மனிதம்

ஷ்யாமளா கோபு

முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் நின்று தலையை ஒழுங்காக வாரி பின்னலை இழுத்து கொண்டையிட்ட  இந்திரா நெற்றிப் பொட்டை சரி செய்து கொண்டாள். தரையோடு தளர்ந்திருந்த  கயிற்றுக் கட்டிலில் படுத்து அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான் அவள் கணவன் ராமலிங்கம். இன்று நேற்றா? கடந்த இரு வருடங்களாகவே.

அடுப்பு மேடையின் மீதிருந்த அலுமினிய வாளியை எடுத்து கூடைக்குள் வைத்தவாறே கணவனிடம் சொன்னாள் மனுஷி. “இங்கே பாரு. இதோ உனக்கு சாப்பாடு, பிளாஸ்கில் சுடு தண்ணி வெச்சிருக்கேன். அடுப்பில டீத்தண்ணி கிடக்கு. கங்கை அணைக்கலை. அதனால் சூடாகவே இருக்கும். எடுத்து குடிச்சிக்க. சாயங்காலம் பிள்ளைங்க வந்ததும் அதுகளுக்கும் ஆளுக்கு ஒரு கிளாஸ் டீத்தண்ணி குடு. நான் வெள்ளனே வந்துடறேன்”

“முதலாளிக்கு சாப்பாடு எடுத்துக்கிட்டியா?”

“அதான் நித்தியப்படி ஆச்சே”

“உனக்கு?”

“எடுத்துக்கிட்டாச்சு. மாத்திரை மருந்தை பக்கத்துல டப்பால வெச்சிருக்கேன் பாரு. மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு போட்டுக்க மறந்துடாதே”

“இது ஒரு கருமம்’

“ஏன்யா சலிச்சிக்கிறே?”

“பின்னே என்ன? இன்னும் எத்தனை வருஷம் தான் இந்த கட்டையை வெச்சிக்கிட்டு கிடக்குனுமோ”
“ஏன் நான் பூவும் பொட்டுமா இருக்கறது உன் கண்ணை உறுத்துதா?”

“அந்த ஒரு காரணத்துக்குத்தான் உசுரை கையில பிடிச்சிக்கிட்டு இருக்கேன்” என்றவனின் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது

.கையில் இருந்த தூக்குசட்டியை அடுப்படி மேடையின் மீது வைத்து விட்டு அவனருகில் வந்து அமர்ந்தாள் “ஏன்யா இப்படி பேசறே?” என்றாள் அன்புடன்.

“பிரவோசனம் இல்லாமல் போயிட்டேனே?” விசும்பினான்.

“பிரவோசனமா இருந்தவன்தானே நீ” என்று அவன் தலையை தன் மார்போடு அணைத்து முகத்தை வருடிக் கொடுத்தவள் “இந்த ஊரே மெச்சும்படி என்னைக் கல்யாணம் கட்டி ஆசை ஆசையாய் ரெண்டு பிள்ளையைப் பெத்து கவுரவமாத் தானே எங்களைக் காப்பாத்தினே”

‘இந்த ரெண்டு வருஷமா நீ என்னென்ன கஷ்டப்பட்டு நாலு ஜீவனுக்கும் கஞ்சி ஊத்தறே”

“அதுக்கு என்னய்யா பண்றது? உன்னாலே முடிஞ்ச போது நீ செஞ்சே. இப்போ உனக்கு முடியாம போகவும் நான் செய்யறேன். குடும்பம்னா அப்படி இப்படித் தான் இருக்கும்”

“ம்”

“அதை விட உன் அன்பு பெருசுய்யா” என்று அவன் முகத்தை வருடி திருஷ்டி சுத்தி நெட்டி முறித்தாள். அது படக்படக்கென முறிந்தது. ”பாரு. எம்புட்டு திருஷ்டி உனக்கு” என்று மெல்ல அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

“இன்னைக்கு ராவுக்கு முதலாளி வருவாரா?” கட்டிலில் எழுந்து உட்கார்ந்தவன், “வூட்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சே. அதான் கேட்டேன்” என்றான்.

