சுரேஷ் கண்ணன்

பாய்மரக்கப்பல் – விவசாய வீழ்ச்சியின் துயரம்

சுரேஷ் கண்ணன்

paaimarakappal

பதாகைபாவண்ணன் சிறப்பிதழிற்காக கிரிதரன் ராஜகோபாலன் என்னைத் தொடர்பு கொண்டு கட்டுரை கேட்ட போது பாவண்ணன் என்கிற எழுத்தாளர் குறித்து எனக்குள் எந்த மாதிரியான சித்திரம் தோன்றுகிறது என்று சற்று நேரம் சிந்தித்துப் பார்த்தேன். பாவண்ணனின் எழுத்துக்களை அச்சிலும் இணையத்திலும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்து வந்திருந்த போதிலும் நானே வெட்கமும் குற்றவுணர்வும் கொள்கிற மாதிரி அவர் பற்றிய எந்தவொரு சித்திரமும்  எனக்குள் தோன்றவில்லை. ஓர் எழுத்தாளரின் படைப்புகளை தொடர்ந்து வாசிக்கும் போதே அவை பற்றிய மனப்பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வைத்துக் கொள்வதே  சிறந்த வாசகனின் செயலாக இருக்கும் என்று தோன்றுகிறதுஅந்த படைப்புகளை மீள்நினைவும் வாசிப்பும் செய்யும் போது அதன் மூலம் எழுத்தாளரின் உத்தேசமான முழு சித்திரத்தை நாம் எட்டிவிடக்கூடும். இன்னமும் அடுத்தபடி நிலையில் ஒரு விமர்சகனாக அந்த எழுத்தாளரின் படைப்புலகை துல்லியமாக சித்தரிக்கும் முயற்சியிலும் ஈடுபடுவதற்கான சாத்தியத்தை அது தரக்கூடும்.

எழுத்தாளர் ஜெயமோகன் நவீன தமிழிலக்கிய எழுத்தாளர்கள் பற்றிய நூல்களில் தொடர்புள்ள எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த படைப்புலகை அதற்குரிய பொருத்தமான மேற்கோள்களுடன் ஏறத்தாழ கச்சிதமாகவும் துல்லியமாகவும் தம்முடைய அற்புதமான தர்க்க மொழியின் மூலம் நிறுவி விடுவார்.. ஒரு கறாரான விமர்சகன் எட்ட வேண்டிய இடம் இதுவே என்று தோன்றுகிறது.

பாவண்ணன் எழுத்துக்கள் குறித்து நான் இதுவரை வாசித்தவற்றை மெல்ல நினைவுப்படுத்திப் பார்த்தேன். திண்ணை இணைய இதழில்எனக்குப் பிடித்த சிறுகதைகள்என தமிழக, இந்திய, அயல் எழுத்தாளர்களின் நூறு சிறுகதைகளை மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்தி அவர் எழுதிய தொடர் பசுமையாக நினைவில் வந்தது. தமது வாழ்வியல் அனுபவங்களோடு ஒவ்வொரு சிறுகதையையும் நுட்பமாகப் பொருத்தி அவர் எழுதிய விதம் அற்புதமானதாக இருந்தது. தாம் வாசிக்கும் நூற்களைப் பற்றிய அனுபவங்களையெல்லாம் தம்மோடேயே வைத்துக் கொள்ளாமல் அதை பிறருக்கும் சுவாரசியமாக அறிமுகப்படுத்துவது மிக முக்கியமான இலக்கியப் பணி மாத்திரமல்ல, அடிப்படையானதும் ஆகும். மிக குறிப்பாக தம்முடைய மொழியாக்கப் பணியின் மூலம் கன்னட மொழியிலிருந்து தமிழிற்கு அவர் அறிமுகப்படுத்தியிருக்கும் பல எழுத்துக்கள் முக்கியமானவை.

