சிறுகதை

பிறந்த நாள்

– ஜிஃப்ரி ஹாஸன்-

காலத்தின் மர்மக்கரங்கள் வாழ்வின்
முடிவை நோக்கி
என்னை நகர்த்திச் செல்கின்றன
மனதுக்கினிய வாழ்த்துரைகளாலும்
பரிசில்களாலும்
கண்ணுக்குத் தெரியாத
மாபெரும் இழப்பொன்றை
மறந்திருக்க முனைகிறேன்
அல்லது மறைக்க விரும்புகிறேன்
வாழ்தலின் மீது
போலியான நம்பிக்கைகளை
ஒவ்வொரு பிறந்த நாளிலும்
மனிதர்களின் புன்னகை
மனமெங்கும் தூவி விட்டுச் செல்கிறது
வாழ்த்து அட்டைகளின்
அலங்காரமும்
குழந்தைகளின் முத்தமும்
எனது பிறப்பின் அர்த்தத்தை
நான் தேடுவதிலிருந்தும்
என்னைத் தடுத்து விடுகின்றன
ஒவ்வொரு பிறத்த தினத்திலும்
புதிதாகப் பிறப்பது போன்று
உணர்கிறேன்
மேலும்
பிறத்தல் இறத்தலின் தொடக்கம்
என்றும் உணர்கிறேன்

பிரசவ வெளி

கலைச்செல்வி

அடிமுதுகு வலியில் துவண்டிருந்தது. வயிற்றின் அசைவுகள் குழந்தை வெளி வருவதற்கான இறுதி முயற்சியில் உயிரை கரைத்துக் கொண்டிருந்தன. வலியை நீட்டியோ நிமிர்ந்தோ அனுபவிக்க இயலாதவண்ணம் இடது கை சிறைப்படுத்தப்பட்டு குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. டெட்டனஸ் ஊசி செலுத்தப்பட்ட இடம் வலியால் கடுத்தது. வாழ்வு நித்தியமானது என்ற மாயைக்குள் முழுதாக தன்னை ஒளித்துக் கொண்ட பரபரப்பில் இயங்கியது அந்த பிரசவ வார்ட். ஆர்வமும் எதிர்ப்பார்ப்பும் குரல்களாக கசிய சொந்தங்கள் கதவுக்கு வெளியே காத்திருப்பது நர்ஸ் கதவை திறந்து மூடுவதில் தெரிந்தது. குடும்ப எண்ணிக்கையொன்று கூடுகையில் ஏற்படும் இயல்பான சந்தோஷம்.

என்னையும் சேர்த்து நான்கு பெண்கள் அந்த லேபர் வார்டில் இருந்தோம். சற்றே பெரிய சதுரமான அறை. என்னை தவிர்த்த இரு பெண்களும் உச்சக்கட்ட வலிக்கான காத்திருப்பில் இருப்பது போலிருந்தனர். பக்கத்திலிருந்தப் பெண் பிரசவத்தின் வெகு நெருக்கமான இடைவெளியில் இருப்பதை அவளின் அங்க அசைவுகள் உணர்த்திக் கொண்டிருந்தன. அந்தப் பெண்ணைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த பச்சைத் திரைத் தடுப்புகளினால் உள்ளே நடப்பவை துல்லியமான பார்வைக்கு மறைக்கப்பட்டிருந்தாலும் காட்சிகள் தெளிவற்று தெரிந்துக் கொண்டுதானிருந்தன. மருத்துவரும் செவிலியரும் தாதியுமான சிறு கூட்டம் அவளை சூழ்ந்திருந்தனர். தாளாத வலியில் அவள் முனகியது என் உயிர் வரை ஓடி பய நரம்பை சுண்டியது. எண்ணிப் பார்த்தேன். இந்த பயம் இன்றில்லை.. நாள் தள்ளிப் போன பிறகு செய்த சிறுநீர்ப் பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் காட்டிய அன்று வந்த பயம்.

அன்று குடும்பமே ஆரவாரத்தில் மூழ்கி விட எனக்குள் சந்தோஷத்தை விட பயமே அதிகமாக வந்து உட்கார்ந்தது. இத்தனைக்கும் சினிமா.. சீரியல்களில் வருவது போல் எனக்கு மயக்கம் வரவில்லை. வாந்தி போன்ற தொந்தரவுகளும் இல்லை. மயக்கம் தெளிந்த கதாநாயகிகள் கட்டிலில் போர்வைக்குள் படுத்தப்படி வருங்கால குழந்தையை பற்றி வெட்கமும் ஆசையுமாக கணவருடன் பகிர்ந்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். எனக்கு அப்படியேதும் தோன்றாமல் பயம் வந்ததுக் குறித்து பயமாகதான் இருந்தது. ஓருவேளை அடிக்கள்ளி.. என்ற தேய்ந்த வசனத்தை என் கணவர் பேசாததுதான் காரணமோ என்ற எண்ணவோட்டம் உதட்டில் புன்சிரிப்பை வரவழைத்தது.

கர்ப்பவதி.. புள்ளத்தாச்சி என்ற வார்த்தைகளின் புனிதம் ஜீன்களின் வழியாகவும் சமுதாய கற்பிதங்களாலும் என்னுள் கடத்தப்பட்டிருந்தாலும் எதிர்ப்படும் கர்ப்பவதிகளின் மனநிலை குறித்த ஆராய்ச்சி என் மனதில் அனிச்சையாக ஓடிக் கொண்டேயிருந்தது. என் நாத்தனாரின் பிரசவம் குறித்து பேசும்போதெல்லாம் என் மாமியார் “எம்பொண்ணு செத்து தான் பொழச்சா..” என்றது வேறு பயத்தை அதிகப்படுத்தியது. “பொண்ணுக்கு பிரசவங்கறது மறுஜனனம்தான் என்றாலும் இந்த நவீன மருத்துவ யுகத்தில்..’ என்று டி.வியில் பேசிக் கொண்டே போகும் மகப்பேறு மருத்துரின் முதல் வரிகளோடு மனம் நின்று போனது. பெரிய வயிறுடைய பெண்கள் அடுத்து வரும் மாதங்களில் பூந்துவாலைக்குள் குழந்தையை இறுக்கியப்படி நடப்பதுதான் சற்று ஆறுதலாக இருந்தது. இப்போது எனது பழக்கவழக்கங்கள் கூட மாறியிருந்தது. முன்பெல்லாம் கோபம் வரும்போது சாப்பாட்டில்தான் அது வெளிப்படும். ஆனால் இப்போது கோபம் கிளம்பும் போதே சமாதானப்படுத்தப்பட்டதில் சலிப்புதான் வந்தது. ‘சாப்பாட்டுல கோவத்த காட்டாதே.. இப்ப நீ ரெண்டு உயிர்..’ எல்லோரும் சொல்லும் போது பயம் இன்னும் கூடிப் போனது.

வாரிசு ஏக்கத்தை கண்களில் சுமந்திருந்த கணவரிடம் வயிற்றுச்சுமையை தள்ளிப் போட எண்ணும் என் எண்ணம் அரங்கேறாமலேயே அஸ்தமித்துப் போனதில் வயிறு மேடிட துவங்கியிருந்தது. வெளிப்படுத்தியிருந்தால் மட்டும் என்ன நடந்திருக்கும்..? சமாதானத்தின் இறுதியிலோ அல்லது சண்டையின் இறுதியோ வயிற்றுச் சுமைக் கட்டாயமாக்கப்பட்டிருக்கும். என் சம வயது பெண்களில் குழந்தைப்பேற்றை தள்ளிப் போட்டவர்கள்.. குழந்தை தரிப்பதற்காக மருத்துவ ஆலோசனையிலிருப்பவர்கள்.. இன்னும் திருமணமாகாதவர்கள்.. இவர்களோடு என்னை ஒப்பிடுவதில் என்னுடைய தாய்மைப்பேறுக் குறித்து என் அம்மாவுக்கும் பெருமைதான். தனது மகள் பெண்ணாக பிறப்பெடுத்ததை பூர்த்தி செய்து விட்டாள் என்ற நிறைவுடனேயே இந்த பத்து மாதங்களும் வளைய வந்திருந்தாள் அவள். என் மனதை வெளிப்படுத்தியிருந்தால் முதலில் ஆச்சர்யம்தான் வந்திருக்கும் அம்மாவுக்கு. ‘இப்டி கூட யாராவது நினைப்பாங்களா..?’ என்பாள். பிறகு நிச்சயமாக மருமகனின் கட்சிக்கு தாவி விடுவாள்.

மூன்றாம் மாதம் வீட்டுக்கு அழைத்து வருவது.. ஐந்தாம் மாதம் மருந்துக் கொடுப்பது.. என நேரங்கள் நெரிசலாகக் கடந்துக் கொண்டிருந்தது. துறுத்தலான வயிற்றை ஆசையாக வருடி புளங்காகிதம் அடையும் கணவருக்கு இப்போதெல்லாம் வயிற்றுக் குழந்தையை தவிர்த்து என்னிடம் பேச விஷயங்களற்றுப் போனது. தடுப்பூசிகள், ஸ்கேன் ரிப்போர்ட் இவைகளோடு மாதாந்திர செக்கப் முடிந்து மருத்துவர் அறையிலிருந்து வெளியே வரும் போது எனது திகில் நிறைந்த கண்களை பார்த்து பதறும் கணவரிடம் ‘பேபி நல்லாயிருக்காம்..’ என்ற வார்த்தைகள் அவரை திருப்திப்படுத்த போதுமானதாக இருந்தது. ஆனால் மருத்துவ செக்கப் செய்யும் முறை என்னை விரக்தியடைய வைத்திருந்தது.

இரவுகள் கூட கலக்கத்திலேயே கழிந்துக் கொண்டிருந்தது. புதிதாக குழந்தைப் பெற்ற உறவுக்காரப் பெண்கள் குழந்தையே உலகமாக மாறி போவதை மனக்கண்ணுக்குள் இருத்தி பார்க்கும் போது வரும் இன்பம், பிரசவம் குறித்த பயத்தில் கரைந்துப் போகும்.  வரப்போகும் குழந்தையை பற்றிய கனவுகளில் மூழ்கியப்படியே மெல்லிய குறட்டையில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு படுத்திருப்பார் கணவர். பத்து பனிரெண்டு குழந்தைகளை உடல் உழைப்பு மிகுந்த அந்த காலக்கட்டத்தில் சர்வசாதாரணமாக பெற்றெடுத்த பாட்டிமார்கள் எனக்கு சாதனையாளர்களாக தெரிந்தனர். மருத்துவச்சி பார்க்கும் பிரசவம்.. வளராத விஞ்ஞானம்.. சமுதாய அழுத்தம்.. புனித வேள்விக்குள் அடைப்படும் தாய்மை இவைகளுக்கு மத்தியில் கயிற்றில் நடக்கும் சாகஸகாரர்களாகவே ஒவ்வொரு பெண்ணும் வாழ்ந்திருப்பதாக எனக்கு தோன்றியது. விஞ்ஞானம் போர்த்திய இன்றைய சமுதாயத்தில் கூட மலடி.. போன்ற ஆண்பாலற்ற சொற்கள் வெகு விமரிசையாகவே வலம் வந்துக் கொண்டுதானிருக்கிறது. தாங்கள் பெறும் குழந்தைகள் குறித்த உரிமையை  பெண்கள் இன்னும் பெறவில்லை என்று ஏதேதோ எண்ணங்கள் மூழ்கடிக்க மீதி இரவும் துாக்கம் தொலைந்தே கடக்கிறது. துாக்கமின்மை பகல்களை அரைமயக்க நிலையிலேயே வைத்திருப்பது போலிருக்கும். “நாள் நெருங்க நெருங்க துாக்கம் வராதுடீ.. இதெல்லாம் வயித்துப்புள்ளக்காக நாம செய்ற தவம்டீ.. குடுத்து வச்சிருக்கணும்..” என்பாள் அம்மா உருக்கமாக.

வயிறு பெரிதானதில் கைகளின் துணையின்றி உட்காரவோ எழுந்துக் கொள்ளவோ.. புரண்டு படுக்கவோ முடியாத களைப்பு நிரந்தரமாக முகத்தில் படர்ந்துப் போனது. “உள்ள இருக்கறது பொம்பளப்புள்ளதான்.. பொண்ணுங்கதான் தாயோட அழகை களவாடிக்கும்பாங்க..” என்ற ஜோதிடம் சொல்லும் அம்மாவுக்கு “இல்லீங்க.. ஆம்பளப்புள்ளதான் அசதிய கொடுக்கும்..” என்பார் மாமியார் விட்டுக் கொடுக்காதவராக. டபக்.. டபக்.. என உள்ளிருந்து வரும் அசைவுகள் சற்று நேரம் வராது போனாலும் பயமேற்பட்டது. ‘குழந்தை மூவ்மெண்ட்டே இல்லையாம்..’ வீடே அல்லோலகல்லோலப்பட்டது. ஸ்கேன் எடுத்ததில் குழந்தை ‘நார்மல்’ என்றது ரிப்போர்ட். நான் தான் நார்மலாக இல்லாமல் நடுக்கத்துடன் பிரசவ தேதியை எதிர்ப்பார்த்திருந்தேன். வளைகாப்பு வளையல்கள் உடைந்து விடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருந்ததில் யாருடைய உடலுக்குள்ளோ புகுந்துக் கொண்டது போலிருந்தது. என் அலைபேசியிலிருந்து போகும் அழைப்புகளோ அலைபேசிக்கு வரும் அழைப்புகளோ பிரசவத்தைப் பற்றிய பேச்சிலேயே சுற்றி வந்து முடங்கிப் போவது ஒரு வித சலிப்பை தந்தது.

ஒன்பதாவது மாதம் தொடக்கத்திலேயே மருத்துவமனைக்கென பெரிய பேக் ஒன்று எப்போதும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தது. அம்மாவும்தான். ஃபிளாஸ்க் டம்ளர்கள்.. பெரிய பெரிய டவல்கள் சலவை செய்து புதிதாக்கப்பட்ட வெள்ளை வேட்டிகள் ஸ்பூன் சாத்துக்குடி பிழியும் கருவி குளுக்கோஸ் பாக்கெட்டுகள் நைட்டி நாப்கின் பாக்கெட் என நிரம்பியிருந்த அந்த பேக் கண்ணில் படும் போதெல்லாம் பீதியை கிளப்பிக் கொண்டேயிருக்கும். “மாப்ளை நம்ம பொண்ண நல்லா கவனிச்சுக்குறாரு.. குழந்தை மூவ்மெண்ட்ட வாட்ச் பண்ணிக்கிட்டே இரு.. வலி வர்றாப்பல இருந்தா ஒடனே ஆஸ்பிடலுக்கு கௌம்பிடு.. நேரத்துக்கு சாப்புடுன்னு ஒரே அட்வைஸ்தான் பொண்டாட்டிக்கு..” அம்மாவுக்கு பெருமைப்பட விஷயமிருந்தது. எனக்கோ என் கணவர் என்னிடமிருந்து விலகி விட்டது போலிருந்தது.

