நிலவிற்குத் தெரியும்- சாரா ஜோசப் மலையாள மொழி சிறுகதை, தமிழி தி. இரா. மீனா

மொழிபெயர்ப்பு : மலையாளம்
மூலம் : சாரா ஜோசஃப்
ஆங்கிலம் : ஜே.தேவிகா
தமிழில் : தி. இரா. மீனா

தங்கமணி கண்முழித்து பார்த்தபோது உன்னிகிருஷ்ணன் பக்கத்தில்இல்லை. அவன் பாத்ரூமில் இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டு திரும்பிப் படுத்தாள். ஆனால் அமைதி கனமாக இருந்தது; முழித்திருந்தபடி ஏதாவது சத்தம் வருகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஒரு சின்னச் சத்தமுமில்லை. தங்கமணி எழுந்து விளக்கை ஏற்றினாள். மாடிப்படியின் முகப்புக் கதவும் திறந்து கிடந்தது. கலவரம் அடைந்து மாடிப்படிகளில் வேகமாக இறங்கினாள்; மூச்சிறைத்தது அவள் திணறினாள். மரத்தாலான பழைய மாடிப்படி, சத்தம் ஏற்படுத்தியது. பெரிய தாத்தா விழித்துக் கொண்டார்.

“தங்கமணி..” மாடிப்படியின் கீழிருந்து கூப்பிட்டார்.

“அவர் அறையில் இல்லை…” தங்கமணியின் குரல் ஹாலில் எதிரொலித்தது.வீடு முழுவதும் லைட் போடப்பட்டது! சந்திரனும், சேகரனும் எழுந்தனர். முன்வாசலில் பலமாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்த கோவிந்தனும், மொய்துட்டியும் கூட விழித்துக்கொண்டு விட்டார்கள். எங்கும் டார்ச் லைட்டுகளும், கைவிளக்குகளும் ஒளிர்ந்தன.

“தங்கமணி…” உன்னிகிருஷ்ணனின் அம்மா பலவீனமான நடையோடு தென் பகுதி இருட்டிலிருந்து தட்டுத்தடுமாறி வந்தாள். கண் பார்வையை கூர்மைப்படுத்திக் கொள்ள சிறிது நின்றாள். காது சிறிதும் கேட்பதில்லை. எதையோ அறிந்தவள்போல “தங்கமணி! நீ கீழே விழுந்துவிட்டாயா?” என்று கேட்டாள். தங்கமணி தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு படியிலிருந்து இறங்கி வந்தாள்.

நிலா வெளிச்சம் குளத்தைப் பிரகாசப்படுத்தியது. உன்னி கத்திக் கொண்டே நடந்தான். அந்த ஓடை எங்கே போனது? சாயந்திரம் கூட சந்தோஷமாக அதில் குளித்தானே! யார் அதை மறையச் செய்தது? சிறிதுநேரம் தூங்கி விட்டு வருவதற்குள்ளாக அது காய்ந்துவிட்டதா? முடியவில்லை.. முடியவில்லை.. தண்ணீர் இல்லாமல் என்ன செய்வது? சேறு ..எங்கும்.

நிலாவின் வெளிச்சத்தில் கானல் நீரைத் தேடிஓடினான். அங்கு தண்ணீர் இல்லை. நிலா வெளிச்சம் மட்டும்.. அவன் தொய்ந்து நடந்தான். இலக்கின்றி காலை இழுத்துக் கொண்டு ஆற்றின் கரையில் இங்கும் அங்குமங்குமாக ஓடினான்.பயம் கோரைப்பல்லாக சதையைத் துளைத்து மேலே மேலே இழுத்துக் கொண்டு போனது.

“உன்னி கிருஷ்ணா.. ஏய்..!” வீட்டின் கீழ்ப் பகுதியிலிருந்தவர்கள் அவனைத் தேடிக் கொண்டிருந்தனர்

ஏய்..ஏய்.. இரவுப் பறவைகள் பதிலுக்குக் குரல் கொடுத்தன. “என்ன.. சத்தம் அது, தங்கமணி?” உன்னியின் தாய் கழுத்தை வெளியே நீட்டி கஷ்டப்பட்டுப் பார்த்தாள். தங்கமணி போர்டிகோவிலிருந்து வெளிவாசல் முற்றத்திற்குப் போனாள். டார்ச்சுகளும், விளக்குகளும் வீடு முழுவதும் வெளிச்சத்தைப் பரப்பின.

