றியாஸ் குரானா

கற்பனையும் மொழியும்

றியாஸ் குரானா

பதாகை – கற்பனைக்கும் மொழிக்கும் உள்ள உறவின் இயல்பு என்ன?

றியாஸ் குரானா – மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரணமான கேள்விபோலதான் தோன்றும். ஆனால், உண்மையில் இது சற்றுக்கடினமான கேள்வியே. இந்தக் கேள்வியை பொருட்படுத்தி பதில் சொல்லுவதெனில், முதலில் ஒரு விசயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். கற்பனைக்கும் மொழிக்குமிடையில் உறவு இருக்கிறது என்பதுதான் அந்த விசயம். இப்படி ஏற்றுக்கொள்ளுவது என்னுடைய புரிதல் நிலைப்பாட்டில் பெரும் மாற்றங்களை கோரும் ஒன்று. ஆனால், பொதுவாக மொழிக்கும் கற்பனைக்கும் ஒரு உறவு உண்டென்று நம்பப்படுகிறது. அந்த உறவின் இயல்பு எப்படியானது என்பதில்தான், பல வகையான கருத்துக்கள் இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது. அடிப்படையில் இது குறித்து வேறு கருத்துக்ளைக் கொண்டவன் நான். ஆக, இந்தக் கேள்விக்கான பதிலை நான் எப்படி சொல்ல வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டியுள்ளது.

மொழி என்பதே ஒரு கற்பனைதான் எனச் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படிச் சொல்லுவதால், அடிப்படையில் மொழிக்கும் கற்பனைக்குமான உறவை மறுக்கிறேன். அப்படியானால், அதற்கிடையிலான உறவு குறித்து பேச எதுவுமில்லை. கற்பனையால் உற்பத்தி செய்யப்பட்ட மொழியே, மீண்டும் கற்பனையைப் பெருக்குவதற்கு தேவையான, மிக ஆற்றல் மிக்க உள்ளடக்கங்களையும், இயங்கு முறையையும் கொண்டிருப்பதால், இரண்டாம் நிலையில் மொழிக்கும் கற்பனைக்குமான உறவு உருவாகிவிடுகிறது. இந்த இடத்தில்- மொழிக்கும் கற்பனைக்குமான உறவின் இயல்பு என்ன என்பதை கற்பனை செய்யவும், உருவாக்கவும் முடிந்துவிடுகிறது என்பதும் ஒரு மர்மமான விசயம்தான். (more…)

நினைவு தேன்கூடு

றியாஸ் குரானா

மிக நீண்ட திட்டமிட்ட நினைவு
அவரைத் திருப்பிக்கொண்டு வந்து தந்ததும்
எத்தனை முறை தொலைத்தாலும்
அவரைக் கண்டுபிடிக்க முடியுமென்று நினைத்தேன்
இந்தக் கட்டத்தில்,
எனது மதியத் தூக்கம்
சொர்க்கத்தில் தொடங்கியது
நினைவைக் கூடாரம்போல் சுருட்டும்போது
அதன் மடிப்புகளில்,
குழந்தைகளைப்போல் ஒரு பியானோ
வீறிட்டுக் கத்தத் தொடங்கியது
வெருண்ட சில குருவிகள்
உள்ளிருந்து கிளம்பிப் பறந்தன
மழையா வெயிலா மப்பும் மந்தாரமுமா
தேர்வு செய்வதில் எப்போதும்
வானத்தில் ஒரு குழப்பம் இருக்கிறது
அந்தக் குழப்பத்தை நினைவு
பின்தொடரவே கட்டாயப்படுத்துகிறது
நினைவை விரிக்க விரிக்க
இப்படித் தொடர்பற்ற சம்பவங்கள்
வந்து குவிந்தபடி இருக்கின்றன
என் மகனை கடைசியாகப் பிரியும்போது
அவன் சொன்ன கனவும் இதுபோலதான்
திட்டமிட்டபடி
இத்தோடு நினைவு முடிவடைகிறது.
நினைவுக்கு தேன் கூட்டை ஒப்பிடுவதுதான் மிகச் சரி
எங்கெல்லாம் இருந்து எடுத்து வந்து தேனை
சேகரித்து வைக்கிறது.
யாராவது அதைக் கலைத்தால்,
பல்லாயிரம் குழவிகள் கொட்டி
துடிதுடித்து வலியில் தவிக்கிறது.

கவிதையின் உண்மைகள்

றியாஸ் குரானா

பதாகை – “உங்கள் கவிதைகள் எதை உண்மையாகக் கொள்கின்றன, அவை எத்தகைய உண்மைகளை வெளிப்படுத்த முனைகின்றன?”

றியாஸ் குரானா – இப்படி ஒரு கேள்வியைக் கேட்பதற்கு எது உங்களைத் தூண்டியது என்பதை நான் அறிவேன். நீங்கள் மட்டுமல்ல தமிழ் சூழலில் இலக்கியப் பரிச்சயம் இருக்கின்ற அனைவரும் இப்படி அல்லது இதற்கு நெருக்கமான சொற்களால் இந்தக் கேள்வியை கேட்பவர்களாகவே இருப்பர். அந்தக் கேள்விகள் இப்படி இருக்கலாம். எத்தகைய யதார்த்தத்தை வெளிப்படுத்த முனைகின்றன என்றோ எத்தகைய சூழலை பிரதிபலிக்க முனைகின்றன என்றோ இருக்கலாம். அல்லது இப்படி இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்தக் கேள்வி நமது இலக்கிய பெருவெளியின் நெடுங்கால மனச்செயலாக இருக்கின்ற ஒன்றாகும். இலக்கியத்தின் பயன், இலக்கியத்தின் பணி, இலக்கியம் இயங்குவதற்கான ஒரு பொதுத் தடம் போன்றவற்றை விசாரணைக்குட்படுத்தும்போது கண்டடையப்பட்ட ஒன்றாகும். வாழ்தல் வாழ்விலிருந்து பெறுதல் என்ற ஒரு வறண்ட புரிதலில் இருந்து உருவான ஒன்றாகும். அது மாத்திரமல்ல, அந்தப் புரிதலினால்தான் இன்னும் இது காப்பாற்றப்பட்டு புழக்கத்திலிலும் இருக்கிறது. (more…)

