மொழியாக்கம்

வண்ணக்கழுத்து 17இ: லாமாவின் மெய்யறிவு

gay_neck_the_story_of_a_pigeon

அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் அந்த இரண்டு மரங்களுக்கு இடையிலான இடைவெளியை ஆராய்ந்தேன். அவை உயர்ந்து பருத்திருந்தவை, இரண்டுக்கும் நடுவே நாங்கள் இருவரும் நெஞ்சோடு நெஞ்சை ஒட்டிக் கொண்டு நடக்கக் கூடிய அளவே பூமி இருந்தது.

“இப்போது என்னுடைய பயம் தோய்ந்த ஆடையை இந்த இரட்டை மரங்களுக்கு நடுவே வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய உடைக்கு அடியில் இருந்து நேற்று வரை அவர் அணிந்திருந்த பழைய உடைகளின் மூட்டையை எடுக்கலானார்.  அதைத் தரையில் வைத்துவிட்டு இரண்டில் இரு மரத்தில் ஏறினார். மேலே ஏறிய பிறகு கோண்ட் ஒரு கயிற்று ஏணியை எனக்காக கீழே வீசினார். வண்ணக்கழுத்து என் தோளில் தனது சமநிலையை இருத்த தன் இறக்கைகளை அடித்துக் கொண்டிருக்க நான் அந்த ஏணியில் ஏறினேன். இரண்டுபேரும் கோண்ட் உட்கார்ந்து கொண்டிருந்த கிளையை பத்திரமாக அடைந்துவிட்டோம். மாலை விரைந்து வந்து கொண்டிருக்க நாங்கள் அங்கேயே சில நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தோம்.

அந்தி சாய்கையில் நான் முதலில் கவனித்த விஷயம் பறவைகளின் வாழ்க்கை. கொக்குகள், இருவாய்க் குருவிகள், க்ரவுஸ், பெஸண்டுகள், பாட்டுக் குருவிகள், கிளிகளின் மரகதக் கூட்டங்கள் காட்டை ஆக்கிரமிப்பது போல இருந்தது. தேனீயின் ரீங்காரமும் மரங்கொத்தியின் டக் டக் டக் சத்தமும், தொலைவில் கேட்ட கழுகின் கிறீச் ஒலியும், மலை ஓடையின் கீழித்துச் செல்லும் இரைச்சலோடும் ஏற்கெனவே முழித்துவிட்டிருந்த கழுதைப்புலிகளின் விட்டுவிட்டு வரும் கனைத்தலோடும் கலந்திருந்தது.

அந்த இரவு நாங்கள் இருப்பிடத்தை அமைத்திருந்த மரம் மிகவும் உயரமானது. எங்களுக்கு மேலே சிறுத்தையோ பாம்போ இல்லாதபடி நாங்கள் உயரத்திற்கு ஏறினோம். கவனமான ஆய்வுக்குப் பிறகு இரண்டு கிளைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு இடையே எங்களுடைய கயிற்று ஏணியை உறுதியான தொட்டிலாகக் கட்டினோம். இருப்பிடத்தில் பத்திரமாக உட்கார்ந்த உடனே கோண்ட், வானத்தைச் சுட்டிக் காட்டினார். உடனே நான் மேலே பார்த்தேன். அங்கே மிகப் பெரிய கழுகொன்று தன்னுடைய மாணிக்க நிற இறக்கைகளோடு பறந்து கொண்டிருந்தது. வெள்ளத்தைப் போன்று வேகமாக இருட்டு தரையிலிருந்து மேலெழுந்து வந்தாலும் கூட, வானுக்கு மேல் வெளிகள் ஒரு புறாவின் கழுத்தைப் போன்று ஒளிர்ந்தது. அந்த வெளியில் அந்த தனிக் கழுகு மீண்டும் மீண்டும் வட்டமடித்துக் கொண்டிருந்த்து. கோண்டைப் பொறுத்தவரை சந்தேகமே இல்லாமல் அந்த்க் கழுகு அஸ்தமிக்கும் சூரியனை வழிபடுகிறது.

அந்தக் கழுகின் இருப்பு ஏற்கெனவே அங்கிருந்த பறவைகளையும் பூச்சிகளையும் அசைவற்று வைத்திருந்தது. அவற்றுக்கு வெகு மேலே அந்தக் கழுகு இருந்த போதும், மெளன பக்தர்களின் கூட்டம் போல, அவர்களுடைய அரசன் பின்னும் முன்னும் பறந்து, அவர்களுடைய கடவுளான ஒளியின் பிதாவுக்கு ஒரு பூஜாரியைப் போலே மெய்மறந்து வணக்கம் செலுத்துகையில், அவை அமைதி காத்தன. மெல்ல அதன் இறக்கைகளில் இருந்து மாணிக்க ஒளி கசிந்தது. இப்போது அவை தங்கப் பொறிகளால் விளிம்புகள் செய்யப்பட்ட கருநீல பாய்மரத் துணியைப் போலே இருந்தன. அதனுடைய தொழுகை முடிவுக்கு வந்துவிட்டதைப் போலே, இன்னும் மேலே உயர்ந்து, தன் தெய்வத்தின் முன் தீக்குளிப்பதைப் போலே, தீயினால் எரிவது போன்று நின்ற சிகரங்களை நோக்கிப் பறந்து சென்று, அவற்றின் ஒளி வெள்ளத்தில் ஒரு அந்துப்பூச்சியைப் போலே காணாமல் போனது.

கீழே ஒரு எருமையின் முக்காரம் பூச்சிகளின் ஒலிகளை ஒவ்வொன்றாக விடுவித்து, மாலையின் நிசப்தத்தை கந்தல் கந்தலாகக் கிழித்தது. அருகில் ஒரு ஆந்தை அலற, என் துணிக்கு அடியில் இருந்த வண்ணக்கழுத்து என் நெஞ்சோடு நெருங்கி வந்தது. திடீரென்று நைட்டிங்கேலைப் போன்ற இரவுப் பறவையான ஹிமாலய குண்டுகரிச்சான் குருவி ஒன்று தன் மாயப் பாடலைத் தொடங்கியது. கடவுள் ஊதும் வெள்ளிப் புல்லாங்குழல் போல, ட்ரில்லுக்கு மேல் ட்ரில்லாக, ஏற்றத்துக்கு மேல் ஏற்றமாக, மரக்கூட்டங்களுக்கு இடையே வேகமாகப் பொழிந்து, அவற்றின் கடுமையான கிளைகளின் மீது வடிந்து காட்டுத் தரையில் இறங்கி பின் அவற்றின் வேர்களின் வழியே பூமியின் அடிநெஞ்சுக்கு இறங்கும் மழையைப் போல, அமைதி இறங்கியது.

