ஹரீஷ் கண்பத்

நசி

ஹரீஷ்

இரண்டு நாட்களாகவே தொந்தரவு செய்யத் துவங்கி விட்டாள் அவள். சென்ற முறை வந்தவள் போலில்லை. இவள் புதிது. அவளை விடவும் வேகமாக இருந்தாள்.அவளது செய்கைகள் ஒவ்வொன்றும் ஆச்சரியப்படுத்துவதாக இருந்தன.

உள்ளுக்குள் பரபரப்பு மிகுந்திருந்தாலும் வெளியில் ஒரு ஜோம்பியைப் போல் அமர்ந்திருந்தேன். “ஏன் இப்படியே உக்காந்திருக்கே? கிளம்பேன் . வெளியில மழை பெய்யுது என்றாள் அவள்.

வாசலில் அம்மா யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். “என்னவோ தெரில. நல்லாததான் இருந்தான். இப்ப கொஞ்ச நாளாததான். விட்டத்தப் பாத்துக்கிட்டு கெடக்கான். திடீர்னு சிரிக்கிறான். என்னான்னு கேட்டா கோவப்பட்றான். எப்பப்பாரு ஒரு வெள்ளைப் பேப்பர எடுத்து வெச்சுகிட்டு வெறிச்சு வெறிச்சுப் பாக்கறான். ரூம் கதவ அறஞ்சு சாத்திக்கிறான்” என்று.

எதிர்க்குரல் கிசுகிசுப்பாகப் பேசியது. விஷயம் சரியாகக் காதில் விழவில்லை. என்ன சொல்லியிருக்கக்கூடும், மேலத்தெரு தர்காவுக்குக் கூட்டிச் சென்று சாகிப் மஸ்தானிடம் மந்திரிக்கச் சொல்லியிருக்கக்கூடும். மழைக்குத் திண்ணையில் ஒதுங்கியவர்களுக்கெல்லாம் வம்புக் கதை கேட்கும் பாக்கியம் கிடைக்கிறது இந்த வீட்டில்.

அலமாரியைத் திறந்து இருப்பதிலேயே பழைய சட்டையாய்ப் பார்த்து எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்தேன். மழை நசநசத்துக் கொண்டிருந்தது. அம்மா “ எங்க கண்ணு போற” என்றாள். அதற்குள் இவள் “ அங்கென்ன பதில் சொல்லிகிட்டு? வா போலாம். க்விக்” என்றாள். பாவம் அம்மா. எப்போதும் என்னை டா போட்டுக்கூட அழைத்ததில்லை. அவளைப் பரிதாபகரமாய்ப் பார்த்து விட்டு வெளியேறினேன். “சந்தேகமே இல்ல. அதான். நீங்க நான் சொன்னத முதல்ல செய்ங்க” என்று அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த எதிர்க்குரல் முதுகின் பின் தேய்ந்து மறைந்தது.

இவள் யட்சி. போட்டு அலைக்கழித்துக் கொண்டிருந்தாள். அங்கும் இங்கும் கடற்காற்றில் தள்ளாடும் தோணி போல் மனசும் மூளையும் வெவ்வேறு திசைகளில் பிய்த்துக் கொண்டிருந்தன. சொற்கள் அகப்படவில்லை. எவ்வளவு வேகமாக நடந்தேன் என்பது சட்டென்று நின்று சுற்றிலும் பார்த்தபின்தான் தெரிந்தது. வீட்டிலிருந்து ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் வரை வந்திருக்கிறேன். கிட்டத்தட்ட நாலரை கிலோமீட்டர். அவளுடன் பேசிக் கொண்டே வந்ததில் தெரியவில்லை. வரும் வழியில் ரயில் பாதையை வேறு கடந்து வந்திருக்கிறேன் எதுவுமே கவனத்தில் இல்லை.

சட்டை நனைந்திருந்தது. வேகமாக நடந்து வந்ததில் வியர்வையிலா அல்லது நச நசவெனத் தூறியபடியிருக்கும் மழையினாலா என்று தெரியவில்லை. மைதானத்தைப் பார்த்தேன். ஒருத்தரையும் காணோம். ஆங்காங்கே சிறு சேற்றுக் குட்டைகள் உருவாகிக் கிடந்தன. நட்டு வைக்கப்பட்டிருந்த கால்பந்துக்கான கோல் போஸ்ட் கம்பிகளிலிருந்தும் பூப்பந்துக்கான வலையமைக்கப்பட்டிருந்த கம்பிகளிலிருந்தும் இடைவிடாமல் நீர் சொட்டிக் கொண்டிருந்தது.

காம்பவுண்டு சுவரின் மீது கைவைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தவனை உள்ளே போ என நெட்டித் தள்ளினாள் யட்சி. சற்றே தள்ளியிருந்த வாயில் கேட்டைப் பார்த்தேன். பூட்டியிருந்தது. சுவற்றின் மேல் கால் வைத்து சரியாக எகிறும் தருணத்தில் சாலையில் தலை முதல் முழங்கால் வரை நெகிழிப்பை போர்த்தியிருந்த ஒருவர் என்னைப் பார்த்தபடியே கடந்து போனார். நெகிழியால் தலை மறைக்கப்பட்டிருந்ததால் அவர் வயதைச் சரியாகக் கணிக்க முடியவில்லை.

உள்ளே போலாம் என்றாள். அடுத்த நிமிஷம் குட்டைச் சுவர் எகிறி உள்ளே குதித்திருந்தேன். மூலை வேப்ப மரத்தடியை நோக்கி நடந்தேன். நேராகப் போகாமல் நடைப்பயிற்சிக்கு வருபவர்கள் செய்வது போல் மைதானத்தை ஒரு சுற்று சுற்றி நடந்தேன்.

“இந்த சேத்துல கால் நுழைச்சா எப்படி இருக்கும் தெரியுமா. ஐ ஜஸ்ட் லவ் இட். நீயும் நடந்து தான் பாரேன்” என்றாள். கேட்கவில்லையென்றால் விட மாட்டாள். போன முறை வந்தவள் இவ்வளவு ஆதிக்கமில்லை. அவள் பூப்போல் மென்மையானவள். இவள் பயங்கர ராட்சசியாக இருக்கிறாள்.

