மாயக்கூத்தன்

நூறு இந்திய டிண்டர் கதைகள்

மாயக்கூத்தன்

cny3rgyvmaaigrg

ஒரு நாள் அலுவலகத்தில் உறவுகள், குழந்தைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, ‘ரெண்டு பேரு கல்யாணம் பண்ணிக்கிட்டு பல வருஷம் சேர்ந்து வாழற மாதிரி வொண்டர்புல்லான ஒரு விஷயத்தை நான் பார்த்ததில்லை’னு சொன்னார். அவர் அடுத்த வருஷத்துக்கு அடுத்த வருஷம் ரிட்டயர் ஆகப்போறார். அவர் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒரு இருபது இருபத்து ஐந்து வருஷம் ஆகியிருக்கலாம். மணவாழ்க்கை மட்டுமல்ல, எந்த ஒரு உறவும் ஒரு அற்புதம் மாதிரி தான்.

சின்ன வயதில், வான சாஸ்திரம் ஆச்சரியமாக இருந்தது. ராக்கெட் போவது ஆச்சரியமாக இருந்தது. இப்போது கூட, உடன் வேலை பார்க்கும் ஒருத்தன் எப்போதும் எலான் மஸ்கினுடைய திட்டங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பான். எனக்கு சுத்தமாக அதில் விருப்பமில்லை. நான் இப்போது பார்க்கும் வேலை சிறு வயதில் எனக்கு அத்தனை ஆச்சரியங்களையும் அளித்த ஒன்று. ஐந்து வருடங்களுக்கு மேலான பணியில், ஒரு பிரச்சனை அதற்கான தீர்வு என்றே போய்க்கொண்டிருக்கிறது. பிரச்சனை இருக்கிறது. தீர்வு எங்காவது இருக்கும். அவ்வளவு தான். நம்மை திருப்திப்படுத்தம் ஒரு தீர்வு, அடுத்தவரை திருப்திப்படுத்தும் தீர்வு. அவ்வளவு தான் அதற்கு மேல் வேலையில் என்ன இருக்கிறது? இது மனச்சோர்வு இல்லை. தீர்வு கண்டிப்பாக இருக்கப் போகிறது என்கிற தைரியம். மிரட்சி இல்லாத நிலையில் ஒன்றும் பிரச்சனையில்லை. அன்றைய நாள் அன்றைக்குள்ளே தீர்ந்துவிடுகிறது. அஷ்டே!

ஆனால், இப்போது மனிதர்கள் மிரட்சியைத் தருகிறார்கள். போன வாரம் அப்பாவின் தோளில் கைவைத்து, ‘இன்னிக்கு என்ன விசேஷம்?’னு கேட்டா, ‘தோளையெல்லாம் தொடற; ஏதோ சண்டைக்கு அடி போடற மாதிரி இருக்கு?’ என்றார். அவரைச் சொல்லி குத்தமில்லை. நாங்க எப்பவும் அப்படித்தான். ஒவ்வொரு முறை இங்கே வரும் போதும், இனி இந்தவாட்டி சண்டை போடக் கூடாதுன்னு ஒரு வைராக்கியம் வரும். ஆனா, அவர் வந்து பத்து நிமிஷத்துல டாம் அண்ட் ஜெர்ரி ஆரம்பிச்சுடும். அவருக்கு எனக்கும் மட்டுமில்லை, எனக்கும் பிறருக்கும் கூட, அவருக்கும் பிறருக்கும் கூட, பிறருக்கும் பிறருக்கும் கூட இது தான் நிலைமை. அப்பா சொல்வார், நாமெல்லாம் நவக்கிரக மூர்த்திகள்.

என்னுடைய பெரிய லட்சியம் இந்த வாழ்க்கையில் தொடர்ந்து சில நிமிடங்கள் பேசிக் கொள்ள சில உறவுகளை (ஒரு அஞ்சு பேர்?) உருவாக்கிக் கொள்வதாகத்தான் இருக்கும். அந்ததந்த நாளைப்பொறுத்து சில சமயம் ரொம்பவே சிக்கலாகவும் மறு சமயம் எளிதாகவும் தோணும்.

இந்துவின் இந்த நூறு இந்தியத் டிண்டர் கதைகள் முயற்சி வாசிப்பவர்களுக்கு நல்ல இலக்கியங்களை விடவும் பல திறப்புகளை தரக்கூடும். கதைசொல்லிகளைப் பற்றிய நம்முடைய முன் முடிவுகளை அவர்கள் மீது ஏற்றும் எண்ணத்தைத் தாண்டி இவற்றை வாசிக்கும் போது, ஒரு நல்லுறவுக்கான மனிதர்களின் தேடல் நமக்குப் புலப்படக்கூடும். வகை வகையான மனிதர்கள், இலக்கணப் பிழைகளுடன் எழுதுபவர்களை ஒதுக்கும் இரண்டு மெட்ராஸ் காரர்களைத் தவிர, மற்ற எல்லோரையும் என்னால் எங்காவது பொறுத்திப் பார்க்க முடிகிறது.

இந்தக் கதைகள் பற்றி முதல் பத்தியில் குறிப்பிட்ட அலுவலக நண்பரிடம் சொன்னால், அவர் இவர்களை லட்சியம் இல்லாதவர்கள், கவலை அற்றவர்கள் என்று சொல்லக்கூடும். அதான் சொல்கிறேன் நம்முடைய முன் முடிவுகளை விட்டுவிட்டு வாசித்தால் மட்டுமே இந்த நூறு கதைகளையும் அதன் மனிதர்களையும் நாம் புரிந்து கொள்ள முடியும். எல்லோருக்கும் ஒரு அர்த்தமுள்ள, ஒவ்வொரு நொடியும் புதுமையாய் புத்துணர்ச்சி தரும் ஒரு உறவு வேண்டியிருக்கிறது. இவர்கள் அதற்கான முயற்சிகளை எடுக்கும் போது நாம் ஏன் மிரள்கிறோம்?