“கிணற்றின் அருகே பாருங்கள்” என்று சேகரன் கூப்பிட்டார். தங்கமணி நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். கிணற்றின் அருகே போயிருப்பாரோ? அதற்குக் கைப்பிடிச்சுவர் கூடக் கிடையாது. மிக ஆழமானதும் கூட.குழிபோல இருந்த ஆழத்தை நோக்கி டார்ச்சுகள் அடிக்கப்பட்டன. தங்கமணி நடுங்கினாள். கிணற்றுத் தண்ணீர் கருப்பாக இரக்கமின்றி, அசைவின்றி இருந்தது. நிலா வெளிச்சம் அதன்மீது பட்டுச் சிரித்தது.

“இல்லை, அவன் இங்கிருப்பதாகத் தெரியவில்லை”.

“எங்கே போயிருப்பான்? ஐயோ கடவுளே!” வீட்டைச் சுற்றிலும் ஒளிர்ந்த டார்ச்சுகள் ஆற்றை நோக்கி நகர்ந்தன.

“தங்கமணி, உள்ளே வா ” பெரிய மாமா கூப்பிட்டார். தங்கமணி போர்ட்டிகோ பகுதிக்கு வந்தாள்.

“தங்கமணி எங்கேயிருக்கிறாய்?” உன்னியின் அம்மா கதவருகே வந்து கேட்டாள் .தங்கமணியின் நிழல் அவள் தெளிவற்ற பார்வையை மேலும் மறைத்தது.

“வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு நடு இரவில் வெளியே நிற்கிறாயா?”

போர்ட்டிகோவின் தூணில் அவள் சாய்ந்துநின்ற போது டார்ச்சுகளின் ஒளி ஆற்றின் மீது பரவுவது தெரிந்தது. பின்பு அவைகளின் வெளிச்சம் வேறுவேறு பகுதிகளில் பட்டு அசைந்தது. அது அரக்கர்கள் தம்கண்களால் ஆற்றின் எல்லாப் பகுதிகளையும் பயமுறுத்துவது போல மோதிப் பரவியது. பம்பாயில் இருந்த வரை உன்னி பக்கத்தில் படுக்கையில் இல்லையென்றால் பாத்ரூமில்தான் இருப்பான் என்று அவளுக்கு உறுதியாகத் தெரியும். சாத்தி வைக்கப்பட்ட சிறிய அறை, பாத்ரூம் என்ற இரண்டு அறைகளில்தான் அவள் தேட வேண்டியதிருக்கும் .பாத்ரூம் ஷவரில் உடம்பு முழுவதையும் நனைத்துக்கொண்டு உன்னி நிற்பான்; அவள் ஊகம் தவறியதில்லை. தன் கைகளை அவள் முன்னால் நீட்டிக் கொண்டு குழப்பத்தோடு “இப்போது பார், தங்கமணி உண்மையாகவே என் கைகள் மிகச் சுத்தமாக இருக்கிறதல்லவா? ”என்று கேட்பான். செத்த மீன் ஆற்றில் மிதப்பதுபோல வெளிறி ஊறியிருக்கும் அவன் கைகளை மடக்கி பாத்ரூமிலிருந்து வெளியே அழைத்து வருவாள்.

“தெரியுமா உனக்கு? இந்த இடம் இன்னும் பாட்டனார்கள் நடமாடிக் கொண்டிருக்கும் இடம்… வா ..உள்ளே வந்துவிடு! ”உன்னியின் தாய் தன் சில்லிட்ட கையை நீட்டித் தங்கமணியைத் தொட்டாள். அவள் வயிற்றில் உன்னியின் குழந்தை அசைந்தது.

