மழைமாலைப் பொழுது

மு. முத்துக்குமார்

பக்கவாட்டில், பளிச்…பளிச்… என தொடுவான மின்னல் விட்டு விட்டு கருமேகங்களைத் துளைத்து வெட்டிச்சீரான இடைவெளியில் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. ஆங்காங்கே இருந்த, பூசிய வெள்ளை வர்ணம் மங்கிய, நாற்கரச் சாலை திட்டத்திலிருந்து தப்பிப் பிழைத்த சிமெண்ட் வீடுகளைப் போர்த்தியிருந்தன கருமேகங்கள். மங்கிய அந்த வெள்ளை வர்ண வீடுகளையும் பளிச்சென காட்டின அக்கருமேகங்கள். எந்நேரத்திலும் தன் எடை தாளாமல் பிய்த்துக் கொள்ளும் நிலையிலிருந்த சூல்கொண்ட அம்மேகங்களின் தவிப்பை பயணித்துக் கொண்டிருந்த வண்டியின் கண்ணாடி வழியே உணர்ந்தவனாய், தோளில் சாய்ந்திருந்த மனைவியின் சற்று மேடிட்டிருந்த வயிற்றைத் தடவினேன்.

பாமரனையும் கவிஞனாக்கும் அந்த மழைமாலைப் பொழுது பயணத்தில் என் தோளில் சாய்ந்திருந்தாள் காவ்யா. ஒரு வாரத்திற்கு முன் நான் கல்யாணம் செய்து கொண்ட, என் இரு வருட சென்னை வாழ்க்கையை என்னுடன் பகிர்ந்து கொண்ட காவ்யாவை முதன் முதலில் சந்தித்ததும் இதுபோலொரு ஷிபுயாவின் மழைமாலைப் பொழுதில்தான்.

நெரிசல் மிகுந்த ஷிபுயாவின் பளிங்குத் தெருக்கள் வானுயர் கண்ணாடி கட்டிடங்களை சீராக வெட்டி இருபுறமும் பிரித்து குறுக்கும் நெடுக்குமாக வார இறுதியின் மக்கள் திரளை ஏந்தி நீண்டு கொண்டே சென்றது. அத்தனை பேரின் முகங்களும் ஏதோவொன்றை அடையப்போகிற எதிர்பார்ப்பில் அங்குமிங்கும் பரபரத்துக் கொண்டிருந்தன.

பெரும்பாலும் கேளிக்கை மற்றும் உணவு விடுதிகளே அங்குள்ள தெருக்களின் இருபுறமும் நிரம்பியிருந்தன. நான்கு வருட ஜப்பானிய வாழ்க்கையில் டோக்கியோவிலுள்ள ஷிபுயாவின் இத்தெருக்கள் மிகப் பரிச்சயமாகியிருந்தன. ஆரம்ப நாட்களிலிருந்த ஆச்சரியமும் பிரமிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து இப்போது முற்றிலுமாக இல்லாமலாகியிருந்தது. இதற்கு இங்குள்ள தெருக்களின் ஒருமுகத்தன்மையும் ஒழுங்கும் ஒரு காரணமாயிருக்கலாம். இங்கிருந்து 5 கி.மீ தூரத்திலிருக்கும் கவாஸகி நகரை அப்படியே பிரதியெடுத்துக் கொண்டிருக்கிறது இந்த ஷிபுயா. ஒவ்வொரு 500 மீட்டருக்கும் தன்னை உருமாற்றிக் கொள்ளும் சென்னை தெருக்களின் பன்முகத்தன்மை இப்போது மிக ஆச்சர்யமாக இருக்கிறது.