தயாராக இருந்த அந்த பெரிய பேக்கிற்கு நேற்று மாலை உபயோகம் ஏற்பட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். முதலில் கர்ப்பபையில் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் சிசேரியன் செய்ய வேண்டும் என்றார்கள். எனக்கு அனஸ்தீஷியா அலர்ஜி என்பதால் நார்மல் டெலிவரிக்கு காத்திருப்பதில் பிரச்சனையில்லை என்றார்கள். பெல்விஸ் எலும்பு விரிவடைந்திருப்பது நல்ல அறிகுறி என்றார்கள். இரு வீட்டார் குலதெய்வங்கள் சிறு தெய்வங்கள் என பிரசாதங்களால் எனது நெற்றி நிறைந்திருந்தது. ‘எம்பொண்ணு நல்லப்படியா பெத்து பொழைக்கணும்..’ அம்மாவின் சத்தமான வேண்டுதல் வலியை அதிகரித்தது. பயத்தில் கண்களை இறுக மூடியிருந்த  என்னை இனிமா கொடுக்க அழைத்துச் சென்றனர்.

பொங்கி வழிந்த வயிற்றோடு ஒருக்களித்து கால்களை முன்னும் பின்னுமாக்கி படுக்க சூடான சோப்புத் திரவம் எனக்குள் இறங்கியது. பிறகு கழிவறைக்கும் படுக்கைக்குமாக அலைந்தேன். ‘தண்ணி வழுக்கும்டீ.. பாத்து நட..’ முதுகில் ஒலித்த அம்மாவின் குரல் பலித்தால் தேவலாம் என்றிருந்தது. வலியோடு அவஸ்தைப்படுவதை விட குழந்தையோடு இறந்து போகலாம். கழிவறை கதவை மூடுவதற்குள் கால்களின் வழியே சிறுநீர் வழிந்தோடியது. வழக்கமாக இருப்பது போலின்றி சற்று பிசுபிசுப்பாக இருந்தது அது. நான் அம்மாவிடம் சொல்ல.. அம்மா நர்ஸிடம் அலற.. உடனே பச்சை அங்கிக்குள் நுழைக்கப்பட்டு ஸ்ரெச்சரில் கிடத்தப்பட்டேன். ஸ்ரெச்சரோடு பயணித்த என் கணவரின் பதற்றம் நிறைந்த விழிகள் என்னை கோபப்படுத்தியது. ‘இந்த பதட்டமெல்லாம் வயித்துக் கொழந்த நல்லப்படியா வெளிய வருணும்னுதான்..’ பொறுமலோடு கண்களை மூடிக் கொண்டேன். ஸ்டெச்சர் நகர்ந்தது. மனம் வெறிச்சோடியிருந்தது.

இதுதான் உள்நோயாளியாக எனது முதல் மருத்துவமனை அனுபவம். அறையின் தோற்றம் பயமுறுத்தலாக இருந்தது. பலியாடுகளாக கிடந்த மூவரோடு நானும் சேர்ந்ததில் நால்வராகிப் போனோம். அங்கிருந்த பெண் மருத்துவர் என்னை சோதித்து விட்டு ‘லேபர் பெயின் வர்ட்டும்.. வெயிட் பண்ணலாம்..” என்றபடியே எனது பச்சை உடுப்பை கீழே இழுத்து விடாமலேயே நகர்ந்தார். படுத்தவாறே குனிய முயன்றேன்.  “எழுந்திரிக்காதம்மா.. டிரிப்ஸ் போய்ட்டுருக்கல்ல..” என்றார் ஒரு நர்ஸ். பிறகு நான் கேட்டுக் கொண்டதன் போல் பட்டும்படாமலும் என் உடையை சரிப்படுத்தி விட்டு நகர்ந்தார். உடைப் பற்றிய பதற்றம் நீங்கியதில் மெல்ல கண்களைச் சுழற்றினேன். பக்கத்து படுக்கையிலிருந்த பெண் ஹீனஸ்வரத்தில் முனகிக் கொண்டிருந்தாள்.

நேரம் செல்ல செல்ல அந்தப் பெண்ணின் சத்தம் கூடிக் கொண்டேயிருந்தது. மரணத்தின் உச்சமே ஜனனம். மரணம் என்றால் அது மனதின் அந்தரங்க வலியாக இருக்கலாம். அல்லது உடல் வலியின் உச்சமாக இருக்கலாம். அல்லது நேரடி மரணமாகக் கூட இருக்கலாம். தத்துவார்த்தமான சிந்தனைகள் எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது அந்நேரத்திலும். இம்மாதிரியான சிந்தனைகள் எனக்கு புதிததல்ல. எனது பள்ளிநாட்களில் அவ்வவ்போது நான் அள்ளி விடும் வசனங்கள் நீதிபோதனை வகுப்பில் என்னை முன்னிலைப்படுத்தும். பதினோராம் வகுப்பு படிக்கும் போது ஒருமுறை நீதிபோதனை டீச்சர் ‘உன் வயசு ஸிக்ஸ்டீனா.. ஸ்க்ஸ்டீயா..’ என்று கிண்டலடித்தார்.

பக்கத்து படுக்கைப் பெண் வலியில் எனக்கு சீனியர். அவள் அனுபவிப்பதையெல்லாம் இன்னும் சற்று நேரத்தில் நானும் அனுபவிக்க வேண்டும். வாழ்க்கையின் உச்சக்கட்டம். வலியின் உச்சக்கட்டம். பொறுக்கவியலாத வலியை பொறுக்க வேண்டிய கட்டாயம். பிளாஸ்டிக் பக்கெட்டும் கையுமாக அவசரமாக உள்ளே நுழைந்த இரு தாதிகள் பச்சைத்திரைக்குள் ஐக்கியமானார்கள். அந்தப் பெண்ணின் கால்களை இருவர் மடக்கி பிடித்திருப்பது தெரிந்தது. அவள் ஏதோ செய்ய பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள்.

அதற்குள் பொல்லாத வலி என்னை திசைத் திருப்பியது. வாய் விட்டு முனகினேன். நர்ஸ் என்னருகே வந்தார். ‘அடிவயித்துல வலி இறுக்கி புடிக்குதா..” என்றார். அப்படிதான் இருந்தது எனக்கும். “வலி வுட்டு வுட்டு வரணும்.. ரெண்டு நிமிஷத்துக்கொரு தடவை வந்து வந்து நின்னுச்சுன்னா பேபி வெளிய வர போவுதுன்னு அர்த்தம்..” வலியின் இறைச்சலுக்குள் மழலையின் குரல் மெலிந்து கேட்டது. அவளுக்கு குழந்தை பிறந்து விட்டது. ஆவலில் தலையை திருப்பிப் பார்த்தேன். அவளைச் சுற்றியிருந்த கூட்டம் குறையவில்லை. இடுப்புக்கு மேல் தான் தெரிந்தாள். பச்சைத்திரையை சற்றே நகர்த்தியிருந்தார்கள். நல்ல உணர்வுடன்தான் இருந்தாள். உடல் தொய்ந்து கிழிந்த நாராகி போனதை முகம் உள்வாங்கி களைப்பை வெளித்தள்ளியிருந்தது. குழந்தை இடைவிடாது அழுதது. அந்த ஒலி அவளை சலனப்படுத்தியிருக்குமோ.. தாங்க முடியாமல் அழுவாளோ.. முகத்தை உற்றுப் பார்த்தேன். சலனங்களற்றிருந்தது அந்த முகம்.

இரண்டு நிமிடத்திற்கு முன் விட்டு போயிருந்த அடி வயிற்றுவலி இப்போது மீண்டும் கவ்வி இழுத்தது. ‘அதே தான்.. அதே தான்..’ மனசு பயத்தில் சில்லிட்டது. “சிஸ்டர்.. சிஸ்டர்..” என்று கத்தினேன். நர்ஸ் வேகமாக வந்தார் என்னிடம். பழக்கப்பட்டுப் போன நிகழ்வாக நான் கால்களை விரித்துக் கொடுக்க “நாலு ஃபிங்கர் கேப் விட்டுருக்கு டாக்டர்..” என்றார் அவசரமாக.

இப்போது அவளிடமிருந்த பச்சைத்திரையை முழுவதும் நீக்கி என்னை நோக்கி நகர்த்தினர். நான் மற்றவர்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டேன். என்ன நடக்கிறது எனக்கு..? மறுத்து போயிருந்தது மனம். உடை மாற்றும் அறையிலோ குளிக்கும் அறையிலோ கூட இதுவரை யாரையும் அனுமதித்ததில்லை நான். கையறு நிலை என்பது இதுதானோ..? “முக்கு.. நல்லா ஸ்டெயிரன் பண்ணி முக்கு.. ம்.. அப்டி தான்.. ம்ஹும்.. பத்தாது.. இன்னும்.. இன்னும்.. இன்னும் பெட்டரா டிரை பண்ணு.. ம்ம்.. அப்டி தான்.. இன்னும் கொஞ்சம்.. இங்க பாரும்மா.. நீ கோவப்ரேட் பண்ணலேன்னா நாங்க ஒண்ணும் பண்ண முடியாது.. கால நல்லா விரிச்சு வக்கலேன்னா பேபி வெளிய வர முடியாது.. முக்கும்மா.. ஏற்கனவே பனிக்கொடம் ஒடஞ்சுடுச்சு.. லேட் பண்ணுனீன்னா பேபிக்கு ஸஃபகேட் ஆயிடும்..” மிதமாகவும் கோபமாகவும் கிரிக்கெட் கமெண்ட்ரி போல தொடர்ச்சியாக வந்த பெண் மருத்துவரின் குரல்கள் என்னை திக்குமுக்காட வைத்தன. சொன்னவைகளையெல்லாம் செய்தாலும் குழந்தை ஏன் வெளியே வரவில்லை..?  விரித்து பிடிக்கப்பட்ட என் கால்கள் வலியில் சோர்ந்திருந்தன. உடலின் கீழ்பாகம் முழுவதும் வலியால் சூழ்ந்திருந்தது. இந்த பிரசவத் தினத்தைக் குறித்து நான் கொண்டிருந்த பயங்கள் ஒன்றுக் கூட மிகையானதல்ல. ‘பிரசவம் ரொம்ப கஷ்டமானதுன்னா இத்தனைக் கோடி ஜனக்கூட்டம் எப்படி பெருகியிருக்கும்’ என்று எனக்கு நானே தேற்றி வைத்தவைகளெல்லாம் பொலபொலத்து உதிர்ந்துக் கொண்டிருந்தன.

சினிமாவில் கதாநாயகி கால்களை வலியில் அடித்துக் கொள்வாள். வேதனையில் துடிக்கும் அவள் முகத்தில் காமிரா படரும் நேரம் வீறிட்ட மழலை ஒலி எல்லா பின்னணி இசைகளையும் நிறுத்தி விட்டு தியேட்டர் முழுதும் எதிலொலிக்கும். வலிகளை மறந்து கதாநாயகி குழந்தையை வாரி அணைத்துக் கொள்வது என் மனக் கண்ணில் ஓடியது. என் பெரியப்பாவின் மகள் குழந்தையை பிரசவித்திருந்த போது அவளை பார்க்க போயிருந்தேன். அப்போது எனக்கு திருமணமாகியிருக்கவில்லை. அவளது ஒருநாள் வயதுடைய குழந்தையை என் பெரியம்மா கைகளில் ஏந்தியிருக்க அக்கா அவஸ்தையாக என்னை பார்த்து சிரித்தாள். இப்போதுதான் அந்த சிரிப்பின் அர்த்தம் எனக்கு புரிந்தது. வலிகளின் உச்சத்தை வென்று வந்த வேதனை சிரிப்பு அது. ‘நான் உங்கம்மாவ பெத்தெடுத்தது உங்க தாத்தனுக்கு கூட ரெண்டு நாளைக்கு பொறவுதான் தெரியும்..’ கூட்டுக் குடும்பத்திலிருந்த என் அம்மாச்சி எட்டாவதாக பெற்றிருந்த என் அம்மாவை பற்றி பேசியது இந்த நேரத்திலும் நினைவிற்கு வந்து ஆச்சர்யப்படுத்தியது.

“அப்டிதான்.. இன்னும் ஒரு தடவ.. அவ்ளோ தான்.. குட்..” பேசிக் கொண்டே இருந்த மருத்துவர் திடீரென வெகு உன்னிப்பானார். உடல் முழுவதும் வலி ஆக்கிரமித்த நேரம். என்னுள்ளிருந்து ஏதோ உருவப்பட்டது போன்ற உணர்வு. உடலை அசைக்கவியலாத நிலையில் பார்வையை மட்டும் திருப்பினேன். மருத்துவரின் கைகளுக்குள் உடலெங்கும் வெள்ளையும் சிவப்புமாக படிந்திருந்த அந்த சின்னஞ்சிறு உருவம் குறித்து மூளையில் உறைக்க எனக்கு சில நொடிகள் பிடித்தது.  ‘விடுதலை.. விடுதலை.. விடுதலை..’ மௌனமாக பாடியது மனம். வீறிட்டு அழுத குழந்தையை ஏந்திக் கொண்டு நகர்ந்தார் ஒரு நர்ஸ். குளிப்பாட்ட சென்றிருப்பாராக இருக்கும். எனது பெட்டில் தொங்கிக் கொண்டிருந்த எனது கேஸ் ஷீட்டில் குழந்தை பிறந்த நேரத்தை பதிவு செய்தார் ஒரு நர்ஸ். எனக்கு என்ன நடக்கிறது என்பது எனக்கே தெரியாத நிலை. நேரடி வலியின் வீச்சு நின்றிருந்தாலும் உடல் முழுக்க வலியும் உதிரமுமாக அவஸ்தை கூடியிருந்தது. தாதி ஒருத்தி அடிவயிற்றை மசாஜ் செய்வது போல அமுக்கியதில் அடிவயிறு வலித்தது. என் வலியையோ அவஸ்தையோ சட்டைச் செய்யாதவளாக கடமையே கண்ணாக இருந்தார் அந்த தாதி. இறுதியாக கட்டி கட்டியாக உதிரம் நிறைந்த வாளி என் படுக்கைக்கு கீழிருந்து அகற்றப்பட்டது. உதிரப்போக்குக்கு நாப்கின் வைக்கப்பட்டது. இரத்தக்கறை படிந்த எனது நீள அங்கிப் போன்ற உடை நீக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த எனது நைட்டி அணிவிக்கப்பட்டது. என்னிடமிருந்த சகலமும் என்னிலிருந்து பிடுங்கப்பட்டு முற்றிலும் மற்றவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்த எனக்கு கையில் என்னவோ கட்டப்பட்டது. திருப்பிப் பார்த்தேன். சின்ன டோக்கன். எனக்கும் பேபிக்கும் மூன்றாம் எண் டோக்கன். குழந்தை மாறிவிடாதிருக்க. பூஞ்சையாய் கிடந்த தேகத்தை இரண்டு பேராக சேர்ந்து  மெதுமெதுவாக ஸ்டெரச்சருக்கு மாற்றினார்கள். ஊண்சத்தற்ற உடல் போல சக்கையாக உணர்ந்தேன்.

