1. ரயிலுக்குக் காத்திருக்கும் இரும்பு இருக்கையில்
அமர்கையில் தடாலென விழப்போய் சுதாரித்து எழுந்து
அது உடைந்ததென உணர்ந்ததும் அதிர்ந்து சொன்னார்
“இந்த இருக்கை என்னை ஏமாற்றப் பார்கிறது,
உங்கள் எல்லோரையும் போலவே”, என்று என்னைப் பார்த்து
பின் சிரித்தபடி வேறு பக்கம் சென்று அமர்ந்தார் அமைதியாக (more…)
நந்தாகுமாரன்
ஸ்தலபுராணம் IV : ஆடு தாண்டும் ஆறு
சிறுநீர் கழிக்கப் பதினைத்து ரூபாய்
கொடுத்துக் குடித்த ஹோட்டல் காஃபி
சுவை துடைத்து
மகவின் குரங்கு பயம் போக்கிச்
சுமந்து கடந்து
ஆற்று ஆலாக்கள் மீன் பிடிக்கும்
அர்காவதி இணையும்
காவிரி சங்கமம் தாண்டி
பள்ளத்தாக்கில்
பாயும் பஸ் பயணம் முடிய
நட்ட குழிப் பாறைகளில் வழுக்கப் பார்த்த
சாகசப்பெண் கண்ட சாகசஆண் தோன்றும்
வெய்யில் மூச்சு படர்ந்த
புவியில்
உடல் பசிக்க
புளி சாதம் கலந்து உண்ட
ஜிலேபி மீன் வறுவல் சுவை போற்றி
உள்ளூர் கைத்தடி தாத்தா வழிகாட்டியாகிக் காட்டிய
அருவி போற்றி
“இடையா இதை உன்
ஆடு தாண்டுமா …”
“மடையா இதை உன்
கவிதை தாண்டுமா …”
வேண்டாம் என்றால் கொடுத்து
வேண்டிக் கொண்டால் தடுத்து
ஆடும் லீலை நிறுத்து
கலைக்கப்படும் அமைதி
சித்தப்பா
பின்னால் எரிந்து கொண்டிருக்கிறார்
Tata Sumo-விற்குள் நான்
தம்பியின் கைகளைப் பற்றியபடி
முன் இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்
பின் பக்கமிருந்து பாட்டியின்
அழுகுரல் கேட்கிறது
“எம் புள்ளைகள தகப்பனில்லாத
அனாதைகளாக்கிட்டு போயிட்டீங்களே”
Driver கூடப் புலம்புகிறார்
“நீங்க அழுதுட்டீங்க
என்னால உள்ளயும் சொல்ல முடியல
வெளியவும் சொல்ல முடியல சார்”
முந்தின தினம் மருத்துவமனையில்
நிகழ்ந்தவை நினைவிற்கு வருகின்றன
தங்கை Car-இல் இருந்து இறங்குகிறாள்
என்னை நோக்கித் திரும்புகிறாள்
“அண்ணா … அண்ணா …
அப்பாவுக்கு என்ன ஆச்சு அண்ணா …
அண்ணா அப்பா எங்கே அண்ணா …”
ஆறுதலுமில்லாமல் மாறுதலுமில்லாமல் நான்
“இனிமேல அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது”
“அண்ணா … அண்ணா … Please … Please …
இப்படியெல்லாம் சொல்லாதீங்க அண்ணா …
ஆண்டவா அப்பாவுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது”
“Office-லையே நேர்மையானவர்னு பேரெடுத்தவருங்க”
“எங்கே போனாலும் நடந்தே சலிப்பாரு”
சித்தியின் தேம்பல் நெஞ்சை அறுக்கிறது
“என் தம்பி கல்யாணத்துல இப்படி ஆகியிருச்சே … ஐயோ …”
‘அமைதியைக் கலைக்காமல் தத்துவத்தை போதிப்பது எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை’
– ஸ்பினோஸா
உயிரோசை
06.10.2008
Issue No. – 6
ooOoo
இதுவரை நீங்கள் எழுதிய கவிதைகளை எப்படி பார்க்கிறீர்கள்? இனி எப்படிப்பட்ட சவால்களை எதிர்கொள்ள விரும்புகிறீர்கள்?
