ஜெயமோகன்

முன் நின்று கல் நின்றவர்

மூன்று வாரங்களுக்கு முன், சூரியன் பிரகாசமாக புன்னகைத்துக் கொண்டிருந்த ஓர் வேலை நாள். காலை 8:30 மணி. கனத்த போர்வையாக குளிர். வழக்கமாக இந்த நேரத்தில் அலுவலகம் செல்லும் வழியில் கிட்டதட்ட பாதி தூரத்தைக் கடந்து கொண்டிருப்பேன். ஆனால் அன்று இருபது நிமிடங்களாக ஒரே இடத்தில் என் கார் நின்று கொண்டிருந்தது.

வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 20 மைல்கள் கிராமப் பாதையில் போய், பின்னர் ஒரு மோட்டார் சாலையில், பெரு வழிகள் சாலையில் போய் இணையும் சந்திப்பிற்கு ஒரு மைல் தொலைவிற்கு முன்பிருந்தே, கார்கள் தேக்க நிலையில் இருந்தன. அவ்வப்போது மெல்ல ஊர்ந்தன. நானும் சாலையின் இரு புறங்களையும் பார்த்துக்கொண்டே ஊர்ந்தேன்.

கடந்த இரு வருடங்களுக்கு மேலாக இந்தச் சாலையில் போய் வந்து கொண்டிருந்தாலும் இப்போது கண்களில் படுபவை இதுவரை படாதவை. வலது புறம் பெரிய புல்வெளி மேடு. மேட்டின் உச்சியில், தூரத்தில், சடசடக்கும் கொடிகள் போல சிறுமரங்கள். சட்டென ஒரு ராட்சச பறவை போல், தாழப் பறக்கும் கிளைடர் விமானம் போல் மேக நிழல், சாலையை, என் காரை, தடவி, கடந்து செல்வதை கவனித்தேன். அது அப்புல்வெளியை அலை அலையாய் நடுக்கிவிட்டு, சாரலாகத் தூவிவிட்டுச் சென்றது. ஒரு நிமிடத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும். நிழல் கடந்தவுடன் சூரியன் திரும்ப பிரகாசமாக புன்னகைத்தான்.

புல்வெளி முழுக்க துளிநீர் மின்னிக்கொண்டிருந்தது.

சட்டென இமைப்பன என்ற வார்த்தை தோன்றியது. மின்னி மின்னி தெரிவதை இமைப்பன என்ற வார்த்தையால் கம்பர் குறிப்பிட்டிருப்பது நினைவிற்கு வந்தது. கூடவே, ஒரு குறள் நினைவிற்கு வந்தது. பலமுறை நினைத்து புன்னகைத்துக் கொண்ட குறள்தான் அது.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

விசும்பு என்ற சொல்லிற்கு, பொதுவாக மேகம், வானம் என்ற பொருள் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் அதை விண்வெளியாக எடுத்துக்கொண்டு அக்குறள் இன்னொரு திறப்பு நிகழ்த்தியிருப்பதைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் பலமுறை சிலாகித்துப் பேசியிருக்கிறார்.

குழந்தை ரயில் வண்டிப் பெட்டிகள் போல் தொடர்ச்சியாய், ஒன்றையொன்றை சிறு முடிச்சுகளால் தொட்டுக்கொண்ட எண்ணங்கள் தொடர்ந்து வந்தன. அல்லது ஒரு கட்டுரைக்கு கொடுக்கப்பட்ட tags போல.
விசும்பிலிருந்து புல்லும், புல்லிருந்து குறளும், குறளிலிருந்து ஜெமோவும் வந்தபின், இந்த வருடம், 2017 ஜனவரியில் அவர் கோவையில் மூன்று நாட்களாக நிகழ்த்திய “குறளினிது” என்ற தலைப்பில் ஆற்றிய உரைகளும் நினைவிற்கு வந்தன.

தேய்வழக்கு – இந்த சொல்லிற்கு உடனடியாக ஓர் உதாரணம் சொல் என்றால் திருக்குறள் என்று சொல்லி விடலாம். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் திருக்குறள் கையாளப்பட்டு வந்திருக்கிறது. கொதிக்கும் பஸ்ஸினுள்ளும் கொந்தளிக்கும் அரசியல்வாதிகளின் பேச்சுகளிலும் எங்கெங்கும் தென்படுவது ஆச்சரியம்தான்.
திருக்குறளிற்கான உரைகளுடனும் மொபைல் ஆப்களே வந்துவிட்டன. சலிக்கச் சலிக்க, சுற்றிச் சுற்றி எங்கும் தென்பட்டாலும், பொன், பொன்தானே.

