பீட்டர் பொங்கல்

ஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டு

பீட்டர் பொங்கல்

குழந்தைகள் கையில் ஒரு புதுப்பொருள் கிடைத்தால் அதை எல்லா இடங்களிலும் பொருத்தி விளையாடுகின்றன- ஸ்க்ரூ டிரைவர் இருந்தால் எல்லாவற்றையும் கழற்றிப் போடப் பார்த்தல், பசை இருந்தால் எதையெல்லாம் ஒட்டி வைக்கலாம் என்று தேடுதல், தீப்பெட்டி இருந்தால் எதற்கெல்லாம் தீ வைக்கலாம் என்று யோசித்தல் – நாம் வளர்ந்து, நமக்கு பொறுப்பு வந்து விட்டால் மட்டும் இது பெரிய அளவில் மாறுவதில்லை. எப்போதும் நாம் கைவசம் உள்ள கருவிகளைக் கொண்டே இவ்வுலகைப் புரிந்து கொள்கிறோம், அவ்வாறு புரிந்து கொள்ளும்போதே உலகின் இயல்பை நம் மனதில் திருத்தி வடிவமைக்கவும் செய்கிறோம். இதில், பொறுப்புடன் கூடவே வெற்றியும் அதனால் ஏற்படும் தன்னம்பிக்கையும் வாய்த்து விட்டால், நாழியே  நம் கருவி என்றாலும் அதைக் கொண்டு உலகளந்து விடலாம் என்ற உறுதியான நம்பிக்கை வந்து விடுகிறது. ஆற்றலும் வெற்றியும் நாம் சரியாக இருப்பதற்கான அத்தாட்சிகள் என்பதால் அதை வேறு பலரும் ஏற்கப் போய் நம் நாழி ஒரு அலகும் ஆகிறது. ஆனால், யானையைப் போல் உலகும் தடவிப் பார்க்கும் கரங்களுக்கும் புறத்தகவல்களைத் தொகுத்து அதற்கொரு உருவம் அளிக்க உதவும் கருவிகளாகிய கருத்துச் சட்டகங்களுக்கும் அப்பால் தன் போக்கில் போகிறது.

ஆங்கிலத்தில் லிடரேச்சர் என்பதை நாம் இலக்கியம் என்கிறோம். ஹை-லிட், லோ-லிட் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த காலம்கூட இப்போது போய் விட்டது. எழுதப்படும் எல்லாவற்றையும் லிடரேச்சர் என்று சொல்ல ஆரம்பித்து, திரைப்படங்கள் உட்பட நம் விசாரணைக்குரிய பிரதி நிலையை அடையக்கூடியவை எல்லாம் லிடரேச்சர் என்ற இடத்தில் வந்து நிற்கிறோம். அதற்காக எல்லாம் ஒரே அளவில் சம மதிப்பு கொண்ட இலக்கியம் ஆவதில்லை – புனைவுத்தன்மை, வடிவத்துக்கு ஏற்ற மொழி கொண்டிருத்தல், பயன்பாட்டு நோக்கமின்மை, கற்பனையைத் தூண்டுதல் போன்ற விஷயங்கள் ஒரு படைப்பை இலக்கியம் என்று பாராட்டத்தக்க இடத்துக்கு அருகில் கொண்டு செல்கின்றன.

மொழி பல திசைகளில் விரியக்கூடியது, பல்பொருள் அளிக்கக்கூடியது. குறிப்பிட்ட ஒரு தொடர் வரிசையில் முன்னும் பின்னும் வரக்கூடிய வாக்கியங்களைக் கொண்டே எந்த ஒரு வாக்கியமும் அதன் பொருள் இன்னது என்று வரையறை செய்யப்படக்கூடியது. அப்படியும் அதன் பொருள் பல கற்பனைகளுக்கு இடம் தரலாம். மொழியின் இத்தன்மையை அழகியலாய்க் கொள்வதாலேயே இலக்கியம் என்பது சுட்டுதல் என்று பொருள் கொண்டு, ஒரு படைப்பு எதைச் சுட்டுகிறது, தான் சுட்டும் பொருளைத் தன்னுள் எவ்வளவு கொண்டிருக்கிறது, எவ்வகையில் இச்சுட்டல் நிகழ்கிறது என்று பலவாறு பேசுகிறோம். ஒரு படைப்பு தான் நேரடியாய்ச் சொல்வதற்கு முற்றிலும் முரணான பொருள் தரலாம், அல்லது நேரடியான பொருள் ஒன்று மறைபொருள் ஒன்று என்று இருவேறு வகைகளில் பொருள்படலாம், படைப்பில் உள்ளதன் ஒரு பகுதியை மறைத்து அது சுட்டுவதாய் நாம் கொள்ளும் பொருளை, சொன்னது பாதி சொல்லாதது பாதி என்று அதிலுள்ள இடைவெளியில் நிரப்பும் சாத்தியம் கொண்டிருக்கலாம்.

இது எதுவும் நாம் அறியாதது அல்ல. ஒரு படைப்பு கற்பனைக்கு இடம் கொடுக்காதபோது, அதன் வாசிப்பனுபவத்தில் அகத்தூண்டுதல் நிகழாதபோது, தட்டையான மொழி, தட்டையான வடிவம் என்று அது நிராகரிக்கப்படுகிறது. புனைவென்றால், திரைக்குப்பின் உள்ள நிழலாட்டத்தின் சாயல் அதில் வெளிப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நிழல், சொல்லப்படும் விஷயத்துக்குப் பின்னுள்ள சொல்லப்படாத விஷயத்தின் சுட்டல், புனைவுக்கு, ஏன் மொழிக்கே, ஒரு கூடுதல் பரிமாணம் அளிக்கிறது. இது தொடர்பாகவே இலக்கியம் குறித்த விவாதங்கள் நிகழ்கின்றன.

இந்த அழகியலோடு அறம் சேரும்போது ஒரு சிறிய நுண்மையாக்கம் நிகழ்ந்து தீவிர நிலைப்பாடுகள் தோன்றுகின்றன. எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது, எது மதிப்பு கொண்டது, எது மதிப்பற்றது என்ற விவாதங்களில் கதைசொல்லலின் விளையாட்டுத்தனம் அடிபட்டுப் போகிறது. எத்தனை பேசினாலும் கதை சொல்லல் ஒரு மொழி விளையாட்டும்தான் என்பதை மறுக்கவே முடியாது, ஆனால் விளையாட்டுத்தனமான கதைகளில் இலக்கியத்தின் ஒளி பெரும்பாலும் பாய்வதே இல்லை. விளையாட்டுத்தனம் குறையும்போது இலக்கியத்தின் ஒரு முக்கிய இயல்பான பயன்பாட்டு நோக்கமின்மைக்கு இடமில்லாமல் போகிறது – இலக்கியம் ஒரு இயக்கம் என்ற இடத்தை அடையும்போது அதன் இலட்சியங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன, விளையாட்டுத்தனம் அர்த்தமற்றுப் போகிறது. குழந்தைகள் விஷயத்தில் பார்ப்பது போல், விளையாட்டுத்தனம்தான் கற்பனையைத் தூண்டுகிறது, நம் கருவிகளின் புதுப் பயன்பாட்டைக் கண்டறிய உதவுகிறது.

oOo

பொண்டிங் இன்னமும் வந்து சேரவில்லை‘, என்று துவங்கும் ஜேகேவின் கதையில்  பிரிந்து வாழும் அருணும் மயூரியும் உரிமை கொண்டாடும் அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றவன் பொண்டிங். பெரும்பாலும் அருனின் பார்வையில் சொல்லப்படுகிறது- மயூரி நிறைய பொய் சொல்பவள் என்பதையும் அவள் சூடானியன் ஒருவனோடு சேர்ந்து வாழ்கிறாள் என்பதையும் அது குறித்த அருணின் கவலைகளையும் நாம் துவக்கத்திலேயே அறிகிறோம்- “பாவம். பிள்ளைக்கு வாய் திறந்து சொல்லவுந் தெரியாது. அந்த சூடானியன் பொண்டிங் முன்னாலேயே மயூரியை… Stop it Arun, அப்படி எல்லாம் நடக்காது.” அவன் கவலையெல்லாம் பொண்டிங் மீதே என்று சொல்லிக் கொண்டாலும் மயூரி மீது அருண் கொண்டுள்ள உரிமையை மணமுறிவுக்குப் பின்னும் அவன் மனம் விலக்கிக்கொள்ள மறுக்கிறது.

