சோழகக்கொண்டல்

உலர்ந்துருகும் வேனில்

சோழகக்கொண்டல்

இக்கணம்
நீண்டு நிகழ்ந்தபடியே இருக்கிறது
பூக்களின் புன்னகையில் ஒளிரும்
வெயில் உதிர்ந்துவிட்ட மாலையாய்

இவ்விடம்
மீட்டி முழங்கியபடியே இருக்கிறது
ஈரம் குறுகுறுக்கும் தொண்டைக்கும்
இறங்கிச்செல்லும் நெஞ்சுக்கும் வெளியே
கால்வைத்து ஏறி நடக்கும்
காற்றின்மேல்
நீரின் நினைவை

இந்நிலம்
இறைஞ்சிக்கொண்டே இருக்கிறது
உலர்ந்து உதிரும்
ஒவ்வொரு சருகிலும்
மழை மழை என்று கிறுக்குகியபடி

இத்திசை
எரிந்துகொண்டே இருக்கிறது
காணலின் கைவெப்பம் தொடும்
துளிர்களையெல்லாம் கருக்கியபடி

இப்பயணம்
நீண்டுக்கொண்டே  இருக்கிறது
நேரமோ பாதமோ நெருங்காதபடி
நெடுந்தொலைவில் உறையும்
ஒரு நினைவின் நதியைத்தேடி

இக்கனவும்
அமிழ்ந்துகொண்டே  இருக்கிறது
ஒவ்வொருகணமும்
ஊழி ஊழியாய்
நீண்டபடி

இன்றிரவும்
முடியத்தான் போகிறது
முதல்மீன் முளைக்கும் இருளின் கரையில்
இந்த முற்றத்தில் படியும்
வெற்றுப் புழுதியோடு.

ஞானத்தெருநாய் (கவிதை)

சோழகக்கொண்டல்

 

வெளிர்க்காவி நிறத்தில்
வற்றிய வயிறும்
ஒடுங்கி ஒளிரும் கண்களுமாய்
குத்துக்கால் ஆசனத்தில்
மானுடத்தை நோட்டமிட்டபடி
மோனத்தில் வீற்றிருக்கிறது
ஞானத்தெருநாய்

திறந்த வானின்கீழ்
திசையெங்கும் வீடென்றலைந்தும்
தன் எல்லைவரை மட்டுமே
அருள்பாலித்து மீளும்
சிறுநீர்க்குறிச் சித்தன்

கயமையை கண்டவிடத்து
காலபைரவன் ஆகிவிடக்கூடும் இருந்தும்
கைப்பிடிச் சோற்றுக்கே
காவல்தெய்வமாகிவிடும்
தனிப்பெருங்கருணை இந்த
அருட்பெருஞ்சோதி

பால்குடி மறக்கும்முன்பே
பந்தம் அறுபட்ட பிக்கு
ஏந்தி அலைவதெல்லாம்
எச்சில் பொங்கி வழியும் ஒரு
யாக குண்டம் மட்டுமே

அதனுள் அவியிடும்
அருகதையில்லாதவர்
இல்லங்களுக்கு முன்னாலும்
வந்து நிற்பான்
இரக்கத்தின் கடைசி பருக்கையை
எதிர்பார்த்து

விரட்டும் கைகளையும்
விருந்திடும் கைகளையும்
விண்ணே அறியும்படி பார்க்கும் முகத்தில்
என்றுமே தரிசனமாவது ஒரு
நெடுந்தவத்தின் நிச்சலனம் மட்டுமே.

ஓம் ஓம் ஓம்.

தனிமையின் தேநீர் விருந்து

சோழகக்கொண்டல்

பின்னிரவிலும் அணைக்கப்படாமல்
விளக்கெரியும் ஜன்னல்களுக்குப் பின்னே
விழித்திருக்கிறது தனிமை

எட்டிவிடமுடியா ஆழம்கொண்ட
அதன் தேநீர்கோப்பையை
பகிர்ந்து பகிர்ந்து பருகியபடியே
தனிமையை தக்கவைக்கின்றன
முகிழா காதலும்
முயலா காமமும்
முந்தையநாள் சோறும்
மூப்பும் பிணியும்

சாக்காடு படிந்திருப்பதோ
சர்க்கரையோடு அடியில்
இனிப்புக்கு ஏங்கி
எத்தனை பருகினாலும்
இறங்குவதாய் இல்லை
தேநீர்மட்டம்

இளமை மிச்சமிருக்கும் ஜன்னல்களுக்குப் பின்னே
மதுப்புட்டிகள்
இன்னும் சில ஜன்னல்களுக்குப் பின்னே
மருந்துப் புட்டிகள்

திறந்துதான் இருக்கும்
ஜன்னல்களைவிட்டு
வெளியே நிற்கிறது காற்று
உள்ளேயே உறைந்துவிட்டது காலம்
இவை ஒன்றையொன்று
தொடவும் கரையவும் இயலாதபடிக்கு
திரையொன்றை இட்டுவிட்டு
பொய்ப்பாலம் கட்டுகிறது
இமைக்காமல் எரியும் விளக்கு

அந்த அணையாவிளக்குகள்
எரிக்கும் அறைகளுக்குள்ளே
உறக்கம் நுழைய முடியாதபோது
எஞ்சியிருக்கப்போவது
வெக்கையும் ஈரமும் சேர்க்கும்
பெருமூச்சும் கண்ணீரும் மட்டுமே.

