ஹரன் பிரசன்னா

விழுந்தது என்ன?- ஹரன் பிரசன்னாவின் ‘சோழி’

பீட்டர் பொங்கல்

பதாகை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளைப் பதிப்பித்திருந்தாலும், முதல் முறையாக எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் வாயிலாய் பதாகையில் வெளிவரும் சிறுகதைகளுக்கு முழுமையான முதல் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ‘தமிழ் சிறுகதையின் பத்து முகங்கள்‘ என்ற கட்டுரையில்  எஸ். ராமகிருஷ்ணன், இணைய இதழ்களில் வரும் சிறுகதைகளை தான் வாசிப்பதாய் எந்தச் சலிப்பும் இல்லாமல் சொல்லிக் கொள்வதோடல்லாமல், பதாகையில் எழுதும் காலத்துகள் சிறுகதைகள் குறித்து, “பதாகை இதழில் இவரது சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். இவர் யார் என்று தெரியவில்லை. அசோகமித்ரன் பாணியில் சிறப்பாகக் கதைகளை எழுதுகிறார். வேதாளத்தின் மோதிரம் என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது“, என்று எழுதியிருக்கிறார்.

யார் எவரென்றே தெரியாத ஒருவரை முன்னணி எழுத்தாளர் ஒருவர் வாசிப்பதில் தமிழ் இலக்கியத்தின் இனிய முகமொன்று வெளிப்படுகிறது- பாராட்டுகள் யாருக்குமே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும், மூத்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எந்த கோரிக்கையும் இல்லாமல் தன் கதைகளை வாசிப்பதாய்க் குறிப்பிடுவதற்கு மேல் புதிதாய் எழுத வருபவனுக்கு வேறென்ன அங்கீகாரம் வேண்டும்? எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு பதாகை மற்றும் காலத்துகளின் மனமார்ந்த நன்றிகள்.

எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கும் பத்து முகங்களில் இன்னொரு முகமான ஹரன் பிரசன்னாவும் பதாகையில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்- ஹரன் பிரசன்னா குறித்து, “… வித்தியாசமான கதைகளை எழுதுகிறார். மெல்லிய பகடியுடன் கூடிய சரளமான எழுத்து. சில கதைகள் ஆதவனை நினைவூட்டுகின்றன. குரலை உயர்த்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இக்கதைகளின் சிறப்பு,” என்று குறிப்பிடுகிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

ஹரன் பிரசன்னா பதாகையில் எழுதிய, ‘சோழி’ என்ற சிறுகதை இப்படி துவங்குகிறது

“முரளிதர ராவ் தனது எண்ணத்தின் கனம் தாங்காமல் எப்போது வேண்டுமானால் விழுந்துவிடுவார் போல அலைந்து அலைந்து நடந்தார். அவரது மெல்லிய உடலில் அதைவிட மெல்லிய பூணூல் காற்றில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. பூணூலையும் அதோடு சேர்த்து தன்னைப் போர்த்தியிருந்த மேல் துண்டையும் இழுத்து, சூம்பி தொங்கிப் போயிருந்த தன் மார்பின் இரு கருநிறக் காம்புகளையும் அவர் மூடிக்கொண்டார். வழுக்கைத் தலையில் வெளிப்பட்டிருந்த ஒன்றிரண்டு வெண்மயிர்கள் மிக நீண்டிருந்தன. வழுக்கையைச் சுற்றி மயிர்கள் சீவாமல் சீரில்லாமல் படிந்து கிடந்தன. முன்நெற்றியில் அவரது நாமத்தைக் கரைத்துக்கொண்டு வியர்வை வழிந்தது. தன் தோள்துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்தார். நாமத்துக்கிடையே அவர் இட்டிருந்த கரிக்கோடுபட்டு துண்டு கருப்பாகியது. கண்ணாடி மாட்டிக் கொண்டு வெளுத்த உளுத்த மரக்கொம்பு ஒன்று நடந்து வருவதுபோல் அவர் நடை இருந்தது. தள்ளாத வயதிலும் மனதில் இருந்த குழப்பம் காரணமாக வேகமாக நடக்க முயன்று தோற்றுப் போனார். மீண்டும் வேகமாக நடந்தார்.”

குரலை உயர்த்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இக்கதைகளின் சிறப்பு,’ என்று எஸ். ராமகிருஷ்ணன் மிகச் சரியாகவே சொல்கிறார். இந்த முதல் பத்தியில் நமக்குக் கிடைக்கும் சித்திரம் சிறிது புன்னகைக்க வைக்கிறது, கூடவே இக்கதையின் மிக முக்கிய இயல்பான நிலையின்மை, கதையின் துவக்கத்திலேயே வந்து விடுகிறது. முதல் வாக்கியத்தில் அலைந்து அலைந்து என்று அலைதல் இரு முறை வருகின்றன- இந்தத் தடுமாற்றம் எண்ணத்தின் கனம் தாங்காமல் ஏற்பட்ட ஒன்று, எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவார் போல் அலைந்து அலைந்து நடந்தார் என்று வாசிக்கும்போது தடுமாறிச் செல்லும் அவரது நடையின் கூடவே எண்ணங்களின் சுமையால் அழுந்திய அவரது முகமும் நம் கண் முன் தோன்றுகிறது- இந்த வாக்கியத்தில் மட்டுமல்ல, இந்தப் பத்தியில் அவரது முக பாவனை சொல்லப்படவே இல்லை. ஆனால், முரளிதர ராவின் முகத்தில் ஆடும் உணர்ச்சிகளைக் காண புற விவரணைகளே போதுமானதாய் இருக்கின்றன.

