தி. ஜானகிராமன்

இராகப் பெண்கள் – 8: வராளி புன்னாக வராளி –அந்தி மயக்கம்

பானுமதி. ந

8: வராளி புன்னாக வராளி –அந்தி மயக்கம்

இதை நீர் சூழ்ந்த உலகு என்கிறார்கள். பனிக்குடத்துடன் பிறந்து நீர்க்குடத்துடன் நம் வாழ்வு நிறைகிறது. துவங்கும் புள்ளியும், முடியும் புள்ளியும் நீர்… நீர். நம் கடவுளின் தலையிலும் நீர்… அவன் உறைவிடமும் நீர்…

காவிரி பாயும் கன்னித் தமிழ்நாட்டில் தரங்கிணி அறிமுகமாகிறாள். அந்த ஆறுதான் அவளின் நதிமூலம்.. “எங்கம்மா என்னை எப்போ காவேரிக்குப் பெண்ணா ஆசீர்வாதம் பண்ணிவிட்டாளோ, அப்படியேதான் நான் ஆயிட்டேன்- வேண்டியவா, வேண்டாதவா எல்லாருக்கும் ஒண்ணாய், ஆத்து ஜலம் மாதிரி, எங்கெங்கே எப்படி எப்படியோ, ஒரு சமயம் ஒடுங்கி, ஒரு சமயம் பெருகி, ஒரு சமயம் ஒதுங்கி, ஒரு சமயம் நெருங்கி, எல்லோர் கைப்பட, எல்லாச் சொல்லும் பட வளர்ந்தேன்,” தரங்கிணி இராக “மாயா”.

அவள் கணவன்… தங்களிடையில் குழந்தையும் கூட தனிமையின் பங்கம் என நினைப்பவன். அவன் சொல்லும் ஒரு தொடர் நம்மைப் புரட்டிப் போட்டுவிடும். ”தனியாயிருக்கலாம். ஆனால்…தனிமையாயிருத்தல்…..அப்பா

குளிக்கப் போனவிடத்தில் மூழ்கிப் போய் தான் இறந்து போய்விட்டோம் என்பதை உணரும் உணர்வு மாத்திரமிருந்தால் எப்படி இருக்கும்?” அவனை அலைக்கும் தீயை அவள் நெருக்கத்தின் குளுமையில்தான் ஆற்றிக் கொள்ள முடிந்தது. சாவும் சத்தியமும் அவனளவில் ஒன்று.

அவள் உயிர் நீட்சி ஒன்று தான் வறட்சி தீர்க்கும் மருந்து என்கிறாள். சொல்லாலே மந்திரம் செய்யும் கதை இது. ”எனக்கு உயிர் மேல்தான் ஆசை. நான் செத்துப் போனாலும் உசிரோடு இருக்கணும். உசிர் மேலே எனக்கு அவ்வளவு உசிர்.”

இருக்குன்னா இல்லை என்போம். இல்லேன்னா இருக்கு என்போம் இப்படித்தான்”- அவள் சொல்லி, அவள் உணர்ந்து, இன்னுமொரு கல்யாணத்திற்கு அவன் செவி சாய்ப்பதை அவள் தாயாகப் போகும் தருணத்தில், தன்னை வளர்த்த ஆற்றின் கரையில் அவள் அறிவது….அப்பா! ”வானில் தங்க ரதம் ஒன்று உருவாகி எழும்பியது. கொத்துக்கொத்தாய்ச் சடை பிடித்த பிடரி மயிர் அலை மோத தலைகள்  உதறிக் கொண்டு வெள்ளை குதிரைகள் தாமே தோன்றி ரதத்துடன் தம்மைப் பூட்டிக் கொண்டன. ரதம் நகர்ந்தது. சக்கரங்களினடியில் அகிற்புழுதி தோகை தோகையாய் எழும்பிற்று.”

மாயா தரங்கிணி… ஆறு வளர்த்த இராகம்… அதுவே அவள் அகம், அதுவே அவள் புறம். அதுவே அவள் அறம் அதுவே அவள் மறம்.. அவளுயிரின் தொடர்ச்சி… தன்னை பலியிட்டாவது சாவிலும் வாழும் ஆசை.

அவள் புன்னாக வராளி..அவள் தொடங்குவதே நிஷாதத்தில்தான், முடிவதும் அதில்தான்
நி ச ரி க ம ப த நி நி த ப ம க ரி ச நி

இனி பங்கஜம்——நளபாக விருந்தில் முதன்மையான உணவு.

இவளை இனம் கண்டு கொள்வது அத்தனை எளிதில்லை.இவள் அந்த கலவையில் செய்த உணவோ, இந்தக் கலவையில் செய்த உணவோ என உண்பவனை கேட்டுக் கொள்ளச் செய்கிறார் தி. ஜா.

அதிக முதன்மையில்லாமல் அறிமுகமாகி நினைவில் நிற்கும் அற்புத ருசி. கண்களுக்கும், நாவிற்கும், வயிற்றிற்கும், மனதிற்கும் இசைவான ஒரு அமுது. ”இவளைப் பார்த்தால் இருபது வயது போல- முப்பது வயது போல- நாற்பது வயது போல-எல்லா வயதும் தெரிகிற தோற்றம்”. இது மாமியாரான ரங்கமணி மருமகளைப் பற்றி நினைக்கும் தோற்றம்.