முன்னரே வரும் கோடைக்கால இரவு உண்டாக்கும் மகிழ்ச்சி எக்காலத்திலும் விளக்க முடியாததாகவே இருக்கும். உண்மையில் இது மிகவும் இனிமையாகவும் தனிமையாகவும் இருந்ததால் எனக்கு கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்தது. மரத்தின் தண்டோடு என்னை பத்திரமாகப் பிணைக்க கோண்ட் இன்னொரு கயிற்றைக் என்னைச் சுற்றிக் கட்டினார்.  பின், செளகரியமாகத் தூங்குவதற்காக என் தலையை அவருடைய தோளில் இருத்திக் கொண்டேன். ஆனால், நான் அப்படிச் செய்வதற்கு முன்பாக கோண்ட் தன்னுடைய திட்டத்தைச் சொன்னார்.

”நான் கீழே கழற்றிப் போட்ட எனது உடைகள், நான் பயத்தின் பிடியில் இருந்த போது உடுத்தியவை. அவை ஒரு விசித்திரமான வாடையைக் கொண்டவை. அந்த எருமை மச்சான் இந்த வாடையை நுகர்ந்தால், அவன் இந்தப் பக்கம் வருவான். பயத்தினால் பீடிக்கப்பட்டிருப்பவன், பயத்தின் வாசனைக்கு பதிலாற்றுவான். நான் கழற்றிப் போட்ட துணிகளை ஆராய அவன் வந்தால், நாம் அவனுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம். அவனைக் கயிற்றால் பிணைத்து ஒரு கிடாரியைப் போலப் அடக்கி வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன்…” அவர் அதற்கு மேல் சொன்னவை என் காதில் விழவில்லை. நான் தூங்கிவிட்டிருந்தேன்.

வண்ணக்கழுத்து 17ஆ: லாமாவின் மெய்யறிவு

gay_neck_the_story_of_a_pigeon

அன்றைக்கு ஒரு பயங்கரமான செய்தி மடாலயத்தை வந்தடைந்தது. லாமா குறிப்பிட்ட அதே கிராமத்தை சில நாட்களுக்கு முன்னர் ஒரு காட்டெருமை தாக்கியிருக்கிறது. ஊருக்குப் பொதுவாக இருந்த கதிரடிக்கும் களத்திற்கு அருகில் நடந்த ஊர்ப் பெரியவர்களின் கூட்டம் முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இரண்டு பேரை, முன்தினம் மாலை அங்கு வந்த காட்டெருமை கொன்றிருக்கிறது. தலைமை லாமாவைச் சந்தித்து அந்த விலங்கை அழிக்கவும் அந்த முரட்டு மிருகத்தைப் பீடித்திருந்த துராத்மா நீங்குவதற்காக பிரார்த்தனை செய்யவும், தலைமை லாமாவை கேட்டுக் கொள்வதற்காக கிராமத்தவர்கள் ஒரு குழுவை அனுப்பியிருந்தார்கள். இருபத்து நான்கு மணிநேரத்தில் அந்த மிருகத்தை கொல்லக்கூடிய வழிவகையைச் செய்வதாக லாமா சொன்னார். “எல்லயற்ற கருணையின் அன்புக்கு பாத்திரமானவர்களே, அமைதியோடு வீட்டிற்குச் செல்லுங்கள். உங்களுடைய பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படும். அந்தி சாய்ந்த பின் வீட்டிற்கு வெளியே வராதீர்கள். வீட்டிலேயே இருந்து, அமைதியையும் துணிவையும் தியானம் செய்யுங்கள்”. அங்கே இருந்த கோண்ட் அவர்களிடம், “இந்த மிருகம் எவ்வளவு நாட்களாக உங்கள் கிராமத்தில் தொல்லை கொண்டிருக்கிறான்?” என்று கேட்டார். அந்தக் குழுவில் இருந்த ஒவ்வொருவருமே அந்த மிருகம் கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு இரவும் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்கள். அது அவர்களுடைய வசந்தகாலப் பயிரில் கிட்டத்தட்ட ஒரு பாதியை சாப்பிட்டுவிட்டிருந்தது. மீண்டும், அந்த காட்டெருமையை அழிக்கவும் தம்மை பாதுகாத்துக்கொள்ள உதவும் ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை வேண்டிவிட்டு, அவர்கள் கிராமத்தை நோக்கி கீழே இறங்கினார்கள்.

அந்தக் குழு சென்ற பின்னர், அருகில் நின்று கொண்டிருந்த கோண்டை நோக்கி, “வெற்றியால் தேர்வு செய்யப்பட்டவனே, இப்போது நீ குணமடைந்துவிட்டதால், அங்கே போய் அந்தக் கொலைகாரனை அழித்துவிடு” என்றார்.

“ஆனால்… குருவே”

“இனியும் பயப்பட வேண்டியதில்லை, கோண்ட். உன்னுடைய தியானங்கள் உன்னைக் குணப்படுத்திவிட்டன. இவற்றிலிருந்து என்ன பெற்றாய் என்பதை, இந்த வாய்ப்பை வைத்துக் கொண்டு காட்டிற்குப் போய் சோதித்துப்பார். தனிமையில் மனிதர்கள் பெற்ற சக்தியையும் சமநிலையையும் ஜனத் திரளில் சோதித்துப் பார்ப்பது கட்டாயம். இப்போதிலிருந்து இரண்டு சூரிய அஸ்தமனத்திற்குள் நீ வெற்றியோடு திரும்ப வேண்டும். உன்னுடைய வெற்றியின் மீது எனக்கு இருக்கும் மாறாத நம்பிக்கைக்காக இந்தப் பையனையும் அவனுடைய புறாவையும் உன்னோடு அழைத்துப் போ. உன்னுடைய சக்தியின் மீதோ இந்தக் காரியத்தில் உன்னுடைய வெற்றியின் மீதோ எனக்கு சந்தேகம் இருந்திருந்தால் ஒரு பதினாறு வயதுப் பையனை உன்னுடன் அழைத்துக் கொண்டு செல்ல சொல்லியிருக்கமாட்டேன். அந்தக் கொலைகாரனை நீதிக்கு முன்னால் நிறுத்து” என்றார் தலைமை லாமா.