ஸ்ரெச்சர் லேபர் வார்டை விட்டு வெளியே நகர்ந்தது. யாரையும் பார்க்க ஆவலின்றி கண்களை மூடிக் கொண்டேன். ஆதரவாக அம்மா தலையை கோதுவது தெரிந்தது. சின்ன விசும்பல் சத்தம். அம்மா அழுகிறாள் போல. ‘ரொம்ப கஷ்டப்பட்டுட்டா எம்பொண்ணு..’ அவளின் வாய் முணுமுணுத்தது. கணவனின் விழிகள் குழந்தையை தேடியிருக்கும். ஸ்ரெச்சரின் வீல்கள் வளைந்தன. அறைக்குள் நுழைகிறேன் போலும்.

சுடுநீரில் துடைக்கப்பட்ட உடலும் இதுவரை அனுபவித்த வலியும் துாங்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கியது எனக்கு. அம்மா அழைத்துக் கொண்டேயிருந்தாள். பிரயத்தனப்பட்டு லேசாக விழித்துப் பார்த்ததில் சூழ்ந்திருந்த அனைவரும் வேற்றுக்கிரகவாசிகளாய் தெரிந்தனர். அல்லது நான்தான் இறந்து வேற்றுக்கிரகத்திற்கு வந்து விட்டேனா..? எதுவும் விளங்கவில்லை. ‘சமுதாயமானது தாய்மையை புனிதப்படுத்தி பெண்களை வாய் மூடி மௌனிகளாக்கி மிக சரியாக காய்களை நகர்த்தி மாறாத வெற்றியை தக்க வைத்துக் கொண்டே வந்துக் கொண்டிருக்கிறது. அதன் மிகச்சமீபமான பலி நான்..’ என்று கறுப்பு அங்கியோடு கோர்ட்டில் வாதிடும் போது நான் எழுப்பப்பட்டேன். சிறு அசைவு கூட எனக்கு சாத்தியப்படவில்லை என்பதை அப்போது தான் உணர்ந்தேன்.

“ஏன் இவ்ளோ கும்பல்.. எல்லாரும் கௌம்புங்க..” அதட்டியப்படியே உள்ளே நுழைந்த நர்ஸ் அதே அதட்டலோடு “எழுந்திரிம்மா.. பேபிக்கு பால் குடுக்கணும்..” என்றார். தலையணையில் சாய்ந்து அமர வைக்கப்பட்டேன். குழந்தையை மார்போடு ஏந்துகையில் வலுவின்றி கை நடுங்கியது. அம்மா உதவினாள். “நீங்க நவுருங்கம்மா.. அவளுக்கு பழக்கப்படுத்தணும்..” நர்ஸ் வெகு இயல்பாக குழந்தையை துாக்கி என் கைகளில் வைத்தாள். அவள் சர்விஸில் என்னை போல ஆயிரம் பேரை பார்த்திருந்த அனுபவம் அதில் தெரிந்தது.

“இங்க பாரும்மா.. இத்தன மாசம் சுமந்தது பெருசில்ல.. பெத்ததும் பெருசில்ல.. வளக்கறதுதான் பெரும்பாடு.. குழந்தைக்கு சரியான நேரத்துக்கு பால் குடுக்குணும்.. பசின்னாலும் அதுங்க அழுவும்.. எறும்பு கடிச்சாலும் அழுவும்.. வயித்த வலிச்சாலும் அழுகைதான்.. பேபி எதுக்காக அழுவுதுன்னு நமக்குதான் தெரியணும்.. அழுவாம துாங்கிட்டே இருந்தாலும் அப்டியே விட்டுடக் கூடாது.. எழுப்பி விட்டு பால் கொடுக்கணும்.. பால் குடிக்கும் போதே கூட அதுங்களுக்கு துாக்கம் வந்துடும்.. வாய் வைக்க தெரியாம அல்லாடுங்க.. பால் மூக்குல ஏறிக்காம கவனமாக இருக்கணும்..” ஒப்பிப்பது போல சொல்லியப்படியே நைட்டியை விலக்கினாள். இப்போது உடலின் மேல்பகுதி என் கட்டுப்பாட்டிலிருந்து விலகியிருந்தது. சிறிய சதைக்குவியலில் ஒரு கோடு போலிருந்தது அதன் வாய். குழந்தைக்கும் என்ன செய்ய வேண்டும் என புரியவில்லை. எனக்கும் என்ன செய்ய வேண்டும் என விளங்கவில்லை. நர்ஸின் அனுபவம் வென்றதில் குழந்தை வீறிட்டு பின் எதையோ சப்பி விட்டு துாங்கி போனது. நர்ஸ் கிளம்பிய பிறகு  “அப்டியே மருமகன்மாதிரியே இருக்குதுடீ புள்ள..” என்றாள் அம்மா. அதுவரைதான் நினைவிருந்தது. பிறகு நானும் துாங்கிப் போனேன்.

யாரோ எழுப்பியது யுகங்களை கடந்து மீண்டது போலிருந்தது.  “புள்ளக்கு பசி வந்துருக்கும்.. பால் குடும்மா..” என்றாள் அம்மா. கண்களை திறக்க முடியாத அசதி. குழந்தையை என்னருகே படுக்க வைத்தாள். “கண்ண தொறந்து பாத்து பால் குடுடீ.. மூக்குல ஏறிக்கும்..” திறக்க முடியாதிருந்த கண்களை யாருடைய வருகையோ திறக்க கட்டாயப்படுத்தியது.

இரு வீட்டு ஆட்கள்.. தோழர்கள்.. அக்கம்பக்கத்தோர் என யாரோரோ வந்தபடியே இருந்தனர். ‘பால் குடுக்குறா.. குடுத்தவொடன கூப்டுறன்..” அம்மா சமாதானப்படுத்தும் போது ‘அவங்கள அப்டியே போக சொல்லும்மா.. நான் துாங்கணும்..” என்று சொல்லத் தோன்றியதை அடக்கிக் கொண்டேன். ஆண் உறவினர் மருத்துவமனை செலவுக் கணக்கு கேட்பதும் பெண்கள் அறையை நோட்டமிடுவதும் பிறகு குரலை தழைத்துக் கொண்டு ‘பால் இருக்குல்ல..’ என்று கேட்பதும் எரிச்சலாக இருந்தது. ‘எல்லாரும் வெளிய போய் தொலைங்க.’ என்று கத்த வேண்டும் போலிருந்தது. அம்மா கைத்தாங்கலாக பிடிக்க செருப்பணிந்த கால்களுடன் ரெஸ்ட் ரூமிலிருந்து வெளியே வந்தேன். அதற்குள் யாரோ வந்திருந்தார்கள். அப்படியே செருப்பைக் கழற்றி அடித்து விடலாமா என்று தோன்றிய எண்ணத்தை கஷ்டப்பட்டு உள்வாங்கிக் கொண்டேன். அத்துமீறிய அலுப்பில் சற்று கண்ணயறும் அம்மாவை அங்கிருந்த டி.வி ரிமோட்டால் துhக்கி அடிக்க வேண்டும் போலிருந்தது. எங்கு பார்த்தாலும் வெறுமை. யாருமற்ற தனிமை என மனசு ரணக்களமாகியிருந்தது. “ஏன்டீ.. பசிக்குதாடீன்னு தான கேட்டேன்.. அதுக்கு ஏன் இப்டி சள்ளுபுள்ளு வுளுவுற..?” அம்மாவுக்கு சமயங்களில் கோபம் வந்து விடும். துாங்கும் தனது வாரிசைப் பார்த்துக் கொண்டேயிருப்பதும் பார்க்க வருபவர்களை கவனித்துக் கொள்வதுமாக என் கணவரின் நேரங்கள் பிஸியாகவே கழிந்ததில் மூன்று நாட்கள் கடந்தது.

வீடு ஆரத்தி எடுத்து வரவேற்றது. தொட்டில், புதிதாக வாங்கிய டேபிள்ஃபேன், மாற்றம் செய்யப்பட்ட கட்டில்,  என் படுக்கைக்கு அருகே உருவாக்கப்பட்ட புதிய சிறிய படுக்கை என வீடே மாறியிருந்தது. விதவிதமான ருசியற்ற உணவுகள் அதிகமான கட்டுப்பாடுகள் புதிதாக பிறந்திருக்கும் பொறுப்பு இவைகள் எனது தனிமையின் அளவை கூட்டிக் கொண்டே போயின. படுத்தே கிடந்ததில் சற்றே ஊதிப் போயிருந்த என் முகம் மற்றவர்களின் பார்வையில் தாய்மையின் பூரிப்பாக தெரிந்தது. ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைந்த கணவர் பொறுப்பை மாற்றி விட்ட திருப்தியில் குழந்தைக்கான விளையாட்டு சாமான்களை சேகரிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள அம்மா குழந்தைக்கான சவரட்டணையில் முழ்கிப் போனாள். குழந்தையை எடுத்துக் கொடுக்க.. பால் குடித்தப்பிறகு துாளியில் போட.. பத்திய சாப்பாடு சமைக்க.. குழந்தையை குளிப்பாட்ட.. உறை மருந்து ஊற்ற.. என அம்மா பிஸியாகி விட சூழ்ந்து நின்ற தனிமை எரிச்சலைக் கூட்டியதில் தொட்டதெற்கெல்லம் எழுந்து விழ ஆரம்பித்தேன்.

ஒரு வாரம் ஓடி விட்டிருந்தது. குழந்தையை குளிக்க வைத்து என்னருகே படுக்க வைத்தாள் அம்மா. “நைட்டி ஸிப்ப இழுத்து வுடுடீ.. புள்ளப் பெத்த மாரு.. ஒருத்தரு கண்ணுப் போல இருக்காது.. திருஷ்டிப்பட்டுப் போச்சுன்னா பால் கட்டிக்கும்..” இயல்பாக சொல்லி விட்டு அம்மா சமையலறைக்கு சென்று விட்டாள். கூச்ச சுவாபியான எனக்குதான் அதிர்ச்சியாக இருந்தது.

‘புள்ள துாங்குதுன்னு பேசாம இருந்துடாதடீ.. கால சுண்டி விட்டு பால் குடு.. புள்ளக்கு பசி வந்துடும்..” கிச்சனிலிருந்து குரல் கொடுத்தாள் அம்மா. குழந்தையைப் பார்த்தேன். உடல் முழுவதும் பவுடர் வாசத்துடன் நெற்றியிலும் கன்னத்திலும் வைக்கப்பட்ட திருஷ்டிப் பொட்டுமாக துாங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டாற் போல் துாக்கத்திலேயே சிரித்தது. அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. குழந்தையின் வலது உள்ளங்காலை மெதுவாக நிமிண்டினேன். எழுந்துக் கொள்ளவில்லை. திரும்ப திரும்ப சீண்டியதில் நான் படுத்திருந்த பக்கம் திரும்பியது. அதன் பிஞ்சுக் கை எதையோ தேடி அலைந்து பிறகு எனது நைட்டியை பற்றிக் கொண்டது.

குழந்தையை வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன்.

“தல நிக்காத புள்ளடீ.. பாத்து..” என்றாள் அறைக்குள் நுழைந்த அம்மா.

***

மீனாட்டம்

தி. வேல்முருகன்

கார்த்தி கடலூர் செல்லும் பஸ்ஸில் இருந்து அகரம் கடைத்தெருவில் இறங்கும்போதே மழை பிடித்துக் கொண்டது.

ஒடிப்போய் நரசிம்ம பெருமாள் கோயில் மேடையில் ஏறி சுவரை ஒட்டி நின்று கொண்டான். கோயில் முகப்புச் சாரம் நாட்டு ஓடு வேய்ந்து இருந்தது.  சாரத்தை நான்கு தூண்கள் தாங்கிக் கொண்டிருந்தன.

அவனைப் பார்த்து பத்துவிரலும் கோயிலுக்கு ஓடி வந்தார். அவர் பின்னாடியே ஒரு  ஆடும் அதன் குட்டியும் ஒடிவந்து கோயில் மோடையில் ஏறிக் கொண்டன.

பத்துவிரலு, “ந்தா… ந்தா…” என்றார், ஆட்டையும் குட்டியும் பார்த்து. அது இரண்டும் கார்த்தி பக்கம் ஓடி வந்து அண்டிக் கொண்டு நின்றன.

“மாப்பிள்ளை நீ எங்கடா போயிட்டு வந்த?”

“பள்ளிக்கூடம் மாமா “

“எத்தனையாவது படிக்கர?”

“பதினென்னாவது”

“வயசு பதினாறு இருக்குமா?”

“ஆமாம் மாமா இப்ப தான் நடக்குது”

“இரண்டு கெட்டான் வயசு. ம்ம்…? நல்லா சாப்புடுரா”

கார்த்தி ஆட்டையும் குட்டியையும் பார்த்தான். ஆடு உடம்பை உதறிக் கொண்டது. குட்டி பால் குடிக்க பின்புறமாக முட்டியது.

