மொழியாக்கம்

சௌகந்தியின் நெஞ்சொடு கிளத்தல்- கன்னடம் வைதேகி ஆங்கிலம் சுகன்யா கனரல்லி தமிழ் தி இரா மீனா

மொழிபெயர்ப்பு : கன்னடச் சிறுகதை
மூலம் : வைதேகி [ Vaidehi ]
ஆங்கிலம் : சுகன்யா கனரல்லி [Sukanya Kanarally ]
தமிழில் : தி. இரா. மீனா

நீண்ட நேர இரவுப் பயணத்திற்குப் பிறகு ஒருவழியாக சௌகந்தி தனது இலக்கை அடைந்தாள். பஸ் நிலையத்திற்கு அவளை வழியனுப்பி வைக்க வந்த அப்பா மிகப் பணிவாக கண்டக்டரிடம், ’என் மகள் தனியாகப் பயணம் செய்கிறாள். அவளருகே ஒரு பெண் பயணியை உட்கார வைத்தால் மிக உதவிகரமாக இருக்கும்’ என்று வேண்டிக் கொண்டார் .பின்பு ஜன்னல் சீட்டில் உட்கார்ந்திருந்த சௌகந்தியிடம் ’கவலைப் படாதே. கண்டக்டர் மிக நல்ல மனிதராகத் தெரிகிறார். உன் பக்கத்தில்ஒரு பெண் பயணியை உட்கார வைப்பதாகச் சொல்லியிருக்கிறார்.’ என்று உறுதியளித்தார்.

சிரிப்பிற்குப் பின்னால் தன் கண்ணீரை மறைக்க வேண்டிய காரணமென்ன என்பதை நினைத்து ஆச்சர்யப்பட்டவளாக நான் ஏன் அப்பா கவலைப்பட வேண்டும்? அதுவும் யாரைப்பற்றி? அவள் சிரித்தபடியே தனக்குள் சொல்லிக் கொண்டாள். இருக்கையை மாற்றிக் கொள்வதன் மூலம் தனியாக உட்கார்ந்திருந்த பெண் பயணிக்கு உதவமுடியுமென்று சொல்லி ஒரு தம்பதியின் இருக்கையை மாற்றச் செய்து கண்டக்டர் தன் வார்த்தையைக் காப்பாற்றிக் கொண்டு விட்டான்.

இது இல்லையெனில் தன்னருகே உட்கார்ந்திருக்க வேண்டிய மனிதன் யாரென்று அறிய சௌகந்தி திரும்பிப் பார்த்தாள்.பார்ப்பதற்கு மிக சாதாரணமாக இருந்த அவன் முகத்தை ஒரு கொத்து முடி மறைத்திருந்தது. தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்மணி வாய்ப்பு கிடைத்தால் நாளைக் காலை வரை கூட பேசிக் கொண்டிருப்பாளென அவளுக்குத் தோன்றியதால் பேச்சைத் தவிர்க்கும் வகையில் அவள் ஜன்னலின் வெளியே பார்க்கத் தொடங்கினாள். வானத்தில் நிலவு ஒளிர்ந்தது.

சௌகந்தி நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். அது முழுமையற்று அரையாக இருந்தது. ஓடி வந்தாலும் தன்னால் பஸ்ஸில் ஏறமுடியாதென்பதால் அது அங்கேயே நின்று விட்டது.ஆனால் அவள்?
முழுமையடைய வேண்டுமென்றால் இப்போதிலிருந்தாவது தனியாக, வேறு யாரைப் பற்றியும் கவலையின்றி, நான் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும். அவள் கன்னத்திலிருந்து ஒரு சொட்டு நீர் இறங்கியது. அல்லது அது மழைத்துளியா?

அங்கே தனியாக ஒரு வாடகை வீடு நின்றது. மற்ற வீடுகளின் மத்தியிலும், அது பூட்டப்பட்ட கதவோடு தனியாக, யாருக்கோ காத்திருப்பதாக நின்றிருந்தது. நானும் இது மாதிரி காத்திருப்பவள்தான் என்று நினைத்துக் கொண்டே அவள் கதவைத் திறந்தாள். எதுவுமே செய்ய வேண்டியதில்லை என்ற ரீதியில் வீடு மிகவும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் இருந்தது.தூசி தட்டுவது,பெருக்குவது, துடைப்பது என்று ஏதாவது செய்தாவது ஒரு நாளைக் கழிக்கலாம் என்ற சாதாரண ஆசை கூட நிறைவேறாமல் போனதில் அவளுக்கு ஏமாற்றம்தான். வேறு ஊரிலிருந்து வரும் இளம் கன்னிப் பெண்ணிற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் விதவையான வீட்டுக்கார அம்மா செய்து முடித்து விட்டாள்.

வீட்டைப் பார்க்கப் போன முதல் நாளே சௌகந்தி ’ தயவு செய்து வீட்டை சுத்தம் செய்வது பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். நானே செய்து கொள்வேன்’என்று தெளிவாகச் சொல்லி விட்டாள். தன் வாயில் வைத்த விரலை எப்படிக் கடிப்பதென்று கூடத் தெரியாத அப்பாவி தன் மகள் என்று அப்பா அந்தப் பெண்மணிக்கு கடிதம் எழுதியிருப்பாரோ? வீட்டைசுத்தம் செய்து வைக்கும்படியும், குளிப்பதற்கு வெந்நீர் தயாராக வைத்திருக்கும்படியும் வேண்டிக் கொண்டிருப்பாரோ? சௌகந்தி தன்உதட்டை அழுத்திக் கடித்தாள்.

முதல் நாளிலேயே அப்பா கடந்த காலம் முழுவதையும் படமாக ஓட்டி விட்டார்.’எங்களால் இந்தப் பெண்ணிற்கு திருமணம் செய்துவைக்க முடியவில்லை. ஏற்கெனவே இரண்டு தங்கைகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.இவள் விஷயத்தில் நான் தோற்று விட்டேன்,’ என்று.வீட்டுக்கார அம்மாளின் முகத்தில் ஏற்கெனவே பரிதாப உணர்வு படர்ந்து விட்டது.’ என் மகளைப் பாருங்கள், எல்லாவற்றிலும் கெட்டிக்காரி! எங்கே தவறு நிகழ்ந்ததென்று தெரியவில்லை.ஒரு வேளை அந்தப் பொருத்தமான ,மங்களமான நேரம் இன்னும் வரவில்லை போலிருக்கிறது! நம்முடைய சாதியிலிருந்தே யாரையாவது பார்த்து காதலித்து திருமணம் செய்து கொள் என்று கடைசியாகச் சொல்லி விட்டேன் ’அப்பா பேச்சை நிறுத்தி விட்டு அவள் சிரிக்க வேண்டும் என்பது போலப் பார்த்தார்.அந்த அம்மாவும் சிரித்தாள்.ஆனால் வழக்கமாக, புன்னகையால் தன் கண்ணீரைப் புறந்தள்ளும் சௌகந்தியால் இப்போது சிரிக்க முடியவில்லை.

‘இவளைத் தனியாக தங்க வைக்க எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால் அலுத்துப் போய்விட்ட அந்த பழைய இடத்திலிருந்து வெளியேறி விட வேண்டும் என்று இவள் வற்புறுத்தினாள். சரியான நேரத்தில் வேலை மாற்றமும் வந்தது. இனி நீங்கள்தான் அவளுடைய அம்மா,அப்பா எல்லாமும்.’ (அப்பா, இது அதிகம் ! )

இன்னமும் உருகிப் போன மனநிலையில் இருந்த வீட்டுக்காரம்மா ’உலகத்தின் நியதி இதுதான். உங்கள் மகள் நல்லவள் என்பதை அவள் முகமே காட்டுகிறது. ஆனால் நம்மைச் சுற்றியுள்ள உலகம்  சரியான பாதையில் நம்மைப் போக விடுவதில்லை. நட்பு என்ற பெயரில் இங்கே என்ன நடக்கிறது?’

அவள் எதிர்பார்த்த வார்த்தைகளை அப்பா அப்படியே சொன்னார். ’சே,சே ! சௌகந்தி அப்படிப்பட்டவளில்லை! ஓர் ஆணின் நிழல் கூடத் தன்னருகில் வருவதை அவள் அனுமதிக்க மாட்டாள். மிக நேர்மையானவள். அவள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இல்லாவிட்டால் அவளை நான் அனுப்புவேனா? அந்த அம்மாளின் முகத்தில் படர்ந்திருந்த கருமை விலகியது.

’தவிர என் இளைய மகள் பிரசவத்திற்கு வந்திருக்கிறாள். அது முடிந்த பிறகு,என் மனைவியை இங்கு அனுப்பி வைக்கிறேன். நான் எப்படியாவது அட்ஜஸ்ட் செய்து கொள்வேன். தானே பார்த்துக் கொள்வதாய் சௌகந்தி சொல்கிறாள். ஆனால் அது எப்படி முடியும்? நான் சாப்பிடுவது கூட அங்கு எனக்கு செரிக்காது. அவளை இங்கே தனியாக விட்டுவிட்டு என்னால் எப்படி அமைதியாக இருக்க முடியும்? பெற்றோரின் பொறுப்பு என்பது பற்றி உங்களுக்குத் தெரியும்! அவள் எங்களுடன் அங்கேயே இருந்தால், அவள் அம்மாவின் சுமை கொஞ்சம் குறையும்…போகட்டும். அது முக்கியமான விஷயமில்லை.’

’நான் ஒரு மரக்கட்டை போல, எனக்கான எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து வைப்பவர்கள் போல இவர்கள் என் முன்னாலேயே இப்படி விவாதித்துக் கொள்கிறார்கள்….’சௌகந்தி ஜன்னல் கம்பியை இறுக்கினாள் மரக்கட்டையாலானதாக இருந்திருந்தால் ,அவை கண்டிப்பாக நொறுங்கி இருக்கும்.

’இரவில் இங்கு தூங்குவதற்கு, ஒரு பெண்மணியை உங்களால் ஏற்பாடு செய்ய முடியுமா? நான் அவர்களுக்கு சம்பளம் கொடுத்து விடுகிறேன்.’

’கண்டிப்பாக. எங்கள் வீட்டு சமையல்காரப் பெண்மணியே பார்த்துக் கொள்வாள். நீங்கள் கவலைப்படாதீர்கள்.’

வீட்டை வாடகைக்கு விட அந்த அம்மா சந்தோஷமாக சம்மதித்தாள். திரும்பி வரும்போது அம்மாவிடம் ’ சௌகந்தியைப் பற்றிக் கவலைப்படாதே. வீட்டுக்கார அம்மா மிகவும் நல்லவள்- விதவை’. வாடகை வீட்டில் தன் மகள் தனியாக இருக்க வேண்டுமென்பதற்காக அவள் தன் கணவனை இழந்திருப்பது நல்லதாகி விடுமா? குழப்பத்தோடு சௌகந்தி அப்பாவைப் பார்த்தாள். அந்தக் குறுகிய எண்ணம். உருளும் விழிகள் அவளுக்கு கொடூரமாகத் தெரிந்தன. பார்ப்பதற்கு எவ்வளவு மென்மையானவராக அப்பா தெரிகிறார்! சௌகந்திக்கு வலித்தது.

தன் தனிமையான மகளை ஒரு சிப்பாய் காப்பது போல, தான் அவளைப் பாதுகாக்காவிட்டால் மகள் கெட்டுப் போய் விடுவது போல, அல்லது அவளுக்கு வஞ்சகம் செய்யவே முழு நகரமும் சதி தீட்டுவது போல அப்பா திரும்பத் திரும்ப அந்த வார்த்தைகளையே எதிரொலித்தார். அம்மாவும் அவருக்குச் சளைத்தவளில்லை.ஒரு வித சுமையிறங்கிய மனப்பான்மையானவளாக, ’அப்படியெனில் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.’ என்றாள்.

சௌகந்தி இவற்றிற்கெல்லாம் மத்தியில் ஊடாடிக் கொண்டிருந்தாலும், பல பல காலமாக, ஒடுங்கிப் போயிருந்த தனது குரலை இனி வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில், இந்தச் சிறிய நகரத்தில் தனியாக தங்கப் போகிற ஆசையில் தனக்குள் ரகசியமாக மகிழ்ந்தாள்.

’எதுவாக இருந்தாலும், கடைசியாக நான் வேறு நகரத்திற்கு, வேறு வீட்டிற்கு வந்து விட்டேன்.இந்த வீட்டில் என்னைத் தவிர வேறு யாருமில்லை. இந்த உலகைப் புறந்தள்ளிவிட்டு, யாருடைய தொந்தரவுமின்றி சாப்பிடுவது, தூங்குவது, வாழ்வது என்று அவள் தனக்காக வாழலாம்! என் அக்காவிற்கு பன்னிரண்டு மாதங்களான பிறகும் குழந்தை பிறக்காமலிருக்கட்டும். அவளுக்குச் செய்ய வேண்டிய உதவிகள் முடியாமல் தொடரட்டும், என் அம்மா இங்கு வராமலேயே இருக்கட்டும். தன் உடைகளை அடுக்கிக் கொண்டே அவள் தனக்குள் முனகிக் கொண்டாள். சமையலுக்குத் தேவையானவையாக அம்மா கொடுத்ததில் மிகத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டாள். தண்ணீர் நன்றாக கொதித்திருந்தது. குளித்து விட்டு, கட்டிலில் படுத்தாள். இப்போது அவள் அரண்மனையின் ஏழு பெரும் சுவர்களைக் கடந்து பறந்த ஒரு பறவை…

கதவு தட்டப்படும் சப்தம்…

முதன் முதலாக அவள் தனியாக இருக்கும் போது, கேட்கும் முதல் தட்டலோசை. அந்தச் சத்தம் நெஞ்சிற்குள் ஊடுருவி எதிரொலித்தது.கை விரல்கள் நடுங்க அவள் கதவைத் திறந்தாள்.

எரியும் ஜூவாலையின் முன்னாலான தண்ணீர் போல வீட்டுக்காரம்மாவெளியே நின்றிருந்தாள்.

’எப்போது வந்தாய் பெண்ணே? எது வேண்டுமானாலும் தயக்கமில்லாமல் நீ என்னிடம் கேட்கலாம்.ராத்திரியில் உனக்கு துணைக்கு சமையல்காரப் பெண்ணை அனுப்பி வைக்கிறேன்.’

’இல்லை,வேண்டாம்,’ சௌகந்தி கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் சொன்னாள்.’எனக்கு பயமில்லை. என்னால் தனியாகத் தூங்கமுடியும்.’

’ஐயோ, இல்லையில்லை ! எப்படி அப்படி முடியும்? இரவில் தனியாக இருப்பது என்பது விளையாட்டில்லை. உன் அப்பா என்னிடம் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். உன் அம்மா இங்கு வரும் வரை நான் உன் அம்மா ஸ்தானத்தில் இருப்பேன். நானே இங்கு வந்து படுத்துக் கொள்கிறேன். போதுமா?’

’இல்லை,வேண்டாம். பரவாயில்லை’ என்று சொல்ல படாத பாடுபட்ட சௌகந்தி ’இல்லை ,எனக்கு பயமேதுமில்லை.நீங்கள் கவலைப்பட வேண்டாம்’ என்று அவளை சமாதானப் படுத்தினாள்.

தனியே விட்டுவிடுங்கள் என்று முகத்திற்கு நேரே சொல்வது என்பது எவ்வளவு கடுமையானது!!

சுவரிலிருந்த சிறிய கண்ணாடி அவள் முகத்தைப் பிரதிபலித்தது. என்ன அப்பாவித்தனம் !

சௌகந்தி திடுக்கிட்டாள் .அவள் இதை மாற்றிக் கொள்ள வேண்டும். ’அலங்காரத்தால் உன் முகத்தை மாற்றலாம் — இந்த முகமூடியை மாற்றுவதெப்படி?’ கண்ணாடி கேட்பது போலிருந்தது. என்னைப் பார்த்து நகைக்கும் இந்த கண்ணாடியை நான் மாற்றி விட வேண்டும்!ஆமாம், நிச்சயமாக!

’அப்படியானால் நான் போகட்டுமா? தேவைப்பட்டால் கூப்பிடு.’

அவள் அப்பா மட்டுமில்லாமல்,உலகமே வீட்டுக்கார அம்மாளை மிகஅற்புதமான பிறவியாக பாராட்டுவதேன்? அவளுடைய சுதந்திரத்தில் தலையிடுவதை ஏன் யாரும் கவனிக்கவில்லை? ஒருவரின் சுதந்திரத்தை ஒருவர் இப்படித்தான் பறிப்பதா? சரித்திர ஆசிரியை ஆங்கிலேயர்களைப் பற்றிப் பேசியது அவளுக்கு நினைவுக்கு வந்தது. ஏன் அவள் மனம் இப்படி அலைகிறது ?ஆங்கிலேயர்கள் எங்கே, வீட்டுக்காரம்மா எங்கே?

வீட்டுக்காரம்மா கொண்டு வந்த சாப்பாடு எவ்வளவு சுவையாக இருந்தது! அவள் கவலையை தவறாகப் புரிந்து கொள்ளும் தன் எண்ணம் பற்றி சௌகந்தி கவலைப் பட்டாள். ஆனால் அவளால் இதை சரி செய்யவும் முடியவில்லை. தன்னை தனிமைப் படுத்திக்கொள்ளவும், தன்னை அறியவும் அந்த விதமான எண்ணங்கள் தனக்குத் துணையாக இருக்கின்றன என்பது அவளுக்குத் தெரியும். இப்படி இல்லாவிட்டால், தான் தொலைந்து போய் விடுவோம் என்பதும் பிறகு தன்னையே தேடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் அவளுக்குத் தெரியும்.

நாட்கள் கடந்தன. இன்னொரு நாள் இனி வராது என்பது போல பகல் இருட்டிற்குள் தன்னை புதைத்துக் கொண்டது. கருமையும், அச்சம் தரும் இரவும் இனி வரவே போவதில்லை என்பது போல காலைகள் முகிழ்த்தன. சௌகந்தியின் பொழுதுகள் வீடு,அலுவலகம் சமையல், குளியல், கண்ணாடி,சீப்பு , எண்ணெய், ஆடை என்று கழிந்தன.

ஒவ்வொரு முறை கதவு தட்டலின் போதும் , வீட்டுக்கார அம்மா அல்லது சமையல்காரி, அல்லது பால்காரர் என்று யாரையாவது பார்ப்பாள். அவள் முகத்தைப் பார்க்காமலே அவன் பால் சீட்டு கொடுத்து விட்டுப் போவான். மிக சாது. அப்புறம் யார் ? ஓ..படியில் படுத்திருக்கும் அந்த அசட்டு நாய், புரண்டு கொண்டோ அல்லது கதவில் முதுகைச் சொறிந்து கொண்டோ கிடக்கும். கதவு தட்டப்படும் சப்தத்தை தவறாகப் புரிந்து கொள்ளும் சௌகந்தி கதவருகே போனால் நாயைத்தான் பார்ப்பாள். அடித்துக் கொன்று விடலாம் போல இருந்தாலும்,நாய் எப்படிப் பொறுப்பாக முடியும் ? தொண்டையில் கை விட்டு உள்ளிருப்பதை வெளிக் கொண்டு வந்து விடவேண்டும் என்று சௌகந்தி சில சமயங்களில் நினைப்பதுண்டு.

நல்ல குடும்பம், சாதி, அந்தஸ்து உடைய யாரையாவது பார்த்து நீ காதலிக்க வேண்டும்” என்று அப்பா சொல்லிக் கொண்டிருக்கிறார். எவ்வளவு நவீனமான அப்பா! என்று பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படலாம். தன் பெரிய வீட்டின் முன்னால் அற்புதமாக கல்யாணத்தை நடத்தி விடலாமென்று அவர் நினைக்கிறார்….

’அப்பா,உங்களுக்கு காதலைப் பற்றி என்ன தெரியும்?’

அம்மா முடிவின்றி தனக்குள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள், ’எவ்வளவு காலம் நீ தனியாக இருப்பாய்?எங்கள் காலத்திற்குப் பிறகு உன்னை யார்பார்த்துக் கொள்வார்கள்’ அவள் தனியாக இருக்க வேண்டுமென்ற வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தது போல, ஓர் ஆணோடு இணைய மறுப்பது போல !’ ஆனால் ,அம்மா, ஏன் ஒருவர் என்னை மயக்கக் கூடாது? ஒரு மனிதன் சிங்கத்தைப் போல என் மீது பாய்ந்து.என்னை செயலிழக்கச் செய்து…’சீ,சீ இம்மாதிரியான ஆசைகள் அவளுக்கு மனதின் எங்கோ ஓரிடத்தில் இருப்பதும், தனது பலவீனமான தருணங்களில் அவள் அந்த எண்ணங்களை லேசாக வளர்த்துக் கொள்வதும் அம்மாவுக்குத் தெரிய வந்தால், அவள் பைத்தியமாகி விடுவாள். தனியாக வாழத் தொடங்கிய இந்த நாட்களில்தான் அந்த வித்தியாசமான குரல்கள் அவளுக்குக் கேட்கிறது.

எதுவாக இருந்தாலும் இதுவரை அவள் யாரையும் காதலிக்கவில்லை! யாரும் அவளை விரும்பவுமில்லை! ஏனப்படி? ’சௌகந்தியால் ஆண்களைக் கவர முடியாது. அவள் மிகவும் நேரடியாகப் பேசுபவள்.!’என்று அம்மா ஒரு தடவை சொன்னாள். அதன் அர்த்தமென்ன? தன் குற்றவுணர்வை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டுதன்னை முழுமையாகப் பார்த்தாள். கண்ணாடியில் தெரிந்த உருவம் ஓர் ஆணைக் கவர்கிற எல்லா அம்சங்களையும் உடையதாக இருந்தது. இருந்த போதிலும்…

’சில பெண்கள் தம் விழிகளால் ஆண்களை வசப்படுத்தி, அவர்களை திருமணம் செய்து கொண்டு விடுவார்கள். சௌகந்திக்கு அந்த வகை எதுவும் தெரியாது. அதனால்தான் இன்னமும் அவள் இங்கிருக்கிறாள்.’என்று அம்மா வீட்டிற்கு வருகிறவர்களிடம் புலம்புவாள். அவளுடைய சகோதரிகள் கண்களால்தான் வசீகரம் செய்தார்களா? அம்மாவிடம் அதைச் சொன்னால் என்ன ஆகும்? பெண்கள் தங்கள் விழிகளால் எப்படி வசீகரம் செய்தார்கள்?

கண்ணாடி முகத்தின் ஒவ்வொரு கோட்டையும் மிகத் தெளிவாகக் காட்டுவதை அவள் பார்த்தாள். சீ ! சுருங்க வைத்தால் எப்படியிருக்கும்? அவள் அதையும் செய்து பார்த்தாள். முடிவற்ற மந்தமான தன்மையைத்தான் அவளால் பார்க்க முடிந்தது. முகத்தை மட்டும் சுலபமாக ஒளிக்க இயலுமெனில்! உடனடியாக அவள் கண்ணாடியை நேராக வைத்தாள்.

’ஏதாவது நடந்தால் பெரிதாக கூச்சலிடு’ என்று வீட்டுக்கார அம்மா ஒரு நாள் அவளிடம் சொன்னாள். ’ஏதாவது’ என்பது எதைக் காட்டுகிறது? யாராவது கொள்ளையடிக்க வந்தாலா? ஆண்கள் கதவைத் தட்டினாலா? அதற்கு அவள் கூச்சலிடுவாளா? சௌகந்தியிடம் அதற்கு பதிலில்லை. கூரையை வெறித்தவளுக்கு ஒரு கருமையான திருடன் அதன் வழியாக இறங்கி வருவதான கற்பனை எழுந்தது.

கூச்சலிடுவதற்கு பதிலாக ,அவன் கண்களை நேரடியாகப் பார்த்து ’என்ன? எதற்கு இங்கே வந்திருக்கிறாய்?’ என்று கேட்டாள்.