பொண்டிங் என்ற பெயரைத் தேர்வு செய்வது மயூரிதான். கதைக்களம் ஆஸ்திரேலியாவில் உள்ள ப்ரெஸ்டன் என்பதால் பொண்டிங்கைத் தேர்ந்தெடுக்கும் மயூரி ஆஸ்திரேலிய அடையாளத்தை ஏற்றுக் கொண்டு விட்டாள் என்றும் ‘ராம், சிவாஸ், கண்பத்’ என்ற சாமி பெயர்கள், அல்லது, ‘சச்சின், சனத்’ என்ற ஆசிய கிரிக்கெட்டர்களின் பெயர்களை அருண் விரும்புவதில் அவனது அடையாளச் சிக்கல் தொடர்கிறது என்றும் கொள்ளலாம். ஆனால் குடியேறியவர்களின் இந்தச் சிக்கல்கள் கதையில் இன்னும் விரித்தெடுக்கப்படவில்லை. போகிற போக்கில் இது இடம் பெறுகிறது, எப்படி மயூரி சூடானியனுடனும் அருண் அலெக்சாந்திராவுடனும் மணமுறிவுக்குப்பின் வாழ்கிறார்களோ அது போல் இதுவும் கதைக்கு பின்னணி சேர்க்கிறது.

பொண்டிங் குறித்த சண்டை எண்ணற்ற பல சண்டைகளில் ஒன்று, இறுதிச் சண்டை, ‘அது பத்தாயிரத்து முந்நூற்று நாற்பதாவது சண்டையாக இருக்கலாம். நகரத்தின் இத்தாலிய உணவுவிடுதி ஒன்றில் அவன் அலெக்சாந்திராவோடு உணவருந்திக்கொண்டிருந்தவேளையில் தற்செயலாக மயூரி அவர்களைக் கண்டதிலிருந்து முளைவிட்ட சண்டை‘. இது ஏன் இறுதிச் சண்டையாக ஆகிறது, ஏன் அவ்வளவு பலமான அடிதடி என்பது கதையின் கடைசி வரியில்தான் புலப்படுகிறது. இதற்கு வேண்டிய அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்பதால் அருணுக்கும் மயூரிக்கும் நடுவில் என்ன நடந்திருக்கும், அவர்களின் சண்டை எது குறித்து இருந்திருக்கும் என்பதை வாசகனே ஊகிக்க வேண்டியதாகிறது. பொண்டிங்கைவிட கதைக்கு இதுதான் முக்கியம், இதில் இல்லாத கவனம் பொண்டிங் மீது விழுவதில் உண்மையை எதிர்கொள்ள மறுக்கும் அருணின் பலவீனம் இருக்கிறது.

இன்னும் சொல்வதானால், அருண் சில உண்மைகளை நம்மிடமிருந்தும் மறைக்கிறான்- “மயூரி தனக்குத் தீர்க்கப்பட்ட பொருட்கள் எல்லாவற்றையும் நான்காயிரம் டொலர்களுக்கு அருணுக்கே திரும்பவும் விற்றாள். சாமியறைப் படங்களை இலவசமாகக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டாள். ஒரு பென்சும், டொயோட்டாவும் வீட்டில் நின்றது. மயூரி பென்ஸ் தராவிட்டால் விவாகரத்தை இழுத்தடிப்பேன் என்று அடம்பிடித்தாள். நம்பர் பிளேட்டில்கூட “MAYURI3” என்று இருந்தது. அருணுக்கு அவள் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வைத்தாலே போதும் என்ற நிலை. பென்ஸ் மயூரிக்குப்போனது,” என்று பல தகவல்களுக்கு இடையே அருண் விவாகரத்து பெற அவசரப்படுகிறான் என்ற தகவலும் இருக்கிறது, ஆனால் அது ஏன் எதனால் என்ற கேள்வி கதையில் இல்லை. அருண் அதைச் சொல்வதில்லை, அருண் பார்வையில் கதைசொல்லும் ஜேகேவும் சொல்வதில்லை. ஆனால் சிறிது ஊகித்தால் நாம் கண்டு கொள்ளலாம். அதற்கும் கதையின் இறுதிக்கு வர வேண்டியிருக்கிறது.

ஆங்கில துப்பறியும் கதைகளில் red herring என்று ஒன்று சொல்வார்கள், வாசகனின் கவனத்தைத் திசை திருப்ப வேறு திசையில் சந்தேகம் கொள்ள வைக்கும் உத்தி. அதற்கு இணையான ஒன்றாக, அருண் மீது சந்தேகம் எழாத வகையில் இங்கு பொண்டிங் யார் என்ற கேள்வி கதை முழுக்க, தலைப்பு துவங்கி இறுதி வரை நீடிக்கிறது – “இருவரும் பொண்டிங்கை அழைத்துக்கொண்டு பூங்காவுக்கு நடையெல்லாம் போயிருக்கிறார்கள். குழந்தை என்றாலும் பெயருக்குத் தகுந்தமாதிரி பொண்டிங் நன்றாக பந்து விளையாடுவான். “கட்ச் இட்” என்று சொல்லி பந்தை வீசுகையில் குழந்தை ஆர்வத்தோடு பந்தை நோக்கிப் பாய்கையில் நிஜ ரிக்கி பொண்டிங் போய்ண்டில் கட்ச் பிடிப்பதுபோலவே இருக்கும்,” என்ற ஒரு புதிர்த்தனமான இடத்தைத் தவிர கதை முழுவதும் பொண்டிங்கை அருண் ‘பிள்ளை’ என்றே சொல்லிக் கொண்டிருக்கிறான்- “சாதாரண குடும்பப்படம் அது. அருண், மயூரி, நடுவில் பொண்டிங். பொண்டிங் சிரிக்காமல் உர்ர்ரெண்டு முறைத்துக் கொண்டிருக்க இருவரும் அவனைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.  படம் கன்வாஸ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தது. மயூரியின் படத்துக்குக் கீழே “மயூரி ரட்ணம்”, அருணுக்குக் கீழே “அருண் இளையதம்பி”, பொண்டிங்குக் கீழே “பொண்டிங் மயூரி” என்று எழுதிக்கிடந்தது. அருணுக்குக் கோபமோ கோபம். “பொண்டிங் அருண்” என்று எழுதியிருக்கவேண்டும் என்றான்,” என்றெல்லாம் வேறு எழுதுகிறார். பொண்டிங் மீது யாருக்கு கூடுதல் உரிமை இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான ஆதாரங்களில் இதுவும் ஒன்று.

