கொளுத்திவிட்டு கிளம்புகிறான் பழநி.

அதே போல ‘இழைகளின்’ பரமன் என்னும் ராமமூர்த்திக்கு, நல்லாசிரியர் விருது கிடைத்தப் பிறகும் கைகொடுத்து வாழ்த்து சொல்லாத சக ஆசிரியர்களின் ‘ஒதுக்குதல்’ நெருஞ்சியாக உறுத்துகிறது. மற்றோர் இழையில் ஜெயசுதாவிற்கு முன்னால் எடுப்பான உடை அணிந்து போக அம்மாவின் கருத்தங்கன்னியை (அம்மா வளர்த்து வரும் ஆட்டின் பெயர்) குட்டிகளோடு விற்றுப்போட்டுவிட அவரே முனைப்பாக இருந்திருக்கிறார். ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்து கொண்டு விடாமல் சுற்றி வருகிறது ஒடுக்கப்பட்டவர்களின் இழைகள்.

நிறைவின்மையால் எப்போதும் துரத்தப்பட்டும் பாத்திரங்களாக இருந்தாலும் ஒவ்வொருவரைச் சுற்றியும் தனி உலகே இயங்கும் அளவுக்கு செறிவான வார்ப்புகளாக உருவாக்கியிருக்கிறார். கர்ப்பத்திற்கான கைமருந்து தயார் செய்யும் பழநியின் ஆத்தாவிற்கு அப்படியொரு கைராசி. பத்து ரூபாய் மருந்தில் கனகத்தின் வயிறு திறந்து இப்போது பேத்தியும் எடுத்துவிட்டாள். ஆனாலும் பழநிக்கு எதிரான ஊர்க் கட்டுப்பாட்டை மீற அவர்களுக்கு அப்படியொரு தயக்கம். மகாலிங்கத்தின் புழுவெட்டிற்கு வைத்தியம், அவர் பையன் மனோகரனுக்கு வியர்த்து ஊற்றும் நோய்க்கான சிகிச்சை, காளியப்பனின் இளம்பிள்ளை வாதம் பாதித்த பையனுக்கான சர்வாங்க சவரம் என்று அந்த ஊரைச் சுற்றிலும் பழநிக்கு அத்தனை இழைகள் படர்ந்திருக்கின்றன. வெந்த முருங்கைக்காயிலிருந்து கூழைச் சுரண்டி, கத்திரிக்காயோடு சேர்த்து கிஷ்டன் தக்காளி சட்னி, வெந்தயக் குழம்பும் ஊத்தப்பமுமாக அதகளப்படுத்துவதை விவரிக்கிறார். பள்ளி ஆசிரியர்களுக்கு டீப் போட்டு அனுப்பும் கடைக்காரர்கள் கூட அவர்களுடைய சாதியை உய்த்தறிந்து அதற்கேற்ப கிளாஸ்களையும் போணிகளையும் குறித்து வைத்து அனுப்பும் நுண்மையை சொல்கிறார்.

மற்றோர் இழையில் தீண்டத்தகாததாக ஒதுக்கிவைக்கப்படும் தன் உடல் ஒரு பெண்ணால் காமுற்று பயனடையும் போது பரமனுக்கு தன் இழிவின் மேல் மாளாத கோபம் எழுகிறது. தன்னுடைய சுயமரியாதைத் தூண்டுதலால் அவர் பேராற்றல் கொண்டு பாறையை பிளந்து வளரும் பெருமரம் போல வளர்கிறார். ஆனால், அவருக்குப் பின்னாலும் அந்தப் பாறை நிலம் அப்படியே பாறையாகவேத்தான் இருக்கிறது. அது போலவேத்தான் பழநியின் வாழ்வாசையும் அவனுடைய மானத்தை தற்காத்துக் கொள்ளுவதிலேயே பெருமளவு செலவழிகிறது. ஊராரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க முடியாது என்ற நிலையில், குமரனும் மல்லையாவும் குருவம்மாளைப் பற்றி தூற்றுகின்றனர். ‘நீ எதுக்கு கோவப்படுற, நான் அப்படிப்பட்டவளா’ என்று பழநியை சமாதானப்படுத்தும் குருவம்மாளை மீண்டும் மீண்டும் தொந்தரவுகள் துரத்துகின்றன. எவ்வளவு தூரம் துரத்தினாலும், அந்த ஊர் தரும் பாதுகாப்பை எப்படியும் இருத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் குருவம்மாள் ஆசைப்படுகிறாள். அதுவே பழநியின் ஆசையாகவும் அவ்வப்போது அவனுடைய சிந்தனையின் ஓட்டத்தில் வந்து போகிறது. தன்னை இழிவு செய்யும் ஊர் தலைவர்களிடையே எப்பாடுபட்டாவது மன்னிப்பு வாங்கிவிட வேண்டும் என்றெண்ணுகிறாள்.

‘அவங்களுக்கும் எனக்கும் என்ன பகை? நான் வேணும்னா தனியாப் போய் மன்னிப்பு கேட்டுவிட்டு வரட்டுமா’ என்றுதான் அவள் சிந்தனை ஓடுகிறது. பழநியில்லாத வேளையில் மப்பேற்றிக்கொண்டு வீட்டிற்கு வெளியே கதவைத்தட்டிக் கொண்டு இளித்துக் கொண்டு நிற்கும் ஊர்ப்பெரியவர்களைப் பற்றி குருவம்மாளின் நினைப்பு இந்தளவில்தான் இருக்கிறது. ‘இழைகளின்’ ராமமூர்த்தி ஆசிரியருக்கும், அவருடைய தம்பியின் பையன்கள் படிப்பை தொடரமுடியாமல் போய்விடுவது பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தாமல் செய்துவிடுகிறது அவரைத் தொடர்ந்து ஒடுக்கியே வைத்துக் கொண்டிருக்கும் சமூகம்.

