உள்ளுணர்வு- மலையாள மூலம் எம். டி. வாசுதேவன் நாயர் – தமிழாக்கம் தி. இரா. மீனா

மூலம் : எம்.டி.வாசுதேவன் நாயர்
ஆங்கிலம் : வி .அப்துல்லா
தமிழில் : தி.இரா.மீனா

அந்தச் செய்தி அங்கு வந்திருக்காது என்று நம்பியது தவறுதான். கிராமத்தில் உள்ள தன் வீட்டிற்கு அடிக்கடி தனியாக வரும் பழக்கம் உள்ளவள் அவள். இதில் யாரும் ஆச்சர்யப்பட எதுவுமில்லை. குளித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு வராந்தாவில் வந்து உட்கார்ந்தாள். எவ்வித முன்னறிவிப்புமின்றி, “சுதா குட்டி, நாங்கள் கேள்விப்பட்டது உண்மையா?” என்று அம்மா நேரடியாகவே கேட்டு விட்டாள்.

’நீங்கள் என்ன கேள்விப்பட்டீர்கள்?’ தன்னைச் சுற்றி வார்த்தைகளாலான சுவரை எப்படி அமைப்பது என்ற எண்ணத்தோடு அம்மாவை கோபமாகப் பார்த்தாள்.

கண்ணை மூடிக் கொண்டே அம்மா மென்மையாகச் சொன்னாள்: ’நீயும், பிரபாகரனும் பிரிகிறீர்கள்..’ ஏதாவது சங்கடமான விஷயங்கள் பேசும்போது கண்களை மூடிக் கொள்வது அம்மாவின் பழக்கம். நேரடியான பதிலைச் சொல்வதற்கு பதிலாக கடுமையாக இருப்பது சரியாக இருக்குமென்று அவள் முடிவு செய்தாள்.

“இந்த மாதிரியான செய்திகளை தந்தி பாணியில் உனக்குச் சொல்வது யார்?”

“நேற்று முன்தினம் நாராயணன் வீட்டிற்கு ஸ்ரீதேவி வந்திருந்தாளாம். தேவுவின் கணவன் சென்னையில்தான் இருக்கிறான், இல்லையா?”

முகப்பிலுள்ள படிக்கட்டில் காலை நீட்டியபடி உட்கார்ந்திருந்த அம்மா பதிலளித்தாள். அவளுடைய தங்கையின் மாமியார்தான் இப்படி துண்டு துண்டுகளாக விஷயத்தை உறவினர்களிடம் சொல்லியிருக்கிறாள்.

’இந்தச் செய்தி விசாலத்திடமிருந்து வந்த நேற்றைய கடிதத்திலும் இருந்தது’

அக்காவிடமிருந்து சந்திரிக்கு செய்தி கிடைத்திருக்க வேண்டும், அவள் அதை அம்மாவிற்கு எழுதியிருக்க வேண்டும்.

சுதா முற்றத்தில் காலெடுத்து வைத்தாள். காலை பத்து மணியென்றாலும் வெயில் அனலாயிருந்தது. சுவற்றை ஒட்டியிருந்த நிழல் பகுதியில் நடந்தாள். வேகமாக நடந்த போது ரப்பர் செருப்புகள் பாதத்தில் தட்டி ஒலியெழுப்பின.

நிம்மதியாக இருக்க விரும்பி அம்மா அந்தப் பழைய வீட்டில் தனியாக இருக்கிறாள். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு சுதா அடிக்கடி இங்கு வந்து விடுவாள். அவளைத் தொந்தரவு செய்ய அங்கு தொலைபேசி இல்லை. விருந்தினர்களை மகிழ்ச்சிப்படுத்த என்று அவள்தன்னை அலங்கரித்துக் கொள்ளத் தேவையில்லை. நடு இரவில் விடை பெறும் பிரபாகரனின் அலுவலக நண்பர்கள் போகும் வரை விழித்திருக்க வேண்டியதில்லை. அவர்களின் நகைச்சுவையை ரசிப்பது போல செயற்கையாக சிரிக்க வேண்டியதில்லை. ஆனால் இங்கு வருவதற்கு அவளுக்கு எப்போதாவதுதான் அனுமதி கிடைக்கும். அதுவும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மட்டும்தான்.

எப்போதும் அம்மா கேட்கும் முதல் கேள்வி :’எப்போது நீ திரும்பிப் போக வேண்டும்?’ இந்த தடவை, அவள் கேட்கவில்லை.“பலரும் பல விதமாகப் பேசுகிறார்கள். உண்மையில் என்னதான் நடந்தது?” வராந்தாவில் திரும்பி நடந்தபடி கேட்டாள்.

சுதா பதில் சொல்லவில்லை.

’எனக்குத் தெரிந்த வரையில்…’ அம்மா நிறுத்தினாள்.

“அது உண்மைதான் அம்மா. நாங்கள் பிரிவதுதான் நல்லது.”தலையைக் குனிந்து, அம்மா படியை வெறித்தாள். சமையலறையில் உதவிக்கு இருக்கும் பெண் வந்து ஏதோ கேட்க அம்மா உள்ளே போய் விட்டாள்.

சுதா வங்கியில் பதினைந்து நாள் விடுப்பு எடுத்திருந்தாள். வங்கியிலிருக்கும் ஒரு சிலருக்கு என்ன நடக்கிறதென்பது லேசாகத் தெரிந்திருந்தது. காஷியர் நிர்மலா சீதாராமனிடம் மட்டும் அவள் வெளிப்படையாகப் பேசினாள். ஒய்.எம்.சி.ஏவில் அவளுக்கு ஒரு ரூம் பார்த்துக் கொடுத்தது நிர்மலாதான்.

அம்மா தனியாக வாழ விரும்புகிறாள் என்பதை அவள் உணர்ந்திருந்தாள். உறவினர்களோ அல்லது நண்பர்களோ தன்னை வந்து பார்ப்பதை அம்மா ஊக்குவிக்கவில்லை. குழந்தைகள் தன்னை வந்து பார்க்காவிட்டாலும் அது பற்றி அவள் குறைப்பட்டுக் கொண்டதேயில்லை. பதில் வந்தாலும், வராவிட்டாலும் தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் மாதத்திற்கு ஒரு தடவை கடிதமெழுதி விடுவாள். அக்கம் பக்கத்து வீடுகளிலிருக்கும் யாராவது ஓர் இளம்பெண் அவளுக்கு உதவிக்கு கிடைப்பாள். கடந்த ஆண்டு சுதா வந்திருந்த போது தனக்கு உதவி செய்துவரும் பெண்ணுக்குத் திருமணமெனவும், அவளுக்கு தங்கச் சங்கிலி வாங்கித் தரப் போவதாகவும் சொன்னாள்.

