சு வேணுகோபால் சிறப்பிதழ்- பொறுப்பாசிரியர் குறிப்பு

சுனில் கிருஷ்ணன்

suneel

எழுத்தாளர் சு.வேணுகோபால் சிறப்பிதழுக்கு பொறுப்பாசிரியர் எனும் முறையில் தவிர்க்க முடியாத (ஒருகால் சரியாக திட்டமிட்டிருந்தால் தவிர்த்திருக்கக்கூடிய) காரணங்களால் ஏற்பட்ட காலதாமதத்திற்கு இதழுக்கு பங்களிப்பளித்த எழுத்தாளர்களிடமும் வாசகர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். எனினும் நேர்காணலையும் கட்டுரைகளையும் வாசித்தபோது காலதாமதத்தை மீறி மிகுந்த மன உவகை அளித்தது.

பதாகை காலாண்டு எழுத்தாளர் சிறப்பிதழின் மிக முக்கிய அம்சம், அதில் இடம்பெறும் எழுத்தாளரின் மிக விரிவான நேர்காணல் தான். நாஞ்சில் நாடன் அனேக முறை நேர்காணல்கள் அளித்திருந்தாலும்கூட எந்த நேர்காணலிலும் பதிவாகாத பல தகவல்களும் கோணங்களும் பதாகை நேர்காணலில் பதிவாகியிருந்தன. வேணுகோபாலின் முதல் நாவல் நுண்வெளி கிரணங்கள் வெளிவந்து ஏறத்தாழ இருபது வருடங்கள் கடந்துவிட்டன. தமிழில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான வேணுகோபாலுக்கு இதுதான் விரிவான முதல் நேர்காணல் என்பதில் பதாகைக்கு பெருமை என்பதை தாண்டி இது ஒரு அதிர்ச்சிகரமான சங்கடமாகத்தான் இருக்கிறது.

நாஞ்சிலுடன் நேர்காணல் செய்த த. கண்ணன், கோவை சுரேஷ், மற்றும் பல தியாகு புத்தக நிலைய நண்பர்கள் தான் வேணுகோபால் நேர்காணலையும் செய்திருக்கிறார்கள். உரையாடலைப் பதிவு செய்து அதை கேட்டு எழுத்தாக்கி, பின்னர் பிழை திருத்தி பலகட்ட திருத்தங்கள் செய்த பின்னர் அது தன் இன்றைய இறுதி வடிவத்தை அடைந்திருக்கிறது. மிகுந்த உழைப்பைக் கோரும் இப்பணியை த. கண்ணன் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். நாராயண் தேசாய், நாஞ்சில் நாடன், சு.வேணுகோபால் என அவருடைய நேர்காணல்களை வாசிக்கும் போது அவருக்கென நேர்காணல் பாணி ஒன்றை அடைந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. வேணுகோபாலின் இளமைக்கால நினைவுகள், வேளாண்மையுடனும் மண்ணுடனும் அவருக்கிருக்கும் உறவு, தமிழாசிரியர் பணி என்று அவருடைய தனிவாழ்வின் ஏற்ற இறக்கங்களை இயல்பாக பதிவு செய்கிறது. தி.ஜா, லா..ரா, கு..ரா, கு.அழகிரிசாமி, போன்ற முன்னோடி ஆளுமைகளின் கதைகளை நுணுகி ரசித்ததை வாசிப்பது பரவசமாக இருக்கிறது. குறிப்பாக தி.ஜா மீது பெரும் மதிப்பிருக்கிறது. .நா.சு, ஜெயகாந்தன், தமிழினி வசந்தகுமார் என பல ஆளுமைகளைப் பற்றி வாஞ்சையுடன் பேசுகிறார். வேணு எதையுமே எழுதாத கல்லூரி காலம் தொட்டே தன்னை எழுத்தாளராகவே உணர்வதாகச் சொல்கிறார். அவர் வாசித்த மொழியாக்க நூல்களை பற்றி, தொகுக்கப்படாத அபுனைவு கட்டுரைகளைப் பற்றிச் சொல்கிறார். மிக முக்கியமாக அவருடைய படைப்புகளையும் அதன் உருவாக்கப் பின்னணிகளையும் பேசுகிறார். எல்லாவகையிலும் சு.வேணுகோபால் பற்றிய மிக முக்கியமான நேர்காணலாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை.

