எழுத்து

வெளியேற்றம்

ஸிந்துஜா

கண்ணாடி காட்டிய உருவம் சுமிக்குத் திருப்தி அளித்தது. பொட்டு மட்டும் சரியாக அமையவில்லை. சிறிய சிவப்பு கறுப்பு நிறங்களில் பொட்டுக்கள் விற்கிறார்கள் என்று ஒரு சிவப்பு பாக்கெட்டு வாங்கி வைத்திருந்தாள். போன வாரம் பிரித்து இட்டுக் கொண்டாள். மேஜை மேலிருந்த சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை புத்தகத்துக்கு அடியில் இருக்கிறதா என்று தேடினாள். கிடைக்கவில்லை.

“என்ன இன்னும் டிரஸ் பண்ணி முடிக்கலியா? நான் குளிச்சிட்டு, சாமிக்கு ரெண்டு பூ போட்டு ஸ்லோகம் சொல்லிட்டு வந்தாச்சு. நீ என்னடான்னா அப்போலேர்ந்து கண்ணாடி மின்னே நின்னுண்டு ராயசம் பண்ணிண்டு இருக்கே ” என்று சரசம்மா அறையின் உள்ளே வந்தாள். அவளிடம் பொட்டுப் பாக்கெட்டைக் கேட்கலாம் என்றால் எடுத்ததை வச்ச இடத்தில் வச்சால் தேட வேண்டாம்; ஆனா கேட்டாத்தானே என்று யாரோ மூணாம் மனுஷிக்குச் சொல்லியபடியே எங்கேயிருந்தோ கொண்டு வந்து தருவாள்.

“ரொம்ப அட்டகாசமா புடவை கட்டிண்டு இருக்கியே? இன்னிக்கி மீட்டிங்குக்கு சல்வார் கமீஸ் போட்டுண்டா ஒத்துக்காதா?” என்று அவளைப் பார்த்தாள்.

“ஏம்மா அம்பைக்குக் கோபம் வர்ற கேள்வியெல்லாம் கேக்கறே?” என்று சிரித்தாள் சுமி. சரசம்மாவும் சிரித்தபடியே சுமியின் நெற்றியைப் பார்த்து விட்டு “பாழும் நெத்தியோட அலையணும்னு இன்னிக்கி வேண்டுதலா?” என்று கேட்டாள்.

“மறுபடியும் அம்பையைச் சீண்டாதேம்மா. நானே பொட்டுப் பாக்கெட்டை எங்கியோ வச்சிட்டுத் தேடிண்டு இருக்கேன்” என்றாள் சுமி.

“அன்னிக்கி என்னமோ கேக்கறேன்னு நெத்தியிலே பொட்டு வச்சிண்டே கிச்சனுக்கு வந்து அங்கேயே பாக்கெட்டை வச்சிட்டுப் போயிட்டே. சரி அங்கேயே இருக்கட்டும்னு எடுத்து வச்சேன். நீதான் கிச்சன் பக்கம் எட்டிப் பாக்க மாட்டியே” என்று உள்ளே போய்எடுத்துக் கொண்டு வந்தாள். “கடுகு சைசுக்கு இருக்கு. இதை விடச் சின்னதாக் கிடைக்கலையா?” என்று ஒரு சிவப்புப் பொட்டை எடுத்து சுமியின் நெற்றியில் வைத்தாள்.

“ஏன்தான் எனக்கு உன்னை மாதிரி இருக்க முடியலையோ?” என்றாள் சுமி.

“எல்லாம் ஜீன்ஸ்லே வரது” என்றபடி சரசம்மா நெற்றிப் பொட்டை சரி செய்தாள்.

அவள் உண்மையில் தாக்குவது தன்னையல்ல என்று சுமி நினைத்தாள். வாரத்தில் இரண்டு மூன்று நாள்கள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை போடுவதற்கென்றே சமயங்கள் வாய்க்கும். காய்கறி மார்க்கெட்டில் அவர் வாங்கி வரும் காய்கறிகளை அம்மா முத்தல் பழி என்று முத்திரை குத்துவாள். அவர் சுமிக்கு எடுக்கும் உடை கண்ணைக் குத்தும் கலரில் சகிக்கப் போறலை என்பாள்.அவள் விரும்பும் தமிழ் சினிமாவுக்குப் போகாமல் இந்திப் படம் போக வேண்டும் என்று சொல்லி அவர் வெறுப்பேற்றுவார்.

அம்மாவுக்கு எதிலும் செட்டாக இருக்க வேண்டும். ஒழுங்கு, கவனம், துப்புரவு, கௌரதை, அழுத்தம், திருத்தம் என்று எல்லாமே வடிவெடுத்து வந்தாற் போல அவள் நடையில், உடையில், பேச்சில், பாவனையில் தெரிய வரும். வீட்டில் ஒரு தூசு தும்பு இருக்கக் கூடாது. சோஃபா, நாற்காலிகள் எல்லாம் ஹாலில் தரையோடு ஒட்டி வைத்தது போல ஒரு இஞ்சு நகராமல் போட்ட இடத்திலேயே இருக்க வேண்டும். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஜன்னல்கள், கதவுகள், சுவர்கள் எல்லாம் துடைத்து வைத்தது போல இருக்க வேண்டும். ஆழ்வார்குறிச்சி சித்தி போன தடவை வந்த போது சரசம்மாவைப் பார்த்துச் சிரித்தபடியே “அக்கா, நான் உங்காத்துக்கு வரப்போ மட்டும் குங்குமம் இட்டுக்கக் கண்ணாடி கிட்டே போகிறதில்லே. நான் நின்னுண்டு இருக்கிற இடத்திலே இருந்து குனிஞ்சு தரையைப் பாத்தாப் போறும்!” என்றாள்.

எதிராளியிடம் பணிவை ஏற்படுத்தும் தோற்றம் அம்மாவிடம் இருக்கிறது என்று சுமி அடிக்கடி தனக்குள் நினைத்துக் கொள்வாள். அவள் நிறம் கொஞ்சம் மட்டுதான். அவள் கம்பீரம் லேசான ஆண் சாயலை அவளுக்குத் தந்திருந்தது. ஆனால் அவற்றைப் பற்றி கவலை எதுவும் கொள்ளாமல் அவள் தன்னை ஸ்தாபித்துக் கொண்டு வளைய வந்தாள். ராம்குமார் மாமா அம்மாவை ஜெஜெ எங்கே என்றுதான் கேட்பார். ஜெ.ஜெயலலிதாவாம்! ராம்குமார் பாட்டியின் தம்பி. அதனால் அம்மாவுக்கு மாமா. ஆனால் அம்மாவின் உறவினர் குடும்பங்கள் அனைத்துக்கும் அவர் மாமாதான். அவர் சரசம்மாவை விடப் பத்துப் பனிரெண்டு வருஷங்கள் மூத்தவராயிருக்கலாம். ஆனால் அவர் வீட்டுக்கு வந்தால் ஒரே சிரிப்பும் கேலியுமாய் வீடே களேபரத்தில் மூழ்கும். சில நாள்கள் அவர் வந்திருக்கும் அன்று அப்பா ஆபிசிலிருந்து வர சற்று லேட்டாகும். ஆனால் மாதவராவ் வந்த பின் சத்தம் இன்னும் ஜாஸ்தியாகுமே ஒழியக் குறையாது. உறவுக்கு அப்பாலும் மாதவ
ராவும் மாமாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.

சுமி மறுபடியும் கண்ணாடி முன்னே நின்று ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.

“எல்லாம் நன்னாதான் இருக்கு. புடவை கட்டிண்டு வான்னு அது சொல்லி இருக்காதே?”

அம்மா அது என்று சொல்லுவது அவளை விட்டுச் சென்ற கணவனை. ஏழு வருஷத்துக்கு முன்பு நடந்த பிரிவு. அப்போதுதான் சுமி காலேஜில் சேர்ந்திருந்தாள். அதற்கு சரசம்மாதான் மாமாவிடம் பணம் வாங்கிப் பீஸ் கட்டினாள். மாதவராவ் அதற்கு முந்திய இரண்டு மாதமாகக் குடும்பச் செலவுக்குப் பணம் கொடுக்கவில்லை. ஆபீஸ் வேலை என்று ஒன்றரை மாதமாகக் கல்கத்தாவில் இருந்தார். கணவன் மனைவி பிரிவு பணத்தினால் மட்டும் விளைந்த ஒன்றோ என்று அவளுக்கு லேசாகத் தகராறு இருந்தது. ஆனால் அதைச் சுட்டிக்காட்டும் எந்த நிகழ்வையும் அவள் சந்திக்கவில்லை. அவர்களிருவரும் பிரிவது என்பதை அது நடப்பதற்குச் சில வாரங்கள் முன்புதான் அம்மா சொல்லி அவள் தெரிந்து கொண்டாள். அதையும் அம்மா ஐந்து வார்த்தைகளில் முடித்து விட்டாள்: ‘உங்கப்பா இனிமே நம்மோட இருக்க மாட்டார்.’ அவளிடம் அப்பா அதைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பது தனக்குக் கோபத்தை ஏற்படுத்தவில்லை என்பதை உணர்ந்த போது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் அம்மாக் கோண்டு என்று மாதவராவ் நினைத்திருக்கலாம். அல்லது தனது மனைவியைப்
போலப் பெண்ணுக்கும் ‘பொல்லாத்தனம்’, ‘கல்மனது’ ஆகிய வார்த்தைகளுடன் நெருங்கிய சம்பந்தம் உண்டு என்று கருதியிருக்கலாம்.

சரசம்மாவை விட்டுச் சென்ற மாதவராவ் ஊரை விட்டு ஜான்சிக்குப் போய் விட்டார் என்று சில மாதங்கள் கழித்து அவர்களுக்குத் தெரிந்தது. அதுவும் ராம்குமார் மாமா மூலமாகத்தான். மாமாவின் கம்பனிக்கு மாதவராவின் கம்பனிதான் மெஷின்களை விற்று வந்தார்கள். அந்த ஆர்டர்கள் கூட மாமா மூலம்தான் கிடைத்தன என்று அம்மா சொல்லியிருக்கிறாள்.

சுமி சரசம்மாவிடம் “புடவை கட்டிண்டு வரதைப் பத்தியெல்லாம் பேச அன்னிக்கி எங்கே டயம் இருந்தது?” என்று கேட்டாள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சுமி அலுவலகத்தில் வேலையாய் இருந்தபோது பியூன் வந்து அவளிடம் “மேடம், உங்களைத் தேடி
ரிசப்சன்லே உக்காந்திருக்கிறவங்களை இங்க அனுப்பட்டுமா?” என்றான்.

அப்போது மணி நான்கு இருக்கும். அவள் கம்பனியின் விளம்பரதாரரை மூன்று மணிக்கு வரச் சொல்லியிருந்தாள். லேட்டாக வந்ததுமில்லாமல் இங்கே வருவதற்குப் பதிலாக எதற்கு
ரிசப்ஷனில் நின்று கொண்டு தன்னை அழைக்கிறாள்? சுமிக்குக்
கோபம் ஏற்பட்டது.

“யார் அட்வைர்டைசிங் ரேகாதானே? அவளை இங்கே வரச் சொல்லு” என்றாள்.

“அவ இல்லே. அவரு” என்று சிரித்தான் தண்டபாணி.

அவள் ஆச்சரியத்துடன் ரிசப்ஷனுக்குச் சென்றாள். மாதவராவ்.

அவளுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. இவர் எப்படித் திடீரென்று இங்கே? ஏழு வருடங்களுக்கு முன்பு அவர் பெட்டியைத் தூக்கிக் கொண்டு அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்ற தினம்தான் அவள் அவரை கடைசியாகப் பார்த்தது. கல்லூரியில் அவள் வகுப்பு மாணவிகள் ஒரு முறை வட இந்தியச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளலாம் என்றார்கள். பார்க்க வேண்டிய இடங்களில் கஜுராஹோவும் இருந்தது. அதைப் பற்றி வகுப்பில் பேச்சு வந்த போது ஜான்சி வழியாக அங்கே போவது சௌகரியம் என்று ஒருத்தி சொன்னாள். அப்போது மாதவராவின் நினைவு அவளுக்கு ஏற்பட்டது.

ஏழு வருஷம் அவரிடம் தோற்றிருந்தது. ஏதோ போன வாரம் பார்த்த மாதிரி இருந்தார்.

அவர் அவளைப் பார்த்ததும் எழுந்து நின்று புன்னகை புரிந்தார்.

அவள் “உக்காருங்கோ” என்று அங்கிருந்த சோஃபாவைக் காட்டி விட்டு அவளும் பக்கத்திலிருந்த இன்னொரு இருக்கையில் அமர்ந்தாள்.

“எப்படி இருக்கே? யூ ஆர் லுக்கிங் வெரி ஸ்மார்ட்” என்றார்.

“நீங்களே கேள்வி கேட்டுட்டு நீங்களே பதிலும் சொல்லியாச்சு” என்றாள் சுமி.

மாதவராவ் முகத்தில் புன்னகை தோன்றி மறைந்தது.

“எனக்குச் சந்தேகமாதான் இருந்தது. பாக்கறதுக்கு ஒத்துக்க மாட்டியோன்னு. அது தவிர நான் சொல்லாம கொள்ளாம வந்து நிக்கறது உனக்குப் பிடிக்காமப் போனா? போன் பண்ணிட்டு வரலாம்னு முதல்லே நினைச்சேன். ஆனா நீ போன்லேயே வராதேன்னு சொல்லிட்டா? அதுக்குத்தான் போய்ப் பாத்து ட்ரை பண்ணலாம்னு வந்துட்டேன்” என்றார்.

அவர் தயங்கித் தயங்கிப் பேசியதும், அந்தப் பேச்சில் தென்பட்ட அச்சமும் அவளைச் சற்றுப் பாதித்தது.

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே. நீங்க ஏதாவது சாப்பிடறேளா?” என்று கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்டதும் அவர் முகத்தில் லேசாகப் பரவிய நிம்மதியை அவள் கவனித்தாள். ஆனால் தலையை அசைத்து ஒன்றும் வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

“நீங்க நார்த்லே இருக்கறதா சொன்னாளே?” அவரிடம் சகஜத் தோரணையை ஏற்படுத்த அவள் கேட்டாள். அதே சமயம் அவரைப் பார்த்ததும் கோபமோ வெறுப்போ ஏன் தனக்கு ஏற்படவில்லை என்பதை ஆச்சரியத்துடன் உணர்ந்தாள்.

“இல்லே. இப்ப நாங்க இங்கே வந்துட்டோம். ஒரு மாசமாகப் போறது.”

சுமி ஆச்சரியத்துடன் “நாங்களா?” என்று கேட்டாள்.

“ஓ, அந்த நியூஸ் உங்களுக்கெல்லாம் தெரியாதோ? அஞ்சு வருஷம் முன்னாலே நான் இன்னொரு கல்யாணம் பண்ணிண்டேன்” என்றார். அவர் குரலில் குற்ற உணர்ச்சி தொனிக்கிறதா என்று அவள் உற்றுக் கவனித்தாள். இல்லை.

ராம்குமார் மாமா இருந்திருந்தால் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். மாதவராவ் அவர்கள் குடும்பத்தை விட்டு விலகிச் சென்ற பின் மாமாதான் அவர்களுக்கு வேண்டிய வெளி வேலைகளையெல்லாம் பார்த்து உதவிக் கொண்டிருந்தார். ஆறு மாதம் போயிருக்கும். திடீரென்று ஒரு நாள் தனக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்து விட்டது என்று போனவர்தான். அப்புறம் சொந்த ஊர்ப் பக்கம் தலை காண்பிக்கவில்லை.

“வீடு எங்கே?” என்று சுமி பேச்சைத் தொடர்ந்தாள்.

“தொட்டகலாசந்திராலே மந்திரி ஸ்ப்ளெண்டர் பக்கத்திலே வீடு.”

“அது ரொம்ப தூரமாச்சே?””

“ஆமா. இங்கே மெஜெஸ்டிக்லேந்து தூரம்தான். ஆனா எனக்கு ஆபீஸ் பக்கத்திலேன்னு அங்க போயிட்டோம்.”

தொடர்ந்து “இந்த ஊருக்கு வரேன்னு தெரிஞ்சப்புறம் எனக்கு உன்னைப் பாக்கணும்னு எப்பவும் நினைச்சிண்டே இருப்பேன். அதிலே ஆசை, பயம், ஏக்கம், தடுமாத்தம் எல்லாம் இருந்து என்னைப் போட்டு வதைக்கும். கடைசியிலே எப்படியோ இன்னிக்கி வந்து பாத்துட்டேன்” என்றார்.

பேசிக் கொண்டிருக்கும் போதே அவர் கண்கள் அவள் முகத்தை விட்டு விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தன. அவள் முகத்தில் ஓடுவதைப் படிக்கத் துடிக்கும் கண்கள். தான் சரியாகப் பேசுகிறோமா, அவள் அதை ஒப்புக் கொள்கிறாளா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை அவரின் பேச்சில் இருந்த படபடப்பு தெரிவித்தது.

அவள் கண்கள் சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தன.

அவர் அவளிடம் “சரி, நான் கிளம்பறேன். ஆபீஸ்லே வேலையா இருக்கறப்போ டிஸ்டர்ப் பண்ணிட்டேன்” என்று எழுந்தார்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லே” என்றாள் சமாதானப்படுத்தும் குரலில்.

“ஒரு நா நீ எங்காத்துக்கு வரணும்” என்றபடி தயாராக சட்டைப் பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் கொடுத்தார். “பங்கஜாவுக்கும் உன்னைப் பாக்கணும், உன்னோட பேசணும்னு ஆசை. இப்பக்கூட தானும் வரதா சொன்னா. நான்தான் முதல்லே நான் போய்ப் பாத்துட்டு வரேன்னு சொல்லி சமாதானப்படுத்திட்டு வந்தேன்” என்று புன்னகை செய்தார்.

அவள் அவர் கொடுத்த காகிதத்தை வாங்கிக் கொண்டாள். ஆனால் பிரித்துப் படிக்க முயலவில்லை.

“இந்த ஞாயத்துக் கிழமைக்கு அடுத்த ஞாயத்துக் கிழமை வரேன்” என்றாள்.

அவள் திரும்ப சீட்டுக்கு வந்த பின் நடந்ததை ஒரு முறை நினைத்துப் பார்த்தாள். அவர் சரசம்மாவைப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை. பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்ற மன நிலையில் மறந்து விட்டாரா? ஆனால் எப்படியோ அவள் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து வந்து விட்டாரே. அவளும் அவர் எடுத்த முயற்சிகளைப் பற்றி ஒன்றும் கேட்கவில்லை. அவருடைய தயக்கமும், குரல் நடுக்கமும் அவர் மீது பரிதாபத்தை உண்டு பண்ணுவதாக இருந்தன.

சட்டென்று அவளுக்கு மாதவராவுடன் பேசிய அத்தனை நேரத்தில் தான் அவரை ஒருமுறை கூட அப்பா என்று அழைக்கவில்லை என்பதை உணர்ந்தாள்.

அன்று மாலை அவள் அலுவலகத்திலிருந்து வந்த பின் இரவு உண்ணும் போது சரசம்மாவிடம் மாதவராவின் வருகையைப் பற்றிச் சொன்னாள். வீட்டுக்கு வா என்று அவர் சொன்னதை அவளிடம் சொல்லும் போது சரசம்மா அவளை ஒரு நீள் பார்வை பார்த்தாள். மற்றபடி சரசம்மா வாயைப் புழக்கடையில் விட்டு விட்டு செவியை வரவேற்பறையில் வைத்திருப்பவளாய்க் காட்சியளித்தாள்.

சுமி அவளிடம் “அம்மா, நான் அவாத்துக்குப் போயிட்டு வரலாம்னு பாக்கறேன்” என்றாள்.