கதையின் இறுதியில் அலெக்சாந்தரா வெளிப்படும்போதுதான் பொண்டிங் யார் என்ற நம் சந்தேகமும் உறுதிப்படுகிறது. ஆனால் காலத்தில் முன்னும் பின்னும் சென்று மிகத் தேர்ந்த வகையில் கதை சொல்லும் ஜேகே, பாண்டிங் குறித்த மர்மத்தை அவிழ்க்கும் அதே வரியில் இதனுள் உள்ள இன்னொரு கதையின் மர்மத்துக்கும் விடையளிக்கிறார். ஆனால், இப்படியொரு மர்மம் இருப்பதே கதையை இரண்டாம் முறை படிக்கும்போதுதான் தெரிகிறது.

இந்தக் கதை நமக்கு அளிப்பது முழுக்க முழுக்க ஒரு அறிவு நிலை திருப்தியைதான். ஒரு குறுக்கெழுத்துப் புதிரை நிறைவு செய்த திருப்தி போன்றது இது. அருண், மயூரி, பொண்டிங் என்று எவரது உணர்வுகளையும் நாம் அறிந்து கொள்வதில்லை. புறத்தகவல்கள் என்ற அளவிலேயே கதை சொல்லப்படுகிறது, முரண்கள் குறித்த அகவுணர்வுகள் பெரிதுபடுத்தப்படுவதில்லை. அருணின் உணர்வுகள் விவரிக்கப்படுவதும் ஒரு விளையாட்டுப் போக்கில்தான் என்பதை யோசித்துப் பார்த்தால் நாம் அறிய முடியும். விளையாட்டாகக் கதை சொல்வது என்று பார்த்தால் ஜேகே மிகச் சுவாரசியமாக, படித்து முடித்த பின்னரும் அசை போடக்கூடிய கதையைச் சொல்லியிருக்கிறார், அதில் சந்தேகமில்லை.

பொண்டிங், ஜே.கே. 

நினைவு முள் – ஜிஃப்ரி ஹாசன் கவிதை: ஒரு குறிப்பு

பீட்டர் பொங்கல்

hand-of-memory

பதாகையில் கவிதை எழுதுபவர்களில் றியாஸ் குரானா, ஜிஃரி ஹாசன், மஜீஸ் மூவருக்கும் ஒரு தனி மொழி அமைந்திருப்பது தன்னிகழ்வா அல்லது அப்படிப்பட்ட ஒரு கவிதை மரபின் வழியில் இவர்கள் எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. மூவருக்கும் பொதுவாய் ஒரு தனி மொழி என்று சொல்வதில் ஒரு முரண்பாடு உள்ளது போல் தொனிக்கலாம். உண்மையில், இந்த மூவரின் கவிதைகளில் பலவும் ஒரு சிறுகதைக்குரிய இயல்பு கொண்டிருக்கின்றன.  ஒரு சில கவிதைகளை சிறுகதைகளாகவும் வளர்த்தெடுக்கலாம். ஆனால் இவர்கள் மூவரும் ஒரே மாதிரி எழுதுவதில்லை. றியாஸின் கவிதைகளில் உள்ள படிமத்தன்மை, நேர்க்கோட்டு மொழிதலின்மை பிற இருவரின் கவிதைகளிலும் இல்லை. ஜிஃப்ரி ஹாசனின் கவிதைகளில் உள்ள துயரம் நேரடியானது, அதைப் பிறரிடம் பார்க்க முடியவில்லை. மஜீஸ் வெகுச் சில கவிதைகளே பதாகையில் எழுதியிருந்தாலும் அவர் எழுதுவதிலுள்ள நுட்பமான நகைச்சுவை மிகவும் மதிப்பு மிக்கது என்று தோன்றுகிறது, அது இயல்பாய் வெளிப்படுவதாலும், அதை அதிகம் காண முடியாமையாலும்.

இவ்வாரம் ஜிஃப்ரி ஹாசன் கவிதை – நினைவுமுள்

ஜிஃப்ரி ஹாசன் பதாகையில் எழுதிய கவிதைகளில் உள்ள ஆறுதலற்ற வலி இதில் இல்லை,  ஒரு நேர்மறைத்தன்மை கொண்ட காரணத்தால் அவர் எழுதியதில் வித்தியாசமான கவிதை.  அமைதியை நாடும் வகையில், துயரை விடுபடும் வகையில் எழுதியிருக்கிறார். வழக்கமாக, துயரில் மேலும் மேலும் ஆழ்த்துவதாகவே அவர் எழுதி வருகிறார். அவர் கவிதைகளில் ஏதோ ஓர் இடத்தில் துயர் மேலோங்கி பிறவனைத்தையும் விழுங்கி விடுகிறது.

இந்தக் கவிதையில் உள்ள ‘பாதைதோறும் நினைவுகள் குடை விரித்தன’  என்பதில் உள்ள எளிய கவித்துவம் திரைப்பாடல்களுக்கு வெளியே மதிப்பிழந்து விட்டது என்று நினைக்கிறேன். அதில் ஒரு கற்பனைத்தன்மை இருக்கிறது. பாதையெங்கும் நினைவுகளின் நிழல் என் மேல் படிந்தது என்பதை இவ்வாறு உருவகப்படுத்தியிருப்பது அழகாக இருந்தாலும், இந்தக் கவிதை ஒரு பயணத்தைப் பற்றிய கவிதை என்பதால் அதற்கு இங்கு இடமில்லை என்று சொல்ல முடியாது.

எந்த இடத்தில் பிரிந்தோமோ/ அந்த இடத்தில் சேர்வோம்

என்பதைத் தொடர்ந்து அந்த வரி வருகிறது, அதன் பின் வரும் வரிகள்-

உங்கள் முகத்தில்/ நான் ஒரு களங்கமற்ற சிரிப்பையும்/ உங்கள் இதயங்களில்/ ஒரு நல்லெண்ணத்தையுமே வேண்டுகிறேன்/’

என்று செல்கின்றன.

முதலில் பிரிவு நேர்ந்த இடத்தில், அதற்கான காரணங்கள் உள்ள இடத்தில், ஒன்று சேர வேண்டும் என்ற விருப்பம். அடுத்து, பயணம், பாதை எங்கும் நினைவுகள். இவை பிரிதலின் நினைவுகள் என்பதால், ஒரு சிரிப்பும் நல்லெண்ணமும் மட்டும் போதும் என்ற இறைஞ்சுதல். இதையடுத்து, இதுவரை சொல்லப்பட்டதே மீண்டும் சொல்லப்படுகிறது-

நம் பிரிவு நிகழ்ந்த இடங்களை/ நம் சேரிடங்களாக்கி/ களங்கமற்ற ஒரு புன்னைகையை நடுவோம்

இதைக் கற்பனை கலந்த ஒரு நம்பிக்கை, எதிர்பார்ப்பு என்று கொள்ளலாம். இலக்கியத்தில் கற்பனையின் இடம் என்ன என்பதை இந்தக் கவிதை உணர்த்துகிறது. அவநம்பிக்கைகளை கற்பனை கொண்டுதான் கடந்தாக வேண்டும். எனவே புன்னகை விதைக்கப்படுகிறது (புன்னகை  மலர்தலால் நடுவோம் என்றாகும் போல)

இந்தப் புன்னகைக்குப் பின் என்ன நடக்கிறது? இனி, நம் சொற்கள் ஒவ்வொன்றும் நடந்து முடிந்த கதையைச் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. ஒரு புன்னகை நம் சொற்களின் பொருளை மாற்றி விடுகிறது.

