தாத்தாவின் டைரி

கோவை ஆனந்தன் 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகிலிருக்கும் தனது கிராமத்திலிருந்த வானம் பார்த்தபூமி இரண்டரை ஏக்கர் நிலத்தில் மனைவியின் நகைநட்டையெல்லாம் அடமானம் வைத்து ஆழ்குழாய் கிணறு அமைத்தபோது ஆயிரம் அடி ஆழமாகியும் நீர் கிடைக்காமல் வரப்புகையாகவே போய்விட போட்ட பணத்தை நினைத்து இடிந்து உட்கார்ந்த முருகேசனிடம் “ஏங்க போனது போகட்டும் இதையே நினைச்சுட்டு இருக்காம என் அண்ணன் பொண்ணு பவித்ராவை நம்ம பையன் கோபிக்கு பொண்ணு கேட்காலாமானு இருக்கேங்க” என்றாள் மனைவி பார்வதி

“கையில காசுபணம் இல்லாதவங்க குடும்பத்துக்கு உங்க அண்ணன் எப்படி பொண்ணை தருவார்” என்ற கணவன் முருகேசனிடம் “அதைபத்தி நீங்க ஏன் கவலைபடுறீங்க எல்லாம் நான் பாத்துக்குறேன் கையில காசு பணமில்லாட்டியென்ன பையனைத்தான் நல்லா படிக்க வச்சுருக்கோமல்ல கூடிய சீக்கிரத்துல அவனுக்கு அரசாங்க வாத்தியார் உத்தியோகம் கிடைக்கபோகுது இதெல்லாம் தெரிஞ்சுருக்கற அவங்களுக்கென்ன கசக்கவா போகுது” என்றாள்

வறண்டுகிடந்த பூமியை விற்று கிடைத்த பணத்தில் திருமணமும் நல்லபடியாக முடிந்தது, மீதமிருந்த பணத்தில் இதுவரை தனியார் பள்ளியில் பணிபுரிந்த மகன் கோபிக்கு முக்கிய பிரமுகர் ஒருவரின் சிபாரிசால் கிணத்துக்கடவு அருகிலுள்ள குமாரபாளையம் கிராமத்தில் அரசுப்பள்ளியில் உத்தியோகம் கிடைக்க புதுமணத்தம்பதிகள் இருவரும் தருமபுரியிலிருந்து குடிபெயர்ந்தார்கள், இரண்டு வருடங்களில் இருவருக்கும் ஆண்குழந்தை பிறந்தது, திருவிழா பண்டிகையென விசேஷங்களுக்கு மட்டும் குழந்தையுடன் ஊருக்கு போய்வருவார்கள் இந்நிலையில் திடீரென ஒருநாள் வந்த போனில் கோபியின் அம்மா இறந்துவிட்டதாக தகவல்வர எல்லோரும் போய் இறுதி காரியங்களையெல்லாம் முடித்துவிட்டு ஊர் திரும்பினர்.

அப்போது ஒரே பள்ளியில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணியிலிருப்பதாக இடமாற்றம் செய்யப்பட்ட கடிதம் தயாராக இருந்தது, நீலகிரி மாவட்டத்தின் மசினக்குடிக்கு மாறுதல் செய்யப்பட்டிருந்ததால் அங்குநிலவும் சீதோஷ்ண நிலை குழந்தைக்கும் மனைவிக்கும் ஒத்துவராதென எண்ணி சொந்த ஊரில் அப்பாவுடன் இருக்கும்படி மனைவியையும் குழந்தையையும் விட்டுச்சென்றான் கோபி.