சரசம்மா சாப்பிடுவதை நிறுத்தி விட்டு “ம். போயிட்டு வாயேன்” என்றாள். குரலில் எந்த உணர்ச்சியையும் காட்டாது அவள் ‘செய்யேன்’ என்று சொன்னது ‘செய்யாதே’ என்று கூறுவது போல சுமிக்குப் பட்டது. ஆனால் உடனடியாக அவள் இதெல்லாம் தன்னுடைய பிரமை என்று தனக்குள் உதறிக் கொண்டாள். அம்மா இப்போதைய நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படித்தான் நடந்து கொள்கிறாள் என்று அவள் மனம் நினைத்தது. நான் ஏன் இம்மாதிரித் தடுமாறுகிறேன்? இரவு படுக்கையில் விழுந்து மாதவராவையும் அவர் பேச்சையும் அம்மாவின் முகபாவனையையும் பேச்சையும் நினைத்துப் பார்த்தாள். அவளுக்கு மாதவராவின் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்னும் தனது நினைப்பின் பின்னால் எதற்காக மணமுறிவு ஏற்பட்டது என்னும் உண்மையான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவல்தான் தன்னை இப்படி உந்தித் தள்ளுகிறது என்று தோன்றிற்று. இதுவரை ஒவ்வொரு முறையும் அவள் வெவ்வேறு காரணங்களைத் தானாகவே கற்பித்துக் கொண்டு வந்திருப்பதுதான் உண்மை. அதை உரைத்துப் பார்க்க ஒரு வாய்ப்புக் கிடைக்கும் போது எதற்காக அதை அவள் உதறித் தள்ள வேண்டும்?

மெட்ரோ ஸ்டேஷனிலிருந்து பக்கத்தில்தான் மாதவராவ் வீடு இருந்தது.

அழைப்பு மணியை அமுக்கியதும் கதவைத் திறந்தது மாதவராவ்தான்.

“வா, வா. வீடு கண்டு பிடிக்க கஷ்டமாயில்லையே?”

உள்ளே நுழைந்ததும் ஹால் எதிர்ப்பட்டது. ஒரே களேபரமாகக் கிடந்தது. சோஃபாவின் மேல் யானை, குதிரை, நாய், சோட்டா பீம், டைனோசர் என்று கால் ஒடிந்த, தலை கலைந்த பெரிய பற்களுடன் வாய் விரித்த கோலத்தில் பலர் கிடந்தார்கள். சோஃபாவை ஒட்டி ஒரு ரயில் வண்டி தலை குப்புறக் கீழே விழுந்து கிடந்தது. ஓடிக் கொண்டிருந்த டி .வி.யின் மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு கண்ணாடிப் பிரேமுக்குள் தலை நிறைய மயிரும் குறுகுறு கண்களும் அரிசிப் பல் சிரிப்புமாக நாலைந்து வயதில் பொல்லாத்தனம் கொட்டும் முகத்துடன் ஒரு பொடியன் தலையைச் சாய்த்து நின்றான்.

மாதவராவ் அவள் பார்ப்பதைப் பார்த்து விட்டு “நீ வரப்போறயேன்னு அரைமணிக்கு மின்னாலேதான் இது எல்லாத்தையும் மூட்டை கட்டி ஒழிச்சு வச்சேன். இப்போ அஞ்சு நிமிஷத்துக்கு மின்னாலே வந்து ரணகளம் பண்ணிப் போட்டுட்டு பாத்ரூமுக்குப் போயிருக்கு பாரு” என்று சிரித்தார். சோஃபாவில் இருந்த பொருள்களை அங்கேயே ஒரு ஓரமாக ஒதுக்கிக் குமித்து விட்டு “உக்காரு” என்றார்.

அவள் உட்கார்ந்து கொண்டதும் “ஒரு நிமிஷம் வரேன்” என்று உள்ளே சென்றார். அவள் பார்வை ஹாலைச் சுற்றியது. டி.வி ஸ்டான்டின் அருகில் இருந்த ஸ்டூலில் இந்தியன் எக்ஸ்பிரஸின் சில பக்கங்கள் ஸ்டூல் மேலும் மீதி தரையிலும் கிடந்தன. டைனிங் டேபிள் மீது இருந்த பாத்திரங்களில் இரண்டு மூடப்படாமல் இருந்தன.

மாதவராவ் கையில் குளிர்பானம் நிரம்பிய இரு கண்ணாடித் தம்ளர்களை எடுத்து வந்து அவளிடம் ஒன்றைக் கொடுத்தார். அவள் அதை வாங்கி எதிரே இருந்த டீபாயில் வைத்தாள்.

“குழந்தைக்கு என்ன வயசாறது?” என்று கேட்டாள் சுமி போட்டோவைப் பார்த்தபடி..

“எட்டு வயசாறது” என்றார் மாதவராவ்

“என்னது?”

“ஆமாம். அந்தப் படம் அப்போ எடுத்தது. இப்போ எட்டு வயசு.”

சுமியின் பார்வை சோஃபாவின் மீது விழுந்து நின்றது.

“அவன் கொஞ்சம் ரிடார்டட் பேபி.” என்றார் மாதவராவ்.

அவள் திரும்பி அவரைப் பார்த்தாள். அன்று முதல் சந்திப்பில் ஐந்து வருடம் முன்பு கல்யாணம் ஆயிற்று என்றாரே. அப்படியென்றால்?

“நான் வேலை பாக்கற ஆபீஸிலேதான் பங்கஜாவும் வேலை பார்க்கறா. அவ புருஷன் அவளை விட்டுட்டு ஓடிப் போயிட்டான்.”

சட்டென்று அவளையும் மீறி சுமியின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிப்பட்டு விட்டன.

“நீங்க என் அம்மாவை விட்டுட்டுப் போயிட்ட மாதிரி” .

மாதவராவ் அவள் கண்களை நேரடியாகச் சந்தித்தார். தயக்கம் எதுவும் தெரிவிக்காத ஆழமான ஆனால் அமைதியான கண்களைப் பார்ப்பது போல சுமிக்குத் தோன்றிற்று.

“ஐ’ம் ஸாரி. வெரி ஸாரி” என்றாள் சுமி.

“நீ ஒண்ணும் தப்பா சொல்லலையே” என்றார் மாதவராவ். “உனக்குத் தெரிஞ்சதை வச்சு நீ சொன்னதுலே ஒரு தப்பும் இல்லே.”

அவர் வார்த்தைகள் பூடகமாக இருக்கின்றனவோ என்று ஒரு கணம் அவளுக்குச் சந்தேகம் எழுந்தது. நீ தப்பாக சொல்லி விட்டதால் உனக்கு இம்மாதிரி தோன்றுகிறது என்று அவள் மனம் கூறியது.

.”குறையோட இருக்கற குழந்தையை வச்சுண்டு தனியா மன்னாடறாளேன்னுதான் கல்யாணம் பண்ணிண்டேன்” என்றார் அவர்.

அவளுக்கு அவர் மீது இப்போது பெரும் மரியாதை ஏற்பட்டது.

“நான் எப்பவுமே உங்களைத் தப்பா நினைச்சிண்டு வந்திருக்கேனோன்னு ஒரு குத்த உணர்ச்சி என்னைப் போட்டுப் பிறாண்டறது” என்றாள் சுமி உணர்ச்சி மேலோங்க.

மாதவராவ் கனிவுடன் அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தார்.

“என்னவோ ஒருத்தர் சந்தோஷமா இருக்க நல்லது செய்யறேன்னு நினைச்சிண்டு நானாத்தான் வெளியே வந்தேன். ஆனா அது என்னமோ வேறே மாதிரி நடக்கணும்னு ஆயிடுத்து” என்றார் மாதவராவ் .

 

சௌகந்தியின் நெஞ்சொடு கிளத்தல்- கன்னடம் வைதேகி ஆங்கிலம் சுகன்யா கனரல்லி தமிழ் தி இரா மீனா

மொழிபெயர்ப்பு : கன்னடச் சிறுகதை
மூலம் : வைதேகி [ Vaidehi ]
ஆங்கிலம் : சுகன்யா கனரல்லி [Sukanya Kanarally ]
தமிழில் : தி. இரா. மீனா

நீண்ட நேர இரவுப் பயணத்திற்குப் பிறகு ஒருவழியாக சௌகந்தி தனது இலக்கை அடைந்தாள். பஸ் நிலையத்திற்கு அவளை வழியனுப்பி வைக்க வந்த அப்பா மிகப் பணிவாக கண்டக்டரிடம், ’என் மகள் தனியாகப் பயணம் செய்கிறாள். அவளருகே ஒரு பெண் பயணியை உட்கார வைத்தால் மிக உதவிகரமாக இருக்கும்’ என்று வேண்டிக் கொண்டார் .பின்பு ஜன்னல் சீட்டில் உட்கார்ந்திருந்த சௌகந்தியிடம் ’கவலைப் படாதே. கண்டக்டர் மிக நல்ல மனிதராகத் தெரிகிறார். உன் பக்கத்தில்ஒரு பெண் பயணியை உட்கார வைப்பதாகச் சொல்லியிருக்கிறார்.’ என்று உறுதியளித்தார்.

சிரிப்பிற்குப் பின்னால் தன் கண்ணீரை மறைக்க வேண்டிய காரணமென்ன என்பதை நினைத்து ஆச்சர்யப்பட்டவளாக நான் ஏன் அப்பா கவலைப்பட வேண்டும்? அதுவும் யாரைப்பற்றி? அவள் சிரித்தபடியே தனக்குள் சொல்லிக் கொண்டாள். இருக்கையை மாற்றிக் கொள்வதன் மூலம் தனியாக உட்கார்ந்திருந்த பெண் பயணிக்கு உதவமுடியுமென்று சொல்லி ஒரு தம்பதியின் இருக்கையை மாற்றச் செய்து கண்டக்டர் தன் வார்த்தையைக் காப்பாற்றிக் கொண்டு விட்டான்.

இது இல்லையெனில் தன்னருகே உட்கார்ந்திருக்க வேண்டிய மனிதன் யாரென்று அறிய சௌகந்தி திரும்பிப் பார்த்தாள்.பார்ப்பதற்கு மிக சாதாரணமாக இருந்த அவன் முகத்தை ஒரு கொத்து முடி மறைத்திருந்தது. தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்மணி வாய்ப்பு கிடைத்தால் நாளைக் காலை வரை கூட பேசிக் கொண்டிருப்பாளென அவளுக்குத் தோன்றியதால் பேச்சைத் தவிர்க்கும் வகையில் அவள் ஜன்னலின் வெளியே பார்க்கத் தொடங்கினாள். வானத்தில் நிலவு ஒளிர்ந்தது.

சௌகந்தி நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். அது முழுமையற்று அரையாக இருந்தது. ஓடி வந்தாலும் தன்னால் பஸ்ஸில் ஏறமுடியாதென்பதால் அது அங்கேயே நின்று விட்டது.ஆனால் அவள்?
முழுமையடைய வேண்டுமென்றால் இப்போதிலிருந்தாவது தனியாக, வேறு யாரைப் பற்றியும் கவலையின்றி, நான் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும். அவள் கன்னத்திலிருந்து ஒரு சொட்டு நீர் இறங்கியது. அல்லது அது மழைத்துளியா?

அங்கே தனியாக ஒரு வாடகை வீடு நின்றது. மற்ற வீடுகளின் மத்தியிலும், அது பூட்டப்பட்ட கதவோடு தனியாக, யாருக்கோ காத்திருப்பதாக நின்றிருந்தது. நானும் இது மாதிரி காத்திருப்பவள்தான் என்று நினைத்துக் கொண்டே அவள் கதவைத் திறந்தாள். எதுவுமே செய்ய வேண்டியதில்லை என்ற ரீதியில் வீடு மிகவும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் இருந்தது.தூசி தட்டுவது,பெருக்குவது, துடைப்பது என்று ஏதாவது செய்தாவது ஒரு நாளைக் கழிக்கலாம் என்ற சாதாரண ஆசை கூட நிறைவேறாமல் போனதில் அவளுக்கு ஏமாற்றம்தான். வேறு ஊரிலிருந்து வரும் இளம் கன்னிப் பெண்ணிற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் விதவையான வீட்டுக்கார அம்மா செய்து முடித்து விட்டாள்.

வீட்டைப் பார்க்கப் போன முதல் நாளே சௌகந்தி ’ தயவு செய்து வீட்டை சுத்தம் செய்வது பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். நானே செய்து கொள்வேன்’என்று தெளிவாகச் சொல்லி விட்டாள். தன் வாயில் வைத்த விரலை எப்படிக் கடிப்பதென்று கூடத் தெரியாத அப்பாவி தன் மகள் என்று அப்பா அந்தப் பெண்மணிக்கு கடிதம் எழுதியிருப்பாரோ? வீட்டைசுத்தம் செய்து வைக்கும்படியும், குளிப்பதற்கு வெந்நீர் தயாராக வைத்திருக்கும்படியும் வேண்டிக் கொண்டிருப்பாரோ? சௌகந்தி தன்உதட்டை அழுத்திக் கடித்தாள்.

முதல் நாளிலேயே அப்பா கடந்த காலம் முழுவதையும் படமாக ஓட்டி விட்டார்.’எங்களால் இந்தப் பெண்ணிற்கு திருமணம் செய்துவைக்க முடியவில்லை. ஏற்கெனவே இரண்டு தங்கைகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.இவள் விஷயத்தில் நான் தோற்று விட்டேன்,’ என்று.வீட்டுக்கார அம்மாளின் முகத்தில் ஏற்கெனவே பரிதாப உணர்வு படர்ந்து விட்டது.’ என் மகளைப் பாருங்கள், எல்லாவற்றிலும் கெட்டிக்காரி! எங்கே தவறு நிகழ்ந்ததென்று தெரியவில்லை.ஒரு வேளை அந்தப் பொருத்தமான ,மங்களமான நேரம் இன்னும் வரவில்லை போலிருக்கிறது! நம்முடைய சாதியிலிருந்தே யாரையாவது பார்த்து காதலித்து திருமணம் செய்து கொள் என்று கடைசியாகச் சொல்லி விட்டேன் ’அப்பா பேச்சை நிறுத்தி விட்டு அவள் சிரிக்க வேண்டும் என்பது போலப் பார்த்தார்.அந்த அம்மாவும் சிரித்தாள்.ஆனால் வழக்கமாக, புன்னகையால் தன் கண்ணீரைப் புறந்தள்ளும் சௌகந்தியால் இப்போது சிரிக்க முடியவில்லை.

‘இவளைத் தனியாக தங்க வைக்க எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால் அலுத்துப் போய்விட்ட அந்த பழைய இடத்திலிருந்து வெளியேறி விட வேண்டும் என்று இவள் வற்புறுத்தினாள். சரியான நேரத்தில் வேலை மாற்றமும் வந்தது. இனி நீங்கள்தான் அவளுடைய அம்மா,அப்பா எல்லாமும்.’ (அப்பா, இது அதிகம் ! )

இன்னமும் உருகிப் போன மனநிலையில் இருந்த வீட்டுக்காரம்மா ’உலகத்தின் நியதி இதுதான். உங்கள் மகள் நல்லவள் என்பதை அவள் முகமே காட்டுகிறது. ஆனால் நம்மைச் சுற்றியுள்ள உலகம்  சரியான பாதையில் நம்மைப் போக விடுவதில்லை. நட்பு என்ற பெயரில் இங்கே என்ன நடக்கிறது?’

அவள் எதிர்பார்த்த வார்த்தைகளை அப்பா அப்படியே சொன்னார். ’சே,சே ! சௌகந்தி அப்படிப்பட்டவளில்லை! ஓர் ஆணின் நிழல் கூடத் தன்னருகில் வருவதை அவள் அனுமதிக்க மாட்டாள். மிக நேர்மையானவள். அவள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இல்லாவிட்டால் அவளை நான் அனுப்புவேனா? அந்த அம்மாளின் முகத்தில் படர்ந்திருந்த கருமை விலகியது.

’தவிர என் இளைய மகள் பிரசவத்திற்கு வந்திருக்கிறாள். அது முடிந்த பிறகு,என் மனைவியை இங்கு அனுப்பி வைக்கிறேன். நான் எப்படியாவது அட்ஜஸ்ட் செய்து கொள்வேன். தானே பார்த்துக் கொள்வதாய் சௌகந்தி சொல்கிறாள். ஆனால் அது எப்படி முடியும்? நான் சாப்பிடுவது கூட அங்கு எனக்கு செரிக்காது. அவளை இங்கே தனியாக விட்டுவிட்டு என்னால் எப்படி அமைதியாக இருக்க முடியும்? பெற்றோரின் பொறுப்பு என்பது பற்றி உங்களுக்குத் தெரியும்! அவள் எங்களுடன் அங்கேயே இருந்தால், அவள் அம்மாவின் சுமை கொஞ்சம் குறையும்…போகட்டும். அது முக்கியமான விஷயமில்லை.’

’நான் ஒரு மரக்கட்டை போல, எனக்கான எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து வைப்பவர்கள் போல இவர்கள் என் முன்னாலேயே இப்படி விவாதித்துக் கொள்கிறார்கள்….’சௌகந்தி ஜன்னல் கம்பியை இறுக்கினாள் மரக்கட்டையாலானதாக இருந்திருந்தால் ,அவை கண்டிப்பாக நொறுங்கி இருக்கும்.

’இரவில் இங்கு தூங்குவதற்கு, ஒரு பெண்மணியை உங்களால் ஏற்பாடு செய்ய முடியுமா? நான் அவர்களுக்கு சம்பளம் கொடுத்து விடுகிறேன்.’

’கண்டிப்பாக. எங்கள் வீட்டு சமையல்காரப் பெண்மணியே பார்த்துக் கொள்வாள். நீங்கள் கவலைப்படாதீர்கள்.’

வீட்டை வாடகைக்கு விட அந்த அம்மா சந்தோஷமாக சம்மதித்தாள். திரும்பி வரும்போது அம்மாவிடம் ’ சௌகந்தியைப் பற்றிக் கவலைப்படாதே. வீட்டுக்கார அம்மா மிகவும் நல்லவள்- விதவை’. வாடகை வீட்டில் தன் மகள் தனியாக இருக்க வேண்டுமென்பதற்காக அவள் தன் கணவனை இழந்திருப்பது நல்லதாகி விடுமா? குழப்பத்தோடு சௌகந்தி அப்பாவைப் பார்த்தாள். அந்தக் குறுகிய எண்ணம். உருளும் விழிகள் அவளுக்கு கொடூரமாகத் தெரிந்தன. பார்ப்பதற்கு எவ்வளவு மென்மையானவராக அப்பா தெரிகிறார்! சௌகந்திக்கு வலித்தது.

தன் தனிமையான மகளை ஒரு சிப்பாய் காப்பது போல, தான் அவளைப் பாதுகாக்காவிட்டால் மகள் கெட்டுப் போய் விடுவது போல, அல்லது அவளுக்கு வஞ்சகம் செய்யவே முழு நகரமும் சதி தீட்டுவது போல அப்பா திரும்பத் திரும்ப அந்த வார்த்தைகளையே எதிரொலித்தார். அம்மாவும் அவருக்குச் சளைத்தவளில்லை.ஒரு வித சுமையிறங்கிய மனப்பான்மையானவளாக, ’அப்படியெனில் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.’ என்றாள்.

சௌகந்தி இவற்றிற்கெல்லாம் மத்தியில் ஊடாடிக் கொண்டிருந்தாலும், பல பல காலமாக, ஒடுங்கிப் போயிருந்த தனது குரலை இனி வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில், இந்தச் சிறிய நகரத்தில் தனியாக தங்கப் போகிற ஆசையில் தனக்குள் ரகசியமாக மகிழ்ந்தாள்.