இலக்கியப்பூசல்களின் மூலமும் சர்ச்சைகளின் மூலமும் தன் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் எந்தவொரு மலினமான முயற்சியிலும் ஈடுபடாமல் எது பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் எதிர்பார்க்காமல் ஒரு தெளிந்த நீரோடை போல அவர் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் அவரது நீண்ட கால இலக்கியச் செயற்பாடுகளை நினைவுகூர்ந்தால் பிரமிப்பாக இருக்கிறது. எழுத்தாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், சிறுவர்களுக்கான எழுத்து பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட எழுத்து அவருடையது. மூன்று நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள், கட்டுரைத் தொகுதிகள் என மிக நீண்ட பட்டியலைக் கொண்டது அவரது படைப்புலகம். சமீபத்திய தீராநதியில், மறைந்த வெங்கட்சுவாமிநாதன் பற்றி அவர் எழுதும் அஞ்சலிக் கட்டுரை கூட, வாசகனின் தோள் மீது கைபோட்டு உரையாடும் அவரின் வழக்கமான சிநேகமான தொனியை இன்னமும் கைவிடாமலிருக்கிறது.

***

அவரது புதினங்களுள் 1995-ம் ஆண்டின் இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற புதினமானபாய்மரக்கப்பல் மிக முக்கியமானது. சூழலியல் குறித்த வந்த தமிழ் புதினங்களின் முன்னோடியான படைப்புகளில் இதுவொன்று.

உலகில் விவசாயத்தை பெருமளவு செயல்படுத்தும் நாடுகளுள் ஒன்று இந்தியா. அதற்கான நிலப்பரப்பும் இயற்கைச் செல்வங்களும் இங்குள்ளன. உணவுப் பொருட்களை விளைவிப்பதில் தன்னிறைவு பெற்றதோடு உபரிச் செல்வத்தை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முக்கியமான காரணிகளில் ஒன்றாக உள்ளது விவசாயம். ஆனால் இந்தப் பெருமையை இந்தியா கடந்து செல்லும் கனவு போல மெல்ல மெல்ல இழந்து வருகிறது. விளைநிலங்களின் இடங்கள் பறிக்கப்பட்டு அந்த இடத்தில் தொழிற்சாலைகளும் வீடுகளும் இடம்பெறுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் இந்த நில அரசியலுக்கு அதிகார வட்டங்கள் தங்களின் ஆதாயத்திற்காக இந்த அழிவிற்கு உடந்தையாக இருக்கின்றன. அந்நிய நாடுகள் தங்களின் வணிகத் தந்திரங்களின் மூலம் அதிக சாகுபடிக்கு ஆசைகாட்டி விற்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் காலப்போக்கில் விளைநிலங்களை மலட்டுத்தன்மையாக்கி விடுகின்றன. ஒருபுறம் கடன்களினாலும் இன்னொருபுறம் இடைத்தரகர்கள் அடிக்கும் கொள்ளை லாபம் மூலம் தங்களின் விளைப்பொருட்களுக்கான நியாயமான வருவாய் கிடைக்காத துயரங்களினாலும் விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலம் ஆண்டுக்கு ஆண்டு நீடித்துக் கொண்டே போகிறது. வேளாண் நிலங்களும் காடுகளும் அழிக்கப்பட்டுக் கொண்டே போவதும் நாகரிக மாற்றங்களினால் ஏற்பட்டிருக்கும் நுகர்வு கலாச்சாரமும் சுற்றுச் சூழலை பெருமளவு நாசம் செய்கின்றன.

தம்முடைய சமகாலத்தில் சமூகத்தில் ஏற்படும் எதிர்மறையான மாற்றங்களை, அழிவுகளை பதிவு செய்து தொலைநோக்குப் பார்வையோடு சுட்டிக்காட்டி எச்சரிப்பது ஒவ்வொரு எழுத்தாளரின், படைப்பாளியின் தார்மீக கடமையாகும். இந்த நோக்கில் தமிழில் எழுதப்பட்ட புதினங்களில், சூழலியலில் ஏற்படும் ஆபத்தைப் பற்றி அது பற்றி அதிகமாக உரையாடப்படாத காலத்திலேயே நுட்பமாகவும் கலையமைதியுடனும் எழுதப்பட்ட முதல் புதினமாக 1969-ல் வெளிவந்த  சா.கந்தசாமியின்சாயாவனத்தைச்சொல்லலாம். தஞ்சைப் பகுதியிலுள்ள ஒரு வனம் மெல்ல மெல்ல அழிந்து போவதைப் பற்றிய கவலையை தன்னுடைய மையமாக பதிவு செய்தது அந்தப் புதினம்.

