செந்தில் நாதன்

எச்சங்கள்

செந்தில் நாதன்

remnants

தேசிய நெடுஞ்சாலை 27ல் இருந்து பிரிந்து மாநில நெடுஞ்சாலைக்கு இறங்கியவுடன் ”ஹரப்பா நாகரிகத்தின் பெரு நகரம் உங்களை வரவேற்கிறது” என்ற ஆங்கில வரவேற்புப் பலகை கண்ணில் பட்டது. கீழே பொடி எழுத்துகளில் ”தோலாவிரா அகழ்வாராய்ச்சிக் களம் – 116 கிமி”.

சிந்து சமவெளி (ஹரப்பா) நாகரிகத்தின் முக்கியமான அகழ்வாராய்ச்சிக் களங்களில் ஒன்று தோலாவிரா. ஹரப்பாவும் மொகஞ்சதாரோவும் இன்றைய பாகிஸ்தானில் உள்ளன. இந்தியாவில் இருக்கும் அகழ்வாராய்ச்சி களங்களில் முக்கியமானது தோலாவிரா. எகிப்திய பிரமிடுகள் அளவிற்குத் தொன்மையான நகரம். கார்த்திக்கின் நீண்ட நாள் கனவு. இன்னும் 116 கிலோ மீட்டர் தூரத்தில்.

“அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா” என்று செளராஷ்டிராக்காரர் டி.எம்.எஸ். காருக்குள்ளே தமிழில் பாடிக் கொண்டிருந்தார். தமிழர்களான கார்த்திக்கும் வள்ளியும் அவரோடு சேர்ந்து உரக்கப் பாடிக்கொண்டே குஜராத்தில் பயணித்தார்கள்.

இருவரும் வேலை பார்ப்பவர்கள். வேலைப் பளு, குழந்தைகள், அவசர நகர வாழ்க்கை என்று எப்போதும் ஒரு படபடப்பிலேயே இருப்பவர்கள். நீண்ட நெடுஞ்சாலைப் பயணங்கள் தினசரி வாழ்க்கையிலிருந்து தப்பித்துச் செல்லும் உணர்வைத் தரும். விட்டு விடுதலையாகிப் பறக்கும் சிட்டுக்குருவி போலே. அதற்காகவே அவர்களிருவருமாக அடிக்கடி பயணம் செய்வதுண்டு. இந்த முறை சற்று அதிக தூரம். சென்னையிலிருந்து குஜராத் வரை.

ஆளரவமற்ற சாலை. இரு பக்கங்களிலும் முள் செடிகள் மட்டுமே. இருபது கிலோ மீட்டரில் ராப்பார் என்னும் சிறுநகரம். அதைத் தாண்டியதும் கைபேசியில் சிக்னல் மாயமானது. கூகுள் மேப்ஸ் இனிமேல் பயனளிக்க இயலாது என வருத்தம் தெரிவித்தது. தோலாவிரா 95 கிமி என்றது நெடுஞ்சாலைப் பலகை. ஒரே சாலை தானே, பார்த்துக் கொள்ளலாம் என்று சென்றார்கள்.

தோலாவிரா என்ற பெயர்ப்பலகை மட்டும் அத்துவானக் காட்டில் நின்றுகொண்டிருந்தது. சரியான குக்கிராமம். யாரும் கண்ணில் படவில்லை.

சற்று முன்னே சென்றதும் எல்லைப் பாதுகாப்புப் படை அலுவலகம் வந்தது. அங்கிருந்த காவலர்கள் முறைத்துப் பார்ப்பது போலத் தோன்றியது. எதற்கு வம்பு என்று கார்த்திக் வண்டியை நேராக குஜராத் சுற்றுலாத்துறை விடுதிக்குச் செலுத்தினான். பயண இணையதளங்களில் குறிப்பிடப் பட்டிருந்த இடம். அங்கே யாரும் வழிகாட்டி இருந்தால் கூட்டிக்கொண்டு செல்லலாம் என்று பார்த்தால் விடுதி பூட்டப்பட்டிருந்தது. காவலாளி கூட இல்லை.

அப்போது தான் அவனைப் பார்த்தார்கள். சின்னப் பையன், பத்துப் பன்னிரெண்டு வயதிருக்கும். விடுதிக்குப் பின்னால் இருக்கும் கூரை வீடு ஒன்றிலிருந்து வந்தான். தலை படிய வாரப்பட்டிருந்த்து. முக்கால் காலுக்கு ஒரு பேண்ட், பளீர் சிகப்பில் டி ஷர்ட்.

உடைந்த இந்தியில் “இங்கே யாரும் கைடு உண்டா பையா” என்று கேட்டான் கார்த்திக்.

“நானே கைடு தான் சார். ஃபாசில் பார்க் பார்க்க 150 ரூபாய், எக்ஸ்கவேஷன் சைட் பார்க்க 150 ரூபாய் – மொத்தம் 300 ரூபாய் கொடுங்க போதும். இதே பெரியவங்களைக் கூட்டிப் போனால் 500 ரூபாய் கேப்பாங்க” என்றான் அந்தப் பையன். அவனது இந்தி கார்த்திக் பேசிய இந்தியை விட நன்றாகவே இருந்தது.

சூட்டிகையான பையனாய்த் தெரிந்தான். சரி, இவனையே வழிகாட்டியாய் கூட்டிப் போனால் என்ன என்று யோசித்தான் கார்த்திக்.

“ரொம்ப சின்னப் பையனா இருக்கானே, இவனுக்குத் தெரியுமா” வள்ளி சந்தேகத்துடன் கேட்டாள்.

“இரு அவன் கிட்டயே கேப்போம்” என்றபடி “உனக்கு எல்லாம் தெரியுமா பையா?” என்று கேட்டான் கார்த்திக்.

“தெரியும் சார். எங்க தாத்த இங்க கைடா இருக்கார், அவர் கூடப் போய் நான் எல்லாம் கத்துகிட்டேன்”

”சரி, வா கார்ல ஏறு. உன் பேர் என்ன”

“கண்பத் சார்”

வள்ளி பின் சீட்டுக்குப் போக கண்பத் முன்னால் வந்து அமர்ந்தான்.

“நேரா போங்க சார். முதல்ல ஃபாசில் பார்க் போயிடுவோம், வெயில் வரதுக்கு முன்னாடி அங்க பாத்துட்டு அப்புறமா எக்ஸ்கவேஷன் சைட் பார்க்கலாம்” என்றான்.

இரண்டு கிலோமீட்டர் போனதும் சாலை முடிவடைந்த்து. எதிரில் கரடு முரடான பொட்டல். வழி என்று எதுவும் இல்லை.

