மொழிபெயர்ப்பு

வண்ணக்கழுத்து 17உ: லாமாவின் மெய்யறிவு

மாயக்கூத்தன்

gay_neck_the_story_of_a_pigeon

இங்கு கோண்ட் வேறொரு தந்திரம் செய்தார். எதிர்த்திசையில், வெவ்வேறு மரங்களுக்கு இடையே வளைந்து நெளிந்து ஓடினார். காற்றினால் கொண்டு சேர்க்கப்படும் தன்னுடைய வாடை, அந்த எருதை அடையாமல் இருக்கவே அவர் அப்படிச் செய்தார். குழப்பமடைந்த போதும் அந்த எருது திரும்பி கோண்டைத் தொடர்ந்தது. மீண்டும் எங்கள் மரத்திற்கு கீழே கிடந்த கோண்டின் துணி மூட்டையைக் கண்டது. எருதை அது இன்னும் வெறியடையச் செய்தது. முகர்ந்து பார்த்துவிட்டு, தன் கொம்புகளால் அவற்றைக் கலைத்தது.

இப்போது கோண்ட் காற்றின் கீழ்த்திசையில் இருந்தார். என் பார்வைக்கு அவர் தெரியாத போதும், மரங்கள் ஒருவேளை அந்த எருதினை அவர் பார்வையிலிருந்து மறைத்திருந்தாலும் கூட அதன் வாடையைக் கொண்டே அவர் எருதின் இடத்தைச் சொல்லிவிடுவார் என்று நான் ஊகித்தேன். கோண்டின் துணிகளுக்கு ஊடே தன் கொம்புகளைச் செலுத்திக் கொண்டே அந்த எருது மீண்டும் முக்காரம் போட்டது. அது சுற்றியிருந்த மரங்களில் பயங்கரமாக அமளி துமளிப்பட்டது. எங்கிருந்தோ குரங்குக் கூட்டங்கள் கிளைவிட்டுக் கிளை தாவி ஓடி வந்தன. அணில்கள் சுண்டெலிகளைப்போலே ஓடி மரத்திலிருந்து காட்டின் தரையில் இறங்கி, பின் மீண்டும் மரத்திற்கே சென்றன. மேலே பறந்து கொண்டிருந்த ஜேக்கள், நாரைகள், கிளிகள் போன்ற பறவைக்கூட்டங்கள், காக்கைகள், ஆந்தைகள் மற்றும் பருந்துகளோடு க்றீச்சிட்டன.

திடீரென்று அந்த எருது மீண்டும் தாக்க விரைந்தது. கோண்ட் அமைதியாக அதன் முன்னால் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். அமைதியைப் போலே அமைதியாக இருக்கும் ஒரு மனிதனை நான் பார்த்தேன் என்றால் அது கோண்ட் தான். அந்த எருதின் பின்னங்கால்கள் துடித்து வாட்களைப் போலே பறந்தன. பிறகு என்னவோ நடந்தது. அது பின்னங்கால்களை ஊன்றி காற்றில் மேலே எழுந்தது. அதன் கொம்பில் இறுக்கப்பட்டு எங்கள் மரத்தில் கட்டப்பட்டிருந்த சுருக்குக் கயிற்றால் தான் அது மேலெழுந்தது என்பதில் சந்தேகமே இல்லை. தரையிலிருந்து பல அடி உயரம் எழுந்து, பின் விழுந்தது. அந்த நொடியில், ஒரு சிறுபிள்ளையால் உடைக்கப்பட்ட மரக்குச்சி போலே, அதன் கொம்பு முறிந்து காற்றில் பறந்தது. அந்த முறிவு கட்டுப்படுத்த முடியாத வேகத்தை உண்டு பண்ணி, எருமையை ஒரு பக்கமாக தரையில் எறிந்தது. படபடவென்று கால்கள் காற்றை மிதிக்க, அது கிட்டத்தட்ட உருண்டது. அந்த நொடியில், சிக்கிமுக்கிக் கல்லிலிருந்து வரும் தீப்பொறியைப் போலே கோண்ட் முன்னால் குதித்தார். அவரைப் பார்த்தவுடன், அந்த எருமை தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு, தன் பிட்டத்தில் உட்கார்ந்து, பெருமூச்செறிந்தது.

எழுந்து நிற்பதில் கிட்டத்தட்ட வெற்றியடைந்துவிட்டது. ஆனால், தன்னுடைய பட்டக்கத்தியால் கோண்ட் அதன் தோளுக்குப் பக்கத்தில் தாக்கினார். அதன் கூர்மையான முனை ஆழமாக வெட்டியது. தன்னுடைய மொத்த எடையையும் கொண்டு அதை அழுத்தினார் கோண்ட். எரிமலை வெடிப்பதைப் போலே ஒரு முக்காரம் காட்டை உலுக்கியதோடு, திரவ மாணிக்க ஊற்று பீச்சியடித்தது. அதற்கு மேலும் காணச் சகியாது நான் என் கண்களை மூடிக் கொண்டேன்.

சில நிமிடங்களில் என் இடத்திலிருந்து நான் கீழிறங்கி வர, அந்த எருமை ரத்தப்போக்கால் செத்துப்போய் விட்டதைக் கண்டேன். ஆழமான ரத்தக் குளத்தில் அது கிடந்தது. அதற்குப் பக்கத்தில் தரையில் உட்கார்ந்து கோண்ட், தன் செயலால் தன் மேல் படிந்திருந்த கறையை துடைத்துக் கொண்டிருந்தார். அவர் தனித்து இருப்பதையே இப்போது விரும்புவார் என்பதை நான் அறிவேன். ஆக, நான் முன்பிருந்த மரத்திற்குச் சென்று வண்ணக்கழுத்தை அழைத்தேன். ஆனால், அவனிடமிருந்து பதிலேதும் இல்லை. அந்த மரத்தில் உச்சிக் கிளை வரைக்கும் ஏறிப் பார்த்துவிட்டேன். ஆனால் அவன் அங்கு இல்லை.

நான் கீழே இறங்கி வந்தபோது, கோண்ட் தன்னை சுத்தம் செய்து முடித்திருந்தார். அவர் வானத்தை நோக்கி கை காட்டினார். இயற்கையின் தோட்டிகளை நாங்கள் கண்டோம். பருந்துகள் கீழேயும் அவற்றுக்கு வெகு மேலே பிணந்தின்னிக் கழுகுகளும் பறந்தன. யாரோ இறந்துவிட்டார்கள் என்றும் தாங்கள் காட்டைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று அவை அதற்குள் தெரிந்து கொண்டிருந்தன.