வீட்டுக்கார அம்மாவின் குரல் கேட்டது.’என்ன பெண்ணே? நீ எப்படி இருக்கிறாய்?’ நினைவிழந்த நிலையிலிருந்து விழித்தவள் போல சௌகந்தி எழுந்து கதவைத் திறக்கப் போனாள்.சாதாரணமாகப் பேசுவது போல அந்த அம்மா கூரையைச் சுற்றி தன் பார்வையைப் படர விட்டவளாக ’கூரை ஓட்டையை அடைப்பதற்கு உரிய உறையை வாங்க நான் ரொம்ப நாளாக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால் கிடைக்கவில்லை. அது எவ்வளவு விலை உயர்ந்து விட்டது! ஒரு குடும்பம் வாடகைக்கு என்று வந்திருந்தால் நான் வாங்கியிருப்பேன். இப்போது நீ இங்கு தனியாக இருக்கிறாய். சுலபமாக ஒருவர் குதித்து உள்ளே வந்து விடலாம்.இந்தக் கூரை அப்படியானதுதான்.’

சௌகந்தி கூரையின் இடுக்கை வெறித்தாள். ஜன்னல் கம்பியோடு இணைந்து சிலந்தி பின்னியிருந்த வலை தொங்கிக் கொண்டிருந்தது.அடுத்த நாள் காலை ,அது தரையில் கிடக்கும்…

’இப்போது காலம் கெட்டுக் கிடக்கிறது.இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பதால் என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. கூரைக்கு உறை போட எவ்வளவு செலவாகும் என்று உனக்குத் தெரியுமா? தனியொருத்தியாக என்னால் அவ்வளவு செலவு செய்ய முடியாது.’சௌகந்தி தொடர்ந்து வெறித்துக் கொண்டிருந்தாள்.

’நீயும் சம்பாதிக்கிறாய். நீ பாதி,நான் பாதி செலவு செய்து உறையைப் போட்டு விடலாம்.என்னைத் தப்பாக நினைத்துக் கொள்ளாதே. உன் பணத்தை வைத்துக் கொண்டு என் வீட்டை பலமாக்கிக் கொள்ளும் எண்ணம் எனக்கில்லை. அது வீட்டு வாடகையில் கழித்துக் கொள்ளப்படும். இளமை மிக ஆபத்தான பருவம். இந்த வீட்டில் உனக்கு எந்த அசம்பாவிதமும் நடந்து விடக் கூடாது.’ இன்னமும் முழுமையாக இளமையைத் தொலைக்காத வீட்டுக்கார அம்மா பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

சௌகந்தி இப்போது அவளை வெறித்தாள்.’என் பெருமூச்சு இன்னமும் உங்களளவிற்கு ஆகவில்லை’ என்று சொல்ல நினைத்தாள். ஆனால் அவளால் முடியுமா? கீழே விழவிருக்கும் சிலந்தி வலையிலிருந்து தன் விழிகளை பறித்தவளாய்,’ இல்லை … இப்படியே இருக்கட்டும்.. எந்தப் பழுது வேலைக்கும் அவசியமில்லை ,’என்று முணுமுணுத்தாள்.

ஒவ்வொரு நாளும் பூட்டியிருந்த கதவு அவளை வரவேற்றது. ஏதாவது நடக்க வேண்டுமென்று வலியோடு அவள் மனம் காத்திருப்பதைப் போல அவள் பாதங்கள் இழுத்துக் கொண்டு போகும். எந்த நிகழ்வுமற்று எவ்வளவு நாட்கள் இப்படிக் கழியும் ?இந்தக் கேள்வியைக் தனக்குள் கூடகேட்டுக் கொள்ள அவளுக்கு தைரியமில்லை.

தனக்குத் தெரியாத யாரோ ஒருவர் உள்ளே இருக்கும் எண்ணத் தேடலுடனே அவள் கதவைத் திறப்பாள். படுக்கைக்கு அடியில், சமையலறையின் ஓரங்களில், குளியலறைக்குப் பின்னால்—அந்தத் தேடல் தொடரும். தனியாக இருக்கும் பெண்ணை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள யாரேனும் உள்ளே புகுந்திருந்தால் என்ன செய்வது? அவள் கவனமாக இருக்க வேண்டும்.’இளமைக் காலம் ஆபத்தானது. உன்னைச் சுற்றியிருக்கும் உலகம் சரியான பாதையில் உன்னைப் போக விடாது’…அம்மா ,வீட்டுக்காரம்மா,மற்றவர்கள் சொன்னது அவளுக்குள் பதிந்து விட்டது. ஆனால் யார் மூலைகளில் மறைந்திருப்பார்கள்?

ஒவ்வொரு வெற்றிட மூலையும் அவளை வெறித்தது. படுக்கையின் கீழ் கிடக்கும் குப்பை அவளைப் பார்த்துச் சிரித்து வரவேற்றது. கிளர்ச்சியிழந்து அவள் படுக்கையில் விழுந்தாள்.ஒரு கொள்ளைக்காரனாவது உள்ளே புகுந்திருக்கக் கூடாதா? அவளுடைய வழக்கமான வருத்தம் ஆசைகள் நிறைந்த தனி ஆத்மாவின் முணுமுணுப்பாக வெளிவந்தன .அவை வேறெங்கிருந்தோ வருவது போன்ற பாவனையில் அதை கவனித்தாள். எல்லாமும் குழப்பமாகி விடும். …யார் இதைச் செய்தார்கள்— யார் அது? இதைக் கேட்க முடிந்தால்….

பூனை உள்ளிருந்து கத்தியது. கண்ணீரை அடக்கியபடி சௌகந்தி சமையலறைக்கு ஓடி அதை விரட்டினாள். ஆனால் அந்தப் பூனை மாலை காப்பிக்காக வைத்திருந்த பாலை கவிழ்த்து விட்டு ஓடியது. வீட்டு முன்னாலிருந்த பால் கடைக்குப் போய் வழக்கம் போல பால்காரனின் முகத்தைப் பார்க்காமல் அவள் பாலை வாங்கி வந்தாள். சிந்திவிடாமல், தனக்குள்ளேயே பொங்கி , கெட்டியாகி ஆவியாவதான தன் வருத்தத்தை ஹம் செய்தபடியே பாலைக் காய்ச்சினாள்.

’என் கழுத்தில் தாலி என்னும் கயிறு இல்லாமலேயே என் சம்பாதிப்பின் மூலம் என்னால் வாழ முடியும். ஏழு சுவர் மாளிகையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வெளியேறும் ஒரு பறவையைப் போல நான் வாழ்கிறேன்’என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். உடன் வேலை பார்க்கும் அஞ்சலி !அவள் கண்களில் என்ன தைரியமும், துடிப்பும்! ’கல்யாணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றல்ல சௌகந்தி’ —அவள் தன்னையே சமாதானம் செய்து கொள்ள முயற்சித்தாள்.

’நான் ஒப்புக் கொள்கிறேன்.ஆனால் ஓர் ஆணின் துணையின்றி ஒரு பெண்ணால் தனியாக வாழ முடியுமா? நிச்சயமாக வாழ முடியும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் இந்த தீர்மானம் என்பது வெறும் தற்காலிகமானதுதான். அடுத்த கணம் நான் மூழ்கிப் போகிறேன்…’

இவளிப்படியிருக்கும் போது அஞ்சலி எவ்வளவு உறுதியாக,தைரியமாக இருக்கிறாள்? அது ஒருவருடைய மனதின் எல்லை சார்ந்ததா?’ மனம் எல்லை சார்ந்ததில்லை. அது நம் எண்ணங்களைப் பொறுத்து விரியலாம், சுருங்கலாம், என்று சொன்னாள் அஞ்சலி.

’இல்லை அஞ்சலி, என் மனம் செத்துப் போன ஒன்று, அதில் சுருக்கமோ விரிவோ இல்லை.’அது முழுமையாக மரத்துப் போயிருக்க வேண்டும்’ இதை வெளிப்படுத்துவதில் தவறிப் போனதால் சௌகந்தி, களைத்துப் போனாள்.ஏன் அவளால் அஞ்சலியைப் போலிருக்க முடியவில்லை? அதற்கு பதிலாக, தற்கட்டுப்பாடு வேண்டுமென்பதால் அவளது மனம் அந்த ’தடைப்படுத்தப்பட்ட’ ஆசைகளைக் கைவிட்டுவிட்டு , எந்த விதக் கனவுகளுமில்லாமல் துடிப்பின்றி சுருங்கிப் போனது!

’அஞ்சலி, என் கனவுகளுள்ளாவது நான் புதைந்து கொள்கிறேன்! மரியாதை நிறைந்த பால்காரன் கூட என் கனவுகளில் எட்டிப் பார்க்கிறான்! அதன் பிறகு பஸ் கண்டக்டர், என்னருகில் உட்கார முடியாத நீண்ட முடியுடைய பயணி.. பிறகு வேறு யார்? இதையெல்லாம் நான் எப்படி விளக்குவேன்? அலுவலகத்தில் உனக்குத் தெரிந்தவர்களும் இதில் அடக்கம். கனவுகள் வினோதமானதும்,புரிந்து கொள்ள முடியாததும் அல்லவா? ஒருவரின் தலை இன்னொருவரின் உடலில் சேர்க்கப்பட்டிருக்கும்! ஒருவரின் புருவம் இன்னொருவரின் கண்களில்! இந்த உலகம் பொருத்தமான கலவையில் எவ்வளவு அற்புதமானது என்று உனக்குத் தெரியுமா! என் மனதிற்கும் அதற்கும் தொடர்பில்லை! அஞ்சலி,உண்மையைச் சொல்,அந்த மாதிரியான குழப்பும் கனவுகள் உனக்கு வந்ததேயில்லையா?’ சௌகந்தியின் தனிமை நாளுக்கு நாள் மிக அதிகமானது.

அலுவலகத்திற்குப் போகும் போது, அறைக்குள் யார் புகுந்தாலும் அதற்கு இடம் தருவது போல வேண்டுமென்றே கொடியில் கனமான சேலையை பரப்பி வைத்தாள். தனக்கே அது தெரியாது என்பதைப் போல.

அவள் கௌரவமான குடும்பத்திலிருந்து வந்தவள். அந்த கௌரவத்தை குலைக்கும் தைரியமுமில்லை. ஏன் யாராவது அவளது இந்த கௌரவத்தை தோலுரிக்கக்கூடாது? அவளுக்கு இப்போது அனுபவம் மிக அவசியமாகத் தேவைப்பட்டது. போலித் திரை கிழிக்கப்பட்டு உண்மையான அவள் வெளி வரவேண்டும்.ஆனால் யாரும் என்னை அவதூறாகப் பேசக் கூடாது. ’பாருங்கள்! சௌகந்தி போய்க் கொண்டிருக்கிறாள்! உங்களில் யாருக்காவது அவளோடு இணை சேர தைரியமிருக்கிறதா?என்று அவளால் தைரியமாக தெருவில் கூக்குரலிட முடியுமா? காசி போன்ற புனித ஸ்தலங்களில் சந்தைகளில் பெண்கள் விற்கப்படுகின்றனர். ஆனால் கௌரவமான அவள் தன் விருப்பத்திற்கேற்ப பொது இடங்களில் ஏலம் விடப்படுவாளா? ’கௌரவமான குடும்பத்திலிருந்து வருபவர்கள் இந்த வகையில் இல்லை! என்று முகத்தில் அறைவதாக ஒரு பதில் வரும்.

தான் செய்தது, ஒருவரின் எல்லை மற்றும் மீட்சியைக் கடந்த பாவத்திற்குள்ளாகும் வியாபாரப் பாதை போன்றது! என்பதை உணர்ந்து சௌகந்தி தன் மனதிற்குள்ளேயே மறுகிக் கொண்டிருந்தாள்

அவள் மனதில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டத்தை ஒருவரால் எப்படி அறிய முடியும்? அப்பாவியான முகத்தில் வெளிர்ந்த கண்கள், வலுவான உடலமைப்பு, மென்மையான பேச்சு, நல்ல வேலை. ஆனால் திருமணமாகாதவள், அவளுக்கு எந்த தொல்லைகளுமில்லை. இப்படித்தான்அவளைப் பற்றிச் சொல்ல முடியும்.

வானத்தில் நிலவுடனோ ,நிலாவற்றோ இரவு சௌகந்தியின் தூக்கத்தை களவாடிக் கொண்டது. ஏதோ சப்தத்தை எதிர்பார்த்து அவள் திரும்பி திரும்பி படுத்தாள். இரவில் தேவதாரு மரங்களுக்கிடையேயான மிக மென்மையான சலசலப்பை மட்டுமே கேட்க முடியும். அல்லது எலிகள் ஒன்றன் பின் ஒன்று ஓடிக் கொண்டிருக்கும். இல்லையெனில் , கட்டப்பட்டிருக்கும் நாய் இரவு முழுவதும் குரைத்துக் கொண்டிருக்கும்.வீட்டுக்கார அம்மாவின் வேலைக்காரப் பெண் ’அம்மா, உங்களுக்கு இப்போதே நள்ளிரவாகி விட்டதல்லவா?இப்போது என்ன மணி ஆகியிருக்கும் ?என்று சிரித்துக் கொண்டே கேட்பாள். சௌகந்திக்கு தன் அப்பாவின் பயமும், வீட்டுக்கார அம்மாவின் உறுதியும் ஞாபகத்திற்கு வரும்.சீ! விஷம் ஏறுவது போல இருட்டு பரவியது.அவள் பிணத்தைப் போல தூங்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள்.

அன்று விடுமுறை நாள்.

’சௌகந்தி ,நாங்கள் நான்கைந்து நாட்கள் இங்கிருக்க மாட்டோம்.நீ எப்படித் தனியாக இருப்பாய்? லீவ் எடுத்துக் கொண்டு நீயும் ஊருக்கு போய்விட்டு வாயேன். நீ இதுவரை லீவே எடுத்ததில்லையே’ என்று வீட்டுக்கார அம்மா சொன்னாள்.

சௌகந்தியின் கன்னங்களில் திடீரென்று பரவிய ஒளியை வீட்டுக்கார அம்மாள் கவனிக்காமல் போனது அதிர்ஷ்டம்தான் இது அவள் தனியளாக சோகம் கப்பிய கன்னங்களோடு இருப்பதை இந்த உலகம் கூட காணத் தவறியதாலா ? அப்படியான கேள்விக்கு சௌகந்தி என்ன பதில் சொல்ல முடியும்? குறும்பான புன்னகையோடு ’நீங்களும்,உங்கள் நகைச்சுவையும்!’என்று வெறுமனே சொல்லி விடுவாளா?

’நான் இங்கேயே இருப்பேன்.எனக்கு லீவு கிடைக்காது.எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்படவேண்டாம். நிம்மதியாக போய்விட்டு வாருங்கள்,’ சௌகந்தி உறுதியாகச் சொன்னாள்.

’நாங்கள் திரும்பி வரும் வரை என் மனம் முழுக்க இங்கேதானிருக்கும். உன் அப்பா பெரிய பொறுப்பை என் தோளில் சுமத்தியிருக்கிறார்,’ பயம் தரும் கற்பனையான முக பாவனையோடு வீட்டுக்கார அம்மாள் போனாள்.

சௌகந்தி காலை நீட்டியபடி சந்தோஷமாக உட்கார்ந்து கொண்டாள். இது சொர்க்கம்தான். அவள் ஏன் வேறெங்கும் போக வேண்டும்?வீட்டிற்குப் போய் அவள் என்ன செய்வாள்?அவள் தங்கைக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்களாகி விட்டன. படுக்கையின் ஒரத்தில் கணவன் உட்கார்ந்திருக்க அவள் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருப்பாள். இல்லை, அங்கு போவதில் எந்த அர்த்தமுமில்லை.

குழந்தைக்குப் பால் கொடுப்பது போல மாறுகால் போட்டு உட்கார்ந்தாள். ஒரு கணம் அவள் தலை சுற்றியது.யாரோ தன்னை பார்க்கிறார்கள் என்று அவள் பயந்தாள்.உடனே தலையைக் குனிந்து, கண்களை மூடிக் கொண்டாள்.

இன்று விடுமுறை தினம். இந்த நாளில்,இந்த இரவிலாவது ஏதாவது நடக்குமா?

பகல் பொழுது மிக மெதுவாக நகர்ந்தது.இரவு அடுக்குகளாக வந்து தன்னைச் சூழ்ந்து கொள்ளும் என்று நினைத்தாள்.இரவின் காலடிகளை கவனித்தபடி படுத்திருந்தாள். கதவு தட்டப்படும் என்ற நீண்ட நேர எதிர்பார்ப்பில் இருந்து களைத்துப் போனாள்.ஒருவேளை அவள் கிருஷ்ணனின் காலத்தில் வாழ்ந்திருந்தால் வெறும் புல்லாங்குழல் ஓசையால் அவள் உணர்ந்திருக்க முடியும் ! உள்ளும், வெளியும் எல்லா விதமான ஒலிகளையும் ஏற்படுத்த அவளால் கிருஷ்ணனின் இனிய புல்லாங்குழல் ஒசையை உணர முடியாமல் போனது. மெதுவாக கண்ணிமைகள் மூடின, தூக்கம் அழுத்தியது.நாள் முழுவதிலுமான களைப்பு அவளை நாராக்கியிருந்தது.தடையற்ற தூக்கம்! காலை ஐந்து மணியாக இருக்கலாம்…

சப்தம் கேட்டது!சௌகந்தி எழுந்து உட்கார்ந்தாள்.இதற்காகத்தானே அவள் இரவும், பகலும் காத்திருந்தாள்?

கடைசியாக அவளுடைய கதவு வைகறையில் யாரோ வந்திருப்பதைச் சொல்லியது.

இந்த அழைப்பிற்காக பல காலம் காத்திருந்த சௌகந்தி மீண்டும் அதைக் கேட்கும் ஆசையோடு படுத்திருந்தாள்.சப்தம் பெரிதாக கேட்டது. யாரோ அவள் பெயரை மிக மென்மையாக கூப்பிட்டார்கள்.

அவள் மீண்டும் எழுந்து உட்கார்ந்தாள்.யாராக இருக்கும்? துடிக்க மறந்த இதயம் மிக வேகமாக அடித்துக் கொண்டது.’ யார் அது? சௌகந்தி முனகினாள்.

எழுந்து, அவள் மிக மெதுவாக முன்னே நடந்தாள்.

தன் கனவுகள் அனைத்தையும் திரட்டி மெதுவாக கதவைத் திறந்தாள். அங்கே—

அப்பா நின்றிருந்தார்! அவருக்குப் பின்னால் அம்மா!

சௌகந்தி கீழே விழவில்லை. சிரிக்கவுமில்லை.

கடும் விஷத்தோடு கூடியிருப்பது போல முன்னாலிருந்த கருமையான சாலை சடலமாய் நீண்டிருந்தது.

ஒரு பார்வையற்றவனின் திருப்தி – மலையாளம் மூலம் : தகழி சிவசங்கரம் பிள்ளை ஆங்கிலம் வி. அப்துல்லா தமிழில் தி. இரா. மீனா

தி. இரா. மீனா

பார்கவியை தன் மனைவியாக பப்பு நாயர் ஏற்றுக் கொண்டான். பிறவியிலிருந்தே அவனுக்கு பார்வையில்லை. அவளுக்கு அந்த கிராமத்தில் அவ்வளவு நல்ல பெயரில்லை. அவளுடைய வீட்டிற்கு போவது பற்றி யாரும் அவனிடம் கேள்வி கேட்கவில்லை. அவன் பார்வையற்றவன் அல்லவா?

மத சம்பந்தமான பழங்கதைகள் கேட்பது பார்கவியின் தாய்க்கு மிகவும் பிடிக்கும். பப்பு நாயர் தனக்குத் தெரிந்த எல்லாக் கதைகளையும் அவளுக்குச் சொல்வான். அவன் அங்கு போவதை தடை செய்ய அவன் அம்மா இரண்டு தடவை முயற்சி செய்தாள்.கடைசியில் பார்கவி கர்ப்பிணியானாள். பப்புநாயர் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

தன் வீட்டிற்குள் அவனை அனுமதிக்க முடியாது என்று பப்புநாயரின் அம்மா சொன்னாள். அவனுக்கு ஒரு பதிலிருந்தது: “எல்லா நேரமும் என் தம்பி என்னை கவனித்துக் கொள்ள மாட்டான். என்னைப் பார்த்துக் கொள்ள யாராவது ஒருவர் வேண்டும்.”

“அவளை எப்படி நீ காப்பாற்றுவாய்?”அம்மா கேட்டாள்.

“அவளுக்கு நான் எதுவும் கொடுக்க வேண்டாம் . வீடுகள் சுத்தம் செய்து அல்லது மாவரைத்து அவள் பிழைத்துக் கொள்வாள்.”

“நீ என்ன செய்வாய்?”

“அவள் என்னைப் பார்த்துக் கொள்வாள்.”

“அவளுக்கு மூன்று தடவை கரு கலைந்திருக்கிறது.”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ! உலகத்தில் அவளுக்கு வேறு யாருமில்லை.” இப்படித்தான் பப்பு நாயரின் நிரந்தரமான வெளியேற்றம் அவன் வீட்டிலிருந்து நிகழ்ந்தது.

பார்கவி ஓர் அந்தணர் குடும்பத்தில் வீட்டு வேலை செய்து வந்தாள். ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பாடு , மாதத்திற்கு ஐந்துபடி அரிசி அவள் கூலி. இது தவிர இரண்டு வீடுகளில் மாவரைத்து தரும் வேலையும் அவளுக்கு நிரந்தரமாக இருந்தது. அவள் பப்புநாயரை நன்றாக கவனித்துக் கொண்டாள். அவனுக்கு கெட்டியான அரிசி கஞ்சி வைத்துக் கொடுத்து விட்டு நீராக உள்ளதை தான் குடித்து பசி தீர்த்துக் கொள்வாள். பணிவாக இருப்பாள். அவள் பேசுவது மிகக் குறைவு. வறுமை அவள் முகத்திலிருந்த உற்சாகத்தையெல்லாம் சுரண்டியிருந்தது. இருபது வயதிலேயே உள்ளடங்கிப் போயிருந்த கன்னம், பள்ளமான கண்கள், ஆகியவை பத்து வயதை அதிகரித்துக் காட்டின. அவள் உறுப்புகளில் எப்போதும் ஒருவித சோக நிழல் இருந்தது.மனம் விட்டு ஒருபோதும் மகிழ்ச்சியாக அவள் சிரித்ததில்லை. தன் அதிர்ஷ்டவசமான தோழிகளைப் பார்க்கிற போது மிக அபூர்வமாக ஒரு கேலியான புன்னகை அவள் காய்ந்த உதடுகளில் வெளிப்படும்.

எப்போதும் தன் இடுப்பைச் சுற்றி ஒரு மெல்லிய ஆடை அணிந்திருப்பாள். மாற்று உடைகள் வேறு எதுவும் அவளிடமில்லை.ஆனால் ஒரு போதும் தன் அரை நிர்வாண ஆடை குறித்து அவள் வெட்கப்பட்டதில்லை.

“பார்கவி வயிற்றில் ஓர் ஆண்குழந்தையைச் சுமந்திருக்கிறாள்.அவன் வளர்ந்த பிறகு ராமாயணம் படிப்பான்.” என்று பப்புநாயர் சொல்வான். “எனக்கு பெண்குழந்தைதான் வேண்டும்.”என்று அவள் பதில் சொல்வாள்.

பார்கவிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. நாயரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது. அவன் அறையை விட்டு வெளியே போகவே மாட்டான். வீட்டுக்கு வரும் பெண்களிடமெல்லாம் “பார்கவி பெண் குழந்தைதான் வேண்டுமென்றாள். என் ஆசைப்படிதான் நடந்தது.” என்று சொல்வான். எல்லா நேரமும் குழந்தையைத் தன் மடியிலேயே போட்டு கொஞ்ச வேண்டுமென்று விரும்பினான். “குட்டிப் பையா, நீ பெரியவனான பிறகு உன் அப்பாவிற்கு ராமாயணம் படித்துக் காட்டுவாயா?’ என்று குழந்தையிடம் கேட்பான்.

அவன் முகம் சந்தோஷத்தில் மின்னும்.”பார்கவி,நீ குழந்தைக்கு முத்தம் கொடுப்பதில்லையா?” என்று அடிக்கடி கேட்பான்.

“ஒரு நிமிடம் கூட நீ பேசாமலிருக்க மாட்டாயா?” என்று அவள் பதில் சொல்வாள்.