ஆண்-பெண் உறவுகளை எடுத்துக் கொண்டால், நாமும் நம்முடைய சமூகமும் நம்முடைய சட்டங்களும் இத்தனை இறுக்கமாக இருக்க வேண்டியதில்லை. ஒரு நல்ல புத்தகம் ஒருவனுக்கு எத்தனை அவசியமோ, அதைவிட நூறு மடங்கு ஒரு நல்ல உறவு அவசியம்.

இந்த நூறு கதைகளுடன் வரும் ஓவியங்களைப் பற்றி ஓவியம் பயின்றவர்கள் தான் சிறப்பாக எழுதமுடியும் என்பது என் நினைப்பு. இந்த ஓவியங்களைவிடவும் இந்தக் கதைகள் எனக்கு மனிதர்களைப் பற்றி பல்லாயிரம் அர்த்தங்களைக் கொண்டு சேர்க்கும்.

அன்றாடத்தின் வினோதங்கள் – மாயக்கூத்தனின் ‘பாராமுகம்’

பீட்டர் பொங்கல்

செகாவ் தன் சகோதரருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ஒரு நல்ல சிறுகதையின் ஆறு இயல்புககளாய் இவற்றைச் சொல்கிறார்:

1. அரசியல், சமூகம், பொருளாதாரம் குறித்து நீண்ட விவரணைகள் இல்லாமை

2. முழுமையான புறவயப்பட்ட பார்வை

3. மனிதர்கள் மற்றும் பொருட்களின் மெய்ம்மைச் சித்தரிப்பு

4. மிகக் கச்சிதமான வடிவம்

5. துணிச்சலும் புதுமையும்: ஸ்டீரியோடைப்புகளைத் தவிர்ப்பது

6. கருணை

செகாவ் கதைகள் குறித்த நீண்ட ஒரு விவாதம் இங்கிருக்கிறது. இதில் மேற்கண்டவிஷயங்கள் குறிப்பிடப்படுகின்றன. தன் கதைகளில் அன்றாட வாழ்வை விவரிப்பதில் தீர்மானமாயிருந்தார் செகாவ் என்று எழுதும் கட்டுரையாளர் கிறிஸ்டினா வார்ட்-நிவென், செகாவ் உண்மையாகவும் புதுமையாகவும் எழுத விரும்பியதால் அவரது புனைவில் உள்ள அன்றாடக் காட்சிகள் வினோதத்தன்மை கொண்டிருக்கின்றன என்கிறார்- “நமக்குப் பழக்கப்பட்டசூழ்நிலத்தில் வினோதத்தன்மையை அனுமதிப்பதால், நாம் வாசகர்களை ஆச்சரியப்படுத்தி, அவர்கள் சற்று தாமதித்து, கவனம் செலுத்தச் செய்யலாம் – அப்போது ஒருவேளை அவர்கள் தமக்குப் பழக்கப்பட்ட ஒரு மானுட உண்மையை புதிய வெளிச்சத்தில் கண்டு கொள்ளக்கூடும்“.

oOo
மாயக்கூத்தனின் ‘பாராமுகம்‘ நானூற்றுக்கும் குறைவான சொற்கள் கொண்ட குறுங்கதை. அதன் மையம், கதையின் மத்தியில் வருகிறது – “போன வாரம், தெருவில் கசிந்த நீரை உறிஞ்ச, அப்பனும் மகனும் மண்ணைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். மகாதேவன் இவர்களை ஒரு சிரிப்போடு கடந்து சென்றார். கொஞ்சமும் இளப்பம் இல்லாத சிரிப்பு. கருணையும் அன்பும் நிறைந்த புன்னகை. சீனு ஆச்சரியப்பட்டான்; இவன் உதட்டை விரிப்பதற்குள் அவர் போய்விட்டார்.

சீனிவாசன் கட்டிய வீட்டிலிருந்து கழிவு நீர் வெளியேற வழியில்லை- இவர்கள் இருந்த குறுக்குத் தெரு அரசு வரைபடத்தில் விட்டுப் போயிருந்ததால் இவர்களுக்குச் சாக்கடை இணைப்பு கிடைக்கவில்லை. கழிவு நீர் வெளியேறினால் மகாதேவன்கள் சண்டைக்கு வருகிறார்கள் – “ஊரில் இதுவரை கொசுவே இல்லாதது போலவும், இனி கொசு வந்து தன்னைக் கொத்திக் கொண்டு போய்விடும் என்பது போலவும் கத்தினார்“. அக்கம் பக்கத்தில் எல்லாரும் பகை. மகாதேவன் வீட்டு அம்மா சொன்னது போல் வீட்டுக்குள்ளேயே கழிவு நீர் சுற்றி வந்து ஒரு குழிக்குள் வடியும் வகையில் ஏற்பாடு செய்கிறார்கள், ஆனாலும் அவ்வப்போது குழி நிறைந்து நீர் தெருவில் கசிகிறது.

அப்படியான ஒரு சமயம்தான் மகாதேவன் இவர்களைப் பார்த்து நட்பாக புன்னகைக்கிறார்- நடக்காத ஒன்று நடக்கும்போது பேச்சு வழக்கில் சொல்வது போல், மழை பெய்வது மட்டுமல்லமட்டுமல்ல, உலகமே அழிந்து விடுகிறது. அப்போது பிடித்துக் கொள்ளும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது, வீட்டுக்குள் வெள்ளம் வந்து விடும் போலிருக்கிறது. சீனிவாசன்,

மெதுவாக ஒரு படியிறங்கி, கால் கட்டை விரலைத் தண்ணீரில் ஆழ்த்தினான். குளிர்ந்தது.

