சிறுகதை

ஏசுவடியான் – வைரவன் லெ.ரா சிறுகதை

நகரின் மையத்தில் இப்படி ஒரு காடா? இல்லை பொறுங்கள்! காட்டில் தான் நகரம் இருக்கிறது. பெரிய கல்தூண்கள் கொண்டு எழுப்பப்பட்ட தேவாலயம். எதிரேயே பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி. சுற்றிலும் சோலைகள், அங்கே ஒரு அசோக மரம், ஒன்றல்ல பல. அதன் மூடிலே கல் பெஞ்சில் ஏசுவடியான் அமர்ந்திருக்க, அருகிலே திரேசம்மாள் மண்டியிட்டு ஜெபித்தபடி இருந்தாள். ‘சர்வவல்லமை படைத்த பரமமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே… ‘ தேவாலய ஒலிபெருக்கி சப்தங்களை பரப்பிக்கொண்டிருந்தது. பின் பல குரல்கள் ஒரே அலைவரிசையில் ‘ஆஆஆ ஆ ஆமேமேமேமேன்’ என்றது. ‘திரேசா, சம்மணம் போடு. ஆண்டவரு மன்னிப்பாரு. ராவுல காலு உலையினு என்கிட்டே சொல்லப்பிடாது’. திரேஸ் எதுவும் கூறாமல் கண்களால் ஏசுவடியானை நோக்கியபடி, ஒரு கையால் மண்ணை ஊன்றி கால்களை மடக்கி சிறுபிள்ளை போல அமர்ந்தாள். ‘கானா ஊரில், ஒரு கல்யாண வீட்டிலே, நம் தேவகுமாரன்…’ பாஸ்டர் ஞானசேகரன் தேவாலயத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

“நம்ம வீட்டுலயும் அற்புதம் நடந்துச்சு தெரியுமாட்டி திரேசி. ஆண்டவருக்கு ஸ்தோத்திரம். ” ஏசுவடியான் கொப்பளித்த சிரிப்பை மீண்டும் உள்ளே தள்ளியபடி கூறினார். நக்கலான நாக்குமடிப்பு அவளுக்கு வெட்கத்தை கொடுத்தது. சுருக்கங்கள் சிவந்தது. நீலகண்டப் பிள்ளை தேவசகாயம் ஆகாவிட்டால், ஏசுவடியான் உண்டா? இல்லை பக்கத்தில் சப்பணங்கால் போட்டு அமர்ந்திருக்கும் திரேசம்மாள் மணமுடித்து, வாழ்ந்து அனுபவித்து, கர்த்தரின் பாதத்தில் இந்த கல்கோயில் ஆலயத்தில் அசோகமரத்தின் காற்றைத்தான் சுவீகரிக்க முடியுமா? எப்படியோ, இதென்ன புராணக்கதையா? ஏசுவடியான் திரேசம்மாள் கதை.

குமாரகோயில் சமீபம், மேலாங்கோடு போகும் வழி. அக்கா தங்கச்சிமாரின் கோயில் இங்கேதான். கருக்கள் நேரம் அங்கே போக ஆண்கள் உண்டா? போத்தி செல்கிறாறே, அவருக்கு குல மாடன் துணையுண்டு. நீலகண்டன் போவான், சிறுவனாய் மாங்காய் எடுக்க போவதுண்டு. மாங்காய் எடுக்க போய், சிலச் சமயம் புளியம்பழமும் கைநிறைத்து வருவதுண்டு. விசாலாட்சியம்மாள் கஞ்சிக்கு, மாங்காயை உப்பில் ஊறப்போட்ட துண்டையும், புளியை கரைத்து கொஞ்சம் காய்ந்த வத்தலும், கருவேப்பிலை, கடுகுயிட்டு தாளித்து புளித்தண்ணியுமாய் கொடுப்பாள். வயிறுக்கு கஞ்சி போதும், கஞ்சிக்கு அரிசி வேண்டும். எப்பேர்ப்பட்ட குடும்பம், குமாரக்கோயிலின் முன்வாசல் விரியும் நேர்ச் சாலையில் கிணத்தடி கொண்ட வீடு நீலகண்டனின் அய்யா ஆறுமுகம் பிள்ளையின் வீடு. ஆறுமுகம், கட்டியவள் விசாலாட்சியம்மாள், மகன் நீலகண்டப்பிள்ளை, மொத்தமாய் மூவர். கூடவே உடன்பிறந்தார் என மொத்தக்குடும்பமாய் தலைதலைமுறையாய் நெற்புரை நிறையும் மூட்டைகளோடு, வீட்டின் பின்னே வெண்ணிப்பறை முட்ட தேங்காயையும் கொண்ட வீடு. சொத்து சுகம் இருக்க ஒருத்தி பற்றாமல், எங்கெல்லாமோ குடித்து சல்லாபித்து நோயோடு வந்தான் ஆறுமுகம். ஆறுமுகம் உடன்பிறந்தார் ஆறு, நான்கு ஆம்பிள்ளையாள், ரெண்டு பொம்பளையாள். நோயோடு வந்தவனின் சொத்து ஐந்தாய் பிரிய, மேலாங்கோடு பிரியும் சந்திப்பில் ஓரமாய் கால்சென்ட் பங்கில் ஓலைக்குடிசை உதயம் ஆயிச்சு. வந்தவர்கள் ஆறுமாதம் தாண்டும் முன்னே மூவரின் எண்ணிக்கை ரெண்டாய் ஆனது. ஆறுமுகம் பரலோகப்பதவி அடைந்தான். பின்னே கஞ்சிக்கு அரிசி, தம்பிமாரின் கருணையால் அவ்வப்போது வரும். பண்டிகைக்கு காய்கறி கொஞ்சம் கருணை மீறி கிடைக்கும். யார் கை தடுக்கிறதோ.

நீலகண்டன் அங்குள்ள பள்ளிக்கு பின்னால் புளியம்பழம் பறிக்க போய், நல்லவேளை கீழே விழுந்தான். கீழே விழுவது நல்லவேளையா? அன்னம்மாள் கண்ணில் அவன் பட, வாஞ்சையோடு தலையை தடவிக்கொடுத்து அவன் கதையை கேட்டாள். பெரிய கதையா? எல்லோரும் அறிந்த குடிகார மகனின் கதை. ‘படிக்க வெய்க்கேன் படிப்பியாடா’, ‘பள்ளிக்கூடம் போலாமா? அப்டினா படிப்பேன்’. விசாலாட்சியும் சரியென்றாள். படித்தான், நீலகண்டன் தேவசகாயம் ஆனான். கிறிஸ்துவன் ஆனான், யார் சொல்லியும் அல்ல. சித்தப்பா ஒன்றுக்கு நான்காய் இருந்தும், கால்வயிறு மாத்திரமே நிறையும், படிப்பும் ஆகாரமும் கிடைக்க, கூடவே மெசியாவின் கதையும், பழைய ஏற்பாடும் படிக்க, அவன் தேவசகாயம் ஆனான். கிடைத்த கணக்காளர் வேலையில் உடும்புப்பிடி. அற்புதம்மாள் அவனோடு படித்தவள். அம்மையின், அய்யாவின் பெயர் தெரியாதவள். சர்வம் சந்தோசம், கல்யாணம். ஏசுவடியான் பிறந்தான், ஒரே மகன். சகாயம் சொல்வார் ‘நீ யேசுக்க மவன்லா. அதானாக்கும் உனக்கு ஏசுவடியான்னு பேரு’.

‘தேவனாலே கூடாத காரியம் எதுவுமில்லை’

ஏசுவடியான் எதிலும் தனி, படிப்பிலும் முன்னே, விளையாட்டிலும் முன்னே, கூட்டுக்காரன் சொல்லுவான் அவனிடம் ‘நீ வலிய காரியமாக்கும். ஊரெல்லாம் சுத்தி, மாங்கா களவாண்டாலும். ராவு முழிச்சு படிக்க’. ரவி வாத்தியார் சிலநேரம் சொல்வதுண்டு ‘கலப்புக்கு பிறந்த பிள்ளைக்கு விஷேஷ மூளைலா. விளைச்சல் அதிகம்’. இது பாராட்டா, வசவா, ஏசுவடியானுக்கு என்ன தெரியும். வளர்ந்த பிராயத்தில் தெரிந்தது ரவி வாத்தியாரின் வார்த்தைகள் நளியென்று. அவனும் வாத்தியார் ஆனான், குமாரக்கோயில் ஆறுமுகம் பிள்ளையின் வழி, புத்தளம் தோப்பு வீட்டில் விஸ்தாரித்தது. வந்த குடும்பம் ஆறுமுகம் எனும் பேரோடு நின்றது. ஏசுவடியான் கைகளில் விவிலியம் ஏந்தாத இரவில்லை. அப்பாவின் முன்னே காலை, மாலை ஜெபம்.

‘என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்’.

இதற்கிடையே எதிர்த்த வீட்டு சுதாகரனின் மகள் திரேசியின் குட்டிக்கோரா பவுடர் வாசம், அத்தோடு அவளின் வியர்வை மணம் அவனை அலைக்கழித்தது. ‘என்ன ஐசுவரியம் நிறைஞ்ச முகம். அருளு உண்டு அவள கட்டினா. சிலப்பம் அவள பாக்கையில நிலவு காலைல வந்துட்டோனு தோணும்.’ அவனின் கவிதை இரவுகள், கூட்டுக்காரனின் கதறல் புத்தளம் தோப்பு தாண்டி மணக்குடி கடலில் கலக்கும். இதெல்லாம் சுதாகரன் அறியாமல் போகுமா? ஈத்தாமொழி தேங்காய் வியாபாரி. வாத்தியார் வீட்டு சம்பந்தம். என்ன கேள்வி கிடக்கிறது? ஆகட்டும் பார்க்கலாம் என்பது போல நடந்தது புத்தளம் திருச்சபையில் பங்குத்தந்தை லாசரஸ் தலைமையில் ‘இம்மையிலும் மறுமையிலும், சுகத்திலும் துக்கத்திலும், உனக்கு நானாய், எனக்கு நீயாய் இருவருக்கும் சம்மதம்’ சுபமங்களம்.

ஏசுவடியானுக்கு சிறுவயதில் அப்பாவை கண்டாலே நடுக்கம், கருக்கள் நேரம் கையில் புத்தகம் இல்லையேல், அப்பனின் கையில் பிரம்பிருக்கும். இதற்காகவே கோட்டார் வீதி போய் பிரம்பு வாங்கிவந்தார். அதன் விலை இரண்டு ருபாய், போய் வரச்செலவு நான்கு ருபாய். புளியம்பழம் பறித்த கையில் புத்தகங்கள் கொடுக்க இவனுக்கு அன்னம்மாள் தேவையில்லை. அப்பன் இருக்கிறானே! கூடவே ஞாயிறு இறைச்சியும். வாரம் மூன்று நாள் நெய்மீனோ, சாளையோ, நெத்திலியோ, பாறத்துண்டமோ குழம்பில் கொதிக்கும். இப்படியிருக்க படிக்க வேண்டாமா? பிரம்படியின் வினையல்லவோ இவனும் பிரம்பை கையில் எடுத்தான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

கல்யாணம் நடக்கும், அத்துணை கனவுகளும் கிறக்கங்களும் பெண்ணுடலை முதல் தடவை கண்டதும், மனம் காமவிடுதலை அடையும். பின் காணக்காண லயிப்பும் குறையும், இயக்கமும் இயந்திரம் போல வாரம் ஒருமுறை முறைவைத்து நடந்தாக வேண்டும். ஏனோ! காதல் கசக்கும். வாழ்ந்தாக வேண்டுமே. எங்கும், இன்னார் முன்னிலையில் ஆண்டவரையும் சேர்த்துதான், நடந்த திருமணம் வாழும் போது கேட்பார் நாதியில்லை. ஏசுவடியான், திரேசி அப்படியில்லை. குட்டிக்கோரா மணம் புத்தளம் தோப்பு வீடு நிரம்பும். ஏசுவடியான் தெங்கின் மூடில் இருந்தபடி நோக்கிய பார்வையெல்லாம் அறியாதவளா திரேசம்மாள். பெண்டிருக்கே உள்ள வெட்கம் ததும்பி அவளும் கண்டிருக்காளே, எதிர்த்த வீட்டு வாத்தியாரை. புத்தளம் திருச்சபையில் லாசரஸிற்கு விருப்பமானவன். கையில் மைக் பிடித்து பாடும் பாடல்கள், தமிழ் வாத்தியார் அவனாய் வரியெழுதி பாடுவான்.

‘கொல்கொதா மலையும் அழுதிருக்கும்,

எத்தனையோ சிலுவை

ஏந்திய மார்பு இது.

உன் இரத்தம் பட்டதும்,

என் பாவம் கரைந்தது’.

குருத்தோலை நாளில் லாசரஸ் பின்னே இவனே செல்வான். எங்கே நடக்கிறேனோ, அங்கெல்லாம் முன்னே உன் பாதச்சுவடு வேண்டும். திரேசம்மாள் அப்படித்தான். அவன் ‘என் பவுனே’ என்பான், பதிலுக்கு அவள் ‘நீரு என் வைரம்’ என்பாள். புத்தளம் ஊரில் எங்கு கல்யாணமோ, லாசரஸ் அடுத்து, பத்திரிகை வாத்தியார் வீட்டுக்குத்தான். அவரும் சும்மா இல்லை, கொடுப்பதில் கர்ணனின் பக்கத்து வீட்டுக்காரர். புத்தளம், தெங்கம்புதூர் யாராய் இருந்தால் என்ன, படிப்பிற்கு இல்லை என சொல்லாதவர். பின்னே, அன்னம்மாள் படிப்பை கொடுத்த நீலகண்டன் (எ) தேவசகாயத்தின் புதல்வனாயிற்றே.

பறக்கை பள்ளிக்கூடத்திற்கு வாத்தியார் பஜாஜ் செட்டாக்கில் செல்வார். தமிழ் வகுப்பில் பிடித்தும், பிடிக்காதுதுமாய் சரிபாதி கூட்டம் இவரின் குரலில், பாடத்திட்டத்தில் உண்டோ இல்லையோ இப்பாடலை கடக்காமல் படிப்பை முடித்திருக்க முடியுமா? “கம்பராமாயணத்தில் ஆரண்யகாண்டத்தில், மாரீசன் அழகிய புள்ளிமானா மாறி சீதைய அழகில மயக்கி, ராமனை ‘சாமி, இம்மானை மனையாளுக்கு பிடித்து தர கேட்க, ராமன் அதை பிடிக்க போறான், மாரீசன் கள்ளன், அவன் அய்யனின் குரலில் ‘அய்யோ சீதை’ எனக்கூக்குரலிட” இங்கே அய்யோ என ஏசுவடியான் அடிவயிற்றில் இருந்து குரலெடுத்து ராமனாய் போல அவனும் மாற, பின் வழக்கமான பாடலோடு சீதையின் துயரத்திற்கு வருவான். “சீதை பாடுகிறாள்

“பிடித்து நல்கு, இவ் உழை”

என, பேதையேன்

முடித்தனென், முதல் வாழ்வு’

என, மொய் அழல்

கொடிப் படிந்தது என, நெடுங்

கோள் அரா

இடிக்கு உடைந்தது என,

புரண்டு ஏங்கினாள். இங்க உழைனா என்ன, உழை னா மான், அழகான மானை பிடித்து நல்கு, எனக்காக நீரே பிடிச்சு தாரும் என் சுவாமி. இப்படி சொல்லிட்டேனே, எனக்கு புத்தியில்லயா, மண்டைக்கு வழியில்லாத பொம்பளையாய்ட்டேனே. முடிஞ்சிட்டு என் வாழ்க்கை. மொய் அழல், அழல்னா நெருப்பு. கொடி படிந்தது. நெருப்பு கொடிய பிடிச்சி எரிச்சது போல, நெடுங்கோள் அரா. அரானா பாம்பு. இப்போ தெரியாடே, நாம அரணைணு சொல்லுகேமே. அரா எங்க இருந்து வந்திருக்கு. அரா பாம்பு, அரணை பாம்பு மாறி இருக்க இன்னொன்னு. கம்பன பாத்தியிலா மக்ளே. எப்படி பாடுகான்.காட்டுக்கு நடுவுல நிக்கிற சீத கொடி, பாம்பு, நெருப்பு அதான் காட்டுத்தீ, எல்லாமே காட்டுல உள்ளதே பாட்டுல வருகு. உவமைக்கு எங்கேயுமே போகல. காட்டுக்குள்ள சொல்ல தேடுகான். சொல்லு எத்தனையோ சொல்லு, நாம பேசுறது கொஞ்சம். கம்பன் அத்தனை சொல்ல உபயோகப்படுத்துகான். மக்ளே, நம்ம கன்யாரி தமிழு. கண்டவன் சொல்லுகானு, பேசாம போய்டாதீங்க. பேசுனாதான் மொழி நிக்கும். புரிஞ்சா, நீங்க எல்லாரும் படிக்கிற பிள்ளைகளு நம்ம மொழிய பேசணும். கம்பன், யாரு. அவன படிங்க. நானும் இன்னைக்கும் வீட்டுல போய் புத்தகத்த எடுக்கேன். மறந்திர கூடாதுலா. பைபிளும் ஒன்னு, கம்பராமாயணமும் ஒன்னு. சொல்லணும்.” இங்கே எதை மீறியோ வெப்ராளப்படுவான். பின் நிதானமாய் “உங்கள்ள தமிழ் மேலே படிக்கணும் நினைப்பு உள்ளவன் கம்பன கட்டாயம் படிக்கணும். கொடுங்கோள், கோளு அப்படினா என்ன, மனசுலாச்சா. உருண்டையா தடி கணக்கா. கொடுன்னு ஒரு சொல்லு இங்கே உபயோகப் படுத்திருக்கான். கொடுன்னா கொடுமையான தடி கணக்கா பாம்பு. மலைபாம்புன்னு நினக்கேன். இடிக்கு உடைந்தது, நல்ல சத்தமா கேக்கிற இடிக்கு பயந்து கட்ட மாறி கிடக்காம். அதே மாறி புரண்டு புரண்டு வருத்தபடுகா” சொல்லி முடிக்கும் போது கம்பனாய் நிற்பான். ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்கள் வியந்து நிற்பார்கள். அப்படி ஒரு விளக்கம் கொடுப்பான். பத்தாம் வகுப்பில் முதல் பெஞ்சில் இருக்கும் ஜோசப், கம்பனில் மயங்கி புத்தளத்திற்கு சைக்கிளில் செல்வான் ஏசுவடியான் வீட்டிற்கு கம்பராமாயணம் கேட்க. கம்பனின் வரியா, இல்லை ஏசுவடியானின் விளக்கமா.அவனே அறிவான் உண்மையை.

