லா. ச. ரா.

அன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்

 – வெங்கடேஷ் சீனிவாசகம் – 

அப்பா இறந்தபோது எனக்கு வயது பதினொன்று. பக்கத்து ஊர் சென்னம்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நாங்கள் மூன்று பையன்கள். நான்தான் மூத்தவன். எனக்கடுத்து இரண்டிரண்டு வருட வித்தியாசங்களில் இரண்டு தம்பிகள். அப்பா பள்ளிக்கூட ஆசிரியர். தங்கை பெண்ணையே திருமணம் செய்து கொண்டவர். அம்மாவின் அம்மாவை நாங்கள் அத்தை என்று கூப்பிடலாம் என்றாலும், நாங்கள் பாட்டி என்றுதான் கூப்பிட்டோம். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பனிரெண்டு/பதினான்கு வருடங்கள் வயது வித்தியாசம். அம்மாவிற்கு திருமணம் ஆகும்போது, அம்மாவிற்கு வயது பதினைந்து. அம்மாவின் பதினாறாம் வயதில் நான் பிறந்தேன். கோவை வேளாண் கல்லூரியில் படிக்கும்போது, விடுதியில் தங்கியிருந்தேன். ஒருமுறை அம்மா பார்க்கவந்து, விடுதியின் விருந்தினர் தங்கும் அறையில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். உடன் படிக்கும் நண்பிகள் ரேணுகா, நிர்மலா, சுகுணா-வை அறைக்கு கூட்டிச்சென்று அம்மாவிற்கு அறிமுகப்படுத்தியபோது, “வெங்கடேஷ் அம்மாவா நீங்க?; அக்கா மாதிரி இருக்கீங்க!” என்று அவர்கள் வியந்தது இன்னும் ஞாபகமிருக்கிறது.

அப்பா மிகவும் நல்லவர். எங்கள் மேலும், அம்மா மேலும் மிகப்பிரியம். ஓடைப்பட்டியிலும், களரிக்குடியிலும், புளியம்பட்டியிலும் “சீனி வாத்தியார்” என்றால் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். பெரும் மதிப்பு. எல்லோருக்கும் உதவுவார். ஊரின் கடைசியிலிருக்கும் காலனியிலும் நெருக்கமான நண்பர்களிருந்தார்கள். பக்கத்து ஊர், திருமங்கலம் விருதுநகர் சாலையிலிருக்கும், கள்ளிக்குடியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷ்னில், பள்ளியில், கடைவீதியில்…எல்லோருமே நட்புதான். அவரிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. குடி. அம்மா சொல்லி சொல்லி பார்த்தார்கள். அவர் குடிக்கும் ஒவ்வொரு முறையும் அம்மா அழுவார்கள். அம்மா அழும் நேரங்களிலெல்லாம் குடியை விட்டு விடுவதாக சொல்வார். குடியை அவர் கடைசி வரை விடவில்லை. விபரமறியா என் நான்கைந்து வயதுகளில், என் மனதில் பதிந்துபோன அந்தச் சித்திரம் இன்னும் என்னால் நினைவிலிருந்து அழிக்கமுடியாது… – அப்பா குடித்துவிட்டு வரும் நாட்களில், மச்சு வீட்டுக்குள் சென்று, கொடியில் தொங்கும் துணிக்ளுக்கிடையில், முகம் புதைத்து விம்மி அழும் அம்மா.

அப்பா ஈரல் பாதிப்பில், மதுரை இராஜாஜி மருத்துவமனையில் எங்களை விட்டுப் பிரிந்தபோது, அம்மாவுக்கு வயது இருபத்தாறு. அம்மா திருமணத்திற்கு முன் ஒன்பதாம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். அப்பா மறைவிற்குப் பின், அம்மா பத்தாம் வகுப்பு தனியாக வெளியிலிருந்து படித்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்று, அப்பா-வின் அரசு வேலையினால், செங்கப்படை பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார்கள். அம்மாவிற்கு உதவியாக, எங்களையும் பார்த்துக் கொள்வதற்கு, தாத்தாவும் பாட்டியும் களரிக்குடியிலிருந்து மாறி எங்களுடன் ஓடைப்பட்டியில் தங்கிக்கொண்டார்கள்.

அந்த பதினோரு வயதில், எனக்கு அப்பாவின் மறைவின் வெற்றிடம், பெரிதும் உறைக்காதவாறு அம்மா பார்த்துக் கொண்டார்கள். அப்பா இறந்தபிறகு எங்கள் மூவரையும் படிக்க வைத்து வளர்க்க அம்மா பட்ட கஷ்டங்கள்…சொற்களால் விளக்க முடியாதவை. அப்போதிருந்த வயதில் எனக்கு உறைக்கவில்லை. அப்பா இறந்து, அடுத்த பதினாலு வருடங்களில் அம்மா தொண்டை புற்று நோயினால் 1997-ல் இறந்தார்கள். அப்போது எனக்கு வயது 25. அம்மாவின் மறைவு எனக்கு பேரிடியாய் மனதைத் தாக்கியது. அந்த வெற்றிடத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. கடந்த பதினான்கு வருடங்கள் அவர்கள் பட்ட கஷ்டத்தையெல்லாம் முற்றாகத் துடைத்து அவர்களை நன்கு வைத்திருக்கவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். அம்மாவிற்காக ஒரு துரும்பளவில் கூட ஒன்றுமே செய்யவில்லையே என்ற சுய வெறுப்பும், பச்சாதாபமுமே மனதை அறுத்து கொன்று கொண்டிருந்தது. அப்பா இல்லாத அம்மாவின் அந்த வாழ்க்கையை நினைக்கும்பொழுதெல்லாம், தொண்டை அடைக்கும்; மனது நிலையில்லாமல் தவிக்கும்.

லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை ஓசூரில் இருந்தபோது ஒருநாள் பின்னிரவில் வீட்டில் படித்துக் கொண்டிருந்தேன். மல்லிகாவும் இயலும் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வெளியில் மழை பெய்து ஓய்ந்து தூறிக்கொண்டிருந்தது.

நான்கு தலைமுறைகள் கொண்ட கூட்டுக் குடும்பம். நான்காவது பையனுக்கு திருமணம் ஆகிறது. சாந்தி முகூர்த்தத்தை, நல்ல நேரம் கணித்து தை மாதத்திற்கு தள்ளி வைக்கிறார்கள். தீபாவளி வருகிறது. வேலை விஷயமாய் அவசரமாய் அழைப்பு வரவே கிளம்பிப் போகிறான் நான்காம் பையன். தலை தீபாவளிக்கு, வீட்டில் இல்லாத கணவனுக்கு கடிதம் எழுதுகிறாள் ஜெகதா. சிறுகதை முழுதுமே, ஜெகதா எழுதும் கடிதம்தான்.