அவர் அலைவது போதாதென்று, அவரது மெல்லிய உடலில் தரித்த பூணூலும் காற்றில் அலைகிறது- கதை நெடுக ஒரு தீர்மானமான முடிவுக்கு அலையும் முரளிதர ராவ், இங்கு அலையும் பூணூலை மட்டுமல்ல, சூம்பித் தொங்கிக் கொண்டிருக்கும் மார்க்காம்புகளையும் மேல் துண்டு கொண்டு மூடிக் கொள்கிறார் (தொங்குவதால், அவையும் ஆடுகின்றன என்று நினைக்கிறேன்). இது போதாதென்று வழுக்கைத் தலையில் ஒன்றிரண்டு வெண்மயிர்கள் மிக நீண்டிருந்தன என்ற குறிப்பு வேறு – அவையும் காற்றில் அலைகின்றன என்று தோன்றுகிறது. வழுக்கைத் தலையில் இருக்கும் பிற மயிர்களோ சீவாமல் சீரில்லாமல் படிந்து கிடக்கின்றன – அவை ஓய்ந்து விட்டன போலிருக்கிறது. கதையின் சீரற்ற தன்மையை மேலும் உணர்த்தும் வகையில் வியர்வை வழிந்து அவரது நாமத்தைக் கரைக்கிறது, அதைத் துடைக்கும் துண்டோ நாமத்துக்கிடையே உள்ள கரிக்கோட்டை அழித்து கறுப்பாகிறது. தள்ளாத வயது, மனக்குழப்பம் அவரை வேகமாய்ச் செலுத்துகிறது, அவர் தோற்றுத் துவண்டு விரைகிறார் என்று துவங்குகிறது கதை.

ஹரன் பிரசன்னா இது போலவே எழுதிக் கொண்டு சென்றால் அவர் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். பாத்திர விவரணைகள், உரையாடல்கள் என்று இருக்க வேண்டியது எல்லாம் மிகச் சரியாக இருக்கின்றன. ஆனால், அவரிடம் உள்ள ஒரு குறை, அதிபுத்திசாலித்தனம்தான் (இதைத்தான் எஸ். ராமகிருஷ்ணன், “சில கதைகள் ஆதவனை நினைவூட்டுகின்றன” என்று எழுதுகிறார் என்று நினைக்கிறேன்). ஒரு நல்ல கதை என்பது எலிப்பொறி போலிருக்க வேண்டும். மசால் வடை வாசனைக்கு ஓடி வரும் எலி, தன் மீது பொறியின் கதவுகள் விழுவதை மிகத் தாமதமாகத்தான் தெரிந்து கொள்கிறது. இங்கு மசால் வடை மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் அது மணக்கிறது என்பதால் அதுவல்ல, அதைச் சுற்றியுள்ள பொறிதான் பூடகம். கண் முன் முழுசாக இருந்தாலும், புலன்களின் மயக்கத்தில் பொறி காணப்படுவதில்லை- வேலையைக் காட்டும்போதுதான் அது புலனாகிறது.

எது முழுமையாய் விவரிக்கப்படுகிறதோ, அதன் இயல்பு இறுதி வரை மறைந்திருப்பதில் ஒரு கலை இருக்கிறது. வாசகன் மனதில் தெறிக்கும் ஸ்ப்ரிங்தான் பூடகமே தவிர, கதை வெளிப்படை. ஹரன் பிரசன்னா இதை மிகச் சிறப்பாய்ச் செய்யக்கூடியவர். ஆனால் அவர் வைக்கும் பொறிகளோ அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் வரும் மூத்த சகோதரனின் பொறிகள் போல் சிக்கலானவை, கண்கள் நிலைகுத்தி நிற்கச் செய்பவை- எலிப்பொறி போல் எளிமையானவையாய் இல்லாத அவரது பொறிகள் ஒரு தேர்ந்த தோட்டக்காரனின் maze போன்றவை: பொறி விழுந்து விட்டது என்று தெரிந்தாலும் நாம் எங்கேயிருக்கிறோம், நம் மீது விழுந்த பொறி எப்படிப்பட்டது என்பதில் ஒரு குழப்பம் இருக்கிறது: “கதை நல்லா இருக்கு ஸார், ஆனா என்ன ஆச்சு?” என்று கேட்கிறோம்.

சோழி கதை சிறப்பான கதையாக இருந்தாலும் அப்படிப்பட்ட கதைதான். படித்துப் பாருங்கள் – சோழி, ஹரன் பிரசன்னா.