பத்துவிரலு சிவப்பு நூல் துண்டால் தலையிலிருந்த ஈரத்தைத் தொடைத்துவிட்டு மடியில் இருந்த சுருட்டு வத்திப்புட்டியெடுத்து சுருட்டைப் பத்த வைத்து ஒரு இழுப்பு இழுத்து புகையை வெளியே விட்டார்.

“கச்சாங்காத்துடா மாப்பிள்ளை, அதான் மழை இப்ப”

உட்டுடூம்!

மழை அடித்துப் பெய்தது, மழை நீர் ஓட்டின் வழியாக வந்து நீர்க்கோடாக விழுந்து ஓடியது.  கார்த்தி காலையில் பள்ளிக்குச் சென்றவன், பசி வேறு. மழை எப்போதும் விடும், நனைந்து கொண்டே ஓடலாமா, என பார்த்தான்.

மழை விட்டபாடில்லை. இரண்டொருவர் நனைந்து கொண்டே சென்றனர். வேகமாக இரண்டு சைக்கிள்கள் சென்றன. ஒரு டவுன் பஸ் நின்று சென்றது. மழை சிறிது குறைய ஆரம்பித்ததும் பஸ்ஸில் இருந்து இறங்கிய இரண்டு பெண்களும் மழைத் தூறலை சட்டை செய்யாமல் நடக்க ஆரம்பித்தனர்.

சிறிது நேரத்தில் சொல்லி வைத்தது போல் மழை நின்று சிறிது வெளிச்சம் கூட வந்தது.

“ஓடிப்போடா, நான் பரங்கிப்பேட்டைக்கு போயிட்டு வந்துடறேன்”

கார்த்தி கோயிலிருந்து வெளியே வந்து நடக்க ஆரம்பித்தான். வானம் வெளுத்து வெய்யில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்ததும் கடைத் தெருவில் நின்றவர்கள், “கம்ணாட்டி பய மானம் புரட்டாசி பாஞ்சு தேதியாயிடுச்சு மழை இறங்காம தரைய நனைச்சிட்டு ஓடுதுய்யா. விதவுட்டு ஒரு மாசமாச்சு இந்த வருசமாவது சமயத்தில பேயும்னு பார்த்தா இப்படி காயுத,” என்றனர்.

கார்த்தி மோட்டுத் தெரு வழியாக வீட்டுக்கு போகலாமா, என யோசித்தான். வேண்டாம் மணியங்கால் ஓடையில் தண்ணி கிடக்கும் ரோட்டு வழியாக போவும், என்று நடந்தான்.

பாலம் வரவும் மானம் முழுமையாக வெளுத்து விட்டது. பாலத்தின் கைப்பிடி கட்டையை பிடித்துக் கொண்டு தண்ணியை எட்டிப் பார்த்தான்.

பாலத்தின் அடியிலிருந்து மோட்டுத் தெரு கலியமூர்த்தி கையில் தூண்டிலும் நாக்குப் பூச்சு வைத்திருந்த தகர டப்பியோடும் பாலத்தின் மேல் வருவதற்கு ரோட்டுச் சருவலில் ஏற ஆரம்பித்தார்.

தூண்டிலைப் பார்த்த கார்த்தி மேற்கொண்டு நடக்காமல் அப்படியே நின்று விட்டான்.

கலியமூர்த்தி ரோட்டில் மேல் வந்து கார்த்தியை தாண்டிச் சென்று டப்பியை கீழே வைத்துவிட்டு தூண்டில் நைலான் கயிற்றை காற்றில் உதறி தண்ணியில் இரண்டு முறை அடித்ததும் ஏதோ விழுந்தது போல் தண்ணீரில் அலை எழுந்து கரையை தொட்டது. தக்கையாக செருப்பை அறுத்துக் கட்டி இருந்தார்.  அது மஞ்சள் நிறத்தில் நீர் மேல் மிதந்தது.

மீன் ஏதாவது கொத்தும் என கார்த்தி பார்த்தான். ஒன்றும் கொத்தவில்லை. தக்கை காற்றிலடித்துக் கொண்டு அவன் பக்கம் வந்தது.  உலர்ந்து இருந்த வாயிலிருந்து எச்சிலைக் கூட்டித் துப்பினான். எதிர்பாராமல் சரியாக தக்கை மேலே சென்று சொத் என்று விழுந்து விட்டது.

கலியமூர்த்திக்கு கடும் கோவம் வந்து, “நீலாம் என்ன மயிருடா படிக்கற?

உன் பேனா மேல எச்சி துப்புனா எப்படிரா இருக்கும்? அடிவாங்காம ஒடி போயிடு,” என்று சத்தம் போட்டார்.

கார்த்தி ஓடவில்லை. வாட்டமான முகத்துடன் சற்று தள்ளிச் சென்று தண்ணியை எட்டிப் பார்த்தான். பாலத்தின் அடியில் தண்ணிரில் தலையின் நிழலுக்கு நேர் கீழே ஒரு இரண்டு விரல் மொத்த விரால் மீன் நின்றது. தலையசைவின் நிழலில் மீனும் அசைந்தது. அவன் தலையை சீராக முன்னோக்கி நீட்ட நீட்ட மீன் முன்னோக்கி நகர்ந்தது.

அப்படியே தலையை சீராக பின்னோக்கி இழுத்துக்கொண்டே பார்த்தான். மீனும் அதன் வாலைத் தள்ளிக் கொண்டு நிழலின் பின் வந்தது.

வாலில் இருந்த புள்ளியும் கோடும்கூட தெளிவாக தெரிந்து அவனுக்கு நாகத்தை ஞாபகப்படுத்தியதும் உடல் சிலிர்த்துக் கொண்டான். மீன் அப்படியே நிழலசைவுக்கு தகுந்தாற்போல் வாலை ஆட்டி முன்னும் பின்னும் நகர்ந்தது.

கார்த்திக்கு அந்த மீனாட்டம் பிடித்து இருந்தது.

கலியமூர்த்தி பார்த்து விட்டால் வம்பாகிவிடும், மீனைப் பிடித்து விடுவான் என்று அப்படியே கிளம்பி வந்து விட்டான்.

மறுநாள் பள்ளி விட்டு வரும்போது பாலம் வந்ததும் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு பாலத்தின் அடியில் பார்த்தான். விரால் மீன் நின்றது. அதனுடன் நேற்று போலவே விளையாடினான். விரால் மீன் குஞ்சு ஏதோ சொல்ல வருவது போல் மேலே வந்து சிறிது வாயைக்கூட திறந்தது. அப்படியே இரண்டு காற்றுக் குமிழும் வந்ததும் தண்ணீரில் அலை வட்டம் உருவாகி கரையைத் தொட்டது.

மீன் தலை குப்புற கீழே வாலை ஆட்டிக் கொண்டு சென்று பிறகு மெல்ல மெல்ல நிழலை நோக்கி  தலையைக் கொண்டு வந்தது. ரொம்ப நேரம் ஆகி பசியெல்லாம் மறந்து, பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனுக்கு மோட்டுத்தெரு கலியமூர்த்தி ஞாபகம் வந்து விட்டது. எங்கிருந்தாவது பார்த்து விட்டால் பிடித்து விடுவானே, என்று எழுந்தான்.

கலியமூர்த்தியை எந்த விளையாட்டிலும் ஜெயிக்க முடியாது. வச்சாவாகட்டும், பேந்தாவகட்டும், அடிஜானாகட்டும் எந்த கோலிக்குண்டுவாக இருந்தாலும் அவனுக்கு மட்டும் தனியாக கைவரும். நைலான் நூல் தூண்டி முள் தக்கையோடு உள்ளங்கையில் கரகர என்று வளையமாக சுத்தி வைத்து பாக்கெட்டில் மடித்து வைத்து இருப்பான். மீனைப் பார்த்து விட்டால் பிடிக்காமல் விடமாட்டான். விளையாட்டு என்றால் எல்லாரிடமும் கடைசி  வரை ஐெயித்துக் கொண்டே போவான். கபடி ஓடிப் பிடித்தல் எதிலும் ஜெயிக்க முடியாது கலியமூர்த்தியை.

“சைக்கிள்காரர. நில்லு நில்லு…  மீனு வேனுமா?” என்ற கலியமூர்த்தியின் குரலைக் கேட்டு விட்டு கார்த்தி பயந்து திரும்பி நின்று கொண்டான்.

ரோட்டின் தென்புறம் தண்ணீரில் தாழ்ந்து இருந்த கருவை மரத்தினடியிலிருந்து எழுந்து தூண்டிலை மண்ணில் சொருகி விட்டு கயிறில் வரிசையாக கோர்த்த சிலேபி மீன்களை கொண்டு வந்தான்.

“மீன்காரர? ஒரு கிலோ வரும்!  எவ்வளவு தருவ?”

“இரண்டு ரூபாய் தரம்ப்பா”

“யோவ் அஞ்சு ரூபாய்  இருந்தா பார, இல்லைன்னா போய்கிட்டே இரு”

“இல்லப்பா அவ்வளவு விக்காது ஒரு ரூபாய் சேர்த்து மூனா வாங்கிக்க”

“சரி, பீடி இருக்கா?”

“இந்தா? இரண்டு இருக்கு, நீ ஒன்னு எடுத்துக்க”

கலியமூர்த்தி மூணு ருபாயும் பீடியும் வாங்கிக் கொண்டு திரும்ப மீன் பிடிக்கச் சென்றதை பார்த்து கொண்டே வீட்டுக்கு நடந்தான்.

தொடர்ந்து அடுத்த அடுத்த தினங்களில் பள்ளி விட்டு வரும்போது கார்த்திக்கும் மீனுக்குமான விளையாட்டு தொடர்ந்தது. மீனுக்கு என்ன தின்ன கொடுக்கலாம் தீனி கொடுத்தால் சீக்கிரம் வளர்ந்து விடுமே? அப்புறம் யாராவது பிடித்து விடுவார்களே?

இப்படி நாள் முழுவதும் ஒவ்வோறு சமயம் மீனைப்பற்றிய கவலை வந்து அலைக்கழித்தது. ஒவ்வொரு முறையும் மீனைப் பார்த்தபிறகுதான் ஒரு ஆசுவாசம், ஒரு திருப்தி வரும் கார்த்திக்கு.

இப்படியே நாட்கள் சென்று கொண்டு இருந்தபோது மழைக்காலம் தொடங்கி விட்டது. பெருமழை பிடித்துக் கொண்டது. இரண்டு நாளில் புயலடிக்கும் என்று பேப்பரிலும் வானொலியிலும் டிவியிலும் சொல்கிறார்கள். மழை தொடங்கிய பிறகு தண்ணீர் பச்சை ஓணான் போல் நிறம் மாறி செங்காமுட்டி நிறமாக மாறிச் சென்றதும் கார்த்தியின் கண்ணுக்கு மீன் தட்டுப்படவில்லை.

குடையோடு கடைக்கு செல்லும்போது பாலத்தின் நின்று பார்த்தான். வெள்ள நீர் சுழித்துக் கொண்டு, அம்மா அரிசி களையும்போது வரும் நிறம் போல, சின்ன மதுவு வழியாக வெளியேறி நுரைத்துக் கொண்டு ஒடியது. கண்ணுக்கெட்டிய தூரம் மழை நீர் வெள்ளக்காடாக தெரிந்தது. வெள்ளாறு எகுத்து விட்டது, தண்ணீர் உள் வாங்கவில்லை.

இரவு எப்படியும் வெள்ளம் வரும் கூரை வீடுகள் அதோகதிதான்  என்று கடைத்தெருவில் பேசிக் கொண்டனர். சிலர் தண்ணீர் வடிவதைத் தடுக்கும் பழைய ரோட்டை வெட்டி விட்டால் வெள்ள நீர் வடிந்துவிடும், இல்லை என்றால் கூரை வீட்டு மண் சுவர்கள் எல்லாம் இடிந்து கூரை சாய்ந்து விடும் என்று சொன்னார்கள்

ரோட்டை உடைத்தால் வம்பாகி விடும் என்றும் பயன்படுத்தாத ரோடை உடைக்க என்ன பயம் அட யாராவது உடைச்சு விடுங்க என்று பலவிதமாக பேசி கொண்டு இருந்தனர். சிலர் மண்வெட்டி பாரையோடு ரோட்டு பக்கம் வந்தனர்

சேராக்குத்தாரும், ஆண்டிக்குழியார் மகனும் முதலில் பழைய ரோட்டின் தாரை கொத்திப் பெயர்க்க ஆரம்பித்தார்கள். பழமையான ரோடு, மிகுந்த கஷ்டப்பட்டார்கள். அதற்குள் மேலு‌ம் சில இளைஞர்கள் சேர்ந்து வாய்க்காலாக தோண்ட ஆரம்பித்தனர். பச்சை கெட்ட வார்த்தையால் அழகர் மானத்தைத் திட்டினார்- ஒன்னு பேஞ்சு கெடுக்குது இல்லைன்னா காஞ்சு கெடுக்குது என்று

வாய்க்காலின் மையம் கார்த்தி  விரால் மீன்  பார்க்கும் இடத்துக்கு நேர் வந்து விட்டது. பாலத்தின் மையமும் அதுதான். தண்ணீர் வடிய ஆரம்பிக்கும்போது மீனை வெள்ளாத்துக்குக் கொண்டு செல்லும், பிறகு அப்படியே கடலுக்குப் போய்விடும். இனி அவ்வளவுதான், விரால் மீனைப் பார்க்க முடியாது.

இந்த சேராக்குத்தாருக்கு மட்டும் எது கேட்டாலும் செய்யக்கூடாது என்று நினைத்து கொண்டான்.

அன்று இரவு முழுவதும் கடும் மழை. மறுநாளும் மழை. சாயந்தரம் சீராக ஆரம்பித்த காற்று நேரம் செல்லச் செல்ல அதிகமாகி விட்டது. ஆடு மாடுகள் கத்தும் சத்தம் மனிதர்களின் சத்தம் அதனுடே காற்றின் உய்ய்ய்ய்ய்ய், உய்ய்ய்ய்ய்ய் சத்தம் வீட்டை ஒட்டி மரங்கள் முறிந்து விழும் சத்தம் என ஒரே பரிதவிப்பாக இருந்தது.