“பெண்ணே , நமக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. என்க்கு வேறு என்ன வேண்டும்? இவன் என்னை காசி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு அழைத்துப் போவான்.செய்வாய் தானே மகனே?” குழந்தைக்கு அழுத்தமாக முத்தம் கொடுப்பான். ’அஸ்வதி, மகம், மூலம், கேதுவிற்கு ஏழாவது ’ என்று ஜாதகத்தை கணக்கிடத் தொடங்குவான்.’இளம்பருவத்திலேயே இவன் சுக்கிரனின் ஆளுமை உள்ளவனாக இருக்கிறான். இவன் மிக அதிர்ஷ்டக்காரன். கோபிகா ரமணன் என்று இவனுக்குப் பெயர் வைக்க வேண்டும் பார்கவி. ஓமன திங்கள் கிடாவோ என்ற பழைய தாலாட்டை நீ கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று சொன்னான்.

அவள் குழந்தைக்கு ராமன் என்று பெயர் வைத்தாள். “ஏன் நீ அவனுக்கு கோபிகா ரமணன் என்று பெயர் வைக்கவில்லை ?’ என்று கேட்டான்.

“ஓ, பிச்சை எடுக்கப் பிறந்த ஓர் ஆண் குழந்தை..” என்றாள்.

“அப்படிச் சொல்லாதே பெண்ணே. அவன் ஜாதகம் ஒரு தலைவனுடையது.” அவள் அந்த தாலாட்டுப் பாடலையும் கற்றுக் கொள்ளவில்லை.

பப்புவின் மடியிலிருக்கும் குழந்தை வீறிட்டு அலறும். பப்பு உற்சாகம் அடைந்து பார்கவியை கூப்பிடுவான். ’அலறுவதற்காக பிறந்த பேய்’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவள் கத்துவாள். பார்கவி குழந்தையை அடிப்பாள். பப்புநாயர் அதிர்ந்து போவான். வேலைக்குப் போய்விட்டு சாயந்திரம்தான் வருவாள். குழந்தையின் தொண்டை வரண்டு போய் விட்டதாக தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு அமைதியை இழந்தவனாக தவிப்பான். அவனது அன்பு மனதை நெகிழ்விக்கக் கூடியது.

’என் மகனுக்கு நல்ல எதிர்காலமிருக்கிறது. அவனுடைய இடது மார்பில் தாமரையைப் போல இருக்கும் ஒரு மச்சம் தெய்வீக தன்மையைக் காட்டுவதாகும்.’

வீட்டுக்கு அருகாமையில் உள்ள பெண்களிடம், ”அவன் என்னைப் போல இருக்கிறானா ?” என்று கேட்பான். அந்தப் பெண்களின் கண்களிலிருந்து கண்ணீர் வரும். தன்னை விழுங்கியிருக்கும் இருளில் ஒரு துளை இருப்பதை அவன் கவனித்திருந்தான். குழந்தை தன்னைப் போலவே இருக்கிறதென்று நினைத்தான். ”உன்னால் பார்க்க முடியுமா ?” என்று ஒரு பெண் அவனிடம் ஒரு நாள் கேட்டாள்.

“என் மகனை என்னால் பார்க்க முடியும்.”என்று பதில் சொன்னான். மகனைப் பார்த்துக் கொண்டேயிருப்பான். குழந்தையை முத்தமிடும்போது ’ குட்டி பயலே, உன் சிரிப்பு!’ என்று சில சமயங்களில்
சொல்வான். அந்த அமைதியான சிரிப்பைக் கூட அவன் பார்த்தான்.

’அவள் மிக மோசமான பெண். குழந்தை அவனைப் போல இருக்கிறதா?’ என்று கிராமத்துப் பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.

ராமனுக்கு முதன்முதலாக அன்னம் கொடுக்கும் சமயம். அந்த மங்கலமான செயலை தன் கையால் தானே செய்ய வேண்டுமென பப்பு நாயர் ஆசைப் பட்டான். ஆனால் பார்கவி அவனை அனுமதிக்கவில்லை. அவன் பெருந்தீனிக்காரன் என்று அவள் தன் அம்மாவிடம் சொன்னாள். ’அப்படியெனில் வேறு யாரையாவது வைத்து அன்னம் ஊட்டலாம். குழந்தை பெருந்தீனி தின்பவனாகி, தொப்பையன் ஆகிவிடக் கூடாது’ என்று அவள் அம்மா சொல்லிவிட்டாள். ’நான் அவ்வளவு சோறு சாப்பிடுபவனில்லை’ என்று அந்த நகைச்சுவைக்கு உண்மையாக சிரித்துக் கொண்டே பதில்
சொன்னான் பப்பு நாயர்.

குழந்தை வளர்ந்தான். அந்தக் குடும்பச் சூழ்நிலை மோசமானது. வேலை செய்த இடத்தில் திருடி விட்டதாக குற்றம் சாட்டி பார்கவியை வேலையை விட்டு நீக்கி விட்டனர்.

“குழந்தையை பட்டினி போடாதே. என் பங்கை அவனுக்கு கொடுத்து விடு.” நாயர் மனைவியிடம் சொல்வான்.

அது வரட்சியான கார்த்திகை மாதம். அந்த வீட்டில் அரிசி கஞ்சி சமைத்து மூன்று நாட்களாகி விட்டன. ஒரு நாள் பீன்ஸ் இலைகளை சாப்பிட்டு சமாளித்தனர். இரண்டாம் நாள் அரிசி நொய். மூன்றாம் நாள் பக்கத்து வீட்டு கேசவன் நாயர் பத்து பைசா கொடுத்தார். சிறிது அரிசி வாங்கி கஞ்சி வைத்து பார்கவி, அவள் அம்மா, அவள் மகன் மூவரும் சாப்பிட்டனர். வராந்தாவில் உட்கார்ந்திருந்த பப்பு நாயருக்கு பக்கத்து வீட்டுக்காரர் ராமாயணம் வாசித்துக் கொண்டிருந்தார். அடுக்களையில் என்ன நடந்து கொண்டிருந்தது என்று நாயருக்குத் தெரியாது.

அன்று இரவு அவன் குசேல விருத்தத்திலிருந்து சில எளிமையான பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தான். நள்ளிரவிற்குப் பிறகும் பசி அவனைத் தூங்க விடவில்லை. அவன் பாடுவது அக்கம் பக்கத்தினருக்கு மிகத் தெளிவாக கேட்டது. ”இது என்ன பைத்தியக்காரத்தனம்?” பார்கவி கோபத்துடன் கேட்டாள். ‘நான் கடவுளைப் பற்றித்தானே பாடிக் கொண்டிருக்கிறேன்’பாடுவதை நிறுத்தி விட்டு மௌனமாக பிரார்த்தனை செய்தான்.

பார்கவி மீண்டும் கருவுற்றாள். இந்தத் தடவை அவளுக்கு பெண்குழந்தைபிறக்குமென்று நாயர் சொன்னான். மூத்த குழந்தை இப்போது சிறிது பேசத் தொடங்கியிருந்தான். தாயை அம்மா என்றும், பாட்டியை அம்மும்மா என்றும் அழைத்தான். ஆனால் அப்பா என்ற வார்த்தைக்கான அடிப்படை ஒலி அவனிடமிருந்து வரவேயில்லை.

’சின்னப் பயலே, ஏன் அப்பா என்று கூப்பிட மாட்டாயா ?’ அப்பா என்ற வார்த்தை உச்சரிப்பதற்கு கடினமானது என்று நாயர் தனக்குள் சமாதானம் செய்து கொண்டான்.

இந்த முறை கருவுற்றலின் போது பல தடவை பார்கவி நோய்வாய்ப்பட்டாள். இந்த கஷ்டங்கள் எல்லாம் போய்விடும் என்று பப்புநாயர் சொல்லிக் கொண்டேயிருந்தான். ராமன் அம்மாவை விட்டு அகல
மாட்டான். பப்பு நாயரின் அருகே அவன் மறந்தும் போவதில்லை. அவனுக்கு ஒரு தங்கை பிறக்கப் போவதாகவும், அந்தக் குழந்தை எங்கேயிருக்கிறதென்று அம்மாவிடம் கேட்டு அவன் முத்தமிட
வேண்டுமென்றும் மகனிடம் சொல்வான்.

பார்கவி பெண் குழந்தை பெற்றெடுத்தாள். குழந்தையின் ஜாதகத்தை கணித்த நாயர் அவளுக்கு பதினான்காம் வயதில் திருமணம் நடந்து மகிழ்ச்சியாக இருப்பாளென்றான். ’என் மகள் அவள் தாயைப் போல இருக்கிறாள், இல்லையா அக்கா?’என்று பக்கத்து வீட்டு குட்டியம்மாவிடம் கேட்டான். அவள் பெரிதாகச் சிரித்தாள். முகத்தில் கேலி பரவியது.

“ஆமாம்,அப்படித்தான் நினைக்கிறேன்.”

அக்கம்பக்கத்தவர்கள் அந்தப் பெண் குழந்தையின் அப்பாவாக உத்தேசமாக யாரைச் சொல்ல முடியும் என்று விவாதித்து முடிவுக்கு வந்தனர். இப்போது இரண்டு குழந்தைகள். குடும்பத்தை வறுமை பிய்த்துத் தின்றது.பார்கவியின் உடல்நிலையும் சீர்கெட்டது. அவளால் எந்த வேலையும்செய்ய முடியவில்லை.

அவர்கள் குடும்ப நிலை சீக்கிரம் சரியாகி விடும் என்று பார்கவிக்கு நாயர் ஆறுதல் சொன்னான். இந்த கொடுமைகளிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அவள் நினைத்தாள். குழந்தைகள் அனாதையாகி விடுமெனவும், அது முட்டாள்தனமான முடிவென்றும் அவன் விவாதித்தான். ஆனால் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட அவள் கண்களிலிருந்து வரவில்லை. பல்லைக் கடித்து தன் இயலாமையைக் காட்டுவாள். ஒரு சில கணங்கள் அந்த கண்களிலிருந்து ஒளி எழுந்து, பின் அடங்கி ஆற்றாமையை காட்டும். “நீ ஏன் பிச்சை எடுக்கக் கூடாது?’ என்று ஒரு நாள் அவனிடம் கேட்டாள். ’பெண்ணே, நீ சொல்வது சரிதான். புத்தியோடு பேசுகிறாய். ஆனால் ‘நான் இந்த கிராமத்தை விட்டு போக வேண்டுமே. குழந்தைகளை விட்டு எப்படிப் போவேன் என்று தெரியவில்லையே.’

பார்வதி மீண்டும் கருவுற்றாள். அவளால் எழுந்திருக்க முடியவில்லை. பல நாட்கள் அடுப்பே பற்ற வைக்கப்படவில்லை. நாயர் மகனை தினமும் மதியம் பக்கத்திலுள்ள அந்தணர் வீட்டிற்கு அனுப்பி விடுவான். அவர்கள் கொடுக்கும் அரிசிக் கஞ்சியை அம்மாவும் ,பிள்ளைகளும் சாப்பிட்டு விடுவார்கள். அதில் ஏதாவது மிச்சமிருந்தால் நாயர் சாப்பிடுவான்.

“நான் ராமாயணத்தைக் கேட்கும் போது எனக்கு பசியோ, தாகமோ எதுவுமில்லை ”என்று பப்புநாயர் சொல்வான். அவனுக்காக யாரோ படிக்கிற ராமாயணத்தைக் கேட்டபடியே அவன் தன் பகல் பொழுதைக் கழித்து விடுவான். ராத்திரியில் தனக்கு நினைவில் வருகிற வரிகளைச் சொல்லிக் கொண்டு படுத்திருப்பான்.

குழந்தைகள் பசியில் அழுவார்கள்.பார்கவி ஒன்றும் பேசாமல் படுத்திருப்பாள். ’சீக்கிரம் எல்லாம் சரியாகி விடும்’ என்று நாயர் சொல்வான். கவனிப்பாரற்ற நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டன. ராமனை பகல் முழுவதும் பார்க்க முடியாது. வீடு வீடாய் பிச்சை எடுப்பான். பெண் குழந்தை நோய்வாய்ப்பட்டது. யாரிடமோ அரிசியைக் கடன் வாங்கி வந்து கஞ்சி செய்து தரச்சொல்லி அவளுக்குக் கொடுப்பான். ராமன் அந்தியில் தான் வீட்டிற்கு வருவான். கடவுளைப் பற்றிப் பாடச் சொல்லிக் கேட்பார்கள். அதற்கு காசு தர மாட்டார்கள். பப்புநாயர் அவனைப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு சாமி கதைகள் எல்லாம் சொல்வான். நாயர் கதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் எழுந்து போய் விடுவான். அடுப்படியில் இருந்து அவன் குரல் கேட்கும் போதுதான் ராமன் அங்கில்லாதது நாயருக்குத் தெரியும்.

பார்கவிக்கு பிறந்த ஆண்குழந்தை நான்காம் நாளில் இறந்துபோனது. அது ஒரு வகையில் வரம்தான். அவர்கள் எப்படிக் காப்பாற்றுவார்கள்? நாயர் இப்படிச் சொல்லி தன்னைச் சமாதானம் செய்து கொண்டான். குழந்தைகளை காப்பாற்றுவது என் பொறுப்பு. இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. நமக்கு இனி வேறு குழந்தைகள் வேண்டாம்,’ என்று பார்கவியிடம் சொன்னான்.

ராமனுக்கு இப்போது ஆறு வயது. அவனுக்கு எழுத, படிக்க கற்றுத் தர வேண்டும் என்று நாயர் முடிவு செய்து பள்ளியில் சேர்த்தான்.

பார்கவிக்கு அந்தணர் வீட்டில் இழந்த வேலை திரும்பவும் கிடைத்தது. அது இறந்து போன குழந்தையால் கிடைத்த அதிர்ஷ்டம் என்று பப்பு நாயர் சொன்னான். அந்த வேலையின் வழியாக குடும்பத்திற்கு ஒரு வேளை உணவு கிடைத்தது. ஆனால் நாயருக்கு அதனால் எந்த பிரயோஜனமுமில்லை. அவன் பட்டினி தொடரவே செய்தது. மதியமும், இரவும் அந்தணர் வீட்டிலிருந்து கொண்டு வந்த சாப்பாட்டை அம்மாவும், குழந்தைகளும் சாப்பிட்டார்கள். நாயர் ராமாயணப் பாடல் பாடிக் கொண்டோ கேட்டுக் கொண்டோ வராந்தாவில் உட்கார்ந்திருப்பான். அபூர்வமாக, அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுப்பார்கள். அவன் எப்போதும் சாப்பாடு கேட்டதில்லை. எது கி்டைத்ததோ அதைச் சாப்பிட்டான்.

ராமன் பள்ளிக்குப் போகவில்லை. தன்னிடம் வரவேண்டாம் என்று நாயரின் அம்மா சொல்லி விட்டாள். தன்னால் செலவை சமாளிக்க முடியாதென்று சொன்னாள். அவள் சொல்வது நியாயமானதே என்று அவனுக்குப் பட்டது. அவன் குழந்தைகள் எழுதப் ,படிக்க கற்றுக் கொள்ள வேண்டும். மகனுக்கு ஆறு வயதுதான் ஆகிறது. இன்னும் ஒரு வருடம் காத்திருக்கலாம்.

குழந்தைகள்? இன்று வரை அவர்கள் அவனை அப்பா என்று கூப்பிட்டதில்லை. அவன் அங்குமிங்கும் தடுமாறி நடப்பதைப் பார்த்துச் சிரிப்பார்கள். “கண்ணே, இங்கே வா ’ என்று கூப்பிட்டு கையை நீட்டுவான். அந்தக் குழந்தை அவனருகில் வரவே வராது. தூரத்தில் நின்று கொண்டு அவனைப் பார்த்து முகம் சுளிக்கும். ’ராமா,கொஞ்சம் வெற்றிலை பாக்கு கொண்டு வா’ என்று ஒரு முறை மகனிடம் சொன்னான். ராமன் வெற்றிலையில் மிக தாராளமாக சுண்ணாம்பைத் தடவி, பாக்கு என்று சொல்லி சில கற்களை வைத்துக் கொடுத்து விட்டான் .பப்புநாயர்வாய் வெந்து கத்திய போது கைகொட்டி சத்தமாகச் சிரித்தான். அந்த கேலியை நினைத்து நாயரும் சிரித்தான்.

ஒரு நாள் பப்பு நாயர் குச்சியின் உதவியோடு வீட்டின் முன் வராந்தாவில் இறங்கினான். அடுப்படியில் அம்மாவோடு சண்டை போட்டுக் கொண்டு வெளியே வேகமாக ஓடி வந்த ராமன் குச்சி மேல் விழுந்தான். பப்பு நாயர் அவன் முகத்தின் மேல் விழுந்தான். இந்த நிகழ்வை வழிப்போக்கர்களிடம் சொல்லி மகனின் வேகத்தைப் பாராட்டுவான். இப்படியாக இரண்டு வருடங்கள் கழிந்தன. ராமனை இன்னும் பள்ளியில் சேர்க்கவில்லை. சில தடவை பார்கவியிடம் இதைப் பற்றி நாயர் சொல்லிப் பார்த்தான் ’உன் உளறுவாயால் நீ வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவாய்’என்று சொல்லிவிட்டாள்.

’நான் பேசும் விஷயம் சரிதானே?’

அவள் பதில் எதுவும் சொல்ல மாட்டாள். பேசாமல் வேலைக்கு கிளம்பி விடுவாள். ராமன் சின்னச் சின்ன திருட்டுவேலைகளில் ஈடுபட்டான்.’ நீ செய்வது சரியா?’ என்று நாயர் கேட்டான்.

’நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பது பதிலாக இருந்தது. அவன் சின்னப் பையன்தான். பெரியவனாகி விட்டால் சரியாகிவிடுவான் என்று நாயர் தன்னைச் சமாதானம் செய்து கொண்டான்.

பார்கவி மீண்டும் கருவுற்றாள். அது நாயருக்கு சிறிது ஆச்சர்யமாக இருந்தது. ’பார்கவி, இது எப்படியானது?’ என்று கேட்டான். அவள் பதில் சொல்லவில்லை. இந்த சமயத்தில் அவள் ராமனை வீட்டு வேலைக்கு அனுப்பினாள்.’படிக்க வேண்டிய இந்த சமயத்தில் அவனை வேலைக்கு அனுப்பலாமா?’என்று பக்கத்து வீட்டு குட்டியம்மாவிடம் புகாராகச் சொன்னான்.

’ஆமாம்..’என்றாள் அவள். பார்கவி என்ன செய்கிறாள் என்பதெல்லாம் குட்டியம்மாவிற்குத் தெரியும். பப்புநாயரை பார்கவி அவமதிப்பதைப் பார்க்கும் போது அவளுக்கு நாயர் மேல் இரக்கம் ஏற்படும். நாயர் பட்டினி கிடக்கும் போது பார்கவி தன் வயிற்றை நிரப்பிக் கொள்வதை அவள் பார்த்திருக்கிறாள். அவளுக்கு அழுகை கூட வந்திருக்கிறது. இப்போது அவள் நாயரின் அம்மாவிடமிருந்து ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறாள்.

அங்கு நடக்கும் நிகழ்வுகளை அக்கம் பக்கத்தினர் பேசத் தொடங்கி இருந்தனர்.ஆனால் பரிதாபப்பட்டு யாரும் அவனிடம் இந்த மாதிரியான விஷயங்களை நேரடியாகப் பேசுவதில்லை. அதனால் வாழ்வின் தீய நிலை அவன் இருட்டான உலகில் ஒளிந்து இருந்தது. ஒரு வேளை அவன் வாழ்கின்ற நரகம் பற்றி அவனுக்கு தெரிய வந்தால் அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அக்கம்பக்கத்தினர் பயந்தனர். பார்கவியின் மேல் அவன் வைத்திருக்கும் எல்லையற்ற காதல் எல்லோரும் உணர்ந்ததாக இருந்தது. அதே நேரத்தில் அவனது அசைக்க முடியாத நம்பிக்கை அதிசயமானதாகவுமிருந்தது. அவனுடைய நேர்மைக்கும் ,தியாகத்திற்கும் உலகமே தலை வணங்கும். அவன் பார்கவியிடம் ஒரு வார்த்தை கூட கோபமாகப் பேசியதில்லை. கொடுமையான யதார்த்தத்தை அவனால் எப்படி எதிர்கொள்ள முடியும்?

குட்டியம்மாவால் எதையும் சொல்ல முடியவில்லை.’என் மகன் மிக புத்திசாலி. அவன் ஒரு பெரிய அலுவலகத்தில் வேலை பார்க்கிறான்.’ என்று நாயர் அவளிடம் சொன்னான்.

’பப்பு நாயரே,அவன் உங்கள் மகனில்லை’.

’இல்லை,அவன் கடவுளின் குழந்தை.இந்த உலகமே கடவுளால் படைக்கப்பட்ட மாயைதானே?’

குட்டியம்மா அதற்கு பதிலெதுவும் சொல்லவில்லை. அவளுக்கு அதைச் சொல்ல தைரியமில்லை.

பார்கவிக்கு இந்த முறை ஓர் ஆண்குழந்தை பிறந்தது. வீட்டின் புதிய வருகை நாயருக்கு மகிழ்ச்சி அளித்தது. அந்தக் குழந்தை தனக்கு தோழமையாயிருக்குமென்று அவன் சொன்னான். இன்னொரு நாள், மீண்டும் குட்டியம்மா வந்தாள். ’எதையும் பார்க்க முடியாத அதிர்ஷ்டக்காரன் நீ. இந்த உலகத்தின் அவலங்களையெல்லாம் நீ பார்க்க வேண்டியதில்லை’ என்றாள்.

“இந்த உலகில் தீயது என்பதேயில்லை. உண்மைதான்,வறுமை இருக்கிறது ஆனால் அது முடிவுக்கு வந்துவிடும். சோகமிருக்கும் போது சந்தோஷமும் இருக்கும் அக்கா .”

“இல்லை.. அப்படி..”

“நான் வருத்தமாக இல்லை; எந்த வருத்தத்தோடும் கடவுள் என்னை இந்த உலகிற்கு அனுப்பி வைக்கவில்லை. என் குழந்தைகளைப் பற்றிய வருத்தம் எனக்கிருக்கிறது என்பது உண்மைதான். ராமன் எனக்கு ஒரு கடிதம் கூட எழுதியதில்லை.’

’குழந்தைகளை நீ பார்த்திருந்தால் இந்த மாதிரி நீ வருத்தப்படமாட்டாய்.’

’நான் என் குழந்தைகளைப் பார்க்கிறேன்.’

’அப்படியெனில் ,நீதான் அவர்களுக்கு அப்பாவா?’ குட்டியம்மாவின் இதயம் ஒரு கணம் துடிப்பை மறந்தது. தன்னையறியாமலே அவள் உண்மையை உளறிவிட்டாள். பப்புநாயர் பதிலுக்காக் தயங்கி, தடுமாறினான். அடுத்த கணம் ’அவர்கள் குழந்தைகள்.’ என்றான்.

’உனக்கு என்ன தெரியும் நாயர் ?’

’நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் அக்கா. இப்போது பிறந்த இந்தக் குழந்தை – நான் முட்டாளில்லை. பார்வையற்றவர்களுக்கு ஓர் அதீத புத்தி கூர்மையுண்டு. எனக்கு பல விஷயங்கள் தெரியும். ஒரிரவு நான் வீட்டிற்குள்ளிருந்து நாணயங்களின் ஒலி வருவதைக் கேட்டேன் .

”நீ வராந்தாவில் உட்கார்ந்திருக்கிறாய். அவள் ஒரு பிசாசு.’ பப்புநாயர் உடனடியாக பதில் சொல்லவில்லை.

’அதனாலென்ன? குழந்தைகளுக்கு அப்பா இல்லை என்று உலகம் சொல்லாதில்லையா?’

’அவர்கள் உன்னை ’அப்பா’என்று கூப்பிடுகிறார்களா?’

’இல்லை. ஆனால் நான் அவர்களை நேசிக்கிறேன். ராமனும், தேவிகாவும் எனக்கு முன்னால் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு அழகானவர்கள்! என் கண்மணிகள்! அவர்கள் என் குழந்தைகள்தான். அவர்களுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டாமா?’

’அவள் உன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்.’

’அவள் பரிதாபத்திற்குரியவள். பசியில் எவ்வளவு தவித்திருக்கிறாள்! ஒரு வேளை இதுதான் அவளுடைய வாழ்வாதாரத்திற்கான ஒரே வழி போலும். அந்த அளவிற்காவது அவளுக்கு நான் உதவிக் கொண்டிருக்கிறேன்.’