சிறுகதையின் ஒவ்வொரு வார்த்தையும், வரியும் இத்தனை அன்பில் தோய்த்து எடுத்ததாய் இருக்க முடியுமா?. என் ஆச்சர்யங்கள் அதிகரித்துக்கொண்டேயிருந்தன. கூட்டுக் குடும்பத்தின் நிகழ்வுகளை ஜெகதா கடிதத்தில் எழுதுகிறாள். அம்மாவைப் பற்றி (கணவனின் அம்மா), மற்றவர்களைப் பற்றி…அம்மா தன் கால் பிடித்து மருதாணி வைத்தபோது தான் அழுததைப் பற்றி…தன் அப்பா தெருவில் போகும் வயதானவர்களைக் கண்டால், கைகூப்பி நமஸ்கரிப்பது பற்றி…கணவனின் அண்ணன், குடும்பத்தின் இரண்டாம் பையன் ஒரு தீபாவளியன்று பட்டாசுக் கடைக்குச் சென்று, விபத்தில் இறந்த விஷயம் தனக்குத் தெரியவந்தது பற்றி…

தலை தீபாவளிக்கு, அம்மா வந்து கூப்பிட்டும், தான் இங்கேயே இருந்துவிடுவதாக சொல்லிவிடுகிறாள் ஜெகதா. அம்மாவிற்கும் ஜெகதா இங்கேயே இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பமும். தீபாவளிக்கு இரண்டு/மூன்று நாட்கள் முன்னதாகவே பட்சணங்கள் தயாராகிறது.
தீபாவளியன்று, மூன்றாவது மாடியில் இருக்கும் கொள்ளுப்பாட்டியை கீழிறக்கி கூட்டிவந்து குளிக்கவைத்து, ஹாலில் இருத்தி, குடும்பத்தில் எல்லோரும் ஆசி வாங்குகிறார்கள்.

குட்டிப் பையன் சேகர், ”வீல்” என்று அலறி கத்திக்கொண்டே ஓடி வருகிறான். அம்மா அடித்துவிட்டதாய் சொல்கிறான். சேகர், பாட்டி செல்லம். விபத்தில் இறந்துபோன இரண்டாமவனின் பையன். கணவர் இறக்கும்போது, சேகர் காந்திமதியின் வயிற்றில் மூன்று மாதம். கோபத்துடன் அம்மா காந்திமதி அறைக்குப் போகிறாள். காந்தி விரித்த தலையுடன் ரேழி ஜன்னலில் உட்கார்ந்திருக்கிறாள். ஜெகதாவிடம், மற்றொரு மன்னி “காந்திக்கு வெறி பிடித்துவிட்டது” என்று காதில் கிசுகிசுக்கிறாள். கணவன் இறந்ததிலிருந்தே, காந்திக்கு ஆறேழு மாதங்களுக்கு ஒருமுறை இம்மாதிரி ஆகிவிடுவதாக சொல்கிறாள்.

லா.ச.ரா-வின் வார்த்தைகளில்…

“அவளை அவள் கோலத்தில் கண்டதும் அம்மாவுக்குக் கூடச் சற்றுக் குரல் தணிந்தது.

“ஏண்டி காந்தி, இன்னுமா குளிக்கல்லே? வா வா, எழுந்திரு – குழந்தையை இப்படி உடம்பு வீங்க அடிச்சிருக்கையே, இது நியாயமா?”

“நியாயமாம் நியாயம்! உலகத்தில் நியாயம் எங்கேயிருக்கு?”

காந்திமதி மன்னி குரலில் நெருப்பு கக்கிற்று.

“அதற்குக் குழந்தை என்ன பண்ணுவான்?”

”பாட்டி! பாட்டி! நான் ஒண்ணுமே பண்ணல்லே. ஊசி மத்தாப்பைப் பிடிச்சுண்டு வந்து ‘இதோ பாரு அம்மா’ன்னு இவள் முகத்துக்கெதிரே நீட்டினேன். அவ்வளவுதான்; என்னைக் கையைப் பிடிச்சு இழுத்துக் குனிய வெச்சு முதுகிலேயும் மூஞ்சிலேயும் கோத்துக் கோத்து அறைஞ்சுட்டா, பாட்டீ!” பையனுக்குச் சொல்லும் போதே துக்கம் புதிதாய்ப் பெருகிற்று. அம்மா அவனை அணைத்துக் கொண்டார்.

“இங்கே வா தோசி, உன்னைத் தொலைச்சு முழுகிப்பிடறேன்! வயத்திலே இருக்கறபோதே அப்பனுக்கு உலை வெச்சாச்சு, உன்னை என்ன பண்ணால் தகாது?”

அம்மாவுக்குக் கன கோபம் வந்துவிட்டது.

“நீயும் நானும் பண்ணின பாபத்துக்குக் குழந்தையை ஏண்டி கறுவறே? என் பிள்ளை நினைப்புக்கு, அவனையாவது ஆண்டவன் நமக்குப் பிச்சையிட்டிருக்கான்னு ஞாபகம் வெச்சுக்கோ. ஏன் இன்னிக்குத் தான் நாள் பார்த்துண்டையா துக்கத்தைக் கொண்டாடிக்க? நானும் தான் பிள்ளையத் தோத்துட்டு நிக்கறேன். எனக்குத் துக்கமில்லையா? நான் உதறி எறிஞ்சுட்டு வளையவில்லை?”

மன்னி சீறினாள். “உங்களுக்குப் பிள்ளை போனதும் எனக்குக் கணவன் போனதும் ஒண்ணாயிடுமோ?””

என் மனம் ஒரு கணம் உறைந்துபோனது இங்குதான். அம்மாவின் உருவமும், அம்மாவின் அந்த பதினான்கு வருட வாழ்க்கையும், தத்தளிப்புகளும், துயரங்களும் மனக் கண் முன் நிழற்படங்களாய் வந்துபோயின. எனக்கு அப்பா போனதும், என் தாத்தா, பாட்டிக்கு மருமகன் போனதும், அம்மாவிற்கு கணவன் போனதும் ஒன்றாகுமா?. மனம் நினைவு திரும்பியதும் பெரும் கேவல் எழுந்தது. மல்லிகாவும், இயலும் விழித்துக் கொண்டு விடுவார்களோ என்று பயந்து கதவு திறந்து வெளியில் வந்தேன். இன்னும் தூறிக் கொண்டுதான் இருந்தது. இரண்டு தெரு தள்ளி,ரோடு தாண்டியிருக்கும் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ரயில் ஒன்று கிளம்பிச் செல்லும் சத்தம் கேட்டது. இறங்கி தெருவில் மழையில் நின்றேன். வாய்விட்டு அழ வேண்டும்போலிருந்தது. அழுது கரைத்துவிட்டு, வீட்டினுள் வந்து தலை துவட்டிவிட்டு, மறுபடி புத்தகத்தை எடுக்கும்போது, இயல் தூக்கத்தில் புரளும் கொலுசோசை கேட்டது. எழுந்து சென்று, படுக்கையறையில், இரவு விளக்கு வெளிச்சத்தில் இயலைப் பார்த்தபோது, குட்டியாய் இடதுபக்கம் திரும்பி படுத்திருந்தது. மெலிதாய் விரல்களைப் பிடித்துக்கொண்டேன். மெத்தென்றிருந்தது.