நல்லாசிரியர் விருது பெறும் தருணத்தில் ராமமூர்த்தி ஆசிரியரின் நனவோடை பல இழைகளாக விரிந்து பரவுகின்றது என்றால், தண்டோராப் போட்டு ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கும் தருணத்ததிலிருந்து பழநியின் ஒற்றைப் பிரச்னையை முன்னும் பின்னுமாக சொல்லிச் செல்கின்றது ‘திசையெல்லாம் நெருஞ்சி’. திவ்யாவின் சிறுவயது விளையாட்டுத் தோழனாக இருந்த சிறுவன் கிஷ்டன், திடீரென சுற்றத்தாரின் வக்கரிப்பு ஆளாகி தானொரு சராசரி ஆண் இல்லை என்று உணரும் அந்தரங்க தருணத்தை, அவளும் காண நேரிடகிறது. அந்த தவிப்பில் இருந்து அவன் வெளியேறி சமூகத்தின் தடைகளைத் தாண்டி எதிர்நீச்சல் போட்டு தன்னை ஒரு குடும்ப அமைப்பில் பிணைத்துக் கொண்டு முழுமையடையும் காலத்தில் திவ்யா மீண்டும் சந்திக்கும் தருணத்தில் முடிவடைகிறது ‘பால்கனிகள்’. முன்னது இரண்டு குறுநாவல்களிலும் தகர்த்தெறிய முடியாத சமூகத்தளைகள் ‘பால்கனிகள்’ல் ஓரளவு நெகிழ்ந்து நம்பிக்கைக் கீற்று ஒளிர்கிறது.

சுவேணுகோபாலின் எழுத்திற்கான சுதந்திர வெளியை அமைத்துக் கொடுப்பதில் தமிழினியின் பங்கு அளப்பரியது. இலக்கிய அளவீடுகளை முறையாகக் கொண்டுள்ள வெகுசில பதிப்பகங்களில் தமிழினி முதன்மையானது.

நிறைவின்மையின் வழியே ஓடிச்செல்லும் நதியென சுவேணுகோபாலின் படைப்புகளை தொடர்ந்து இணைய உலகில் முன்னெடுத்தும் செல்லும் இந்த சிறப்பிதழ் வெற்றியடைய வாழ்த்துகள்.

நாஞ்சிலும் நானும்

 சுல்தான்

nanjil_nadan_spl_issueசுபாவமா நான் ஒரு தீவிர வாசிப்பாளன், எழுதப்படிக்க தெரிந்த நாளிலிருந்து கன்னித்தீவு சிந்துபாத் முதல் தொடங்கியது, இன்றைய ஜெயமோகன் வரை கிடைப்பதையெல்லாம் படிப்பேன். நாஞ்சிலின் கதைகளை படிக்கும் போது அவரின் நாஞ்சில் நாட்டு கதைகள் பெரும்பாலும் எங்க ஊர் பேச்சுத்தமிழை ஒத்திருப்பதாலும், அவரது நாஞ்சில் நாட்டு மொழியில் உள்ள சொல்வழக்குகள், விவசாய அனுபவங்கள், அனைத்தும் ஏதோ ஒரு அன்னியோன்யத்தை எனக்கு உண்டாக்கியது.

அடுத்து நானும் பம்பாயில் லேபராக வேலை செய்திருக்கிறேன். அவரது பம்பாயை தளமாக கொண்ட நாவல்களில், கதைகளில் வரும் பம்பாயின் சந்துகளிலிலும். பொந்துகளிலும் நானும் நிஜமாகவே நடந்திருக்கிறேன், எஸ் கே முத்துவாகவும் சண்முகமாகவும் நிஜமாகவே வாழ்ந்திருக்கிறேன். இதுவும் நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள்மீது எனக்கு மிகுந்த அன்னியோனியத்தை உண்டாக்கியது..

இதனால் நாஞ்சில் நாடனின் எழுத்துக்களை இணையத்தில் தேடி தேடி வாசிக்க தொடங்கினேன். இணையத்தில் வாசிப்பது என்றால் எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.. அன்றன்று கிடைக்கும் கதைகள் , கட்டுரை முதலியவைகளை கணிணியிலேயே நேரடியாக படிக்காமல் , அவற்றை வேர்ட் பைலில் தொகுத்து ,ஒரு 30, 40 பக்கமாக சேர்த்து பிரிண்ட் எடுத்து தினமும் படிப்பது என் வழக்கம். அப்படி தொகுக்கும்போது நாஞ்சிலின் கதைகளை தனி பைலாக தொகுக்க ஆரம்பித்தேன்.

சில வருடங்களுக்கு முன் பிளாக் எழுதுவது பிரபலமாக தொடங்கியது. அந்த நேரத்தில் நானும் பிளாக் தொடங்க ஆசைப்பட்டேன். ஆனால் எழுத என்னிடம் சரக்கு இல்லையே?

அந்த நேரம் இணையத்தில் கிடைக்கும் நாஞ்சில்நாடனின் எழுத்துக்களையும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களையும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு தொகுத்தால் என்ன எனும் எண்ணம் தோன்றியது.. நாஞ்சில்நாடன் பிளாக்கை தொடங்கினேன்.

