வண்ணக்கழுத்து

வண்ணக்கழுத்து 16இ: வெறுப்பும் பயமும்

gay_neck_the_story_of_a_pigeon

மாயக்கூத்தன்

இப்போது நான் முன்னே சென்று, அந்த மடத்தின் தலைமை லாமாவை வணங்கினேன். அவர் என்னை ஆசீர்வதிக்க, அவருடைய இறுக்கமான முகம் புன்னகையால் மலர்ந்தது. மற்ற லாமாக்களையும் வணங்கிய பின் நானும் கோண்டும், சின்னச் சின்ன மர இருக்கைகளை வரிசையாக அடுக்கி எங்களுக்காக உருவாக்கப்பட்ட மேஜைக்கு முன் அமர்ந்தோம். தரையில் சம்மண்மிட்டு நாங்கள் உட்கார, அந்த மேஜை எங்கள் மார்பு உயரம் வரை வந்தது. வெப்பம் மிகுந்த நாளில் பயணம் செய்துவிட்டு, குளிர்ந்த தரையில் உட்கார்வது இதமாக இருந்தது. பருப்பினால் செய்யப்பட்ட கஞ்சி (soup), பொறித்த உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காய் கறி தான் எங்கள் சாப்பாடு. நானும் கோண்டும் சைவர்கள் ஆதலால், அங்கு பரிமாறப்பட்ட முட்டைகளை நாங்கள் சாப்பிடவில்லை. எங்களுக்கான பானம் சுடச்சுட க்ரீன் டீயாக அமைந்தது.

மதிய உணவிற்குப் பின், தன்னுடன் மதியத் தூக்கத்தை எடுத்துக்கொள்ள என்னையும் கோண்டையும் அழைத்தார் தலைமை லாமா. அவருடன் மலையின் உச்சி சிகரத்திற்கு ஏறினோம். அது ஒரு கழுகின் பொந்து போல இருந்தது. அதற்கு மேலே நெருக்கமாக தேவதாரு மரங்கள் வளர்ந்திருந்தன. அங்கே, மரச்சாமான்கள் ஏதுவும் இல்லாத வசதிகளற்ற வெற்று அறை ஒன்றைப் பார்த்தோம். அதற்கு முன் அப்படி ஒன்றை நான் பார்த்திருக்கவில்லை. அங்கே நாங்கள் உட்கார்ந்த பிறகு அந்தத் துறவி, ”இந்த மடாலயத்தில் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை, இந்தப் பூமியின் தேசங்களைக் குணப்படுத்துவதற்காக நாங்கள் எல்லையற்ற கருணையிடம் பிரார்த்திக்கிறோம். இருந்தும் யுத்தம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. பறவைகளையும் விலங்குகளையும் கூட, வெறுப்பும் பயமும் தொற்றிக் கொள்கிறது. உணர்வுகளால் உண்டாகும் நோய்கள், உடல் நோய்களைவிட வேகமாகப் பரவுகின்றன. மனிதகுலம் பயத்தினாலும், வெறுப்பினாலும் சந்தேகத்தினாலும் வன்மத்தினாலும் நிரம்பப் போகிறது. இவற்றிலிருந்து மொத்தமாக மனிதர்களை விடுவிக்க வேண்டுமானால், ஒரு தலைமுறையையே நாம் கடக்க வேண்டியிருக்கும்.” என்றார்.

இதுவரை சுருக்கங்களற்று இருந்த லாமாவின் நெற்றியை  எல்லையற்ற சோகம் கவலை ரேகைகளால் நிறைத்தது. பயங்கர களைப்பினால் அவருடைய இதழோரங்கள் தாழ்ந்தன. யுத்தங்களுக்கு மேலே அவற்றைத் தாண்டி, அவருடைய கழுகுக் குகையில் அவர் வாழ்ந்த போதும் கூட இந்த உலகத்தைப் போரில் ஆழ்த்தியவர்களைவிட அவர் மனிதர்களின் பாவச் சுமையை நன்கு உணர்ந்திருந்தார்.

ஆனால், அவர் மறுபடியும் புன்னகைத்தார். “நம்முடன் இருக்கும் வண்ணக்கழுத்தையும் கோண்டையும் பற்றிப் பேசுவோம். உன்னுடைய புறா மீண்டும் வானத்தின் அமைதியில் பறக்க வேண்டும் என்றால், கோண்ட் இத்தனை நாட்கள் தனக்காகச் செய்து கொள்வது போல, நீ எல்லையில்லா துணிவை தியானிக்க வேண்டும்.”

“எப்படிப் பிரபுவே?” என்று ஆர்வமாகக் கேட்டேன். அந்தத் தலைமை லாமாவின் மஞ்சள் முகம், சிவந்தது. என்னுடைய நேரடிக் கேள்வியால் அவரை சங்கடப்படுத்திவிட்டேன் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்காக நான் வெட்கினேன். நேரடித்தன்மை அவசரத்தைப் போலே மிகவும் இழிவானது.

என்னுடைய எண்ணங்களை உணர்ந்தவரைப் போல, என்னை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரும்வகையில் லாமா சொன்னார், “ஒவ்வொரு சூரிய உதயத்தின் போதும் அஸ்தனமத்தின் போதும், வண்ணக்கழுத்தை உன் தோளில் அமர்த்திக் கொண்டு, உனக்குள்ளே இதைச் சொல் ’எல்லையில்லா துணிவு எல்லா உயிர்களிடத்திலும் இருக்கிறது. இவ்வுலகில் உயிர் பிழைத்து சுவாசிக்கும் ஒவ்வொரு உயிரும் எல்லையற்ற துணிவின் நீர்நிலை. நான் யாரைத் தொடுகிறேனோ அவர்களிடத்தில் எல்லயற்ற துணிவைக் கடத்தும் அளவிற்கு பரிசுத்தம் அடைவேனாக”. இதைத் தொடர்ந்து செய்து வந்தால், ஒருநாள், உன்னுடைய இருதயம், மனம் மற்றும் ஆன்மா மொத்தமாக பரிசுத்தமாகிவிடும். அந்த நொடியில், பயமில்லாத, வெறுப்பில்லாத, சந்தேகம் இல்லாத, உனது ஆன்மாவின் சக்தி, வண்ணக்கழுத்துக்குள் ஊடுறுவி அவனுக்கு விடுதலை அளிக்கும். எவன் ஒருவன் மிகப் பெரிய அளவில் தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறானோ, அவனால் இந்த உலகத்திற்குள் மிகப்பெரிய ஆன்மசக்தியை செலுத்த முடியும். நான் சொல்வதை நாளுக்கு இரண்டு முறை செய். எங்கள் லாமாக்கள் அனைவரும் உனக்கு உதவி செய்வார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.”

ஒரு நொடி மெளனத்திற்குப் பின் லாமா தொடர்ந்தார், “வேறு யாரையும்விட மிருகங்களைப் பற்றி நன்கு அறிந்தவரான கோண்ட் உனக்குச் சொல்லியிருப்பார், நம்முடைய பயம் மற்றவர்களை பயமுறுத்தி, நம்மை தாக்கச் செய்கிறது. உன்னுடைய புறா ரொம்பவே பயந்து போய் இருக்கிறான். மொத்த வானமும் தன்னைத் தாக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு இலை கூட அவனைப் பயமுறுத்தாமல் கீழே விழுவதில்லை. அவன் உள்ளத்தைக் கலங்கடிக்காமல் ஒரு நிழல் கூட விழுவதில்லை. இருந்தாலும் அவனுடைய வேதனைக்கு அவனே காரணம்.