“அம்மா ஒன்றும் பதில் பேசவில்லை. குழந்தையைக் கீழேயிறக்கி விட்டு நேரே மருமகளை வாரியணைத்துக் கொண்டார்.
மன்னி பொட்டென உடைந்து போனாள். அம்மாவின் அகன்ற இடுப்பைக் கட்டிக் கொண்ட குழந்தைக்கு மேல் விக்கி அழுதாள். அம்மா கண்கள் பெருகின”

பேரன்பின் அணைப்பு. தழுவல். அன்பு ஒரு ஒட்டுவாரொட்டிதான். பேரன்பின் கணம் நிகழும்போது அதைத் தாங்கும் சக்தி உங்களுக்கிருக்கிறதா?…

லா.ச.ரா எனும் பேரன்பிற்கு என் தாழ் பணிந்த நமஸ்காரங்கள்.

இராகப் பெண்கள் – 8: வராளி புன்னாக வராளி –அந்தி மயக்கம்

பானுமதி. ந

8: வராளி புன்னாக வராளி –அந்தி மயக்கம்

இதை நீர் சூழ்ந்த உலகு என்கிறார்கள். பனிக்குடத்துடன் பிறந்து நீர்க்குடத்துடன் நம் வாழ்வு நிறைகிறது. துவங்கும் புள்ளியும், முடியும் புள்ளியும் நீர்… நீர். நம் கடவுளின் தலையிலும் நீர்… அவன் உறைவிடமும் நீர்…

காவிரி பாயும் கன்னித் தமிழ்நாட்டில் தரங்கிணி அறிமுகமாகிறாள். அந்த ஆறுதான் அவளின் நதிமூலம்.. “எங்கம்மா என்னை எப்போ காவேரிக்குப் பெண்ணா ஆசீர்வாதம் பண்ணிவிட்டாளோ, அப்படியேதான் நான் ஆயிட்டேன்- வேண்டியவா, வேண்டாதவா எல்லாருக்கும் ஒண்ணாய், ஆத்து ஜலம் மாதிரி, எங்கெங்கே எப்படி எப்படியோ, ஒரு சமயம் ஒடுங்கி, ஒரு சமயம் பெருகி, ஒரு சமயம் ஒதுங்கி, ஒரு சமயம் நெருங்கி, எல்லோர் கைப்பட, எல்லாச் சொல்லும் பட வளர்ந்தேன்,” தரங்கிணி இராக “மாயா”.

அவள் கணவன்… தங்களிடையில் குழந்தையும் கூட தனிமையின் பங்கம் என நினைப்பவன். அவன் சொல்லும் ஒரு தொடர் நம்மைப் புரட்டிப் போட்டுவிடும். ”தனியாயிருக்கலாம். ஆனால்…தனிமையாயிருத்தல்…..அப்பா

குளிக்கப் போனவிடத்தில் மூழ்கிப் போய் தான் இறந்து போய்விட்டோம் என்பதை உணரும் உணர்வு மாத்திரமிருந்தால் எப்படி இருக்கும்?” அவனை அலைக்கும் தீயை அவள் நெருக்கத்தின் குளுமையில்தான் ஆற்றிக் கொள்ள முடிந்தது. சாவும் சத்தியமும் அவனளவில் ஒன்று.

அவள் உயிர் நீட்சி ஒன்று தான் வறட்சி தீர்க்கும் மருந்து என்கிறாள். சொல்லாலே மந்திரம் செய்யும் கதை இது. ”எனக்கு உயிர் மேல்தான் ஆசை. நான் செத்துப் போனாலும் உசிரோடு இருக்கணும். உசிர் மேலே எனக்கு அவ்வளவு உசிர்.”

இருக்குன்னா இல்லை என்போம். இல்லேன்னா இருக்கு என்போம் இப்படித்தான்”- அவள் சொல்லி, அவள் உணர்ந்து, இன்னுமொரு கல்யாணத்திற்கு அவன் செவி சாய்ப்பதை அவள் தாயாகப் போகும் தருணத்தில், தன்னை வளர்த்த ஆற்றின் கரையில் அவள் அறிவது….அப்பா! ”வானில் தங்க ரதம் ஒன்று உருவாகி எழும்பியது. கொத்துக்கொத்தாய்ச் சடை பிடித்த பிடரி மயிர் அலை மோத தலைகள்  உதறிக் கொண்டு வெள்ளை குதிரைகள் தாமே தோன்றி ரதத்துடன் தம்மைப் பூட்டிக் கொண்டன. ரதம் நகர்ந்தது. சக்கரங்களினடியில் அகிற்புழுதி தோகை தோகையாய் எழும்பிற்று.”

மாயா தரங்கிணி… ஆறு வளர்த்த இராகம்… அதுவே அவள் அகம், அதுவே அவள் புறம். அதுவே அவள் அறம் அதுவே அவள் மறம்.. அவளுயிரின் தொடர்ச்சி… தன்னை பலியிட்டாவது சாவிலும் வாழும் ஆசை.

அவள் புன்னாக வராளி..அவள் தொடங்குவதே நிஷாதத்தில்தான், முடிவதும் அதில்தான்
நி ச ரி க ம ப த நி நி த ப ம க ரி ச நி

இனி பங்கஜம்——நளபாக விருந்தில் முதன்மையான உணவு.

இவளை இனம் கண்டு கொள்வது அத்தனை எளிதில்லை.இவள் அந்த கலவையில் செய்த உணவோ, இந்தக் கலவையில் செய்த உணவோ என உண்பவனை கேட்டுக் கொள்ளச் செய்கிறார் தி. ஜா.

அதிக முதன்மையில்லாமல் அறிமுகமாகி நினைவில் நிற்கும் அற்புத ருசி. கண்களுக்கும், நாவிற்கும், வயிற்றிற்கும், மனதிற்கும் இசைவான ஒரு அமுது. ”இவளைப் பார்த்தால் இருபது வயது போல- முப்பது வயது போல- நாற்பது வயது போல-எல்லா வயதும் தெரிகிற தோற்றம்”. இது மாமியாரான ரங்கமணி மருமகளைப் பற்றி நினைக்கும் தோற்றம்.

யாத்ரா ஸ்பெஷலில் சமையல் தலைமையாக ரங்கமணி கண்ட காமேச்வரன் – ஒரு ஆசானாக, மகனாக, சமையல் கலைஞனாக, அம்பாள் உபாசகனாக, அறிவு, அழகு, ஒழுக்கம், பண்பு ஒருமித்தவனாக, தன் வம்சத்தின் சாபத்தை களைபவனாக ரங்கமணியைக் காண வைக்கிறது. அந்த யாத்திரையில் வரும் ஒரு ஜோதிடர் சொல்வது, அவளைச் சிந்திக்க வைத்து காமேச்வரனை தன் வீட்டில் தனக்கு மகனாக சமையல்காரனாக, பூஜை செய்து குல சாபம் போக்குபவனாக அழைப்பு விடுக்கிறது. இரவல் வம்சமாகவே வளரும் தன் குடியில் தன் வம்சத்து வித்து வேண்டும் என அவள் நினைக்கிறாள். அவளுக்கு ஒரு தத்துப் பிள்ளை உண்டு. அந்தப் பிள்ளை இந்த பங்கஜத்திற்கு சரியான இணை இல்லை என நினைக்கிறாள்.