யாருக்கும் யாரும் உதவமுடியாத இருள். அப்போது இ டியும் மின்னலும் சேர்ந்து கொண்டதால் வெளியே பார்க்கக்கூட முடியவில்லை. கார்த்தியின் ஓட்டு வீட்டின் ஒடுகள் சில இடங்களில் பெயர்ந்தது காற்றில், மழை நீர் வீட்டினுள் விழ ஆரம்பித்ததும்  இடி படபட படீர் என்றும் தீடிர் தீடிர் என்று இடிச் சத்தம் கேட்கும்போது சுவர்கள் அதிர்ந்தன.

“கூரை வீடுகளின் கதி ஆடுமாடுகள் கதி என்னவாகும் கடவுளே, எப்போது காத்து விடும்? மழை பெய்தால் கூட பரவாயில்லையே, இந்த பேய்க்காத்து நின்று விட வேண்டும்,” என அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டனர்.

ஊய் ஊய் என்ற அந்த பேய்காத்து விட்டு விட வேண்டும் பத்துவிரலு வீட்டு பனைமரத்தில் இருக்கும் காக்கா கூடு தப்பிக்க வேண்டும் என்று கார்த்தியும் வேண்டி கொண்டான்.

மறுநாள் பார்த் போது அவன் நினைத்ததைவிட புயல்காத்து மோசம் செய்து இருந்தது. தெருவிலிருந்த கூரை வீடுகள் எல்லாம் பாதிக்கு மேல் விழுந்து இருந்தன. வீட்டை ஒட்டி இருந்த முருங்கை மரங்கள், உறுதியான பூவரசு, வேப்ப மரங்கள் எல்லாம் சாய்ந்து கிடந்தன. வீட்டின் மேல் கிடந்ததை எல்லாம் வெட்ட ஆரம்பித்து இருந்தனர்.

வீட்டுக்கு பின்புறம் இருந்த பத்துவிரலு வீட்டு பனைமரத்தின் காய்ந்த மட்டைகள் கீழே விழுந்து வழியை அடைத்து கொண்டு கிடந்தது. அதில் இருந்த காக்கா கூட்டில் இருந்த குச்சிகள் சரிந்து தொங்கின.

பச்சைமுட்டையின் ஓடு பனையை ஒட்டி கிடந்தது. காகங்களை காணவில்லை. கார்த்தி சோர்ந்து  போய் திரும்பினான்.

மழை ஒரே சீராக பெய்து கொண்டு இருந்தது. கார்த்தி குடையோடு பாலத்திற்கு சென்று பார்த்தான். சேராகுத்தார் வெட்டிய வழி ஏற்படுத்திய பழைய தார் ரோடே இல்லை. எல்லாவற்றையும் மழை வெள்ளம் கொண்டு சென்று கொண்டு இருந்தது. சேராகுத்தார் வெட்டவில்லை என்றால் தண்ணீர் வீடுகளில் புகுந்து இருக்கும் என பேசிக்கொண்டனர்.

மழை வெள்ளம் பார்க்க கூட்டம் பாலத்தில் நின்று இருந்தது. எட்டிப் பார்க்கச் சென்றவனை, ரெண்டும் கெட்டான் பயல போடா எட்ட, என்று சத்தம் போட்டார்கள். ஆலப்பாக்கம், புதுச் சத்திரம் எல்லாம் தண்ணீரில் மிதப்பதாகவும் பெருமாள் ஏரி உடைந்து போக்குவரத்து நின்று விட்டதாகவும் அந்த தண்ணீரும் இந்த வழியாகதான் வடியும் என்று பேசிக்கொண்டனர். பாலத்தின் அடியில் குனிந்து பார்க்க வந்த கார்த்தி திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

ரேஷன் கடையிலிருந்து அரிசி விநியோகம் வீட்டுக்கு இரண்டு கிலோ என்று இளைஞர்கள் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். தலையாரி மணியாரோடு விழுந்த வீடுகளை பார்க்கனும் என்றும் பேசி கொண்டனர்.

அப்போது கச்சா வலையை எடுத்துக் கொண்டு பத்துவிரலு அங்காளம்மன் கோயில் பக்கம் சென்றார். கார்த்தி அவரைப் பின்தொடர்ந்து கோயிலுக்கு சென்றான்.

இந்த மழை ஆரம்பித்ததிலிருந்து  கோயிலில்தான் அவனுக்கு பொழுது போய்க்கொண்டு இருந்தது. கொத்து வேலை,ஆசாரி வேலை, வயல் வேலைகளுக்குச் செல்ல முடியாத பெரியவர்கள் எல்லாம் கோயிலில் அமர்ந்து காசு வைத்து தாயம் விளையாடிக் கொண்டு இருப்பர்.

ஒரே சத்தமாக இருக்கும், சிறுவர்கள் எல்லாம் கோலி விளையாடுவார்கள். கார்த்தி நேரத்துக்கு தகுந்தவாறு இரண்டு விளையாட்டிலும் இருப்பான்.

பத்துவிரலு வாகாக கோயில் தரையில் உட்கார்ந்து வலையில் அதிகமாக கிழிந்து இருந்த துவாரங்களைத் தைக்கும் நோக்கோடு செப்பு ஊசியில் பருத்தி நூலை கோர்க்க ஆரம்பித்தார்.

“மாமா இந்த வலையால விராலு மீனு புடிக்கலாமா?”

“அட ஒங்க?  இ   ல்ல மாப்பிள்ள,இதுல புடிக்க முடியாதுடா, இது சும்மா வாய்க்கால் ஓரம் ஏந்துன்னா கெண்டகுஞ்சுவோ மாட்டும் மாப்பிள்ளை… கொழம்புக்கு ஆவும்ல”

“ம்ம்? மாமா அப்ப விராலு எப்படி புடிக்கறது?”

“அது சின்ன மீனு போட்டு பெரிய மீனு புடிக்கறதுடா மாப்பிள்ளை”

“சொல்லேன்?”

அது வந்து நல்லா வெய்யில் அடிக்கும்போது விராலு நிக்குதான்னு பார்க்கனும். தண்ணீர்ல விராலு இருந்தா அது தண்ணிய அடிக்கறது தெரியும் எங்க நிக்குதுன்னு பார்த்து தூண்டில சின்ன பொடி உயிர் மீன முள்ளுல மாட்டி தண்ணியில போட்டா விராலு மாட்டும். நீ ஏண்டா இதெல்லாம் கேக்கர?”

“சரி மாமா உனக்கு பத்து விரலுன்னு ஏன் பேர் வந்துச்சி? ”

“அட ஒக்காலவோழி,” திட்ட ஆரம்பித்தார்

“ஏய் மாப்பிள்ளை இங்கே வாடா நான் சொல்றேன்,” என்று பக்கிரி கூப்பிட்டார்.

பக்கிரி அவனிடம் தாயம் விளையாடச் சொல்லி எப்போதும் அவன் மேல் பந்தயம் வைப்பார்.

“யோவ் மாப்பிள்ளை ஐெயிக்கரான்யா… யாராவது பந்தயம் கட்டுரீங்களா? ஒரு ரூபாய், ஐம்பது காசு, ம்ம்…” என்பார்

“மாப்பிள்ளை போடரா தாயத்த என்பார்”

அவன் கையை குளுக்கி ஒரு இழுப்பு இழுத்து விடுவான். ஆறு தீத்திய புளியங்கொட்டையில் ஒன்று மட்டும் மல்லாந்து வெள்ளையாகவும் மற்ற ஐந்து புளியங்கொட்டகைகள் கவுந்து கருப்பாக கிடக்கும்.

“பார்த்தியா, மாப்பிள்ளை தாயத்த போட்டுட்டான் பார்”

காசு வைத்தவர்கள் அவனைத் திட்டுவார்கள்.

பக்கிரி சேதி தெரிந்த கார்த்தி நிக்காமல் ஓடினான். அவருக்கு பத்து விரலு என்று பெயர் எப்படி வந்தது என்று அவனுக்குத் தெரியும்.

பத்துவிரலு பேரு கலியபெருமாள், மனைவி பேரு லட்சுமி. “இந்த உலகத்திலேயே அந்த நாராயணனுக்குப் பிறகு எனக்கு மட்டும் தான் பெயர் பொருத்தம் அமைஞ்ச மனைவி,” நிறைபோதையில், “லெட்சுமி, லெட்சுமி,” என்பார்.

“ஊத்திட்டி வந்துட்டியா, சும்மா கிட”, என்பார்கள் அவர் மனைவி. பிறகு சத்தம் ஒன்றும் வராது.

பத்துவிரலு சும்மா இருக்க மாட்டார். கூலி வேலைக்குதான் போவார். வந்தும் சும்மா இல்லாமல் விறகு வெட்டவோ, மீன் பிடிக்க வலையை தோளில் மாட்டிக்கொண்டோ, விறகு பொளக்கவோ யாராவது வேலை என்றால் முன்பே வந்து நிப்பார். அப்ப காரியமாக ஏதேனும் சொல்லிக் கொடுத்தும் விடுவார். அது பத்திக் கொண்டு இருக்கும். இப்படி எல்லாவற்றுக்கும் முந்திக் கொண்டு நிற்பதால் அவருக்கு பத்துவிரலும் வேலை செய்யும் பத்துவிரலு என்று அதுவே பரிகாச பெயராகி விட்டது.

வெளியில் வேலை இல்லாதபோது, அவர் மனைவியே, “தம்பி பத்துவிரல அந்தப் பக்கம் பாத்தியா?” என்றுதான் கேட்பார்கள். வரிசையாக ஞாபகம் வந்து சிரித்துக்கொண்டான்.

இனி மழை விட்டு வெள்ளம் வடிந்துதான் விராலு மீன பார்க்க முடியும். அதுவும் வெள்ளத்தில் பெரிய பெரிய மரங்களே அடித்துச் செல்லும்போது விரால் மீன் மட்டும் எப்படி இருக்கும், அதுவும் போயிவிடும். சிரிப்பெல்லாம் கவலையாக இருந்தது அவனுக்கு

தொடர்ந்து வந்த நாட்களில் மழை விட்டு வெள்ள நீர் வடிய ஆரம்பித்து விட்டது. பாலத்தின் கட்டையில் மிகப் பெரிய பள்ளம் ஒன்றும் உண்டாகி இருந்தது.

கார்த்தி பள்ளி விட்டு வரும்போது மட்டும் அல்லாமல் பாலத்தின் மேல் செல்லும்போது எல்லாம் அவனுக்கு விரால் மீன் சிந்தனை வந்து எட்டிப் பார்க்காமல் செல்லவே மாட்டான்.

இப்படி நாட்கள் மாதங்களாக கடந்தபோது மணியங்கால் ஓடை தண்ணீர் வற்றி அங்கு அங்கே திட்டு திட்டாக குளமாக நிற்க ஆரம்பித்து விட்டது.

கலியமூர்த்திகூட காணவில்லை. வேலைக்கு வெளியூர் சென்று இருக்கவேண்டும். அப்படி ஒரு நாள் பார்க்கும்போது சிவன் படவர் தெரு பெரியவர் தன் விசிறு வலையை கையை ஒரு சுழற்று சுற்றி வீசினார். வலை வட்டமாக விழுந்து அலையெழுப்பியது. மீன்கள் வலையில் மாட்டி படபடவென தண்ணீரை அடித்தன.

அருகிலிருந்த நீர்த் திட்டையிலிருந்த இரண்டு கொக்குகளும் எம்பி பறந்து வட்டமிட்டு இறக்கையை அடிக்காமல் தண்ணீரில் இறங்கி நின்றன. பெரியவர் வலையை சுருக்கி இழுத்து கரைக்கு கொண்டு வந்து வலையை உதறி மீன்களை பொறுக்கினார். சின்னச் சின்ன கென்டை மீன்கள், சிலேபி மீன்கள் இருந்தது. அவர் பொறுக்காத பொடி மீன்களை  காக்காய்கள் சத்தமிட்டு கொத்திக் கொண்டு சென்றன.

மறுநாள் கார்த்தி பள்ளி விட்டு வரும்போது பாலத்தின் மேல் வந்து நின்று கீழே குனிந்து தண்ணிரை நோக்கிக் கொண்டு இருந்தான், நீர் சிறிது பாசி பிடித்து கலங்கலாக ஒரு பாசி நிறமாக தெரிந்தது. மீன் ஒன்றும் காணாமல் தலையை திருப்பும்போது ஒரு அசைவை கண்டான்.

திரும்பவும் நிதானமாக தண்ணீரைப் பார்த்தான். அப்போது பாலத்தின் அடிக்கட்டையில் இருந்த பத்திருப்பில் விரால் படுத்து இருந்தது தெரிந்தது.

கார்த்திக்கு என்னவோ போல் இருந்தது. மகிழ்ச்சியாகவும் அந்த மீனாக இருக்குமா இல்லை இது வேறா ஏன் மீனாட்டத்திற்க்கு வரவில்லை என்று சந்தேகமாகவும்.

திரும்பத் திரும்ப பழைய மாதிரி தலையை நீட்டிப் பார்ப்பதும் உள்ளிழுப்பதுமாக செய்தான். நிழல்கூட முன்பு போல் விழுவது மாதிரி தான் தெரிந்தது அவனுக்கு. ஆனால் விரால் மீன் முன்பு போல் மேலே வரவில்லை. மீன்கூட சற்று பெரியதாக தெரிந்தது. அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. நாளைக்கு பார்க்கலாம் என வந்து விட்டான்.

அப்போது ஆண்டுத் தேர்வு வேறு நடந்து கொண்டு இருந்தது. ஆனால் தினமும் வரும்போது பார்க்கத் தவறவில்லை. மீன் சட்டென்று பார்த்தால் தெரியாது. உத்துப் பார்த்தால்தான் தெரியும். சிறிதாக எச்சி துப்புவது, சின்ன குப்பைகளை போடுவது என்று அவனது முயற்சி இருக்கும். மீனிடமிருந்து எந்த அசைவும் இருக்காது. ஏமாற்றமாக இருந்தாலும் தினமும் பார்த்து உறுதி செய்து கொண்டான்.

அன்று கடைசி தேர்வு எழுதிவிட்டு வரும்போது முயற்சித்தான். மீன் ஒன்றும் சட்டை செய்யவில்லை.

அம்மா வேலை சொல்லும்போது வரும் எரிச்சல் அப்போது அவனுக்கு வந்து கல்லால் அடிக்கலாமா என சுற்றுமுற்றும் பார்த்தான். கல் ஒன்றும் இல்லை.