“நாம் பேசிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில், இங்கிருந்து கீழே வடமேற்கில் இருக்கும் கிராமம், வண்ணக்கழுத்து சந்திக்கும் அதே பிரச்சனையால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மிருகங்கள் வடக்கே வரும் காலம். மிரட்சியில் இருக்கும் கிராமவாசிகள், காட்டு மிருகங்களைக் கொல்வதற்காக பழைய துப்பாக்கிகளோடு சுற்றித் திரிகிறார்கள். இதோ, அந்த மிருகங்கள் இப்போது அவர்களைத் தாக்குகின்றன. ஆனால், இதற்கு முன்னர் அவை அப்படிச் செய்ததே இல்லை. காட்டெருமைகள் வந்து அவர்களின் பயிர்களை சாப்பிடும். சிறுத்தைகள் அவர்களுடைய ஆடுகளை திருடிக் கொண்டு போகும். இன்றைக்கு இங்கே வந்த செய்தி, ஒரு காட்டெருமை ஒருவனைக் கொன்றுவிட்டது என்பது. பிரார்த்தனையாலும் தியானத்தாலும் அவர்கள் மனத்திலிருந்து பயத்தை ஒழித்துவிடுங்கள் என்று நான் சொன்னாலும் அவர்கள் செய்யப்போவதில்லை.”

“ஏன்?” என்று கேட்டார் கோண்ட். “நான் அங்கே சென்று அந்த விலங்குகளை அவர்களிடமிருந்து விரட்ட எனக்கு அனுமதி தரமட்டீர்களா?”

“இப்போதைக்கு இல்லை” என்றார் லாமா. “விழித்திருக்கும் கணங்களில் நீ பயத்திலிருந்து  குணமடைந்திருந்தாலும், உன்னுடைய கனவுகள் அச்சத்தின் சாபத்துக்கு இன்னும் இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்கள் தொடர்ந்து பிரார்த்தித்து தியானம் செய்வோம், உன்னுடைய ஆன்மாவில் இருக்கும் கசடுகள் எல்லாம் வெளியே போய்விடும். நீ குணமடைந்த பின்பும் கீழே இருக்கும் கிராமத்தார்கள் விலங்குகளால் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்றால், நீ போய் அவர்களுக்கு உதவி செய்யலாம்.”

வண்ணக்கழுத்து 16ஆ: வெறுப்பும் பயமும்

gay_neck_the_story_of_a_pigeon

நான் கோண்டின் அறிவுரையை ஏற்று, வண்ணக்கழுத்தை ஒரு கூண்டிலும் அவன் பெடையை மற்றொரு கூண்டிலும் போட்டுக் கொண்டு வடக்கு நோக்கி பயணித்தேன்.

முந்தைய இலையுதிர்காலத்தை விட இந்த வசந்தகாலத்தில் மலைகள் எத்தனை வித்தியாசமாய் இருக்கின்றன! திடீர்த் தேவையை முன்னிட்டு என் பெற்றோர்கள் டெண்டாமில் உள்ள அவர்களுடைய வீட்டை வழக்கத்திற்கு மாறாக பல மாதங்கள் முன்பாகவே திறந்திருந்தனர். அங்கே எல்லாம் சீரான பிறகு, ஏப்ரல் மாத கடைசியில் வண்ணக்கழுத்தை எடுத்துக் கொண்டு குதிரைகளில் பயணித்த ஒரு திபெத்திய நாடோடிக் கூட்டத்தின் துணையோடு சிங்காலிலா நோக்கிப் புறப்பட்டேன். அவனுடைய பெடையை வீட்டிலேயே விட்டுவிட்டேன். ஒருவேளை அவனால் மீண்டும் பறக்க முடிந்தால் பெடையைத் தேடி வருவானே என்பதற்காக. அவனை குணமாக்கச் சரியான யுத்தி, அந்தப் பெடையை ஒரு ஈர்ப்பு சக்தியாக பயன்படுத்துவது. அவன், புதிதாக இடப்பட்ட முட்டைகளை அடைகாத்து பொறிக்க தனது துணைக்கு உதவிகரமாக இருக்க திரும்புவான் என்று கோண்ட் நினைத்தார். ஆனால், நாங்கள் கிளம்பிய மறுநாளே என் பெற்றோர் அந்த முட்டைகளை அழித்துவிட்டனர். வண்ணக்கழுத்தின் பெயருக்கு பங்கம் செய்யும் விதமாக சீக்கான, குறைபாடுடைய குஞ்சுகள் உருவாவதை நாங்கள் விரும்பவில்லை.

என் பறவையை என் தோளிலே தூக்கிச் சென்றேன். அவன் நாள் முழுக்க அங்குதான் உட்கார்ந்து கொண்டு வந்தான். இரவில் அவனை பாதுகாப்பாக அவனுடைய கூண்டில் அடைத்து வைத்தோம். அது அவனுக்கு நன்மை செய்தது. பன்னிரெண்டு மணிநேர மலைக்காற்றும் அதன் வெளிச்சமும் அவனை உடலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும், அவன் என் தோளிலிருந்து தன் பெடையைத் தேடி, அவள் முட்டையைப் பொறிக்க உதவி செய்ய, பறந்து செல்ல ஒருமுறை கூட முயற்சி செய்யவில்லை.

வசந்தகால இமாலயம் தனித்துவம் வாய்ந்தது. பூமி முழுக்க வெள்ளை வயலட் மலர்களால் ஒளிர்ந்தது. சூடான ஈரப்பதம் நிரம்பிய பள்ளத்தாக்குகளில் இருந்த ஃபெர்ன்கள்(ferns), கருநீல வானத்தில் இருக்கும் விலைமதிப்பற்ற கல்லைப் போல இருந்த வெள்ளை மலைகளை, தங்கள் பெரிய கரங்களைக் கொண்டு எட்டிப் பிடிக்க முயற்சி செய்வது போல படர்ந்து கொண்டிருந்தன, இடையிடையே அதற்குள் பழுக்கத் தொடங்கியிருந்த ராஸ்பெர்ரி பழ மரங்கள். சில சமயங்களில், வளர்ச்சி தடைப்பட்டிருந்த ஓக், மிகப்பெரிய இலம், தேவதாரு மற்றும் கஷ்கொட்டை மரங்கள் இருந்த அடந்த காடுகளைக் கடந்து சென்றோம். சூரிய ஒளியை முழுவதும் மறைக்கும்படியான எண்ணிக்கையில் அவை வளர்ந்திருந்தன. மரங்களோடு மரமும், கொம்புகளோடு கொம்பும், வேர்களோடு போராடும் வேர்களும், வெளிச்சத்திற்காகவும் உயிருக்காகவும் போராடின. அவற்றுக்கு கீழே இந்த மரங்களினால் உண்டான இருட்டில், தம் பங்குக்கு புலிகளாலும், சிறுத்தைகளாலும் கருஞ்சிறுத்தைகளாலும் வேட்டையாடப்படுவதற்காகவே, நிறைய மான்கள் செழித்து வளர்ந்திருந்த புற்களையும் செடிகளையும் மேய்ந்து கொண்டிருந்தன. எங்கெங்கு உயிர் செழிப்பாக வளர்ந்திருந்ததோ, அங்கெல்லாம் பறவைகள், விலங்குகள் மற்றும் செடிகளுக்கு இடையில் இருத்தலுக்கான போராட்டம் இன்னும் உக்கிரமாக இருந்தது. இத்தகைய தன்முரண் வாழ்வின் இயல்புகளுள் ஒன்று. பூச்சிகளுக்கு கூட இதிலிருந்து விடுதலை கிடையாது.