“நீங்கள் மூன்று பேரும் உங்களால் முடிந்த பணத்தை குட்டி ராமனுக்கோ அல்லது எனக்கோ மணியார்டர் செய்து விடுங்கள்.”

விசாலமும், சந்திரியும் தலா முந்நூறு அனுப்ப, சுதா நானூறு தந்தாள். இருவரும் சம்பாதிப்பதாலும், அவர்களுக்கு குழந்தைகள் இல்லாததாலும் அவள் அதிகம் தரவேண்டியிருந்தது. அந்தப் பெண் போன பிறகு சமையலுக்கு உதவி செய்ய அவள் தங்கை வந்தாள்.

அம்மா தனியாக இருப்பது விசாலம் அக்காவிற்கு கவலையாக இருந்தது. திருவனந்தபுரத்தில் அவள் பெரிய வீட்டில் வேலைக்கார்களோடு இருந்தாள். அவர்கள் அனைவரும் கூடியிருந்த ஒரு சமயத்தில், “அம்மாவிற்கு உடல் நலமில்லையென்றாலும், பார்ப்பதற்கு பக்கத்தில் டாக்டர் யாருமில்லை” என்றாள்.

“எனக்கு எதுவும் வராது,” என்றாள் அம்மா.

சுவற்றிலிருந்த ஒரு பெரிய ஓட்டை வழியாக வாழைக் கொல்லையிலிருந்து ஒரு கருப்புக் கோழி தன் குஞ்சுகளோடு முற்றத்திற்கு வந்தது. முற்றத்தின் பக்கவாட்டிலுள்ள குப்பையைக் கிளறியபடி அவை நகர்ந்தன.

“காட்டுக் கோழி ,தினமும் இந்த நேரத்தில் வருகிறது. அது எங்கிருந்து வருகிறது என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.” அம்மா சொல்வது கேட்டது.

சுதா அவற்றை வேடிக்கையாகப் பார்த்தாள். வீட்டிலுள்ள மனிதர்களைப் பார்த்ததும், அந்தத் தாய்க் கோழி பயப்பட்டது. நெருக்கமாகப் பார்க்க வேண்டுமென்பதற்காக சுதா அவற்றினருகே மெதுவாகப் போனாள்.

தாய்க்கோழி எச்சரிக்கையாக கொக்கரித்து விட்டு, குஞ்சுகள் பின்தொடர தோட்டத்திற்குள் போய்விட்டது.

அவர்கள் சாப்பிடும் போது அம்மா ஒன்றும் சொல்லவில்லை .

சாயங்காலம் தங்கை கணவனின் சகோதரர் ஸ்ரீதரன் அண்ணன் வந்தார். அந்தக் கிராமத்து பள்ளியின் தலைமையாசிரியர், முக்கியமான மனிதர். அவர் கேள்விப்பட்டிருந்த வதந்திகளின் அடிப்படையிலான குறுக்கு விசாரணைக்கு சுதா தன்னை தயார் படுத்திக் கொண்டாள். எதுவுமே நடக்காதது போல அவர் குடும்பத்தைப் பற்றி விசாரித்தாள். கோடையின் உஷ்ணம் பற்றி புகார் செய்தாள்.

“எத்தனை நாட்கள் விடுமுறை சுதா குட்டி?”

“ஒரு வாரம்.”

“உனக்கு டீ போட்டுத்தர பால் இல்லை ஸ்ரீதரா” அம்மா குறுக்கிட்டாள்.

“எனக்கு எதுவும் வேண்டாம்.”

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது சுதா சிறிதுநேரம் தன்னை மறந்திருந்தாள். ஆனால் ஸ்ரீ தரன் சென்னையின் கடும் வெயில்,ஜெயலலிதாவின் சொத்து,கருணாநிதியின் அதிகாரம் என்று பேச ஆரம்பித்தார்.

அவள் மௌனமாக இருந்நாள். அந்தப் பேச்சு முடிந்த பிறகு அவர் கிளம்பி விட்டார். அவள் திருமணப் பேச்சு வந்த போது இவருடைய ஜாதகமும் அதில் இருந்தாக கேள்விப் பட்டிருந்தாள்.

மாலையில் தட்டான் கூட்டம் ரீங்காரத்துடன் சுற்றி சுற்றி வந்தன. மண்ணிற்கு மேலாக அவை சுற்றிப் பறந்தால் அது மழைக்கான அறிகுறி என்று குழந்தையாயிருந்த காலத்தில், அவள் கேள்விப்பட்டிருந்தாள். மழை வர வேண்டுமென்று விரும்பினாள். சென்னையின் வைகாசி கோடைக்கு சிறிதும் குறைந்ததல்ல மீனம் மாதம். யார பணம் தருவது என்பது குறித்து இன்னமும் விவாதித்துக் கொண்டிருப்பதால் வீட்டில் மின்விசிறிகளே இல்லை.

“தெற்கறையில் படுத்துக் கொள்.அங்கு லேசாகவாவது காற்று வரும்.” இரவுச் சாப்பாட்டின் போது அம்மா சொன்னாள்.

“எங்கு வேண்டுமானாலும் என்னால் தூங்க முடியும்.”

அப்பா சில வருடங்களுக்கு முன்னால் வாங்கி வந்திருந்த ஒரு பழைய டேபிள் ஃபான் அம்மாவின் அறையிலிருந்தது. படிப்பதற்கு என்று எதுவும் சுதா தான் வரும்போது கொண்டு வரவில்லை. அம்மாவின் அறையில் அப்பாவின் புத்தகங்கள் பெரும் குவியலாக இருந்தன. அம்மா இரவில் சிறிதுநேரம் படிப்பாள். எந்தப் புதிய புத்தகங்களும் இல்லை. திறந்தபடியிருந்த ஹிமா கிரி வரதாவின் ’உலகின் வரலாறு’ என்ற புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தாள்.

அறையில் படுக்கை விரிக்கப்பட்டிருந்தது. உடை மாற்றிக் கொண்டு மணி பார்த்தாள். எட்டு நாற்பத்தி ஐந்து. பிரபாகரன் ரம்மி விளையாடிவிட்டு, பியர் குடித்து விட்டு வீட்டிற்குப் போய்க் கொண்டிருப்பான்.

“வேண்டுமென்றால் அந்த ஃபானை இங்கு கொண்டு வந்து வைத்துக் கொள். கொஞ்சம் சப்தம் வரும், ஆனாலும் வேலை செய்யும்.” சொல்லிக் கொண்டே அம்மா உள்ளே வந்தாள்

“இல்லை, வேண்டாம்.”

அம்மா சீக்கிரம் போக வேண்டும் என்ற பாவனையைக் காட்டி, தான் படுக்கப் போவது போல படுக்கையில் உட்கார்ந்தாள்.