ஆங்காங்கே உருவாகியிருந்த சேற்றுப் பொதிகளில் கால்களை உள்நுழைத்து அளையச் சொல்லிப் படுத்தினாள். அவள் வார்த்தைகளைத் தட்ட முடியாமல் சேற்றில் கால்களை உழல விட்டு நடந்தேன். வேப்ப மரத்தடியை அடைந்தபோது மழையின் வேகம் குறைந்திருந்தது. கால்கள் கரும்பழுப்பு நிறத்துக்கு மாறியிருந்தன. மழை தரும் புத்துணர்ச்சியையும் மீறி உடல் மிகவும் சோர்ந்திருந்தது.

இது எப்போது வரை நீளுமென்று தெரியவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதிலிருந்து விடுபட வேண்டும். சொற்களைத் தேடிக் கொண்டே இருந்தேன். எதைப் பார்த்தாலும் அதிலிருந்து ஏதேனும் சொற்கள் கிட்டக் கூடுமா என்று உற்றுப் பார்த்தபடி இருந்தேன்.

தேடலைக் கலைத்தாள். “ஹேய்.. இந்த மரத்தடியிலதானே நீ முதல் முதல்ல தமிழ் செக்ஸ் புக் படிச்சே? எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு” என்றாள். அவள் தொனியில் கிண்டலில்லை. பால்ய கால நினைவுகளை அசைபோட வாய்ப்பு கிடைத்த ஒரு வயசாளியின் குதூகலம் மட்டுமே தெரிந்தது. தொடர்ந்தாள். “ புக் பேர் கூட ஞாபகம் இருக்கு. “பாப்பாத்தியின் காம லீலைகள்” கரெக்டா?” என்று சிரித்தாள்.

சிரிக்க முயன்று தோற்றேன். மண்டைக் குடைச்சல் பலமாக இருந்தது. கைகளின் நடுக்கமும் லேசாகத் துவங்கி விட்டிருந்தது. “உங்க சித்தப்பாவப் பாத்து ரொம்ப நாளான மாதிரி ஒரு பீல். இல்ல?” என்றாள் காரணமேயின்றி திடீரென்று. அவள் சொன்னதும் எனக்கும் அப்படித் தோன்ற ஆரம்பித்து விட்டது. இடையே சொற்களைச் சேமித்து வைத்தபடியிருந்தேன்.

அவள் கேள்விக்கு ஆமா என்பது போல் தலையாட்டினேன். “அப்ப வா போலாம் “ என்றாள். திடுக்கிட்டேன். அவள் பேச்சை வேறு தட்ட முடியாது. எழுந்து நடப்பதே சிரமமாக இருந்தது. திரும்ப வீடு நோக்கி நடக்கும் போது ரயில்வே குவார்ட்டர்ஸ் மிகப் பெரும் அமைதியைப் போர்த்திக் கொண்டிருந்தது. மழைக்குப் பின்னான ரம்மியம் காற்றில் இல்லை. தனிமையின் ஓலம் நிறைந்திருந்தது. தனிமையின் ராட்சசம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குடிப்பது போலிருந்தது.

முடிந்தவரை சீக்கிரமாக அங்கிருந்து அகல முயன்று வேகமாக நடந்தேன். அந்தச் சாலையின் முனையில் இருக்கும் ரயில் நிலையமும் கோவிலும்கூட சூழலின் இறுக்கத்தை மாற்ற முடியவில்லை.

ஓரிரு வினாடிகள் நின்று ரயில் நிலைய முகப்பைப் பார்த்தேன். மனித சஞ்சாரம் ஏதுமில்லை. உள்ளே யாரும் இருக்கக்கூடும். ரயில் நிலைய முகப்புக் கட்டிடம் எந்த நேரமும் நிமிர்ந்து நின்று தன் உடல் மீது படர்ந்த ஈரத்தை உதறிக் கொள்ளக்கூடும் என்பது போல் ஒரு தோற்றம் மனசில் ஏற்பட்டது. அது அச்சமூட்டுவதாக இருந்தது.

மீண்டும் நடக்கத் துவங்கினேன். சாலை வழி செல்லாமல் ரயில் பாதையை ஒட்டியே நடக்கத் துவங்கினேன்.. மழை நீரில் கரைந்த மலத்தின் வாடை முகம் சுளிக்கச் செய்வதாய் இருந்தது. அவளும் முகம் சுளித்தாள்.

தொப்பலாக நனைந்து வீட்டுக்குள் நுழையும்போது முதுகின் பின் அம்மாவின் பார்வை துரத்துவதை உணர முடிந்தது. எதுவும் கேட்கவில்லை. உள்ளே சென்று ஒரே ஒரு சட்டையையும் வேட்டியையும்  ஒரு பழைய பையில் எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பினேன். அறை வாசலுக்கு வந்தவன் மீண்டும் உள்ளே போய் ஒரு நெகிழிப் பையை எடுத்து ஓரிரு வெள்ளைக் காகிதங்களை எடுத்து கவனமாய் அதில் போட்டுக் கொண்டேன். உபயோகப்படும். பேனாவை எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன்.

அறையை விட்டு வெளியே வரவும் இதை எதிர்பார்த்தேயிருந்த அம்மா பதற்றமாய் அருகில் வந்தாள். “ என்ன கண்ணு எங்க கெளம்பிட்ட” என்றாள்.மெல்லப் புன்னகைத்தேன். “ஒண்ணுமில்லம்மா பயப்படாத. சித்தப்பாவப் பாத்து ரொம்ப நாளாச்சு. திடீர்னு பாக்கணும்னு தோணிச்சு. அதான் போறேன். நாளைக்கி வந்துருவேன்” என்றேன்.

என்னைத் தனியாக அனுப்புவதில் அவளுக்கு நிறைய யோசனைகள் இருந்தன. என்ன செய்வது, போய்த்தானாக வேண்டும். ஏதோ கேட்க நினைத்தவள் கடைசி நொடியில் கேள்வியை மாற்றி “ இந்த மழையிலயா?” என்றாள். சிரித்தேன். அதற்கு மேல் ஏதும் பதில் கிடைக்காது என்று அவளுக்குத் தெரியும். இயலாமையுடன் “பத்திரமா போய்ட்டு வாப்பா” என்றாள்.