நாங்கள், காட்டின் இருளிலிருந்து வெளிவந்து வெட்ட வெளியை நோக்கிய போது, சூடான வெப்பமண்டல சூரிய ஒளி, திடீரென்று தன்னுடைய வைர நெருப்பு முனைகளால் எங்கள் கண்களைப் பறித்தது. தட்டான்களின் பொன்னிற அசைவு காற்றுவெளியை நிரப்பியது. வண்ணத்துப்பூச்சிகள், குருவிகள், ராபின்கள், ஜேக்கள் மற்றும் மயில்கள் சப்தங்கள் எழுப்பி, மரத்திலிருந்து மரத்திற்கும், சிகரங்களிலிருந்து உயர்ந்த சிகரங்களுக்கும் தாவிக் காதல் செய்தன.

ஒருபக்கம் தேயிலைத் தோட்டங்களும் வலது பக்கம் பைன் காடுகளும் கொண்ட திறந்த வெளியில், கத்தி முனைகளைப் போன்று நேரான சரிவுகளில் நாங்கள் கஷ்டப்பட்டு தடுமாறி முன்னேறினோம். அங்கே காற்று அடர்த்தியை இழந்திருந்ததால், சுவாசிப்பது சிரமமாக இருந்தது. சப்தங்களும் எதிரொலிகளும் வெகு தூரம் பயணித்தன. கிசுகிசுப்புகள் கூட சில மையில் தூரம் தாண்டியும் கேட்கப்படுவதிலிருந்து தப்ப முடியவில்லை. மனிதர்களும் விலங்குகளும் ஒருசேர அமைதியானார்கள். கால் குளம்புகளின் தடதடக்கும் சப்தங்களைத் தவிர குதிரைகளும் மனிதர்களும், எங்கள் மீது கவிந்திருக்கும் தனிமைக்கும் அமைதிக்கும் களங்கம் ஏற்படாதவாறே முன்னேறினோம்.

கருநீல வெட்டவெளிவானம் மேகங்கள் அற்று தூய்மையாகவும், வடக்கே ஒரு பெருமூச்செரிந்தாற்போல் செல்லும் நாரைக் கூட்டங்களையும், சரிவுகளில் ஒரு அடிநாதமாய் விரைந்து இறங்கும் கழுகுகளையும் தவிர எந்தச் சலனமும் அற்று இருந்தது. எல்லாமுமே குளிர்ந்து, கூர்மையாகவும் விரைவாகவும் நடந்தன. ஒரே இரவில் ஆர்கிட்கள் வெடித்து, தங்களுடைய ஊதா நிறக் கண்களை எங்களை நோக்கித் திறந்திருந்தன. சாமந்திப் பூக்கள் காலைப் பனியினால் நிறைந்திருந்தன. கீழே இருந்த ஏரிகளில் நீலத்தாமரையும் வெள்ளைத் தாமரையும் தேனிக்களுக்காக தங்கள் இதழ்களை விரித்தன.

இப்போது நாங்கள் சிங்காலிலாவுக்கு அருகே வந்திருந்தோம். மலை உச்சியிலிருந்து மடாலயம் தன் தலையை உயர்த்தி எங்களை அழைத்தது. இறக்கை வடிவிலமைந்த அதன் கூரையும் பழமையான சுவர்களும் தொடுவானத்தில் ஒரு பதாகையைப் போல மிதந்தன. நான் விரைந்து நடக்க அறிவுறுத்தப்பட்டேன். அடுத்த ஒரு மணிநேரத்தில் மடாலயத்தின் செங்குத்தான பாதையில் நான் ஏறிக் கொண்டிருந்தேன்.

நமது அன்றாட வாழ்வின் போராட்டங்களில் இருந்து உயர்ந்து மேலே வாழும் மனிதர்களுக்கு இடையே இருப்பதுதான் என்னவொரு நிம்மதி! அது மதியப் பொழுது. நான் கோண்டுடன் ஒரு பால்சம் காட்டின் வழியே கீழே இறங்கி ஒரு நீரூற்றுக்குச் சென்றேன். அங்கே நாங்கள் குளித்ததுடன் வண்ணக்கழுத்தையும் சுத்தமாக கழுவினோம். வண்ணக்கழுத்து தன்னுடைய கூண்டில் மதிய உணவை உண்டு முடித்த பின்னர், நானும் கோண்டும் சாப்பாட்டு அறைக்குச் சென்றோம். அங்கே லாமாக்கள் எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த அறை கருங்காலி மரத் தூண் மண்டபம் போல இருந்தது. தூண்களின் உச்சி தங்கத்தினால் ஆன டிராகன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பல நூற்றாண்டுகளாக கருத்து வளர்ந்திருந்த தேக்கு உத்திரங்களில் பெரிய தாமரை வடிவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அவை மல்லிகையைப் போல மென்மையாகவும் உலோகத்தைப் போல உறுதியாகவும் இருந்தன. தரையில் செம்பாறைகளில், காவி நிற உடையணிந்த துறவிகள் தியானத்தில் ஆழ்ந்திருந்தனர். உணவுக்கு நன்றி கூறும் பிரார்த்தனை அது. அனைவரும் ஒன்றாக, க்ரிகோரியன் ஸ்லோகம் போன்ற ஒன்றைச் சொல்லி தங்கள் பிரார்த்தனையை முடிக்கும் வரை நானும் கோண்டும் சாப்பாட்டு அறையின் வாயிலில் நின்று கொண்டிருந்தோம்.

“புத்தம் மே சரணம்

தர்மம் மே சரணம்

ஓம் மணி மதமே ஓம்”

புத்தர் என்னும் அறிவே எங்கள் புகல்

மதமே எங்கள் புகல்

வாழ்வு என்னும் தாமரையில் ஒளிரும்

உண்மை மணிவிளக்கே எங்கள் புகல்

 

வண்ணக்கழுத்து 16அ: வெறுப்பும் பயமும்

இப்போது கோண்ட் கதை சொல்லத் துவங்கினார். “அந்த நாய் தன்னுடைய பிரெஞ்சு எஜமானனை போரின் துவக்கித்திலேயே இழந்திருக்கக்கூடும். ஜெர்மானியர்கள் அவரைச் சுட்டுக் கொன்றிருக்கலாம். தன் எஜமானருடைய வீடு சூரையாடப்பட்டு அவருடைய கொட்டகை தீயிடப்பட்டதைக் கண்ட அந்த நாய், பயத்தில் காட்டுக்குள் ஓடி வந்திருக்க வேண்டும். அங்கே ஒரு குடிசையைப் போன்ற இடம் கொண்ட, கல்லறையைப் போல இருட்டான அடர்த்தியான முட்புதருக்கு அடியில் மனிதர்களின் பார்வைக்குச் சிக்காமல் ஒளிந்து கொண்டது. அந்த நாய் இரவில் மட்டுமே உணவைத் தேடி வெளியில் வந்திருக்க வேண்டும். இயல்பிலேயே அதுவொரு வேட்டை நாய் என்பதால், நாட்கள் செல்லச் செல்ல இரவுகள் கடக்க அது தன்னுடைய மிருகப் பண்புகளைத் திரும்பப் பெற்றது.