ஆரம்பத்தில் ஆறேழு மாதங்கள் நல்லமுறையில் ஒருதகப்பனை கவனித்துக்கொள்வது போல் சிறப்பாக கவனித்த மருமகள் பவித்ராவுக்கு அக்கம் பக்கத்திலிருக்கும் பெண்களின் நட்பு கிடைத்தபிறகு அவர்களோடு பேசும்போதெல்லாம் “என்ன பவித்ரா உன் மாமனாரை இப்படி விழுந்து விழுந்து கவனிச்சு பணிவடை செய்யுற, எதுக்கும் பார்த்துடி ஏன்னா எல்லாமுக்குமே ஒரு லிமிட்னு ஒன்னு இருக்கு, ஒருமருமகளா நீ அவரோட துணிகளையெல்லாம் துவைக்கிறது நல்லாவா இருக்கு, பெருசு அதோடதை அதே துவைக்காதா என்னோட மாமனாரு மாமியாருனு யாரோட துணியும் நான் துவைக்கறதில்லை” என்றாள் பக்கத்துவீட்டு கல்பனா

அதன்பிறகுதான் பிரச்சினையெல்லாம் தொடங்கியது.

வீட்ல சும்மாதானே இருக்கீங்க கடைக்குப்போயி அதை இதையென ஏதாவதொன்றை வாங்கிட்டு வரச்சொல்வதும் அதில் ஏதாவது குறை சொல்வதுமாயிருந்தவள், மாமனாரென இல்லை வயதில் மூத்தவரெனக்கூட நினைக்காமல் கால்மேல் கால்போட்டு வரவேற்பறை சோபாவில் உட்கார்ந்து கொண்டு அவ அம்மாவோடும் கணவனுடனும் செல்போனில் பேசுவதும் சிரிப்பதுமே வாடிக்கையானது, அடிக்கடி ஏதாவது ஒருபொருளை மறந்துவிட்டதாகவும் திரும்பபோய் வாங்கி வருமாறு சொல்லி அடிக்கடி வெயிலிலும் இருட்டிலும் கடைக்கு அனுப்புவதாகவே இருந்தாள், இதை விரும்பாத முருகேசன் ஊர்மத்தியிலிருக்கும் வேப்பமரநிழலில் மற்ற பெருசுகளுடன் சேர்ந்து பொழுதைக் கழிப்பார், பிறகு பள்ளியிலிருந்து வீடுதிரும்பும் பேரன் தர்சனை வீட்டுக்கு அழைத்துச்செல்வதும் அவனுடன் சிறிது நேரம் விளையாடி பொழுதை கழிப்பதே தினசரியானது.

தினமும் இரவு உணவுக்குபின் அந்தக்கால எஸ் எஸ் எல் சி முடித்தவரென்பதால் உள்ளூர் நூலகத்திலிருந்து எடுத்து வந்திருக்கும் ஏதாவதொரு நாவலை வாசிக்கும் பழக்கத்தோடு டைரிஎழுதும் பழக்கமும் இருந்தது. முன்னொரு நாள் மாமனார் இல்லாத வேளையில் டைரியை கையிலெடுத்தவள் பிறருடைய தனிப்பட்ட விடயங்களை படிப்பது அநாகரீகமென கருதி எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டாள், அப்பொழுது மாமனாரும் வந்துவிட அறையை சுத்தம் செய்பவளைப்போல வெளியே வந்துவிட்டாள் அதன்பிறகும் அந்த டைரி அதே இடத்தில்தான் இருந்தது,

சேவல்கள் கூவும் அதிகாலைப்பொழுதில் முத்தண்ணன் தேநீர் கடைமுன் முதல் ஆளாய்சென்று “முத்து” என லேசாக குரலெழுப்பியதும் தூக்கக்கலக்கத்தில் கண்களை கசக்கிக்கொண்டு நடைதிறந்த முத்துவிடம் கேட்காமலேயே தேநீர் கொண்டுவந்து தருவார், அப்பொழுது ஊருக்குள்ளிருக்கும் எல்லா நரை நட்புகளும் அந்த தேநீர்கடை கூரையின்கீழ் கூடிவிடுகிறது. செய்திதாள்கள் வருமுன்னே உள்ளூர் செய்திகளத்தனையும் கரகரத்த குரலில் நெஞ்சிலிருந்து குத்திகிளறி வெளிவரும் வறட்டு இருமலோடு பக்கத்து நாற்காலியிலமர்ந்து பேசிக் கொண்டிருப்பார் மாரிமுத்து, காதில் விழும் எதையும் உன்னிப்பாக கவனிக்காமல் செய்திதாள்களிலேயே மூழ்கிகிடப்பார் முருகேசன்.