சுழல்

ஹரன் பிரசன்னா

தாமிரபரணியில் குளிக்க துண்டு சோப்பு எல்லாம் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே இருந்த சைக்கிளின் ஸ்டாண்டை எடுத்துவிட்டு ஒரு அழுத்து அழுத்தினான் பொன்னரசு. சைக்கிளைவிட தகடாக இருந்த அவனை வீட்டுக்குள்ளிருந்து சசி சத்தமாக அழைப்பது கேட்டது. சைக்கிளை நிறுத்தி அதன் மேலிருந்தவாறே அவளை நோக்கித் தலைதிருப்பி என்ன என்று கேட்டான். வரும்போது வாகையடி முக்கு செல்வம் ஸ்டோரில் ஒரு கிலோ இட்லி அரிசி வாங்கி வரச் சொன்னாள். இட்லி சாப்பிட்டே இட்லி போல அவளும் உப்பி இருப்பதாக ஒருமுறை பொன்னரசு சொன்னபோது சசியின் தம்பி சின்னா சண்டைக்கு வந்துவிட்டான். தூரத்தில் இருந்து பார்க்கும்போது இப்போதுகூட அவள் உப்பித்தான் தெரிந்தாள். இன்னும் பக்கத்தில் மிகப் பக்கத்தில் மிக நெருக்கத்தில் மிக அந்தரமாகப் பார்த்தால்தான் தெரியும் என்று சின்னாவிடம் அவன் சொல்லவில்லை. சசிக்கு பதில் ஏதும் சொல்லாமல் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான்.

பொன்னரசுக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகின்றன. முப்பத்து ஐந்து வயதில்தான் திருமணம் ஆனது. ஜாதகம், சம்பளம் என்று ஆயிரம் சிக்கல். மகள் செல்வி அவளது மழலைச் சிரிப்பால் இப்போது வீட்டை நிறைக்கிறாள். அடிக்கடி சின்னா வருவான். எப்போதாவது மாமனாரும் மாமியாரும் வந்து அவனைப் பற்றிய குறைகளையெல்லாம் சசியிடம் கேட்டுவிட்டுப் போவார்கள். இன்றுவரை அவனிடம் யாரும் எதையும் நேரடியாகக் கேட்டதில்லை. சின்னாதான் படக்கென்று எதாவது சொல்வான். கை நிறைய சம்பளம் வாங்கும் அவனை, எப்போதும் கம்ப்யூட்டரும் செங்கல் அளவுக்கு மொபைலும் கையுமாகத் திரியும் அந்த ராஸ்கலை, வீட்டுக்கு வரும்போதெல்லாம் செல்விக்கு அழகழகான பொம்மைகள் வாங்கித் தரும் அந்த தீவெட்டித்தடியனை, போத்தீஸில் வேலை பார்த்து அதனால் வரும் கொஞ்சம் சம்பளத்தில் காலத்தைத் தள்ளும் தன்னால் எதுவும் கேட்கமுடியாதென்று பொன்னரசுக்குப் புரிந்துபோன கணத்தில் அமைதியாக இருக்கப் பழகிக் கொண்டான். சசிக்கும் அவனது அமைதி பிடித்துப்போனது.

சைக்கிளில் செல்லும்போதுதான் தனக்கு எவ்விதக் கவலைகளும் இருப்பதில்லை என்று பொன்னரசு நினைத்துக்கொள்வான். அருணகிரி தியேட்டர் தாண்டிவிட்டால் போதும், வழியெங்கும் பறக்கும் பறவைகளுக்கும் அவனுக்கும் எப்போதும் போட்டிதான். எல்லாப் பறவைகளும் அவனிடம் தோற்றே ஆகவேண்டும். தாமிரபரணிகூட அவன் வேகத்தில் தோற்கத்தான் வேண்டும். செல்லும் வழியில் ஒன்றிரண்டு இடங்களில் வீடு வாடகைக்கு இருப்பதைப் பார்த்தான். இப்போதிருக்கும் வீடு காணவில்லை. சில சமயம் சின்னா வீட்டுக்கு வந்துவிட்டால் இரவில் அவனும் சசியும் தனி அறையில் படுத்துக்கொள்ள முடியாமல் போய்விடுகிறது. அன்றெல்லாம் இரவுச்சாப்பாட்டில் சுவையே இருக்காது. இருக்கும் அந்த ஓர் அறையில் சின்னா படுத்துக்கொண்டு டிவி பார்க்க ஆரம்பித்துவிடுவான். இரண்டு அறைகள் இருக்கும் வீடாகப் பார்த்துவிட்டால் இந்தத் தொல்லை இருக்காது என்று நினைத்துக்கொண்டான். வாடகையை நினைக்கவும் இரவுச்சாப்பாடே இல்லாவிட்டால்தான் என்ன என்ற எண்ணம் வந்தது.

சைக்கிள் கொஞ்சம் போகவும் ரயில்வே கிராஸிங்குக்கு முன்னே கீரைக்கிழவி கீரை விற்றுக்கொண்டிருந்தாள். ‘நேத்து வாங்கின கீரை நல்லாருந்துச்சாடே’ என்றாள். ‘நேத்து வாங்கி நேத்தேவா சமைக்கா. இன்னைக்குத்தான்’ என்று சொல்லிக்கொண்டே சைக்கிளில் அவளைத் தாண்டி விரைந்தான். அது என்னவோ கீரை மசியல் என்றால் அவனுக்கு இருப்பு கொள்ளாது. அதை நினைத்தாலே நாக்கில் நீர் ஊறும். இப்போதும். கீரையை மையாகக் கடைந்து கருஞ்சிவப்பு நிறத்தில் செண்டாக்கி அதில் வரமிளகாய் உளுத்தம்பருப்பு தாளித்து பெருங்காய வாசனையுடன் பரிமாறினால் அதை சோற்றில் பிசைந்து பரபரக்க அள்ளி உண்பான். கொஞ்சம் வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும் இருந்துவிட்டால் அன்றைக்குக் கொண்டாட்டம்தான்.