அன்று மதியம் நாங்கள் காட்டுக்குக் கிளம்பினோம். மீண்டும் ஒரு இரவை காட்டில் கழிக்கப்போவாதை நினைத்து நான் உற்சாகமடைந்தேன். முழுமையானவர்களான கோண்டுடனும் வண்ணக்கழுத்துடனும் காட்டுக்கு, மீண்டும் ஒரு காட்டெருமையைத் தேடிச் செல்வது எத்தனை இன்பம். இது மாதிரியான ஒரு வாய்ப்பை வரவேற்காத சிறுவனும் இந்த உலகத்தில் இருப்பானா?

ஆக, நிரம்பி வழியும் உற்சாகத்துடன், கயிற்று ஏணி, ஒரு சுருக்குக் கயிறு, கத்திகளை எடுத்துக் கொண்டு, வண்ணக்கழுத்தை என் தோளில் ஏற்றிக் கொண்டு நாங்கள் கிளம்பினோம். ஆங்கிலேய அரசாங்கம், சாதாரண இந்திய மக்கள் நவீன ஆயுதங்கள் தரிக்க பயன்படுத்த தடை போட்டிருப்பதால், நாங்கள் துப்பாக்கிகளை எடுத்துக் கொள்ளவில்லை.

மதியம் மூன்று மணி சுமாருக்கு மடாலயத்திற்கு வட மேற்கே இருக்கும் அந்த கிராமத்தை அடைந்தோம். அந்த எருமையின் கால்தடத்தைக் கண்டுபிடித்தோம். அடர்ந்த காட்டுக்குள்ளும், அகன்ற பாதைகளிலும் அதைத் தொடர்ந்தோம். அங்குமிங்கும், ஓடையை கடக்கவும், கீழே விழுந்திருந்த ராட்சத மரங்களைத் தாண்டவும் வேண்டியிருந்தது. காட்டெருமையின் கால் குளம்புகளின் தடங்கள் அசாதாரணத் தெளிவுடனும் ஆழமாகவும் தரையில் பதிந்திருந்தன.

கோண்ட் சொன்னார், “இங்கே எவ்வளவு கடுமையாக இந்த மிருகம் உழன்றிருக்கிறது என்று பார். அது மரண பயத்தோடு இருந்திருக்க வேண்டும். மிருகங்கள் அச்சமில்லாத நிலையில் மிகக் குறைவான தடங்களையே விட்டுச் செல்லும். ஆனால், மிரண்டு விட்டால், சாவு பயம் ஒட்டுமொத்தமாக தங்கள் உடலை அழுத்துவதைப் போல நடந்து கொள்ளும். இவனுடைய கால் குளம்புகள், அவன் போன இடங்களில் எல்லாம் ஆழமாகவும் தெளிவாகவும் இறங்கியிருக்கின்றன. ரொம்பவே மிரண்டு போய் இருக்கிறான்.”

கடைசியில் நாங்கள் கடக்க முடியாத ஒரு ஆற்றை அடைந்தோம். கோண்டைப் பொறுத்தவரை அதனுடைய ஓட்டம், அதில் இறங்கினால் எங்கள் கால்களை உடைத்துவிடும் அளவிற்கு கூர்மையானவை. அந்த எருமையும் கூட அதைக் கடக்க முயற்சிக்கவில்லை என்பது ஆச்சரியம்தான். அதனால், நாங்கள் அந்த மிருகத்தை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு நதிக்கரையில் அதன் கால் தடங்களைத் மேலும் தேடினோம். இருபது நிமிடங்களில் அந்தக் காலடித்தடங்கள் ஓடையின் கரையில் காணாமல் போய், கரியைப் போல இருண்ட அடர்ந்த காட்டிற்குள் சென்றது, இப்போது மணி மாலை ஐந்து கூட ஆகியிருக்கவில்லை. எந்த வயதுடைய காட்டெருமைக்கும் கிராமத்திலிருந்து இவ்வளவு தூரம் வர அரை மணிநேர ஓட்டமே போதும்.

“உனக்கு இந்த தண்ணீரின் பாடல் கேட்கிறதா?” என்றார் கோண்ட். பல நிமிடங்கள் கவனித்துக் கேட்ட பின்பு, தண்ணீர் கோரைப் புற்களையும் அதற்கு பக்கத்திலேயே இருக்கும் மற்ற புற்களையும் முத்தமிட்டபடி எழுப்பும் கல கல ஒலியையும் முனகல் ஒலியையும் கேட்டேன். அந்த நதி ஓடி இறங்கும் ஏரியிலிருந்து இருபது அடி தொலைவில் இருந்தோம். “அந்தக் கொலைகார எருமை இந்த இடத்திற்கும் அந்தக் காயலுக்கும் நடுவில் தான் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை தூங்கிக் கொண்டிருக்கலாம்”, என்றார் கோண்ட். ”அங்கிருக்கும் இரட்டை மரங்கள் ஒன்றில் தங்குவோம். இருட்டிக் கொண்டு வருகிறது. சீக்கிரமே அந்த மிருகம் கண்டிப்பாக இங்கே வரும். அது வரும் போது, நாம் காட்டின் தரையில் இருக்கக் கூடாது. அந்த மரங்களுக்கு இடையே நான்கு அடி கூட இடைவெளி இல்லை.”

