ஜெயந்தா மகாபாத்ரா

ஜெயந்தா மகாபாத்ராவின் கவிதை- “கோடை” – நகுல்வசன் தமிழாக்கம் குறித்து

ஜெயந்தா மகாபாத்ராவின் கவிதை- “கோடை” – நகுல்வசன் தமிழாக்கம் குறித்து 

நிலப்பிரபுத்துவ நடைமுறைகள் இன்னும் புழக்கத்தில் இருக்கும் இந்தியாவின் தொலைதூர பகுதிகளில் வாழும் பெண்களின் நிலையைச் சுட்டும் கவிதையாகவும் இதை வாசிக்கலாம் (பிற வாசிப்புகளின் சாத்தியத்தை இது நிராகரிப்பதில்லை).

சொத்து பெண்களுக்கு அளிக்கப்படும் பழக்கம் இல்லாத இடத்தில், பிறந்து வளர்ந்த வீடு எத்தனை நெருக்கமானதாக இருந்தாலும் அது ஆண்களுக்கே செல்கிறது. மா பழுப்பதற்கு முன் விழுவது, நிறைவேறாமல் பொய்க்கும் நம்பிக்கைகளைச் சுட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம். அவள் மணமாகி வேறெங்கோ செல்வார், அவளது பெண் அவளுக்கு தலை சீவி விடுவாள், வேறு இடங்களில் வேறு உள்ளங்களில் கண்டுகொள்ளப்படாத வேறு மூலைகளில் வேறு மாம்பழங்கள் கனியும் முன்பே விழக்கூடும். வெம்மையற்ற சாம்பல் இந்தச் சுழற்சியின் மீட்சியின்மையைச் சித்தரிக்கிறது- பீனிக்ஸ் போன்ற மறுமலர்ச்சி எதுவும் சாத்தியமில்லை.

ஆனால் இது ஒரு புதிரான கவிதை. மூளையைக் கொண்டு கவிதை வாசிப்பவர்கள் குறுக்கெழுத்தை அணுகுவது போல் இதை அணுகலாம்.

கவிதையின் முதல் வரி, Not yet., என்று வருகிறது. தலைப்பு கோடை என்பதால், அதனுடன் இணைத்து, கோடை இன்னும் வரவில்லை என்று புரிந்து கொள்ளலாம். அடுத்து, மாமரத்தின் கீழ், The cold ash of a deserted fire. வட இந்திய இலக்கியத்தில் கோடையும் மாங்கனியும் காமத்தின் குறியீடாகக் கருதப்படுகின்றன என்று நினைக்கிறேன் (இங்கு இந்தக் கவிதை நினைவுக்கு வருகிறது – – “பச்சையின்/ நிர்வாணத்தாலான/ அதன் உடல்/ ஒரு கோடைக் கரம்”. – மேஜையின் மீதிருக்கும் ஆரஞ்சு பழங்கள், ஸ்ரீனிவாஸ் ராயப்ரல்“. cold ash என்பதை அவிந்த நெருப்பின் சாம்பல் என்று வாசிக்கலாம், deserted fire, அனாதையாய் விடப்பட்ட, கைவிடப்பட்ட நெருப்பு- மாமரத்தின் கீழ் யாரோ எதற்கோ நெருப்பு வைத்திருக்கிறார்கள், அந்த நெருப்பை வளர்க்கத் தவறி கைவிட்டதால் அது அவிந்து கிடக்கிறது.

அடுத்து வரும், Who needs the future? என்பதை கோடை இன்னும் வரவில்லை என்பதோடு சேர்த்து யாருக்கு வேண்டும் எதிர்காலம் என்று வாசிக்கலாம். மாமரத்தின் கீழிருக்கும் நெருப்பை வளர்க்க ஆளில்லை, அது தணிந்து சாம்பலாகி விட்டது. இனி எதிர்காலத்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

அடுத்து ஒரு காட்சி. ஒரு பெண் தன் தாய்க்கு தலை பின்னி விடுகிறாள். பத்து வயது, அவள் அம்மாவின் தலைமுடியில் crows of rivalries are quietly nesting. இந்த சச்சரவுகள் முடிந்து போனவையாக இருக்கலாம், அப்படியானால் நடந்தது அத்தனையையும் அம்மா தன் கூந்தலில் அள்ளி முடிந்து வைத்திருக்கிறாள். அல்லது, இனி அம்மாவுக்கும் பெண்ணுக்கும் உருவாகப் போகும் சச்சரவுகளாக இருக்கலாம். அம்மா- பெண் போட்டியின் சச்சரவுக் காகங்கள் இப்போதைக்கு கூடடைந்து மௌனமாய் இருக்கின்றன.

அது என்ன போட்டி என்று கேட்டால், சிறுமி ஒரு போதும் தனக்கு இந்த வீடு சொந்தமாகாது என்று தெரிந்து வைத்திருக்கிறாள், அவள் போக வேண்டிய வீடு வேறு.

