– தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன் ) –

கடைசியாக
எப்பொழுது
தண்ணீர் குடித்தாய்
அதைத் தொடும்போழுதும்
தூக்கும்போழுதும்
செல்லமகளைப்போல்
கூட வந்ததா
தண்ணீரில்
வானவெளியென நீ நுழைகையில்
அது
குதித்துக் கும்மாளமிட்டதைக் கேட்டாயா
பஸ்ஸில்
போலீஸ்காரர் நடுவே
கைவிலங்கிட்டு அமர்ந்திருக்கும்
இளங்கைதியின்
கண்கள்
வருடிக்கொண்டிருக்கின்றன
மூடிய பானையை
மூடாத தண்ணீரை.
௦௦௦
When was
the last time
You drank water
When you touched it
and lifted it
Did it come to you
like your darling daughter
When you entered as if
You were the wide sky gliding
into water
Did you hear
It
Jump with joyful glee
Sitting handcuffed
in a bus
between policemen
That young convict
His eyes
are Caressing
The pot that’s closed
The water that’s left open.
௦௦௦
இந்தக் கவிதையின் பிரச்சினையான பகுதி, துவக்கத்தில் வரும் கேள்விகள். அவை யாரை நோக்கிக் கேட்கப்படுகின்றன?
கவிஞர் கைதியை நோக்கிக் கேட்கிறாரா, அல்லது கைதியைக் குறித்து தனக்குள் கேட்டுக் கொள்கிறாரா, அல்லது, அவை நமக்காக எழுப்பப்படும் கேள்விகளா? இந்த மூன்று விடைகளும் சாத்தியம் என்பதன் ambiguity மூன்று வெவ்வேறு உணர்வுகளை ஏககணத்தில் சாத்தியப்படுத்துகிறது. கைதியை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகள் என்றால் தாபம் குறித்த புரிந்துணர்வைப் பார்க்கிறோம், கைதியைக் குறித்து தனக்குள் கேட்டுக் கொள்கிறார் என்றால், அங்கு ஒரு சுயவிசாரணையும், நமக்காக எழுப்பப்படும் கேள்விகளானால் அறிவுறுத்தலும் உண்டு. இதன்பின் வரும் உரைநடைத்தன்மை கொண்ட புறவிவரணையின் அழுத்தத்தில் இந்தக் கேள்விகள் ஒன்றுகூடிய உணர்வுகளாகின்றன- இறுதியில் “மூடிய பானையை/ மூடாத தண்ணீரை.” இந்த இரு வரிகளும் ஒரு எதிர்பாராத ஆச்சரியமாய் அமைகின்றன.
பொதுக் கேள்விகள் என்றாலும் கவிதையின் தண்ணீர் பானை, அல்லது அது போன்ற ஒரு கொள்கலனுக்குரியது பானைத் தண்ணீரைக் குடிக்கிறோம், பானைத் தண்ணீரைதான் செல்ல மகளைப் போல் தொட்டுத் தூக்க முடியும். ஏன், பானைத் தண்ணீரில்தான், “தண்ணீரில்/ வானவெளியென நீ நுழைகையில்/ அது குதித்துக் கும்மாளமிட்டதை நீ கேட்டாயா” என்ற கேள்விக்கு பொருள் கிட்டுகிறது- பானையில் உள்ள தண்ணீரில் பிரதிபலித்து ஆடும் ஒளியாகிறோம் நாம்.. இந்த, உயர்ந்த கவித்துவம் கொண்ட, புதிர்த்தன்மை மிக்க கேள்வியில்தான் இறுதி வரிகளின் ஆச்சரிய தாக்கத்தை உணர்கிறோம்- மூடிய பானையும் மூடாத தண்ணீரும் தத்துவம் சார்ந்து பொருட்படுகின்றன. மூடிய பானை கலன் எனில், மூடாத தண்ணீர் கொள்பொருள்- கொள்பொருளைக் கொள்கலனின் வடிவம் சிறைப்படுத்துவதில்லை. பானைத் தண்ணீரில் தோன்றும் சூரியன்களை சாங்கிய தத்துவம் பேசுவது இங்கு நினைவுக்கு வரலாம்.