“காலை எடுத்துவிட்டான். நீர் பட்ட இடம் என்னவோ போல் இருந்தது. குனிந்து பார்த்தான்; கட்டைவிரலைக் காணவில்லை. தண்ணீரில் கரைந்துவிட்டது. வலியே இல்லை.”

இதற்கப்புறம் சீனிவாசன் செய்வது இந்த உலக வாழ்க்கையின் உக்கிரத்தை மிக எளிமையாக, ஒரு சொல் இல்லாமல் உணர்த்துகிறது. கதை கச்சிதமான முடிவுக்கு வருகிறது.

ஆனால் அதற்கப்புறம் ‘யுகசந்தி‘ என்று ஒரு வார்த்தை, அதன் உறுத்தலுடன் நெருடுகிறது. அது இல்லாமல் கதையின் உலகம் முடிவுக்கு வருவதில்லை என்பதால் தவிர்க்க முடியாத வார்த்தைதான். ஆனால், அது நம்மைக் கதையிலிருந்து வெளியே கொண்டு வந்துவிடுகிறது. இது சரியா தவறா என்று எப்படிச் சொல்ல முடியும்?

பாராமுகம், மாயக்கூத்தன்.

வண்ணக்கழுத்து 17உ: லாமாவின் மெய்யறிவு

மாயக்கூத்தன்

gay_neck_the_story_of_a_pigeon

இங்கு கோண்ட் வேறொரு தந்திரம் செய்தார். எதிர்த்திசையில், வெவ்வேறு மரங்களுக்கு இடையே வளைந்து நெளிந்து ஓடினார். காற்றினால் கொண்டு சேர்க்கப்படும் தன்னுடைய வாடை, அந்த எருதை அடையாமல் இருக்கவே அவர் அப்படிச் செய்தார். குழப்பமடைந்த போதும் அந்த எருது திரும்பி கோண்டைத் தொடர்ந்தது. மீண்டும் எங்கள் மரத்திற்கு கீழே கிடந்த கோண்டின் துணி மூட்டையைக் கண்டது. எருதை அது இன்னும் வெறியடையச் செய்தது. முகர்ந்து பார்த்துவிட்டு, தன் கொம்புகளால் அவற்றைக் கலைத்தது.

இப்போது கோண்ட் காற்றின் கீழ்த்திசையில் இருந்தார். என் பார்வைக்கு அவர் தெரியாத போதும், மரங்கள் ஒருவேளை அந்த எருதினை அவர் பார்வையிலிருந்து மறைத்திருந்தாலும் கூட அதன் வாடையைக் கொண்டே அவர் எருதின் இடத்தைச் சொல்லிவிடுவார் என்று நான் ஊகித்தேன். கோண்டின் துணிகளுக்கு ஊடே தன் கொம்புகளைச் செலுத்திக் கொண்டே அந்த எருது மீண்டும் முக்காரம் போட்டது. அது சுற்றியிருந்த மரங்களில் பயங்கரமாக அமளி துமளிப்பட்டது. எங்கிருந்தோ குரங்குக் கூட்டங்கள் கிளைவிட்டுக் கிளை தாவி ஓடி வந்தன. அணில்கள் சுண்டெலிகளைப்போலே ஓடி மரத்திலிருந்து காட்டின் தரையில் இறங்கி, பின் மீண்டும் மரத்திற்கே சென்றன. மேலே பறந்து கொண்டிருந்த ஜேக்கள், நாரைகள், கிளிகள் போன்ற பறவைக்கூட்டங்கள், காக்கைகள், ஆந்தைகள் மற்றும் பருந்துகளோடு க்றீச்சிட்டன.

திடீரென்று அந்த எருது மீண்டும் தாக்க விரைந்தது. கோண்ட் அமைதியாக அதன் முன்னால் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். அமைதியைப் போலே அமைதியாக இருக்கும் ஒரு மனிதனை நான் பார்த்தேன் என்றால் அது கோண்ட் தான். அந்த எருதின் பின்னங்கால்கள் துடித்து வாட்களைப் போலே பறந்தன. பிறகு என்னவோ நடந்தது. அது பின்னங்கால்களை ஊன்றி காற்றில் மேலே எழுந்தது. அதன் கொம்பில் இறுக்கப்பட்டு எங்கள் மரத்தில் கட்டப்பட்டிருந்த சுருக்குக் கயிற்றால் தான் அது மேலெழுந்தது என்பதில் சந்தேகமே இல்லை. தரையிலிருந்து பல அடி உயரம் எழுந்து, பின் விழுந்தது. அந்த நொடியில், ஒரு சிறுபிள்ளையால் உடைக்கப்பட்ட மரக்குச்சி போலே, அதன் கொம்பு முறிந்து காற்றில் பறந்தது. அந்த முறிவு கட்டுப்படுத்த முடியாத வேகத்தை உண்டு பண்ணி, எருமையை ஒரு பக்கமாக தரையில் எறிந்தது. படபடவென்று கால்கள் காற்றை மிதிக்க, அது கிட்டத்தட்ட உருண்டது. அந்த நொடியில், சிக்கிமுக்கிக் கல்லிலிருந்து வரும் தீப்பொறியைப் போலே கோண்ட் முன்னால் குதித்தார். அவரைப் பார்த்தவுடன், அந்த எருமை தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு, தன் பிட்டத்தில் உட்கார்ந்து, பெருமூச்செறிந்தது.