என் உளைச்சலை அவளிடம் சொல்லிப் புரிய வைக்க வேண்டுமென்று ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் புரிவது கஷ்டம். “சீக்கிரம். நேரமாச்சு” என்று இவள் வேறு உந்தித் தள்ளினாள். பேருந்து நிலையத்தை நடந்தே அடைந்தேன். எல்லாப் பேருந்துகளும் கழுவி விடப்பட்டவை போல் சுத்தமாக இருந்தன. சேலம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி அமர்ந்து பயணச் சீட்டை வாங்கிக் கொண்டேன். ஜன்னலை முழுக்கத் திறந்து விட்டுக் கொண்டேன்.

அரசுப் பேருந்தாதலால் கூட்டமில்லை. கூட்டமாயிருந்திருந்தால் ஜன்னலை இப்படி முழுக்கத் திறந்து விட்டுக்கொள்ள எதிர்ப்பி\ருந்திருக்கும். பேருந்தில் எந்தக் காலத்திலோ பொருத்தப்பட்ட ஆடியோ செட் இயங்காமல் போய் வயர்கள் அறுந்து தொங்கும் நிலையிலிருந்தது.

பேருந்து கிளம்பவும் சிலர் ஓடி வந்து ஏறினார்கள். அவர்கள் யாரும் என் அருகிலோ அதற்கருகிலிருக்கும் இருக்கையிலோ வந்து அமர்ந்து விடக்கூடாதென்று வேண்டிக் கொண்டேன். சற்று நேரமாய் இல்லாமலிருந்த மழை இப்போதுதான் மீண்டும் சிறு தூறல் தெளிக்கத் துவங்கியிருந்தது. ஜன்னல் திறப்பு தடைபடக்கூடாதென்றே அப்படி ஒர் வேண்டுதல். வழியெங்கும் மழை சிலுசிலுத்தபடியே வந்தது. ஆங்காங்கே சொற்ப கூட்டம் பேருந்தில் ஏறுவதும் பேருந்தை விட்டு இறங்குவதுமாய் இருந்தது. இவள் பேசிக்கொண்டே இருந்தாள். அதை கவனியாமல் இருக்க முடியாது. இருந்தும் அது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் மனசு லேசாக சமனப்படத் துவங்கியிருந்தது.

இந்த நிலைதான் வேண்டும். இன்னும் கொஞ்சம் .இன்னும் கொஞ்சம். முயற்சித்தபடியே இருந்தேன். அவள் குரல்கூட மெல்லத் தேய்ந்து ஒரு கட்டத்தில் மெலிதாய் ஒலிக்கத் துவங்கியிருந்தது. ஆனால் அவள் போகவில்லை. அவளின் இருப்பு சர்வ நிச்சயமாய் இருந்தது. என்ன, முன்பு போல் மூளையைப் பிடித்து உலுக்குவதாய் உளைச்சல் தருவதாய் இல்லை. மென்மையாய் இருந்தது.

நாமக்கல் வந்து இறங்கினேன். இரண்டு ஊர்களிலும் பெய்தது ஒரே மழைதான் என்றாலும் மழையில் நனைந்தபின் இரு ஊர்களும் முற்றிலும் வேறாக இருந்தன. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கி விட்டேன் போல் தோன்றியது. சித்தப்பா வீட்டின் கதவைத் தட்டியதும் சித்திதான் வந்து திறந்தாள். மெல்லிய புன்னகையுடன். நெற்றி சுருக்கவில்லை. அம்மா போன் செய்திருப்பாள் என்று புரிந்தது.

“வா உக்காரு. எப்படி இருக்க?” என்றாள். அவஸ்தையாய்ச் சிரித்தேன். “சித்தப்பா இப்ப சாப்புட வர நேரம்தான். அவர் வர வரை காத்திருக்கறியா இல்ல இப்ப சாப்பிடறியா” என்றாள். அவள் கண்களில் தெரிந்தது சிறு பயமா என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. ”வரட்டும் “ என்றேன் ஒற்றை வார்த்தையில். “அதானே. அவரைப் பாக்கதான் இத்தனை தூரம் வந்தது. அவரைப் பாக்காம என்ன சாப்பாடு?” என்றாள் இடையில் இவள்.

உள்ளங்கையையே பார்த்துக் கொண்டிருந்தேன். சித்தி குறுகுறுவெனப் பார்ப்பதைக் குனிந்திருந்தாலும் உணர முடிந்தது. அசூயையாக இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் சிரமமாக இருந்தது. சித்தப்பா வந்து விட்டார். வழக்கமான விசாரிப்புகளைப் பெரும் ஆயாசத்துடன் கடக்க வேண்டியிருந்தது. அவ்வளவு தூரத்திலிருந்து அவரைப் பார்க்கவென்று வந்துவிட்டு அவர் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் தட்டில் போட்ட சோற்றை அளைந்து கொண்டிருப்பது எனக்கே ஒரு மாதிரி இருந்தது.

கை கழுவியவுடன் “கிளம்பறேன் சித்தப்பா. பசங்க வந்தா சொல்லுங்க” என்றேன். என்னப்பா அவசரம் என்றோ… இரேன் போகலாம் என்றோ சித்தப்பா ஏதும் சொல்லவில்லை. அம்மா என் நிலைமை பற்றி விவரித்திருக்கக் கூடும். மெலிதாய்த் தலையசைத்து “போய்ட்டு வாப்பா… ஒடம்பப் பாத்துக்க” என்றார். அவர் கண்கள் பச்சாதாபத்திலும் நம்பிக்கையின்மையிலும் நிரம்பியிருந்தன.

கிளம்பி விட்டேன். மழை முற்றாக நின்று விட்டிருந்தது. வெயில்கூட அடிக்கத் துவங்கியது. ரமேஷ் தியேட்டர் பஸ் நிறுத்தம் கடந்து பெண்கள் கல்லூரி தாண்டி வேக வேகமாக நடந்தேன். கல்லூரியிலிருந்து பெண்கள் வெளி வரத்துவங்கியிருந்தனர். கல்லூரி முடியும் நேரமாகியிருக்க வேண்டும்.