”இது தானா?” கார்த்திக் சந்தேகமாகக் கேட்டான்.

கண்பத் உற்சாகமாக “இன்னும் அஞ்சு கிலோமீட்டர் போகணும் சார். இந்த மண் பாதைலயே போக வேண்டியது தான்”.

அவனது உற்சாகம் கார்த்திக்கையும் தொற்றிக் கொண்டது. சரி, போய்த் தான் பார்ப்போம் என்று காரை அந்த மண் பாதையில் இறக்கி ஓட்டினான். இரண்டு கிலோ மீட்டர் போவதற்குள் வள்ளிக்குப் பயம் வந்துவிட்டது.

“அவன் தான் சொல்றான்னா, நீயும் போய்கிட்டிருக்க. ஈ காக்கா கூட காணோம். வா, திரும்பப் போயிடலாம்” என்று தமிழில் சொன்னாள்.

அவளது பயம் கண்பத்துக்குப் புரிந்திருக்க வேண்டும். “இல்ல மேடம், தைரியமா வாங்க. இன்னும் கொஞ்ச தூரம் தான்” என்றான்.

கார்த்திக்கை முறைத்துக் கொண்டே வள்ளி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கார்த்திக்குக்கும் ஏடாகூடமாக வந்து மாட்டிக் கொண்டோமோ என்று கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. தூரத்தில் இருந்த சிறு குன்றைச் சுட்டிக் காண்பித்தான் கண்பத்.

“அதோ அங்க தான் சார். அந்த மலை ஏறி அந்தப் பக்கம் இறங்கினா ஃபாசில் பார்க்” என்றான். கார் பரிதாபமாகக் கதறியது.

குன்றின் உச்சியில் இரண்டு எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) வீரர்கள் இருந்தார்கள்.

“பி.எஸ்.எஃப் இங்க என்ன பண்றாங்க”.

“இங்கருந்து அம்பது கிலோமீட்டர் போனா பாகிஸ்தான் வந்துடும் சார்”

”அடப்பாவி, இங்க தான் இங்க தான்னு பாகிஸ்தானுக்கே கூட்டி வந்துட்டான்” வள்ளி அடிக்குரலில் முனகினாள்.

குன்று ஏறி இறங்கியதும் பயம் எல்லாம் பறந்தோடிவிட்டது. எதிரே ராண் என்று சொல்லப்படும் உப்பு சதுப்பு நிலம். கண்ணுக்கெட்டிய வரை நீண்டு கிடக்கும் உப்புக் கடல். அதன் வெண்மை கண்ணைக் கூசியது. சில நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை. பார்க்காமலும் இருக்க முடியவில்லை. அந்த உப்புக்கடலின் நடுவே தூரத்தில் ஒரு மலை.

”இங்கே மத்த மாசங்கள்ள தண்ணி இருக்கும் சார். நவம்பர்லேந்து பிப்ரவரி வரை நாலு மாசத்துக்குத் தண்ணி பின்வாங்கிடும். அப்ப தான் நீங்க இதைப் பார்க்கலாம்” கண்பத் சொல்லிக் கொண்டிருந்தான்.

கரையோரத்தில் கம்பி வேலிகளுக்கிடையே சில கெட்டித்துப் போன மரத் துண்டுகள் இருந்தன. கல் மரங்கள்.

“இதான் சார் ஃபாசில் பார்க். இந்த மரங்களெல்லாம் டைனோசார் காலத்தவை. பாறைக்குள் மாட்டிக்கொண்டு இதல்லாம் கல் மாதிரியே கெட்டியாயிடுச்சு. இந்த மாரி இங்கே பன்னெண்டு மரத் துண்டுகள் இருக்கு. முன்னாடி சும்மா தான் இருந்தது. இப்ப தான் கவர்மெண்ட்ல வேலி போட்டிருக்காங்க”

”தூரத்தில இருக்கே மலை, அது பேர் என்ன.”

“அது காலா டங்கர் சார். அங்க தான் குரு தத்தாத்ரேயர் திருவிழா வருஷா வருஷம் நடக்கும். அந்த மலைக்கு அந்தப் பக்கம் பாகிஸ்தான் இருக்கு”

திரும்பிப் போகும் போது பயமில்லை. வறட்டு வெயில் கூட அழகாயிருந்தது. எதிரே ஒரு மாருதி கார் கடந்து போனது. அதிலிருந்த வயதானவர் கண்பத்தைப் பார்த்துக் கைஅசைத்தபடி சென்றார்.

“உனக்குத் தெரிஞ்சவரா அவர்”

“எங்க தாத்தா சார். அங்க இருக்க பி.எஸ்.எஃப். வீரர்களுக்கு சாப்பாடு கொண்டு போறார்”

“உங்க அப்பா அம்மா இங்க தான் இருக்காங்களா” பின் இருக்கையிலிருந்து வள்ளி கேட்டாள். காரைக்குடியைச் சேர்ந்தவளாயிருந்தாலும் அவள் ஹிந்தி நன்றாகவே பேசுவாள்.

“இந்த வருஷம் மழை இல்லை மேடம், விவசாயம் படுத்துடுச்சு. அதனால் பக்கத்துல இருக்க ரேவத் ஊருக்குக் கூலி வேலை செய்யப் போய்ட்டாங்க. நான் இங்க எங்க மாமா வீட்ல தங்கி இருக்கேன்.”

“என்ன படிக்கிற”

“ஏழாங்கிளாஸ் படிக்கிறேன் மேடம். சனி ஞாயிறுகள்ல இந்த மாதிரி கைட் வேலை பாப்பேன்”

“இவனுக்கு நம்ம அனி வயசு தான் இருக்கும். எவ்வளவு பொறுப்பா இருக்கான் பாரு” வள்ளி கார்த்திக்கிடம் தமிழில் கூறினாள். அவளுக்கு கண்பத்தை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

”இங்க இருக்க தனியார் விடுதில சாப்பாடு வேணும்னா இப்பயே ஆர்டர் கொடுக்கணும். சொல்லிட்டுப் போயிடுவோமா சார்” என்றான்.

”ஒரு வாரமா ஹோட்டல்ல நான், பனீர் பட்டர் மசாலா சாப்பிட்டு வெறுப்பாயிருக்கு. குஜராத்தி பாஜ்ரா ரோட்டி கிடைக்குமா”

“அது எங்க வீட்ல தான் சார் கிடைக்கும்”

“சரி, அப்ப உங்க வீட்லயே சாப்பிடலாம்” வள்ளி விளையாட்டாகக் கூறினாள்.

அதற்குள் கண்பத் வீட்டுக்கருகே வந்து விட்டிருந்தார்கள்.

“ஒரு நிமிஷம் சார்” என்றபடி காரில் இருந்து இறங்கி ஓடினான்.