எழுந்து நிற்பதில் கிட்டத்தட்ட வெற்றியடைந்துவிட்டது. ஆனால், தன்னுடைய பட்டக்கத்தியால் கோண்ட் அதன் தோளுக்குப் பக்கத்தில் தாக்கினார். அதன் கூர்மையான முனை ஆழமாக வெட்டியது. தன்னுடைய மொத்த எடையையும் கொண்டு அதை அழுத்தினார் கோண்ட். எரிமலை வெடிப்பதைப் போலே ஒரு முக்காரம் காட்டை உலுக்கியதோடு, திரவ மாணிக்க ஊற்று பீச்சியடித்தது. அதற்கு மேலும் காணச் சகியாது நான் என் கண்களை மூடிக் கொண்டேன்.

சில நிமிடங்களில் என் இடத்திலிருந்து நான் கீழிறங்கி வர, அந்த எருமை ரத்தப்போக்கால் செத்துப்போய் விட்டதைக் கண்டேன். ஆழமான ரத்தக் குளத்தில் அது கிடந்தது. அதற்குப் பக்கத்தில் தரையில் உட்கார்ந்து கோண்ட், தன் செயலால் தன் மேல் படிந்திருந்த கறையை துடைத்துக் கொண்டிருந்தார். அவர் தனித்து இருப்பதையே இப்போது விரும்புவார் என்பதை நான் அறிவேன். ஆக, நான் முன்பிருந்த மரத்திற்குச் சென்று வண்ணக்கழுத்தை அழைத்தேன். ஆனால், அவனிடமிருந்து பதிலேதும் இல்லை. அந்த மரத்தில் உச்சிக் கிளை வரைக்கும் ஏறிப் பார்த்துவிட்டேன். ஆனால் அவன் அங்கு இல்லை.

நான் கீழே இறங்கி வந்தபோது, கோண்ட் தன்னை சுத்தம் செய்து முடித்திருந்தார். அவர் வானத்தை நோக்கி கை காட்டினார். இயற்கையின் தோட்டிகளை நாங்கள் கண்டோம். பருந்துகள் கீழேயும் அவற்றுக்கு வெகு மேலே பிணந்தின்னிக் கழுகுகளும் பறந்தன. யாரோ இறந்துவிட்டார்கள் என்றும் தாங்கள் காட்டைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று அவை அதற்குள் தெரிந்து கொண்டிருந்தன.

”நமது புறாவை மடாலயத்தில் தேடுவோம். சந்தேகமே இல்லை, அவன் மற்ற பறவைகளோடு பறந்து போய்விட்டான்” என்றார் கோண்ட். ஆனால் வீடு நோக்கி கிளம்புவதற்கு முன், இறந்த எருமையை அளக்கச் சென்றேன். அதை நோக்கி ஒவ்வொரு திசையிலிருந்தும் ஈக்கள் படையெடுத்துக் கொண்டிருந்தன. அந்த எருமை பத்தரை அடி நீளம் இருந்தது. அதன் முன்னங்கால்கள் மூன்று அடிக்கும் மேலே இருந்தன.

மடாலயத்திற்கு திரும்பிச் செல்லும் எங்கள் பயணம் மெளனமாகவே இருந்தது. பாதிக்கப்பட்ட அந்த கிராமத்திற்குச் சென்று, அதன் தலைவரிடம் அவர்களின் எதிரி இறந்துவிட்டது என்பதை நண்பகல் பொழுதில் சொன்ன போது மட்டுமே மெளனம் கலைந்தது. முன்தின மாலையில், சூரிய அஸ்தனமனத்திற்கு முன் பிரார்த்தனைக்காக கோவிலுக்குச் சென்ற அவரது வயதான தாயாரை அந்த எருமை கொன்றிருந்ததால் அவர் துக்கத்தில் இருந்த போதும், இதைக் கேட்ட போது அவர் நிம்மதியடைந்தார்.

நாங்கள் மிகவும் பசியில் இருந்தோம், வேகமாக நடந்தோம். சீக்கிரமே மடாலயத்தை அடைந்துவிட்டோம். உடனே எனது புறாவைப் பற்றி விசாரித்தேன். வண்ணக்கழுத்து அங்கு இல்லை. மிகவும் துக்கமாக இருந்தது. அவருடைய அறையில் பேசிக் கொண்டிருந்த போது அந்த வயதான துறவி “கோண்ட், உங்களைப் போலவே அவனும் பத்திரமாக இருக்கிறான்” என்றார். பல நிமிட மெளனத்திற்குப் பிறகு, “எது உனது மன நிம்மதியைக் குலைக்கிறது?” என்று கேட்டார்.

அந்த வயதான வேடுவர் தான் சொல்லப்போவதை அமைதியாக யோசித்தார். “ஒன்றுமில்லை குருவே. எதைக் கொல்வதையும் நான் வெறுக்கிறேன். நான் அந்த எருதை உயிருடன் பிடிக்கவே விரும்பினேன். ஆனால் ஐயோ! நான் அதை அழிக்க வேண்டி வந்துவிட்டது. அதன் கொம்பு உடைந்த போது, எனக்கும் அதற்கும் இடையில் எதுவுமே இல்லை. ஒரு முக்கிய நரம்பில் எனது கத்தியைச் செருக வேண்டியதாகிவிட்டது. அவனை உயிருடன் பிடித்திருந்தால் ஒரு மிருகக்காட்சி சாலைக்காவது விற்றிருக்கலாமே என்று நான் வருந்துகிறேன்.”

”ஓ! வணிகவியலின் ஆன்மாவே!” என்று நான் கூவினேன். “அந்த எருது இறந்தது பற்றி நான் வருந்தவில்லை. மிச்ச வாழ்க்கை முழுவதும் மிருக்க்காட்சி சாலையில் ஒரு கூண்டில் இருப்பதைவிட செத்துப்போவதே நல்லது. சவ வாழ்க்கை வாழ்வதற்கு சாவே மேல்.”