குறளை ஒரு கவிதை நூலாக வாசிக்கலாம் என்று தன் உரையில் குறிப்பிட்டார் ஜெயமோகன். குறள் நீதி நூல் அல்ல; கவிதை வடிவில் நீதியைச் சொன்ன நூல். அந்த மூன்று நாள் உரைகளின் முக்கிய சாரங்களில் ஒன்று இது. அவரது பார்வைகளில், கட்டுரைகளில், அதிகம் கவனத்தை ஈர்க்காதவைகளில், திருக்குறளைப் பற்றிய பார்வையும் ஒன்று என்பது என் எண்ணம்.

இன்றைய தமிழ் சூழலில், அதிகம் பேசப்பட்ட குறள்களையும் அதிகம் பேசப்படாத குறள்களையும் எடுத்தாண்டு ஆற்றிய மிக முக்கிய உரையானது அது.

அதில் ஒரு குறளை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

நடுகற்கள் என்பவை இந்தியாவில் மட்டுமல்லாது உலகமெங்கும் இருந்திருக்கும் ஓர் வழக்கம்.
இங்கிலாந்தில், Stonehenge என்ற இடத்து பிரமாண்ட நடுகற்களை இதுவரை இரண்டு முறைகள் பார்த்திருக்கிறேன்.

என்னை முன் நில்லன்மின் – என்று துவங்கும் ஒரு குறளின் விளக்கங்களின் சாரம்- பகைவர்களே! என் தலைவன் முன் (எதிர்த்து) நிற்காதீர்; அப்படி நின்றவரெல்லாம் தற்போது நடுகல்லாய் நின்று கொண்டிருக்கிறார்கள், நீங்களும் அப்படி மாறப்போகிறீர்கள் என்று பகைவரை எச்சரிக்கை செய்தலாகும்.

என்னை முன் நில்லன்மின்-தெவ்விர்! பலர், என்னை
முன் நின்று கல் நின்றவர்.

ஜெயமோகன் தர்மபுரியில் வாழ்ந்த வந்த காலத்தில் ஒரு முறை கவிஞர் திரு. விக்கிரமாதித்யன், அவரைச் சந்திக்க அங்கு போயிருக்கிறார்.

இருவரும் மாலையில் அதியமான் கோட்டை என்ற இடத்தில் இருக்கும் ஏரிக்கரையில் நின்றிருக்கும் பல நடுகற்களை பார்த்துக்கொண்டே நடக்கிறார்கள். வேறு யாருமே அங்கில்லை. சூரியன் மறையும் நேரம். தன்னை விட மிக நீண்ட நிழல் கொண்ட நடுகற்கள். விளக்க முடியா சோகம் கவ்வும் தருணம். அந் நேரத்தில் கவிஞர், அதியமானை எதிர்த்து நின்றவர்கள் நிற்கும் நடுகற்கள் இவை என இக்குறளை நினைவு கூறுகிறார்.
ஜெயமோகனுக்கு அக்குறள் தரும் திறப்பு வேறு.

இவ்வுலகின் பேரரசன், காலம்தான். மாபெரும் சக்கரவர்த்தி. THE EMPEROR. மாந்தர்கள் அனைவருமே அச்சக்கரவத்தியின் பகைவர்கள்தான். அவன் முன்னால் எவரும் தோற்றே ஆக வேண்டும், கற்களாகத்தான் நின்றே ஆகவேண்டும். எவரும் வெல்ல முடியாது; தப்ப முடியாது. உடல் கொண்டு நிற்பவர், என்றாவது ஒரு நாள் கல் கொண்டு நிற்கத்தான் வேண்டும்.

என் ஐ (அரசன்) முன் நின்று கல்லாய் நின்றவர்….

இப்புவி, காலத்தின் பகைவர்களாகிய நமது நடுகற்களால் நிறைந்திருக்கிறது.

காலந்தோறும் நடந்து கொண்டிருப்பதுதான் இது. ஆனால் குறளின் வடிவில், இந்த திறப்பு நிகழும் போது கண நேரம் உறைந்துவிட்டேன்.

நேரடி விளக்க “கல்லாய்” இறுகியிருக்கும் குறள், உண்மையில் விதையாய், அச்சொற்களின், அவ்வாக்கியங்களின் அனைத்து சாத்தியங்களாகவும் திறக்கும் சிறந்த உதாரணம் இந்த உரை.