வண்ணக்கழுத்து 17அ: லாமாவின் மெய்யறிவு

gay_neck_the_story_of_a_pigeon

மாயக்கூத்தன்

பத்து நாட்கள், லாமா சொன்னபடியே கடுமையாகவும் ஆத்மார்த்தமாகவும் தியானம் செய்த பிறகு அவர் என்னையும் வண்ணக்கழுத்தையும் கூப்பிட்டனுப்பினார். வண்ணக்கழுத்தை என் கைகளில் ஏந்திக் கொண்டு அவருடைய அறையை நோக்கி ஏறிச் சென்றேன். வழக்கமாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் அவருடைய முகம் இன்றைக்கு பழுப்பு நிறத்தில், மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. அவருடைய பாதாம் வடிவக் கண்களில் ஒருவித புதுமையான சமநிலையும் சக்தியும் ஒளிர்ந்தது. அவர் வண்ணக்கழுத்தை தன் கைகளில் எடுத்துக் கொண்டு,

“வாடைக் காற்று உன்னை குணப்படுத்தட்டும்
தென்றல் உன்னைக் குணப்படுத்தட்டும்
கோடைக் காற்றும் கொண்டல் காற்றும் ஆரோக்கியத்தை உன் மீது பொழியட்டும்
அச்சம் உன்னைவிட்டுப் போகிறது
வெறுப்பு உன்னைவிட்டுப் போகிறது
சந்தேகமும் உன்னைவிட்டுப் போகிறது
தைரியம் பொங்கும் புதுவெள்ளமென உனக்குக்குள்ளே விரைகிறது
உன் இருப்பு மொத்தத்தையும் அமைதி ஆள்கிறது
அமைதியும் வலிமையும் உனது இரு இறக்கைகள் ஆகிவிட்டன
உன் கண்களில் துணிவு ஒளிர்கிறது;
இதயத்தில் சக்தியும் வீரமும் உறைகின்றன
நீ குணமடைந்துவிட்டாய்
நீ குணமடைந்துவிட்டாய்
நீ குணமடைந்துவிட்டாய்
ஷாந்தி! ஷாந்தி! ஷாந்தி!

சூரிய அஸ்தமனத்தில், இமாலய சிகரங்களை வெவ்வேறு வண்ணச் சுவாலைகளாய் ஒளிரும் வரை நாங்கள் அங்கேயே உட்கார்ந்து இந்த எண்ணங்களை தியானித்தோம். எங்களைச் சுற்றி இருந்த பள்ளத்தாக்குகள், குகைகள், காடுகள் எல்லாம் ஊதாப் போர்வை போர்த்திக் கொண்டிருந்தன.

வண்ணக்கழுத்து மெதுவாக லாமாவின் கைகளில் இருந்து கீழே குதித்து, அந்த அறையின் வாசலுக்கு நடந்து சென்று சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தான். தன்னுடைய இடது இறக்கையை விரித்து காத்திருந்தான். பிறகு மென்மையாக, அவ்வளவு மெதுவாக, ஒவ்வொரு சிறகாக, ஒவ்வொரு தசையாக, கடைசியில் பாய்மரத் துணியைப் போல விரிய, வலது இறக்கையை உயர்த்தினான். உடனடியாகப் பறப்பதைப் போல நாடகத்தனமாக எதையும் செய்யாமல், ஏதோ மதிப்புமிக்க, ஆனால் உடைந்துவிடக் கூடிய இரு காற்றாடிகளைப் போல தன்னுடைய இறக்கைகளை மூடிக் கொண்டான். அந்திச் சூரியனுக்கு எப்படி வணக்கம் சொல்ல வேண்டும் என்பதை அவனும் அறிந்திருந்தான். ஒரு பூஜாரியின் மாண்புடன் அவன் படிகளில் இறங்கினான். என் பார்வையை விட்டு அவன் மறைந்தவுடன், தன் இறக்கைகளை அடித்துக்கொள்ளும் சத்தததைக் கேட்டேன், கேட்ட மாதிரி கற்பனை செய்தேன். உண்மையில் என்ன நடந்தது என்பதைக் காண விரைந்து எழுந்தேன். ஆனால், லாமா என் தோள்களில் கையைப் போட்டு என்னை தடுத்து நிறுத்தினார். அவருடைய இதழ்களில் இன்னதென்றுபுரிந்து கொள்ள முடியாத ஒரு புன்னகை தவழ்ந்திருந்தது.

அடுத்த நாள் காலையில் நடந்த விஷயங்களை கோண்டிடம் சொன்னேன். அவர் சாதாரணமாக பதில் சொன்னார். ”வண்ணக்கழுத்து தன் இறக்கைகளை விரித்து அஸ்தமிக்கும் சூரியனுக்கு வணக்கம் சொன்னான் என்று நீ சொல்கிறாய். அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. விலங்குகள் ஆன்மீக எண்ணம் கொண்டவை. ஆனால் மனிதன் தனது அறியாமையால் அவை அப்படியில்லை என்று நினைக்கிறான். குரங்குகள், கழுகுகள், புறாக்கள், சிறுத்தைகள், ஏன் கீரிப்பிள்ளைகள் கூட சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் வணங்குவதை நான் பார்த்திருக்கிறேன்.”

“எனக்கு அவற்றைக் காண்பிக்க முடியுமா உங்களால்?”

“முடியும். ஆனால் இப்போது இல்லை. நாம் போய் வண்ணக்கழுத்துக்கு காலையுணவைக் கொடுப்போம்” என்றார் கோண்ட்.

நாங்கள் அவனுடைய கூண்டை அடைந்த போது, அது திறந்திருப்பதையும் அதற்குள் அவன் இல்லாததையும் கண்டோம்.  நான் ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால், மடாலயத்திற்கு வந்த பிற்பாடு ஒவ்வொரு இரவும் அவனுடைய கூண்டை நான் திறந்து தான் வைக்கிறேன். ஆனால், அவன் எங்கு போனான்? பிரதான கட்டிடத்தில் அவனைக் காணவில்லை என்பதால் நாங்கள் நூலகத்திற்குச் சென்றோம். அங்கு ஆளில்லாத வெளிப்புற அறையில் அவனுடைய சிறகுகள் கிடப்பதைக் கண்டோம். பக்கத்திலேயே கோண்ட், மரநாய் ஒன்றின் பாதச் சுவடுகளைக் கண்டுபிடித்தார். பிரச்சனை இருந்திருக்கும் என்று நாங்கள் சந்தேகித்தோம். ஆனால், அந்த மரநாய் அவனைத் தாக்கி கொன்றிருந்தால், தரையில் அவனுடைய ரத்தம் இருந்திருக்குமே. பிறகு எங்கு பறந்து போயிருப்பான்? என்ன செய்திருப்பான்? இப்போது எங்கே இருப்பான்?