சிறிது நேரத்தில் மூச்சிரைக்க ஓடி வந்து “எங்க அத்தை கிட்ட சொல்லிட்டேன் சார், எக்ஸ்கவேஷன் சைட் பாத்துட்டு வந்து நம்ம வீட்லயே சாப்பிடலாம்” என்றான்.

எதிரில் பிரம்மாண்டமாக இருந்த்து தோலாவிரா புதையுண்ட நகரத்தின் கோட்டைச்சுவர். கண்பத் பழக்கப்பட்ட வழிகாட்டியாய் அவர்களுக்கு அந்த நகரத்தின் வரலாற்றை விவரித்தான். அவன் வார்த்தைகள் வழியே அந்த 4500 வருடப் பழங்கால நகரம் உயிர்பெற்று எழுந்தது. கோட்டை வாசல், அரசர் இருக்கை, தானியக் கிடங்குகள், நீர்த் தேக்கங்கள் எல்லாவற்றையும் விலாவாரியாகச் சொல்லிச் சுற்றிக் காண்பித்தான்.

”தோலாவிரா அந்தக் காலத்துல கடற்கரையோர நகரமா இருந்தது சார்.

வெளிநாட்டிலிருந்தெல்லாம் வியாபாரிகள் வருவாங்க. ராஜா இங்க தான் உக்காந்து அவங்கள வரவேற்பார்.” உற்சாகமாகப் பேசிக்கொண்டே போனான் கண்பத்.

”எதுக்கு இத்தன ரிஸர்வாயர் கட்டி வச்சிருக்காங்க?”

“இங்கல்லாம் ரெண்டு மூணு வருஷம் கூட மழை பெய்யாமப் போகும். அந்த சமயத்துல தேவைப் படும்னு தான் இப்படிப் பதினாறு ரிஸர்வாயர் கட்டி வச்சிருக்காங்க. இப்ப கூட அப்படித்தான் சார். இந்த வருஷம் முழுக்க மழை இல்ல. ஏ.எஸ்.ஐ. குவார்ட்டர்ஸ் உள்ள இருக்கற ஒரு கிணத்துல தான் தண்ணி இருக்கு. எங்க கிராமத்தில இருந்து இங்க வந்து தான் தண்ணி எடுத்துட்டுப் போவாங்க”

வெயில் சுள்ளென்று முகத்தில் அறைந்தது.

“இது தான் சார் குளியல் தொட்டி.. மேலே இருக்க கல்பாதை வழியாத் தண்ணி வரும். கீழே இருக்க குழியக் கல்லால அடைச்சிருப்பாங்க. அந்தக் கல்ல எடுத்துட்டா தண்ணி போயிடும்” என்று பெரிய விஞ்ஞானக் கோட்பாட்டை விவரிப்பது போல் விவரித்தான்.

“எங்க ஊர்ல இன்னமும் வளவுல தூப்பாக்குழிய கல் வச்சு தான் அடைக்கிறோம்” வள்ளி தமிழில் சொல்லிச் சிரித்தாள். ஒன்றும் புரியவில்லை என்றாலும் கண்பத்தும் சிரித்தான்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. வரலாற்று எச்சங்களைப் பார்க்க இவ்வளவு கஷ்டப்பட்டு யாரும் வருவதில்லை போலும்.

அங்கிருந்த சிறு அருங்காட்சியகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும் போது மணி பன்னிரெண்டாகி விட்டிருந்தது.

“அவ்வளவு தான் சார். வாங்க, சாப்பிட வீட்டுக்குப் போகலாம்” என்றான்.

அவர்களும் களைத்துப் போயிருந்தார்கள். அவன் பின்னே மெதுவாக நடந்து சென்றார்கள். வீட்டுக்கருகே போனதும் கண்பத் சற்று நின்றான்.

கூச்சத்துடன் “சார், சாப்பாட்டுக்கு நூறு ரூபாய் எங்க அத்தை கிட்ட கொடுத்துடுங்க” என்றான். அவ்வளவு நேரம் பெரிய மனுஷ வழிகாட்டியாய் இருந்தவன் சட்டென்று சின்னப் பையனாய் மாறியதைப் பார்த்ததும் கார்த்திக்குக்கு சிரிப்பு வந்தது.

வட்ட வடிவமான சுதை சுவர் கொண்ட கூரை வேய்ந்த வீடு. ஒன்றரை அறைகள் தான் மொத்தமே. சுத்தமாக இருந்தது. உள் அறைக்கு அவர்களை அழைத்தான் கண்பத். தரையில் அமரப் போனவர்களைத் தடுத்து, அங்கு இருந்த ஜமுக்காளம் ஒன்றை விரித்து உட்காரச் சொன்னான். முகத்திரையுடன் வந்த அவனது அத்தை வணக்கம் சொல்லிவிட்டு சாப்பாடை எடுத்து வைத்து விட்டுப் போனாள்.

ஒரு தட்டு நிறைய முரட்டு பாஜ்ரா (கம்பு) ரொட்டி, தொட்டுக்கொள்ளப் பல காய்கள் போட்ட ஒரு சப்ஜி, சூடான சாதம். சொம்பு நிறைய மோர். ஊர் பேர் தெரியாத இடத்தில் வீட்டு சாப்பாடு தேவாமிருதமாக இருந்தது. கண்பத் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு நாசூக்காக வெளியே சென்றான்.

“பாரு, எவ்வளவு நல்ல பையன். சாப்பிடறப்ப பக்கத்துல இருந்தா நமக்குக் கூச்சமாயிருக்கும்னு விட்டுட்டுப் போய்ட்டான்” என்றாள் அவனது விசிறியாகவே மாறிவிட்டிருந்த வள்ளி.

திருப்தியான சாப்பாட்டுக்குப் பிறகு அவனது அத்தைக்கு நன்றி சொல்லிவிட்டு கையில் இருநூறு ரூபாய் கொடுத்தார்கள். சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள். கார் வரை வந்து அவர்களை வழியனுப்பி வைத்தான் கண்பத்.

கார் கண்ணாடியில் தோலாவிரா பின்னோக்கி சென்று கொண்டிருந்தது.

அருங்காட்சியகத்தில் கொடுத்த துண்டுப் பிரசுரத்தைப் பார்த்தபடி “நாலாயிரம் வருஷம் முன்னாடியே எவ்வளவு அமைப்பா இருந்துருக்கோம் என்ன. தொன்மையான நாகரிகம் தான்” என்று வள்ளி முணுமுணுத்தாள்.

“ஆமாம், நாகரிகமான ஊர் தான்” என்றான் கார்த்திக்.