“இன்னமும்..” அம்மா பேச விரும்பினாள்.

“சொல்.”

“ஐந்தாண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பிறகு பிரிவதென்பது..”

அவள் எதுவும் பேசவில்லை.

“ஜனங்களுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பார்கள்?”

அம்மாவின் முகத்தை பார்க்க முடியாதபடி, அவள் லேசாகத் திரும்பிக் கொண்டாள்.

“யாருடனாவது போனில் பேச வேண்டுமென்றால் இங்கிருந்து எப்படிப் பேசமுடியும்?” பேசுவதற்கு வேறு விஷயம் கிடைத்ததைப் போல அவள் கேட்டாள்.

“பார்மசியின் அருகே இப்போது ஒரு புதிய பூத் வந்திருக்கிறது. எங்கு வேண்டுமானாலும் பேச முடியும்.”

மீண்டும் அவளுக்குள் வார்த்தை தடுமாற்றம்.

“நீ என்ன முடிவு செய்திருக்கிறாய்?”

“நான் அதுபற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

“நான் வேண்டுமானால் பிரபாகரனிடம் பேசட்டுமா?”

“வேண்டாம்,வேண்டாம்,” சுதா அவசரமாகச் சொன்னாள்.

அம்மா இரக்கமாகப் பார்த்தாள். “சமாதானமாகப் பேசத் தேவையில்லை அம்மா “ என்று சுதா சொன்னாள்.

அம்மா போய் விட்டாள்.

அம்மா இதுபற்றி மீண்டும் பேசமாட்டாள் என்று சுதாவிற்குத் தெரியும். மௌனமாக ஒப்புதல் தெரிவித்தல் அம்மாவினுடைய இயற்கை என்று அவளுக்குத் தெரியும். பாரிச வாயுவால் தாக்கப்பட்ட அப்பா ஒன்றரை ஆண்டுகள் படுத்த படுக்கையாகவே இருந்தார். அந்த நேரத்தில் தான் பட்ட கஷ்டத்தை அம்மா ஒரு போதும் யாரிடமும் சொல்லிக் கொண்டதில்லை. அப்பாவினுடைய மொத்த வருமானத்தையும் அவருடைய சித்தியின் மகள் பறித்துக் கொண்டதை மற்றவர்கள் விவாதித்த போதும், அம்மா அதுபற்றிப் பேசியதேயில்லை என்பது அவளுக்குத் தெரியும்.

“பெரியம்மா உன்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்பி இருக்கிறாள் ” அடுத்த நாள் காலையில் அம்மா சொன்னாள்.

சுதா தயங்கினாள்.

’பால்காரி ஜானு பெரியம்மாவின் பக்கத்து வீட்டுக்காரி, செய்தியை அவள்தான் சொல்லியிருக்கிறாள்.’

“சரி, நான் போய்ப் பார்க்கிறேன்.”

“போன தடவையே போகிறேன் என்று சொன்னாய்,ஆனால் போகவில்லை.”

“சரி, நான் போகிறேன்.”

“அவளுக்கு எண்பத்தி நான்கு வயதாகி விட்டது.எவ்வளவு நாள் இருப்பாள் என்று யாருக்குத் தெரியும். பார்வை குறையும் வந்துவிட்டது. ஆனால் வேறு ஒரு பிரச்னையுமில்லை.” பெரியம்மா தன் தங்கையைப் பார்ப்பதற்காக அடிக்கடி வருவாள். விசாலம் அக்காவின் தலைமுடியை விதவிதமாக அலங்கரிப்பாள். அந்தியில் மூன்று குழந்தைகளையும் சத்தமாக சுலோகங்கள் சொல்ல வைப்பாள். பெரியம்மாவிற்குத் தன் படுக்கையைக் கொடுத்து விட்டு பாட்டி தான் தரையில் படுத்துக் கொள்வாள். குழந்தைகளுக்கு கதை சொல்ல பெரியம்மாவிற்குப் பிடிக்கும். விசாலம் அக்கா தவிர்க்கப் பார்ப்பாள். சந்திரி தூங்கி விடுவாள். பெரியம்மா சுதா குட்டியை பிடித்துக் கொண்டு விடுவாள். பாட்டி அரைத் தூக்கத்தில் கதை கேட்டுக் கொண்டிருப்பதாக சுதா நினைப்பாள்.

குளத்தில் குளிக்கும் போது சித்தி கோமனின் நீண்ட முடியைப் பிடித்து இழுத்த கதை, கோவலன் கண்ணகி கதை என்று எல்லாமும் சொல்வாள். அவள் மதுரைக்குப் போயிருந்த போது பெரியம்மா சொன்ன கதையை ஞாபகப்படுத்திக் கொண்டாள்.கண்ணகி எப்படித் தன் மார்பைத் திருகி எறிந்து நகரத்திற்கு தீ வைத்தாள் என்பதைத் தான் நேரில் நின்று கவனித்ததைப் போல விளக்குவாள். பெரியம்மாவிற்கு அவள் ஏதாவது பரிசு வாங்கித் தர விரும்பினாள். கடைக்குக் கிளம்பும்போது பிரபாகரனுடன் சண்டை வர, ரயிலுக்கு வரும் நேரம் வரை கோபமாகப் படுக்கையிலேயே கிடந்தாள்.

அவள் பெரியம்மாவை கடைசியாகப் பார்த்தது தன் கல்யாணத்திற்கு முதல் நாள் ஆசீர்வாதம் வாங்கப் போன போதுதான். அது நடந்து ஐந்து ஆண்டுகளாகி விட்டன. பாட்டி உயிரோடிருந்த நாளிலும் அவளுக்கு பெரியம்மாவைத்தான் பிடிக்கும். அந்த ஐந்தாண்டுகளில் ஏழு தடவை அவள் வீட்டிற்கு வந்திருக்கிறாள். ஆமாம்.ஏழு. இரண்டு முறை அவளோடு பிரபாகரன் இருந்திருக்கிறான். பெரியம்மா ஒவ்வொரு முறையும் அவளைப் பற்றிக் கேட்பாள், இரண்டு, மூன்று பர்லாங் தூரத்தில்தான் பெரியம்மா இருந்தாளென்றாலும், ஒவ்வொரு முறையும் அவளால் ஏதாவது ஒரு காரணத்திற்காக போக முடியாமல் போனது.

அன்றும் காட்டுக் கோழி தன் குஞ்சுகளோடு வந்தது. முதல் நாள் பயப்பட்டது போல அது பயப்படுவதாகத் தெரியவில்லை. அவள் சிறிது நெருக்கமாகப் போனாள். ஆமாம், தாயும் , குஞ்சுகளும் நன்றாக இருந்தன. சூரியனின் கதிர்கள், அவற்றின் சிறகுகளில் பட்டு, மண்ணில் பரவுவதை கவனித்தாள்.

