ஆற்றுகை – சில குறிப்புகள்

பீட்டர் பொங்கல்

I

நாமெல்லாம் ஒரு காட்சி அல்லது ஒரு எண்ணம் அல்லது ஒரு உணர்வு என்று ஏதேனும் ஒன்று சிக்கினால் அதைக் கவிதையாக்கப் பார்ப்பவர்கள். கணங்களைப் பகிரும் யுகம் இது. சாமானியர்கள் மொபைலில் போட்டோ பிடித்து போட்டால், கவிஞர்கள் சொற்சிலம்பம் ஆடப் புறப்பட்டு விடுகிறார்கள். நன்றாக எழுதப்பட்டால் இந்த ஸ்நாப்ஷாட்டுகள் ரசிக்கும்படியாகவே உள்ளன.

போட்டோவுக்கும் ஓவியத்துக்கும் என்ன ஒரு வித்தியாசம் என்று யோசித்துப் பார்த்தால் நிகழ்கணத்தை உறையச் செய்வதுதான் புகைப்படத்தின் தனித்தன்மை என்று தோன்றுகிறது- இங்கிருக்கும் புகைப்படம் அதற்கு ஒரு உதாரணம் The Falling Man. இங்கு காலம் உறைந்திருக்கிறது, இல்லையா? இது எத்தனையோ உணர்வுகளையும் எண்ணங்களையும் தூண்டுகிறது.

அது தவிர அழகான புகைப்படங்களும் இருக்கின்றன. பில்டர் சேர்த்தும் சேர்க்காமலும் நாம் பகிரும் புகைப்படங்கள் இப்படிப்பட்டவை, நம் ரசனை குறித்த அறிவிப்புகள். நம்மைப் பொறுத்தவரை இவையும் காலம் உறைந்திருக்கும் கணங்கள். ஆனால் பிறருக்கு வெறும் போட்டோவாக இருக்கலாம் – எல்லாரும்தான் அழகான போட்டோ எடுக்கிறார்கள். ஏன், அதற்கப்புறம் நூறு போட்டோ எடுத்து பகிர்ந்தபின் இது நமக்கும் சாதாரணமாய்ப் போய் விடுகிறது.

முக்கியமான ஒரு காட்சி அல்லது ஒரு எண்ணம் அல்லது ஒரு உணர்வு என்று எதையாவது கவிதையாக எழுதும்போது அது ஒரு ஸ்னாப்ஷாட் என்ற அளவில் அப்போது நமக்கு முக்கியமாக இருக்கலாம். ஆனால் அது போன்ற எத்தனையோ நம்மிடமிருந்தும் பிறரிடமிருந்து எடுத்தடுத்து வரும்போது நமக்கே அதன் கூர்மை மழுங்கிப் போகிறது. அது, நான் அழகாய் இருக்கிறேன், என்று சொல்கிறது. அதற்கு மேல் எதுவும் பேசக்கூடியதாக இல்லை. காரணம், காலம் அதில் உறையவில்லை. புகைப்படம் போலவே இப்படிப்பட்ட கவிதைகளில் காலத்தைக் கைப்பற்றுவதில்தான் இருக்கிறது கலை.

ஸ்ரீதர் நாராயணன் அண்மையில் எழுதிய கவிதை, ஆற்றுகை.

துவக்கத்தில் வருவது ஒவ்வொன்றும் ஒரு கணத்தைக் கைப்பற்றுகிறது.

ஆனால் தொடர்ந்து வரும் வரிகள்தான் கவிதையின் இதயம்.

இனிமையாக ஆரம்பிக்கிறது
இக்கணத்தின் நிலையுறுதி.

எதிர்நோக்கும் தருணங்களின்
அநிச்சயத்தால் கிளர்ச்சியுற்று
ஆற்றுகையின் அடுத்த படியென
அலையும் கடல் நீர்ப்பரப்பின்மீது
கால் பதிக்கிறேன்.

இப்படிப்பட்ட கவிதை ஒவ்வொன்றும் இது போன்ற ஒரு ஆற்றுகையின் துவக்க கணத்தில்தான் நிற்கிறது. அந்தக் கணம் தவறினால் காலம் தப்பி விடுகிறது, பத்தோடு பதினொன்றாகிறது.