வீட்டின் கதவைத் திறந்து கொண்டு போன உன்னி, பல மைல்கள் தொலைவிலிருந்த ஓடையை நோக்கி நடந்து கொண்டிருந்தான். “தண்ணீர்… தண்ணீர் எல்லாவற்றுக்கும்.. தேவையானது.. தண்ணீர்இல்லாவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது ”. அவன் பாதங்கள் மண்ணில் புதைந்தன. ஒருவித பதட்டம் ஏற்பட்டது. உடம்பு இறுகியது. தண்ணீருக்கு அலையும் பித்துப் பிடித்த நாய் போல.. தண்ணீர் தாகம் அவனை வாட்டியது

உறவினர்கள் ஆற்றின் கிழக்கு திசையில் ஒளியைப் படரவிட்டுத் தேடிக் கொண்டிருந்தனர். “இது தண்ணீர்ப் பிசாசின் வேலைதான். ஒரு சந்தேகமுமில்லை. தண்ணீர்ப் பிசாசு நம் குடும்பத்தின் சாபமில்லையா?” பெரிய மாமா சோகமாகச் சொன்னார் . அவர் முகம் இறுகியது. சங்குண்ணி மாமாவின் வெண்கலப் பாத்திரத்தில் காற்று பரவியது.

“கங்கேச யமுனேச் சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி ஜலஸ்மின் சந்நிதிம் குரு…”

“நாரணி, என் பாத்திரம் எங்கே? ” சங்குண்ணி மாமா பதட்டத்தோடு வீட்டைச் சுற்றியோடினார். பாத்திரத்தில் இல்லாத தண்ணீரை இடது கையிலிருந்து வலதுகைக்கு மாற்றிக் கொண்டிருந்தார். கங்கே ச யமுனேச் சைவ.. சங்குண்ணி மாமா முணுமுணுத்துக் களைப்பானார்.

சுட்டெரிக்கும் வெயிலில் ஆற்றுமணல் கொதித்துக் கிடந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் வெள்ளை மணல் விட்டுவிட்டுப் பிரகாசித்தது சங்குண்ணி மாமா ஆற்றை நோக்கி பித்துப் பிடித்தவர் போல ஓடிக் கொண்டிருந்தார். கங்கே ச.. காற்று வேகமாக அடித்து மண்ணைக் கிளப்பி அவரை அணைத்துக் கொண்டது. சங்குண்ணி மாமா வெறிபிடித்தவர் போல ஆடிக் கொண்டிருந்தார். காவடியாகத் தன்னை மறந்து ஆடிஆடிக் கீழே விழுந்தார். சுட்டெரிக்கும் மண்பூக்கள் அவர் தோளைத் தழுவ தகிக்கும் மணலுக்குள் மாமா புதைந்து மறைந்து போனார். அவரைத் தேடிப்போனவர்கள் மண்ணின் மேலே தெரிந்த இடது உள்ளங் கையைப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டார்கள்.

காற்று இன்னமும் தண்ணீர் ஊற்றும் பாத்திரச் சப்தத்தின் ஒலியோடு கலந்திருந்தது. பெரிய மாமாவின் உடல் நடுங்கியது. “உன்னி கிருஷ்ணன் சங்குண்ணி மாமாவைத் தொடர்கிறான் ” அங்குள்ளவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் அவனுக்கு அவ்வளவு வயதாகவில்லையே.. அல்லது..?

தண்ணீர்ப் பிசாசால் இறந்தவர்கள் எல்லோரும் எண்பது, தொண்ணூறு வயதானவர்கள். ஆனால் உன்னிக்கு முப்பது வயது கூட ஆகவில்லையே? அவன் பம்பாய்க்குப் போனபோது அவனுக்கு இருபத்து நான்கு வயது. தங்கமணியை அவன் கல்யாணம் செய்து கொண்டபோது இருபத்தியெட்டு வயதுதான்.” என்று யாரோ சொன்னார்கள். பம்பாயில் என்ன ஆனதோ தெரியவில்லை? எதையாவது பார்த்து பயந்து விட்டானோ? சந்தேகமில்லை.. சந்தேகமில்லை! அவன் முகம் எப்போதும் பயந்த மாதிரியே இருந்தது. இல்லை! உன்னி பயந்தாங்கொள்ளி இல்லை. இளைஞனாக இருந்தபோது இப்படியில்லை. கல்லூரி நாட்களில் நடுராவில் தனியாக வருவான். இருட்டில் இந்த ஆற்றின் வழியாக தனியாக வந்திருக்கிறான்! தூக்கம் வராத பல இரவுகளில் எத்தனை நாட்கள் இந்த மண்ணில் படுத்திருக்கிறான்?அவன் தலைக்கருகே எத்தனை புகைத்த பீடிக்கட்டுகள் கிடந்திருக்கின்றன! ஆனால்..