’எதுவாக இருந்தாலும், கடைசியாக நான் வேறு நகரத்திற்கு, வேறு வீட்டிற்கு வந்து விட்டேன்.இந்த வீட்டில் என்னைத் தவிர வேறு யாருமில்லை. இந்த உலகைப் புறந்தள்ளிவிட்டு, யாருடைய தொந்தரவுமின்றி சாப்பிடுவது, தூங்குவது, வாழ்வது என்று அவள் தனக்காக வாழலாம்! என் அக்காவிற்கு பன்னிரண்டு மாதங்களான பிறகும் குழந்தை பிறக்காமலிருக்கட்டும். அவளுக்குச் செய்ய வேண்டிய உதவிகள் முடியாமல் தொடரட்டும், என் அம்மா இங்கு வராமலேயே இருக்கட்டும். தன் உடைகளை அடுக்கிக் கொண்டே அவள் தனக்குள் முனகிக் கொண்டாள். சமையலுக்குத் தேவையானவையாக அம்மா கொடுத்ததில் மிகத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டாள். தண்ணீர் நன்றாக கொதித்திருந்தது. குளித்து விட்டு, கட்டிலில் படுத்தாள். இப்போது அவள் அரண்மனையின் ஏழு பெரும் சுவர்களைக் கடந்து பறந்த ஒரு பறவை…

கதவு தட்டப்படும் சப்தம்…

முதன் முதலாக அவள் தனியாக இருக்கும் போது, கேட்கும் முதல் தட்டலோசை. அந்தச் சத்தம் நெஞ்சிற்குள் ஊடுருவி எதிரொலித்தது.கை விரல்கள் நடுங்க அவள் கதவைத் திறந்தாள்.

எரியும் ஜூவாலையின் முன்னாலான தண்ணீர் போல வீட்டுக்காரம்மாவெளியே நின்றிருந்தாள்.

’எப்போது வந்தாய் பெண்ணே? எது வேண்டுமானாலும் தயக்கமில்லாமல் நீ என்னிடம் கேட்கலாம்.ராத்திரியில் உனக்கு துணைக்கு சமையல்காரப் பெண்ணை அனுப்பி வைக்கிறேன்.’

’இல்லை,வேண்டாம்,’ சௌகந்தி கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் சொன்னாள்.’எனக்கு பயமில்லை. என்னால் தனியாகத் தூங்கமுடியும்.’

’ஐயோ, இல்லையில்லை ! எப்படி அப்படி முடியும்? இரவில் தனியாக இருப்பது என்பது விளையாட்டில்லை. உன் அப்பா என்னிடம் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். உன் அம்மா இங்கு வரும் வரை நான் உன் அம்மா ஸ்தானத்தில் இருப்பேன். நானே இங்கு வந்து படுத்துக் கொள்கிறேன். போதுமா?’

’இல்லை,வேண்டாம். பரவாயில்லை’ என்று சொல்ல படாத பாடுபட்ட சௌகந்தி ’இல்லை ,எனக்கு பயமேதுமில்லை.நீங்கள் கவலைப்பட வேண்டாம்’ என்று அவளை சமாதானப் படுத்தினாள்.

தனியே விட்டுவிடுங்கள் என்று முகத்திற்கு நேரே சொல்வது என்பது எவ்வளவு கடுமையானது!!

சுவரிலிருந்த சிறிய கண்ணாடி அவள் முகத்தைப் பிரதிபலித்தது. என்ன அப்பாவித்தனம் !

சௌகந்தி திடுக்கிட்டாள் .அவள் இதை மாற்றிக் கொள்ள வேண்டும். ’அலங்காரத்தால் உன் முகத்தை மாற்றலாம் — இந்த முகமூடியை மாற்றுவதெப்படி?’ கண்ணாடி கேட்பது போலிருந்தது. என்னைப் பார்த்து நகைக்கும் இந்த கண்ணாடியை நான் மாற்றி விட வேண்டும்!ஆமாம், நிச்சயமாக!

’அப்படியானால் நான் போகட்டுமா? தேவைப்பட்டால் கூப்பிடு.’

அவள் அப்பா மட்டுமில்லாமல்,உலகமே வீட்டுக்கார அம்மாளை மிகஅற்புதமான பிறவியாக பாராட்டுவதேன்? அவளுடைய சுதந்திரத்தில் தலையிடுவதை ஏன் யாரும் கவனிக்கவில்லை? ஒருவரின் சுதந்திரத்தை ஒருவர் இப்படித்தான் பறிப்பதா? சரித்திர ஆசிரியை ஆங்கிலேயர்களைப் பற்றிப் பேசியது அவளுக்கு நினைவுக்கு வந்தது. ஏன் அவள் மனம் இப்படி அலைகிறது ?ஆங்கிலேயர்கள் எங்கே, வீட்டுக்காரம்மா எங்கே?

வீட்டுக்காரம்மா கொண்டு வந்த சாப்பாடு எவ்வளவு சுவையாக இருந்தது! அவள் கவலையை தவறாகப் புரிந்து கொள்ளும் தன் எண்ணம் பற்றி சௌகந்தி கவலைப் பட்டாள். ஆனால் அவளால் இதை சரி செய்யவும் முடியவில்லை. தன்னை தனிமைப் படுத்திக்கொள்ளவும், தன்னை அறியவும் அந்த விதமான எண்ணங்கள் தனக்குத் துணையாக இருக்கின்றன என்பது அவளுக்குத் தெரியும். இப்படி இல்லாவிட்டால், தான் தொலைந்து போய் விடுவோம் என்பதும் பிறகு தன்னையே தேடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் அவளுக்குத் தெரியும்.

நாட்கள் கடந்தன. இன்னொரு நாள் இனி வராது என்பது போல பகல் இருட்டிற்குள் தன்னை புதைத்துக் கொண்டது. கருமையும், அச்சம் தரும் இரவும் இனி வரவே போவதில்லை என்பது போல காலைகள் முகிழ்த்தன. சௌகந்தியின் பொழுதுகள் வீடு,அலுவலகம் சமையல், குளியல், கண்ணாடி,சீப்பு , எண்ணெய், ஆடை என்று கழிந்தன.

ஒவ்வொரு முறை கதவு தட்டலின் போதும் , வீட்டுக்கார அம்மா அல்லது சமையல்காரி, அல்லது பால்காரர் என்று யாரையாவது பார்ப்பாள். அவள் முகத்தைப் பார்க்காமலே அவன் பால் சீட்டு கொடுத்து விட்டுப் போவான். மிக சாது. அப்புறம் யார் ? ஓ..படியில் படுத்திருக்கும் அந்த அசட்டு நாய், புரண்டு கொண்டோ அல்லது கதவில் முதுகைச் சொறிந்து கொண்டோ கிடக்கும். கதவு தட்டப்படும் சப்தத்தை தவறாகப் புரிந்து கொள்ளும் சௌகந்தி கதவருகே போனால் நாயைத்தான் பார்ப்பாள். அடித்துக் கொன்று விடலாம் போல இருந்தாலும்,நாய் எப்படிப் பொறுப்பாக முடியும் ? தொண்டையில் கை விட்டு உள்ளிருப்பதை வெளிக் கொண்டு வந்து விடவேண்டும் என்று சௌகந்தி சில சமயங்களில் நினைப்பதுண்டு.

நல்ல குடும்பம், சாதி, அந்தஸ்து உடைய யாரையாவது பார்த்து நீ காதலிக்க வேண்டும்” என்று அப்பா சொல்லிக் கொண்டிருக்கிறார். எவ்வளவு நவீனமான அப்பா! என்று பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படலாம். தன் பெரிய வீட்டின் முன்னால் அற்புதமாக கல்யாணத்தை நடத்தி விடலாமென்று அவர் நினைக்கிறார்….

’அப்பா,உங்களுக்கு காதலைப் பற்றி என்ன தெரியும்?’

அம்மா முடிவின்றி தனக்குள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள், ’எவ்வளவு காலம் நீ தனியாக இருப்பாய்?எங்கள் காலத்திற்குப் பிறகு உன்னை யார்பார்த்துக் கொள்வார்கள்’ அவள் தனியாக இருக்க வேண்டுமென்ற வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தது போல, ஓர் ஆணோடு இணைய மறுப்பது போல !’ ஆனால் ,அம்மா, ஏன் ஒருவர் என்னை மயக்கக் கூடாது? ஒரு மனிதன் சிங்கத்தைப் போல என் மீது பாய்ந்து.என்னை செயலிழக்கச் செய்து…’சீ,சீ இம்மாதிரியான ஆசைகள் அவளுக்கு மனதின் எங்கோ ஓரிடத்தில் இருப்பதும், தனது பலவீனமான தருணங்களில் அவள் அந்த எண்ணங்களை லேசாக வளர்த்துக் கொள்வதும் அம்மாவுக்குத் தெரிய வந்தால், அவள் பைத்தியமாகி விடுவாள். தனியாக வாழத் தொடங்கிய இந்த நாட்களில்தான் அந்த வித்தியாசமான குரல்கள் அவளுக்குக் கேட்கிறது.

எதுவாக இருந்தாலும் இதுவரை அவள் யாரையும் காதலிக்கவில்லை! யாரும் அவளை விரும்பவுமில்லை! ஏனப்படி? ’சௌகந்தியால் ஆண்களைக் கவர முடியாது. அவள் மிகவும் நேரடியாகப் பேசுபவள்.!’என்று அம்மா ஒரு தடவை சொன்னாள். அதன் அர்த்தமென்ன? தன் குற்றவுணர்வை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டுதன்னை முழுமையாகப் பார்த்தாள். கண்ணாடியில் தெரிந்த உருவம் ஓர் ஆணைக் கவர்கிற எல்லா அம்சங்களையும் உடையதாக இருந்தது. இருந்த போதிலும்…

’சில பெண்கள் தம் விழிகளால் ஆண்களை வசப்படுத்தி, அவர்களை திருமணம் செய்து கொண்டு விடுவார்கள். சௌகந்திக்கு அந்த வகை எதுவும் தெரியாது. அதனால்தான் இன்னமும் அவள் இங்கிருக்கிறாள்.’என்று அம்மா வீட்டிற்கு வருகிறவர்களிடம் புலம்புவாள். அவளுடைய சகோதரிகள் கண்களால்தான் வசீகரம் செய்தார்களா? அம்மாவிடம் அதைச் சொன்னால் என்ன ஆகும்? பெண்கள் தங்கள் விழிகளால் எப்படி வசீகரம் செய்தார்கள்?

கண்ணாடி முகத்தின் ஒவ்வொரு கோட்டையும் மிகத் தெளிவாகக் காட்டுவதை அவள் பார்த்தாள். சீ ! சுருங்க வைத்தால் எப்படியிருக்கும்? அவள் அதையும் செய்து பார்த்தாள். முடிவற்ற மந்தமான தன்மையைத்தான் அவளால் பார்க்க முடிந்தது. முகத்தை மட்டும் சுலபமாக ஒளிக்க இயலுமெனில்! உடனடியாக அவள் கண்ணாடியை நேராக வைத்தாள்.

’ஏதாவது நடந்தால் பெரிதாக கூச்சலிடு’ என்று வீட்டுக்கார அம்மா ஒரு நாள் அவளிடம் சொன்னாள். ’ஏதாவது’ என்பது எதைக் காட்டுகிறது? யாராவது கொள்ளையடிக்க வந்தாலா? ஆண்கள் கதவைத் தட்டினாலா? அதற்கு அவள் கூச்சலிடுவாளா? சௌகந்தியிடம் அதற்கு பதிலில்லை. கூரையை வெறித்தவளுக்கு ஒரு கருமையான திருடன் அதன் வழியாக இறங்கி வருவதான கற்பனை எழுந்தது.

கூச்சலிடுவதற்கு பதிலாக ,அவன் கண்களை நேரடியாகப் பார்த்து ’என்ன? எதற்கு இங்கே வந்திருக்கிறாய்?’ என்று கேட்டாள்.

வீட்டுக்கார அம்மாவின் குரல் கேட்டது.’என்ன பெண்ணே? நீ எப்படி இருக்கிறாய்?’ நினைவிழந்த நிலையிலிருந்து விழித்தவள் போல சௌகந்தி எழுந்து கதவைத் திறக்கப் போனாள்.சாதாரணமாகப் பேசுவது போல அந்த அம்மா கூரையைச் சுற்றி தன் பார்வையைப் படர விட்டவளாக ’கூரை ஓட்டையை அடைப்பதற்கு உரிய உறையை வாங்க நான் ரொம்ப நாளாக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால் கிடைக்கவில்லை. அது எவ்வளவு விலை உயர்ந்து விட்டது! ஒரு குடும்பம் வாடகைக்கு என்று வந்திருந்தால் நான் வாங்கியிருப்பேன். இப்போது நீ இங்கு தனியாக இருக்கிறாய். சுலபமாக ஒருவர் குதித்து உள்ளே வந்து விடலாம்.இந்தக் கூரை அப்படியானதுதான்.’

சௌகந்தி கூரையின் இடுக்கை வெறித்தாள். ஜன்னல் கம்பியோடு இணைந்து சிலந்தி பின்னியிருந்த வலை தொங்கிக் கொண்டிருந்தது.அடுத்த நாள் காலை ,அது தரையில் கிடக்கும்…

’இப்போது காலம் கெட்டுக் கிடக்கிறது.இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பதால் என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. கூரைக்கு உறை போட எவ்வளவு செலவாகும் என்று உனக்குத் தெரியுமா? தனியொருத்தியாக என்னால் அவ்வளவு செலவு செய்ய முடியாது.’சௌகந்தி தொடர்ந்து வெறித்துக் கொண்டிருந்தாள்.

’நீயும் சம்பாதிக்கிறாய். நீ பாதி,நான் பாதி செலவு செய்து உறையைப் போட்டு விடலாம்.என்னைத் தப்பாக நினைத்துக் கொள்ளாதே. உன் பணத்தை வைத்துக் கொண்டு என் வீட்டை பலமாக்கிக் கொள்ளும் எண்ணம் எனக்கில்லை. அது வீட்டு வாடகையில் கழித்துக் கொள்ளப்படும். இளமை மிக ஆபத்தான பருவம். இந்த வீட்டில் உனக்கு எந்த அசம்பாவிதமும் நடந்து விடக் கூடாது.’ இன்னமும் முழுமையாக இளமையைத் தொலைக்காத வீட்டுக்கார அம்மா பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

சௌகந்தி இப்போது அவளை வெறித்தாள்.’என் பெருமூச்சு இன்னமும் உங்களளவிற்கு ஆகவில்லை’ என்று சொல்ல நினைத்தாள். ஆனால் அவளால் முடியுமா? கீழே விழவிருக்கும் சிலந்தி வலையிலிருந்து தன் விழிகளை பறித்தவளாய்,’ இல்லை … இப்படியே இருக்கட்டும்.. எந்தப் பழுது வேலைக்கும் அவசியமில்லை ,’என்று முணுமுணுத்தாள்.

ஒவ்வொரு நாளும் பூட்டியிருந்த கதவு அவளை வரவேற்றது. ஏதாவது நடக்க வேண்டுமென்று வலியோடு அவள் மனம் காத்திருப்பதைப் போல அவள் பாதங்கள் இழுத்துக் கொண்டு போகும். எந்த நிகழ்வுமற்று எவ்வளவு நாட்கள் இப்படிக் கழியும் ?இந்தக் கேள்வியைக் தனக்குள் கூடகேட்டுக் கொள்ள அவளுக்கு தைரியமில்லை.

தனக்குத் தெரியாத யாரோ ஒருவர் உள்ளே இருக்கும் எண்ணத் தேடலுடனே அவள் கதவைத் திறப்பாள். படுக்கைக்கு அடியில், சமையலறையின் ஓரங்களில், குளியலறைக்குப் பின்னால்—அந்தத் தேடல் தொடரும். தனியாக இருக்கும் பெண்ணை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள யாரேனும் உள்ளே புகுந்திருந்தால் என்ன செய்வது? அவள் கவனமாக இருக்க வேண்டும்.’இளமைக் காலம் ஆபத்தானது. உன்னைச் சுற்றியிருக்கும் உலகம் சரியான பாதையில் உன்னைப் போக விடாது’…அம்மா ,வீட்டுக்காரம்மா,மற்றவர்கள் சொன்னது அவளுக்குள் பதிந்து விட்டது. ஆனால் யார் மூலைகளில் மறைந்திருப்பார்கள்?

ஒவ்வொரு வெற்றிட மூலையும் அவளை வெறித்தது. படுக்கையின் கீழ் கிடக்கும் குப்பை அவளைப் பார்த்துச் சிரித்து வரவேற்றது. கிளர்ச்சியிழந்து அவள் படுக்கையில் விழுந்தாள்.ஒரு கொள்ளைக்காரனாவது உள்ளே புகுந்திருக்கக் கூடாதா? அவளுடைய வழக்கமான வருத்தம் ஆசைகள் நிறைந்த தனி ஆத்மாவின் முணுமுணுப்பாக வெளிவந்தன .அவை வேறெங்கிருந்தோ வருவது போன்ற பாவனையில் அதை கவனித்தாள். எல்லாமும் குழப்பமாகி விடும். …யார் இதைச் செய்தார்கள்— யார் அது? இதைக் கேட்க முடிந்தால்….

பூனை உள்ளிருந்து கத்தியது. கண்ணீரை அடக்கியபடி சௌகந்தி சமையலறைக்கு ஓடி அதை விரட்டினாள். ஆனால் அந்தப் பூனை மாலை காப்பிக்காக வைத்திருந்த பாலை கவிழ்த்து விட்டு ஓடியது. வீட்டு முன்னாலிருந்த பால் கடைக்குப் போய் வழக்கம் போல பால்காரனின் முகத்தைப் பார்க்காமல் அவள் பாலை வாங்கி வந்தாள். சிந்திவிடாமல், தனக்குள்ளேயே பொங்கி , கெட்டியாகி ஆவியாவதான தன் வருத்தத்தை ஹம் செய்தபடியே பாலைக் காய்ச்சினாள்.

’என் கழுத்தில் தாலி என்னும் கயிறு இல்லாமலேயே என் சம்பாதிப்பின் மூலம் என்னால் வாழ முடியும். ஏழு சுவர் மாளிகையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வெளியேறும் ஒரு பறவையைப் போல நான் வாழ்கிறேன்’என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். உடன் வேலை பார்க்கும் அஞ்சலி !அவள் கண்களில் என்ன தைரியமும், துடிப்பும்! ’கல்யாணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றல்ல சௌகந்தி’ —அவள் தன்னையே சமாதானம் செய்து கொள்ள முயற்சித்தாள்.

’நான் ஒப்புக் கொள்கிறேன்.ஆனால் ஓர் ஆணின் துணையின்றி ஒரு பெண்ணால் தனியாக வாழ முடியுமா? நிச்சயமாக வாழ முடியும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் இந்த தீர்மானம் என்பது வெறும் தற்காலிகமானதுதான். அடுத்த கணம் நான் மூழ்கிப் போகிறேன்…’

இவளிப்படியிருக்கும் போது அஞ்சலி எவ்வளவு உறுதியாக,தைரியமாக இருக்கிறாள்? அது ஒருவருடைய மனதின் எல்லை சார்ந்ததா?’ மனம் எல்லை சார்ந்ததில்லை. அது நம் எண்ணங்களைப் பொறுத்து விரியலாம், சுருங்கலாம், என்று சொன்னாள் அஞ்சலி.

’இல்லை அஞ்சலி, என் மனம் செத்துப் போன ஒன்று, அதில் சுருக்கமோ விரிவோ இல்லை.’அது முழுமையாக மரத்துப் போயிருக்க வேண்டும்’ இதை வெளிப்படுத்துவதில் தவறிப் போனதால் சௌகந்தி, களைத்துப் போனாள்.ஏன் அவளால் அஞ்சலியைப் போலிருக்க முடியவில்லை? அதற்கு பதிலாக, தற்கட்டுப்பாடு வேண்டுமென்பதால் அவளது மனம் அந்த ’தடைப்படுத்தப்பட்ட’ ஆசைகளைக் கைவிட்டுவிட்டு , எந்த விதக் கனவுகளுமில்லாமல் துடிப்பின்றி சுருங்கிப் போனது!