”நமது புறாவை மடாலயத்தில் தேடுவோம். சந்தேகமே இல்லை, அவன் மற்ற பறவைகளோடு பறந்து போய்விட்டான்” என்றார் கோண்ட். ஆனால் வீடு நோக்கி கிளம்புவதற்கு முன், இறந்த எருமையை அளக்கச் சென்றேன். அதை நோக்கி ஒவ்வொரு திசையிலிருந்தும் ஈக்கள் படையெடுத்துக் கொண்டிருந்தன. அந்த எருமை பத்தரை அடி நீளம் இருந்தது. அதன் முன்னங்கால்கள் மூன்று அடிக்கும் மேலே இருந்தன.

மடாலயத்திற்கு திரும்பிச் செல்லும் எங்கள் பயணம் மெளனமாகவே இருந்தது. பாதிக்கப்பட்ட அந்த கிராமத்திற்குச் சென்று, அதன் தலைவரிடம் அவர்களின் எதிரி இறந்துவிட்டது என்பதை நண்பகல் பொழுதில் சொன்ன போது மட்டுமே மெளனம் கலைந்தது. முன்தின மாலையில், சூரிய அஸ்தனமனத்திற்கு முன் பிரார்த்தனைக்காக கோவிலுக்குச் சென்ற அவரது வயதான தாயாரை அந்த எருமை கொன்றிருந்ததால் அவர் துக்கத்தில் இருந்த போதும், இதைக் கேட்ட போது அவர் நிம்மதியடைந்தார்.

நாங்கள் மிகவும் பசியில் இருந்தோம், வேகமாக நடந்தோம். சீக்கிரமே மடாலயத்தை அடைந்துவிட்டோம். உடனே எனது புறாவைப் பற்றி விசாரித்தேன். வண்ணக்கழுத்து அங்கு இல்லை. மிகவும் துக்கமாக இருந்தது. அவருடைய அறையில் பேசிக் கொண்டிருந்த போது அந்த வயதான துறவி “கோண்ட், உங்களைப் போலவே அவனும் பத்திரமாக இருக்கிறான்” என்றார். பல நிமிட மெளனத்திற்குப் பிறகு, “எது உனது மன நிம்மதியைக் குலைக்கிறது?” என்று கேட்டார்.

அந்த வயதான வேடுவர் தான் சொல்லப்போவதை அமைதியாக யோசித்தார். “ஒன்றுமில்லை குருவே. எதைக் கொல்வதையும் நான் வெறுக்கிறேன். நான் அந்த எருதை உயிருடன் பிடிக்கவே விரும்பினேன். ஆனால் ஐயோ! நான் அதை அழிக்க வேண்டி வந்துவிட்டது. அதன் கொம்பு உடைந்த போது, எனக்கும் அதற்கும் இடையில் எதுவுமே இல்லை. ஒரு முக்கிய நரம்பில் எனது கத்தியைச் செருக வேண்டியதாகிவிட்டது. அவனை உயிருடன் பிடித்திருந்தால் ஒரு மிருகக்காட்சி சாலைக்காவது விற்றிருக்கலாமே என்று நான் வருந்துகிறேன்.”

”ஓ! வணிகவியலின் ஆன்மாவே!” என்று நான் கூவினேன். “அந்த எருது இறந்தது பற்றி நான் வருந்தவில்லை. மிச்ச வாழ்க்கை முழுவதும் மிருக்க்காட்சி சாலையில் ஒரு கூண்டில் இருப்பதைவிட செத்துப்போவதே நல்லது. சவ வாழ்க்கை வாழ்வதற்கு சாவே மேல்.”

“நீ மட்டும் சுருக்குக் கயிற்றை இரண்டு கொம்புகளிலும் போட்டிருந்தாயானால்” என்று கோண்ட் ஆரம்பித்தார்.

“நீங்கள் இரண்டு பேரும் வண்ணக்கழுத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். செத்துப் போன ஒன்றைப் பற்றியல்ல” என்று அந்த லாமா சத்தம் போட்டார்.

”உண்மை தான். நாளை அவனைத் தேடுவோம்” என்றார் கோண்ட்.

அதற்கு லாமா பதில் சொன்னார் “இல்லை. டெண்டாமுக்குத் திரும்பு என் மகனே. உங்கள் குடும்பம் உங்களைப் பற்றிய கவலையில் இருக்கிறது. அவர்களுடைய எண்ணங்கள் எனக்குக் கேட்கின்றன.”

அடுத்த நாள் நாங்கள் ஒரு ஜோடி குதிரையில் டெண்டாமுக்குக் கிளம்பினோம். விரைவான பயணத்தாலும், வெவ்வேறு இடங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குதிரைகளை மாற்றிக் கொண்டதாலும் மூன்றே நாட்களில் டெண்டாமை அடைந்துவிட்டோம். எங்கள் வீட்டை நோக்கி மேலே போகும் போது, மிகுந்த உற்சாகத்தில் இருந்த எங்கள் வீட்டு வேலைக்காரரை எதிர் கொண்டோம். மூன்று நாட்களுக்கு முன்னரே வண்ணக்கழுத்து வந்துவிட்டதாக அவர் சொன்னார். ஆனால் அவனுடன் நாங்கள் இருவரும் வரவில்லை என்பதால் என் பெற்றோர் கலவரப்படத் துவங்கி, எங்களை உயிருடனோ பிணமாகவோ தேடிக் கண்டெடுக்க குழுக்களை அனுப்பி வைத்திருந்தார்கள்.

கோண்டும் நானும் என் வீடு நோக்கி கிட்டத்தட்ட ஓடினோம். அடுத்த பத்து நிமிடத்தில் என் அம்மாவின் கைகள் என்னைச் சுற்றியிருந்தன. அவனுடைய கால்கள் என் தலையில் இருக்க, வண்ணக்கழுத்து தன்னை சமநிலையில் இருத்திக்கொள்ள தன் இறக்கைகளை அடித்துக் கொண்டிருந்தான்.

வண்ணக்கழுத்து ஒரு வழியாக பறக்கத் துவங்கிவிட்டான் என்பதைப் கேட்டபோது நான் அடைந்த உற்சாகத்தைச் சொல்லத் தொடங்கினால் நிறுத்த முடியாது. மடாலயத்திலிருந்து டெண்டாமில் எங்கள் வீடுவரைக்கும் அவன் பறந்து வந்திருக்கிறான். தடுமாறவில்லை,. தோற்றுப் போகவும் இல்லை. “ஓ! பறத்தலின் ஆன்மாவே, புறக்களுக்கு மத்தியில் ஒரு முத்தே” என்று நானும் கோண்டும் விரைந்து நடக்கும் போது வியந்து கொண்டேன்.