பிறகு 1990-ல் வெளிவந்த ஜெயமோகனின்ரப்பர்புதினம், ரப்பர் என்கிற பணப்பயிர் எவ்வாறு மற்ற ஆதாரமான உணவுப் பயிர்களை அழித்து உறிஞ்சி பிரம்மாண்டமான தொழிலாக வளர்ந்து நிற்கிறது என்பதை ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியோடு இணைத்து உரையாடுகிறது அந்த நாவல். இந்த வரிசையில் பாவண்ணனி்ன்பாய்மரக்கப்பல்புதினத்தையும் வைத்துப் பார்க்கலாம்.

***

காசாம்புக் கவுண்டரின் விவசாயக்குடும்பமானது மெல்ல மெல்ல அடுத்தடுத்த தலைமுறைகளில் வீழ்ச்சியடைந்து விவசாயத்திலிருந்து விலகி கடைசியில் சாராயக்கடை திறப்பிற்கும் ஆதாய அரசியலுக்கும் சென்று சேரும் சோகத்தை இந்தப் புதினம் படிப்படியாக சொல்லிச் செல்கிறது. துரைசாமி சாராயக்கடை திறப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யும் பரபரப்போடு துவங்குகிறது நாவல். அடுத்த அத்தியாயத்தில் அவனது தாத்தா முத்துசாமி கவுண்டரைப் பற்றிய அறிமுகமும் கோர்க்காட்டிலிருந்து வளவனூருக்கு வந்த அவரைப் பற்றிய பின்னணி விவரங்களும் மெல்ல துலக்கமாகின்றன. இப்படியாக சமகாலத்திற்கும் கடந்த காலத்திற்கும் மாறி மாறி நாவல் பயணிக்கிறது.

குடும்பத்தகறாரில் முத்துசாமியின் சகோதரர் வெறிகொண்டு பெரும்பாலான குடும்ப உறுப்பினர்களை வெட்டிப் போட தன் மனைவி வனமயிலையும் அதில் இழக்கிறார் முத்துசாமி. பொருந்தாத திருமணத்தில் கணவனிடமிருந்த விலகிய நாவாம்பாளை இரண்டாவதாக மணந்து கொள்கிறார். பட்டாளத்திற்கு சென்று சேர்வதற்காக பிரான்ஸ் செல்ல விரும்பும் மகன் முனுசாமியின் கோரிக்கையையும் அது சார்ந்த பிடிவாதத்தையும் முத்துசாமியால் தவிர்க்க முடியவில்லை. இன்னொரு மகன் ரங்கசாமி சாமியாராகப் போய் விடுகிறான். விவசாயத்தில் உதவிக் கொண்டிருந்த ஆறுமுகம் குடிப்பழக்கத்தின் விபத்தால் பக்கவாதம் வந்து முடங்கிப் போகிறான். இப்படியாக முத்துசாமிக்குப் பிறகு விவசாயத்தைத் தொடர எவருமில்லாததால் அரசியலில் ஈடுபடும் பேரன் துரைசாமியின் முரட்டுத்தனத்தனமான பிடிவாதத்தாலும் அது சார்ந்த சச்சரவுகளாலும் நிலத்தை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்க நேர்கிறது. நிலம் தன்னை விட்டுப் போன அந்தக் கணத்திலிருந்தே தன்னை நடைப்பிணமாக உணரத் துவங்குகிறார் முத்துசாமி.

காலனியாதிக்கத்தில் இருக்கும் புதுச்சேரியின் காலக்கட்டம். பிரெஞ்சுக்கார துரைகளிடம் விசுவாசத்தைக் காட்டில் ஊரில் செல்வாக்கோடு இருக்கும் சீத்தாரம ரெட்டியிடம் தந்தை காசாம்பு  வாங்கிய கடனுக்காக நிலங்களை ரெட்டியிடம் இழக்கிறார் முத்துசாமி. தன் செல்வாக்கைப் பயன்படுத்தி முத்துசாமியை மிரட்டி நிலங்களைப் பறித்து விடுகிறான் ரெட்டி. கோர்க்காடிலிருந்து தமிழ்நாட்டின் வளவனூருக்கு புலம்பெயரும் முத்துசாமி, ஐயரிடமிருந்து குத்தகை எடுத்து விவசாயம் செய்யத் துவங்குகிறார். இது சார்ந்த வரலாற்றுப் பின்புலத்தோடு அத்தியாயங்கள் கடக்கின்றன.

