நண்பன் பேப்பர் வெயிட்டின் தயவால்தான் அசோகமித்திரனை முதல்முறையாக தி நகரில் அவரது வீட்டிலேயே சந்திக்கக் கிடைத்தது. நெருங்கிய சொந்தமென்பதால் என்னை அசோகமித்திரனுக்கு அறிமுகம் செய்துவிட்டு அவன் உரிமையுடன் உள்ளே சென்றுவிட்டான். நானும் அவரும் முற்றத்திலேயே உட்கார்ந்து பேசத் தொடங்கினோம்.
தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளரைப் பழைய வேட்டி பனியனுடன் பார்ப்பது வருத்தமாக இருந்தாலும் ஒருவிதத்தில் அவர் எப்போதுமே எழுதிவந்த லௌகீக யதார்த்தத்துடன் அது பொருந்தியதாகவும் எனக்குப்பட்டது. நடையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் அவர் ஃபிரெட்ரிக் ஃபோர்ஸைத் முதல் பக்கத்திலேயே வாசகனின் முழு கவனத்தையும் பெற்றுவிடும் நேர்த்தியை பற்றி பேச ஆரம்பித்தார். எனக்கோ, இவர் “சீரியசான” இலக்கியவாதிகளைப் பற்றி பேசாமல் இப்படியே காலத்தை வீணடித்து விடுவாரோ என்று உள்ளூர ஒரே கவலை. பின்னர் சுவாரஸியம், பிளாட் என்று அலெக்ஸாண்டர் டூமாவின் மூன்று மஸ்கட்டியர்களை (Three Musketeers) புகழ்ந்தார்.
வாட்சில் நிமிடங்கள் கழிவதை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டே அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். மாய யதார்த்தம் மற்றும் இருத்தலியல், நவீனத்துவமே மேலை நாட்டு இலக்கியத்தில் சிறந்தவை என்று நம்பி வந்த காலம். அட்வெஞ்சர், மற்றும் திகில் நாவல்களைச் சீண்டுவதுகூட இலக்கியத்திற்கு இழைக்கும் துரோகம் என்றிருக்கும் “சீரியஸான” வாசகன் என்ற மமதை வேறு!
ஒருவழியாக பேச்சை எப்படியோ நான் விரும்பிய திசைக்குத் திருப்பி விட்டேன். ஐசக் பஷெவிஸ் ஸிங்கரைப் பற்றி பேசினார். அவரது குறுகிய பக்க அளவுள்ள படைப்புகள் சிறந்தவை என்று நான் உளறியதைக் கேட்டு மெலிதாகச் சிரித்தார். பின்னர், “அவரோட நெடுங்கதைகளும், நாவல்களும்கூட நல்லாவே இருக்கும், படிச்சுப் பாருங்க. மனுஷன் ஊர் பேர் தெரியாத பேப்பர், பத்திரிகைல பேர், புகழ், பணம் இதெல்லாம் பத்தி கொஞ்சங்கூடக் கவலப்படாம தன் வேலய ஆர்ப்பாட்டமே இல்லாம செய்தார். எனக்கெல்லாம் அவர் ஒரு பெரிய ஆதர்சம்…” என்றார்.
“ப்ரிமோ லெவின்னு ஒரு எழுத்தாளரக் கேள்விப்பட்டிருக்கீங்களா? படிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை , ஆனா அவரோட புத்தகம்தான் கிடைக்கவே மாட்டேங்கறது”
லெவியின் ‘இப்போதில்லை என்றால், எப்போது’ (If not now, when) என்ற புத்தகம் வீட்டில் இருந்ததால், அதை அடுத்த முறை வரும்போது கொண்டு வருகிறேன் என்று கூறி மீண்டும் அவரைச்
சந்திக்கும் வாய்ப்பை சாம்ர்த்தியமாக ஏற்படுத்திக் கொண்டேன்.
பேப்பர் வெயிட் வெளியே வந்து, கிளம்பலாமா என்றான். அசோகமித்திரன் அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தார். சின்னப்ப பாரதியின் தாகம்.
“படிச்சிருக்கீங்களா?”
இல்லை, என்று தலையாட்டினேன்.
ரொம்ப நல்ல படைப்புன்னு நிறைய பேர் சொல்றா. படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க”.
நாங்கள் விடை பெற்றுக்கொண்டோம். வெய்யில் சுளீர் என்று அடித்துக் கொண்டிருந்தது. சம்பந்தமே இல்லாமல் தி.ஜானகிராமனைப் பற்றிய அவரது கட்டுரையின் கடைசி வரி நினைவிற்கு வந்தது.
சிரத்தையுடன் தாகத்தை அடுத்த வாரத்திற்குள் படித்துவிட்டு, லெவியின் புத்தகத்துடன் அவரது வீட்டிற்குச் சென்றேன்.
“அதுக்குள்ள படிச்சிட்டீங்களா, எப்படி இருந்தது ?”
“முதல் அறுபதெழுபது பக்கங்கள் ரொம்ப ஜோரா இருந்தது, அப்புறம் ஒரு மார்க்சிஸ்ட் காட்டெகிஸம் (Marxist Catechism) போல இருந்த்த்தால, அவ்வளவா பிடிக்கல”
லேசாகச் சிரித்துவிட்டு , உண்மைதான், ஆனா இத ஒரு முக்கியமான படைப்புன்னுதான் இலக்கிய வட்டாரங்களில் பேச்சு. மீண்டும் படிச்சுப் பார்த்தா அபிப்ராயம் மாறலாம். பார்க்கலாம்”, என்று இரண்டு புத்தகங்களையும் வாங்கி வைத்துக் கொண்டார்.
ஓரு மாதம் கழித்து லெவியின் புத்தகத்தை திரும்பப் பெறுவதற்காக சென்றேன்.
“அற்புதமான புஸ்தகம். இப்படிப்பட்ட ஒரு பெரும்படைப்பு படிக்கக் கிடைச்சதுக்கு உங்களுக்குதான் நன்றி சொல்லணும், ரொம்ப தாங்க்ஸ்”.
அதன் பிறகு, வேலை மற்றும் சோம்பலால் அவரைச் சந்திக்கச் செல்லவில்லை.
சில வருடம் கழித்து என் திருமண அழைப்பில், “உங்களுக்கு, ப்ரிமோ லெவியைப் படிக்க உதவிய, நம்பி” என்று அவருக்கு ஞாபகப்படுத்தினேன்.
அவர் என் திருமணத்திற்கு வராதது குறித்து எனக்கு பல நாட்கள் வருத்தமாகவே இருந்தது. தபாலில் அழைப்பு தொலைந்திருக்க வேண்டும் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். நேரில் சென்று அழைத்திருக்க வேண்டும்.