சீக்கிரம் குளித்துவிட்டு நேரத்துக்கு வேலைக்குப் போகாவிட்டால் மேனேஜர் வாயில் விழவேண்டியிருக்கும். அன்று நதியைக் கொஞ்ச அவனுக்கு நேரமில்லை. இதே விடுமுறை நாளென்றால் அவன் எப்போது வீட்டுக்கு வருவான் என்றே அவனுக்கே தெரியாது. தாமிரபரணிக்கு எல்லா நாளும் விடுமுறை நாள்தான். அன்றும் அவள் குதித்து தெளித்து சிரித்து கும்மாளமிட்டு பொங்கிப் பிரவகித்து ஓடிக்கொண்டிருந்தாள். பாப்பா சைக்கிளில் உட்காரப் பழகிவிட்டால் அவளையும் நதிக்குக் கூட்டிக்கொண்டு வந்துவிடலாம். கும்மாளத்தில் இவளா அவளா என்று ஒரு கை பார்த்துவிடலாம். அதற்கு இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகவேண்டும். அந்த நினைவோடு தாமிரபரணிக்குள் முங்கினான். வெளிச்சலனங்கள் எல்லாம் மறைய நதி அவனை அப்படியே அள்ளிக்கொண்டது.

குளித்து உடைமாற்றி அப்படியே குறுக்குத்துறை கோவிலுக்குப் போய் முருகனைக் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது அவன் விட்டுச்சென்றிருந்த செருப்பைக் காணவில்லை. கொஞ்சம் தள்ளி கோவில் வெளிமண்டபத்தில் ஒரு பண்டாரம் அவன் செருப்பை போட்டுக்கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தது. அவன் மெல்ல அந்த பண்டாரத்தின் பக்கத்தில் போய் அந்த செருப்பைக் கேட்டான். அந்தப் பண்டாரம் சத்தமாகச் சிரித்தது. இடைக்கு மேலே ஒரு கசங்கிய காவித்துண்டு போர்த்தி, இடைக்குக் கீழே ஒரு கிழிந்த காவி வேட்டி உடுத்தி, தலையெங்கும் சடை தொங்க கண்கள் சிவக்க அந்தப் பண்டாரம் சிரித்ததைப் பார்த்தபோது இன்னொருதடவை அந்த செருப்பைக் கேட்க அவனுக்கு பயமாக இருந்தது. நல்லவேளை பாப்பாவைக் கூட்டிக்கொண்டு வரவில்லை என்று நினைத்துக்கொண்டான். பக்கத்தில் கடை போட்டிருந்தவர் அவனிடம், ‘அந்தாக்ல அடிச்சிருவான், பக்கம் போகண்டாம், கோட்டிக்காரப்பய’ என்றார். பொன்னரசு கொஞ்சம் பின்னகர்ந்து, செருப்பை கேட்கும் எண்ணைத்தைக் கைவிட்டு, மீண்டும் முருகனை கும்பிட்டுவிட்டு சைக்கிளை நோக்கி நடந்தான். பண்டாரம் அவன் பின்னாலேயே அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தது. அவன் சைக்கிளில் ஏறி வேகமாகப் போனான். வீட்டுக்குச் செல்லும் வரை கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது.

வீட்டுக்கு வெளியிலேயே சின்னாவின் செருப்பைப் பார்த்துவிட்டான். இவன் எங்கே வேலை செய்கிறான், எப்படி எல்லா நாளும் இப்படி வேலைக்குப் போகாமல் ஒவ்வொரு வீடாகச் சுற்றமுடிகிறது என்று விசாரிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டான். வீட்டுக்குள் நுழையவும் சின்னா அவனைப் பார்த்து கண்ணை மட்டும் லேசாக மேலே உயர்த்தி ஹலோ என்பதுபோல் சைகை செய்தான். பொன்னரசு ஒன்றும் பதில் பேசாமல் சமையலறைக்குள் போனான். சசியைப் பார்த்ததும்தான் இட்லி நினைவும் இட்லி அரிசி வாங்காததன் நினைவும் வந்தது. ‘மறந்திருக்குமே… வேலைக்கு நேரம் ஆயிருக்குமே… மேனேஜர் திட்டுவானே’ என்றாள் சசி. ‘இப்ப சின்னாவுக்கு நாளைக்கு என்னான்னு பொங்கி போட. நாக்கு செத்து வாரான்.’

பதில் சொல்லாமல் தன் தட்டை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தான். அவள் பழைய சோற்றைப் பிழிந்து வைத்து அதில் மோரை ஊற்றினாள். மதியத்துக்கு செய்திருந்த உருளைக்கிழங்கில் கொஞ்சம் வைத்தாள். ‘கீர வெக்கலியா’ என்று கேட்டதற்கு சின்னா உள்ளிருந்து ‘எனக்கு கீர வேண்டாக்கா, கொமட்டும்’ என்றான். பதிலுக்கு ‘வெப்பனா அக்கா’ என்றாள் அவள். அவன் மடமடவென்று சாப்பிட்டுவிட்டு தட்டை எடுத்துக் கழுவி சமையலறைக்குள் வைத்துவிட்டு பேண்ட் சட்டை மாற்றிக்கொண்டு நெற்றிக்குத் திருநீறு இட்டுக்கொண்டு வேலைக்குப் போனான். சசி வெளியில் வந்து ‘வீட்டுக்குள்ள ஒருத்தன் ஒக்காந்திருக்காம்லா, அவனை வான்னு கூப்பிட்டா என்ன கொறையுது’ என்றாள். வீட்டுக்குள் சின்னா பாப்பாவைத் தூக்கி வைத்துக்கொண்டு என்னவோ விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தான். ‘என்னைக்காவது எம்மகளை இப்படி நீங்க கொஞ்சிருக்கேளா? எப்பவும் ஆறு சாப்பாடு ரேடியோ. தெனமும் ஆத்துல குளிக்கலைன்னு எவ அழுதா’ என்றாள்.