யாத்ரா ஸ்பெஷலில் சமையல் தலைமையாக ரங்கமணி கண்ட காமேச்வரன் – ஒரு ஆசானாக, மகனாக, சமையல் கலைஞனாக, அம்பாள் உபாசகனாக, அறிவு, அழகு, ஒழுக்கம், பண்பு ஒருமித்தவனாக, தன் வம்சத்தின் சாபத்தை களைபவனாக ரங்கமணியைக் காண வைக்கிறது. அந்த யாத்திரையில் வரும் ஒரு ஜோதிடர் சொல்வது, அவளைச் சிந்திக்க வைத்து காமேச்வரனை தன் வீட்டில் தனக்கு மகனாக சமையல்காரனாக, பூஜை செய்து குல சாபம் போக்குபவனாக அழைப்பு விடுக்கிறது. இரவல் வம்சமாகவே வளரும் தன் குடியில் தன் வம்சத்து வித்து வேண்டும் என அவள் நினைக்கிறாள். அவளுக்கு ஒரு தத்துப் பிள்ளை உண்டு. அந்தப் பிள்ளை இந்த பங்கஜத்திற்கு சரியான இணை இல்லை என நினைக்கிறாள்.

ஒரே கூரையின் கீழ் வாழும் மூவரின் தனிமையைப் போக்க அவன் வருகிறான். அவர்கள் அன்பு செலுத்த அவன் வேண்டும். அவன் இது வரை அறியாத குடும்ப நேசத்தை அவர்கள் மூலம் அனுபவிக்கிறான். அவன் எல்லாமுமாக இருக்கிறான். தொட்டிச் செடியாக இருந்தவர்கள் தோட்டத்துக் கொடிகளாக, காற்றையும், சூரியனையும்,மிகும் நீர் உறிஞ்சும் மண்ணையும் அனுபவிக்கிறார்கள். இத்தனைக்கும் இடையில் ரங்கமணியும் பங்கஜமும் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு….

உனக்கில்லை …. எனக்குத்தான்”. இளமையும், மிக மிகத் தனிமையுமான நடுவயதும், வாழ்வின் பேழையிலிருந்து பருகத் தவிக்கின்றன. ரங்கமணியின் வயதும், நிலையும் அவளை இலைகள் மூடிய கனியெனக் காட்டுகின்றன. இளமையும், வாழ்வின் உரிமையும் பங்கஜத்தினை எண்ணத்தினால் சற்று அசைத்துப் பார்க்கின்றன. யாரும் இல்லா ஓர் முன்னிரவு சமயத்தில் காமேச்வரனின் விரல்களை பற்றச் செய்கின்றன. தனக்கு அதுவே போதும் என்று அவள் சொல்கையில் தி ஜா கத்தியின் மேல் நடந்த நம்மை பாதுகாப்பாக இறக்கி விடுகிறார். மன இயல் வல்லுனர் போல் தி ஜா போடும் கோலங்கள். உணர்ச்சியில் தடுமாறாத விவேகம்.. ஒரு சமையல காரன் சமைக்கும் மன- மண விருந்து. அவன் கரம் பட்டு அவள் தன் கணவனுடன் உடன்பட்டு காமன் எழுதும் உயிரோவியம்.

ஊரோடு உறவாகிறது அவனுக்கு. புழங்காத அறையினுள் காற்றும், வெளிச்சமும் அவனால் வருகிறது. நட்பும், நேசமும் கலகலப்பும் தனிமையைப் போக்கும் அருமருந்தென செயல்படுகிறது. பங்கஜத்திற்கு சீமந்தம் வருகிறது. அவன் அனைத்துமாக இருக்கிறான். அதில் தத்து வந்த பிள்ளையின் சொந்தக்காரர்களும், குணம் கெட்ட ஊர்க்காரரும் இவனை இணைத்துப் பேச, இந்த சின்னத்தனம் தாங்காது அவன் குமுறுகிறான். பங்கஜத்தின் கணவனோ இந்த அவப் பேச்சுக்களை ஒதுக்கி விடுகிறான். அவன் இருவரின் மேல் கொண்டுள்ள அசையாத நம்பிக்கை மிக அழகாக வெளிப்படுகிறது.

தன் இருப்பிடம் விட்டு வராத பங்கஜம். அவள் புகுந்த ஊரின் பல பகுதிகள் அவள் அறியாதவை. வறட்டு வாழ்வில் வசந்தம் என வந்தவன் அவன். ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தோழமையானால் இந்த உலகில் தனிமை என்பதே இல்லை. உடல் கவர்ச்சியால் அவர்களின் நட்பை கொச்சைப்படுத்தும் சமூகத்தில், தனிமை என்றுமே தகிக்கும் நெருப்புதான். ஆனாலும், புனிதத்தை மட்டுமே இங்கே தி. ஜா நினைக்கவில்லை. ”உனக்கில்லை எனக்குத்தான் “ என்பதில் உளம் விழையும் நட்பை பூரணமாக அறிய உடலும் உணர வேண்டும் என்னும் மனிதர்களின் நுண்ணிய ஆவலை (ஆசை அல்ல) தி ஜா வினால் மட்டுமே விரசம் இல்லாமல் சொல்ல முடியும். சொல்லி பங்கஜத்தை, காமேஸ்வரனை, துரையை, ரங்கமணியை, ஜோசியக்காரரை வெற்றி பெறச் செய்யவும் முடியும்.