***

இன்னொரு புறம் சமகாலத்தில் பேரன் துரைசாமியின் அரசியல் செயற்பாடுகளும் அதிகாரத்தின் படிக்கட்டுகளில் மெல்ல மெல்ல அவன் மூர்க்கமோடு முன்னேறும் உத்வேகங்களும் பாவண்ணனின் திறமையான சொற்களில் விரிகின்றன. தாத்தா முத்துசாமியோடு அவன் கொள்ளும் பகையும் தன் மனைவி மல்லிகாவின் மீது அவன் செலுத்தும் ஆதிக்கமும் குடும்ப வன்முறையும் இயல்பான தொனியில் ஆனால் அதன் உக்கிரம் குறையாமல் வெளிப்படுகின்றன.

காங்கிரஸ் தியாகியான காத்தவராயன் கவுண்டருக்குதியாகிபட்டம் மூலம் கிடைத்த ஒரு காணி நிலத்தை குத்தகையாகப் பெற்று விவசாயம் செய்கிறார் முத்துசாமி. காந்தி இறந்த செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில் மரணமடையும் காத்தவராயனுக்குப் பிறகு அவரது நிலத்தை மகனான சத்தியசீலனுக்கு கைமாற்ற முடியவில்லை. சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வம் முற்றி விவசாயத்தை தொடர விரும்பாமல் அவன் சென்னையில் திரிந்து கொண்டிருக்கிறான். எனவே அந்த நிலத்தை வேறு வழியின்றி முத்துசாமியே பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்

விவசாயத் தலைமுறைகளிலிருந்து கிளைக்கும் வாரிசுகள் அரசியலாலும் சினிமா மோகத்தினாலும் குடியினாலும் தம்முடைய ஆதார தொழிலான விவசாயத்தை அடுத்தடுத்த தலைமுறைகளில் தொடராமல்  கைவிட்டுப் போகும் யதார்த்தமான சோகத்தை அதன் சமூகப் பின்னணிகளுடன்பாய்மரக்கப்பல்அடிநாதமாக விவரிக்கிறது.

ஒரு விவசாயக் குடும்பம் மெல்ல மெல்ல தடுமாறி தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் சிரமங்கள் அனைத்தும் அடுத்தடுத்த தலைமுறையின் உதாசீனங்கள்  மூலமும் விலகலின் மூலமும் எவ்வாறு சிதறிப் போகிறது என்பதை மூன்று தலைமுறையின் காலக்கட்ட வரலாற்றின் மூலம் பதிவு செய்கிறார் பாவண்ணன். பிரெஞ்சு அரசு பின்னணியில் புதுச்சேரியின் காலக்கட்டமும் அதுசார்ந்த அரசியலும் பின்னணியில் ஒரு மெல்லி்ய கோடாக பதிவாகியிருக்கிறது. நாவலில் உலவும் பாத்திரங்களின் உறவுகளை புரிந்து கொள்ள சற்று சிரமமாக இருந்தாலும் மீள்வாசிப்பின் போது எத்தனை கவனமாகவும் நுட்பமாகவும் இந்த நாவலின் கட்டுமானத்தை பாவண்ணன்  திட்டமிட்டு அதை செயலாற்றியிருக்கிறார் என்பதை உணர பிரமிப்பாக இருக்கிறது. நிலங்களை இழந்த விரக்தியோடும் துயரத்தோடும் அவதிப்படும் முத்துசாமி இறுதியில் தன் குடும்ப உறுப்பினர்களை அழைத்து நடுங்கும் கரங்களால் புதிய மரக்கன்றுகளை மீட்டுக் கொண்ட மகிழ்ச்சியோடு நடும் தருணத்தோடு நாவல் நிறைகிறது. சமூகமும் மனிதர்களும் எத்தனை அவநம்பிக்கைகளில் மூழ்கிப் போனாலும் துவண்டு போகாமல் அதன் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய கடமை ஒரு படைப்பாளிக்கு இருக்கிறது. அந்த கடமையை பாவண்ணன் தன்னுடைய புதினத்தில் கச்சிதமாகவே நிறைவேற்றியிருக்கிறார்.