“ஹேய் கதிர்…” என்று என்னைக் கண்டு கொண்ட சுரேஷை நோக்கி கையசைத்தவாறே புன்னகையுடன் நெருங்கினேன். அந்த மழைநெரிசலில், கவிழ்ந்திருந்த கருமேகங்களை கூர்முனை கொண்ட தடித்த ஊசியால் ஏந்தியது போலிருந்த பெரிய குடையோடு அவன் நின்றிருந்த உணவு விடுதியை அடைவதற்குள் நிறைய பேரிடம் ‘சுமிமா-சென்’ (மன்னிப்பு) கோர வேண்டியிருந்தது. விடுதிக்குள் நுழைந்து கருமேகக் குடைகளை மடக்கி அதிலுள்ள நீர் வழிவதற்கு வசதியாக இருந்த இரும்பாலான கூடையில் வைத்துவிட்டு, மழை மேலாடைகளையும் அதற்கென பிரத்யேகமாக உள்ள தாங்கிகளில் விட்டு விட்டு எங்களுக்கென ஒதுக்கப்பட்ட மூவரமரும் மேசையில் அமர்ந்தோம்.

இன்னொரு இருக்கை சுரேஷின் மனைவி டகுச்சிக்காக காத்திருக்க, பணிவான புன்னகையோடு எங்களை நெருங்கிய கருப்புடையிலிருந்த சிப்பந்தியிடம், எங்களுக்கான பானங்களையும் உணவையும் வரவழைக்கச் சொல்லி காத்திருந்தோம். தன் கையிலிருந்த கையடக்க மின்னணுக் கருவி வழியாக அவற்றை சமையலறைக்குத் தெரிவித்துவிட்டு, தன் முழங்காலுக்குச்சற்று மேலிருந்து இடுப்புவரை நீண்டுபின்னோக்கி கட்டப்பட்டிருந்த வெள்ளைத் துணியின் பாக்கெட்டிற்குள் மிக இலாகவமாக அக்கருவியைச் செருகி மாறாத அப்பணிவான புன்னகையுடன் விலகினார் அச்சிப்பந்தி.

விடுதியின் தரைதளத்தில் அமர்ந்திருந்த எங்களுக்கு அங்குள்ள இரைச்சலும் கூச்சலும் அறையெங்கும் பரவி முதல்தள கூரையில் முட்டிச்சிதறி ஒருவித ஆற்றலைத் தந்தன. வாரநாட்கள் முழுவதும் ஆழ்ந்த தியானத்திலிருப்பது போன்ற நிலைக்கு முற்றிலும் மாறான ஒரு சூழல். தன்னை முழுவதும் திரட்டி எதையாவது விவாதித்துக் கொண்டேயிருந்தார்கள். அனைவரின் மேசைகளிலும் மகிழ்ச்சியும் மதுவும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இதையெப்படி நம்மூரில் கலாச்சார சீரழிவு என்கிறார்கள் என்ற வியப்பு இங்கு வந்த நாள்முதலே உண்டு.

“என்ன கதிர்… வழக்கம்போல சுற்றுப்புறத்தை கூர்ந்து நோக்கலா? “

“இல்ல… சென்னைக்கு திரும்ப போயிடலாமான்னு நினைக்கிறேன்…” என்றதும் சுரேஷ் சற்று திடுக்கிட்டு முன்னகர்வதற்கும், கண்ணாடி கோப்பைகளில் நுரைததும்ப எங்களுக்கான பீர் கொண்டு வரப்படுவதற்கும் சரியாக இருந்தது. கோப்பையை பற்றிக்கொண்டு “சியர்ஸ்…” என்றதற்கு “கம்பாய்…” என்று ஜப்பானிய மொழியில் சொல்லிவிட்டு அதே திடுக்கிடலுடன் “ஏன் தீடீர்னு?“ என்றான்.

பேச எத்தனிப்பதற்குள் “ஹலோ கதிர்…” என்று கன்னக்குழி புன்னகையோடும், இடுங்கிய ஆர்வமான கண்களோடும் டகுச்சி எங்கள் மேஜையை நெருங்கினாள். நீண்ட தோள்பையை இலாகவமாகச் கழற்றி நாற்காலிக்கு மாற்றிவிட்டு அமர்ந்தாள். எனது பதில் புன்னகையை ஏற்றுக்கொண்டு, “மன்னிக்கனும்… வகுப்பு முடிய தாமதமாயிற்று,” என்றவாறு தனக்கான உணவுகளை வரவழைக்கச் சொல்லிவிட்டு “என்ன… ரொம்ப முக்கியமான விஷயம் பேசுறீங்க போல” என எங்களிருவரையும் நோக்கினாள்.