டி வியில் திரும்பதிரும்ப வந்து மறையும் விளம்பரங்களைபோல பத்துப்பிறைகள் கண்டு பெற்ற ஆண்பிள்ளைகளின் இயலாமையால் பலவீடுகளில் பெற்றோர்களின் சுதந்திரமும் புன்னகையும் பறிபோனது மருமகள்களின் சர்வாதிகாரங்களால்தான் என சாவை எதிர்பார்த்துக்கிடக்கும் கிழடுகளெல்லாம் தங்களுக்கேற்படும் அவமானங்களையும், தலைவிரித்தாடும் கொடுமைகளையும்பேசி புலம்பும்போது தன்கவலைகள் எதையும் யாரிடமும் சொல்லாமல் இன்னொரு குவளை தேநீரை பருகி அங்கிருந்து வெளியேறுகிறார்.

பேரப்பிள்ளையை பள்ளிப்பேருந்திலேற்றி வழியனுப்பி திரும்பும்வரை குழந்தையாகவே குதூகலித்த முருகேசனின் மனம் வீட்டுவாசல்படிகளை மிதிக்கும்போதெல்லாம் சற்றுமுன்னிருந்த சிலநிமிட குதூகலங்களோடு தொலைந்து போகிறது. கூண்டில் அடைத்துவைத்துள்ள ஜெர்மன்செப்பேடு நாயிற்கு வைத்திருக்கும் செல்லப்பெயரில் அதை அழைத்து ராஜஉபசரிப்பில் காலை உணவினை வைக்கும் மருமகளின் கைகளால்தான் நுரைக்குமிழ்கள் மிதக்கும் பழையசோற்றினை ஒடுங்கிய தட்டில் போட்டு திண்ணையின் ஓரத்தில் வைத்துவிட்டு எதுவும்பேசாமல் உள்ளே சென்றுவிடுகிறாள், வேறுவழியின்றி அதையெடுத்து தயக்கங்களோடு மறைவிடத்தில் நின்று உண்ணும் முருகேசனை யாரும் பார்த்திருக்க வாய்ப்பிவில்லை।

சுடான சாதம்கேட்டால் உலையிலிருக்கும் நீரைவிட வசவுகளால் கொதிப்பாளென கொல்லைப்புறத்திலுள்ள செடிகளின் மறைவில் பச்சைத்தண்ணியை மட்டும் சிலநாட்கள் குடித்து திரிவதை அடையாளப்படுத்துகிறது முருகேசனின் ஒட்டியவயிறும், தட்டிலிடும் அரிசிசோற்றில் சூடுபறக்கும் ஆவிகள் முன்கூட்டியே அவள்தரும் வேலைகளின் தந்திரத்தினை இரகசியமாய் சொல்லிவிடுகின்றன.

இந்நிலையில்தான் ஒருநாள் நூலகம் சென்றுவிட்டு வீடுதிரும்பிய போது, “என்னங்க உங்கப்பா தினமும் காலையில சாப்பிட்டதுமே அவருவயசுல இருக்குற பெருசுங்ககூட சேர்ந்துட்டு மரத்தடியிலியே போயி உட்கார்ந்திட்டு ஊர்கதை பேசிட்டு இருக்கார், வீட்டுல இருக்குற சின்னச்சின்ன வேலைகளைக்கூட எதுவுமே செய்யறதில்லை எல்லாமே நான் ஒருத்தியாவே செய்யவேண்டியதா இருக்கு பையனை ஸ்கூல் பஸ்ல ஏத்திவிடறுது வரைக்கும் நானேதான் செய்றேனென” பேசிக்கொண்டிருக்கும் போது வாசலில் மாமனார் நடந்து வரும் செருப்புசத்தத்தை கேட்டதும் பேச்சை மாற்றிக்கொண்டாள்