புயல் காற்றில் சிக்கித் தடுமாறி பயணிக்கும் ஒரு பாய்மரக்கப்பலைப் போல சமூகத்தின் மிக ஆதாரமாகவும் தொடர்ச்சியாகவும் இயங்க வேண்டிய விவசாயம் எனும் இயக்கம் பல்வேறு சமூகக் காரணங்களால்  தட்டுத் தடுமாறும் உருவகத்தை நாவலின் தலைப்பு உணர்த்துகிறது எனக் கொள்ளலாம். சூழலியல் சார்ந்து தமிழில் வெளிவந்த ஒரு குறிப்பிடத்தகுந்த படைப்பாகபாய்மரக்கப்பல்புதினத்தை நிச்சயம் குறிப்பிடலாம்.

சதுரங்கக் குதிரை – தனிமைச் சேவலின் பயணம்

சுரேஷ் கண்ணன்

nanjil_nadan_spl_issue

நாஞ்சில் நாடன் எழுதிய புதினங்களிலேயே மிக உன்னதமானது ‘சதுரங்கக் குதிரை’ என்பது என் தீர்மானமான மதிப்பீடு. 1993- ல் வெளியான இது அவருடைய ஆறாவது புதினம். சுய அனுபவங்களோ அல்லது கண்டு கேட்டறிந்தவைகளோ, அவரது ஒவ்வொரு புதினங்களும் கண்ணுக்குத் தெரியாததொரு மாயக்கயிற்றால் கட்டப்பட்டவை போல அவற்றினூடே ஓர் ஒழுங்கான தொடர்ச்சி இருக்கும், பல்வேறு காலக்கட்டத்தில் பதிவாக்கப்பட்ட  ஒரு தனிநபருடைய புகைப்படங்களின் தொகுப்பைப் போல.   மரத்தில் மறைந்தது மாமத யானை என்பதைப் போல எழுத்தையும் எழுத்தாளனையும் பிரித்தறிய முடியாது என்பது ஒரு நல்ல எழுத்தின் சிறப்பு. அவ்வகையில் புனைவுகள், அபுனைவுகள் என நாஞ்சில் நாடனை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு அது சிவதாணுவோ, சுடலையாண்டியோ, பூலிங்கமோ, நாராயணணோ, கும்பமுனியோ அவர்களைத் தாண்டி நாஞ்சில் நாடனை அதில் பார்க்க முடியும். இதையொரு பலவீனமாக சொல்கிறவர்களும் உண்டு. நான் பலம் என்றுதான் சொல்வேன். மற்ற புதினங்களில் இளவயதின் வேகமும் ஏக்கமும் உடைய, திருமணம் ஆகிற, அதன் சிக்கல்களை அனுபவிக்கிற நபர்கள் என்றால் அதன் பரிணாம வளர்ச்சியில், சதுரங்கக் குதிரை புதினத்தில் மணமாகாத ஒரு நடுத்தரவயதுள்ள நபரின்  தனிமையுணரும் கசப்பான அனுபவங்களையும் மனச்சிக்கல்களையும் அறிய முடியும். இதன் கனிந்த தொடர்ச்சிதான் நக்கலும் குத்தலுமாக வெளிப்படுகிற சமகால கும்பமுனி.

நாஞ்சில் நாடனின் உருவாக்கும் நிலப்பரப்பின் பின்னணி பொதுவாக அவர் பிறந்து வளர்ந்த நாஞ்சில் நாட்டுப் பின்னணியிலும் தொழிலுக்காக புலம்பெயர்ந்த மஹாராஷ்டிர நகரம் மற்றும் சிற்றூர்களின் பின்னணியிலுமாக அமைந்துள்ளது. இதில் துவக்க கால எழுத்து பிரத்யேகமாக சொந்த ஊரின் பின்னணயிலும் பிறகு உருவாக இடைக்கால எழுத்து  இரண்டின் கலவையாகவும் தொழிலிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு மறுபடியும் பிரத்யேக நாஞ்சில் பிரதேசத்திற்கு திரும்புவதையும் கவனிக்க முடியும். புதினங்களின் வரிசையை இன்னமும் துல்லியமாக வரிசைப்படுத்த வேண்டுமென்றால் கால வரிசையில் முன்பின்னாக உருவாகியிருந்தாலும் என்பிலதனை வெயில் காயும் மற்றும் தலைகீழ் விகிதங்கள் ஆகிய இரண்டு புதினங்களுக்கு இடையே பிரத்யேக  நாஞ்சில் நாட்டு பின்னணியுடன் ஒரு தொடர்ச்சி உள்ளது. எட்டுத்திக்கும் மதயானை, மிதவை, சதுரங்கக் குதிரை ஆகியவற்றின் இடையே பிரதான கதாபாத்திரத்தின் படிநிலையின் வழியே உள்ள தொடர்ச்சியை கவனிக்க முடியும். அவருடைய சிறுகதைகளின் தொகுப்பையும் புனைவு காலம் முடிந்த எழுதப்பட்ட கட்டுரைகளையும் பிறகு கும்பமுனி எனும் பாத்திரங்கள் வழியே உரையாடும் மீண்டும் உருவான சிறுகதைகளையும் இவ்வாறு பிரித்துணர முடியும்.