தூரத்தில் பெரியவர் வலையை வீசி சுருட்டி வாரிக்கொண்டு இருந்தார். சின்ன மதுவில் மோட்டு தெரு முருகன் மீன் பிடித்து கொண்டு இருந்தான். கார்த்தியை விட முருகன் நாலு வயது சின்னவன்.

சரசர என பாலத்தின் சரிவில் இறங்கினான். நரவலாக இருந்தது. ஒதுங்கி ஒதுங்கி காலைப் பார்த்து வைத்துக் கொண்டு மீன் பிடிப்பதை பார்க்க கார்த்தி முருகனிடம் வந்தான். மீன் ஒன்றும் கொத்தவில்லை. கார்த்திக்கு அப்போது திடீரென அந்த யோசனை வந்தது.

“முருகா உனக்கு விரால் மீனு வேனுமா? “

“எங்கண்ண இருக்கு?”

“வா புடிக்கலாம். முருகா நீ போயி நாக்குபூச்சிய கொட்டிட்டு தா பாரு காலவாயிக்கு போற வழியில பெரியவர் வலையில விழற பொடி சிலேபி குஞ்ச தண்ணிபுடிச்சு டப்பால போட்டு எடுத்துட்டு ஓடியா சீக்கிரம்“

“தூண்டிலை நீ எடுத்துட்டு வர்ரியாண்ண?”

“இல்லடா முருகா, நீ எடுத்துட்டு வா. வீட்டுல யாராவது பார்த்துட்டா பிரச்சினையாயிடும்”

“சரிண்ண”

முருகன் தகர டப்பியில் இருந்த நாக்குப்பூச்சியை கொட்டிவிட்டு சிறிது தண்ணீரை மொண்டுக் கொண்டு பெரியவரிடம் சென்று அவர் வலையை கரைக்கு கொண்டு வரும்வரை காத்திருந்து மீனைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு பாலத்தின் மேல் வந்தான்.

கார்த்தி குனிந்து விரால் மீன் படுத்திருப்பதைக் காட்டி தூண்டிலில் மீன் குஞ்சை மாட்டி கொடுக்கச் சொன்னான்.

முருகன் தூண்டில் முள்ளில் சின்ன சிலேபி குஞ்சை மாட்டி அதன் தலையில் எச்சிலைத் துப்பி, “போடுண,” என்றான்.

கார்த்தி தூண்டிலைத் தண்ணீரில் வீசியதும் மீன் குஞ்சு தூண்டிலில் தண்ணீர் மேலே நீந்தி கொண்டு விரால் மீன் படுத்து இருக்கும் இடத்திற்கு வராமல் இழுத்துக் கொண்டு சென்றது. தூண்டிலில் இருந்த தக்கை காற்று வாட்டத்திற்கு மீன் குஞ்சை இழுத்து சென்றது.

கார்த்தி மீன் குஞ்சை விரால் மீன் படுத்து இருக்கும் இடத்திற்கு நேர் சிரமப்பட்டு கொண்டு வரவும் படுத்து இருந்த விரால் மீன் மேலே வாலை ஆட்டி கொண்டு வரும்போதே கார்த்திக்கு புரிந்து விட்டது. அந்த மீன்தான் என்று!

விரால் மீன் குஞ்சை லபக்கென்று கவ்விக்கொண்டு உள்ளே இழுத்து சென்றது.

கார்த்தி என்ன செய்வது என திகைத்து நிற்க முருகன், “இங்கே குடுண்ண, உனக்கு புடிக்க தெரியல,” என்று தூண்டிலை வாங்கி விராலை ஒரே இழுப்பில் மேலே தூக்கி, “முள்ள முழுங்கிடுச்சு! வூட்டுல போயி கழட்டிக்கறேன்,” என்று ஓட ஆரம்பித்தான்.

விரால் மீன் தூண்டியின் முள்ளில் மாட்டி துடித்து கொண்டு இருந்தது.

வலி

 மேகனா சுரேஷ்

“ம்மா… முடியலையே அம்மா…’’  தன் இரு தொடைகளையும் கரங்களால் இழுத்துப் பிடித்திருந்த தேவி வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

“தோ… சும்மா கத்திகிட்டே இருக்காம முக்குமா… தலை முன்னாடி தெரியுது. கத்திக்கிட்டே இருந்தா மட்டும் உனக்கு பதிலா உன் புருசனா உன் குழந்தைய முக்கி பெக்க முடியும்?’’

இடுப்பை இரண்டு துண்டாய்ப் போடும் வலியை அனுபவித்துக் கொண்டிருந்த தேவி, கீழ் உதட்டை பற்களால் கவ்விப் பிடித்துக் கொண்டு, “ஐயோ முடியலையே…’’ என அதற்கும் அலறினாள்.

“நீ எல்லாம் சரிப்பட மாட்ட. இரு இரு இப்பவே பெரிய நர்ஸ் அம்மாகிட்ட சொல்லி 108 க்கு போன் போட சொல்றேன். உங்களுக்கு எல்லாம் பெரிய ஆஸ்பத்திரிதான் லாயக்கு. நாங்க எல்லாம் பொறுமையா சொன்னா நீங்க கேக்க மாட்டீங்க… அங்க போயி பட்டாதான் உனக்கு புத்தி வரும்.’’

தன் கையுறையை அந்த வெள்ளைச் சீலைப் பெண்மணி அகற்றப் போக, “அக்கா… நீங்க சொல்றது எல்லாம் கேக்குறேன்க்கா… தயவு செஞ்சி பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிடாதீங்க அக்கா…’’

அந்தப் பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டிருந்த தேவிக்கு, போன பிரசவத்தின்போது பெரிய ஆஸ்பத்திரியில் அனுபவித்த வேதனைகள் கண் முன் வந்து போனது.

அந்த நினைவுகள் தந்த வேகத்தில், மூச்சை இழுத்துப் பிடித்து, தன் வயிற்றை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை ஒரே தள்ளாக வெளியே தள்ளினாள். ஒரு நிமிடம்தான். ஒரே நிமிடம்தான்.

பத்து மாத பாரத்தை வெளியே இழுத்து எடுத்திருந்தாள் அந்த வெள்ளைச் சீலைக்காரி. அத்துணை நேரம் இடுப்பைப் பிளந்த வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தது.

இடுப்பின் கீழே விரிக்கப்பட்டிருந்த துணி முழுவதும் நனைந்து போய் உடலுக்குள் குளிரைப் பரப்பிக் கொண்டிருக்க, தேவகானமாய் குழந்தையின் அழுகுரல்.

தடுப்புக்குப் பின்பக்கத்தில் இருந்து அம்மாவின் மெல்லிய குரல், “என்ன புள்ள அக்கா..’’ எனக் கேட்பது, பிரசவ கட்டிலில் படுத்திருந்த தேவிக்கு தெளிவாக கேட்டது.

“இந்தாமா மொதோ போயி பெத்து பிளச்சவளுக்கு காபி தண்ணி வாங்கி ஆத்திக் கொண்டாமா… இன்னும் சத்தை எடுக்கணும். அதுக்குள்ள வந்துடுவீங்க என்ன புள்ள யாரு புள்ளன்னு கேட்டுகிட்டு…’’

அடுத்த பத்து நிமிடத்தில் வெதுவெதுப்பாய் தொண்டைக் குழியில் காபி இறங்க, ஒட்ட வைத்த நெற்றிப் பொட்டை உரித்து எடுப்பதைப் போல, அந்த வெள்ளைச் சீலைக்காரி தேவியின் உடலில் இருந்து சத்தையை பிரித்து எடுத்து இருந்தாள்.

வெள்ளை நிற கவுன் அணிந்திருந்த செவிலி அவள் இருந்த அறைக்குள் எட்டிப் பார்த்து, “ என்ன குழந்தை சிந்தாமணி…. குழந்தை பிறந்த நேரம், வெயிட் எல்லாம் சொல்லு… நான் ரெகார்ட் எழுதணும். அப்படியே அந்தப் பொண்ணோட புருஷனை ஒரு ஐ.டி ப்ரூப் எடுத்துட்டு நம்ம ரூமுக்கு வர சொல்லு… நாளைக்கு பர்த் சர்டிபிகேட் கொடுக்கும்போது இது என் இனிசியல் இல்ல, இது எங்க வீட்டு நம்பர் இல்லைன்னு ஆயிரத்தெட்டு கரக்சன் சொல்லுவாங்க.’’

பேசி முடித்த செவிலி மீண்டும் அங்கிருந்து விலகிச் செல்ல, தேவி தன் அருகில் இருந்த வெள்ளைச் சீலைக்காரியிடம், “அக்கா… என்ன பிள்ளக்கா?’’ என ஆவலாய்க் கேட்டாள்.

குழந்தையின் உடலைச் சுற்றி வெள்ளை துணி வைத்து துடைத்துக் கொண்டிருந்த அவள், “மொதோ குழந்தை என்ன..?’’ என தேவியிடமே கேள்வியை திருப்பினாள்.

“பொட்டப் பிள்ளைக்கா…’’ தேவி சற்றே அயர்ச்சியாய் பதில் அளித்தாள். குழந்தையைத் துடைத்து முடித்தவள், பதில் ஒன்றும் பேசாமல் குழந்தையை தேவியின் அருகே வைத்து விட்டு, “பாலைக் கொடு… அப்போதான் தீட்டு போறது குறையும்..’’ என்றுவிட்டு அந்த அறையில் இருந்து விலகி நடந்தாள். சற்றே ஒருக்களித்துப் படுத்த தேவி, குழந்தையை மூடி இருந்த துணியை சற்றே விளக்கி பார்த்தாள்.

அவளையும் அறியாமல் அவள் விழிகள் நீரால் நிரம்பின.

பொது அறைக்கு மாற்றிய பிறகும், சொந்த பந்தம் என்று யாரும் பெரிதாய் பார்க்க வரவில்லை. “முதல்ல குழந்தைக்கு துணி வாங்கிப் போடுங்க..’’ என செவிலிப் பெண் பத்து முறை கத்தி விட்டு போன பின் முதல் குழந்தை நித்தியாவின் பழைய சிறிய உடை ஒன்றை, அம்மா அணிவித்திருந்தாள்.

பசி வயிற்றைக் கிள்ளியது. “பொட்டப்பிள்ள தானா…. எதை தின்னா என்ன? வீட்ல இருந்து பழைய சோறு நீரை வடிச்சி எடுத்தாந்து இருக்கேன். குடி. உம் புருஷன் பொண்ணுன்னு சொன்னதுதான், மூஞ்ச திருப்பிட்டு போயிட்டான். ஆட்டோ ஓட்ற துரைக்கு அம்பானின்னு நினைப்பு. இங்க வேற பிரசவம் பாத்தவங்களுக்கு காசு தரணுமாம். நான் வூட்டு வேலை செய்யிற தாவுல போயி அட்வான்ஸ் வாங்கிட்டு வந்துடுறேன். அப்படியே பழைய துணி கிடச்சாக்கூட நல்லா இருக்கும். நித்திய ஒரு கண்ணு பாத்துக்கோ.’’

அம்மா கிளம்பிச் சென்றுவிட்டாள். குழந்தை பாலுக்காய் சிணுங்கியது. அதற்கு பாலைத் தூக்கி தர எழும்போதே, நித்தியா மூக்கை உறிஞ்சிக் கொண்டு வாசலுக்கு ஓடினாள்.

“ஏய் நித்யா…. இங்க வா….’’

“வரலை போ’’

“தங்கச்சி பாப்பா பாரு வாடி…’’

“எனக்கு தங்கச்சி பாப்பா வேண்டாம். தம்பி பாப்பா தான் வேணும்..’’

“ஏய் நித்யா உள்ள வா..’’

‘மாட்டேன் போ. தம்பி பொறந்தாதான் எனக்கு எல்லாம் வாங்கி தருவானாம். தங்கச்சி எனக்கு உள்ளதையும் பிடுங்கிக்குமாம்…. எனக்கு தங்கச்சி பாப்பா வேண்டாம். அதை நீ யாருக்காச்சும் வித்துடு போ’’

“நித்யா..’’ தேவி ஒரே நிமிடத்தில் உடைத்து அழுதாள். உயிரே இற்று வெளியே விழுந்து விடும் போல ஏங்கி ஏங்கி அழுதாள்.

“இந்தாமா இப்படி அழுதினா ரத்தப்போக்கு அதிகமாயிடும்… வாயை மூடுமா..’’ அதட்டிய வெள்ளைச் சீலைக்காரியின் வார்த்தைகள் தேவியின் செவிகளை தீண்டவே இல்லை.

சதைகளைக் கிழித்துப் போடும் வலியை விட, உணர்வுகளை கிழித்துப் போடும் வார்த்தைகள் தரும் வலிக்கு திடம் அதிகம் போல, தேவி தேம்பி தேம்பி அழுதுக் கொண்டே இருந்தாள்.

அம்மாவின் அழுகை நித்தியாவை தாக்க, அருகில் ஓடி வந்து தானும் அழத் தொடங்கினாள்.

 

 

 

பற்றுகை

காலத்துகள்

அந்த வருட சுதந்திர தின  விழாவிற்கான நிகழ்ச்சிகளையும் அதில்  பங்கேற்பவர்களையும் க்ளாஸ் டீச்சர் ராவ்  தேர்வு செய்து கொண்டிருந்தார்.  எல்லா நிகழ்ச்சிகளிலும் பாடும் முருகவேல், பரத நாட்டியம் ஆடும் உமா, நாடகத்தில் நடிப்பவர்கள் என எப்போதும் போல் சிலர் இந்த வருடமும் பெயர் கொடுக்க, விருப்பமில்லாத  வேறு சிலர் வழக்கம் போல் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த மாதிரியான நேரங்களில் பங்கு பெறுபவர்களின் இறுதி பட்டியல் தயாராகும்வரை  மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற பதட்டத்தோடு தன் மீது கவனம் விழாதவாறு அமர்ந்திருந்தவன் வகுப்பு முடிந்ததற்கான மணி அடிக்க, இம்முறையும் பிழைத்து விட்டோம் என்று தன் மன இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டிருக்கும்போது  ”இன்ட்ரவெல்ல ஸ்டாப்  ரூமுக்கு வாடா” என்று சொல்லிவிட்டுச் சென்றார் ராவ்.