முத்தாய் இரண்டு ஆண்பிள்ளைகள். ஜெபநேசன், மரியநேசன். கான்வென்டில் படிப்பு, படிப்பிற்கும் குறைவில்லை. ஜோசப் வருவதில் அவர் பிள்ளைகளுக்கு மனக்குறை உண்டு “அப்பா, நல்ல கொஞ்சுகீங்க அவன. எங்கள படிச்சியா, இல்லையானு மட்டும் கேக்கீங்க”. “மக்கா உங்களுக்குத்தான் எல்லாம், கம்பன பாடினா, லயிக்கணும். ரெண்டு பேரும் கேக்க மாட்டுக்கீங்க. நாள் முழுக்க வீடியோ கேம் தான்”. “போப்பா, கம்பன் கிம்பண்ணு. நீங்க அவனையே கொஞ்சுங்க”. “ஏண்டே உங்கள நான் கொஞ்சலையா, நீங்க கேட்டீங்க, வீடியோ கேம் வீட்டுல இருக்கு. அவனுக்கு கம்பன பிடிச்சிருக்கு. நல்ல பய. நல்லா வருவான்” என்றார் மக்கமாரை தூக்கியபடி ஏசுவடியான்.

மூத்தவன் இன்ஜினியர் ஆனான், இளையவன் அவன் பங்கிற்கு டாக்டர். மக்கமாரின் கல்யாணம் புத்தளம் தோப்பு வீடு முழுக்க கோலாகலம். பந்தலும், மின்விளக்கு அலங்காரமும், மனம் நிறைந்த பந்தியுமாய், வந்தவரின், வாழ்த்தியவரின் மனதில் என்றுமுண்டு. இரண்டு மருமகளும் காரோடு வந்தார்கள். பவுசும் அதிகம், மருமகள் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை, மணாளனை மயக்குவதில். மயங்கினாள், ஆகவே மயக்குகிறாள். பெயரனும், பெயர்த்தியும் எடுத்தாச்சு. திரேஸ், ஏசுவடியான் உறங்கவும் சொல்ல ஆரம்பிப்பாள் “அத்தைனு மரியாதைய கேக்கனா. வயசுக்கு கொடுக்கணும். டாக்டரும், இன்ஜினியரும் பேசுகானுகளா. ஏங்க நீங்க எதுக்கு. உங்கள மதிக்காளா”. “எட்டி நாம அப்பனுக்கும், அம்மைக்கும் வயசு காலத்துலயும் பயந்தோம். செல்லம் கொடுத்து வளத்தோம். எங்க அப்பா குரலுக்கு நா நடுங்குவேன். இப்போ உள்ள பிள்ளைகளுக்கு வேல அதிகம். கோபமும் அதிகம். நாம பிராயத்துல பண்ணாதுதா. அவனுக என் குரலுக்கு பயப்படுகானுக. அவனுக மரியாதை போதாதா. கிடட்டி சும்மா. என் பவுனு. கோவத்துல கூட கண்ணம் சிவக்கே. வயசு ஆயி எனக்கு பல்லு அங்கயிங்க ஆடுகு. நீ குமரு மாரில இருக்க. அத்தை என்ன இந்த வயசுல நம்மல விட அழகா இருக்கேன்னு புகைச்சலா இருக்கும்” என்றபடி சிரித்தார். திரேசுக்கு தெரியும் அவரின் மனக்குறை இருந்தும் தன்னை சமாதானப்படுத்தும் ஏசுவடியானின் காலை மெதுவாய் பிடித்துக்கொடுத்தாள் “இப்போ காலு உளைச்சலு இருக்கா”. “அதுபாட்டுக்கு காலுல மட்டும் இருக்கு, நல்லவேளை மேலே ஏறி முதுகு, கழுத்துனு வரல” மீண்டும் அதே சிரிப்பு. இப்போது திரேசின் முகத்திலும்.

கிடைக்கும் பென்சன் பணத்திற்கு குறைவில்லை, நேரத்திற்கு தேவாலயம். பெயரன், பெயர்த்தியோடு கொஞ்சம் விளையாட்டு. அப்புறம் பைபிள், சிலநேரம் கம்பராமாயணம். மீதிநேரம் எல்லாமுமே மொத்தமாய் திரேசம்மாள் ‘என் பவுனு திரேஸ்’. ஜோசப் எப்போதாவது இவ்வழியே வந்தால் வாத்தியாரை காணமால் போன நாளில்லை . வந்தால் கம்பனின் மணம் புத்தளத்தில் கூடி வீசும். காலம் நகரும், அதானே அதன் வேலை. பென்சன் பணம் மாத்திரம் போதவில்லை, நேரம் நிறைய இருக்கிறது, வீட்டிலேயே இருப்பதால், அடுத்தவனின் கஷ்டமும் இந்த கிழவனின் கண்களில் படுகிறதே. மக்கமார் கொடுப்பது கொஞ்சம்தான், சாப்பாட்டிற்கு குறைவில்லை. சொத்து எல்லாம் அவரவர் பெயரிலே பதிச்சாச்சு, அவரவர் பாடு. புத்தளம் தாண்டியும் மணக்குடி போகும் வழியில் மணக்காவிளையிலும் தோப்பும், வீடும் உண்டு. புத்தளம் திருச்சபையில் முதல் குடும்பம், சொத்துள்ளவன் ஆள்கிறான். இதெல்லாம் இருந்தும் பணமும், தங்கமும், இன்னும் இன்னும் என்கிறதே. பாவம் ஏசுவடியான் செல்லம் கொடுத்து வளர்த்த பிள்ளைகள். கொஞ்சம் கஷ்டத்தையும் பழக்கியிருக்கலாம். அண்ணனுக்கும் தம்பிக்கும் கொடுக்கும் கையில்லை. அவர்களை சொல்லி குற்றமில்லை, பழக்கமில்லை. எல்லாம் கிடைத்தது, புத்தளம் தோப்பு வீட்டில் கிடைக்காததா! தாத்தா தேவசகாயம் சேர்த்த சொத்து, அப்பா ஏசுவடியான் தயவால் வளர்ந்தது. கேட்டதும் கிடைக்கும், கேட்காததும் கிடைக்கும் ஜெபநேசன், மரியநேசன் வாழ்த்தப்பட்டவர்கள். கம்பனை கையில் எடுக்கும் போதெல்லாம் மருமகள்கள் கேட்பார்கள் “எதுக்கு மாமா, இந்த புக். இது சாத்தான் கதை. எங்க சபையிலே சொன்னாங்க. இந்து கடவுள் எல்லாம் சாத்தான். எங்க அப்பா, மாடன் கோயிலை பாத்தாலே ஓடிறணும்னு சொல்லிருக்கு. நீங்க இந்த எழவ நடுவீட்டுல படிக்கீங்க”. “மக்கா, படிச்ச பிள்ளைகளு நீங்க. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எப்பவும் உண்டு. ஆனா, இதெல்லாம் இலக்கியம். கடவுள் எல்லாருக்கும் உண்டு. நமக்கு ஆண்டவரு மாதிரி, அவங்களுக்கு ராமரு. ஆனா கம்பராமாயணம் தமிழ் தெரிஞ்ச எல்லாரும் படிக்கணும். நீங்க சொல்லுங்க. உங்களுக்கும் சொல்லி தாரேன். நா தமிழ் வாத்தியாருமா”. ஆண்டவர் என்ன பாவம் செய்தார், அவர் இருந்தால் சொல்லியிருப்பார், இப்போது ஏசுவடியான் மருமகள்களை திருத்த யாராயிருக்கிறார். “உங்க அப்பா கண்ட புக்லாம் வீட்டுல கத்தி பாடுகாரு. கர்த்தரு இருக்க வீட்டுல சாத்தானை கூட்டுகாரு”. விதியோ என்னவோ டாக்டருக்கும், இன்ஜினியருக்கும் வேலை கொஞ்சம் கரைய, கட்டியவளின் வாக்கு ராத்திரி கூட, மனம் கனமேறியது. தவிர்த்து அப்பனின் கொடுக்கும் குணமும்.

‘எங்கள் அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர், எங்கள் சத்துருக்கள் எங்களை பரியாசம் பண்ணுகிறார்கள்’.

விளைவு, அப்பனை கேள்வி கேட்கும் பிள்ளைகள் “அப்பா, நீங்க கொடுக்கது தப்பு சொல்லல. இருக்கத கொடுப்போம். நம்ம சொத்தை அழிக்காண்டாம். சும்மா கிடங்க வீட்டுல. எம்பொண்டாட்டி தங்கம் போல தாங்குகாளே. மதிக்காண்டாம். அவளும் படிச்சவத்தான்’ என்றான் மரியநேசன். “தம்பி சொல்லத்துல என்ன தப்பு. நமக்கு அப்புறம் மத்தவங்களுக்கு. எம்மாமியார் வீட்டுல கேக்கா, தூக்கி தூக்கி அடுத்தவனுக்கு கொடுத்தா, உமக்கு என்ன கடைசில. உங்க அப்பனுக்கு…இல்லப்பா, வேண்டாம். உங்க மரியாதை கெடவேண்டாம். வீட்டுல இருங்க. வருஷம் ஒருவாட்டி வேளாங்கன்னி போங்க. யாரு வேண்டாம்னு சொன்னா. போதும். இருக்க சொத்தை காப்பாத்திக்கிடனும், அதான் புத்திசாலித்தனம். அம்மைக்கு எதுக்கு எடுத்தாலும் கோவம். அவளுக்கு மண்டைக்கு வழியில்ல” இது ஜெபநேசன். பொறுத்தவரை பேசவைத்தது கடைசி சொல். “ஏம்ப்பா, எம்பிள்ளைகள் பேசுகு. எத்தனை நாளாச்சு உங்க குரல கேட்டு. எம்பொண்டாட்டிக்கு மண்டைக்கு சரியில்லையா? லேய் பிள்ளைகளுக்குன்னு வாழுகா. பவுனுல அவ. அழுக்கில்ல அவ மனசுல. உங்க வழப்பு சரியில்ல. தப்பு நான்தான். போறோம். எங்கயோ போறோம். ஒருத்தனும் வரக்கூடாது, பின்னாடி. எட்டி நீ உள்ளத சொன்ன. நான்தான் கிறுக்கு. பிள்ளைகளு அப்படி இப்படின்னு சொல்லிட்டேன். கிடைக்கத எடு, எம்பணத்துல வாங்குனது மாத்திரம். நடட்டி. சகாயம் பிள்ளை நா. என்ன எழவு தெரியும் அவனுகளுக்கு, நான் தப்பு” வெளியிறங்கி நடக்கும் வரை யாரும் தடுக்கவில்லை. பழைய திருச்சபை தந்தை லாசரஸ் வெட்டூர்ணிமடம் அருகே இல்லம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். ஏசுவடியான் ஓரிருமுறை சென்றிருக்கிறார். அங்கே சென்றார்கள். நிம்மதி.

அங்கே கம்பன் மீண்டும் பிறந்தான். ஞாயிறு கல்கோயில் தேவாலயத்தில் உள்ளே கொஞ்ச நேரம். மீதி திரேசுடன் இந்த அசோகமரத்தின் நிழலில் கொஞ்சம் பேச்சு, நிறைய சிரிப்பு. “நம்ம வீட்டுல தேவகுமாரன் வந்தாரோ என்னவோ, திராட்சை ரசம் வெட்டூர்ணிமடத்துல கிடைக்கு, இதுவும் அதிசயம் தானே. எத்தனை நாளாச்சு கம்பன பாடி. அதிசயம்” என்றார் ஏசுவடியான் கல்பெஞ்சில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து. “எப்பா, கர்த்தரே. நீரு ஊமையாட்டும்ன்னு நினச்சுட்டேன். அந்த வீட்டுல இருக்க வர. என்னமா பாடுகீறு. அதே தொண்டை. உழை, அரா ன்னு. எனக்கு நிம்மதிய கொடுத்த ஆண்டவரே”. இதற்கிடையே தேவாலயத்தில் இருந்து ஆட்கள் வெளியே வர, ஒருவர் நேர்த்தியான உடையில் இவர்களை நோக்கி வர. இருவரும் புரியாமல் அவரையே நோக்கினர் “சார், என்ன ஓர்மை உண்டா. நா ஜோசப், கம்பராமாயணம் படிக்க உங்க வீட்டுக்கு சின்னதுலே வந்தேனே”. “ஜோசப் இருக்கு, ஓர்மை இருக்கு. வீட்டுல எல்லாம் சுகமா.”, வழக்கமான உபசரிப்பு எல்லாம் முடிந்து திரேஸின் வாயால் முழுக்கதையையும் கேட்டு ஜோசப் அதிர்ந்தான் “சார், என் வீட்டுக்கு வாங்க நான் பிள்ளை போல பாத்துக்கிடுகேன்”.கண்கலங்கியிருக்கிறதா ஆம்? நிறைந்திருக்கிறது. “அதுலாம் வேண்டாம். நல்லாயிருக்க, கர்த்தருக்க கிருபையில உனக்கு குறையில்லை. முடிஞ்சா வெட்டூர்ணிமடம் எங்க ஹோமுக்கு வா. முடிஞ்சத அங்க செய். எனக்கு அது போதும்”. விடைபெற்று ஜோசப் நகர்ந்தான், உள்ளுக்குள் ஒரே எண்ணம் நாளை அந்த ஹோமுக்கு செல்லவேண்டும். அவர் கேட்டதை செய்ய வேண்டும். சட்டென நின்றான், அவரை நோக்கி ஓடினான் “சார், எனக்கு ரெண்டு பிள்ளைகளு. உங்க ஹோமுக்கு அனுப்புகேன். கம்பராமாயணம் சொல்லி கொடுப்பீங்களா”. “அதுக்கென்ன அனுப்பு கம்பன பாட புண்ணியம் வேண்டும்”. சுருக்கங்கள் சிவந்த அதே புன்னகையோடு தன் பவுனைப் பார்த்தாள் திரேசம்மாள்.

கடல் – கமலதேவி சிறுகதை

அப்பொழுதுதான் நேர்க்காணல் முடிந்திருந்தது. பணிநியமன ஆணையை பெற்றுக்கொண்ட நித்யா திருச்சி சையதுமிர்சா அரசினர் பள்ளி மைதான மரநிழலில் நின்றாள்.மறுபடி மறுபடி கோட்டைப்பட்டினம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை என்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.இப்படி ஒரு ஊர் இருக்கா? கோட்டை இருக்குமோ?

பட்டினம், பாக்கம் என்ற சொல் கடற்கரை நகரை குறிக்கும் என்று தேர்வுக்கு படித்தது நினைவில் எழுந்தது.கடற்கரை ஊரா என்று மனதிற்குள் தூக்கி வாரிப்போட்டது.அந்த நேரத்திலும் பொன்னியின் செல்வனின் கோடியக்கரை மனதில் வந்து தொலைத்தது.இன்னும் ஒரு மதிப்பெண் எடுத்திருந்தால் திருச்சிக்குள் எங்காவது நுழைந்திருக்கலாம்.

லலிதா எரிச்சலாக முகத்தை சுருக்கியபடி வந்து அருகில் நின்றாள்.

“நித்யா…எனக்கு அத்தானி ங்கற ஊர்.மணல்மேல்குடி தாலுக்கா.இதெல்லாம் எங்க இருக்கோ.அத்தான்..அத்தான்னு பழைய பட டயலாக் மாதிரி இருக்கு,”

புடவையை சரி செய்தபடி நித்யா சிரித்தாள்.இருவரின் அப்பாக்களும் பேசி சிரித்தபடி உற்சாகமாக வந்தார்கள்.

“புதுக்கோட்டை தானே சார் பாத்துக்கலாங்க..இந்த காலத்து பிள்ளைங்க எங்கெங்கியோ வேலைக்கு போவுதுங்க…”

“கூகுள் மேப்ல பாக்கலாமா பாப்பா…”

பிள்ளைகள் இருவரும் அமைதியாக இருந்தார்கள்.

“என்னதுக்கு முகத்த தூக்கி வச்சிருக்கீங்க.சின்ன வயசுல அரசாங்க உத்தியோகம் கெடக்கறதே பெரிசு…கல்யாணத்துக்கு முன்னயே வேல…கொடுத்து வச்ச பிள்ளைங்க,”என்று ஏக்கமாக லலிதாஅப்பா அதட்டினார்.

அறந்தாங்கி கஸ்தூரிபாய் விடுதியிலிருந்து கிளம்பினால் கோட்டைப்பட்டினத்திற்கு இரண்டுமணிநேரத்திற்கும் மேலாகிறது.வழியில் உஷாவுக்கு அம்பலவாணனேந்தல், சுபாவுக்கு காரணியானேந்தல் என்ற ஊர்களில் இறங்க வேண்டும்.அவர்கள் முதலில் ஊர் பெயரை மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தது.

வேலையில் சேர்ந்த முதல் நாள் இரவுஉணவு நேரத்தில் லலிதா நித்யாவிடம், “எனக்காச்சும் பரவாயில்ல…நீ தான் பாவம்…”என்றாள்.

புதுசா இன்னும் என்ன இருக்கோ என்று நித்யா முகம் சோர்ந்தது.அன்று கோட்டைப்பட்டின பெண்கள் பள்ளியில் வேலைக்கு சேர்ந்திருந்த கோகிலா, “நித்யா என்ன பாவம்….”என்றாள்.

