சு வேணுகோபால் சிறப்பிதழ்

சு வேணுகோபால் சிறப்பிதழ்- பொறுப்பாசிரியர் குறிப்பு

சுனில் கிருஷ்ணன்

suneel

எழுத்தாளர் சு.வேணுகோபால் சிறப்பிதழுக்கு பொறுப்பாசிரியர் எனும் முறையில் தவிர்க்க முடியாத (ஒருகால் சரியாக திட்டமிட்டிருந்தால் தவிர்த்திருக்கக்கூடிய) காரணங்களால் ஏற்பட்ட காலதாமதத்திற்கு இதழுக்கு பங்களிப்பளித்த எழுத்தாளர்களிடமும் வாசகர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். எனினும் நேர்காணலையும் கட்டுரைகளையும் வாசித்தபோது காலதாமதத்தை மீறி மிகுந்த மன உவகை அளித்தது.

பதாகை காலாண்டு எழுத்தாளர் சிறப்பிதழின் மிக முக்கிய அம்சம், அதில் இடம்பெறும் எழுத்தாளரின் மிக விரிவான நேர்காணல் தான். நாஞ்சில் நாடன் அனேக முறை நேர்காணல்கள் அளித்திருந்தாலும்கூட எந்த நேர்காணலிலும் பதிவாகாத பல தகவல்களும் கோணங்களும் பதாகை நேர்காணலில் பதிவாகியிருந்தன. வேணுகோபாலின் முதல் நாவல் நுண்வெளி கிரணங்கள் வெளிவந்து ஏறத்தாழ இருபது வருடங்கள் கடந்துவிட்டன. தமிழில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான வேணுகோபாலுக்கு இதுதான் விரிவான முதல் நேர்காணல் என்பதில் பதாகைக்கு பெருமை என்பதை தாண்டி இது ஒரு அதிர்ச்சிகரமான சங்கடமாகத்தான் இருக்கிறது.

நாஞ்சிலுடன் நேர்காணல் செய்த த. கண்ணன், கோவை சுரேஷ், மற்றும் பல தியாகு புத்தக நிலைய நண்பர்கள் தான் வேணுகோபால் நேர்காணலையும் செய்திருக்கிறார்கள். உரையாடலைப் பதிவு செய்து அதை கேட்டு எழுத்தாக்கி, பின்னர் பிழை திருத்தி பலகட்ட திருத்தங்கள் செய்த பின்னர் அது தன் இன்றைய இறுதி வடிவத்தை அடைந்திருக்கிறது. மிகுந்த உழைப்பைக் கோரும் இப்பணியை த. கண்ணன் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். நாராயண் தேசாய், நாஞ்சில் நாடன், சு.வேணுகோபால் என அவருடைய நேர்காணல்களை வாசிக்கும் போது அவருக்கென நேர்காணல் பாணி ஒன்றை அடைந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. வேணுகோபாலின் இளமைக்கால நினைவுகள், வேளாண்மையுடனும் மண்ணுடனும் அவருக்கிருக்கும் உறவு, தமிழாசிரியர் பணி என்று அவருடைய தனிவாழ்வின் ஏற்ற இறக்கங்களை இயல்பாக பதிவு செய்கிறது. தி.ஜா, லா..ரா, கு..ரா, கு.அழகிரிசாமி, போன்ற முன்னோடி ஆளுமைகளின் கதைகளை நுணுகி ரசித்ததை வாசிப்பது பரவசமாக இருக்கிறது. குறிப்பாக தி.ஜா மீது பெரும் மதிப்பிருக்கிறது. .நா.சு, ஜெயகாந்தன், தமிழினி வசந்தகுமார் என பல ஆளுமைகளைப் பற்றி வாஞ்சையுடன் பேசுகிறார். வேணு எதையுமே எழுதாத கல்லூரி காலம் தொட்டே தன்னை எழுத்தாளராகவே உணர்வதாகச் சொல்கிறார். அவர் வாசித்த மொழியாக்க நூல்களை பற்றி, தொகுக்கப்படாத அபுனைவு கட்டுரைகளைப் பற்றிச் சொல்கிறார். மிக முக்கியமாக அவருடைய படைப்புகளையும் அதன் உருவாக்கப் பின்னணிகளையும் பேசுகிறார். எல்லாவகையிலும் சு.வேணுகோபால் பற்றிய மிக முக்கியமான நேர்காணலாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை.

சு.வேணுகோபால் இணையத்தில் புழங்குபவர் அல்ல. அவருடைய கதைகள் பலவும் இதழ்களில் வெளியாகாமல் நேரடியாகவே புத்தகங்களாக வெளிவந்தவை. கணிசமான எண்ணிக்கையில் நாவல்களாகவும் குறுநாவல்களாகவும் எழுதியதும் காரணமாக இருக்கலாம். வேணுகோபால் மீதும் அவருடைய படைப்புலகின் மீதும் இன்றைய இணைய வாசகர்களுக்கு பரிச்சயம் ஏற்பட வேண்டும் எனும் நோக்கில் இவ்விதழை உருவாக்க முனைந்தோம்.

இணையத்தில் வேணு சரியாகச் சென்று சேரவில்லை எனும் எங்கள் எண்ணத்தை உடைக்கிறது பாஸ்டன் பாலாவின் கட்டுரை. இணையத்தில் வேணுகோபால் பற்றிய தகவல்கள், கட்டுரைகள், விமர்சனங்களை தேடித் தேடி தொகுத்திருக்கிறார். ஜெயமோகன் துவங்கி மல்லிகார்ஜுன் வரை பல்வேறுபட்ட ஆளுமைகள் வாசகர்கள் வலைதளங்களிலும் சமூக வலைகளிலும் எழுதியவற்றை சுட்டிகளோடு அளித்திருக்கிறார். .மோகனரங்கன், செல்வேந்திரன், ராதாக்ருஷ்ணன், பத்மஜா, ஜ்யோவ்ரோம் சுந்தர் என பலர் எழுதியதன் மேற்கோள்களை கொலாஜ் போல் மேஜையில் பரப்பி வெட்டி ஒட்டி வாசிக்க சுவாரசியமாக இருக்கிறது. இத்தனை குறிப்புகளை வாசித்துவிட்டு பாஸ்டன் பாலா இறுதியில் அவைகளைப் பற்றி தன்னளவில் ஒரு மதிப்பீட்டையும் வைக்கிறார்.