“யாரோ வந்திருக்கிறார்கள்..” குரலைக் கேட்டவுடன் குஞ்சுகள் கலைந்தன.

ஸ்ரீதேவி அம்மாவும்,அவளுடைய தங்கையும் முற்றத்தில் நின்றிருந்தனர். அவர்களை உட்காரச் சொல்லி விட்டு அம்மா, ஜானுவிடம் டீ தயாரிக்கச் சொன்னாள். அம்மா சுதாவை சிறிது விசனமாகப் பார்த்து விட்டு உள்ளே போனாள். ’நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறாய் ’என்பதாக அந்தப் பார்வை சொன்னது.

“உட்கார்ந்து கொள் சுதா. நான் வெளிப்படையாகப் பேசினால் ,அதை நீ தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது.”

“சொல்லுங்கள்.”

“ஏன் சுற்றி வளைக்க வேண்டும்?நான் கேள்விப்பட்டது உண்மையென்றால், விஷயம் மோசமாகி விட்டது என்றுதான் அர்த்தம்.”

“மோசமாகி விட்டதுதான், ஆனால் வேறு வழியில்லை” சுதா சிரிக்க முயற்சித்தபடி அமைதியாகச் சொன்னாள்.

ஸ்ரீதேவி அம்மாவின் முகம் கருமையானது தன் தங்கையை அர்த்தத்துடன் பார்க்க,அவள் அக்குறிப்பைப் புரிந்து கொண்டவளாக “நாராயணன் குட்டி எழுதியிருந்தது சரிதான். குடும்பத்திற்கு அவமானம் தரும் விஷயம்.”

சுதா அமைதியாக நின்றாள்.

“ஐந்தாண்டுகள் வாழ்ந்து விட்டு ,முடிவு கட்டுவதென்பது…”

மேலும் பேசு என்பது போல தேவி அம்மா தங்கையைப் பார்த்தாள்.

“கண்டிப்பாக அவன் பக்கத்தில் தவறுகள் இருக்கின்றன.ஆனால் அவற்றை நீ பொறுத்துப் போக வேண்டும். திருமணத்தின் அர்த்தம் அதுதான். உன் அம்மா சகித்துக் கொண்ட விஷயங்கள்.”

சுதா சிரிக்க முயற்சித்தாள். அவள் முதலில் சொல்ல விரும்பியது : “தவறு என்னுடையதுதான் அம்மா, பிரபாகரனுடையதல்ல.” ஆனால் எதையும் சொல்ல வேண்டாமென்று அவள் முடிவு செய்தாள்.

அவர்கள் பேசிக் கொண்டேயிருந்தனர். தனக்கு விருப்பமில்லாதவற்றை கேட்க விரும்பாத போது தன் காதுகளை அடைத்துக் கொள்ளும் கலை அவளுக்கு குழந்தைப் பருவத்திலிருந்து இயல்பாகவே வந்திருந்தது. நாவல்களில் மறந்து போன பெயர்கள்,பாத்திரங்கள்,இடங்கள் என்று ஒவ்வொன்றையும் ஞாபகப்படுத்திக் கொள்ளத் தொடங்கும் போது, குரல்கள் தொலைவில் கேட்பதாகிவிடும்.

“நான் சொன்னதெல்லாம் பிரயோஜனமில்லாதது என்று நினைக்கிறாயா?” என்று புறப்படும் போது தேவி அம்மா கேட்டார்.

“இல்லை.”அவள் சிரித்தாள்.

“நான் சொன்னதில் சிறிது உண்மை இருக்கிறது என்று தெரிகிறதல்லவா?”

“ஆமாம்.”

அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.”நீ என்ன முடிவு செய்திருக்கிறாய்?”

“நான் யோசிக்க வேண்டும்.” சிரித்தபடி சொன்னாள்.

தான் எடுத்துக் கொண்ட வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டதென்ற திருப்தியில் தேவி அம்மா அகலமாக வாயைத் திறந்து, சிரித்தபடி புறப்பட்டுப் போனாள்.

“பெரியம்மாவைப் பார்க்க எப்போது போகப் போகிறாய்?” அம்மா கேட்டாள்.

“நான் போகிறேன்.”

தன் பங்கு அறிவுரையைச் சொல்ல பெரியம்மாவும் தயாராக இருப்பாள். அவளோடு பள்ளியில் படித்த சுமதி தன் மூன்று வயது பெண்ணோடு மதியம் வந்தாள். தச்சர்கள் காலனியில் இடத்தில் அவள் தினமும் சுதாவுக்காக காத்திருப்பாள். அவள் மூக்கிலிருந்த மச்சம் இப்போது பெரிதாகி விட்டிருந்தது. பத்தாவது முடிக்கும் முன்பே அவளுக்கு திருமணமாகி விட்டது.

“எப்படியிருக்கிறாய் சுமதி?”

“உம்.போய்க் கொண்டிருக்கிறது.”

வயலட்டும், சிவப்பும் கலந்த நவீன சரிகை புடவை அணிந்திருந்தாள். துபாயில் வேலை பார்க்கும் அவள் கணவன் வாங்கி வந்திருக்க வேண்டும். இரண்டு வருடங்களுகொரு முறை இரண்டு மாத விடு
முறையில் வருவான். சுமதியின் கழுத்திலும்,கைகளிலும் தங்கம் குவிந்து கிடந்தது.

“நீ வந்திருப்பதாக கேள்விப்பட்டேன்.கொஞ்ச நாட்களிருப்பாயா?”

“ஆமாம்.சில நாட்கள்.”

“அடுத்த திங்களன்று வீடு கிரகப்பிரவேசம் இருக்கிறது. நீ கட்டாயம் வரவேண்டும் சுதா குட்டி.”

அந்தக் குழந்தை தாயின் புடவையிலுள்ள பூக்களைத் தடவிக் கொண்டு இருந்தது. அதன் தலையை நீவியபடி“ இவளுடைய பெயரை மறந்து விட்டேன்,” என்றாள் சுதா.

“கார்த்திகா.”

குழந்தையின் கையைப் பிடித்தபடி சுதா அதை தன்னருகே அழைக்க, அது தாயின் புடவையோடு ஒட்டிக் கொண்டது.

“ஏதோ நடந்ததென்று கேள்விப்பட்டேன்.”சுமதி நேரடியாகப் பேசினாள்.

“ஓ, நீயும் கேள்விப்பட்டாயா…”

“சங்கரன் அண்ணனின் மனைவி சொன்னாள.நான் நம்பவில்லை. அது உண்மையா சுதா குட்டி?”