நாங்கள் ஒரு மணிநேரம் அலைந்தோம். எங்களுடைய தேடலை நிறுத்தலாம் என்று நினைத்த போது, அவன் எழுப்பும் ஒலியைக் கேட்டோம். நூலகத்தின் கூரையில், இறவாணத்தில் தங்கள் கூடுகளில் இருந்த தன்னுடைய பழைய நண்பர்களான உழவாரக் குருவிகளுடன் அவன் பேசிக் கொண்டிருந்தான். இவனுடைய ஒலிக்கு அவர்கள் பதிலளிப்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. திருவாளர் உழவாரக்குருவி “சீப் சீப் சீப்” என்று கத்தினார். நான் உற்சாகத்தில் வண்ணக்கழுத்தை நோக்கிக் கூவினேன். “ஆயா ஆய்!” என்று காலைச் சாப்பாட்டிற்காக அவனை அழைத்தேன். அவன் கழுத்தை வளைத்து கவனித்தான். பிறகு, நான் மீண்டும் அவனை அழைக்க, அவன் என்னைப் பார்த்தான். உடனடியாக தன் இறக்கைகளை சப்தமாக அடித்து, கீழ் நோக்கிப் பறந்து என்னுடைய மணிக்கட்டில், சிறிதும் அலட்டிக்கொள்ளாதது போல் வந்து அமர்ந்தான்.

அன்றைய சூரிய உதயத்தின் போது, காலை தியானத்திற்காகச் செல்லும் பூசாரிகளின் காலடிச் சத்தங்களைக் கேட்டு, கூண்டிலிருந்து வெளி வந்து, வெளிப்புற அறைக்குச் சென்ற போது, அங்கு ஒரு அனுபவமில்லா இளம் மரநாய் அவனைத் தாக்கியிருக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. வண்ணக்கழுத்தைப் போன்ற அனுபவசாலியால், ஒன்றிரண்டு சிறகுகளை மட்டுமே உதிர்த்து அந்த மரநாய்க்கு எளிதாக போக்குகாட்டிவிட முடியும். அந்த இளம் மரநாய், குவிந்திருக்கும் இறகுகளுக்கு இடையே புறாவைத் தேடிக் கொண்டிருக்க, அவனுக்கு இரையாகி இருக்க வேண்டியதோ வானத்தை நோக்கிப் பறந்திருக்கும். வானத்தில், உதிக்கும் சூரியனுக்கு வணக்கம் செலுத்த பறந்து கொண்டிருந்த தனது பழைய நண்பனான உழவாரக் குருவியைப் பார்த்திருக்க வேண்டும். இருவரும் இணைந்து காலை வழிபாட்டை முடித்த பின்னர், உரையாடுவதற்காக மடாலய நூலகக் கூரையில் இறங்கியிருக்கிறார்கள்.

வண்ணக்கழுத்து 16ஆ: வெறுப்பும் பயமும்

gay_neck_the_story_of_a_pigeon

நான் கோண்டின் அறிவுரையை ஏற்று, வண்ணக்கழுத்தை ஒரு கூண்டிலும் அவன் பெடையை மற்றொரு கூண்டிலும் போட்டுக் கொண்டு வடக்கு நோக்கி பயணித்தேன்.

முந்தைய இலையுதிர்காலத்தை விட இந்த வசந்தகாலத்தில் மலைகள் எத்தனை வித்தியாசமாய் இருக்கின்றன! திடீர்த் தேவையை முன்னிட்டு என் பெற்றோர்கள் டெண்டாமில் உள்ள அவர்களுடைய வீட்டை வழக்கத்திற்கு மாறாக பல மாதங்கள் முன்பாகவே திறந்திருந்தனர். அங்கே எல்லாம் சீரான பிறகு, ஏப்ரல் மாத கடைசியில் வண்ணக்கழுத்தை எடுத்துக் கொண்டு குதிரைகளில் பயணித்த ஒரு திபெத்திய நாடோடிக் கூட்டத்தின் துணையோடு சிங்காலிலா நோக்கிப் புறப்பட்டேன். அவனுடைய பெடையை வீட்டிலேயே விட்டுவிட்டேன். ஒருவேளை அவனால் மீண்டும் பறக்க முடிந்தால் பெடையைத் தேடி வருவானே என்பதற்காக. அவனை குணமாக்கச் சரியான யுத்தி, அந்தப் பெடையை ஒரு ஈர்ப்பு சக்தியாக பயன்படுத்துவது. அவன், புதிதாக இடப்பட்ட முட்டைகளை அடைகாத்து பொறிக்க தனது துணைக்கு உதவிகரமாக இருக்க திரும்புவான் என்று கோண்ட் நினைத்தார். ஆனால், நாங்கள் கிளம்பிய மறுநாளே என் பெற்றோர் அந்த முட்டைகளை அழித்துவிட்டனர். வண்ணக்கழுத்தின் பெயருக்கு பங்கம் செய்யும் விதமாக சீக்கான, குறைபாடுடைய குஞ்சுகள் உருவாவதை நாங்கள் விரும்பவில்லை.

என் பறவையை என் தோளிலே தூக்கிச் சென்றேன். அவன் நாள் முழுக்க அங்குதான் உட்கார்ந்து கொண்டு வந்தான். இரவில் அவனை பாதுகாப்பாக அவனுடைய கூண்டில் அடைத்து வைத்தோம். அது அவனுக்கு நன்மை செய்தது. பன்னிரெண்டு மணிநேர மலைக்காற்றும் அதன் வெளிச்சமும் அவனை உடலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும், அவன் என் தோளிலிருந்து தன் பெடையைத் தேடி, அவள் முட்டையைப் பொறிக்க உதவி செய்ய, பறந்து செல்ல ஒருமுறை கூட முயற்சி செய்யவில்லை.