சு.வேணுகோபால் இணையத்தில் புழங்குபவர் அல்ல. அவருடைய கதைகள் பலவும் இதழ்களில் வெளியாகாமல் நேரடியாகவே புத்தகங்களாக வெளிவந்தவை. கணிசமான எண்ணிக்கையில் நாவல்களாகவும் குறுநாவல்களாகவும் எழுதியதும் காரணமாக இருக்கலாம். வேணுகோபால் மீதும் அவருடைய படைப்புலகின் மீதும் இன்றைய இணைய வாசகர்களுக்கு பரிச்சயம் ஏற்பட வேண்டும் எனும் நோக்கில் இவ்விதழை உருவாக்க முனைந்தோம்.

இணையத்தில் வேணு சரியாகச் சென்று சேரவில்லை எனும் எங்கள் எண்ணத்தை உடைக்கிறது பாஸ்டன் பாலாவின் கட்டுரை. இணையத்தில் வேணுகோபால் பற்றிய தகவல்கள், கட்டுரைகள், விமர்சனங்களை தேடித் தேடி தொகுத்திருக்கிறார். ஜெயமோகன் துவங்கி மல்லிகார்ஜுன் வரை பல்வேறுபட்ட ஆளுமைகள் வாசகர்கள் வலைதளங்களிலும் சமூக வலைகளிலும் எழுதியவற்றை சுட்டிகளோடு அளித்திருக்கிறார். .மோகனரங்கன், செல்வேந்திரன், ராதாக்ருஷ்ணன், பத்மஜா, ஜ்யோவ்ரோம் சுந்தர் என பலர் எழுதியதன் மேற்கோள்களை கொலாஜ் போல் மேஜையில் பரப்பி வெட்டி ஒட்டி வாசிக்க சுவாரசியமாக இருக்கிறது. இத்தனை குறிப்புகளை வாசித்துவிட்டு பாஸ்டன் பாலா இறுதியில் அவைகளைப் பற்றி தன்னளவில் ஒரு மதிப்பீட்டையும் வைக்கிறார்.

சுவேணுகோபாலின் படைப்புலகத்தை பற்றி ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதியிருக்கும் விரிவான கட்டுரையில்இலக்கியம் என்பது மனித உள்ளத்தின் அகத்தில் அடைந்துபோய் விட்டிருக்கும் கீழ்மை, மாசு, கெடுதல் முதலியவற்றைத் தயவு தாட்சண்யமின்றி வெளிப்படுத்தி, மறுக்க இயலாத கவனத்தில் கொண்டு வந்து உணர்வில் நிறுத்தி, அதனால், மனித உள்ளத்தைத் தூய்மையுறச் செய்யும் ஒரு மார்க்கம் என்னும் பொருள்பட ‘Catharsis’ என்று அரிஸ்டாடில் கூறும் இயக்கத்தை சு வேணுகோபாலில் முழுமையாகக் காணலாம்” என்கிறார். வேணுவின் படைப்புலகிலிருந்து இரைச்சலின்றி உணர்வு உச்சம் கொள்ளும் தருணங்களை சுட்டிக் காட்டுகிறார்.

வேணுகோபாலின் ஏழு குறுநாவல்களை முன்வைத்து சிவானந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் கட்டுரை அவருடைய படைப்புலகில், குறிப்பாக குறுநாவல்களில் உள்ள பொது அம்சங்களை அடையாளம் காண்கிறது. “அதாவது,, காமம் சார்ந்த பொதுவான சமூக ஒழுக்க விதிகளை மீறும்போது அதில் ஈடுபடும் அனைவருமே பால்பேதமின்றி குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள். இன்பம் துய்த்தபின் வந்து கவிழ்ந்து கொள்ளும் இக்குற்றவுணர்ச்சியைப் போக்கிக்கொள்ள இயல்பாக இருவருமே மற்றவர்தான் தன்னைப் பயன்படுத்திக்கொண்டார் என்று கருதிக்கொள்வதால் சுய இரக்கத்தின் மூலம் ஆறுதல் கொள்ள முயல்கின்றனர்.,” என்று மோகனரங்கனின் பார்வைக்கு வலு சேர்க்கிறார்.