“ஆமாம்,ஒரு வகையில்.”

சுமதியின் கண்கள் விரிந்தன. ”என்னை விட அதிகம் படித்த, அறிவான பெண்ணுக்கு நான் அறிவுரை சொல்கிறேன் என்று நினைக்காதே. எந்த வகையில் பார்த்தாலும் சேர்ந்து வாழ்வதுதான் சரியாக இருக்கும்.”

சுதாவின் மிக அருகே வந்து மெதுவாகச் சொன்னாள்.

“சரி.யோசிக்கிறேன்.”

“இப்போது குழந்தை வேண்டாம் என்று யோசித்தது தவறு.ஆணோ, பெண்ணோ எதவாக இருந்தாலும் சரி, இந்த மாதிரியான கெட்ட சிந்தனைகள் வந்திருக்காது.”

சுதா அவளை ஆச்சர்யமாகப் பார்த்தாள். கெட்ட சிந்தனைகள்’ மனதில் குறித்துக் கொண்டாள். சுமதி போய்விட்டாள்.

பால் கொண்டு வந்த ஜானு, பெரியம்மா மீண்டும் சுதாவை விசாரித்ததாகச் சொன்னாள்.

“நீ போய் பார்த்து வருவது நல்லது.”அம்மா சொன்னாள்.

“நாளை போகிறேன்.”

“அவளுக்குப் பணம் தேவைப்படாது. ஆனால் ஏதாவது கொடு.விசாலம் போன போது ஐம்பது ரூபாய் கொடுத்தாள்.அதை போகிறவர்கள் வருகிறவர்களிடமெல்லாம் பத்து நாள் சொல்லிக் கொண்டிருந்தாளாம்.”

அம்மா சிரித்தாள். அவள் வந்ததிலிருந்து அம்மா முதல் முறையாக இப்போதுதான் சிரித்தாள். முகத்தில் அந்த இருள் விலகியிருந்தது. விசாலம் அக்காவுடன் தனக்குப் போட்டியில்லை என்று அவள் சொன்னால் என்ன ஆகும்?

திங்களன்று புறப்பட்டு விட முடிவு செய்தாள். இரண்டு வாரம் முடியும் வரை அவள் காத்திருக்கப் போவதில்லை. இந்த மூன்று நாட்களிலேயே அவள் போதுமான மனத்துன்பத்தை அடைந்து விட்டாள். ஹைதராபாத்தை அழைக்க வேண்டுமா. தொலைபேசி எண்ணை நோட்டில் குறித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய அலுவலக எண் மனதில் இருந்தது.

அவளுக்கு டிக்கெட் எடுக்க யாருமில்லை. பெண்கள் வண்டியில் அவள் ஏறிக் கொள்ளலாம். அது ஒரு ராத்திரிப் பயணம்தான்.

கிராமத்திலிருந்து கூட அழைக்கலாம் என்று அவன் சொல்லியிருந்தான். ‘முடிந்தால்’ என்பதையும் சேர்த்துச் சொன்னான்.

காலை உணவிற்குப் பிறகு “பெரியம்மாவைப் பார்த்து விட்டு வருகிறேன்.” சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

“ஜானுவையும் அழைத்துக் கொண்டு போ.”

“இல்லை.வேண்டாம்.”

அவள் முதலில் தச்சர் காலனியின் புது வீட்டிற்குப் போனாள். சுமதி மகிழ்ச்சியில் என்ன செய்வதெனத் தெரியாமல் நின்றாள்.இரண்டு பேர் ஜன்னல்களுக்கு வார்னிஷ் அடித்துக் கொண்டிருந்தார்கள். அவள் வீட்டைச் சுற்றிப் பார்த்தாள்.

“இரண்டு படுக்கை அறைகளிலுமே இணைப்புக் குளியலறைகள் உண்டு.” சுமதி பெருமையாகச் சொன்னாள். ஏதாவது குடிக்கச் சொல்லி வற்புறுத்தியபோது சுதா மறுத்தாள்.

“ஜூலையில் வருவதாக அவர் எழுதியிருக்கிறார்.”

“உன்னையும் துபாய்க்கு கூட்டிக் கொண்டு போகச் சொல். நீயும் அந்த இடத்தைப் பார்க்கலாம்.”

“அது நடக்காது.பெரிய சம்பாத்தியம் உள்ளவர்களுக்குதான் அது சாத்தியபபடும் என்று சொல்கிறார்.” மொத்தத்தில் சுமதி மகிழ்ச்சியாக இருந்தாள்.

“நான் கிளம்ப வேண்டும் சுமதி. பெரியம்மாவைப் பார்க்க வேண்டும்.”

“நான் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்.”

“நிச்சயமாக.” விடை பெற்றுக் கொண்டாள்.

மூங்கில் காட்டைக் கடந்த போது, ஒடை வற்றிப் போயிருந்ததைப் பார்த்தாள்.இரண்டு பக்கத்திலும் முட்புதர் மண்டிக் கிடந்தது. வருடம் முழுவதும் தாராளமாக தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும் பகுதி அது. மழைக் காலத்தில், தண்ணீர் மிக அதிகமாகி கால்வாய்க்குக் கீழே ஒரு சிறு ஆறு போல இருக்கும்.

அந்த வீடு பாட்டனாரின் காலத்தில் கட்டப்பட்டது. கேட் ஹவுசிற்கு பதிலாக இப்போது மூங்கில் தடுப்பு வாசல் இருக்கிறது.சுதா முன் முற்றத்திற்குப் போனாள். அங்கு யாருமில்லை. மூங்கில் பாயில் மிளகு காய வைக்கப்பட்டிருந்தது.சிறிது நேரம் அங்கு தயக்கமாக நின்றாள். தங்கம் அக்கா வராந்தா பக்கம் வந்தாள்.

“யார் வந்திருக்கிறார்கள் பாருங்கள்! இன்று காலைதான் பாட்டியைப் பார்க்காமலே நீங்கள் ஊருக்குப் போய் விடுவீர்கள் என்று புலம்பிக் கொண்டிருந்தார்கள்.”

அங்கிருந்த நாற்காலியில் அவளை உட்காரச் சொல்லி விட்டு தன் குடும்பக் கதையைச் சொன்னாள். அவளுடைய இரண்டு மகன்களும், தேர்விற்காக கடந்த வாரம் தான் விடுதிக்குப் போனார்கள் என்றும்,
மகள் ஒன்பதாம் வகுப்பு படிப்பதாகவும், தாயின் மரணத்திற்குப் பின்பு தங்கைகள் சொத்தைப் பிரித்து கிராமத்தில் தங்களுக்கு வீடுகள் கட்டிக் கொண்டு தங்கி விட்டதாகவும் கதை நீண்டது.