“என்னை எதிர் கொண்ட போது, நான் அதைக் கண்டு பயப்படாததை அறிந்து அது ஆச்சரியப்பட்டது. பயத்தின் வாடையை நான் வெளிப்படுத்தவில்லை. அதை பயமுறுத்தி தாக்கச் செய்யும் அளவிற்கு பயத்தை வெளிப்படுத்தாத ஒரு மனிதனை அது பல மாதங்கள் கழித்துச் சந்திக்கிறது.

“அதனைப் போலவே நானும் பசியில் இருப்பதாக அது நினைத்துக் கொண்ட்து. அதனால் ஒரு ஜெர்மானிய உணவுக் கிடங்குக்கு என்னைக் இட்டுச் சென்றது. மேலும் ஒரு ரகசிய பாதை வெளியே சென்று ஒரு பெரிய உணவுக் கிடங்கை அடைந்து எனக்காக கொஞ்சம் இறைச்சியைக் கொண்டு வந்தது. அங்கே உணவு மட்டுமல்ல, வரிசையாக பல ரகசியக் கிடங்குகளில் எண்ணெயும் வெடிபொருட்களையும் ஜெர்மானியர்கள் வைத்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தேன். அதற்கேற்றபடி வேலை செய்தேன். கடவுளின் கிருபையால் என்னுடைய கணிப்பு சரியாக இருந்தது. அதை விட்டுவிட்டு இப்போது வேறு விஷயம் பேசுவோம்.

“உண்மையைச் சொல்வதென்றால் எனக்குப் போரைப் பற்றிப் பேசவே விருப்பமில்லை. சூரிய அஸ்தமனம் ஹிமாலய சிகரங்களை ஒளியூட்டுவதைப் பாருங்கள். எவரஸ்ட் ஒரு தங்க உலையைப் போலக் கொதிக்கிறது. வாருங்கள் பிரார்த்தனை செய்வோம்,

“போலியிலிருந்து மெய்மை நோக்கி என்னை வழிநடத்துங்கள்

இருளிலிருந்து வெளிச்சம் நோக்கி வழிநடத்துங்கள்

இரைச்சலில் இருந்து நிசப்தம் நோக்கி வழிநடத்துங்கள்”

தியானம் முடிந்த பிறகு, கோண்ட் எங்கள் வீட்டிலிருந்து அமைதியாக நடந்து, கல்கத்தாவிலிருந்து சிங்காலியாவின் மடாலயத்தை நோக்கிப் பயணம் புறப்பட்டார். அங்கே அவர் செய்த சாகசத்தைச் சொல்வதற்கு முன், பிரான்சின் போர்க்களங்களிலிருந்து அவர் எப்படி எங்கள் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார் என்பதையும் சொல்லிவிட வேண்டும்.

1915ம் வருடம் பிப்ரவரி மாதக் கடைசியில், வண்ணக்கழுத்தால் இனிமேல் பறக்க முடியாது என்பது பெங்கால் ரெஜிமெண்டுக்கு தெளிவாகியது. வண்ணக்கழுத்தை அழைத்து வந்த கோண்ட் ஒரு போர்வீரன் இல்லை. ஒரு புலியையோ ஒரு சிறுத்தையையோ தவிர அவர் தன் வாழ்வில் வேறெதையும் கொன்றதில்லை. இப்போது அவரும் நோய்வாய்ப் பட்டிருப்பதால், அவர்கள் இருவரும் பிரயோஜனமில்லை என்று இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். அவர்கள் மார்ச் மாதம் கல்கத்தாவை அடைந்தார்கள். அவர்களைப் பார்த்த போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. வண்ணக்கழுத்தைப் போலவே கோண்டும் பயந்து போயிருந்தார். இரண்டு பேரும் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருந்தார்கள்.

என்னிடம் என் புறாவை ஒப்படைத்த பின், சில விஷயங்களை விளக்கிவிட்டு கோண்ட் இமாலயத்திற்குச் சென்றார். “பயத்திலிருந்தும் வெறுப்பிலிருந்தும் என்னை குணப்படுத்திக் கொள்ள வேண்டும். மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொன்று கொள்வதை அளவிற்கு அதிகமாக நான் பார்த்துவிட்டேன். நான் பயமென்னும் நோயில் விழுந்து, வீட்டில் இருப்பதற்கு லாயக்கற்றவனாகிவிட்டேன். நான் தனியே சென்று இயற்கையோடு இயைந்து என்னுடைய நோயைப் போக்கிக் கொள்ள வேண்டும்.”

இப்படிச் சொல்லிவிட்டு, அவர் சிங்காலியாவில் உள்ள மடாலயத்திற்கு தியானத்தாலும் பிரார்த்தனையாலும் தன்னைக் குணப்படுத்திக் கொள்ளச் சென்றுவிட்டார். அதே சமயத்தில் என்னால் முடிந்த அளவிற்கு வண்ணக்கழுத்தைக் குணப்படுத்த முயற்சி செய்தேன். அவனுடைய மனைவியாலும் நன்கு வளர்ந்த பிள்ளைகளாலும் கூட அவனைக் குணப்படுத்த முடியவில்லை. அவன் தன் பிள்ளைகளிடம் எந்த அக்கறையும் காண்பிக்கவில்லை. அவர்கள் அவனை வேற்று ஆள் போலவே பார்த்தார்கள். அவனுடைய பெடை அவனிடம் ஆர்வம் காட்டியது. ஆனால், அதனாலும் அவனைப் பறக்க வைக்க முடியவில்லை. பையக் குதிப்பதைத் தவிர அவன் வேறு எதையும் செய்ய மறுத்தான். என்ன செய்தும் அவனை காற்றில் இறங்க வைக்க முடியவில்லை. நல்ல புறா வைத்தியர்களைக் கொண்டு அவனுடைய கால்களையும் இறக்கைகளையும் சோதித்தேன். அவர்கள் அவனுக்கு ஒரு குறையும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவனுடைய எலும்புகளும் இறக்கைகளும் நன்றாக இருந்த போதும் அவன் பறக்க அடம்பிடிக்கிறான். தன் வலது இறக்கையை திறக்க மறுக்கிறான். ஓடாத போதும் குதிக்காத போதும் ஒற்றைக் காலில் நிற்கும் புதிய பழக்கம் வேறு.