நெஞ்சையுறுத்தும் நினைவு முட்களை /உயிர்ப்பற்ற குருட்டு நம்பிக்கைகளை/ ஒரு யுகப் பின்னடைவை/ இப்போது நமது சொற்கள் தாண்டிவிட்டன

இறுதி வரிகள்-

துயர் படிந்த ஒரு காலமும்/ அதன் குரூரக் காயங்களும்/ ஒரு பயணத்தில் கடந்து விடக்கூடியவையே

இப்போது நாம் இது என்ன பயணம் என்று கேட்டுக்கொண்டால், புன்னகையையும் நல்லெண்ணத்தையும் நோக்கிய பயணம் என்று சொல்ல முடியும், இல்லையா? நாம் இந்தப் பயணத்தை மட்டும் மேற்கொள்ள முடிந்தால் கடந்த காலம் இவ்வளவு துயரம் அளிப்பதாகவும், அதன் குரூரங்கள் இவ்வளவு வலி தருவதாகவும் இருக்காது.

இது ஒரு நம்பிக்கைதான். யதார்த்தத்தில் நடக்கும், நடக்காது போகலாம். ஆனால் ஒரு கவிதை என்று வரும்போது, அதில்கூட இது போன்ற நம்பிக்கைகளை வெளிப்படுத்த முடியாது என்றால் எப்படி? நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை கற்பனைதான் மெய்ப்பிக்க வேண்டும், இல்லையா?

அதை இந்தக் கவிதை செய்கிறது என்று நினைக்கிறேன். நினைவுமுள் என்ற தலைப்பு முதலில் ஒரு உறுத்தல், வலி என்பது போல் உள்ளது. அதன்பின் கடைசியில் கடிகார முள் போல் அதுவும் இடம் மாறக்கூடியதுதான் என்ற ஒரு நம்பிக்கைக்கு இடம் அளிக்கிறது. நம் துயர நினைவுகள் எப்போதும் ஒரு முள்ளாய் நமக்கு வலிக்க வேண்டியதில்லை, புன்னகையை நோக்கிய ஒரு பயணத்தில் எல்லாம் மாறலாம். நினைவுமுள் துயரிலிருந்து நம்பிக்கைக்கும், கடந்தகாலத்திலிருந்து எதிர்காலத்துக்கும் நகரக்கூடியதுதான்.

ஜிஃப்ரி ஹாசன் கவிதை – நினைவுமுள்

ஒளிப்பட உதவி – cafepress.com

அறமும் எழுத்தும் – ஜென் வெப்

இது அவ்வப்போது பேசப்படுகிறது. அறமும் எழுத்தும். பொருத்தமற்ற மணவுறவில் பிணைக்கப்பட்ட இரு கருத்துகள். அறம் சார்ந்து எழுதுவது எப்படி? அழகியல் தேவைகளுக்கும், கதைகூறலின் ஆரத்துக்கும், வாசக தேவைகளுக்கும், துரோகம் இழைக்காமல் அறம் சார்ந்து எழுதுவது எப்படி? அது தவிர, அறம் சார்ந்த எழுத்து என்றால் என்ன?

கல்வித்துறையில் இதற்கான பதில் நேரடியானது: அறம் சார்ந்து எழுதுவது என்பது பிறர் எழுத்தைத் திருடாமல் இருப்பது, பொய்த் ‘தகவல்களை’ அளிக்காமல் இருப்பது.

மிலன் குந்தேராவைப் பொறுத்தவரை இதற்கான பதில் நேரடியானது.

“இருத்தலில் இதுவரை அறியப்படாதிருக்கும் கூறொன்றைக் கண்டு சொல்லாத நாவல் அறமற்றது. அறிவொன்றே நாவலில் அறம்”

ஆஸ்கார் வைல்டுக்கும் நேரடி பதில் இருந்தது- “அறம் சார்ந்த, அல்லது அறமற்ற புத்தகம் என்பது கிடையாது,” என்று அவர் ‘தி பிக்சர் ஆஃப் கிரே‘யின் முன்னுரையில் எழுதுகிறார்.

நன்றாக எழுதப்பட்ட புத்தகங்கள், மோசமாக எழுதப்பட்ட புத்தகங்கள். அவ்வளவுதான்.

இந்தப் பதில்கள் அவ்வளவு பயனுள்ளதாய் இல்லை. படைப்பெழுத்தாளர்கள் அவசியம் பிறர் எழுத்தைத் திருடக்கூடாதுதான், ஆனால் நாம் நிச்சயம் புது விஷயங்களை புனைந்தாக வேண்டும். எல்லா எழுத்தாளர்களும் அறிவூட்டும் உந்துதலை உணர்வதில்லை. வைல்ட், ‘நன்றாக எழுதப்பட்ட’ புத்தகத்துக்கும், ‘மோசமாக எழுதப்பட்ட’ புத்தகத்துக்கும் என்ற வேறுபாடு?

நல்லது; கெட்டது: ‘அறம்’ என்பதைப் போல் இந்தச் சொற்களை ‘வெற்று குறிப்பான்கள்” (“empty signifiers”) என்று மொழியமைப்பியல் வல்லுனர்கள் அழைக்கின்றனர். அது சுட்டும் பொருள் அல்லது விஷயத்தை எந்த ஒரு சொல்லும் குறிக்கலாம். உரித்தான பெயர்ச்சொற்கள் தவிர பிற சொற்கள் எதுவும் வேறு எதற்கும்மட்டுமே உரியவையல்ல. அவையனைத்தும் எந்தப் பொருளை அல்லது கருத்தைப் பெயரிட்டு அழைக்கின்றனவோ, அவற்றால் அதைச் சுட்டும் வகையில் நம் கவனத்தைத் திருப்ப மட்டுமே முடியும். வெற்று குறிப்பான்கள் திண்மம் கொண்ட பொருள், அல்லது, ஏற்றுக்கொள்ளப்பட்ட அர்த்தம் எதையும் சுட்டுவதில்லை. அவை, “அர்த்தத்தை உமிழ்கின்றன என்பதை விட, உறிஞ்சிக் கொள்கின்றன”

“நல்ல எழுத்து”, “அறம் சார்ந்த எழுத்து” என்றெல்லாம் சொல்வது, ‘நாமனைவரும்’ புரிந்துகொள்ளும் கருத்துகளுக்கு பெயர் சூட்டுவது போல்தான் தெரிகிறது; ஆனால் ‘நாமனைவரும்’ நம் தேர்வுகளை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. (நான் ‘நல்ல எழுத்து’ என்று அழைப்பது உங்களுக்கு குப்பையாய் இருக்கும்)

ஓரளவுக்கு இது ரசனை சார்ந்த விஷயம்; அல்லது சமகால விழுமியங்கள் சார்ந்த விஷயம்; அல்லது அரசியல். இங்கேதான் நாம் அறம் நோக்கித் திரும்புகிறோம். இங்கு நான் அறம் பற்றி எழுதப்பட்ட மிகப்பெரும் தொகுதியைச் சுருக்கித் தர முயற்சி செய்யப்போவதில்லை. நாம் உயிருள்ள ஒரு குறிப்பிட்ட ‘உண்மையை’ கொண்ட கதைகளை போதனைகளாய் இல்லாத வகையில் எப்படிச் சொல்கிறோம், பிம்பங்களாய் எப்படி உருவாக்குகிறோம், என்பதுதான் இங்கு என் அக்கறை (‘உண்மை’ என்ற சொல்லை நான் வேண்டுமென்றேதான் மேற்கோள்களுக்குள் தந்திருக்கிறேன், அதுவும் ஒரு வெற்று குறிப்பான் என்பதால்)

நான் ஏன் எழுதுகிறேன்‘ என்ற தன் கட்டுரையின் துவக்கத்தில் ஜோன் டிடியன், எழுத்தென்பது பிறர் மீது தன்னை வலியுறுத்தும் கலை என்கிறார், நான் சொல்வதைக் கேள், நான் பார்க்கும் வகையில் பார், உன் மனதை மாற்றிக் கொள் என்று சொல்வது அது.