எப்போதிருந்து இவள் இப்படி பேச ஆரம்பித்தாள் என்று எத்தனை நினைத்துப் பார்த்தும் பொன்னரசுக்கு பிடி கிடைக்கவில்லை. முதல்முறை பேசும்போதே அவளை செவிட்டோடு சேர்த்து அறைந்திருக்கவேண்டும் என்று நினைத்தவுடன், இப்படி எத்தனை தடவை நினைத்தாகிவிட்டது என்ற எண்ணம் வரவும் சைக்கிளை இன்னும் வேகமாக மிதிக்க ஆரம்பித்தான்.

போத்தீஸ் கடைக்குள் நுழையவும் மேனேஜர் ‘தெனம் ஆத்துல ஜலக்கிரீடை பண்ணலேன்னா ராசாவுக்கு ஒறக்கம் வராது, என்னடே?’ என்றார். ஆந்தைக்கு கண்ணாடி போட்டது போல இருக்கும் அவரைப் பார்த்ததும் இவனுக்குள் இருந்த அத்தனை எண்ணங்களும் விலகி உதட்டில் ஒரு சிரிப்பு வந்து உட்கார்ந்துகொண்டது. அதை மறைத்துக்கொண்டு அவருக்கு பதில் எதுவும் சொல்லாமல் சாப்பாட்டு பையை அலமாரியில் வைத்துவிட்டு அவன் இடத்துக்குச் சென்று நின்றுகொண்டான். ‘தெனமும் லேட்டா வா, அப்புறம் வேலை போச்சுன்னா என்னை கேக்காத.’ அவன் அதைக் காதில் வாங்காதது போல அங்கிருக்கும் கூட்டத்தைப் பார்த்தான். ஏன் இப்படி இவர்கள் இத்தனை காலையில் துணி வாங்கிக் குவிக்கிறார்கள் என்று அலுப்பாக இருந்தது.

மதியம் சாப்பிடும் முன்பு மேனேஜரிடம் சென்று, ‘அட்வான்ஸ் கேட்டேம்லா, பொண்ணுக்கு கொலுசு எடுக்கணும்’ என்றான். ‘நீ வாங்கின மொதல் அட்வான்ஸே அடையலையேடே, ராசா மொதல்ல அத அடைப்பாராம், அப்புறம் அடுத்த அட்வான்ஸ் வாங்கி கொலுசு எடுப்பாராம், இப்ப வேலைய பாப்பாராம்’ அவன் பதிலுக்குக் காத்திராமல், ‘சாப்டுட்டு மூணாவது மாடிக்கு போ, அங்கன கொஞ்சம் சோலி இருக்கு’ என்றார்.

அனைவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். ‘எல, அட்வான்ஸ் தந்தானாலா பேதிக்குபோவான்?’ என்றான் கூடவேலை பார்ப்பவன். இவன் இல்லை என்று தலையசைக்கவும், ‘போத்தீஸுக்கு இவம்தா ஓனருன்னு நெனப்பு மயிரு’ என்றான் அவன். பொன்னரசு சிரித்தான். ‘என்னைக்காவது சிக்குவாம்ல’ என்றான். டிஃபன்பாக்ஸில் உருளைக்கிழங்கு பொரியலைப் பார்த்துவிட்டு, ‘என்னல நேத்து அந்த கதை அளந்த கீரை மசியல்னு’ என்று அவன் கேட்கவும், ‘சீக்கிரம் சாப்பிடணும், மேல சோலி கெடக்காம், பேதிலபோறவன் சொல்லிருக்கான்’ என்று சொல்லிவிட்டு பொன்னரசு சாப்பிடத் தொடங்கினான்.

வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வர பத்தரை மணி ஆகிவிட்டது. சின்னா அப்போதும் பாப்பாவை கையில் வைத்திருந்தான். இவன் இத்தனை நேரமும் செல்வியை கையில் வைத்திருந்திருப்பானோ என்ற சந்தேகம் பொன்னரசுவுக்கு வந்தது. இவன் வேலைக்கு வரவில்லையென்றால் இவன் அலுவலகத்தில் யாரும் எதுவும் கேட்கமாட்டார்களா என்ற யோசனையுடன் பின்னடிக்குச் சென்று கை கால் கழுவிவிட்டு உடைமாற்றிக்கொண்டு தட்டை எடுத்து வந்து சாப்பிட உட்கார்ந்தான். சசி சோற்றையும் கொழம்பையும் கொண்டுவந்து அவன் முன் வைத்தவாறே ‘இப்பவும் இட்லி அரிசி வாங்கிருக்கமாட்டீங்களே’ என்றாள். சின்னா அங்கிருந்தவாறே ‘நாந்தா வாங்கிட்டு வந்துட்டேம்லா, விடு’ என்றான் அவளைப் பார்த்து. ‘எல்லாம் நீதான் இங்க செஞ்சாவுது, மத்தவங்களுக்கும் தெரியணும்லா’ என்று சொல்லிக்கொண்டே சோற்றைப் போட்டாள்.