அந்த நேரம் நாஞ்சிநாடனை எனக்கு நேரடியாக பழக்கம் கிடையாது. ஏதோ என்போக்கில் நான் தொகுத்துக் கொண்டு இருந்தேன்.. இந்த பிளாக்கை தொடங்கிய சில மாதங்களில் நாஞ்சிநாடனுக்கு சாஹித்ய அகாதமி விருது கிடைத்தது. நாஞ்சிலின் எழுத்துக்களை படிக்க விரும்பிய வாசகர்களுக்கு என் தளம் ஒரு சிறந்த வாசலாக தொடங்கியது..

நாஞ்சிலுக்கு சாஹிய அகாதமி விருது கிடைத்ததை பாராட்டி ஜெயமோகனின் விஸ்ணுபுரம் வாசகர் குழு சென்னையில் பாராட்டுவிழா நட்த்தினார்கள். எனக்கும் அழைப்பு வந்தது. விழாவுக்கு முன்தினமே சென்று அவர்களுடன் தன்கினேன். அன்றுதான் நான் முதன்முதலாக நாஞ்சில்நாடனை சந்தித்தது..

”ஓஓ.. நீங்கதானா எஸ் ஐ சுல்தான் என்பவங்களா? வணக்கம்!”

””ஓஒ.. நீங்கதான் நாஞ்சில் நாடன் என்பவங்களா?? வணக்கம்!!” என எங்கள் நட்பு தொடங்கியது..

நாஞ்சிநாடனின் வாசகனாக இருந்த நான் அன்றுமுதல் நாஞ்சில்நாடனின் நட்பு வட்டத்தில் இணைந்தேன்.

ஒரு மூத்த அண்ணன்போல பாசாங்கில்லாத அவரது பழக்கவழக்கங்கள், நட்பை பாசமாக வளரச் செய்தது.

எனக்கு வேறு பொழுது போக்கில்லை. நண்பர்கள் கிடையாது. சாஹித்ய அகாதமி விருதுக்கு பின் நாஞ்சிநாடனை குறித்த செய்திகள் தினமும் வரத் தொடங்கின.. நானும் தளவேலைகளில் பிசியானேன்..

ஒரு கால கட்டத்துக்கு பிறகு அவரது நாவல்கள், கதைகளை நானே ஸ்கேன் எடுத்து  பிளாக்கில் பதிக்க தொடங்கினேன். நல்ல வரவேற்ப்பிருந்தது.  இருக்கிறது.

இன்று நாஞ்சில்நாடனின் எழுத்துக்களில், அவர் குறித்த செய்திகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை இந்த நாஞ்சிநாடன் தளத்தில் தொகுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விசயம். பூவோடு சேர்ந்த நாரும் மணக்கிறது என்பது எனக்கும் பெருமையான விசயம்..

அவ்வளவுதாங்க மேட்டர்!!

கம்பன் காதலன்

செந்தில்நாதன்

nanjil_nadan_spl_issueநாஞ்சில் நாடன் சிறுகதைகள் தான் எனக்கு முதலில் பரிச்சயம். பின் அவரது நாவல்கள். கும்ப முனியின் கம்பன் ஈடுபாடு அவர் ‘கம்பனுக்குள் வந்த கதை’ கட்டுரைக்குப் பின் தான் தெரிய வந்தது.

பள்ளிப் பருவத்தில் கம்பன் கழகப் போட்டிகளில் கலந்து கொண்டு சில பரிசுகள் வென்றது தான் அதற்கு முன் கம்பனுடனான எனது உறவு. மனப்பாடம் செய்த பாடல்களும் மறந்து போயின. நாஞ்சிலின் கட்டுரை படித்தவுடன் கம்ப இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்ற தூண்டுதல் எழுந்தது. ஆனால் எந்த உரை சிறந்தது, அதற்கு எங்கே போவத?. அதற்கும் நாஞ்சில் தான் வழிகாட்டினார். வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியரின் உரையை வைத்துத் தன் ஆசிரியர் பாடம் எடுத்த்தாக அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தார். அதை ஒட்டியே அந்த உரை கொண்டு நான் கம்பனைப் படிக்கத் தொடங்கினேன்.

அந்தக் கட்டுரையில் அவர் பம்பாயில் ரா.பத்மனாபன் அவர்களிடம் நான்காண்டுகள் கம்ப இராமாயணம் கற்றதைச் சுவை படச் சொல்லியிருப்பார். இருபது பேருடன் கோலாகலமாக ஆரம்பித்த கம்பராமாயாயண வகுப்பு, கடைசியில் நாஞ்சில் மட்டுமே என்று சுருங்கியது, ஆசிரியரின் வீட்டுக்கு வகுப்பு நகர்ந்தது என்று அந்தக் கட்டுரையே ஒரு நல்ல சிறுகதை போல இருக்கும். அக்காலத்தில் தீவிர நாத்திகரான நாஞ்சிலுக்கு இராமன் பட்டாபிஷேகப் படத்தின் முன்னால் அமர்ந்து ஆசிரியரிடம் பாடம் கேட்கத் தடையொன்றுமில்லை. “அவருக்கு தமிழ் மூலம் சமயம், எனக்குச் சமயம் மூலம் தமிழ், சில சமயம் இரண்டும் ஒன்று தான் எனத் தோன்றும்” என்கிறார் நாஞ்சில்.