சுவேணுகோபாலின் படைப்புலகத்தை பற்றி ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதியிருக்கும் விரிவான கட்டுரையில்இலக்கியம் என்பது மனித உள்ளத்தின் அகத்தில் அடைந்துபோய் விட்டிருக்கும் கீழ்மை, மாசு, கெடுதல் முதலியவற்றைத் தயவு தாட்சண்யமின்றி வெளிப்படுத்தி, மறுக்க இயலாத கவனத்தில் கொண்டு வந்து உணர்வில் நிறுத்தி, அதனால், மனித உள்ளத்தைத் தூய்மையுறச் செய்யும் ஒரு மார்க்கம் என்னும் பொருள்பட ‘Catharsis’ என்று அரிஸ்டாடில் கூறும் இயக்கத்தை சு வேணுகோபாலில் முழுமையாகக் காணலாம்” என்கிறார். வேணுவின் படைப்புலகிலிருந்து இரைச்சலின்றி உணர்வு உச்சம் கொள்ளும் தருணங்களை சுட்டிக் காட்டுகிறார்.

வேணுகோபாலின் ஏழு குறுநாவல்களை முன்வைத்து சிவானந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் கட்டுரை அவருடைய படைப்புலகில், குறிப்பாக குறுநாவல்களில் உள்ள பொது அம்சங்களை அடையாளம் காண்கிறது. “அதாவது,, காமம் சார்ந்த பொதுவான சமூக ஒழுக்க விதிகளை மீறும்போது அதில் ஈடுபடும் அனைவருமே பால்பேதமின்றி குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள். இன்பம் துய்த்தபின் வந்து கவிழ்ந்து கொள்ளும் இக்குற்றவுணர்ச்சியைப் போக்கிக்கொள்ள இயல்பாக இருவருமே மற்றவர்தான் தன்னைப் பயன்படுத்திக்கொண்டார் என்று கருதிக்கொள்வதால் சுய இரக்கத்தின் மூலம் ஆறுதல் கொள்ள முயல்கின்றனர்.,” என்று மோகனரங்கனின் பார்வைக்கு வலு சேர்க்கிறார்.

காலங்காலமாக இலக்கிய உலகில் நிகழ்ந்துவரும் தால்ஸ்தாயா? தாஸ்தாவேஸ்கியா? யார் சிறந்தவர் எனும் விவாதத்திலிருந்து தனது கட்டுரையைத் துவங்குகிறார் ராஜ சுந்தர்ராஜன். அவ்வினாவிற்கு தாஸ்தாவேஸ்கியிலிருந்து தால்ஸ்தாயை நோக்கிய தன் நகர்விற்கு சு.வேணுகோபாலின் எழுத்துக்கள் எவ்வாறு காரணமாயின என்பதை விளக்குகிறார்.

  1. வேறொருவரும் இவரைப்போல் எதிர்பாலினரை ஊடறுத்துக் காட்டும் நுணுக்கம் பெற்றிலர்.”

  2. மனித மனத்தின் கீழ்மைகளைப் பற்றி எழுதுவதில் இவர்க்கு இணை இவரேதான்.”

  3. ஆக, சு.வே.யின் எழுத்துகள் மேலோட்டமாகத்தான் சாதாரணமானவை; உட்கிடையில் மிக ஆழமானவை.”

மேற்கூறிய மூன்று புள்ளிகளை தனது கட்டுரையில் உரிய மேற்கோள்களோடு விவாதிக்கும் ராஜ சுந்தர்ராஜனின் கட்டுரை வேணுகோபாலின் படைப்புலகில் புதிய திறப்புகளை அளிக்கவல்லது.

வெண்ணிலை’ தொகுப்பை முன்வைத்து செந்தில்நாதன் எழுதியிருக்கும் கட்டுரையில்வேணுகோபாலின் கதைகள் நேரடியானவை. விவரணைகள் மூலம் கதைக்களனைச் செறிவு படுத்துபவை. விவசாயம் சார்ந்த அவரது கதைகளில் இவை சற்று அதிகமாகவே தெரியும். அந்த விவரணைகளையே படிமங்களாக்கும் ரசவாதம் இயல்பாகவே அவரது கதைகளில் கைகூடி வருகிறது” என்று ராஜ சுந்தர்ராஜனை ஆமோதிக்கிறார். “அவருக்கு முன்னோடியாகச் சொல்ல வேண்டுமென்றால் அசோகமித்திரனைத் தான் சொல்ல வேண்டும். ஆனால் அசோகமித்திரன் கதைகளில் வரும் கசப்புடன் கூடிய அங்கதத்தை வேணுகோபால் கதைகளில் காண முடிவதில்லை.” என்றும் எழுதுகிறார்.

செந்தில்நாதனைப் போலவே எஸ்.சுரேஷும் வேணுகோபாலை அசொகமித்திரனோடு இணை வைக்கிறார். “கூர்மையான அவதானிப்பு, தனக்கென்றொரு தனிப்பாணியில் அமைந்த நடை, விலகல் தொனி கதைசொல்லல், பாத்திரங்களின் சராசரித்தன்மைஇவை வேணுகோபாலின் எழுத்தை அசோகமித்திரனுடன் ஒப்பிடச் செய்கின்றன. வட்டார வழக்கில் எழுதுகிறார் என்ற மேம்போக்கான வேறுபாடு தவிர ஆழமான வேறொரு அடிப்படை வேறுபாடு இருக்கிறது. அசோகமித்திரன் எப்போதும் ஒரு பார்வையாளராகவே இருக்கிறார். அவர் நிகழ்வுகளைப் பதிவு செய்வதோடு சரி, அது குறித்த தன் பார்வையை வெளிப்படுத்துவது மிக அரிது. ஆனால் வேணுகோபால் சமூக உறவுகளின் சித்தரிப்பில் ஒரு லட்சியவாதியாய் தெரிகிறார்.” என்று அசோகமித்திரனுடன் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் கூந்தப்பனை குறுநாவல் தொகுப்பை முன்வைத்து எழுதியிருக்கிறார் எஸ். சுரேஷ்.