உன்னிகிருஷ்ணன் பயப்படுவான்! தங்கமணிக்கு அது ஞாபகமிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுவான். எங்கு பார்த்தாலும் இரத்தம். அப்படித்தான் சொல்வான் தெருவோரங்கள், சாலைகள், ரயில் நிலையங்கள் , தண்டவாளங்கள், பஸ்கள், எல்லா இடங்களிலும் இரத்தம்… காலைக் கீழே வைக்காதே! கீழே பார்க்காதே! என்று சொல்வான்அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போதே பாத்ரூமிற்குள் ஓடுவான். கால்கள் சுத்தமாக இல்லை என்று பாத்ரூமிலிருக்கிற துவைக்கும் கல்லில் தோல் கிழியும் அளவுக்கு மணிக்கணக்காக கால்களைத் தேய்த்து தேய்த்துக் கழுவுவான்.

“என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? வெளியே வாருங்கள்” பாத்ரூமிலிருந்து அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு வெளியே கூட்டி வரும்போது அவன் முகம் பயத்தில் உறைந்திருக்கும். அந்தக்
கையாலாகாத முகபாவம். தனக்குள் அவன் பேசிக்கொண்ட விதம்…

“துர்நாற்றம்.. அப்படி ஒரு நாற்றம் தங்கமணி! ”

“அப்படி ஒரு நாற்றமும் இல்லையே. உங்கள் கற்பனை அவ்வளவுதான்”.

“இல்லை.. ஒன்றுமேயில்லை என்கிறாயா?”

அவன் அவளை அந்த ஐந்து மாடிக்கட்டிடத்தின் கீழே இழுத்துக் கொண்டு போனான். மாடிப்படிகளில், முன்பகுதியில்,சாலையில்.. தங்கமணிக்கும் கூட இரத்தமழை உணர்வால் குமட்டல் வந்தது.

டார்ச் லைட்டுகள் அணைந்து விட்டன.“கவலைப்பட வேண்டாம்.” மின்சார விளக்குகளைப் பயன்படுத்தலாம்” என்றார் பெரிய மாமா. ஆற்றில் நடக்கும்போது யாருக்கு லைட் வேண்டும்? நிலாவின் பால் ஒளி வரண்ட ஆற்று மணலின்மீது பட்டு மின்னியது. யாரும் கண்ணில் தென்படவில்லை. இங்குமங்குமாகச் சில செடிகளும், பசுக்களும் சிலை போலக் கண்ணில் பட்டன. தேடுபவர்களில் சிலருக்குச் சந்தேகம் எழுந்தது. உன்னி இவ்வளவு தூரம் வந்திருப்பானா?அவன் தண்ணீரின் மேல் பிரேமையுள்ளவன். தண்ணீரில்லாத ஆற்றில் திரியவருவானா? வேறு இடத்திற்குப் போய்த் தேடலாமா?

பெரிய மாமா ஒப்புக் கொள்ளவில்லை. “உங்களுக்கு அவனைப் பற்றித் தெரியாது இந்த ஆறுதான் அவனுக்கு எல்லாமும். அவன் இங்குதான் இருப்பான்” என்று அவர் முன்னால் நடந்து கொண்டே சொன்னார்.