டகுச்சி ஒரு மொழி ஆராய்ச்சியாளர். இங்கு வேலைநிமித்தம் வரும் வெளிநாட்டவர்களுக்கு ஜப்பானிய மொழி கற்பிக்கும் ஆசிரியையும்கூட..தகுதியானவர்களிடமிருந்து முறையாக ஆங்கிலம் கற்றுக்கொண்டவள். சுரேஷூம் நானும் அவளிடம்தான் ஜப்பானிய மொழி கற்றுக் கொண்டோம். ஆனால் இதுவரை எனக்கு பேச வருவதில்லை. பேசும் தருணங்கள் வாய்க்கவில்லை, அல்லது வலிந்து வாய்க்கவிடவில்லை. இந்த விலக்கம் பொதுவாக எல்லா விஷயங்களிலும் உண்டு. இதுவே எந்த புதிய விஷயங்களோடும் ஒன்ற நீண்ட கால அவகாசத்தை கோரியது. செயலற்று சோம்பி்யிருப்பதைப் போலிருந்தது.

ஆனால் சுரேஷ் அப்படியல்ல. தான் வாழுமிடத்தோடு தன்னைக் கரைத்துக் கொள்ள தெரிந்தவன். இந்த நான்காண்டுகளில் ஒவ்வொரு வார இறுதியில் சந்திக்கும்போதும் ஏதாவது ஒரு ஆச்சரியத்தில் என்னை ஆழ்த்தி விடுபவன். ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் ‘தன்னம்பிக்கை மனிதர்கள் இறந்தவர்களுக்குச் சமம்’ என்ற வாக்கியத்தால் ஈர்க்கப்பட்டு அவருடைய சித்தாந்தங்களுக்கும் தத்துவங்களுக்கும் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தவன்.

அவன் அறையெங்கும் ஜெ.கியின் புத்தகங்கள் நிறைந்திருக்கும். எனக்கு எப்போதுமே அப்புத்தகங்கள் புரிந்ததில்லை. சுரேஷைப் பொறுத்தவரை அப்புத்தகங்கள் அவன் வாழ்விலிருந்த அச்சத்தின் கூறுகளை முழுமையாக கலைத்து அழித்தவை. ரோபாடிக் துறையில் அவன் எட்டிய உயரங்கள் பிரமிக்க வைப்பவை. ஆனால் தன்னுடைய அந்த கடந்த கால வெற்றிச் சுவடுகளை சுமந்தலைபவனல்ல. இதுவே அவனை ஒவ்வொரு நாளும் புதிய சுவடுகளைப் பதிக்க வைத்து தேங்காமல் முன்னகரச் செய்கிறது.

அறிமுகமான இரண்டாவது நாளே மிக இயல்பாக என்னோடு ஒட்டிக் கொண்டான். கடலைப்பருப்பை துவரம்பருப்பு என நினைத்துசாம்பார் செய்து கொண்டிருந்த எனக்கு சமையல் செய்ய கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல், ஒருநாள் நான் செய்த அசல் துவரம்பருப்புச் சாம்பாரை டகுச்சிக்கும் பரிமாறச் செய்து “ஒய்சி…” சொல்ல வைத்தான். புரியாமல் முழித்த என்னிடம், “அருமையான ருசி…” என்றாள் சுத்தத் தமிழில். “என் சாம்பாரும் உன் தமிழும் அவனின் கைங்கர்யம்,” என்றேன்.