வசீகரமான மொழியமைப்போடு எதார்த்தப் பின்னணியில் வாழ்வின் அவலங்களை அவருடைய சிறுகதைகள் முன்வைத்தன. அழிந்துகொண்டிருந்த விவசாயம், வாய்ப்புகளற்று கருகிச் சாம்பலாகிப் போகும் திறமைகள், சந்தர்ப்பங்கள் சார்ந்து நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறிமாறி நிறம்கொண்டு வாழும் தனிமனிதர்கள், எந்தப் பொதுஅறத்துக்கும் உட்படாத அவர்களுடைய மதிப்பீடுகள் என பல்வேறு தளங்களில் மாறிமாறி இயங்கிவந்த அவருடைய சிறுகதையுலகத்தின் நம்பத்தகுந்த தன்மையாலேயே, அக்கதைகள் உடனடியாக வாசகர்களின் கவனிப்பைப் பெற்றன.என்று சு.வேணுகோபாலின் சிறுகதைகளை பற்றி பேசும் பாவண்ணனின் கட்டுரையில் அவர் கதையுலகில் விரவி கிடக்கும் விசித்திர மாந்தர்களை அடையாளம் காட்டுகிறார். மிகுந்த ரசனையோடு சில சிறுகதைகளின் வாசிப்பு சாத்தியங்களை கோடிட்டு காட்டுகிறார்.

ஜாராஜகோபாலன் சுவேணுகோபாலைப் பற்றி எழுதியிருக்கும் கட்டுரையில் அவருடைய ஒட்டுமொத்த படைப்புகளை கொண்டு அவரை ஏன் தான் ஒரு முதன்மை படைப்பாளியாக கருதுகிறார் என்பதற்கு மூன்று காரணங்களைப் பட்டியலிடுகிறார் – பேசுபொருளைக் கையாளும் விதம், கதாபாத்திரங்கள்,, எழுத்துமுறை என ஒவ்வொன்றையும் விரிவான உதாரணங்களோடு விளக்குகிறார். குறிப்பாக இலக்கியத்தில் காமம் பேசுபொருளாக அடைந்திருக்கும் பரிணாமத்தையும் அதில் சு.வேணுகோபாலின் பங்களிப்பையும் பேசும் இடம் முக்கியமானது. “அவரது கதைமாந்தர்கள் எவருமே தமது திரிபு நிலைக்கு நியாயம் கற்பிப்பதில்லை. அதை வலிந்து மேற்கொள்ளும் பாவனைகளைக் கொண்டிருப்பதில்லை. கதைமாந்தர்கள் முட்செடி உண்ணும் ஒட்டக உவமையை நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பதுதான் சு.வேணுகோபாலது பாத்திரப் படைப்புகளின் வெற்றி,.” எனும் அவதானிப்பை வைக்கிறார் ராஜகோபால

ஆனால் மாயக்கூத்தன் சு.வேணுகோபால் பற்றி எழுதியிருக்கும் கட்டுரையில்அங்கீகரிக்கப்பட்ட உறவுமுறைகளுக்கு அப்பால் ஏற்படும் தொடர்பு மாதிரியான விஷயங்களில் உள்ள என் குறுகுறுப்பு இன்னமும் எனக்குக் குறையவில்லை என்பதால், இந்தக் கதைகளில் இந்த உறவுகளின் நோக்கம் என்ன என்பது புரியவில்லை. வேணுகோபால் இத்தகைய உறவுகளை நிறைய எழுதியிருக்கிறார். ஆனாலும், இவ்வுறவுகளின் காரண காரியங்களை அவர் பேசவில்லை. இந்த உறவுகள் இருக்கின்றன, ஆனால் திருமண பந்தத்தை உடைத்துக் கொண்டு போகும் அளவிற்கு மனிதர்களை ஈர்ப்பது எது? காமம் மட்டும்தானா? எதிர்காலமே தலைகீழாகிவிடும் நிலையிலும் மனிதர்கள் ஏன் அதற்கு துணிகிறார்கள்? ‘ஆட்டம்’ நாவலின் ஒரு பெரும் புள்ளியே இதுதான் என்றாலும், அங்கும் இதன் தாக்கம் மட்டுமே பேசப்படுகிறது. ஏனோ, எழுத்தாளர் இந்த உறவுகளை விவாதிக்கவில்லை. அதனால் அவை ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்துவதோடு நின்றுவிடுகின்றன. ஒரு உயிர் இன்னொரு உயிரை அணைத்துக் கொள்ள வேண்டும் என்பது இயற்கைத் துடிப்புதான். ஆனால், நம் சமூக உறவுக் கட்டுமானங்கள் இவ்வளவு மெலிதாகவா இருக்கின்றன?என்று கேள்வி எழுப்புகிறார்.

வேணு மனிதர்களை நம்புகிறார். அவனுடைய அத்தனை சிடுக்குகளை மீறி அவன் இயல்பாக வாழ்ந்துவிட முடியும் எனும் நன்னம்பிக்கை அவருடைய படைப்புகளில் தென்படுகிறது.” என்று நிலம் எனும் நல்லாள் நாவல் குறித்து நரோபா எழுதியிருக்கும் கட்டுரையில் வேணுகோபால் நிலம் – பெண் எனும் மரபான படிமத்தை நவீன வாழ்க்கைச் சிக்கலுக்கு எப்படி கையாண்டுள்ளார் என்பதை விவரிக்கிறார். பழனி எனும் தனிமனிதனை அலகாகக் கொண்டு சமூக மாற்றத்தைப் பதிவு செய்திருக்கிறார், என கூறும் நரோபா நாவல் மீதான விமர்சனத்தையும் பதிவு செய்கிறார்.

லண்டன் பிரபு வேணுகோபாலின் சிறுகதைகளைப் பற்றி எழுதியுள்ள கட்டுரையில் அவர் காட்டும் உலகின் இருள் அமைதியிழக்க செய்ததை பகிர்கிறார். “மிகச்சில கதைகளில் மட்டுமே வேணுகோபால் யதார்த்த உலகின் கால் தளைகளை அறுத்து சற்றே வானில் எழுகிறார். மனித அற்பத்தனங்களின் சகதியில் ஒரு மலரை முளைக்க வைக்கிறார். அது நம்மில் ஒரு நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்கிறது. அதுவும்கூட இல்லாவிட்டால் அவரது உலகம் தாங்கிக் கொள்ளவே முடியாத இடமாக இருந்திருக்கும்.என்று கட்டுரையை முடிக்கிறார்.