காமேச்வரன் தன் சில உடைமைகளை ரங்கமணியின் அகத்தில் வைத்துவிட்டு தன் பழைய யாத்ரா வேலைக்குத் திரும்புகிறான். கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணத்தையும் சொல்கிறான்.

வராளி… பொதுவாக கச்சேரிகளில் நடுவில் மட்டும் பாடப்படும் ஒரு இராகம். முதலில் பிடிபடாது போனாலும் பின்னர் தன் இடத்தில் கம்பீரமாக அமர்ந்துவிடும். சுரங்கள் ஆரோகணத்தில் வரிசைப்படி இல்லை. அவரோகணத்தில் இருக்கிறது. இரண்டு “க” ஏறுமுகத்தில் வருவதுதான் அதன் அழகு; அதன் எழுச்சி.. கீழே பாடுகையிலும்,நிதானமான ஆலாபனையிலும் உருவெடுத்து பின்னர் மலை அருவியிலிருந்து பெருக்கெத்தோடும் ஆறு போன்ற இராகம். எல்லோரும் எப்பொழுதும் அதைப் பாட முடியாது. தம்பூரின் சுருதியோடு தன்னைக் கலந்து அது இழையோடும்.

பங்கஜ வராளியைப் பாட தி. ஜாவால் தான் முடியும். தரங்கிணியைப் புன்னாக வராளியாகப் பாட லா.ச.ராவால் மட்டுமே முடியும்.

வராளி: ச க ரி கம ப த நி ச ச நி த ப ம க ரி ச
புன்னாக வராளி: நி ச ரி க ம ப த நி நி த ப மக ரி ச நி

வயலினில் ஒன்று. மகுடியில் மற்றொன்று. இரண்டுமே அம்சம்தான்.

oOo

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இராகப் பெண்கள் – 7: கோபிகா வசந்தம், ஹிந்தோள வசந்தம்- ஆபரணம்

பானுமதி. ந

 7. கோபிகா வசந்தம், ஹிந்தோள வசந்தம்- ஆபரணம்

துறவு என்றால் என்ன? இந்த உலகினர் அனைவரையும் துறப்பதா அல்லது ஆத்மாவைச் சுற்றியுள்ள மூன்று கவசங்களகற்றி உலகோர்க்கு நன்மை செய்து கொண்டிருப்பதா? இல்லறத்தில் துறவு கூடுமா? துறவு இல்லறத்தை நோக்கிச் செலுத்துமா?

கை பிடிக்காத கணவனுடன், மாப்பிள்ளை அழைப்பன்று ஓடியவனுடன், நினைவிலே ஒரு வாழ்வு சாத்தியமா? திலகவதியின் நாடல்லவா இது? அவனை நினைத்தும், நெருங்கியும், தனித்தும், உலகோர் வாழும் வாழ்வில்லாத வாழ்வும், ”அன்பே ஆரமுதே” ருக்குவிற்கு மட்டும் முடியும்.

இதை இன்று நாம் அறியும் (அபத்தமாக அறியும்) கற்பெனும் சிறையில் தள்ளவில்லை தி. ஜா. செந்தாழம்பூவைப் போல் கமழச் செய்கிறார். காட்டுக்குள்ளே ஒரு ஓடை. ஓடையோரம் தாழம் புதர். காற்றினிலே வரும் மணம். ஆனால் அது உனக்கில்லை. உன்னதமான ஒரு சமர்ப்பணம் முன்னரே ஆகிவிட்டது. அதன் வாசம் பிறரை இழுத்தாலும் அதன் நேர்த்தியே அவர்களை அண்ட விடுவதில்லை. பூக்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று சேரலாம், உன் வசத்தில் பூத்தால்.

அது பாரிஜாதம் போல் பூத்திருக்கிறது- பூக்கையிலே மாலையாகி தன்னளவில் தோள் சேர்ந்து விட்டது.

அந்தத் தோள்கள் அறியும் முன், அவன் கால்கள் அவனை எங்கோ ஓடிப் போகச் செய்கின்றன. அவன் ஒரு மருத்துவ சன்யாசி, அல்லது சன்யாசியாக பிறர் நலம் பேணும் மருத்துவர். அவரின் கால்கள் மூலம் சென்னையில் தி. ஜா. நடந்து கொண்டேயிருக்கிறார். பலர் பிணி போக்குகிறார். உடலோடு மனப்பிணியும் போக்கும் இந்த அற்புத மருத்துவரை யார்தான் காண விழையார்?

கதையின் நாயகி அவரைச் சந்திப்பதும், இயல்பாகவும் கம்பீரம் குறையாமலும் தன்னை இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதும் அழகோ அழகு! தனக்கு நல்லதெல்லாம் செய்யும் குடும்பத்திற்கு அவளும் நல்லது செய்ய நினைக்கிறாள்; செய்யவும் செய்கிறாள்.