இந்தக் கவிதையை விளக்கத் தேவையில்லை. இதன் சோகம் உடனடியாகப் புரிந்துவிடுகிறது. இப்படிப்பட்ட கவிதைகளே விரிந்த வாசகர் பரப்பை உருவாக்குகின்றன.
“-[மைனஸ் ஒன்]1” கவிதைத் தொகுதியில், பகடி, தத்துவம், ஹைக்கூ, விஞ்ஞானப் புனைவு, அதீதக் கற்பனை, படிமம், குறியீடு, முரண் நகை, இருண்மை என பலதரப்பட்ட வடிவங்களை முயற்சித்திருக்கிறேன். லிமரிக் மற்றும் வெண்பாக்கள் தான் அதில் இல்லை. புதிர் தன்மை கொண்ட அரூப வடிவிலான இருண்மைக் கவிதைகளின் வசீகரம் என்னை எப்போதும் கவர்ந்ததாகவே இருக்கிறது. ஆனாலும் எளிமையாக, உடனடிப் புரிதலுடன், நேரடி உரையாடல் வகையிலான கவிதைகளையே இப்போது அதிகம் எழுத விரும்புகிறேன். கவிதையின் அடுத்த கட்டம் என்பது ஒரு நீண்ட கட்டுரைக்கான விஷயம். சுயகழிவிரக்க வார்த்தைகளைத் தவிர்க்க இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
நான் இப்பொழுது குடிக்கும் பியர்
உள்ளங்கையில் துள்ளும் கடல் மீது
ததும்பும் நார்சிசப் பிம்பம்
அந்த காலத்தில் பேய்கள் இருந்தன
என்றது
பேயோட்டிய பின்
போய் அமர்ந்த private beach கடற்கரை மணலில்
நட்ட பீர் பாட்டிலை
சைத்தானென்று
நாலு mug குடித்த பின்னும்
நான் இப்பொழுது குடிக்கும் பியர்
பிதுங்கும் கோப்பையில் விழுகிறது
கை நீட்டி உணர்ந்த மழை
ஊதித் தள்ளிய பியர் நுரை
கலக்கிறது கடல் நுரையுடன்
மழை மீது பெய்யும் மழை
கடல் மீதும் பெய்கிறது
என் மீதும் பெய்கிறது
கோபம் வீணடிக்கும்
அன்பின் வழி வந்த வெப்பம்
மேலே எழுந்தது
மஹாஜனங்களின் மீது
மழையாகிப் பொழிந்தது
கவிதை மொழியைப் புதுப்பிக்கிறது என்று சொல்லப்படுவது உண்டு, அனுபவங்களைப் புதுப்பிக்கிறது என்றும் சொல்லப்படுவது உண்டு. நீங்கள் கவிதை எழுதும் கணங்களில் எது புதுப்பிக்கப்படுகிறது என்று உணர்கிறீர்கள்?
இரண்டுமேதான். உதாரணம், “நான் இப்பொழுது குடிக்கும் பியர்” கவிதை. சமாதானமும் அன்பும் தான் இந்தக் கவிதையின் உட்பொருள் … போதை அல்ல. “மழை மீது பெய்யும் மழை” என்ற வரி ஒரு புதிய கவனிப்பை முன் வைக்கிறது … அதன் மூலம் மழை எனும் அனுபவத்தை விஸ்தரிக்கிறது. அனுபவம் எல்லோருக்கும் எப்போதுமே ஒரே மாதிரி இல்லாமல் போவதற்குக் காரணம் – அது விழிப்புணர்வு சார்ந்தது என்பதால் தான். அதாவது ஒருவரின் விழிப்புணர்வு சார்ந்து ஒரு அனுபவம் தனித்துவம் நிறைந்ததாக மாறுகிறது. அதனால் தான் ஒரு சூரியோதயமும் சூரியாஸ்தமனமும் கூட வேறு வேறு மனிதர்களுக்கு வேறு வேறு உணர்வுகளை கிளர்த்திச் செல்கின்றன. கவிதைகளும் கூட இதனாலேயே உங்களுக்கு ஒரு அர்த்தமும் எனக்கு ஒரு அர்த்தமும் தருகின்றன. இதற்கு மொழியும் ஒரு முக்கிய காரணி என்பதை விளக்க வேண்டியதில்லை. ஒரு ஓவியத்திற்கும் இசைக்கும் இதே சக்தி இருப்பதை உணரலாம். ஆனால் நான் சொல்லும் இந்த சக்தி அதைப் பார்க்கும் கேட்கும் மனிதரின் மனதில் இருக்கிறது. இந்த விழிப்புணர்வு (கவனியுங்கள் நான் அறிவு என்று சொல்லவில்லை) இல்லாவிடில் அப்புறம் அனுபவத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை.