உன்னியின் தாய் கையில் விளக்கோடு முகப்பிற்கு வந்தாள். கண்ணாடியால் மூடப்பட்டிருந்த விளக்கின் சிவப்பொளி விம்மிற்று. “எல்லோரும் எங்கே போய்விட்டார்கள், தங்கமணி? யாரையும் காணவில்லையே.” பதில் எதுவுமில்லை. தங்கமணியின் நிழலசைந்தது. இன்னமும் போர்ட்டிகோ தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தாள்.

“தங்கமணி, நீயா?”

காலை நீட்டிஉட்கார்ந்தபடி நினைவுகளில் ஆழ்ந்திருந்தாள். உன்னி சாப்பாட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு போகவில்லையா?

“என்ன இது? சாப்பாட்டை எங்கே எடுத்துக் கொண்டு போகிறீர்கள்?” உன்னி பயந்து விட்டான். குரலைத் தாழ்த்திக் கொண்டு மெதுவாக “இது எல்லாம் விஷம் தங்கமணி… அரிசி, காய்கறிகளை நம்பக் கூடாது…”

“நான்தான் சமைத்தேன். என்னையும் நம்பமாட்டீர்களா?”

“இல்லை, தங்கமணி.. விஷம் அரிசிக்குள் இருக்கிறது! உன் சாப்பாட்டையும் இங்கு எடுத்துக் கொண்டு வா.. அதைக் கழுவி விட்டுச் சாப்பிடு…”

சாதம் பாத்ரூம் தரைமுழுவதும் கொட்டிக் கிடந்தது. தங்கமணி தனக்குள் பல நாட்களாக அடக்கிவைத்திருந்த உணர்வுகள் ஓர் அலறலாக வெளியே வந்தது. துக்கம் நிறைந்தவனாகத் தெரிந்த அவனது தோற்றம் கண்களில் கண்ணீரைப் பெருக்கியது. அது சாப்பிட்டுக் கொண்டிருந்த அவள் தட்டில் விழுந்தது.

உன்னியின் தாயின் கண்கள் இருட்டைப் பார்த்து வெறுமையானது. “இப்போது மணி என்ன?” தங்கமணியின் நிழலைப் பார்க்கமுடியாமல் அவள் இருட்டிடம் கேட்டாள். பிறகு அவள் மெதுவாக நடந்து
தென்கோடி அறைக்குள் போனாள்.

திடீரென்று மின்சாரம் பாய்ந்ததைப் போல உன்னி தன் காலில் குளிர்ச்சியை உணர்ந்தான். ஈர மண்ணிலிருந்து எழுந்த குளிர்ச்சி அவன் நெற்றிவரை பாய்ந்தது. தரையில் உட்கார்ந்து உள்ளங்கையில் மண்ணை எடுத்து முகர்ந்தான். புதிய ஆற்றுநீரின் மணம்! ஒரு விநாடிகூட யோசிக்காமல் அவன் மண்ணைத் தோண்டத் தொடங்கினான். ஆற்று மணலைத் தோண்டும்போது ஒரு குழந்தையைப் போல உணர்ந்தான். சந்தோஷத்தில் பெரிதாகக் குரல் கொடுத்தான். ஆற்றின் மறுகரையிலிருந்த அவன் நண்பர்கள் மகிழ்ச்சியாக எதிர்க்குரல் கொடுத்து அவனை அழைத்தனர்.

அவர்கள் டார்ச்சுகளோடும், விளக்குகளோடும் அவனை நோக்கி ஓடி வருவதைப் பார்த்தான். மிகுதியான சந்தோஷத்தில் ஆழமாகத் தோண்டினான். இரண்டு புறங்களில் இருந்தும் வேகவேகமாகச் சிறிய அளவில் குவியல் உருவானது. இரவுப் பறவைகள் சப்தத்தோடு தாழ்வாகப் பறந்தன. வழி தவறிய கால்நடை அவன் பின்னால் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தது. பரவியிருந்த வரண்ட கருக்காச்செடி அவன் காலைச் சுற்றிப் பின்னியது. மகிழ்ச்சியான மனதோடு உன்னி தன் கைகளால் தண்ணீரை எடுத்தான். நிலா வெளிச்சம் அவனுடைய உள்ளங்கைகளில் விழுந்து சிரித்தது.