அவனும் அவனுடைய பெடையும் கூடு கட்டத் துவங்காமலிருந்தால் நான் இதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டேன். ஏப்ரல் மாத மத்தியில், கோடைக்கால ஓய்வு நாட்கள் தொடங்கிய போது கோண்டிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ”உன்னுடைய வண்ணக்கழுத்து, இப்போது தன் பெடையோடு கூடக் கூடாது. முட்டைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை அழித்து விடு. எந்தச் சூழ்நிலையிலும் அவற்றைக் குஞ்சு பொறிக்க வைத்துவிடாதே. வண்ணக்கழுத்தைப் போல பறக்கவே பயப்படும் ஒரு தந்தையால் மோசமான பயம் கொண்ட குஞ்சுகளையே உருவாக்க முடியும். அவனை இங்கே கொண்டு வா. நான் இப்போது கொஞ்சம் நன்றாக உணர்கிறேன். சீக்கிரம் வண்ணக்கழுத்தைக் கொண்டு வா. இங்குள்ள லாமா உன்னையும் அவனையும் காண விரும்புகிறார். மேலும், அந்த ஐந்து உழவாரக் குருவிகளும் தெற்கிலிருந்து இந்த வாரம் இங்கே வந்துவிட்டன. உன்னுடைய பறவையை பயத்திலிருந்து திசை திருப்ப அவை கண்டிப்பாக உதவும்” என்று எழுதியிருந்தார்.

(தொடரும்)

வண்ணக்கழுத்து 15: சேதி கொண்டு போன கதை

“நிகழ்வுகள் நிரம்பிய அந்நாளுக்கு முந்தைய நாள் நான் மிகக் குறைவாகவே தூங்கியிருந்தேன். அவருடைய மேற்ச்சட்டைக்கு உள்ளே இருந்தாலும், நான் விழிததுக் கொண்டிருந்தேன் என்பதை கோண்ட் அறியவில்லை. ஒவ்வொரு அரைமணிக்கும், ஆண் கலைமானைப் போல ஓடும், அணிலைப் போல மரங்களில் ஏறும், முன்பின் தெரியாத நாயோடு நட்பு வைததுக் கொள்ளும் ஒரு மனிதருடைய இதயத்திற்கு பக்கத்தில் தூங்க முடியாது. ஒருசமயம் கோண்டுடைய இதயம் வேகவேகமாகத் துடிக்கும். மற்றொரு சமயம் இதயத் துடிப்பு ஒரு கஜத் தொலைவிற்கு அப்பாலிருந்து கேட்பது போல இருக்கும். தூங்குவதற்கு இடைஞ்சலாக அவர் செய்த மற்றொரு காரியம், அந்த இரவு முழுக்க ஒரு ஒழுங்கில்லாமல் மூச்சு விட்டது தான். சிலசமயம் நீளமாக இழுத்து மூச்சுவிட்டார். சில சமயம் பூனையிடமிருந்து தப்பி ஓடும் எலியைப் போல வேகவேகமாக மூச்சுவிட்டார். இப்படிப்பட்ட மனிதருடைய மேற்ச்சட்டைக்கு அடியில் தூங்குவதைவிட வானத்தில் ஒரு புயலுக்கு நடுவிலே தூங்க முயற்சித்திருப்பேன்.

“பிறகு அந்த நாய். நான் அதை மறக்கவும் முடியுமா? கோண்ட், அதைச் சேர்ததுக் கொண்ட போது நான் பயந்து போனேன். ஆனால், என் உடம்பு வாடை அதற்குத் தெரியவில்லை. கீழிருந்து எழும்பி வந்த காற்று, ஒரு நல் வாடை கொண்ட பேயைப் போல, இது எங்களை நட்பாக்கிக் கொள்ள வந்திருக்கிறது என்று எனக்குச் சொல்லியது. அதனுடைய காலடி ஓசையை நான் காலம் முழுதும் நினைவில் வைத்திருப்பேன். ஒரு பூனையைப் போல மென்மையாக நடந்தது. அது ஒரு காட்டு நாயாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் மனித கலாச்சாரத்தில் வாழும் நாய்கள் சத்தம் மிகுந்தவை. அவற்றால் சத்தம் போடாமல் நடக்கக் கூட முடியாது. மனித சகவாசம் கெடுதல் செய்யும். மனித சமூகத்தில், பூனைகளைத் தவிர, எல்லா மிருகங்களும் கவனக்குறைவானதாகவும் இரைச்சல் மிகுந்ததாகவும் ஆகிவிடுகின்றன. ஆனால் அந்த நாய் முழுவதும் காட்டு சுபாவம் கொண்டது. அது சத்தமில்லாமல் நடந்தது. சத்தமில்லாமல் மூச்சுவிட்டது. பிறகு அது அங்கே இருந்தது என்பது எனக்கு எப்படித் தெரியும்? கீழே இருந்து வந்து என் நாசியைத் துளைத்த அந்த வாடை தான் காரணம். (more…)

வண்ணக்கழுத்து 14: உளவு பார்க்கப்போன கோண்ட்

டிசம்பரின் முதல் வாரத்தில் கோண்டும் வண்ணக்கழுத்தும் தன்னந்தனியாக உளவு பார்க்கப் போக வேண்டியிருந்தது. அவர்கள் போன இடம் ஒரு காடு. அது ஏப்ரெ, அர்மெண்டியர் மற்றும் ஹெஸ்ப்ரோக் நகரங்களில் இருந்து வெகு தொலைவில் இல்லை. ஃபிரெஞ்சு வரைபடத்தை எடுத்துக் கொண்டு, கலேவிலிருந்து தெற்கு நோக்கி ஒரு நேர்க்கோட்டை வரைந்தீர்கள் என்றால், பிரிட்டிஷ் மற்றும் இந்திய ராணுவம் நின்றிருந்த இடங்கள்அடுத்தடுத்து இருப்பதைக் காண முடியும். அர்மெண்டியருக்குப் பக்கத்தில் இந்திய மொகம்மதிய வீரர்களின் கல்லறைகள் நிறைய இருக்கின்றன. இந்திய இந்து மத வீரர்களின் கல்லறைகள் ஏதுமில்லை. ஏனென்றால் இந்துக்கள் ஆதிகாலத்திலிருந்தே இறந்தவர்களை எரியூட்டி வந்தார்கள். எரியூட்டப்பட்டவர்களுக்கு கல்லறைகள் கிடையாது. அவர்களுடைய அஸ்தி காற்றில் தூவப்படுகின்றன. அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் இல்லை, ஆம், எந்தவொரு இடமும் அவர்களின் நினைவை பாரமாய்ச் சுமப்பதில்லை..