“மழை மீது பெய்யும் மழை” என்ற வரி அதுவரை எழுதப்படாதது என நினைக்கிறேன். ஒரு பிரபல கவிஞரின் சமீபத்திய முகநூல் கவிதை ஒன்றில் இதே வரியைப் பார்த்தேன். யாரும் சுலபமாக சிந்திக்கக் கூடிய வரி தான் இது என்றாலும், இது காட்டும் அனுபவம் புதிது. கவிதை என்பது ஒரு அனுபவத் தீவு என்று பார்த்தோம். ஆனால் இதற்கு மொழியின் பங்கு மிக முக்கியமானது. திரி தூண்டப்பட்டாலொழிய ஜோதி எரிந்து சுடராது.
கவிதை வாசிப்பு மனநிலை
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சன்னிதிக்கு, சுகப்பிரசவ வேண்டுதல் நிறைவேற்றும் பொருட்டு வாழைத்தார் படைக்க, 2009இல் குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்பொழுது இந்தக் கவிதையின் தலைப்பும் சில வரிகளும் (மழைஉளி செதுக்கிய மேகவிக்ரஹ பிரதிஷ்டை) தோன்றின. பின் பெங்களூர் திரும்பியதும் கவிதையை முழுவதுமாக எழுதி முடித்தேன். இந்தக் கவிதையின் அடிநாதம் பிறப்பு / படைப்பு / ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குப் போவது, என்பதெல்லாம் சொல்லாமலே புரியும் என நினைக்கிறேன்.
-[மைனஸ் ஒன்]1: விடுபட்ட முன்னுரை
கொந்தளிப்பிற்குச் சற்று முன் அணைக்கப்படும் எரிமலைக் குழம்பைத் தேநீராகப் பருகும் உதாசீனத்தையும், எல்லோரும் உறங்கிய பிறகு கிடைக்கும் தனிமையான அமைதியின் நிம்மதியையும், சதா கொண்டாட்டத்தின் மீதே மிதக்க விரும்பும் உயிரின் ஏக்கத்தையும், வெளிப்படுத்தும் இக்கவிதைகளின் வாசகர் படைத்தவரல்லாது வேறொருவர் என்றாகும் போது அந்தப் புதிய வாசகருக்கு இந்த மொழி-நடை சிக்கலாகவும் அதனாலேயே சவாலாகவும் அமைந்துவிடுகிறது. வாசகர் வேண்டிய அர்தத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தை அளிக்கும் இக்கவிதைகள் நுண்புல நிலையில் இயங்குகின்றன. பலவகைப்பட்ட கவிதைகளையும் பரீட்சார்த்த ரீதியில் அணுகிப் பார்க்கும் இந்தப் பயணத்தில் பங்கு கொள்வதும் வெறுமனே வேடிக்கை பார்ப்பதும் அவரவர் விருப்பம். இவற்றின் மர்மங்களைத் திறக்கும் சாவிகளை வாசகரே தயாரித்துக் கொள்ளலாம். புனைவின் சுதந்திர வெளியை முழுவதும் அளந்து காட்ட முயலும் இக்கவிதைகள் படிமங்களாலும் கற்பனைகளாலும் ஒரு விநோத உலகின் இருப்பை உருவாக்கி அதை சாத்தியப்படுத்த வாசகரின் புத்தி பரிமாணத்தைச் சார்ந்து கிடக்கின்றன. ஒரு சித்திரமோ ஒளிப்படமோ முற்றிலும் வெளிப்படுத்தாமல் விடும் அதே ரகசிய அனுபவங்களை அமானுஷ்யமாகவோ அரூபமாகவோ இக்கவிதைகள் தருகின்றன; கனவில் நகரும் பிம்பங்களையும் பிரதியெடுத்துவிடுகின்றன.