இப்படி முடிந்தது சிங்காலிலாவிற்கான எங்கள் யாத்திரை. வண்ணக்கழுத்தையும் கோண்டையும் போர்க்களத்தில் பீடித்திருந்த நோய்களான பயத்தையும் வெறுப்பையும் இந்த யாத்திரை குணப்படுத்திவிட்டது. வாழ்வின் மிகக் கொடிய இந்த நோய்மைகளிலிருந்து ஒரு ஆன்மாவையேனும் மீட்குமெனில் அதற்கான எந்தவொரு உழைப்பும் வீண் இல்லை.

இந்தக் கதையின் இறுதியில் ஒரு உபதேசத்தைச் சொல்வதற்கு பதிலாக நான் இதைச் சொல்கிறேன்,

“நாம் எதை யோசிக்கிறோமோ, எதை உணர்கிறோமோ அதன் சாயல் நமது வாக்கிலும் செயலிலும் படியும். பிரக்ஞையற்ற நிலையில் கூட ஒருவன் பயப்பட்டாலோ அல்லது அவனுடைய சிறிய கனவு கூட வெறுப்பில் தோய்ந்திருந்தாலோ, விரைவிலோ அல்லது பின்னரோ, அவனால் இந்த இரண்டு குணங்களையும் தன் செய்கையில் வெளிப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆக, என் சகோதரர்களே, துணிவோடு வாழுங்கள், துணிவைச் சுவாசியுங்கள், துணிவே அளியுங்கள். அன்பை தியானிப்பதன் மூலமும் அன்பை உணர்வதன் மூலமும், ஒரு மலர் வாசம் தருவதைப் போலே இயற்கையாகவே சமாதானமும் அமைதியும் உங்களிடமிருந்து பொழியும்.

“எல்லோருக்கும் அமைதி கிட்டட்டும்.”

(முற்றும்)

வண்ணக்கழுத்து 16இ: வெறுப்பும் பயமும்

gay_neck_the_story_of_a_pigeon

மாயக்கூத்தன்

இப்போது நான் முன்னே சென்று, அந்த மடத்தின் தலைமை லாமாவை வணங்கினேன். அவர் என்னை ஆசீர்வதிக்க, அவருடைய இறுக்கமான முகம் புன்னகையால் மலர்ந்தது. மற்ற லாமாக்களையும் வணங்கிய பின் நானும் கோண்டும், சின்னச் சின்ன மர இருக்கைகளை வரிசையாக அடுக்கி எங்களுக்காக உருவாக்கப்பட்ட மேஜைக்கு முன் அமர்ந்தோம். தரையில் சம்மண்மிட்டு நாங்கள் உட்கார, அந்த மேஜை எங்கள் மார்பு உயரம் வரை வந்தது. வெப்பம் மிகுந்த நாளில் பயணம் செய்துவிட்டு, குளிர்ந்த தரையில் உட்கார்வது இதமாக இருந்தது. பருப்பினால் செய்யப்பட்ட கஞ்சி (soup), பொறித்த உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காய் கறி தான் எங்கள் சாப்பாடு. நானும் கோண்டும் சைவர்கள் ஆதலால், அங்கு பரிமாறப்பட்ட முட்டைகளை நாங்கள் சாப்பிடவில்லை. எங்களுக்கான பானம் சுடச்சுட க்ரீன் டீயாக அமைந்தது.

மதிய உணவிற்குப் பின், தன்னுடன் மதியத் தூக்கத்தை எடுத்துக்கொள்ள என்னையும் கோண்டையும் அழைத்தார் தலைமை லாமா. அவருடன் மலையின் உச்சி சிகரத்திற்கு ஏறினோம். அது ஒரு கழுகின் பொந்து போல இருந்தது. அதற்கு மேலே நெருக்கமாக தேவதாரு மரங்கள் வளர்ந்திருந்தன. அங்கே, மரச்சாமான்கள் ஏதுவும் இல்லாத வசதிகளற்ற வெற்று அறை ஒன்றைப் பார்த்தோம். அதற்கு முன் அப்படி ஒன்றை நான் பார்த்திருக்கவில்லை. அங்கே நாங்கள் உட்கார்ந்த பிறகு அந்தத் துறவி, ”இந்த மடாலயத்தில் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை, இந்தப் பூமியின் தேசங்களைக் குணப்படுத்துவதற்காக நாங்கள் எல்லையற்ற கருணையிடம் பிரார்த்திக்கிறோம். இருந்தும் யுத்தம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. பறவைகளையும் விலங்குகளையும் கூட, வெறுப்பும் பயமும் தொற்றிக் கொள்கிறது. உணர்வுகளால் உண்டாகும் நோய்கள், உடல் நோய்களைவிட வேகமாகப் பரவுகின்றன. மனிதகுலம் பயத்தினாலும், வெறுப்பினாலும் சந்தேகத்தினாலும் வன்மத்தினாலும் நிரம்பப் போகிறது. இவற்றிலிருந்து மொத்தமாக மனிதர்களை விடுவிக்க வேண்டுமானால், ஒரு தலைமுறையையே நாம் கடக்க வேண்டியிருக்கும்.” என்றார்.

இதுவரை சுருக்கங்களற்று இருந்த லாமாவின் நெற்றியை  எல்லையற்ற சோகம் கவலை ரேகைகளால் நிறைத்தது. பயங்கர களைப்பினால் அவருடைய இதழோரங்கள் தாழ்ந்தன. யுத்தங்களுக்கு மேலே அவற்றைத் தாண்டி, அவருடைய கழுகுக் குகையில் அவர் வாழ்ந்த போதும் கூட இந்த உலகத்தைப் போரில் ஆழ்த்தியவர்களைவிட அவர் மனிதர்களின் பாவச் சுமையை நன்கு உணர்ந்திருந்தார்.

ஆனால், அவர் மறுபடியும் புன்னகைத்தார். “நம்முடன் இருக்கும் வண்ணக்கழுத்தையும் கோண்டையும் பற்றிப் பேசுவோம். உன்னுடைய புறா மீண்டும் வானத்தின் அமைதியில் பறக்க வேண்டும் என்றால், கோண்ட் இத்தனை நாட்கள் தனக்காகச் செய்து கொள்வது போல, நீ எல்லையில்லா துணிவை தியானிக்க வேண்டும்.”

“எப்படிப் பிரபுவே?” என்று ஆர்வமாகக் கேட்டேன். அந்தத் தலைமை லாமாவின் மஞ்சள் முகம், சிவந்தது. என்னுடைய நேரடிக் கேள்வியால் அவரை சங்கடப்படுத்திவிட்டேன் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்காக நான் வெட்கினேன். நேரடித்தன்மை அவசரத்தைப் போலே மிகவும் இழிவானது.