வரலாற்றுப் பின்புலத்தில், ஒட்டுமொத்த தரிசனம் (vision) அளிக்கும் நாவல்களைவிட, ஒரு முரணை முன்வைத்து நறுக்கு தெறித்தாற் போன்ற வடிவத்தில் எழுதப்படும் சிறுகதைகளை விட, சு வேணுகோபாலின் படைப்பூக்கம் திறனுடன் வெளிப்படுவது நெடுங்கதை வடிவத்தில்தான் எனச் சொல்லலாம்.” எனச் சொல்லும் ஸ்ரீதர் நாராயாணன், வேணுகோபாலின் படைப்புலகில் ‘நிறைவின்மை’ எப்படியொரு முக்கியமான பொதுச் சரடாக கோர்த்துச் செல்கிறது என்றெழுதுகிறார்.

அரவிந்த் கருணாகரன் வெண்ணிலை தொகுப்பை முன்வைத்து எழுதியிருக்கும் கட்டுரையில் ஐரோப்பிய நவீனத்துவத்திற்\கும் இந்திய நவீனத்துவத்திற்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டை வேணுகோபாலைக் கொண்டு அலசுகிறார். “காலத்தின் பிரம்மாண்டத்தின் முன் மிரண்டு நிற்கும் தனியனாக, இச்சைகளின் அலைக்கழிப்புகளால் கைவிடப்பட்ட மிருகமாக அவர் தனது கதைமாந்தர்களைக் காட்டவில்லை. மாறாக, சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் மரநிழலில் சேர்த்திவிடத்துடிக்கும், அதற்காக சலிப்பேயில்லாமல் தினசரி ஓடும் ஒருவனில், புதிர்த்தன்மையுடன் “எப்படியோ” குடிகொள்ளும் கூறுகளைச் சுட்டிக்காட்டவே விரும்புகிறார். அர்த்தம் இழப்பாலும் அதனால் ஏற்படும் செயலின்மையாலும் ஒருவன் உணரும் இருண்மையுணர்வை அவர் பேச விழையவில்லை. மாறாக செயலூக்கத்தளத்தில் ஒருவன் உணரும் இருண்மையை, அவன் திடீரென எதிர்கொள்ளும் நிர்க்கதியை, அதை மீறிச்செல்ல துடிக்கும்போது அடையும் எழுச்சியையும் சரிவையும் சொல்லவே முற்படுகிறார்.”

ஆட்டம் குறுநாவலை முன்வைத்து ரா. கிரிதரன் எழுதியிருக்கும் கட்டுரை, அந்த குறுநாவலை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகுகிறது. “பண்டைய காலம் முதல் கற்பென்னும் பெரு நெருப்பு பெண்களின் இருப்பைச் சூழ்ந்திருந்தாலும் நிறை குறை இல்லாது பெண் என்றால் தாய் எனும் அறிதல் சாதாரணமாகத் தோன்றும் சித்திரம் அல்ல. வடிவேலுவின் தாய், மனைவி கனகம், காளையனின் சித்தி என அவனைச் சுற்றியிருப்போர் எல்லாருமே கற்பிழந்த பெண்கள் எனும்போது தெய்வத்தின் சந்நிதியில் எல்லாருமே கண்ணகிதான் என ஆசிரியர் குரல் நாவலை வேறொரு தளத்துக்கு உயர்த்தி விடுகிறது.” எனும் கிரியின் கருத்து வேணுகோபாலின் படைப்புலகை பற்றிய புரிதலுக்கு வலு சேர்க்கிறது.

குமரன் கிருஷ்ணனின் கட்டுரை வேணுகோபாலின் மொழியில் ஊற்றாய்ப் பெருகும் கவித்துவத்தை,யும் அது சட்டென தத்துவ விசாரங்களுக்குள் ஆழமாக இறங்கிச் செல்வதையும் அடையாளம் காட்டுகிறது. “இப்படி பெண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே சுழலும், சிற்றின்பச் சுழலில் உழலும் உள்ளத்தின் ஊசலாட்டங்களை நம்முன் நிறுத்துவதே வேணுகோபாலின் படைப்புகள். அவரின் சிறுகதை மற்றும் நாவல் கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்க வேறுபட்ட அடிப்படைக் கோணங்களை நாம் கண்டடைய முடியும்அவரின் சிறுகதைகள், பெண்களின் பார்வையில், அவர்களையே மையமாக்கி கதை சொல்கின்றன. அவரின் குறுநாவல்களோ ஆணின் மனக்கண்ணாடி வழியே, பெண்ணைப் பேசுகின்றன” என்று புதிய கோணத்தில் வேணுகோபாலின் படைப்புலகைப் பேசும் முக்கிய கட்டுரை இது.

சேதுபதி அருணாசலம் எழுதிய கட்டுரையில்வட்டத்திற்குள்’ மற்றும் ‘மாயக்கல்’ கதைகளை பற்றி விரிவாக பேசுகிறார். ‘வட்டத்திற்குள்’ ஒரு பெண் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறாள் என்பதை விவரிக்கிறது. வேணு எழுதிய ‘மாயக்கல்’ என்ற மாய யதார்த்த கதை. பிற மாய யதார்த்த கதைகளிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதை விவரிக்கிறார். இரண்டு கதைகளையும் ஆஸ்திரேலியாவில் தான் கண்டுணர்ந்த யதார்த்தத்துடன் பொருத்திப் பார்த்து எழுதியிருப்பது வேணுகோபாலின் படைப்புலகத்தில் அவருடைய அவதானிப்புகள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.

பால்கனிகள், இழைகள் ஆகிய இரு குறுநாவல்களை முன்வைத்து கடலூர் சீனு எழுதிய கட்டுரையில் கதையின் நுட்பமான இடங்களை அதன் சமூக பின்னணிகளுடன் பொருத்திப் பார்த்து மதிப்பிடுகிறார். தோப்பிலின் கதையையும் ஜெயமோகனின் வணங்கான் கதையையும் இழைகளுடன் ஒப்பிட்டு எழுதுகிறார். பால்கனிகளின் கிட்ணாவை யாதார்த்தவாதச் சித்தரிப்பின் உச்சமாகவும் ஜெயமோகன் சித்தரிக்கும் சிகண்டினியை காவிய உச்சமாகவும் ஒப்பிடும் இடமும் முக்கியமானது.