“எதாச்சும் மீட்டிங்ன்னா…பேங்க் வேலைன்னா மணமேல்குடிக்குதான் நீங்க வரனும் தெரியுமா? இந்தியன் பேங்க்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணனுமாமே எனக்கு ஸ்கூல்ல இருந்து பக்கம்,”

“நாங்க ரெண்டு பேரும் இருக்கமில்ல..சேர்ந்து வந்துருவோம்..”

தேனீ,தென்காசி,திருச்சி என்று வேவ்வேறு இடங்களில் இருந்து வந்த இவர்கள் இணைந்துகொண்டு மணல்மேல்குடியில், புதுக்கோட்டையில் அலுவலக வேலைகளை முடிக்க இரண்டுநாட்களானது.கோட்டப்பட்டினத்திலிருந்து மணல்மேல்குடி வழியெங்கும் கடல் உடன் வந்தது.உப்பளங்கள் கண்ணாடிகளாய் மின்னும் பாதைகள்.

அதில் வேலை செய்துவிட்டு பேருந்தேறும் பெண்களின் கால்களை முதல்முறைக்கு மேல் பார்ப்பதற்கு பதைத்தது.பள்ளியின் முதல்தளத்தில் நின்றால் தெரியும் தனித்த ஆள்அரவமற்ற கடற்கரையும், கருத்தக்கடலும், தொடுவானமும் எங்கேயோ வந்து விட்டதைப்போன்ற ஒரு படபடப்பை தருகிறது.

ஐந்தாம்நாள் வகுப்பறையில் நின்ற நித்யாவுக்கு சலிப்பாக இருந்தது.கோகிலாவுக்கு போல பெண்கள் பள்ளியிலாவது கிடைத்திருக்கலாம் இந்தப்பள்ளிக்கூடத்துல ஒருப்பய மதிக்க மாட்டிங்கிறான்.மொழி உச்சரிப்பு சிக்கல் வேறு.மணியடித்தால் டீச்சருக்கு முன்னாடி ஓடிப்போயிடறானுங்க.மதியத்திற்கு மேல் மீன்பிடிக்க கடற்கரைக்கு தப்பிவிடுகிறார்கள்.கட்டுப்பாடான பள்ளிகளில் படித்துவிட்டு இங்கு வந்து பட வேண்டியிருக்கிறது.

ஒரு வாரமாக ,எங்கிருக்கிறோம் ,என்ன சாப்பாடு ,என்னநினைப்பு, என்ன செய்கிறாம் என்றே தெரியாத ஒரு மனகுழப்பம்.வண்ணங்களை விசிறியடித்த ஓவியப்பலகையின் வழிதல்கள் என திக்கு தெரியாது பணிசார்ந்து இழுத்த இடம் அறியாது சென்றுகொண்டிருந்தார்கள்.இதுவரை வீடு, கல்லூரி விடுதி, பக்கத்து ஊர் தனியார்பள்ளி வேலை தவிர பெரிதாக இடமாற்றமில்லாத வாழ்க்கை.வாரஇறுதியில் ஊருக்கு சென்றுவிடலாம் என்ற நினைப்பைத்தவிர நித்யாவிற்கு எதுவும் இல்லை.உறக்கத்தில் திடீரென்று விழிப்பு வந்தால் மறுபடி உறங்கமுடியவில்லை.இரண்டுவாரங்கள் எத்தனையோ மாதங்கள் போல நகர்ந்தது.

வெள்ளிக்கிழமை சாயுங்காலம் தலைமையாசிரியர் புதிதாக வேலைக்கு சேர்ந்த கணித ஆங்கில இயற்பியல் ஆசிரியர் மூவரையும் சனிக்கிழமை வகுப்பு வைத்து பாடம் எடுக்க சொன்னார்.அதை நினைத்துக்கொண்டே சாலை கடக்கும் போது மதீனா டீச்சர் பதறிய குரலில் அழைத்து இழுத்தார்.

“நித்யா டீச்சர்..இது ஈஸ்ட் கோஸ்ட் ரோடு அடிச்சு போட்டுட்டு போயிட்டேயிருப்பாங்க…ரொம்ப கவனமா இருக்கனும்,”

“தேங்ஸ் டீச்சர்..”

“இந்தவாரம் ஊருக்கு போலான்னு நெனச்சீங்களா?”

“ம்…”

“சம்பளத்த நெனங்க.எல்லாம் மறந்துடும்…”என்று அவள் கையைப்பிடித்து சாலையைக் கடந்தார்.

உஷாவும் சுபாவும் ஊருக்கு கிளம்பியிருந்தார்கள்.லலிதாவும் கோகிலாவும் கிட்டதட்ட அழும் நிலையிலிருந்தார்கள்.நித்யா குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.ஆளுக்கொரு சமாதானம் சொல்லிக்கொண்டு இரவு உணவிற்கு பிறகு தொலைக்காட்சித்தொடர் பார்க்கத்தொடங்கினார்கள்.நித்யாவின் அலைபேசி அழைத்தது.

“நித்யா…நல்லாருக்கியா..”

தொண்டையை செறுமிக்கொண்டாள்.

“என்னாச்சு…”

“ஊருக்கு வரலான்னு நெனச்சேன்…”

“அங்க போனதுலருந்து சரியாவே பேசமாட்டிக்கிற..”

ஜனனிஅக்கா விடமாட்டாள்.அவள் பேச்சில் என்னத்தையோ வைத்திருக்கிறாள்.அவள் நெருங்கி பேசும் அனைவரும் உணரும் ஒன்று அது.

“ ஒன்னுமில்ல ஜனனி..”

“ஸ்கூல் போற வழியில புதுசா என்ன பாக்கற…நம்ம ஊர்ப்பக்கம் இல்லாதது…”

“வழியில தாமரைக்குளங்க நிறைய இருக்கு…கடற்கரை மணல்… மீன்வாடை…”

“குறிஞ்சியிலருந்து நெய்தலுக்கு போயிட்ட…நீ கலக்கு நித்யா…எனக்குதான் இங்க பதில் சொல்லமுடியல,”

ஒருவீட்டில் ஒரே தேர்வில் இருவரில் ஒருவருக்கு வேலைக்கிடைப்பது எத்தனை சங்கடம்.புன்னகைத்தே சமாளிப்பாள்.இத்தனை நாள் அவள்பக்கத்தை நினைக்கவேயில்லை.

“ச்…எனக்குதான் ரெண்டு மார்க்குல போயிடுச்சு…கடற்கரையில பள்ளிக்கூடம்..நீ லக்கி நித்தி,”என்று அக்கா பேசிக்கொண்டேயிருந்தாள்.

நித்யா காலையில் பேருந்திலிருந்து இறங்கியதும் நிமிர்ந்து சற்று தொலைவிலிருந்த பள்ளிக்கட்டிடங்கள் இரண்டையும் பார்த்தாள்.கடற்கரையில் நின்று கடற்கரையையே மைதானமாகக்கொண்ட பெரிய பள்ளிக்கூடம்.பழையக்கட்டிடம் சற்று தள்ளி நிற்கிறது.குனிந்து இளம்பச்சை நிற பருத்தி புடவையை சற்று தூக்கிப்பிடித்தபடி மைதான மணலில் நடந்தாள்.

பத்துநிமிடம் நடக்க வேண்டும்.நடந்து வரும் போதே வீசும் கடற்காற்றை உடல் தனித்து உணர்கிறது.உப்புக்காற்றுக்கென ஒரு கனமான தொடுகை. செருப்புகளுக்குள் புகுந்த மென்மணலின் நறநறப்பு பாதங்களை கூசச்செய்தது.உடலை உலுக்கிக்கொண்டாள்.முதல்தளத்தின் வகுப்பறையில் பயல்களின் ஆரவாரம்.

முதல்தளத்தின் நடைபாதை தூணருகே நின்றாள்.ஆமாம்…சங்ககாலத்து கடல்.’கடலினும் பெரிது எமக்கு அவருடை நட்பே …’என்று பனிரெண்டாம் வகுப்பில் படித்த வரி ஜனனி குரலில் கேட்டது.கடலை பார்த்து பார்த்து காத்திருந்த காத்திருப்பின் சொல்.இரங்கலும் இரங்கலின் நிமித்தமும்.அவள் சொல்லிய போது உணரவில்லை. இத்தனை பெரிய கடலை நேரடியாக பார்த்துக்கொண்டு நிற்கும் போது அப்படி யாரிடமாவது சொல்ல இந்தவாழ்வில் வாய்ப்பு கிடைக்குமா? என்று தோன்றியது.உடனே புன்னகை எழுந்தது.இங்கு வந்து மனம் கனியும் முதல் புன்னகை.சட்டென்று அலைபேசியில் தற்படம் எடுத்தாள்.

வெண்மணலாய் விரிந்து பரந்த அரவமில்லா கடற்கரையில் மீன்கள், களத்தில் காயும் நெல்மணிகளெனக் காய்கின்றன.காற்றின் சுழற்றலில் அடிவயிறு கலங்கி குமட்டலெடுத்து அவள் கண்கள் நிறைந்தன.

வெண்மணல் பரப்பு.தாழைபுதர் ஒன்று தெரிகிறது. மினுமினுக்கும் பரப்பென அலைகள் இல்லாத கடல் முடிவிலி வரை நீண்டு கிடக்கிறது.செபாஸ்டீன் சார் அன்று இதை பெண்கடல் என்று சொன்னார்.

சங்கால பெண்மனம் இன்றுவரை உறைந்து நிற்கிறதா? அன்றிருந்த புன்னை இன்றில்லை. அதன்அடியில் நிற்கும் தலைவி கண்களுக்குத் தெரியவில்லை.அவள்தான் மீன் உலர்த்தியிருக்கிறாளா? வலைகள் சிறு சிறு குன்றென குவிந்து கிடக்கின்றன.அதற்கு அப்பால் இருக்கக்கூடும்.அந்த அழகான மசூதிக்குப் பின்னால் இருக்கும் மீன்பிடிதளத்தில் காத்திருக்கக்கூடும்.தலைவிதொலைத்த புன்னங்காய் இங்கு தங்கையென வளரவில்லையா?

“என்ன டீச்சர் அப்படியே நிக்கறீங்க? “

நித்யா தடுமாறி தூணில் சாய்ந்து திரும்பி, “குட்மானிங் டீச்சர்,”என்றாள்.

“இந்த ஊரு ஒத்துக்கிச்சு போலயே..”என்றபடி பையன்களை அழைத்தார்.

நித்யா பதில் சொல்லாமல் விழிகள் விரித்து சிரித்தாள்.ஜனனியின் கிறுக்குத்தனமான பேச்சு இன்று எரிச்சலாக இல்லை.பேசிப்பேசி என்னையும் கிறுக்காகிட்டாளா!

மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.வெயில் பொழிந்து கொண்டிருந்தது.கண்கள் கூசி நிறைந்தது.கானல் பறக்கும் வெளியில் ஒருவர் வலையை தூக்கிக்கொண்டு நடந்து சென்றார்.

வாட்ஸ்ஆப்பில் ஜனனிக்கு புன்னகைக்கும் தற்படத்தை அனுப்பினாள்.உடனே ஒரு பொம்மை புன்னகை வந்தது .என்ன? என்ற கேள்வியுடன்.சகோதரியாக புன்னைமரம் நின்ற சங்ககாலத்தில் சொல்லமுடியாததை, இன்றுமட்டும் இவளிடம் எப்படி சொல்லமுடியும்? மீண்டும் ஒரு புன்னகையை அனுப்பினாள்.

ஆசிரியரை பார்ப்பதற்கான எந்த மரியாதையும் இன்றி ஒருவன் வகுப்பறைக்குள் ஓடினான்.

டிசிப்ளின் ஒபீடியன்ஸ் எல்லாம் நம்ம ஸ்டூடண்டா இருக்கும்போது சரிதான்.ஆனா ஒரு டீச்சரா அது தெரியாத குழந்தைகளுக்குத்தானே நீ வேணும்.அதுவும் பாசம் தேவைப்படற குழந்தைகளா இருக்கும்.உப்பள வேலையில அம்மாக்களுக்கு பாசத்துக்கு நேரம் குறைவா இருக்கலாம் என்று நேற்று ஜனனி சொல்லியது நினைவிற்கு வந்தது.

வகுப்பறைக்குள் நுழைந்த பையனின் முதுகில்தட்டி நகர்ந்த நித்யா, “ டீச்சர் கிளாஸ்ரூமுக்கு வந்தா எழுந்து குட்மானிங் சொல்லனும்…போகும்போது தேங்க்யூ சொல்லனும்..” என்றபடி மேசைக்கருகில் சென்றாள். பையன்கள் தயக்கத்துடன் எழுந்து நின்றார்கள்.

காத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை

‘சைனீஸ் கார்டன்’ அறிவிப்பைத் தொடர்ந்து எம்ஆர்டியில் இருந்து இறங்கியதுமே ஏதோவோர் அமானுஷ்ய அமைதி. முதல் தளத்தில் இருந்தபடியே கார்டன் இருக்கும் திசையில் பார்த்தாள். ஹோவென்ற பெருவெளி விழுங்கிவிடுவதைப் போல் கைகளை அகல விரித்துக் கிடந்தது. ராட்சதப் பறவையொன்றை உத்தரத்தில் கட்டித் தொங்க விட்டிருப்பதைப் போல் தலைக்கு மேலிருக்கும் பெரிய மின்விசிறி அசைந்து கொண்டிருந்தது. அந்தி சாய்வதற்குள் இன்றைய வெம்மைக் கணக்கை முடித்துவிடும் வீரியத்துடன் சுட்டெரிக்கும் வெயில், மாலை ஐந்தரை மணி. படிக்கட்டில் இறங்கும்போது ஒவ்வொரு படிக்கும் சத்தம் கூடிக்கொண்டே போனது. பேரமைதியில் இருந்து பேரிரைச்சலுக்குள் புகுவது போன்ற உணர்வு. டிக்கெட் காட்டி வெளியேறுமிடத்திற்கு அருகில் கூட்டம் குறைவான ஓரிடமாகப் பார்த்து ஒதுங்கினாள்.

‘வந்துவிட்டேன், காத்திருக்கிறேன்’ ரகுவிற்கு மெசேஜ் அனுப்பினாள். ஆன்லைன் என்று காட்டியது. ஆனால் பதில் எதுவும் வரவில்லை. ஒருவேளை நெருங்கிக் கொண்டிருக்கலாம். போனை அணைத்துக் கைப்பைக்குள் போட்டாள். அவன் எந்நேரமும் அழைக்கலாம் அல்லது மெசேஜ் அனுப்பலாம், கையிலேயே வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மறுபடியும் கைப்பையைத் திறந்தாள். அவ்வப்போது பாதாளச் சுரங்கமாய் மாய்மாலம் காட்டும் அந்தச் சிறிய கைப்பைக்குள் கிடக்கும் பல பொருட்கள் அவள் கைகளில் தட்டுப்பட்டு போன் மட்டும் கண்ணாமூச்சி விளையாடியது. இப்போதுதானே உள்ளே வைத்தேன், எங்கு போயிருக்கும்? யாரோ லேசாக இடதுபுறத் தோளில் இடித்துவிட்டுப் போனார்கள். அனிச்சையாகத் திரும்பினாள். உரசிச் சென்றவன் நான்கு அடி முன் சென்று நின்று அவளைப் பார்த்தான். அவள் பார்க்கும்போது தலை குனிந்தவாறே தன் மொபைலைப் பார்த்தான். எங்கோ பயணப்படக் காத்திருப்பவன் போல் முதுகில் பெரிய பை. அவன் அவளைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இடித்தது அவன்தானா என்பதே இப்போது அவளுக்குச் சந்தேகமாக இருந்தது.

திடுமென ஒரு பெருங்கூட்டம் கூடியது. அடுத்த எம்ஆர்டி வந்திருக்க வேண்டும். பார்வைக்கெட்டிய தூரம் என்பது கைக்கெட்டும் தூரமென்றாகிவிட்ட நெரிசல். இதற்கிடையில் கைக்குள் அகப்பட்டுவிட்டது போன். எடுத்துப் பார்த்தாள், ரகு ஜூராங் ஈஸ்ட் வந்துவிட்டதை மிகவும் மகிழ்ச்சியோடு அறிவித்திருந்தான். இன்னும் 12 நிமிடங்கள் என்று ஸ்மைலி வேறு. ஏற்கனவே 20 நிமிடம் லேட். இன்னும் 20 நிமிடமாகலாம். கூகிள் மேப் காட்டும் நொடித்துளிகளே இவனுக்கு வேதவாக்கு! சட்டென்று ஓர் எரிச்சல் மேலெழும்பியது. தோள் உரசும்படி வெகு அருகில் யாரோ வந்து நிற்பதை உணர்ந்தாள். அத்தனை அருகில் ஓர் அந்நியக் குரல் கேட்பதே திடுக்கென்றிருந்தது.

‘மேடம், தமிழா?’

இந்த ஊரில் பெரும்பாலும் அந்நியர்களின் முதல் வாசகம் இதுவாகத்தான் இருக்கும் என்பதால் ‘ஆமா’ என்றபடியே யாரென்று பார்த்தாள். அவன் ஒருவிதத் தயக்கத்துடன் நெளிந்துகொண்டே ‘ரேட் எவ்வளவு?’ என்றான். எதன் ரேட் கேட்கிறான், அவன் கேட்பது என்னவென்று அவளுக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை. எதைக் கேட்கிறான் என்றபடி யோசிக்கத் தொடங்கி, அந்தச் சிந்தனைப் பயணத்தின் பாதையிலேயே குபுக்கென்று வியர்க்கத் தொடங்கியிருந்தது. மின்னலோ, இடியோ, வாடைக்காற்றோ எந்த முகாந்திரமும் இன்றி அடைமழை பொழிந்தாற்போல் வியர்வை பெருகியிருந்தது. ஒருவாறு அவன் கேட்டதன் பொருள் விளங்கிக் கொள்வதற்குள் முகம் முழுதும் நனைந்துவிட்டது. வெள்ளை குர்தா முதுகோடு ஒட்டிக் கொண்டது. பெருகி வழியும் வியர்வையைத் துடைக்க முயலும்போதுதான் உடல் நடுக்கத்தை உணர்ந்தாள். கேட்கப்பட்டது கேள்வி என்றும் அதன் பதிலுக்கான காத்திருப்பும் உறைத்தது. என்ன பதில் சொல்வது? கோபமும் எரிச்சலுமாக வசைகளை வாய்க்குள் அரைத்துக்கொண்டே, அவன் நின்ற திசைக்கு எதிர்த்திசையில் திரும்பி நின்றுகொண்டாள்.

அவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். உடலை நெளித்துக் கால்களைச் சற்றே தூக்கி வெறுமனே காற்றில் அசைத்து இரு கால்களையும் மாற்றி மாற்றி நடப்பது போன்ற அசைவை ஓரிடத்தில் நின்றபடியே செய்து கொண்டிருந்தான். கல்லூரியில் படிக்கும்போது தன்னிடம் வந்து காதலைச் சொன்ன வகுப்புத்தோழனின் நினைவு வந்தது. அவன் கையில் கடிதம் இருந்தது, இவன் வெறுங்கையைப் பிசைந்துகொண்டு.

எப்படி என்னைப் பார்த்து இப்படிக் கேட்கத் தோன்றியது அவனுக்கு. தன்னையே ஒரு முறை தலை முதல் கால் வரை பார்த்துக் கொள்ள நினைத்தாள். உடையைச் சரிசெய்யத் தொடங்கின அவளது கைகள். வெள்ளை நிற முழங்காலுக்குக் கீழ் வரை நீளும் குர்தா, வெளிர் நீல நிற ஜீன்ஸ், கழுத்தைச் சுற்றி ஒரு சால்வை. வீட்டிலிருந்து கிளம்புகையில் அவசரமாக கண்ணாடி பார்த்தபோது தென்பட்ட தன்னுருவத்தை மனக்கண் முன் கொண்டு வந்தாள். அழகாக, நாகரிகமாக இருப்பதாகத்தான் அப்போதும் நினைத்தாள், இப்போதும் நினைக்கிறாள். முன்நெற்றியில் துருத்தியபடி இருந்த நரைமுடியை அழுத்திச் சீவியதும் நினைவுக்கு வந்தது. எந்தவொரு வேண்டத்தகாத நிகழ்வுக்கும், தான் ஏதேனும் ஒரு வகையில் காரணமோ என்ற குற்றவுணர்வை முதலில் கீறி இரத்தம் வடியச் செய்யும் அவளது மனம் இப்போதும் குடையத் தொடங்கியது. லிப்ஸ்டிக் அடர்நிறமோ! இல்லையே, இன்றைய அவசரத்தில் லிப்ஸ்டிக் போடாமல் வெளியேறி, லிப்டில் ஏறியதும் தடவியது நிறமற்ற லிப்க்ளாஸ் மட்டும்தானே. வெள்ளைக் குர்தா என்பதால் ப்ரா மற்றும் ஸ்லிப்கூட அதே நிறத்தில்தான் அணிந்திருந்தாள். அதையும் மீறி ஏதாவது? யாரும் பார்க்காதபடி இயல்பாக உடையைச் சரி செய்து கொள்ளும் பாவனையில் எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டாள்.

அவன் அருகில் இருந்த டிக்கெட் கவுண்டர் பக்கத்தில் போய் நின்று வேடிக்கை பார்ப்பதைப் போல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தச் சுற்றில் அவளும் இருக்கிறாள் என்பதுபோன்ற பாவனை இருந்தாலும் அவளைச் சுற்றியே அந்தச் சுற்று என்பது அவளுக்குப் புரியாமலில்லை. பதிலை எதிர்பார்க்கிறானாம். அவனைச் சுட்டெரிப்பதுபோல் பார்ப்பதாக எண்ணி முடிந்த மட்டும் கோபத்தை உச்சியிலேற்றி முறைத்தாள். அது அவனைச் சுட்டதைப் போலொன்றும் தெரியவில்லை. பதிலுக்குக் காத்திருக்கும் பதட்டம் மட்டும்தான் தெரிகிறது.

அவனிடம் இருந்து பார்வையை எடுத்து எங்கே விடுவது என்ற குழப்பம். அவனைப் போலவே சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டாள். கூட்டம் இரைச்சலுடன் நின்றிருந்தது. கூட்டம் என்றாலும் அது மொத்தமாக ஒரு கூட்டம் இல்லை. பல குழுக்களாகப் பிரிந்து நின்றனர். ஆனால் குழுக்களுக்குள்ளும் இடைவெளி மிகவும் குறைவு. இவற்றையெல்லாம் ஒரு சில நிமிடங்களில் ஸ்கேன் செய்தாற்போல் பார்த்துவிட்டுத் தலை குனிந்தாள். இதுபோன்ற இடத்தில் நிற்பதே தான் செய்யும் தவறு என்று உறுத்தத் தொடங்கியது. அத்தனை கோபமும் ரகுவின் பக்கம் திரும்பியது. இந்த இடத்திற்கா வரச் சொல்ல வேண்டும் அவன்? கூகிள் பரிந்துரைத்த இடம் என்று அவன் சொன்னது நினைவுக்கு வர, கூகிள் இங்கு நடப்பன யாவும் அறியுமா என்ன?

வியர்வையும் நடுக்கமும் குறைந்தபாடில்லை. அவளைக் கடந்து யார் சென்றாலும் தன்னை உரசிச் செல்வதுபோலவே இருந்தது. இதெல்லாம் சினிமாவில் பார்த்ததுதான். ‘அந்த’ மாதிரி ஆளாக இருந்தால் ரேட் பேசிக் கிளம்பிவிடுவார்கள். நல்ல குடும்பத்துப் பெண்கள் என்றால் ‘அக்கா தங்கையோடு பிறக்கவில்லை?’ என்றோ, மிகவும் மோசமான வசை வார்த்தைகளையோ கொட்டுவார்கள். தான் இதில் எதையும் செய்யாமல் விட்டதை நினைத்து அவளுக்கு வருத்தமாகவும் பயமாகவும் இருந்தது. இப்போதுகூடப் போய் அவனிடம் நான்கு வார்த்தை நறுக்கென்று கேட்டுவிடலாம்தான். ஆனால் வார்த்தைகளுக்குச் சற்றும் பொருந்தாத தன் உடல் நடுக்கம் அனைத்தையும் அபத்தமாக்கிவிடக் கூடும். சினத்தைத் தன் ஆளுகைக்குள்ளே வைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. முதலில் வியர்வையை அடைக்க வேண்டும். இல்லையென்றால் குளித்தாற்போல் அவள் உடை முழுதும் நனைந்துவிடும். அதுவே மேலும் சிலரைத் திரும்பிப் பார்க்க வைக்கக் கூடும்.

எம்ஆர்டியைவிட்டு வெளியேறி சைனீஸ் கார்டன் உள்ளே சென்று ஓரிடத்தில் நின்றுகொள்ளலாம். ரகு வந்ததும் எப்படியும் உள்ளே போவதாகத்தானே திட்டம். போனில் பேசிக்கொண்டே நடந்தால் யாரும் தொந்தரவு செய்யப் போவதில்லை. ரகுவுக்கு அழைத்தாள். அவன் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

வேறு வழியின்றி யாரையும் பார்க்காமல் தலை கவிழ்ந்தபடி நடக்கத் தொடங்கினாள். இயல்பான நடையாகத் தெரிந்தாலும் நொடியும் தவறவிடக்கூடாத, அதிகபட்ச எச்சரிக்கை உணர்வுடன் இருந்தாள். தலை கவிழ்ந்தபடியே சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினாள். அருகே யாராவது வருவதுபோல் தோன்றினாலே உடல் விறைப்பாய் நிமிர்ந்து இறுகுவதும் மனம் படபடவென்று அடித்துக் கொள்வதுமாகப் பெரும் அவஸ்தையாக இருந்தது. மனதுக்கு முரண்பட்டு உடலை நிமிர்த்தி நடக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருப்பதாகவே தோன்றியது அவளுக்கு.

திரும்பிப் பார்த்தபோது அங்கிருந்த ஒரு சிறுபெட்டிக்கடையை ஒட்டி அவன் நின்றிருப்பது தெரிந்தது. இப்போது அழுக்கேறிய ஷூக்களை வைத்தே அவனை அடையாளம் காண முடிந்தது. அவனை நோக்கி ஒரு பெண் வந்து நின்றாள், இருவரும் பேசத் தொடங்கினர்.

ஏனோ அவளுக்கு அப்பாடா என்றிருந்தது. அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்கிற குறுகுறுப்பும் ஆவலும் எழுந்ததது. தலையைச் சிறிது பக்கவாட்டில் திருப்பி அவளைப் பார்த்தாள். அவள் வெளிர் மஞ்சள் நிற டிசர்ட்டும், ஜீன்ஸும் அணிந்திருந்தபடி தலையை ஆட்டிப் பேசுவது தெரிந்தது. பேச்சுக்குத் தக்கபடி விரித்துக் கிடந்த, இடுப்பு வரை நீண்ட கூந்தல் அசைவதைப் பார்க்க அழகாக இருந்தது. தலைவிரிகோலம் என்று அம்மா வசைபாடும் கோலத்திற்குச் சற்று முந்தையது. பள்ளிக் காலத்தில் மனப்பாடப் பகுதியில் படித்த பாரதியின் பாஞ்சாலி சபதம் நினைவுக்கு வந்தது.

‘மேவி இரண்டுங்கலந்து குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன்யான், இது
செய்யுமுன்னே முடியேன் என்றுரைத்தாள்’

மனதிற்குள் தமிழாசிரியர் மீனாவின் கம்பீரக் குரலில் பாடல் ஒலித்தது. கூடவே விஜய் டிவி மகாபாரதத்தில் வரும் அம்பையும் திரெளபதியும் தியாவின் நினைவில் வந்தார்கள். திரெளபதியைவிட அம்பைக்கு அக்னி உமிழும் கண்களும், செந்நிற ஆடையும் விரிசடையும் பொருத்தமாகவும் அழகாகவும் இருப்பதாக அவளுக்குத் தோன்றும். இவ்வளவு நீளக் கூந்தலை விரித்துப் போட்டால் சிரமமாக இருக்காதா? கண்ணுக்குத் தெரியாத சிறிய க்ளிப் இரண்டு பக்கமும் போட்டிருப்பாளாயிருக்கும். அந்தப் பெண்ணின் முகம் தெரியவில்லை. நிச்சயம் இந்தியராகத்தான் இருக்க வேண்டும். நீளக் கூந்தல் மட்டுமல்ல, தமிழா என்று தன்னிடம் கேட்டதை வைத்து தமிழ்ப்பெண், குறைந்தது இந்தியப் பெண்ணைத்தான் அவன் எதிர்பார்த்திருப்பான் என்பது நிச்சயம். என்ன காரணமாக இருக்கும்? மொழி தெரிந்தால் கூடுதல் சுவாரசியமோ, அல்லது ரேட் குறைவாக இருக்குமா?

சைனீஸ் கார்டன் போகும் வழியில் நடந்துகொண்டிருந்தாள். இங்கும் கூட்டம்தான் என்றாலும் ஓரளவுக்கு இடைவெளி இருந்தது. பேச்சொலியில் கவனம் செலுத்த நினைத்துக் காது கொடுத்த அவளுக்கு அத்தனை பேச்சுக்குரலும் கலந்து ஒற்றைப் பேரிரைச்சலாகத்தான் ஒலித்தது. ஒரு குரலையும் ஒரு வார்த்தையையும் தனியாகப் பிரித்தெடுத்துவிட முடியவில்லை. அருகில் நடப்பவர்கள் பேசுவதுகூடக் கூட்டத்துடன் கலந்து ஒன்றாகி, அதன் பின்னரே தன் காதுக்கு வந்து சேரும் அதிசயம்.

நடைபாதைக்கு இடதுபுறம் இருந்த புல்வெளியைக் கண்டதும் மனவேகத்திற்குக் கால்கள் ஈடுகொடுக்கவில்லை என்பது புரிந்தது. வேகத்தைக் கூட்டலாமா? ஏன்? என்ன நடந்துவிடப் போகிறது? யாரும் கையைப் பிடித்து இழுத்துவிடுவார்களா என்ன! நிதானமாகச் சுற்றிலும் பார்க்கும்போது எங்கும் எந்த அசம்பாவிதமும் நடப்பதாகத் தெரியவில்லை. யாரும் யார் கையையும் பிடித்திழுக்கவில்லை, உண்மையில் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டோ கட்டிப் பிடித்துக்கொண்டோகூட யாரும் இல்லை. தன் தலை நிமிர்ந்திருப்பதை அறிந்த அவளுக்குச் சிறிதாகப் புன்னகையும் வந்தது. ரகு வரும்வரை அங்கேயே நிற்கலாம் என்று முடிவெடுத்தாள்.

புல்வெளியில் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். நேற்று மதியம் பெய்த மழை ஈரத்தின் மிச்சம் புல்வெளியில் இன்னமும் ஒட்டியிருப்பதைத் தனது செருப்புகளையும் மீறி கால்களில் உணர்ந்தாள். இந்த ஈரத்திலுமா கிரிக்கெட்! மொட்டைமாடியில் தம்பியும் அவன் நண்பர்களும் கிரிக்கெட் விளையாடியது நினைவுக்கு வந்தது. அந்தச் சிறிய இடத்தில் நான்கு பேர் விளையாடுவார்கள். 20 மீட்டர் நிலப்பரப்பும் 30க்கும் மேற்பட்டவர்களுமாக நிகழும் ஒரு பிரம்மாண்டத்தைச் சுருக்கி அவரவர் வசதிக்கேற்றபடி விதிமுறைகளை வளைத்துக்கொள்வார்கள். எல்லைகளும் விதிகளும் விளையாட்டை நிர்ணயிப்பதில்லை, விளையாட்டு என்னும் செயல் தரும் உணர்வுதான் அங்கு முக்கியமாகிறது. ‘டொக்!’ சத்தத்தைத் தொடர்ந்து பந்து மேலேறி அவளை நோக்கி வருகிறது. பந்தைப் பார்த்துக்கொண்டே அதன் வேகத்திற்கு இணையாக ஒருவன் ஓடி வருகிறான். பந்திருக்கும் பக்கம் லேசாகச் சரிந்து ஒற்றைக் கையால் பிடித்து அதே வேகத்தில் திரும்பி விளையாடுபவர்களை நோக்கி எறிகிறான். பந்து அவன் கையில் இருந்த நொடிக்கும் குறைவான நேரத்தில் அனைவரும் கூச்சலாய்க் கத்தத் தொடங்கியிருந்தனர். அந்தக் கூச்சல் இப்போது மேலும் கூடி இருந்தது. முகம் மலர அவர்களைப் பார்த்துப் புன்னகைக்கிறாள். அவர்கள் யாரும் கவனிக்கவில்லை. அந்தப் புன்னகை அந்த விளையாட்டோடு போய்ச் சேர்ந்திருக்கும் என்று சொல்லியவாறே, எம்ஆர்டியில் இருந்து அவள் வந்த பாதையை நோக்கித் திரும்பி நின்றுகொள்கிறாள். வியர்வை சுரப்பது நின்றிருக்கிறது. உடலில் ஒட்டியிருக்கும் வியர்வை காற்றில் பட்டுச் சில்லென்ற உணர்வைத் தருகிறது.

அதே கூட்டம்தான். எம்ஆர்டி ஸ்டேஷனுக்குள் நின்றபோது இருந்த மூச்சடைப்பும் பதட்டமும் குறைந்து இப்போது நிதானமாகப் பார்க்க முடிகிறது. எம்ஆர்டி விட்டு வெளியே வரும் இடத்தில் உள்ள ஓரிரு படிகளில் சிலர் உட்கார்ந்திருக்கின்றனர். அநேகமாக ஆண் பெண் ஜோடிகள், சில ஆண்களும் பெண்களுமான குழுக்கள். கையோடு உணவு கொண்டு வந்திருக்கின்றனர் சிலர். பெரும்பாலும் மாலைக்கேற்றவாறு ஏதேனும் பானங்கள் அல்லது சிற்றுண்டிகள். ஒருவர் முகமும் தியாவுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர்களின் சிரிப்புச் சத்தம் கேட்கிறது. கூர்ந்து கேட்டபோது சில வார்த்தைகள்கூடக் காதில் விழுகின்றன பல மொழிகளில் கலவையாக. அவற்றைப் பிரித்துப் பொருள் கொள்வதைவிட அவர்களின் உடல்மொழி அவளை ஈர்க்கிறது. ஒரு குழந்தையின் குதூகலத்துடன் ஆர்வமாகப் பார்க்கத் தொடங்குகிறாள்.

ஏனோ ஆண்களைவிடப் பெண்களைக் கவனிப்பது அவளுக்குக் கூடுதல் சுவாரசியமாக இருக்கிறது. இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களுமாக ஒரு குழு. ஒரு பெண் தரையில் உட்கார்ந்தபடித் தன் கால்களை நீட்டிப் பின்னிக்கொண்டு ஆட்டியவாறு அருகில் இருக்கும் இன்னொரு பெண் கொடுக்கும் கேன் டிரிங்கை வாங்கி வாயில் சரிக்கிறாள். அது வழிந்து அவளது உடையிலும் சிதறுகிறது. அதைத் துடைக்கவோ உடையில் வழிந்ததற்குப் பதட்டப்படவோ இல்லை. ஒருவர் போனில் எதையோ காட்ட, நால்வரும் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். அருகில் இருப்பவள் இப்போது அவளது மடியில் சாய்ந்து படுக்கிறாள். அவளது குட்டைப் பாவாடை மேலேறி இருந்ததால் சரியாக அவளது தொடையில் தலை வைத்துப் படுத்திருக்கிறாள்.