அவரை, தான் குடி போகும் வீட்டின் மாடியில் இருத்தி அவரது மருத்துவப் பணி சிறக்க எல்லாமாகவும் நிற்கிறாள். அவளும், அவரும் பந்தமில்லாப் பந்தத்தில், உறவான தோழமையுடன், தோழமையான உறவுடன் இருக்க மிக  நேர்மையுடன் செயல்படுகிறாள். தூற்றும் ஒரு வாய்க்காக அவள் சோரவில்லை. தன் நண்பரின் குடும்பத்திற்காக அவரை அந்த நபரிடமும் அனுப்ப அவள் தயங்கவில்லை. அன்பும் ஆருயிரும் …

இதில் இருளும் ஒளியுமென, பகல் இரவு என, நல்லது, கெட்டது என இரு பிரிவுகளும் கைகூடும் மனிதர்களைப் பார்க்கிறோம். நடந்து செல்லும் ஒரு மழை மாலயில், பார்க்கும் வானவில்லென பரவசம் ஊட்டும் மனிதர்கள். வியப்பும், கவலையும் அளிப்பவர்கள். தன்னைத் தானே உணரப் பார்க்கும் முயற்சிகள்.

ருக்கு, தன்னை மணக்க இருந்தவரை தன் வாடகை வீட்டில் குடியமர்த்துவது தான் வெற்றி பெற்றோம் என்பதற்கு அல்ல. அது ஒரு தவம், சபரியின் தவம், திலகவதியின் தவம். சபரி மோட்சம் பெற்றாள்; திலகம் சிவனடியாரானாள். ருக்கு மருத்துவ சன்யாசிக்கு உதவுகிறாள். ஒரு பெண்ணை மீட்கவும், தன்னைப்போலவே ஆகப்போகும் ஒரு பெண்ணிற்கு தோள் கொடுக்கவும் அவள் தயங்கவில்லை. முகம் அறியா மனிதர்களின் உடல் நோய்க்கும் மன நோய்க்கும் உதவிட அந்த சன்யாசியுடன் இந்த சன்யாசி நிற்கிறாள்.

ஒரு உன்னதமான பாத்திரப் படைப்பு. இவள் கோபிகா வசந்தம். கண்ணன் ஆயர்பாடியில் இருந்த பொழுதெல்லாம் கோபிகைகளுக்கு வசந்தம். அவன் மதுரா சென்ற பிறகோ அந்த நினைவுகளே வசந்தம். நினைவுகள் தரும் புனைவுகள் கோபிகா வசந்தம்,

ச ம ப நி த நி த ச   ச நி த ப ம க ச  

பச்சைக் கனவு

அன்பின் தராசு மிகவும் வலிமையற்றது. ஒரு சிறு தவற்றில் அது உறவில் ஒரு நிரந்தரப் பகையை உண்டு செய்து விடும். ”உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது” என்றாலும் சற்று உடைந்த அல்லது விரிசல் கண்ட கண்ணாடிதான்.

பசுமை என்று சொல்கையில் இருக்கும் நிறைவு பச்சையில் இருப்பதில்லை. பச்சையுடன் ஏதேனும் ஒன்று சேரவேண்டும்- “பச்சைப் பசேல்”, “ பச்சைக் காய்கறி”, “பச்சைப் புல்”, “பச்சை விளக்கு”, “பச்சைப் பொய்”.

மனக்கண் குருடாய், மனமொழி பேசாமல், மனச்செவிடராய் இருக்கும் மாந்தர்களை லா.ச ரா “பச்சைச் கனவில்” காண்பிக்கிறார். கதையின் நாயகன் சிறு வயதில் ஆதவனை உற்று உற்று நோக்கி, பின் சுற்றும் முற்றும் பார்க்கையில் காணும் பச்சைக் கோலங்களை வியக்கிறான். பச்சை தங்கிவிட வாழ்வு குருட்டுத்தனமாக  நீள்கிறது. அவனுக்கு சிறு வயது கல்யாணம். அந்தப் பெண் ஊமையும் செவிடுமாக வாய்க்கிறாள். ஆணின் குறை பாராட்டப்படாமல் பெண்ணின் குறை வாழ்வை சூறையாடுகிறது. பலன் பிரிவு.

இளமை, தன் இணை தேடும் தவிப்பு, தன் சொந்தம் என்ற நினைப்பு, உயிர் உருகும் ஏக்கம், அது அவர்களை ஊர் அறியா வண்ணம் சேர்க்கிறது.

அவர்களிருவரின் ஆயுளின் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மூச்சில் அளந்துவிட முயல்வது போன்ற ஆலிங்கனத்தின் அவஸ்தையிது…

3 மாத கர்ப்பத்துடன் அவள் இறக்க, ஊர் சிரிக்க அந்த நேச இழை வெளியே அறுந்து உள்ளே பச்சையாகத் தொடர்கிறது.

ஊமை கண்ட கனவினை யாரிடம் சொல்வாள்? இல்லை.. “அந்த நினைவு அவர்கள் இருவருக்கும் மட்டுமே சொந்தமாயிருக்க அவள் எண்ணியிருக்கக் கூடும். பகை நடுவில் பயிரான உறவைப் பாதுகாப்பதில் சட்டென்று சலிப்பேற்பட்டுவிட்டதோ? உயிர் நிலையின் ஒரே மூச்சுப் போன்ற அம்மூன்று மாதப் பச்சைக் கனவின் மிச்சம்”- நாயகன்தான்.