’அஞ்சலி, என் கனவுகளுள்ளாவது நான் புதைந்து கொள்கிறேன்! மரியாதை நிறைந்த பால்காரன் கூட என் கனவுகளில் எட்டிப் பார்க்கிறான்! அதன் பிறகு பஸ் கண்டக்டர், என்னருகில் உட்கார முடியாத நீண்ட முடியுடைய பயணி.. பிறகு வேறு யார்? இதையெல்லாம் நான் எப்படி விளக்குவேன்? அலுவலகத்தில் உனக்குத் தெரிந்தவர்களும் இதில் அடக்கம். கனவுகள் வினோதமானதும்,புரிந்து கொள்ள முடியாததும் அல்லவா? ஒருவரின் தலை இன்னொருவரின் உடலில் சேர்க்கப்பட்டிருக்கும்! ஒருவரின் புருவம் இன்னொருவரின் கண்களில்! இந்த உலகம் பொருத்தமான கலவையில் எவ்வளவு அற்புதமானது என்று உனக்குத் தெரியுமா! என் மனதிற்கும் அதற்கும் தொடர்பில்லை! அஞ்சலி,உண்மையைச் சொல்,அந்த மாதிரியான குழப்பும் கனவுகள் உனக்கு வந்ததேயில்லையா?’ சௌகந்தியின் தனிமை நாளுக்கு நாள் மிக அதிகமானது.

அலுவலகத்திற்குப் போகும் போது, அறைக்குள் யார் புகுந்தாலும் அதற்கு இடம் தருவது போல வேண்டுமென்றே கொடியில் கனமான சேலையை பரப்பி வைத்தாள். தனக்கே அது தெரியாது என்பதைப் போல.

அவள் கௌரவமான குடும்பத்திலிருந்து வந்தவள். அந்த கௌரவத்தை குலைக்கும் தைரியமுமில்லை. ஏன் யாராவது அவளது இந்த கௌரவத்தை தோலுரிக்கக்கூடாது? அவளுக்கு இப்போது அனுபவம் மிக அவசியமாகத் தேவைப்பட்டது. போலித் திரை கிழிக்கப்பட்டு உண்மையான அவள் வெளி வரவேண்டும்.ஆனால் யாரும் என்னை அவதூறாகப் பேசக் கூடாது. ’பாருங்கள்! சௌகந்தி போய்க் கொண்டிருக்கிறாள்! உங்களில் யாருக்காவது அவளோடு இணை சேர தைரியமிருக்கிறதா?என்று அவளால் தைரியமாக தெருவில் கூக்குரலிட முடியுமா? காசி போன்ற புனித ஸ்தலங்களில் சந்தைகளில் பெண்கள் விற்கப்படுகின்றனர். ஆனால் கௌரவமான அவள் தன் விருப்பத்திற்கேற்ப பொது இடங்களில் ஏலம் விடப்படுவாளா? ’கௌரவமான குடும்பத்திலிருந்து வருபவர்கள் இந்த வகையில் இல்லை! என்று முகத்தில் அறைவதாக ஒரு பதில் வரும்.

தான் செய்தது, ஒருவரின் எல்லை மற்றும் மீட்சியைக் கடந்த பாவத்திற்குள்ளாகும் வியாபாரப் பாதை போன்றது! என்பதை உணர்ந்து சௌகந்தி தன் மனதிற்குள்ளேயே மறுகிக் கொண்டிருந்தாள்

அவள் மனதில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டத்தை ஒருவரால் எப்படி அறிய முடியும்? அப்பாவியான முகத்தில் வெளிர்ந்த கண்கள், வலுவான உடலமைப்பு, மென்மையான பேச்சு, நல்ல வேலை. ஆனால் திருமணமாகாதவள், அவளுக்கு எந்த தொல்லைகளுமில்லை. இப்படித்தான்அவளைப் பற்றிச் சொல்ல முடியும்.

வானத்தில் நிலவுடனோ ,நிலாவற்றோ இரவு சௌகந்தியின் தூக்கத்தை களவாடிக் கொண்டது. ஏதோ சப்தத்தை எதிர்பார்த்து அவள் திரும்பி திரும்பி படுத்தாள். இரவில் தேவதாரு மரங்களுக்கிடையேயான மிக மென்மையான சலசலப்பை மட்டுமே கேட்க முடியும். அல்லது எலிகள் ஒன்றன் பின் ஒன்று ஓடிக் கொண்டிருக்கும். இல்லையெனில் , கட்டப்பட்டிருக்கும் நாய் இரவு முழுவதும் குரைத்துக் கொண்டிருக்கும்.வீட்டுக்கார அம்மாவின் வேலைக்காரப் பெண் ’அம்மா, உங்களுக்கு இப்போதே நள்ளிரவாகி விட்டதல்லவா?இப்போது என்ன மணி ஆகியிருக்கும் ?என்று சிரித்துக் கொண்டே கேட்பாள். சௌகந்திக்கு தன் அப்பாவின் பயமும், வீட்டுக்கார அம்மாவின் உறுதியும் ஞாபகத்திற்கு வரும்.சீ! விஷம் ஏறுவது போல இருட்டு பரவியது.அவள் பிணத்தைப் போல தூங்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள்.

அன்று விடுமுறை நாள்.

’சௌகந்தி ,நாங்கள் நான்கைந்து நாட்கள் இங்கிருக்க மாட்டோம்.நீ எப்படித் தனியாக இருப்பாய்? லீவ் எடுத்துக் கொண்டு நீயும் ஊருக்கு போய்விட்டு வாயேன். நீ இதுவரை லீவே எடுத்ததில்லையே’ என்று வீட்டுக்கார அம்மா சொன்னாள்.

சௌகந்தியின் கன்னங்களில் திடீரென்று பரவிய ஒளியை வீட்டுக்கார அம்மாள் கவனிக்காமல் போனது அதிர்ஷ்டம்தான் இது அவள் தனியளாக சோகம் கப்பிய கன்னங்களோடு இருப்பதை இந்த உலகம் கூட காணத் தவறியதாலா ? அப்படியான கேள்விக்கு சௌகந்தி என்ன பதில் சொல்ல முடியும்? குறும்பான புன்னகையோடு ’நீங்களும்,உங்கள் நகைச்சுவையும்!’என்று வெறுமனே சொல்லி விடுவாளா?

’நான் இங்கேயே இருப்பேன்.எனக்கு லீவு கிடைக்காது.எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்படவேண்டாம். நிம்மதியாக போய்விட்டு வாருங்கள்,’ சௌகந்தி உறுதியாகச் சொன்னாள்.

’நாங்கள் திரும்பி வரும் வரை என் மனம் முழுக்க இங்கேதானிருக்கும். உன் அப்பா பெரிய பொறுப்பை என் தோளில் சுமத்தியிருக்கிறார்,’ பயம் தரும் கற்பனையான முக பாவனையோடு வீட்டுக்கார அம்மாள் போனாள்.

சௌகந்தி காலை நீட்டியபடி சந்தோஷமாக உட்கார்ந்து கொண்டாள். இது சொர்க்கம்தான். அவள் ஏன் வேறெங்கும் போக வேண்டும்?வீட்டிற்குப் போய் அவள் என்ன செய்வாள்?அவள் தங்கைக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்களாகி விட்டன. படுக்கையின் ஒரத்தில் கணவன் உட்கார்ந்திருக்க அவள் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருப்பாள். இல்லை, அங்கு போவதில் எந்த அர்த்தமுமில்லை.

குழந்தைக்குப் பால் கொடுப்பது போல மாறுகால் போட்டு உட்கார்ந்தாள். ஒரு கணம் அவள் தலை சுற்றியது.யாரோ தன்னை பார்க்கிறார்கள் என்று அவள் பயந்தாள்.உடனே தலையைக் குனிந்து, கண்களை மூடிக் கொண்டாள்.

இன்று விடுமுறை தினம். இந்த நாளில்,இந்த இரவிலாவது ஏதாவது நடக்குமா?

பகல் பொழுது மிக மெதுவாக நகர்ந்தது.இரவு அடுக்குகளாக வந்து தன்னைச் சூழ்ந்து கொள்ளும் என்று நினைத்தாள்.இரவின் காலடிகளை கவனித்தபடி படுத்திருந்தாள். கதவு தட்டப்படும் என்ற நீண்ட நேர எதிர்பார்ப்பில் இருந்து களைத்துப் போனாள்.ஒருவேளை அவள் கிருஷ்ணனின் காலத்தில் வாழ்ந்திருந்தால் வெறும் புல்லாங்குழல் ஓசையால் அவள் உணர்ந்திருக்க முடியும் ! உள்ளும், வெளியும் எல்லா விதமான ஒலிகளையும் ஏற்படுத்த அவளால் கிருஷ்ணனின் இனிய புல்லாங்குழல் ஒசையை உணர முடியாமல் போனது. மெதுவாக கண்ணிமைகள் மூடின, தூக்கம் அழுத்தியது.நாள் முழுவதிலுமான களைப்பு அவளை நாராக்கியிருந்தது.தடையற்ற தூக்கம்! காலை ஐந்து மணியாக இருக்கலாம்…

சப்தம் கேட்டது!சௌகந்தி எழுந்து உட்கார்ந்தாள்.இதற்காகத்தானே அவள் இரவும், பகலும் காத்திருந்தாள்?

கடைசியாக அவளுடைய கதவு வைகறையில் யாரோ வந்திருப்பதைச் சொல்லியது.

இந்த அழைப்பிற்காக பல காலம் காத்திருந்த சௌகந்தி மீண்டும் அதைக் கேட்கும் ஆசையோடு படுத்திருந்தாள்.சப்தம் பெரிதாக கேட்டது. யாரோ அவள் பெயரை மிக மென்மையாக கூப்பிட்டார்கள்.

அவள் மீண்டும் எழுந்து உட்கார்ந்தாள்.யாராக இருக்கும்? துடிக்க மறந்த இதயம் மிக வேகமாக அடித்துக் கொண்டது.’ யார் அது? சௌகந்தி முனகினாள்.

எழுந்து, அவள் மிக மெதுவாக முன்னே நடந்தாள்.

தன் கனவுகள் அனைத்தையும் திரட்டி மெதுவாக கதவைத் திறந்தாள். அங்கே—

அப்பா நின்றிருந்தார்! அவருக்குப் பின்னால் அம்மா!

சௌகந்தி கீழே விழவில்லை. சிரிக்கவுமில்லை.

கடும் விஷத்தோடு கூடியிருப்பது போல முன்னாலிருந்த கருமையான சாலை சடலமாய் நீண்டிருந்தது.

நட்பின் பாரம்

எஸ். சுரேஷ்

கதவை திறந்த மேரியை பார்த்து, “என்ன வெய்யில்பா இந்த ஊர்ல” என்று கூறிவிட்டு, ஹாலுக்குள் நுழைந்து, கையிலிருந்த காகித பைகளை சென்டர் டேபிள் மீது வைத்துவிட்டு, ஏஸீ ஸ்விட்ச்சை ஆன் செய்து, ஃபேன்னுக்கு அடியில் உட்கார்ந்தாள் ஜெயா. மேரியை பார்த்து சிரித்துக்கொண்டே பாயல் உள்ளே நுழைந்தாள். “ஷாப்பிங் முடிஞ்சா?” என்று கேட்ட மேரியிடம், “எங்க. நாளைக்கும் போகணுமாம்.” என்றாள்.

டைனிங் மேஜை மேல் பைகளை வைத்துக்கொண்டிருந்த பாயலை பார்த்து, “ஃபிரிஜ்லேர்ந்து ஒரு பீர் எடு” என்றாள் ஜெயா. மேரி பீர் கேன் எடுத்து ஜெயாவுக்கு கொடுத்தாள். “நீ எதுக்கு கொடுக்கற? அவளே வந்து எடுத்துக் கொள்ளட்டும்” என்றாள் பாயல். “சரி விடுப்பா” என்றாள் மேரி. “நீ சும்மா இருப்பா. மேரி வீடு எங்க அம்மா வீடு மாதிரி” என்றாள் ஜெயா.

“என்னப்பா உங்க ஊரு இப்படி சுடுது” என்று கேட்ட ஜெயாவை பார்த்து மேரி சிரித்தாள். “நீ எங்க சுவிட்ஸர்லேண்ட்லயா பொறந்த?” “எங்க பெங்களூர வந்து பாரு பா. இப்போ சுவிட்ஸர்லேண்ட் போலதான் இருக்கும். அடுத்த வருஷத்துலேர்ந்து நாம பெங்களூர்ல சந்திப்போம்” என்றாள் ஜெயா. “எங்க. உங்க வீட்லயா? அங்க நாம தைரியமா தண்ணி அடிக்கலாமா?” என்று பாயல் கேட்டாள். “அந்த விஷயத்துல பெங்களூரு ஒரு தொல்ல பா” என்றாள் ஜெயா. “ஊர் முழுக்க தண்ணி அடிக்குது, ஆனா உன்னால முடியல” என்று சொல்லிவிட்டு மேரி சிரித்தாள். “இமேஜ் மெயின்டய்ன் பண்ணனும். என்ன பண்ண.”

ஏஸீயின் ரீங்காரம் இப்பொழுது தெளிவாக கேட்டது. குளிர் காற்று ஹாலை நிரப்ப ஆரம்பித்தது. வெளியில் சூரியன் மறையும் முன் வானத்தில் வண்ணங்களை பூசிக்கொண்டிருப்பதை அந்த அபார்ட்மெண்டின் ஐந்தாவது மாடியிலிருந்த அந்த மூவரால் பார்க்க முடியவில்லை. அவர்கள் ஜன்னலை கர்டனால் சாத்தியிருந்தார்கள். ஹால் இருட்டத் தொடங்கியவுடன் மேரி விளக்கை போட்டாள். ட்யூப் லைட் வெளிச்சத்தில் அந்த ஹால் மூலையில் கண்ணாடி அலமாரிக்குள் உயர்தர மதுபுட்டிகள் பளபளத்தன. அதே அலமாரியின் இன்னொரு ஷெல்ஃபில் உயர்ரக கண்ணாடி கோப்பைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அலமாரிக்கு மேல் வட்ட கடிகாரம் மணி ஆறு என்பதை காட்டியது. வீடு திரும்பும் பறவைகள் ஓசையை, வீடு திரும்பும் கார்களின் ஓசை மூழ்கடித்தது. லெதர் சோஃபாவில் ஜெயா ஒய்யாரமாக சாய்ந்தபடி பீர் குடித்துக்கொண்டிருந்தாள். ஆளுயர ஃபிரிஜ் அருகில் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட டைனிங் மேஜைக்கு அருகில் மேரியும் பாயலும் உட்கார்ந்திருந்தார்கள். ஃபிரிஜ்ஜுக்கு பின்புறம் இருந்த சமயலறை இருட்டில் மூழ்கியிருந்தது. ஜெயாவின் தலைக்குப் பின் சுவரில் பெரிய ஓவியம் மாட்டப்பட்டிருந்தது.

“கோவிட் மட்டும் வரவில்லை என்றாள், சில்வர் ஜூப்ளி கொண்டாடியிருப்போம்” என்றாள் மேரி. “ஆமாம். ரெண்டு வருஷம் நாம சந்திக்காமலே இருந்திருக்கோம். இந்த வருஷமாவது முடிந்ததே” என்றாள் பாயல். “நாம் இப்படி வருஷா வருஷம் சந்திப்பதை பார்த்து யாரோ பொறாமைப் பட்டிருக்காங்க. அதுக்குதான் கோவிட் வந்து நம்மை  சந்திக்கவிடாம செஞ்சிது” என்றாள் ஜெயா. மேரியும் பாயலும் உரக்க சிரித்தார்கள். “அவனவன் சைனாக்காரன் தான் கோவிட்ட பரப்பி விட்டாங்கன்னு சொல்றான். நீ என்னன்னா நம்ம உறவுகாரங்க யாரோ தான் கோவிட்டுக்கு காரணம்னு சொல்ற” என்று சொல்லிவிட்டு மேரி சிரித்தாள்.

அதை கேட்காதது போல் ஜெயா, “எனக்கு இன்னொரு பீர் வேண்டும்” என்றாள். மேரி எழுந்து சென்று ஃபிரிஜ்ஜிலிருந்து ஒரு பீர் கேன்னை எடுத்து ஜெயாவிடம் கொடுத்தாள். பிறகு பாயலை பார்த்து, “ஜின் ஆர் வைன்?” என்று கேட்டாள். “வைன்”. மூலையிலிருந்த அலமாரிக்கு சென்று வெவ்வேறு வடிவங்களில் இரண்டு கண்ணாடி கோப்பைகளை எடுத்தாள். பிறகு ஒரு விஸ்கி பாட்டிலும் வைன் பாட்டிலும் எடுத்தாள். பாயல் வந்து கோப்பைகளை வாங்கிக்கொண்டாள். இருவரும் டைனிங் மேஜை மேல் பாட்டிலையும் கோப்பைகளும் வைத்துவிட்டுஅருகில் உட்கார்ந்து கொண்டார்கள். ஏதோ ஞாபகம் வந்தது போல் மேரி எழுந்து சென்று ஃபிரிஜ்ஜிலிருந்து ஐஸ் கட்டிகள்  நிரம்பிய பாத்திரம் ஒன்றை கொண்டுவந்து டைனிங் மேஜை மேல் வைத்தாள். பிறகு ஒரு கோப்பையில் வைன்னையும் இன்னொரு  கோப்பையில் விஸ்கியையும் ஊற்றினாள். விஸ்கி கோப்பைக்குள் இரண்டு ஐஸ் கட்டிகளை போட்ட. பிறகு கோப்பையை மேலே உயர்த்தி, “சீர்ஸ்” என்றாள். பாயல் தன் கோப்பையால் மேரியின் கோப்பையை மெதுவாக தொட்டு “சீர்ஸ்” என்றாள். தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து பீர் கேன்னை மேலே தூக்கி “சீர்ஸ்” என்றாள் ஜெயா.

வைன்னை மெதுவாக ருசித்தபடி பாயல், “நாம மூணு பேருமே ஹைத்ராபாத்ல இருந்தா இது போல அடிக்கடி சந்திக்க முடியும். எம்.டி. வரைக்கும் ஒண்ணா படிச்சோம். இந்த கல்யாணம்னு ஒண்ணு நடக்கலைன்னா இங்கயே இருந்திருக்கலாம். கல்யாணம் செஞ்சிண்டு ஒண்ணும் சாதிக்கல” என்றாள்.“மேரேஜ் இஸ் அ வேஸ்ட் ஆஃப் டைம்” என்றாள் மேரி. ஜெயாவுக்கு போதை சற்று ஏறியது போல் இருந்தது. “நோ” என்று உரக்க சொன்னாள். “உங்களுக்கு அப்படி இருக்கலாம். எனக்கு அப்படி இல்ல. மை பிரகாஷ் லவ்ஸ் மீ. யெஸ். ஹி லவ்ஸ் மீ”

மேரியும் பாயலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சற்று நேரத்துக்கு மௌனம் நிலவியது. அவர்கள் இருவரும் மதுவை ரசித்து அருந்திக் கொண்டிருந்தார்கள். சமையலறைக்கு சென்று சிப்ஸ் பாக்கெட் ஒன்றை மேரி கொண்டுவந்து அதில் பாதியை ஒரு தட்டில் கொட்டி ஜெயாவின் முன் வைத்தாள், மீதியை மேஜை மேல் வைத்தாள். ஜெயா அதற்குள் பீரை குடித்து விட்டிருந்தாள். “இன்னொரு கேன்” என்றாள். “மெதுவா குடி இல்லைனா போதை ஏறிவிடும்” என்று சொன்ன மேரியிடம், “போதை ஏறத்தானே குடிக்கிறது” என்றாள். அவளுக்கு இன்னொரு பீர் கேன்னை கொடுத்தாள் மேரி.