அதிகாலை ஒரு வெள்ளைக் கதவு

றியாஸ் குரானா

 

வடிவமைத்த திரைச் சீலையை
ஆற்றங்கரையில் விட்டு நெடுநதூரம் வந்த நான்,
பின்னர் திரும்பிப் பார்க்கிறேன்
பயப்பட ஏதுமில்லை
பிரச்சினையை கடந்துவிட்டேன்
எனினும், அதிக விலைகொடுக்க வேண்டியிருந்தது
எவைகளை இழக்க வேண்டியிருந்ததோ
அந்நிலையில்தான் ஏற்கனவே இருந்தேன்
முழு நேரமும்,
புல்வெளியில் அலைய வேண்டியிருந்தது
கைகளில் நிரம்பியிருந்து காட்டுப் பூக்கள்
இறந்த ஏதோவொன்றை மறைக்கிறது
எல்லோரும் திரைச்சீலையிலுள்ள
அழகிய வேலைப்பாடுகளை காட்சியாகப் பார்க்கின்றனர்
நான் கிடந்து போராட வேண்டிவந்தது
கட்டாயம் இங்கிருந்து விலகிப்போய்
திரும்பிவந்து இவர்கள் பார்க்க வேண்டும்
திரைச் சீலையில் சுருக்கம் விழுந்திருப்பதை
யாரும் ஒப்புக்கொள்ளவில்லை
அதிகம் பேர் அதன் கரையில்தான்
வாழ்வைத் தொடருகிறார்கள்
நானோ, சிறிது நேரமே தங்குகிறேன்
திரைச் சீலை மாட்டப்பட்ட
அந்த வெள்ளைக் கதவிற்குப் பின்னால்
எனது மகனின் கனமான கைப்பை மறைந்திருக்கிறது
வட்டமான பிரகாசிக்கும் கைப்பையை
அவன் இன்னும் தொட்டுத் தூக்கியதில்லை
ராணி தனது படுக்கையில்
தனித்து உறங்குகிறாள்
ம்…திறக்க வேண்டாம்
திரைச் சீலையை மகன் திறந்துவிட்டான்
வைகறை மெதுவாக வெளிப்பட்டது
இரவு என்பது, வெள்ளைக் கதவின் மீது
நான் போட்ட திரைச் சீலை
கவிதையில் தேர்ந்த உளவாளி எனில்,
எப்படித் தயாரித்தேன் என்பதன் அத்தாட்சிகளை
நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.

கேள்வி: “கவிதைக்கும் அதன் வாசகனுக்கும் இடைப்பட்ட உறவு எத்தகையது என்று கருதுகிறீர்கள்?”

கவிதையும் வாசக மனநிலையும்

றியாஸ் குரானா

கவிதைக்கும் வாசகனுக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டதென்று கருதுகிறீர்கள்?

கவிதைக்கும் வாசகருக்குமிடையிலான உறவு என்பது எப்போதும் முரண்பாடானதாகவே இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். வாசகன், கவிதைப் பிரதியோடு போராடி முடிவற்ற ஒரு வினையை செயலுக்கு கொண்டுவர வேண்டுமென்றும் விரும்புபவன்.

இலக்கியப் பிரதிகள் தம்மிடம் ஏதோவொரு அர்த்தத்தை கொண்டிருக்கிறது என நம்பும் ஒவ்வொருவரும் முதலில் வாசகராக மாறிவிடுகிறார். அடுத்ததுதான் இலக்கியப் பிரதியோடு எப்படி வினையாற்றுவதென்ற விசயமாகும். இலக்கியப் பிரதிகள் அதனதன் இயல்பிலேயே பெரும்பாலும் மறைமுகமாக எதையோ பேசுவதாகவே இருக்கும். அதிலும் கவிதைப் பிரதி கொஞ்சம் ஆழமாக இதை செய்துவிடும். அப்படிச் செய்வதினூடாகத்தான் தன்னை அது கவிதைப் பிரதியாக தக்கவைத்துக்கொள்கிறது. இலகுபடுத்தி இதை விபரிப்பதென்றால், சூழலில் சாதாரணமானது என கருதப்படும் ஒரு விசயத்தை நாம் இதுவரை சந்தித்திராத அசாதாரணமான ஒன்றாக மாற்றி உருப்பெறச் செய்வதுதான் கவிதைப் பிரதி. இது மிக அடிப்படையான ஒன்று. இதை விரிவாக பின்னர் சந்தர்ப்பம் கிடைத்தால் பேசுவோம். யதார்த்தத்தை பிரதிபலிக்கின்ற ஒன்றாக கவிதைப் பிரதி நெடுங்காலமாக இங்கு பயிலப்படுகிறது. அதன் மீது பெரும் விமர்சனம் எனக்குண்டு. (more…)