***

நாரயணன் சாப்பிட்டு விட்டு மாட்டுங்கா சர்க்கிளுக்கு திரும்புவதில் துவங்கும் சதுரங்கக் குதிரை புதினமானது, திருமண உத்தேச உரையாடலுக்காக  ஆர்ட்கேலரி காண்டீனுக்கு அழைக்கப்பட்ட ராதா வராமல் போன காரணம் குறித்து சுய சமாதானம் செய்து கொள்ளும் இறுதிப்புள்ளி வரை வரை துணையல்லாத நாராயணனின் கடுமையான தனிமையை விவரித்துச் செல்கிறது. ஆனால் அதை சுயஇரக்கம் கோரும் வகையில் வறட்சியான மொழியிலும் கையாலாகாத தத்துவ விசாரங்களும் அல்லாமல் இயல்பான நடைமுறைக் காட்சிகளின் விவரணைகளோடு சொல்லிச் சென்றிருப்பதில் நாஞ்சில் நாடனின் எழுத்தாளுமையின் பலம் தெரிகிறது. நாஞ்சில் நாட்டின் பிரத்யேக சொல்லாட்சிகளும் உணவு வகைகளும் சடங்குமுறைகளும் என அந்தப் பிரதேசத்தின் கலாசாரக்கூறுகள் மிக இயல்பாக வெளிப்படுகின்றன. பொருளீட்டுவதற்காக எந்தெந்த பிரதேசங்களுக்கோ பெயர்ந்து கொண்டேயிருந்தாலும் நாஞ்சில் நாடனின் மனம் அவரது சொந்த மண்ணில் நங்கூரமிட்டிருப்பதை உணர முடிகிறது. அதற்காக பல வருட அமெரிக்க வாசத்திலும் பருப்பு சாம்பாரை மட்டுமே பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் கிணற்றுத்தவளைத்தனமும் அவரிடம் இல்லை. நாஞ்சில் நாட்டு உணவு வகைகளான எரிசேரி,புளிசேரி பற்றிய விவரணைகள் ஒருபுறமென்றால் புலம்பெயர் வாழ்வில் எதிர்கொள்ள நேரும் வடாபாவும் வர்க்கியும் கூட அவர் எழுத்தில் பதிவாகின்றன. கலவர நேரத்தில் பெண்களை லாரியில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைக்கும் வரதாபாய் பற்றிய குறிப்பும் கூட போகிற போக்கில்.

நேர்க்கோட்டு பாணியில் அல்லாமல் நாஞ்சில் நாட்டின் கடந்த காலமும்  மும்பை வாழ்வின் சமகாலமும் முன்னும் பின்னுமாக பயணித்தாலும் வாசிப்பின் லகுவில் துளி குழப்பமுமில்லை. தாயின் இறப்பிற்கு கூட நேரத்திற்கு சென்றடைய முடியாத பயண தூரத்தில் உள்ள நடைமுறை அவலமும் ‘அவனுக்கென்ன வெளியூர்ல கைநிறைய சம்பாதிக்கான்’ என்று பொருமும் உறவுகளும் ஒரு சென்ட் பாட்டிலை அல்பமாக பரிசளித்து விட்டு பலவித உழைப்பைச் சுரண்டிக் கொண்டு ‘பிம்ப்’ வேலையையும் பார்க்கச் செய்யும் வெளிநாட்டு தூரத்து உறவும், ராத்திரி சாப்பாட்டிற்கு ரகசிய சப்பாத்திகளை நிக்கர் பாக்கெட்டிற்குள் பொதிந்து வைத்திருந்து ‘அண்ணாச்சி, வேலை ஏதாச்சும் சொல்லுங்களேன்’ எனும் திருநவேலி தம்பியும், வேறு வேறு நிறங்களில் சாக்ஸ் அணிந்திருக்கும் கேயார்வியும் என.. விதவிதமான சூழல்களும் மனிதர்களின் சித்திரங்களும் இந்த நாவலுக்கு உயிரூட்டுகின்றன.