“நீ மட்டும் சுருக்குக் கயிற்றை இரண்டு கொம்புகளிலும் போட்டிருந்தாயானால்” என்று கோண்ட் ஆரம்பித்தார்.

“நீங்கள் இரண்டு பேரும் வண்ணக்கழுத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். செத்துப் போன ஒன்றைப் பற்றியல்ல” என்று அந்த லாமா சத்தம் போட்டார்.

”உண்மை தான். நாளை அவனைத் தேடுவோம்” என்றார் கோண்ட்.

அதற்கு லாமா பதில் சொன்னார் “இல்லை. டெண்டாமுக்குத் திரும்பு என் மகனே. உங்கள் குடும்பம் உங்களைப் பற்றிய கவலையில் இருக்கிறது. அவர்களுடைய எண்ணங்கள் எனக்குக் கேட்கின்றன.”

அடுத்த நாள் நாங்கள் ஒரு ஜோடி குதிரையில் டெண்டாமுக்குக் கிளம்பினோம். விரைவான பயணத்தாலும், வெவ்வேறு இடங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குதிரைகளை மாற்றிக் கொண்டதாலும் மூன்றே நாட்களில் டெண்டாமை அடைந்துவிட்டோம். எங்கள் வீட்டை நோக்கி மேலே போகும் போது, மிகுந்த உற்சாகத்தில் இருந்த எங்கள் வீட்டு வேலைக்காரரை எதிர் கொண்டோம். மூன்று நாட்களுக்கு முன்னரே வண்ணக்கழுத்து வந்துவிட்டதாக அவர் சொன்னார். ஆனால் அவனுடன் நாங்கள் இருவரும் வரவில்லை என்பதால் என் பெற்றோர் கலவரப்படத் துவங்கி, எங்களை உயிருடனோ பிணமாகவோ தேடிக் கண்டெடுக்க குழுக்களை அனுப்பி வைத்திருந்தார்கள்.

கோண்டும் நானும் என் வீடு நோக்கி கிட்டத்தட்ட ஓடினோம். அடுத்த பத்து நிமிடத்தில் என் அம்மாவின் கைகள் என்னைச் சுற்றியிருந்தன. அவனுடைய கால்கள் என் தலையில் இருக்க, வண்ணக்கழுத்து தன்னை சமநிலையில் இருத்திக்கொள்ள தன் இறக்கைகளை அடித்துக் கொண்டிருந்தான்.

வண்ணக்கழுத்து ஒரு வழியாக பறக்கத் துவங்கிவிட்டான் என்பதைப் கேட்டபோது நான் அடைந்த உற்சாகத்தைச் சொல்லத் தொடங்கினால் நிறுத்த முடியாது. மடாலயத்திலிருந்து டெண்டாமில் எங்கள் வீடுவரைக்கும் அவன் பறந்து வந்திருக்கிறான். தடுமாறவில்லை,. தோற்றுப் போகவும் இல்லை. “ஓ! பறத்தலின் ஆன்மாவே, புறக்களுக்கு மத்தியில் ஒரு முத்தே” என்று நானும் கோண்டும் விரைந்து நடக்கும் போது வியந்து கொண்டேன்.

இப்படி முடிந்தது சிங்காலிலாவிற்கான எங்கள் யாத்திரை. வண்ணக்கழுத்தையும் கோண்டையும் போர்க்களத்தில் பீடித்திருந்த நோய்களான பயத்தையும் வெறுப்பையும் இந்த யாத்திரை குணப்படுத்திவிட்டது. வாழ்வின் மிகக் கொடிய இந்த நோய்மைகளிலிருந்து ஒரு ஆன்மாவையேனும் மீட்குமெனில் அதற்கான எந்தவொரு உழைப்பும் வீண் இல்லை.

இந்தக் கதையின் இறுதியில் ஒரு உபதேசத்தைச் சொல்வதற்கு பதிலாக நான் இதைச் சொல்கிறேன்,

“நாம் எதை யோசிக்கிறோமோ, எதை உணர்கிறோமோ அதன் சாயல் நமது வாக்கிலும் செயலிலும் படியும். பிரக்ஞையற்ற நிலையில் கூட ஒருவன் பயப்பட்டாலோ அல்லது அவனுடைய சிறிய கனவு கூட வெறுப்பில் தோய்ந்திருந்தாலோ, விரைவிலோ அல்லது பின்னரோ, அவனால் இந்த இரண்டு குணங்களையும் தன் செய்கையில் வெளிப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆக, என் சகோதரர்களே, துணிவோடு வாழுங்கள், துணிவைச் சுவாசியுங்கள், துணிவே அளியுங்கள். அன்பை தியானிப்பதன் மூலமும் அன்பை உணர்வதன் மூலமும், ஒரு மலர் வாசம் தருவதைப் போலே இயற்கையாகவே சமாதானமும் அமைதியும் உங்களிடமிருந்து பொழியும்.

“எல்லோருக்கும் அமைதி கிட்டட்டும்.”