என்னுடைய எண்ணங்களை உணர்ந்தவரைப் போல, என்னை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரும்வகையில் லாமா சொன்னார், “ஒவ்வொரு சூரிய உதயத்தின் போதும் அஸ்தனமத்தின் போதும், வண்ணக்கழுத்தை உன் தோளில் அமர்த்திக் கொண்டு, உனக்குள்ளே இதைச் சொல் ’எல்லையில்லா துணிவு எல்லா உயிர்களிடத்திலும் இருக்கிறது. இவ்வுலகில் உயிர் பிழைத்து சுவாசிக்கும் ஒவ்வொரு உயிரும் எல்லையற்ற துணிவின் நீர்நிலை. நான் யாரைத் தொடுகிறேனோ அவர்களிடத்தில் எல்லயற்ற துணிவைக் கடத்தும் அளவிற்கு பரிசுத்தம் அடைவேனாக”. இதைத் தொடர்ந்து செய்து வந்தால், ஒருநாள், உன்னுடைய இருதயம், மனம் மற்றும் ஆன்மா மொத்தமாக பரிசுத்தமாகிவிடும். அந்த நொடியில், பயமில்லாத, வெறுப்பில்லாத, சந்தேகம் இல்லாத, உனது ஆன்மாவின் சக்தி, வண்ணக்கழுத்துக்குள் ஊடுறுவி அவனுக்கு விடுதலை அளிக்கும். எவன் ஒருவன் மிகப் பெரிய அளவில் தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறானோ, அவனால் இந்த உலகத்திற்குள் மிகப்பெரிய ஆன்மசக்தியை செலுத்த முடியும். நான் சொல்வதை நாளுக்கு இரண்டு முறை செய். எங்கள் லாமாக்கள் அனைவரும் உனக்கு உதவி செய்வார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.”

ஒரு நொடி மெளனத்திற்குப் பின் லாமா தொடர்ந்தார், “வேறு யாரையும்விட மிருகங்களைப் பற்றி நன்கு அறிந்தவரான கோண்ட் உனக்குச் சொல்லியிருப்பார், நம்முடைய பயம் மற்றவர்களை பயமுறுத்தி, நம்மை தாக்கச் செய்கிறது. உன்னுடைய புறா ரொம்பவே பயந்து போய் இருக்கிறான். மொத்த வானமும் தன்னைத் தாக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு இலை கூட அவனைப் பயமுறுத்தாமல் கீழே விழுவதில்லை. அவன் உள்ளத்தைக் கலங்கடிக்காமல் ஒரு நிழல் கூட விழுவதில்லை. இருந்தாலும் அவனுடைய வேதனைக்கு அவனே காரணம்.

“நாம் பேசிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில், இங்கிருந்து கீழே வடமேற்கில் இருக்கும் கிராமம், வண்ணக்கழுத்து சந்திக்கும் அதே பிரச்சனையால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மிருகங்கள் வடக்கே வரும் காலம். மிரட்சியில் இருக்கும் கிராமவாசிகள், காட்டு மிருகங்களைக் கொல்வதற்காக பழைய துப்பாக்கிகளோடு சுற்றித் திரிகிறார்கள். இதோ, அந்த மிருகங்கள் இப்போது அவர்களைத் தாக்குகின்றன. ஆனால், இதற்கு முன்னர் அவை அப்படிச் செய்ததே இல்லை. காட்டெருமைகள் வந்து அவர்களின் பயிர்களை சாப்பிடும். சிறுத்தைகள் அவர்களுடைய ஆடுகளை திருடிக் கொண்டு போகும். இன்றைக்கு இங்கே வந்த செய்தி, ஒரு காட்டெருமை ஒருவனைக் கொன்றுவிட்டது என்பது. பிரார்த்தனையாலும் தியானத்தாலும் அவர்கள் மனத்திலிருந்து பயத்தை ஒழித்துவிடுங்கள் என்று நான் சொன்னாலும் அவர்கள் செய்யப்போவதில்லை.”

“ஏன்?” என்று கேட்டார் கோண்ட். “நான் அங்கே சென்று அந்த விலங்குகளை அவர்களிடமிருந்து விரட்ட எனக்கு அனுமதி தரமட்டீர்களா?”

“இப்போதைக்கு இல்லை” என்றார் லாமா. “விழித்திருக்கும் கணங்களில் நீ பயத்திலிருந்து  குணமடைந்திருந்தாலும், உன்னுடைய கனவுகள் அச்சத்தின் சாபத்துக்கு இன்னும் இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்கள் தொடர்ந்து பிரார்த்தித்து தியானம் செய்வோம், உன்னுடைய ஆன்மாவில் இருக்கும் கசடுகள் எல்லாம் வெளியே போய்விடும். நீ குணமடைந்த பின்பும் கீழே இருக்கும் கிராமத்தார்கள் விலங்குகளால் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்றால், நீ போய் அவர்களுக்கு உதவி செய்யலாம்.”

வரலாற்றை நேருக்கு நேர் எதிர்கொள்ளல் – சூசன்னா லிப்ஸ்கோம்ப்

– பீட்டர் பொங்கல் –

800px-statue_of_oliver_cromwell_outside_the_palace_of_westminster

சரித்திரப் புனைவு படைக்கும் எழுத்தாளர்கள் கையாளும் தரவுகள் துல்லியமானவை, அவர்களது வரலாற்றுப் பார்வை துல்லியமான சித்திரத்தை அளிக்கிறது என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சித்திரத்தை அவர்கள் அளிப்பார்கள் என்றால், அவர்களது நாவல்கள் நம் இதயத்தின் வேட்கையை நிறைவு செய்யும் என்ற நம்பிக்கைக்கு நாம் இடம் கொடுக்கலாம்: கடந்த காலத்தின் ஆவிகளுடன் ஓர் உரையாடல், வரலாற்று மாந்தரை நேருக்கு நேர் எதிர்கொள்ளல்- இப்படிப்பட்ட ஒரு வாசிப்பனுபவம் வரலாற்று நூல்களில் கிடைப்பதில்லை என்ற குறை நமக்கு இருக்கக்கூடும். சரித்திரப் புனைவுகளில் எடுத்தாளப்படும் மேற்கோள்கள் சொல்லுக்குச் சொல் மூல வரலாற்று நூல்களில் உள்ளவாறே இருப்பதன் செறிவை நாம் காண இயலுமென்றால் – நிச்சயம் மாண்டலின் நாவல்களில் இது உண்டு- (நினைவுகளைப் பதிவு செய்யும் மனிதர்களுக்கு எப்போதும் இருக்கக்கூடிய பிழை நினைவும் மனச்சாய்வும் கொண்டவர்களால் இந்த மூல நூல்கள் உருவாக்கப்பட்டவை என்ற எண்ணத்தை நாம் தள்ளி வைக்க முடியுமென்றால்), நாம் நம்மைத் தளர்த்திக் கொண்டு, வெந்நீர் குளியல் மேற்கொள்வது போல், நாவலின் சரித்திர உலகினுள் நம்பிப் புகலாம்.