கூட்டத்தை வேகமாய்க் கடந்து பேருந்து நிலையத்தை அடைந்து வரும்போதிருந்தது போலவே காலியான அரசுப் பேருந்தாய் பார்த்து ஏறி அமர்ந்தேன். ஜன்னல் வழி வெயில் ஊர்ந்து தேகமெங்கும் வழியத் துவங்கியிருந்தது. வண்டி கிளம்பியது. இவள் இடைவிடாமல் பேசியபடியே வந்தாள். பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.

ஜன்னல் வழியே விரையும் மரங்கள் ஒரு கண்ணை மூடிக் கொண்டு பார்க்க மிகச் சிறியவையாகத் தெரிந்தன. அவற்றை ஆள்காட்டி விரல் கொண்டு தொட முயன்றபடியே இருந்தேன். என் செய்கையைப் பார்த்து அவள் சிரித்தாள். சட்டென்று ஏதோ தோன்றியது. இதுதான் தருணம். நான் தயாராயிருப்பதாய் ஏதோ சொன்னது. ராசிபுரம் பிரிவருகே வரும் போது எழுந்து வண்டியின் கதவருகே சென்றேன்.

நடத்துனர் என்ன என்பது போல் பார்த்தார். கண்களால் கெஞ்சலாக “இறங்கணும் “ என்றேன். முறைத்தவர் விசிலை ஊதினார். பேருந்திலிருந்து என்னை உதிர்த்துக் கொண்டேன். மனம் நிச்சலனமாக இருந்தது. மண்டைக்குள் குடைச்சலும் உளைச்சலும் ஓய்ந்திருந்தது.

மெதுவாக நடந்தேன். நடக்கப் போவதை அறிந்தோ என்னவோ அவள் ஏதும் பேசாமலிருந்தாள். அந்த அமைதி எனக்குத் தேவையாயிருந்தது. சற்று தூரம் நடந்த பின் ஆளரவமற்ற சாலையோரம் ஒரு டீக்கடை தென்பட்டது. உள்ளே நுழைந்தேன். யாரையும் காணவில்லை. நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நிமிடம் கடந்தபின் வயதான பெரியவர் ஒருவர் கையில் பெரிய பாத்திரத்துடன் வந்தார்.” என்னா” என்றார். “டீ வேணும்” என்றேன்.

“இனிமேதான் பால் காச்சணும். லேட்டாவும்,” என்றார். பரவால்ல போடுங்க என்றபடி உடைந்திருந்த நாற்காலியில் அமர்ந்த என்னை வினோதமாகப் பார்த்தார். சுற்று முற்றும் பார்த்தேன். லாபம் என்று எழுதப்பட்டு ஓரங்கள் கிழிந்து போயிருந்த பிள்ளையார் படம் போட்ட காலண்டர் அட்டை கிடந்தது. அதை எடுத்துக் கொண்டேன்.

கவனமாய்ப் பைக்குள் கைவிட்டு நெகிழிக்குள் பொதிந்து வைத்திருந்த வெள்ளைக் காகிதங்களை எடுத்தேன். நடக்கப் போவதை அறிந்த அவள் பதறினாள். கண்ணீர் வரத் துவங்கி விட்டது அவளுக்கு. “ இதை நீ கண்டிப்பா செஞ்சாகணுமா. ப்ளீஸ் வேண்டாமே” என்றாள். வெற்றுக் கண்களுடன் அவளை ஏறிட்ட நான், “ வேற வழியில்ல” என்றேன். தெளிவாக இருந்தேன்.

கண்களை மூடி ஒரு முறை மூச்சை ஆழமாய் உள்ளிழுத்தேன். பின் கண்களைத் திறந்தேன். நடக்கப் போகும் விஷயத்தை ஏற்றுக் கொண்டவள் போல் எந்த விதமான உணர்ச்சிகளும் காட்டாமல் அவளிருந்தாள்.

“நசி” என்று தலைப்பிட்டேன். மெல்ல அவளை ஒவ்வொரு சொல்லாய் எழுதத் துவங்கினேன். அவள் பார்வை என் மேல் நிலைகுத்தியிருந்தது. எழுத எழுத எதிரிலிருந்தவள் மையில் மெல்லக் கரைந்து காகிதத்தில் பரவத் துவங்கினாள்.

அழைப்பு

ஹரீஷ் கண்பத்

பேருந்து நிலையத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். வந்திறங்கி முக்கால் மணி நேரமாகியிருந்தது. வருவதாகச் சொல்லி விட்டு தாமதித்துக் கொண்டிருந்த நண்பன் மேல் கோபம் வரவேயில்லை. ஊரின் வெயில் கூட நின்று நிதானமாக உடலைத் தடவுவது போலிருந்தது. ஜனம் வெள்ளமாய் வந்து போய்க் கொண்டிருந்தது. யாரிடமும் பரபரப்பில்லை. மாறாக உற்சாகம் மண்டிக் கிடந்தது. ஊரில் வாழ்ந்த நாட்களில் இது போன்ற பண்டிகை சமயங்களில் இந்தப் பக்கம் வந்ததில்லை. பண்டிகையின் சுவடு ஊர் முழுக்கப் படர்ந்து பரவியிருப்பதாகப் பட்டது.எத்தனை வருஷங்கள் கழித்து வந்திருக்கிறேன் என்று சரியாகக் கணக்கிட்டுக் கொள்ளவில்லை. நிச்சயம் ஐந்தாறு வருஷங்கள் இருக்கும். கடைசியாக மாரியின் திருமணத்துக்கு வந்தது.

வருகிறேன் என்று சொன்னவனுக்கு மீண்டும் அழைத்தேன். எடுத்துப் பேசினான். எதிர்முனையில் காற்றின் இரைச்சல் அதீதமாக இருந்தது.வண்டியோட்டிக் கொண்டே பேசுகிறானோ என்று கவலையாக இருந்தது. “ கலெக்டரேட்ல இருக்கறண்டா பையா. வந்துர்றேன்” என்றான். எப்படியும் இருபது நிமிடங்கள் ஆகும். பசித்தது. நிலையத்தின்   வெளியே எப்போதோ சாப்பிட்ட ஒரு உணவகம் இருப்பதாக ஞாபகம் வந்தது. மெதுவே நடந்து அங்கே சென்றேன். நிரம்பக் கூட்டம். மீண்டும் வெளியே வந்து நின்று கொண்டேன்.பக்கத்தில் மிட்டாய்க் கடை வாசலில் ஒரு குழந்தை அலறிக் கொண்டிருந்தது. அதன் அம்மா குழந்தையைக் கொண்டு வந்து மிட்டாய்க் கடை வாயிலில் அமர வைத்த தன் அறிவைத் தானே நொந்து கொண்டே குழந்தையைச் சமாதானம் செய்தபடி இருந்தாள்.