எனவேதான் இன்னும் உயிர்ப்புள்ள ஒரு மாங்காய், இன்னும் பச்சை அதன் மாறாத அத்தனை சாத்தியங்களோடும் (மீண்டும் அந்த மேற்கோள்  – “பச்சையின்/ நிர்வாணத்தாலான/ அதன் உடல்/ ஒரு கோடைக் கரம்.), மண்ணில் வீழ்கிறது, மென்மையாக. அவள் கோடை வரக் காத்திருக்கிறாள் என்று கொள்ளலாம். ஆனால் பத்து வயது பெண்ணின் உணர்வுகளா இவை என்று கேட்கும்போது இது அத்தனையும் அடிபட்டுப் போகிறது.

நாம் இந்தக் கவிதையை அம்மா, பெண், அல்லது இருவரையும் பார்க்கும் கவிஞர் என்று மூவரில் யாருடைய பார்வையில் வாசித்து யாருடைய உணர்வுகளை அடைகிறோம் என்பதில்தான் கவிதை அனுபவம் காத்திருக்கிறது.

கவிதை இங்கே

ஜெயந்தா மகாபாத்ராவின் கவிதை- “எனக்கே தெரியாமல் உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருக்கிறேன்” – நகுல்வசன் தமிழாக்கம் குறித்து –

ஜெயந்தா மகாபாத்ராவின் கவிதை- “எனக்கே தெரியாமல் உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருக்கிறேன்” – நகுல்வசன் தமிழாக்கம்  குறித்து –

பயனற்ற இல்லற வாழ்வு என்ற புள்ளியிலிருந்து இந்தக் கவிதையைப் பார்ப்பது வசதியாய் இருக்கலாம். தனது இல்லற வாழ்வின் நசிவை அவன் உணர்வதில்லை, எல்லாம் நல்லபடிதான் இருக்கும் என்று கவனிக்காமல் இருந்து விடுகிறான். ஆனால் ஒரு நாள் அவன் தன் மணமுறிவு துவங்கும் சாத்தியத்தைக் கண்டு கொள்கிறான். இது நாள் வரை, தான் அலட்சியப்படுத்திய விஷயங்கள் இப்போது அவன் மனக்கண் முன் அவனது சிறுமைகளைச் சித்தரிக்கின்றன. காலமோ கடந்து விட்டது, ஆண்களுக்கே உரிய கண்டுகொள்ளாமையினால் அவன் எண்ணற்ற ஆண்டுகளாகச் செய்ததை இப்போது அவனால் திருத்த முடியாது. தன் மனைவியின் இதயத்தை மீண்டும் அடைவது எப்படி என்பதற்கான வழி அவனுக்குத் தெரிவில்லை (வீடு திரும்ப முடியாதது போலவே).

இனி கவிதையை இன்னும் கொஞ்சம் நெருங்கி வாசிக்கலாம்.

“வெளியே ராப்பகலாக மழை கொட்டிக்கொண்டு இருக்கிறது. நான் நிச்சயம் என் வீடு திரும்பப் போவதில்லை (வீட்டுக்கு வெளியே இங்கே சிக்கிக்கொண்டு இருக்கிறேன்), விபரீதமாய் எதுவோ நடக்கப் போவது நன்றாகத் தெரிகிறது. (என்னோடு இப்போது இருப்பது) (என்னை அச்சுறுத்துவது) சில்லிட்டு வரும் தரைதான்”

இதைத் தலைப்புடன் தொடர்புபடுத்தி வாசிக்கும்போது இது தாம்பத்ய கவிதையாகும் சாத்தியம் கொள்கிறது.

இரவு பகலாய் மழை, வீடு போய்ச் சேரப் போவதில்லை என்பதை இவர் தன் வீடு திரும்பப் போவதில்லை என்று பொருள் கொள்ளாமல், இந்த இருவரும் அவர்கள் கனவுகண்ட வீட்டைச் சென்றடையப் போவதில்லை. மழை கண்ணீராக இருக்கலாம், அல்லது இவர்களை ஆழ்த்தும், முறிவிறக்கு இட்டும் செல்லும் அன்றாடச் சூழல். நிச்சயம் என்னவோ நடக்கப் போகிறது என்பதை, எப்போதும் இப்படியே நாம் இருந்துவிட முடியாது, ஏதோ ஒரு இடத்தில் முறியத்தான் போகிறது, என்று புரிந்து கொள்ளலாம். இப்போதொ வீட்டுக்கு வெளியே மழை, அதன் ஈரத்தால் தரை சில்லிட்டு வருகிறது. இதயம் என்றால் வெம்மை இருக்க வேண்டும், இங்கே அது மெல்ல மெல்ல அடங்குகிறது.

கவிதை இங்கே