மீண்டும் கோண்டிற்கும் வண்ணக்கழுத்திற்கும் வருவோம். எதிரியின் எல்லைக்கு அப்பால், ஹெஸ்ப்ரோக் அருகில் காட்டிற்குள் இருக்கும் மிகப்பெரிய இரகசிய ஆயுதக் கிடங்கின் இருப்பிடத்தை துல்லியமாய் அறிய அவர்கள் இருவரும் அனுப்பப்பட்டார்கள். அதைக் கண்டுபிடித்தால், கோண்டும் வண்ணக்கழுத்தும் தனியாகவோ இருவருமாகவோ, ஒரு துல்லியமான வரைபடத்தோடு பிரிட்டிஷ் ராணுவ தலைமையகத்திற்குத் திரும்ப வேண்டும். அவ்வளவு தான். ஆக, தெளிவான டிசம்பர் மாத காலையில் ஒரு நாள் வண்ணக்கழுத்தை ஒரு விமானத்தில் ஏற்றிக் கொண்டார்கள். அது காட்டின் மேலே இருபது மைல் தூரம் பறந்தது. அந்தக் காட்டின் ஒரு பகுதி இந்தியப் படை வசமும் மற்றொரு பகுதி ஜெர்மானியப் படை வசமும் இருந்தது. ஜெர்மனியர்களின் இடத்திற்குள் நுழைந்த பிறகு வண்ணக்கழுத்து விடுவிக்கப்பட்டது. அவன் காடு முழுக்கப் பறந்தான். பிறகு அந்த நிலப்பரப்பைப் பற்றி அறிவை வளர்த்துக் கொண்டு வீடு திரும்பினான். வண்ணக்கழுத்து தன்னுடைய பாதையை அறிந்து கொள்ளவும், அவனிடம் எதிர்பார்க்கப்படும் வேலையைப் பற்றி அவனுக்கு அறிவுறத்தவுமே இந்த ஏற்பாடு.

அன்று மாலை சூரியன் மறைந்ததும், நியூ யார்க்குக்கு வடக்கே பத்து பாகையில் இருக்கும் அந்த இடத்தில் சுமார் நான்கு மணிக்கே அந்தி சாய்ந்துவிடும்,, குளிருக்கு கணப்பான உடைகளை அணிந்து கொண்டு, வண்ணக்கழுத்தை தன் மேல் சட்டைக்கு உள்ளே வைத்துக் கொண்டு, கோண்ட் கிளம்பினார். அவர்கள் ஒரு ஆம்புலன்ஸில் அந்தப் பெரிய காட்டில், இந்திய ராணுவத்தின் இரண்டாவது எல்கை வரை சென்றார்கள். முழு இருட்டில், உளவுத்துறை ஆட்கள் வழிநடத்த அவர்கள் போர்முனை நோக்கிச் சென்றார்கள்.

சீக்கிரமே அவர்கள் இரு படைகளின் ஆக்கிரமிப்பிலும் இல்லாத மையப்பகுதியை அடைந்தார்கள். அதிர்ஷ்டவசமாக அது மரங்களால் மறைக்கப்பட்டிருந்தது. குண்டுவீச்சில் அம்மரங்களில் பல இன்னும் சேதமடையாமல் இருந்தது. பிரெஞ்சோ ஜெர்மனோ, ஆங்கிலத்தில் ‘யெஸ்’, ‘நோ’, ‘வெரி வெல்’ என்பதைத் தாண்டி ஒன்றும் அறியாத கோண்ட், தன்னுடைய மேல் சட்டைக்கு அடியில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் புறாவின் துணையோடு, ஜெர்மனியப் படையின் ஆயுதக் கிடங்கை கண்டுபிடிக்க தனித்து விடப்பட்டார்.

முதலில் அவர், தான் குளிர்ந்த இமாலயத்தின் சீர்தோஷணம் கொண்ட ஒரு நாட்டில், குளிர் காலத்தில் மரங்கள் மொட்டையாக நிற்க, இலையுதிர்கால சருகுகளும் உறைபனியும் தரையை மூடியிருக்கும் இடத்தில் இருக்கிறோம் என்பதை தனக்கு நினைவூட்டிக் கொள்ள வேண்டியிருந்தது. மரங்களிலும் மரக்கன்றுகளிலும் குறைந்த அளவே இலைகள் இருக்க அவருக்கு தன்னை மறைத்துக் கொள்வது அத்தனை எளிதான காரியமாக இல்லை. அந்த இரவு இருள் சூழ்ந்திருந்தது; பிணத்தைப் போல சில்லிட்டிருந்தது. ஆனால், எந்த ஒரு மனிதனைவிடவும் இருட்டில் சிறப்பாக அவரால் காண முடியும் என்பதாலும், அவருடைய மோப்பம் பிடிக்கும் சக்தி எந்தவொரு விலங்கை விடவும் கூர்மையானது என்பதாலும், யாரும் புக முடியாத இடத்தைக் கடந்து முன்னேறுவது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த இரவில் காற்று கிழக்கிலிருந்து வீசியது.

மரங்களுக்கு இடையே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்த அவர், தன்னால் முடிந்த அளவிற்கு விரைவாக முன்னேறினார். ஒரு ஜெர்மனியப் படை தன் வழியைக் கடக்கப்போகிறது என்பதை அவர்கள் வருவதற்கு சில நிமிடங்கள் முன்னதாகவே அவருடைய முக்கு அவருக்குச் சொல்லிவிட்டது. அவர், ஒரு சிறுத்தையைப் போல மரத்தின் மீது ஏறி காத்திருந்தார். அவர்களுக்கு ஒரு சிறு அசைவின் ஓசை கூடக் கேட்கவில்லை. அதுவே பகலாக இருந்திருந்தால் அவர் இருப்பதைக் கண்டுபிடித்திருப்பார்கள். ஏனென்றால், உறைபனியின் மீது நடந்து வந்திருந்த அவருடைய கால்களில் இருந்து ரத்தம் சொட்டி, கறைபடிந்த கால்தடத்தை விட்டிருந்தது.

ஒருமுறை அவர் மிக குறுகிய இடைவெளியில் தப்பித்தார். இரண்டு ஜெர்மானிய வீரர்கள் கீழே கடந்து செல்ல வழிவிட்டு அவர் மரத்தின் மீது ஏறியிருக்க, ஒரு கிளையிலிருந்து அவர் காதில் யாரோ ஒருவர் கிசுகிசுத்ததைக் கேட்டார். உடனே அவருக்கு அது ஒரு ஜெர்மானிய துப்பாக்கி வீரர் என்பது புரிந்து விட்டது. ஆனால், அவர் தன் தலையைத் தாழ்த்தி கவனமாகக் கேட்டார். அந்த ஜெர்மானியர் ‘குடன் நாட்ஜ்’ என்றார். பிறகு, வெளிவந்து மரத்திலிருந்து இறங்கினார். அவர் கோண்ட் தன்னை பணியிலிருந்து விடுவிக்க வந்த சக வீரர் என்று தவறாக நினைத்துக் கொண்டார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சில நிமிடங்கள் கழித்து, கோண்ட் மரத்திலிருந்து இறங்கி, அந்த ஜெர்மானியரின் கால் தடத்தை பின்தொடர்ந்தார். இருட்டாக இருந்தாலும் அவருடைய வெற்றுப் பாதம், அந்த மனிதனின் காலடி தடம் பதித்திருந்த மண்ணை உணர்ந்தது. அது அவருக்கொன்றும் கடினமில்லை.