குட்டியம்மாவிற்கு அவனிடம் பேச எதுவுமேயில்லை.அவன் மனம் மிக விசாலமானது, இந்த உலகத்தைப் போல. அவன் இருட்டில் தடுமாறுகிற ஒருவனில்லை. அவன் மனம் நிரந்தர உள்வெளிச்சம் கொண்டிருக்கிற ஓர் ஒளிரும் படிகம். தனக்குள் பலப் பல உலகங்களை அடக்கிக் கொண்டிருக்கிற மேதமை.

குட்டியம்மா அமைதியாக வெளியேறினாள் ; அந்த இரவிலும் அக்கம்பக்கத்தினர் அவன் பாடும் குசேல விருத்தத்தை கேட்டனர்.

————————————————-

நன்றி : The Penguin Book of Modern Indian Short Stories

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நிலவிற்குத் தெரியும்- சாரா ஜோசப் மலையாள மொழி சிறுகதை, தமிழி தி. இரா. மீனா

மொழிபெயர்ப்பு : மலையாளம்
மூலம் : சாரா ஜோசஃப்
ஆங்கிலம் : ஜே.தேவிகா
தமிழில் : தி. இரா. மீனா

தங்கமணி கண்முழித்து பார்த்தபோது உன்னிகிருஷ்ணன் பக்கத்தில்இல்லை. அவன் பாத்ரூமில் இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டு திரும்பிப் படுத்தாள். ஆனால் அமைதி கனமாக இருந்தது; முழித்திருந்தபடி ஏதாவது சத்தம் வருகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஒரு சின்னச் சத்தமுமில்லை. தங்கமணி எழுந்து விளக்கை ஏற்றினாள். மாடிப்படியின் முகப்புக் கதவும் திறந்து கிடந்தது. கலவரம் அடைந்து மாடிப்படிகளில் வேகமாக இறங்கினாள்; மூச்சிறைத்தது அவள் திணறினாள். மரத்தாலான பழைய மாடிப்படி, சத்தம் ஏற்படுத்தியது. பெரிய தாத்தா விழித்துக் கொண்டார்.

“தங்கமணி..” மாடிப்படியின் கீழிருந்து கூப்பிட்டார்.

“அவர் அறையில் இல்லை…” தங்கமணியின் குரல் ஹாலில் எதிரொலித்தது.வீடு முழுவதும் லைட் போடப்பட்டது! சந்திரனும், சேகரனும் எழுந்தனர். முன்வாசலில் பலமாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்த கோவிந்தனும், மொய்துட்டியும் கூட விழித்துக்கொண்டு விட்டார்கள். எங்கும் டார்ச் லைட்டுகளும், கைவிளக்குகளும் ஒளிர்ந்தன.

“தங்கமணி…” உன்னிகிருஷ்ணனின் அம்மா பலவீனமான நடையோடு தென் பகுதி இருட்டிலிருந்து தட்டுத்தடுமாறி வந்தாள். கண் பார்வையை கூர்மைப்படுத்திக் கொள்ள சிறிது நின்றாள். காது சிறிதும் கேட்பதில்லை. எதையோ அறிந்தவள்போல “தங்கமணி! நீ கீழே விழுந்துவிட்டாயா?” என்று கேட்டாள். தங்கமணி தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு படியிலிருந்து இறங்கி வந்தாள்.

நிலா வெளிச்சம் குளத்தைப் பிரகாசப்படுத்தியது. உன்னி கத்திக் கொண்டே நடந்தான். அந்த ஓடை எங்கே போனது? சாயந்திரம் கூட சந்தோஷமாக அதில் குளித்தானே! யார் அதை மறையச் செய்தது? சிறிதுநேரம் தூங்கி விட்டு வருவதற்குள்ளாக அது காய்ந்துவிட்டதா? முடியவில்லை.. முடியவில்லை.. தண்ணீர் இல்லாமல் என்ன செய்வது? சேறு ..எங்கும்.

நிலாவின் வெளிச்சத்தில் கானல் நீரைத் தேடிஓடினான். அங்கு தண்ணீர் இல்லை. நிலா வெளிச்சம் மட்டும்.. அவன் தொய்ந்து நடந்தான். இலக்கின்றி காலை இழுத்துக் கொண்டு ஆற்றின் கரையில் இங்கும் அங்குமங்குமாக ஓடினான்.பயம் கோரைப்பல்லாக சதையைத் துளைத்து மேலே மேலே இழுத்துக் கொண்டு போனது.

“உன்னி கிருஷ்ணா.. ஏய்..!” வீட்டின் கீழ்ப் பகுதியிலிருந்தவர்கள் அவனைத் தேடிக் கொண்டிருந்தனர்

ஏய்..ஏய்.. இரவுப் பறவைகள் பதிலுக்குக் குரல் கொடுத்தன. “என்ன.. சத்தம் அது, தங்கமணி?” உன்னியின் தாய் கழுத்தை வெளியே நீட்டி கஷ்டப்பட்டுப் பார்த்தாள். தங்கமணி போர்டிகோவிலிருந்து வெளிவாசல் முற்றத்திற்குப் போனாள். டார்ச்சுகளும், விளக்குகளும் வீடு முழுவதும் வெளிச்சத்தைப் பரப்பின.

“கிணற்றின் அருகே பாருங்கள்” என்று சேகரன் கூப்பிட்டார். தங்கமணி நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். கிணற்றின் அருகே போயிருப்பாரோ? அதற்குக் கைப்பிடிச்சுவர் கூடக் கிடையாது. மிக ஆழமானதும் கூட.குழிபோல இருந்த ஆழத்தை நோக்கி டார்ச்சுகள் அடிக்கப்பட்டன. தங்கமணி நடுங்கினாள். கிணற்றுத் தண்ணீர் கருப்பாக இரக்கமின்றி, அசைவின்றி இருந்தது. நிலா வெளிச்சம் அதன்மீது பட்டுச் சிரித்தது.

“இல்லை, அவன் இங்கிருப்பதாகத் தெரியவில்லை”.

“எங்கே போயிருப்பான்? ஐயோ கடவுளே!” வீட்டைச் சுற்றிலும் ஒளிர்ந்த டார்ச்சுகள் ஆற்றை நோக்கி நகர்ந்தன.

“தங்கமணி, உள்ளே வா ” பெரிய மாமா கூப்பிட்டார். தங்கமணி போர்ட்டிகோ பகுதிக்கு வந்தாள்.

“தங்கமணி எங்கேயிருக்கிறாய்?” உன்னியின் அம்மா கதவருகே வந்து கேட்டாள் .தங்கமணியின் நிழல் அவள் தெளிவற்ற பார்வையை மேலும் மறைத்தது.

“வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு நடு இரவில் வெளியே நிற்கிறாயா?”

போர்ட்டிகோவின் தூணில் அவள் சாய்ந்துநின்ற போது டார்ச்சுகளின் ஒளி ஆற்றின் மீது பரவுவது தெரிந்தது. பின்பு அவைகளின் வெளிச்சம் வேறுவேறு பகுதிகளில் பட்டு அசைந்தது. அது அரக்கர்கள் தம்கண்களால் ஆற்றின் எல்லாப் பகுதிகளையும் பயமுறுத்துவது போல மோதிப் பரவியது. பம்பாயில் இருந்த வரை உன்னி பக்கத்தில் படுக்கையில் இல்லையென்றால் பாத்ரூமில்தான் இருப்பான் என்று அவளுக்கு உறுதியாகத் தெரியும். சாத்தி வைக்கப்பட்ட சிறிய அறை, பாத்ரூம் என்ற இரண்டு அறைகளில்தான் அவள் தேட வேண்டியதிருக்கும் .பாத்ரூம் ஷவரில் உடம்பு முழுவதையும் நனைத்துக்கொண்டு உன்னி நிற்பான்; அவள் ஊகம் தவறியதில்லை. தன் கைகளை அவள் முன்னால் நீட்டிக் கொண்டு குழப்பத்தோடு “இப்போது பார், தங்கமணி உண்மையாகவே என் கைகள் மிகச் சுத்தமாக இருக்கிறதல்லவா? ”என்று கேட்பான். செத்த மீன் ஆற்றில் மிதப்பதுபோல வெளிறி ஊறியிருக்கும் அவன் கைகளை மடக்கி பாத்ரூமிலிருந்து வெளியே அழைத்து வருவாள்.

“தெரியுமா உனக்கு? இந்த இடம் இன்னும் பாட்டனார்கள் நடமாடிக் கொண்டிருக்கும் இடம்… வா ..உள்ளே வந்துவிடு! ”உன்னியின் தாய் தன் சில்லிட்ட கையை நீட்டித் தங்கமணியைத் தொட்டாள். அவள் வயிற்றில் உன்னியின் குழந்தை அசைந்தது.

வீட்டின் கதவைத் திறந்து கொண்டு போன உன்னி, பல மைல்கள் தொலைவிலிருந்த ஓடையை நோக்கி நடந்து கொண்டிருந்தான். “தண்ணீர்… தண்ணீர் எல்லாவற்றுக்கும்.. தேவையானது.. தண்ணீர்இல்லாவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது ”. அவன் பாதங்கள் மண்ணில் புதைந்தன. ஒருவித பதட்டம் ஏற்பட்டது. உடம்பு இறுகியது. தண்ணீருக்கு அலையும் பித்துப் பிடித்த நாய் போல.. தண்ணீர் தாகம் அவனை வாட்டியது

உறவினர்கள் ஆற்றின் கிழக்கு திசையில் ஒளியைப் படரவிட்டுத் தேடிக் கொண்டிருந்தனர். “இது தண்ணீர்ப் பிசாசின் வேலைதான். ஒரு சந்தேகமுமில்லை. தண்ணீர்ப் பிசாசு நம் குடும்பத்தின் சாபமில்லையா?” பெரிய மாமா சோகமாகச் சொன்னார் . அவர் முகம் இறுகியது. சங்குண்ணி மாமாவின் வெண்கலப் பாத்திரத்தில் காற்று பரவியது.

“கங்கேச யமுனேச் சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி ஜலஸ்மின் சந்நிதிம் குரு…”

“நாரணி, என் பாத்திரம் எங்கே? ” சங்குண்ணி மாமா பதட்டத்தோடு வீட்டைச் சுற்றியோடினார். பாத்திரத்தில் இல்லாத தண்ணீரை இடது கையிலிருந்து வலதுகைக்கு மாற்றிக் கொண்டிருந்தார். கங்கே ச யமுனேச் சைவ.. சங்குண்ணி மாமா முணுமுணுத்துக் களைப்பானார்.

சுட்டெரிக்கும் வெயிலில் ஆற்றுமணல் கொதித்துக் கிடந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் வெள்ளை மணல் விட்டுவிட்டுப் பிரகாசித்தது சங்குண்ணி மாமா ஆற்றை நோக்கி பித்துப் பிடித்தவர் போல ஓடிக் கொண்டிருந்தார். கங்கே ச.. காற்று வேகமாக அடித்து மண்ணைக் கிளப்பி அவரை அணைத்துக் கொண்டது. சங்குண்ணி மாமா வெறிபிடித்தவர் போல ஆடிக் கொண்டிருந்தார். காவடியாகத் தன்னை மறந்து ஆடிஆடிக் கீழே விழுந்தார். சுட்டெரிக்கும் மண்பூக்கள் அவர் தோளைத் தழுவ தகிக்கும் மணலுக்குள் மாமா புதைந்து மறைந்து போனார். அவரைத் தேடிப்போனவர்கள் மண்ணின் மேலே தெரிந்த இடது உள்ளங் கையைப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டார்கள்.

காற்று இன்னமும் தண்ணீர் ஊற்றும் பாத்திரச் சப்தத்தின் ஒலியோடு கலந்திருந்தது. பெரிய மாமாவின் உடல் நடுங்கியது. “உன்னி கிருஷ்ணன் சங்குண்ணி மாமாவைத் தொடர்கிறான் ” அங்குள்ளவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் அவனுக்கு அவ்வளவு வயதாகவில்லையே.. அல்லது..?

தண்ணீர்ப் பிசாசால் இறந்தவர்கள் எல்லோரும் எண்பது, தொண்ணூறு வயதானவர்கள். ஆனால் உன்னிக்கு முப்பது வயது கூட ஆகவில்லையே? அவன் பம்பாய்க்குப் போனபோது அவனுக்கு இருபத்து நான்கு வயது. தங்கமணியை அவன் கல்யாணம் செய்து கொண்டபோது இருபத்தியெட்டு வயதுதான்.” என்று யாரோ சொன்னார்கள். பம்பாயில் என்ன ஆனதோ தெரியவில்லை? எதையாவது பார்த்து பயந்து விட்டானோ? சந்தேகமில்லை.. சந்தேகமில்லை! அவன் முகம் எப்போதும் பயந்த மாதிரியே இருந்தது. இல்லை! உன்னி பயந்தாங்கொள்ளி இல்லை. இளைஞனாக இருந்தபோது இப்படியில்லை. கல்லூரி நாட்களில் நடுராவில் தனியாக வருவான். இருட்டில் இந்த ஆற்றின் வழியாக தனியாக வந்திருக்கிறான்! தூக்கம் வராத பல இரவுகளில் எத்தனை நாட்கள் இந்த மண்ணில் படுத்திருக்கிறான்?அவன் தலைக்கருகே எத்தனை புகைத்த பீடிக்கட்டுகள் கிடந்திருக்கின்றன! ஆனால்..

உன்னிகிருஷ்ணன் பயப்படுவான்! தங்கமணிக்கு அது ஞாபகமிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுவான். எங்கு பார்த்தாலும் இரத்தம். அப்படித்தான் சொல்வான் தெருவோரங்கள், சாலைகள், ரயில் நிலையங்கள் , தண்டவாளங்கள், பஸ்கள், எல்லா இடங்களிலும் இரத்தம்… காலைக் கீழே வைக்காதே! கீழே பார்க்காதே! என்று சொல்வான்அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போதே பாத்ரூமிற்குள் ஓடுவான். கால்கள் சுத்தமாக இல்லை என்று பாத்ரூமிலிருக்கிற துவைக்கும் கல்லில் தோல் கிழியும் அளவுக்கு மணிக்கணக்காக கால்களைத் தேய்த்து தேய்த்துக் கழுவுவான்.

“என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? வெளியே வாருங்கள்” பாத்ரூமிலிருந்து அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு வெளியே கூட்டி வரும்போது அவன் முகம் பயத்தில் உறைந்திருக்கும். அந்தக்
கையாலாகாத முகபாவம். தனக்குள் அவன் பேசிக்கொண்ட விதம்…

“துர்நாற்றம்.. அப்படி ஒரு நாற்றம் தங்கமணி! ”

“அப்படி ஒரு நாற்றமும் இல்லையே. உங்கள் கற்பனை அவ்வளவுதான்”.

“இல்லை.. ஒன்றுமேயில்லை என்கிறாயா?”

அவன் அவளை அந்த ஐந்து மாடிக்கட்டிடத்தின் கீழே இழுத்துக் கொண்டு போனான். மாடிப்படிகளில், முன்பகுதியில்,சாலையில்.. தங்கமணிக்கும் கூட இரத்தமழை உணர்வால் குமட்டல் வந்தது.

டார்ச் லைட்டுகள் அணைந்து விட்டன.“கவலைப்பட வேண்டாம்.” மின்சார விளக்குகளைப் பயன்படுத்தலாம்” என்றார் பெரிய மாமா. ஆற்றில் நடக்கும்போது யாருக்கு லைட் வேண்டும்? நிலாவின் பால் ஒளி வரண்ட ஆற்று மணலின்மீது பட்டு மின்னியது. யாரும் கண்ணில் தென்படவில்லை. இங்குமங்குமாகச் சில செடிகளும், பசுக்களும் சிலை போலக் கண்ணில் பட்டன. தேடுபவர்களில் சிலருக்குச் சந்தேகம் எழுந்தது. உன்னி இவ்வளவு தூரம் வந்திருப்பானா?அவன் தண்ணீரின் மேல் பிரேமையுள்ளவன். தண்ணீரில்லாத ஆற்றில் திரியவருவானா? வேறு இடத்திற்குப் போய்த் தேடலாமா?

பெரிய மாமா ஒப்புக் கொள்ளவில்லை. “உங்களுக்கு அவனைப் பற்றித் தெரியாது இந்த ஆறுதான் அவனுக்கு எல்லாமும். அவன் இங்குதான் இருப்பான்” என்று அவர் முன்னால் நடந்து கொண்டே சொன்னார்.

உன்னியின் தாய் கையில் விளக்கோடு முகப்பிற்கு வந்தாள். கண்ணாடியால் மூடப்பட்டிருந்த விளக்கின் சிவப்பொளி விம்மிற்று. “எல்லோரும் எங்கே போய்விட்டார்கள், தங்கமணி? யாரையும் காணவில்லையே.” பதில் எதுவுமில்லை. தங்கமணியின் நிழலசைந்தது. இன்னமும் போர்ட்டிகோ தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தாள்.

“தங்கமணி, நீயா?”

காலை நீட்டிஉட்கார்ந்தபடி நினைவுகளில் ஆழ்ந்திருந்தாள். உன்னி சாப்பாட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு போகவில்லையா?

“என்ன இது? சாப்பாட்டை எங்கே எடுத்துக் கொண்டு போகிறீர்கள்?” உன்னி பயந்து விட்டான். குரலைத் தாழ்த்திக் கொண்டு மெதுவாக “இது எல்லாம் விஷம் தங்கமணி… அரிசி, காய்கறிகளை நம்பக் கூடாது…”

“நான்தான் சமைத்தேன். என்னையும் நம்பமாட்டீர்களா?”

“இல்லை, தங்கமணி.. விஷம் அரிசிக்குள் இருக்கிறது! உன் சாப்பாட்டையும் இங்கு எடுத்துக் கொண்டு வா.. அதைக் கழுவி விட்டுச் சாப்பிடு…”

சாதம் பாத்ரூம் தரைமுழுவதும் கொட்டிக் கிடந்தது. தங்கமணி தனக்குள் பல நாட்களாக அடக்கிவைத்திருந்த உணர்வுகள் ஓர் அலறலாக வெளியே வந்தது. துக்கம் நிறைந்தவனாகத் தெரிந்த அவனது தோற்றம் கண்களில் கண்ணீரைப் பெருக்கியது. அது சாப்பிட்டுக் கொண்டிருந்த அவள் தட்டில் விழுந்தது.

உன்னியின் தாயின் கண்கள் இருட்டைப் பார்த்து வெறுமையானது. “இப்போது மணி என்ன?” தங்கமணியின் நிழலைப் பார்க்கமுடியாமல் அவள் இருட்டிடம் கேட்டாள். பிறகு அவள் மெதுவாக நடந்து
தென்கோடி அறைக்குள் போனாள்.

திடீரென்று மின்சாரம் பாய்ந்ததைப் போல உன்னி தன் காலில் குளிர்ச்சியை உணர்ந்தான். ஈர மண்ணிலிருந்து எழுந்த குளிர்ச்சி அவன் நெற்றிவரை பாய்ந்தது. தரையில் உட்கார்ந்து உள்ளங்கையில் மண்ணை எடுத்து முகர்ந்தான். புதிய ஆற்றுநீரின் மணம்! ஒரு விநாடிகூட யோசிக்காமல் அவன் மண்ணைத் தோண்டத் தொடங்கினான். ஆற்று மணலைத் தோண்டும்போது ஒரு குழந்தையைப் போல உணர்ந்தான். சந்தோஷத்தில் பெரிதாகக் குரல் கொடுத்தான். ஆற்றின் மறுகரையிலிருந்த அவன் நண்பர்கள் மகிழ்ச்சியாக எதிர்க்குரல் கொடுத்து அவனை அழைத்தனர்.

அவர்கள் டார்ச்சுகளோடும், விளக்குகளோடும் அவனை நோக்கி ஓடி வருவதைப் பார்த்தான். மிகுதியான சந்தோஷத்தில் ஆழமாகத் தோண்டினான். இரண்டு புறங்களில் இருந்தும் வேகவேகமாகச் சிறிய அளவில் குவியல் உருவானது. இரவுப் பறவைகள் சப்தத்தோடு தாழ்வாகப் பறந்தன. வழி தவறிய கால்நடை அவன் பின்னால் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தது. பரவியிருந்த வரண்ட கருக்காச்செடி அவன் காலைச் சுற்றிப் பின்னியது. மகிழ்ச்சியான மனதோடு உன்னி தன் கைகளால் தண்ணீரை எடுத்தான். நிலா வெளிச்சம் அவனுடைய உள்ளங்கைகளில் விழுந்து சிரித்தது.

தங்கமணி கையில் லாந்தர் விளக்கோடு தனியாக கிணற்றினருகே போனாள். நிலா வெளிச்சம் கிணற்றில் விழுந்து பொருமியது. தண்ணீர்ப் பிசாசினால் அழிந்தவர்களின் ஆத்மாக்கள் நிலா வெளிச்சத்தில் கிணற்றில் தெரிந்தன.

“அப்படியானால் நீங்கள் எங்களைச் சோதிக்கிறீர்கள்?” அவள் சோகமாகக் கேட்டாள்.

“வீட்டிற்குப் போக வேண்டும். நம் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதில் குளிக்கவேண்டும். அந்தக் கிணற்றின் அடிப்பகுதி உறுதியான நெல்லி மரத்தாலானது. எங்களின் முன்னோர்கள் மரத்தை வெட்டி மதில் சுவராகக் கட்டினார்கள். அங்கு அவ்வளவு சுத்தமான தண்ணீர்— உள்ளேயும் வெளியும் குளிர்ச்சியாக இருக்கும்.. நாம் போகலாம். தங்கமணி,நாம் திரும்பிப் போய் விடலாம். “அவன் மிகவும் பிடிவாதமாக இருந்ததால்தானே அவனை அழைத்துக் கொண்டு வந்தேன்? இப்போது? நீ என்ன செய்திருக்கிறாய்?

ஆத்மாக்கள் பேசாமல் நின்றன.தங்கமணி விம்மியழுதாள். அந்த லாந்தர் விளக்கிலிருந்து கடைசியாக ஜூவாலை வந்து அணைந்தது. உன்னியின் குழந்தை துன்பத்தில் புழுவாய் நெளிந்தது. தங்கமணி அசைந்த வயிற்றைப் பிடித்துக் கொண்டு கிணற்றுப் பகுதியைவிட்டு ஓடினாள்.அவளுக்குப் பின்னால் அவை சிரித்தன.

உன்னியின் அம்மா தென்கோடி அறையிலிருந்து முற்றத்துக்கு வந்து அமைதியாகக் கல்போல நின்றாள். “எனக்கு எதுவுமே புரியவில்லை”. முயற்சி செய்தும் அவளால் தங்கமணியின் நிழலைப் பார்க்கமுடியவில்லை.

“தங்கமணி, இது எத்தனையாவது மாதம்?” தங்கமணி பதில் சொல்லவில்லை. அவள் தன் இடுப்பு ஆடைப் பகுதியைச் சிறிது தளர்த்தி வயிற்றைத் தடவிக் கொண்டாள். அது உன்னியின் கனவை வருடுவதாக இருந்தது. எந்த பதிலும் கிடைக்காததால் அம்மா சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

கோள்களைச் சோதித்த ஜோசியன் வரப்போகும் அபாயத்தை எச்சரித்திருந்தான். தண்ணீர்ப் பிசாசுகளும், பாட்டனார்களின் ஆவிகளும் தொல்லை தரலாமென்று.

“இனியும் தாமதிக்கக் கூடாது. நாளைக்குள் நாம் ஏதாவது செய்தாக வேண்டும்”. பெரிய மாமா சொன்னார்.

“முதலில் நாம் அவனைக் கண்டுபிடிக்க வேண்டும்.” தேடப் போனவர்கள் களைப்படைந்தனர்.

“அவன் எங்கே போக முடியும்?” பெரிய மாமாவின் குரலெழுந்தது.அவருக்குக் கோபமும் ,வருத்தமும் ஒருசேர ஏற்பட்டன. அவர்களுக்கு முடிவு கட்டவேண்டும். அவர்கள் அபாயமானவர்கள்! ஆறு அல்லது கிணறு, எதுவென்று சொல்ல முடியாது. அவனை எங்கே இழுத்துச் சென்றார்கள் என்று தெரியவில்லை. இது விளையாட்டில்லை. ஆடிமாதத்தின் கோபமான ஆறு, பருவமழை, ஆகியவை மாமாவின் நெஞ்சை அழுத்தின. ஆற்றின் கரையில் முன்னோர்களுக்கு.. வாழை இலைகளில் உணவு படைக்கும் காட்சிகள்.. ஒற்றை மண்விளக்குகள்.. மெலிதான ஜுவாலையோடு.. தண்ணீரில் மிதந்தபடி துளசி மணமும், மலர்களின் மெலிதான மணமும் இருபுறமும்…முன்னோர்களே ! எங்களுக்கு உதவுங்களேன்..