ஜெயாவுக்கு போதையேறிக்கொண்டிருப்பதை மேரியும் பாயலும் கவனித்தார்கள். அவள் வாய் சற்று குளற ஆரம்பித்தது. “மேரேஜ் இஸ் அ வேஸ்ட் ஆஃப் டைம், மேரேஜ் இஸ் அ வேஸ்ட் ஆஃப் டைம்” என்று சொல்லிவிடு சிரிக்க ஆரம்பித்தாள். சட்டென்று சிரிப்பை நிறுத்திவிட்டு, “நாட் ஃபார் மீ, நாட் ஃபார் மீ”, என்று உரக்க சொன்ன பிறகு, “பிரகாஷ் இஸ் எ ஜெம். அவன போல ஒருத்தன் உங்களுக்கு கிடைக்கல. அதுக்கு தான் கல்யாணம் வேஸ்ட்ன்னு சொல்றீங்க. உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்ல. அதுதான் உண்மை. பிரகாஷ் மாதிரி ஒருத்தன் உங்களுக்கு கிடைக்கல, எனக்கு கிடைச்சான். அதுதான் உண்மை. யெஸ். தட் இஸ் தி ட்ரூத். உங்களுக்கு அப்படி ஒருவன் கிடைச்சிருந்தா நீங்களும் என்ன மாதிரி பெரிய ஹாஸ்பிடல் கட்டியிருப்பீங்க. யெஸ். ஐ ஆம் பெட்டர் ஆஃப் தான் யூ. பிரகாஷ், ஐ லவ் யூ”

தன்னை உற்றுப் பார்த்த பாயலின் கண்களை மேரி தவிர்த்தாள். “மேரி, பிளீஸ் மேரி. ஜெயா கிட்ட இத சொல்லாத. உன்ன கெஞ்சி கேட்டுக்கறேன். பிளீஸ்”

“நீ தான் ஜெயாவோட தினமும் கூத்தடிக்கிற. என் மேல ஏண்டா கைய வெச்ச?”

“சாரி, சாரி சாரி. என்ன மன்னிச்சிடு. அவளுக்கு சொல்லிடாத”

“வெக்கமா இல்லடா உனக்கு? அவ என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். அது தெரிஞ்சிருந்தும் நீ இப்படி செய்யர. என்ன மாதிரி பொறுக்கிடா நீ?”

“சாரி, சாரி, உங்க சைட்ல இதெல்லாம் சகஜம்தான்னு அப்படி செஞ்சிட்டேன். நான்….”

“என்னடா சொன்ன, யூ சன் ஆஃப் எ பிட்ச். பண்றத பண்ணிட்டு என்ன பேச்சு பேசற.”

“மேரி, ஐ பெக் யூ. உன்ன கெஞ்சிக்  கேட்டுக்கறேன். ஐ ஆம் சாரி. ஐ ஆம் சாரி. இனிமே இப்படி நடக்காது.”

பாயல் மேரியை உற்று நோக்கிக்கொண்டிருந்தாள்.

“ஜெயாகிட்ட சொல்லுடி. அந்த ஆளு அவளுக்கு தேவையில்லை. கொஞ்சம் நாள் முன்னால தான், கவிதா கிட்ட ஏதோ பண்ண போயி செருப்படி வாங்கினான். இப்போ உன் மேலயே கைய வெக்கறான். நீ போய் ஜெயவுக்கு சொல்லு.”

“வேணாம்டி. கவிதா ஜெயவுக்கு சொன்னா. என்ன ஆச்சு? இப்போ அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதில்லை. நம்ம இன்னும் ரெண்டு மாசத்துல பட்டப்  படிப்ப முடிச்கிட்டு, ஒவ்வொருவர் ஒவ்வொரு திசைல போக போறோம். இப்போ எதுக்கு இந்த சண்டையெல்லாம்?”

ஜெயா மேரியை பார்த்து, “மேரி, இன்னொரு பீர்” என்றாள். இரண்டு பீர் கேன்களை அவள் முன் வைத்துவிட்டு, சரிந்திருந்த அவளை நிமிர்த்தி உட்கார வைத்தாள் மேரி. ஜெயா பீர் கேனை கையிலெடுத்துக் கொண்டு மறுபடியும் சரிந்தாள்.

வாய் குளறியபடியே, “என் பிரகாஷ் இஸ் அ ஜெம். அவன பார்த்து எல்லோரும் போறாமப்படராங்க. அதுவும் பெண்கள் ரொம்ப போறாமப்  படராங்க. ஏதேதோ கம்ப்ளைண்ட் கொண்டு வராங்க. நான் எல்லாரையும் துரத்தியடிக்கறேன். ஐ பிலீவ் இன் பிரகாஷ். நான் பிரகாஷ நம்புறேன்.”

இந்த முறை மேரியின் பார்வையை பாயல் தவிர்த்தாள், “அந்த ஆளு எல்லா லேடீஸ் ஸ்டாஃப் மேலயும் கையை வெக்க பாக்குறான். அவன் மேல எங்களுக்கு இப்போ மரியாதையே போச்சு. அவன பார்த்தாலே அருவெறுப்பா இருக்கு. அந்த அம்மாக்கிட்ட அவ புருஷன பத்தி சொன்னா நம்மள வேலைய விட்டு தூக்கிடுவாங்க. நீங்க தான் எங்க ரெண்டு பேருக்கும் உங்க கிளினிக்ல வேலை போட்டுக் கொடுக்கணும் டாக்டர் பாயல்”

ஜெயாவின் தெளிவில்லாத குரல் உயர ஆரம்பித்தது, “என்னோட ஹாஸ்பிடல்ல வந்து வேலை செய்யுன்னு பாயலுக்கு சொன்னேன். அவ வரல. அவ சொந்த கிளினிக் நடத்தரா. ஹ ஹ ஹ. என்ன பாரு. நான் ஒரு பெரிய ஹாஸ்பிடலே நடத்தறேன். அந்த ஏரியாவிலேயே பெரிய ஹாஸ்பிடல் என்னோட ஹாஸ்பிடல் தான்.” ஒரு முழுங்கு பீரை குடித்துவிட்டு தொடர்ந்தாள், “என்னோட ஹாஸ்பிடல்லுக்கு டீசண்ட் பீப்பிள்தான் வருவாங்க. சின்ன பசங்க தப்பு தண்டா பண்ணிட்டு என்கிட்ட வரமாட்டாங்க. நான் அவங்க நாக்கு பிடிங்கிக்கர மாதிரி நாலு கேள்வி கேப்பேன். பாயல் அதெல்லாம் கேட்க மாட்டாள்” என்று சொல்லிவிட்டு உரக்க சிரித்தாள். “உனக்கு தெரியுமா மேரி. எங்க ஊர்ல இருக்கிற ஜைனல மோஸ்ட் நான்-ஜட்ஜுமெண்ட்டல் டாக்டர்ன்னு பாயலுக்கு ஒரு பத்திரிகை பட்டம் கொடுத்திருக்கு. அப்படின்னா கல்யாணம் ஆகாம தப்பு தண்டா பண்ற எல்லா பெண்களும் இவ கிளினிக்கு போவாங்க. இவ அவங்கள ஒண்ணும் கேட்கமாட்டா. அவங்க அப்பா அம்மா வயத்துல தீய வார்த்துண்டு இருப்பாங்க. இங்க டாக்டர் அம்மா பசங்கள என்கரேஜ் பண்ணுவாங்க. அதுக்கு தான் அவளுக்கு இந்த பட்டம். தூ.”

மேரியும் பாயலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ஜெயா, இருமுறை விக்கிய பிறகு, “என் பொண்ண நான் எப்படி வளர்த்திருக்கேன் தெரியுமா. எனக்கு தெரியாம அவ ஒண்ணும் செய்ய மாட்டா. பாயல பார். அவ பொண்ணு எங்க போறா எங்க வரான்னு இவளுக்கு தெரியாது. என்னா பொண்ண வளர்க்கிறாளோ இவ. என் பொண்ணு என் கூட சண்ட போடரா. ஆனா நான் சொன்ன வழியில தான் அவ நடக்கணும். ஷீ ஹாஸ் டூ லிசன் டூ மீ. யெஸ். ஷீ மஸ்ட் லிசன் டூ மீ” என்று சொல்லிவிட்டு மேஜையை கையால் ஓங்கி அறைந்தாள்.

மேரி பாயலை பார்த்தாள். “ஆண்டி, பிளீஸ் ஆண்டி. எங்க அம்மா உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்ன்னு எனக்கு தெரியும். ஆனா இந்த ஊர்ல உங்கள விட்டா வேற டாக்டர் கிட்ட போக எனக்கு பயமா இருக்கு. பிளீஸ் ஆண்டி. எங்க அம்மாக்கிட்டா சொல்லாதீங்க.”

“ஏன்…”

“பிளீஸ் ஆண்டி. ஒண்ணும் கேக்காதீங்க. நான் இனிமே இப்படி பண்ண மாட்டேன். பிராமிஸ். ஐ பிராமிஸ் யூ”

இருக்கையை விட்டு தள்ளாடியபடி எழுந்த ஜெயா, உவேக் என்று வாந்தி எடுத்தாள். மேரியும் பாயலும் விரைவாக சென்று அவளை கைத்தாங்கலாக பாத்ரூமூக்கு அழைத்து சென்றனர். ஜெயா இன்னும் இரு முறை வாந்தி எடுத்துவிட்டு ஆழ ஆரம்பித்தாள். “ஐ ஆம் ஸாட். ஐ ஆம் ஸாட்” மறுபடியும் ஒரு முறை வாந்தி எடுத்துவிட்டு, “எனக்கு எதுவுமே பிடிக்கலை. எனக்கு எதுவுமே பிடிக்கல. யூ ஆர் மை பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்’ என்று கூறிவிட்டு தேம்பி தேம்பி அழுதாள். மேரியும் பாயலும் மெதுவாக அவளை படுக்கையறைக்கு அழைத்து சென்று, படுக்கையில் கிடத்தி, போர்வையை போர்த்திவிட்டார்கள். பிறகு இருவரும் ஹாலுக்கு வந்து, மௌனமாக மது அருந்த ஆரம்பித்தார்கள்.

 

.

 

 

 

 

 

 

 

 

கற்பூரம் நாறுமோ

ஸ்ரீதர் நாராயணன் 

“கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ” என்று சஞ்சய் சுப்ரமணியன் கமாஸில் கார்வை பிடிப்பது ஸ்பீக்கரில் ஒலித்தது.

“அந்த மணிரத்னம் படம் ஒண்ணு இருக்குமே, கல்யாணம் பண்ணி, அமெரிக்கா வந்து செட்டில் ஆகி குழந்தைக்கு மொட்டை போட கோவிலுக்கு போகனும்னு சொல்வானே…. அதுல வர்ற பாட்டா இது?”, ஆர்வமாக ஓர் ஆண் குரல் கேட்க, உடனே “உஸ்ஸ்ஸ்… இது வேற பாட்டு” என அடக்கும் பெண் குரலும் கேட்டது உமாபதிக்கு.

கோவிட் காலத்துக்கான ஏற்பாடுகளான, ஆறு அடி இடைவெளிக்கென, தரையில் இட்டிருந்த எக்ஸ் மார்க்குகள் அப்படியே இருந்தாலும், ஜேஸ்டன்வில் பாலாஜி கோவில் இப்போது பழைய தன்மைக்கு வந்துவிட்டதென்பது, செருப்பு புரைகள் எல்லாம் நிறைந்திருப்பதில் தெரிந்தது. மேல் கோட்டைக் கழட்டி, ஹேங்கரில் தொங்கவிட்டுக் கொண்டிருந்த உமாபதிக்கு, முதுகிற்குப் பின்னால் கேட்ட உரையாடல் துணுக்கு சிரிப்பை எழுப்ப, சுவாரசிய உந்துதலில் சட்டென திரும்பிப் பார்த்தான். பேசியவர்கள் யாரெனத் தெரியாதபடிக்கு கலவையாக மக்கள் கூட்டம் காலணிகளை கழட்டுவதும், மேல் கோட்டுகளை நீக்குவதுமாக இருந்தது. வெளிறிய செங்கல் நிறத்தில், கரும்பச்சை பார்டரில் சரிகை வேலைப்பாடுகளுடனான புடவையும், அதன் மீது இழுத்துவிட்டுக் கொண்டிருந்த பிங்க் நிற ஸ்வெட்டருமாக இருந்த பெண்மணியைப் பார்த்ததும் படக்கென தலைக்குள் வெளிச்சம் போட்டது போலிருந்தது. முப்பத்தைந்து ஆண்டுகள் முன்னால் கல்யாண நிச்சயதார்த்தத்தில் பார்த்த அதே வார்ப்பில்தான் இருந்தாள் ரேணுகா மதனி. முன் தலையில் மட்டும் நரையோடிய இழைகள் வருஷங்கள் இத்தனை போயிற்று என கணக்குக் காட்டிக் கொண்டிருந்தன.

“நீதான இஞ்சீனீருக்கு படிக்கப் போறவன்னு உங்கண்ணன் சொல்லிட்டிருந்தாரு…?”, அவன் கன்னத்தைப் பற்றி இழுத்து வாய்நிறைய முத்தம் கொஞ்சிய ரேணுகா மதனிக்கு அப்போது பதினெட்டு பிராயம் இருந்திருக்கலாம். உமாபதி எட்டு வயது. நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். முழுப்பரீட்சை விடுமுறைக்கு திருமயம் போனபோதுதான் முருகானந்தம் அண்ணனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது எடுத்த சொற்ப கருப்பு, வெள்ளை படங்களில் எல்லாம், நன்றாக கொழுகொழுவென உருண்டையாக அவன் மதனியின் பக்கத்திலேயே இருந்தான்.

சத்யமூர்த்தி பெருமாள் கோவில் வாசலுக்கு நேரெதெரில் இருந்த தெருவில், இடப்பக்கம் முதல் வீடு முருகு அண்ணனுடையது. இருபுறம் பெரிய திண்ணை கொண்ட ஓட்டு வீடு அது. நல்ல கூராக இழுக்கப்பட்ட இளமீசையும், சுருள்முடி கிராப்புமாக அண்ணன் சைக்கிளில் வந்து அப்படியே திண்ணையில் கால் பாவி ஏறி நின்று, ஒரே மூச்சில் சைக்கிளையும் அலேக்காக தூக்கி திருப்பி திண்ணையில் ஏற்றி வைப்பார்.

அந்த ஸ்டைலெல்லாம் உமாபதிக்கு கவர்ச்சியாக தெரிந்தாலும், அண்ணனின் கீழுதடு நீளவாக்கில் பிளந்து, பிறகு இழுத்து தைக்கப்பட்ட வடுதான் முதலில் கண்ணில் பட்டது. ஏதோ பூரான் உதட்டின் விளிம்பில் இருந்து கீழ்வாக்கில் இறங்கி, அப்படியே தாடைக்குழியில் சென்று மறைவது போல நீளமான வடு. உமாபதி சட்டென அவர் முகத்தில் இருந்த பார்வையை விலக்கிக் கொண்டுவிடுவான். பிறவிக் குறைபாடான கிளெஃப்ட் உதடுகளுக்கு அவ்வளவுதான் அக்காலத்தில் தீர்வு.

சிவபெருமானை அபிஷேகப் பிரியர் என்றும், பெருமாளை அலங்காரப் பிரியர் என்றும் சொல்வார்கள். ஆனால், திருமய சத்யமூர்த்தி பெருமாளை விட, பக்கத்தில் இருந்த சத்யகிரீஸ்வரருக்குத்தான், சிற்ப வேலைபாடுகள் அம்சமாக கூடிய அலங்கார கோபுரம் உண்டு. சிவன் கோவிலுக்கு மேற்குபுறத்தின் சிறிய திடலில்தான் முருகு அண்ணன் வீட்டு அம்பாசிடர் கார் நிறுத்தப்பட்டிருக்கும். மூத்தவர் நித்யா அண்ணனின் டிராவல்ஸ் வண்டி அது.

பாலை ஊற்றி, உறைய வைத்து எடுத்தது போல அப்படியொரு வெண்மை. காருள் காலை வைக்கும்போதே மெத்தென இழுக்கும் மிதியடிகளும், நாசியை நிரடிச் செல்லும் பெர்ஃப்யூம் மணமும், உட்கார்ந்தவுடன் உள்ளே அமிழ்த்திக் கொள்ளும் இருக்கைகளுமான அந்தக் காரில்தான் உமாபதி, முருகு அண்ணனின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு கோனாபட்டு சென்றான்.

“ராமக்கா ஆச்சி வீட்டுக்கு வந்திருக்கற புள்ள. எதிரூடுதான். ரொம்ப சங்கோஜி. முருகுதான் எங்கேயும் கூட்டிட்டு சுத்தும். அவங்கப்பா மதுரைல இஞ்சீநீராம். இதும் இஞ்சீநீரு ஆகப்போறேன்னு பெரும் பீத்தலா சொல்லிட்டிருக்கும்”, யாராவது யாரிடமாவது உமாபதியைப் பற்றி வாஞ்சையுடன் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அவனுக்கு, தான் எப்போது இஞ்சிநியர் ஆகப்போகிறேனென்று சொன்னோம் என்று நினைவிலில்லை. ஆனால் அந்த முழுப்பரீட்சை விடுமுறைக் காலம் முழுவதும், அவன் அப்படித்தான் எல்லாரிடமும் அறிமுகப்படுத்தப்பட்டான். ஏதோ ஒருவகையில் முருகு அண்ணனின் ஆத்மார்த்த சிறுபிராய உருவகமாக உமாபதி ஆகிவிட்டிருந்தான். முருகுவிற்கு பிடித்தவன் என்பதால், அவர்களின் மொத்த குடும்பத்திற்கும் பிடித்துப் போய்விட்டது. இரண்டு டெம்போ டிராவலரில் நித்யானந்தம், பரமானந்தம், சதானந்தம் என்று அண்ணன்கள் குடும்பத்தினரோடு நிச்சயதார்த்தத்திற்கு போக, பெரியவரும் ஆச்சியும் காரில் போனார்கள். முருகு அண்ணன் காரோட்ட, கூட உமாபதிக்கு ஸ்பெஷல் சீட்.

பழைய நினைவுகளின் சுழலில் இருந்து உமாபதி மீள்வதற்குள், ரேணுகா அவனை அடையாளம் கண்டுபிடித்திருந்தாள்.

“நீ.. நீயு…. இஞ்சிநீரு உமாதான”, அப்படியே பாய்ந்து இவன் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டாள். பக்கத்தில் அவளை விட உயரமாக இருந்தது அவளுடைய பெண்ணா பேத்தியா என்று தெரியவில்லை. காலம் அப்படியொரு பாய்ச்சலைக் காட்டியிருந்தது.

“உங்கண்ணன்தான், நீ போடற ஃபேஸ்புக போட்டோல்லாம் கொண்டாந்து எங்கக்கிட்ட காட்டிட்டே இருப்பாரே. அதான் படக்குன்னு கண்டுபிடிச்சிட்டேன். இதான உம்ப்பொண்டாட்டியு. என்னம்மா சுலோசனா…. எங்களப் பத்தில்லாம் சொல்லியிருக்கானா ஒம்புருஷன்? இந்தூருக்கு வந்ததில்லேந்து உன்னயப் பாக்கனும்னுதான் உங்கண்ணன் சொல்லிட்டே இருந்தார். எங்க… நெனச்சா நெனச்ச இடத்துக்கு போய்வர முடியுதா உங்கூருல. இவங்களத்தான் நம்பி எதிர்பாத்திட்டிருக்க வேண்டியிருக்கு.” என்று அருகில் இருந்த பெண்ணைச் சுட்டிக் காட்ட, அது கண்களை உருட்டி தலையை சாய்த்து சிரித்தது. உமாபதியின் கன்னத்தைப் பிடித்து வழித்து, மதனி முத்தம் கொஞ்ச, அவன் பழைய நான்காம் வகுப்பு சிறுவனென சங்கோஜமாக நெளிந்தான்.