காரைக்குடி கம்பன் கழக விழாவில் கம்பன் சொல் நயம் பற்றித் தான் ஆற்றிய உரையை விரிவு படுத்தி கம்பனின் அம்பறாத்தூணி என்ற நூலாக 2013ல் வெளியிட்டார் நாஞ்சில். அந்த நூல் அறிமுகமே இந்தக் கட்டுரை. இது விமர்சனமல்ல. நூல்நயம் பாராட்டுதல் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

தான் கம்பனுக்குள் வந்த கதையை முதல் அத்தியாயத்தில் சுவை படச் சொல்லுகிறார். மாசி-பங்குனி மாதங்களில் ஊருக்கு வரும் தோல்பாவைக் கூத்துக்காரர்கள் மூலமாக இராமாயணக்கதை அறிமுகமாயிற்று என்று ஆரம்பித்து, பள்ளிப் பருவத்தில் தி.க. கூட்டங்களில் இராமாயணத்தில் எதிர்ப்பக்கங்களையும் கேட்டறிந்த கதை கூறி, பம்பாயில் ரா.பத்மநாபன் அவர்கள் இல்லத்தில் இராமாயணம் முழுமையாகக் கற்றதுடன் நிறைவு செய்கிறார். இந்த நூலை ரா.ப. அவர்களுக்குக் காணிக்கையாக்கியிருக்கிறார் நாஞ்சில்.

பின்னர் நவீன இலக்கியத்துக்குள் வந்த போதும் நாஞ்சில் மரபு இலக்கியத் தொடர்பை விடாமல் காத்து வந்திருக்கிறார். ”என்னை மாற்றிய நூல்” என்ற தலைப்பில் 2009 ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் கம்ப ராமாயணத்தைப் பற்றி தி.க. தலைவர் வீரமணி முன் பேசிய போது தி.க.வினர் ஏற்படுத்திய அமளியையும் சொல்லுகிறார். அதன் பின்னர் ஜெயமோகன் இதிகாசங்கள் பற்றி ஊட்டி இலக்கிய முகாமில் பேச அழைத்ததிலிருந்து தான் கம்பனுக்குள் மீண்டும் வந்ததாகவும், அந்த அமர்வுக்குப் பிறகு சற்று முயன்றால் தமிழ்க் காப்பியத்தின் மேன்மையை இளைய வாசகர்கள், இளம் படைப்பாளிகள் நெஞ்சத்துள் கடத்திவிடலாம் என்ற நம்பிக்கை வந்ததாகவும் சொல்லுகிறார்.

அடுத்த அத்தியாயத்தில் ‘கம்பனின் அம்பறாத் தூணி” என்று நூலுக்குத் தலைப்பு வைத்ததற்குப் பெயர்க் காரணம் கூறுகிறார். வீரர்கள் தோளில் மாட்டியிருக்கும் அம்பு வைத்திருக்கும் தூணி. இதற்குக் கம்பன் பயன்படுத்திய சொற்கள் கணைப்புட்டில், வாளிபெய் புட்டில், ஆவம், தூணி, பகழி என்று எடுத்துக் காட்டும் நாஞ்சில் எக்காலத்திலும் அம்பு அற்றுப் போகாத தூணி, அம்பு + அறா + தூணி = அம்பறாத் தூணி என்று பெயர்க்காரணத்தை விளக்குகிறார். கம்பன் சொல் வீரன், அவன் தூணி சொற்கள் நிறைந்தது. வில்வீரனின் அம்பறாத்தூணி தோளில் கட்டப்படும் எனில் காப்பியக் கவிஞனின் சொல் அறாத்தூணி அவன் சிந்தையில் கட்டப்படும்’ என்பது நாஞ்சிலின் விளக்கம்.

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே
கல் கிடந்தது கானகம் தன்னிலே
நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே
சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே
உயர்ந்தெழுந்தது இராமனின் கதை அரோ

(கம்பனின் அம்பறாத்தூணி புத்தகத்தில் நாஞ்சில் நாடன் கொடுத்துள்ள தனிப்பாடல்)

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே

(சீதையை மணப்பதற்காக இராமன் முறித்த சிவதனுசு மிதிலையில் இருந்தது)

கல் கிடந்தது கானகம் தன்னிலே

(இராமன் பாதம் பட்டு சாப விமோசனம் அடைவதற்காக அகலிகை கல்லாய் கானகத்தில் கிடந்தாள்)

நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே

(கம்பனின் புரவலரான வெண்ணெய்நல்லூர்ச் சடையப்பனின் வீட்டில் வேண்டிய அளவு நெல் (செல்வம்) இருந்தது)

சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே

(இராம காதை எழுதும் அளவுக்குச் சொல் கிடந்தது கம்பனின் மனத்திலே)

சொல் என்றால் ஒரு சொல்லா, இரு சொல்லா? தமிழ் அகராதிக் கணக்கையும் தாண்டிய சொற்குவை. மூன்றாவது அத்தியாயம் நாழி முகவுமே நாநாழி. நாழி என்பது நெல் அளக்கும் அளவை. ’நாழி முகவாது நாநாழி என்பது தான் பழமொழி. எவ்வளவு அழுத்தி அளந்தாலும் நாழி, நான்கு நாழிகள் தானியத்தைத் தன்னுள் முகந்து கொள்ளாது’ என்று பழமொழியை விளக்குகிறார்.