பம்பாயிலிருந்து அவர்கள் வந்த நாளில் என்ன நடந்தது? உன்னி பூஜை அறையிலிருந்து ராமனின் சிலையையும் அத்யத்ம ராமாயணப் புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு கிணற்றுப் பக்கம் போனான். கிணற்றினருகேயுள்ள சுவரில் ராமன் சிலையை வைத்தான். அதைத் துடைத்து வர்ணத்தைச் சுரண்டினான். ராமாயணப் புத்தகத்தைக் கழுவிச் சுத்தம் செய்ததால் கனமான அட்டை கிழிந்து பக்கங்கள் கிணற்றைச் சுற்றிச் சிதறின. அனைவரும் குழம்பிக் கிணற்றினருகே ஓடியபோது அவன் புனிதப் புத்தகத்தின் கடைசிப் பகுதியைச் சுறுசுறுப்பாகக் கழுவிக் கொண்டிருந்தான். அப்பாவிக் குழந்தை தவறு செய்துவிட்டு முழிப்பதைப் போல ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்த்தான்.

“இது மிகவும் அழுக்காக இருக்கிறது. கழுவிச் சுத்தம் செய்ய வேண்டுமல்லவா?” அப்போதே சந்திரனும், சேகரனும் உளவியல் மருத்துவரை பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். தங்கமணி பம்பாயில் ஒரு மலையாள மருத்துவரைக் கலந்து ஆலோசித்திருந்தாள். “சூழ்நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்” என்று அவர் ஆலோசனை சொன்னார். தங்கமணி குழம்பினாள். அவற்றை எப்படித் தவிர்க்க முடியும்? முக்கியம் கொடுக்காமலிருக்க முடியும்? உன்னியின் உள்ளுணர்வை, மாயையை எந்தத் தண்ணீரால் கழுவமுடியும்?

சம்பள நாளில் ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் அவன் கழுவிக் காய வைக்கும் போது அவன் முகத்தில் தெரிந்த பாவம் அவன் நிலைமையை அவளுக்குத் தெளிவாகப் புரியவைத்தது.அவளுக்கு முத்தம் கொடுக்கும் போதெல்லாம் பாத்ரூமிற்கு ஓடித் தன்வாயைக் கழுவிக் கொள்ளும்போது அவனுக்குள் ஏற்படும் பயத்தின் ஆழத்தை அவளால் மட்டுமே உணரமுடியும். எழுத்துக்கள் அசிங்கமாக இருக்கின்றன; அம்மாவிற்கு ஒரு கடிதம்கூட எழுத முடியவில்லை. உன்னி பேனாவை மணிக்கணக்கில் கழுவுவான். அவனைத் தழுவும் காற்று புகையாக மண்ணைத் தூவி, அதிர்வை ஏற்படுத்தும். ஜன்னல்கள் ,கதவுகள், எல்லாவற்றையும் சாத்துவான். தங்கமணி எப்படிச் சூழ்நிலைகளுக்கு முக்கியம் கொடுக்காமல் இதையெல்லாம் தவிர்க்க முடியும்?

திடீரென்று பெரிய மாமா ’உன்னிகிருஷ்ணா.. ’என்று பெரிதாக அலறி எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தார். அது மறு கரை வரை எதிரொலித்தது. மாமா தூரத்தில் உன்னியைப் பார்த்து விட்டதைப் போலத் திரும்பத் திரும்பக் கூப்பிட்டார். வேக வேகமாக நடந்தார். நடை ஓட்டமாக மாறியது.

உன்னியின் பாதங்களை நனைத்தபடி மண்ணூற்று வழியாக தண்ணீர் பரவியது. தண்ணீரைக் கையால் தட்டிக்கொண்டு அவன் சந்தோஷமாக கத்திக்கொண்டே குதித்தான். மண்ணும் சந்தோஷத்தில் குளிர்ச்சியான தண்ணீரில் ஊறியது. காய்ந்து கிடந்த புல்லின் மீதும், நின்றிருந்த பசுக்களின் மீதும் தண்ணீர் தெளிக்கப்பட்டது. ஆற்றின் மார்பு நிறைந்து வழிந்தது. தெய்வத்தின் பிரசாதம் போல அமிர்த ஓடையாய் வெடித்தது. உன்னியின் முழங்கால்களைத் தண்ணீர் தொட்டது. இரண்டு பக்கங்களிலுமிருந்த துளைகளிலிருந்து மண் சரியத்தொடங்கியது. துளை பெரிதானது. ஆற்றின் கீழே அமைதியான பிரவாகம் இப்போது உன்னியின் பாதத்தில் ஒன்று திரண்டது. அவன் காலின் கீழிருந்த மண் மூழ்கியது. அவன் பாதங்கள் கீழே கீழே.. சந்தோஷமாக நெஞ்சுவரை வந்துவிட்ட தண்ணீரைத் தட்டினான்.

உன்னிகிருஷ்ணன்…. விளக்குகளும், மனிதர்களும் நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நிலவொளியில் மங்கித்தெரிந்தனர். அவனுக்கு பயம் வந்தது. அவர்கள் ஓடையை அபகரித்துக் கொண்டு விடுவார்கள்.. ஈரப்பதத்தையும், மென்மையையும் வடித்து விடுவார்கள்.“இங்கே வராதீர்கள்…”அவன் கத்தினான். தன் கைகளை விரித்துத் தண்ணீரை அணைத்துக் கொண்டான். கரையின் முனையும், துளைகளும் இன்னும் சிறிது தண்ணீரைப் பரப்பின. ஆறு,எல்லையற்ற அன்புக்கு அடையாளம். அவளுடைய இரக்கமான பரிசுகள் அவனை நோக்கிப் பாய்ந்தன; அவை அவன் காலடியில் இணைந்தன. தண்ணீர் கழுத்திற்கு ஏறியது.

’உன்னிகிருஷ்ணா.. மகனே.! ’ யாரோ கூப்பிட்டார்கள். அம்மாவா அல்லது தங்கமணியா? மக்கள் பெரிதாக அழுதுகொண்டு அவனை நோக்கி ஓடிவந்தார்கள். அவர்களிடம் டார்ச்சுகளும், விளக்குகளும் இருந்தன. கூடாது! இந்தத் தண்ணீர் அசுத்தம் அடையக்கூடாது. உன்னி தன் இரண்டு தோள்களையும் விரித்துத் தண்ணீரை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். பெருங்காற்று வீசியது. குளிர்ச்சியான இளநீரைக் குடிப்பது போல, தாய்ப்பாலைக் குடிப்பது போல அவன் வாய் நிறையக் குடித்தான். மீண்டும்.. மீண்டும்..

வெளிச்சத்தோடு மக்கள் அந்த இடத்திற்குப் போனபோது அவர்கள் எதையும் பார்க்கவில்லை. விளையாடுவதற்காக பகல்நேரத்தில் குழந்தைகள் தோண்டியிருந்த குழியில் நிலாவெளிச்சம் விழுந்து சிரித்தது.
——————————-

சாரா ஜோசஃப் சிறுகதை மற்றும் நாவலாசிரியர்.பெண்ணியவாதி. சாகித்ய அகாதெமி விருது, வயலார் விருது, பத்மபுரா இலக்கிய விருது எனப்பல விருதுகள் பெற்றவர். தாய்க்குலம், ஒத்தப்பூ ,ஆதி ஆகியவை இவருடைய நாவல்களில் சிலவாகும். நிலவு அறியுன்னு, புது ராமாயணம், மனசிலே தீ மாத்ரம் ஆகியவை இவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் சிலவாகும்.இச்சிறுகதை ‘நிலவு அறியுன்னு’தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

உள்ளுணர்வு- மலையாள மூலம் எம். டி. வாசுதேவன் நாயர் – தமிழாக்கம் தி. இரா. மீனா

மூலம் : எம்.டி.வாசுதேவன் நாயர்
ஆங்கிலம் : வி .அப்துல்லா
தமிழில் : தி.இரா.மீனா

அந்தச் செய்தி அங்கு வந்திருக்காது என்று நம்பியது தவறுதான். கிராமத்தில் உள்ள தன் வீட்டிற்கு அடிக்கடி தனியாக வரும் பழக்கம் உள்ளவள் அவள். இதில் யாரும் ஆச்சர்யப்பட எதுவுமில்லை. குளித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு வராந்தாவில் வந்து உட்கார்ந்தாள். எவ்வித முன்னறிவிப்புமின்றி, “சுதா குட்டி, நாங்கள் கேள்விப்பட்டது உண்மையா?” என்று அம்மா நேரடியாகவே கேட்டு விட்டாள்.

’நீங்கள் என்ன கேள்விப்பட்டீர்கள்?’ தன்னைச் சுற்றி வார்த்தைகளாலான சுவரை எப்படி அமைப்பது என்ற எண்ணத்தோடு அம்மாவை கோபமாகப் பார்த்தாள்.

கண்ணை மூடிக் கொண்டே அம்மா மென்மையாகச் சொன்னாள்: ’நீயும், பிரபாகரனும் பிரிகிறீர்கள்..’ ஏதாவது சங்கடமான விஷயங்கள் பேசும்போது கண்களை மூடிக் கொள்வது அம்மாவின் பழக்கம். நேரடியான பதிலைச் சொல்வதற்கு பதிலாக கடுமையாக இருப்பது சரியாக இருக்குமென்று அவள் முடிவு செய்தாள்.

“இந்த மாதிரியான செய்திகளை தந்தி பாணியில் உனக்குச் சொல்வது யார்?”

“நேற்று முன்தினம் நாராயணன் வீட்டிற்கு ஸ்ரீதேவி வந்திருந்தாளாம். தேவுவின் கணவன் சென்னையில்தான் இருக்கிறான், இல்லையா?”

முகப்பிலுள்ள படிக்கட்டில் காலை நீட்டியபடி உட்கார்ந்திருந்த அம்மா பதிலளித்தாள். அவளுடைய தங்கையின் மாமியார்தான் இப்படி துண்டு துண்டுகளாக விஷயத்தை உறவினர்களிடம் சொல்லியிருக்கிறாள்.

’இந்தச் செய்தி விசாலத்திடமிருந்து வந்த நேற்றைய கடிதத்திலும் இருந்தது’

அக்காவிடமிருந்து சந்திரிக்கு செய்தி கிடைத்திருக்க வேண்டும், அவள் அதை அம்மாவிற்கு எழுதியிருக்க வேண்டும்.

சுதா முற்றத்தில் காலெடுத்து வைத்தாள். காலை பத்து மணியென்றாலும் வெயில் அனலாயிருந்தது. சுவற்றை ஒட்டியிருந்த நிழல் பகுதியில் நடந்தாள். வேகமாக நடந்த போது ரப்பர் செருப்புகள் பாதத்தில் தட்டி ஒலியெழுப்பின.

நிம்மதியாக இருக்க விரும்பி அம்மா அந்தப் பழைய வீட்டில் தனியாக இருக்கிறாள். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு சுதா அடிக்கடி இங்கு வந்து விடுவாள். அவளைத் தொந்தரவு செய்ய அங்கு தொலைபேசி இல்லை. விருந்தினர்களை மகிழ்ச்சிப்படுத்த என்று அவள்தன்னை அலங்கரித்துக் கொள்ளத் தேவையில்லை. நடு இரவில் விடை பெறும் பிரபாகரனின் அலுவலக நண்பர்கள் போகும் வரை விழித்திருக்க வேண்டியதில்லை. அவர்களின் நகைச்சுவையை ரசிப்பது போல செயற்கையாக சிரிக்க வேண்டியதில்லை. ஆனால் இங்கு வருவதற்கு அவளுக்கு எப்போதாவதுதான் அனுமதி கிடைக்கும். அதுவும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மட்டும்தான்.

எப்போதும் அம்மா கேட்கும் முதல் கேள்வி :’எப்போது நீ திரும்பிப் போக வேண்டும்?’ இந்த தடவை, அவள் கேட்கவில்லை.“பலரும் பல விதமாகப் பேசுகிறார்கள். உண்மையில் என்னதான் நடந்தது?” வராந்தாவில் திரும்பி நடந்தபடி கேட்டாள்.

சுதா பதில் சொல்லவில்லை.

’எனக்குத் தெரிந்த வரையில்…’ அம்மா நிறுத்தினாள்.

“அது உண்மைதான் அம்மா. நாங்கள் பிரிவதுதான் நல்லது.”தலையைக் குனிந்து, அம்மா படியை வெறித்தாள். சமையலறையில் உதவிக்கு இருக்கும் பெண் வந்து ஏதோ கேட்க அம்மா உள்ளே போய் விட்டாள்.

சுதா வங்கியில் பதினைந்து நாள் விடுப்பு எடுத்திருந்தாள். வங்கியிலிருக்கும் ஒரு சிலருக்கு என்ன நடக்கிறதென்பது லேசாகத் தெரிந்திருந்தது. காஷியர் நிர்மலா சீதாராமனிடம் மட்டும் அவள் வெளிப்படையாகப் பேசினாள். ஒய்.எம்.சி.ஏவில் அவளுக்கு ஒரு ரூம் பார்த்துக் கொடுத்தது நிர்மலாதான்.

அம்மா தனியாக வாழ விரும்புகிறாள் என்பதை அவள் உணர்ந்திருந்தாள். உறவினர்களோ அல்லது நண்பர்களோ தன்னை வந்து பார்ப்பதை அம்மா ஊக்குவிக்கவில்லை. குழந்தைகள் தன்னை வந்து பார்க்காவிட்டாலும் அது பற்றி அவள் குறைப்பட்டுக் கொண்டதேயில்லை. பதில் வந்தாலும், வராவிட்டாலும் தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் மாதத்திற்கு ஒரு தடவை கடிதமெழுதி விடுவாள். அக்கம் பக்கத்து வீடுகளிலிருக்கும் யாராவது ஓர் இளம்பெண் அவளுக்கு உதவிக்கு கிடைப்பாள். கடந்த ஆண்டு சுதா வந்திருந்த போது தனக்கு உதவி செய்துவரும் பெண்ணுக்குத் திருமணமெனவும், அவளுக்கு தங்கச் சங்கிலி வாங்கித் தரப் போவதாகவும் சொன்னாள்.

“நீங்கள் மூன்று பேரும் உங்களால் முடிந்த பணத்தை குட்டி ராமனுக்கோ அல்லது எனக்கோ மணியார்டர் செய்து விடுங்கள்.”

விசாலமும், சந்திரியும் தலா முந்நூறு அனுப்ப, சுதா நானூறு தந்தாள். இருவரும் சம்பாதிப்பதாலும், அவர்களுக்கு குழந்தைகள் இல்லாததாலும் அவள் அதிகம் தரவேண்டியிருந்தது. அந்தப் பெண் போன பிறகு சமையலுக்கு உதவி செய்ய அவள் தங்கை வந்தாள்.

அம்மா தனியாக இருப்பது விசாலம் அக்காவிற்கு கவலையாக இருந்தது. திருவனந்தபுரத்தில் அவள் பெரிய வீட்டில் வேலைக்கார்களோடு இருந்தாள். அவர்கள் அனைவரும் கூடியிருந்த ஒரு சமயத்தில், “அம்மாவிற்கு உடல் நலமில்லையென்றாலும், பார்ப்பதற்கு பக்கத்தில் டாக்டர் யாருமில்லை” என்றாள்.

“எனக்கு எதுவும் வராது,” என்றாள் அம்மா.

சுவற்றிலிருந்த ஒரு பெரிய ஓட்டை வழியாக வாழைக் கொல்லையிலிருந்து ஒரு கருப்புக் கோழி தன் குஞ்சுகளோடு முற்றத்திற்கு வந்தது. முற்றத்தின் பக்கவாட்டிலுள்ள குப்பையைக் கிளறியபடி அவை நகர்ந்தன.

“காட்டுக் கோழி ,தினமும் இந்த நேரத்தில் வருகிறது. அது எங்கிருந்து வருகிறது என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.” அம்மா சொல்வது கேட்டது.

சுதா அவற்றை வேடிக்கையாகப் பார்த்தாள். வீட்டிலுள்ள மனிதர்களைப் பார்த்ததும், அந்தத் தாய்க் கோழி பயப்பட்டது. நெருக்கமாகப் பார்க்க வேண்டுமென்பதற்காக சுதா அவற்றினருகே மெதுவாகப் போனாள்.

தாய்க்கோழி எச்சரிக்கையாக கொக்கரித்து விட்டு, குஞ்சுகள் பின்தொடர தோட்டத்திற்குள் போய்விட்டது.

அவர்கள் சாப்பிடும் போது அம்மா ஒன்றும் சொல்லவில்லை .

சாயங்காலம் தங்கை கணவனின் சகோதரர் ஸ்ரீதரன் அண்ணன் வந்தார். அந்தக் கிராமத்து பள்ளியின் தலைமையாசிரியர், முக்கியமான மனிதர். அவர் கேள்விப்பட்டிருந்த வதந்திகளின் அடிப்படையிலான குறுக்கு விசாரணைக்கு சுதா தன்னை தயார் படுத்திக் கொண்டாள். எதுவுமே நடக்காதது போல அவர் குடும்பத்தைப் பற்றி விசாரித்தாள். கோடையின் உஷ்ணம் பற்றி புகார் செய்தாள்.

“எத்தனை நாட்கள் விடுமுறை சுதா குட்டி?”

“ஒரு வாரம்.”

“உனக்கு டீ போட்டுத்தர பால் இல்லை ஸ்ரீதரா” அம்மா குறுக்கிட்டாள்.

“எனக்கு எதுவும் வேண்டாம்.”

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது சுதா சிறிதுநேரம் தன்னை மறந்திருந்தாள். ஆனால் ஸ்ரீ தரன் சென்னையின் கடும் வெயில்,ஜெயலலிதாவின் சொத்து,கருணாநிதியின் அதிகாரம் என்று பேச ஆரம்பித்தார்.

அவள் மௌனமாக இருந்நாள். அந்தப் பேச்சு முடிந்த பிறகு அவர் கிளம்பி விட்டார். அவள் திருமணப் பேச்சு வந்த போது இவருடைய ஜாதகமும் அதில் இருந்தாக கேள்விப் பட்டிருந்தாள்.

மாலையில் தட்டான் கூட்டம் ரீங்காரத்துடன் சுற்றி சுற்றி வந்தன. மண்ணிற்கு மேலாக அவை சுற்றிப் பறந்தால் அது மழைக்கான அறிகுறி என்று குழந்தையாயிருந்த காலத்தில், அவள் கேள்விப்பட்டிருந்தாள். மழை வர வேண்டுமென்று விரும்பினாள். சென்னையின் வைகாசி கோடைக்கு சிறிதும் குறைந்ததல்ல மீனம் மாதம். யார பணம் தருவது என்பது குறித்து இன்னமும் விவாதித்துக் கொண்டிருப்பதால் வீட்டில் மின்விசிறிகளே இல்லை.

“தெற்கறையில் படுத்துக் கொள்.அங்கு லேசாகவாவது காற்று வரும்.” இரவுச் சாப்பாட்டின் போது அம்மா சொன்னாள்.

“எங்கு வேண்டுமானாலும் என்னால் தூங்க முடியும்.”

அப்பா சில வருடங்களுக்கு முன்னால் வாங்கி வந்திருந்த ஒரு பழைய டேபிள் ஃபான் அம்மாவின் அறையிலிருந்தது. படிப்பதற்கு என்று எதுவும் சுதா தான் வரும்போது கொண்டு வரவில்லை. அம்மாவின் அறையில் அப்பாவின் புத்தகங்கள் பெரும் குவியலாக இருந்தன. அம்மா இரவில் சிறிதுநேரம் படிப்பாள். எந்தப் புதிய புத்தகங்களும் இல்லை. திறந்தபடியிருந்த ஹிமா கிரி வரதாவின் ’உலகின் வரலாறு’ என்ற புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தாள்.

அறையில் படுக்கை விரிக்கப்பட்டிருந்தது. உடை மாற்றிக் கொண்டு மணி பார்த்தாள். எட்டு நாற்பத்தி ஐந்து. பிரபாகரன் ரம்மி விளையாடிவிட்டு, பியர் குடித்து விட்டு வீட்டிற்குப் போய்க் கொண்டிருப்பான்.

“வேண்டுமென்றால் அந்த ஃபானை இங்கு கொண்டு வந்து வைத்துக் கொள். கொஞ்சம் சப்தம் வரும், ஆனாலும் வேலை செய்யும்.” சொல்லிக் கொண்டே அம்மா உள்ளே வந்தாள்

“இல்லை, வேண்டாம்.”

அம்மா சீக்கிரம் போக வேண்டும் என்ற பாவனையைக் காட்டி, தான் படுக்கப் போவது போல படுக்கையில் உட்கார்ந்தாள்.

“இன்னமும்..” அம்மா பேச விரும்பினாள்.

“சொல்.”

“ஐந்தாண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பிறகு பிரிவதென்பது..”

அவள் எதுவும் பேசவில்லை.

“ஜனங்களுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பார்கள்?”

அம்மாவின் முகத்தை பார்க்க முடியாதபடி, அவள் லேசாகத் திரும்பிக் கொண்டாள்.

“யாருடனாவது போனில் பேச வேண்டுமென்றால் இங்கிருந்து எப்படிப் பேசமுடியும்?” பேசுவதற்கு வேறு விஷயம் கிடைத்ததைப் போல அவள் கேட்டாள்.

“பார்மசியின் அருகே இப்போது ஒரு புதிய பூத் வந்திருக்கிறது. எங்கு வேண்டுமானாலும் பேச முடியும்.”

மீண்டும் அவளுக்குள் வார்த்தை தடுமாற்றம்.

“நீ என்ன முடிவு செய்திருக்கிறாய்?”

“நான் அதுபற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

“நான் வேண்டுமானால் பிரபாகரனிடம் பேசட்டுமா?”

“வேண்டாம்,வேண்டாம்,” சுதா அவசரமாகச் சொன்னாள்.

அம்மா இரக்கமாகப் பார்த்தாள். “சமாதானமாகப் பேசத் தேவையில்லை அம்மா “ என்று சுதா சொன்னாள்.

அம்மா போய் விட்டாள்.

அம்மா இதுபற்றி மீண்டும் பேசமாட்டாள் என்று சுதாவிற்குத் தெரியும். மௌனமாக ஒப்புதல் தெரிவித்தல் அம்மாவினுடைய இயற்கை என்று அவளுக்குத் தெரியும். பாரிச வாயுவால் தாக்கப்பட்ட அப்பா ஒன்றரை ஆண்டுகள் படுத்த படுக்கையாகவே இருந்தார். அந்த நேரத்தில் தான் பட்ட கஷ்டத்தை அம்மா ஒரு போதும் யாரிடமும் சொல்லிக் கொண்டதில்லை. அப்பாவினுடைய மொத்த வருமானத்தையும் அவருடைய சித்தியின் மகள் பறித்துக் கொண்டதை மற்றவர்கள் விவாதித்த போதும், அம்மா அதுபற்றிப் பேசியதேயில்லை என்பது அவளுக்குத் தெரியும்.

“பெரியம்மா உன்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்பி இருக்கிறாள் ” அடுத்த நாள் காலையில் அம்மா சொன்னாள்.

சுதா தயங்கினாள்.

’பால்காரி ஜானு பெரியம்மாவின் பக்கத்து வீட்டுக்காரி, செய்தியை அவள்தான் சொல்லியிருக்கிறாள்.’

“சரி, நான் போய்ப் பார்க்கிறேன்.”

“போன தடவையே போகிறேன் என்று சொன்னாய்,ஆனால் போகவில்லை.”

“சரி, நான் போகிறேன்.”

