நகுல்வசன்

இருமொழிக் கவிதைகள் 4- ஜெல்லி மீனே ஜெல்லி மீனே

தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன் ) –

jellyfish

ஜெல்லி மீனே ஜெல்லி மீனே:
என் கண்களை நழுவ விடுகிறேன்
என் காதுகளை உதிர்க்கிறேன்
மறையச் செய்கிறேன் என் நாசியை
இப்போது
மிஞ்சி நிற்கிறேன்
வாயும் வயிறுமாய்
மெல்ல நகர்ந்து கடலுக்கடியில் செல்கிறேன்
கரையோரம் வந்து
காத்துக் கிடக்கிறேன்
மாலைச்சிறுவர்கள் வருவார்கள் என
என்னை உள்ளங்கையில் ஏந்தி
ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துவார்கள் என
அப்போது அவர்களிடமிருந்து
விரல்களைப் பரிசுபெறுவேன்
கண்களை வாங்கிக் கொள்வேன்
நாசியைப் பெற்றுக் கொள்வேன்.
கூடவே கூடவே
நானும்
விளையாடத் தொடங்குவேன்:
ஜெல்லி மீனே ஜெல்லி மீனே என்று

௦௦௦

O Jellyfish Jellyfish:

I let my eyes slip away
I shed my ears
I get my nose to vanish
Now
I stand with what’s leftover
All mouth and stomach
I pregnantly inch towards the bottom of the sea
I move towards the seashore
and wait patiently for
the kids to show up in the evening
Rest me on their palms and scream
O Jellyfish Jellyfish
I would then get from them
a gift of :
Fingers,
Eyes and
Nose.
And also, also
I would begin to play :
O Jellyfish Jellyfish.

௦௦௦

கவிதை இங்கே ஆரம்பிக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்- “கரையோரம் வந்து/ காத்துக் கிடக்கிறேன். மாலைச்சிறுவர்கள் வருவார்கள் என/ என்னை உள்ளங்கையில் ஏந்தி/ ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துவார்கள் என/”.  மாலைச் சிறுவர்கள் என்பதை தினமும் மாலைப் பொழுதில் வரும் சிறுவர்கள் என்று எடுத்துக்கொண்டால், சிறுவர்கள் ஜெல்லி மீன் பிடித்து கையில் வைத்து விளையாடுவது வழக்கம் என்றும் அதைக் காணும் கவிஞர், சிறுவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள நினைக்கிறார் என்றும் சொல்ல இடமிருக்கிறது

இங்கிருந்து துவங்கி,. கவிதையின் முதல் பகுதியை வாசித்தால், ஜெல்லி மீனாகும் நோக்கத்தில் அவர் தன் அவயங்களை இழந்து ஆழ்கடலுக்குச் சென்று தனக்குரிய பூதத்தலத்தைக் கண்டுகொண்டவராய், கரையோரம் வந்து காத்து நிற்கிறார் என்று வாசிக்கிறோம். அதன்பின் அவரை உள்ளங்கையில் ஏந்தி ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்தும் மாலைச் சிறுவர்களில் ஒருவராகி கவிஞரும் ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துகிறார்.

இது எப்படி சாத்தியம்? ஜெல்லி மீன் என்றால் அவர் ஜெல்லி மீனாகவே மாறுவதில்லை. தன்னிழப்பு ஏற்படுகிறது. எப்படி ஜெல்லிமீனாக மாறுகிறாரோ அதே போல் அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கையாய் அந்த உருவத்தையும் இழந்து சிறுவர்களின் விரல்களாகவும் கண்களாகவும் நாசிகளாகவும் இருந்து மகிழ்கிறார்..தனிமை, அதையொட்டிய சுத்திகரிப்பும் – இவற்றில்தான் கலப்பின் சாத்தியங்களும் கூடலின் திளைப்பும் உருவாகின்றன என்பதில் பல சிந்தனைகளை அளைய இடமுண்டு.

ஆனால் பொழுது சாயும்போது ஜெல்லி மீனின் கதி என்ன? அவரவர் பாதை அவரவருக்கு, இந்தக் கூடல் நிலையானதல்ல. இது தெரிந்தும் உருமாற்றம் பெறும் விருப்பம் வெளிப்படுகிறது எனில் பிறருடன் தொடர்பு கொள்ளும் விழைவில் தன்னிழப்பையும் மரணத்தையும் தழுவ விரும்பும் மிக உக்கிரமான தனிமை மேலோங்கித் தெரிகிறது என்றுதான் கொள்ள முடியும். இதில் ஒரு atavistic impulse உள்ளது என்றும் சொல்லலாம். ஜெல்லி மீன்தான் உலகின் மூத்த பல்லுறுப்பு உயிரி என்பதால் தன் உறுப்புகள் அனைத்தையும் இழந்து துவக்கங்களுக்குச் செல்வதில் பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கிய பயணத்தைக் கற்பனை செய்து பார்க்கிறார் கவிஞர். அதன்பின் தன்னுணர்வு பெற அவர் தேர்ந்தெடுப்பது சிறுவர்களின் உடலை, இதிலும் தனிமனித அனுபவத்தின் பின்னோக்கிய பயணமே மேற்கொள்கிறார். இது போதாதென்று ஒரு ஜெல்லி மீனாய் மாறியபின் அவர், கரையோரம் “வாயும் வயிறுமாய்” நிற்கிறார்- சூல் கொண்ட பெண்ணைப் போல், சூலின் நிறை சாத்தியங்களோடு.