வசந்தகால இமாலயம் தனித்துவம் வாய்ந்தது. பூமி முழுக்க வெள்ளை வயலட் மலர்களால் ஒளிர்ந்தது. சூடான ஈரப்பதம் நிரம்பிய பள்ளத்தாக்குகளில் இருந்த ஃபெர்ன்கள்(ferns), கருநீல வானத்தில் இருக்கும் விலைமதிப்பற்ற கல்லைப் போல இருந்த வெள்ளை மலைகளை, தங்கள் பெரிய கரங்களைக் கொண்டு எட்டிப் பிடிக்க முயற்சி செய்வது போல படர்ந்து கொண்டிருந்தன, இடையிடையே அதற்குள் பழுக்கத் தொடங்கியிருந்த ராஸ்பெர்ரி பழ மரங்கள். சில சமயங்களில், வளர்ச்சி தடைப்பட்டிருந்த ஓக், மிகப்பெரிய இலம், தேவதாரு மற்றும் கஷ்கொட்டை மரங்கள் இருந்த அடந்த காடுகளைக் கடந்து சென்றோம். சூரிய ஒளியை முழுவதும் மறைக்கும்படியான எண்ணிக்கையில் அவை வளர்ந்திருந்தன. மரங்களோடு மரமும், கொம்புகளோடு கொம்பும், வேர்களோடு போராடும் வேர்களும், வெளிச்சத்திற்காகவும் உயிருக்காகவும் போராடின. அவற்றுக்கு கீழே இந்த மரங்களினால் உண்டான இருட்டில், தம் பங்குக்கு புலிகளாலும், சிறுத்தைகளாலும் கருஞ்சிறுத்தைகளாலும் வேட்டையாடப்படுவதற்காகவே, நிறைய மான்கள் செழித்து வளர்ந்திருந்த புற்களையும் செடிகளையும் மேய்ந்து கொண்டிருந்தன. எங்கெங்கு உயிர் செழிப்பாக வளர்ந்திருந்ததோ, அங்கெல்லாம் பறவைகள், விலங்குகள் மற்றும் செடிகளுக்கு இடையில் இருத்தலுக்கான போராட்டம் இன்னும் உக்கிரமாக இருந்தது. இத்தகைய தன்முரண் வாழ்வின் இயல்புகளுள் ஒன்று. பூச்சிகளுக்கு கூட இதிலிருந்து விடுதலை கிடையாது.

நாங்கள், காட்டின் இருளிலிருந்து வெளிவந்து வெட்ட வெளியை நோக்கிய போது, சூடான வெப்பமண்டல சூரிய ஒளி, திடீரென்று தன்னுடைய வைர நெருப்பு முனைகளால் எங்கள் கண்களைப் பறித்தது. தட்டான்களின் பொன்னிற அசைவு காற்றுவெளியை நிரப்பியது. வண்ணத்துப்பூச்சிகள், குருவிகள், ராபின்கள், ஜேக்கள் மற்றும் மயில்கள் சப்தங்கள் எழுப்பி, மரத்திலிருந்து மரத்திற்கும், சிகரங்களிலிருந்து உயர்ந்த சிகரங்களுக்கும் தாவிக் காதல் செய்தன.

ஒருபக்கம் தேயிலைத் தோட்டங்களும் வலது பக்கம் பைன் காடுகளும் கொண்ட திறந்த வெளியில், கத்தி முனைகளைப் போன்று நேரான சரிவுகளில் நாங்கள் கஷ்டப்பட்டு தடுமாறி முன்னேறினோம். அங்கே காற்று அடர்த்தியை இழந்திருந்ததால், சுவாசிப்பது சிரமமாக இருந்தது. சப்தங்களும் எதிரொலிகளும் வெகு தூரம் பயணித்தன. கிசுகிசுப்புகள் கூட சில மையில் தூரம் தாண்டியும் கேட்கப்படுவதிலிருந்து தப்ப முடியவில்லை. மனிதர்களும் விலங்குகளும் ஒருசேர அமைதியானார்கள். கால் குளம்புகளின் தடதடக்கும் சப்தங்களைத் தவிர குதிரைகளும் மனிதர்களும், எங்கள் மீது கவிந்திருக்கும் தனிமைக்கும் அமைதிக்கும் களங்கம் ஏற்படாதவாறே முன்னேறினோம்.

கருநீல வெட்டவெளிவானம் மேகங்கள் அற்று தூய்மையாகவும், வடக்கே ஒரு பெருமூச்செரிந்தாற்போல் செல்லும் நாரைக் கூட்டங்களையும், சரிவுகளில் ஒரு அடிநாதமாய் விரைந்து இறங்கும் கழுகுகளையும் தவிர எந்தச் சலனமும் அற்று இருந்தது. எல்லாமுமே குளிர்ந்து, கூர்மையாகவும் விரைவாகவும் நடந்தன. ஒரே இரவில் ஆர்கிட்கள் வெடித்து, தங்களுடைய ஊதா நிறக் கண்களை எங்களை நோக்கித் திறந்திருந்தன. சாமந்திப் பூக்கள் காலைப் பனியினால் நிறைந்திருந்தன. கீழே இருந்த ஏரிகளில் நீலத்தாமரையும் வெள்ளைத் தாமரையும் தேனிக்களுக்காக தங்கள் இதழ்களை விரித்தன.

இப்போது நாங்கள் சிங்காலிலாவுக்கு அருகே வந்திருந்தோம். மலை உச்சியிலிருந்து மடாலயம் தன் தலையை உயர்த்தி எங்களை அழைத்தது. இறக்கை வடிவிலமைந்த அதன் கூரையும் பழமையான சுவர்களும் தொடுவானத்தில் ஒரு பதாகையைப் போல மிதந்தன. நான் விரைந்து நடக்க அறிவுறுத்தப்பட்டேன். அடுத்த ஒரு மணிநேரத்தில் மடாலயத்தின் செங்குத்தான பாதையில் நான் ஏறிக் கொண்டிருந்தேன்.

நமது அன்றாட வாழ்வின் போராட்டங்களில் இருந்து உயர்ந்து மேலே வாழும் மனிதர்களுக்கு இடையே இருப்பதுதான் என்னவொரு நிம்மதி! அது மதியப் பொழுது. நான் கோண்டுடன் ஒரு பால்சம் காட்டின் வழியே கீழே இறங்கி ஒரு நீரூற்றுக்குச் சென்றேன். அங்கே நாங்கள் குளித்ததுடன் வண்ணக்கழுத்தையும் சுத்தமாக கழுவினோம். வண்ணக்கழுத்து தன்னுடைய கூண்டில் மதிய உணவை உண்டு முடித்த பின்னர், நானும் கோண்டும் சாப்பாட்டு அறைக்குச் சென்றோம். அங்கே லாமாக்கள் எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த அறை கருங்காலி மரத் தூண் மண்டபம் போல இருந்தது. தூண்களின் உச்சி தங்கத்தினால் ஆன டிராகன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பல நூற்றாண்டுகளாக கருத்து வளர்ந்திருந்த தேக்கு உத்திரங்களில் பெரிய தாமரை வடிவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அவை மல்லிகையைப் போல மென்மையாகவும் உலோகத்தைப் போல உறுதியாகவும் இருந்தன. தரையில் செம்பாறைகளில், காவி நிற உடையணிந்த துறவிகள் தியானத்தில் ஆழ்ந்திருந்தனர். உணவுக்கு நன்றி கூறும் பிரார்த்தனை அது. அனைவரும் ஒன்றாக, க்ரிகோரியன் ஸ்லோகம் போன்ற ஒன்றைச் சொல்லி தங்கள் பிரார்த்தனையை முடிக்கும் வரை நானும் கோண்டும் சாப்பாட்டு அறையின் வாயிலில் நின்று கொண்டிருந்தோம்.