அவர்களுக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு ஜோடி. தரையில் செய்தித்தாளை வைத்து ஆண் தட்டுகிறான். கட்டெறும்புகளாக இருக்கும். பெண் தன் காலணிகளைக் கழற்றி கால்களில் ஏறிவிட்ட எறும்புகளைத் தட்டிவிடுகிறாள். புல்வெளியில் பிளாஸ்டிக் பைகளை விரித்து அதன்மேல் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள், சிலர் போன் பேசிக்கொண்டு, யாரும் தனியாக இல்லை, சும்மாவும் இல்லை. தனியாக நின்றிருப்பது அங்கிருக்கும் மரங்கள் மட்டும்தான். தியா நிற்கும் இடத்தில் இருந்து பார்க்க சிதறினாற்போல் மனிதர்கள் கூட்டம், அவர்களுக்குப் பின்னால் கைகளைப் பிளந்தாற்போல் கிளைகளை விரித்திருப்பதில் ஒரு நேர்த்தியுடன் சரியான இடைவெளியில் சில மரங்கள், அதற்கும் பின்னால் கூடாரம் போன்றிருக்கும் எம்ஆர்டி ஸ்டேஷன் என உயரத்திற்குத் தகுந்தாற்போல் புகைப்படம் எடுக்க அடுக்கடுக்காய் நிற்க வைத்ததுபோல் தெரிகிறது.

போனை எடுத்துப் பார்க்கிறாள், ரகுவிடம் இருந்து எந்தச் செய்தியும் இல்லை. மறுபடியும் போன் செய்து பார்க்கலாமா என்று யோசிக்கும்போது ஒரு பெண் அவளுக்கு அருகில் வந்து நிற்கிறாள். போனில் ஏதோ மெசேஜ் அனுப்புகிறாள். அந்தப் பெண் போனைக் கைப்பைக்குள் போட்டதும் காத்திருந்தவனைப் போல் ஒருவன் அவளிடம் ஓடி வருகிறான். தயக்கத்துடன் ஏதோ ரகசியக் குரலில் பேசுகிறான். இருவரும் கிளம்புகிறார்கள். எல்லாம் ஓரிரு நிமிடங்களில் நடந்து முடிந்தன. அவர்களின் முகம் பார்க்கும் அவகாசம்கூட இருக்கவில்லை தியாவுக்கு.

திடீரென்று தனக்கான ரேட் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. எதை வைத்து முடிவு செய்யப்படும்? 35 வயது, ஐந்து வயது குழந்தைக்குத் தாய். இதெல்லாம் பார்த்துதான் ரேட் பேசுவார்களோ! தக்காளி கிலோ இரண்டு வெள்ளியில் இருந்து நான்கு வெள்ளிக்குள் என்பதுபோல் பொதுவான ஒரு ரேட் தெரிந்தால்தானே கூடுதல் குறைவு பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு. யார் ரேட் முடிவு செய்வார்கள்? தன்னைத் தொலைவில் இருந்து பார்க்கும் யாருக்கும் தானும் அந்தப் பெண்களில் ஒருத்தியாகத்தானே தெரிவாள்? எத்தனை பேர் தனக்கான ரேட்டை மனதிற்குள் மதிப்பிட்டிருப்பார்கள்? சிந்தனை எங்கெங்கோ அலைபாய்ந்து கொண்டிருக்க, போனை உள்ளே வைக்க கைப்பையைத் திறக்கிறாள். பக்கச் சிறு அறையில் இருந்த லிப்ஸ்டிக் கண்ணில் படுகிறது. அந்த அடர்நிற லிப்ஸ்டிக்கை எடுத்து உதட்டில் பூசிவிட்டுக் கைப்பையை மூடுகிறாள். அக்கம்பக்கம் பார்த்தபடிக் காத்திருக்கத் தொடங்குகிறாள். போன் அடிக்கிறது. ரகுவாகத்தான் இருக்கும். வரட்டும், இந்தப் பக்கம்தானே வந்தாக வேண்டும். அதுவரைக்கும் காத்திருக்கலாமே.

மாய அழைப்பு – கமலதேவி சிறுகதை

கொல்லி மலையை மறைத்து நிற்கிறது தொடர் மழை. எட்டி எட்டிப் பார்த்து சங்கரிக்கு சலிக்கிறது. கொஞ்ச நேரம் மேற்கே பார்த்துவிட்டு அறைக்குள் வந்தாள். அதற்குள் மும்முறை அழைத்திருந்தது அலைபேசி. நேற்று அழைத்த எண்ணா என்று  பார்த்தாள். இல்லை.

“இந்த நம்பர்லந்து கால் வந்துச்சு… நீங்க யாரு?”

அந்தப்பக்கம் சில குரல்களின் சலசலப்பு… பேருந்தா?

“எனக்குதான் அங்கருந்து போனு வந்துட்டேயிருக்கு… யாரு நீ… எங்கருந்து பேசுற,” என்ற அதே பெண் குரல் எரிச்சலடைய வைத்தது.

சங்கரி சட்டென்று அழைப்பைத் துண்டித்தாள். நம்பரைத் தடை செய்த ஐந்துநிமிடத்தில் மீண்டும் மூன்று அழைப்புகள். இவை எதேச்சையான அழைப்புகளில்லை என்பது மண்டையில் உறைத்தது. சென்ற வாரத்தில் வேறொரு எண்ணிலிருந்து வெவ்வேறு தினங்களில் மூன்று அழைப்புகள்.

“சின்னப்பிள்ளைங்க கண்டபடி நம்பர போட்டுருச்சுங்க,” என்று அந்த எண்ணில் பேசிய பெண் குரல் நினைவில் வந்தது. இந்தக் குரல்தானா அது? கண்டுபிடிக்க முடியவில்லை. எப்போதும் தொடுதிரையில் வழுக்கிவிழும் அம்மா எதையாச்சும் செய்து வைத்திருக்கிறார்களா என்று தேடினாள்.

‘அபிதா’ நாவலை எடுத்தபடி மெத்தையில் அமர்ந்து சுவரில் சாய்ந்தாள். மீண்டும் இரு தடை செய்யப்பட்ட அழைப்புகள். இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் எடுக்கிறாள். லா.ச.ரா தன்மொழியால் மனதைப் படுத்தி எடுத்த புத்தகம்.

கண்களை மூடி அமர்ந்தாள். மூன்று நாட்களாக ஓய்ந்தபாடில்லை. நான்கு வார்த்தைகள் வேகமாகப் பேசினால்  குறைந்துவிடக்கூடும்.

ஆனால் உள்ளிருக்கும் பேய் செய்யவிடாது. பொறுத்துக் கொள் என்ற ஆணையை மனதிற்குள் ஆழ ஊன்றிய பொக்கைவாய் தாத்தா மனதிற்குள் புன்னகைத்தார். சிவனே என்று கண்களை இறுக மூடிக்கொண்டாள். இருளுக்குள் சிகப்பு நிறம் பறந்து மறைந்தது.

இந்த அழைப்புகள் மட்டுமா காரணம்! எப்பொழுதாவது இப்படி புத்தி முறுகிக் கொள்ளும். அவிழ்க்கவே முடியாது. அதாகவே பிரிந்து மலர வேண்டும். பாடல்களை மாற்றி மாற்றி தேடினாள். வேலைக்கு ஆகவில்லை. உச்சியில் நின்று கனக்கிறது.

நல்ல மழை. கைகளில் இருந்த புத்தகத்தை வைத்தபின் வராண்டாவிற்கு வந்தாள். மழையால் தன்னை முழுதும் மூடி கொண்டிருந்தது கொல்லிமலை. சிறு பிசிராகக்கூட கண்களுக்குத் தெரியவில்லை.

சென்ற வாரத்தில் வந்த அமேசான் பெட்டி, நான்கு நாட்களுக்கு முன்பு வந்த அஞ்சலக உறை இரண்டும் நினைவிற்கு வந்தன. அதில் இருந்த அலைபேசி எண்ணை எடுத்தபின் பெட்டிகளை குப்பையில் போட்டோமா என்ற எண்ணம் தோன்றியது.

மீளவந்து புத்தகத்தை எடுத்தாள். மீண்டும் அழைப்பு. புத்தகத்தை வைத்துவிட்டு மாடியிலிருந்து கீழிறங்கினாள். வீட்டில் மழைக்கால கூட்டம் நடந்து கொண்டிருந்தது. இப்படி அனைவரும் கூடினால் ஓயாது சிரிப்பும், பொருமல்களும், விசாரணைகளும், சொல்லித் தேய்ந்த அறிவுரைகளும், சூடான தின்பண்டமுமாக நீளும்.

அய்யா கிழக்குபுறமாக திரும்பி மேசையில் கை வைத்து தன் தம்பி பேசுவதையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சங்கரி எட்டு வயதில் முற்றத்து மழையில் நிற்கிறாள். அம்மா ,”உள்ள வா சங்கு… ஸ்கேல் எடுத்தேன்னு வச்சிக்க…” என்று அதட்டுகிறாள்.

அய்யா, “ விடு..அதாவே வரட்டும்,” என்கிறார்.

இரவு காய்ச்சலில் போர்வைக்குள்ளிருக்கும் அவளின் கைகளைப் பற்றியபடி அவளை பார்த்துக் கொண்டேயிருக்கிறார். மேசை விளக்கின் மெல்லிய ஔி கட்டிலுக்குள் மஞ்சளாய் பரவியிருக்கிறது.

“பாப்பாவுக்கு என்னாச்சு… கோவம் வந்தா அம்மாக்கிட்ட கோவிச்சுக்க வேண்டியதுதானே… அம்மாதானே இன்னிக்கி தப்பு செஞ்சாங்க.” என்றபடி போர்வையுடன் அணைத்துக்கொள்கிறார்.

“அய்யா. முள்ளு குத்துது,” என்றதும் அவளை மேலும் கட்டிப்பிடித்து சிரிக்கிறார்.

“என்னால நெஜமாலுமே சோறுதிங்க முடியலங்கய்யா… வாந்தி வருது. ”

“அம்மாட்ட சொன்னாதானே அவங்களுக்கு தெரியும்… ”

“அம்மாக்குதான் எல்லாம் தெரியுமே…”

அய்யா அம்மாவிடம் திரும்புகிறார். அம்மா இவளின் கொழுசுகாலில் கைவைக்கிறாள். சங்கரி காய்ச்சலில் காய்ந்த உதடுகளில் புன்னகை எழ, “ இப்ப எனக்கு கால் வலிக்குதுன்னு உங்களுக்கு தெரியுதுதானேம்மா,” என்கிறாள். அம்மா குனிந்து கொண்டே தலையாட்டுகிறாள். அய்யா அம்மாவின் தோளில் கைவைத்து புன்னகைக்கிறார்.

பதினைந்து வயதில் அவ்வாவின் ஒரு சொல்லிற்காக சங்கரி அதகளம் செய்து ஓய்ந்தாள். அடுத்தநாள் காலையில் அய்யா, ”எப்பவாச்சும் கோவம் வரவங்களுக்கு கோவம் மதம் பிடிக்கிற மாதிரி… கட்டுப்படுத்தனும். இல்லேன்னா அடிக்கடி கோபப்படனும்,” என்று சிரித்தார்.

“இனிமே கோபப்பட மாட்டேங்கய்யா… என்ன நடந்துச்சுன்னே தெரியலங்கய்யா,”

“சரி… சரி. சத்திய சோதனை படிக்கிறியா…” என்றார். அய்யா மாதிரி செக் வைக்கமுடியாது.

இரு கால்களையும் தூக்கி நாற்காலி மேல் குத்துக்காலிட்டிருக்கும் அவ்வா, வாழைக்காயை எடுத்துவிட்டு மாவைத் தேடி எடுத்தது. அலைபேசியைப் பார்த்தாள். தலையை ஒரு தரம் உலுக்கிக் கொண்டாள். இது பேனைப் பெருமாளாக்கி, பெருமாளுக்கு லட்சுமியை கட்டி வைக்கும், என்ற எண்ணம் வந்ததும் சட்டென சமையலறைக்குள் நுழைந்தாள்.

“இங்க பாரு தம்பி… நாலு தடவ முன்னாடி நிக்கிற மனுசருகிட்ட அதிகாரமா பேசினா இந்த வயசுல அது ஒருமாதிரி முறுக்காத்தான் இருக்கும். ஆனா நாளாவட்டத்துல பேச்சோட தன்மையே மாறிப் போயிரும். தணிஞ்சு பேசிப் பழகு…”

சின்னய்யாவிடம் தலையாட்டிவிட்டு சமையலறை பக்கம் திரும்பி தம்பி புன்னகைத்துக் கொண்டிருந்தான். இன்னொருத்தன் மழையைப் பார்த்து முகம் மறைத்தான்.

கடலை எண்ணெயில் இட்டவுடன் வாழைக்காய் மாவுடன் எழுந்து மிதந்து உப்பியது. எடுத்ததும் துள்ளல் அடங்கியது. மீண்டும் அலைபேசி.

“மழன்னு பேஞ்சறக்கூடாது… நம்மள கிச்சன்ல தள்ளிட்டு அதுங்க பாட்டுக்கு ஊர்கதய அளக்குற வேல…”

சித்தி பேச்சோடு சேர்த்து வாழைக்காயை சீவினாள். ஆமா என்ன பண்ணலாம் என்பதைப் போல அம்மா சிரித்தாள். கழுவுத்தொட்டியை பார்த்தபடி நின்ற சங்கரியை உற்றுப் பார்த்து சித்தியிடம் ஜாடை காட்டினாள்.

“மூஞ்சபாருங்க எப்படி இருக்குன்னு…..”

“இந்தகுடும்பத்துக்குன்னு செஞ்சுவச்ச மூஞ்சி…அதபாத்துதான் நம்ம ரெண்டுபேரும் ஏமாந்து போயிட்டாம்…”என்றபடி அம்மா எண்ணெய்கரண்டியை சங்கரி கையில் கொடுத்தாள்.சித்தி புன்னகைத்தாள்.

“ந்தா பாப்பா… துரியோதனன் நம்ம நெனக்கறாப்ல இல்ல… குந்தி ஒன்னும் உங்கள மாதிரி பாவப்பட்ட அம்மா இல்ல. இந்த நெனப்பெல்லாம் கொதிக்கிற எண்ணெய்க்கிட்ட வச்சுக்காத… கவனமெல்லாம் அடுப்பு மேல இருக்கட்டும்,” என்றபடி சித்தி இரண்டு தட்டுகளை எடுத்தாள்.

“சிரிச்சு தொலை… ரெண்டு நாளா பேசாம சிரிக்காம உசுர வாங்குது சனியன்… அழுதாச்சும் தொலைக்குதா பாருங்க… ஜென்ம புத்திய எதக் கொண்டு அடிச்சாலும் மாறுமா…”

“விடுங்க… இந்த மாதிரி கோவப்படாத பிள்ளய பாக்கமுடியுமா?” என்றபடி சித்தி சங்கரியின் முதுகில் தட்டினாள்.

“நீங்க வேற. கோவப்பட்டாக்கூட சமாளிக்கலாம். இது ஊமப்பிடாரி அம்சம். மொசக்குட்டிப் பிடிக்கிற நாயோட மூஞ்சப் பாத்தா தெரியாது…”

“அட விடுங்கன்னா…” என்ற சித்தி நடையில் அமர்ந்தாள்.

மீண்டும் ஒரு அழைப்பு. இது ஒரு பொழப்புன்னு விடாம செய்யறதுக்கும் பொறுமை வேணும். எதுக்காக?

இரவு முழுவதும் மழை பெய்தது. எழுந்து நிற்கும் மலையை, இந்த நிலத்தை கரைத்துவிட எத்தனிப்பதைப் போல. ஐந்தாண்டுகளுக்கு முன்பு இத்தகைய மழை வாய்த்தது. வயலாகச் சேர்த்த நிலத்தையெல்லாம் மீண்டும் தனக்கே சொந்தமாக்கிக்கொண்டு திமிறி ஓலத்துடன் நகர்ந்த ஆற்றை இன்னும் மறக்க முடிவில்லை. எத்தனை மழையும் வழிந்து ஓடத்தானே வேணும். இன்னும் கரைத்தழிக்க முடியவில்லை என புரியாததாலா மழை பெய்துகொண்டே இருக்கிறது?

மனம் புதுப்புது ஊடுவழிகளில் தேடிச் சளைத்தது. தலையணை பக்கத்தில் புத்தகம் தேமே என்று படுத்திருந்தது. அதன் மீது கைவைத்து எப்போதென்று தெரியாத கணத்தில் உறக்கத்தில் விழுந்தவளை பறவைகளின் கெச்சட்டங்கள் எழுப்பின.

அத்தனை பறவை குரலிலும் குயிலின் அழைப்பு மீறி ஒலித்தது. அவற்றிற்கு மழை முடித்து எழுந்த மெல்லொளி தந்த உற்சாகம். பக்கத்திலிருந்த பாழடைந்த வீட்டின் அடர்ந்த மரங்களின் இலைகள் பளபளத்தன. அலைபேசியைத் தட்டினாள். அதே அழைப்பு இருபத்தாறு முறை.

மெல்ல துலங்கிக் கொண்டிருந்தது காலை. மெல்லிய நீராவிப் படலத்தை விலகிக் கொண்டிருந்தது கொல்லி மலை. வாசல் படியை கழுவும்போதே மனதில் ஒருதுணுக்குறல். யாரோ பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

கோலத்தின் பாதியில் சட்டென்று நிமிர்ந்தாள். அவன், அத்தை வீட்டின் வாசலில் நின்று கண்ணன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அதிர்ந்து பார்வையை தழைத்தபடி திரும்பினான்.

தேநீர் அருந்தும்போது மீண்டும் அழைப்பு. வீட்டு சனீஸ்வரன்களை யாரிடமும் வம்புக்கு நிற்காதீர்கள், எந்தப் பிள்ளையிடமும் தேவையில்லாமல் பேசாதீர்கள் என்றால் கேட்பதில்லை.