அப்போது புனைவு, வரலாறு விட்டுச் சென்ற இடைவெளிகளை- கடந்த கால நிகழ்வுகளைப் பதிவு செய்தவர்கள் விட்டுச் சென்ற இடைவெளிகளை- இட்டு நிரப்பும்-, ஏனெனில் இந்த இடைவெளிகள் மிகச் சாதாரணமானவையாய் இருக்கும். அந்தக் காலம் உண்மையில் எப்படி இருந்தது, அந்நாட்களில் வாழ்ந்ததன் உணர்வு உண்மையில் எப்படிப்பட்டது என்பதைப் புனைவால் சொல்ல முடியும்.  “வேவு பார்ப்பது அத்தனை இனிய கேளிக்கை” என்பதே ‘காலப்பயணத்தின் வசீகரம்’ என்று மார்கரட் அட்வுட் எதைச் சுட்டினாரோ, அந்த அனுபவத்தில் நாம் திளைக்கலாம்.

இது நிகழும்போது, கற்பனையில் திளைக்கும் நம் புலன்களை உணவின் சுவையால், ஆடைகளின் தொடுகையால், நறுமணம் என்று சொல்வதற்கில்லாத தெருக்களின் நாற்றத்தால், புனைவுகள் நிறைக்கக்கூடும். டவ்டன் போருக்குத் தயாராகும் போர் வீரர்கள் மற்றும் குதிரைகளின் பரபரப்பான அசைவை நம்மால் கேட்க முடியும், எலிசபெத்திய நிழலுலகில் யாருக்கும் தெரியாமல் நாம் மறைந்து திரிய முடியும், புரட்சிக்கால பிரான்சில் நாம் ஒட்டுக் கேட்க முடியும்- அனைத்தும் நம் கைக்கெட்டும் தொலைவில் இருக்கும், ஏனெனில்,  “தன் காலத்தின் உணர்வுடன் சமநிலை பேணுதல்,” “வரலாற்றின் நிறுவப்பட்ட உண்மைகளை ஒப்புக்கொள்ளுதல்”. என்ற இரண்டும், சிறந்த சரித்திரப் புனைவுக்குரிய இரு அளவைகள் என்று ஹெலன் கெர் முன்வைத்திருக்கிறார். இங்கு அவருக்கு இணக்கமாய் நாவலாசிரியர் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.

ஆனால் இதில் ஒரு ரகசிய, ஒருதலைபட்சமான ஆபத்து இருக்கிறது. வரலாற்று துல்லியம் கொண்டது என்ற இலச்சினை பதிக்கப்பட்டு ஒரு நாவல் வெளிவருகிறது என்று வைத்துக் கொள்வோம்- ஆதாரநூல்கள் தரவுகளாக சுட்டப்பட்டுகின்றன, மிகச் சாதாரணமான  விவரணைகளும் சரியாக இருக்கின்றன: உள்ளாடைகள் சரியான வகையில் அணிந்து கொள்ளப்படுகின்றன, சாலைகள் சேறும் சகதியுமாக இருக்கின்றன… இது போல் எழுதுவது நாவல் முழு உண்மையைச் சொல்வதான ஒரு தோற்றத்தை அளிக்கும். “நம்ப வைக்கும் பொய் ஒரு தீச்செயல்” என்று சொல்கிறார் பரபரப்பாக விற்பனையாகும் நாவல்களை எழுதும் பிலிப்பா க்ரே. புனைவெழுத்தாளர்கள் நாளெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறார் அட்வுட்: “தாம் எழுதுவதை பொது வாசகர்கள் முழுமையாய் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக உண்மை போலிருக்கும் பொய்களை உருவாக்குகிறார்கள்“.

மிகச் சிறந்த வரலாற்றுப் புதினங்கள் இரு ஆபத்தான விஷயங்களை நாம் நம்பச் செய்யலாம். முதலாவதாக, மானுட இயல்பு மாறுவதே இல்லை என்று நாம் தீர்மானிக்கக்கூடும். இது மிக இயல்பான உண்மையாகத் தெரிகிறது, ஆனால் எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் எண்ணங்கள் நம் காலத்தில் வாழ்பவர்களின் எண்ணங்களிலிருந்து மிக மிக மாறுபட்டதாகவே இருந்திருக்கிறது. அவர்களது அறத் திசைகாட்டியின் வடதுருவம் வேறு திசை நோக்கி நிற்கிறது. டூடர் இங்கிலாந்தில் எருதுகளை ஆடுகளத்தில் சித்திரவதைக்கு உள்ளாக்காமல் கொலை செய்வது சட்டத்துக்குப் புறம்பானது. பதின்பருவப் பெண்ணான காத்தரீன் ஹவார்டை அவளது சம்மதமில்லாமல் பிரான்சில் டெர்ஹாம் புணர்ந்தபோது அவன் பாலகர்களைத் துன்புறுத்தியதாகவோ கற்பழித்ததாகவோ குற்றம் சாட்டப்படவில்லை. ஹவார்ட் ஒரு விலைமகள், கவர்ந்திழுப்பவள், ஆண்களை மயக்குபவள் என்று கருதப்பட்டாள். அதே போல், பதினாறாம் நூற்றாண்டு பற்றி எழுதும் எந்த ஒரு நாவலாசிரியரும் சமய உணர்வுகளுக்கு அன்றிருந்த முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ராபர்ட்சன் டேவிஸ் சரியாகவே சொல்கிறார், “நாம் அனைவரும் நம் காலத்துக்கே உரியவர்கள். அதிலிருந்து தப்ப நாம் எதுவும் செய்ய முடியாது. கடந்த காலத்தைக் களமாய்க் கொண்ட நாவலானாலும் நாம் எழுதுவது எதுவானாலும் அது சமகாலத்துக்குரியதாகவே இருக்கும்,” என்று.

