உள்ளாடைகள் எப்போதும்
அவமானத்தின்
குறியீடுகளாகவே மட்டும்
பழக்கப்பட்ட அவளுக்கு
முப்பது தாண்டியும்
உள்ளூரில் எந்த முடவனும்
கரம் பிடிக்க தயாரில்லை யென்றதும்
சம்பிரதாயங்களும், நிர்பந்தங்களும்
கழுத்து நீட்டச் சொல்ல
ஓசைகள் பெருத்த நகரத்து
அழுக்கனின் அந்தப்புரத்திற்கு
அடிமையாக வேண்டியாயிற்று
கண்ணீரால் லௌகீகக் காயங்களை
கழுவிக்கொள்ளும் நகரத்து
மனை வாழ்க்கையின்
நீட்சியில்
அவள் பழகிக்கொண்டதும்
மாற்றிக்கொண்டதும்
கொங்ரீட் காடுகளில் கசியும்
வெயிலுக்கு ஏதுவாக
கட்டப்பட்ட கொடியில் எந்த வித
சங்கோஜமுமின்றி துவைத்த
உள்ளாடைகளைக் காயப்போட
மட்டுமே.