ஆசிரியர் அறைக்குள்  நுழைந்தவனிடம் ‘கண்ணன் ஒங்க தாத்தா பத்தி சொன்னான்டா’ என்று ஆரம்பித்தார். இவன் ஒன்றும் புரியாமல் பார்க்க, ‘ஆர்மில இருந்தார்ல?’ என்று கேட்டார். ‘எஸ் ஸார்’, என்றவனிடம், ‘ப்ரீடம் ஸ்ட்ரகுள்லகூட பார்டிசிபேட் பண்ணிருக்கார்ல’, என்று மீண்டும் கேட்டதற்கு எதுவும் பதில் சொல்லாமல் நின்றான். ‘என்னடா, கண்ணன் அப்படித்தானே சொன்னான்’, என்றார் ராவ்.  .’இல்ல ஸார்…’ என்று முனகியவனிடம்  ‘என்னடா இல்ல ஸார், அப்போ  அவர் ப்ரீடம் பைட்டர் இல்லையா, கண்ணன் சும்மா சொன்னான்னா?’என்று கருணாகரன் ஸார் கேட்க, ‘அப்டி இல்ல ஸார்’ என்று இழுத்தான். ‘இந்த வருஷம் இன்டிபென்டென்ஸ் டே பங்க்ஷல யாராவது ப்ரீடம் பைட்டர சீப் கெஸ்ட்டா போடலாம்னு ஐடியா இருக்கு’ என்ற ராவிடம்,  ‘தாத்தா பேசுவாரான்னு தெரியாது ஸார்,’ என்று முனகினான். ‘என்னடா அலட்ற?’ என்று கருணாகரன் ஸார் அடிப்பதுபோல் போலியாக கையோங்கியபடி வந்தார்.  ‘ஸார், அப்டிலாம் இல்ல ஸார்…” என்று அவன் மீண்டும் முனகவும், ‘சரி போடா’, என்று சலித்த குரலில்  ராவ் சொன்னார்.

சென்ற மாதம் நடந்த  சாதாரண நிகழ்வுதான்.  தேசிய அளவில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருந்த அந்த பதினைந்து பதினாறு வயது சிறுவன் சில மாதங்களுக்கு முன் நடந்த வெஸ்ட் இண்டீஸுடனான தொடரில் சேர்க்கப்படாதது குறித்தும், அடுத்த வரவிருந்த பாகிஸ்தானுடனான தொடரிலாவது சேர்க்கப்படுவானா என்பது குறித்தும் மாலை வீட்டிற்கு வெளியே சந்துருவுடனும் கண்ணனுடனும் பேசிக்கொண்டிருந்தான். இரானி ட்ரோபியில் அவன் அடித்திருந்த சதத்தை முன்வைத்து  இவனும் சந்துருவும் அவன் சேர்க்கப்பட வேண்டுமென்ற கட்சியில் இருந்தார்கள். பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களை அந்தச் சிறுவனால் எதிர்கொள்ள முடியாதென்பது கண்ணனின் வாதம். ‘அவன் இண்டர்வ்யு வந்துதே, சண்டே  அமர்நாத் கிரிக்கெட் டிவி ப்ரோக்ராம் பாத்திருக்கியா, வெஸ்ட் இண்டீஸ் பௌலர்ஸ பேஸ் பண்ண ரெடின்னு தைரியமா சொன்னான், பௌனஸ்னால பால் ஈஸியா பாட்க்கு வரும்னான்’.

‘பாக்கலாம்டா, பர்ஸ்ட் செலக்ட் ஆகட்டும்,  அவன பத்தி எழுதிருக்கறத படிச்சுட்டு எங்கப்பா ஒன்னோட மூணு நாலு வயசுதான் பெரியவன், எவ்வளவு அச்சீவ் பண்றான் பாருங்கறார்’, என்றான் கண்ணன். அவனுடைய தந்தை மூவருடைய க்ளாஸ் டீச்சராகவும் இருப்பதால், அவன் முன்  அவர் குறித்த விமர்சனங்கள் குறித்து  ஜாக்கிரதையாக, அவருடைய பட்டப் பெயரை கூட உச்சரிப்பதை தவிர்த்துதான், இருப்பார்கள். எனவே பொத்தாம்பொதுவாக கண்ணனுக்கு ஆசுவாசம் அளிக்குமாறு பேசிக்கொண்டிருக்கும்போது கோவிலுக்கு செல்வதற்காக வெளியே வந்த இவன்  தாத்தா,  ‘கோந்தே உள்ள போய் பேசு, பனியாருக்கு பாரு, இல்லன்னா மப்ளர் கட்டிக்கோ,’ என்று  சொல்லியபடி  இவன் தோளைத் தொட்டு அணைக்கவும், அவன்  விலகி உள்ளூர நெளிந்தான். இவனுடைய அசௌகர்யத்தை கவனித்த கண்ணன், ‘என்னடா கோந்தேங்கராறு, நைட் சாப்பாடு தாத்தாதான் வூட்டி உடுவராடா ‘ என்று கிண்டலாகக்  கேட்கவும், ‘இவங்க பாட்டி இவன கூப்டறது உனக்கு தெரியாதுல்ல, அது இத விட சூப்பராருக்கும், என்னடா சொல்லட்டுமாடா,’ என்று ராகத்துடன் ‘கிக்.. கி… கி ..’ என்று  அப்பெயரைச் சொல்ல ஆரம்பித்த  சந்துருவை, ‘சும்மாருங்கடா, உள்ள போலாம்’ என்று இடைமறித்து  அழைத்துச் சென்றான்.

‘இந்த தாத்தாதான ஆர்மில இருந்தார்னு சொன்ன?’ என்று கண்ணன்  இவனிடம் கேட்டான். முழங்கை வரை நீளும் வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, இன்னும் ஆக்கிரமிக்க மிகக் குறைவான இடத்தை மட்டும் விட்டு வைத்திருந்த வழுக்கை, மழிக்கப்பட்ட மீசை, அகன்ற நெற்றியில் விபூதிப் பட்டை, முகத்தை நிறைத்திருக்கும் மென்மை எல்லாமே இவனுக்கேகூட அவ்வப்போது அந்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ஆமாண்டா தோ வரேன் இரு,’ என்றவன், உள்ளறைக்குச் சென்று தாத்தா ஊரில் தன் வீட்டில் வைத்திருக்காமல் இவர்கள் வீட்டில் ப்ரேம் செய்து மாட்டி வைத்திருந்த பதக்கங்களை எடுத்து வந்தான். அவற்றை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கண்ணன், ‘என்னடா இந்த மெடல் வித்தியாசமா இருக்கு,’ என்று சிவப்பு வெள்ளை நீல நிறக் கலவையில்  சிலுவை வடிவில் நெய்யப்பட்ட  துணி பதிக்கப்பட்டிருந்த பதக்கத்தைப் பற்றி கேட்க, இவன்  அவசரமாக, ‘தாத்தா ஆர்மில சேர்றதுக்கு முன்னாடி ப்ரீடம் ஸ்ட்ரகிள்ல பார்டிசிபேட் பண்ணிருக்கார்டா’ என்று பொய் சொல்லி விட்டான்.

இவன்  தாத்தா சுதந்திரத்திற்கு முன்பு  இளம் வயதில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில்  சிப்பாயாக சேர்ந்ததும்,  உலகப் போரின்போது  அவர் மத்திய கிழக்கின் போர் முனைகளுக்கு அனுப்பப்பட்டதும், பின் சுதந்திர இந்திய ராணுவத்தில் பணியாற்றி கேப்டனாக ஓய்வு பெற்றதும் அவனுக்குத் தவறாகத் தெரியவில்லை என்றாலும், விடுதலைப் போராட்ட வீரர் ஒருவர் பற்றிய சிறு குறிப்புடன் அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமீபத்திய பூந்தளிர் இதழில் பார்த்ததிலிருந்து அது குறித்த ஒரு சிறிய ஏக்கம் மட்டும் உருவாகி இருந்தது.  அதனால்தான் இவன் அப்படியொரு பொய் சொல்லியிருக்க வேண்டும், ஆனால் கண்ணன் தொடர்ந்து கேட்ட கேள்விகளை சமாளிப்பது பெரும் பாடாகி விட்டது. அவன்தான் தன் தந்தையிடம்  உளறி வைத்திருக்க வேண்டும்.

தப்பித்த  உணர்வோடு வெளியே வந்து  தண்ணீர் குடிக்கும்போது இடைவேளை முடிவிற்கான  மணி அடித்தது.  இந்த வகுப்பு  அடிக்க அஞ்சாத  மார்கரெட் மிஸ்ஸுடையது என்பதால் வேகமாக நடக்க ஆரம்பித்தவன்,  வழியில் பெண் ஆசிரியர்களின் அறையில் இருந்து திருத்தப்பட்ட ரெகார்ட் நோட்டுக்களுடன் வந்து கொண்டிருந்த உமாவை  எப்போதும் போல்  கள்ளப் பார்வை பார்த்தவன் அவள் பார்த்ததும் தலையை திருப்பி கடந்து செல்ல முயன்றான்.

‘ஒங்க தாத்தா ப்ரீடம் பைட்டரா?’ இவனுடைய திருத்தப்பட்ட விடைத்தாள்களை மற்றவர்கள் மூலமாக பெற்று பார்வையிடும், ஆனால்  இதுவரை நேரில் ஒரு வார்த்தைகூட இவனிடம் பேசியிராத உமா இப்போது இவனிடம் வலிய வந்து பேசுகிறாள். மையமாக தலையை ஆட்டி வைத்தான்.

 ‘அவர் பங்க்ஷனுக்கு வருவாரா’

‘தெரியல, சாருக்கு இப்போ வேற ஐடியா இருக்குன்னு நெனக்கறேன்’

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஏதாவது பேசலாம் என்று திரும்பியவன் கண்ணில் பள்ளி மேடையின் முன் இருந்த கொடிக்கம்பம் கண்ணில்பட, எதுவும் சொல்லாமல்  மௌனமாக நடந்த வகுப்பை  நெருங்கவும் சற்று பின்தங்கினான். உமா வகுப்பறைக்குள் போனபின் கொஞ்சம் பிந்திச் சென்று, “ஸார் பாக்கச் சொல்லிருந்தார்”, என்று சொல்லியதை  சற்று சந்தேகத்தோடுதான் மிஸ் ஏற்றுக்கொண்டார். தன் இடத்திற்குச் சென்று அமர்ந்தான்.  ‘என்ன தம்பி  பின்னாடியே  வர’, ‘ப்ராடு ஒண்ணாத்தான் வந்த்ருப்பான், ஓட்டுவோம்னு தனியா வந்தமாறி வரான்,’ போன்ற சீண்டல்களை  எப்போதும் போல்  உள்ளூர  ரசிக்க முடியவில்லை.

ராவ் இவன்  தெருவுக்கு அடுத்த தெருவில் வசிப்பதையும் அவருக்கு இவன்  வீடு தெரியுமென்பதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தப்பி விட்டதாக எண்ணியது  தவறு. அடுத்த நாளான சனிக்கிழமை காலை பத்து மணி அளவில், ‘கோந்தே, உன் க்ளாஸ்  ஸார் வந்திருக்கார்டா,’ என தாத்தாவின் குரல் கேட்டவுடனேயே எந்த ஸார் என்று அவர் சொல்லாமலேயே புரிந்தது. தயங்கியபடி வெளியே வந்து எதுவும் சொல்லாமல் நின்றான். அதற்குள் உள்ளே வந்தமர்ந்திருந்த ராவ் ‘உங்களத்தான் பாக்க வந்தேன் ஸார்,’ என்று  தாத்தாவிடம் சொல்லிவிட்டு, ‘இவன் எதாவது சொன்னானா’ என்று இவனைச் சுட்டி கேட்டார். தாத்தா எதுவும் புரியாமல் இவனைப் பார்க்க, ‘ பிரச்சனைலாம் ஒண்ணுல ஸார், நெக்ஸ்ட்  சாடர்டே ஈவனிங் இண்டிபென்டென்ஸ் டே ப்ரோக்ராம்ஸ் வச்சிருக்கோம், அதுக்கு உங்கள மாதிரி  ஒருத்தர் சீப் கெஸ்ட்டா இருக்கணும்னு ஆசைப்படறோம்,  இவன் பிரெண்ட் கண்ணன்தான் உங்களைப் பத்தி சொன்னான்’ என்று சிரித்தபடி சொன்னார். ‘என்ன கோந்தே’ என்று இவனிடம் கேட்டவருக்கு, ‘அதான், ஆர்மில இருந்திருக்கீங்க, நம்ம ப்ரீடம் ஸ்ட்ரக்குள்ல வேற கலந்துட்ட்ரிக்கீங்க, இதபத்திலாம் கண்ணன்ட்ட சொல்லிருக்கான்’ என்று ராவே பதிலளித்தார். இவன் இருவரிடமிருந்தும்  இருந்து பார்வையை விலக்கி தலையை குனிந்து கொண்டான்.

‘இவன்ட்ட சொல்லி வுடுங்க ஸார், இன்னிக்குள்ள சொன்னீங்கன்னா நாங்க ப்ளான் பண்ண வசதியா இருக்கும்’ என்று ராவ் கிளம்பியதும் இவனும் வெளியே ஓடி மதிய உணவிற்குதான் வந்தான். வீட்டுப்பாடம் செய்வதாக மாலை வரை யாருடனும் பேசாமல் ஓட்டினான். மாலை நடைக்கு இவனும் வருகிறானா என்று கேட்ட தாத்தா, வீட்டுப்பாடம் இன்னும் பாக்கி உள்ளது என்று கூறியவனிடம், ‘ஸார்ட்ட நான் வரேன்னு சொல்லிட்றையா கோந்தே’ சென்று சொல்லிச் சென்றார். இரவுணவின்போது ‘என்னடா  தாத்தா பத்தி ஸ்கூல்ல பெரிசா சொல்லி வெச்சுருக்க’ என்ற அம்மாவிடம்,  ‘தாத்தாதானே அவனுக்கு ரொம்ப  இஷ்டம்,’ என்றார் தாத்தி. ‘தாத்தா ஆர்மில இருந்தத பத்திதாம்மா பேசிட்டிருந்தேன், கண்ணன் அவங்கப்பாட்ட ஏதோ  சொல்லிட்டான் போலிருக்கு,’ என்று சொல்லிவிட்டு தாத்தாவை ஓரக்கண்ணால் பார்த்தான். அவர்   இவனையே பார்த்துக் கொண்டிருந்ததை அப்போதுதான் கவனித்தான். ‘இட்ஸ் ஆக்ட்சுயலி எ குட் ஐடியா, பசங்களுக்கு ஆர்மி பத்தி தெரியணும். நீ பிரிட்டிஷ்  ஆர்மி எக்ஸ்பீரியென்ஸ் பத்திகூட சொல்லலாம்லபா’ என்று தாத்தாவிடம் அப்பா சொல்ல, இருவரும் பார்வையை விலக்கிக் கொண்டார்கள்.