கண்ணனுக்கும் இவன்களுக்குள்ளும் எதாவது நடந்திருக்குமா?ஆனால் பெண்குரல்தானே கேட்டது. எட்டு மணிக்கு மேல் இரும்பு கேட் பக்கத்தில் தெருவைப் பார்த்து நின்றாள்.

எதிர்வீட்டு கதிர்அண்ணன் வண்டியைக் கிளப்பி நின்று, “ஒனக்கு மட்டும் தெருவுல தேர் ஓடுதோ,”என்றபின் முகத்தை உற்றுப் பார்த்து, “ஒடம்புக்கு முடியலயா…” என்றார். இல்லை என்று தலையாட்டினாள்.

“நல்லா சோறத் தின்னுட்டு படுத்து எந்திரி… எதுன்னாலும் ஓடிப் போயிரும்,” என்றபின் வண்டியை முடுக்கினார்.

தெருவின் கடைசி வீட்டை அடுத்த நெல்வயல்களின் பசுமை காலை வெயிலில் அலையடித்தது. இடையில் டேங்க்கில் கூட நீர் பிடிக்க ஆட்களில்லை. அந்த சந்திலிருந்து கண்ணன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

கல்பாவிய செம்மண் பாதையில், கருப்பு இடைக்கயிறுடன் உச்சிச் சிண்டு அசைய குஞ்சுமணியை ஆட்டியபடி வருகிறான். இவள் முட்டி தொடும் பாவாடையுடன் ஓடிச்சென்று அவனைத் தூக்கி, எடை தாளாமல் உடல் சரிய வயிற்றில் வைத்துக் கொள்கிறாள்.

பாதையோரத்தில் பலகையைப் போட்டு செல்வராணிச் சித்தி கால் நீட்டி அமர்ந்திருக்கிறாள். அவளின் இரு கால்களில் படுத்துக்கொண்டு கண்ணன் துள்ளுகிறான். சுடுநீரில் குளிக்க வைத்தபின் தம்பிக்கு ‘திடுக்கு தண்ணி’ ஊத்து, என்று ஈயச் செம்பில் பச்சைத் தண்ணீரை மொண்டு சங்கரியின் கைகளில் கொடுக்கிறாள்.

“தம்பி பாவம் அழுவுவான்.”

“தம்பி பயந்தறக்கூடாதுன்னுதானே… ஊத்து பிள்ளே…”

தண்ணீரை அவன் தொடையிடுக்கில் சரியாக குஞ்சிப்பூ மீது ஊற்றியதும் வீறிடுகிறான்.

“தம்பி பாவம்… தம்பி பாவம்…” என்றபடி பாவாடையைச் சுருட்டி தரையில் அமர்ந்து துண்டை மடியில் விரிக்கிறாள். கண்களில் அவன் உருவம் மங்கித் தெரிய அருகில் வந்திருந்தான். மீசையும் தாடியுமாக வளர்ந்த ஆண். கண்களைச் சிமிட்டியபடி, “ டேய் நில்றா,” என்று அழைக்க எத்தனித்த வாய், “தம்பி கொஞ்சம் நில்லு,” என்றுதான் அழைத்தது. மழை முடித்த வெயில் சுள்ளென்று எரிந்தது.

“என்ன?” என்று கண்களை இடுக்கிப் பார்த்தான். அவள் எதுவும் பேசாமல் நின்றாள்.

“என்னக்கா….”

பொற்கிளியம்மா , “ என்ன உரிமையா நிக்க சொல்றவ ,” என்று பொக்கை வாய் நிறைய சிரித்தாள். அவளுக்கு எப்படியும் பசங்களுக்குள்ளான புகைச்சல் தெரிந்திருக்கும்.

அவள் இயல்புக்கு மீறிய குரலில், “பொறந்தவனதானே உரிமையா நில்லுடான்னு சொல்லமுடியும். கூடவே பெறந்தாதானா…” என்றவள் குரல் தடுமாற நிறுத்திக் கொண்டாள். கண்ணன் நெற்றியை சுருக்கியபடி நின்றான்.

“எந் தங்கப்பிள்ளைகளா ஒரு தெருவுல பெறந்திட்டம்… உனக்கு இவனும் பொறந்தவன்தான். நீ பேசு…பேசு,” என்றபடி கைத்தடியை மடியில் சாய்த்தபடி குட்டித்திண்ணையில் அமர்ந்தாள். கண்ணன் குனிந்துகொண்டான்.

“இதென்ன புதுப் பழக்கம்… யாருக்கிட்ட பொல்லாப்போ அவங்கிட்ட வச்சுக்க வேண்டியதுதானே…”

“அதுசரி …” என்று கிழவி அதாகவே சொல்லிக் கொண்டது.

நிமிர்ந்த அவன் கண்கள் சிவந்திருந்தன. அது சினமேறிய கண்கள்.

“தெறக்கமுடியாத பூட்டுக்கு கதவ எட்டிஉதச்சானாம்…”

“யாரு கெழவி …”என்றான்.

“யாரோ ஒருத்தன்… நீ எங்க போற…”

“வயக்காடெல்லாம் மழத்தண்ணி… மோட்டை எடுத்துவிட்டு வடியவிடனும்…”

“ பசி தாங்கல….” என்றபடி எழுந்து நடந்தாள்.

சங்கரி கண்ணனைப் பார்த்தாள். அவள் பார்வையை விலக்கி நடந்தான். மண்வெட்டியுடன் வந்த வெங்கடேசுடன் பேசிக்கொண்டே முக்கால் பேண்ட்டின் பாக்கெட்டில் அலைபேசியை வைத்தபடி திரும்பிப் பார்த்துவிட்டு சென்றான்.

கணுக்காலில் பட்டின் மென்மையுடன் நித்யமல்லி உரசியது. சட்டென்று கால்களை நகர்த்திக் கொண்டாள். அவிழக் காத்திருந்த மொட்டுகள் வானத்தை நோக்கி நீண்டிருந்தன. குனிந்து அதன் இலைகளை, மலர்களை, தளிர்களை, தடவினாள். அய்யா வேட்டியை சற்றுச் சுருட்டியபடி வாசல்படியில் அமர்ந்திருந்தார். கண்களும் புன்னகையும் அவளை அருகில் அழைத்தன.

கடைசி வரை – பாவண்ணன் சிறுகதை

க்ளாரிநெட்டை உறையிலிருந்து எடுத்து கைக்குட்டையால் நான் துடைக்கத் தொடங்கியதுமே “ஒரு டீ குடிச்சிட்டு தொடங்கலாமாண்ணே?” என்று கேட்டான் ட்ரம்பட் கோவிந்தன். மெளனமாக அவன் பக்கமாக பார்வையைத் திருப்பி “நாலு பாட்டு போவட்டும்டா, அப்பறமா பாத்துக்கலாம்” என்று விரல்களால் சைகை காட்டினேன். உடனே அவனும் ட்ரம்பட்டை எடுத்துக்கொண்டான். உறையை மடித்து பெரிய ட்ரம் தனபாலிடம் இடது கையால் கொடுத்தான். நான் மடித்து வைத்திருந்த உறையை சின்ன ட்ரம் தேசிங்கு எடுத்துக்கொண்டு போனான்.

’நாலு பேருக்கு நன்றி’ பாட்டை வாசிக்கத் தொடங்கினேன். சரியான புள்ளியில் ட்ரம்பட் வந்து சேர்ந்துகொண்டது. பல்லவியை முடித்து சரணத்தைத் தொடங்கும் வரை பதற்றம் ஒரு பாரமாக என்னை அழுத்திக்கொண்டிருந்தது. அதற்குப் பிறகே உடம்பும் மனசும் லேசானது. ஒருகணம் ரயில் ஜன்னலோரமாக முஸ்லிம் குல்லாயோடு எம்.ஜி.ஆர். முகம் சாய்த்து அழும் காட்சியை நினைத்துக்கொண்டேன். முதல் சரணத்தை நல்லபடியாக முடித்து மீண்டும் நாலு பேருக்கு நன்றியில் வந்து நிறுத்திவிட்டு கோவிந்தனைப் பார்த்தேன். அவன் புருவங்களை உயர்த்தி தலையசைத்ததும் நிம்மதியாக இருந்தது.

இரண்டாவது சரணத்தைத் தொடங்கிய பிறகுதான் வாசலுக்கு எதிரில் துணிக்கூரையின் கீழே பெஞ்சில் கிடத்தப்பட்டிருந்த தாத்தாவின் உடலைப் பார்த்தேன். எழுபத்தைந்து வயதிருக்கும். தலைமாட்டில் அம்மன் விளக்கெரிந்தது. பக்கத்தில் வத்திக்கொத்துகள். பெரியவரின் தலைமுடி அடர்த்தி ஆச்சரியமாக இருந்தது. நெற்றியில் நீளமான திருமண் கோடு. நடுவில் வட்டமான ஒரு ரூபாய் நாணயம். ஒரு பெரிய ரோஜா மாலை வயிறு வரைக்கும் நீண்டிருந்தது. நாலைந்து செவ்வரளி மாலைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்திருந்தன. வட்டமாக உட்கார்ந்திருந்த பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தார்கள். மேல்சட்டை போடாத ஒரு சின்னப் பையன் இறந்துபோனவரின் முகத்தையே பார்த்தபடி அவருடைய காலடியில் உட்கார்ந்திருந்தான். துணிக்கூரையைத் தாண்டி வேப்பமரத்தடியிலும் புங்கமரத்தடியிலும் போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் உறவுக்காரர்களும் வெளியூரிலிருந்து வந்தவர்களும் உட்கார்ந்திருந்தார்கள். சின்னப்பிள்ளைகள் பெஞ்சுகளுக்கிடையில் புகுந்து குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

முதல் பாட்டைத் தொடர்ந்து நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தொடங்கினேன். புங்கமரத்தடியிலிருந்து இரண்டு பேர் எழுந்து வந்து தனபால் பக்கமாகச் சென்று ட்ரம்மைத் தொட்டபடி “நீங்க தவளகுப்பம்தான?” என்று கேட்டான். தனபால் தலையசைத்ததுமே ”அரியாங்குப்பத்துல ஒரு சாவு வூட்டுல ஒங்க வாசிப்ப நாங்க ஏற்கனவே கேட்டிருக்கம். நல்லா இருக்கும் ஒங்க வாசிப்பு” என்று சொன்னான். அப்போது தனபால் முகம் பூரித்துப்போவதை நான் பார்த்தேன். ”அண்ணன்தான் எங்க குரு” என்று அவன் என் பக்கமாக கை காட்டினான்.

பாட்டின் கடைசி வரியை வாசித்துக்கொண்டிருந்தபோது கூரையில் உட்கார்ந்திருந்தவர்களின் பார்வை சாலையின் பக்கம் திரும்புவதைப் பார்த்து தன்னிச்சையாக என் பார்வையும் திரும்பிவிட்டது. ”என்ன பெத்த அப்பா” என்று ஓங்கிய குரலோடு அழுது கூச்சலிட்டபடி நெஞ்சில் அறைந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக ஒருத்தி வந்துகொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னாலேயே ஒரு பெரிய ரோஜா மாலையோடு வழுக்கைத்தலையுள்ள ஒருவர் வந்தார். அவருக்குப் பக்கத்தில் நான்கு சிறுமிகள் ஒட்டிக்கொண்டு வந்தனர். “பெரிய பொண்ணு. பண்ருட்டிலேருந்து வருது” என்று கூட்டத்தில் ஒருவர் சொன்னது காதில் விழுந்தது. மூன்று தப்பட்டைக்காரர்களும் வேகமாகச் சென்று அவர்களை எதிர்கொண்டு தப்பட்டை அடித்தபடி அழைத்துவந்தார்கள்.

வந்த வேகத்தில் அந்தப் பெண் அவர் உடலைக் கட்டிக்கொண்டு அழுதாள். “எல்லாத்தயும் தொலச்சிட்டு ஊட்டோட வந்து கெடன்னு நூறுதரம் படிச்சி படிச்சி சொன்னனே. வரம்மா வரம்மான்னு சொல்லிட்டு வராமயே போயிட்டியேப்பா” என்று கதறினாள். விரிந்திருந்த அவர் கைவிரல்களை தன் கன்னத்தோடு வைத்து அழுத்திக்கொண்டாள். வழுக்கைத்தலைக்காரர் தன்னோடு கொண்டுவந்திருந்த மாலையை போட்டுவிட்டு முடிச்சிடப்பட்டிருந்த பெருவிரல்களைப் பார்த்தபடி சில கணங்கள் நின்றார். பெருமூச்சோடு வெளியே வந்து தப்பட்டைக்காரர்களுக்கு பணம் கொடுத்தார்.

சிறுமிகள் அம்மாவுக்கு அருகில் சென்று நின்றுகொண்டனர். “தாத்தாவ கூப்டுங்கடி. நீங்க கூப்ட்டா தாத்தா வந்துருவாருங்கடி” என்று அசிறுமிகளை தலைமாட்டை நோக்கிச் செலுத்தினாள். “ஒரு பத்து நாள் ஒன்ன பக்கத்துல ஒக்கார வச்சி ஒனக்கு சோறு போடற பாக்கியமே இல்லாம பண்ணிட்டியேப்பா. நான் என்னப்பா பாவம் செஞ்சன்?” என்று தேம்பித்தேம்பி அவள் அழுத நிலை என் மனத்தை அசைத்தது.

நான் என்னையறியாமல் “நெஞ்சடச்சி நின்னேனே” என்று சட்டென்று தொடங்கிவிட்டேன். வழக்கமான பாடல் வரிசையை மீறி எப்படியோ வந்துவிட்டது. அது புதிய பாட்டு. இன்னும் சரியாகப் பாடிப் பழகாத பாட்டு. கோவிந்தன் திணறித்திணறி பின்தொடர்ந்து வந்து சரியான புள்ளியில் சேர்ந்துகொண்டான். தனபாலுக்கும் தேசிங்குக்கும் அது திகைப்பளித்திருக்கவேண்டும். சட்டென்று எழுந்து நின்றுவிட்டார்கள். இரண்டு வரி கடந்து பாட்டு நிலைகொண்ட பிறகுதான் அவர்கள் அமைதியடைந்து மறுபடியும் உட்கார்ந்தனர். தேசிங்கு செல்லமாகச் சிணுங்கியபடி தலையில் அடித்துக்கொள்வதை நான் மட்டும் பார்த்தேன்.

“ஒரு சாவு வூட்டுல ஆயிரம் சொந்தக்காரங்க கதறுவாங்க. பொரளுவாங்க. அதயெல்லாம் நாம பாக்கவே கூடாது. நம்ம வேல எதுவோ அத மட்டும்தான் செய்யணும். வந்தமா, வாசிச்சமா, கூலிய வாங்கனமான்னு போயிகினே இருக்கணும்” என்று தேசிங்கு சுட்டிக் காட்டாத நாளே இல்லை. அவன் என்னைவிட வயதில் சின்னவன். ஆனால் அவனுடைய விவேகம் எனக்கு அறவே கிடையாது. உணர்ச்சிவசப்படாதவனாக ஒருநாளும் என்னால் இருக்க முடிந்ததில்லை.

பாட்டை முடித்த பிறகுதான் மனசுக்கு நிம்மதியாக இருந்தது. நடுவில் எங்காவது சொதப்பிவிடுவேனோ என்று ஒவ்வொரு கணமும் தடுமாறிக்கொண்டே இருந்தேன். அதற்காகவே பார்வையை எந்தப் பக்கமும் திருப்பாமல் ஊமத்தம்பூ மாதிரி விரிந்திருந்த குழல்வாயை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். கடைசி சரணத்தை முடித்து மீண்டும் பல்லவியைத் தொடங்கியபிறகுதான் நம்பிக்கையும் தெம்பும் வந்தது.

நாங்கள் பாட்டை நிறுத்துவதற்காகவே காத்திருந்ததுபோல இரண்டு சிறுவர்கள் பக்கத்தில் வந்து நின்றார்கள். ஒவ்வொருவரிடமும் பிளாஸ்டிக் தம்ளரை நீட்டினான் ஒருவன். மற்றொருவன் கூஜாவிலிருந்த டீயை ஊற்றினான். அவன் தயக்கத்தோடு என்னைப் பார்த்து “இப்ப நீங்க பாடனது விழா படத்துல வர பாட்டுதாண்ணே?” என்று ஆர்வத்துடன் கேட்டான். சூடான மிடறு வாய்க்குள் இருந்த நிலையிலேயே நான் ஆமாம் என்பதுபோல தலையசைத்துவிட்டு புன்னகைத்தேன். “நான் அந்தப் படத்த ரெண்டு தரம் பாத்திருக்கேண்ணே” என்று சிரித்துக்கொண்டே சென்றான்.

நாங்கள் நிறுத்தியதுமே தப்பட்டைக் குழு தொடங்கிவிட்டது. “அவுங்க கொஞ்ச நேரம் அடிக்கட்டும். நீங்க அப்பிடி நெழல்ல உக்காருங்க” என்று எங்களைப் பார்த்து சொன்னபடி ஒரு பெஞ்சில் வந்து உட்கார்ந்தார் ஒருவர். காலர் இல்லாத ஜிப்பா போட்டிருந்தார். தோளில் ஒரு துண்டு இருந்தது. ”நல்லா இருக்குது தம்பி ஒங்க வாசிப்பு. என் பெரிய பையன்தான் ஒங்கள பத்தி சொன்னான். பத்துகண்ணு பக்கத்துல ஒரு சாவுல ஒங்க வாசிப்ப கேட்டிருப்பான்போல. அத நெனப்புல வச்சிகினு அவுங்ககிட்ட பேசி நெம்பர வாங்கி என்கிட்ட குடுத்து பேசுங்கன்னான்” என்றார். “ஒங்களாட்டம் பெரியவங்க ஆதரவு எங்கள மாதிரி குழுக்களுக்கு பெரிய பலம்யா” என்று நன்றியோடு தலையசைத்தேன்.

அடுத்தடுத்த தெருக்களில் இருந்த ஆண்களும் பெண்களும் கூட்டமாக வந்து மாலை போட்டுவிட்டு நிழல் இருக்கும் பக்கமாக ஒதுங்கி உட்கார்ந்தார்கள்.