சான்றோர்

– செந்தில் நாதன் –

leighton_frederic_-_acme_and_septimius_-_c-_1868

தங்கள் தவறுகளை மறந்த வழுக்கைத் தலையர்கள்,
மெத்தப் படித்த, மரியாதைக்குரிய, வயதான வழுக்கைத் தலையர்கள்,
காதல் நோயால் பீடிக்கப்பட்டுப் 
படுக்கையில் புரண்ட இளைஞர்கள்
சவுந்தர்யத்தின் மடக்காதுகளுக்காக யாப்பமைத்த புகழுரை
வரிகளைத் திருத்தி உரை எழுதுகிறார்கள்.
இவர்கள் எல்லோரும் இங்குமங்கும் செல்வார்கள்;
எல்லோரும் புத்தகங்களுக்குள்ளேயே இருமுவார்கள்
எல்லோரும் வகுப்பறைக் கம்பளங்களைக் காலணிகளால் தேயச் செய்வார்கள்;
எல்லோரும் அடுத்தவர் நினைப்பதையே நினைப்பார்கள்;
எல்லோருக்கும் அடுத்தவருக்குத் தெரிந்தவனையே தெரிந்திருக்கும்.
கடவுளே, இவர்களது காட்டுலஸ்* இந்தப் பக்கமாய்க் கடந்தால்
என்ன தான் சொல்வார்கள் இவர்கள்?

The Scholars - W B Yeats

* காட்டுலஸ் – 2000 வருடங்களுக்கு முற்பட்ட ரோம் நகரக் கவிஞன். காதல் கவிதைகளுக்காகப் புகழ் பெற்றவன்.

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

கம்பன் காதலன்

செந்தில்நாதன்

nanjil_nadan_spl_issueநாஞ்சில் நாடன் சிறுகதைகள் தான் எனக்கு முதலில் பரிச்சயம். பின் அவரது நாவல்கள். கும்ப முனியின் கம்பன் ஈடுபாடு அவர் ‘கம்பனுக்குள் வந்த கதை’ கட்டுரைக்குப் பின் தான் தெரிய வந்தது.

பள்ளிப் பருவத்தில் கம்பன் கழகப் போட்டிகளில் கலந்து கொண்டு சில பரிசுகள் வென்றது தான் அதற்கு முன் கம்பனுடனான எனது உறவு. மனப்பாடம் செய்த பாடல்களும் மறந்து போயின. நாஞ்சிலின் கட்டுரை படித்தவுடன் கம்ப இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்ற தூண்டுதல் எழுந்தது. ஆனால் எந்த உரை சிறந்தது, அதற்கு எங்கே போவத?. அதற்கும் நாஞ்சில் தான் வழிகாட்டினார். வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியரின் உரையை வைத்துத் தன் ஆசிரியர் பாடம் எடுத்த்தாக அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தார். அதை ஒட்டியே அந்த உரை கொண்டு நான் கம்பனைப் படிக்கத் தொடங்கினேன்.

அந்தக் கட்டுரையில் அவர் பம்பாயில் ரா.பத்மனாபன் அவர்களிடம் நான்காண்டுகள் கம்ப இராமாயணம் கற்றதைச் சுவை படச் சொல்லியிருப்பார். இருபது பேருடன் கோலாகலமாக ஆரம்பித்த கம்பராமாயாயண வகுப்பு, கடைசியில் நாஞ்சில் மட்டுமே என்று சுருங்கியது, ஆசிரியரின் வீட்டுக்கு வகுப்பு நகர்ந்தது என்று அந்தக் கட்டுரையே ஒரு நல்ல சிறுகதை போல இருக்கும். அக்காலத்தில் தீவிர நாத்திகரான நாஞ்சிலுக்கு இராமன் பட்டாபிஷேகப் படத்தின் முன்னால் அமர்ந்து ஆசிரியரிடம் பாடம் கேட்கத் தடையொன்றுமில்லை. “அவருக்கு தமிழ் மூலம் சமயம், எனக்குச் சமயம் மூலம் தமிழ், சில சமயம் இரண்டும் ஒன்று தான் எனத் தோன்றும்” என்கிறார் நாஞ்சில்.

காரைக்குடி கம்பன் கழக விழாவில் கம்பன் சொல் நயம் பற்றித் தான் ஆற்றிய உரையை விரிவு படுத்தி கம்பனின் அம்பறாத்தூணி என்ற நூலாக 2013ல் வெளியிட்டார் நாஞ்சில். அந்த நூல் அறிமுகமே இந்தக் கட்டுரை. இது விமர்சனமல்ல. நூல்நயம் பாராட்டுதல் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

தான் கம்பனுக்குள் வந்த கதையை முதல் அத்தியாயத்தில் சுவை படச் சொல்லுகிறார். மாசி-பங்குனி மாதங்களில் ஊருக்கு வரும் தோல்பாவைக் கூத்துக்காரர்கள் மூலமாக இராமாயணக்கதை அறிமுகமாயிற்று என்று ஆரம்பித்து, பள்ளிப் பருவத்தில் தி.க. கூட்டங்களில் இராமாயணத்தில் எதிர்ப்பக்கங்களையும் கேட்டறிந்த கதை கூறி, பம்பாயில் ரா.பத்மநாபன் அவர்கள் இல்லத்தில் இராமாயணம் முழுமையாகக் கற்றதுடன் நிறைவு செய்கிறார். இந்த நூலை ரா.ப. அவர்களுக்குக் காணிக்கையாக்கியிருக்கிறார் நாஞ்சில்.

பின்னர் நவீன இலக்கியத்துக்குள் வந்த போதும் நாஞ்சில் மரபு இலக்கியத் தொடர்பை விடாமல் காத்து வந்திருக்கிறார். ”என்னை மாற்றிய நூல்” என்ற தலைப்பில் 2009 ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் கம்ப ராமாயணத்தைப் பற்றி தி.க. தலைவர் வீரமணி முன் பேசிய போது தி.க.வினர் ஏற்படுத்திய அமளியையும் சொல்லுகிறார். அதன் பின்னர் ஜெயமோகன் இதிகாசங்கள் பற்றி ஊட்டி இலக்கிய முகாமில் பேச அழைத்ததிலிருந்து தான் கம்பனுக்குள் மீண்டும் வந்ததாகவும், அந்த அமர்வுக்குப் பிறகு சற்று முயன்றால் தமிழ்க் காப்பியத்தின் மேன்மையை இளைய வாசகர்கள், இளம் படைப்பாளிகள் நெஞ்சத்துள் கடத்திவிடலாம் என்ற நம்பிக்கை வந்ததாகவும் சொல்லுகிறார்.