‘ஃபேன்கள் காற்றை உலைக்கும் ஓசை, வெயிலில் காயும் தோட்டு உளுந்தின் மீது கட்டையை உருட்டும் போது ஏற்படுவது போன்று ஒன்பது டைப்ரைட்டர்களின் தொடர்ச்சியான ஓசை, மெல்லிய பேச்சொலிகள், தொலைபேசியில், இண்டர்காமில் உரையாடல்கள், தூரத்து கேபின் ஒலிக்கும் பஸ்ஸர், டேபிள் பெல்லை கோபத்துடன் யாரோ அடிக்கும் சத்தம், நாற்காலியை பின்னோக்கி நகர்த்தும் அரவம், பேப்பர் கத்தைகளின் சலசலப்பு’ என்றொரு சிறிய விவரணையின் மூலமே ஓர் அலுவகத்தின் இயக்கத்தை வாசகனின் கண்முன்னே காட்சியாக விரியச் செய்யும் வலிமையை நாஞ்சில் நாடனின் எழுத்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பயணம் பற்றிய துல்லியமான விவரணைகளை, சூழல்களை நாஞ்சில் நாடன் அளவிற்கு வேறெந்த தமிழ் எழுத்தாளராவது பதிவு செய்திருப்பாரா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

பல்வேறு காரணங்களால் திருமணமாகாமல் நிற்கும் முதிர்கன்னிகளின் துயரங்களைப் பற்றி சிலபல இலக்கியப்பதிவுகள் உண்டெனினும் ஏறத்தாழ அதைப் போலவே நிற்க நேரும் ஒற்றைச் சேவல்களைப் பற்றிய பதிவுகள் குறைவு. பெருமாள்முருகன் எழுதிய ‘கங்கணம்’ எனும் சமீபத்திய நாவல், திருமணம் ஆகாத கொங்கு சமூகத்து இளைஞன் ஒருவனின்  மனச்சிக்கல்களைப் பற்றி பேசுகிறது. என்றாலும் திருமணம் எனும் நிறுவனத்தின் மூலம் மட்டுமே காமத்தை அடைய முடிகிற பண்பாட்டுச் சூழலைத்தாண்டி உடலின் உந்துதலால் அதிலிருந்து இடறுகிற, தவிர்க்கிற சந்தர்ப்பங்களைப் பற்றிய நாராயணனின் அனுபவங்களும் கூட யோக்கியமாகவே இந்நாவலில் பதிவாகியிருக்கின்றன. முறையான வயதில் திருமணம் செய்ய முடியாமல் போகிற அத்தைப் பெண்ணை, சில வருடங்கள் கழித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, அவள் குளித்து விட்டு வருகிற ஒரு மாலை வேளையில் பார்க்கிற நேரும் போது ஏற்படும் ரகசிய மையலும் பின்னொரு சமயத்தில் அது விநோதமானதொரு கனவின் புணர்ச்சியில் முடியும் ஆழ்மனகுழப்பமும் சங்கடமும் என நிறைவேறா காமத்தின் வெளிப்பாடுகளும் மிக நுட்பமான பகுதிகள்.

நாராயணனின் பயணம் மேற்கொள்ளும் விவரணைங்களின் துல்லியம் அவருடன் வாசகனும் பயணம் செய்யும் அனுபவத்தை நிகழ்த்துகிறது. தாயின் இறப்பிற்காக செல்லும் பயண அனுபவங்களுடனே கூடவே ஊரில் நிகழும் பிரதேச முறைசடங்குகளை, உறவுகளின் உடல்மொழியை மனக்கண் காட்சிகளின் மூலமாக split screen உத்தியில் இணையாக விளக்கிச் செல்லும் பகுதிகள் அருமை. திராவிடக் கட்சிகள் விதைத்த பிராமண வெறுப்பும் சக உறவுகள் உதவி செய்யாத நிலையில் அயல் சமூக மக்கள் எத்தனை நட்புணர்வுடன் இருக்கிறார்கள் என்கிற புரிதலும். ஓரின ஈர்ப்பு குறித்த ஒவ்வாமை கூட சிறு தடயமாக பதிவாகியிருக்கிறது.