போன்காலினை துண்டித்துவிட்டு “இந்தாங்க ரேசன்ல சர்க்கரை பருப்பு போடுறாங்களாம் போயி வாங்கிட்டு வாங்க” என அட்டையும் வாங்கும் பொருளைபோட பையும் கொண்டுவந்து தந்தாள் மருமகள்பவித்ரா. உச்சிவெயிலில் நடந்துபோய் ரேசன்கடைவரிசையில் வியர்வைகள் வழிந்தோட சட்டைத்துணியும் நனைந்து தள்ளுமுள்ளில் சிக்கி மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்கி இருமணிநேரங்கள் கடந்து விரல்ரேகைகள் பதியும் எந்திரத்தின் அருகில்போய் நிற்கும்போது ஒவ்வொரு முறையும் தோல்வியுறுகிறது முருகேசனின் விரல் பதிவுகள் மட்டும். பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவனைப்போலவே பயத்தோடு வாசல்படிகளுக்குள் கால்வைத்ததும் சர்க்கரை வாங்கிடபோய் திரும்பியவர் காதுகளில் “ஊருல எல்லோருக்கும் விரல்ரேகை பதிவாகறப்ப உங்களுக்கு மட்டும் பதிவாகாதோ”என அச்சில்காணமுடியாத வார்த்தைகளால் செய்த அர்ச்சனையில் வாழும் வாழ்க்கையே கசந்தது

மருமகளின் முன் அழுதால் அவமானமாகிவிடுமென விழிகளில் குளமான கண்ணீரையும் கொல்லைப்புறத்திற்கே கொண்டுபோய் சேர்த்த முருகேசன் சட்டைப்பையில் மறைத்து வைத்திருந்த மனைவி பார்வதியின் புகைப்படத்தை கையிலெடுத்து செடிகளின் நிழலில்நின்று “என்னை இப்படிதனியாக விட்டுட்டுப் போக உனக்கெப்படி மனசுவந்ததென” அழுதவர்வழக்கம்போல பேரனை பள்ளியிலிருந்து அழைத்துவந்து வீட்டில்விட்டதும் தனது அறைக்குள்போய் சிறிது நேரத்திற்குபின் வெளியேவந்தவர் பேரன் தர்சனிடம், “கடைக்குப்போயிட்டு வர்ரேன்டா தர்சன்” எனக்கூறிக்கொண்டு கிளம்பி வெளியேபோனார்.

இரவு ஒன்பது மணியாகியும் வெளியில் கிளம்பிப்போன மாமனாரைக் காணாததால் பதற்றமானாள் பவித்ரா, இதைக்கண்ட குழந்தை தர்சன் பயத்தில் அழுதான், உடனே அருகிலிருந்த போனை எடுத்து கணவனை தொடர்புகொண்டு “என்னங்க சாயங்காலம் வெளியிலபோன மாமா எங்கபோனாருனு தெரியலை இன்னும் வீட்டுக்கு வரல” என்றாள்

“அவரு வழக்கமா போற டீக்கடைல கேட்டயா” என்றான் கோபி

“அவருகூட சுத்தற மாரிமுத்து மாமாகிட்ட கேட்டேன் அங்க வர்லைனு சொல்லிட்டார்” என்றாள்

“அவருகூட நீ ஏதாவது சண்டைபோட்டயா”

“இல்லை நானெதுக்குங்க அவருகூட சண்டைபோடுறேன்” என்றாள்

“அப்படியே லைன்லயே இருந்துட்டு ரூம்ல போய்ப்பாரு ஏதாவது எடுத்துட்டு போயிருக்காரானு”

“என்னங்க மாமாவோட பீரோவெல்லாம் திறந்துகிடக்குது அவரோட துணிகளும் கொஞ்சம் காணோம்” என்றாள்