“ரெண்டு நாளா மேலுக்கு முடியலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு”

“என்னவாம்?” என்றான் உண்மையான அக்கறை குரலில் தென்பட.

“நாக்குக்கு ஒன்னும் பிடிக்கலை. சரியா சாப்பிட முடியலைன்னு சொன்னாரு”

“அவருக்கு உனக்கையா சமைச்சிக் கொடு தங்கம்”

“உக்கும். அவருக்கு உனக்கையா சமைச்சிப் போட நான் என்ன அவரு பொண்டாட்டியா?”

“எனக்கு விபத்து ஏற்பட்டு இப்படி ஆன நாளில் இருந்து அந்த மனுஷனாலத் தான் நாம கஞ்சி குடிச்சிக்கிட்டு இருக்கோம்” என்றான் நன்றியுடன்

மண்டித் தெருவில் மூட்டைத் தூக்கும் தொழிலாளியான ராமலிங்கம், முதுகில் மூட்டை விழுந்து, முதுகெலும்பு முறிந்து, படுத்த படுக்கையான பின்,  அதே தெருவில் நாலைந்து கடைகளை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் வேலை செய்து வருகிறாள் இந்திரா. அதனால் இந்த நான்கு ஜீவன்களும் ஒரு வாய் உணவையேனும் உண்ண முடிந்தது. ஆனாலும் கணவனுக்கு போதிய வைத்தியமும் அதற்கேற்றாற்போல சத்தான ஆகாரமும் கொடுக்க இயலவில்லை அவளால். வளர்ந்து வரும் இரு பிள்ளைகளுக்கும் வயிறார உணவிட முடியாமல், உழைத்து களைக்கும் தன் பசி போக்கும் வகை தெரியாமல். அந்த பிள்ளைகள் பசியால் இழுத்துப் பிடிக்கும் வயிற்றை தடவியவாறு தூக்கம் வராமல் கிடக்கையில் அதைக் கண்டு எத்தனயோ இரவுகள் அழுகையில் கரைந்திருக்கிறாள் அவள்.  இன்னும் நான்கு வருடங்கள் கஷ்டப்பட்டு பிழைத்து விட்டால் மகன் வேலைக்கு போய் விடுவான். குடும்ப பாரத்தை சுமக்க தன்னோடு ஒரு தோள் கொடுப்பான். அதுவரை கண்ணிருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய் வாழத் தான் வேண்டும்.

மண்டித்தெருவில் முதலாளி ராஜேந்திரனுக்கு சிறு அரிசி கடை இருந்தது. முதலில் இவளுக்கு கடனுக்கு அரிசி கொடுத்துக் கொண்டிருந்தவர் ஒருநாள் தனக்கு சோறு ஆக்கித் தர முடியுமா என்று கேட்கவும், அவருக்கு கொடுக்க வேண்டிய கடனுக்குப் பதில் சோறு ஆக்கித் தர சம்மதித்தாள். இநத முதலாளியின் தயவால் இவர்கள் குடும்பம் வயிறார பசியாற முடிகிறது. சமயத்தில் வைத்திய செலவும், அவளுக்கு கிழிசல் இல்லாத நல்ல புடவைகளும் கூடத் தான்.

ஒருநாள் காயலாய் கிடந்த முதலாளியை மகனின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காட்டி விட்டு தங்கள் வீட்டில் கொண்டு வந்து வைத்துக் கொண்டார்கள் அவர்கள். பத்திய சாப்பாடும் விருந்தோம்பிய பண்பும் அவரை நெஞ்சை நெகிழ்த்தவே, தனிமை சலிப்பைத் தரும் பொழுதுகளில் இரவு  கடை மூடிய பின் இங்கே வந்து பேசிக் கொண்டிருப்பதும் வழக்கமாக இருந்தது. அலுத்துக் களைத்து வருபவருக்கு சுடச்சுட வெந்நீர் குளியலும் சூடான உணவும் அதுவும் குடும்பத்துடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்புகளும் உண்டு.