காலங்காலமாக இலக்கிய உலகில் நிகழ்ந்துவரும் தால்ஸ்தாயா? தாஸ்தாவேஸ்கியா? யார் சிறந்தவர் எனும் விவாதத்திலிருந்து தனது கட்டுரையைத் துவங்குகிறார் ராஜ சுந்தர்ராஜன். அவ்வினாவிற்கு தாஸ்தாவேஸ்கியிலிருந்து தால்ஸ்தாயை நோக்கிய தன் நகர்விற்கு சு.வேணுகோபாலின் எழுத்துக்கள் எவ்வாறு காரணமாயின என்பதை விளக்குகிறார்.

  1. வேறொருவரும் இவரைப்போல் எதிர்பாலினரை ஊடறுத்துக் காட்டும் நுணுக்கம் பெற்றிலர்.”

  2. மனித மனத்தின் கீழ்மைகளைப் பற்றி எழுதுவதில் இவர்க்கு இணை இவரேதான்.”

  3. ஆக, சு.வே.யின் எழுத்துகள் மேலோட்டமாகத்தான் சாதாரணமானவை; உட்கிடையில் மிக ஆழமானவை.”

மேற்கூறிய மூன்று புள்ளிகளை தனது கட்டுரையில் உரிய மேற்கோள்களோடு விவாதிக்கும் ராஜ சுந்தர்ராஜனின் கட்டுரை வேணுகோபாலின் படைப்புலகில் புதிய திறப்புகளை அளிக்கவல்லது.

வெண்ணிலை’ தொகுப்பை முன்வைத்து செந்தில்நாதன் எழுதியிருக்கும் கட்டுரையில்வேணுகோபாலின் கதைகள் நேரடியானவை. விவரணைகள் மூலம் கதைக்களனைச் செறிவு படுத்துபவை. விவசாயம் சார்ந்த அவரது கதைகளில் இவை சற்று அதிகமாகவே தெரியும். அந்த விவரணைகளையே படிமங்களாக்கும் ரசவாதம் இயல்பாகவே அவரது கதைகளில் கைகூடி வருகிறது” என்று ராஜ சுந்தர்ராஜனை ஆமோதிக்கிறார். “அவருக்கு முன்னோடியாகச் சொல்ல வேண்டுமென்றால் அசோகமித்திரனைத் தான் சொல்ல வேண்டும். ஆனால் அசோகமித்திரன் கதைகளில் வரும் கசப்புடன் கூடிய அங்கதத்தை வேணுகோபால் கதைகளில் காண முடிவதில்லை.” என்றும் எழுதுகிறார்.

செந்தில்நாதனைப் போலவே எஸ்.சுரேஷும் வேணுகோபாலை அசொகமித்திரனோடு இணை வைக்கிறார். “கூர்மையான அவதானிப்பு, தனக்கென்றொரு தனிப்பாணியில் அமைந்த நடை, விலகல் தொனி கதைசொல்லல், பாத்திரங்களின் சராசரித்தன்மைஇவை வேணுகோபாலின் எழுத்தை அசோகமித்திரனுடன் ஒப்பிடச் செய்கின்றன. வட்டார வழக்கில் எழுதுகிறார் என்ற மேம்போக்கான வேறுபாடு தவிர ஆழமான வேறொரு அடிப்படை வேறுபாடு இருக்கிறது. அசோகமித்திரன் எப்போதும் ஒரு பார்வையாளராகவே இருக்கிறார். அவர் நிகழ்வுகளைப் பதிவு செய்வதோடு சரி, அது குறித்த தன் பார்வையை வெளிப்படுத்துவது மிக அரிது. ஆனால் வேணுகோபால் சமூக உறவுகளின் சித்தரிப்பில் ஒரு லட்சியவாதியாய் தெரிகிறார்.” என்று அசோகமித்திரனுடன் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் கூந்தப்பனை குறுநாவல் தொகுப்பை முன்வைத்து எழுதியிருக்கிறார் எஸ். சுரேஷ்.