“இந்தச் சிதைந்த வீட்டை என்னிடம் தள்ளி விட்டார்கள்.எனக்கென்று பேச யாருமில்லை.” தன் கணவனின் இறப்பைப் பற்றிப் பேசிய போது குரல் நடுங்கியது. கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“பெரியம்மா எங்கே?”

“வடக்கறையில் இருக்கிறார்கள். பார்வை குறைந்து விட்டது. யார் கையையும் பிடித்துக் கொண்டு நடப்பது பிடிக்கவில்லை. எப்போது எங்கே விழுவார்களோ யாருக்குத் தெரியும்.”

“எனக்காக யாரும் கஷ்டப்பட வேண்டாம்.”பெரியம்மாவின் குரல் கதவருகே கேட்டது.

பெரியம்மா தன் இரண்டு கைகளையும் கதவுச் சட்டத்தில் வைத்து, கால்களை மிகச் சரியாக வராந்தாவில் வைத்தாள். சுதா மிக வேகமாக அவளருகில் போனாள். பெரியம்மா நிமிர்ந்து நின்றாள். அவளுடைய கஞ்சிப் பதமான ஆடைகள் வெண்ணிறமாக ஒளிர்ந்தன. இளம்பருவத்தில் அவள் பார்த்த அந்த பிரகாசம் சிறிதும் குறையாமல் அப்படியே இருந்தது. கூந்தல் முடிச்சு இன்னமும் கனமான முடிச்சாகவே இருந்தது. சித்தியின் கதையை அவள் எப்போது கேட்டாலும், பெரியம்மா தன் விரிந்த கூந்தலுக்குள் கொமப்பனை ஒளித்து வைத்திருந்ததாக கற்பனை செய்து கொள்வாள்.

தங்கம் அக்கா நாற்காலியை இழுக்க முயன்ற போது, “இல்லை, நான் இங்கேயே உட்கார்ந்து கொள்கிறேன். உட்கார் சுதா குட்டி.”என்றாள்.

பெரியம்மாவின் கைகள் அவள் கரத்தை நோக்கி நீண்டிருந்தன. அவள் பெரியம்மாவின் அருகிலுள்ள மரக்கட்டையில் உட்கார்ந்தாள்.

“நீ குண்டாகியிருக்கிறாய் சுதா குட்டி!”

சுதா தன் தோள்பட்டையைப் பார்த்துக் கொண்டாள்.ஆமாம்,அவள் பருத்து இருக்கிறாள்.

“என்னை நோக்கி சில அடிகள் எடுத்து வைக்கும் போது லேசாக மூச்சுத் திணறினாய். உன்னைப் பார்க்காமலே உன் சுவாசத்தை வைத்தே என்னால் அனுமானிக்க முடியும்.”

பெரியம்மா சிரித்தாள்.அவள் கண்களில் உயிரில்லையெனினும் முகத்தில் சுருக்கமேயில்லை. கழுத்தில் மட்டும் வயது தெரிந்தது.

“தங்கம்,கொஞ்சம் டீ போடு. பலாச் சக்கை இருந்தால் சிறிது வறுத்து வை.”

“இல்லை.எனக்கு எதுவும் வேண்டாம். அரை கப் டீ போதும்.”

தங்கம் சமையலறைக்குப் போகும் வரை பெரியம்மா காத்திருந்தாள்.

“என்ன முடிவு செய்திருக்கிறாய் பெண்ணே?” பெரியம்மாவின் கேள்வி திடீரென வந்தது. சுதா குழம்பினாள்.

“கவலைப்படாதே. உன்னை கோபிக்கவோ,குற்றம் சொல்லவோ நான் வரச் சொல்லவில்லை.நாம் சந்தித்து நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டன, இல்லையா?”

சுதா நிம்மதியாக உணர்ந்தாள்.

“நான் எதைப் பார்க்கிறேனோ அதைப் பற்றிப் பேசும் போது இவர்கள் எல்லாம் சிரிக்கிறார்கள். இரண்டு கண்களிலும் காட்ராக்ட் பாதித்திருக்கிறவளுக்கு என்ன தெரியும் என்று நினைக்கிறார்கள். நான் பார்க்குமளவிற்குஅவர்களால் பார்க்க முடியுமா?” தங்கம் கேட்டுக் கொள்ளட்டும் என்பது போல சிறிது சத்தமாகப் பேசினாள்.

“என்ன முடிவு செய்திருக்கிறாய்?” குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டாள்.

சுதாவிற்கு சோர்வேற்பட்டது. மூச்சு வேகமானது.

“அவனோடு உனக்குப் போதுமென்று தோன்றி விட்டால் அதற்கு முடிவு கட்டி விடவேண்டும். திருமணம் என்பது அந்தரங்கமான விஷயம். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களைச் சமாதானப்படுத்துவதற்காக தேரை இழுப்பது போல நடிப்பதில் அர்த்தமில்லை.”

சுதா பெருமூச்சு விட்டு,கால்களை நகர்த்தி உட்கார்ந்தாள். பெரியம்மாவின் தலை அவளருகே வந்தது.

“எனது முதல் கணவரை நீங்கள் யாரும் பார்த்திருக்க முடியாது.”

“அம்மா பார்த்திருக்கிறாள்.அவர் பாட்டு வாத்தியார்,இல்லையா,பாகவதர் ?”

“அதுதான் சிக்கல்.அவர் பாட்டு வகுப்புகள் நடந்த இடம் பிஸாரதியின் வீடு. எங்கள் வீட்டில் சாப்பாடு. அவர் நல்ல பாடகர். காதில் சிவப்பு கடுக்கன்களும், நெற்றியில் சந்தனப் பொட்டும் வைத்திருப்பார்.எனக்கு அவை மிகவும் பிடித்திருந்தன.”

பெரியம்மா அவள் தலையைக் கோதினாள்.

“ஒரு வருடமாகுமுன்பே அவர் பிரிந்து போய்விட்டார்.”

“ஆமாம், அம்மா சொல்லியிருக்கிறாள்.”

“அவர் விருப்ப்பட்டு போகவில்லை .நான்தான் போகச் சொன்னேன்.”

பெரியம்மா முணுமுணுத்தாள். அவள் சிரித்த போதும் கண்கள் தொலைவை வெறித்திருந்தன.

“எனக்குத் தருவதற்கென்று அவரிடம் எதுவுமில்லை. நான் அதைக் கடந்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு பெண்ணைப் போலப் பேசுவார். ஆண் என்றால் உயிரோட்டமாகவும், துடிப்பாகவும் இருக்க வேண்டாமா? நம் உறவை முறித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டேன்.”

பெரியம்மாவின் முதல் கல்யாணம் பற்றி சுதா கேள்விப்பட்டிருந்தாலும், அத்தனை விவரங்கள் தெரியாது.