நிச்சயம் உண்மைதான். ஆனால் தொடர்ந்து நம்மைப் பிறர் மீது வலியுறுத்துவது என்பது ‘மாண்ட்டி பைதன் அண்ட் தி ஹோலி கிரெயிலில்‘ வரும் சாமியார்கள் போல் நம்மை மாற்றிவிடும்: முடிவில்லாமல் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டு, நம்மையும் (நம் வாசகர்களையும்) முடிவில்லாமல் தலையில் அடித்துக் கொண்டிருக்கச் செய்யும்.

அறம் சார்ந்த எழுத்து எது என்பதற்கு முழு விடை இல்லை, ஆனால் மிசேல் பூக்கோ, சிந்தனையால் தெளிவடைந்த விடுதலையுணர்வு அற வடிவைத் தேர்ந்தெடுக்கிறது என்று சொல்லும்போது இதற்கு அருகே வருகிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அதாவது, நாம் உருவாக்கும் அர்த்தங்கள், நாம் உருவம் அளிக்கும் உலகம் குறித்து பிரக்ஞைப்பூர்வமாக சிந்தித்து எழுதப்படும் எழுத்தே அறம் சார்ந்த எழுத்து. நான் ஒரு படைப்பை விரும்பாமல் இருக்கலாம், அதன் உலகப் பார்வையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். ஆனால், வைல்ட் சொன்னதற்கு மாறாக, யோசித்து எழுதப்படும் சூழலில் அது நிச்சயம் அறம் சார்ந்த எழுத்துதான்.

எழுத்தாளர்கள் எப்போதும் பிரதிமைப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்: உலகுக்கும் அதனுள்ளிருக்கும் உறவுகளுக்கும் உருவம் அளித்துக் கொண்டேயிருக்கிறார்கள்; வார்த்தைகள் தாம் எவற்றின் குறிகளாய்ப் பெயர் சூட்டி நிற்கின்றனவோ அவற்றுக்கு அப்பாலும் செயலாற்றுகின்றன. சொற்றொடர்களாய், வாக்கியங்களாய், பத்திகளாய், முழு படைப்புகளாய் ஒருங்கமைப்பட்ட வடிவில், வாசகர்கள் உணர்ந்து, கண்டு, செவித்து, முகரக்கூடிய சூழலைச் சொற்கள் அளிக்க முடியும்.

இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட சொற்கள், மொழியின் அருவ நிலைக்கும், பருண்ம உலகின் திண்மத்தன்மைக்கும் இடையில் உள்ள வெளியை இணைக்க முடியும். தன்னால் விவரிக்கப்படும் உலகை இருப்பதாய்ச் செய்ய முடியும், மெய்ம்மை கொண்டதாய் உணர்த்த முடியும்.

அறம் சார்ந்த எழுத்தை நாம் இப்படிச் சொல்லலாம்: திண்ம உலகை எதிர்கொண்டு, பல்கூட்ட மக்களின் வாழ்வனுபவத்தை விவரிக்கும் வகையில் மொழிகளைப் பயன்படுத்தும் படைப்பு.

கதைசொல்லல் மற்றும் கவிதையின் பிரதிமைப்படுத்தும் ஆற்றலை, பருண்மத்தன்மையைச் சிறப்பாய்க் கையாளும் படைப்புகளின் முன் தம் உணர்வாலும் புலனனுபவத்தாலும் வாசகர்கள் எதிர்வினையாற்றும்போது நாம் காண முடிகிறது. சிரிப்பாகட்டும், அழுகையாகட்டும், நம் அனுபவத்தை நண்பர்களுடன் பகிர்வதாகட்டும்- ‘நல்ல’ எழுத்து நம்மை நெகிழச் செய்கிறது.

வெவ்வேறு மக்களின் பங்களிப்பை ஆவணப்படுத்தும் படைப்புக்களைத் தணிக்கை செய்ய அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் அவற்றின் ஆற்றலைச் சுட்டுகின்றன. 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசு, அகதிகள் குறித்து, ‘தனிநபர்களாய் உணர்த்தும், அவர்களின் மானுடத்தன்மையை வெளிப்படுத்தும் சித்தரிப்புகள்” நிராகரிக்கப்பட வேண்டும் என்று மேற்கொண்ட முயற்சிகள் இப்படிப்பட்ட ஒரு உதாரணம்.

இந்த ஆணையைக் கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஆஸ்திரேலிய எழுத்தாளர்களும் கலைஞர்களும் மௌனத்தாலோ பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தாக்கங்களாலோ எதிர்கொள்ளவில்லை; மாறாய், தனியாளுமைகளாய், தனித்தன்மை கொண்டவர்களாய் உணர்த்தும் படைப்புகளை உருவாக்கினார்கள். ஆஸ்திரேலியாவிலும் பசிபிக் பகுதிகளிலும் சிறைப்படுத்தப்பட்டுள்ள எழுத்தாளர்கள் தம் சமூகங்களை தனி நபர்கள் கொண்டதாய், அவர்கள் ஆளுமைகளை வெளிப்படுத்துவதாய், மானுடத்தன்மையை உணர்த்துவதாய் தம் கவிதைகளாலும் கதைகளாலும் நினைவுக் குறிப்புகளாலும் சித்தரித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட படைப்புகளில் சில கொள்கை பிரசார வகைமையைச் சேர்ந்ததாக இருக்கலாம், சில பேதைத்தன்மை கொண்டிருக்கலாம், சில படிப்பினைகளை உணர்த்துவதை நோக்கமாய் கொண்டிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, வைல்டும் குந்தேராவும் வரையறை செய்த பொருளில் இவற்றில் பலவும் அறம் சார்ந்தவையே: இவை, நளினமான வாக்கியங்களும் புதிய அணுகுமுறைகளும் கொண்டு ‘நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன,’ ‘இருப்பின் இதுவரை அறியப்படாத கூறொன்றை” அம்பலம் செய்கின்றன.