ஒரு துவக்க வாசகனாக வேணுகோபாலைத் தான் கண்டடைந்ததையும் அவரை வாசித்தடைந்த இன்பத்தையும் அகிலன் தன்னுடைய கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறார். ஒரு துவக்க வாசகரையும் தேர்ந்த எழுத்தாளரையும் கதையின் ஒரே தருணங்கள் சென்று தைப்பதை கவனிக்க முடிகிறது.

இந்த இதழில் பேயோனின் கவிதையொன்றும் இடம்பெற்றிருக்கிறது.

பாவண்ணன், ஸ்ரீரங்கம் மோகனரங்கன், ராஜ சுந்தர்ராஜன் போன்ற முக்கிய எழுத்தாளர்கள் பதாகை போன்ற இணைய சிற்றிதழில் தங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொண்டது பெரும் நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அரவிந்த் கருணாகரன், செந்தில்நாதன், கிரிதரன், ஸ்ரீதர் நாராயணன், குமரன் கிருஷ்ணன், சேதுபதி அருணாச்சலம், நரோபா, மாயக்கூத்தன் எஸ்.சுரேஷ், கடலூர் சீனு, ராஜகோபால், சிவானந்தம் நீலகண்டன், பாஸ்டன் பாலா, லண்டன் பிரபு, அகிலன் என பலரும் இணையத்தில் தொடர்ந்து எழுதி கவனம் பெற்றவர்கள். மொத்தம் பதினெட்டு கட்டுரைகளும் விரிவான நேர்காணலும் உள்ள இந்த இதழ் வேணுகோபாலின் படைப்புலகை அணுக்கமாய் புரிந்துகொள்ள உதவுகிறது. விமர்சனங்கள், பார்வைகள், நேர்காணலில் வேணுகோபாலின் பதில்கள் முயங்கி ஒரு முழுமையை அளிப்பதாக தோன்றியது. இந்த இதழில் ‘நுண்வெளி கிரகணங்கள்’ பற்றி ஒரு கட்டுரைகூட இடம்பெறவில்லை என்பது ஒரு சிறிய குறையாக எஞ்சுகிறது. நாஞ்சில் நாடன் சிறப்பிதழ் வந்தபோது வெறும் புகழ் பாடி வந்ததாக விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த இதழில் மாயக்கூத்தன், எஸ்.சுரேஷ், ரா.கிரிதரன், நரோபா ஆகியவர்களின் கட்டுரையில் வெவ்வேறு அளவிலான விவாதத்திற்குரிய விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன. ஓரளவு இந்த விமர்சனங்களுக்கான மறுதரப்பை பிறரின் கட்டுரைகளும் வேணுவின் நேர்காணலும் அளிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக பதாகை சு.வேணுகோபால் காலாண்டு சிறப்பிதழ் நம் காலத்தின் முக்கிய படைப்பாளி ஒருவரின் படைப்புலகை நுட்பமாக அதன் ஆழ அகலங்களை பதிவு செய்கிறது. பங்களிப்பளித்த சக பதாகை நண்பர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

ஒரு இனிய நற்செய்தியுடன் இந்த அறிமுக குறிப்பை நிறைவு செய்கிறேன். அடுத்த பதாகை காலாண்டு இதழ், டிசம்பர் மாதம் நண்பர் ரா.கிரிதரனின் பொறுப்பில், எழுத்தாளர் பாவண்ணன் சிறப்பிதழாக வெளிவரவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்து கொள்கிறோம்.

பதாகைக்காக, சுனில் கிருஷ்ணன்

சு வேணுகோபாலின் வெண்ணிலை

செந்தில் நாதன்

வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பு படிப்பதற்கு முன் அந்த வார்த்தையை  நான் அறிந்ததில்லை. அகராதி வெண்ணிலை என்றால் ஈடுகாட்டாது வாங்கப்பட்ட கடன் (unsecured loan) என்கிறது. சு. வேணுகோபால் கதையில் கையறுநிலை என்ற பொருளில் உபயோகப்படுத்தியிருக்கிறார்.

வேணுகோபாலின் இந்த சிறுகதைத் தொகுப்பில் வரும் எளிய மனிதர்கள் முக்கால்வாசிப் பேர் கைவிடப்பட்டவர்கள்தான். விவசாயம் நொடித்துப் போய் என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பவர்கள், குடிகாரக் கணவனை விட்டுச் செல்ல வழி தெரியாமல் தவிப்பவர்கள், வாழ்ந்து கெட்டவர்கள், மெட்ரிகுலேஷன் பள்ளியின் அரைகுறை ஆங்கிலத்துக்குத் தடுமாறும்  குழந்தைகள் என அனைவரும் கைவிடப்பட்டவர்கள்தான்.

ஆனால் யாரும் நம்பிக்கை இழப்பதில்லை. எப்பாடுபட்டாவது முன்னேறி விடலாம் என்று நம்புகிறார்கள். ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் வந்து விடும் என்றும், ஆங்கில வழிக் கல்வி கற்பதன் மூலம் குழந்தைகள்  முன்னுக்கு வந்துவிடுவார்கள் என்றும், தன் சாதி அரசியல் தலைவர் மூலம் அரசியல்வாதியாகிவிடலாம் என்றும், வாழும் கலை கற்பதன் மூலம் தன் கஷ்டங்களுக்கு விடிவு கிடைக்கும் என்றும்  நம்புகிறார்கள். ஆனால் அவர்கள்  நம்பும் விடிவெள்ளிகள் அவர்களைக் கைவிட்டுவிடுகின்றன. அதையும் அவர்கள் தாங்கிக்கொண்டு வாழ்க்கையைத் தொடர்கிறார்கள்.

வேணுகோபாலின் கதைகள் நேரடியானவை. விவரணைகள் மூலம் கதைக்களனைச் செறிவுபடுத்துபவை. விவசாயம் சார்ந்த அவரது  கதைகளில் இவை சற்று அதிகமாகவே தெரியும். அந்த விவரணைகளையே படிமங்களாக்கும் ரசவாதம் இயல்பாகவே அவரது கதைகளில் கைகூடி வருகிறது.