புனைவுகள் நம்மை நம்பச் செய்யும் இரண்டாவது ஆபத்தான விஷயம் கதாப்பாத்திரங்களின் அகவுலகம் சார்ந்தது: நாம் கதைசொல்லியின் காலணிகளில் நுழையும்போது அறிய வரும் அகவுலகம் யதார்த்தத்தில் நாம் எவ்வகையிலும் உண்மையென்று அறிந்து கொள்ள முடியாத ஒன்று. நிச்சயம், வரலாற்று காலத்தில் வாழ்ந்த கிராம்வெல்லைவிட மாண்டல் நாவல்களின் கிராம்வெல் விரும்பத்தக்கவராகவே இருப்பார். கதைக்களம், சூழ்நிலம், ஆடை அணிகலன்கள் துல்லியமாய் விவரிக்கப்படுகின்றன என்ற மயக்கத்தில் நாம் அவரது ‘குணாதிசயம்’ குறித்த ‘நம்ப வைக்கும் பொய்யை’ ஏற்றுக்கொள்கிறோமா? இதற்கான மாண்டலின் பதில் நியாயமானதாகவே இருக்கும்: அவர் இன்னும் முழுமையாக எழுதி முடிக்காததால், மாண்டலின் கிராம்வெல் எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிய வாய்ப்பில்லை. அது தவிர, உண்மையான ‘கிராம்வெல்’ யார் என்பதும் நமக்குத் தெரியாது. ஏனெனில், வரலாற்றாசிரியர்களை எடுத்துக் கொண்டால், அவர்களும் தம் காலத்தில்தான் எழுதுகிறார்கள், தமக்குரிய மனச்சாய்வுகளுடன், குறைபட்ட மனிதர்களின் குறைபட்ட தரவுகளைக் கொண்டு.

அப்படியானால் அத்தனை வரலாற்றுப் புதினங்களும் ஒரு எச்சரிக்கை வாசகம் தாங்கி வர வேண்டுமா? “இது கடந்த காலம் அல்ல. அது போலிருக்கிறது, அவ்வளவுதான்“. ஆனால் வரலாற்று நூல்களுக்கும் இது பொருந்துமோ?

நன்றி – History Today
ஒளிப்பட உதவி – wikipedia

சான்றோர்

– செந்தில் நாதன் –

leighton_frederic_-_acme_and_septimius_-_c-_1868

தங்கள் தவறுகளை மறந்த வழுக்கைத் தலையர்கள்,
மெத்தப் படித்த, மரியாதைக்குரிய, வயதான வழுக்கைத் தலையர்கள்,
காதல் நோயால் பீடிக்கப்பட்டுப் 
படுக்கையில் புரண்ட இளைஞர்கள்
சவுந்தர்யத்தின் மடக்காதுகளுக்காக யாப்பமைத்த புகழுரை
வரிகளைத் திருத்தி உரை எழுதுகிறார்கள்.
இவர்கள் எல்லோரும் இங்குமங்கும் செல்வார்கள்;
எல்லோரும் புத்தகங்களுக்குள்ளேயே இருமுவார்கள்
எல்லோரும் வகுப்பறைக் கம்பளங்களைக் காலணிகளால் தேயச் செய்வார்கள்;
எல்லோரும் அடுத்தவர் நினைப்பதையே நினைப்பார்கள்;
எல்லோருக்கும் அடுத்தவருக்குத் தெரிந்தவனையே தெரிந்திருக்கும்.
கடவுளே, இவர்களது காட்டுலஸ்* இந்தப் பக்கமாய்க் கடந்தால்
என்ன தான் சொல்வார்கள் இவர்கள்?

The Scholars - W B Yeats

* காட்டுலஸ் – 2000 வருடங்களுக்கு முற்பட்ட ரோம் நகரக் கவிஞன். காதல் கவிதைகளுக்காகப் புகழ் பெற்றவன்.

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா – 3

 

தமிழில்: சரவணன் அபி

karl

அத்தியாயம்– 3

பார் மேடை மீது சாய்ந்து அமர்ந்திருந்த சோக்லோஸ் மதியம் கருத்தரங்கில் தோன்றியது போல் இப்போது பார்ப்பதற்கு அவ்வளவு இளமையாக தென்படவில்லை. ஸூட் கோட் ஒரு முக்காலியில் எறியப்பட்டிருந்தது; ஊதா நிற டை தளர்த்தப்பட்டு விமான நிலையத்தில் கிளம்ப வழியில்லாமல் இரவில் மாட்டிக்கொண்ட ஒரு பயணியின் களைத்த  பாவனையுடன் சரிந்திருந்த சோக்லோஸ், அறையை கடந்து தன்னிடம் வரும் ஹெண்டர்சனை பார்த்ததும், அருகிலிருந்த மேடையை பிடித்தவண்ணம் தடுமாறி எழுந்து நின்றார். ஹெண்டர்சனின் கையை ஓரளவு பெண்மையாக பிடித்துக் குலுக்கினார்.

“பார்த்ததில் மகிழ்ச்சி, மிக்லோஸ், அழகான டை”.

“ஹலோ ஜான், உன்னை பார்ப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது,” சோக்லோஸ் தளர்வாக புன்னகைத்தார். அவர் குரலில் தொனித்த நேர்மை ஹெண்டர்சனை தாக்கியது.

“உன்னுடைய கான்டராக்க்ஷன்  அனாலிசிஸ் கட்டுரையை J.A.M-ல் படித்தேன். அற்புதமான ஆய்வு”.

“அதெல்லாம் ஒன்றுமில்லை, நன்கு தெரிந்த உண்மைகளுக்கிடையே ஒரு சின்ன அவதானம், அவ்வளவுதான். பதிப்பிக்குமளவுக்கு அதில் ஒன்றுமில்லை.”

அதுதான் உண்மையும் கூட. இருவருக்கும் அது தெரிந்தே இருந்தாலும்  சோக்லோஸ் அதை விரும்பாததைப் போல் தோள்களை குலுக்கினார். பாருக்குள் ஒரு பார்வை பார்த்து விட்டு கைகளை ஒரு சமாதான குறியீடு போல் அகல விரித்தவாறு  சொன்னார்,”இந்த மதியத்தைப் பற்றி எனக்கு கோபமொன்றும் இல்லை. சிறிது நேரம்…கொஞ்சம்…சஞ்சலமாக இருந்தது. ஆனால், அவ்வளவு தான்.”

இருமல் சிரப் போன்றவொன்றை சோக்லோஸ் அருந்திக் கொண்டிருந்தார். ஹெண்டர்சன் அவருக்கும் அதே பானத்தையும், ஒரு  வைல்ட் டர்கியும் ஆர்டர் செய்தார். வந்ததும், ஒரு மிடறு அருந்தி விட்டு, “அப்புறம்? மரியா,” என்றார்.