“அம்மா தாத்தா கடைக்கு போறபோது கையில ஒரு பேக் எடுத்துட்டுப்போனாரு”னு தர்சன் சொல்ல

ஓவென அழுதாள்

“அதுக்குத்தான் அவருக்குனு ஒருபோன் வாங்கி தர்றேனு சொன்னேன் அதெல்லாம் வேண்டாம் அவரு யாருகூட பேசப்போறாருனு சொல்லிட்ட,இப்ப பார்த்தியா போனிருந்திருந்தாலாவது கால் பண்ணி கேட்டிருக்கலாம்” என்ற கோபி “பவி நீ அழாம போய் கதவை தாள்பாலிட்டுட்டு படு அவரு திரும்பிவந்து கதவைத்தட்டுனா கதவைத்திற இந்த ராத்திரி வேளையில நானும் இங்க இருந்து வரமுடியாது மழையும் விடாம பெய்யுது என்னசெய்யறது எதுவாயிருந்தாலும் காலைல பார்த்துக்கலாம்”னு சொல்லிட்டு போனை துண்டித்தான்.

மாமனார் காணாமல்போனதால் தூக்கம் வராமல் மறுநாள் காலையில சீக்கிரமே எழுந்த பவித்ராவுடன் தர்சனும் எழுந்துவிட இருவரும் அக்கம் பக்கமென சுற்றிலும் தேடினார்கள். வீட்டிற்கு பின்புறமிருந்த தோட்டத்திலிருந்து தாத்தாவின் டைரியை எடுத்துக்கொண்டு ஓடிவந்த தர்சன் “அம்மா இது தாத்தாவோட டைரி சப்போட்டா மரத்தடியில இருக்குற கல்லுமேல வெச்சுருந்தாரு” என்றான்

படபடப்புடன் டைரியை வாங்கி அதன் கடைசிநாளில் எழுதப்பட்டிருந்த பக்கத்தை தேடியெடுத்து படித்தாள்.

“அன்புள்ள மருமகளுக்கு,

இன்று ரேசன்கடையின் கூட்டத்தில் மணிக்கணக்கில் நின்று தாகத்தில் வாயெல்லாம் வறண்டு திரும்பியவனைப்பார்த்து நீ பேசியதில் மனமுடைந்துதான் இதைஎழுதுகிறேன், நான் இந்த டைரியில் எழுதுவது இதுவே கடைசிநாளாக இருக்குமென நினைக்கிறேன்,இதுவரை தெரிந்தோ தெரியாமலோ உனக்கும் குடும்பத்துக்கும் பாரமாக இருந்துவிட்டேன்,நீ ஆரம்பகாலங்களில் நடந்துகொண்ட விதத்திற்கும் தற்பொழுதிற்கும் நிறைய மாற்றங்களை உணரமுடிகிறது இதெல்லாம் “பாலில்கலந்த ஒருதுளி நச்சாய்” யாரோ உன்மனதில் விசமத்தைத்தூவி பரப்பியிருக்கிறார்கள் அதை காலப்போக்கில் நீயும் அறிவாயென நினைக்கிறேன், எனது இந்தடைரியில் தினமும் நானடைந்த வேதனைகளையும் அவமானங்களையும் முதலில் எழுதியிருப்பேன் அந்த பக்கங்களை கொஞ்சம் பின்னோக்கி திருப்பிபார்த்தால் உனக்கும் புரியும்,உனக்கு மனமென்று ஒன்றிருந்து நீ ஏற்கனவே இதையெடுத்து வாசித்திருந்தால் மாறியிருப்பாய் இல்லை இனியாவது மாறுவாய் என நினைத்து எழுதாமலே பல பக்கங்களை விட்டுவிட்டேன், காலப்போக்கில் நீ மாறிவிடுவாயென இருந்து நானும் ஏமாந்துவிட்டேன்,எனது மனைவியை இழந்தபின் தனிஆளாய் நான்வாழ்ந்து எதை சாதிக்கப் போகிறேன், இதுவரை எல்லா சங்டங்களையும் பொருத்துக்கொண்டு உங்களோடு இருந்தது தர்சனுக்காகத்தான்,இனியும் இதுபோன்ற நிலையில் கூனிக்குறுகி வாழ மனம் இடம்தராததால் இங்கிருந்து வெளியேறுகிறேன்,இதை படித்தபிறகு டைரியை என்மகன் (உன் கணவன்) கையில் கிடைக்காமல் அடுப்பில்போட்டு எரித்துவிடு உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் வேண்டாம் இனி என்னைத்தேடவும் வேண்டாம்.