ஊருக்குச் செல்லும்போது கோவிலுக்கு அழைத்துச் சென்று இவன் அடம் பிடித்ததால் கோவில் யானைக்கு ஒரு சீப்பு பழம் வாங்கிக் கொடுத்த, கணபதி ஹோட்டலில் இட்லியும் வடையும் வாங்கிக் கொடுத்த, இவனுக்குப் மிகவும்  பிடித்தமான ‘ஆக்‌ஷன்’  நடிகர் மூன்று வேடங்களில் -அதிலும் காவல்துறை அதிகாரியாக மிக ஆக்ரோஷமாக- நடித்து வெளிவந்த  அதிரடி   திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று இவனுடைய பிடிவாதத்தால் அந்த வயதிலும் அவ்வளவு கூட்டத்தில் சென்று சிக்கி, போலீஸ்காரரின் தடியடியையும் தாண்டி , ‘ டிக்கெட் கெடச்சாச்சு கோந்தே’ என்று சிரித்தபடி வெளியில் வந்த தாத்தா இவன் சொல்லிய பொய்யை வெளிப்படுத்தாதது இவனுக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்றாலும் விழாவிற்கு வர ஒப்புக் கொண்டது ஏன் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. வீட்டில் யாரும் இல்லாத மாலை வேளையொன்றில் ‘என்ன பேசப் போற தாத்தா,’ என்று கேட்டவனிடம் ‘பாத்துக்கலாம் கோந்தே ‘என்றவர் பின்,  ‘கோந்தே… உங்க ஸார் நல்லா பீடா போடுவாரா’ என்று கேட்டார். ‘ஆமா தாத்தா, வெத்தல பாக் பான் பராக்க்னு அவர பசங்க கூப்டுவாங்க,’ என்று இவன் சொல்லவும் சிரித்தவர், மற்ற ஆசிரியர்களுக்கு இவர்கள் வைத்திருந்த பட்டப் பெயர்கள் குறித்து கேட்டுக்கொண்டார்.

விழா நாள் வரை இடைப்பட்ட பத்து பதினைந்து நாட்களை தாத்தா ஸ்கூலுக்கு வருவது பற்றி எதுவும் பேசாமலே ஒருவாறு கழித்தான்.   இப்போதெல்லாம் மாலை நடைக்கு இவனும் வருகிறானா என தாத்தா கேட்பதில்லை. இவனுக்கு  ‘புக் கிரிக்கெட்டில்’, ‘முதுகு பங்க்சரில்’ ஆர்வம் குறைந்தது. வகுப்பில் உமாவைக் கள்ளத்தனமாக பார்க்கத் தோன்றவில்லை.  தமிழ் ஐயாவிடம் தொடர்ந்து நாலைந்து நாட்கள் அடி வாங்காமல் இருந்தவனை ‘என்னடா திருந்திட்டியா’என்று சந்துரு கிண்டல் செய்தான்.

பதின்மூன்றாம் தேதி காலை உணவை முழுதும் சாப்பிடாமலேயே எழுந்தவனைப் பார்த்து ‘என்னமோ இவன் சீப் கெஸ்ட்டா போற மாதிரி டென்ஷனா இருக்கான்,’ என்று சொன்னார் அம்மா.  இந்த மாதிரியான விழா நாட்களில் ஒன்றிரண்டு வகுப்புக்கள் நடக்காது என்பதால்  மதியத்திலிருந்து வகுப்பில் பரவசமான சூழல்.  ‘டேய் கொஞ்சதான் சந்தோஷமா இரேன், என்னமோ நீ ஸ்டேஜ்ல பேசப்போற மாதரி இருக்க, என்னாச்சு ஒனக்கு’ என்று கேட்டான் சந்துரு.  மதியம் இரண்டாவது  பீரியட்  நடந்து கொண்டிருக்கும்போது, மாணவர்களை அமர வைப்பதற்கான அழைப்பு வர, எங்கும் ஒரே கூச்சல்.  மாணவர்கள் மேடையரங்கின் முன்னே இருந்த மைதானத்தில் குழுமி அமர  வைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தச் சந்தடியில் வெளியேறி விடலாம் என்றால் கேட் பூட்டப்பட்டிருந்தது. தாத்தா வந்திருப்பாரா என்ற யோசனையுடன் அமர்ந்திருந்தவனை  ராவ் தேடுகிறார் என்று இவன் வகுப்பு மாணவனொருவன் சொல்ல, மேடையின் பின்புறத்திற்கு சென்றான் . ‘தாத்தாவா பாத்துக்காம என்னடா அங்க ஒக்காந்திருக்க’ என்றார் ராவ்.

மேடையின்  பின்புறம்தான் தலைமையாசிரியர் அறை. தாத்தா வந்தவுடன் அங்கு அழைத்துச் செல்லப்பட்டு ப்ரதருடன் பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது. அருகில் இருந்த வகுப்பறைகளில் வழக்கம் போல் நேருவும், பாரதியும் காணக் கிடைத்தார்கள். சாதாரண பள்ளிச் சீருடையில் மிக அழகாக தெரியும் உமா,  மலையாள பாணி சிவப்பு வெள்ளை  உடை மற்றும் கொண்டையுடன்  -பல மாநில உடைகளை அணிந்த பெண்கள் நடனத்தின் அங்கமாக-  பார்ப்பதற்குச் சகிக்காமல் வெளியே  நின்றிருந்தாள்.  இவனைக் கண்டதும், ‘தாத்தா வந்துட்டாரா?’ என்று அருகில் வந்து கேட்டாள்.

‘வெள்ளாவி ரூம்ல,’ என்றதும் எழுந்த சிரிப்பை மறைத்தபடி  அறையினுள்ளே எட்டி  பார்த்தவள், ‘ஒன்ன மாதிரியே இருக்கார்’. என்றாள்

‘இல்ல நான்ல அவர மாதரி இருக்கேன்’ என்ற இவன் சொன்னதற்கு ‘அப்போ உனக்கும்  அவ்ளோ வயசாயிடுச்சுங்கறியா’ என்று  மீண்டும் சிரித்தபடி பதிலளித்தவள்,  ‘பங்க்ஷன் முடிஞ்சதும்  தாத்தாட்ட  பேசப்போறேன்’  என்று கேட்டு இவனுடைய சந்தோஷத்தை வடியச் செய்தாள். உரையாடலை நீட்டிக்கும்  மனநிலை போனது.  அவள் மீண்டும் உள்ளே செல்வதை ஆற்றாமையுடன் பார்த்தவன்  தலைமையாசிரியர் அறை அருகே கொஞ்ச நேரம் நின்றிருந்தான்.  தாத்தாவும் வெள்ளாவியும்  சிரித்தபடி  பேசிக்கொண்டிருப்பதை அதற்கு மேல்  பார்க்க முடியாது  திரும்பி வந்து  நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டான்.

 விழா நிகழ்வுகளின்போது அவை குறித்து பார்வையாளர்கள் தரப்பிலிருந்து வெளியிடப்படும் வழக்கமான  விமர்சனங்களில் இவனுடைய பங்களிப்பு வழக்கத்தை விட குறைவாக இருந்தது.  நிகழ்ச்சிகள் முடிந்து,  பரிசுகள் வழங்கியபின் தன்னுடைய அனுபவங்கள் என்பதாக இல்லாமல் நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ற  வழமையான, ஆனால்  சுருக்கமான உரையை நிகழ்த்தினார் தாத்தா.

எல்லாம் முடிந்து  அனைவரும் கலைய ஆரம்பிக்க, இவன் காருக்காக தாத்தாவுடன் காத்திருந்தான். ‘ஒங்கள மாதரி ஒர்த்தர் வந்தது பசங்களுக்கு ப்ளெஸ்ஸிங் மாதிரி’ என்று உபசாரமாய் ராவ் சொன்னது அசூயையாக இருந்தது. வேறெங்கோ பார்வையை திருப்பியவன்  தாத்தா எதுவும் பதில்  சொல்லாததால் அவரை நோக்கினான். அவர் கொடிக்கம்பத்தை பார்த்துக்கொண்டிருந்தார். இவன் வகுப்பு மாணவர்கள்  சிலர் அவருடன்  பேசும் ஆவலில் அருகில் வந்தார்கள்.  உமா இல்லை, உடை மாற்றிக் கொண்டிருப்பாளாக இருக்கும், அதுவும் நல்லதுதான் என்று நினைத்தான்.  வழக்கமான அறிமுகங்களுக்குப் பிறகு, பொதுப்படையான சில பேச்சுக்கள். சுதந்திர போராட்டம் பற்றிய கேள்விகளை லாகவமாக தவிர்த்த  தாத்தா பசங்களின் மத்தியில் சற்றே உற்சாகமாகிவிட்டது போலிருந்தது. ‘தாத்தா, உங்க சொந்த ஊர் எது?’ என்று யாரோ கேட்க, ‘பழுவூர்’ என்றவரிடம்  ‘ஒங்க வீட்ல நீங்க சுதந்திரப் போராட்டத்துல கலந்துக்கறதுக்கு ஒண்ணும் சொல்லலையா’ என்று இன்னொரு கேள்வி. சில நொடிகள் எதுவும் பேசாமல்  இருந்த தாத்தா ஏதோ சொல்ல ஆரம்பிக்க கார் தயாராக இருப்பதாக ராவ் வந்து சொன்னதும் தப்பித்தால் போதும் என்று தாத்தாவுடன் கிளம்பினான்.

வீட்டிற்கு வந்த பின்பும் படபடப்பு அடங்கவில்லை. விழா பற்றி தாத்திக்கு தாத்தா சொல்லிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்தான். பின்  தன் வழக்கமான  மாலை நேர நடைக்கு தாத்தா கிளம்பினார். அன்றைய நிகழ்வுகளை  மனதினுள் ஓட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவன் உள்ளே சென்று  தாத்தியிடம், ‘தாத்தாவும் பழுவூர், ஓன் ஊர்தானா தாத்தி’ என்று கேட்க, ‘ஆமா, அடுத்த தெருதான் ‘ என்று மட்டும்  சொல்லிவிட்டு நிறுத்தி விட்டார்.  வேலை முடிந்து முதலில் வந்த அம்மாவிற்கும்  பின் அப்பாவிற்கும்  மீண்டும் விழா பற்றி  விவரிக்கச் செய்து, ‘அத வுட்டுட்டியே’ என  இவன் பேச்சுவாக்கில் தவற விடும் விஷயங்களை  நினைவூட்டியபடி தாத்தியும்  இவன் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தார். ஒருவாறு அவர்களிடமிருந்து தப்பித்து  போர்ஷனின் பின்புற சுவற்றின்  மீது அமர்ந்து  காலிமனையை பார்த்தபடி அமர்ந்திருந்தான். இருள் சூழ ஆரம்பிப்பதை கவனித்தபடி இருந்தவன் வெளியே செல்ல எழுந்தான். வீட்டின் இறுதியில் உள்ள அவர்களின் போர்ஷனில் இருந்து வெளியே வர  இருள் நிறைந்த சந்தைத் தாண்டிச் செல்ல வேண்டியிருப்பதை இப்போது பொருட்படுத்தாமல் ஓடிக் கடந்து தெருவிற்கு வந்தான்.

முதலில் நாடார் கடைக்குச் சென்று, ‘தாத்தா வந்தாரா நாடார்?’ என்று  கேட்க, ‘பழம் வாங்கிட்டு  இப்பதான் மேன் கெளம்பினாரு, என்ன மேன் தாத்தாவோட இப்பெல்லாம் வர்ரதுல்ல, ரொம்ப பிஸியோ?’ என்று சொன்ன நாடாரிடம், ‘அதெல்லாம்ல, வரேன் நாடார்,’ என்று கிளம்பினான். தாத்தா கோவில் வழியாக சுற்றுப் பாதையில் சென்றிருக்கக்கூடும் என்று யூகித்து  ராமர் கோவில் மேட்டின் மீது ஏறி வலதுபுறம் திரும்பி கோவில் குளத்தெரு முனையில் நின்று கவனித்தான். விளக்குகள் இல்லாத, மரங்கள் அடர்ந்திருந்த இடம். இவன் நின்றிருந்த தெருமுனையில் இருந்த வெளிச்சத்தில் குளக்கரை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மங்கலாகத் தெரிந்தார்கள். சற்றே கூன் போட்டிருந்த, கையில் சிறு பை வைத்திருந்தது போலிருந்த உருவத்தை கண்டு கொண்டவன், இருளினுள் நுழைந்து அதன் அருகே சென்றான்.

சிதிலமடைந்திருந்த அந்த வீட்டின் திண்ணையில் படுத்திருந்த சேட்டின் அருகில் வழக்கம் போல் வாழைப்பழங்களை  வைத்துக் கொண்டிருந்தவர்  யாரோ அருகில் வருவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தார்.  எதுவும் சொல்லவில்லை. இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.  இருளுக்கு இவன் கண்கள் பழக, தாத்தாவை இன்னும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. சிறிது நேர அமைதிக்குப் பின் ‘தாங்க்ஸ், ஸாரி தாத்தா,’ என்று இவன் சொல்லவும் தோளில் கைவைத்து அழுத்தினார்.  ஒரு பக்கம் சலனமில்லாத குளம், மறு புறம் நீண்ட விழுதுகள் தொங்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய ஆலமரம் என  வழக்கமாக மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் இடத்தை இயல்பாக கடந்தான். சின்ன மேடு ஏறி இறங்கி தெருவுக்குள் நுழைந்தார்கள். விளக்குகளின் ஒளியில் அவர்களின் நிழல்கள் நீண்டும் குறுகியும் ஒன்றியும் பிரிந்தும் பின்தொடர்வதைப் பார்த்துக் கொண்டே நடந்தவன் தாத்தாவின் கையை தன்னிச்சையாக  பற்றிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.  வீடு வந்து சேரும்வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.