நன்றி, The Conversation – http://theconversation.com/ethics-and-writing-63399

ஒரு நீதிக்கதை – தேஜூ கோல்

எதிரி பிற பூதங்களை உயிர்ப்பித்திருந்தான் என்பது உண்மைதான். ஒவ்வொன்றும் அதனதன் வழியில் தீமை செய்தன. ஒவ்வொன்றும் ஏழு பாபங்களில் ஏதோ ஒன்றின் முழுவுருவமாய் இருந்தன, ஒவ்வொன்றும் வலுவானதாகவும் தோற்கடிக்கக் கடினமானதாகவும் இருந்தன. சில பூதங்கள் இன்னும் மண்ணில் சுற்றித் திரிந்தன. ஆனால் இந்த பூதத்தை கவனிக்கத்தக்கதாய்ச் செய்தது எது என்று பார்த்தால், ஏன், அதற்கு தனித்தன்மை கொண்ட கள்ளத்தனம் அளிப்பதாக எது இருந்தது என்று பார்த்தால், அது சக்தியற்றது என்பதுதான். உண்மையில் அது மெலியது. பிற பூதங்கள் தோற்றுப்போகக் காரணமாக இருந்த குறைகள், இந்த பூதத்துக்கு பத்து மடங்கு அதிகம் இருந்தன. இந்தப் புதிய பூதம் ஒழுக்கமில்லாதது, ஆனால் ஒழுக்கம் பூதங்களின் இயல்பல்ல. இந்த பூதம் அழகாகவும் இல்லை, புத்திசாலியாகவும் இல்லை, வீரமாகவும் இல்லை, நன்றாக உடை அணியவுமில்லை, வசீகரமாகவும் இல்லை, பேச்சாற்றல் கொண்டதாகவும் இல்லை- எப்போதும் பூதங்களுக்கு இதில் ஏதோ ஒரு சில குணங்களாவது இருப்பது வழக்கம். எதிரி இந்தப் புது பூதத்தை அனுப்பி வைக்கும்போது அது ஒரே ஒரு இடத்திலிருந்து சக்தியை திரட்டிக் கொள்ளும் வகையில் வடிவமைத்திருந்தான், பழங்காலத்தில் சாம்சனையும் அவனது சிகையையும் பற்றிச் சொன்னது போல்தான்- அந்த ஆதார சக்தி அறுபட்டால், நண்பகல் வெயிலில் வாடிப்போகும் துண்டிக்கப்பட்ட மலர்த்துளிர் போல் இந்த பூதமும் வாடிப் போகும். புது பூதத்தின் சக்திக்கான ஆதாரம் ஓசைதான். தனக்குத் தொடர்புடையச் சிறு ஓசை கேட்டாலும் அது இன்னும் கொஞ்சம் வலுவானதாக மாறும். அது நிறைய சப்தம் கேட்கும்போது, போற்றுதலோ தூற்றுதலோ, ஆனந்தம் மிகுந்து மேலும் வலுவானதாக வளர்ந்தது. ஒட்டுமொத்த அமைதியே அதைத் தோற்கடிக்க முடியும், தியானத்தின் அமைதியும் செயல்பாடுகளுமே அதைத் தோற்கடிக்கும்.

இதுபோல் வடிவமைக்கப்பட்ட பூதத்தை எதிரி ஓசைப்பேட்டைக்கு ஏவிற்று. “புதுப்பூதம்” என்ற அலறல் எழுந்தது, பூதம் இன்னும் கொஞ்சம் பலமடைந்தது. “பூதத்துக்கு இன்னும் பலம் சேர்ந்து விட்டது,” என்று கூட்டத்தினர் கத்தினார்கள், பூதம் இன்னும் வலுவானது. இவ்வாறாகத்தான் ஓசைப்பேட்டையின் புதுப்பூதம், எதிரி அதுவரை அனுப்பிவைத்த அத்தனை பூதங்களைவிட எளிய பூதம், அங்கிருந்தவர்கள் எல்லாரும் பேசும் ஒரே விஷயமானது. காதைச் செவிடாக்கும் கூச்சலாக அந்தச் சப்தம் வளர்ந்து விட்டது. ஓசைப்பேட்டையின் ஒவ்வொரு நாளிதழிலும் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் பூதத்தைப் பற்றிய கட்டுரைகள்தான். தொலைக்காட்சியில் நிருபர்கள் பூதத்தைப் பற்றிய சப்தம் எழுப்பியபடியே பெரும்பொழுது கழித்தனர். ஊரார் தங்களோடு கொண்டு சென்ற சிறு கருவிகளை பூதம்தான் ஆக்கிரமித்திருந்தது. பூதம் சிரித்தால், அதற்கொரு எதிர்வினையாய் ஓசை எழுந்தது. பூதம் முறைத்தால், அதற்கும் பதில் சத்தம். அது இருமும்போது இருமல் கரகோஷம், பூதம் எப்படி இருமுகிறது என்பது பற்றி விவாதங்கள். தனது எளிய உத்தி எவ்வளவு வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்பது எதிரியையே திகைக்கச் செய்தது. பூதம் சிரித்தது, முறைத்தது, இருமியது, மேலும் மேலும் ஓசை எழுப்பக்கூடிய விஷயங்களைப் பேசக் கற்றுக் கொண்டது. இன்னும் இன்னும் அது வளர்ந்தது.

“ஆனால் இது பலமே இல்லாதது,” என்று மக்கள் கத்தினார்கள். “இது அழகாக இல்லை, இதற்கு அறிவில்லை, இதற்கு வீரமில்லை, இது நன்றாக உடுப்பதில்லை, இதற்கு வசீகரமில்லை, இதற்கு பேச்சாற்றல் இல்லை. இது எப்படி மேலும் மேலும் பலசாலியாகி நம்மை பாதிக்கிறது?” ஓசையின் அளவு இம்மி குறைந்தாலும் பூதம் ஏதாவது செய்தது, எது வேண்டுமானாலும் செய்யும், உடனே சப்தம் மீண்டும் அதிகரிக்கும். விழித்திருக்கும் பொழுதெல்லாம் இந்த பூதத்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதையே மக்கள் விரும்பினார்கள், தூக்கத்தில் பூதத்தைத் தவிர வேறு எந்த கனவும் இல்லை. அவ்வப்போது அவர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள், தாம் போடும் சத்தத்தில் பிறர் சேர்ந்துகொள்ளத் தவறுவது அவர்களை கோபம் கொள்ளச் செய்தது. வெறுமே யோசித்துக் கொண்டிருப்பது என்பது பூதத்தை ஏற்றுக் கொள்வதற்கு இணையானது என்று கருதப்பட்டது. கடந்த காலத்தில் இருந்த பிற பூதங்கள் போதுமான முழக்கத்தால் மூழ்கடிக்கப்பட்டிருந்தன. மேலும், இதுவோ ஓசைப்பேட்டை, ஓசை எழுப்பாமல் இருப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. உலகில் மிக உரத்த, மிகச் சிறந்த ஓசையின் தாயகம் அது, மிக அழகிய ஓசை, என்று எப்போதும் சொல்லப்பட்டது, உலக வரலாற்றில் மிகவும் மகத்தான ஓசை அதற்கேயுரியது. இவ்வாறாக ஓசைப்பேட்டையின் எல்லைகள் வரை ஓசைகள் வளர்ந்து எழுந்தன, லில்லிப்புட்டியர்களின் உலகில் கல்லிவர் வளர்ந்தது போல் புதுப்பூதமும் ராட்சத அளவுக்கு வளர்ந்தது- அவர்களிடமிருந்த கயிறுகளால் அதற்கெதிராய் எதுவும் செய்ய முடியவில்லை, அதன் வளர்ச்சிக்கும் எல்லைகள் இல்லாதது போலிருந்தது, இத்தனைக்கும் அப்போதுதான் அந்த ஆண்டின் எட்டாம் மாதம் பிறந்திருந்தது.

நன்றி – The New Inquiry

மொழிபெயர்ப்பு – கற்பனைக்கான வெளி

 
The Lights of Brindisi
 
At night, in the harbour of Brindisi,
Angels bearing lamps were flying, and fires
Revealed their faces upturned on the sea.
– O real leaves, the walls of the closed garden
Distance you always; smiling face,
Tilted, silver in the summit of the trees,
You always keep the stormy gate shut.
But I can see you tonight; signature of foam
That the boat crosses and leaves, in the night.
 