சாப்பிட்டுவிட்டு உள்ளே வரவும் எங்கே படுப்பது என்று அவனுக்கு ஒரு கணம் குழம்பியது. மனதுக்குள் என்னவோ ஒரு கிளி பறக்கவும் எதுவும் பேசாமல் தான் எப்போதும் படுக்கும் தனியறைக்குள் சென்று படுத்துக்கொண்டான். சின்னா ஹாலில் இருந்து அவனைப் பார்ப்பது அவன் முதுகில் அவனுக்குத் தெரிந்தது. ஆனாலும் பொன்னரசு கண்டுகொள்ளவில்லை.

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு சசி வரவும் சின்னா பாப்பாவை அவள் கைகளில் கொடுத்துவிட்டு ‘நா கிளம்புதென், இன்னொரு நாள் வாரேன்’ என்று சொல்லிவிட்டு பொன்னரசுவிடம் எதுவும் சொல்லாமல் போனான். பொன்னரசுவுக்கு ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது. சசியிடம் இருந்து கீழே இறங்கிய செல்வி அப்பா என்று சொல்லிக்கொண்டே ஓடிவந்து படுத்திருந்த அவன்மேல் பொத்தென்று விழுந்தாள். அப்படியே அவளை வாரியணைத்து முத்தமிடவும் பொன்னரசுக்கு கொஞ்சம் வெளிச்சம் வந்தது போல் இருந்தது. ‘ஒனக்கு அப்பா அடுத்த வாரம் கொலுசு வாங்கித்தரேம்ட்டி’ என்று அவன் சொல்லவும், உள்ளே இருந்தே சசி ‘அதெல்லாம் வேணாம்னு சொல்லுட்டி. மாமா நல்ல கொலுசா இன்னைக்கே வாங்கிக் கொடுத்துட்டாங்கன்னு சொல்லுட்டி’ என்று சொல்லிக்கொண்டே அந்த அறைக்குள் புது கொலுசுடன் வந்தாள். ‘நாளைக்குத்தான் நல்ல நாளு, அம்மா நாளைக்கு போட்டுவிடுவேனாம்’ என்று செல்வியிடம் சொல்லிக்கொண்டே அந்தக் கொலுசை அவன் தலைமாட்டில் வைத்தாள்.

பொன்னரசு அதைக் காணாததுபோல் அறையின் ஓரத்தில் இருந்த ரேடியோவை இயக்கி பண்பலை கேட்கத் தொடங்கினான். சசி எதுவும் பேசாமல் பாயை விரித்து தன் பக்கத்தில் பாப்பாவைப் படுக்க வைத்து கதை சொல்லத் தொடங்கினாள். கதையில் குற்றாலம் வந்தது. குரங்கு வந்தது. செண்பகாடவி அருவி வந்தது. மந்திரவாதி வந்தான். யாரோ கையில் கொலுசுடன் சிரித்துக்கொண்டே பொன்னரசுவுக்கு முன் வந்தபோதுதான் அவன் விழித்து எழுந்தான். ரேடியோ கேட்டுக்கொண்டே அவன் உறங்கிப் போனது புரிந்தது. கத்திக்கொண்டிருந்த ரேடியோவை அணைத்துவிட்டு தலைமாட்டில் இருந்த செம்பிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடித்தான். திரும்பி சசியைப் பார்த்தான்.

பாப்பாவைக் கட்டிக்கொண்டு புடைவை விலகி வெளித்தெரியும் பாவாடையுடன் அவள் படுத்துக் கிடந்தாள். மெல்ல அவளுருகே நகன்று, பாப்பாவை கொஞ்சம் தள்ளி படுக்க வைத்துவிட்டு, அவள் மார்பில் கைபோட்டு மெல்ல நெருங்கிப் படுத்து அவள் இடைக்கு மேல் காலைத்தூக்கிப் போடவும் அவள் பதறி விலகி அவனைத் தள்ளிவிட்டாள். ‘என்ன நேரங்கெட்ட நேரத்துல’ என்று சீறி விழுந்தாள். ‘இன்னைக்கு ஆகாது’ என்றாள். அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் ‘காலேல விளக்கேத்தினியே’ என்றான். இது மத்தியானம் என்று சொல்லவும் அவன் அவளையே பார்த்தான். ‘இதுக்கெல்லாம் நா வேணும், ஆனா என் தம்பி வந்தா மூஞ்ச காட்டுங்க. எங்க அப்பாம்மா வந்தா வீட்டுக்கே வராதீங்க’ என்றாள். மிகவும் பலகீனமான குரலில் ‘அதுக்கும் இதுக்கும் என்ன’ என்றான். ‘அது அப்படித்தான். நான் வீட்டுக்கு ஆகலைன்னாலும் இன்னைக்கு இப்படித்தான்’ என்று சொல்லி போர்வையை எடுத்து இழுத்துப் போர்த்திக்கொண்டு பாப்பாவைக் கட்டிக்கொண்டு படுத்தாள். பொன்னரசு அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டான். போர்வைக்குள்ளிருந்தே ‘கொலுச பாத்திருக்கமாட்டமே, ரோசம்லா’ என்றாள். அவன் பதில் பேசவில்லை.