ரோபோடிக் புரோகிராமராக இருந்தவன், தீடீரென அவற்றைப் பேசவைப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் இறங்கி வார்த்தைக் கட்டமைப்பு, அவற்றின் ஒலியமைப்பு மற்றும் இவையிரண்டும் சேர்ந்து உருவாக்கும் கருத்து அல்லது அர்த்தம் அல்லது பொருள் என டகுச்சியின் மொழியாராய்ச்சியில் மட்டுமல்லாமல் அவளுள்ளும் புகுந்து கொண்டான். கடந்த மூன்று வருடங்களாக அவளுடன் தன் அறையை பகிர்ந்து கொண்டவன் இரு வாரங்களுக்கு முன்தான் அவளைச் சென்னை அழைத்துச் சென்று தன் பெற்றோர் முன் கல்யாணம் செய்து கொண்டான். தம்பதிகளாக இப்போது தான் இருவரையும் முதன்முதலாகச் சந்திக்கிறேன்.

உணவு விடுதியின் அந்த இரைச்சல் மீண்டும் என் புலன்களை எட்டி நினைவுகளை கலைத்திருந்தபோது டகுச்சியிடம் நான் சென்னைக்கு திரும்பப் போவதைப் பற்றிச் சொல்லியிருந்தான் சுரேஷ். கூரிய முனை கொண்ட அந்த நீண்ட மரக்குச்சியில் முதலில் செருகப்பட்டு அடியில் எஞ்சியி்ருந்த கடைசி கோழி இறைச்சித் துண்டை தன் பற்களால் கவ்விக்கொண்டே, “உண்மையாகவா?” என்ற ஆச்சரியப் பார்வையோடு என்னை நோக்கினாள்.

“ரொம்ப அலுப்பு தட்ட ஆரம்பிச்சிருச்சு இங்க. நான் தேங்க ஆரம்பிச்சுட்டேன்” என்றேன்.

“நீ வேலை பார்க்கிற வங்கி திவாலாகப் போறதா?” என்றாள் சம்பந்தமேயில்லாமல்.

மென்று கொண்டிருந்த அந்த கடைசி இறைச்சித் துண்டை பருகிய பியரால் நனைத்துக் கொண்டே, “நீ ஏன் கதிர் எங்கள மாதிரி ஃப்ரீலேன்சரா மாறக்கூடாது?” என்று தொடர்ந்து கேள்விகளாக கேட்க ஆரம்பித்தாள்.

டகுச்சிக்கும், சுரேஷுக்கும் என்மேல் என்னைவிட அதிக நம்பிக்கையுண்டு. இருந்தாலும் எனக்கான இடம் இதுவல்ல என சில நாட்களாக தோன்ற ஆரம்பித்திருந்தது. டகுச்சி போன்ற ஒரு பெண் அருகிலிருந்திருந்தால் அல்லது சுரேஷ் போல இங்கு ஒன்ற முடிந்திருந்தால் என்ற எண்ணங்களும் கூடவே சேர்ந்து என்னை இயலாதவனாக காண்பித்து என்மேல் கழிவிரக்கம் கொள்ளச்செய்தன.

நமக்கு நெருக்கமானவர்களின் வெற்றி எவ்வளவுக்கெவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறதோ அதே அளவு பொறாமையையும், சில சமயங்களில் வெறுப்பையும் அளிக்கிறது. இவர்களோடு என்னை ஒப்பிட்டுப் பார்த்தால் நான் தேங்கியிருப்பவனாகவே தோன்றுகிறது. ஒருவகையில் இந்த ஒப்பீடு என்னை வளரத் தூண்டினாலும், இந்த ஒப்பீட்டுப் பிரமையிலிருந்து வெளிவரவே மனம் விரும்புகிறது.

டகுச்சியின் தொடர் கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்று தோற்று அங்கிருந்து கரைந்து நான் பேருறு கொள்ளும் கனவுகளில் மூழ்க ஆரம்பித்தேன்.