விவசாயத்திற்கு சொற்ப நிலமும் ஒரு வீடும் இருந்தாலும் வறுமையைக் கடக்க மும்பைக்கு புலம் பெயரும் நாராயணன் மனம் முழுக்க ஊர் நோக்கியே இருக்கிறது. உறவுகள் கைவிடுவது முதல் எத்தனையோ காரணங்களால் அவனது திருமணம் தொடர்ந்து தட்டிப் போகிறது. ஒருநிலையில் அவனே அதில் ஆர்வமிழந்து போகிறான். இது இயல்பானதுதான். ஆனால் ஒரு நெருடலான விஷயம். புலம்பெயர்ந்த சூழலில் இருந்து ஏன் அவனால் வேறு துணையைத் தேடிக் கொள்ள முடியவில்லை? தன்னுடைய பிரதேசம் குறித்த சாதி குறித்த அழுத்தமான பிரக்ஞையோடு அவன் இருக்கிறானா என்று தோன்றுகிறது. நாவல் முடியும் இடத்தில் சக பணியாளப் பெண்ணை அவன் திருமண உத்தேசத்துடன் அணுகுவதற்குக் கூட அவள் தன்னுடைய சமூகத்தைச் சார்ந்தவளா என்றறியாத நிலையிலும் தன்னுடைய ‘ஊர்க்காரி’ என்கிற பரவசம்தான் காரணமாக இருக்கிறது. ஏறத்தாழ இவனுடைய நிலையிலேயே இருக்கும் சக பணியாளனான ‘குட்டினோ’விற்கு கூட தன்னுடைய காதலியை சேர முடியாத ஏக்கமாவது ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால் நாராயணனுக்கு அதுகூட இல்லை.

ஆனால் இதுவொரு கோணம்தான். ஏனெனில் நாராயணன் அத்தனை சுருங்கிப் போன மனமுடையவனாகவும் இல்லை. மண்ணைப் பிரியும் ஏக்கத்துடன் அகத்தால் அல்லாவிட்டாலும் செல்லுமிடங்களில் எல்லாம் பெளதீக சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் குணாதிசயமும் சாமர்த்தியமுள்ளவனாகத்தான் இருக்கிறான். கடுமையான வெயிலில் வறட்சியான பயணத்தின் போது கூட லாரியில் பயணம் செல்லும் சிறுமி புன்னகையுடன் எறியும் கரும்புத் துண்டு அவனுடைய கசப்புகளை தற்காலிகமாவாவது கடக்கத் துணியும் மலர்ச்சியை தருகிறது.

***

புறநகர் ரயில் பயணம் ஒன்றில் செய்தித்தாளுக்காக நாராயணன் அணுகும் ஒரு சிறுவன் தன்னுடைய பிரதேசத்தைச் சார்ந்தவன் என்பதும் சில்லறைப் பணிக்காக புலம் பெயர்ந்தவன் என்றும் தெரிகிறது. அந்த உரையாடல் இப்படியாகப் போகிறது.

“தம்பி திருநவேலியா?”

“திருநவேலிக்குப் பக்கத்திலதான். நாங்குநேரி.. வந்திருக்கேளா?”

“நான் நாகர்கோயிலு. நாங்குநேரி தாண்டித்தான் போகணும்”

“இங்க கம்பெனில வேலை பாக்கேளா?”

“ஆமா… சேல்ஸ்மேனா இருக்கேன்”.

“எனக்கு ஒரு வேலை இருந்தாச் சொல்லுங்களேன்..பத்தாங் கிளாஸ் பாசாகி இருக்கேன். இங்க வந்து எட்டு மாசம் இருக்கும். அந்த அண்ணாச்சிதான் கூட்டியாந்தாரு. .. ரயில்வே கேன்டீன்ல கிளீனர் பாயா இருக்கேன்.  முன்னூறு ருவா சம்பளம்.  வாரம் ஒரு நாள் லீவு உண்டும்.  ஊருக்கு ஓடிராலாம்னு இருக்கு. ..”

“ஊரிலே போயி என்ன செய்வே?”

“அங்க போனா ஆடுதான் மேய்க்கணும். ஒரு வீம்புலதான் இங்க கெடக்கேன்”

***

அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல. நாராயணனேதான். கோடிக்கணக்கான நாராயணன்களின் ஓர் இளமைச் சித்திரம்.