தங்கமணி கையில் லாந்தர் விளக்கோடு தனியாக கிணற்றினருகே போனாள். நிலா வெளிச்சம் கிணற்றில் விழுந்து பொருமியது. தண்ணீர்ப் பிசாசினால் அழிந்தவர்களின் ஆத்மாக்கள் நிலா வெளிச்சத்தில் கிணற்றில் தெரிந்தன.

“அப்படியானால் நீங்கள் எங்களைச் சோதிக்கிறீர்கள்?” அவள் சோகமாகக் கேட்டாள்.

“வீட்டிற்குப் போக வேண்டும். நம் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதில் குளிக்கவேண்டும். அந்தக் கிணற்றின் அடிப்பகுதி உறுதியான நெல்லி மரத்தாலானது. எங்களின் முன்னோர்கள் மரத்தை வெட்டி மதில் சுவராகக் கட்டினார்கள். அங்கு அவ்வளவு சுத்தமான தண்ணீர்— உள்ளேயும் வெளியும் குளிர்ச்சியாக இருக்கும்.. நாம் போகலாம். தங்கமணி,நாம் திரும்பிப் போய் விடலாம். “அவன் மிகவும் பிடிவாதமாக இருந்ததால்தானே அவனை அழைத்துக் கொண்டு வந்தேன்? இப்போது? நீ என்ன செய்திருக்கிறாய்?

ஆத்மாக்கள் பேசாமல் நின்றன.தங்கமணி விம்மியழுதாள். அந்த லாந்தர் விளக்கிலிருந்து கடைசியாக ஜூவாலை வந்து அணைந்தது. உன்னியின் குழந்தை துன்பத்தில் புழுவாய் நெளிந்தது. தங்கமணி அசைந்த வயிற்றைப் பிடித்துக் கொண்டு கிணற்றுப் பகுதியைவிட்டு ஓடினாள்.அவளுக்குப் பின்னால் அவை சிரித்தன.

உன்னியின் அம்மா தென்கோடி அறையிலிருந்து முற்றத்துக்கு வந்து அமைதியாகக் கல்போல நின்றாள். “எனக்கு எதுவுமே புரியவில்லை”. முயற்சி செய்தும் அவளால் தங்கமணியின் நிழலைப் பார்க்கமுடியவில்லை.

“தங்கமணி, இது எத்தனையாவது மாதம்?” தங்கமணி பதில் சொல்லவில்லை. அவள் தன் இடுப்பு ஆடைப் பகுதியைச் சிறிது தளர்த்தி வயிற்றைத் தடவிக் கொண்டாள். அது உன்னியின் கனவை வருடுவதாக இருந்தது. எந்த பதிலும் கிடைக்காததால் அம்மா சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

கோள்களைச் சோதித்த ஜோசியன் வரப்போகும் அபாயத்தை எச்சரித்திருந்தான். தண்ணீர்ப் பிசாசுகளும், பாட்டனார்களின் ஆவிகளும் தொல்லை தரலாமென்று.

“இனியும் தாமதிக்கக் கூடாது. நாளைக்குள் நாம் ஏதாவது செய்தாக வேண்டும்”. பெரிய மாமா சொன்னார்.

“முதலில் நாம் அவனைக் கண்டுபிடிக்க வேண்டும்.” தேடப் போனவர்கள் களைப்படைந்தனர்.

“அவன் எங்கே போக முடியும்?” பெரிய மாமாவின் குரலெழுந்தது.அவருக்குக் கோபமும் ,வருத்தமும் ஒருசேர ஏற்பட்டன. அவர்களுக்கு முடிவு கட்டவேண்டும். அவர்கள் அபாயமானவர்கள்! ஆறு அல்லது கிணறு, எதுவென்று சொல்ல முடியாது. அவனை எங்கே இழுத்துச் சென்றார்கள் என்று தெரியவில்லை. இது விளையாட்டில்லை. ஆடிமாதத்தின் கோபமான ஆறு, பருவமழை, ஆகியவை மாமாவின் நெஞ்சை அழுத்தின. ஆற்றின் கரையில் முன்னோர்களுக்கு.. வாழை இலைகளில் உணவு படைக்கும் காட்சிகள்.. ஒற்றை மண்விளக்குகள்.. மெலிதான ஜுவாலையோடு.. தண்ணீரில் மிதந்தபடி துளசி மணமும், மலர்களின் மெலிதான மணமும் இருபுறமும்…முன்னோர்களே ! எங்களுக்கு உதவுங்களேன்..