Yves Bonnefoy, Translated by Anthony Rudolf, 1966, The Times Literary Supplement
 
ப்ரின்டீசியின் விளக்குகள்
 
இரவில், ப்ரின்டீசி துறைமுகத்தில்,
தேவதைகள் அகலேந்திப் பறந்து கொண்டிருந்தன, அழல்கள்
அவற்றின் மேல்நோக்கும் முகங்களைக் காட்டின, கடலில்.
-ஓ! நிஜ இலைகளே, 
பூட்டிய தோட்டத்தின் சுவர்கள்
உங்களைத் தொலைவிலிருத்தும், எப்போதுமே;
மரங்களின் சிகர வெள்ளியாய்
தலை சாய்த்திருக்கும் நகைமுகமே,
புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே.
ஆனால் இன்றிரவு என்னால் உன்னைப் பார்க்கமுடிகிறது; 
நுரையின் முத்திரையே,
கடக்கும் படகு உன்னை விட்டும் செல்கிறது, இரவில்.
 
 
முதலில் ஒரு குறிப்பு. இது ஈஃப் பன்ஃபுவா (Yves Bonnefoy) எழுதிய பிரஞ்சு கவிதையின் நேரடி மொழிபெயர்ப்பல்ல. அந்தோணி ருடால்ப் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்தான். எனவே, பிரஞ்சு கவிதைக்கும் தமிழாக்கத்துக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இருக்கலாம்.
 
குறிப்பாக, ‘O real leaves‘ என்பதை, ‘ஓ! நிஜ இலைகளே’ என்று மொழிபெயர்த்திருக்கும் நகுல்வசன், அதைத் தொடர்ந்து ‘smiling face,’ என்பதை ‘நகைமுகமே’ என்றும், ‘signature of foam‘ என்பதை ‘நுரையின் முத்திரையே,’ என்றும் மொழிபெயர்த்திருக்கிறார். இதற்கான சமாதானம்- ஆங்கிலத்தில், ‘smiling face… you‘, என்று சொல்வதும், ‘signature of foam‘ என்பதற்கு முன் ‘But I can see you tonight;‘ என்று வந்திருப்பதும். இதில் முந்தைய சமாதானத்தை எந்த சங்கடமும் இன்றி ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் பிந்தையது, சிறிது பிரச்சினைக்குரியது: ‘நான் உன்னைப் பார்க்கிறேன்’ என்பதைத் தொடர்ந்து ‘:’ என்று வந்திருந்தால் பரவாயில்லை, அது அடுத்து வருவதைச் சுட்டுவதாய் இருக்கும். ஆனால் ‘;’ என்ற குறியல்லவா வந்திருக்கிறது? பிரெஞ்சு கவிதையுடன் ஒப்பிட்டுப் பார்த்திருந்தால் இந்தக் கேள்விகளுக்கு விடை எளிதில் கிடைத்திருக்கும். இதையெல்லாம் இன்னொருவர் தமிழில் வேறு மாதிரி மொழிபெயர்க்கலாம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இது, இந்த மொழிபெயர்ப்புக்கான நியாயம்.
 
நகுல்வசன், முடிந்த அளவு, ஆங்கிலத்தில் உள்ள காட்சிகளின் வரிசை தமிழிலும் வர வேண்டும் என்று முயற்சிப்பவர். “At night, in the harbour of Brindisi,/ Angels bearing lamps were flying, and fires/ Revealed their faces upturned on the sea.” இதை நிதானமாகப் படிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். At night, in the harbour of Brindisi– என்பது ப்ரின்டீசி துறைமுகம் இருளில் இருப்பதைக் காட்சிப்படுத்துகிறது. தலைப்பு, The Lights of Brindisi என்று இருப்பதால், இந்த இருளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெளிச்சம் தெரிகிறது என்றும் நினைத்துக் கொள்வோம். அடுத்து, ‘Angels bearing lamps were flying‘ என்ற புதிரான வரியை நாம் அப்படியே கற்பனை செய்து பார்க்கும்போது விளக்கேந்திச் செல்லும் தேவதைகள் புலப்படுகிறார்கள். ஆனால் ஒரு காற்புள்ளிக்குப் பின், ‘and fires‘ என்று அந்த வரி துண்டாவதில் நெருப்புக்கு ஒரு அழுத்தம் கிடைக்கிறது. ‘Revealed their faces upturned on the sea.’ அவர்கள் முகங்களை வெளிப்படுத்தின- அவை கடலில் மேல்நோக்கிக் கிடந்தன. இப்போது நமக்குப் புரிகிறது, நாம் வானில் பார்த்தது விளக்கொளியை, கடல் நீரில் பார்ப்பது அவற்றின் வெளிச்சத்தில் பிரதிபலிக்கப்படும் தேவதைகளின் முகங்களை. இந்தக் காட்சியின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாதபோதும் ஒன்று சொல்லலாம். எது ஆகாயத்துக்கு உரியதோ, அது கடல் நீரில் உள்ளது, ஒளியின் பிரதிபலிப்பில். 
 
இந்த வரிகள், “இரவில், ப்ரின்டீசி துறைமுகத்தில்,/ தேவதைகள் அகலேந்திப் பறந்து கொண்டிருந்தன, அழல்கள்/ அவற்றின் மேல்நோக்கும் முகங்களைக் காட்டின, கடலில்,’ என்று சரியாகவே தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். ‘அழல்கள்‘ என்ற சொல்லைக் கண்டு வேண்டுமானால் புருவம் உயர்த்தலாம். 
 
அடுத்து, ‘– O real leaves, the walls of the closed garden/ Distance you always;‘ என்பதை ‘-ஓ! நிஜ இலைகளே,/ பூட்டிய தோட்டத்தின் சுவர்கள்/ உங்களைத் தொலைவிலிருத்தும், எப்போதுமே;‘ என்றுதான் மொழிபெயர்க்க வேண்டுமா? ‘நிஜ இலைகளே,’ என்று அழைத்தால் போதுமே, ‘‘ என்று ஏன் கூவ வேண்டும்? ‘ஓ!‘ என்பதில் ஓர் அவலத் தொனியும், அதைத் தொடரும், ‘நிஜ இலைகளே,‘ என்ற அழைப்பில் ஒரு மென்சோகமும் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறேன். கற்பனைதான், அப்படிதான் இருக்கிறது என்று சொல்லவில்லை. பூட்டப்பட்ட தோட்டத்தின் சுவர்கள் இலைகளை எப்போதும் தொலைவில்தான் இருத்துகின்றன- நெருக்கமில்லாத காரணத்தால் அவை உள்ளவாறே அறியப்படுவதில்லை. இது தோட்டத்து மரங்களின் இலைகளை நோக்கிப் பேசப்படுவதில்லை. அறியப்படாத, ஆனால் உணர்வின் எல்லையில் நிழலாடும் ‘நிஜ’ இலைகளே அழைக்கப்படுகின்றன, துல்லியமாகப் பேசுவதானால் ‘invoke,’ செய்யப்படுகின்றன என்றுகூடச் சொல்லலாம். 
 