பிறகுதான் தாத்தா வந்தார்.அவர் உப்பு துறையில் வேலை பார்த்தவர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். அவரும்,மூன்று குழந்தைகளும் இறந்து போய் விட்டார்கள்.பெரியம்மா தான் இன்னும் இருக்கிறாள்.

“நீ பெரியப்பாவைப் பார்த்திருக்கிறாயல்லவா?அவர் அழகானவரில்லை.”

“நான் குழந்தையாக இருந்தபோது பார்த்திருக்கிறேன். அவர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார்.”

“இந்தப் பகுதியில் யாரும் அவரைப் போல இல்லை. விழாக்கால ஊர்வலங்களின் போது முதல் ஆளாய் நிற்பார். யானைக்கு மதம் பிடித்தால் ,மாதவன் நாயர் வேண்டும். பதினெட்டு வகையான வண்ண
பட்டாசு வகைகளை அவரால் மட்டும்தான் எதிர்கொள்ள முடியும்!”

தங்கம் அக்கா டீ கொண்டு வந்தாள். அவள் அங்கிருக்கும் வரை பெரியம்மா கடுமையான பாவனையோடிருந்தாள். அவள் போன பிறகு சிரித்தாள்.

“வெளிப்பார்வையில் அவர் பார்ப்பவர்களுக்கு கடுமையான பாம்பாகத் தெரிவார் .பொறுமையிழந்து, சண்டை போட்டு கோபித்துக் கொள்வார். எவ்வளவு மென்மையானவர் என்று எனக்கு மட்டும் தான் தெரியும். குளிர் என்று நான் சொல்லி விட்டால் போதும் தவித்து விடுவார்.”

பெரியம்மாவின் சிரிப்புச் சத்தம் அதிகமானது.

தன் பிரச்னைகளை ஒதுக்கி வைத்து விட சுதா முயன்றாள். சிறு வயதில் தங்களுக்குக் கதைகள் சொல்லும்போது எப்படி மகிழ்ச்சியாகப் பேசுவாளோ ,அப்படியே இப்போதும் பேசினாள்.

“கவலைகள் இல்லாமலிருந்தாலும் கஷ்டம்தான். குட்டிராயனோடு…”

“என்ன ?”

“கிளர்ச்சி… ஆணைத் தேடும் தவிப்பு. உன்னை அடக்கிக் கொள் என்று சொல்லிக் கொண்டேன். ஆனால் ,எந்தப் பயனுமில்லை, உனக்குப் புரிகிறதா?”

அந்த வாக்கியத்தை முடிக்காமலே பெரியம்மா வாயை அகலமாக்கிக் கொண்டு சிரித்தாள். அவள் பற்கள் முழுவதும் சீராக இருந்ததை சுதாவால் உணர முடிந்தது.

“எனக்கு அப்போது உன் வயதுதான்”

“அவர் இன்னமும் உயிரோடிருக்கிறாரா பெரியம்மா?”

பெரியம்மாவின் முகம் இருண்டது.

“இல்லை.எல்லோரும் போய் விட்டார்கள். நான் மட்டும் தான் இருக்கிறேன். அழைப்பு வரும் வரை நான் காத்திருக்க வேண்டும். யாரும் யாரையும் சாகடித்து விட முடியாது…”

பெரியம்மா எதையோ விட்டுவிட வேண்டுமென்பது போல தலையை ஆட்டினாள். சுவற்றில் தலையைச் சாய்த்துக் கொண்டாள்.

“யார் அந்த மனிதர். சுதா குட்டி?”

“என்ன ?”சுதா மிரண்டு போனாள்.

“நீ யாரையோ விரும்புகிறாய். அவனோடுதான் வாழ விரும்புகிறாய். முடிவும் எடுத்துவிட்டாய். இதுதான் நடந்தது இல்லையா?”

“உங்களிடம் யார் சொன்னது?”

“யாரும் என்னிடம் சொல்ல வேண்டாம்.யார் அது பெண்ணே?’

தனது சங்கடத்தை மறைத்துக் கொள்ள அவள் முயன்றாள்.

“உன்னுடன் வேலை பார்ப்பவரா?”

“இல்லை.”

பெரியம்மாவிடம் அவளால் விளக்கமாகச் சொல்ல முடியாது. மானேஜர் ஜனார்தன்ராவுக்கு தரப்பட்ட விடைபெறு விழாவில் அவனைச் சந்தித்தாள். ராவ் கஸல் பாடகர். விழாவிற்கு வந்த அனைவரும் குடித்திருந்தனர். அறையின் ஒரு பகுதியில் கையில் ஆரஞ்சு ஜூஸ் கிளாசை வைத்துக் கொண்டு அவன் தனியாக நின்றிருந்தான். அடிக்கடி அவளைப் பார்த்துக்கொண்டிருந்த அவன் மெதுவாக அவளை நோக்கி வந்தான். ”கடவுளே, இந்தக் காலடிகள் நேரடியாக என் மனதிற்குள் செல்லுகின்றன” என்று பயத்தோடு தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

ஒவ்வொரு மாதமும் பத்து நாட்கள் மெட்ராசில் கழிப்பேன் என்று அவன் சொன்னதைக் கேட்டு சந்தோஷப்பட்டாள். மனிதர்கள் தங்களை நோக்கி வருவதைப் பார்த்ததும் ”நான் உங்களை தொலைபேசியில் அழைக்கிறேன்” என்று சொன்னான்.

அவள் தலையாட்டினாள். ஏன் அவளை அழைக்க விரும்புகிறான் என்று அவளால் கேட்க முடியவில்லை.

“அவனுக்குத் திருமணமாகி விட்டதா?” பெரியம்மா கேட்டாள்.

“இல்லை.”

“பிரபாகரனுக்குத் தெரியுமா ?’

ஒரு கண யோசனைக்குப் பின்பு சொன்னாள்.“கொஞ்சம் தெரியும்.”

“அப்படியெனில் நீ பிரிந்து விடவேண்டும்?அவன் இன்னொரு பெண்ணைப் பார்ப்பான். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நீ பிரிந்து விடவேண்டும்.”

சுதாவுக்கு வேடிக்கையாக இருந்தது.

“பிரிவதென்பது பழைய நாட்களில் இருந்ததைப் போல சுலபமல்ல பெரியம்மா.”

“ஒருவருகொருவர் வேண்டாமெனில் அதுதான் முடிவு. இல்லையா?”

சங்கடமின்றி இதை விளக்க முடியாத நிலை அவளுக்கு.