“என்னடா தனியா ஒக்காந்திருக்க? அங்க பசங்கள்லாம் புஷ்கரணி குளத்துல ஆட்டம் போட்டுக்கிட்டிருக்காங்கப் பாரு”, பாட்டி வீட்டில், ஒருக்களித்த கதவிற்க்குப் பின்னால், கூச்சமும், யாராவது அழைக்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புமாக உட்கார்ந்து தெருவைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் உமாபதியை, முருகு அண்ணன்தான் இழுத்துக் கொண்டு போனார். கோவிலைச் சுற்றிக் கொண்டு போகும் மண் சாலை, பின்னால் இருக்கும் புஷ்கரணி குளத்தில் போய் முடியும். குளத்தின் படிகளுக்கு பக்கம் பெரிய மதில் போல நீண்டிருக்கும் பக்கச் சுவர் குளத்தின் விளிம்புவரைப் போகும். முருகு அண்ணன் எப்போது வேட்டியைக் களைந்தார் எனத் தெரியாது. அப்படியே ஜட்டியுடன் அந்த பக்கச் சுவர் மீது ஓடி, ஒரே ஜம்பில் புஷ்கரணியின் நடுவே பாய்ந்து குதித்து விட்டார். உடனே குளத்தில் இருந்த பையன்கள் எல்லாம் மேலேறி வந்து பக்க சுவரின் மீது ஓடி உள்ளே குதிக்க ஆரம்பிக்க, அந்த இடமே பெருங்கொண்டாட்டமாகி விட்டது. அப்போதும் உமாபதி தயங்கி மேற்படியிலேயே நின்று கொண்டிருந்தான்.

“டேய் … இங்க வந்து நில்லு…”

மார்பளவு நீரில் நின்று கொண்டு, குளத்தின் நீர் வாரித் தளும்பிக் கொண்டிருக்கும் கடைசிப் படிக்கட்டைக் காட்டினார் அண்ணன்.

அவன் மெதுவாக இறங்கி அந்த கடைசிப் படிக்கு வந்தான். சில்லென பாதம் நனைய, கால் மாற்றி கால் மாற்றி நின்று கொண்டிருந்தவனிடம்,

“என் தோள்ல கைய ஊண்டிப் புடி” என்று சொல்லிவிட்டு அவன் கணுக்கால்கள் இரண்டையும் பற்றி அப்படியே தலைமீது தூக்கி, பின்னம்பக்கமாக விசிறிவிட்டார்.

ஊமையன் கோட்டை மலையின் அண்மையால், பின்மதியம் என்றாலும், குளம் சிலீரெனத்தான் இருந்தது. அண்ணன் தூக்கிப் போட்டதில் அப்படியே தலைகுப்புற, வீரிட்டு அலறியபடி குளத்தினுள் விழ, நாடி நரம்பெங்கும் திகில் கொப்பளிக்க உமாபதி தத்தளித்து எழுந்து நின்றான். கழுத்தளவு நீரில், நீந்தத் தெரியாமல் தடுமாறிக் கரை சேரும்போது, கூச்சமெல்லாம் கரைந்து போய்விட்டது. ஊர் பிள்ளைகளான சீனு, ராமர், சுரேஷ், கோமதி, நிர்மலா என எல்லாரும் அவனை சூழ்ந்து கொள்ள, உமாபதி வெகு சகஜமாகிப் போனான்.

குளியல் கும்மாளம் முடிந்ததும், பெருமாள் கோவில் தெருவிற்கு அடுத்து இருந்த இடைவீதியில் வெங்கடேஸ்வரா ஓட்டலுக்கு மொத்த பையன்களையும் கூட்டிச் சென்று, வாழையிலை கீற்றைக் கையில் கொடுத்து, “இப்பத்தான் அசோகா போட்டிருக்கு. சும்மா சாப்பிடு” என்று சுடச்சுட அல்வாத்துண்டை வெட்டிப் போட்டார்.

இலையில் அல்வா தீர்ந்ததும், மைசூர் போண்டாவையும் வெள்ளையப்பத்தையும் போட்டு சாம்பார் ஊற்றிக் கொண்டிருந்த சதானந்தம் அண்ணன், ““இவந்தான் ராமக்கா ஆச்சி வீட்டுக்கு வந்த மதுரை பையனா. எங்களுக்கும் மதுரைல ஓட்டல் இருக்குடே. கண்ணன் கஃபேன்னு. சிம்மக்கல்லுல கல்பனா தியேட்டர் பக்கம். நீ பாத்திருக்கியா.” என்றார்.

புஷ்கரணி குளத்துக் குளியல் ஒருநாள் என்றால், மறுநாள் ஊர் கம்மாயில் இடுப்பில் துண்டை முறுக்கிக் கட்டிவிட்டு நீச்சல் பழகியது, பள்ளத்தூரில் மனோரமா ட்ரூப்பின் பல்சுவை நிகழ்ச்சியைச் சென்று பார்த்துவிட்டு நடுநிசியில் வீடு திரும்பியது, காரைக்குடியில் சர்க்கஸ் பார்த்தது, புதுக்கோட்டை சாந்தியில் சத்யராஜ் படம் பார்த்துவிட்டு “இந்தக் கதையை குமுதத்தில் படிச்சிருக்கேன்” என்று என முருகு அண்ணனுக்கு சிட்னி ஷெல்டன் கதையைச் சொன்னது… .

புதுக்கோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், திருப்பெருந்துறை, தேவகோட்டை என அந்த சுற்றுப்புறம் அனைத்திற்கும் முருகு அண்ணன் அவனைக் கூட்டிக் கொண்டு போனார். அம்பாசிடரின் அலங்கார வேலைப்பாடுகளுடனான ஸ்டீயரிங்கை அப்படியே ஒற்றைக்கையில் பற்றி சுழற்றியபடி,

“இந்தத் தியேட்டர் ஓனர்காரவுகதான், புது பஸ் ஸ்டாண்ட் கிட்ட ஆஸ்பத்திரி ஒண்ணு தொறந்திருக்காவுக. அவங்க வண்டி நம்பர்கள்லாம் 8181-ன்னு ஒம்பதாம் நம்பர்லதான் இருக்கும். அந்தப் பக்கம் ஆலங்குடி ரோட்டுல மீனாட்சி பவன் ஓட்டல் ஒண்ணு கூட இருக்கு. நாங்களும் மதுரைல சொக்கிகுளம் பக்கத்தில பெரிய ஓட்டல் தொறக்க நாள் பாத்திட்டிருக்கம். செங்கமல நாச்சியாள்னு பெரியாஸ்பத்திரில டாக்டரா இருக்காங்க. அவங்க இடத்திலதான் பேசிட்டிருக்கம்.”

அவருக்கு எதைப் பற்றியும் எந்த இடத்திலும் பேசுவதற்கென விஷயங்கள் இருந்து கொண்டேயிருந்தன. ஆவுடையார் கோவில் பிரகாரத்தில் ஓரிடத்தில் நிறுத்தி, மேற்கூரையைக் காட்டி, “அந்தால பாரு. ஓட்டை இருக்கா. பிரிட்டிஷ்காரன் ஆட்சில, இந்தக் கூரையெல்லாம் கருங்கல்லுதானான்னு டெஸ்ட் பண்ண துரை ஒர்த்தன் துப்பாக்கியால சுட்டுப் பாத்தானாம். இந்தக் கொடுங்கை கூரை மாதிரி இன்னொண்ணு கேக்காதீங்கன்னு சொல்லித்தான் கோவில் கட்டறதுக்கு ஸ்தபதில்லாம் ஒத்துக்கிடுவாங்க அந்தக் காலத்தில. அந்தால கூரை மேல பல்லிப் பாத்தியா…. பாத்தா கல்லு மாதிரியே தெரியாது. தொட்டுப் பாரு. தொட்டுப் பாரு”.

இரும்பு ஏணியில் ஏறி, கூரையில் இருந்த கற் சிற்பத்தை விரலால் தொட்டுப் பார்ப்பதற்குள் உமாபதிக்கு உடலெல்லாம் கூசிற்று. ஒவ்வொரு முறையும் அண்ணன் பேசும்போது ஆர்வமாக அவருடைய மினுக்கும் கண்களை நிமிர்ந்து பார்த்து, அப்படியே அவர் தாடையில், அந்த பூரான் தழும்பு கண்ணில் பட்டதும் சட்டென விலகும் போது ஏற்படும் அதே கூசுதல் உணர்வு.

தலைகுனிந்து நிற்கும் உமாபதியை, அண்ணனின் மற்றொரு உரையாடல் ஏதாவது நிமிர்ந்து பார்க்க வைப்பதும், அவர். முகத்தை முழுவதும் பார்க்க முடியாமல் மீண்டும் குனிவதுமாக உமாபதிக்கு ஒருவித குற்றவுணர்வுடன்தான் அவர் கூடச் சுற்றிக் கொண்டிருந்தான்.

“இந்தப்பக்கம் சோல்ஜர்ஸ் சிலைகள்லாம் பாரு. குதிரை மேல இருக்கற ஒவ்வொருத்தன் வேட்டியிலும் ஒவ்வொரு வித பார்டர்… ஒண்ணு கூட ரிப்பீட் ஆகாது.” அண்ணனுக்கு உமாபதியுடன் பேசுவது என்பதை விட, அவருக்கு அவரே ஆத்மார்த்தமாக பேசுவது போலத்தான் இருக்கும்.

அந்தக் கோடை விடுமுறைக்கு அப்புறமும் உமாபதி, பாட்டி வீட்டிற்கு பலமுறை போயிருக்கிறான். ஊமையன் கோட்டை மீதான பீரங்கியும், அங்கே வீசுகின்ற பெருங்காற்றும், உருள்வது போல் நின்று கொண்டிருக்கும் ஒற்றைப் பாறையும்தான் மாறாமல் இருந்ததே தவிர மற்றதெல்லாம் மாறி விட்டிருந்தன. சீனு, சுரேஷ், ராமர் எல்லாம் ஊரை விட்டுப் போயிருந்தார்கள். நிர்மலாவிற்கு கல்யாணம் கூட ஆகியிருந்தது. முருகு அண்ணன் வீட்டில், ஓட்டல் சரியாகப் போகாததால் மூடிவிட்டிருந்தார்கள். புதுக்கோட்டை ரோட்டில் இருந்த ரைஸ் மில்லில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் நட்டமென்றார்கள். டிராவல்ஸ் சரியாகப் போகாமல் காரை குடுத்து விட்டிருந்தார்கள்.

உமாபதியும் இஞ்சினியரிங் எடுக்காமல் இயற்பியல் எடுத்து படித்துக் கொண்டிருந்தான். மேலே ஆராய்ச்சி படிப்பில் சேர, புரஃபசர் சேதுராமனிடம், சிபாரிசுக் கடிதம் வாங்கப் போகும்போது, “டேய்ய் உமா… என்னடா இந்தப் பக்கம்” என்று தோளைப் பற்றி அணைத்துக் கொண்டு கேட்டது முருகண்ணனேதான். ஆனால் அந்தப் பழைய ஸ்டைலான தோற்றம் மாறி, அப்போது வெள்ளை சீருடையில் இருந்தார். புரஃபசர் சேதுராமனின், மனைவிதான் செங்கமல நாச்சியார் என்றும், அவருக்கு கார் டிரைவராக அண்ணன் வேலை பார்க்கிறார் என்பதும் அப்புறம் புரிந்தது.

புரஃபசர் உமாபதியைப் பார்த்ததும் பெரும் உற்சாகத்தோடு, “ஒரே வார்த்தையில சொல்லனும்னா உன்னோட எஸ்ஸே, ப்ரில்லியண்ட். இந்த மதுரை பட்டிக்காட்டுல இருந்திட்டு கன்டன்ஸர் மேட்டர் ஃபீல்டு பத்தி இவ்வளவு நுணுக்கமா புரிஞ்சு வச்சிட்டிருக்கியேன்னு ஆச்சர்யமா இருக்குப்பா. நீ எம்ஐடிகெல்லாம் அப்ளை பண்ணிட்டிருக்காத. அதவிட பெட்டர், என்னோட ஃப்ரெண்டு யூ பென்-ல இருக்கான். பிரமாதமா உனக்கு ஹெல்ப் பண்ணுவான். பட் கொஞ்சம் பயோ-ஃபிசிக்ஸ் பக்கம் உன் ஃபோகஸ மாத்திக்கோ. உடனே அட்மிஷனாயிடும்” என்றவனை உச்சாணி கொம்பில் வைத்து பாராட்டிக் கொண்டிருந்தார். வெள்ளைத் தொப்பி, சிரிக்கும் கண்கள், தாடையில் பூரான் தழும்புமாக பக்கத்தில் பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அண்ணனுக்கு என்ன புரிந்ததோ என்றிருந்தது உமாபதிக்கு.

“இப்பவே, சாமிநாதனுக்கு ஈ-மெயில் அனுப்பிடறேன். அமெரிக்க யூனிவர்சிட்டியில எல்லாம் ஃப்ரீ மெயில் கொடுத்திருவாங்க. இங்கதான் நாங்க வி எஸ் என் எல்ல போய் தொங்கிக் காத்துக்கிடந்து மெயில் அக்கவுண்ட் வாங்க வேண்டியிருக்கு. மெயில் கணக்கு இருந்தா எவ்ளோ வசதி தெரியுமா. உன்னோட பேப்பர இன்னும் என்னால் முழுசா நம்ப முடியலப்பா. சிம்ப்ளி ப்ரில்லியண்ட்” என்றவாறே, மாடியில் இருந்த அவருடைய அறைக்கு வேகமாக படியேறியவர், திரும்பி,

“டிரைவர், ஒரு அரைபாக்கெட் கோல்ட் கிங்ஸ் வாங்கிட்டு வந்திடறீங்களா. தீந்து போச்சு. அப்படியே புதுசா வந்திருக்கே… அந்த 2 லிட்டர் ஃபேண்டா… அதிலயும் ஒண்ணு வாங்கிக்கிடுங்க” என்றவர், இவன் பக்கம் திரும்பி “கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பேல்ல. செம வெயில் இன்னிக்கு. சரி. சரி… மேல வா” என்று படிகளில் தாவித்தாவி ஏறிச் சென்று விட்டார்.

சேதுராமனின் புகழ் சொற்களில் கட்டுண்டபடி உமாபதியும், அவர் பின்னால் படிகளில் ஏறி மாடிக்குச் சென்றுவிட்டான். அண்ணனை உதாசீனப்படுத்தும் நோக்கம் இல்லாவிட்டாலும், அந்த நிமிடம் அவர் விசிறியடிக்கப்பட்டு விழுந்ததை அவன் பிறகு பல கணங்களில் உணர்ந்திருந்தான்.

யூ பென் பல்கலைகழகத்தின் பால் ஹேரிஸ்க்கு விலாசமிட்ட சிபாரிசு கடிதத்துடன் வீட்டிற்கு வெளியே வந்தபோது, முருகு அண்ணன் மீண்டும் கண்களில் பட்டுவிடக்கூடாதே என்கிற பதட்டம் இருந்தது. காம்பவுண்ட் கேட்டைத் திறந்து வெளியே வரும்போது,

“அந்தப் பக்கம் எங்கிட்டு போற. பஸ் ஸ்டாப்புக்கு இப்படி போகனும். உன்னைக் கொண்டுவிட்டுட்டு போலாம்னுதான் வெய்ட் பண்ணிட்டிருக்கேன்” சின்ன ஸ்கூட்டி வண்டியில் இருந்தபடிக்கு அண்ணன் கூப்பிட்டார்.

“ஐயா எதோ அமெரிக்காவுக்கு லெட்டர் கொடுக்கிறேன்னாரே. இங்க, தல்லாகுளம் பெருமாள் கோவில்ல வச்சு கும்பிட்டுட்டுப் போலாம். அப்படியே காதம்பரி மெஸ்ல இப்ப டிஃபன் போட்டிருப்பான். சாப்பிட்டுட்டுப் போலாம்”

அண்ணன் அப்போது பிபிகுளத்தில்தான் தங்கியிருந்தார். சந்திரா பிறந்து 2 வயது ஆகியிருந்தது. கோவிலுக்குப் போய்விட்டு, தேங்காய் போளியும், உளுந்தவடையும் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு பஸ் ஏறியதும்தான், அண்ணனுடன் போய் குழந்தையாவது பார்த்துவிட்டு வந்திருக்கலாமே என்றிருந்தது உமாபதிக்கு.

இப்போது எதிரில் ரேணுகாவை விட உயரமாக அவள் பக்கத்தில் இருப்பதுதான் சந்திராவின் பெண்ணாக இருக்க வேண்டும்.

“குத்துக்கலாட்டம் நான் நிக்கிறேன் உம்முன்னாடி. உங்கண்ணனைத் தேடுதோ…” அவன் முருகானந்தத்தைத் தேடுவதாக நினைத்துக் கொண்ட ரேணுகா, “இங்கதான் பழைய கோவில் போட்டோல்லாம் பாத்திட்டு வர்றேன்னு போனார். கோவில்னு வந்திட்டா அவரைக் கைல புடிக்க முடியுமா என்ன. உனக்குத்தான் தெரியுமே” என்று, தனது நெடிய குசல விசாரணைகளையைத் தொடர்ந்தாள்.

சன்னதியிலிருந்து தரிசனம் முடித்துவிட்டு திரும்பும் வழியில் இருந்த விற்பனைக் கவுண்ட்டர்கள் வரிசைக்கு பக்கத்தில் சுவரில் இருந்த பெரிய போர்டில், பல போட்டோக்களை ஒட்டி வைத்திருந்தார்கள். எழுபத்தி ஏழில், அந்த ஜேஸ்டன்வில் ஊரில் கோவில் கட்டுவதற்கான வாணம் தோண்டியதில் தொடங்கி, கோவிலின் வெவ்வேறு வளர்ச்சி கட்டங்கள், திறப்பு விழா படங்கள், பிரபலங்கள் வந்து போனது என கலவையான கொலாஜ்.

நீளமாக சரிகை துண்டு போட்டிருந்த தாடிக்காரர், ராஜமுந்திரி வாசனையுடன் ஆங்கிலத்தில் அந்த போட்டோக்கள் வழியே அக்கோவிலின் வரலாற்றை விவரித்துக் கொண்டிருக்க, பக்கத்தில் முருகு அண்ணன், எப்போதும் தணியாத ஆர்வம் கண்களில் மின்ன கேட்டுக் கொண்டிருந்தார். ரேணுகா மதனி போலல்லாமல், வயோதிகம் அண்ணனின் மீது தன் ரேகைகளை அழுத்தமாகவே பதிவிட்டிருந்தது.

“டேய்ய்… இஞ்சிநீரு. உன்னைப் பாக்கனும்னு பாக்கனும்னு இவகிட்ட சொல்லிட்டே இருந்தேன். ந்தா… பெருமாள் மனவு வச்சாப்ல வந்து சேந்துட்ட பாரு” என்றார்.

“ஃபேஸ்புக்ல ஒரு மெசேஜ் போட்டிருந்தா வீட்டுக்கே வந்திருப்பேனேண்ணே. இங்கிருந்து ஒன்றரை மணி நேரத்துல குவேக்கர் டவுன்லதான் நான் இருக்கேன். இப்பவே கிளம்பி வாங்க.” என்றான். நுரை பூத்தாற்ப் போலிருந்த பூஞ்சை தாடியினூடே அந்த பூரான் தழும்பு தாடைக்குழி வரை போவதைப் பார்த்து சட்டென கண்களை விலக்கிக் கொண்டான்.

அண்ணன் சிரித்தார். “அந்த ஃபோனே இம்ப்புட்டுக்குன்னு இருக்கு. அதுல ஒரு பட்டனத் தட்டினா இன்னோரு பட்டனு விழுது. ஆனா நீ போடற போட்டோல்லாம் ஒண்ணுவிடாம பாத்திருவோம் நாங்கள்லாம்”

ராஜமுந்திரிக்காரர் இப்போது உமாபதியைப் பார்த்து, “நமஸ்காரம் சார். இப்போ, மூலவருக்கு தங்கக் கவசம் பிராஜெக்ட் ஒண்ணு போயிட்டிருக்கு. நீங்கள்லாம் நல்லா சாரிட்டி பண்ணனும்,” என்று ஆரம்பித்தார். தொடர்ந்து, “இது ரொம்ப விசேஷமான மூர்த்தி. அமெரிக்காவில் இருக்கிற கோவில்கள்ல ரொம்ப பழமை வாய்ந்தது. பிட்ஸ்பர்க் கோவிலுக்கு அடுத்து ஆறு வருஷத்தில இந்தக் கோவில் ப்ளானிங் ஆரம்பிச்சிட்டோம் ” என்றார்.