(முற்றும்)

வண்ணக்கழுத்து

மாயக்கூத்தன்

எவ்வளவு நேரம் தூங்கினேன் என்றே தெரியவில்லை. ஒரு கொடுரமான முக்காரம் கேட்டு திடீரென்று நான் விளித்தேன். கண்களைத் திறந்த போது, எனக்கு முன்னமே விளித்திருந்த கோண்ட், என்னைச் சுற்றிக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டு கீழே பார்க்கும்படி சைகை செய்தார். விடியலின் மங்கிய வெளிச்சத்தில் முதலில் எதுவுமே எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒரு கோபம் கொண்ட விலங்கின் முனகலும் உறுமலும் எனக்குத் தெளிவாகக் கேட்டது. வெப்ப மண்டலப் பிரதேசங்களில் விடியல் விரைவானது. நான் கீழே கூர்ந்து நோக்கினேன். இப்போது அதிகரித்து வரும் வெளிச்சத்தில் நான் கண்டேன்… நான் கண்டதில் இருவேறு கருத்துக்களே இருக்க முடியாது. ஆம், ஒளிரும் நிலக்கரிக் குன்று ஒன்று தன்னுடைய கரும் பக்கத்தால் நாங்கள் உட்கார்ந்திருந்த மரத்தை உரசிக் கொண்டிருந்தது. அதன் ஒரு பாதி முழுக்க இலைகளாலும் மரக் கிளைகளாலும் போர்த்தப்பட்டிருந்த போதும், அது ஒரு பத்து அடி நீளம் இருக்கக்கூடும் என்று நான் ஊகித்தேன். காலைச் சூரியன் பட்டு அந்த மிருகம், ஒரு உலையிலிருந்து வெளிவரும் கரிய அமுதக்கல்லைப் போல இருந்தது. ”இயற்கையில் காணும் எருமை ஆரோக்கியமாகவும் வாளிப்பாகவும் இருக்கிறது. மிருகக்காட்சிசாலையில் சடைதட்டிப் போன மயிர்களுடனும் அழுக்கான தோலுடனும் ஒரு அசிங்கமான மிருகமாகத் தெரிகிறது. அடைத்துவைக்கப்பட்டிருக்கும் எருமையைக் காண்பவர்கள் அது மிக அழகாக இருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளவும் முடியுமோ? ஐயோ பாவம் இந்த இளைஞர்கள். கடவுளின் படைப்புகளை, நூறு விலங்குகளை மிருக்காட்சி சாலையில் பார்பதற்கு சமமானதான ஒரு விலங்கை அதன் இருப்பிடத்தில் நேரடியாகக் காண்பதைவிட்டுவிட்டு, சிறைகளில் மிருகங்களைப் பார்த்து அவற்றைப் பற்றிய அறிவைப் பெற வேண்டியிருக்கிறது. சிறைகளில் இருக்கும் கைதிகளைக் கண்டு மனிதரின் தார்மீக நியாயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாத போது, எப்படி கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு மிருகத்தைப் பார்ப்பதைக் கொண்டே அதைப் பற்றி எல்லாமும் நாம் அறிந்து கொண்டுவிட்டதாக நம்மால் நினைக்க முடிகிறது?” என்று நான் நினைத்தேன்.

எப்படியோ போகட்டும். எங்கள் மரத்தடியில் இருந்த அந்தக் கொலைகார எருமையைப் பார்ப்போம். வண்ணக்கழுத்தை என் உடையிலிருந்து விடுவித்து மரத்தில் உலாவ விட்டுவிட்டு, நானும் கோண்டும் அந்த மரத்திலிருந்து ஏணிப்படிகளில் இறங்குவதைப் போல கிளைகளில் இறங்கி, அந்த எருமைக்கு இரண்டிக்கு மேலே இருக்கும் ஒரு கிளையை அடைந்தோம். கோண்ட் சுருக்குக் கயிற்றின் ஒரு முனைவை மரத்தண்டோடு விரைந்து கட்டியதை அது கவனிக்கவில்லை. கீழே போட்டிருந்த கோண்டின் உடைகளில் கிழிக்கப்பட்டிருந்தவற்றில் மிச்சமிருந்தவற்றை அந்த எருமை தனது கொம்புகளைச் செலுத்தி கீழே விளையாடிக் கொண்டிருந்ததை கவனித்தேன். அந்த உடைகளில் இருந்த மனித வாடையே அதனை ஈர்த்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதனுடைய கொம்புகள் சுத்தமாக இருந்த போதும், அதன் தலையில் இன்னும் காய்ந்திராத ரத்தக் கறை இருந்தது. அந்த இரவில் மீண்டும் அந்த கிராமத்திற்குச் சென்று மற்றும் ஒருவரை அது கொன்றிருக்கிறது என்பது தெரிந்தது. அது கோண்டை உசுப்பிவிட்டது. ’இதை உயிருடன் பிடிப்போம். மேலிருந்து இந்தச் சுருக்குக் கயிற்றை அதன் கொம்புகள் மீது வீசு, என்று என் காதில் கிசுகிசுத்தார். ஒரு நொடிப்பொழுதில் கோண்ட், மரத்திலிருந்து அந்த எருமையின் பின் பக்கம் குதித்தார். அது அந்த மிருகத்தை மிரளச் செய்தது. அதன் வலது பக்கம் நான் முன்பு சொன்ன மரமும், இடப்பக்கம் நான் அமர்ந்திருந்த மரமும் இருந்ததால், அதனால் திரும்பி ஓட முடியவில்லை. அந்த இரட்டை மரங்களை விட்டு வெளியே போக வேண்டுமென்றால், அது முன்னே போகவேண்டும் அல்லது பின்னே போக வேண்டும். ஆனால், அது நடக்கும் முன்பாகவே நான் சுருக்குக் கயிற்றை அதன் தலை மீது வீசினேன். அந்தக் கயிறு அதன் மீது பட்டவுடன் ஏதோ மின்சாரம் பாய்ந்த்தைப் போல அது உணர்ந்தது. அந்தக் கயிற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மிக வேகமாக பின்னால் நகர்ந்தது. கோண்ட் முன்னரே அடுத்த மரத்தைச் சுற்றி நகர்ந்துவிட்டார், இல்லையென்றால் அது பின்னால் போன வேகத்தில், அதன் கூரிய கால் குளம்புகளில் சிக்கி நசுங்கி, வெட்டுப்பட்டு இறந்திருப்பார். ஆனால் இப்பொழுது நான் கண்டது எனக்கு பீதியைக் கொடுத்தது. இரண்டு கொம்புகளையும் சேர்த்து அடியில் இறுக்காமல் ஒரு கொம்பை மட்டுமே சுருக்குக் கயிற்றால் பிடித்திருந்தேன். அந்த நொடியே நான் கோண்டிடம் சீறினேன், “ஜாக்கிரதை! ஒரு கொம்பு மட்டுமே பிடிபட்டிருக்கிறது. அதிலிருந்தும் கூட கயிறு எந்த நொடியும் நழுவலாம். ஓடுங்கள்! ஓடி மரத்தில் ஏறிக் கொள்ளுங்கள்.”
ஆனால் அந்த துணிச்சல் மிகுந்த வேடுவன் எனது அறிவுரையை பொருட்படுத்தவில்லை. மாறாக, எதிரியைப் பார்த்தவாறு அருகிலேயே நின்றார். பிறகு அந்த முரட்டு மிருகம் தன் தலையை தாழ்த்து முன்னே பாய்வதைக் கண்டேன். பயத்தில் என் கண்களை மூடிக் கொண்டேன்.