மறுநாள் விடிந்ததும் விடியாததுமாக ஆற்றுக்குக் கிளம்பினான். பின்னாலிருந்து சசி ‘நேத்து இட்லிக்கு அரைக்கல, வரும்போது ரகுவிலாஸ்ல செல்விக்கு ரெண்டு இட்லி வாங்கிட்டு வாங்க, சட்னியை தனியா கட்டச் சொல்லுங்க’ என்று கத்தினாள். செருப்பில்லாமல் சைக்கிளை மிதிக்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கீரைக்கிழவியைப் பார்க்காதமாதிரி வேகமாக அவளைக் கடந்து சென்றான். குறுக்குத்துறையில் முதல்நாள் பேசிய கடைக்காரர் வாசலில் சைக்கிளை விட்டுவிட்டு, ‘எங்கன அந்தப் பண்டாரத்தை காண்கலியே’ என்று கேட்டான். ‘எங்கனாச்சும் சுத்த போயிருக்கும் பக்கி’ என்றார் அவர். பண்டாரம் முதல்நாள் உட்கார்ந்திருந்த இடத்தில் அவன் செருப்பு நன்றாகக் கழுவி வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்துக்கொண்டுவிடலாமா என்று ஒரு நிமிடம் எண்ணம் ஓடியது. சீ, தன்னைப் பற்றி இந்தக் கடைக்காரர் என்ன நினைப்பார் என்று எண்ணியபோதே அந்தக் கடைக்காரர், ‘அவன் வாரதுக்குள்ள அந்த செருப்பை எடுத்துக்கிடுங்க’ என்றார். ‘சே சே, அதெதுக்கு இனிமே’ என்று சொல்லிவிட்டு, அதே வேகத்தில் ஓடிப்போய் சட்டை லுங்கியுடன் நீர் வெளியே தெறிக்க ஆற்றுக்குள் குதித்தான்.

எல்லா அழுக்கையும் எல்லா புழுக்கத்தையும் எல்லா சோகத்தையும் அவள் கழுவிக்கொண்டு ஓடினாள். அவன் மனைவியும் தொட்டிருக்காத இடங்களையெல்லாம் ஆசையுடன் வெறியுடன் வேகத்துடன் மோதி மோதி அவனை புது மனிதனாக மாற்றிக்கொண்டிருந்தாள் அவள். மனமெங்கும் உற்சாகம் பீறிட உடலெங்கும் புத்துணர்ச்சி திளைக்க மனமே இல்லாமல் அவளைவிட்டுப் படியேறினான். எத்தனை ஜென்மத்திலும் இந்தக் குறுக்குத்துறையை அவனால் கடக்கமுடியாது என்று நினைத்துக்கொண்டான். கரையில் நின்று தீர்த்தம்போல ஒரு கை நீரள்ளி வானைப் பார்த்துக்கொண்டே மூன்றுமுறை குடிக்கவும் ஒட்டுமொத்த நதியும் அவனுக்குள் அடங்கிப்போனது போல் இருந்தது.

கோவிலில் பண்டாரம் உட்கார்ந்திருந்த இடத்தில் இப்போதும் அவன் செருப்பு அங்கேயே இருந்தது. தூரத்தில் பார்த்தான். கடைக்காரர் இல்லை. என்னவோ தோன்ற வேகமாகச் சென்று அந்த செருப்பை மாட்டிக்கொண்டு நின்றான். அவனுக்கு சிரிப்பு வந்தது. அந்த சிரிப்பை அவன் எங்கேயோ பார்த்திருக்கிறான். செல்விக்கு பசிக்கும், இட்லி வாங்கிக்கொண்டு போகவேண்டும் என்ற எண்ணம் வரவும் செருப்பை அங்கேயே போட்டுவிட்டு சைக்கிளை நோக்கி ஓடினான்.

ஒளிப்பட உதவி- Freepik

சோழி

ஹரன் பிரசன்னா

முரளிதர ராவ் தனது எண்ணத்தின் கனம் தாங்காமல் எப்போது வேண்டுமானால் விழுந்துவிடுவார் போல அலைந்து அலைந்து நடந்தார். அவரது மெல்லிய உடலில் அதைவிட மெல்லிய பூணூல் காற்றில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. பூணூலையும் அதோடு சேர்த்து தன்னைப் போர்த்தியிருந்த மேல் துண்டையும் இழுத்து, சூம்பி தொங்கிப் போயிருந்த தன் மார்பின் இரு கருநிறக் காம்புகளையும் அவர் மூடிக்கொண்டார். வழுக்கைத் தலையில் வெளிப்பட்டிருந்த ஒன்றிரண்டு வெண்மயிர்கள் மிக நீண்டிருந்தன. வழுக்கையைச் சுற்றி மயிர்கள் சீவாமல் சீரில்லாமல் படிந்து கிடந்தன. முன்நெற்றியில் அவரது நாமத்தைக் கரைத்துக்கொண்டு வியர்வை வழிந்தது. தன் தோள்துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்தார். நாமத்துக்கிடையே அவர் இட்டிருந்த கரிக்கோடுபட்டு துண்டு கருப்பாகியது. கண்ணாடி மாட்டிக்கொண்டு வெளுத்த உளுத்த மரக்கொம்பு ஒன்று நடந்து வருவதுபோல் அவர் நடை இருந்தது. தள்ளாத வயதிலும் மனதில் இருந்த குழப்பம் காரணமாக வேகமாக நடக்க முயன்று தோற்றுப் போனார். மீண்டும் வேகமாக நடந்தார். (more…)