தமிழ்க் காப்பியங்களின் அளவைக் கணக்குப் போட்டுப் பார்த்து கம்பராமாயணத்தில் சுமார் மூன்று லட்சம் சொற்கள் கம்பன் பயன் படுத்தியிருக்கிறான் என்கிறார் நாஞ்சில். (10368 பாடல்கள், ஒவ்வொன்றும் 4 அடிகள், அதிகமும் அறுசீர் விருத்தம் என்பதால் ஒவ்வொரு அடியிலும் 6 சீர்கள், சில ஓரசைச் சீர்கள், சில ஈரசைச் சீர்கள்). அவற்றில் திரும்பத் திரும்ப பயன்படுத்திய சொற்களைக் கழித்துப் பார்த்தால் ஒன்றரை லட்சம் சொற்கள் இருக்கலாம் என்பது நாஞ்சிலின் துணிபு.

ஒரு வீரனின் முன் கிடக்கும் பல ஆயுதங்களில் எதைப் பயன் படுத்துவான் வீரன்? பகைவனின் சேண்மை அல்லது அண்மை, தான் நிற்கும் இடம், ஆயுதம் பயன்படுத்தும் வெளி, தனதாற்றல், பகை ஆற்றல் என எத்தனை தீர்மான்ங்கள். வீரனுக்குரிய அத்தனை முன் தீர்மான்ங்களும் கவிஞனுக்கு உண்டு. அதில் மாட்சி தெரிக்கும் தெய்வமாக்கவி எனில்? கவிச்சக்கரவர்த்தி எனில்? அவன் சொல் தேர்வு எங்ஙனம் இருக்கும்?” என்று நம்மைக் கேள்வி கேட்டு அவன் சொல் தேர்வின் வீச்சைப் புரிய வைக்கிறார். தூணியின் கொள்ளளவையும் மீறி சொற்கள் கிடக்கும் தூணி அவனுடையது. எனவே கம்பனின் காப்பியத்தில் நாழியும் முகவும் நாநாழி என்கிறார்

தமிழில் வழக்கொழிந்து ஆனால் மலையாளத்தில் வாழும் கம்பன் சொற்களைப் பட்டியலிடுகிறது ’மலையாளத்தில் வாழும் கம்பன் சொற்கள்’ அத்தியாயம். ஒவ்வொரு சொல்லுக்கும் அது மலையாளத்தில் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது, பழந்தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் வருகிறது, தமிழில் இன்று அதற்குப் பதிலாக எந்த சொல் இன்று புழக்கத்தில் உள்ளது என்று கூறுகிறார் நாஞ்சில். இந்தப் நூலில் அவர் எடுத்துக் காட்டும் அனைத்துச் சொற்களுக்கும் இது போல் ஒரு குறுங்கட்டுரை வரைந்திருக்கிறார். அங்கங்கே அவருக்கே உரிய அங்கதத்துடன் தன் ஆதங்கத்தையும் பதிவு செய்கிறார்.

உறக்கம் என்ற சொல்லைத் தமிழன் மறந்து தூங்கப் போய்விட்டான் என்று வருத்தப் படுகிறார். கிங்கரர்கள் கும்பகர்ணனை எழுப்பும் பாடலை

உறங்குகின்ற கும்ப கன்ன! உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்றது! இன்று காண் எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்குபோல வில் பிடித்த காலதூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்

உதாரணமாகத் தரும் நாஞ்சில் ‘இந்தப் பாட்டுக்கும் கூட உரை வேண்டுமெனில், புத்தகத்தை மூடி வைத்து நீங்கள் உறங்கப் போகலாம்’ என்று வாசகனையும் எச்சரிக்கிறார். இது போன்ற நாஞ்சிலின் முத்திரைகள் நூல் வாசிப்பின்பத்தைக் கூட்டுகின்றன. இந்த அத்தியாயத்தில் முடிவில் ’இப்படியே போய்க் கொண்டிருந்தால் மொத்தக் கம்பராமாயணமுமே மலையாள மூல மொழியில் எழுதப்பட்ட இதிகாசம் என்று இந்த நூலாசிரியன் நிறுவிவிட்டுப் போய்விடுவான்“ என்று அவர் கூறும் போது புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.

சொல் காமுற்றற்று அத்தியாயத்தில் கம்பனில் தன்னை ஈர்த்த, தனக்கு நூதனம் என்று தோன்றிய சொற்களை விளக்குகிறார். தான் கம்பன் சொல் திறத்தை விரும்புவதையே (காமுறுவுதையே) சொல் காமுற்றற்று என்ற தலைப்பின் மூலம் நமக்கு உணர்த்துகிறார் நாஞ்சில்.

கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்றற்று

கல்வி கற்காதவன் அவையில் சொல்ல விருப்பப் படுவது முலை இரண்டும் இல்லாதவள் பெண்மையை விரும்புவது போன்றது என்பது வள்ளுவன் வாக்கு. இது தனக்கும் தெரியும் என்று கூறும் நாஞ்சில் இந்த இடத்தில் தனது தோதுக்கு ஏற்றாற் போல பொருள் கொள்கிறார்.