“மரியா.” சோக்லோஸ் தனது கோப்பையை சாய்த்து அதன் உட்புறத்தை சிவப்பாக்கும் கருஞ்சிவப்பு திரவத்தை தனக்குள் ஆழ்ந்தவராக பார்த்துக் கொண்டிருந்தார். “கடைசியாக நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டோம்.  இந்த அக்டோபரில். நீ கேள்விப்பட்டாயா என்று தெரியவில்லை.”

“ம். ஹெர்ஷ் சொன்னான். வாழ்த்துக்கள். எல்லா இனிமையும் பெற வாழ்த்துக்கள்.” வாழ்த்தின் எதிர்ப்பதம் போல் உயிரற்ற குரலில் ஹெண்டர்சன் சொன்னார். “எப்படி இருக்கிறாள்?”

சோக்லோஸ் இன்னும் கோப்பைக்குள் ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருந்தார். “சில மாதங்களுக்கு முன் வரை போலிஷ் உணவுப்பயிற்சி எல்லாம் நடத்திக் கொண்டு மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள். நகருக்குள் காண்டோமினியம் ஒன்றில் வீட்டுக்கு முன்பணம் கூட கொடுத்துவிட்டோம். அப்புறம்தான் ஏதோ ஆகிவிட்டது. அவளே கூறிக்கொள்வது போல  அவள் ‘மதத்தைக் கண்டடைந்து’ விட்டாள்.”

“அடக்கடவுளே, எனக்கெல்லாம் என் கார் சாவியை கண்டுபிடிப்பது கூட கடினமாக இருக்கிறது.”

“சிரிப்புதான்,” என்றார் சோக்லோஸ் சிரிக்காமல். “உன் நகைச்சுவை உணர்ச்சியை ஏறக்குறைய நான் மறந்தே போனேன்.” இன்னொரு ட்ரிங்க் கொண்டுவரும்படி பணித்து விட்டு, அது வரும் வரை தனது கோப்பையை சோக்லோஸ் பார் மேடை மீது பொறுமையின்றி தட்டிக் கொண்டிருந்தார். “இப்போது இன்னும் அதிகமாக போய் விட்டது. சர்ச் பாதர் கூட ஒத்துக் கொள்கிறார் என்றால் பார்த்துக் கொள். போன மாதம் க்ரகாவிலிருக்கும் அவளது அம்மாவை அழைத்து தான் சிறுவயதில் பாட்டியின் பர்ஸிலிருந்து அறுநூறு ஸ்லோடிஸ் எடுத்ததைக் கூறியிருக்கிறாள். பாவம் அவள் அம்மா! எழுபது வயதில் தன் ஒரே மகள் திருடி என்று தானே ஒத்துக் கொள்வதை கேட்பதை நினைத்துப் பார்.”

“மதமாற்றம்,” ஹெண்டர்சன் முனகினார். “ஜீசஸ், யார் நினைத்துப் பார்த்திருக்கக் கூடும்?” அருந்திக் கொண்டிருந்த மதுவினால் ஹெண்டர்சனின் வார்த்தைகள் கட்டிழந்து  கொண்டிருந்தன. கேட்டுக்கொண்டிருந்த கதையின் விசித்திரம் அவரை மேலும்  இளக்கிக் கொண்டிருந்தது. ‘நல்ல வேளை, பயணத்தை தள்ளி போட்டுவிட்டு நான் வந்தது’ என்று நினைத்துக் கொண்டார். “அவளுக்கு பிடித்திருந்தால் நல்லது  தான் என்றாலும் எத்தனை பேரை அவள் கஷ்டப்படுத்துகிறாள்?அவள் அம்மா, நீ. இன்னும் வேறு யாரை?”

சோக்லோஸ் தலையசைத்தார். “உன்னால் உதவ முடியுமென்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.”

“நான் ஏன் உதவ வேண்டும்?”

“மரியாவுக்காக. எனக்காக. பிரச்னைகள் மோசமாகிக் கொண்டே போகிறது.”

ஹெண்டர்சன் மதுவை விரலால் கலக்கி விட்டு விரலை நக்கிக் கொண்டார். “அப்படியா? மோசமென்றால்?”

சோக்லோஸ் இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தது போல் தலையசைத்தார். “இப்போதெல்லாம் நமக்கு பிடித்த பேய்ப்படங்களுக்கு வருவதில்லை. வாரக்கடைசிகளில் பைபிள் ஸ்டடிக்கு போய் விடுகிறாள். நான் வராததற்கு திட்டு வேறு. கிறித்துவ பக்தி பாடல்கள் மட்டும் தான் கேட்பது.”

“அவ்வளவுதானே? படங்களும், குப்பையான பக்தி பாடல்களும், இல்லையா?”

“இல்லை, திருமண முடிவை மறு பரிசீலனை செய்வதாக போன வாரம் சொல்கிறாள்.”

உதட்டுக்கு கொண்டுபோன கோப்பையை ஹெண்டர்சன் ஒரு கணம் தாமதித்தார். பின் சுதாரித்து நீண்ட மிடறு ஒன்றை விழுங்கினார். ஹெண்டர்சனுக்கு இதுவொன்றும் பெரிய ஆச்சரியமாக இல்லை. முக்கிய விஷயங்களில்  திடீரென்று குழம்புவது மரியாவின் இயல்பு என்று அவருக்குத் தெரியும்.

சோக்லோஸின் உதடுகள் இறுகியிருந்தன. பார் மேடைக்கு பின்னால் அலமாரியில் இருந்த அலங்காரமான, மிளகு பொடிசெய்யும் இயந்திரத்தை ஏதோ மதச்சின்னத்தை பார்ப்பவர் போல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். “இயேசு மரணத்திலிருந்து எழுந்தார் என்று கத்தோலிக்கர்கள் நம்புவது உனக்கு தெரியுமா ஜான்?” சோக்லோஸ் உணர்ச்சிவசப்பட்டவராக புன்னகைத்துக் கொண்டார். “இறந்து கிடந்தவர், உயிர்த்து எழுந்து, நடந்து சென்றார் என்று நம்புவது? பேரதிசயம்.”

ஹெண்டர்சனுக்கு மரியா தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்திப்பதையோ, தங்கக்குவளையில் ஒயினை இயேசுவின் இரத்தமாக பருகுவதையோ  எண்ணிப்பார்க்கக்கூட முடியவில்லை. சிற்றின்பத்தைத் தவிர அவளை மற்றொன்றின் உருவாக பார்க்க அவருக்குக் கூடவில்லை.