மெல்ல நடக்கத் துவங்கிய என்னை வழிமறித்தவாறு வண்டியை நிறுத்தினான் பிரபு. செல்லமாக அவன் தோளில் தட்டி, “இதான் வர்ற டைமாடா பையா?” என்றேன். பல வருடப் பட்டண வாசத்தால் பேச்சில் தலைகாட்டாமல் தேய்ந்தழிந்து போன ஊர் வாசம் இங்கு வந்ததும் தானாக வந்து ஒட்டிக் கொண்டு விடுவது ஆச்சரியம் தான்.”இல்லடா. நான் வந்தர்லான்னு பாத்தன். உன்னிய கிரிஸ்ணகிரி பஸ்டேண்டு வந்துட்டு போன் பண்ணுடான்னா நீயி தரும்புரி பஸ்டேண்டு வந்துட்டு போன் பண்ற. மொதுல்லயே போன் பண்ணிருந்தா கரெட்டா வந்துட்ருப்பேன்” என்றான்.“செரி ரொம்ப பேசாத. பசிக்கிது. எங்கனா சாப்புட போலாம் வா” என்றேன்.” எங்க போறது?” என்று என்னையே திருப்பிக் கேட்டான். “ அதியமான் போலாம் வா” என்று வண்டியில் ஏறி அமர்ந்தேன்.

பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் பெரிதாய் மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்திருக்கவில்லை. திடீரென்று ஞாபகம் வந்தவனைப் போல், “ டேய் நம்ம டீலக்ஸு இன்னும் இருக்குதா இழுத்து மூடிட்டானுகளா?” என்றேன். டீலக்ஸ் என்று நாங்கள் அழைப்பது எங்கள் ஊரின் பலான படத் திரையரங்கை. கல்லூரி நாட்களில் அங்கேயே பழியாய்க் கிடந்ததுண்டு.” நல்லா தான் இன்னும் ஓடினிருக்குது” என்றவன் சற்றே பேச்சை நிறுத்தி, பின் தொடர்ந்தான். “ எல்லா தேட்டரும் அப்டியே தாங்கீது. கணேசா மட்டும் மூடிட்டான்” என்றான்.அந்த அரங்கில் மௌனம் பேசியதே படத்தைத் தனியே போய்ப் பார்த்தது நினைவில் வந்து போனது.”டேய்.. அப்புறமா எங்க வீட்டுக்கு ஒரு வாட்டி போய் பாத்துட்டு வந்துரலாம்” என்றதற்கு சரி என்று தலையாட்டினான். அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டேன்.

வீட்டின் நினைவுகள் மூச்சு முட்ட அழுத்தும் கொடி போல் மூளையைச் சுற்றிலும் படர்ந்து இறுக்கத் துவங்கியது. தலையை உலுக்கிக் கொண்டேன். ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.” டேய் காந்தி நகருல எங்கப்பாவோட அத்த வீடு கீது. அங்க தான் போவணும். சாயந்திரமா பத்திரிக குடுக்க கெளம்பலாமா” என்றேன்.”செர்ரா.. என்னைய வீட்ல விட்டுட்டு நீ வண்டிய எட்துனு போ. சாய்ந்தரம் என்னைய கூட்டிக்கோ” என்றான்.கிளம்பினோம். கணேசா தியேட்டரின் வழியே போகும் போது அந்த இடம் பல்லெல்லாம் கொட்டிப் போய் விட்ட பின்பும் புன்னகை மாறாத பாம்படக் கிழவி போல் தோன்றியது.

அப்பாவின் அத்தை மிக மிகத் தளர்ந்திருந்தார். இன்னமும் அவர் கையில் பிரம்புடன் பாடம் எடுப்பது போலவே ஒரு பிம்பம் மனதில் பதிவாகியிருந்ததை அழிப்பது சிரமமானதாயிருந்தது.நடுங்கும் விரல்களால் தலையைத் தடவி வரவேற்றார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அறையில் புகுந்து கொண்டேன்.

எவ்வளவு நேரம் போனது தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்த போது மணி நாலாகியிருந்தது.தயாராகி வெளியே வந்து வண்டியை எடுத்தேன். வெயில் இறங்கிக் கொண்டிருந்தது. அப்போதே காற்றில் லேசாகக் குளிர் கலந்திருந்தது. குளிர் இந்த ஊருக்குப் புதிதில்லை. அற்புதமான சீதோஷ்ணம். சிறு வயசில் எத்தனை குளிரையும் தாங்கும் உடம்பு, இப்போதெல்லாம் முடிவதில்லை.பட்டணம் பல விதமான உபாதைகளை விதைத்திருக்கிறது.

குளிரை ரசித்து உணர்ந்தபடியே அவன் வீட்டுக்கு வண்டியை மெல்ல விரட்டினேன்.சத்திர மேல் தெருவும் அப்படியே தானிருந்தது. மாலை நேரம் வீட்டு வாசல்களில் முளைக்கும் பணியாரக் கடைகள் மொளகா வடைக் கடைகள் வியாபாரத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தன. பிரபு வீடு மட்டும் முற்றிலுமாக மாற்றிக் கட்டப்பட்டிருந்தது.  வெளியே வந்தவனிடம் விசாரித்தேன். “ தெர்லடா பையா. ரெம்ப நாளா இப்டி தான் கீது. மின்ன எப்பிடி இரின்ச்சுனு மறந்து போச்சி” என்றான் சாதாரணமாக. நான் வந்து எவ்வளவு வருஷங்கள் ஆகி விட்டிருக்கின்றன என்று அப்போது தான் புரிந்தது..