“அவளுக்கு எண்பத்தி நான்கு வயதாகி விட்டது.எவ்வளவு நாள் இருப்பாள் என்று யாருக்குத் தெரியும். பார்வை குறையும் வந்துவிட்டது. ஆனால் வேறு ஒரு பிரச்னையுமில்லை.” பெரியம்மா தன் தங்கையைப் பார்ப்பதற்காக அடிக்கடி வருவாள். விசாலம் அக்காவின் தலைமுடியை விதவிதமாக அலங்கரிப்பாள். அந்தியில் மூன்று குழந்தைகளையும் சத்தமாக சுலோகங்கள் சொல்ல வைப்பாள். பெரியம்மாவிற்குத் தன் படுக்கையைக் கொடுத்து விட்டு பாட்டி தான் தரையில் படுத்துக் கொள்வாள். குழந்தைகளுக்கு கதை சொல்ல பெரியம்மாவிற்குப் பிடிக்கும். விசாலம் அக்கா தவிர்க்கப் பார்ப்பாள். சந்திரி தூங்கி விடுவாள். பெரியம்மா சுதா குட்டியை பிடித்துக் கொண்டு விடுவாள். பாட்டி அரைத் தூக்கத்தில் கதை கேட்டுக் கொண்டிருப்பதாக சுதா நினைப்பாள்.

குளத்தில் குளிக்கும் போது சித்தி கோமனின் நீண்ட முடியைப் பிடித்து இழுத்த கதை, கோவலன் கண்ணகி கதை என்று எல்லாமும் சொல்வாள். அவள் மதுரைக்குப் போயிருந்த போது பெரியம்மா சொன்ன கதையை ஞாபகப்படுத்திக் கொண்டாள்.கண்ணகி எப்படித் தன் மார்பைத் திருகி எறிந்து நகரத்திற்கு தீ வைத்தாள் என்பதைத் தான் நேரில் நின்று கவனித்ததைப் போல விளக்குவாள். பெரியம்மாவிற்கு அவள் ஏதாவது பரிசு வாங்கித் தர விரும்பினாள். கடைக்குக் கிளம்பும்போது பிரபாகரனுடன் சண்டை வர, ரயிலுக்கு வரும் நேரம் வரை கோபமாகப் படுக்கையிலேயே கிடந்தாள்.

அவள் பெரியம்மாவை கடைசியாகப் பார்த்தது தன் கல்யாணத்திற்கு முதல் நாள் ஆசீர்வாதம் வாங்கப் போன போதுதான். அது நடந்து ஐந்து ஆண்டுகளாகி விட்டன. பாட்டி உயிரோடிருந்த நாளிலும் அவளுக்கு பெரியம்மாவைத்தான் பிடிக்கும். அந்த ஐந்தாண்டுகளில் ஏழு தடவை அவள் வீட்டிற்கு வந்திருக்கிறாள். ஆமாம்.ஏழு. இரண்டு முறை அவளோடு பிரபாகரன் இருந்திருக்கிறான். பெரியம்மா ஒவ்வொரு முறையும் அவளைப் பற்றிக் கேட்பாள், இரண்டு, மூன்று பர்லாங் தூரத்தில்தான் பெரியம்மா இருந்தாளென்றாலும், ஒவ்வொரு முறையும் அவளால் ஏதாவது ஒரு காரணத்திற்காக போக முடியாமல் போனது.

அன்றும் காட்டுக் கோழி தன் குஞ்சுகளோடு வந்தது. முதல் நாள் பயப்பட்டது போல அது பயப்படுவதாகத் தெரியவில்லை. அவள் சிறிது நெருக்கமாகப் போனாள். ஆமாம், தாயும் , குஞ்சுகளும் நன்றாக இருந்தன. சூரியனின் கதிர்கள், அவற்றின் சிறகுகளில் பட்டு, மண்ணில் பரவுவதை கவனித்தாள்.

“யாரோ வந்திருக்கிறார்கள்..” குரலைக் கேட்டவுடன் குஞ்சுகள் கலைந்தன.

ஸ்ரீதேவி அம்மாவும்,அவளுடைய தங்கையும் முற்றத்தில் நின்றிருந்தனர். அவர்களை உட்காரச் சொல்லி விட்டு அம்மா, ஜானுவிடம் டீ தயாரிக்கச் சொன்னாள். அம்மா சுதாவை சிறிது விசனமாகப் பார்த்து விட்டு உள்ளே போனாள். ’நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறாய் ’என்பதாக அந்தப் பார்வை சொன்னது.

“உட்கார்ந்து கொள் சுதா. நான் வெளிப்படையாகப் பேசினால் ,அதை நீ தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது.”

“சொல்லுங்கள்.”

“ஏன் சுற்றி வளைக்க வேண்டும்?நான் கேள்விப்பட்டது உண்மையென்றால், விஷயம் மோசமாகி விட்டது என்றுதான் அர்த்தம்.”

“மோசமாகி விட்டதுதான், ஆனால் வேறு வழியில்லை” சுதா சிரிக்க முயற்சித்தபடி அமைதியாகச் சொன்னாள்.

ஸ்ரீதேவி அம்மாவின் முகம் கருமையானது தன் தங்கையை அர்த்தத்துடன் பார்க்க,அவள் அக்குறிப்பைப் புரிந்து கொண்டவளாக “நாராயணன் குட்டி எழுதியிருந்தது சரிதான். குடும்பத்திற்கு அவமானம் தரும் விஷயம்.”

சுதா அமைதியாக நின்றாள்.

“ஐந்தாண்டுகள் வாழ்ந்து விட்டு ,முடிவு கட்டுவதென்பது…”

மேலும் பேசு என்பது போல தேவி அம்மா தங்கையைப் பார்த்தாள்.

“கண்டிப்பாக அவன் பக்கத்தில் தவறுகள் இருக்கின்றன.ஆனால் அவற்றை நீ பொறுத்துப் போக வேண்டும். திருமணத்தின் அர்த்தம் அதுதான். உன் அம்மா சகித்துக் கொண்ட விஷயங்கள்.”

சுதா சிரிக்க முயற்சித்தாள். அவள் முதலில் சொல்ல விரும்பியது : “தவறு என்னுடையதுதான் அம்மா, பிரபாகரனுடையதல்ல.” ஆனால் எதையும் சொல்ல வேண்டாமென்று அவள் முடிவு செய்தாள்.

அவர்கள் பேசிக் கொண்டேயிருந்தனர். தனக்கு விருப்பமில்லாதவற்றை கேட்க விரும்பாத போது தன் காதுகளை அடைத்துக் கொள்ளும் கலை அவளுக்கு குழந்தைப் பருவத்திலிருந்து இயல்பாகவே வந்திருந்தது. நாவல்களில் மறந்து போன பெயர்கள்,பாத்திரங்கள்,இடங்கள் என்று ஒவ்வொன்றையும் ஞாபகப்படுத்திக் கொள்ளத் தொடங்கும் போது, குரல்கள் தொலைவில் கேட்பதாகிவிடும்.

“நான் சொன்னதெல்லாம் பிரயோஜனமில்லாதது என்று நினைக்கிறாயா?” என்று புறப்படும் போது தேவி அம்மா கேட்டார்.

“இல்லை.”அவள் சிரித்தாள்.

“நான் சொன்னதில் சிறிது உண்மை இருக்கிறது என்று தெரிகிறதல்லவா?”

“ஆமாம்.”

அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.”நீ என்ன முடிவு செய்திருக்கிறாய்?”

“நான் யோசிக்க வேண்டும்.” சிரித்தபடி சொன்னாள்.

தான் எடுத்துக் கொண்ட வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டதென்ற திருப்தியில் தேவி அம்மா அகலமாக வாயைத் திறந்து, சிரித்தபடி புறப்பட்டுப் போனாள்.

“பெரியம்மாவைப் பார்க்க எப்போது போகப் போகிறாய்?” அம்மா கேட்டாள்.

“நான் போகிறேன்.”

தன் பங்கு அறிவுரையைச் சொல்ல பெரியம்மாவும் தயாராக இருப்பாள். அவளோடு பள்ளியில் படித்த சுமதி தன் மூன்று வயது பெண்ணோடு மதியம் வந்தாள். தச்சர்கள் காலனியில் இடத்தில் அவள் தினமும் சுதாவுக்காக காத்திருப்பாள். அவள் மூக்கிலிருந்த மச்சம் இப்போது பெரிதாகி விட்டிருந்தது. பத்தாவது முடிக்கும் முன்பே அவளுக்கு திருமணமாகி விட்டது.

“எப்படியிருக்கிறாய் சுமதி?”

“உம்.போய்க் கொண்டிருக்கிறது.”

வயலட்டும், சிவப்பும் கலந்த நவீன சரிகை புடவை அணிந்திருந்தாள். துபாயில் வேலை பார்க்கும் அவள் கணவன் வாங்கி வந்திருக்க வேண்டும். இரண்டு வருடங்களுகொரு முறை இரண்டு மாத விடு
முறையில் வருவான். சுமதியின் கழுத்திலும்,கைகளிலும் தங்கம் குவிந்து கிடந்தது.

“நீ வந்திருப்பதாக கேள்விப்பட்டேன்.கொஞ்ச நாட்களிருப்பாயா?”

“ஆமாம்.சில நாட்கள்.”

“அடுத்த திங்களன்று வீடு கிரகப்பிரவேசம் இருக்கிறது. நீ கட்டாயம் வரவேண்டும் சுதா குட்டி.”

அந்தக் குழந்தை தாயின் புடவையிலுள்ள பூக்களைத் தடவிக் கொண்டு இருந்தது. அதன் தலையை நீவியபடி“ இவளுடைய பெயரை மறந்து விட்டேன்,” என்றாள் சுதா.

“கார்த்திகா.”

குழந்தையின் கையைப் பிடித்தபடி சுதா அதை தன்னருகே அழைக்க, அது தாயின் புடவையோடு ஒட்டிக் கொண்டது.

“ஏதோ நடந்ததென்று கேள்விப்பட்டேன்.”சுமதி நேரடியாகப் பேசினாள்.

“ஓ, நீயும் கேள்விப்பட்டாயா…”

“சங்கரன் அண்ணனின் மனைவி சொன்னாள.நான் நம்பவில்லை. அது உண்மையா சுதா குட்டி?”

“ஆமாம்,ஒரு வகையில்.”

சுமதியின் கண்கள் விரிந்தன. ”என்னை விட அதிகம் படித்த, அறிவான பெண்ணுக்கு நான் அறிவுரை சொல்கிறேன் என்று நினைக்காதே. எந்த வகையில் பார்த்தாலும் சேர்ந்து வாழ்வதுதான் சரியாக இருக்கும்.”

சுதாவின் மிக அருகே வந்து மெதுவாகச் சொன்னாள்.

“சரி.யோசிக்கிறேன்.”

“இப்போது குழந்தை வேண்டாம் என்று யோசித்தது தவறு.ஆணோ, பெண்ணோ எதவாக இருந்தாலும் சரி, இந்த மாதிரியான கெட்ட சிந்தனைகள் வந்திருக்காது.”

சுதா அவளை ஆச்சர்யமாகப் பார்த்தாள். கெட்ட சிந்தனைகள்’ மனதில் குறித்துக் கொண்டாள். சுமதி போய்விட்டாள்.

பால் கொண்டு வந்த ஜானு, பெரியம்மா மீண்டும் சுதாவை விசாரித்ததாகச் சொன்னாள்.

“நீ போய் பார்த்து வருவது நல்லது.”அம்மா சொன்னாள்.

“நாளை போகிறேன்.”

“அவளுக்குப் பணம் தேவைப்படாது. ஆனால் ஏதாவது கொடு.விசாலம் போன போது ஐம்பது ரூபாய் கொடுத்தாள்.அதை போகிறவர்கள் வருகிறவர்களிடமெல்லாம் பத்து நாள் சொல்லிக் கொண்டிருந்தாளாம்.”

அம்மா சிரித்தாள். அவள் வந்ததிலிருந்து அம்மா முதல் முறையாக இப்போதுதான் சிரித்தாள். முகத்தில் அந்த இருள் விலகியிருந்தது. விசாலம் அக்காவுடன் தனக்குப் போட்டியில்லை என்று அவள் சொன்னால் என்ன ஆகும்?

திங்களன்று புறப்பட்டு விட முடிவு செய்தாள். இரண்டு வாரம் முடியும் வரை அவள் காத்திருக்கப் போவதில்லை. இந்த மூன்று நாட்களிலேயே அவள் போதுமான மனத்துன்பத்தை அடைந்து விட்டாள். ஹைதராபாத்தை அழைக்க வேண்டுமா. தொலைபேசி எண்ணை நோட்டில் குறித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய அலுவலக எண் மனதில் இருந்தது.

அவளுக்கு டிக்கெட் எடுக்க யாருமில்லை. பெண்கள் வண்டியில் அவள் ஏறிக் கொள்ளலாம். அது ஒரு ராத்திரிப் பயணம்தான்.

கிராமத்திலிருந்து கூட அழைக்கலாம் என்று அவன் சொல்லியிருந்தான். ‘முடிந்தால்’ என்பதையும் சேர்த்துச் சொன்னான்.

காலை உணவிற்குப் பிறகு “பெரியம்மாவைப் பார்த்து விட்டு வருகிறேன்.” சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

“ஜானுவையும் அழைத்துக் கொண்டு போ.”

“இல்லை.வேண்டாம்.”

அவள் முதலில் தச்சர் காலனியின் புது வீட்டிற்குப் போனாள். சுமதி மகிழ்ச்சியில் என்ன செய்வதெனத் தெரியாமல் நின்றாள்.இரண்டு பேர் ஜன்னல்களுக்கு வார்னிஷ் அடித்துக் கொண்டிருந்தார்கள். அவள் வீட்டைச் சுற்றிப் பார்த்தாள்.

“இரண்டு படுக்கை அறைகளிலுமே இணைப்புக் குளியலறைகள் உண்டு.” சுமதி பெருமையாகச் சொன்னாள். ஏதாவது குடிக்கச் சொல்லி வற்புறுத்தியபோது சுதா மறுத்தாள்.

“ஜூலையில் வருவதாக அவர் எழுதியிருக்கிறார்.”

“உன்னையும் துபாய்க்கு கூட்டிக் கொண்டு போகச் சொல். நீயும் அந்த இடத்தைப் பார்க்கலாம்.”

“அது நடக்காது.பெரிய சம்பாத்தியம் உள்ளவர்களுக்குதான் அது சாத்தியபபடும் என்று சொல்கிறார்.” மொத்தத்தில் சுமதி மகிழ்ச்சியாக இருந்தாள்.

“நான் கிளம்ப வேண்டும் சுமதி. பெரியம்மாவைப் பார்க்க வேண்டும்.”

“நான் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்.”

“நிச்சயமாக.” விடை பெற்றுக் கொண்டாள்.

மூங்கில் காட்டைக் கடந்த போது, ஒடை வற்றிப் போயிருந்ததைப் பார்த்தாள்.இரண்டு பக்கத்திலும் முட்புதர் மண்டிக் கிடந்தது. வருடம் முழுவதும் தாராளமாக தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும் பகுதி அது. மழைக் காலத்தில், தண்ணீர் மிக அதிகமாகி கால்வாய்க்குக் கீழே ஒரு சிறு ஆறு போல இருக்கும்.

அந்த வீடு பாட்டனாரின் காலத்தில் கட்டப்பட்டது. கேட் ஹவுசிற்கு பதிலாக இப்போது மூங்கில் தடுப்பு வாசல் இருக்கிறது.சுதா முன் முற்றத்திற்குப் போனாள். அங்கு யாருமில்லை. மூங்கில் பாயில் மிளகு காய வைக்கப்பட்டிருந்தது.சிறிது நேரம் அங்கு தயக்கமாக நின்றாள். தங்கம் அக்கா வராந்தா பக்கம் வந்தாள்.

“யார் வந்திருக்கிறார்கள் பாருங்கள்! இன்று காலைதான் பாட்டியைப் பார்க்காமலே நீங்கள் ஊருக்குப் போய் விடுவீர்கள் என்று புலம்பிக் கொண்டிருந்தார்கள்.”

அங்கிருந்த நாற்காலியில் அவளை உட்காரச் சொல்லி விட்டு தன் குடும்பக் கதையைச் சொன்னாள். அவளுடைய இரண்டு மகன்களும், தேர்விற்காக கடந்த வாரம் தான் விடுதிக்குப் போனார்கள் என்றும்,
மகள் ஒன்பதாம் வகுப்பு படிப்பதாகவும், தாயின் மரணத்திற்குப் பின்பு தங்கைகள் சொத்தைப் பிரித்து கிராமத்தில் தங்களுக்கு வீடுகள் கட்டிக் கொண்டு தங்கி விட்டதாகவும் கதை நீண்டது.

“இந்தச் சிதைந்த வீட்டை என்னிடம் தள்ளி விட்டார்கள்.எனக்கென்று பேச யாருமில்லை.” தன் கணவனின் இறப்பைப் பற்றிப் பேசிய போது குரல் நடுங்கியது. கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“பெரியம்மா எங்கே?”

“வடக்கறையில் இருக்கிறார்கள். பார்வை குறைந்து விட்டது. யார் கையையும் பிடித்துக் கொண்டு நடப்பது பிடிக்கவில்லை. எப்போது எங்கே விழுவார்களோ யாருக்குத் தெரியும்.”

“எனக்காக யாரும் கஷ்டப்பட வேண்டாம்.”பெரியம்மாவின் குரல் கதவருகே கேட்டது.

பெரியம்மா தன் இரண்டு கைகளையும் கதவுச் சட்டத்தில் வைத்து, கால்களை மிகச் சரியாக வராந்தாவில் வைத்தாள். சுதா மிக வேகமாக அவளருகில் போனாள். பெரியம்மா நிமிர்ந்து நின்றாள். அவளுடைய கஞ்சிப் பதமான ஆடைகள் வெண்ணிறமாக ஒளிர்ந்தன. இளம்பருவத்தில் அவள் பார்த்த அந்த பிரகாசம் சிறிதும் குறையாமல் அப்படியே இருந்தது. கூந்தல் முடிச்சு இன்னமும் கனமான முடிச்சாகவே இருந்தது. சித்தியின் கதையை அவள் எப்போது கேட்டாலும், பெரியம்மா தன் விரிந்த கூந்தலுக்குள் கொமப்பனை ஒளித்து வைத்திருந்ததாக கற்பனை செய்து கொள்வாள்.

தங்கம் அக்கா நாற்காலியை இழுக்க முயன்ற போது, “இல்லை, நான் இங்கேயே உட்கார்ந்து கொள்கிறேன். உட்கார் சுதா குட்டி.”என்றாள்.

பெரியம்மாவின் கைகள் அவள் கரத்தை நோக்கி நீண்டிருந்தன. அவள் பெரியம்மாவின் அருகிலுள்ள மரக்கட்டையில் உட்கார்ந்தாள்.

“நீ குண்டாகியிருக்கிறாய் சுதா குட்டி!”

சுதா தன் தோள்பட்டையைப் பார்த்துக் கொண்டாள்.ஆமாம்,அவள் பருத்து இருக்கிறாள்.

“என்னை நோக்கி சில அடிகள் எடுத்து வைக்கும் போது லேசாக மூச்சுத் திணறினாய். உன்னைப் பார்க்காமலே உன் சுவாசத்தை வைத்தே என்னால் அனுமானிக்க முடியும்.”

பெரியம்மா சிரித்தாள்.அவள் கண்களில் உயிரில்லையெனினும் முகத்தில் சுருக்கமேயில்லை. கழுத்தில் மட்டும் வயது தெரிந்தது.

“தங்கம்,கொஞ்சம் டீ போடு. பலாச் சக்கை இருந்தால் சிறிது வறுத்து வை.”

“இல்லை.எனக்கு எதுவும் வேண்டாம். அரை கப் டீ போதும்.”

தங்கம் சமையலறைக்குப் போகும் வரை பெரியம்மா காத்திருந்தாள்.

“என்ன முடிவு செய்திருக்கிறாய் பெண்ணே?” பெரியம்மாவின் கேள்வி திடீரென வந்தது. சுதா குழம்பினாள்.

“கவலைப்படாதே. உன்னை கோபிக்கவோ,குற்றம் சொல்லவோ நான் வரச் சொல்லவில்லை.நாம் சந்தித்து நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டன, இல்லையா?”

சுதா நிம்மதியாக உணர்ந்தாள்.

“நான் எதைப் பார்க்கிறேனோ அதைப் பற்றிப் பேசும் போது இவர்கள் எல்லாம் சிரிக்கிறார்கள். இரண்டு கண்களிலும் காட்ராக்ட் பாதித்திருக்கிறவளுக்கு என்ன தெரியும் என்று நினைக்கிறார்கள். நான் பார்க்குமளவிற்குஅவர்களால் பார்க்க முடியுமா?” தங்கம் கேட்டுக் கொள்ளட்டும் என்பது போல சிறிது சத்தமாகப் பேசினாள்.

“என்ன முடிவு செய்திருக்கிறாய்?” குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டாள்.

சுதாவிற்கு சோர்வேற்பட்டது. மூச்சு வேகமானது.

“அவனோடு உனக்குப் போதுமென்று தோன்றி விட்டால் அதற்கு முடிவு கட்டி விடவேண்டும். திருமணம் என்பது அந்தரங்கமான விஷயம். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களைச் சமாதானப்படுத்துவதற்காக தேரை இழுப்பது போல நடிப்பதில் அர்த்தமில்லை.”

சுதா பெருமூச்சு விட்டு,கால்களை நகர்த்தி உட்கார்ந்தாள். பெரியம்மாவின் தலை அவளருகே வந்தது.

“எனது முதல் கணவரை நீங்கள் யாரும் பார்த்திருக்க முடியாது.”

“அம்மா பார்த்திருக்கிறாள்.அவர் பாட்டு வாத்தியார்,இல்லையா,பாகவதர் ?”

“அதுதான் சிக்கல்.அவர் பாட்டு வகுப்புகள் நடந்த இடம் பிஸாரதியின் வீடு. எங்கள் வீட்டில் சாப்பாடு. அவர் நல்ல பாடகர். காதில் சிவப்பு கடுக்கன்களும், நெற்றியில் சந்தனப் பொட்டும் வைத்திருப்பார்.எனக்கு அவை மிகவும் பிடித்திருந்தன.”

பெரியம்மா அவள் தலையைக் கோதினாள்.

“ஒரு வருடமாகுமுன்பே அவர் பிரிந்து போய்விட்டார்.”

“ஆமாம், அம்மா சொல்லியிருக்கிறாள்.”

“அவர் விருப்ப்பட்டு போகவில்லை .நான்தான் போகச் சொன்னேன்.”

பெரியம்மா முணுமுணுத்தாள். அவள் சிரித்த போதும் கண்கள் தொலைவை வெறித்திருந்தன.

“எனக்குத் தருவதற்கென்று அவரிடம் எதுவுமில்லை. நான் அதைக் கடந்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு பெண்ணைப் போலப் பேசுவார். ஆண் என்றால் உயிரோட்டமாகவும், துடிப்பாகவும் இருக்க வேண்டாமா? நம் உறவை முறித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டேன்.”

பெரியம்மாவின் முதல் கல்யாணம் பற்றி சுதா கேள்விப்பட்டிருந்தாலும், அத்தனை விவரங்கள் தெரியாது.

பிறகுதான் தாத்தா வந்தார்.அவர் உப்பு துறையில் வேலை பார்த்தவர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். அவரும்,மூன்று குழந்தைகளும் இறந்து போய் விட்டார்கள்.பெரியம்மா தான் இன்னும் இருக்கிறாள்.

“நீ பெரியப்பாவைப் பார்த்திருக்கிறாயல்லவா?அவர் அழகானவரில்லை.”

“நான் குழந்தையாக இருந்தபோது பார்த்திருக்கிறேன். அவர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார்.”

“இந்தப் பகுதியில் யாரும் அவரைப் போல இல்லை. விழாக்கால ஊர்வலங்களின் போது முதல் ஆளாய் நிற்பார். யானைக்கு மதம் பிடித்தால் ,மாதவன் நாயர் வேண்டும். பதினெட்டு வகையான வண்ண
பட்டாசு வகைகளை அவரால் மட்டும்தான் எதிர்கொள்ள முடியும்!”

தங்கம் அக்கா டீ கொண்டு வந்தாள். அவள் அங்கிருக்கும் வரை பெரியம்மா கடுமையான பாவனையோடிருந்தாள். அவள் போன பிறகு சிரித்தாள்.

“வெளிப்பார்வையில் அவர் பார்ப்பவர்களுக்கு கடுமையான பாம்பாகத் தெரிவார் .பொறுமையிழந்து, சண்டை போட்டு கோபித்துக் கொள்வார். எவ்வளவு மென்மையானவர் என்று எனக்கு மட்டும் தான் தெரியும். குளிர் என்று நான் சொல்லி விட்டால் போதும் தவித்து விடுவார்.”