“புத்தம் மே சரணம்

தர்மம் மே சரணம்

ஓம் மணி மதமே ஓம்”

புத்தர் என்னும் அறிவே எங்கள் புகல்

மதமே எங்கள் புகல்

வாழ்வு என்னும் தாமரையில் ஒளிரும்

உண்மை மணிவிளக்கே எங்கள் புகல்

 

அறமும் எழுத்தும் – ஜென் வெப்

இது அவ்வப்போது பேசப்படுகிறது. அறமும் எழுத்தும். பொருத்தமற்ற மணவுறவில் பிணைக்கப்பட்ட இரு கருத்துகள். அறம் சார்ந்து எழுதுவது எப்படி? அழகியல் தேவைகளுக்கும், கதைகூறலின் ஆரத்துக்கும், வாசக தேவைகளுக்கும், துரோகம் இழைக்காமல் அறம் சார்ந்து எழுதுவது எப்படி? அது தவிர, அறம் சார்ந்த எழுத்து என்றால் என்ன?

கல்வித்துறையில் இதற்கான பதில் நேரடியானது: அறம் சார்ந்து எழுதுவது என்பது பிறர் எழுத்தைத் திருடாமல் இருப்பது, பொய்த் ‘தகவல்களை’ அளிக்காமல் இருப்பது.

மிலன் குந்தேராவைப் பொறுத்தவரை இதற்கான பதில் நேரடியானது.

“இருத்தலில் இதுவரை அறியப்படாதிருக்கும் கூறொன்றைக் கண்டு சொல்லாத நாவல் அறமற்றது. அறிவொன்றே நாவலில் அறம்”

ஆஸ்கார் வைல்டுக்கும் நேரடி பதில் இருந்தது- “அறம் சார்ந்த, அல்லது அறமற்ற புத்தகம் என்பது கிடையாது,” என்று அவர் ‘தி பிக்சர் ஆஃப் கிரே‘யின் முன்னுரையில் எழுதுகிறார்.

நன்றாக எழுதப்பட்ட புத்தகங்கள், மோசமாக எழுதப்பட்ட புத்தகங்கள். அவ்வளவுதான்.

இந்தப் பதில்கள் அவ்வளவு பயனுள்ளதாய் இல்லை. படைப்பெழுத்தாளர்கள் அவசியம் பிறர் எழுத்தைத் திருடக்கூடாதுதான், ஆனால் நாம் நிச்சயம் புது விஷயங்களை புனைந்தாக வேண்டும். எல்லா எழுத்தாளர்களும் அறிவூட்டும் உந்துதலை உணர்வதில்லை. வைல்ட், ‘நன்றாக எழுதப்பட்ட’ புத்தகத்துக்கும், ‘மோசமாக எழுதப்பட்ட’ புத்தகத்துக்கும் என்ற வேறுபாடு?

நல்லது; கெட்டது: ‘அறம்’ என்பதைப் போல் இந்தச் சொற்களை ‘வெற்று குறிப்பான்கள்” (“empty signifiers”) என்று மொழியமைப்பியல் வல்லுனர்கள் அழைக்கின்றனர். அது சுட்டும் பொருள் அல்லது விஷயத்தை எந்த ஒரு சொல்லும் குறிக்கலாம். உரித்தான பெயர்ச்சொற்கள் தவிர பிற சொற்கள் எதுவும் வேறு எதற்கும்மட்டுமே உரியவையல்ல. அவையனைத்தும் எந்தப் பொருளை அல்லது கருத்தைப் பெயரிட்டு அழைக்கின்றனவோ, அவற்றால் அதைச் சுட்டும் வகையில் நம் கவனத்தைத் திருப்ப மட்டுமே முடியும். வெற்று குறிப்பான்கள் திண்மம் கொண்ட பொருள், அல்லது, ஏற்றுக்கொள்ளப்பட்ட அர்த்தம் எதையும் சுட்டுவதில்லை. அவை, “அர்த்தத்தை உமிழ்கின்றன என்பதை விட, உறிஞ்சிக் கொள்கின்றன”

“நல்ல எழுத்து”, “அறம் சார்ந்த எழுத்து” என்றெல்லாம் சொல்வது, ‘நாமனைவரும்’ புரிந்துகொள்ளும் கருத்துகளுக்கு பெயர் சூட்டுவது போல்தான் தெரிகிறது; ஆனால் ‘நாமனைவரும்’ நம் தேர்வுகளை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. (நான் ‘நல்ல எழுத்து’ என்று அழைப்பது உங்களுக்கு குப்பையாய் இருக்கும்)

ஓரளவுக்கு இது ரசனை சார்ந்த விஷயம்; அல்லது சமகால விழுமியங்கள் சார்ந்த விஷயம்; அல்லது அரசியல். இங்கேதான் நாம் அறம் நோக்கித் திரும்புகிறோம். இங்கு நான் அறம் பற்றி எழுதப்பட்ட மிகப்பெரும் தொகுதியைச் சுருக்கித் தர முயற்சி செய்யப்போவதில்லை. நாம் உயிருள்ள ஒரு குறிப்பிட்ட ‘உண்மையை’ கொண்ட கதைகளை போதனைகளாய் இல்லாத வகையில் எப்படிச் சொல்கிறோம், பிம்பங்களாய் எப்படி உருவாக்குகிறோம், என்பதுதான் இங்கு என் அக்கறை (‘உண்மை’ என்ற சொல்லை நான் வேண்டுமென்றேதான் மேற்கோள்களுக்குள் தந்திருக்கிறேன், அதுவும் ஒரு வெற்று குறிப்பான் என்பதால்)

நான் ஏன் எழுதுகிறேன்‘ என்ற தன் கட்டுரையின் துவக்கத்தில் ஜோன் டிடியன், எழுத்தென்பது பிறர் மீது தன்னை வலியுறுத்தும் கலை என்கிறார், நான் சொல்வதைக் கேள், நான் பார்க்கும் வகையில் பார், உன் மனதை மாற்றிக் கொள் என்று சொல்வது அது.