’உயிர்ச்சுனை’ பெரியமகளிடம் கடன் வாங்கி போர்வெல் போடும் ஒரு சம்சாரியின் கதை. அவள் கணவனுக்குத் தெரியாமல் எடுத்து கொடுத்த பணம். பக்கத்து ஊரில் கோலா கம்பெனி ஆரம்பித்த பிறகு கிணறு வற்றி விடுகிறது. போர்வெல் போட்டாலாவது நீர் கிடைக்குமா என்று முயற்சி செய்கிறார். முயற்சி வீணாகிறது. பணமும் போய்விட்டது. எல்லாரும் நிலைகுலைந்து கிடக்கையில் பேரன் கீழே விழுந்து அழுகிறான். யாரும் அவனைக் கண்டுகொள்ளவில்லை. “நான் செத்துப்  போறேன்” என்றவாறு போகிறான். அதைக் கேட்டு அவன் அம்மா ஓடிவந்து தூக்குகிறாள்.

உயிர்ச்சுனை வற்றி விட்டால் விவசாயி என்ன செய்வான்? ஒவ்வொருவராய் வயல் வரப்பை விட்டு சிறு நகரங்களுக்கும் வணிகத்துக்கும் நகரும் அவலம் இந்தக் கதையில் அழுத்தமாய்ப் பதியப்படுகிறது. மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாயிரம் ரூபாய்க்கு ஆசிரியர் வேலை பார்க்கும் மகள், கண்ணப்பரின் பேரன் பெயர் நிதின் என்று விவரங்கள் மூலம் சமூக மாற்றங்கள் உணர்த்தப்படுகின்றன. கண்ணப்பர், திருமணத்திற்கு நிற்கும் அவரது இளைய மகள், பேரன் நிதின் என்று மூன்று பேர் பார்வையில் இந்தக் கதை பயணிக்கிறது, கதையில் என்னைப் பாதித்த வரிகள் இவை

      மரங்கள் ஒரு நொடியில் காணாமல் போனால் கூடப் பரவாயில்லை. கண்ணெதிரே சிறுகச் சிறுக சாவில் துடிப்பதை தினமும் பார்த்துத் தொலைப்பது தான் வேதனை. இதென்ன ஜென்ம பாவமோ

விவசாயி ஒருவரின் அப்பட்டமான வேதனையைப் பிரதிபலிக்கும் குரல்.

’புத்துயிர்ப்பு’ கதை இந்தத் தொகுப்பில் சிறந்த கதைகளில் ஒன்று. வறட்சியினால் சினை மாட்டுக்கு வைக்கோல் வைக்க முடியாமல் ஊரெல்லாம் தேடி அலைகிறான். வீட்டில் அவன் மனைவியும் நிறை மாதக் கர்ப்பிணியாய் இருக்கிறாள். மாட்டை விற்றுவிட அவன் மனம் மறுக்கிறது. வேறு வழியில்லாமல் நள்ளிரவில் தீவனம் திருட முயன்று மாட்டிக்கொள்கிறான். மறுநாள் பஞ்சாயத்தில் நிற்க நேரிடும் என்று பயந்து பூச்சி மருந்து குடித்துத் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுகிறான். இந்தக் களேபரத்தில் அவன் மனைவிக்குக் குறைப் பிரசவத்தில் பெண் பிள்ளை பிறக்கிறது.

`கொஞ்சம் கூட இரக்கம் காட்ட மாட்டேங்கிற மேல போகிற பகவானே!. இந்தா இந்தப் பிஞ்சப் பாருஎன்று ஆகாயத்தைப் பார்த்து சொன்னாள் கனகராஜின் அம்மா. பிசுபிசுக்கும் குழந்தையைப் பார்த்தாள். அவசர அவசரமாக உலகைப் பார்க்க வந்திருக்கும் அதன் உருவைப் பார்த்துதுணிச்சலகாரிஎன்றாள். பசலையின் கடவாய் ஓரத்தில் நுரைத்த எச்சிலில் சூரியன் ஒடுங்கி  ஒளிர்ந்தான். சிசுவின் புன்முறுவலில் சூரியன் நடுங்கியது

அந்தக் கடைசி இரண்டு வரிகளில் உள்ளது புத்துயிர்ப்பு. எவ்வளவு வறண்டாலும் உயிர் என்பது எப்போதும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளப் போராடும். அந்தப் போராட்டத்தில்தான் இந்த உலகம் இயங்குகிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை விவசாயக் கதைகள், சிறு நகரக் கதைகள் என்று இரண்டாகப் பிரித்துவிடலாம். சிறு நகரக் கதைகள் பெரும்பாலும் பெண்கள் சுமக்கும் பாரத்தைப் பற்றியவையே. வேணுகோபால் தன் கதைகளில் வரும் பெண்களைக் கரிசனத்துடனேயே படைக்கிறார். குடிகாரக் கணவனிடம் அடி வாங்கும் பெண்கள், வேலைக்குப் போகுமிடத்தில் கை பிடித்து இழுக்கப்படும் பெண்கள் அவர் கதைகளில் அடிக்கடி வந்து போகிறார்கள்.

தலைப்புக் கதையான ’வெண்ணிலை’ அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றியது. பாலியல் கிளர்ச்சிக்காகத் திரை அரங்குக்குச் செல்லும் வழியில் சாலையோரத்தில் நிற்கும் பெண்ணைப் பார்க்கிறான் அவன். முதலில் அவளைத் தவறாக நினைக்கிறான் பின்னர் நகலெடுக்கும் கடையில் வேலை பார்த்த பெண் என்று ஞாபகம் வருகிறது.  அவளைச். சில முறைதான் பார்த்திருக்கிறான். எதற்காக சாலையில் காத்து நிற்கிறாள் என்று அவளிடம் கேட்கும்போது, அவள் அப்பா அருகில் உள்ள மருத்துவமனையில் இறந்து விட்டதாகவும் அவர் உடலைப் பெற காசில்லாததால் தெரிந்தவர்கள் யாரும் வருகிறார்களா என்று காத்திருந்த்தாகவும் கூறுகிறாள். அண்ணன்களால் விரட்டப்பட்டு ஊருக்குப் புதிதாய் வந்தவர்கள். நகரத்தில் யாரையும் தெரியாது. வேலை பார்த்த இடத்திலும் முதலாளி கையைப் பிடித்து இழுத்ததால் வேலையை விட்டு நின்றுவிட்டாள். இப்படிப்பட்ட கையறுநிலையில் நிற்கும் பெண்ணைத் தவறாக நினைத்துவிட்டோமே என்று இவன் மனம் பதறுகிறது. இறுதிக் காரியத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்குகிறான்.