முதலில் ‘எது ஆகாயத்துக்கு உரியதோ, அது கடல் நீரில் உள்ளது, ஒளியின் பிரதிபலிப்பில்,’ என்று கண்டோம். அடுத்து, எது தொலைவில் உள்ளதோ, அதன் மெய்வடிவம் நிழலாட்டமாய் உணர்ந்து, அழைக்கப்படுகிறது என்று காண்கிறோம். சேய்மையில் இருப்பினும் நிஜத்தின் அண்மை உணரப்படாமல் இல்லை, அதன் வடிவம் பூரணமாய் வெளிப்படுவதில்லை, அவ்வளவுதான். 
 
smiling face,/ Tilted, silver in the summit of the trees,/ You always keep the stormy gate shut‘ – எத்தனை அழகிய வரிகள். நிலவைப் பேசுகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் ‘stormy gate‘? இன்னதுதான் என்று தீர்மானமாகச் சொல்லவே முடியாது என்று தோன்றுகிறது. மூடப்பட்ட கதவுகளுக்குப்பின் எப்போதும் தொலைவில் இருக்கும் நிஜ இலைகள், என்பதைத் தொடர்ந்து, மரங்களின் உச்சியில் சிரிக்கும் நிலவு புயற்கதவை எப்போதும் பூட்டி வைத்திருக்கிறது என்பதில் ஏதோ ஒரு ஆசுவாசம் தொனிப்பது போல்தான் தோன்றுகிறது. “மரங்களின் சிகர வெள்ளியாய்/ தலை சாய்த்திருக்கும் நகைமுகமே,/ புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே,” என்ற தமிழாக்கம் சிக்கலற்றது போல்தான் தெரிகிறது. ஆனால், ‘You always keep the stormy gate shut‘ என்பதை ‘நீ எப்போதும் புயற்கதவைப் பூட்டி வைத்திருக்கிறாய்” என்பதற்கும் “நீ எப்போதும் புயற்கதவை அடைத்து விடுகிறாய்,” என்பதற்கும் ஒரு நுண்ணிய வேறுபாடு இருக்கிறது. புயற்கதவை பூட்டி வைத்திருக்கிறாய் என்பதில் தெரியும் ஆசுவாசம், புயற்கதவை அடைத்து விடுகிறாய் என்பதில் இல்லை – உடைத்துப் பீறிட்டெழுக் காத்திருக்கும் உணர்வுகளின் அழுத்தம் தெரிகிறது என்றே சொல்லலாம். இந்த இரு வாசிப்புகளும் கவிதையின் பொருளையே மாற்றிவிடக் கூடியவை. இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது மொழிபெயர்ப்பாளனின் முடிவு. இங்குதான் மொழிபெயர்ப்பாளனின் கற்பனையும் படைப்பூக்கமும் செயல்படுகின்றன. 
 
ஏனெனில், “But I can see you tonight; signature of foam/ That the boat crosses and leaves, in the night,” இன்னும் பல தேர்வுகளுக்கு இடம் கொடுப்பது. ‘But I can see you tonight;‘, என்பதை, ‘நான் இந்த இரவில் உன்னைக் காண்கிறேன்‘ என்ற இடைநிறுத்தத்தோடு விட்டுவிடலாம். யாரை என்ற கேள்விக்குச் செல்லாமல், கடல் நுரைத்துக் கொண்டிருக்கிறது, அதைக் கடந்து செல்லும் படகு, அது விட்டுச் செல்லும் நுரைகளாய் தன் கையொப்பத்தையும் இட்டுச் செல்கிறது. இந்த நுரைகளில்தான், நான் உன்னைக் காண்கிறேன் என்று சொல்கிறார் பன்ஃபுவா என்று புரிந்து கொள்ளலாம். அப்படி யாரைத்தான் காண்கிறார் என்றால், முதலில் பார்த்த கடலில் தெரியும் தேவதை பிம்பங்களுக்குப் போகலாம். அது போன்ற ஏதோ ஒன்றைக் காண்கிறார்.  
 
ஆனால் நகுல்வசன் தமிழாக்கம், “புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே,” என்பதைத் தொடர்ந்து, “நுரையின் முத்திரையே,/ கடக்கும் படகு உன்னை விட்டும் செல்கிறது, இரவில்,” என்று இரட்டிக்கிறார். இலைகளையும், நிலவையும் அழைத்துப் பேசியதுபோல், கடல் நுரையையும் அழைக்கிறார். கடக்கும் படகு உன்னையும் விட்டுச் செல்கிறது.
 
கவிதையின் பொருள் தர்க்கத்தின் பாற்பட்டதல்ல. சொல்லப்போனால் எதுவொன்று சொற்களின் நேரடிப் பொருளாகிறதோ அது கவித்துவத்துக்கு எதிரானது. கவிதை, சுட்டல்களைக் கொண்டு சொல்லின் பொருளை அதன் அகராதிக் குறிப்புகளுக்கு அப்பால், சொற்களின் பொருளை அவற்றின் கூட்டுத்தொகைக்கு அப்பால் கொண்டு செல்கிறது. அவ்வாறே கவிதை ஒருமையடைகிறது. இந்தக் கவிதையில் சொற்கள் அடுத்தடுத்த அறிவிப்புகளால் பொருள் பெறுவதில்லை, ஒன்றன்மீது ஒன்று அடுக்கப்பட்ட பிம்பங்களாய் பொருள் கொள்கிறது. அதன் பொருள் கற்பனையால் மட்டுமே உணரப்படக்கூடியது. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் தொனிக்கலாம்- ஆனால் கவிதையை வாசிப்பவனானாலும் சரி, மொழிபெயர்ப்பவனானாலும் சரி, அவனது திறன்களில் மிக முதன்மையானது கற்பனையே. அதைக் குறைத்து மதிப்பிடுவது மொழியின் இயல்பை புரிந்து கொள்ளத் தவறுவதாகும்.
 
இந்தக் கவிதையைப் பேசும்போது நகுல்வசன் எழுப்பிய கேள்வி- இந்தப் பதிவுக்குப் பொருத்தமான முடிவாக இருக்குமென்று நினைக்கிறேன்: 
“அல்லது, இது அன்றாட பிரத்யட்ச உண்மையைக் காட்டிலும் செறிவார்ந்த ஒரு ஸ்டீவென்ஸிய ‘உன்னதத்தை’ நோக்கிய தேடலுக்கு இணையானதாய் இருக்கலாமல்லவா? “நாம் கட்டியெழுப்புவன, வளர்ப்பன, செய்வன, இவை எல்லாம் நாம் சுட்டுவன, நம்புவன அல்லது வேட்பனவுடன் ஒப்பிட்டால் மிகச் சிறியவை,” என்று வாலஸ் ஸ்டீவன்ஸ் ஒரு கடிதத்தில் எழுதினார். “தட்பவெப்பம் பழகிப் போகிறது/ சூழ்நிலமும் மற்றவையும்;/ ஆன்மாவை சன்னதம் கொள்வதற்காகவே/ உன்னதம் கீழிறங்கி வருகிறது,/ ஆன்மாவும் வெட்டவெளியும், / வெறுமையான ஆன்மா/ சூன்யமான வெளியில்.” மகத்தான மனிதர்களின் பீடங்களில் பறவைகள் மலம் கழிக்குமானால், உன்னதமென்பது வேறெங்கிருந்தோதான் வந்தாக வேண்டும். உள்ளத்தின் எல்லையில் தன் கரம் நோக்கும் கற்பனைக்கே அது சாத்தியமல்லவா? நிஜமான இலையும் நிஜமான நிலவும்கூடப் போதாது, நுரைத்தெழும் முத்திரைகளையும் விட்டுச் சென்றாக வேண்டும், புலப்படும் ஒளியைப் பிரிந்தாக வேண்டும், பிம்பத்தின் மெய்ம்மை மட்டுமே கைப்பற்றத்தக்கது”.