முருகண்ணன் ஆர்வம் தணியாமல் கேட்டுக் கொண்டிருக்க, பக்கத்தில் விற்பனை கவுண்டரில் இருந்த பெண்மணி, டொனேஷன் சீட்டு புத்தகங்களை விரித்து விளக்க ஆரம்பித்தார்.

“மூலவரை அப்போதே தனி ஃப்ளைட்டில் கொண்டு வந்தோம். இங்கே கஸ்டம்ஸில் மூன்று மாதங்கள் ரிலீஸ் செய்யாமல் வைத்திருந்தார்கள். ஆனால் சிலை ஒரு கீறல் இல்லாமல் கொண்டு வந்து ஸ்தாபிக்கப்பட்டது. பாத்திருப்பீர்களே, பெருமாளின் தாடையில் கற்பூரம் பதிக்கப்பட்டிருக்குமே. அப்படியே கருக்கலையாமல் இன்றுவரை பராமரிக்கிறோம்”

உமாபதியின் பின்னால் நின்றுகொண்டிருந்த ஷ்ரேயா சட்டென முகம் மலர்ந்தவளாக “ஐ நோ தட் ஸ்டோரி. ஏதோ காயம் ஆகி அதுக்காக, சாமிக்கு அங்க கேம்ஃப்பர் வச்சிருப்பாங்கள்ல. ஐ நோ. அவர் பேர் கூட அனந்தன்னு வரும்ல டாடி? ஒரு ஃப்ளவர் கார்டன் வச்சிருப்பார். சின்னப் பையன் ஒருத்தன் ஹெல்ப் செய்ய வருவான்….” என்று அவளுடைய ஆங்கில உச்சரிப்பில் அனந்தாழ்வாரின் கதையை துண்டு துண்டாக சொல்ல ஆரம்பித்தாள்..

டொனேஷன் டிக்கெட்டுகள், பிரசாதங்கள் என்று அவர்கள் வாங்கி முடிக்கும்போது ஷ்ரேயா கதையை சொல்லி முடித்திருந்தாள். முருகண்ணன் அவளை கட்டியிழுத்து கன்னத்தில் ஆழமாக ஒரு முத்தம் பதித்துவிட்டு கையில் ஒரு பிரசாத லட்டை கொடுத்தார்.

“உன் வயசிலிருந்து உங்க அப்பாவை நான் பாத்திட்டு வர்றேன். ஒருவாட்டிக் கூட முத்தம் கொடுக்க விட்டதில்ல அவன். நீதான் சமத்துக்குட்டி” என்றார் நெகிழ்ச்சியோடு. கண்கள் மூடி குழைந்து சிரித்த குழந்தை அப்படியே திரும்பி முருகு அண்ணனை கண்ணுக்கு கண் நேராகப் பார்த்து “தேங்க்யூ அங்கிள்” என்றது.

வீடு திரும்பும்போது உமாபதியின் மனதில் ‘கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ’ என்று வரிகள் ஓடிக் கொண்டேயிருந்தன. மனம் முழுதும் இனித்து வழிவது போலிருக்க, நிமிர்ந்து, கார் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான். அப்படியே, முருகண்ணன் முகம் போல், அவன் முகமும் கனிந்து தளும்பிக் கொண்டிருக்கிறது. தன் மீது முள்ளாய் பாயும் பார்வைகளின் காயங்கள் அனைத்தையும் மறைத்துக் கொண்டு, தாடையில் கற்பூரக்கட்டி மணக்க கனிந்திருக்கும் முருகண்ணனின் முகம்.

விருப்பூற்றிக் கேட்கிறேன் சொல்லாழி வெண்சங்கே…. பின்சீட்டில் அமர்ந்து கையில் வீடியோ கேம் வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும் ஷ்ரேயாவின் கைபற்றி இழுத்து வாய்நிறைய உமாபதியும் ஒரு முத்தம் கொடுத்தான்

பறவை மனிதர்கள்

ஏ. நஸ்புள்ளாஹ்

 

அன்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில், றஹீம் ஜிப்ரான் ஒரு உள்நாட்டு கடித உறையை கண்டார். அது அவர் தனது வீட்டுக்கு நுழையும் பாதை. பல மணி நேரம் உழைத்துக் களைத்த சோம்பல் அவரது வேகத்தை குறைத்திருந்தது, அவர் அணிந்திருந்த ஆடைகளில் தூசி மற்றும் துர்நாற்றம் வீசுவது போல் இருந்தது. ஆனால் புலன் விசாரணை செய்து பார்த்தால் அந்த துர்நாற்றம் உடலில் படரும் வியர்வையிலிருந்து தவிர்க்க முடியாத மனிதன் கடந்து போகும் ஒன்றாக அது இருக்கும். தரையில் கிடந்த உள்நாட்டு கடித உறை அவரை ஒரு கணம் நிறுத்தியது. சுற்றிலும் பார்த்தார். அருகிலேயே கைவிடப்பட்ட குதிரை வண்டி, ஒரு மூடிய டீக் கடை, சாலையின் ஒரு ஓரத்தில் கல் சில்லுகளின் குவியல் மற்றும் முத்து சிப்பி குவியல் மலை போல் சரிந்து கிடந்தது. அருகிலுள்ள பூங்காவிலிருந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் கலகலப்பான சிரிப்பொலி தவிர, பாதை வெறிச்சோடியது.

றஹீம் ஜிப்ரான், கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வைத்திருந்த உறையை எடுத்தார். இந்த நீலக் காகிதத்தால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை என்று தோன்றியது. ஆனாலும், சட்டைப் பைக்குள் போட்டார்.

அந்தியின் குறிப்பு பூமியின் உடலிலிருந்து அந்த நேரத்தில் இருள் படிப்படியாக எங்கும் பரவிக் கொண்டிருந்தது. சோர்வான உடலுடன், றஹீம் ஜிப்ரான் தனது வீட்டிற்கு வந்தார். தன் சட்டைப் பைக்குள் சாவியைத் தேடும்போது அவர் விரல்கள் கடித உறையை மேய்ந்தன. கதவைத் திறந்தவுடன் அறையின் வெறுமை அவரை வரவேற்றது. லாந்தரை ஆன் செய்தார். றஹீம் ஜிப்ரானின் சோர்வுற்ற கண்கள் சுவர்களில் இருந்த சிலந்தி வலைகளையும், மூலையில் இருந்த வெற்று சிகரெட் பாக்கெட்டுகளையும், வாசலில் குவிந்து கிடக்கும் பேப்பர்காரன் வழங்கிய செய்தித்தாள்களையும் மேசையிலும் படுக்கையிலும் சிதறிக் கிடந்த அலுவலகத் தாள்களையும் பார்த்தன. இன்னும் சுவரிலும் துணிக்குதிரையிலும் தொங்கிக் கொண்டிருந்த சில சட்டைகளையும் பேன்ட்களையும் பரிதாபமாகத் பார்த்தன.

சட்டையை கழற்றிய பின், றஹீம் ஜிப்ரான் அதை துணிக்குதிரையை நோக்கி எறிவதற்கு முன் கையை நிறுத்தினார். பாக்கெட்டிற்குள் இருந்த இன்லேண்ட் லெட்டர் கார்டு, தன் இருப்பை அறிவித்துக் கொண்டிருந்தது. அவர் அதை எடுத்து, அதை விரித்து, மேசையில் வீசினார். தேநீர் அருந்திவிட்டு, கழுவிய பின், மெதுவாக படுக்கையில் சாய்ந்தார். மேற்கூரையில் இருந்த பெயிண்ட் உதிர்ந்து கொண்டிருந்தது. இந்த நாட்களில், பலத்த மழை மற்றும் பலத்த காற்றின் ஒவ்வொரு அசைவிற்கும் பிறகு நீர்த்துளிகள் ஊடுருவுவதை அவர் உணர முடிந்தது. றஹீம் ஜிப்ரான் தனது வீட்டு உரிமையாளரிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேச யோசித்தவர் அதனை ஒரு பிரச்சனையாக முக்கியத்துவம் கொடுத்தார். மேலும் பல இடங்களில் தரை புதிய வெடிப்புகள் ஏற்பட்திருந்தன. வீடு எல்லா நேரங்களிலும் ஈரமாகவும் குளிராகவும் இருந்தது.

இடிந்த நிலையில் ஒரு வீடு. அதன் உள்ளே றஹிம் ஜிப்ரான் என்ற ஒரு மனிதன் மகிழ்ச்சியை தொலைத்துக் கொண்டிருந்தான்.

அவரது உடலும் மனமும் பலம் குறையத் தொடங்கியது. அன்றைய செய்தித்தாள் அவர் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்தது. அவர் செய்ய வேண்டியதெல்லாம், கையை நீட்டுவதுதான், ஆனால் உலகச் செய்திகள் அவருக்கு எந்தப் பயனும் இல்லை என்று தோன்றியது. அவர் படுக்கையில் இருந்தால், தூக்கம் அவரை விரைவில் அழைத்துச் செல்லும் என்று றஹீம் ஜிப்ரான் யோசித்தார், ஆனால் அவருக்கு இனி கனவுகள் வராது. எந்த விதமான கனவுகளும் இல்லை. வெளித்தோற்றத்தில் ஏதோ வாழ்ந்து கொணடிருக்கிறார். உள்ளகச் சூழலில் அவர் தோற்றுப்போனதாக அவருக்கு நிகழும் சம்பவங்கள் விபரிப்பதாக உணர்கிறார்.

தனிமை மற்றும் தனிமையின் பயங்கரமான உணர்வு அவரது தேய்ந்து போன உடலில் பாய்வதற்கு முன், றஹீம் ஜிப்ரான் குதித்து எழுந்து அமர்ந்தார். இறுதியாக அவருடன் உறவின் நம்பிக்கைகளாக இருக்கின்ற தன் பறவைகளுக்கு வீட்டில் மீதமாக இருந்த இட்லி, தோசை, சாதம் ஆகியவைகளை பரிமாறினார். மயிலுக்கு உருண்டை பொட்டு வறுத்த நிலக்கடலையை வைத்தார். அணில்கள், கிளிகள் ஆகியவற்றுக்கு தேங்காய் பருப்பு தேங்காய் சில் ஆகியனவற்றை கொடுத்தார்.

சரி, இப்போது. அவரது மேசையில் ஒரு உள்நாட்டு கடித உறை இருந்தது. வானம் போலவே தெளிவான நீலம் அது.

நாற்காலியை இழுத்து மேசை லாந்தரை ஆன் செய்தார். தனது பழைய அலுவலக பேனாவை எடுத்து, கடித உறையை அருகில் எடுத்தார்.

றஹீம் ஜிப்ரான் ஒரு கடிதம் எழுத விரும்பினார். பல ஆண்டுகளாக, அவர் தனிப்பட்ட முறையில் யாருக்கும் கடிதம் எழுதவில்லை. அவருக்கு எழுத வேண்டும் என்று யாரும் சொன்னதும் இல்லை. தனது மூன்று சகோதரிகளுக்கும் பொருத்தமான பொருத்தங்களைக் கண்டுபிடித்து, தனது இரண்டு இளைய சகோதரர்கள் நன்கு நிலைநிறுத்தப்பட்டதை உறுதிசெய்து, குடும்பத்தின் மூத்த மகனாக தனது கடமைகளை ஆற்றி, நோய்வாய்ப்பட்ட அவர்களின் தாயை இறுதிவரை கவனித்துக்கொண்ட பிறகு, றஹீம் ஜிப்ரான், கடைசியாக, தன்னைப் பார்க்கத் திரும்பினார், அவருடைய சொந்த உடலின் வீழ்ச்சியைக் கவனிக்க மட்டுமே. ஒரு தலைசிறந்த கலைஞரைப் போல, காலம் அவரது தலைமுடியில் வெள்ளிக் கோடுகளையும், அவரது கண்களின் ஓரங்களில் சிலந்தி வலைகள் போன்ற மெல்லிய கோடுகளையும் வரைந்திருந்தது. அவரது முகம் உடல்நிலை உருமாற்றமடைந்து அவரை விட்டும் விலகிச் செல்வது போல, அவரது அன்புக்குரியவர்கள் அவரை விட்டு விலகிச் சென்றனர். சரி, இதற்குப் பிறகு அவரிடம் கொடுக்கவும் எதுவும் இல்லை. இனி அவரது இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள யாரும் விரும்பவில்லை. கிண்ணியா, ஜாவா வீதி, எண் 42ல் உள்ள வாடகை வீட்டில் எங்காவது ஒரு நலம் விரும்பி அமர்ந்திருப்பதை ஒப்புக்கொள்ளக்கூட அவர்கள் தயாராக இல்லை.

றஹீம் ஜிப்ரான் அவரது அனுபவத்தில் நினைத்திருக்கலாம், அவருடைய செயற்பாடுகள் முன்பு இருந்ததைப் போல ஆர்வமாக இல்லை. ஒருவேளை, அவரது சொந்த இருப்பு பற்றிய சிந்தனை மறைந்து, அவர் ஒரு மந்தமான, முட்டாள்தனமான மனிதராக மாறிக் கொண்டிருந்தார். அதனால்தான் றஹீம் ஜிப்ரான் இந்த நாட்களில் தனக்குள் புதிதாக எதையும் சிந்திக்கவில்லை, அல்லது அவரால் சிந்திக்க முடியவில்லை. நகரில் ஒரு அலுவலகத்தில் பணிவான வேலையில் இருந்தார். அவர் ஒரு எளிய வீட்டில் சாதாரண வாடகை கொடுத்து வசித்து வந்தார். நகரப் பேருந்து வழியாக, அவர் பணிபுரிந்த இடத்திலிருந்து ஐம்பது ரூபா தொலைவில் இருந்தது வீடு, அலுவலகம், கடைத் தெரு வீடு, அதுவே அவரது தினசரி வழக்கமாக இருந்தது. தன் மீதி நாட்களும் அவ்வாறே செல்லும் என்று தன்னைத் தானே நம்பிக் கொண்டார்.

ஆனால் பெரும்பாலான ஆண்களைப் போல அவர் இல்லை. இன்றும் குழப்பமான கடித உறை அவரது மேசையில் இருந்தது. ஒரு ஏகாந்த வானம், நீல காகித துண்டு. இந்த நேரத்தில், அவர் தனது தனிமையை நினைத்து தன்னை அருவருப்பாகப் பார்த்தார். பெரும் வேதனை அவரது கண்ணீரை அதிகப்படுத்தியது. உலகில், எங்கேயாவது, தன்னுடன் நெருக்கமாக இருந்த ஒருவர் இருக்க வேணடும் என்று அவர் உறுதியாக நம்பினார். அவரை யார் நினைக்கிறார். அப்படியான நபர் பற்றி யாருக்குத் தெரியும்.

அது யார்? யாராக இருக்க முடியும்?

றஹீம் ஜிப்ரான் சிந்தனையில் மூழ்கி தன் கன்னத்தையும் தாடியையும் தடவினார். அவர் தனது சொந்த குடும்பத்தை ஆட்சி செய்தவர். அவர்களைப் பொறுத்த வரையில், அவர் இனி தேவைப்படவில்லை. இப்போது தொலைதூர நகரத்தில் வசிக்கும் அவரது இளைய சகோதரர் ஒரு காலத்தில் அவரது முதுகில் சுமக்கிற உறவாய் இருந்தார். றஹீம் ஜிப்ரான் அடிக்கடி தனது இரண்டு குழந்தைகளை நினைவு கூர்ந்தார் – அவரது சிறிய மகள் மற்றும் மருமகன் கோமாளி சிரிப்பூட்டும் அப்பாவி. ஆனாலும், அவர்களைச் சந்திக்கும் தைரியத்தை அவரால் ஒருபோதும் திரட்ட முடியவில்லை. மருமகன் தனது நேரத்தையும் தனது தொழிலையும் மற்றும் குடும்பத்திற்காக அர்ப்பணித்திருந்தான் என்பதை அவர் அறிந்திருந்தார். கடுமையாக உழைத்து, அவர்களுக்கு ஒரு தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதனப் பெட்டி, மற்ற நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தான். சில அறியப்படாத காரணங்களால், றஹீம் ஜிப்ரான் போல் மருமகனின் இருப்பு இப்போதெல்லாம் அவருக்கு வருத்தமாக இருந்தது. வெளிப்படையாக அவர் சிரித்துக் கொண்டார்.

எழுத நினைத்த கடிதத்தை அவர் தனது மகள் மற்றும் மருமகனுக்கு எழுத முடியும் என்று றஹீம் ஜிப்ரான் நினைத்தார். அவர் தனது பேனாவைப் பிடித்தார், ஆனால் அவர் முதல் வார்த்தையை எழுதுவதற்கு முன்பே நிறுத்தினார். இல்லை, அவர் அவர்களுக்கு எப்படி எழுதுவார்? அவர் வெளியேறும் போது அவர்களது பையனுக்கு ஒரு வயது, பெண்ணுக்கு மூன்று வயது இன்றுவரை ஒரு அழைப்பேனும் தரவில்லை அவர்களுக்கு கடிதத்தை என்ன அர்த்தம் தந்து எழுத முடியும்.

மனதிற்குள் நிறைய நகர்வுகள் நிகழ்ந்தன றஹீம் ஜிப்ரான் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார். அவர் தனது கடந்த கால தோழர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் கடிதத்தை அனுப்ப யோசித்தார். மூக்கு நுனியில் வந்து நிற்கின்ற கோபங்களை விட்டுவிட்டு எழுத ஆரம்பித்தார்.

நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் உங்களை நலம் விசாரித்து வெகு நாட்களாகிவிட்டது. நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் உயிருடன் இருந்தாலும் இறந்தாலும் சரி. இவ்வளவு தூரம் தோழமையின் இடைவெளி ஏன் நீங்கள் என்னைப் பற்றி சிந்தித்திருக்க வேண்டும். நான் உங்களை இந்த உலகத்திலுள்ள மிகவும் வசீகரமான தோழர் என பெரிதும் நம்பியிருந்தேன் அந்த உறவை எவ்வளவு தீவிரமாக இழக்கிறேன் என்று உங்களுக்கு தெரியாது நீங்களும் என்னை நமது இளமைக் காலம் போல் நினைத்துக் கொண்டிருப்பீர்கள் என உரத்து நம்புகிறேன்.

றஹீம் ஜிப்ரான் எழுதியதை நிறுத்தினார். அவர் தனது மேசை லாந்தரின் நிழலை சரி செய்தார். மேசையின் மேல், வெளிச்சம் பதிநான்காம் பிறை போல் இருந்தது. அறையில் மற்ற எல்லா இடங்களிலும், அது சிதறி மங்கலாக இருந்தது. அந்த மங்கலின் வழியே மூலையில் இருந்த காலி நாற்காலியைப் பார்த்தார். வெறுமையான படுக்கை மற்றும் ஒழுங்கீனமற்ற வீட்டையும் அது நிரப்புகிறது.

மீண்டும் அவர் யாருக்கு எழுத முடியும்? என தேநீரைப் பருகிக்கொண்டே யோசித்தார். கிராமத்தைச் சேர்ந்த அவனது பழைய தோழர்… மீகாயிலுக்கு எழுதலாமா? இல்லை?

ஒருவித அமைதிக்குப் பின் றஹீம் ஜிப்ரான் எழுதினார்.

…நீங்கள் மதியம் ஆற்றுக்குச் செல்லத் தவறவில்லையா? அதன் சலசலப்புகளும் வசீகரமும் எப்படி இருக்கின்றன ஆலமரத்தடியில் மாம்பழங்களை உண்டு நாம் கழித்த மாலைகள்? ஃகனஃபானி ஹனிபா மாஸ்டர்? எனது சிறிய தந்தை அஹ்மத் தாவூத் எப்படி நலமா? உங்களது பெரிய தந்தை யஅகூப் இறைவன் அழைப்பை ஏற்று சென்றுவிட்டார். ஃகனஃபானி ஹனிபா மாஸ்டர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள் உங்களுக்கு இன்னும் நினைவிருக்கிறதா? புதிய பாடலின் முதல் சரணத்தைப் இப்போதும் கற்றுக் கொள்ளத் தவறவில்லையா?