மானம், மானம் என்பதெல்லாம் வகையாக வாழ்பவருக்கோ? கண்டு, கேட்டு, பேச இயலாத உறவின் தனிமைகளை ஊர் அறிய ஏன் சொல்லவேண்டும்? வாழ வைக்காதவர்கள் தூற்ற மட்டும் எங்கிருந்து வருகிறார்கள்? உயிர் உருகும் ஓசை கேட்காதவர்கள் வாய் திறந்து பேச மட்டும் செய்கிறார்களே? லா. ச.ரா அவன் மூலம் இந்தக் கேள்விகளைக் கேட்கிறார். அந்த உறவின் அர்த்தத்தை, அவர்கள் கண்டு கொண்ட உயிரின் மீதியை, இளமைக் கொண்டாட்டங்கள் மீறிய சிலிர்ப்பை அவன் பகிரங்கப்படுத்தவில்லை.

இந்தக் கதையும் நாயகனின் போக்கிலே சொல்லப்படுகிறது. அதுவும் தன் இரண்டாம் மனைவியிடம்..

பார்வையற்ற அவனுக்கு இறந்தவள் பாலைவன நீரூற்று. தாகம் தணித்தவள். அன்பால் நிறைத்தவள். அந்த அன்பாலேயே பிரிந்தும் சென்றவள். குறைகளைக் கொண்டாடும் சமுதாயத்தில் விடை சொல்லாத வினாவாக அவள் வெற்றி பெறுகிறாள். அதற்கு மதிப்பளித்து அவனும் மௌனிக்கிறான். அவன் மட்டுமே கேட்ட வசந்தம்… ஹிந்தோள வசந்தம்.. வசந்த மாதவம்… ஜானகி தவம்… சச்சிதானந்த வைபவம் (முத்துஸ்வாமி தீஷதர் கிருதி…  சந்தான இராமனைக் கொண்டாடும் இந்தக் கிருதி).இவன் பச்சைக் கனவின் நாயகியை மனதால் பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.

பெயரில்லாத இந்தப் பெண்… வாய் பேச இயலாத இந்தப் பெண் தன் பிறப்பின் பலனை உரக்கச் சொன்னாள். உயிர் தாங்கும் உரிமை பெண்ணிற்கு அன்றி யாருக்கும் இல்லை. அவள் வசந்தம்.. பூவாகிக் காயாகிக் கனிந்த மரம்… தன்னையன்றி யாருக்கு அவள் தன்னை மெய்ப்பிக்க வேண்டும்?

ச ரி ம ப த நி த ச  ச நி த ப ம த ம க ச  – ஹிந்தோள வசந்தம்.

ருக்குமணி– கோபிகா வசந்தம்: இன்பமும் துன்பமும் வெளிப்படை.

பச்சைக் கனவின் நாயகி- ஹிந்தோள வசந்தம்: இன்பமும் துன்பமும் உள்ளிடை.

oOo

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இராகப் பெண்கள் – 6: அமிர்த வர்ஷினி- மீறும் அளவுகள்

பானுமதி. ந

6. அமிர்த வர்ஷினி- மீறும் அளவுகள்

அமிர்த தாரை. வானம் கொடுக்கும் உயிர். நீரின்றி அமையாத உலகின் அச்சாணி. இத்தனை சிறப்பு— “ஆழியில் புக்கு முகர்ந்து கொடார்த்தேரி” வரும் வருணனுக்கு. ஆனால், அவன் நினைக்கையில் மட்டும்தான் வருவான். அளவின் கட்டுப்பாடுகள் அவனுக்கு இல்லை. குறைவாய், அதிகமாய், சரியாய், விளைநிலத்தில், காடுகளில், கடலில் பெய்யும் பெருமழை. வருவது போல் தோன்றி, போக்குக் காட்டி பின்னர் எதிர்பாராது  வந்து… மகேசன் அறியா மாமழை.

ஆழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து” லா. ச. ரா.வின் “அபூர்வ இராகம்” நாயகி பெய்யும் பெரு மழை. முழங்காலுக்கும் கீழே தொங்கும் கூந்தல், இயல்பாக இருத்தல் அவள் வழி. பெண் பார்க்கையிலேயே “பஜ்ஜிக்கு உப்பு போதுமா?” என்று கேட்க வைத்து அவள் தன்மையை உணர்த்தி விடுகிறார் லா. ச. ரா. தீயில் இருக்கும் குளிராக, குளிரில் உறையும் நெருப்பாக அவனும், அவளும். அவர்களின் ஆழம் காணும் போக்கு அவர்களை சிறிது காலம் பிரிக்கிறது. ஒருவரை ஒருவர் வரவழைக்க பொய்யான செய்தி சொல்லி தந்திகள் பறக்கின்றன. ஊர் பார்க்கும் கவலையின்றி இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, கண்ணீரில் கரைந்து அந்தப் புகை வண்டி நிலையத்தில் ஒன்றேயான இரண்டாக நிற்கின்றனர்.