எப்போது அவளை நினைத்து கொண்டாலும், முதலில் நினைவுக்கு வருவது மரியாவின் சமையல் – இறுக்கமாக சுருட்டிய கவும்ப்கி, உப்பிய கியல்பசா, பல்கேரிய வைன்… – அல்லது, அவளுடனான புணர்ச்சி…

மதம் ஓர் ஈர்ப்பாக ஹெண்டர்சனுக்கு என்றும் இருந்ததில்லை. ‘நான்-லீனியர் கண்ட்ரோல் தேற்றம்’ எப்படி பல பேருக்கு ஓர் உருவற்ற மாயத்தோற்றமாக தோன்றுமோ அப்படித்தான் அவரைப்பொறுத்தவரை மதம் . உறக்கம் வாராத சில பின்னிரவுகளில், போர்வை முடிச்சாகக் கிடக்க, நெற்றியில் வியர்வை பொங்க, தன் சினத்தையும், பதற்றத்தையும், சந்தேகங்களையும் ஒப்புவித்து கரைத்துவிடக் கூடிய ஓர் அலகிலாத, உருவில்லாத நற்பண்பு திடீரென்று தன்முன் தோன்றிவிடாதா என்ற ஏக்கம் இருந்ததுண்டு. சிலசமயம் அரைக்கனவின் நிலையில், அருகிலுள்ள மெக்டொனால்ட் கடையில் நின்றிருக்கும் இறைவடிவத்தின் பழங்காலப் போலியொன்று நல்லதே நடக்குமென்று அவரை வாழ்த்துவது போல் ஒரு  தரிசனம்.

ஆனாலும் மறுநாள் விழித்தெழும் போது  அவமானமும், சந்தேகமும் உடலெங்கும் எரியும். நம்புவதற்கு அங்கு என்ன இருக்கிறது? மிகக் கொடுமையான வசதிக்குறைவையும் சகித்துக் கொள்ளும் மனிதர்களின் திறன்; கடந்து செல்லும் ஒவ்வொரு வருடமும்   கறைபடிந்து கூடிக்கொண்டே வரும் குற்றவுணர்ச்சியும், துக்கமும்; குறைந்த சக்தியிலிருந்து உயர் சக்திக்குத் தாவும் எலக்ட்ரான்களின் பெருக்கு. அவற்றைத் தவிர வேறென்ன?

“இன்னும் இருக்கிறது.” சோக்லோஸ் தொடர்ந்தார். “அவளுடைய Ph.D. பட்டம்?”

உணவுக்கூடத்தின் இசை தேய்ந்து நின்றது போலவும், உள்ளிருந்தவர்கள் பஞ்சுப்பொதியினூடாக பேசுவது போல் சத்தம் அமுங்கிப் போனது போலவும் தோன்றியது. சோக்லோஸ் தனது காலி கோப்பையின் உட்புறத்தை பார்த்தவாறே பேசுவதை ஹெண்டர்சன் கவனித்தார். “Ph.D. படிப்பை நிறுத்திவிடப் போவதாகவும், அதுபற்றிய உண்மையை J.A.M-ல் வெளியிடப்போவதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.”

ஹெண்டர்சன் சோக்லோஸின் மணிக்கட்டை இறுகப்பற்றினார். “கடவுளே. அவளை தடுத்து நிறுத்து மிக்லோஸ்.”

சோக்லோஸ் தன் கையை விடுவித்துக் கொண்டே, “அவள் மிகத் தீவிரமாக இருக்கிறாள்.  இந்த நிலை அவளை மிக மோசமாக உணரச் செய்கிறது என்கிறாள்,” என்றார்.

ஹெண்டர்சன் தனது நாற்காலியில் சரிந்தார். இயந்திரத்தனமாக இன்னொரு கோப்பை மதுவை ஆர்டர் செய்தார். உடலில் மது தந்த  மயக்கத்தை விட  அதிகப்படியான ஒரு மரத்துப்போன உணர்வு பரவுவது தெரிந்தது. பல்மருத்துவரிடம் லோக்கல் அனஸ்தீசியா போட்டு கொண்டு தன் கண்முன் உலகம் பரபரப்பாக இயங்குவதை எவ்வித உணர்ச்சியுமில்லாமல் பார்ப்பவரின் மனநிலை.

“உனக்குத் தெரியாது ஜான். உன் ஆராய்ச்சிகளிலேயே அதுதான் உச்சம். சில்கோவ்ஸ்கியின் தேற்றம். அவள் அதை எழுதவில்லை என்பது எனக்குத் தெரியும். அவள் அதைப்பற்றி கவலை படவில்லை, அவளுக்கு அது ஒரு விஷயமேயில்லை. ஆனாலும்…” சோக்லோஸ் தயங்கினார். “எப்படி ஒரு படைப்பு! அற்புதமான நிரூபணம்!”

“ஏதோவொரு உத்வேகம்,” தோள்களை குலுக்கினார் ஹெண்டர்சன்.

“இன்னொருவரின் பெயரில் அது பதிப்பிக்கப்படுவது உனக்கு வேதனையாக இருந்திருக்கும்…”

“இல்லவே இல்லை,” என்றார் ஹெண்டர்சன், தேவைக்கு அதிகமாகவே உணர்ச்சியுடன். “மரியாவுக்காக அதை மகிழ்ச்சியாகத்தான் செய்தேன். அவள் மகிழ்ச்சிக்காக அதை செய்தேன்.”

“மகிழ்ச்சி.” சோக்லோஸ் விரக்தியாக புன்னகைத்தார். “அடையக் கடினமான நிலை.”

பொயின்கேர் மேனரிலிருந்து  ஹெண்டர்சன் வெளியேறிய ஐந்து மாதங்கள் கழித்து அது தொடங்கியது. சன்னலின் திரைகளை இழுத்து மூடி மதியம் வரை தூங்க ஹெண்டர்சன் யத்தனித்துக்கொண்டிருந்த ஒரு மே மாத குளிர்காலையில் மரியாவின் அழைப்பு வந்தது.  “எப்படி இருக்கிறாய்?” அவள் குரல் வெம்மையானதொரு நடுக்கத்தை அவர் தொடைகளினூடாக செலுத்தியது. கடைசியில் கசப்பான புன்னைகையுடன், “பிரமாதம்! நீ எப்படி இருக்கிறாய்?” என்றார்.

(தொடரும்)

 

அத்தியாயம் 1 

அத்தியாயம் 2 

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

பிரபலமான Zoetrope சிறுகதை பத்திரிகையில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த ‘Zilkowksky’s Theorem’ என்ற சிறுகதையின்  முறையாக முன்னனுமதி  பெற்று செய்யப்பட்ட மொழியாக்கம் இது.

ஒளிப்பட உதவி – Robotic Mobility Group, MIT