இருவரும் கிளம்பினோம். நானே வண்டியை ஓட்டுவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டேன். அழுக்கடைந்த கட்டிடமென ஞாபக அடுக்குகளில் எப்போதும் பதிந்திருக்கும் அரசு மருத்துவமனை, பிரம்மாண்டமான மருத்துவக் கல்லூரியாக மாறியிருந்தது மனசை என்னவோ செய்தது. இது வழியே பிரதான சாலையிலிருந்து எத்தனை முறை வீட்டுக்கு நடந்து சென்றிருக்கிறேன். இப்போது வெறும் கட்டிடக் காடாய் கண் முன் நின்றது. ஏனோ கல்லூரி படிக்கையில் விபத்தில் இறந்து போன அடுத்த வகுப்பு மாணவனின் உடலைப் பார்க்க இங்கு வந்தது நினைவில் நிரடியது. துக்கத்தை அனுசரிக்காமல் அப்போது மனம் கவர்ந்திருந்த பக்கத்து வகுப்பின் பெண்ணை நோட்டம் விட்டபடியிருந்த குற்ற உணர்வும் துல்லியமாய் கண் முன் வந்துன் போனது.

செந்தில் நகரை அடைந்து தினேசனுக்கு தொலைபேசினேன். அவன் வீட்டுக்கு வழி சொன்னான். வீட்டைக் கண்டடைவது அவ்வளவு சிரமாகவெல்லாம் இல்லை. தெரு மூலை வீடு. அபாரமாக வரவேற்றான். பாலாஜி அங்கேயே வந்திருந்தான். அங்கேயே வைத்துப் பத்திரிகையைக் கொடுத்தேன். பெண் என்ன செய்கிறாள் , திருமணம் எங்கே போன்ற கேள்விகள் சடுதியில் முடிந்து போக, எங்கள் உரையடலில் எப்போதும் எனக்குப் பிடித்தமான பகுதியான கல்லூரி ஆசிரியர்களின் வசனங்களைக் கிண்டலடிக்கும் பகுதி துவங்கியது. பாலாஜி அதில் விற்பன்னன். நேரம் போனதே தெரியவில்லை. மணி ஆறாகி விட்டிருந்தது. சுரேஷின் வீடு அருகிலிருப்பதால் அவனைப் போய் பார்த்து வரலாம் என்று கிளம்பினோம். அவனைச் சந்தித்து பத்திரிகையைக் கொடுத்தேன். அவன் அம்மா சுரேசனுக்கும் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் இன்னும் எதுவும் தகையவில்லை எனவும் லேசான வருத்தத்துடன் கூறினார்.அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு அடுத்து மாரியைப் பார்த்து விட்டு வந்து விடலாமென்று முடிவு செய்து கிளம்பினோம்.

ஆறு மணிக்கே இருள் முழுவதுமாகக் கவிந்திருந்தது. காற்றில் குளிர் வெகுவாக ஏறியிருந்தது.குளிரில் வண்டியைச் செலுத்துவது சிரம்மாயிருந்தது. இன்னொரு பக்கம் ஆனந்தமாயும் இருந்தது. மாரியின் ஊரருகே புதிதாக ஒரு மேம்பாலம் முளைத்திருந்தது. அதைக் கட்டிப் பல வருஷங்கள் ஆகியிருக்கக் கூடும். நான் இப்போது தான் பார்க்கிறேன். இடப்புறம் திரும்பி ஊர்ப் பாதையில் நுழைந்ததும் பழகிய வீட்டு நாய் போல் இருள் வந்து மேலெங்கும் அப்பிக் கொண்டது.மாரியின் திருமணத்துக்கு வந்த போது இருந்தது போலவே இப்போதும் ஊரில் ஏதோ திருமணம் நடந்து கொண்டிருந்தது. சீரியல் விளக்குகளின் ஒளி மினுங்கிக் கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் இந்திப் பாடல் பாடிக் கொண்டிருந்த்தைக் கேட்டு சிரிப்பாக வந்தது.

மாரி வீட்டைல் அடைந்தோம். ட்யூப் லைட் பலகீனமாக எரிந்து கொண்டிருந்த வெளிப்புறத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவன் தோளில் ஏறி ஒரு சிறுவன் ஆடிக் கொண்டிருக்க, இன்னொருவன் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பிள்ளைகளாக இருக்கக் கூடும். எழுந்து வந்து முகம் மலர வரவேற்றான். அவன் மனைவி சமையலறையில் வேலையாய் இருப்பது தெரிந்தது. ஆள் தளர்ந்திருந்தான்.

சம்பிரதாய விசாரிப்புகள் முடிந்து, எழுந்து உள்ளே சென்றவன் திரும்பி வருகையில் கையில் மிக்சர் தட்டோடு வந்தான். “ என்னாயா ஆளே டல்லாயிட்ட?” என்றேன். அதேனோ எப்போதும் மாரிய மட்டும் “டா” போட்டு அழைக்க வாய் வந்ததேயில்லை. உருவம் காரணமாக இருக்கலாம்..என்னவோ போ. ஜட்ஜு எக்ஸாம் எளுதினேன். ஜஸ்டுல மிஸ்ஸாயி போச்சு. அடுத்து எப்பன்னு தெர்ல. வேலை டென்சன் வேற. பி பி கூட வந்திருச்சுன்னா பாத்துக்க” என்றான்.

“இந்த வயசுல பி பி எல்லாம் வரக் கூடாதுயா. என்னா போ நீயி. “ என்று சலித்துக் கொண்டேன். அவன் பிள்ளை ஓயாமல் சத்தம் போட்டபடி விளையாடிக் கொண்டிருந்தான். பத்திரிகையை கொடுத்து விட்டு விடை பெற்றுக் கொண்டு கிளம்பி வாசலுக்கு வந்ததும், “ந்தா.. ஒரு நிமிசம் இரு. வந்தர்ரேன்” என்றபைட் மாரி உள்ளே ஓடினான்.

சில நிமிஷங்கள் கழிந்து வந்தவன் கையில் சில பொட்டலங்களைத் திணித்தான். கைய நீட்டு என்றவன் ஒரு கயிற்றைக் கையில் கட்டி விட்டான். “ காசி போய்ருந்தன். பிரசாதம். இது கால பைரவரு கவுறு. கலியாணம் வேற நிச்சியமாயிருக்குது. இருட்டுல வேற போறீங்க. இத கட்டிக்க” என்றான்.மாரியின் கைச்சூடு குளிருக்கு இதமாக இருந்தது.