ஓரத்தநாட்டுப் பக்கம்  களக்காடு கிராமம் முதலாளிக்கு. தாய் தகப்பனற்று, தாய்மாமன் வீட்டில் எடுபிடியாக வளர்ந்தவருக்கு, காதலனை நம்பி வீட்டை விட்டு ஓடிப் போய் ஏமாந்து திரும்பி வந்த தன் மகளை மணமுடித்து கொடுத்தார் மாமன். தென்னை மரம் ஏறும் போது கால் தவறி கீழே விழுந்ததில் ஆண்மையற்றுப் போனவனை, வேலைக்கு ஆகாதவன் என்று வெறுத்த மனைவி. வீட்டை விட்டு இவரை துரத்திய மாமன் மனைவி, மகளுக்கு வேறு ஒருவனை மணமுடித்து வீட்டோடு வைத்துக் கொண்ட மாமன் என வாழ்க்கையே துரோகமாகவும் அவமானமாகவும் வேதனையாகவும்  முடிய இங்கே வந்து தனித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

‘ஆனாலும் இந்த முதலாளி நம்ம வீட்டுக்கு வராம இருந்தா தேவலை. இது மாதிர் வீண் பேச்சை கேக்க வேண்டியிருக்காது” என்று குறைப்பட்டுக் கொள்வாள் இந்திரா.

“நீ இல்லாத சமயங்களிலும் நம் வீட்டுக்கு வந்து என்னிடம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருப்பார். என்றோ இறந்து போன பெத்தவங்களை பற்றி சொல்லிக் கொண்டிருப்பார். உன்னைப் பார்க்கையில் அவர்  அம்மா மாதிரி இருக்கவே உன்னிடம் ஒரு மரியாதை இருப்பதாக சொல்வார்”

“உண்மை தான். என்னை ரொம்பவே மரியாதையாகத் தான் நடத்துவார் இங்கேயும் சரி. கடையிலும் சரி. மற்றவர்கள் எதிரிலும் சரி. மரியாதை தான். தாயி என்று தான் அழைப்பார்” என்றாள் அவளும் ஆத்மார்த்தமான நெகிழ்வுடன்.

ஒருநாள் முதலாளிக்கு காய்ச்சல் வந்தது. மருத்துவமனையில் சேர்த்ததில் அவருக்கு உயர் ரத்தக் கொதிப்பு என்றனர். கட்டுக்கடங்காத ரத்தக் கொதிப்பு கைகால்களை முடக்கிப் போட்டு விட்டது. இப்போது இவரை யார் பார்த்துக் கொள்வது என்று ஒரு கணமும் தயங்கி நிற்காமல் ராமலிங்கம் தன் கட்டிலை விட்டு இறங்கி அங்கே முதலாளியை படுக்க வைத்தான்.  இந்திரா தான் முதலாளிக்கும் பாடு பார்க்கிறாள். கணவன் கூடமாட உதவி செய்கிறான். இதற்கு பேர் என்ன சொல்வது?

இந்த உலகம் அவளை சோரம் போனவள் என்றாலும் சரி.  வீரபாகு அக்காவை கொடுத்து பேக்கரி வாங்கியதைப் போல ராமலிங்கம் பொண்டாட்டிய அனுப்பி அரிசி கடையை வாங்கிட்டான் என்று மற்றவர்கள் கேலி செய்தாலும் சரி. இது அவர்கள் வாழ்க்கை. அவர்கள் உலகம். அவர்கள் யாருக்கு பதில் சொல்ல வேண்டும்?

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.