அடுத்த அத்தியாயத்தில் ‘கம்பனின் அம்பறாத் தூணி” என்று நூலுக்குத் தலைப்பு வைத்ததற்குப் பெயர்க் காரணம் கூறுகிறார். வீரர்கள் தோளில் மாட்டியிருக்கும் அம்பு வைத்திருக்கும் தூணி. இதற்குக் கம்பன் பயன்படுத்திய சொற்கள் கணைப்புட்டில், வாளிபெய் புட்டில், ஆவம், தூணி, பகழி என்று எடுத்துக் காட்டும் நாஞ்சில் எக்காலத்திலும் அம்பு அற்றுப் போகாத தூணி, அம்பு + அறா + தூணி = அம்பறாத் தூணி என்று பெயர்க்காரணத்தை விளக்குகிறார். கம்பன் சொல் வீரன், அவன் தூணி சொற்கள் நிறைந்தது. வில்வீரனின் அம்பறாத்தூணி தோளில் கட்டப்படும் எனில் காப்பியக் கவிஞனின் சொல் அறாத்தூணி அவன் சிந்தையில் கட்டப்படும்’ என்பது நாஞ்சிலின் விளக்கம்.

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே
கல் கிடந்தது கானகம் தன்னிலே
நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே
சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே
உயர்ந்தெழுந்தது இராமனின் கதை அரோ

(கம்பனின் அம்பறாத்தூணி புத்தகத்தில் நாஞ்சில் நாடன் கொடுத்துள்ள தனிப்பாடல்)

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே

(சீதையை மணப்பதற்காக இராமன் முறித்த சிவதனுசு மிதிலையில் இருந்தது)

கல் கிடந்தது கானகம் தன்னிலே

(இராமன் பாதம் பட்டு சாப விமோசனம் அடைவதற்காக அகலிகை கல்லாய் கானகத்தில் கிடந்தாள்)

நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே

(கம்பனின் புரவலரான வெண்ணெய்நல்லூர்ச் சடையப்பனின் வீட்டில் வேண்டிய அளவு நெல் (செல்வம்) இருந்தது)

சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே

(இராம காதை எழுதும் அளவுக்குச் சொல் கிடந்தது கம்பனின் மனத்திலே)

சொல் என்றால் ஒரு சொல்லா, இரு சொல்லா? தமிழ் அகராதிக் கணக்கையும் தாண்டிய சொற்குவை. மூன்றாவது அத்தியாயம் நாழி முகவுமே நாநாழி. நாழி என்பது நெல் அளக்கும் அளவை. ’நாழி முகவாது நாநாழி என்பது தான் பழமொழி. எவ்வளவு அழுத்தி அளந்தாலும் நாழி, நான்கு நாழிகள் தானியத்தைத் தன்னுள் முகந்து கொள்ளாது’ என்று பழமொழியை விளக்குகிறார்.

தமிழ்க் காப்பியங்களின் அளவைக் கணக்குப் போட்டுப் பார்த்து கம்பராமாயணத்தில் சுமார் மூன்று லட்சம் சொற்கள் கம்பன் பயன் படுத்தியிருக்கிறான் என்கிறார் நாஞ்சில். (10368 பாடல்கள், ஒவ்வொன்றும் 4 அடிகள், அதிகமும் அறுசீர் விருத்தம் என்பதால் ஒவ்வொரு அடியிலும் 6 சீர்கள், சில ஓரசைச் சீர்கள், சில ஈரசைச் சீர்கள்). அவற்றில் திரும்பத் திரும்ப பயன்படுத்திய சொற்களைக் கழித்துப் பார்த்தால் ஒன்றரை லட்சம் சொற்கள் இருக்கலாம் என்பது நாஞ்சிலின் துணிபு.

ஒரு வீரனின் முன் கிடக்கும் பல ஆயுதங்களில் எதைப் பயன் படுத்துவான் வீரன்? பகைவனின் சேண்மை அல்லது அண்மை, தான் நிற்கும் இடம், ஆயுதம் பயன்படுத்தும் வெளி, தனதாற்றல், பகை ஆற்றல் என எத்தனை தீர்மான்ங்கள். வீரனுக்குரிய அத்தனை முன் தீர்மான்ங்களும் கவிஞனுக்கு உண்டு. அதில் மாட்சி தெரிக்கும் தெய்வமாக்கவி எனில்? கவிச்சக்கரவர்த்தி எனில்? அவன் சொல் தேர்வு எங்ஙனம் இருக்கும்?” என்று நம்மைக் கேள்வி கேட்டு அவன் சொல் தேர்வின் வீச்சைப் புரிய வைக்கிறார். தூணியின் கொள்ளளவையும் மீறி சொற்கள் கிடக்கும் தூணி அவனுடையது. எனவே கம்பனின் காப்பியத்தில் நாழியும் முகவும் நாநாழி என்கிறார்

தமிழில் வழக்கொழிந்து ஆனால் மலையாளத்தில் வாழும் கம்பன் சொற்களைப் பட்டியலிடுகிறது ’மலையாளத்தில் வாழும் கம்பன் சொற்கள்’ அத்தியாயம். ஒவ்வொரு சொல்லுக்கும் அது மலையாளத்தில் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது, பழந்தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் வருகிறது, தமிழில் இன்று அதற்குப் பதிலாக எந்த சொல் இன்று புழக்கத்தில் உள்ளது என்று கூறுகிறார் நாஞ்சில். இந்தப் நூலில் அவர் எடுத்துக் காட்டும் அனைத்துச் சொற்களுக்கும் இது போல் ஒரு குறுங்கட்டுரை வரைந்திருக்கிறார். அங்கங்கே அவருக்கே உரிய அங்கதத்துடன் தன் ஆதங்கத்தையும் பதிவு செய்கிறார்.

உறக்கம் என்ற சொல்லைத் தமிழன் மறந்து தூங்கப் போய்விட்டான் என்று வருத்தப் படுகிறார். கிங்கரர்கள் கும்பகர்ணனை எழுப்பும் பாடலை

உறங்குகின்ற கும்ப கன்ன! உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்றது! இன்று காண் எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்குபோல வில் பிடித்த காலதூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்

உதாரணமாகத் தரும் நாஞ்சில் ‘இந்தப் பாட்டுக்கும் கூட உரை வேண்டுமெனில், புத்தகத்தை மூடி வைத்து நீங்கள் உறங்கப் போகலாம்’ என்று வாசகனையும் எச்சரிக்கிறார். இது போன்ற நாஞ்சிலின் முத்திரைகள் நூல் வாசிப்பின்பத்தைக் கூட்டுகின்றன. இந்த அத்தியாயத்தில் முடிவில் ’இப்படியே போய்க் கொண்டிருந்தால் மொத்தக் கம்பராமாயணமுமே மலையாள மூல மொழியில் எழுதப்பட்ட இதிகாசம் என்று இந்த நூலாசிரியன் நிறுவிவிட்டுப் போய்விடுவான்“ என்று அவர் கூறும் போது புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.