எல்லாரும் ஒரு நாள் நடுகல்லாய்தான் போக வேண்டும் என்றாலும் சிலரின் கற்கள் பெரியதாயும் நீண்டதாயும் ஆகின்றன. அவர்களது எண்ணங்களால், செயல்களால், படைப்புகளால்.

இந்தக் குறள் சொற்பொழிவின் இரண்டாம் நாளன்றுதான் வானவன் மாதேவி இயற்கை எய்துகிறார். அதை அன்றைய சொற்பொழிவின் ஆரம்பத்தில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். இனி என்றைக்கு, யார், இந்த உரைகளை கேட்கும் போதும் வானவன் மாதேவியைப் பற்றி எண்ணாமல் இருக்கமுடியாது. வானவன் மாதேவியின் கல் நிச்சயம் பெரியதாய், அவரது மனவுறுதியாலும் செயல்களாலும் நிறைந்திருக்கும்.

23 மார்ச் அன்று இயற்கை எய்திய தமிழின் மிக மிக முக்கிய எழுத்தாளர், திரு.அசோகமித்திரன் அவர்களின் கல் அவரது படைப்புகளால் ஆனது. மாலை நிழலைவிட மிக நீண்டதாய், ஆனால் எக்காலத்திலும் குறையா நீளமாயும், உறுதியும் நிறைந்திருக்கும். பிரமாண்டதாய் உயர்ந்திருக்கும்.

உண்மையில் புலிக்கலைஞன் அசோகமித்திரன்தான். படைப்புலக காட்டில், அவர் ஒரு நிஜப்புலிதான். மிகக் கம்பீரமான புலி. வெளியிலிருந்து புரியாமல் பார்ப்பவர்களுக்குத்தான் அவர் வெறும் புலி வேஷம் கட்டினவர். கல் நின்றவர், பெருங்கல் நின்றவர், அழியா கல் நின்றவர் அசோகமித்திரன். காலமெனும் சக்கரவர்த்திக்கு எதிராய் பெருங்கல்லாய், பேரமைதியாய், கம்பீரமாய் நிற்கிறார் – அவருக்கு வணக்கங்கள்.

அறம் சிறுகதைகள் – இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை

வெ. சுரேஷ்

நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே புத்தக வாசிப்பு பழக்கம் கொண்டவன். இரண்டாவது, மூன்றாவது படிக்கும்போதே முத்து காமிக்ஸ், அம்புலிமாமா  ஆகியவற்றைப் படித்த நினைவிருக்கிறது. பலே பாலுவும்  இரும்புக்கை மாயாவியும் என் மிக இளமை நினைவுகள். இது அப்படியே வளர்ந்து ஒரு 18 வயதிலிருந்து தீவிர இலக்கியம் என்ற  பிரிவிலிருந்த புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அது இன்றும் தொடர்கிறது. ஆனால் ஒருபோதும் படித்ததைக் குறிப்புகள் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றோ அதைப் பற்றி எழுத வேண்டும் என்றோ  தோன்றியதே இல்லை.

பிறகு சென்னையில் பணியாற்றும்போது அமைந்த ரூம் மேட்ஸின் சகவாச தோஷத்தால் எக்ஸ்பிரசுக்கு இரண்டொரு வாசகர் கடிதங்கள் எழுதி பிரசுரமாயிற்று, அதிலேயே பரம திருப்தி அடைந்து அதோடு எழுதுவதை விட்டாயிற்று, எழுதும் நேரத்தில் ஏதாவது படிக்கலாம் என்றே தோன்றும். எத்தனையோ நண்பர்கள்  நீண்ட உரையாடல்களுக்குப் பின், ‘என்னிடம் இப்போ பேசியதை எல்லாம் எழுதினால் என்ன?” என்றும், ‘அவசியம் எழுத வேண்டும்,’  என்றும் சொன்னதுண்டு. இருந்தாலும் சோம்பலும் எழுதும் நேரத்தில் படிக்கலாம் என்ற ஆசையும் என்னை எழுத விடவில்லை  எழுத்தாளர்களை நேரில் சந்தித்து உரையாடுவது குறித்தும் ஒரு தயக்கம்  இருந்தே வந்தது. சுஜாதா வேறு ஒரு நல்ல வாசகன் என்பவன் வாசகர் கடிதம் எழுதவோ எழுத்தாளனை நேரில் சந்திக்கவோ மாட்டான்  என்று எங்கோ எழுதிவிட்டார். (more…)