      உடலை வீட்டிற்குக் கொண்டு வந்ததும் என்னைப் பார்த்து அவள் கும்பிட்டது உள்ளே கிடந்து குடைந்தது. அவள் கைகளில் இருந்த நடுக்கம் முள்ளாய்க் குத்த்த் தொடங்கியது

என்று முடிகிறது கதை. சுஜாதாவின் புகழ் பெற்ற ’நகரம்’ கதைக்குச் சமமாக இந்தக் கதையைச் சொல்லலாம்.

’பேரிளம் பெண்’ கதை கண் முன்னே கரைந்து கொண்டிருக்கும் தன் இளமையைத் தக்க வைக்கப் போராடும் பெண்ணைப் பற்றிய கதை. சடங்கு விழாவிற்குப் போகிறவள் அங்கு எல்லாரும் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எடுப்பாய் அலங்காரம் செய்து கொண்டு அங்கு இருக்கும் சின்னப் பெண்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கிறாள். இவள்1 பெண்ணோ நிறைமாத கர்ப்பிணியாய் வீட்டில் இருக்கிறாள். இரவு விழாவிற்கு அலங்கரித்துக் கொள்ள எல்லாம் தயார் செய்து கொண்டிருக்கும்போது  பெண்ணிற்குப் பிரசவ வலி வந்து விடுகிறது. இவளுக்குப் பெண் மேல் கோபம் கோபமாய் வருகிறது. பொதுவாகக் கதைகளில் காணக்கிடைக்கும் தாய்மைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் உள்ள முரணைக் காட்டுகிறது இந்தக் கதை.

வேணுகோபாலின் கதைகளில் வரும் குழந்தைகள் இயல்பு மாறாதவர்களாகவே இருக்கிறார்கள். ’நிரூபணம்’ கதையில் வரும் எபனேசர் இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. குடிகாரத் தந்தை, அதனால் எரிச்சலில் இருக்கும் தாய், பயமுறுத்தும் ஆங்கில வழிக் கல்வி என்று அவன் உலகம் பயத்தாlலானதாக இருக்கிறது. கூட விளையாடும் பையன் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டும்போது பதிலுக்குத் திட்டவும் முடியவில்லை (ஜீசஸ் கைவிட்டு விடுவார் என்று அவன் அம்மா சொல்லியிருக்கிறாள்). இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில் சர்ச்சுக்குப் போகும் வழியில் அநாதரவாய் கிடக்கும் பிச்சைக்காரத் தாத்தாவைப் பார்த்துப் பரிதாபப்பட்டு  பிஸ்கெட் வாங்கிக் கொடுக்கிறான்.

      பிஸ்கெட்டை வாங்கியவன் ,”Jesus Christ never fails to feed his followers” என்றான் ஆங்கிலத்தில். “He lives with Children” என்று புன்னகைத்தபடி மேரி கோல்டு உறையை ஆர்வமாகப் பிரித்தான்

’புற்று’ கதையில் வரும் சிறுமி பூமிகாவும் பயப்படுகிறாள். கதை அவளும் அவள் சிநேகிதிகளும் நாய்க்குட்டி வாங்க முயற்சிப்பதில் ஆரம்பிக்கிறது. விலை அதிகமுள்ள நாய்க்குட்டியை வாங்க முடியாமல் தவிப்பவள், தெருவில் வளரும் நாய்க்குட்டி ஒன்றினை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறாள். பெட்டை நாய்க்குட்டியை வளர்த்தால் குட்டி போட்டுத் தள்ளும் என்று அவள் மாமா சொல்கிறான். பூமிகாவை ஏமாற்றி குட்டியை எடுத்துக் கொண்டு போய் நடுரோட்டில் தள்ளிவிட்டு விடுகிறான். தூக்கி எறியப்பட்ட நாய்க்குட்டி, மேல்வீட்டில் இருந்த அக்கா கல்யாணம் என்ற பெயரில் இன்னொருத்தர் வீட்டுக்குத் தள்ளி விடப்பட்டது, தனக்கு அடுத்துப் பிறந்து சில நாட்களில் தவறிப்போன தங்கையின்  நினைவு எல்லாம் சேர்ந்து பூமிகாவைப் பயமுறுத்துகிறது. அவள் அம்மாவிடம் கெஞ்சிகிறாள்

      சொல்லுமா. என்னைய எங்கயாவது தள்ளி விட்டுறமாட்டயே. சாகுந்தண்டியும் ஒங்கூடவே இருக்கேம்மா. ப்ளீஸ்மாநெஞ்சு என்னவோ அதிர்ந்தது அம்மாவிற்கு.

ஆண் பெண் உறவின் சிக்கல்களை இரு கதைகளில் தொட்டுச் செல்கிறார் வேணுகோபால். அவற்றில் ’உள்ளிருந்து உடற்றும் பசி’ அதிர்ச்சி மதிப்பீட்டையும் மீறி முக்கியமான கதை. கதையின் தலைப்பு திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்டது.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி

என்பது குறள். வேண்டிய காலத்தில் மழை பெய்யாவிட்டால் நீரால் சூழ்ந்த இவ்வுலகத்தின் உயிர்களை வருத்தும் பசி.

கதை மூன்று தங்கைகளைக் கரை சேர்க்கும் அண்ணனைப் பற்றியது. சின்ன வயதிலேயே அப்பா விட்டுவிட்டுப் போய்விட்டார். அம்மாவும்  இறந்து போக, கூலி வேலை செய்து தங்கைகளைக் காப்பாற்றுகிறான் அண்ணன். கதை கடைசித் தங்கையின் பார்வையில் சொல்லப்படுகிறது. இரண்டாம் அக்கா கல்யாணம் ஆகிப் போன பிறகு இவள் தங்களுக்காக தன் இளமை முழுவதும் செலவழித்த அண்ணனை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள். வேலை பார்க்கும் துணிக்கடையின் வாசலில் நின்று தன்னை நோட்டம் விடும் ஜெயக்குமார் மேல் வரும் ஈர்ப்பை  இனி துண்டித்துக் கொள்ள வேண்டும், அண்ணன் சொன்னபடி கேட்க வேண்டும் என்று உறுதி கொள்கிறாள். அன்று இரவு அண்ணனுக்கு சமைத்துப் போட்ட பின் உறங்கும்போது கனவில் ஜெயக்குமார் வருகிறான். அவன் உடல் சூடு அவள் மேல் பரவுகிறது. விழித்துப் பார்த்தால்  நிஜமாகவே ஒரு கை அவள் மேல் இருக்கிறது. அதிர்ந்து நகர்கிறாள். என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.