ஒளிப்பட உதவி – Yezi Tea

நத்தை வீடு

சோழகக்கொண்டல்

எந்த இரவிலும் தவறவிடாமல்
எப்படியும் திரும்பிவிட வேண்டும்
என்று நினைக்கும் வீடு
எல்லோருக்கும் ஒன்று உண்டு

இரவில்தான் இருப்பை முகிழ்க்கும் என்றாலும்
இடமோ காலமோ லட்சியமில்லை
இந்த வீட்டிற்கு

யாருடைய பயணத்திலும்
முதலில் மடித்து வைக்கப்படும் முகவரியும்
திட்டமிடாத நிச்சயத்துடன்
உடனழைத்துச் செல்லப்படும்
சகபயணியும் இதே வீடுதான்

களைப்பின் மீதும்
கனவுகளின் முன்னேயும்
கூடிக்கலைந்தும்
குளிருக்குள் சுருண்டும்
கணக்கற்ற வழிகளில் தன்னையே
கட்டியமைத்துக் கொள்ளும்
இப்படியான ஒரு வீடுதான்
எல்லோருக்குமான கனவு

தானே மூடிக்கொள்ளும்
இமைகளுக்குப்பின்னே தாழ்திறக்கும்
களைப்பின் பசியை
கனவுகளின் ருசியால் நிறைக்கும்
நித்திரையின் நத்தை வீடு

பசியும் பிசாசுகளும்
வாடகைபாக்கியும் பள்ளிக்கட்டணங்களும்
பணிமுடிப்பு அவகாசங்களும்
பிரிவும் காமமும்
சதா எரித்துக்கொண்டே இருக்கும்
இதை நெருங்குவதென்றால்
யாரேனும் வந்து இந்த வீட்டின்மீது
அன்பின் நிழலை விரித்து
இருப்பின் குளிரை நிறைத்து
அணைப்பின் தகிப்பை மூட்டவேண்டும்

பிறப்புக்கும் முன்பிருந்தே
பிரியாமல் சுமந்தலையும்
இந்த வீட்டாலும் கைவிடப்படுபவர்களின்
அறையின் விளக்குகள் அணைக்கப்படுவதில்லை

காலத்தின் கைவிரல்வந்து
உடலைத்தொடும் ஒருநாளில்
விருட்டென்று சுருட்டிக்கொண்டு
அந்த வீட்டுக்குள் பதுங்கிக்கொள்வோம்
என்றைக்குமாக.

000

ஒளிப்பட உதவி – www.saumag.edu

உலகின் மறுமுனையில் வீடு

சோழகக்கொண்டல்

எனைக் கவ்விச்சூழ்ந்திருக்கும்
காலநாகத்தின்
நடுக்கண்டத்தில் நான்

தலையையும் வாலையும்
தானேயறியாத விஷநதியின்
அகால இருளுக்குள்
என்னில் எஞ்சியது எதுவுமில்லை

படுக்கை விரிப்பில்
சிறு கலைவும் இல்லை
அடைத்த கதவுகளுக்குப்பின் உறைந்த
சாளரத்திரைகளும்
விலக்கப்படுவதேயில்லை

என்குரல் எப்படி இருக்குமென்று
யாரிடமாவது கேட்கவேண்டும்
மீண்டும் உடைத்துவிட்ட
கண்ணாடியை மீட்பதற்குள்
என் முகமும் எனக்கு
மறந்துவிடக்கூடும்

யாரோ பெண்கள் சிரிக்கிறார்கள்
எம்பிக்குதிக்கின்றன பிள்ளைகள்
மெல்லிய திரைவிலகலில்
ஒரு மௌனப்படம் மட்டுமே இவை
செவியும் சிந்தையும்
விருப்ப ஓய்வில்

உருவமோ வண்ணமோ தெளிவின்றி
எஞ்சியிருக்கும் ஊரின்
ஓவியத்திலிருந்து
ஒவ்வொரு கோடுகளாய்
நகர்ந்து வெளியேறுகின்றன

உலகின் மறுமுனையில்
இருக்கும் எனது வீடு
வெறும் சொல்லாக
தேய்ந்துவிட்டது

குடியிருப்பு முகப்பின்
அஞ்சல்பெட்டியில் நிறைந்திருக்கும்
வெற்றிடத்தின் எடையோடு
தினந்தினம் அறைதிரும்புதல்
அத்தனை எளிதல்ல

மீண்டும் மீண்டும் திறந்தாலும்
வெற்றுச் சிரிப்போடு
முகம்சுளிக்கிறது மின்னஞ்சல்

காலம் எனும் ஆலகாலம்
கழுத்துவரை ஏறிவிட்டது
இன்னும் நான் இங்கிருப்பது
என் வசத்தால் இல்லை.

ஒளிப்பட உதவி- Zlain8 1 

.