ஒரே கூரையின் கீழ் வாழும் மூவரின் தனிமையைப் போக்க அவன் வருகிறான். அவர்கள் அன்பு செலுத்த அவன் வேண்டும். அவன் இது வரை அறியாத குடும்ப நேசத்தை அவர்கள் மூலம் அனுபவிக்கிறான். அவன் எல்லாமுமாக இருக்கிறான். தொட்டிச் செடியாக இருந்தவர்கள் தோட்டத்துக் கொடிகளாக, காற்றையும், சூரியனையும்,மிகும் நீர் உறிஞ்சும் மண்ணையும் அனுபவிக்கிறார்கள். இத்தனைக்கும் இடையில் ரங்கமணியும் பங்கஜமும் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு….

உனக்கில்லை …. எனக்குத்தான்”. இளமையும், மிக மிகத் தனிமையுமான நடுவயதும், வாழ்வின் பேழையிலிருந்து பருகத் தவிக்கின்றன. ரங்கமணியின் வயதும், நிலையும் அவளை இலைகள் மூடிய கனியெனக் காட்டுகின்றன. இளமையும், வாழ்வின் உரிமையும் பங்கஜத்தினை எண்ணத்தினால் சற்று அசைத்துப் பார்க்கின்றன. யாரும் இல்லா ஓர் முன்னிரவு சமயத்தில் காமேச்வரனின் விரல்களை பற்றச் செய்கின்றன. தனக்கு அதுவே போதும் என்று அவள் சொல்கையில் தி ஜா கத்தியின் மேல் நடந்த நம்மை பாதுகாப்பாக இறக்கி விடுகிறார். மன இயல் வல்லுனர் போல் தி ஜா போடும் கோலங்கள். உணர்ச்சியில் தடுமாறாத விவேகம்.. ஒரு சமையல காரன் சமைக்கும் மன- மண விருந்து. அவன் கரம் பட்டு அவள் தன் கணவனுடன் உடன்பட்டு காமன் எழுதும் உயிரோவியம்.

ஊரோடு உறவாகிறது அவனுக்கு. புழங்காத அறையினுள் காற்றும், வெளிச்சமும் அவனால் வருகிறது. நட்பும், நேசமும் கலகலப்பும் தனிமையைப் போக்கும் அருமருந்தென செயல்படுகிறது. பங்கஜத்திற்கு சீமந்தம் வருகிறது. அவன் அனைத்துமாக இருக்கிறான். அதில் தத்து வந்த பிள்ளையின் சொந்தக்காரர்களும், குணம் கெட்ட ஊர்க்காரரும் இவனை இணைத்துப் பேச, இந்த சின்னத்தனம் தாங்காது அவன் குமுறுகிறான். பங்கஜத்தின் கணவனோ இந்த அவப் பேச்சுக்களை ஒதுக்கி விடுகிறான். அவன் இருவரின் மேல் கொண்டுள்ள அசையாத நம்பிக்கை மிக அழகாக வெளிப்படுகிறது.

தன் இருப்பிடம் விட்டு வராத பங்கஜம். அவள் புகுந்த ஊரின் பல பகுதிகள் அவள் அறியாதவை. வறட்டு வாழ்வில் வசந்தம் என வந்தவன் அவன். ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தோழமையானால் இந்த உலகில் தனிமை என்பதே இல்லை. உடல் கவர்ச்சியால் அவர்களின் நட்பை கொச்சைப்படுத்தும் சமூகத்தில், தனிமை என்றுமே தகிக்கும் நெருப்புதான். ஆனாலும், புனிதத்தை மட்டுமே இங்கே தி. ஜா நினைக்கவில்லை. ”உனக்கில்லை எனக்குத்தான் “ என்பதில் உளம் விழையும் நட்பை பூரணமாக அறிய உடலும் உணர வேண்டும் என்னும் மனிதர்களின் நுண்ணிய ஆவலை (ஆசை அல்ல) தி ஜா வினால் மட்டுமே விரசம் இல்லாமல் சொல்ல முடியும். சொல்லி பங்கஜத்தை, காமேஸ்வரனை, துரையை, ரங்கமணியை, ஜோசியக்காரரை வெற்றி பெறச் செய்யவும் முடியும்.

காமேச்வரன் தன் சில உடைமைகளை ரங்கமணியின் அகத்தில் வைத்துவிட்டு தன் பழைய யாத்ரா வேலைக்குத் திரும்புகிறான். கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணத்தையும் சொல்கிறான்.

வராளி… பொதுவாக கச்சேரிகளில் நடுவில் மட்டும் பாடப்படும் ஒரு இராகம். முதலில் பிடிபடாது போனாலும் பின்னர் தன் இடத்தில் கம்பீரமாக அமர்ந்துவிடும். சுரங்கள் ஆரோகணத்தில் வரிசைப்படி இல்லை. அவரோகணத்தில் இருக்கிறது. இரண்டு “க” ஏறுமுகத்தில் வருவதுதான் அதன் அழகு; அதன் எழுச்சி.. கீழே பாடுகையிலும்,நிதானமான ஆலாபனையிலும் உருவெடுத்து பின்னர் மலை அருவியிலிருந்து பெருக்கெத்தோடும் ஆறு போன்ற இராகம். எல்லோரும் எப்பொழுதும் அதைப் பாட முடியாது. தம்பூரின் சுருதியோடு தன்னைக் கலந்து அது இழையோடும்.

பங்கஜ வராளியைப் பாட தி. ஜாவால் தான் முடியும். தரங்கிணியைப் புன்னாக வராளியாகப் பாட லா.ச.ராவால் மட்டுமே முடியும்.

வராளி: ச க ரி கம ப த நி ச ச நி த ப ம க ரி ச
புன்னாக வராளி: நி ச ரி க ம ப த நி நி த ப மக ரி ச நி

வயலினில் ஒன்று. மகுடியில் மற்றொன்று. இரண்டுமே அம்சம்தான்.

oOo

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இராகப் பெண்கள் – 7: கோபிகா வசந்தம், ஹிந்தோள வசந்தம்- ஆபரணம்

பானுமதி. ந

 7. கோபிகா வசந்தம், ஹிந்தோள வசந்தம்- ஆபரணம்

துறவு என்றால் என்ன? இந்த உலகினர் அனைவரையும் துறப்பதா அல்லது ஆத்மாவைச் சுற்றியுள்ள மூன்று கவசங்களகற்றி உலகோர்க்கு நன்மை செய்து கொண்டிருப்பதா? இல்லறத்தில் துறவு கூடுமா? துறவு இல்லறத்தை நோக்கிச் செலுத்துமா?

கை பிடிக்காத கணவனுடன், மாப்பிள்ளை அழைப்பன்று ஓடியவனுடன், நினைவிலே ஒரு வாழ்வு சாத்தியமா? திலகவதியின் நாடல்லவா இது? அவனை நினைத்தும், நெருங்கியும், தனித்தும், உலகோர் வாழும் வாழ்வில்லாத வாழ்வும், ”அன்பே ஆரமுதே” ருக்குவிற்கு மட்டும் முடியும்.