“அது அப்படியில்லை. தம்பதியர் இணைந்து மனு செய்ய வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பின்னர் ஜட்ஜ் அழைத்து அவர்கள் இன்னமும் பிரிய வேண்டுமென்ற எண்ணத்தில் இருக்கிறார்களா என்று விசாரிப்பார். ஆமாம் என்று அவர்கள் சொன்னால் இன்னொரு ஆறு மாதம் காத்திருக்க வேண்டும்.”

பெரியம்மாவின் முகத்தில் கோபம் படர்வதைப் பார்த்தாள்.

“காதலிக்கும் இருவர் சேர்ந்து வாழ விரும்பினால், ஜட்ஜ் சம்மதம் தர வேண்டுமா?”

“அதுதான் சட்டம் பெரியம்மா.”

பெரியம்மாவிற்கு திருப்தியில்லை.

“போதுமே சட்டம். என் வாயைக் கிளறாதே. அப்புறம் ஏதாவது பேசி விடுவேன்.”

தங்கம் அக்கா காலியான டம்ளர்களை எடுக்க வந்தாள்.பெரியம்மா தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். “கடந்த வருடம் வரை எங்கள் நிழலை வைத்தே யார் என்பதை பாட்டி கண்டுபிடித்து
விடுவார்கள். இப்போது அவர்களால் அது முடிவதில்லை.” தங்கம் அக்கா சொன்னாள்.

“அறுவை சிகிச்சை செய்தால் பார்வை வந்துவிடும். உங்கள் வயதில் உள்ளவர்கள் செய்து கொள்கிறார்கள். வேண்டுமென்றால் நான் உங்களை மதராசுக்கு அழைத்துச் செல்கிறேன்.”

பெரியம்மா வேதனையாகச் சிரித்தாள்.

“வேண்டாம்,வேண்டாம்.எதற்கு எனக்கு பார்வை வேண்டும்? நிறையப் பார்த்தாகி விட்டது பெண்ணே!”

சுதா எழுந்தாள்.

“இங்கேயே மதியச் சாப்பாடு சாப்பிடலாமே” தங்கம் அக்கா சொன்னாள்.

“இல்லை,வேண்டாம்.அம்மா சமைத்திருப்பாள்.”

“அடுத்த முறை கண்டிப்பாக வாருங்கள்.”

தங்கம் அக்கா உள்ளே போய் விட்டாள்.பதினான்கு வயதுச் சிறுமி மூங்கில் படல் வழியாக உள்ளே வந்தாள். பெரியம்மாவின் பார்வை முகப்பிற்குப் போனது. சிறுமி வராந்தாவில் காலணிகளை கழற்றி வைத்து விட்டு, சுதாவைப் பார்த்து சிரித்து விட்டு சப்தமின்றி உள்ளே போனாள். அவள் கதவருகே போன போது “நீ எங்கே போயிருந்தாய்?” பெரியம்மா கேட்டாள்.

“சாரதாவிடம் புத்தகம் வாங்கப் போயிருந்தேன்” நடுக்கத்தோடு சிறுமி பதில் சொன்னாள்.

“பட்டுப் பாவாடையில் தான் அங்கு போக வேண்டுமா?”

சிறுமிக்கு’முகம் வியர்த்தது.

“அவள் கையில் புத்தகம் இல்லை.சரிதானே ?” பெரியம்மா சுதா பக்கம் திரும்பிக் கேட்டாள்.

“இல்லை,அவளிடமில்லை.”

“சலசலப்பு கேட்டவுடனே எனக்குத் தெரிந்து அது பட்டுப் பாவாடை தானென்று.”

“அவள் சின்னக் குழந்தைதானே?’

வயதுக்கு மீறிய வளர்ச்சி அவளுக்கு.என்னால் பார்க்க முடிகிறது..”

“நான் கிளம்புகிறேன்.”

பெரியம்மா எழுந்தாள்.

அம்மா சொன்னது நினைவுக்கு வர, மெதுவாக கையிலுள்ள பர்ஸைத் திறந்தாள்.

“நீ எனக்கு கொஞ்சம் பணம் தரப் போகிறாய். வேண்டாம். பெரியம்மாவிற்கு என்ன தேவை இருக்கிறது?’

சுதா பர்ஸை மூடினாள்.

“நீ வரும்போது… அடுத்த முறை வரும்போது..” பெரியம்மாவின் குரல் உடைந்தது. “நான் உயிரோடிருந்தால் என்னை வந்து பார்க்க வேண்டும். அதுதான் நான் கேட்க விரும்புவது.”

பெரியம்மாவின் கண்கள் நிரம்பியிருந்தன. அவள் கண்களிலும் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் பெருகியது.

குனிந்து பெரியம்மாவை வணங்கினாள். ஐந்தாண்டுகளுக்கு முன்னால் இதே மாதிரி செய்தது ஞாபகத்திற்கு வந்தது.

சுதாவின் வணங்கிய தலையை மென்மையாகத் தொட்டாள்.

“இந்த முறையாவது நன்றாக இருக்கட்டும்.”

அவள் வெளியே வந்தாள். மார்க்கெட் அருகே வந்தபோது தொலைவில் எஸ்.டி.டி. பூத் பலகை கண்ணில் பட்டது.

இரண்டு தொலைபேசி எண்களையும் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். அழைப்பதற்கு முன்னால் அவள் தன் நோட் புத்தகத்தில் உள்ள அந்த மொபைல் எண்ணைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
அந்த அழைப்பிற்குப் பிறகு, அவள் சீக்கிரம் வீட்டிற்குப் போனால் முற்றத்திற்கு வருகிற அந்த காட்டுக் கோழியையும்,அதன் குஞ்சுகளையும் தவறாமல் பார்க்க முடியும். அவள் வேகமாக நடக்கத் தொடங்கினாள்.
—————————————-
நன்றி : : KUTTIEDATHI AND OTHER STORIES, ORIENT BLACK SWAN PVT LTD

(மலையாள இலக்கிய உலகின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான எம்.டி.வாசுதேவன் நாயர் சிறுகதை,நாவல்,பயண இலக்கியம், இலக்கியத் திறனாய்வு,குழந்தை இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் பங்களிப்புச் செய்தவர்.திரைப்படத் துறையிலும் சாதனை நிகழ்த்தியவர். மஞ்சு,காலம்,ரண்டாம் மொழம் ஆகியவை சிறந்த நாவல் வரிசையிலும் வானப்பிரஸ்தம், ஓளவும் தீர்வும், பந்தனம், குட்டியேடத்தி உள்ளிட்டவை சிறுகதை வரிசையிலும் சிறப்பானவையாக மதிப்பிடப்படுகின்றன. வயலார், வள்ளத்தோள், எழுத்தச்சன் விருதுகள், மற்றும் சாகித்ய அகாதெமி, ஞானபீடம் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.)

 

 

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.