பூக்கூடைகளையும் மூங்கில்களையும் சுமந்து வந்த வண்டி சாலையிலிருந்து பக்கவாட்டில் ஒதுங்கி ஓரமாக நின்றது. எல்லாவற்றையும் இறக்கி ஓரமாக ஒதுக்கிவிட்டு துணிக்கூரையின் பக்கம் வந்து யாரையோ தேடுவதுபோல நின்று பார்த்தார்கள். ”இங்க, இங்க, இந்தப் பக்கமா வாங்க” என்றபடி ஜிப்பாக்காரர் கையைத் தூக்கினார். அவர்கள் நெருங்கி வருவதற்குள் “டேய் ரவி, இவுங்களுக்கு டீ குடு” என்று கூஜா வைத்திருந்த சிறுவனை அழைத்தார். அவன் ஓடி வந்து அவர்களுக்கு தம்ளர்களை நிறைத்துக் கொடுத்தான்.

“மசமசன்னு நிக்காம வேலய இப்பவே ஆரம்பிச்சி மெதுவா செஞ்சிகினே இருங்கடா. நாலு மணிக்கு எடுக்கணும். சரியா?”

அவர்கள் தலையை அசைத்தபடியே டீ பருகினார்கள். ஜிப்பாக்காரர் மீண்டும் அவர்களிடம் “அதுக்காக அவசர அடியில ஏனோதானோன்னு வேலய முடிச்சிடக்கூடாது. மரக்காணத்துக்காரர் ஊட்டுல செஞ்சிங்களே பூப்பல்லக்கு. அந்த மாதிரி செய்யணும். புரியுதா?” என்று சொன்னார்.

“ஒரு கொறயும் இல்லாம செஞ்சிடலாம்ய்யா. உங்க பேச்சுக்கு மறுபேச்சு உண்டா?. பூ வெல கன்னாபின்னான்னு ஏறிட்டுது. செலவு கொஞ்சம் கூட ஆவும். அத நீங்க பாத்துக்கிட்டா போதும்….”

“ஒனக்கு மட்டும் தனியா வெல ஏறிடுச்சாடா?” என்று காதைக் குடைந்துகொண்டே சிரித்தார் அவர். பிறகு அவர்களிடம் “சரிசரி. சொல்லிட்டிங்க இல்ல, பார்த்துக்கலாம், போங்கடா. போயி நடக்கற வேலய பாருங்க” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

பிரதான சாலையிலிருந்து வீட்டை நோக்கிய சாலையில் வேகமாகத் திரும்பிய ஒரு புல்லட் வண்டி மெதுவாக வந்து தப்பட்டைக்காரர்களுக்கு அருகில் நின்றது. வண்டியிலிருந்து ஒருத்தி வேகமாக இறங்கி “ஐயோ அப்பா” என்று கூச்சலிட்டபடி ஓடி வந்தாள். ‘எப்ப வந்தாலும் வா கண்ணு வா கண்ணுன்னு வாய் நெறய சொல்லுவியேப்பா. இப்படி ஒரு சொல்லும் சொல்லாம படுத்துங் கெடக்கறியேப்பா” என்று கூவி அழுதபடி கால்களிடையில் முகத்தைப் புதைத்தாள்.

ஜிப்பாக்காரர் என்னிடம் “ரெண்டாவது பொண்ணு. பால்வாடி டீச்சர். காட்டுமன்னார் கோயில்ல குடும்பம்” என்றார்.

வண்டியை ஓரமாக நிழல் பார்த்து நிறுத்திவிட்டு வந்தவர் கொண்டு வந்த மாலையை அவர் உடல்மீது வைத்துவிட்டு ஒருகணம் கைகுவித்து வணங்கியபடி நின்றார். அவரோடு வந்த இரண்டு பிள்ளைகளும் தன் அம்மா அழுவதைப் பார்த்தபடி கலவரத்தோடு நின்றார்கள். அவர் வெளியே வந்து தப்பட்டைக்காரரிடம் ஐம்பது ரூபாய் நோட்டொன்றை எடுத்துக் கொடுத்தார்.

”கத்தரியும் பச்சநெறம், என் கர்ணர் மக தங்கநெறம், காத்துபட்டு மங்காம, கவலப்பட்டு மங்கறனே என்ன பெத்த அப்பா”

ஒப்பாரிக்குரல் அங்கிருந்தவர்கள் அனைவரையும் உருக்கியது.

ஜிப்பாக்காரரின் பையில் கைபேசி மணியொலித்தது. அவர் அதை எடுத்து ஒருகணம் எண்ணைப் பார்த்துவிட்டு பேசினார். மறுமுனையில் சொல்வதையெல்லாம் கேட்டபிறகு “இந்த நேரத்துல வெறகு வெலயயும் எருமுட்ட வெலயயும் பாத்தா முடியுமா ராஜா? இவனே இந்த வெல விக்கறான்னா, இன்னொருத்தவன் மட்டும் கொறஞ்ச வெலைக்கு விப்பானா என்ன? ஒரு தரம் கொறச்சி கேளு. குடுத்தா சரி. இல்லனா கேக்கற பணத்த குடுத்துட்டு வாங்கிட்டு வா” என்றார். சில கணங்களுக்குப் பிறகு மீண்டும் “நேரா சுடுகாட்டுலயே போய் எறக்கிடு ராஜா. நால்ர மணிக்கு வந்துடும், தயாரா இருக்கணும்ன்னு சுடறவன்கிட்ட ஒரு வார்த்த சொல்லி வை” என்றார்.

தப்பட்டைக்காரர்கள் ஓசை நின்றது. நான் அவர்களைத் திரும்பிப் பார்த்தேன். நீங்க ஆரம்பிங்க என்றபடி கையசைத்துக்கொண்டே அவர்கள் நிழலில் ஒதுங்கினார்கள்.

நான் தனபாலைப் பார்த்து தலையசைத்ததும் பையில் வைத்திருந்த தாளக்குச்சிகளை எடுத்து பெரிய ட்ரம்மின் மீது மிக மெதுவாக தொட்டு இழுத்தான். சட்டென ஒரு குடம் உருண்ட சத்தம் கேட்டது. அதற்கு பதில் சொல்வதுபோல தேசிங்கு தன் சின்ன ட்ரம்மின் மீது இழுத்து இன்னொருவிதமான சத்தத்தை எழுப்பினான். கூடியிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் ஒருகணம் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களுடைய கவனத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்போல ஒவ்வொரு விதமாக ஓசையெழும்படி இருவரும் மாறிமாறி இழுத்தார்கள். மரப்படிக்கட்டுகளில் தடதடவென ஏறுவதுபோன்ற வினோதமான அந்தச் சத்தம் கேள்விபதில் போல இருந்தது. உச்சப்புள்ளியில் இரு சத்தங்களும் ஒன்றிணைய இருவரும் வழக்கமான வாசிப்பைத் தொடங்கினார்கள். அதற்குப் பிறகு கால்மணி நேரம் ஓய்வே இல்லை. கவனம் சிதறாத வாசிப்பு.

அவர்கள் முடிக்கும் கணத்துக்காகக் காத்திருந்ததுபோல நான் க்ளாரினெட்டை எடுத்து ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்று தொடங்கினேன். “அண்ணனுக்கு மூடு வந்திடுச்சிடோய்” என்றபடி கோவிந்தன் ட்ரம்பட்டை எடுத்தான். கூரையில் உட்கார்ந்திருந்த பல பெரியவர்கள் எங்களைக் கவனிப்பதைப் பார்த்து எனக்குள் உண்மையாகவே உற்சாகம் ஊற்றெடுத்தது.

மூட்டைமுடிச்சுகளோடு சடங்குக்காரர் பின்தொடர இளைஞரொருவர் ஜிப்பாக்காரர் அருகில் வந்து “மளிகை சாமான்லாம் வந்துட்டுதுப்பா. எங்க எறக்கலாம்? சமையல எங்க வச்சிக்கறது? ரெண்டு மணிக்குள்ளயாவுது செஞ்சி எறக்கணும்ல. நெறய சின்ன பசங்க இருக்குது” என்று சொன்னார். “புத்துப்பட்டாரு ஊட்டு தோட்டத்துல எறக்கிடுப்பா. நான் ஏற்கனவே அவுங்ககிட்ட சொல்லிட்டேன். சும்மா சோறு, ரசம், அப்பளம் போதும். புரிதா?” என்றார் ஜிப்பாக்காரர். அவர் நகர்ந்ததுமே சடங்குக்காரர் முன்னால் வந்து நின்றார். “கொஞ்சம் இரு சிங்காரம். அவசரப்படாத. மூணாவது பொண்ணு இன்னும் வந்து சேரலையே. வந்ததுக்கு அப்புறம் யாரு கொள்ளி வைக்கறதுன்னு பேசி முடிவு செய்யலாம்” என்றார்.

நான் முத்துக்கு முத்தாக பாட்டை வாசிக்கத் தொடங்கினேன். அப்படியே தொடர்ந்து ஆறு பாடல்கள் வாசித்தேன். இறுதியாக ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே பாட்டுக்கு வந்து சேர்ந்தேன். “அண்ணன் இங்க வந்துதான் நிறுத்துவாருன்னு நெனச்சேன், அதேமாதிரி செய்றாரு பாரு” என்று தனபாலைப் பார்த்துச் சிரித்தான் தேசிங்கு. வெயில் உச்சிக்கு ஏறிவிட்டதால் துணிக்கூரையின் நிழலிருக்கும் பக்கமாக இடம்மாறினோம்.

ஜிப்பாக்காரர் தப்பட்டைக்காரர்களிடம் சாப்பாட்டுச் செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பிவைத்தார். பிறகு என் பக்கமாக வந்து “நீங்களும் போய் வந்துடுங்கப்பா” என்றபடி பணம் கொடுத்தார். நான் அதை வாங்கி அப்படியே தனபாலிடம் கொடுத்து “போய்ட்டு சீக்கிரமா வாங்க” என்றேன். “ஏம்பா நீ போவலையா?” என்று கேட்டார் ஜிப்பாக்காரர். “இந்த நேரத்துல நான் சாப்படறதில்லைங்க” என்றேன் நான். அவர் உடனே “டேய் ரவி, இங்க வாடா” என்று நிழலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவனை அழைத்து “இந்தா, கூஜாவ எடுத்தும் போயி ரெண்டு டீ வாங்கிட்டு வா” என்று அனுப்பிவைத்தார்.

தொலைவில் பத்து பதினைந்து பேர் சேர்ந்து வருவதைப் பார்த்ததுமே ஜிப்பாக்காரர் தப்பட்டைக்காரர்கள் பக்கமாகத் திரும்பி “தம்பிங்களா, இளைஞர் சங்கத்துக்காரனுங்க வரானுங்க போல. போங்க. போய் அழச்சிகினு வாங்க” என்றார். அவர்கள் அக்கணமே எழுந்து போனார்கள். தப்பட்டைகள் மட்டும் முழங்க மெளன ஊர்வலமாக வந்தது இளைஞர்கள் கூட்டம். எல்லோருமே அந்த வட்டாரத்து இளைஞர்கள். இடுப்புயரத்துக்கு ஒரு பெரிய மலர்வளையத்தை நான்குபேர் ஆளுக்கொரு பக்கம் பிடித்திருந்தனர். மெதுவாக அதை மறைந்துபோனவரின் காலடிகளில் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்கள்.

அவர்கள் செல்லும் திசையில் ஜிப்பாக்காரர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே எதிர்பாராத விதமாக துணிக்கூரைக்கு அருகிலேயே ஒரு வாடகைக்கார் வந்து நின்றது. கதவைத் திறந்துகொண்டு “என்ன பெத்த தெய்வமே” என்று அலறி அழுதபடி ஓடி வந்து அவர் காலடியில் விழுந்தாள் ஒரு பெண். அவளைத் தொடர்ந்து அவளுடைய கணவர் இறங்கி வந்து மாலை போட்டு வணங்கினார். அவருடைய மூன்று பிள்ளைகளும் அவருக்கு அருகில் சென்று மிரட்சியோடு பார்த்தபடி நின்றார்கள்.

“மூனாவது பொண்ணு. இங்க இருக்கிற திருக்கனூருலேந்து வரதுக்கு கார் எதுக்கு சொல்லு? அற்பனுக்கு வாழ்வு வந்த அர்த்தராத்திரில கொட பிடிப்பானாம். அந்த மாதிரி கத இது” என்று எங்கோ பார்ப்பதுபோல என்னிடம் முணுமுணுத்தார் ஜிப்பாக்காரர்.

”மொத்தம் மூணு பொண்ணுங்களா அவருக்கு?”

“ஆமாமாம். மூணும் முத்துங்க” என்று கசந்த சிரிப்பை உதிர்த்தார். தொடர்ந்து “கட்டிம் போன நாள்லேருந்து ஒருநாள் கூட அவர நிம்மதியா இருக்க உட்டதில்ல” என்று பெருமூச்சு விட்டார்.

அவரே தொடரட்டும் என நான் அமைதியாக இருந்தேன். அதற்குள் சிறுவன் டீ வாங்கி வந்தான். டீத்தம்ளரை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மரநிழல் பக்கமாக இருவரும் சென்றோம். ஜிப்பாக்காரரின் மகன் துணிக்கூரையடியில் விளையாடிக்கொண்டிருந்த சின்னப்பிள்ளைகளை எல்லாம் அழைத்துக்கொண்டு மதிலோரமாக நிழலிருக்கும் பக்கமாகவே நடத்தி அழைத்துச் சென்றான்.

”ஆடு மேய்க்கறதுதான் தாத்தாவுக்கு தொழில். பத்து பாஞ்சி ஆடுங்களோட ஒரு காலத்துல சிங்கிரிகோயில்லேருந்து வந்தவருன்னு சொல்வாரு எங்க அப்பா. ஒரு கெட்ட பழக்கமில்ல. நேரம் காலமில்லாம ஆடுங்க பின்னாலயே ஓடுவாரு. பத்து ஆடு அம்பதாச்சி. அம்பது நூறாச்சி. குட்டி நல்லா பெரிசானதும் சந்தையில காசாக்கிடுவாரு. அப்பிடி சேத்த பணத்துலதான் இப்ப இருக்கற ஊட்ட கட்டனாரு.”

“அதுதான் இந்த ஊடா?” என்று ஆவலோடு கேட்டபடி அதை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன்.

”இது மட்டுமா செஞ்சாரு? மூணும் பொட்டபுள்ளயா பொறந்திடுச்சே நாள பின்ன ஒதவும்ன்னு ஊருக்கு வெளியே மூணு மன வாங்கி போட்டாரு. எல்லாரயுமே பள்ளிக்கூடத்துல சேத்து செலவு செஞ்சி படிக்க வச்சாரு. யாருக்கும் எந்த கொறயும் வைக்கலை. வளந்து ஆளானதும் நல்ல எடமா பாத்து கல்யாணம் பண்ணி வச்சாரு. ஏற்கனவே சொன்னமாரி ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒரு மனய எழுதிக் குடுத்துட்டாரு. இதுக்கு மேல ஒரு அப்பன்காரன் ஒரு பொண்ணுக்கு என்ன செய்யமுடியும், நீயே சொல்லு தம்பி?”

”எல்லாக் கடமைங்களயும்தான் முடிச்சிட்டாரே”

ஜிப்பாக்காரர் பெருமூச்சு விட்டார். ”இந்த உலகத்துலயே நன்றி இல்லாத உயிர் எது தெரிமா தம்பி,?” என்று கேட்டுவிட்டு என் முகத்தைப் பார்த்து “மனுஷன்தான்” என்று அழுத்திச் சொன்னார்.

“ஒவ்வொரு பொண்ணுக்கும் அவர் செஞ்ச சீர் செனத்திக்கு கொறயே இல்ல. ஒவ்வொருத்திக்கும் புள்ள பொறக்கும்போது ஓடிஓடி நின்னு செஞ்சாரு. அந்த பொண்ணுங்களுக்கு இந்த ஊருல மண்ணு வேணாம்னு வித்துட்டு அவுங்க வாழற ஊருல போய் புதுசா ஒன்னு வாங்கிகிட்டாங்க. வித்ததோ வாங்கனதோ தப்பில்ல தம்பி. ஒரு பொண்ணு அஞ்சி லட்சத்துக்கு வித்துது. இன்னொரு பொண்ணு நாலு லட்சத்துக்கு வித்துது. கடைசி பொண்ணு ஆறு லட்சத்துக்கு வித்துது. இதுல தாத்தா செய்ய என்ன இருக்குது சொல்லுங்க. ஒரு கண்ணுல வெண்ணெ ஒரு கண்ணுல சுண்ணாம்புன்னு நீ நடந்துட்டன்னு இவரு கூட எப்ப பாத்தாலும் ஒரே சண்ட. நீ மோசக்காரன், ஓரவஞ்சன செய்யறவன்னு ஒரே பேச்சு.”

கேட்கக்கேட்க எனக்கு கசப்பாக இருந்தது. பதில் பேசாமல் அமைதியாக அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“அவரு பொண்டாட்டிக்கு ஒடம்பு முடியலைன்னு ஒரு தரம் பெரியாஸ்பத்திரியில சேத்தாரு. வயசான ஆம்பளை ஒரு பொம்பள வார்டுல எப்படி தொணைக்கு இருக்க முடியும், சொல்லுங்க. அம்மா, ஒரு பத்து நாள் கூட இருந்து பாத்துக்குங்கம்மான்னு பொண்ணுங்ககிட்ட கெஞ்சனாரு. அவளக் கேளுன்னு இவ, இவளக் கேளுன்னு அவ, அப்படியே ஆளாளுக்கு சாக்குபோக்கு சொல்லி அனுப்பிட்டாங்க. கடசியில ஒரு ஆளும் வரலை. பாவம், அந்த அம்மா அனாதயா ஆஸ்பத்திரியிலயே செத்து போய்டுச்சி.”