இதை இன்று நாம் அறியும் (அபத்தமாக அறியும்) கற்பெனும் சிறையில் தள்ளவில்லை தி. ஜா. செந்தாழம்பூவைப் போல் கமழச் செய்கிறார். காட்டுக்குள்ளே ஒரு ஓடை. ஓடையோரம் தாழம் புதர். காற்றினிலே வரும் மணம். ஆனால் அது உனக்கில்லை. உன்னதமான ஒரு சமர்ப்பணம் முன்னரே ஆகிவிட்டது. அதன் வாசம் பிறரை இழுத்தாலும் அதன் நேர்த்தியே அவர்களை அண்ட விடுவதில்லை. பூக்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று சேரலாம், உன் வசத்தில் பூத்தால்.

அது பாரிஜாதம் போல் பூத்திருக்கிறது- பூக்கையிலே மாலையாகி தன்னளவில் தோள் சேர்ந்து விட்டது.

அந்தத் தோள்கள் அறியும் முன், அவன் கால்கள் அவனை எங்கோ ஓடிப் போகச் செய்கின்றன. அவன் ஒரு மருத்துவ சன்யாசி, அல்லது சன்யாசியாக பிறர் நலம் பேணும் மருத்துவர். அவரின் கால்கள் மூலம் சென்னையில் தி. ஜா. நடந்து கொண்டேயிருக்கிறார். பலர் பிணி போக்குகிறார். உடலோடு மனப்பிணியும் போக்கும் இந்த அற்புத மருத்துவரை யார்தான் காண விழையார்?

கதையின் நாயகி அவரைச் சந்திப்பதும், இயல்பாகவும் கம்பீரம் குறையாமலும் தன்னை இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதும் அழகோ அழகு! தனக்கு நல்லதெல்லாம் செய்யும் குடும்பத்திற்கு அவளும் நல்லது செய்ய நினைக்கிறாள்; செய்யவும் செய்கிறாள்.

அவரை, தான் குடி போகும் வீட்டின் மாடியில் இருத்தி அவரது மருத்துவப் பணி சிறக்க எல்லாமாகவும் நிற்கிறாள். அவளும், அவரும் பந்தமில்லாப் பந்தத்தில், உறவான தோழமையுடன், தோழமையான உறவுடன் இருக்க மிக  நேர்மையுடன் செயல்படுகிறாள். தூற்றும் ஒரு வாய்க்காக அவள் சோரவில்லை. தன் நண்பரின் குடும்பத்திற்காக அவரை அந்த நபரிடமும் அனுப்ப அவள் தயங்கவில்லை. அன்பும் ஆருயிரும் …

இதில் இருளும் ஒளியுமென, பகல் இரவு என, நல்லது, கெட்டது என இரு பிரிவுகளும் கைகூடும் மனிதர்களைப் பார்க்கிறோம். நடந்து செல்லும் ஒரு மழை மாலயில், பார்க்கும் வானவில்லென பரவசம் ஊட்டும் மனிதர்கள். வியப்பும், கவலையும் அளிப்பவர்கள். தன்னைத் தானே உணரப் பார்க்கும் முயற்சிகள்.

ருக்கு, தன்னை மணக்க இருந்தவரை தன் வாடகை வீட்டில் குடியமர்த்துவது தான் வெற்றி பெற்றோம் என்பதற்கு அல்ல. அது ஒரு தவம், சபரியின் தவம், திலகவதியின் தவம். சபரி மோட்சம் பெற்றாள்; திலகம் சிவனடியாரானாள். ருக்கு மருத்துவ சன்யாசிக்கு உதவுகிறாள். ஒரு பெண்ணை மீட்கவும், தன்னைப்போலவே ஆகப்போகும் ஒரு பெண்ணிற்கு தோள் கொடுக்கவும் அவள் தயங்கவில்லை. முகம் அறியா மனிதர்களின் உடல் நோய்க்கும் மன நோய்க்கும் உதவிட அந்த சன்யாசியுடன் இந்த சன்யாசி நிற்கிறாள்.

ஒரு உன்னதமான பாத்திரப் படைப்பு. இவள் கோபிகா வசந்தம். கண்ணன் ஆயர்பாடியில் இருந்த பொழுதெல்லாம் கோபிகைகளுக்கு வசந்தம். அவன் மதுரா சென்ற பிறகோ அந்த நினைவுகளே வசந்தம். நினைவுகள் தரும் புனைவுகள் கோபிகா வசந்தம்,

ச ம ப நி த நி த ச   ச நி த ப ம க ச  

பச்சைக் கனவு

அன்பின் தராசு மிகவும் வலிமையற்றது. ஒரு சிறு தவற்றில் அது உறவில் ஒரு நிரந்தரப் பகையை உண்டு செய்து விடும். ”உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது” என்றாலும் சற்று உடைந்த அல்லது விரிசல் கண்ட கண்ணாடிதான்.

பசுமை என்று சொல்கையில் இருக்கும் நிறைவு பச்சையில் இருப்பதில்லை. பச்சையுடன் ஏதேனும் ஒன்று சேரவேண்டும்- “பச்சைப் பசேல்”, “ பச்சைக் காய்கறி”, “பச்சைப் புல்”, “பச்சை விளக்கு”, “பச்சைப் பொய்”.

மனக்கண் குருடாய், மனமொழி பேசாமல், மனச்செவிடராய் இருக்கும் மாந்தர்களை லா.ச ரா “பச்சைச் கனவில்” காண்பிக்கிறார். கதையின் நாயகன் சிறு வயதில் ஆதவனை உற்று உற்று நோக்கி, பின் சுற்றும் முற்றும் பார்க்கையில் காணும் பச்சைக் கோலங்களை வியக்கிறான். பச்சை தங்கிவிட வாழ்வு குருட்டுத்தனமாக  நீள்கிறது. அவனுக்கு சிறு வயது கல்யாணம். அந்தப் பெண் ஊமையும் செவிடுமாக வாய்க்கிறாள். ஆணின் குறை பாராட்டப்படாமல் பெண்ணின் குறை வாழ்வை சூறையாடுகிறது. பலன் பிரிவு.

இளமை, தன் இணை தேடும் தவிப்பு, தன் சொந்தம் என்ற நினைப்பு, உயிர் உருகும் ஏக்கம், அது அவர்களை ஊர் அறியா வண்ணம் சேர்க்கிறது.

அவர்களிருவரின் ஆயுளின் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மூச்சில் அளந்துவிட முயல்வது போன்ற ஆலிங்கனத்தின் அவஸ்தையிது…

3 மாத கர்ப்பத்துடன் அவள் இறக்க, ஊர் சிரிக்க அந்த நேச இழை வெளியே அறுந்து உள்ளே பச்சையாகத் தொடர்கிறது.

ஊமை கண்ட கனவினை யாரிடம் சொல்வாள்? இல்லை.. “அந்த நினைவு அவர்கள் இருவருக்கும் மட்டுமே சொந்தமாயிருக்க அவள் எண்ணியிருக்கக் கூடும். பகை நடுவில் பயிரான உறவைப் பாதுகாப்பதில் சட்டென்று சலிப்பேற்பட்டுவிட்டதோ? உயிர் நிலையின் ஒரே மூச்சுப் போன்ற அம்மூன்று மாதப் பச்சைக் கனவின் மிச்சம்”- நாயகன்தான்.