“செல்லா இங்க தான் பைபாஸுக்கு அந்தாண்ட இருக்கறானாம். பாத்துட்டு போயர்லாமா” என்றான் தினேசன்.அவனுக்குத் தொலைபேசி, அவனை பைபாஸ் முனைக்கு வரச் சொல்லி விட்டு அங்கே கொண்டு போய் வண்டியை நிறுத்தினோம்.அடுத்த சில நிமிடங்களில் செல்லா வந்தான். கல்லூரியில் பார்த்த எந்தச் சுவடுமின்றி முதிர்ந்திருந்தான். ஆனால் உற்சாகமாக இருந்தான். நெற்றியில் பெரிய சந்தனப் பொட்டு வைத்திருந்தான். ஓஷோவைப் பின்பற்றுவதாகச் சொன்னான். பத்திரிகையைக் கொடுத்ததும் அந்தத் தேதியில் பட்டணம் வரும் வேலை இருப்பதாகவும் கண்டிப்பாக திருமணத்துக்கு வந்து விடுவதாகவும் சொன்னான். பேச்சு எப்படியோ திசை திரும்பி கல்லூரியை பற்றி மாறியது. அடுத்த அரை மணி நேரம் பாலாஜி கல்லூரி வாத்தியார்களைப் பற்றி ஆற்றிய பலகுரலில் எல்லாரும் வயிறாரச் சிரித்தோம். கிளம்பும் போது பாலாஜியின் தொண்டை முழுவதுமாகக் கட்டியிருந்தது.

குளிரில் எனக்குமே தொண்டை லேசாக அடைக்கத் துவங்கியிருந்தது. ஆனால் மனசு மட்டும் ஏனோ தளும்பிக் கொண்டே இருந்தது.” டேய் எங்க வீட்ட போயி ஒரு வாட்டி பாத்துட்டு வந்தர்லாம்” என்றேன். பிரபு, தினேசன் , பாலாஜி மூவருமே ஆமோதித்தார்கள். அவர்களுக்கும் தான் எத்தனை நாட்கள் உண்டு உறங்கி, விளையாடி, கூடி களித்து ஒன்றாக திரிந்த இடம் அது. அவர்களுக்கும் நினைவுகளைக் கிளறி விட்டிருக்கக் கூடும்.

பைபாஸ் சாலையிலிருந்து ரயில் நிலையம் செல்லும் சாலை எந்த விதமான மாற்றங்களுமில்லாமல் அப்படியே பலகீனமான மஞ்சள் சோடிய வெளிச்சத்துடன் மனசை என்னவோ புரட்டியது. என் தெருவில் எதுவுமே மாறியிருக்கவில்லை. வீட்டு வாசலில் சாலையில் நின்றபடி, தெரு விளக்கொளியில் வீட்டை சற்று நேரம் வெறித்தபடி இருந்தேன்.” இங்க தான நாம கிரிக்கெட் ஆடுவோம்” என்று அவர்கள் மூவரும் அந்த வீட்டைப் பற்றியே தான் பேசிக் கொண்டிருந்தார்கள். செல்பேசியை எடுத்துப் படம் பிடிக்க முயன்றேன். இருளில் சரியாக வரவில்லை. கண் லேசாகக் கலங்கியது போல் தோன்றியது. பிரமை போல. சட்டென்று ஏதோ ஒரு நொடியில் உள்ளே போய் வீட்டை வாங்கியவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு சுற்றிப் பார்த்து விட்டு வரலாமா என்னும் ஆசை பூதாகாரமாக எழுந்து ஏனோ எழுந்த நொடியிலேயே அடங்கி அமிழ்ந்து போனது. கிளம்பி விட்டேன்.

வண்டியில் ஏறி நகரத் துவங்கிய பின்னும் அவ்வளவு வெட்ட வெளியிலும் வீட்டைப் பற்றின அலையலையான நினைவுகள் பின் தொடர்ந்து துரத்தி வந்து மூச்சு முட்டச் செய்தபடி இருந்தன.

வழியில் கடையில் சாப்பிடப் போன போது சாப்பாடு இறங்கவில்லை. ஏதோ பேர் பண்ணி விட்டு கிளம்பினேன். வீட்டுக்குப் போய் கட்டிலில் விழுந்த பின்னும் துரத்தல்கள் தொடர்ந்தன. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.காலையில் எழுந்திருக்கும் போது ஏழரை ஆகியிருந்தது.இன்று காரிமங்கலம் போவதாக ஏற்பாடு. கோபுவைப் பார்க்க, கல்லூரியில் என் அருகில் மூன்று வருசங்களும் அமர்ந்திருந்தவன்.

அவன் வீட்டை அடைந்ததும் வரவேற்றான். கல்லூரி படிக்காய்யில் அவன் குரலை வெகுவாகக் கிண்டல் செய்வோம். இப்போது அவன் கல்லூரியில் விரிவுரையாளன் ஆகி விட்டிருக்கிறான். காலம் யாரை எப்படி மாற்றுகிறதென்று சொல்லவே முடிவதில்லை. குரல் நல்ல கெட்டிப்பட்டிருந்தது. பிள்ளைகள் மருண்டு விழித்தன. மாட்டுப் பொங்கல் தினமாதலால் சுடச் சுட பொங்கலும் வடையும் கொடுத்தான். பத்திரிகை வைத்து விட்டு செந்திலைப் பார்க்கக் கிளம்பினோம்.

சாலையைக் கடந்து எதிர்ப்புறம் ஏழெட்டு கிலோமீட்டர்களில் அவன் ஊர். வீட்டு வாசலை அடைந்த போது சரியாய் எங்கிருந்தோ வேகமாக வந்தான். “இன்னிக்கு மாட்டுக்கு பூசை வெச்சிருக்கறோம் கீள காட்டுல. அங்க தான் இருந்தேன். நீங்கள்லாம் வரீங்களேனு வந்தேன்” என்றவன் கொஞ்ச நேரம் எங்களோடு கதைகள் பேசிக் கொண்டிருந்தான். எழுந்தவன் “ வாங்களேண்டா. நீங்களும்? பூசை இனிமே தான் போட போறோம். அஞ்சு பத்து நிமிசம் தான், இருந்துட்டு போவீங்க” என்றான். அவன் பின்னாலேயே நடந்தோம். வீட்டைப் பூட்டி விட்டு சரிவில் நடந்தான். இரண்டு நிமிடங்கள் தான். தூரத்திலிருந்தே அவன் அப்பா அம்மா தங்கை எல்லாரும் மாட்டுக்குப் பூசை தயார் செய்து கொண்டிருப்பது தெரிந்தது.