அவளின் கூந்தல் அவனின் பிரமிப்பு. அவளின் அலாதியான மௌனமும், சிறு பேச்சுக்களும் அவனின் வியப்பு. மாமழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கும் ஒரு மாலையில் இருவரும் கடற்கரைக்குச் சென்று பேரழகின் அச்சத்தை, ஆழத்தை, இயற்கையின் விளையாட்டை, காட்சி தெளிவாக இல்லாத ஒளிமயக்கை, அனுபவிக்கிறார்கள். அதிலும் அவள் கொள்ளும் உற்சாகம் மிகுதி. உள்ளம் அனுபவித்ததற்கு உடல் விலை கொடுக்கிறது. அவள் நோயுற்று சாகப் பிழைக்கக் கடந்து தேறுகிறாள்.

அவன் அன்னையின் வேண்டுதல்படி அவள் தன் கூந்தலை காணிக்கையாக ஏழுமலையானுக்கு செலுத்த வேண்டும். இருவருக்குமே இது தாள இயலாத அதிர்ச்சி. ஆனால் இதெல்லாம் இவர்களுக்கு வேண்டாம். அந்தந்த நிமிட வாழ்வில்தான் இருவருக்குமே அக்கறை.

அபூர்வ இராகத்தின் உயிர் நாடி அந்த அளகபாரம்தான். ”பின்னாது வெறுமனே முடிந்தால் ஒரு பெரும் இளனீர் கனத்துக்கு கழுத்தை அழுத்திக் கொண்டிருக்கும். பின்னலை எடுத்துக் கட்டினால், கூடை திராஷையை அப்படியே தலையில் கவிழ்த்தது போலிருக்கும்.” தன் நிலை தாழ அது விரும்பவில்லை. உயிர் ஸ்வரம் இல்லாமல் இராகம் என்ன, தாளம் என்ன? பாவ பூர்வமாக, ஸ்ருதி சேர்ந்ததாக, அந்த ஸ்வ்ரத்தில் மட்டும் நின்று கார்வை கொடுக்கையில் வீணையின் தந்தி அறுந்துவிடுகிறது.

“அபூர்வ இராகம், அதே வக்கரிப்பு, பிடாரன் கை படாத பாம்பு போல், அபாயம் கலந்த படபடப்பு, ஸ்வர ஸ்தானங்கள் பிடிபடாது, பழகப் பழக எல்லையேயற்றது போல், நடையுடை பாவனைகளில் சிந்தும் ஒரு கவர்ச்சி, வேட்டையில் வேடுவன் மேல் பாயத் திரும்பிய மிருகம் போல் பயந்த ஒரு முரட்டுத்தனம் சிலிர்சிலிப்பு”

“இயல்பு என்று சொல்வதன் அர்த்தம் என்ன? பட்சிகளுக்குப் பறப்பதுதான் இயல்பு. இறக்கையை ஒடித்துவிட்டு இயல்பு மாறாதவரை பட்சி பட்சிதான் என்றால் என்ன சரி? இராகத்திற்கும், பட்சிக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிற்கும் மேல் சஞ்சாரம்தானே?”

இவள் வர்ஷிப்பவள். பொழிந்து ஆள்பவள். ஆனால் கட்டுக்குள் அடங்காதவள், அதுதான் அவளது இயல்பு. அந்தந்த நொடியில் வாழ்பவள். தன் இயற்கையில்  இருப்பவள். இவள் அம்ருத வர்ஷினி

அவுடத இராகம். பிறப்பெடுத்து தோன்றும் உருக் கொள்பவள்

ச க ம ப நி ச     ச நி ப ம க ச

அமிர்தம்

நிறைகுடம். தெவிட்டாதது. காலம் தோறும் வெல்லும் உண்மைகளின் உரைகல். அழகும், அறிவும், ஆற்றலும் திரண்ட அமுது. சேற்றிடை செந்தாமரையென மலர்ந்தவள். அழுக்கு அண்டாமல் வாழத் துடித்தவள். தன் தாயை மீற இயலவில்லை. தன்னை ஊர் அறியாத் துணையாக வைத்துக் கொள்ளத் துடிக்கும் முதலியாரிடம் காதலில்லை. அவர் பால் கழிவிரக்கம்தான். தன்னைக் கொடுக்காமல் அவரிடமிருந்தே தவணை பெறுகிறாள். முதலியாரின் பெரும் போக்கான மேம் குணங்களை அழகாகச் சொல்லிச் செல்கிறார் தி. ஜா. கெட்டவன் நல்லவன் என்ற இரு கூறான பிரிவு இல்லை. அனைத்து  மனிதர்களிடத்திலும் இருக்கும் கலவை. அமிர்தமும் அதனை நினைக்கிறாள். ஆனால், காதலாகிக் கசிந்துருக அவளால் இயலவில்லை. இச் சூழ்நிலையில் தாயும் இறந்து விடவே, அவள் தனியாகிறாள். முதலியார் துக்கம் கேட்க வராதது அவளை  வாட்டுகிறது. ஊரறிய சொல்லிக் கொள்ள விரும்பாத உறவாக  தன்னை முதலியார் கருதுவது அவளது தன்மானத்தைப் பாதிக்கிறது. ஆனாலும், ஒரு சக மனிதனாக அவர் நடந்து கொள்ளாதது அவளை வருத்துகிறதே தவிர அவர் பால் அவள் உள்ளம் ஈடுபடவில்லை. இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை தி. ஜா. கதைப் போக்கிலேயே சொல்லிவிடுகிறார்.