மானம், மானம் என்பதெல்லாம் வகையாக வாழ்பவருக்கோ? கண்டு, கேட்டு, பேச இயலாத உறவின் தனிமைகளை ஊர் அறிய ஏன் சொல்லவேண்டும்? வாழ வைக்காதவர்கள் தூற்ற மட்டும் எங்கிருந்து வருகிறார்கள்? உயிர் உருகும் ஓசை கேட்காதவர்கள் வாய் திறந்து பேச மட்டும் செய்கிறார்களே? லா. ச.ரா அவன் மூலம் இந்தக் கேள்விகளைக் கேட்கிறார். அந்த உறவின் அர்த்தத்தை, அவர்கள் கண்டு கொண்ட உயிரின் மீதியை, இளமைக் கொண்டாட்டங்கள் மீறிய சிலிர்ப்பை அவன் பகிரங்கப்படுத்தவில்லை.

இந்தக் கதையும் நாயகனின் போக்கிலே சொல்லப்படுகிறது. அதுவும் தன் இரண்டாம் மனைவியிடம்..

பார்வையற்ற அவனுக்கு இறந்தவள் பாலைவன நீரூற்று. தாகம் தணித்தவள். அன்பால் நிறைத்தவள். அந்த அன்பாலேயே பிரிந்தும் சென்றவள். குறைகளைக் கொண்டாடும் சமுதாயத்தில் விடை சொல்லாத வினாவாக அவள் வெற்றி பெறுகிறாள். அதற்கு மதிப்பளித்து அவனும் மௌனிக்கிறான். அவன் மட்டுமே கேட்ட வசந்தம்… ஹிந்தோள வசந்தம்.. வசந்த மாதவம்… ஜானகி தவம்… சச்சிதானந்த வைபவம் (முத்துஸ்வாமி தீஷதர் கிருதி…  சந்தான இராமனைக் கொண்டாடும் இந்தக் கிருதி).இவன் பச்சைக் கனவின் நாயகியை மனதால் பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.

பெயரில்லாத இந்தப் பெண்… வாய் பேச இயலாத இந்தப் பெண் தன் பிறப்பின் பலனை உரக்கச் சொன்னாள். உயிர் தாங்கும் உரிமை பெண்ணிற்கு அன்றி யாருக்கும் இல்லை. அவள் வசந்தம்.. பூவாகிக் காயாகிக் கனிந்த மரம்… தன்னையன்றி யாருக்கு அவள் தன்னை மெய்ப்பிக்க வேண்டும்?

ச ரி ம ப த நி த ச  ச நி த ப ம த ம க ச  – ஹிந்தோள வசந்தம்.

ருக்குமணி– கோபிகா வசந்தம்: இன்பமும் துன்பமும் வெளிப்படை.

பச்சைக் கனவின் நாயகி- ஹிந்தோள வசந்தம்: இன்பமும் துன்பமும் உள்ளிடை.

oOo

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இராகப் பெண்கள் – 6: அமிர்த வர்ஷினி- மீறும் அளவுகள்

பானுமதி. ந

6. அமிர்த வர்ஷினி- மீறும் அளவுகள்

அமிர்த தாரை. வானம் கொடுக்கும் உயிர். நீரின்றி அமையாத உலகின் அச்சாணி. இத்தனை சிறப்பு— “ஆழியில் புக்கு முகர்ந்து கொடார்த்தேரி” வரும் வருணனுக்கு. ஆனால், அவன் நினைக்கையில் மட்டும்தான் வருவான். அளவின் கட்டுப்பாடுகள் அவனுக்கு இல்லை. குறைவாய், அதிகமாய், சரியாய், விளைநிலத்தில், காடுகளில், கடலில் பெய்யும் பெருமழை. வருவது போல் தோன்றி, போக்குக் காட்டி பின்னர் எதிர்பாராது  வந்து… மகேசன் அறியா மாமழை.

ஆழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து” லா. ச. ரா.வின் “அபூர்வ இராகம்” நாயகி பெய்யும் பெரு மழை. முழங்காலுக்கும் கீழே தொங்கும் கூந்தல், இயல்பாக இருத்தல் அவள் வழி. பெண் பார்க்கையிலேயே “பஜ்ஜிக்கு உப்பு போதுமா?” என்று கேட்க வைத்து அவள் தன்மையை உணர்த்தி விடுகிறார் லா. ச. ரா. தீயில் இருக்கும் குளிராக, குளிரில் உறையும் நெருப்பாக அவனும், அவளும். அவர்களின் ஆழம் காணும் போக்கு அவர்களை சிறிது காலம் பிரிக்கிறது. ஒருவரை ஒருவர் வரவழைக்க பொய்யான செய்தி சொல்லி தந்திகள் பறக்கின்றன. ஊர் பார்க்கும் கவலையின்றி இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, கண்ணீரில் கரைந்து அந்தப் புகை வண்டி நிலையத்தில் ஒன்றேயான இரண்டாக நிற்கின்றனர்.

அவளின் கூந்தல் அவனின் பிரமிப்பு. அவளின் அலாதியான மௌனமும், சிறு பேச்சுக்களும் அவனின் வியப்பு. மாமழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கும் ஒரு மாலையில் இருவரும் கடற்கரைக்குச் சென்று பேரழகின் அச்சத்தை, ஆழத்தை, இயற்கையின் விளையாட்டை, காட்சி தெளிவாக இல்லாத ஒளிமயக்கை, அனுபவிக்கிறார்கள். அதிலும் அவள் கொள்ளும் உற்சாகம் மிகுதி. உள்ளம் அனுபவித்ததற்கு உடல் விலை கொடுக்கிறது. அவள் நோயுற்று சாகப் பிழைக்கக் கடந்து தேறுகிறாள்.

அவன் அன்னையின் வேண்டுதல்படி அவள் தன் கூந்தலை காணிக்கையாக ஏழுமலையானுக்கு செலுத்த வேண்டும். இருவருக்குமே இது தாள இயலாத அதிர்ச்சி. ஆனால் இதெல்லாம் இவர்களுக்கு வேண்டாம். அந்தந்த நிமிட வாழ்வில்தான் இருவருக்குமே அக்கறை.

அபூர்வ இராகத்தின் உயிர் நாடி அந்த அளகபாரம்தான். ”பின்னாது வெறுமனே முடிந்தால் ஒரு பெரும் இளனீர் கனத்துக்கு கழுத்தை அழுத்திக் கொண்டிருக்கும். பின்னலை எடுத்துக் கட்டினால், கூடை திராஷையை அப்படியே தலையில் கவிழ்த்தது போலிருக்கும்.” தன் நிலை தாழ அது விரும்பவில்லை. உயிர் ஸ்வரம் இல்லாமல் இராகம் என்ன, தாளம் என்ன? பாவ பூர்வமாக, ஸ்ருதி சேர்ந்ததாக, அந்த ஸ்வ்ரத்தில் மட்டும் நின்று கார்வை கொடுக்கையில் வீணையின் தந்தி அறுந்துவிடுகிறது.