“இல்ல டகுச்சி. இப்போதைக்கு இந்தியாவின் நிதிச் சந்தை புதிதாக நிதி சம்பந்தமான தொழில் தொடங்குபவர்களுக்கு சாதகமாக உள்ளது. சில முதலீட்டாளர்களிடம் என்னுடைய திட்டங்களை பகிர்ந்திருக்கிறேன். மிகப் பெரிய வங்கிகளைப் புரட்டிப் போடும் திட்டமிது. பெரிய முதலீட்டாளர்களும் அரசாங்கமும் ஒத்துக் கொண்டால் மூன்றே மாதத்தில்என் சிறிய நிறுவனத்தை சென்னையில் தொடங்கி விடுவேன்”. சுரேஷ் கண்விரித்து, “அந்த திறந்த வெளி வங்கித் திட்டமா?” என்றதற்கு “ஆமாம்” என்று கண் சிமிட்டினேன்.

புரியாமல் முழித்த டகுச்சியிடம், “ஓலா மற்றும் உபேர் போன்ற நிறுவனங்கள் எப்படி கூகுளின் வரைபடத் தகவல்களை உபயோகித்து மக்களுக்கான வாடகைக் கார் சேவையை எளிமைப்படுத்தியதோ, அதுபோலத்தான் இதுவும் “ என்று ரத்தினச்சுருக்கமாக திறந்த வெளி வங்கித்திட்டத்தை விளக்கினான் சுரேஷ்.

“கூகுள் மாதிரி வங்கிகளும் தன் வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வார்களா?” என்றாள்.

“இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை வங்கிகளும் அரசாங்கங்களும் உணர்ந்துள்ளன.இது தகவல்களின் காலம். விளிம்பிலிருப்பவர்களும் மையமாகும் காலம்,” என்றேன்.

“இதெல்லாம் சாத்தியமா?”

“முடியும் டகுச்சி. மையத்திலிருப்பவர்கள், எப்போதும் அங்கேயே இருந்து கொண்டிருக்க முடியாது. விளிம்பிலிருப்பவர்கள், ஒருநாள் மையமாக மாறுவதுதான் ஜனநாயகத்தின் இயல்பு “ என்றேன்.

டகுச்சி சற்று குழம்பி தன் இடுங்கிய கண்களை மேலும் சுருக்கிக் கொண்டு, “ஆனால் கதிர்…” என்றவளை இடைமறித்து, “ஆனால், சமுதாயத்தில் மையம் என்ற ஒன்று இல்லாமல் போவதே கார்ல் மார்க்ஸின் கனவு” என்று அவளை மேலும் குழப்பி மகிழ்ந்தேன்.

மணி ஒன்பதைத் தொட்டிருந்நது. இரைச்சல் இன்னும் அதிகமாகியிருந்தன. டகுச்சியே உணவுக்கான தொகையைச் செலுத்த, மூவரும் வெளியே வந்தபோது தெருக்களில் நெரிசல் அதிகமாயிருந்தது. மழையும்கூட.

எதிர்பார்த்தபடியே கருமேகங்கள் தங்களின் மழைத்துளியை பிரசவிக்க ஆரம்பித்திருந்தன. வண்டியின் முகப்பு கண்ணாடியில் விழுந்த துளிகள் எதிர்த்திசைக் காற்றின் உதவி கொண்டு கண்ணாடியின் மேல்நோக்கி மீன்போல் நீந்த ஆரம்பித்தன. சற்றுநேரத்திற்கெல்லாம் மழைத்துளிகள் எடைமிகுந்து வேகமான மலையருவியாக வண்டியைச் சுற்றி சட.சடவென அறைய ஆரம்பித்து, காவ்யாவை அவளின் மேடிட்ட வயிற்றிலிருந்த என் கையை இறுகப் பற்றிக்கொள்ளச் செய்தது.

“கதிர் சூடா டீ சாப்பிடனும் போல இருக்கு…”

பெருமழைத் துளிகள் பட்டு வெடித்துக் கொண்டிருந்த சாலையிலிருந்து கண்களை அகற்றாமல்,
“அடுத்து வர்ற பெரிய கடைல நிப்பாட்டுரேம்மா” என்றார் ஓட்டுநர் பிரகாசம்.