வசீகரமான மொழியமைப்போடு எதார்த்தப் பின்னணியில் வாழ்வின் அவலங்களை அவருடைய சிறுகதைகள் முன்வைத்தன. அழிந்துகொண்டிருந்த விவசாயம், வாய்ப்புகளற்று கருகிச் சாம்பலாகிப் போகும் திறமைகள், சந்தர்ப்பங்கள் சார்ந்து நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறிமாறி நிறம்கொண்டு வாழும் தனிமனிதர்கள், எந்தப் பொதுஅறத்துக்கும் உட்படாத அவர்களுடைய மதிப்பீடுகள் என பல்வேறு தளங்களில் மாறிமாறி இயங்கிவந்த அவருடைய சிறுகதையுலகத்தின் நம்பத்தகுந்த தன்மையாலேயே, அக்கதைகள் உடனடியாக வாசகர்களின் கவனிப்பைப் பெற்றன.என்று சு.வேணுகோபாலின் சிறுகதைகளை பற்றி பேசும் பாவண்ணனின் கட்டுரையில் அவர் கதையுலகில் விரவி கிடக்கும் விசித்திர மாந்தர்களை அடையாளம் காட்டுகிறார். மிகுந்த ரசனையோடு சில சிறுகதைகளின் வாசிப்பு சாத்தியங்களை கோடிட்டு காட்டுகிறார்.

ஜாராஜகோபாலன் சுவேணுகோபாலைப் பற்றி எழுதியிருக்கும் கட்டுரையில் அவருடைய ஒட்டுமொத்த படைப்புகளை கொண்டு அவரை ஏன் தான் ஒரு முதன்மை படைப்பாளியாக கருதுகிறார் என்பதற்கு மூன்று காரணங்களைப் பட்டியலிடுகிறார் – பேசுபொருளைக் கையாளும் விதம், கதாபாத்திரங்கள்,, எழுத்துமுறை என ஒவ்வொன்றையும் விரிவான உதாரணங்களோடு விளக்குகிறார். குறிப்பாக இலக்கியத்தில் காமம் பேசுபொருளாக அடைந்திருக்கும் பரிணாமத்தையும் அதில் சு.வேணுகோபாலின் பங்களிப்பையும் பேசும் இடம் முக்கியமானது. “அவரது கதைமாந்தர்கள் எவருமே தமது திரிபு நிலைக்கு நியாயம் கற்பிப்பதில்லை. அதை வலிந்து மேற்கொள்ளும் பாவனைகளைக் கொண்டிருப்பதில்லை. கதைமாந்தர்கள் முட்செடி உண்ணும் ஒட்டக உவமையை நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பதுதான் சு.வேணுகோபாலது பாத்திரப் படைப்புகளின் வெற்றி,.” எனும் அவதானிப்பை வைக்கிறார் ராஜகோபால

ஆனால் மாயக்கூத்தன் சு.வேணுகோபால் பற்றி எழுதியிருக்கும் கட்டுரையில்அங்கீகரிக்கப்பட்ட உறவுமுறைகளுக்கு அப்பால் ஏற்படும் தொடர்பு மாதிரியான விஷயங்களில் உள்ள என் குறுகுறுப்பு இன்னமும் எனக்குக் குறையவில்லை என்பதால், இந்தக் கதைகளில் இந்த உறவுகளின் நோக்கம் என்ன என்பது புரியவில்லை. வேணுகோபால் இத்தகைய உறவுகளை நிறைய எழுதியிருக்கிறார். ஆனாலும், இவ்வுறவுகளின் காரண காரியங்களை அவர் பேசவில்லை. இந்த உறவுகள் இருக்கின்றன, ஆனால் திருமண பந்தத்தை உடைத்துக் கொண்டு போகும் அளவிற்கு மனிதர்களை ஈர்ப்பது எது? காமம் மட்டும்தானா? எதிர்காலமே தலைகீழாகிவிடும் நிலையிலும் மனிதர்கள் ஏன் அதற்கு துணிகிறார்கள்? ‘ஆட்டம்’ நாவலின் ஒரு பெரும் புள்ளியே இதுதான் என்றாலும், அங்கும் இதன் தாக்கம் மட்டுமே பேசப்படுகிறது. ஏனோ, எழுத்தாளர் இந்த உறவுகளை விவாதிக்கவில்லை. அதனால் அவை ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்துவதோடு நின்றுவிடுகின்றன. ஒரு உயிர் இன்னொரு உயிரை அணைத்துக் கொள்ள வேண்டும் என்பது இயற்கைத் துடிப்புதான். ஆனால், நம் சமூக உறவுக் கட்டுமானங்கள் இவ்வளவு மெலிதாகவா இருக்கின்றன?என்று கேள்வி எழுப்புகிறார்.