இப்படிக்கு

முருகேசன்”

என எழுதியிருந்தது

கண்ணில் பனித்த ஈரத்துடன் கணவனுக்கு போன்செய்து அழைத்தாள், மறுநாளே வீட்டிற்கு வந்தவனிடம் டைரியைகாட்டி”நான் மிகப்பெரிய தப்புசெஞ்சுட்டேன் என்னை மன்னிச்சுக்குங்க பக்கத்துவீட்டு கல்பனா நான் மாமாவுக்கு செய்யற வேலைகள பார்த்துட்டு அவளும் அவ மாமனாருக்கு இதே மாதிரிசெய்யனுமுனு நினைச்சு எங்கிட்ட தப்பாச்சொல்லி மனசை கலைச்சுட்டா, காலத்துக்கும் யாரும் என்னை மன்னிக்கமுடியாத தப்பைப்பண்ணிட்டேன்” என அழுதாள்,

“இப்ப அழுதென்ன பிரயோஜனம் எல்லாமே கைமீறி போயிடுச்சு நானும் உன்னோட மட்டுமே போன்ல பேசிட்டு எங்கப்பாகிட்ட அதிகமா பேசாததும் பெரிய தப்புதான்” எனசொல்லிட்டு போலீசில் தேடச்சொல்லி கம்பளைண்ட் கொடுக்க கிளம்பினர்

போலீசும் இவர்களிடம் விசாரணையெல்லாம் செய்து முடித்து தேடிக் கொண்டிருந்தனர் எந்த தகவலும் கிடைக்காமல் ஒருவாரத்திற்கு மேலாக தேடியும் ஆள்கிடைக்காமல் நாட்களும் கடந்துவிட்டது

காலைநேரம் மீண்டும் மசினக்குடிக்கு கிளம்ப தயாராகிக்கொண்டிருந்த கோபியின் செல்போன் மணியடித்தது

“ஹலோ”

“ஹலோ கோபி நான் உன் அப்பா பேசறேன்டா” என எதிர்முனையில் சொன்னதும் சந்தோசத்தில் ஸ்பீக்கரில் போட்டான்

“அப்பா எங்க இருக்கீங்க என்னப்பா இப்படி பண்ணிட்டு போயிட்டீங்களே ”

“என்னை விடுடா கோபி, நீ எப்படியிருக்குற அப்புறம் தர்சன், பவித்ரா எல்லாம் நல்லாயிருக்காங்களா, என்ன சொல்லாம வந்ததால கோபாமா இருப்பானு நினைக்கிறேன், சொன்னா விடமாட்டீங்களேனுதான் எதுவும்சொல்லாம கோயில் குளமுனு போகலாமுனுதான் கிளம்பி காசிக்கே வந்துட்டேன் அவ்வளவுதான்” என்றார் முருகேசன்

“எப்பப்பா வர்றீங்க”னு கேட்ட கோபியிடம், “பார்க்கலாம் எல்லாம் அவன் செயல்” னு மனசுக்குள் நிழலாடும் பேரனின் நினைவுகளை மறைத்துக்கொண்டு பேச அருகில் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பவித்ரா கண்ணீருடன் வீட்டினுள்ளே ஓடினாள்.

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.