இரு மாதங்களாகக் கோயிலில் பார்க்கும் ஒரு இளைஞனின் உருவமும், பருவமும், அவன் நடத்தையும் அவளை இயல்பான வெட்கத்தை மீறி அவனுடன் பேசவைக்கின்றன. அவன் இந்த ஊரைச் சேர்ந்த ரங்கூன்வாசி. ஊரில் அவனுக்கு நண்பர்கள் இல்லை. எப்பொழுதாவது இங்கே வரும் அவனுக்கு நெருக்கமானவர்களில்லை. அவளுடைய ஆற்றலும், அழகும், அறிவும் அவனைக் கொள்ளை கொள்கின்றன. சட்டம் படித்த அவன் அவளைக் கல்யாணம் செய்ய விரும்புகிறான். அவளுடைய வாழ்க்கைச் சம்பவங்கள் சமுதாயத்தின் நீதி குறித்து அவனைச் சினமடைய வைக்கின்றன.

அவளை அவன் அவள் வீட்டில் சந்தித்து தங்கள் மணம் குறித்து பேசுகையில் அவனது தந்தையான முதலியார் அங்கே வருகிறார். தன் தந்தைதான் அவளை அடைய ஆவல் கொண்டவர் என அறிகையில் தவிக்கிறான், திகைக்கிறான், வெறுக்கிறான். தந்தைக்கும் அதிர்ச்சி. பூங்காவில் சந்திக்கும் முதியவர் அவன் அமிர்தத்தை  மணம் செய்யவேண்டுமென்றும், இதில் அவன் மற்றும் அவளது விருப்பம் தான் முதன்மையானதென்றும், தந்தை மகன் நன்றிக் கடன் எல்லாம் அவனை கட்டுப்படுத்தினால் கூட அமிர்தத்தின் காதல் வலிமையானது என்றும் உணர்த்துகிறார்.

முதலியார் அவன் காஃபியில் நஞ்சு கலந்து அதை அவன் குடிக்கப் போகையில் தானே தட்டியும் விடுகிறார். சொத்தில் பங்கில்லை என்கிறார். அமிர்தத்தின் மீது அவதூறும் சொல்கிறார். கடிதத்திலும் சேற்றை வாரி இறைக்கிறார். அவன் துணிவாக நிற்கிறான். அன்று மாலை கோயிலில் சந்தித்து விரைவில் மணம் முடித்து ஊரை விட்டுப் போகத் தீர்மானிக்கிறான். அவன் ஆலயத்தில் காத்திருக்கையில் கடிதம் அவளிடமிருந்து வருகிறது. சில சிக்கல்களுக்கு மிகச் சரியான விடை கிடைத்தாலும், அந்த விடைகளே முடிச்சுக்களாக மாறி இறுக்கி விடும் என்று சொல்லி தான் ஊரை விட்டு நீங்குவதாகவும், மேலே படித்து தன் வாழ்வை அமைத்துக் கொள்வதாகவும், அடுத்த பிறவியில் அவர்கள் நிச்சயமாக இணைவார்கள் என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

பிறப்பால் தொடரும் ஒரு கறை. அதைப் போக்கி தூயதான வாழ்வு தேடும் ஒரு சிறு பெண். அவளை வென்று விடத் துடிக்கும் பணம், உறவு. அதை வெற்றி கொள்ளும் அவள் சாமர்த்தியம், தன் கணவனாக அவனை நினக்கும் பாங்கு, எதையுமே மறைக்காத உண்மை, பணத்தை முதலியாரிடமே சேர்க்க நினைக்கும் நேர்மை, தகப்பன், மைந்தன் இருவரையுமே விட்டுச் செல்லும் தீர்மானம்…. இந்த சிறு பெண்தான் தூய அமுதம். மென்மை, கம்பீரம், தெளிவு, புத்தி கூர்மை, இனிமை, இளமை, துயரங்களைக் கடக்கும் திண்மை, பாலைவனத்து நிலாவானால் என்ன? நிலவின் இயல்பு ஒளிர்வது தானே?

இவளும் அமிர்த வர்ஷினிதான். மாதம் மும்மாரி பெய்பவள். உலகோர்க்கு உயிரானவள். தன் இயல்பை மீறாதவள். கண்ணனுடன் கலந்து தீப ஒளியாய்த் திகழும் ஆண்டாள், கண்ணனுடன் ஆயர்பாடியில் சிறிது காலமே இருந்த இராதை . இருவர் காதலும் உவப்பானதே.

அவள் “ஆனந்தாமிருகர்ஷினி

இவள்”சுதாமயீ

ஏழு ஸ்வ்ரங்களும் வரவில்லை என்றாலும் அழகான இராகங்கள்.

oOo

 

 

 

தி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு – எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்

கவிதை தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் என்று பல்வேறு தளங்களில் இடையறாது பங்களித்து கொண்டு வருபவர், தற்போது காலச்சுவட்டு இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றி வரும் கவிஞர். சுகுமாரனின் தொகுப்பில் ‘தி.ஜானகிராமனின் சிறுகதைகள்’ இவ்வருட புத்தக கண்காட்சிக்கு, காலச்சுவட்டின் புதிய வெளியீடாக வருகிறது. கவிதை மொழியில் அவர் மேற்கொண்ட, பாசாங்கில்லாத, வடிவமைப்பு முயற்சிகள், சொற்தேர்வுகள் மற்றும் அதன் உள்ளடக்கம் பல இளம் கவிஞர்களுக்கு வழிகாட்டுதலாக அமைந்திருக்கிறது. வைக்கம் பஷீர், பால் ஸக்கரியா போன்றோரின் படைப்புகளை மலையாளத்திலிருந்து தமிழுக்கு கொண்டு வந்தவர். பதாகை சிற்றிதழுக்காக அவருடனான மின் அஞ்சல் உரையாடல்.