பம்பாயிலிருந்து அவர்கள் வந்த நாளில் என்ன நடந்தது? உன்னி பூஜை அறையிலிருந்து ராமனின் சிலையையும் அத்யத்ம ராமாயணப் புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு கிணற்றுப் பக்கம் போனான். கிணற்றினருகேயுள்ள சுவரில் ராமன் சிலையை வைத்தான். அதைத் துடைத்து வர்ணத்தைச் சுரண்டினான். ராமாயணப் புத்தகத்தைக் கழுவிச் சுத்தம் செய்ததால் கனமான அட்டை கிழிந்து பக்கங்கள் கிணற்றைச் சுற்றிச் சிதறின. அனைவரும் குழம்பிக் கிணற்றினருகே ஓடியபோது அவன் புனிதப் புத்தகத்தின் கடைசிப் பகுதியைச் சுறுசுறுப்பாகக் கழுவிக் கொண்டிருந்தான். அப்பாவிக் குழந்தை தவறு செய்துவிட்டு முழிப்பதைப் போல ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்த்தான்.

“இது மிகவும் அழுக்காக இருக்கிறது. கழுவிச் சுத்தம் செய்ய வேண்டுமல்லவா?” அப்போதே சந்திரனும், சேகரனும் உளவியல் மருத்துவரை பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். தங்கமணி பம்பாயில் ஒரு மலையாள மருத்துவரைக் கலந்து ஆலோசித்திருந்தாள். “சூழ்நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்” என்று அவர் ஆலோசனை சொன்னார். தங்கமணி குழம்பினாள். அவற்றை எப்படித் தவிர்க்க முடியும்? முக்கியம் கொடுக்காமலிருக்க முடியும்? உன்னியின் உள்ளுணர்வை, மாயையை எந்தத் தண்ணீரால் கழுவமுடியும்?

சம்பள நாளில் ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் அவன் கழுவிக் காய வைக்கும் போது அவன் முகத்தில் தெரிந்த பாவம் அவன் நிலைமையை அவளுக்குத் தெளிவாகப் புரியவைத்தது.அவளுக்கு முத்தம் கொடுக்கும் போதெல்லாம் பாத்ரூமிற்கு ஓடித் தன்வாயைக் கழுவிக் கொள்ளும்போது அவனுக்குள் ஏற்படும் பயத்தின் ஆழத்தை அவளால் மட்டுமே உணரமுடியும். எழுத்துக்கள் அசிங்கமாக இருக்கின்றன; அம்மாவிற்கு ஒரு கடிதம்கூட எழுத முடியவில்லை. உன்னி பேனாவை மணிக்கணக்கில் கழுவுவான். அவனைத் தழுவும் காற்று புகையாக மண்ணைத் தூவி, அதிர்வை ஏற்படுத்தும். ஜன்னல்கள் ,கதவுகள், எல்லாவற்றையும் சாத்துவான். தங்கமணி எப்படிச் சூழ்நிலைகளுக்கு முக்கியம் கொடுக்காமல் இதையெல்லாம் தவிர்க்க முடியும்?

திடீரென்று பெரிய மாமா ’உன்னிகிருஷ்ணா.. ’என்று பெரிதாக அலறி எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தார். அது மறு கரை வரை எதிரொலித்தது. மாமா தூரத்தில் உன்னியைப் பார்த்து விட்டதைப் போலத் திரும்பத் திரும்பக் கூப்பிட்டார். வேக வேகமாக நடந்தார். நடை ஓட்டமாக மாறியது.