“அபூர்வ இராகம், அதே வக்கரிப்பு, பிடாரன் கை படாத பாம்பு போல், அபாயம் கலந்த படபடப்பு, ஸ்வர ஸ்தானங்கள் பிடிபடாது, பழகப் பழக எல்லையேயற்றது போல், நடையுடை பாவனைகளில் சிந்தும் ஒரு கவர்ச்சி, வேட்டையில் வேடுவன் மேல் பாயத் திரும்பிய மிருகம் போல் பயந்த ஒரு முரட்டுத்தனம் சிலிர்சிலிப்பு”

“இயல்பு என்று சொல்வதன் அர்த்தம் என்ன? பட்சிகளுக்குப் பறப்பதுதான் இயல்பு. இறக்கையை ஒடித்துவிட்டு இயல்பு மாறாதவரை பட்சி பட்சிதான் என்றால் என்ன சரி? இராகத்திற்கும், பட்சிக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிற்கும் மேல் சஞ்சாரம்தானே?”

இவள் வர்ஷிப்பவள். பொழிந்து ஆள்பவள். ஆனால் கட்டுக்குள் அடங்காதவள், அதுதான் அவளது இயல்பு. அந்தந்த நொடியில் வாழ்பவள். தன் இயற்கையில்  இருப்பவள். இவள் அம்ருத வர்ஷினி

அவுடத இராகம். பிறப்பெடுத்து தோன்றும் உருக் கொள்பவள்

ச க ம ப நி ச     ச நி ப ம க ச

அமிர்தம்

நிறைகுடம். தெவிட்டாதது. காலம் தோறும் வெல்லும் உண்மைகளின் உரைகல். அழகும், அறிவும், ஆற்றலும் திரண்ட அமுது. சேற்றிடை செந்தாமரையென மலர்ந்தவள். அழுக்கு அண்டாமல் வாழத் துடித்தவள். தன் தாயை மீற இயலவில்லை. தன்னை ஊர் அறியாத் துணையாக வைத்துக் கொள்ளத் துடிக்கும் முதலியாரிடம் காதலில்லை. அவர் பால் கழிவிரக்கம்தான். தன்னைக் கொடுக்காமல் அவரிடமிருந்தே தவணை பெறுகிறாள். முதலியாரின் பெரும் போக்கான மேம் குணங்களை அழகாகச் சொல்லிச் செல்கிறார் தி. ஜா. கெட்டவன் நல்லவன் என்ற இரு கூறான பிரிவு இல்லை. அனைத்து  மனிதர்களிடத்திலும் இருக்கும் கலவை. அமிர்தமும் அதனை நினைக்கிறாள். ஆனால், காதலாகிக் கசிந்துருக அவளால் இயலவில்லை. இச் சூழ்நிலையில் தாயும் இறந்து விடவே, அவள் தனியாகிறாள். முதலியார் துக்கம் கேட்க வராதது அவளை  வாட்டுகிறது. ஊரறிய சொல்லிக் கொள்ள விரும்பாத உறவாக  தன்னை முதலியார் கருதுவது அவளது தன்மானத்தைப் பாதிக்கிறது. ஆனாலும், ஒரு சக மனிதனாக அவர் நடந்து கொள்ளாதது அவளை வருத்துகிறதே தவிர அவர் பால் அவள் உள்ளம் ஈடுபடவில்லை. இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை தி. ஜா. கதைப் போக்கிலேயே சொல்லிவிடுகிறார்.

இரு மாதங்களாகக் கோயிலில் பார்க்கும் ஒரு இளைஞனின் உருவமும், பருவமும், அவன் நடத்தையும் அவளை இயல்பான வெட்கத்தை மீறி அவனுடன் பேசவைக்கின்றன. அவன் இந்த ஊரைச் சேர்ந்த ரங்கூன்வாசி. ஊரில் அவனுக்கு நண்பர்கள் இல்லை. எப்பொழுதாவது இங்கே வரும் அவனுக்கு நெருக்கமானவர்களில்லை. அவளுடைய ஆற்றலும், அழகும், அறிவும் அவனைக் கொள்ளை கொள்கின்றன. சட்டம் படித்த அவன் அவளைக் கல்யாணம் செய்ய விரும்புகிறான். அவளுடைய வாழ்க்கைச் சம்பவங்கள் சமுதாயத்தின் நீதி குறித்து அவனைச் சினமடைய வைக்கின்றன.

அவளை அவன் அவள் வீட்டில் சந்தித்து தங்கள் மணம் குறித்து பேசுகையில் அவனது தந்தையான முதலியார் அங்கே வருகிறார். தன் தந்தைதான் அவளை அடைய ஆவல் கொண்டவர் என அறிகையில் தவிக்கிறான், திகைக்கிறான், வெறுக்கிறான். தந்தைக்கும் அதிர்ச்சி. பூங்காவில் சந்திக்கும் முதியவர் அவன் அமிர்தத்தை  மணம் செய்யவேண்டுமென்றும், இதில் அவன் மற்றும் அவளது விருப்பம் தான் முதன்மையானதென்றும், தந்தை மகன் நன்றிக் கடன் எல்லாம் அவனை கட்டுப்படுத்தினால் கூட அமிர்தத்தின் காதல் வலிமையானது என்றும் உணர்த்துகிறார்.

முதலியார் அவன் காஃபியில் நஞ்சு கலந்து அதை அவன் குடிக்கப் போகையில் தானே தட்டியும் விடுகிறார். சொத்தில் பங்கில்லை என்கிறார். அமிர்தத்தின் மீது அவதூறும் சொல்கிறார். கடிதத்திலும் சேற்றை வாரி இறைக்கிறார். அவன் துணிவாக நிற்கிறான். அன்று மாலை கோயிலில் சந்தித்து விரைவில் மணம் முடித்து ஊரை விட்டுப் போகத் தீர்மானிக்கிறான். அவன் ஆலயத்தில் காத்திருக்கையில் கடிதம் அவளிடமிருந்து வருகிறது. சில சிக்கல்களுக்கு மிகச் சரியான விடை கிடைத்தாலும், அந்த விடைகளே முடிச்சுக்களாக மாறி இறுக்கி விடும் என்று சொல்லி தான் ஊரை விட்டு நீங்குவதாகவும், மேலே படித்து தன் வாழ்வை அமைத்துக் கொள்வதாகவும், அடுத்த பிறவியில் அவர்கள் நிச்சயமாக இணைவார்கள் என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

பிறப்பால் தொடரும் ஒரு கறை. அதைப் போக்கி தூயதான வாழ்வு தேடும் ஒரு சிறு பெண். அவளை வென்று விடத் துடிக்கும் பணம், உறவு. அதை வெற்றி கொள்ளும் அவள் சாமர்த்தியம், தன் கணவனாக அவனை நினக்கும் பாங்கு, எதையுமே மறைக்காத உண்மை, பணத்தை முதலியாரிடமே சேர்க்க நினைக்கும் நேர்மை, தகப்பன், மைந்தன் இருவரையுமே விட்டுச் செல்லும் தீர்மானம்…. இந்த சிறு பெண்தான் தூய அமுதம். மென்மை, கம்பீரம், தெளிவு, புத்தி கூர்மை, இனிமை, இளமை, துயரங்களைக் கடக்கும் திண்மை, பாலைவனத்து நிலாவானால் என்ன? நிலவின் இயல்பு ஒளிர்வது தானே?