சொல் காமுற்றற்று அத்தியாயத்தில் கம்பனில் தன்னை ஈர்த்த, தனக்கு நூதனம் என்று தோன்றிய சொற்களை விளக்குகிறார். தான் கம்பன் சொல் திறத்தை விரும்புவதையே (காமுறுவுதையே) சொல் காமுற்றற்று என்ற தலைப்பின் மூலம் நமக்கு உணர்த்துகிறார் நாஞ்சில்.

கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்றற்று

கல்வி கற்காதவன் அவையில் சொல்ல விருப்பப் படுவது முலை இரண்டும் இல்லாதவள் பெண்மையை விரும்புவது போன்றது என்பது வள்ளுவன் வாக்கு. இது தனக்கும் தெரியும் என்று கூறும் நாஞ்சில் இந்த இடத்தில் தனது தோதுக்கு ஏற்றாற் போல பொருள் கொள்கிறார்.

இசை ரசிப்பவர் குறுந்தகடுகள் சேகரிப்பது போன்றும் ஓவிய ரசிகர்கள் ஓவியம் சேகரிப்பது போன்றும் ஒரு படைப்பிக்க்கியவாதிக்கு சொற் சேகரம். ஆனால் அவன் பணி சேகரித்து அழகு பார்த்துக் கொண்டிருப்பதில் முற்றுப் பெறுவதில்லை. அடுத்த கட்டமாக அவற்றைப் பயன்படுத்த முடிவது. பயன்படுத்தும் முனைப்பு இல்லாதவனுக்கு சொல் மோகமும் இருக்காது, சொல் யோகமும் இருக்காது’ என்று கூறும் நாஞ்சில் படைப்பாளிக்கு கம்பன் காப்பியம் என்பது சொற் சுரங்கம் என்கிறார்.

நாஞ்சிலின் வாசகர்களுக்கு அவர் படைப்புகளில் உணவுக்கு இருக்கும் முக்கியத்துவம் தெரியும். இந்த நூலிலும் அவர் காளான் நம் நாட்டுத் தாவரமா என்று பேராசிரியர் பா.நமசிவாயத்திடம் கேட்டுத் தெரிந்து கொண்டதைப் பகிர்கிறார். புறநானூற்றிலும், சிறுபாணாற்றுப் படையிலும், களவழி நாற்பது நூலிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் காளாம்பி என்பது காளான் என்று உரைக்கும் நாஞ்சில் கம்பனில் கிட்கிந்தா படலத்தில் ஆம்பியைக் கண்டடைகிறார். இன்றும் செட்டிநாட்டில் பூஞ்சை படிவதை ’ஆம்பிப் போவது’ என்று சொல்லுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.

குண்டிகை (கமண்டலம் அல்லது குடுக்கை) என்ற சொல்லையும் நிறைவாக விளக்கிச் சொல்லுகிறார் நாஞ்சில். இது திருமழிசை ஆழ்வார் ஏழாம் நூற்றாண்டில் பாடிய நான்முகன் திருவந்தாதியில் வருகிறது என்று உரைத்து அதற்கு ஒரு குதர்க்க அர்த்தத்தையும் உரைக்கிறார். அதை இங்கு எழுதினால் சண்டை வந்துவிடும். நூலை வாங்கிப் படித்து நாஞ்சிலிடம் சண்டை போடுங்கள்.

பல சொற்களை நயம் பாராட்டிய ’சொல் காமுற்றற்று’ அத்தியாயத்திற்கு அடுத்து இரு சொற்களைப் பாராட்டும் ‘ஊழியும் ஆழியும்’. ஊழ் என்பதைக் கம்பன் ஊழ்வினை, முறைமை, பகை, முடிவு, ஊழிக்காலம் என்று பல அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளதைக் காட்டும் நாஞ்சில் ஊழி தொடர்பாகக் கம்பன் பயன்படுத்தியுள்ள 43 சொற்றொடர்களைப் பட்டியலிடுகிறார். ஊழ்வினைக்கு எடுத்துக் காட்டாகத் தசரதன் அரச பதவியைத் துறந்து இராமனை அரசாள வேண்டுவதாக அமைந்த பாடலைக் காட்டுகிறார்.

முன்னை ஊழ்வினைப் பயத்தினும், முற்றிய வேள்விப்
பின்னை எய்திய நலத்தினும், அரிதினும் பெற்றேன்;
இன்னம் யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால்,
நின்னை ஈன்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ?

பாடலில் தசரதனின் மனத்தை விளக்கும் நாஞ்சில் ‘அரச பாரம் துறந்து, மகனிடம் பொறுப்பை ஒப்படைக்க நினைத்த ஒரு பேரரசனின் துறவு மனம் இது. தயவு செய்து சமகால அரசியலோடு ஒப்பு நோக்காதீர்கள். இங்கு எவரும் தசரதனும் இல்லை, இராமனும் இலக்குவனும் பரதனும் சத்ருக்கனும் இல்லை’ என்று முடிக்கிறார். இது தான் நாஞ்சில்.

தமிழ் லெக்சிகன் ஆழி என்னும் சொல்லுக்கு 11 பொருள் தருகிறது. கம்பனோ 12 பொருள்களில் ஆழி பயன்படுத்துகிறான் என்று கூறும் நாஞ்சில் அவற்றில் சில பாடல்களை மேற்கோள்களோடு விளக்குகிறார். வாலி இறக்கும் முன் இராமனிடம் வரம் இரந்து நிற்கும் பாடல்

அனுமன் என்பவனை – ஆழி ஐய! – நின் செய்ய செங்கைத்
தனு என நினைமதி

கூறி இந்த வரிகளைத் தான் சிகரமாக நினைப்பதாக்க் கூறுகிறார் நாஞ்சில். சாவதற்குச் சில கணங்கள் முன்பு, தன்னைக் கொன்றவனிடம், தன்னைக் கொல்ல அனுப்பியவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறுவது காப்பியத்தின் உச்சகணங்களில் ஒன்று.

அடுத்த அத்தியாயம் அம்பு என்னும் சொல்லுக்குக் கம்பன் உபயோகப்படுத்தும் சொற்கள். அம்பு, சோணை, கோல், கணை, சரம், வாளி, பகழி, என்று பட்டியலிட்டு ஒவ்வொன்றிற்கும் மேற்கோள் காட்டுகிறார்.