தனிமையின் துயரைப் பேசும் இக்கவிதை அதை romanticise செய்வதில்லை- அகத்தின் வேலிகளற்ற ஒரு ஆனந்தம் எதிர்பார்க்கப்படுகிறது, தனிமையின் தடுமாற்றங்களை, அதன் ‘பிற்போக்கு’ உணர்வை, அதன் உளச்சிக்கல்களை மிக அழகாக, எதையும் எளிமைப்படுத்தாமல் வெளிப்படுத்துவதால்தான் இந்தக் கவிதையில் ஒரு சிறு உறுத்தல் தென்படுகிறது. ஒரு நண்பர் இது குரூரமான கவிதை என்றும் பதிவு செய்திருக்கிறார், அது ஏன் என்பதை ஒருவாறு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் குரூரமல்ல, தனிமையும் அதன் தீர்வாய் தனிமையற்ற கூடலின் வசீகர அழைப்பும்தான் இந்தக் கவிதையின் அடிநாதம். அதற்குரிய விலை தன்னிழப்பு எனில் அவ்வாறே ஆகட்டும்.

வாயும் வயிறும் என்பதை அதன் முழுப்பொருளில் ஆங்கிலப்படுத்த இயலாமல் போய் விட்டது, இந்த மொழியாக்காத்தின் மிகப் பெரிய இழப்பு. ஆனால், |I stand with what’s left over/ A mouth and a stomach” என்பதில் மிகப் பெரும் வறுமையையும் பசியையும் சுட்ட முடிகிறது என்பதே இதன் மிகச் சிறந்த பயன்.

நத்தையின் கனவு

எண்ணற்ற நேர்க்கோடுகள்
எப்போதுமே  குவிகின்றன
பழகிப்போன  அறையின்
மூலையில்.

கனவின் கரையில்
நனவின் நினைவென
நிலைத்து நிற்கிறது
அந்த நத்தை.

கலையின் வலையில்
நத்தையின் நிழலை
அறையின் மூலையில்
நிறுத்த நினைக்கையில்,

நேர்கோட்டு ஏணியில்
விதியின் பழக்கத்தோடு
மூலையிலிருந்து முந்துகிறது
நத்தையின் கனவு:

காலத்தின் கரையில்
மரணத்தின் நனவாய்
நிழலாகி நிற்கிறேன்
நான்.

கரையைக் கடந்து
அலையில் அமிழ்ந்தால்
கனவும் நனவாகும்
வார்த்தைகளின் வானத்தில்,

குளிசங்கின் வளைவுகளில்
மரணத்தை நத்தையாக்கி
மூலைகளில்லா பெருவெளியாய்
விரியுமா என் கவிதை ?

000

ஒளிப்பட உதவி – Lightwave

வழியனுப்புதல்

நகுல்வசன்

ரயில் நிலயத்திற்கு தனியாக வருவது எப்போதும் போல் எனக்கு படபடப்பை அளித்தது. இதற்கான காரணம் இதுவரையில் எனக்குச் சரியாக புலப்படவில்லை. காரணங்களைப் பற்றி சிந்திக்கையில் ஏதேதோ நினைவுகள் கால வரிசையின்றி ஒரே சமயத்தில் கிளர்நதெழும். இது படபடப்பை மேலும் அதிகரிக்கும். வழியனுப்புவதறகு யாராவது கூடவே வந்தால் இம்மாதிரியான சிந்தனைகளை ரயில் கிளம்பும் வரையிலாவது ஒத்திப் போடலாம். ஆனால் இதை எல்லாம் வெளியே சொன்னால் கேலியும் சிரிப்பும்தான் மிஞ்சும். நாற்பது வயதில் ரயிலில் தனியாகப் போக பயம் என்று சொன்னால் யார் நம்புவார்கள். (more…)

இருமொழிக் கவிதை- புழக்கடையில் பனி/ Backyard Snow

நகுல்வசன்

புழக்கடையில் பனி:

1

இரவெல்லாம் பனி .
நினைவின் எச்சமாக ஆங்காங்கே,
கிளைகளில் இலைகள்
இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருக்கும்
வசந்தத்தின் கனவை அழித்த பெருமிதத்தில்,
குளிர்காலம் எழுப்புகிறது
தன் கண்ணாடி சாம்ராஜ்யத்தை.
அதன் சுவர்களில் காலம் அழகு பார்க்கையில்
பளிங்கு பிரதிபலிக்கிறது
வயோதிகத்தின் வாடிய வதனத்தை.

2

வெளி ஒளிர்கிறது.
இலைகளற்ற கிளைகளின் மீது, தொடர்ச்சியாக,
பௌதிக விதிகளை நினைவுகூர்ந்து,
நேர்த்தியுடன் தன்னை சமன் செய்து கொண்டிருந்தது
பனி.
ஊரில் டீபிராஸ்ட் செய்ய மறந்திட்ட
அப்பாவின் பழைய கெல்வினேடர் குளிர்சாதனப் பெட்டியில்,
இப்படித் தான், நீண்டு உறைந்திருக்கும்,
பனி.
ஓவல்டின்னை ப்ரீசரில் உறைய வைத்து
தங்கையும் நானும் ஐஸ்க்ரீமாக
அலுப்பில்லாமல் அனுபவித்தது
காலத்தின் கண்ணாடியில் ஒரு கணம் மிளிர்கிறது.
தேனீர் கோப்பையின் ஆவி அதை அழிக்க,
ஜன்னல் கண்ணாடியில் பனியின் பின்புலத்துடன்
அப்பாவின் வயதான முகம் தோன்றி மறைகிறது.

ooOoo (more…)