வேணு மனிதர்களை நம்புகிறார். அவனுடைய அத்தனை சிடுக்குகளை மீறி அவன் இயல்பாக வாழ்ந்துவிட முடியும் எனும் நன்னம்பிக்கை அவருடைய படைப்புகளில் தென்படுகிறது.” என்று நிலம் எனும் நல்லாள் நாவல் குறித்து நரோபா எழுதியிருக்கும் கட்டுரையில் வேணுகோபால் நிலம் – பெண் எனும் மரபான படிமத்தை நவீன வாழ்க்கைச் சிக்கலுக்கு எப்படி கையாண்டுள்ளார் என்பதை விவரிக்கிறார். பழனி எனும் தனிமனிதனை அலகாகக் கொண்டு சமூக மாற்றத்தைப் பதிவு செய்திருக்கிறார், என கூறும் நரோபா நாவல் மீதான விமர்சனத்தையும் பதிவு செய்கிறார்.

லண்டன் பிரபு வேணுகோபாலின் சிறுகதைகளைப் பற்றி எழுதியுள்ள கட்டுரையில் அவர் காட்டும் உலகின் இருள் அமைதியிழக்க செய்ததை பகிர்கிறார். “மிகச்சில கதைகளில் மட்டுமே வேணுகோபால் யதார்த்த உலகின் கால் தளைகளை அறுத்து சற்றே வானில் எழுகிறார். மனித அற்பத்தனங்களின் சகதியில் ஒரு மலரை முளைக்க வைக்கிறார். அது நம்மில் ஒரு நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்கிறது. அதுவும்கூட இல்லாவிட்டால் அவரது உலகம் தாங்கிக் கொள்ளவே முடியாத இடமாக இருந்திருக்கும்.என்று கட்டுரையை முடிக்கிறார்.

வரலாற்றுப் பின்புலத்தில், ஒட்டுமொத்த தரிசனம் (vision) அளிக்கும் நாவல்களைவிட, ஒரு முரணை முன்வைத்து நறுக்கு தெறித்தாற் போன்ற வடிவத்தில் எழுதப்படும் சிறுகதைகளை விட, சு வேணுகோபாலின் படைப்பூக்கம் திறனுடன் வெளிப்படுவது நெடுங்கதை வடிவத்தில்தான் எனச் சொல்லலாம்.” எனச் சொல்லும் ஸ்ரீதர் நாராயாணன், வேணுகோபாலின் படைப்புலகில் ‘நிறைவின்மை’ எப்படியொரு முக்கியமான பொதுச் சரடாக கோர்த்துச் செல்கிறது என்றெழுதுகிறார்.

அரவிந்த் கருணாகரன் வெண்ணிலை தொகுப்பை முன்வைத்து எழுதியிருக்கும் கட்டுரையில் ஐரோப்பிய நவீனத்துவத்திற்\கும் இந்திய நவீனத்துவத்திற்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டை வேணுகோபாலைக் கொண்டு அலசுகிறார். “காலத்தின் பிரம்மாண்டத்தின் முன் மிரண்டு நிற்கும் தனியனாக, இச்சைகளின் அலைக்கழிப்புகளால் கைவிடப்பட்ட மிருகமாக அவர் தனது கதைமாந்தர்களைக் காட்டவில்லை. மாறாக, சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் மரநிழலில் சேர்த்திவிடத்துடிக்கும், அதற்காக சலிப்பேயில்லாமல் தினசரி ஓடும் ஒருவனில், புதிர்த்தன்மையுடன் “எப்படியோ” குடிகொள்ளும் கூறுகளைச் சுட்டிக்காட்டவே விரும்புகிறார். அர்த்தம் இழப்பாலும் அதனால் ஏற்படும் செயலின்மையாலும் ஒருவன் உணரும் இருண்மையுணர்வை அவர் பேச விழையவில்லை. மாறாக செயலூக்கத்தளத்தில் ஒருவன் உணரும் இருண்மையை, அவன் திடீரென எதிர்கொள்ளும் நிர்க்கதியை, அதை மீறிச்செல்ல துடிக்கும்போது அடையும் எழுச்சியையும் சரிவையும் சொல்லவே முற்படுகிறார்.”