இவளும் அமிர்த வர்ஷினிதான். மாதம் மும்மாரி பெய்பவள். உலகோர்க்கு உயிரானவள். தன் இயல்பை மீறாதவள். கண்ணனுடன் கலந்து தீப ஒளியாய்த் திகழும் ஆண்டாள், கண்ணனுடன் ஆயர்பாடியில் சிறிது காலமே இருந்த இராதை . இருவர் காதலும் உவப்பானதே.

அவள் “ஆனந்தாமிருகர்ஷினி

இவள்”சுதாமயீ

ஏழு ஸ்வ்ரங்களும் வரவில்லை என்றாலும் அழகான இராகங்கள்.

oOo

 

 

 

இராகப் பெண்கள் – 2. தர்பாரி கானட (தர்பார் கானடா)

பானுமதி. ந

2. தர்பாரி கானட (தர்பார் கானடா) – ஒளியும் ஒலியும்  

கானடா நம் நினைவில் தன்னிரக்கத்தையும், சுகமான சோகத்தையும் ஏற்படுத்தும். தர்பாரில் ஒரு கம்பீரம் கலந்த நிலை. இவ்விரு ராகங்களைப் போல்,  பூர்வா மற்றும் அம்மணி இருவரும் இரு மாபெரும் எழுத்தாளர்கள் படைத்த ராகங்கள்..

பெயரில் ஒரு பாவம் பொதுவாக இருக்கிறது. பெயரைக் கேட்கும்போதே ஒரு கோட்டுச் சித்திரம் மனது வரைந்துவிடுகிறது. அதிகம் கேள்விப்படாத பெயரோ அல்லது பொதுப்பெயரோ நம்மைச் சிறிது நேரம் சிந்திக்க வைக்கிறது.

பூர்வா ஒரு அபூர்வ பெயர். அம்மணியோ பொதுப் பெயர். இப்பாத்திரப் பெயர்களே நம்முள் அலை எழுப்புகின்றன. இந்தக் கதாநாயகிகள் உயிர்ப்புடன் உலா வர உறுதுணை செய்கின்றன..

இரைச்சலும், மௌனமுமான சூழ்நிலையில்தான் அறிமுகமாகிறாள் பூர்வா!

ஒளியும் ஒலியுமாக அம்மணி.

அம்மணிக்கு அவள் ஊரைப் பற்றி பிறர் பேச விருப்பமில்லை. தன்னுள் நினைத்துக்கொள்ளவே ஆசை.

பூர்வா ஊரை நினைப்பதேயில்லை.

அம்மணி ஆதிப் பெருங்காற்று, ஊழிப் பெருவெள்ளம், தடை உடைக்கும் பிரவாகம்! காட்டாற்றின் வேகம். பிரபஞ்ச தாண்டவம். வெளியே இரைச்சல். உள்ளே நிறைவு. அழகின் செருக்கு. மனிதர்களைத் தொட்டு உணரும் மனப்பழக்கம். ஊரில் பெரிய மனிதரின் சிறு கால் அழுக்கைக்கூடத் தாளாத சிறுமி- அவர் மனக்குப்பையை அறிகையில் பந்தத்தையும், சொந்தத்தையும் துறக்கிறாள். பாடலும், ஆடலுமாக வாழப் பிடித்திருக்கிறது.

இறைவன் இணைக்கும் பந்தங்கள் வேடிக்கையாக இருக்கிறது அவளுக்கு!

கோபாலி இசைக்க மறந்த ராகம் அவள். அவளே இசையென பொங்குகிறாள். நிறைக்கிறாள், நிறைகிறாள். தன் போதி மரத்தை கண்டுகொள்கிறாள்.

பூர்வா நீர் நிறைந்த குடம். தன்னுள் தானே மூழ்கும் சிலை. மௌனமே இயல்பு. பேசும் அபூர்வ தருணங்கள் கலக்கமே! வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் அதைப் பற்றி பெருமையுமில்லை, நிறைவுமில்லை, குறையுமில்லை. கணவன் கூட நுழையமுடியாத உள் ஆழம். இந்த உலகைப் படைத்த பின்னர் கடவுள் கொண்ட மௌனம். இரு பாதியெனப் பிரித்த பின்னர் சேர்க்கும் விளையாட்டில் அவன் கொண்ட ஆசை! அதில் வென்றும், தோற்றும் இருள், ஒளியென அவன் காணும் காட்சி.

வலி என்பதையே வெளிப்படுத்தாத பூர்வா ஒரு அபூர்வா! அமைதியாக அனுபவித்துக் கொள்ள அவளால் முடிகிறது. தன் முடிவை அறிந்த மௌனமோ அது!. முடிவில், கதறலில், வலி அவளை வெல்கிறது. இரு குழந்தைகள் வயிற்றிலேயே இறக்க அவளும் இறக்கிறாள்.

ஒலி நிறைந்த, வண்ணமயமான உலகில் இருந்து அம்மணி ஆர்ப்பாட்டமில்லாத அமைதிக்கு வருகிறாள். அவளுக்கு என்றுமே மனதில் இரைச்சலில்லை. வெளியே மௌனமில்லை.

பூர்வாவிற்கு வெளியே இரைச்சலில்லை, உள்ளேயோ அமைதியின் ஒலம்.

பூர்வா புன்னகையின் புதிர். கதாநாயகன் நினைத்துக் கொள்வான், “நான் இவளை மணந்தேனா அல்லது இவள் புன்னகையை மணந்தேனா?” என்று. அவள் “பொருள் புரியாப் புன்னகையுடன்” உட்கார்ந்திருப்பாள். “அவள் பத்திரம் என் மனதின் நிம்மதியைக் குலைத்தது” ஆனாலும் அவள் பால் கொண்ட காதல் குறையவில்லை.

ச ரி  ம ப த நி ச    ச  நி ச த ப ம க ரி. தர்பார். அம்மணி

ஆரோகணத்தில் அவள் காட்டாறு என்றாலும் அவரோகணத்தில் நீர்வீழ்ச்சி

ச ரி ப க ம த நி ச      ச  நிப ம  க ம ரி ச. – கானடா. பூர்வா

இவள் பனி உறைந்த பாறை  கடலுள்ளே சிதறும் எரிமலை

அம்மணியும் பூர்வாவும் ஒரு புள்ளியில் தொடங்கி  இரு கிளையெனப் பிரிந்து இணையும் இராகங்கள்.

தர்பாரி கானடா:

ச ரி க  ச ம ப த நி ச        ச த நி ப ம ப க  ரி ச

வாழ்வைத் தன் போக்கில் அணுகி, வாழ்ந்து பிறர் கவனங்களைக் கவர்ந்து, அனைத்தையும் தழுவும் காற்றாய், ஒலியாய் வாழ்ந்த அம்மணி அமைதியை உள்வாங்குகிறாள்.

தன்னுள்ளே மூழ்கி, உள்ளே இரைச்சலாய், வெளியே மௌனமாய், கேட்காத கேள்விக்கு விடை தேடி, வலியை ஒலியாய் வெளிப்படுத்தி பூர்வா விடை பெறுகிறாள்.