அடுத்து வழக்கொழிந்து போன உறவுச்சொற்கள். உம்பி (உன் தம்பி) நுந்தை (உன் தந்தை), உங்கை (உன் தங்கை), தவ்வை (தமக்கை, மூத்தவள்) போன்ற சில சொற்களை விளக்குகிறார். இவற்றில் தவ்வைக்கு எடுத்துக்காட்டியுள்ள பாடல் மிகச் சிறப்பான ஒன்று. பரதனுக்கு முடிசூட்ட வேண்டுமென்று கேட்பதற்காக கைகேயி வீழ்ந்து கிடக்கும் காட்சி. இதற்குக் கம்பன் உதாரணம் “தாமரையில் வீற்றிருக்கும் தாயாகிய திருமகள், எப்படியும் அயோத்தியை விட்டு நீங்கப் போகிறாள் என்று கருதி அயோத்தி வந்தடைந்த திருமகளின் தமக்கையாகிய மூதேவி போல கைகேயி கிடந்தாள்’.

’கவ்வை கூர்தரச் சனகிஆம் கடிகமழ் கமலத்து
அவ்வை நீங்கும்’ என்று அயோத்திவந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என கிடந்தனள் கேகயன் தனையை

இதற்கு நாட்டார் வழக்கிலிருக்கும் எளிய சொலவடையைக் காட்டுகிறார் நாஞ்சில் ‘சீதேவி போனாள், மூதேவி வந்தாள்’.

கம்பனின் மொழியாக்கங்கள் என்ற அடுத்த அத்தியாயத்தில் நாஞ்சில் களம் கட்டி ஆடுகிறார். கம்பனை வால்மீகியை மொழி பெயர்த்தவன் தானே என்று துச்சமாகப் பேசுபவர்களுக்குப் பதிலே இந்தப் பகுதி. ‘வடமொழியில் வான்மீகமும் வாசித்திராத, தமிழில் கம்பனும் கற்றிராத மூடன் தான் அவ்விதம் சொல்வான்’ என ஆரம்பத்திலேயே தன் கருத்தை நிறுவுகிறார். கம்பன் செய்தது மொழியாக்கம் என்றும் 10368 பாடல்களிலும் கம்பன் ஒரு கிரந்த எழுத்தைக்கூட பயன்படுத்தவில்லை என்றும் சொல்லுகிறார்.’கம்பனின் தமிழ்ப்பற்று வடமொழி துதி பாடிகளுக்குப் புரியாது. திராவிட இயக்கக் கனபாடிகளுக்கும் அர்த்தமாகாது’ என்று கம்பன் பக்கம் நின்று எல்லா பக்கமும் சாட்டை வீசுகிறார்.

எடுத்துக்காட்டாக நாகம் என்ற சொல்லைக் கையில் எடுக்கிறார். ‘நாகம் எனும் சொல் தமிழ்ச்சொல், அதே சமயம் வட சொல். கம்பன் பல பாடல்களில் நாகம் எனும் சொல்லை தென் சொல்லாகவும், வட சொல்லாகவும் ஆள்கிறார். அவருக்கு அதில் பேதமில்லை’ என்று கம்பனின் அம்பறாத்தூணியை குறுக்குபவர்களைச் சாடுகிறார் நாஞ்சில். கதாபாத்திரங்களின் பெயரைத் தமிழ்ப் படுத்தியதையும் சுட்டிக்காட்டுகிறார். இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போதே சென்னையில் இன்று பயன்படுத்தப்படும் ‘காண்டாயிட்டான்’ என்ற சொல்லுக்குத் தாவுகிறார். கடுப்பாகிவிட்டான் என்ற அர்த்தத்தைக் கேட்டபின், ஒருவேளை இது கம்பன் பயன்படுத்திய ‘கான்று’ ( கனல் வீசும் ) தானோ என்று கேட்டு நம்மைச் சிரிக்கவும் வைக்கிறார்.

அசைச் சொற்கள், தாமரைக்கு ஈடான சொற்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் விளக்கும் நாஞ்சில், ’கம்பனின் கலப்பை’ அத்தியாயத்தில் தன் பெயருக்கே வருகிறார். ‘நாஞ்சில்’ என்ற நிலப்பகுதி புறநானூற்றில் வருகிறது. ஆனால் அதன் பொருள் என்ன? கலித்தொகையில் இருந்து கலப்பை என்ற பொருள் கண்டடைகிறார். கம்பன் நாஞ்சிலை கலப்பையாகவும் போர்க்கருவியாகவும் பயன்படுத்துகிறான் என்கிறார். நாஞ்சில் நாடனுக்கும் இது பொருந்தும். கம்பனின் சொற்சுரங்கத்தைத் தோண்டி எடுக்கும் கலப்பையாகவும் இருக்கிறார், கம்பனை யாரும் தூற்றினால் போரிடும் போர்க்க்கருவியாகவும் இருக்கிறாரல்லவா நாஞ்சில்?

கம்பன் சேமித்த தகவல்கள் அத்தியாயத்தில் ‘புல்லிடை உகுத்த அமுது’ ஆயிற்று கம்பனின் கவித்திறம் என்று குறைபட்டுக் கொண்டு கம்பன் சேமித்து வைத்துள்ள பண்பாட்டுக் கூறுகளை விளக்குகிறார் நாஞ்சில். வாத்தியங்கள், மலர்கள், பறவைகள், ஆயுதங்கள் பற்றி எண்ணற்ற பாடல்களில் வரும் குறிப்புகளைக் காட்டிக் கம்பனில் உள்ள தகவல்கள் பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிறார்.

நாஞ்சிலின் சொல்லாய்வு நூல் பல்கலைகழகப்ங்கள் வெளியிடும் படிக்க முடியாத நூல் போன்றது இல்லை. கம்பனைத் தஞ்சாவூர் கோயில் கோபுரம் போல் பெருமை மிக்கப் பழம் பொருளாய்ப் புரியாமல் பார்த்து விட்டு நகருகிறவர்களைக் கூப்பிட்டு சில சிற்பங்களை, அதன் நுணுக்கங்களை, அழகை எடுத்துக் காட்டுகிறார் நாஞ்சில் நாடன்.

’எம்மனோர்’ என்ற சொல்லும் கம்பன் உபயோகப்படுத்திய சொல் தான். எம்மைப் போன்றவர் என்று அர்த்தம். அதுவே இந்த நூலின் கடைசி அத்தியாயம். காப்பியத்தின் உச்ச தருணங்களில் கம்பன் இதை எம்மனோர் எப்படி விவரிப்பர் என்று கேட்கிறான். அந்தச் சொல்லைப் பற்றி விளக்கும் போது கம்பன் எம்மனோர் என்பது யாரை என்று கேட்கும் நாஞ்சில் தானே அதற்கு பதிலும் சொல்கிறார் ”மடக்கி எழுதி 120 பக்கம் நிறைத்து, நீட்டி அடித்தால் 20 பக்கம் வரும் கவிதைத் தொகுப்பு போட்டவர்களையா? கவிஞர் விக்ரமாதித்தன் பாடியதுபோல் ஓய்ந்த நேரத்தில் கவிதை எழுதுபவர்களையா? இல்லை, 10000 பாடல்கள்எனும் பெருங்கனவு கொண்டவர்களையா?”