ஆட்டம் குறுநாவலை முன்வைத்து ரா. கிரிதரன் எழுதியிருக்கும் கட்டுரை, அந்த குறுநாவலை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகுகிறது. “பண்டைய காலம் முதல் கற்பென்னும் பெரு நெருப்பு பெண்களின் இருப்பைச் சூழ்ந்திருந்தாலும் நிறை குறை இல்லாது பெண் என்றால் தாய் எனும் அறிதல் சாதாரணமாகத் தோன்றும் சித்திரம் அல்ல. வடிவேலுவின் தாய், மனைவி கனகம், காளையனின் சித்தி என அவனைச் சுற்றியிருப்போர் எல்லாருமே கற்பிழந்த பெண்கள் எனும்போது தெய்வத்தின் சந்நிதியில் எல்லாருமே கண்ணகிதான் என ஆசிரியர் குரல் நாவலை வேறொரு தளத்துக்கு உயர்த்தி விடுகிறது.” எனும் கிரியின் கருத்து வேணுகோபாலின் படைப்புலகை பற்றிய புரிதலுக்கு வலு சேர்க்கிறது.

குமரன் கிருஷ்ணனின் கட்டுரை வேணுகோபாலின் மொழியில் ஊற்றாய்ப் பெருகும் கவித்துவத்தை,யும் அது சட்டென தத்துவ விசாரங்களுக்குள் ஆழமாக இறங்கிச் செல்வதையும் அடையாளம் காட்டுகிறது. “இப்படி பெண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே சுழலும், சிற்றின்பச் சுழலில் உழலும் உள்ளத்தின் ஊசலாட்டங்களை நம்முன் நிறுத்துவதே வேணுகோபாலின் படைப்புகள். அவரின் சிறுகதை மற்றும் நாவல் கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்க வேறுபட்ட அடிப்படைக் கோணங்களை நாம் கண்டடைய முடியும்அவரின் சிறுகதைகள், பெண்களின் பார்வையில், அவர்களையே மையமாக்கி கதை சொல்கின்றன. அவரின் குறுநாவல்களோ ஆணின் மனக்கண்ணாடி வழியே, பெண்ணைப் பேசுகின்றன” என்று புதிய கோணத்தில் வேணுகோபாலின் படைப்புலகைப் பேசும் முக்கிய கட்டுரை இது.

சேதுபதி அருணாசலம் எழுதிய கட்டுரையில்வட்டத்திற்குள்’ மற்றும் ‘மாயக்கல்’ கதைகளை பற்றி விரிவாக பேசுகிறார். ‘வட்டத்திற்குள்’ ஒரு பெண் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறாள் என்பதை விவரிக்கிறது. வேணு எழுதிய ‘மாயக்கல்’ என்ற மாய யதார்த்த கதை. பிற மாய யதார்த்த கதைகளிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதை விவரிக்கிறார். இரண்டு கதைகளையும் ஆஸ்திரேலியாவில் தான் கண்டுணர்ந்த யதார்த்தத்துடன் பொருத்திப் பார்த்து எழுதியிருப்பது வேணுகோபாலின் படைப்புலகத்தில் அவருடைய அவதானிப்புகள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.

பால்கனிகள், இழைகள் ஆகிய இரு குறுநாவல்களை முன்வைத்து கடலூர் சீனு எழுதிய கட்டுரையில் கதையின் நுட்பமான இடங்களை அதன் சமூக பின்னணிகளுடன் பொருத்திப் பார்த்து மதிப்பிடுகிறார். தோப்பிலின் கதையையும் ஜெயமோகனின் வணங்கான் கதையையும் இழைகளுடன் ஒப்பிட்டு எழுதுகிறார். பால்கனிகளின் கிட்ணாவை யாதார்த்தவாதச் சித்தரிப்பின் உச்சமாகவும் ஜெயமோகன் சித்தரிக்கும் சிகண்டினியை காவிய உச்சமாகவும் ஒப்பிடும் இடமும் முக்கியமானது.