கடைசில் அவர் நிறைய மனிதர்கள் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் இடத்தை அடைந்தார். அவர் மெதுவாக அவர்களைச் சுற்றிச் சென்று முன்னேற வேண்டியிருந்தது. தன் காலடியில் ஏதோவொரு புதிய சத்தத்தைக் கேட்டார். நின்று, கவனித்தார். சந்தேகமே இல்லை, அது அவருக்கு பழக்கமான சத்தம்தான். அவர் காத்திருந்தார். ஒரு மிருகத்தின் காலடி. பட்டர்ர் பட், பட்டர்ர்! கோண்ட் அந்த சத்தத்தை நோக்கி நகர்ந்தார். உள்ளழுந்திய ஒரு உறுமல் சத்தம் வந்தது. பயத்திற்கு பதிலாக, சந்தோஷம் அவர் மனதை நிறைத்தது. புலிகள் நிறைந்த இந்தியக் காடுகளில் இரவைக் கழித்த அவர், ஒரு காட்டு நாயுடைய உறுமலுக்கு பயந்துவிடவில்லை. சீக்கிரமே இரண்டு சிவப்புக் கண்கள் அவருடைய பார்வைக்கு வந்தது. கோண்ட், கவனமாக தனக்கு முன்னால் இருக்கும் காற்றை முகர்ந்தார். அந்த நாயின் மீது சிறிதளவு கூட மனித வாசனை இல்லை. அந்த நாய் காட்டு விலங்காகிவிட்டிருந்தது. அந்த நாயும், தான் என்ன விதமான விலங்கை எதிர் கொண்டிருக்கிறோம் என்பதை அறிய காற்றை முகர்ந்தது. கோண்ட் சாதாரணமாக மனிதர்கள் வெளிப்படுத்தும் பய வாசனையை வெளிப்படுத்தவில்லை என்பதால், அந்த மிருகம் முன் வந்து தன்னை அவர் மீது உரசி, தீவிரமாக முகர்ந்தது. அதிர்ஷ்டவசமாக, கோண்ட் வண்ணக்கழுத்தை அந்த நாயின் மூக்கிற்கு மேலே தூக்கிக் கொண்டிருந்தார். மேலும், காற்று பறவையின் வாசனையைக் கொண்டுபோய்க் கொண்டிருந்தது. ஆக, அந்த நாய் தனக்கு முன்னால் இருந்த மனிதனை பயமில்லாத ஒரு நண்பனாகவே பார்த்தது. அது தன் வாலைக் குழைத்துக்கொண்டு கொண்டு செல்லம் கொஞ்சியது. தன் கையால் அதன் தலையை தட்டிக் கொடுப்பதற்கு பதிலாக கோண்ட், மெதுவாக தன் கையை நாயின் கண்களுக்கு முன்னால், அது பார்ப்பதற்காகவும் முகர்வதற்காகவும் நீட்டினார். அடுத்த ஒரு நொடி நிச்சயமின்மை தொடர்ந்தது.

அந்த நாய் கையைக் கடிக்கப் போகிறதா? இன்னொரு நொடியும் கழிந்தது. பிறகு… அந்த நாய் கையை நக்கியது. இப்போது சுகமாய்க் கொஞ்சியது. “ஆக, இது வேடனுடைய நாய். தலைவனைப் பிரிந்திருக்கிறது. இதனுடைய எஜமானன் இறந்திருக்கக் கூடும். ஜெர்மானியப் படைக்கு வரும் உணவுப் பொருட்களைக் கவர்ந்து தின்று உயிர் பிழைத்திருக்கிறது. ஏனென்றால், இது இதுவரை மனித மாமிசத்தை தின்றதாகத் தெரியவில்லை. இதுவரைக்கும் பரவாயில்லை” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார் கோண்ட்.

கோண்ட் மெதுவாக சீட்டியடித்தார். எந்த நாடாக இருந்தாலும் எக்காலத்திலும் இது தான் வேடர்களின் சமிக்ஞை. ‘வழிநடத்து’ என்பது அதன் அர்த்தம். அந்த நாயும் அவரை வழிநடத்தியது. ஒரு ஆண் கலைமான், புலியின் குகையை மிகத் திறமையுடன் கடப்பதைப் போல, அந்த நாய் ஜெர்மானிய வீரர்களின் தற்காலிக முகாமை சுற்றிக் கொண்டு சென்றது. பல மணிநேர அலைச்சலுக்குப் பின், அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தார்கள். சந்தேகமே இல்லை. கோண்ட் அவர் தேடி வந்த ஆயுதக் கிடங்கை கண்டுபிடித்துவிட்டார். ஆயுதங்கள் மட்டுமல்ல ஜெர்மானியர்களின் உணவுக் கிடங்கும் அது தான். அவரை வழிநடத்திக் கொண்டு போன காட்டு நாய், ஒரு ரகசியப் பொந்துக்குள் சென்று அரை மணி நேரம் கழித்து ஒரு கன்றின் கால் இறைச்சியோடு திரும்பியது. அதுவொரு மாட்டிறைச்சி என்று அதன் வாடையைக் கொண்டே கோண்டால் கணிக்க முடிந்தது. அந்த நாய் உறைபனித் தரையில் தன்னுடைய இரவுணவோடு அமர்ந்தது. அதே நேரத்தில், கோண்ட் தான் இரவு முதல் தோளில் போட்டுக் கொண்டிருந்த பூட்ஸ்களை எடுத்து அணிந்து கொண்டு, மேலே உற்று நோக்கினார். நட்சத்திரங்களின் நிலை இருப்பை வைத்து அவரால் தன் இருப்பிடத்தை அறிய முடிந்தது. அங்கே கொஞ்ச நேரம் காத்திருந்தார்.

மெதுவாக விடியத் துவங்கியது. தன் பையிலிருந்து ஒரு திசைகாட்டியை எடுத்தார். அந்த இடத்தின் வரைபடத்தை தன்னால் வரைய முடியும் என்று நிச்சயமாக உணர்ந்தார். அப்போது, அந்த நாய் மேலே குதித்து, கோண்டின் மேல் சட்டையை பற்களால் கடித்து இழுத்தது. மீண்டும் அந்த நாய் தன்னை வழிநடத்த விரும்புகிறது என்பதில் அவர் மனதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அந்த நாய் முன்னால் ஓட, கோண்ட் விரைவாக பின்தொடர்ந்தார். விரைவிலேயே அவர்கள் முட்களாலும் உறைந்த கொடிகளாலும் அடர்த்தியாக மறைக்கப்பட்டிருந்த ஒரு இடத்தை அடைந்தார்கள். அந்த பாதை விலங்குகளுக்கு மட்டுமே சாத்தியமானது. அந்த நாய் பல கூரான முட்களுக்கு கீழே தவழ்ந்து சென்று மறைந்துவிட்டது.