உன்னியின் பாதங்களை நனைத்தபடி மண்ணூற்று வழியாக தண்ணீர் பரவியது. தண்ணீரைக் கையால் தட்டிக்கொண்டு அவன் சந்தோஷமாக கத்திக்கொண்டே குதித்தான். மண்ணும் சந்தோஷத்தில் குளிர்ச்சியான தண்ணீரில் ஊறியது. காய்ந்து கிடந்த புல்லின் மீதும், நின்றிருந்த பசுக்களின் மீதும் தண்ணீர் தெளிக்கப்பட்டது. ஆற்றின் மார்பு நிறைந்து வழிந்தது. தெய்வத்தின் பிரசாதம் போல அமிர்த ஓடையாய் வெடித்தது. உன்னியின் முழங்கால்களைத் தண்ணீர் தொட்டது. இரண்டு பக்கங்களிலுமிருந்த துளைகளிலிருந்து மண் சரியத்தொடங்கியது. துளை பெரிதானது. ஆற்றின் கீழே அமைதியான பிரவாகம் இப்போது உன்னியின் பாதத்தில் ஒன்று திரண்டது. அவன் காலின் கீழிருந்த மண் மூழ்கியது. அவன் பாதங்கள் கீழே கீழே.. சந்தோஷமாக நெஞ்சுவரை வந்துவிட்ட தண்ணீரைத் தட்டினான்.

உன்னிகிருஷ்ணன்…. விளக்குகளும், மனிதர்களும் நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நிலவொளியில் மங்கித்தெரிந்தனர். அவனுக்கு பயம் வந்தது. அவர்கள் ஓடையை அபகரித்துக் கொண்டு விடுவார்கள்.. ஈரப்பதத்தையும், மென்மையையும் வடித்து விடுவார்கள்.“இங்கே வராதீர்கள்…”அவன் கத்தினான். தன் கைகளை விரித்துத் தண்ணீரை அணைத்துக் கொண்டான். கரையின் முனையும், துளைகளும் இன்னும் சிறிது தண்ணீரைப் பரப்பின. ஆறு,எல்லையற்ற அன்புக்கு அடையாளம். அவளுடைய இரக்கமான பரிசுகள் அவனை நோக்கிப் பாய்ந்தன; அவை அவன் காலடியில் இணைந்தன. தண்ணீர் கழுத்திற்கு ஏறியது.

’உன்னிகிருஷ்ணா.. மகனே.! ’ யாரோ கூப்பிட்டார்கள். அம்மாவா அல்லது தங்கமணியா? மக்கள் பெரிதாக அழுதுகொண்டு அவனை நோக்கி ஓடிவந்தார்கள். அவர்களிடம் டார்ச்சுகளும், விளக்குகளும் இருந்தன. கூடாது! இந்தத் தண்ணீர் அசுத்தம் அடையக்கூடாது. உன்னி தன் இரண்டு தோள்களையும் விரித்துத் தண்ணீரை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். பெருங்காற்று வீசியது. குளிர்ச்சியான இளநீரைக் குடிப்பது போல, தாய்ப்பாலைக் குடிப்பது போல அவன் வாய் நிறையக் குடித்தான். மீண்டும்.. மீண்டும்..

வெளிச்சத்தோடு மக்கள் அந்த இடத்திற்குப் போனபோது அவர்கள் எதையும் பார்க்கவில்லை. விளையாடுவதற்காக பகல்நேரத்தில் குழந்தைகள் தோண்டியிருந்த குழியில் நிலாவெளிச்சம் விழுந்து சிரித்தது.
——————————-

சாரா ஜோசஃப் சிறுகதை மற்றும் நாவலாசிரியர்.பெண்ணியவாதி. சாகித்ய அகாதெமி விருது, வயலார் விருது, பத்மபுரா இலக்கிய விருது எனப்பல விருதுகள் பெற்றவர். தாய்க்குலம், ஒத்தப்பூ ,ஆதி ஆகியவை இவருடைய நாவல்களில் சிலவாகும். நிலவு அறியுன்னு, புது ராமாயணம், மனசிலே தீ மாத்ரம் ஆகியவை இவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் சிலவாகும்.இச்சிறுகதை ‘நிலவு அறியுன்னு’தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.