அழகல்ல இக்கவிதைகளின் நியாயம் – அநிச்சயத்தின் கிளர்ச்சி. எளிமையாக இருக்கிறதோ, சிக்கலாக இருக்கிறதோ எது எப்படி இருந்தாலும், இந்த ஸ்நாப்ஷாட் கவிதைகளில் உள்ள சொற்களும் படிமங்களும் அர்த்தங்களும் நம் உள்ளத்தில் புரள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு உயிர்ப்பு நிலையில் காலத்தை உறையச் செய்திருப்பதே இக்கவிதையின் வெற்றி.

II

முதல் நான்கு பத்திகள் காட்சி விவரிப்புகள். தராசு முள் சாய்வதற்கு முந்தைய கணத்தைப் போன்ற, ஆற்றலின் சாத்தியங்கள் அத்தனையும் கைகூடி நிற்கும் தருணம்- பல்லவி முடிந்து ஒலிக்கும் கார்வை அடுத்த இடத்துக்குப் போகப் போகிறது. ஜிம்னாஸ்டிக்ஸ் பெண், குறுகிய கட்டைகளில் கைவிரித்து நடக்கிறாள்- அதிலிருந்து தாவிக் குட்டிக்கரணம் அடித்துப் பாயப் போகிறாள். அவநம்பிக்கையுடன் பேசிக் கொண்டிருப்பவர் மனம் மாறும் தருணம். வாண வேடிக்கைகளின் முதல் தீப்பொறி என்று நினைக்கிறேன், இனி அதன் ஒளி வானில் ஒரு சித்திரம் வரையும்.

“கடற்கரை மணலை
குழைத்து எழுப்பும்
சிறு கோபுரம்.”

இதுவரை வந்தது எல்லாம் வெற்றியை நோக்கிய முயற்சிகள் என்றால், இங்கு மட்டும் தோல்வியின் சாயை. கடற்கரை மணலில் எழுப்பும் கோபுரத்தை கடல் நீர் கொள்ளாமல் போனாலும் நாம் கொண்டு போக முடியாது, இல்லையா? ஒரு வியர்த்தச் செயல், இருந்தாலும் இதிலும் ஒரு காரியத்தைச் செய்து முடித்த சந்தோஷம்.

இத்தனைக்கும் அப்புறம்தான்-

“இனிமையாக ஆரம்பிக்கிறது
இக்கணத்தின் நிலையுறுதி.”

நான் துவங்கும் முயற்சிக்கு இது ஒரு இனிமையான ஆரம்பம்தான், இக்கணம் என் மனம் உறுதியாக இருக்கிறது. ஆங்கிலத்தில் Poise என்று ஒரு சொல் உண்டு. ‘balance; equilibrium,‘ என்று ஒரு பொருள். தராசு முள் நிமிர்ந்து நிலையாய் நிற்கிறது. அதே சொல், ‘Poised for growth‘, ‘poised for success‘ என்று ஒரு வழக்காகவும் புழங்குகிறது- ‘ready for something; in the right position and waiting for something,’ என்ற அர்த்தத்தில்.

இனி வருகின்றன இந்த வரிகள்-

“எதிர்நோக்கும் தருணங்களின்
அநிச்சயத்தால் கிளர்ச்சியுற்று
ஆற்றுகையின் அடுத்த படியென
அலையும் கடல் நீர்ப்பரப்பின்மீது
கால் பதிக்கிறேன்.”

தமிழில் ஆற்றுகை என்றால் ஆங்கிலத்தில் performance- adventure sportsகளில் ஈடுபடுபவர்களின் த்ரில் என்ன? உயரத்தில் கட்டப்பட்ட கம்பி அறுபடலாம், நம் படகு காட்டாற்றில் கவிழலாம், கால் பிசகி நாம் கீழே விழலாம்- இந்த ஆபத்து ஒரு கிளர்ச்சியளிக்கிறது, இல்லையா? அந்தக் கிளர்ச்சியே என்னை ஆற்றுகையின் அடுத்த படிக்கும் கொண்டு செல்கிறது-

“அலையும் கடல் நீர்ப்பரப்பின்மீது
கால் பதிக்கிறேன்.”

புதிய ஊர், புதிய உறவு, புதிய வேலை- பழக்கமில்லாத எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்: நீர்ப்பரப்பின் அலைகளைத்தான் நான் அறிகிறேன், அதன் ஆழங்கள் எனக்குத் தெரியாது. ஆனாலும் என் முதல் அடியை இப்போது எடுத்து வைக்கிறேன்.

ஆற்றுகை.

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.