மாட்டின் உடம்பில் வண்ணங்களை அப்பியிருந்தார்கள். விளக்கேற்றி விட்டு மாட்டின் கழுத்தில் மாலையிட்டு விட்டு, கைச் செம்பின் தண்ணீரை மாட்டைச் சுற்றித் தெளித்தபடி “ பலியோ பலி” என்றான் செந்தில். அவன் அப்பா “ பொங்கலோ பொங்கல்” என்றார். மாட்டைச் சுற்றி நடந்தபடியே “ பலியோ பலி பொங்கலோ பொங்கலு” என்று குரல் கொடுத்தனர். இதே போல் மற்ற மாடுகளுக்கும் பூசை நடந்தது. பூசை முடிந்த பின், படையலிட்டிருந்த வெல்லம், புளிக் குழம்பு, சோறு எல்லாவற்றையும் ஒன்றாய்ப் பிசைந்து இலைத் துண்டில் வைத்து எங்களுக்குக் கொண்டு வந்து கொடுத்தான்.அவ்வளவு அற்புதமான சுவையுடனிருந்தது அந்தக் கலவை.

வெயில் ஏறியிருந்தது. மணியைப் பார்த்தேன். உச்சியை அடைந்திருந்தது. இரவு பட்டணம் கிளம்ப வேண்டும். நேரம் நிறைய இருப்பது போலிருந்தது. அடுத்த நொடியே நேரம் மிகக் குறைவாயிருப்பதைப் போல் தோன்றிப் பதறச் செய்தது.பத்திரிகையைக் கொடுத்து விட்டு விடை பெற்றுக் கொண்டு கிளம்பினோம். டவுனை அடைந்ததும் தினேசனும் பாலாஜியும் கிளம்பினர். நான் பிரபுவுடன் அவன் வீட்டுக்குச் சென்று அவன் அறையில் படுத்து விட்டேன்.

தூக்கமும் விழிப்புமற்றா ஒரு மாதிரியான அரை மயக்க மந்த நிலையில் புரண்டபடிக் கிடந்தவனை பிரபு கையில் காபியுடன் எழுப்பினான். காபியை வாங்கி உறிஞ்சியபடியே “ பணியாரம் சாப்பட்லாமாடா பையா?” என்றேன். “செரி இரு வாங்கினு வரேன்” என்று கூறி விட்டுச் சென்றவன் சிறிது நேரத்தில் கையில் பொட்டலங்களுடன் வந்தான்.திருப்தியாகச் சாப்பிட்டோம். நேரம் குறைந்து கொண்டே வந்தது.

“செரி நா வீட்டுக்கு போறன். என்னிய கொண்டு போயி வுடு” என்றேன். வீட்டில் என்னை இறக்கி விட்டு விட்டு “நைட்டு எத்தினி மணிக்குடா பஸ்ஸு” என்றான். பத்தே முக்காலுக்கு வண்டி. நீ வரியா.. இல்லின்னாலும் ஒண்ணும் ப்ரச்னயில்ல. நான் போய்க்கிறேன்” என்றேன். “இல்லல்ல. நான் வந்து கூட்டினு போறேன். பத்தே காலுக்கு வரன்” என்று கிளம்பினான்.

என் வீடிருந்த பகுதியில் இப்போது சதுர அடி என்ன விலைக்குப் போகிறதென்று கேட்க நினைத்தேன். கேட்கவில்லை.துணிமணிகளை எடுத்து அடுக்கிக் கொண்டு கிளம்பினேன். பழகிய பூனைக் குட்டி வீட்டை விட்டுக் கிளம்ப விடாமல் கால்களைச் சுற்றுவது போல கண்ணுக்குத் தெரியாமல் ஏதோ நினைவுச் சுழல் என்னைச் சுற்றிக் கொண்டே இருந்தது ஏதோ அசவுகரியமாக இருந்தது. பட்டணத்தை நினைத்து ஆயாசமாக இருந்தது.

இரவு உணவு எதுவும் வேண்டாமென்று சொல்லி விட்டேன். நேரம் எப்படித் தான் போனதோ தெரியவில்லை.பிரபு வந்து ஆரனடித்தான். வீட்டில் பெரியவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினேன். பேருந்து நிறுத்தம் அடைந்ததும் “ நீ வேணா கெளம்புடா பையா. உங்கூட்ல திட்ட போறாங்க” என்றேன். கொஞ்ச நாட்களுக்கு முன் தான் குடித்து விட்டு வண்டியிலிருந்து விழுந்ததால் அவன் இரவில் எங்கே போனாலும் கண் கொத்திப் பாம்பாய் அவன் வீட்டில் கவனித்து வந்தனர். “ அதெல்லாம் ஒண்ணும் பரவால. உன் கூட தான் வந்துகுறேன்னு தெரியும் .ஒண்ணியும் சொல்ல மாட்டாங்க” என்று பிடிவாதமாய் நின்றான்.

வண்டி சரியான நேரத்துக்கு வந்தது ஏனோ மனசுக்கு வருத்தமாக இருந்தது. ஏறி அமர்ந்து கையசைத்தவுடன் அவன் நகர்ந்தான்.ஊரின் குளிர் முகத்தில் பட்டால் தேவலாம் போலிருந்தது. குளிர் சாதனப் பேருந்தென்பதால் சன்னல்கள் திறக்க முடியாதபடி அமைக்கப்பட்டிருந்தன. பேருந்தின் குளிர் சாதனம் மனசுக்கு ஒப்பவில்லை. மெல்லப் பேருந்து நகரத் துவங்கியது. இருள் படிந்திருந்த திறக்க முடியாத சன்னலின் வெளியே ஊர் கொஞ்சம் கொஞ்சமாக பின் தங்கி நழுவத் துவங்கியிருந்தது.