கம்பராமாயணம் படிக்க ஒரு தூண்டுதலாக இருக்கும் இந்த நூல். கம்பனைக் கற்றறிந்தவர்களுக்கு மேலும் சுவை கூடும். இந்த நேரத்தில் ஒரு கேள்வி எழலாம். கம்பராமாயணம் படிக்கத் தான் வேண்டுமா? படித்து என்ன ஆகப் போகிறது? தமிழ்ச்சுவையும், எதுகையும் இன்றைய அவசர உலகத்தில் தேவையா? நியாயமான கேள்வி தான். எதையும் தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது? வெந்ததைத் தின்று விதி வந்தால் செத்துப் போகும் வாழ்க்கையில் எதுவுமே தேவையில்லை தான்.

நம் கல்வி முறையில் செவ்வியல் ஆக்கங்களுக்கு இருக்கும் இடம் ஓரிரண்டு செய்யுட்கள், மிஞ்சிப் போனால் ஒரு கட்டுரை, அவ்வளவு தான். சங்கத்திலிருந்து ஆரம்பித்து இருபதாம் நூற்றாண்டு வரை நீளும் இலக்கியத்தை சில பக்கங்களுக்குள் சுருக்கி விட வேண்டியிருக்கிறது. மதிப்பெண் பெறுவதற்கு கம்பனைப் பற்றிக் கோனார் கூறியதை மனனம் செய்தால் போதும்.கல்லூரிப் படிப்பு என்பது வேலைக்குப் போவதற்கான கருவி என்பதால் அங்கு இந்தப் பேச்சே இல்லை. இளங்கலை தமிழ் படிப்பவர்களுக்கு மட்டுமே செவ்வியல் இலக்கியங்களுக்கான அறிமுகம் இருக்கிறது.

இத்தகைய சூழலில் நம் மொழியின் ஆற்றலை, நம் முன்னோர்கள் சாதனைகளை, அவை இன்றும் நீடித்திருப்பதற்கான காரணங்களை நமக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை நம் கலாச்சார ஆளுமைகளுக்கு உள்ளது. அந்த விதத்தில் நாஞ்சில் செய்வது முக்கியமானதொரு செயல். பள்ளிக்குப் பின் நான் மீண்டும் கம்பராமாயணம் படிக்க ஆரம்பித்ததற்கு நாஞ்சிலே தூண்டுகோல். கம்பராமாயணம் மட்டுமல்லாது, சிற்றிலக்கியங்கள் பற்றியும் அவர் தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் எனக்குப் பாடமாய் அமைந்தவை.

இந்த நூலிலேயே நாஞ்சில் கூறுகிறார் “யோசித்துப் பார்த்தால் இவையெல்லாம் படைப்பிலக்கியவாதியான் என் பணியே அல்ல எனத் தோன்றும். மீண்டும் யோசித்துப் பார்த்தால் இவற்றை நான் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள் எனத் தோன்றும்”. முற்றிலும் உண்மையான கூற்று. கண் முன்னே கிடக்கும் ரத்தினங்களை விட்டுவிட்டு கூழாங்கற்கள் தேடும் தேசத்தில் இவ்வகையான பணிகள் செய்வது சோர்வூட்டக்கூடியது தான். ஆனால் அவரது இந்த முயற்சியால் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் மீது பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்.

தான் கம்பனைக் கற்றுச் சுவைத்துத் தோய்ந்த அனுபவத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே கம்பனின் அம்பறாத்தூணி நூல். நாஞ்சில் நாடன் கம்பன் மேல் கொண்ட காதலால் உருவான நூல் இது. கிட்கிந்தா காண்டத்தில் காதலன் என்ற சொல்லை மகன் என்ற அர்த்தத்தில் உபயோகிக்கிறான் கம்பன். வாலியின் மகன் அங்கதனை “வாலி காதலனும், ஆண்டு, மலர் அடி வணங்கினானை” என்று வருணிக்கிறான். அதே போல் நாஞ்சில் நாடனைக் கம்பன் காதலன் என்றே அழைக்கலாம்.

தற்கொலை

செந்தில் நாதன்

road-470798_640

இந்த இரவில் நட்சத்திரம் ஒன்று கூட மிச்சமிருக்காது
இந்த இரவே இனி இங்கு இருக்காது.
இந்தத் தாங்கவொண்ணா உலகம் மொத்தமும்
இறந்து போகும் என்னுடன் சேர்ந்து.
இறவா பிரமிடுகள், பதக்கங்கள், கண்டங்கள், முகங்கள்,
இவை அனைத்தையும் நான் அழித்திடுவேன்.
இறந்தகாலக் குவியல்களை இல்லாமலாக்குவேன்.
இடித்துத் துகளாக்குவேன் வரலாற்றை. அத் துகள்களையும் துகளாக்குவேன்.
இறுதி அஸ்தமனத்தை இப்போது பார்க்கிறேன்.
இறுதிப் பறவையின் பாடலைக் கேட்கிறேன்.
இல்லாத ஒருவனுக்கு இன்மையை ஈந்து செல்கிறேன்.

(போர்ஹெஸ் எழுதிய The Suicide, என்ற கவிதையின் தமிழாக்கம்)

செந்தில்நாதன் போர்ஹெஸின் வேறொரு கவிதையை தனது தளத்தில் மொழிபெயர்த்துள்ளார். இக்கவிதை குறித்து அவரது குறிப்பு-

button

 

 

 

English Translation by A.S. Kline. Source : http://www.poetryintranslation.com/PITBR/Spanish/Borges.htm

 

ஒளிப்பட உதவி- Bonnybbx

உயர்ந்தெழுதல்

செந்தில் நாதன்

dove-66475_640

 

செய்தி ஒன்றை கொடுப்பதற்காக வருவது போல்
நம் பால்கனி நோக்கி விரைந்து வரும் பறவைகள்
அதைத் தாண்டிப் பறக்கும், எப்போதும் தாண்டிப் பறந்து
நம் கண்முன்னே தம் திறமையை வெளிக்காட்டும்,
நாம் உவமானங்களைத் தவறாகப் புரிந்து கொண்டோம் என்று
நமக்குச் செய்தி சொல்வது போல. (more…)