நான் மீண்டும் கண்களைத் திறந்த போது, அந்த எருது அதன் கொம்பில் கட்டப்பட்டு, கோண்ட் பின்னே ஒளிந்து கொண்டிருந்த மரத்தை முட்ட முடியாமல் தடுக்கும் கயிற்றை இழுத்துக் கொண்டிருந்தது. அதன் பயங்கர முக்காரம் அந்த காடு முழுவதையும், பய ஒலிகளால் நிரப்பியது. பயத்தில் கிறீச்சிடும் பிள்ளைகளைப் போல ஒன்றன் பின் ஒன்றாக அதன் எதிரொலி எழுந்தது.

அந்த எருது அவரை அடைவதில் இன்னமும் வெற்றியடையவில்லை என்பதால், கோண்ட் தன்னுடைய ஒன்றரை அடி நீளமும் இரண்டு அங்குலம் அகலமும் கொண்ட சவரக்கத்தியைப் போலே கூர்மையான பட்டக்கத்தியை எடுத்தார். மெதுவாக வலப்பக்கம் இருக்கும் இன்னொரு மரத்துக்குப் பின் நழுவினார். பிறகு பார்வையிலிருந்து மறைந்துவிட்டார். அந்த எருது, கடைசியாக கோண்டை எங்கு பார்த்த்தோ அந்த இடத்தை நோக்கி நேராக ஓடியது. அதிர்ஷ்டவசமாக அந்தக் கயிறு இன்னும் இறுக்கமாக அதன் கொம்பைச் சுற்றுயிருந்தது.

வண்ணக்கழுத்து 17இ: லாமாவின் மெய்யறிவு

gay_neck_the_story_of_a_pigeon

அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் அந்த இரண்டு மரங்களுக்கு இடையிலான இடைவெளியை ஆராய்ந்தேன். அவை உயர்ந்து பருத்திருந்தவை, இரண்டுக்கும் நடுவே நாங்கள் இருவரும் நெஞ்சோடு நெஞ்சை ஒட்டிக் கொண்டு நடக்கக் கூடிய அளவே பூமி இருந்தது.

“இப்போது என்னுடைய பயம் தோய்ந்த ஆடையை இந்த இரட்டை மரங்களுக்கு நடுவே வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய உடைக்கு அடியில் இருந்து நேற்று வரை அவர் அணிந்திருந்த பழைய உடைகளின் மூட்டையை எடுக்கலானார்.  அதைத் தரையில் வைத்துவிட்டு இரண்டில் இரு மரத்தில் ஏறினார். மேலே ஏறிய பிறகு கோண்ட் ஒரு கயிற்று ஏணியை எனக்காக கீழே வீசினார். வண்ணக்கழுத்து என் தோளில் தனது சமநிலையை இருத்த தன் இறக்கைகளை அடித்துக் கொண்டிருக்க நான் அந்த ஏணியில் ஏறினேன். இரண்டுபேரும் கோண்ட் உட்கார்ந்து கொண்டிருந்த கிளையை பத்திரமாக அடைந்துவிட்டோம். மாலை விரைந்து வந்து கொண்டிருக்க நாங்கள் அங்கேயே சில நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தோம்.

அந்தி சாய்கையில் நான் முதலில் கவனித்த விஷயம் பறவைகளின் வாழ்க்கை. கொக்குகள், இருவாய்க் குருவிகள், க்ரவுஸ், பெஸண்டுகள், பாட்டுக் குருவிகள், கிளிகளின் மரகதக் கூட்டங்கள் காட்டை ஆக்கிரமிப்பது போல இருந்தது. தேனீயின் ரீங்காரமும் மரங்கொத்தியின் டக் டக் டக் சத்தமும், தொலைவில் கேட்ட கழுகின் கிறீச் ஒலியும், மலை ஓடையின் கீழித்துச் செல்லும் இரைச்சலோடும் ஏற்கெனவே முழித்துவிட்டிருந்த கழுதைப்புலிகளின் விட்டுவிட்டு வரும் கனைத்தலோடும் கலந்திருந்தது.