கவிதைகளே பரவாயில்லை … சும்மா பயம் காட்டாதே என்கிறீர்களா … எனக்கே சற்று கூடுதலாகத் தான் தெரிந்தது, அதனால் தான் முன்னுரை வேண்டாம் என விட்டேன். இருண்மையான கவிதைகளை வாசிக்க எனக்குத் தெரிந்த ஒரு சூத்திரம் – புரிந்து கொள்வது என்பதை ஒரு நோக்கமாகக் கொண்டு அணுகாமல் அனுபவித்தல் என்ற திறந்த மனதோடு அணுக வேண்டும். சுயபரிசோதனை மற்றும் நினைவுகூறல் என்ற இரு முறைகளில் கவிதைகள் எழுதப்படலாம். நினைவுகூறல் வகைக் கவிதைகளில் ஒரு வாசகர் தன்னைத் தேடிக் கண்டடைவது எளிது … ஏனெனில் அவை வாசகரின் வாழ்வு மற்றும் அனுபவங்களை ஒரு ஏக்கமான நினைவாக மீட்டுத் தரும். ஆனால் சுயபரிசோதனை வகைக் கவிதைகள் கவிஞரின் அல்லது கவிதையின் பாடுபொருளின் உட்புற அகக் காட்சிகளாக விரிபவை. அவ்வகைக் கவிதைகள் முதல் முறை வாசகரை ஒரே வாசிப்பில் உடனடியாகத் தூண்டிவிடத் தவறலாம். ஆனால் தேர்ந்த வாசகர் இது தெரிந்து தான் இதற்குத் துணிந்து தான் உள்ளே வருவார். நேரடித் தன்மை கொண்ட கவிதைகளின் அழைப்பு விடுத்தல் பாணி, அரூபக் கவிதைகளில் குறைவு தான். கதவு சாத்தித் தான் இருக்கும், திறந்து கொண்டு தான் உள்ளே போக வேண்டும். வாசல் கதவைத் திறந்த வைத்து வாங்க வாங்க என்று எல்லாக் கவிதைகளும் சொல்லாது தான். ஆனால் நட்புணர்வோடு உங்களை அணுகும் பல கவிதைகளை இந்த மைனஸ் ஒன் தொகுப்பிலேயே காண முடியும். முற்றும் விளங்க வேண்டும் என முயற்சிக்கத் தேவையில்லை. ஒரு அளவிற்கு மேல் புரிந்து கொள்ள முயல்வது கட்டுடைத்துப் பார்ப்பது தேவையில்லை. புரிதலை எங்கே நிறுத்த வேண்டும் என்ற தெரிவு ஒரு வகை புத்திசாலித்தனமே. கவிஞர் சொல்வதைத் தான் வாசகர் புரிந்து கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமுமில்லை. தவறாகக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால் என்னை வந்து கேட்டால் அது அப்படி இல்லை அல்லது அப்படியும் இருக்கலாம் என்று நான் மையமாக மறுத்துவிடவும் கூடும்.
என் பரிந்துரையாக தமிழ் நவீன கவிதைகள், கவிஞர்களின் வகைமைகள், வாசிப்பு முறைகள் குறித்து விவாதிக்கும் / விவரிக்கும் பின்வரும் உரைகளை வாசித்துப் பார்க்கலாம்:
1) உலகெல்லாம் சூரியன் – கலாப்ரியா – கவிதைத் தொகுதிக்கு சுஜாதா எழுதிய முன்னுரை
2) தோற்றப் பிழை – யுவன் சந்திரசேகர் (எம்.யுவன்) – கவிதைத் தொகுதிக்கு யுவன் சந்திரசேகர் எழுதிய கவிதை புரியும் கணம் முன்னுரை –http://jyovramsundar.blogspot.in/2010/02/blog-post_22.html
3) அதீதனின் இதிகாசம் – பிரேம் ரமேஷ் – புத்தகத் தொகுதிக்கு யவனிகா ஶ்ரீராம் எழுதிய முன்னுரை
4) ஜென்மயில் – பிரம்மராஜன் – கவிதைத் தொகுதிக்கு ஆனந்த் எழுதிய முன்னுரை
5) கவிதைக்காக – ஞானக்கூத்தன்
6) கலாச்சாரம்: அ-கலாச்சாரம்: எதிர்-கலாச்சாரம் – நாகார்ஜீனன்
7) வார்த்தையின் ரஸவாதம் – பிரம்மராஜன்
8) பிரம்மராஜன் கவிதைகள் – நகுலன் http://www.thenkoodu.in/manage_blogs.php?blogid=27301&url=azhiyasudargal.blogspot.com/2012/06/blog-post_23.html