நிச்சயம் உண்மைதான். ஆனால் தொடர்ந்து நம்மைப் பிறர் மீது வலியுறுத்துவது என்பது ‘மாண்ட்டி பைதன் அண்ட் தி ஹோலி கிரெயிலில்‘ வரும் சாமியார்கள் போல் நம்மை மாற்றிவிடும்: முடிவில்லாமல் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டு, நம்மையும் (நம் வாசகர்களையும்) முடிவில்லாமல் தலையில் அடித்துக் கொண்டிருக்கச் செய்யும்.

அறம் சார்ந்த எழுத்து எது என்பதற்கு முழு விடை இல்லை, ஆனால் மிசேல் பூக்கோ, சிந்தனையால் தெளிவடைந்த விடுதலையுணர்வு அற வடிவைத் தேர்ந்தெடுக்கிறது என்று சொல்லும்போது இதற்கு அருகே வருகிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அதாவது, நாம் உருவாக்கும் அர்த்தங்கள், நாம் உருவம் அளிக்கும் உலகம் குறித்து பிரக்ஞைப்பூர்வமாக சிந்தித்து எழுதப்படும் எழுத்தே அறம் சார்ந்த எழுத்து. நான் ஒரு படைப்பை விரும்பாமல் இருக்கலாம், அதன் உலகப் பார்வையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். ஆனால், வைல்ட் சொன்னதற்கு மாறாக, யோசித்து எழுதப்படும் சூழலில் அது நிச்சயம் அறம் சார்ந்த எழுத்துதான்.

எழுத்தாளர்கள் எப்போதும் பிரதிமைப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்: உலகுக்கும் அதனுள்ளிருக்கும் உறவுகளுக்கும் உருவம் அளித்துக் கொண்டேயிருக்கிறார்கள்; வார்த்தைகள் தாம் எவற்றின் குறிகளாய்ப் பெயர் சூட்டி நிற்கின்றனவோ அவற்றுக்கு அப்பாலும் செயலாற்றுகின்றன. சொற்றொடர்களாய், வாக்கியங்களாய், பத்திகளாய், முழு படைப்புகளாய் ஒருங்கமைப்பட்ட வடிவில், வாசகர்கள் உணர்ந்து, கண்டு, செவித்து, முகரக்கூடிய சூழலைச் சொற்கள் அளிக்க முடியும்.

இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட சொற்கள், மொழியின் அருவ நிலைக்கும், பருண்ம உலகின் திண்மத்தன்மைக்கும் இடையில் உள்ள வெளியை இணைக்க முடியும். தன்னால் விவரிக்கப்படும் உலகை இருப்பதாய்ச் செய்ய முடியும், மெய்ம்மை கொண்டதாய் உணர்த்த முடியும்.

அறம் சார்ந்த எழுத்தை நாம் இப்படிச் சொல்லலாம்: திண்ம உலகை எதிர்கொண்டு, பல்கூட்ட மக்களின் வாழ்வனுபவத்தை விவரிக்கும் வகையில் மொழிகளைப் பயன்படுத்தும் படைப்பு.

கதைசொல்லல் மற்றும் கவிதையின் பிரதிமைப்படுத்தும் ஆற்றலை, பருண்மத்தன்மையைச் சிறப்பாய்க் கையாளும் படைப்புகளின் முன் தம் உணர்வாலும் புலனனுபவத்தாலும் வாசகர்கள் எதிர்வினையாற்றும்போது நாம் காண முடிகிறது. சிரிப்பாகட்டும், அழுகையாகட்டும், நம் அனுபவத்தை நண்பர்களுடன் பகிர்வதாகட்டும்- ‘நல்ல’ எழுத்து நம்மை நெகிழச் செய்கிறது.

வெவ்வேறு மக்களின் பங்களிப்பை ஆவணப்படுத்தும் படைப்புக்களைத் தணிக்கை செய்ய அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் அவற்றின் ஆற்றலைச் சுட்டுகின்றன. 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசு, அகதிகள் குறித்து, ‘தனிநபர்களாய் உணர்த்தும், அவர்களின் மானுடத்தன்மையை வெளிப்படுத்தும் சித்தரிப்புகள்” நிராகரிக்கப்பட வேண்டும் என்று மேற்கொண்ட முயற்சிகள் இப்படிப்பட்ட ஒரு உதாரணம்.

இந்த ஆணையைக் கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஆஸ்திரேலிய எழுத்தாளர்களும் கலைஞர்களும் மௌனத்தாலோ பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தாக்கங்களாலோ எதிர்கொள்ளவில்லை; மாறாய், தனியாளுமைகளாய், தனித்தன்மை கொண்டவர்களாய் உணர்த்தும் படைப்புகளை உருவாக்கினார்கள். ஆஸ்திரேலியாவிலும் பசிபிக் பகுதிகளிலும் சிறைப்படுத்தப்பட்டுள்ள எழுத்தாளர்கள் தம் சமூகங்களை தனி நபர்கள் கொண்டதாய், அவர்கள் ஆளுமைகளை வெளிப்படுத்துவதாய், மானுடத்தன்மையை உணர்த்துவதாய் தம் கவிதைகளாலும் கதைகளாலும் நினைவுக் குறிப்புகளாலும் சித்தரித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட படைப்புகளில் சில கொள்கை பிரசார வகைமையைச் சேர்ந்ததாக இருக்கலாம், சில பேதைத்தன்மை கொண்டிருக்கலாம், சில படிப்பினைகளை உணர்த்துவதை நோக்கமாய் கொண்டிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, வைல்டும் குந்தேராவும் வரையறை செய்த பொருளில் இவற்றில் பலவும் அறம் சார்ந்தவையே: இவை, நளினமான வாக்கியங்களும் புதிய அணுகுமுறைகளும் கொண்டு ‘நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன,’ ‘இருப்பின் இதுவரை அறியப்படாத கூறொன்றை” அம்பலம் செய்கின்றன.

நன்றி, The Conversation – http://theconversation.com/ethics-and-writing-63399