இசை ரசிப்பவர் குறுந்தகடுகள் சேகரிப்பது போன்றும் ஓவிய ரசிகர்கள் ஓவியம் சேகரிப்பது போன்றும் ஒரு படைப்பிக்க்கியவாதிக்கு சொற் சேகரம். ஆனால் அவன் பணி சேகரித்து அழகு பார்த்துக் கொண்டிருப்பதில் முற்றுப் பெறுவதில்லை. அடுத்த கட்டமாக அவற்றைப் பயன்படுத்த முடிவது. பயன்படுத்தும் முனைப்பு இல்லாதவனுக்கு சொல் மோகமும் இருக்காது, சொல் யோகமும் இருக்காது’ என்று கூறும் நாஞ்சில் படைப்பாளிக்கு கம்பன் காப்பியம் என்பது சொற் சுரங்கம் என்கிறார்.

நாஞ்சிலின் வாசகர்களுக்கு அவர் படைப்புகளில் உணவுக்கு இருக்கும் முக்கியத்துவம் தெரியும். இந்த நூலிலும் அவர் காளான் நம் நாட்டுத் தாவரமா என்று பேராசிரியர் பா.நமசிவாயத்திடம் கேட்டுத் தெரிந்து கொண்டதைப் பகிர்கிறார். புறநானூற்றிலும், சிறுபாணாற்றுப் படையிலும், களவழி நாற்பது நூலிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் காளாம்பி என்பது காளான் என்று உரைக்கும் நாஞ்சில் கம்பனில் கிட்கிந்தா படலத்தில் ஆம்பியைக் கண்டடைகிறார். இன்றும் செட்டிநாட்டில் பூஞ்சை படிவதை ’ஆம்பிப் போவது’ என்று சொல்லுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.

குண்டிகை (கமண்டலம் அல்லது குடுக்கை) என்ற சொல்லையும் நிறைவாக விளக்கிச் சொல்லுகிறார் நாஞ்சில். இது திருமழிசை ஆழ்வார் ஏழாம் நூற்றாண்டில் பாடிய நான்முகன் திருவந்தாதியில் வருகிறது என்று உரைத்து அதற்கு ஒரு குதர்க்க அர்த்தத்தையும் உரைக்கிறார். அதை இங்கு எழுதினால் சண்டை வந்துவிடும். நூலை வாங்கிப் படித்து நாஞ்சிலிடம் சண்டை போடுங்கள்.

பல சொற்களை நயம் பாராட்டிய ’சொல் காமுற்றற்று’ அத்தியாயத்திற்கு அடுத்து இரு சொற்களைப் பாராட்டும் ‘ஊழியும் ஆழியும்’. ஊழ் என்பதைக் கம்பன் ஊழ்வினை, முறைமை, பகை, முடிவு, ஊழிக்காலம் என்று பல அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளதைக் காட்டும் நாஞ்சில் ஊழி தொடர்பாகக் கம்பன் பயன்படுத்தியுள்ள 43 சொற்றொடர்களைப் பட்டியலிடுகிறார். ஊழ்வினைக்கு எடுத்துக் காட்டாகத் தசரதன் அரச பதவியைத் துறந்து இராமனை அரசாள வேண்டுவதாக அமைந்த பாடலைக் காட்டுகிறார்.

முன்னை ஊழ்வினைப் பயத்தினும், முற்றிய வேள்விப்
பின்னை எய்திய நலத்தினும், அரிதினும் பெற்றேன்;
இன்னம் யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால்,
நின்னை ஈன்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ?

பாடலில் தசரதனின் மனத்தை விளக்கும் நாஞ்சில் ‘அரச பாரம் துறந்து, மகனிடம் பொறுப்பை ஒப்படைக்க நினைத்த ஒரு பேரரசனின் துறவு மனம் இது. தயவு செய்து சமகால அரசியலோடு ஒப்பு நோக்காதீர்கள். இங்கு எவரும் தசரதனும் இல்லை, இராமனும் இலக்குவனும் பரதனும் சத்ருக்கனும் இல்லை’ என்று முடிக்கிறார். இது தான் நாஞ்சில்.

தமிழ் லெக்சிகன் ஆழி என்னும் சொல்லுக்கு 11 பொருள் தருகிறது. கம்பனோ 12 பொருள்களில் ஆழி பயன்படுத்துகிறான் என்று கூறும் நாஞ்சில் அவற்றில் சில பாடல்களை மேற்கோள்களோடு விளக்குகிறார். வாலி இறக்கும் முன் இராமனிடம் வரம் இரந்து நிற்கும் பாடல்

அனுமன் என்பவனை – ஆழி ஐய! – நின் செய்ய செங்கைத்
தனு என நினைமதி

கூறி இந்த வரிகளைத் தான் சிகரமாக நினைப்பதாக்க் கூறுகிறார் நாஞ்சில். சாவதற்குச் சில கணங்கள் முன்பு, தன்னைக் கொன்றவனிடம், தன்னைக் கொல்ல அனுப்பியவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறுவது காப்பியத்தின் உச்சகணங்களில் ஒன்று.

அடுத்த அத்தியாயம் அம்பு என்னும் சொல்லுக்குக் கம்பன் உபயோகப்படுத்தும் சொற்கள். அம்பு, சோணை, கோல், கணை, சரம், வாளி, பகழி, என்று பட்டியலிட்டு ஒவ்வொன்றிற்கும் மேற்கோள் காட்டுகிறார்.