Untitled

பதாகை – இந்தத் தொகுப்பில் ஈடுபட்டபோது ஏற்பட்ட உங்கள் அனுபவங்கள் பற்றிச் சொல்லமுடியுமா? காலவரிசையில் நோக்கும்போது தி.ஜா-வின் ஆரம்பகால படைப்புகளுக்கும் இறுதிகால படைப்புகளுக்கும் ஏதேனும் மாற்றம் தெரிந்ததா? ஒட்டு மொத்தமாக அவருடைய படைப்பில் ஊறியிருக்கும் மைய அக்கறை என்று எதைச் சொல்வீர்கள்?

சுகுமாரன் – இலக்கிய வாசகர்கள் எல்லாரிடமும் தங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியல் இருக்கும். என்னிடமும் இருக்கிறது. அந்தப் பட்டியலின் முதல் சில பெயர்களில் ஒன்று தி. ஜானகிராமனுடையது. எனக்குப் பிடித்திருக்கிறது என்று நான் சொல்வது ரசனை அடிப்படையில் மட்டுமல்ல; அந்த எழுத்தாளர்கள் தமது படைப்பு மூலம் கற்பித்த விஷயங்களையும் சார்ந்துதான். பெண்கள் மீதான மரியாதையைப் பேணக் கற்றுக் கொடுத்ததில் தி. ஜாவின் படைப்புகளுக்கும் பங்கு உண்டு. கணிசமான பங்கு. அதற்கான கைம்மாறாகவே இந்தத் தொகுப்புப் பணியில் ஈடுபட்டேன். அவருடைய படைப்புகள் மீது எனக்கிருக்கும் மதிப்பைக் காட்டவே இதைச் செய்திருப்பதாக நம்புகிறேன். தொகுப்புப் பணியில் எனக்குக் கிடைத்த முதலாவதும் முதன்மையானதுமான அனுபவம் இதுதான்.

இந்தத் தொகுப்பைக் காலவரிசைப்படித் தொகுக்கவில்லை. வெளிவந்திருக்கும் தொகுதிகளின் வரிசைப்படிதான் அமைத்திருக்கிறேன். காரணங்களை ‘தி. ஜானகிராமன் சிறுகதைகள் – முழுத் தொகுப்பு‘க்கு எழுதியிருக்கும் பதிப்புரையில் விரிவாகவே முன்வைத்திருக்கிறேன். ஜானகிராமன் கதைகளில் பெருமளவுக்கு தூலமான மாற்றங்கள் இல்லை. முதல் கதையான ‘மன்னித்து விடு‘ வில் ஆரம்ப கட்ட எழுத்தின் குறைகள் உள்ளன. ஆனால் கதைப்போக்கு, பாத்திரங்களின் உரையாடல், கதையின் வடிவம் ஆகியவற்றில் பிற்காலக் கதைகளின் முன் மாதிரியாகவே அமைந்துள்ளது. ஒரு செவ்வியல் பூரிதநிலை கொண்டவை அவரது கதைகள். அவை காலத்தின் போக்குக்கு ஏற்ப மாற்றம் அடையவில்லை கால, இட மாறுதல்கள் உள்ளடக்கத்தில் நுட்பமான மாற்றங்களை நிகழ்த்தியிருந்தாலும் அவரது கதைக் கலையின் செவ்வியல் நிலைக்கு வெளிப்படையான மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. மொழிவழக்கில் மட்டுமே மெல்லிய மாறுதல்கள் தெரிகின்றன. எனவே, காலவரிசைப்படி கதைகளைத் தொகுப்பதைவிடவும் வெளிவந்திருக்கும் தொகுப்புகளில் இருப்பதுபோலவே வரிசைப்படுத்துவது என்ற தீர்மானத்தை மேற்கொண்டேன்.

தி. ஜானகிராமனின் கதைகளின் மைய அக்கறை ‘மனித சேஷ்டைகள்’தாம். மனிதர்களைக் கொண்டாடி அலுப்பதில்லை அவருக்கு. அன்பு, பாசம், காதல், பரிவு என்று வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லப்படும் உணர்வு நிலைகளின் மையமான மானுடக் கருணையே அவரது படைப்பின் மையம் என்று சொல்லத் தோன்றுகிறது. மனிதர்கள் இந்த உணர்வுகளைக் கொண்டவர்களாகவே இருக்க முடியாமற் போவது அவர்களது சூழ்நிலையின் காரணமாகவே என்று அழுத்தமாகச் சொல்கிறார். அந்தச் சிக்கலையே அவர் பேசுபொருளாகக் கருதுகிறார். மானுடத் தத்தளிப்பின் பருவ மாற்றங்கள்தாம் அவரது படைப்புகளின் மையம். (more…)