பெரியம்மாவின் சிரிப்புச் சத்தம் அதிகமானது.

தன் பிரச்னைகளை ஒதுக்கி வைத்து விட சுதா முயன்றாள். சிறு வயதில் தங்களுக்குக் கதைகள் சொல்லும்போது எப்படி மகிழ்ச்சியாகப் பேசுவாளோ ,அப்படியே இப்போதும் பேசினாள்.

“கவலைகள் இல்லாமலிருந்தாலும் கஷ்டம்தான். குட்டிராயனோடு…”

“என்ன ?”

“கிளர்ச்சி… ஆணைத் தேடும் தவிப்பு. உன்னை அடக்கிக் கொள் என்று சொல்லிக் கொண்டேன். ஆனால் ,எந்தப் பயனுமில்லை, உனக்குப் புரிகிறதா?”

அந்த வாக்கியத்தை முடிக்காமலே பெரியம்மா வாயை அகலமாக்கிக் கொண்டு சிரித்தாள். அவள் பற்கள் முழுவதும் சீராக இருந்ததை சுதாவால் உணர முடிந்தது.

“எனக்கு அப்போது உன் வயதுதான்”

“அவர் இன்னமும் உயிரோடிருக்கிறாரா பெரியம்மா?”

பெரியம்மாவின் முகம் இருண்டது.

“இல்லை.எல்லோரும் போய் விட்டார்கள். நான் மட்டும் தான் இருக்கிறேன். அழைப்பு வரும் வரை நான் காத்திருக்க வேண்டும். யாரும் யாரையும் சாகடித்து விட முடியாது…”

பெரியம்மா எதையோ விட்டுவிட வேண்டுமென்பது போல தலையை ஆட்டினாள். சுவற்றில் தலையைச் சாய்த்துக் கொண்டாள்.

“யார் அந்த மனிதர். சுதா குட்டி?”

“என்ன ?”சுதா மிரண்டு போனாள்.

“நீ யாரையோ விரும்புகிறாய். அவனோடுதான் வாழ விரும்புகிறாய். முடிவும் எடுத்துவிட்டாய். இதுதான் நடந்தது இல்லையா?”

“உங்களிடம் யார் சொன்னது?”

“யாரும் என்னிடம் சொல்ல வேண்டாம்.யார் அது பெண்ணே?’

தனது சங்கடத்தை மறைத்துக் கொள்ள அவள் முயன்றாள்.

“உன்னுடன் வேலை பார்ப்பவரா?”

“இல்லை.”

பெரியம்மாவிடம் அவளால் விளக்கமாகச் சொல்ல முடியாது. மானேஜர் ஜனார்தன்ராவுக்கு தரப்பட்ட விடைபெறு விழாவில் அவனைச் சந்தித்தாள். ராவ் கஸல் பாடகர். விழாவிற்கு வந்த அனைவரும் குடித்திருந்தனர். அறையின் ஒரு பகுதியில் கையில் ஆரஞ்சு ஜூஸ் கிளாசை வைத்துக் கொண்டு அவன் தனியாக நின்றிருந்தான். அடிக்கடி அவளைப் பார்த்துக்கொண்டிருந்த அவன் மெதுவாக அவளை நோக்கி வந்தான். ”கடவுளே, இந்தக் காலடிகள் நேரடியாக என் மனதிற்குள் செல்லுகின்றன” என்று பயத்தோடு தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

ஒவ்வொரு மாதமும் பத்து நாட்கள் மெட்ராசில் கழிப்பேன் என்று அவன் சொன்னதைக் கேட்டு சந்தோஷப்பட்டாள். மனிதர்கள் தங்களை நோக்கி வருவதைப் பார்த்ததும் ”நான் உங்களை தொலைபேசியில் அழைக்கிறேன்” என்று சொன்னான்.

அவள் தலையாட்டினாள். ஏன் அவளை அழைக்க விரும்புகிறான் என்று அவளால் கேட்க முடியவில்லை.

“அவனுக்குத் திருமணமாகி விட்டதா?” பெரியம்மா கேட்டாள்.

“இல்லை.”

“பிரபாகரனுக்குத் தெரியுமா ?’

ஒரு கண யோசனைக்குப் பின்பு சொன்னாள்.“கொஞ்சம் தெரியும்.”

“அப்படியெனில் நீ பிரிந்து விடவேண்டும்?அவன் இன்னொரு பெண்ணைப் பார்ப்பான். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நீ பிரிந்து விடவேண்டும்.”

சுதாவுக்கு வேடிக்கையாக இருந்தது.

“பிரிவதென்பது பழைய நாட்களில் இருந்ததைப் போல சுலபமல்ல பெரியம்மா.”

“ஒருவருகொருவர் வேண்டாமெனில் அதுதான் முடிவு. இல்லையா?”

சங்கடமின்றி இதை விளக்க முடியாத நிலை அவளுக்கு.

“அது அப்படியில்லை. தம்பதியர் இணைந்து மனு செய்ய வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பின்னர் ஜட்ஜ் அழைத்து அவர்கள் இன்னமும் பிரிய வேண்டுமென்ற எண்ணத்தில் இருக்கிறார்களா என்று விசாரிப்பார். ஆமாம் என்று அவர்கள் சொன்னால் இன்னொரு ஆறு மாதம் காத்திருக்க வேண்டும்.”

பெரியம்மாவின் முகத்தில் கோபம் படர்வதைப் பார்த்தாள்.

“காதலிக்கும் இருவர் சேர்ந்து வாழ விரும்பினால், ஜட்ஜ் சம்மதம் தர வேண்டுமா?”

“அதுதான் சட்டம் பெரியம்மா.”

பெரியம்மாவிற்கு திருப்தியில்லை.

“போதுமே சட்டம். என் வாயைக் கிளறாதே. அப்புறம் ஏதாவது பேசி விடுவேன்.”

தங்கம் அக்கா காலியான டம்ளர்களை எடுக்க வந்தாள்.பெரியம்மா தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். “கடந்த வருடம் வரை எங்கள் நிழலை வைத்தே யார் என்பதை பாட்டி கண்டுபிடித்து
விடுவார்கள். இப்போது அவர்களால் அது முடிவதில்லை.” தங்கம் அக்கா சொன்னாள்.

“அறுவை சிகிச்சை செய்தால் பார்வை வந்துவிடும். உங்கள் வயதில் உள்ளவர்கள் செய்து கொள்கிறார்கள். வேண்டுமென்றால் நான் உங்களை மதராசுக்கு அழைத்துச் செல்கிறேன்.”

பெரியம்மா வேதனையாகச் சிரித்தாள்.

“வேண்டாம்,வேண்டாம்.எதற்கு எனக்கு பார்வை வேண்டும்? நிறையப் பார்த்தாகி விட்டது பெண்ணே!”

சுதா எழுந்தாள்.

“இங்கேயே மதியச் சாப்பாடு சாப்பிடலாமே” தங்கம் அக்கா சொன்னாள்.

“இல்லை,வேண்டாம்.அம்மா சமைத்திருப்பாள்.”

“அடுத்த முறை கண்டிப்பாக வாருங்கள்.”

தங்கம் அக்கா உள்ளே போய் விட்டாள்.பதினான்கு வயதுச் சிறுமி மூங்கில் படல் வழியாக உள்ளே வந்தாள். பெரியம்மாவின் பார்வை முகப்பிற்குப் போனது. சிறுமி வராந்தாவில் காலணிகளை கழற்றி வைத்து விட்டு, சுதாவைப் பார்த்து சிரித்து விட்டு சப்தமின்றி உள்ளே போனாள். அவள் கதவருகே போன போது “நீ எங்கே போயிருந்தாய்?” பெரியம்மா கேட்டாள்.

“சாரதாவிடம் புத்தகம் வாங்கப் போயிருந்தேன்” நடுக்கத்தோடு சிறுமி பதில் சொன்னாள்.

“பட்டுப் பாவாடையில் தான் அங்கு போக வேண்டுமா?”

சிறுமிக்கு’முகம் வியர்த்தது.

“அவள் கையில் புத்தகம் இல்லை.சரிதானே ?” பெரியம்மா சுதா பக்கம் திரும்பிக் கேட்டாள்.

“இல்லை,அவளிடமில்லை.”

“சலசலப்பு கேட்டவுடனே எனக்குத் தெரிந்து அது பட்டுப் பாவாடை தானென்று.”

“அவள் சின்னக் குழந்தைதானே?’

வயதுக்கு மீறிய வளர்ச்சி அவளுக்கு.என்னால் பார்க்க முடிகிறது..”

“நான் கிளம்புகிறேன்.”

பெரியம்மா எழுந்தாள்.

அம்மா சொன்னது நினைவுக்கு வர, மெதுவாக கையிலுள்ள பர்ஸைத் திறந்தாள்.

“நீ எனக்கு கொஞ்சம் பணம் தரப் போகிறாய். வேண்டாம். பெரியம்மாவிற்கு என்ன தேவை இருக்கிறது?’

சுதா பர்ஸை மூடினாள்.

“நீ வரும்போது… அடுத்த முறை வரும்போது..” பெரியம்மாவின் குரல் உடைந்தது. “நான் உயிரோடிருந்தால் என்னை வந்து பார்க்க வேண்டும். அதுதான் நான் கேட்க விரும்புவது.”

பெரியம்மாவின் கண்கள் நிரம்பியிருந்தன. அவள் கண்களிலும் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் பெருகியது.

குனிந்து பெரியம்மாவை வணங்கினாள். ஐந்தாண்டுகளுக்கு முன்னால் இதே மாதிரி செய்தது ஞாபகத்திற்கு வந்தது.

சுதாவின் வணங்கிய தலையை மென்மையாகத் தொட்டாள்.

“இந்த முறையாவது நன்றாக இருக்கட்டும்.”

அவள் வெளியே வந்தாள். மார்க்கெட் அருகே வந்தபோது தொலைவில் எஸ்.டி.டி. பூத் பலகை கண்ணில் பட்டது.

இரண்டு தொலைபேசி எண்களையும் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். அழைப்பதற்கு முன்னால் அவள் தன் நோட் புத்தகத்தில் உள்ள அந்த மொபைல் எண்ணைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
அந்த அழைப்பிற்குப் பிறகு, அவள் சீக்கிரம் வீட்டிற்குப் போனால் முற்றத்திற்கு வருகிற அந்த காட்டுக் கோழியையும்,அதன் குஞ்சுகளையும் தவறாமல் பார்க்க முடியும். அவள் வேகமாக நடக்கத் தொடங்கினாள்.
—————————————-
நன்றி : : KUTTIEDATHI AND OTHER STORIES, ORIENT BLACK SWAN PVT LTD

(மலையாள இலக்கிய உலகின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான எம்.டி.வாசுதேவன் நாயர் சிறுகதை,நாவல்,பயண இலக்கியம், இலக்கியத் திறனாய்வு,குழந்தை இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் பங்களிப்புச் செய்தவர்.திரைப்படத் துறையிலும் சாதனை நிகழ்த்தியவர். மஞ்சு,காலம்,ரண்டாம் மொழம் ஆகியவை சிறந்த நாவல் வரிசையிலும் வானப்பிரஸ்தம், ஓளவும் தீர்வும், பந்தனம், குட்டியேடத்தி உள்ளிட்டவை சிறுகதை வரிசையிலும் சிறப்பானவையாக மதிப்பிடப்படுகின்றன. வயலார், வள்ளத்தோள், எழுத்தச்சன் விருதுகள், மற்றும் சாகித்ய அகாதெமி, ஞானபீடம் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.)

 

 

 

பேசுகிற கலப்பை -மலையாளம் மூலம்- பொன்குன்னம் வர்க்கி [ 1910 –2004] ஆங்கிலம் : நாராயண மேனன் தமிழில் : தி. இரா. மீனா

தி. இரா. மீனா

காளை என்று வருகிற போது, அவுசுப் சேட்டன் எல்லாவற்றையுமே மறந்து விடுவார். மற்ற விவசாயிகள் அவரை ’காளை பைத்தியம்’என்று அழைப்பார்கள். கண்ணனைப் பார்த்து அதியசப்படாத ஒரு விவசாயிகூட இல்லை. கண்ணன்தான் அவரது வாழ்க்கை. சாம்பல் நிறம், உறுதியான உடல்கட்டு, குள்ளம், வளைந்த கொம்பு, வடிவான கூனல், விரைப்பான தோல், பெரிய கண்கள், கண்ணனின் நடைகூட விசேஷமானதுதான். நடவு வயல், மற்றும் பிற இடங்களிலும் அவுசுப்பின் மனதில் என்ன இருக்கிறதென்பதைச் சிறிதும் சந்தேகமின்றி கண்ணன் புரிந்து கொள்வான். கருவிப் பட்டறை அல்லது வயல்வெளி என்று எந்த இடமாக இருந்தாலும் அவுசுப்பின் மனதில் என்ன ஓடுகிறதென்பது கண்ணனுக்கு நன்றாகத் தெரியும்.

கண்ணன் மேல் ஒருபோதும் அவுசுப் சாட்டையைப் பயன்படுத்தியதில்லை. அதை லேசாக உயர்த்துவார். மற்ற விவசாயிகளைப் போல, குரலுயர்த்தி தன் காளையை அழைப்பது, அது இது என்றெல்லாம் அவர் செய்ததில்லை. ஒரு சிநேகிதனிடம் பேசுவதைப் போலத்தான் அவர் கண்ணனிடம் பேசுவார். எவ்வளவு காளைகள் இருந்தாலும், அவைகளுக்கு கண்ணன்தான் தலைவன். வயலின் ஒரு பகுதியை உழுத பிறகு, அடுத்த பகுதிக்கான தூண்டுதல் அவனுக்குத் தேவையில்லை. அவை எப்படி, எப்போது செய்யப்பட வேண்டுமென்று அவனுக்குத் தெரியும். சில சமயங்களில், அடுத்த வயலுக்குள் அவன் காலெடுத்து வைக்கும் போது, அவுசுப் அவனிடம் ஓய்வு வேண்டுவார். “ஏய், கொஞ்சம் பொறு. நான் வெற்றிலை போட்டுக் கொள்கிறேன். போட்டு ரொம்ப நேரமாகிவிட்டது.”

அதைக் கேட்டவுடன், கண்ணன் நின்று விடுவான். வெற்றிலை போட்டுக்கொண்ட பிறகு, ’ஹூம்’ என்று அவுசுப் குரல் கொடுக்க,கண்ணன் மீண்டும் வேலையைத் தொடருவான். வயலின் ஒரு பகுதியில் இருந்து அடுத்த பகுதியில் கால் வைக்கும் போது எவ்வளவு கவனமாக அவன் வரப்பைக் கடப்பான்! அவனுடைய குளம்புகள் வரப்புகளில் பதியாது. ஒரு குதியலில் அவைகளை எப்படிக் கடப்பதென்ற கணக்கு அவனுக்குத் தெரியும்.

தன்னிடம் சொல்லப்பட்டவற்றை அவன் நன்றாகப் புரிந்து கொண்டிருப்பதால் அவனைக் கட்டிப் போட வேண்டிய அவசியமில்லை. உழவு வேலை முடிந்த பிறகு, சுதந்திரமாக மேய அவன் அனுமதிக்கப்படுவான். அப்படிச் சுதந்திரமாக விடும்போது அவுசுப், “போய் ஏதாவது சாப்பிட்டு உன் வயிற்றை நிரப்பிக் கொண்டு வா. வாழை மரங்கள் மீது கண் போடாதே,” என்று எச்சரிக்கை செய்வார். கடும் உழைப்போடும் கவனத்தோடும் பயிரிடப்பட்டிருக்கும் வாழை மரங்கள் அல்லது இளம் தென்னங் கன்றுகள் ஆகியவற்றை கண்ணன் ஒரு போதும் தொட மாட்டான். அவற்றை அழிப்பதென்பது, அதைப் பயிரிட்டவர்களை கொம்புகளால் முட்டுவதை விடக் கொடுமையானதென்று அவனுக்குத் தெரியும். அன்றைய உழவு வேலை முடிந்ததும், உடலில் இருக்கும் சேறு போகும்படி அவுசுப் தவறாமல் அவனைக் குளிப்பாட்டுவார்.

“இடது காலை இந்தப் பக்கம் உயர்த்து — ஏன் தலையை அசைத்துக் கொண்டேயிருக்கிறாய்? இங்கே பார், உன் கொம்புகள் என்னைத் தொட்டால் என்ன செய்வேன் என்று உனக்குத் தெரியும்! அசையாதே , பேசாமலிரு…”

அவுசுப்பின் ஒவ்வொரு வார்த்தையையும் கண்ணன் புரிந்து கொள்வான். ஆனால் கண்ணனுக்கு குறிப்பாக இந்தப் பேச்சு பிடிக்காது. குளிப்பதை அவன் வெறுத்தான். ஆனால் அவுசுப்பை பிடிக்கும் என்பதாலேயே அவன் பேசாமலிருந்து விடுவான். அன்பாலும் அரவணைப்பாலும் மனங்களை கவரத் தெரியாதவர்கள், “மோசமான எந்தக் காளை மாட்டை அவுசுப்பிடம் விட்டாலும், அவர் கையால் தரும் ஒரு வேளை உணவைச் சாப்பிட்டுவிட்டு, அது ஒரு வித்தியாசமான மாடாகி விடும்.” என்று சொல்வார்கள். அவர் அவைகளிடம் மிக இயல்பாகப் பேசுவார். தன் காளைக்காகத் தீவனம் தேடியலைவதிலேயே நாளின் பெரும்பான்மைப் பொழுது போய்விடும். கால்நடைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த தடுப்புச் சட்டம் பற்றிப் பேசினால், அவர் தன் பொறுமையை இழந்து விடுவார். ”கால்நடைகளைக் காப்பாற்றுங்கள், நாம் கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று எல்லோரும் வகுப்பெடுக்கின்றனர். எந்தச் சபையிலிருந்தாவது அரசாங்கம் ஒரு பிடி அரிசியையாவது கொடுக்கிறதா? உங்கள் கால்நடைகளை உங்கள் தாடியால் காப்பாற்ற முடியுமா? ” என்று கேட்பார்.

கண்ணனுக்கு தீனி கொடுத்து முடித்த பிறகுதான் அவுசுப்பின் பசி தணியும். கால்நடைகள் பசியோடிருந்தால், குடும்பம் அழிந்து விடும் என்று நம்பினார். மரவள்ளியின் தண்டை கண்ணனுக்குக் கொடுக்கும்போது அதை நன்றாக மசித்த பிறகுதான் கொடுப்பார். அல்லது, அன்னாசி கொத்தைக் கொடுக்கும் போது முட்களை நீக்கி விட்டு, இலைகளைத் துண்டுகளாக்கிக் கொடுப்பார்

வயலில் சுற்றித் திரிந்து விட்டு கண்ணன் காம்பவுண்டிற்குள் நுழைந்த கணத்தில் “ஏ, கண்ணா” என்று குரல் கொடுத்தால், அவரது குரலைக் கேட்ட நொடியில் அங்கேயே நின்று விடும். அவுசுப் தன்னருகே வரும்வரை தலையைத் நிமிர்த்திக் கொண்டு காத்திருக்கும். கை நிறைய பசும்புல் அல்லது இரண்டு மூன்று வாழைப்பழத் தோல் –இப்படி ஏதாவது சின்ன பரிசோடு அவுசுப் அவனருகில் போவார். அன்பாக நீவி விடும் போது கண்ணன் அவரை நக்கத் தொடங்குவான். அந்த உப்பான வியர்வை கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானது.

எந்தக் கூட்டத்திலிருந்தாலும் அவுசுப்பின் குரல் கண்ணனுக்குக் கேட்டுவிடும். அதைக் கேட்டவுடன் இடியோசை கேட்ட மயிலாய் குதூகலிப்பான். வயலில் அவுசுப்தான் கலப்பை ஓட்ட வேண்டும் என்று விரும்புவான். அவுசுப் தவிர மற்றவர்கள் வந்தால் தன் கைவரிசையைக் காட்டுவான். அதைத் தடுப்பதற்கு, அவுசுப் வந்துதானாக வேண்டும்: “வேண்டாம் கண்ணன், இது நம்முடைய குட்டப்பன்தான். உனக்கு அவனைத் தெரியாதா என்ன?” என்று அவுசுப் சமாதானப்படுத்துவார். வயல்களில் ஓர் ஆலாபனை–வார்த்தைகளோ அல்லது வாக்கியங்களோ இல்லாத ஆலாபனை. அவுசுப் வானத்தை எட்டுமளவிற்கு குரலை உயர்த்தி அழகாகப் பாடுவார் :“ ஹோ… ஓ…ஓ… ஒன்றிரண்டு நிமிடங்கள் அந்த மெல்லிசை மிகத் தெளிவாக நிற்கும். அது, காதல் பாடல்களிலிருக்கும் இன்னிசை போல இருக்கும் குறிப்பாகச் சொல்லப் போனால் அது தெய்வீகமான பாடல் அல்லது ஆயர்பாடி இன்னிசையாக இருக்கும்.அவுசுப் பாடத் தொடங்கும் போது, கண்ணன் தன் நோய், வேதனை, வேலை எல்லாவற்றையும் அந்த இசையில் மறந்து விடுவான்.

கழுத்தில் இருக்கும் மணிகளும், குளம்புகளும் மண்ணில் புதைந்து தாளத்தை ஏற்படுத்தும். ஒரு நாள் வேடிக்கையான சம்பவம் ஒன்று நடந்தது. லேசான காய்ச்சல் இருந்ததால் அவுசுப் வீட்டில் படுத்திருந்தார். அவுசுப்பின் காளை மாடுகள் இல்லாமல் அண்டை வீட்டு பச்சனால் அன்று தன் வயலில் வேலை செய்ய முடியாது. அதனால் அவுசுப் கண்ணனையும், அவன் துணையையும் அனுப்பியிருந்தார். கண்ணனும், அவன் துணையும் மற்ற காளைகளோடு வயலுக்குள் நுழைந்தனர். பச்சன் ஒரு சுற்று உழுது முடித்துவிட்டான். இரண்டாவது சுற்றை ஆரம்பித்தவுடன் பச்சனுக்கு பாட வேண்டுமென்ற ஒரு வேகம் வந்து விட்டது; கண்ணனின் பின்னாலிருந்து ஒரு ராகத்தின் ஆலாபனையை ஆரம்பித்தான். இசை பற்றியெதுவும் தெரியாத அவனுக்கு ஏன் பாடவேண்டுமென்ற ஆசை வந்தது ?அவனுக்குப் பாடவேண்டும் என்ற ஆசை. அவ்வளவுதான். பரிதாபமாக அந்த இசை தொடங்கியவுடன், கண்ணனுக்கு வெறுப்பு வந்துவிட்டது. தன் எதிர்ப்பைக் காட்டுவதற்காக ,தன் தலையை இரண்டு புறங்களிலும் வேகமாக ஆட்டினான். பச்சன் இதை கவனிக்கவேயில்லை; அவன் தான் நன்றாகப் பாடுவதாக நினைத்துப் பாடிக் கொண்டிருந்தான். இசையைப் பொறுத்தவரை, தாங்கள் எவ்வளவு மோசமாகப் பாடுகிறோம் என்பதைக் கலைஞர்கள் உணர்வதில்லை. வெளிப்படையாகவே கண்ணன் தன் வெறுப்பைத் தொடர்ந்து காட்டிய போதும் பச்சன் பாட்டை நிறுத்தவில்லை. பச்சனின் நண்பர்களைப் பொறுத்தவரை, உலகத்தின் எல்லா ராகங்களும் அவர்களுக்கு ஒன்றுதான். கண்ணனுக்கு எந்த அனுதாபமும் அவர்களிடமிருந்து இல்லை. பச்சன் இசையை அவமதித்து விட்டான், கண்ணன் அவனது இடது காலில் ஓங்கி ஓர் உதை உதைத்தான். மூன்று நாட்கள் அந்தக் கலைஞன் வீட்டிலிந்து ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று.