அடுத்து வழக்கொழிந்து போன உறவுச்சொற்கள். உம்பி (உன் தம்பி) நுந்தை (உன் தந்தை), உங்கை (உன் தங்கை), தவ்வை (தமக்கை, மூத்தவள்) போன்ற சில சொற்களை விளக்குகிறார். இவற்றில் தவ்வைக்கு எடுத்துக்காட்டியுள்ள பாடல் மிகச் சிறப்பான ஒன்று. பரதனுக்கு முடிசூட்ட வேண்டுமென்று கேட்பதற்காக கைகேயி வீழ்ந்து கிடக்கும் காட்சி. இதற்குக் கம்பன் உதாரணம் “தாமரையில் வீற்றிருக்கும் தாயாகிய திருமகள், எப்படியும் அயோத்தியை விட்டு நீங்கப் போகிறாள் என்று கருதி அயோத்தி வந்தடைந்த திருமகளின் தமக்கையாகிய மூதேவி போல கைகேயி கிடந்தாள்’.

’கவ்வை கூர்தரச் சனகிஆம் கடிகமழ் கமலத்து
அவ்வை நீங்கும்’ என்று அயோத்திவந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என கிடந்தனள் கேகயன் தனையை

இதற்கு நாட்டார் வழக்கிலிருக்கும் எளிய சொலவடையைக் காட்டுகிறார் நாஞ்சில் ‘சீதேவி போனாள், மூதேவி வந்தாள்’.

கம்பனின் மொழியாக்கங்கள் என்ற அடுத்த அத்தியாயத்தில் நாஞ்சில் களம் கட்டி ஆடுகிறார். கம்பனை வால்மீகியை மொழி பெயர்த்தவன் தானே என்று துச்சமாகப் பேசுபவர்களுக்குப் பதிலே இந்தப் பகுதி. ‘வடமொழியில் வான்மீகமும் வாசித்திராத, தமிழில் கம்பனும் கற்றிராத மூடன் தான் அவ்விதம் சொல்வான்’ என ஆரம்பத்திலேயே தன் கருத்தை நிறுவுகிறார். கம்பன் செய்தது மொழியாக்கம் என்றும் 10368 பாடல்களிலும் கம்பன் ஒரு கிரந்த எழுத்தைக்கூட பயன்படுத்தவில்லை என்றும் சொல்லுகிறார்.’கம்பனின் தமிழ்ப்பற்று வடமொழி துதி பாடிகளுக்குப் புரியாது. திராவிட இயக்கக் கனபாடிகளுக்கும் அர்த்தமாகாது’ என்று கம்பன் பக்கம் நின்று எல்லா பக்கமும் சாட்டை வீசுகிறார்.

எடுத்துக்காட்டாக நாகம் என்ற சொல்லைக் கையில் எடுக்கிறார். ‘நாகம் எனும் சொல் தமிழ்ச்சொல், அதே சமயம் வட சொல். கம்பன் பல பாடல்களில் நாகம் எனும் சொல்லை தென் சொல்லாகவும், வட சொல்லாகவும் ஆள்கிறார். அவருக்கு அதில் பேதமில்லை’ என்று கம்பனின் அம்பறாத்தூணியை குறுக்குபவர்களைச் சாடுகிறார் நாஞ்சில். கதாபாத்திரங்களின் பெயரைத் தமிழ்ப் படுத்தியதையும் சுட்டிக்காட்டுகிறார். இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போதே சென்னையில் இன்று பயன்படுத்தப்படும் ‘காண்டாயிட்டான்’ என்ற சொல்லுக்குத் தாவுகிறார். கடுப்பாகிவிட்டான் என்ற அர்த்தத்தைக் கேட்டபின், ஒருவேளை இது கம்பன் பயன்படுத்திய ‘கான்று’ ( கனல் வீசும் ) தானோ என்று கேட்டு நம்மைச் சிரிக்கவும் வைக்கிறார்.

அசைச் சொற்கள், தாமரைக்கு ஈடான சொற்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் விளக்கும் நாஞ்சில், ’கம்பனின் கலப்பை’ அத்தியாயத்தில் தன் பெயருக்கே வருகிறார். ‘நாஞ்சில்’ என்ற நிலப்பகுதி புறநானூற்றில் வருகிறது. ஆனால் அதன் பொருள் என்ன? கலித்தொகையில் இருந்து கலப்பை என்ற பொருள் கண்டடைகிறார். கம்பன் நாஞ்சிலை கலப்பையாகவும் போர்க்கருவியாகவும் பயன்படுத்துகிறான் என்கிறார். நாஞ்சில் நாடனுக்கும் இது பொருந்தும். கம்பனின் சொற்சுரங்கத்தைத் தோண்டி எடுக்கும் கலப்பையாகவும் இருக்கிறார், கம்பனை யாரும் தூற்றினால் போரிடும் போர்க்க்கருவியாகவும் இருக்கிறாரல்லவா நாஞ்சில்?

கம்பன் சேமித்த தகவல்கள் அத்தியாயத்தில் ‘புல்லிடை உகுத்த அமுது’ ஆயிற்று கம்பனின் கவித்திறம் என்று குறைபட்டுக் கொண்டு கம்பன் சேமித்து வைத்துள்ள பண்பாட்டுக் கூறுகளை விளக்குகிறார் நாஞ்சில். வாத்தியங்கள், மலர்கள், பறவைகள், ஆயுதங்கள் பற்றி எண்ணற்ற பாடல்களில் வரும் குறிப்புகளைக் காட்டிக் கம்பனில் உள்ள தகவல்கள் பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிறார்.

நாஞ்சிலின் சொல்லாய்வு நூல் பல்கலைகழகப்ங்கள் வெளியிடும் படிக்க முடியாத நூல் போன்றது இல்லை. கம்பனைத் தஞ்சாவூர் கோயில் கோபுரம் போல் பெருமை மிக்கப் பழம் பொருளாய்ப் புரியாமல் பார்த்து விட்டு நகருகிறவர்களைக் கூப்பிட்டு சில சிற்பங்களை, அதன் நுணுக்கங்களை, அழகை எடுத்துக் காட்டுகிறார் நாஞ்சில் நாடன்.