தொன்மையான நினைவுகள் றஹீம் ஜிப்ரானின் வாழ்க்கைச் சூழலுக்கு புதிய தாகமாக மீண்டும் திரும்பின அவர் காற்சட்டை வயதை நினைத்தார், தோழர்கள் இப்போது எங்கே இருப்பார்கள்? இந்த நாட்களில் ஹுசைன் ஹைகலுக்கு நாச்சியா தீவில் வேலை இருப்பதாக அவர் கேள்விப்பட்டிருந்தார். ஹசன் ஸய்யாதின் குடும்பம் பல ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்தை விட்டு வெளியேறியது. அவர்கள் இப்போது எங்கு வாழ்கிறார்கள் என்று அவருக்குத் தெரியாது. லுத்ஃபீ, அவனும் ஒரு காலத்தில் நல்ல தோழர். அவன் அருகிலுள்ள திருகோணமலை நகரில் உள்ள ஒரு கல்லூரியில் பணிபுரிந்தார், ஆனால் அது சில ஆண்டுகளுக்கு முன்பு. அது அவனது இல்லாள் உயிரை மாய்த்துக்கொள்ளும் முன்.

போராட்டம் தீவிரமடைந்தது பேனாவைக் கடித்துக் கொண்டே ஜிப்ரான் நிறுத்தினார். சரி, கடைசியாக யோசித்தார். அவரது பழைய கிராமத்தைச் சேர்ந்த பக்கத்து வீட்டு மாமா, தவ்ஃபீக்குல் ஹகீமுக்கு எழுதுவது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் பல ஆண்டுகளாக மனிதரோடு மனிதராகப் பழகியவர். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக அவரைப் பார்த்தார். அந்த தருணத்தில் ஹகீம் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தார். பல பயங்கரமான வியாதிகள் அவர் உடம்பில் குடியிருந்தன. றஹீம் ஜிப்ரானுக்கு இன்னும் அவரது முகவரி தெரியும். அவர் உடனடியாக அவருக்கு எழுதலாம். ஆம், ஒரு காலத்தில் அந்த மனிதனுக்கு எவ்வளவு உயர்ந்த ஆளுமை இருந்தது. மேலும் அவர் பக்கீர் பைத்களை எழுதி வரிகளை எவ்வளவு சீராகப் பாடினார். சிறு குழந்தைகளுக்கு பக்கீர் பைத்களை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாகவே அவர்களுக்குப் பயிற்சி அளித்து, மற்றும் மாணவர்களுக்கு பள்ளிப் பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ள உதவியதும் அவர்தான். உண்மையில், பல ஆண்டுகளுக்கு முன்பு கிராம விவசாயிகளும் மாடுகள் வளர்க்கும் பண்ணையாளர்களுக்கும் மேச்சள் நிலம் உரிமை குறித்து கடுமையான மோதலில் ஈடுபட்டபோது, வேளாண்மை விவசாயிகளின் சார்பாக பொறுப்பை வழிநடத்தியவர்.

ஜிப்ரான் ஒரு புதிய ஜூசை தயாரித்தார் அது அவரின் உடலுக்கு இழந்த பலத்தை மீண்டும் கொடுத்தது ஆழ்ந்து எழுதத் தொடங்கினார்.

சரி, இப்போது. எப்படி இருக்கிறீர்கள்? நீண்ட காலத்திற்கு முன்பு, நான் உங்களை பச்சை மணம் வீசும் வயல்வெளியில் பார்த்தது. இன்று நீங்கள் இருக்கும் இடம் அதுதானா? அதே மக்கள் மத்தியில் அவர்களது உரிமைக்காக குரல் தருகின்றீர்களா? என்னைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? இந்த நாட்களில் நான் ஒரு மகிழ்ச்சியற்ற உயிரினம். நதியின் சலசலப்புகளை காதலிக்க முடியவில்லை இயற்கையில் அமர்ந்து கண்களை மூடி ஓய்வெடுக்க முடியவில்லை. எனக்கான வானம் இல்லை. திசை இல்லை. மனிதர்கள் நம்பமுடியாத அளவிற்கு தன்னம்பிக்கை கொண்டவர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம், ஆனால் காலப்போக்கில், உண்மையில், நாம் நம்மை மிகவும் குறைவாக நேசிக்கிறோம் என்பதை நான் கண்டுபிடித்தேன். என் சொந்த ஜீவிதம், தடையாக, எனக்கு என் ஜீவிதத்தை சகிக்க முடியாது. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்போது ஒரு இளைஞன் அல்ல, எனவே நீங்கள் முன்பு போல் அலைந்து திரிய வேண்டாம் -உங்களது மக்கள் போராட்டம் அந்த குண விசேஷங்கள் இப்போது இருக்கக்கூடாது என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்

றஹீம் ஜிப்ரான் திடீரென யோசித்தார். தவ்ஃபீக்குல் ஹகீம் உயிருடன் இருப்பதை அவர் எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவரைச் சந்தித்தார். அவரது வீட்டின் முன் ஒரு தாழ்வான ஸ்டூலில் அவர் உட்கார்ந்திருப்பதைக் கண்டார், அவரது தலை முழங்கால்கள் பிரேத ஆரோக்கியத்தை இழந்திருந்தன, அவரது பலவீனமான பிரேதம் வயது மற்றும் நோயால் தோற்கடிக்கப்பட்டிருந்தது. அவர் இன்னும் உலகத்தில் மூச்சு விடுகிறார் என்று நினைப்பது தைரியமாக இல்லையா? அவர் இல்லையென்றால், இந்த கடிதம் அவரது வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தாதா? கனத்த இதயத்துடன், றஹீம் ஜிப்ரான், தவ்ஃபீக்குல் ஹகீமுக்கு எழுதும் எண்ணத்தைக் கைவிட்டு, தான் எழுதிய கடைசி வார்த்தையை கடந்தார்.

பனி மூட்டம் சன்னல் வழியாக அவரை தும்ஷம் பண்ணியது மொட்டூசி போல் பிரேதத்திற்குள் புகுந்து அவரின் உற்சாகத்தைக் குறைப்பது போன்றிருந்தது. ஆனால் அவர் ஒரு நபருக்கு கடிதம் எழுத வேண்டும் என சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

குழப்பமான மனநிலையுடன் சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் சென்ற பிறகும் அவரால் இந்த விஷயத்தைப் பற்றி யோசிப்பதை நிறுத்த முடியவில்லை. நிஜ உலகத்தை விட்டுவிட்டு, நினைவுகளின் மங்கலான ஊர்வலத்தில் உலகில் அலைந்து திரிந்த அவர், தெரிந்த முகத்தை வெறித்தனமாகத் தேடிக்கொண்டிருந்தார். மனம் கொஞ்சம் தெளிந்தது. சிறிது நேரத்தில் அவருக்கு தூக்கம் வர ஆரம்பித்தது. றஹீம் ஜிப்ரான், கடைசியாக, படுக்கையில் தளர்ந்து போனார்.

மனித அன்பும் மகிழ்ச்சியும் தனக்கும் கடைசிவரை கிடைக்க வேண்டும் என றஹீம் ஜிப்ரானுக்கு தோன்றியது. அவர் மறுநாள் வழக்கம்போல் அவசரமாக அலுவலகத்துக்குப் புறப்பட்டார். நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. நிலக்கீழ் சாலைகளில் இருந்து ஏதோ ஒரு நீராவி இப்போது எழுந்து கொண்டிருந்தது. மிகவும் பிஸியாக இருந்தபோதிலும், றஹீம் ஜிப்ரான் தனது அலுவலகத்தின் தகரக் கூரையின் மீது சத்தமாக, வேகமாகப் பெய்யும் மழையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். அது அவரை மீண்டும் குழந்தைப் பருவத்திற்கும் இளமைக்கும் அழைத்துச் சென்றது. அந்த நாட்கள், இளமையாகவும், பசுமையாகவும், மழையில் நனைந்தபடியும், றஹீம் ஜிப்ரான் அபாபீல் பறவைகள் போல் வலம் வந்திருக்கிறார்.

இன்று மரியம் மஜீத் றஹீம் ஜிப்ரானின் அறை முழுவதும் வந்து அவரை கடந்து போனாள், மரியம் மஜீதிற்கு எழுதுவது என்று முடிவு செய்தார். இல்லை. இனி அவரது இதயத்தில் எதுவும் அசைந்தது போல் இல்லை. காதலா? ஒரு காலத்தில், அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்ததைப் போன்ற ஒரு பேரன்பின் சிறகடிப்புக்கள் இப்போது எதிர் பார்க்க முடியுமா? தடுமாறித் தடுமாறிக் கைகள் நடுங்கி கையைவிட்டு பேனா கீழே விழுந்தது. சில நாட்களாக உணரப்படாமல் இருந்த இந்த பைத்திய நிலை இன்று ஏன் அவரை துரத்துகிறது. அங்கிருந்த சிறிய மேசையை தள்ளிவிட்டார் ஆனால் என்றோ அத்தகைய உணர்வுகளும் தம் வலிமையை இழந்துவிட்டன. இன்றிரவு, அவர் ஒரு தோழராக அவளுக்கு கடிதம் எழுத விரும்பினார். ஒரு நலம் விரும்பியாக..

…மரியம் உன்னை நினைக்கவில்லை என்பது என்னையே இழப்பது போன்றது. அந்த நாட்களில் நான் என் குழந்தைத்தனமான ஆசைகளை உன் முன் வெளிப்படுத்தினேன், என்னால் உன் வாழ்க்கைக்குள் நிரந்தரமாக குடியிருக்க முடியும் என்பதற்காகவே அன்பைக் கோரினேன். அந்த ஞாபங்களின் பிரதி இப்போதும் சிரிக்க தோன்றுகிறது! ஒரு குறிப்பிட்ட வயதில், நாம் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளுடன் விளையாடுகிறோம். உலகம் நம்மைச் சுற்றியே சுழல்கிறது என்று நினைக்கிறோம். இப்போது நீ நேற்றைகள் அனைத்தையும் மன்னித்திருப்பாய் என்று நம்புகிறேன். இன்று நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நம் காதலின் வரலாற்றை பழைய துயரங்களை இன்றைய வாழ்க்கைக்குள் அசை போட்டுவிடாதே அது கொடூரம் நான் காலம் காலமாக இதைதான் விரும்பினேன்…

ஒரு நாள், ஒரு சூடான மதியம், இந்த நீல உள்நாட்டு கடிதம் அவள் கைகளை அடையும். என் முகவரி அவளை ஆச்சரியப்படுத்தும். நடுங்கும் விரல்களால் அதைத் திறப்பாள். அதை படிக்க. அவள் சுற்றிலும் பார்ப்பாள். அவள் அறையில் படுக்கையில், அவள் தூங்கும் குழந்தையைப் பார்ப்பாள்.இப்படி… இப்படி.. இனி எழுத அவர் துணியவில்லை அங்கு அவளும் அவள் கணவரும் மேசையில் அமர்ந்திருக்கும் மகிழ்ச்சியான படங்கள். அவரை தொந்தரவு செய்தன றஹீம் ஜிப்ரானுக்கு திடீரென்று கண்ணீர் வந்தது. இப்போது அவளுக்கு எழுத அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று அவளைக் கரம் பிடிதத்தவன் கேட்பான். இத்தனை ஆண்டுகள், தன் குழந்தைகளின் அரவணைப்பில் மூழ்கி, தன் இல்லற வாழ்வில் மூழ்கி வாழ்ந்தவள். றஹீம் ஜிப்ரானின் வாழ்க்கையில் அமைதியற்ற இருப்பை அவள் எப்படி உணர்வாள்?

அவர் மரியம் மஜீதிற்கு எழுதிய கடிதத்தை முடித்துவிட்டார். றஹீம் ஜிப்ரான் முன்னெப்போதையும் விட குழப்பத்துடன் அவளுக்கு எழுதிய கடிதத்தை நிறுத்தினார். தன் அறையின் நான்கு சுவர்களுக்குள், டேபிள் லாந்தரின் மங்கலான வெளிச்சத்தில் அமர்ந்தார். ஒரு இருண்ட இரவின் அமைதியற்ற அரவணைப்பு போல் இந்த கணம் அவருக்கு இருந்தது.முதுமையும் அவரை தொந்தரவு செய்தது

வாழ்க்கையின் கடைசி எல்லையில் றஹீம் ஜிப்ரான் இருப்பதாக அவரது ஜீவிதம் காட்டியது. பல நாட்களாக, அவர் கடித உறையில் எதுவும் எழுதவில்லை. அவர் என்ன எழுதுவார், யாருக்கு? ஆனாலும், மேசையில் இருந்த நீலக் காகிதம் அவனைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. அவரது இருப்பு யாருக்கும் முக்கியமான விஷயமாக இருக்கவில்லை றஹீம் ஜிப்ரான் பயத்தில் நடுங்கினார். கடித உறையை தூக்கி எறியவோ அல்லது கிழிக்கவோ அவருக்கு தைரியம் இல்லை. தன் இருப்பை எங்காவது யாருக்காவது தெரியப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

தொலைந்த அன்பானவர்களில் யாரோ ஒருவர் விரைவில் நினைவுக்கு வருவார். உலகின் ஏதோ ஒரு மூலையில் றஹீம் ஜிப்ரானை பார்க்கவும் ஆவலாக உறவாடவும் அவர் நினைத்துக் கொண்டிருப்பார்.

ஐம்பது அறுபது மைல் தூரத்தில் இருக்கும் இஹ்சான் குத்தூஸ் இந்த நாட்களில் எங்கே இருப்பான் கல்லூரியில் தன் ரூம்மேட்டை நினைத்துக் கொண்டார். அப்போது, நூலகம் சென்று மொழிபெயர்ப்பு நாவல்கள் படிப்பதும் சுற்றித் திரிவதும், அதிகமாக மதுபான கடைக்கு செல்வதும் அவனது முழு வேலையாக இருந்தது, ஆனால் சில காரணங்களுக்காக, அவன் எப்போதும் றஹீம் ஜிப்ரானிடம் மென்மையாக நடந்து கொண்டான். மற்றும் ஹமதானி ஹரீரி அவர் யோசித்தார் அவனுக்கும் எழுதலாம். ஜுர்ஜி ஸைதானையும் அவரால் மறக்கவே முடியவில்லை. உலகின் பல மர்மங்களை ஒருவர் முதன்முதலில் அவிழ்க்கும் வாழ்க்கையின் அந்த நெருக்கடியான காலகட்டத்தில், இந்த மனிதர்கள் மட்டுமே அவருக்குத் துணையாக இருந்தனர்.

ஏன் நான் மட்டும் தனியாக மௌத்தாக வேண்டும் துரோகிகள் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே நீர்வை பொன்னயன், எஸ்பொ? விக்டர் ஐயர்? அவர்களிடமும் நலம் விசாரிக்கலாம். றஹீம் ஜிப்ரான் எழுதத் தொடங்கினார்.

ஒருவரையொருவர் வெகு தொலைவிலும் இடைவெளியும் தருவதால் , நாம் நம்மை விட்டு விலகிச் செல்கிறோம். அதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நான் இங்கே எப்படி என் ஜீவிதம் செல்கிறது என்பது பற்றி, கிண்ணியாவில் உள்ள ஏதோ ஒரு வீட்டில், 42வது எண், ஜாவா வீதியில். உலகில் உள்ள எவருடனும் எந்தவிதமான உணர்வுபூர்வமான தொடர்பும் இல்லாமல். யாரும் என்னைக் கேட்காமல். எனது சொந்த இருப்பை நான் விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் அந்திம காலத்தில் ஒன்றுமில்லாதவனாக வாழ்வின் தீர்ப்பை வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.

இனி வாழ்க்கையில் என்ன இருக்கிறது என திறந்திருந்த சன்னல் வழியாக இரவின் கடுமையான இருளைப் பார்த்து, றஹீம் ஜிபரான் தனது கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தார். அது ஒரு ஸ்ட்ரீம், மனச்சோர்வு அனுபவம் நொறுங்கியது, எல்லாம் எண்ணிலடங்கா முகங்களும் புகைப்படங்களும் அவரது கற்பனையில் வந்து போனது, தெளிவற்ற வாழ்வியல் வடிவங்கள். ஹத்தாத், அல்புஸ்தானி, தாஹா, இவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று அவருக்கு ஏதாவது யோசனை வந்தது. உண்மையிலேயே ஒரு கொந்தளிப்பான நிலை அவர் நெஞ்சில் பேரழிவை உருவாக்கியது. இருப்பினும், அவர் தனது கடிதத்தை முடிக்க முயன்றார்-

இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைத்ததும், அது என் இருப்புக்குச் சாட்சி கொடுப்பதுதான். இது இப்போது பரிதாபமாக இருக்கலாம், இந்த இருப்பு. ஒரு கிழவனின் அடையாளம் அல்லது களைத்துப் போன வாழ்வின் ஓய்வு நிலை போன்றது. அதனால்தான் பதிலுக்காக காத்திருக்கிறேன். உங்களிடமிருந்து ஒரு வார்த்தை, எதிர் பார்க்கின்றேன். இந்த எதிர் பார்ப்பு எனக்குப் பிடிக்கும்.

உங்கள் அன்பான தோழர்,
ஜிப்ரான்

ஆம், அவர் கடைசியாக கடிதத்தை முடித்தார். றஹீம் ஜிப்ரானின் மனம் சுதந்திரமாக உணர்ந்தது.

எதிர்காலத்தை வெறுக்கவுமில்லை நிகழ்காலத்தை நேசிக்கவும் முடியவில்லை என்கிற ஒருவித உணர்வு மனநிலை அவரை இப்போது பின் தொடர்ந்தது.

பிறகு எப்படியும் முகவரியுடன் சேர்த்து எழுத வேண்டும் என அவருக்கு தோன்றியது.

றஹீம் ஜிப்ரான் உள்நாட்டு கடித அட்டையை பசை கொண்டு கவனமாக ஒட்டினார்.

தபாலிடாமல் பல நாட்கள் காத்திருந்தார். அவர் ஒரு முகவரிக்காக காத்திருந்தார், நாட்கள் கடந்தன, ஆனால் கடித உறை முகவரி ஒன்று இல்லாமல் அவரது மேசையில் இருந்தது. அதன் இருப்பு அவரால் தாங்க முடியாத அளவுக்குப் பெரிதாக வளர்ந்தது, வெற்று வானம் அவரது அறையின் மீது இறங்குவதைப் போல மனம் தொந்தரவுப் பட்டது.

அவர் தபாலிடுவதற்கு யாரும் இல்லை. யாருடைய முகவரியும் இல்லை.

ஒரு காலைப் பொழுது அலுவலகத்திற்குப் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தபோது, ​​றஹீம் ஜிப்ரான் கடித உறையைப் பார்த்துக்கொண்டே நின்றார். தொலைந்து குழப்பமடைந்த அவர், அதை எடுத்து வாசித்தார். உள்ளுக்குள் கொட்டும் நகைச்சுவைகளைத் தவிர வேறெதுவும் இல்லை என்பது போல் அவர் உணர்ந்தார். சட்டென்று தன் பேனாவைப் பிடித்து கடித உறையை அவரை நோக்கி இழுத்தார். நடுங்கும் விரல்களுடனும், பலமான கைகளுடனும், கடைசியாக ஒரு விலாசத்தை காகிதத்தில் எழுதினார்.

சேரல்:
ஜனாப்:றஹீம் ஜிப்ரான்
எண் 42
ஜாவா வீதி,
கிண்ணியா.06

அதே நாளில், அவர் கடித உறையை அருகிலுள்ள குறுக்கு வழியில் சிவப்பு அஞ்சல் பெட்டியில் இறக்கிவிட முடிவெடுத்தார்.

00