இப்போது கோண்ட் நட்சத்திரங்களின் நிலை இருப்பை ஒரு படமாக வரைந்து, தன்னுடைய திசைகாட்டியின் சரியான நிலையையும் வரைபடத்தில் குறித்து இரண்டையும் வண்ணக்கழுத்தின் காலில் கட்டிப் பறக்கவிட்டார். அந்தப் புறா ஒவ்வொரு மரமாகப் பறந்து, ஒவ்வொன்றிலும் ஒரு நிமிடம் வரை உட்கார்ந்து தன் அலகுகலால் இறகுகளை ஒழுங்குபடுத்துவதைப் பார்த்தார். பிறகு, காலில் கட்டப்பட்ட தாள் இருக்கிறதா என்று சரிபார்ப்பது போல தன் அலகால் கொத்தி ஒழுங்குபடுத்திக் கொண்டு, இருப்பதிலேயே உயரமான மரத்தின் உச்சிக்கு சென்று, அங்கே அமர்ந்து கொண்டு அந்த இடத்தின் அமைப்பை ஆய்வு செய்தது. அந்த நொடியில், மேலே பார்த்துக் கொண்டிருந்த கோண்ட் தான் இழுக்கப்படுவதை உணர்ந்தார். குனிந்து தன் காலின்கீழ் பார்த்தார். அந்த நாய் முட்களுக்கு அடியிலிருந்த ஒரு குழிக்குள் அவரை இழுத்தது. கோண்ட் தாழக் குனிந்தார். தன்னுடைய வழிகாட்டியை தொடரும் அளவிற்கு கீழே வளைந்தார். ஆனால், கடைசியில் தலைக்கு மேலே இறக்கைகள் அடிக்கும் சத்தமும், துப்பாக்கிகள் வெடிக்கும் சப்தமும் கேட்டது. எழுந்து வண்ணக்கழுத்து கொல்லப்பட்டுவிட்டானா இல்லையா என்று ஆராயக் கூட அவருக்கு விருப்பமில்லை.

முட்களுக்கு அடியில், தன் வயிறும் முதுகெலும்பும் ஒட்டிக் கொண்டது போலும், இரண்டும் சேர்ந்து தரையோடு தைக்கப்பட்டது போலும் அவர் தவழ்ந்தார். அவர் உந்தித் தவழ்ந்து திடீரென்று எட்டு அடி வரை வழுக்கிக் கொண்டு போய், ஒரு இருண்ட குழியில் விழுந்தார். கும்மிருட்டாக இருந்தது. சிராய்த்த தலையை தேய்த்துக் கொண்டிருந்த்தால் கோண்ட் அதை முதலில் கவனிக்கவில்லை.

கடைசியில் எங்கே இருக்கிறோம் என்பதை அவர் அறிய முற்பட, திருடர்களின் குகை போல முட் புதர்களால் பாதுகாக்கப்பட்ட உறைந்த தண்ணீர்க் குழியாக இருக்கலாம் என்று நினைத்தார். குளிர்காலத்திலும், தலைக்கு மேலே உள்ள கிளைகளிலும் கொடிகளிலும் இலைகளே இல்லாத போதும், பகற்பொழுதிலும்கூட அந்தக் குழியில் இருள் அடர்த்தியாகவே இருந்தது. அந்த நாய் இப்போதும் அவருடன் தான் இருந்தது. அது தான் அவரை பாதுகாப்பான இடத்திற்கு இழுத்து வந்திருந்தது. பாவம், அந்த விலங்கு ஒரு நண்பன் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தது. அந்த நேரத்திலும் கோண்ட்டோடு மணிக்கணக்காக விளையாடிக் கொண்டிருக்க விரும்பியது. ஆனால், களைப்படைந்த கோண்ட், கிட்டத்தில் ஒலிக்கும் துப்பாக்கிச் சத்தத்தையும் பொருட்படுத்தாது தூங்கிவிட்டார்.

மூன்று மணிநேரங்கள் கழித்து அந்த நாய் திடீரென்று சிணுங்கியது. பைத்தியம் பிடித்ததைப் போல ஊழையிட்டது. அதன் பிறகு பயங்கர வெடிச் சப்தங்களால் பூமி அதிரந்தது. அதைப் பொறுக்க முடியாமல், அந்த நாய் கோண்டின் மேல் சட்டையைப் பிடித்து இழுத்தது. வெடிச் சத்தம் படிப்படியாக, கோண்ட் இருந்த இடம் ஒரு தொட்டில் போல ஆடும் வரை உயர்ந்தது. ஆனால், அவரால் மறைவிடத்திலிருந்து வெளியே வருவதாய் இல்லை. ”ஓ வண்ணக்கழுத்தே, ஒப்பில்லாத பறவையே, எவ்வளவு சிறப்பாக உன் வேலையைச் செய்திருக்கிறாய். அதற்குள், அந்த செர்ரிப்பழ முகம் கொண்ட தளபதியிடம் செய்தியைக் கொண்டு சேர்த்திருக்கிறாய். எனவேதான் இந்த இடி போன்ற பதில். நீ பறவை இனத்தின் மாணிக்கம்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். அவர் முனகிக் கொண்டிருக்க விமானங்கள் போட்ட குண்டுகள் ஜெர்மானிய ஆயுதக் கிடங்கை வெடிக்க வைத்தது.

அப்போது, அவரை மேற்சட்டையின் கையைப் பிடித்து இழுக்க முயன்று கொண்டிருந்த அந்த நாய், காய்ச்சல் வந்தவன் போல ஊழையிட்டு நடுங்கியது. அந்த நொடியில் காற்றில் ஏதோ உரசிக் கொண்டு வந்து பொத்தென்று பக்கத்தில் விழுந்தது. ஒரு அழுகையான ஊளையோடு அந்த நாய் தன்னுடைய மறைவிடத்திலிருந்து வெளியே விரைந்தது. கோண்டும் அதைப் பின் தொடர்ந்தார். ஆனால், காலம் கடந்துவிட்டது. அந்த முட்களின் ஊடே அவர் பாதி தூரம் கடந்திருக்க, அவருக்கு கீழே இருந்து காதைப் பிளக்கும் வெடிச்சத்தம் பூமியை நொறுக்கியது. கொடூரமான வலி அவருடைய தோளைத் துளைத்தது. ஏதோ ஒரு பேயால் தூக்கி, கடும் வலிமையுடன் தரையில் எறியப்பட்டதைப் போல அவர் உணர்ந்தார். கருஞ்சிவப்பு வைரங்களில் ஒளி அவர் கண்களின் முன்னே சில நொடிகள் ஆடிவிட்டு, திடீரென்று ஆற்றுப்படுத்தும் இருள் சூழ்ந்தது.

ஒரு மணிநேரம் கழித்து அவருக்கு நினைவு திரும்பிய உடன், முதன் முதலில் அவர் உணர்ந்தது ஹிந்துஸ்தானி குரல்களைத்தான். தன்னுடைய ஊர் மொழியை மேலும் தெளிவாகக் கேட்க அவர் தன் தலையை உயர்த்தினார். அந்த நொடியில், அவர் ஆயிரம் நல்ல பாம்புகள் கொத்தியதைப் போன்ற வலியை உணர்ந்தார். தான் தாக்கப்பட்டதையும் உயிர் போகுமளவிற்கு காயம்பட்டிருப்பதையும் அவர் புரிந்து கொண்டு விட்டார். அதே நேரத்தில், ஒவ்வொரு முறை ஹிந்துஸ்தானி ஒலி கேட்கும் போதும், இந்தக் காடு எதிரியின் வசம் இல்லை, இந்தியப் படையின் வசத்தில் இருக்கிறது, என்பதை அறிந்து அவர் உள்ளம் மகிழ்ந்த்து. ’ஆ! என் வேலை முடிந்தது. இனி நான் சந்தோஷமாகச் சாகலாம்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.

(தொடரும்…)