சுவை

ஹரன் பிரசன்னா

துபாயின் நீல நிறக் கடலைப் பார்த்தபடி மிக உயர்ந்த கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உயர்தர ஹோட்டலில் அமர்ந்து அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ரஹத் ஹஸன் தன் பூனைக் கண்களில் அங்கிருக்கும் பெண்களை மேய்ந்துகொண்டே அவ்வப்போது பேசவும் எத்தனித்தான். உலகெங்கும் இயங்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பன்னாட்டு கம்பெனி ஒன்றின் மார்க்கெட்டிங் ஹெட் என்பது அவனது மிடுக்கிலும் திமிரிலும் தெரிந்தது. மென்மையான தலைமயிர் அவன் கண்ணை மறைத்து விழுவதும் அதை மிகப் பொறுமையாக கையால் தள்ளிவிடுவதுமென அவனைப் பார்க்கும் எந்த ஒரு பெண்ணும் அவன் மடியில் விழுந்துவிடுவாள் என்று நினைத்துக்கொண்டார் நீல்ஸ்.

ஐந்து நட்சத்திர விடுதிகள் பலவற்றுக்கும் இதுபோன்று அலுவலக விஷயமாக நீல்ஸ் போயிருக்கிறார் என்றாலும் இந்த ஹோட்டலின் பகட்டு அதற்கும் மேலே. முதலில் இதை ஹோட்டல் என்பதே அவதூறு என்று அவருக்குப்பட்டது. இதற்கான சரியான வார்த்தையைத் தேடிப் பிடிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார். அவரது தாழ்வுணர்ச்சி இப்படி அடிக்கடி எட்டிப் பார்க்கும்போதெல்லாம் ஏனோ அவருக்கு தன்னை நினைத்துக் கூச்சமாக இருக்கும். அவரது இந்தியாவும் அவரது திண்டுக்கல்லும் அவரது சக்கம்பட்டியும் அவரது அப்பா பழனிச்சாமியும் அம்மா தாயம்மாவும் இப்போதும் இதோ நிமிடத்தில் அந்த உயர்தர ஹோட்டலில் அவருக்குப் பின்னே ஓர் ஓரத்தில் அமர்ந்து ‘சாப்பிட்டியா தம்பி’ என்று ஒரே குரலில் கேட்பதுபோல் அவருக்கு எப்போதும் தோன்றும். மெல்ல நாசுக்காக யாருக்கும் தெரியாமல் நீல்ஸ் திரும்பிப் பார்த்தார். (more…)

யாரோ ஒருவன்

ஹரன் பிரசன்னா

பிரகதி மைதானத்தில் நடக்கும் டெல்லி புத்தகக் கண்காட்சியின் குளிரூட்டப்பட்ட அரங்குக்குள் நுழைந்தபோதே என் நாசி அந்த மணத்தை உணர்ந்து இதற்கு முன்பு டெல்லி வந்ததன் நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்தது. உடனே நினைவுக்கு வந்தவன் சுனில் வர்மாதான். கடந்தமுறை என் புத்தக அரங்குக்குப் பக்கத்து அரங்கில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தான். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்துகொண்டிருந்த புத்தகக் கண்காட்சியில் எத்தனையோ முறை பங்கேற்றிருந்தாலும், யாருடனும் ஒட்டிப் பழகியதில்லை. ஒரு ஹாய் ஒரு ஹலோ, அவ்வளவுதான். ஆனால் கடந்தமுறை சுனில் வந்து வந்து பேசினான். எத்தனை முறை கிழே இறக்கிவிட்டாலும் வலிந்து இடுப்பேறிக் கொள்ளும் குழந்தை போல.

அவனுக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் விடாமல் பேசிக்கொண்டே இருப்பான். எனக்கும் அவனுக்கும் பத்து வயது வித்தியாசமாவது இருக்கும். வெளுத்த தோலுடன் ஒல்லியாக உடல் உள்ளொடுங்கி அவன் பேசும்போதெல்லாம் தொண்டைக் குமிழ் ஏறி இறங்குவது எனக்கு சிரிப்பாக வரும். அவனைப் பார்க்கும்போதெல்லாம் சிரிப்பேன். சம்பந்தமில்லாமல் என்னென்னவோ பேசுவான். ரொட்டியை வாங்கி சாயாவில் முக்கி யாரோ அடித்துப் பிடுங்கவருவதுபோல வேகவேகமாக அவன் உண்பதைப் பார்க்க எனக்குச் சிரிப்பாக வரும். அதே ரொட்டியைக் காண்பித்து சாப்பிடறீங்களா ஜி என்பான். வேண்டாம் என்று மறுப்பேன். சுடச்சுட கடும் சாயா வாங்கித் தருவான். மெல்லிய மீசை நெளிய இது தனது ட்ரீட் என்று சொல்வான். (more…)