“நன்றி பிரகாசம். ஆங்..கதிர்…சொல்ல மறந்துட்டேன். டகுச்சி கூப்பிட்டிருந்தா. மூணு வருஷமாச்சா எங்க நினைப்பு வர்றதுக்குன்னா”

”ம்ம்ம்… ஆமால்ல சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் நாம ஒன்னா தங்கியிருந்த அபார்ட்மெண்ட்டயே என்னோட கனவு திட்டமான திறந்தவெளி வங்கிக்கான நிறுவனமா மாத்தி, ஒரே வருஷத்துல பேர் வாங்கி, அதுக்குள்ள கர்ப்பமாயிட்ட உன்னை மீசையை முறுக்கிக் கொண்டும்; முகத்தை இறுக்கிக் கொண்டுமிருந்த நம்மிருவரின் பெற்றோரையும் சம்மதிக்க வைத்து கல்யாணம் பண்ணி… என இவ்வளவு செறிவான செயல்களோடு என் வாழ்க்கை இருந்ததில்லை. இந்த பரபரப்பில் சுரேஷும் டகுச்சியும் நினைவுக்கு வரவேயில்லை காவியா…”

“ஆனால் என்னால உன்னை முதன்முதலில் சந்தித்த அந்த மழைமாலைப் பொழுது சிபுயாவை மறக்கவே முடியவில்லை கதிர்’ என்றவளிடம், புன்னகைத்தேன்.

திடீரென மழையின் இரைச்சல் அடங்கி மனிதக்குரல்களின் இரைச்சல் பெருகியது. நானிருந்த சுற்றுப்புறம் தெளிவாக புலப்பட ஆரம்பித்தது. மடக்கி வைத்திருந்த குடையும், கழற்றி வைத்திருந்த மழை மேலாடையும் அங்கேயே இருந்தன.

டகுச்சியும் சுரேஷும் வெகு நேரமாக என்னையே உற்று நோக்கிக் கொண்டிருந்ததை கவனித்து இருக்கையிலிருந்து எழுந்து கொண்டேன்.

“என்னாச்சு கதிர்? நீ வேலை பார்க்கும் வங்கி திவாலாயிருச்சான்னு விளையாட்டா டகுச்சி கேட்டதற்கு, நீ ஏதோ ஒரு கனவுலகத்துக்குப் போயிட்ட…”

“ஆமாம் என் கனவுகளுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தேன்…”என்று சொல்லி இருவரையும் அணைத்து விடைபெற்று தெருவில் இறங்கினேன்.

மணி பத்தைத் தொட்டிருந்தது. கண்ணாடிக் கட்டிடங்களில் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் தெருக்களைப் பகலாக்க முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தன.நெரிசலும் மழையும் குறைந்திருந்த தெருக்களில் மிக நீண்ட வரிசையில் வாடகை டாக்ஸிக்காக நின்று கொண்டிருந்ததமிழ்ச்சாயல் கொண்ட அந்த இந்திய முகம், அறைக்கு திரும்பிய பின்னும் மனதைவிட்டு அகலமறுத்தது.உணவு விடுதியில் சாப்பிட்ட ஃபார்ஃபெல்லே வகை பாஸ்தா அவள் அணிந்திருந்த வெளிர் பச்சைநிற மழைமேலாடையில் அச்சிடப்பட்டிருந்த வண்ணத்துப் பூச்சிகளை ஞாபகப்படுத்தியது. சற்று அமிழ்ந்த மூக்கும், கண்களுக்கு கீழே அகன்றும் நாடிக்கருகில் சற்று ஒடுங்கியுமிருந்த அந்த கன்னங்களும், ஏனோ தெரியவில்லை திரும்பத் திரும்ப கண்முன் தோன்றிக்கொண்டே இருந்தன. அவள்தான் என் காவ்யா என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

2 comments

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.