பன்னிரண்டு வருடங்கள் கண்ணன் ஓய்வின்றி அவுசுப்பிற்காக உழைத்தான். பல வசந்தங்களும், இலையுதிர் காலங்களும், பனியும், குளிரும் என்று பல பருவங்கள் வந்து போயின. வீராப்புடன் தங்களைக் காட்டிக் கொள்ளும் வகையில் அரசாட்சி செய்தவர்களின் மகுடங்கள் பிரஜைகளின் முன் கீழே விழுந்தன. நம்பமுடியாத மாற்றங்கள் ஏற்பட்டன. அரசின் புதிய அமைப்பில்— மனிதன் மனிதனைச் சுரண்டக்கூடாது –என்பது போன்ற மகிழ்ச்சியான வாசகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தன் அன்புக்குரிய காளைகளை விற்க அவுசுப்பிற்கு சில கட்டுப்பாடுகளிருந்தன. ஏற்கனவே தன் அதிர்ஷ்டத்திற்குரிய நெல் வயலை அவர் அடமானம் வைத்திருந்தார். அதை விருப்பப்பட்டு வைக்கவில்லை. வேறு வழியில்லை, ஒரு தகப்பன். திருமண வயதைக் கடந்து விட்ட மகளின் அன்புத் தந்தை. மாப்பிள்ளை வீட்டார் ஏழையாக இருந்த போதும் மூவாயிரம் ரூபாய் வரதட்சணையாகக் கேட்டனர், தன் வயலை ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு அடமானம் வைத்து, வரதட்சணையைச் சமாளித்தார். ஆனால் திருமணச் செலவுகளுக்கு அதிகப் பணம் தேவையாக இருந்தது. அதனால் தனக்கு மிக அருமையானவைகளாக இருந்த காளைகளை விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் போனது.

இருபது வருடங்களாக கடுமையாக உழைத்த, நன்கறியப்பட்ட விவசாயி. ஆனால் என்ன பயன்? முடி நரைத்து விட்டது. கண் பார்வை மங்கிவிட்டது. எந்தக் கத்தியும் சதையைத் துளைக்க முடியாத அளவிற்கு அவர் கைகள் உழைப்பால் உரமேறியிருந்தன. சுருக்கங்கள். வாத நோய் சார்ந்த தொல்லைகள். அவரால் என்ன செய்யமுடியும்? ஐயாயிரம் ஆண்டு பழமையான நிலத்தில் அவர் உழைத்துக் கொண்டிருந்தார். மண் வளம் இழந்து விட்டது. எந்த உரமுமில்லை. கடைசியில் அவுசுப் ரிக் வேத பாடல்களின் நிலைப்பாட்டை நாடினார். தன் நிலத்தைக் காக்குமாறு மேகம், தண்ணீர், மலை, காற்று என்று எல்லா கடவுளரையும் வேண்டினார். பயனற்றுப் போன அந்த நீண்ட கால வழிபாடுகளிலிருந்து அவர் இன்னும் மீட்சி அடையவில்லை. ஆனால் கடைகள் அதிகரித்ததால் சுரண்டல்களின் வழியும் பலவாயின. இவ்வாறு அவரை அவமதிக்கும் நிகழ்வுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போனது.

கண்ணனை விற்ற போது அவுசுப் அந்த இடத்தில் இல்லை . விலைப் பத்திரத்திற்கான கட்டணத்தைப் பெறவேண்டியிருந்த போதிலும் அவர் கண்ணீரோடு அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார். எவ்வளவு பணம் தந்தாலும் நிறுத்த முடியாத அழுகை அது. அந்த இடத்தை விட்டுப் போவதையே கண்ணன் வெறுத்தான். தன் தலையைத் தூக்கி தன் எஜமானன், தன் வாழ்க்கையின் வாழ்க்கையானவன் அங்கிருக்கிறானா என்று சுற்றிலும் பார்த்தான். ஏதோ தவறாக இருக்கிறதென்னும் பாவனையில் ஒன்றிரண்டு முறை தலையைக் குனிந்து கொண்டான். அந்த நேரத்தில் பலா மரத்தினடியில் நின்று, அவுசுப் அமைதியாக வார்த்தைகளின்றி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார். வார்த்தைகளையும், செயல் விளக்கங்களையும் அன்பு எதிர்பார்ப்பதில்லை. அன்பு, மனதின் துக்கம் என்பதை அவுசுப், கண்ணன் என்ற இருவர் போல யாரும் உணரமுடியாது. அவர்கள் தங்களின் துயரங்களை ஒருவரிடம் ஒருவர் சொல்லிக் கொள்ளவில்லை. அதனால் இரண்டு இதயங்களுக்குமே வலி மிக அதிகமாக இருந்தது.

தன்னுடைய சொந்த முகாமிலேயே ஆதரவற்றும், அவமதிப்பு செய்யவும் படுகிற ஒரு சிப்பாய் சில சமயங்களில் எதிரியைப் பார்க்க நேரிடலாம். தன் கிராமத்திலேயே கையற்றும் மதிப்பற்றும் போன சில விவசாயிகள் அறியாத, கேட்டிராத வயநாடு’ நிலங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தனர். உறவினர்களையும், நண்பர்களையும் அணுக முடியாத நிலை. மலேரியா தன் கொடுமையைப் பரப்பிக் கொண்டிருந்த நேரம். “இவற்றை எல்லாம் தெரிந்து கொண்ட பின்பும், உன்னை அங்கே போக நாங்கள் அனுமதிப்போமா அவுசுப்?” என்று கேட்டார் பக்கத்து வீட்டுக்காரரான கிட்டு சார். மலபாரைப் பற்றியும் அவுசுப் விசாரித்துக் கொண்டிருந்தார்.

“நான் என்ன செய்வேன் கிட்டு சார்? உயிரோட்டமான ஒரு சிறு நிலத்தை எனக்குத் தாருங்கள். மண்ணின் மணத்தை என்னால் சுவாசிக்க முடியாதெனில் ,என் மனம் சாம்பலாகிவிடும்,” என்றார்.

அவுசுப்பின் வாழ்க்கை, வேதனையான ஒரு வாழ்க்கை, சலித்துப் போன சிறகாய் நகர்கிறது. அவருடைய மலபார் பயணம் தினமும் தடைப்படுகிறது. அது மட்டுமில்லை, தன்னிடம் இப்போது இருக்கிற ஏழு சென்ட் நிலத்தையும் நல்ல விலைக்கு விற்க விரும்புகிறார். இன்னொரு பிரச்னை, அவுசுப்பின் மகள் கேத்ரி கர்ப்பிணியாயிருக்கிறாள். தன் முதல் பேரக் குழந்தையையும், அதன் பிஞ்சு முகத்தையும் பார்க்க அவர் ஏங்குகிறார். ஈஸ்டரும் வரப்போகிறது. ஏழ்மையான கிறிஸ்தவர்களின் வீடுகளில் கூட இந்த நாள் மிக மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். ஒவ்வொரு அடுப்படியிலிருந்தும் சமைக்கப்பட்ட கறியின் அருமையான மணம் வெளிப்படும் நாள் இது. வாணலியில் பொரியும் அப்பங்கள், மயக்கம் தரும் வாசனையை எங்கும் பரப்பும். தேங்காய், கறிவேப்பிலை சேர்க்கப்பட்ட சூடான புழுக்கல் கறியின் மணம் எங்கும். இதுதான் மகிழ்ச்சி. இந்த நாளில் இவை இல்லாமல் கூட சில வீடுகள் இருக்கும். ஆனால் அவுசுப் எதற்காகவோ ஏங்கி அங்கே உட்கார்ந்திருந்தார். அருகிலுள்ள வயலில் யாரோ உழுது கொண்டிருந்தனர். உழவனின் அருமையான குரலையும் அவரால் கேட்க முடிந்தது. அது அவரது மனதை, ஒரு விவசாயியின் மனதை வருத்துவதாக இருந்தது. ஒட்டடை படிந்திருந்த, உயரத்தில் மாட்டியிருந்த தனது கலப்பையைப் பார்த்த போது நெஞ்சு கனத்தது. கண்ணனைப் போன்ற ஜோடிக் காளைகள், ஐந்தாறு ஏக்கர் நல்ல நிலம், இந்தக் கலப்பையின் பயன்பாடு இனி வாழ்க்கையில் அவருக்கு இன்னொரு முறை கிடைக்குமா ?அந்த மாதிரியான அதிர்ஷ்டமான நாள் தனக்குக் கிடைக்குமா என்று நினைத்தார்.

“எவ்வளவு நேரம் இப்படி இருக்கப் போகிறீர்கள்? நடந்தது நடந்து விட்டது. கோட்டயத்திற்குப் போகவேண்டாமா? மகளை அனுப்பி வைக்க வேண்டாமா? அப்பாவாக அதையெல்லாம் செய்ய வேண்டுமல்லவா?” மனைவி மரியா கேட்டாள்.

அடுத்த நாள் மகளை கணவன் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். அவளுக்குக் கொடுக்க வேண்டிய புது உடைகளை இன்னும் அவர் கொடுக்கவில்லை. கொடுக்க வேண்டாமென்பதில்லை; கையில் பணமில்லை. அவளுடைய மாமியாரும் நாத்தனார்களும் அவளைக் கிண்டலாகப் பேசுவார்கள். மகள்தான் தாயிடம் இதையெல்லாம் சொன்னாள். தாய் வீட்டிலிருந்து மூன்று துண்டு ஆடைகள், பாடிகள் அவளுக்குத் தர வேண்டும். மற்றவைகளை அவர் விட்டு விடலாம். அது பற்றி யோசிக்க வேண்டியதில்லை. அதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருந்த போது அதிர்ஷ்டம் ஒரு கோடாக அவர் பக்கம் வந்தது. மரியா தான் போட்டிருந்த இருபது ரூபாய் சீட்டோடு வந்தாள். அந்த சீட்டைக் கட்டுவதற்காக அவர்கள் ஒவ்வொரு அரிசியையும் மிக கவனமாகப் பயன்படுத்தி, தங்கள் வயிற்றைக் கட்டி வந்திருக்கின்றனர். மரியா அந்தப் பணத்தோடு அவரருகில் வந்தாள்.

அவரால் அதைச் செய்திருக்க முடியாது, ஆனால் அதை அவள் சாத்தியப்படுத்திவிட்டாள். கடைக்குப் போவதற்காக அவர் எழுந்தபோது, “அப்பா, ரவிக்கைத் துணி கொஞ்சம் கனமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்,” கேத்ரி எச்சரித்தாள்.

“நாம் இன்னும் நில வரி கட்டவில்லை. அதையும் கட்டி விடுங்கள்,” என்றாள் மரியா.

“நீ அரசாட்சியே செய்ய நினைப்பாய்,இதை வைத்துக் கொண்டு.” என்றார் அவுசுப்.

“நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், எனக்கு ஒரு துண்டு உடை வேண்டும். இடுப்பாடை கிழிந்து விட்டது,” என்றாள் மரியா.

“ஒன்று செய். நீயே போய் விட்டுவா. நான் அடுப்படியைக் கவனித்துக் கொள்கிறேன்.”

“அப்படியானால் உங்கள் தாடியையும் கொடுத்து விடுங்கள்,” என்று மரியா சொன்னாள்.

“ஆமாம், எனக்கு தாடி இருக்கிறது. ஆனால் கடன் தரும்படியான விவகாரம் எனக்குத் தேவையில்லை. உனக்கு தாடியிருந்தால், திருச்சபையில் நீ ஒரு ஆணைக் கூட விட்டு வைத்திருக்க மாட்டாய்,” என்று உறுமினார்.

குடையை கக்கத்துக்குள் வைத்து, தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு, இடுப்பில் வெற்றிலையைச் சொருகியபடி அவர் கிளம்பினார். ஈஸ்டர் கொண்டாட்டத்தின் உற்சாகமும், கலகலப்பும் கோட்டயத்தில் சிறிதும் குறைந்ததாயில்லை. கிறிஸ்தவக் கடைகள் எதுவும் திறந்திருக்கவில்லை. ஆனால் நிறைய துணிக் கடைகளிருந்தன. ஒன்றிரண்டு கடைகளுக்குள் போய் துணிகளின் தரத்தையும், விலையையும் விசாரித்தார்.

“கடவுளே ,என்ன விலை!” ஆடைகளின் மிக அதிகமான விலையைப் பார்த்த ஒரு முதியவரின் அபிப்பிராயம் இது. “எதுவாக இருந்தாலும் இரண்டு மூன்று கடைகளில் விசாரிக்கிறேன். ஓரணா குறைவு என்றாலும் அது எந்தக் கடையில் என்று யாருக்கும் தெரியாது,” என்று சொல்லிக்கொண்டே மற்ற கடைகளைப் பார்த்து நடந்து, மாநகராட்சிக் கட்டிடத்தின் கேட்டை அடைந்தார். அங்கே, கிணற்றுக்கு அருகே பல காளைகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றின் உடலிலுள்ள ஒவ்வொரு எலும்பையும் எண்ணி விடலாம். வாழ்வின் இறுதிக்கு வந்து விட்ட முதிய காளைகள்; முறிந்த வாலோடு சில ; பல வருடங்கள் கழுத்தில் வண்டியைச் சுமந்திருந்ததால் அந்த அடையாளங்களோடு சில; மிக வளைந்து விட்ட கொம்புகளுடன் சில; மனிதனின் அன்பை வாழும் உயிர்களிடம் வெளிப்படுத்தத் தெரிந்தவை சில- இம்மாதிரி இயல்புடைய காளைகள் இருந்ததை நம்மால் பார்க்கமுடியும். மாநகராட்சியின் கருப்பு முத்திரை ஒவ்வொன்றின் உடம்பிலும் சாவின் அடையாளத்தைக் காட்டுவதற்காக குத்தப்பட்டிருந்தது. அவைகளிடம் மிஞ்சியிருக்கிறவைதான் ஈஸ்டர் விழாவிற்கு கறியாகப் போகிறவை. முத்திரை குத்தப்படாத விலங்கைக் கொல்பவர்கள் மீது மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுத்தது.

எல்லாவற்றிற்கும் தலைமையான மாநகராட்சி பொது மக்களின் உடல்நலம் குறித்து கவனம் எடுத்துக் கொண்டதால் இந்தச் சோதனை கட்டாயமானதாக இருந்தது. இந்தச் சோதனையில் மனிதனுக்கு அபாயம் விளைவிக்கும் எந்த விலங்கையும் இரக்கமின்றி கசாப்புக் கடைக்காரர்கள் வெட்டித் தள்ளினார்கள். இந்த விஷயத்தில் அவுசுப் மாநராட்சிக்கு ஆதரவு தருபவர். துன்பத்திலிருந்து அவைகளை விடுவிப்பதான இந்தச் சாவு பெரும்பாலான காளைகளுக்கு மிகப் பெரிய நிம்மதி. அவைகளால் முடிந்தபோது நேரம் காலமின்றி உழைத்தன. பலவீனமாகும்போது, கொடூரமாகவும், முறைகேடாகவும் அவற்றின் விதி அமைகிறது. கொடுமைக்கும் , அவமதிப்புக்கும் ஆளாவதற்கு முன்னால் சாவு எவ்வளவு உயர்வானது! அங்கு நின்று அவைகளைச் சிறிது நேரம் பார்த்தபோது மனம் வலித்தது. மொத்தமாக நாற்பது தலைகள் இருந்தன, தர அடையாளத்திற்காக இன்னும் பல காளைகளை விவசாயிகள் கொண்டு வந்துள்ளனர். அவைகளை வேதனையோடு பார்த்துவிட்டு அவர் புறப்பட்டார்.

திடீரென அவுசுப்புக்கு நடுக்கமேற்பட்டது. நம்பமுடியவில்லை. தன் கண்பார்வைக் குறைவு தன்னை ஏமாற்றுகிறதோ என நினைத்தார். எலும்பும், தோலுமாக ஒரு விலங்கைப் பார்த்தவுடன் மனம் நலிந்து, கண் முன்னால் எல்லாம் இருட்டாய்த் தெரிந்தது. ஆமாம், அது கண்ணன்தான். நடுங்கிப் போனார்.

“கண்ணன்!” அடி நெஞ்சிலிருந்து கத்தினார். ஒரே குதியலாக அதனருகில் ஓடினார். ஆறுதலையும் அன்பையும் தருவதாக இருந்த குரல்.. அந்தப் பெரிய கட்டிடத்தின் முன்னால் கண்ணன் தலை குனிந்து நின்றிருந்தான். வாழ்வின் நடப்பு நிகழ்வு அவன் காதுகளில் எதிரொலித்தது. தலையைத் தூக்கிச் சுற்றுமுற்றும் பார்த்தான். “உனக்கு என்னை அடையாளம் தெரிகிறதா மகனே? நான் இப்படியான நிலையில் உன்னைப் பார்க்க வேண்டுமா?” அவுசுப் கண்ணனைத் தழுவி, அதன் உச்சியை நீவினார். அந்தக் கைகளின் ஸ்பரிசம் பட்டதும் அது வாலை உயர்த்தியது. வாயால் அழாமல், மனதால் அழுதது. கண்ணனின் உடலில் தர அடையாள விவரமிருக்கிறதா என்று பார்க்க விரும்பினார். ஆமாம், அதன் முன்னங்காலில், அது இருந்தது. அதை அழித்து விட விரும்பினார்.
ஆனால் நகராட்சியின் கருப்பு அடையாளத்தை அவ்வளவு சீக்கிரமாக அழித்து விட முடியாது.

வயிற்றுப் பகுதியில் சீழ் பிடித்த காயமிருந்தது. அதைச் சுற்றி ஈக்கள் மொய்த்தன.

“ஒரு காலத்தில் இந்தக் காளை உங்களுடையதாக இருந்ததல்லவா?’ கசாப்பு கடைக்காரர்களில் ஒருவர் கேட்டார்.

“நீங்கள்தான் அவனை இங்கு அழைத்து வந்தீர்களா ”அவுசுப் கேட்டார்.

“ஆமாம்.”

கண்ணன் தன் எஜமானனின் வியர்வை நிறைந்த உடலை நக்கினான். வாழ்வின் பெரும் பகுதியில் அந்த வியர்வையை அவன் குளிர வைத்திருக்கிறான். தனது கடைசி நேரத்திலும் அவன் வியர்வையை நக்குவான். அது அவனுக்குச் சுவையானது என்பதோடு மட்டுமல்லாமல் அவன் வாழ்வின் ஓர் அங்கமுமாகும். அந்த முதிய விவசாயியின் சூடான கண்ணீர் கண்ணனின் முகத்தில் விழுந்தது.

“நாம் போகலாம். நேரமாகி விட்டது. நான் இந்த இறைச்சியை கடையில் கொடுத்தாக வேண்டும்,” கடைக்காரர் மற்றொருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர்களில் ஒருவர், கண்ணனோடு சேர்த்து இரண்டு ,மூன்று காளைகளை கூட்டிச் சென்று விடுவார். ஆமாம், இன்னும் ஓரிரு மணி நேரத்தில் கண்ணன் ஈஸ்டர் விருந்துக்கு கறியாகி விடுவான்.

இருட்டிக் கொண்டிருந்தது. “விளக்கை ஏற்றுவதற்கு முன்னால் இந்த இடத்தைச் சுத்தம் செய்து விடு,“ என்று மரியா தன் மகளிடம் சொன்னாள். அவர்கள் அவுசுப்பின் வரவிற்காக காத்திருந்தனர்.

“அப்பா வர ஏன் இவ்வளவு நேரமாகிறது ?”மகள் கேட்டாள்.

“வேலையை முடித்துக் கொண்டு வருவார். வரட்டும்,” மரியா மகளை அமைதிப்படுத்தினாள்.

“அவர் கோட்டயத்திற்குப் போயிருந்தால் இதற்குள் திரும்பியிருக்க வேண்டும்,“ தனது புத்தாடைகளுக்காக காத்திருந்த மகள் பொறுமையின்றி பேசினாள். அவள் கண்கள் சாலையின் மேலேயே பதிந்திருந்தன. மரியாவின் கண்களும்தான். அவுசுப் வருவதாகத் தெரியவில்லை. விளக்கை ஏற்றினர்.

மகள் பார்த்து விட்டாள். “அப்பா, ஆமாம், அப்பாதான்,” மகள் உற்சாகமாகச் சொன்னாள். தான்தான் அப்பாவை முதலில் பார்த்தோம் என்று மகிழ்ந்தாள். அம்மாவும், பெண்ணும் ஒரே சிந்தனையில் நின்றனர்.

“அது அவுசுப்பா?” பக்கத்து வீட்டுக்காரரான மாத்யூ கேட்டார். அவர் ஒரு தையல்காரர். இன்றிரவிற்குள் மூன்று ரவிக்கைகளைத் தைத்தாக வேண்டும். கேத்ரி காலையில் கிளம்புகிறாள். எல்லாவற்றையும் இரவில் முடித்து விடவேண்டுமென்பதால் மாத்யூவும் தயாராக இருந்தார்.

தனது புத்தாடைகளைப் பார்க்க வேண்டுமென்று காத்திருந்த அந்தக் கண்கள் அவுசுப் கண்ணனோடு நுழைவதைப் பார்த்தன.

“ஆ.. அது கண்ணன்தான்,” கேத்ரி வியப்பாகச் சொன்னாள்.

“எங்கே புதுத்துணி? இதுதான் நீங்கள் வாங்கி வந்ததா?”மரியா கேட்டாள். கண்ணன் தனது பழைய இடத்திற்குப் போய் நின்றான்.

அவர்கள் பல கேள்விகள் கேட்டனர், குரல்கள் உயர்ந்து கொண்டே போயின. தாடையில் கை வைத்தபடி அமைதியாக அவுசுப் உட்கார்ந்திருந்தார்.மரியா விரக்தியோடு தலையை ஆட்டினாள். கேத்ரி துக்கம் தாங்க முடியாமல் அழுதாள். அவுசுப் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் உடல் வியர்வைக் குளமானது.

“அப்பா, நீங்கள் இப்படிச் செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” கேத்ரி அழுதுகொண்டே சொன்னாள்.

“மகளே,” குரல் தழுதழுக்க, “கண்ணனும் நீயும் எனக்கு ஒன்றுதான். கசாப்புக் கடைக்காரர்…” துண்டால் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். அந்த வாக்கியத்தை முடிக்க முடியவில்லை.

அந்த இரவு கொடியதான ஓர் இரவு. தூங்காமலே அவர்கள் இரவைக் கழித்தனர்.

பொழுது விடிந்தது. கண்ணனின் வயிற்றுப் பகுதியிலிருக்கும் சீழ் புண்ணிற்குத் தானே தயாரித்த மருந்தை எடுத்துக் கொண்டு அவுசுப் மாட்டுக் கொட்டகைக்குப் போனார். காளைகளுக்கான வியாதிகளுக்கு அது மிக நல்ல மருந்து. “உன் கால்களை நீட்டு, தலையைத் தூக்கு,” என்று படுத்துக் கொண்டிருந்த கண்ணனிடம் சொன்னார்.

“கண்ணன்!” கூப்பிட்டார். கண்ணன் இனி எழுந்திருக்கவே மாட்டான் . அவுசுப்பின் மனம் கரைந்தது. அவுசுப்பின் குடும்பம் அவரைக் காயப்படுத்துவதை அவனால் பொறுக்க முடியாமல் போயிருக்கலாம். இந்த உலகை விட்டு அவன் போக அது காரணமாக இருந்திருக்கலாம். கண்ணனின் உடல் ,நொறுங்கிப் போன அவுசுப்பின் மனம்… மேலே ஒட்டடை படிந்து கிடந்த கலப்பையின் மேலிருந்த ஒரு சிறிய பல்லி சோகமாக குரல் கொடுத்தது.
—————————————————————-

நன்றி : Contemporary Indian Short Stories Series 1,Sahitya Akademi

கவிதை, சிறுகதை,நாடகம், கட்டுரை திரைப்படம் என்று பல துறைகளில் பங்களிப்புச் செய்திருக்கும் பொன்குன்னம் வர்க்கி மலையாள இலக்கிய உலகின் மிகச் சிறந்த படைப்பாளியாக மதிப்பிடப்படுகிறார். சமூக அக்கறை, சமூக அநீதிக்கு எதிரான சமரசமற்ற எழுத்து இவருடையது என் விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர். வள்ளத்தோள், எழுத்தச்சன், லலிதாம்பிகா மற்றும் முட்டத்து வர்க்கி விருதுகளைப் பெற்றவர். நிவேதனம், தாகம், வெளியில் எனக்கு ஸ்தலமில்லை, பேசுகிற கலப்பை உள்ளிட்ட சிறந்த சிறுகதைகளை எழுதியவர்.
———————————————————————