ஒரு துவக்க வாசகனாக வேணுகோபாலைத் தான் கண்டடைந்ததையும் அவரை வாசித்தடைந்த இன்பத்தையும் அகிலன் தன்னுடைய கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறார். ஒரு துவக்க வாசகரையும் தேர்ந்த எழுத்தாளரையும் கதையின் ஒரே தருணங்கள் சென்று தைப்பதை கவனிக்க முடிகிறது.

இந்த இதழில் பேயோனின் கவிதையொன்றும் இடம்பெற்றிருக்கிறது.

பாவண்ணன், ஸ்ரீரங்கம் மோகனரங்கன், ராஜ சுந்தர்ராஜன் போன்ற முக்கிய எழுத்தாளர்கள் பதாகை போன்ற இணைய சிற்றிதழில் தங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொண்டது பெரும் நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அரவிந்த் கருணாகரன், செந்தில்நாதன், கிரிதரன், ஸ்ரீதர் நாராயணன், குமரன் கிருஷ்ணன், சேதுபதி அருணாச்சலம், நரோபா, மாயக்கூத்தன் எஸ்.சுரேஷ், கடலூர் சீனு, ராஜகோபால், சிவானந்தம் நீலகண்டன், பாஸ்டன் பாலா, லண்டன் பிரபு, அகிலன் என பலரும் இணையத்தில் தொடர்ந்து எழுதி கவனம் பெற்றவர்கள். மொத்தம் பதினெட்டு கட்டுரைகளும் விரிவான நேர்காணலும் உள்ள இந்த இதழ் வேணுகோபாலின் படைப்புலகை அணுக்கமாய் புரிந்துகொள்ள உதவுகிறது. விமர்சனங்கள், பார்வைகள், நேர்காணலில் வேணுகோபாலின் பதில்கள் முயங்கி ஒரு முழுமையை அளிப்பதாக தோன்றியது. இந்த இதழில் ‘நுண்வெளி கிரகணங்கள்’ பற்றி ஒரு கட்டுரைகூட இடம்பெறவில்லை என்பது ஒரு சிறிய குறையாக எஞ்சுகிறது. நாஞ்சில் நாடன் சிறப்பிதழ் வந்தபோது வெறும் புகழ் பாடி வந்ததாக விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த இதழில் மாயக்கூத்தன், எஸ்.சுரேஷ், ரா.கிரிதரன், நரோபா ஆகியவர்களின் கட்டுரையில் வெவ்வேறு அளவிலான விவாதத்திற்குரிய விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன. ஓரளவு இந்த விமர்சனங்களுக்கான மறுதரப்பை பிறரின் கட்டுரைகளும் வேணுவின் நேர்காணலும் அளிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக பதாகை சு.வேணுகோபால் காலாண்டு சிறப்பிதழ் நம் காலத்தின் முக்கிய படைப்பாளி ஒருவரின் படைப்புலகை நுட்பமாக அதன் ஆழ அகலங்களை பதிவு செய்கிறது. பங்களிப்பளித்த சக பதாகை நண்பர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

ஒரு இனிய நற்செய்தியுடன் இந்த அறிமுக குறிப்பை நிறைவு செய்கிறேன். அடுத்த பதாகை காலாண்டு இதழ், டிசம்பர் மாதம் நண்பர் ரா.கிரிதரனின் பொறுப்பில், எழுத்தாளர் பாவண்ணன் சிறப்பிதழாக வெளிவரவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்து கொள்கிறோம்.

பதாகைக்காக, சுனில் கிருஷ்ணன்

One comment

  1. படோபடம் இல்லாமல், அமைதியாக அதே சமயம் அனைத்துக் கட்டுரைகளிலிருந்தும் முக்கிய புள்ளிகளை அழகாக தொகுத்திருக்கிறீர்கள், சுனில். இதுவே இந்த கனமாக இதழை படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது!
    எழுத்தாளருக்கும், இந்த இதழுக்காக உழைத்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    சிவா கிருஷ்ணமூர்த்தி

    பின் குறிப்பு: உங்கள் கட்டுரையின் ஆரம்ப பாராவில் “மன உவகை அளித்தது” என்று படித்தேன்…அதென்ன மன உவகை? உவகை என்றாலே போதாதா?!

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.