– உரையாடல்: எழுத்தாளர் பெருமாள்முருகன்–

தமிழிலக்கியம் பயின்ற அரசுக்கல்லூரி விரிவுரையாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பெருமாள் முருகன் தமிழிலக்கியத்தின் முக்கியமான அடையாளமாக விளங்கிவருபவர். மக்கள் கலாச்சார கழகம் வழியே மார்க்சிய ஈடுபாட்டு கொண்டவர், இலக்கிய பங்களிப்பாக ஏறுவெயில், திருச்செங்கோடு, கூளமாதாரி, மாதொருபாகன், பீக்கதைகள், நீர் மிதக்கும் கண்கள், நிழல்முற்றத்து நினைவுகள் என்று பெருமளவு கொங்குநாட்டு வட்டாரத்து வரலாற்றை ஏழு நாவல்கள், நான்கு சிறுகதை தொகுப்புகள், நான்கு கவிதை தொகுப்புகள், எட்டு கட்டுரை நூல்கள் மற்றூம் மொழிபெயர்ப்புகள், தொகுப்புகள் என்று மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார். சூழலை மீறி செயல்படும் உத்வேகத்துடன், திசைதெரியாத பெருங்குகைக்குள் வாசிப்பு என்னும் விளக்கோடு தொடர்ந்து பயணப்படுவதாக சொல்லும் பெருமாள் முருகனின் பயணத்தின் அடுத்த அடையாளமாக இரு புதிய நாவல்களை – ஆலவாயன் மற்றும் அர்த்தநாரி – 2015 புத்தக வெளியீட்டு விழாவிற்கு காலச்சுவடு கொண்டு வருகிறது. அதையொட்டி அவரோடு பதாகை நடத்திய மின்அஞ்சல் உரையாடல்.
பதாகை: நிலத்தை துறந்து மொழியைப் பற்றிக் கொண்ட தலைமுறையின் முதல் பதிவாக ‘ஏறுவெயில்’ நாவலை உருவாக்கினீர்கள். ஆறு நாவல்களுக்கு பிறகு ஆலவாயனையும் அர்த்தநாரியையும் உருவாக்கும்போதும் அதே தவிப்பை உணர்கிறீர்களா? ஒருவிதமான நிறைவை நோக்கி நகர்வதாக நினைக்கிறீர்களா?
பெருமாள்முருகன்: ஏறுவெயிலை எழுதியபோது தயக்கமும் பயமும் கொண்டிருந்தேன். நாவல் நமக்கு வருமா, எழுத்துப் பயிற்சி நாவல் எழுதப் போதுமா, மாபெரும் நாவல்கள் இருக்கும் மொழியில் பிரசுரத்துக்குத் தகுதியான அளவிலேனும் எழுத இயலுமா என்றெல்லாம் தயக்கம். திசைவழி தெரியாத பெருங்குகை ஒன்றுக்குள் புகுந்து செல்லும் பயமும் இருந்தது. வாசிப்பு என்னும் விளக்கின் துணை ஒன்றைக்கொண்டே உள்ளே சென்றேன். எதிலாவது மோதும்போது பயணத்தை நிறுத்துவேன். சோர்வும் சலிப்பும் தோன்றிப் பின்வாங்கத் தூண்டும். துணிவைப் பெற்று மேற்செல்லச் சில நாட்கள் ஆகும். எங்கிருந்து வந்தது என்று தெரியாத ஒருவகையான அசட்டுத் துணிச்சலே என்னைச் செலுத்தியது. உண்மையில் அதை எழுதிய காலம் தவிப்பு மிகுந்த காலம்தான். இப்போது அத்தகைய தயக்கமும் பயமும் இல்லை. ஆனால் அசட்டுத் துணிச்சலே இப்போதும் செயல்படுத்துகிறது. இது கொஞ்ச தூரம் நடந்து வந்துவிட்டதால் ஏற்பட்டிருக்கும் அசட்டுத் துணிச்சல் என்று புரிகிறது. நிறைவை நோக்கிய நகர்வு என்று சொல்ல முடியுமா? அப்படி ஒரு நிறைவைக் கண்டடைவது சாத்தியமா? இன்னும் எவ்வளவோ பயணப்படும் பேராசை இருக்கிறது. நிறைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்றே நினைக்கிறேன். (more…)
Like this:
Like Loading...