”ஐயோ” அந்தச் சம்பவம் ஒருகணம் என் கண்முன்னால் நடப்பதுபோல இருந்தது.

“இது நடந்து ஆறேழு வருஷம் இருக்கும். அப்பவும் அவரு யாரயும் கொற சொல்லி நான் கேட்டதில்ல. வழக்கம்போல ஆடு மேய்ச்சிட்டு காலத்த ஓட்டனாரு. ஒருத்தி கூட எதுக்குப்பா தனியா இருக்கற, என் கூட வந்து இருன்னு கூப்புடலை. தடுமாறி தடுமாறி தாத்தாவும் காலத்த ஓட்டிட்டாரு.”

ஜிப்பாக்காரர் ஒருமுறை பெஞ்ச் மீது மாலைகளிடையில் கிடந்த தாத்தாவின் வற்றிய உடலைப் பார்த்து பெருமூச்சு விட்டார்.

“ஒருநாள் சந்தையில அனாதயா சுத்திட்டிருந்த இந்த பையன கூடவே அழச்சிட்டு வந்து ஊட்டோட வச்சிகிட்டாரு. அன்னையிலேர்ந்து அவன்தான் அவரயும் பாத்துக்கறான். ஆடுங்களயும் பாத்துக்கறான்” என்று நிறுத்தினார். பிறகு தொடர்ந்து “என்ன கேட்டா, அவன்தான் ஞாயமா அவருக்கு கொள்ளி வைக்கணும். ஆனா கர்மம் புடிச்ச ஜனங்க உடுமா என்ன?” என்று உணர்ச்சிவசப்பட்டார். நான் சிலைபோல கால்மாட்டில் உறைந்துபோய் அமர்ந்திருக்கும் அந்தச் சிறுவனை ஒருகணம் திரும்பிப் பார்த்தேன். அடிவயிறு கலங்கியது.

சாப்பிட்டுவிட்டுத் திரும்பியதும் தப்பட்டைக்காரர்கள் இசை தொடங்கியது. அதற்கப் பிறகு நாங்கள் தொடங்கினோம். ஆளுக்கு அரைமணி நேரம் இசைத்தபடி இருக்க, பொழுது போய்க்கொண்டே இருந்தது. சடங்குக்காரர் எந்தப் பரபரப்பும் இல்லாமல் சடங்குகள் அனைத்தையும் செய்துமுடித்தார். நேரம் கழியக்கழிய ஊரே கூடிவிட்டது. நிற்பதற்கே இடமில்லை.

இறுதியாக, தாத்தாவின் உடல் பல்லக்கில் ஏற்றப்பட்டது. கோவிந்தா கோவிந்தா என அனைவரும் குரல்கொடுத்தபடி பல்லக்கை தூக்கினார்கள். நீளவாக்கில் இருந்த மூங்கிலை ஒரே நேரத்தில் அனைவரும் தோளில் தாங்க பல்லக்கு நகரத் தொடங்கியது.

பல்லக்குக்கு முன்னால் தப்பட்டை வரிசை சென்றது. அவர்களைத் தொடர்ந்து நாங்கள் சென்றோம். நான் வீடு வரை உறவு வாசிக்கத் தொடங்கினேன். பிறகு ’மக்க கலங்குதுப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா’ பாட்டை வாசித்தேன்.

சில இளைஞர்கள் கையை உயர்த்தி, இடுப்பையசைத்து ஆடத் தொடங்கினார்கள். அவர்கள் என்னை ஏக்கமாகப் பார்ப்பதுபோல இருந்தது. உடனே அத்தகையவருக்காகவே நாங்கள் பயிற்சி செய்து வைத்திருந்த ’பொறப்பு எறப்பு மனுசன் நம்ம எல்லாருக்குமே இருக்கு’ பாட்டை வாசிக்கத் தொடங்கினேன். ஆட்டக்காரர்கள் உடனே துடிப்போடு ஆடத் தொடங்கிவிட்டார்கள். நான் மீண்டும் அவர்களுக்காகவே ’ஓபாவும் இங்கதான்டா ஒசாமாவும் இங்கதான்டா’ வாசிக்க ஆரம்பித்தேன்.

இளைஞர்கள் களைத்து மனநிறைவோடு ஒதுங்கி நடக்கத் தொடங்கியதும் நான் மறுபடியும் ’நாலு பேருக்கு நன்றி’ பாட்டை வாசித்தேன். அதற்கடுத்து ’ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாட்டு. சுடுகாடு அடையும் வரை அந்த இரு பாடல்களை மட்டுமே மாற்றி மாற்றி இசைத்தேன்.

சுடுகாட்டுக்குள் நுழைந்ததுமே நாங்கள் வாசிப்பை நிறுத்திவிட்டு ஓரமாக ஒதுங்கினோம். காட்டுவாகை மரங்களும் நாவல்மரங்களும் எங்கெங்கும் நிறைந்திருந்தன. வாசலிலிருந்து அரிச்சந்திரன் மேடைக்கும் தகன மேடைக்கும் செல்லும் சிமென்ட் சாலைகளில் நாவல் பழங்கள் விழுந்து நசுங்கிய நீலக்கறைகள் படிந்திருந்தன.

க்ளாரினெட்டை உறையிலிட்டு மூடியபோது சங்கடமா நிறைவா என பிரித்தறிய முடியாத உணர்வு கவிந்திருந்தது. ட்ரம்பெட்டையும் ட்ரம்களையும் உறைகளில் போட்டு மூடி நாடாவால் இழுத்துக் கட்டினான் தனபால்.

இலுப்பை மரத்தடி நிழலில் அனைத்தையும் வைத்த பிறகு “கைகால் கழுவிகினு வரம். பாத்துக்குங்கண்ணே” என்று சொல்லிவிட்டு மூன்று பேரும் அருகிலிருந்த தண்ணீர்க்குழாயின் பக்கம் சென்றார்கள்.

நான் மரத்தில் சாய்ந்துகொள்ளச் சென்றபோதுதான் மறுபக்கத்தில் அந்தச் சிறுவனைப் பார்த்தேன். ஒருகணம் புரியவில்லை. அவன் சுடுகாடு வரைக்கும் எப்படி வந்தான் என்பதே எனக்குப் புரியவில்லை. வழியில் ஒரு இடத்தில் கூட அவனைப் பார்த்த நினைவே இல்லை. அவன் கண்களில் இன்னும் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

அவன் மீதிருந்த பார்வையை விலக்கி சடங்குகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். சடங்குகள் மட்டும் எப்போதுமே எனக்குப் புதிராகத் தோன்றுபவை. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு தெருவுக்கும் வேறுபட்டுக்கொண்டே இருப்பவை சடங்குகள். என்னால் அவற்றை மனத்தில் வரிசைப்படுத்தி இருத்திக்கொள்ளவே முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் புதுசாகத் தோன்றுவது அதனால்தான்.

அரிச்சந்திரனுக்கு படைத்த பிறகு பல்லக்கோடு தாத்தாவின் உடலைப் பிணைத்துக் கட்டியிருந்த கயிறு அறுக்கப்பட்டது. “நெறய பேரு வேணாம். அஞ்சாறு பேரு மட்டும் நில்லுங்க. மத்தவங்க நவுந்து போங்க” என்று சடங்குக்காரர் சொன்னதும் அனைவரும் விலகினார்கள். ”அவசரமில்லாம பொறுமையா கவனமா தூக்கிட்டு வாங்க” என்றபடி முன்னால் நடந்தார் அவர்.

ஆறு பேரும் பக்கத்துக்கு மூன்று பேராக நின்று தலைப்பகுதியையும் இடுப்புப்பகுதியையும் கால்பகுதியையும் தாங்கியபடி தாத்தாவின் உடலைத் தூக்கிக்கொண்டு சென்று தகனமேடையில் வைத்தார்கள்.

”ம்ம்மேம்ம்மே மிமிமே ம்ம்மேம்ம்மே மிமிமே”

திடீரென எழுந்த ஓலத்தைக் கேட்டு எல்லோருமே திகைத்து ஒருகணம் நின்றார்கள். என்ன ஏது என்று நிதானிப்பதற்குள் மீண்டும் ”ம்ம்மேம்ம்மே மிமிமே ம்ம்மேம்ம்மே மிமிமே” என்று ஓலமெழுந்தது. நான் நின்றிருந்த இடத்திலிருந்தே அந்த ஓலம் எழுவதை சற்று தாமதமாகவே என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இலுப்பை மரத்தடியில் அமர்ந்திருந்த சிறுவனே கைகளை நீட்டியும் தலையில் மாறிமாறி அடித்துக்கொண்டும் அந்த ஓலத்தை எழுப்பினான்.

”ம்ம்மேம்ம்மே மிமிமே ம்ம்மேம்ம்மே மிமிமே.”

அந்தக் கதறலைக் கேட்கும்போதே நெஞ்சு கனத்தது. மற்றவர்களும் அவனைக் கவனித்துவிட்டார்கள். அதற்குள் அவன் அந்த ஓலத்தை நாலைந்து முறைகளுக்கும் மேல் எழுப்பிவிட்டான். மரத்தில் முட்டிக்கொண்டான். தலையிலும் நெஞ்சிலும் மாறிமாறி அடித்துக்கொண்டான்.

“எவ்ளோ வேல கெடக்குது. யாராவது அவன நிறுத்துங்களேம்பா” என்று யாரோ ஒருவர் சொல்ல, ஜிப்பாக்காரரும் மற்றவர்களும் தயக்கத்தோடு அவனை நோக்கி “இருடா தம்பி, டேய் தம்பி இருடா, சொன்ன பேச்ச கேளுடா” என்று சொன்னபடி நெருங்கினார்கள். யாராலும் நிறுத்தமுடியாதபடி ஓங்கி ஒலித்தது அவன் ஓலம்.

“யாரும் அவன தொடாதீங்க. ஆத்தா மேல சத்தியமா சொல்றேன். யாரும் தொடாதீங்க அவன” என்று கட்டளையிடும் குரலில் சொன்னபடி திடீரென எழுந்து நின்றார் சடங்குக்காரர். அவர் முகம் அதுவரை பார்த்த முகம்போலில்லை. வேறொருவர் போல நின்றிருந்தார். அனைவரும் திகைத்து விலகினார்கள். அங்கே என்ன நடக்கிறது என எதுவும் தெரியாத நிலையிலேயே அச்சிறுவன் மீண்டும் ம்ம்மேம்ம்மே மிமிமே ம்ம்மேம்ம்மே மிமிமே என்று ஓலமிட்டான்.

எதிர்பாராத கணத்தில் சடங்குக்காரர் அவனை நோக்கி மெமெமே ம்மே என சிறுசிறு இடைவெளியுடன் அடங்கிய குரலில் சொல்லிக்கொண்டே இருந்தார்.

அதுவரை தரையில் உட்கார்ந்திருந்த சிறுவனின் கண்கள் அந்த ஓலத்தைக் கேட்டு ஒளிபெற்றன. சட்டென எழுந்து நின்றான். அவன் மீது விழி பதிந்திருக்க, சடங்குக்காரர் தொடர்ந்து மெமெமே ம்மே என பதிலுக்கு ஓலமிட்டபடியே இருந்தார். அவன் அடிமேல் அடிவைத்து அந்த ஓலத்தின் திசையில் நடந்து வந்தான். அவன் தன்னை நெருங்கிவிட்ட பிறகே தன் ஓலத்தை முற்றிலும் நிறுத்தினார் சடங்குக்காரர்

அவன் சடங்குக்காரர் நிற்பதையே பார்க்கவில்லை. அவர் முகத்தைக்கூட பார்க்கவில்லை. அவன் கவனம் முழுக்க தாத்தாவின் முகத்தின் மீதே இருந்தது. மெல்ல குனிந்து அவர் முகத்தைத் தொட்டான். ம்ம்மே என்றான். கன்னத்தை வருடினான். காதுகளை வருடினான். மூடப்பட்ட கண்களையும் புருவங்களையும் வருடினான். மீண்டும் மீண்டும் ம்ம்மே ம்ம்மே என்று சொல்லிக்கொண்டே இருந்தான். குனிந்து அவர் காது மடல்களையும் கன்னத்தையும் பிடித்து முத்தமிட்டான். அவன் உடல் நடுங்கியது. பெருமூச்சில் மார்புக்கூடு ஏறி இறங்கியது. கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது. கரகத்த குரலில் ம்மெ ம்மெ என்று விசும்பினான். மெதுவாக தாத்தாவின் தலையை கீழே வைத்துவிட்டு எழுந்து மரத்தடிக்குத் திரும்பிவந்து உட்கார்ந்தான்.

கண்கள் குளமாக அந்தக் காட்சியையே பார்த்தபடி நின்றிருந்தேன். அது அப்படியே என் நெஞ்சில் உறைந்துவிட்டது. சுற்றியிருந்தவர்கள் அனைவருமே சொல்லின்றி திகைப்பில் ஆழ்ந்திருந்தார்கள்.

“வாங்கப்பா வாங்க. இப்ப வாங்க” உடைந்த குரலில் அனைவரையும் அழைத்தார் சடங்குக்காரர். துண்டால் கண்களைத் துடைத்தபடி மேடைக்குச் சென்ற ஜிப்பாக்காரர் சடங்குக்காரரின் தோளில் ஒரு கணம் கைவைத்து தட்டிக்கொடுத்துவிட்டு கீழே இறங்கி வந்து ஒரு சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்துவிட்டார். சுற்றியிருந்த எருக்கம்புதர்களிடையில் கோழிகள் மேய்ந்தபடி இருக்க, தாழ்வான மரக்கிளையில் காக்கைகள் அமர்ந்திருந்தன.

சேற்றுப்படலத்தால் மூடப்பட்ட தகனக்கூட்டிலிருந்து புகையெழத் தொடங்கியது. எல்லோரும் விழுந்து வணங்கிவிட்டு மேடையிலிருந்து இறங்கினார்கள். “ஐயாமாருங்களே, எல்லாரும் திரும்பிப் பாக்காம போங்க, திரும்பிப் பாக்காம போங்க” என்று அறிவித்தான் பிணம் சுடும் மேடையில் இருந்தவன். அவன் கையில் நீண்ட கழியை வைத்திருந்தான்.

குழாயில் கைகால்களைக் கழுவிக்கொண்டு எல்லோரும் வெளியே சென்றார்கள். ஜிப்பாக்காரர் தன் மகனை அருகில் கூப்பிட்டு “அவன நம்ம ஊட்டுக்கு கூப்டும் போ” என்று மரத்தடியில் உட்கார்ந்திருந்த சிறுவனைச் சுட்டிக்காட்டி மெதுவான குரலில் சொன்னார். பிறகு எல்லாத் தொழிலாளிகளுக்கும் பணம் பிரித்துக்கொடுத்தார். “ஏம்பா பேண்ட் தம்பி, இங்க வா” என்று அழைத்து எங்களுக்கு உண்டான பணத்தைக் கொடுத்தார். ”இந்தா நீயும் வாங்கிக்க” என்றபடி சடங்குக்காரருக்கும் கொடுத்தார். பிணம் சுடுபவன் பக்கம் திரும்பி ”நீ என்னடா, இன்னைக்கே வாங்கிக்கறியா, நாளைக்கி வாங்கிக்கறியா?” என்று கேட்டார். “நாளைக்கே குடுங்க” என்று அவன் மேடையிலிருந்தபடியே பதில் சொன்னான்.

நாங்கள் எங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு விடைபெறுவதற்காக ஜிப்பாக்காரரிடம் வந்தோம். அவர்கள் உரையாடல் காதில் விழுந்ததால் நின்றேன்.

”அவனும் மேமேங்கறான். நீயும் மேமேங்கற. மனுஷங்க பேசிக்கற பாஷ மாதிரியே தெரியலையே. ஏதாச்சிம் பிரச்சன ஆயிடுமோன்னு கடசிவரைக்கும் நெனச்சி நடுங்கிட்டிருந்தேன் தெரிமா?. எல்லாத்தயும் ஒரு செக்கன்ட்ல தீத்து வச்சிட்ட நீ. என்ன மந்திரம்டா இது?” என்று கேட்டார் ஜிப்பாக்காரர்.

சடங்குக்காரர் “மந்திரம்லாம் ஒன்னுமில்லைங்க. அது ஆடுங்க பாஷ” என்றார். “என்ன சொல்ற நீ? ஆடுங்களுக்கு பாஷயா?” என்று அதிர்ச்சியோடு கேட்டார் ஜிப்பாக்காரர்.

“நம்ம புள்ளைங்க காணாம போயிட்டா எங்கடா போயிட்ட கொழந்தன்னு கேக்கறமாதிரி ஆடுங்ககிட்ட கேக்கறதுக்குத்தான் அந்த பாஷ. அந்த பையனுக்கு அவர் செத்துட்டாருங்கறதே ஒறைக்கலை. எங்கயோ காணாம போயிட்டாருன்னு நெனச்சிட்டிருக்கான். அதான் அந்த ஓலம். நான் இங்க இருக்கேன்னு குட்டி பதில் சொல்றமாதிரி சொன்னதுதான் நான் போட்ட ஓலம்.”

”இதெல்லாம் ஒனக்கு எப்படி தெரியும்?” ஜிப்பாக்காரர் ஆச்சரியத்தோடு சடங்குக்காரரின் முகத்தைப் பார்த்துக் கேட்டார்.

“எப்பவோ ஒரு தரம் எங்க ஆடு காணாம போன சமயத்துல தாத்தாதான் கண்டுபிடிச்சி குடுத்தாரு. அப்பதான் அவர் இந்த மாதிரி ஓலம் போட்டத பார்த்தன். அந்த பையன் ஓலத்த கேட்டதும் கடவுள் புண்ணியத்துல அது ஞாபகத்துல வந்துது.”

இருவருக்கும் வணக்கம் சொல்லி விடைபெற்றுக்கொண்டு சுடுகாட்டிலிருந்து வெளியே வந்தோம் நாங்கள். அந்த ஓலத்தை க்ளாரிநெட் வாசிப்பாக நிகழ்த்திப் பார்க்கத் தொடங்கியது என் மனம்.