’எம்மனோர்’ என்ற சொல்லும் கம்பன் உபயோகப்படுத்திய சொல் தான். எம்மைப் போன்றவர் என்று அர்த்தம். அதுவே இந்த நூலின் கடைசி அத்தியாயம். காப்பியத்தின் உச்ச தருணங்களில் கம்பன் இதை எம்மனோர் எப்படி விவரிப்பர் என்று கேட்கிறான். அந்தச் சொல்லைப் பற்றி விளக்கும் போது கம்பன் எம்மனோர் என்பது யாரை என்று கேட்கும் நாஞ்சில் தானே அதற்கு பதிலும் சொல்கிறார் ”மடக்கி எழுதி 120 பக்கம் நிறைத்து, நீட்டி அடித்தால் 20 பக்கம் வரும் கவிதைத் தொகுப்பு போட்டவர்களையா? கவிஞர் விக்ரமாதித்தன் பாடியதுபோல் ஓய்ந்த நேரத்தில் கவிதை எழுதுபவர்களையா? இல்லை, 10000 பாடல்கள்எனும் பெருங்கனவு கொண்டவர்களையா?”

கம்பராமாயணம் படிக்க ஒரு தூண்டுதலாக இருக்கும் இந்த நூல். கம்பனைக் கற்றறிந்தவர்களுக்கு மேலும் சுவை கூடும். இந்த நேரத்தில் ஒரு கேள்வி எழலாம். கம்பராமாயணம் படிக்கத் தான் வேண்டுமா? படித்து என்ன ஆகப் போகிறது? தமிழ்ச்சுவையும், எதுகையும் இன்றைய அவசர உலகத்தில் தேவையா? நியாயமான கேள்வி தான். எதையும் தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது? வெந்ததைத் தின்று விதி வந்தால் செத்துப் போகும் வாழ்க்கையில் எதுவுமே தேவையில்லை தான்.

நம் கல்வி முறையில் செவ்வியல் ஆக்கங்களுக்கு இருக்கும் இடம் ஓரிரண்டு செய்யுட்கள், மிஞ்சிப் போனால் ஒரு கட்டுரை, அவ்வளவு தான். சங்கத்திலிருந்து ஆரம்பித்து இருபதாம் நூற்றாண்டு வரை நீளும் இலக்கியத்தை சில பக்கங்களுக்குள் சுருக்கி விட வேண்டியிருக்கிறது. மதிப்பெண் பெறுவதற்கு கம்பனைப் பற்றிக் கோனார் கூறியதை மனனம் செய்தால் போதும்.கல்லூரிப் படிப்பு என்பது வேலைக்குப் போவதற்கான கருவி என்பதால் அங்கு இந்தப் பேச்சே இல்லை. இளங்கலை தமிழ் படிப்பவர்களுக்கு மட்டுமே செவ்வியல் இலக்கியங்களுக்கான அறிமுகம் இருக்கிறது.

இத்தகைய சூழலில் நம் மொழியின் ஆற்றலை, நம் முன்னோர்கள் சாதனைகளை, அவை இன்றும் நீடித்திருப்பதற்கான காரணங்களை நமக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை நம் கலாச்சார ஆளுமைகளுக்கு உள்ளது. அந்த விதத்தில் நாஞ்சில் செய்வது முக்கியமானதொரு செயல். பள்ளிக்குப் பின் நான் மீண்டும் கம்பராமாயணம் படிக்க ஆரம்பித்ததற்கு நாஞ்சிலே தூண்டுகோல். கம்பராமாயணம் மட்டுமல்லாது, சிற்றிலக்கியங்கள் பற்றியும் அவர் தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் எனக்குப் பாடமாய் அமைந்தவை.

இந்த நூலிலேயே நாஞ்சில் கூறுகிறார் “யோசித்துப் பார்த்தால் இவையெல்லாம் படைப்பிலக்கியவாதியான் என் பணியே அல்ல எனத் தோன்றும். மீண்டும் யோசித்துப் பார்த்தால் இவற்றை நான் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள் எனத் தோன்றும்”. முற்றிலும் உண்மையான கூற்று. கண் முன்னே கிடக்கும் ரத்தினங்களை விட்டுவிட்டு கூழாங்கற்கள் தேடும் தேசத்தில் இவ்வகையான பணிகள் செய்வது சோர்வூட்டக்கூடியது தான். ஆனால் அவரது இந்த முயற்சியால் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் மீது பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்.

தான் கம்பனைக் கற்றுச் சுவைத்துத் தோய்ந்த அனுபவத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே கம்பனின் அம்பறாத்தூணி நூல். நாஞ்சில் நாடன் கம்பன் மேல் கொண்ட காதலால் உருவான நூல் இது. கிட்கிந்தா காண்டத்தில் காதலன் என்ற சொல்லை மகன் என்ற அர்த்தத்தில் உபயோகிக்கிறான் கம்பன். வாலியின் மகன் அங்கதனை “வாலி காதலனும், ஆண்டு, மலர் அடி வணங்கினானை” என்று வருணிக்கிறான். அதே போல் நாஞ்சில் நாடனைக் கம்பன் காதலன் என்றே அழைக்கலாம்.