அந்த இரவு நாங்கள் இருப்பிடத்தை அமைத்திருந்த மரம் மிகவும் உயரமானது. எங்களுக்கு மேலே சிறுத்தையோ பாம்போ இல்லாதபடி நாங்கள் உயரத்திற்கு ஏறினோம். கவனமான ஆய்வுக்குப் பிறகு இரண்டு கிளைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு இடையே எங்களுடைய கயிற்று ஏணியை உறுதியான தொட்டிலாகக் கட்டினோம். இருப்பிடத்தில் பத்திரமாக உட்கார்ந்த உடனே கோண்ட், வானத்தைச் சுட்டிக் காட்டினார். உடனே நான் மேலே பார்த்தேன். அங்கே மிகப் பெரிய கழுகொன்று தன்னுடைய மாணிக்க நிற இறக்கைகளோடு பறந்து கொண்டிருந்தது. வெள்ளத்தைப் போன்று வேகமாக இருட்டு தரையிலிருந்து மேலெழுந்து வந்தாலும் கூட, வானுக்கு மேல் வெளிகள் ஒரு புறாவின் கழுத்தைப் போன்று ஒளிர்ந்தது. அந்த வெளியில் அந்த தனிக் கழுகு மீண்டும் மீண்டும் வட்டமடித்துக் கொண்டிருந்த்து. கோண்டைப் பொறுத்தவரை சந்தேகமே இல்லாமல் அந்த்க் கழுகு அஸ்தமிக்கும் சூரியனை வழிபடுகிறது.

அந்தக் கழுகின் இருப்பு ஏற்கெனவே அங்கிருந்த பறவைகளையும் பூச்சிகளையும் அசைவற்று வைத்திருந்தது. அவற்றுக்கு வெகு மேலே அந்தக் கழுகு இருந்த போதும், மெளன பக்தர்களின் கூட்டம் போல, அவர்களுடைய அரசன் பின்னும் முன்னும் பறந்து, அவர்களுடைய கடவுளான ஒளியின் பிதாவுக்கு ஒரு பூஜாரியைப் போலே மெய்மறந்து வணக்கம் செலுத்துகையில், அவை அமைதி காத்தன. மெல்ல அதன் இறக்கைகளில் இருந்து மாணிக்க ஒளி கசிந்தது. இப்போது அவை தங்கப் பொறிகளால் விளிம்புகள் செய்யப்பட்ட கருநீல பாய்மரத் துணியைப் போலே இருந்தன. அதனுடைய தொழுகை முடிவுக்கு வந்துவிட்டதைப் போலே, இன்னும் மேலே உயர்ந்து, தன் தெய்வத்தின் முன் தீக்குளிப்பதைப் போலே, தீயினால் எரிவது போன்று நின்ற சிகரங்களை நோக்கிப் பறந்து சென்று, அவற்றின் ஒளி வெள்ளத்தில் ஒரு அந்துப்பூச்சியைப் போலே காணாமல் போனது.

கீழே ஒரு எருமையின் முக்காரம் பூச்சிகளின் ஒலிகளை ஒவ்வொன்றாக விடுவித்து, மாலையின் நிசப்தத்தை கந்தல் கந்தலாகக் கிழித்தது. அருகில் ஒரு ஆந்தை அலற, என் துணிக்கு அடியில் இருந்த வண்ணக்கழுத்து என் நெஞ்சோடு நெருங்கி வந்தது. திடீரென்று நைட்டிங்கேலைப் போன்ற இரவுப் பறவையான ஹிமாலய குண்டுகரிச்சான் குருவி ஒன்று தன் மாயப் பாடலைத் தொடங்கியது. கடவுள் ஊதும் வெள்ளிப் புல்லாங்குழல் போல, ட்ரில்லுக்கு மேல் ட்ரில்லாக, ஏற்றத்துக்கு மேல் ஏற்றமாக, மரக்கூட்டங்களுக்கு இடையே வேகமாகப் பொழிந்து, அவற்றின் கடுமையான கிளைகளின் மீது வடிந்து காட்டுத் தரையில் இறங்கி பின் அவற்றின் வேர்களின் வழியே பூமியின் அடிநெஞ்சுக்கு இறங்கும் மழையைப் போல, அமைதி இறங்கியது.

முன்னரே வரும் கோடைக்கால இரவு உண்டாக்கும் மகிழ்ச்சி எக்காலத்திலும் விளக்க முடியாததாகவே இருக்கும். உண்மையில் இது மிகவும் இனிமையாகவும் தனிமையாகவும் இருந்ததால் எனக்கு கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்தது. மரத்தின் தண்டோடு என்னை பத்திரமாகப் பிணைக்க கோண்ட் இன்னொரு கயிற்றைக் என்னைச் சுற்றிக் கட்டினார்.  பின், செளகரியமாகத் தூங்குவதற்காக என் தலையை அவருடைய தோளில் இருத்திக் கொண்டேன். ஆனால், நான் அப்படிச் செய்வதற்கு முன்பாக கோண்ட் தன்னுடைய திட்டத்தைச் சொன்னார்.

”நான் கீழே கழற்றிப் போட்ட எனது உடைகள், நான் பயத்தின் பிடியில் இருந்த போது உடுத்தியவை. அவை ஒரு விசித்திரமான வாடையைக் கொண்டவை. அந்த எருமை மச்சான் இந்த வாடையை நுகர்ந்தால், அவன் இந்தப் பக்கம் வருவான். பயத்தினால் பீடிக்கப்பட்டிருப்பவன், பயத்தின் வாசனைக்கு பதிலாற்றுவான். நான் கழற்றிப் போட்ட துணிகளை ஆராய அவன் வந்தால், நாம் அவனுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம். அவனைக் கயிற்றால் பிணைத்து ஒரு கிடாரியைப் போலப் அடக்கி வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன்…” அவர் அதற்கு மேல் சொன்னவை என் காதில் விழவில்லை. நான் தூங்கிவிட்டிருந்தேன்.