“பஸ்ஸில்/ போலீஸ்காரர் நடுவே. கைவிலங்கிட்டு அமர்ந்திருக்கும்/ இளங்கைதி” புனைவுக்குரியவன், ஆனால் அவன் ஒரு குமாஸ்தாவாகவோ கணினி நிபுணனாகவோ வேறு யாராகவும் இல்லாமல் சிறைப்பட்ட கைதியாக இங்கு மூடிய பானையையும் மூடாத தண்ணீரையும் கண்களால் வருடிக் கொண்டிருப்பதில்தான் கவிதைக்குரியவன் ஆகிறான்- அவனது வேட்கை தண்ணீருக்கல்ல, விடுதலைக்கு என்று உணரும்போது மேற்கண்ட சாங்கிய தத்துவத்தின் சாயல் நம்மை வேறொரு, இதனினும் உயர்ந்த, விடுதலை வேட்கைக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் இது தத்துவக் கவிதை அல்ல. “அதைத் தொடும்போழுதும்/ தூக்கும்போழுதும்/ செல்லமகளைப்போல்/ கூட வந்ததா/”- என்ற கேள்வி தவிர்க்க முடியாதபடி சிறைக்கைதியை ஒரு தகப்பனாக, அவனது தாபத்தை வெறும் விடுதலை வேட்கையாக அல்லாமல், தீண்டல், தழுவுதல், நுகர்தல் என்ற மானுட உறவுகளை நோக்கும் வேட்கையாக நிறுவுகிறது. செல்ல மகளைத் தொட்டுத் தூக்கும் ஏக்கத்தை இன்னும் தீவிரமான உணர்வாக நாம் அறிகிறோம். ஆனால், சாங்கிய விடுதலையின் எதிரொலிப்புக்கு கவிதை இடம் கொடுத்திருக்கிறது என்பதுதான் நோக்கத்தக்கது.
மொழியாக்கம் குறித்து ஒரு விஷயம்- “தண்ணீரில்/ வானவெளியென நீ நுழைகையில்” என்பது முதலில் “When you entered as if/ You were the firmament gliding/ Into Water” என்று மொழிபெயர்க்கப்பட்டது.கிறித்தவ தொல்மறையில், மண்ணின் நீரையும் ஆகாயத்தின் நீரையும் பிரிக்கும் கூரைதான் firmament, Firmament தண்ணீரில் இறங்கும்போது ஆகாய நீரும் மண்ணின் நீரும் சேர்கின்றன. எல்லையற்ற விடுதலை என்று இதைக் கொள்ளலாம். கவிமொழியில் firmament என்பது ஆகாயத்தின் குறியீடாகவும் கையாளப்படுகிறது. மேலும் நாம் தண்ணீரில் இறங்கும்போது பருப்பொருளாகவே இறங்குகிறோம், ஒரு firmamentக்கு உரிய திடத்தன்மை நமக்கு இருக்கிறது, என்பதால் இந்த மொழிபெயர்ப்பில் குறை சொல்ல முடியாது. ஆனால், இங்கு சாங்கிய தளையறுதலை காணும் சாத்தியங்கள் குறைவு, மாறாக தமிழறியாத ஒருவர் கிறித்தவம் சார்ந்த தளையறுதலைக் காண இயலும். இது சரியான தேர்வா இல்லையா, கவிதையின் சுட்டலுக்கும் கவிஞரின் நோக்கத்துக்கும் நியாயம் செய்கின்றதா என்பதெல்லாம் சிக்கலான கேள்விகள். ஆனால் ஒன்று சொல்லலாம். இந்த இரு சாத்தியங்களையும் நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறது.
மொழியாக்கம் என்பது மொழிபால் உள்ள காதலால் செய்யப்படுவது. ஒரு கவிதையை மொழிபெயர்க்கும்போது அதில் உள்ள ஒவ்வொரு சொல்லின் எடையையும் இடத்தையும் கூர்ந்து நோக்கித் தேர்ந்தெடுக்க வேண்டியதாகிறது. மொழியாக்கத்தைவிட நெருக்கமான வாசிப்பு வேறொன்றில்லை. “தண்ணீரில்/ வானவெளியென நீ நுழைகையில்” என்பது “When you entered as if/ You were the firmament gliding/ Into Water” என்று மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர் “When you entered as if/ You were the wide sky gliding/ into water” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி இதை உணர்த்தும். உண்மையில், எந்தத் திரிபும் இல்லாதபோதும்கூட வெவ்வேறு சுட்டல்களால் இருவேறு மொழிதல்களை ஏககாலத்தில் நிகழ்த்தும் தன்மை மொழியாக்கங்களுக்கு எப்போதும் உண்டு, இரு மொழிகளையும் அறிந்தவனால் அதைத் தவிர்க்கவும் முடியாது. மொழியாக்கத்தின் இன்பமும் வாதையும் இதுதான்.
Like this:
Like Loading...