      தலை குனிந்தவாறே முனகலைப் போல அவன் கேட்டான், ”அக்கா அவுங்க ஒங்கிட்ட வேற ஒண்ணும் சொல்லலையா..”

இந்த ஒற்றை வரியில் அவனது இயலாமை, வேறு வழியில்லாத நிலமை, அசூயையை மீறி அவன் மேல் பரிதாபம் என அனைத்தையும் கொண்டு வந்து விடுகிறார் வேணுகோபால். நேரத்தே மழை பெய்யாவிடின் நீர் சூழ்ந்த உலகத்தின் உயிர்களைப் பசி வருத்தும்.

எளிய மக்களையும் அவர்கள் பிரச்சனைகளையும் கரிசனத்தோடு அணுகியுள்ளார் வேணுகோபால். அவருக்கு முன்னோடியாகச் சொல்ல வேண்டுமென்றால் அசோகமித்திரனைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் அசோகமித்திரன் கதைகளில் வரும் கசப்புடன் கூடிய அங்கதத்தை வேணுகோபால் கதைகளில் காண முடிவதில்லை.  நெருஞ்சி முள் தைத்த வெகு நேரத்திற்குப் பின்னும் வலிப்பது போல் இந்தக் கதைகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் வெகு நேரம் நம்மைத் தொடர்கின்றன். தமிழின் முக்கியச் சிறுகதை எழுத்தாளர்கள் வரிசையில் வேணுகோபாலுக்கு முதல் வரிசையில் என்றும் இடமுண்டு.

வேணுகோபாலின் வேரெழுத்துக்கள்

– சிவானந்தம் நீலகண்டன் – 

படம்: www.discoverybookpalace.com

ஐந்தாறு வருடங்களுக்குமுன் ஜெயமோகன் கூந்தப்பனை பற்றி எழுதிய கட்டுரைகளின் மூலமாகத்தான் சு.வேணுகோபால் என்ற பெயர் எனக்கு அறிமுகமாகியது. ஓர் உந்துதல் அப்போது எழுந்தும் பிறகு வாசித்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டது ஆகப்பெரிய தவறென்று சமீபத்தில் ஒரே மூச்சில் அவரது ஏழு குறுநாவல்களையும் பதினைந்து சிறுகதைகளையும் வாசித்தபோது புரிந்தது. அவரது குறுநாவல்களை முன்வைத்து இக்கட்டுரையை எழுதுகிறேன்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய கண்மணி குணசேகரன், “தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்” என்ற குறளை விளக்கிப் பேசுகையில் வள்ளுவர் ஒரு விவசாயியாகத்தான் இருந்திருக்கக்கூடும் என்று ஊகித்தார். புழுதியடிப்பதைப் பற்றி அந்த அளவுக்கு நுட்பமான செய்தியைக் கொண்ட குறளது. ‘நிலம் எனும் நல்லாள்’ குறுநாவல் வாசிக்கையில் வேணுகோபாலைப் பற்றியும் அப்படியொரு சந்தேகம் எழுந்துகொண்டே வருவதை வாசகர் தவிர்க்கவியலாது. பருத்தியோ, துவரையோ, மிளகாயோ, சூரியகாந்தியோ, நிலக்கடலையோ, வயற்காடுகளையும் அவற்றின் பயிர்களையும் விதையிலிருந்து, விதைப்பதிலிருந்து, விளைச்சலைக் காசாக்குவதுவரை எவ்வளவு ஆழத்திற்குப் போய் எழுத்தில் சித்தரித்துவிடமுடியும் என்று குமரன் பாத்திரத்தின் வழியாகக் காட்டியிருக்கிறார். மண்ணின் மீது மூர்க்கமான காதல்கொண்ட – மண்ணைக் கொஞ்சம் சாப்பாட்டில் போட்டுச்சாப்பிடும் – இக்கதாபாத்திரத்தின் வாழ்வு மண்ணிலேயே அற்ப ஆயுளில் முடிந்துபோயினும் வாசகர் மனங்களைவிட்டு அவ்வளவு விரைவில் நீங்காது.

வயல்வெளிகளை எழுத்தாளர்கள் வாசகருக்குப் பலவிதமாகக் காட்டித்தரமுடியும்; தூரத்து மேடுகளில் நின்று சுட்டுவிரல்களை நீட்டிப் பசுமையை மட்டும் காட்டிச் செல்லலாம். கூட அழைத்துச்சென்று வரப்புகளில் நடந்து இலை, காய்களைத் தடவச்செய்யலாம். மாடுகளின் பின்னாலேயே கலப்பை பிடித்து முழங்கால் அளவு சேற்றில் நடக்கச் செய்யலாம். இன்னும் எத்தனையோ வழிகளிலும். ஆனால் வேணுகோபால் நமக்குக் காட்டித்தருவது வெளியே தெரியாத அப்பயிர்களின் வேர்களைத்தான். பயிர்கூட ஓரிடத்திலிருந்து பறித்து வேறெங்கோ நடப்படும்போதும் சூழ்நிலைக்குத்தக்க தன்னைத் தகவமைத்துக்கொண்டு தழைத்துவிடுகிறது. ஆனால் விவசாயக் குடும்பத்தில் பிறந்து மண்ணின் அருகாமையை அனுபவித்துவிட்டுப் பல்வேறு காரணங்களால் புலம்பெயர நேரிடும் ஒருவனுக்குக் கடைசிவரை – அதன் கஷ்ட நஷ்டங்களை முற்றிலும் உணர்ந்திருக்கும் போதிலும் – என்றோ ஒருநாள் சொந்தமண்ணுக்கு மீண்டும் திரும்புவோம் என்ற ஆசை அழிவதில்லை. பொதுவாக புலம்பெயர்தலை வெளிநாடுவாழ் தமிழர்களுக்கானதாகவே பார்த்திருக்கும் பொதுப்புத்தி, இந்நாவலில் மதுரையிலிருந்து சென்று கோயம்புத்தூரில் வேர்பிடிக்க மனமில்லாமல் திணறும் பழனிக்குமாரைப் பார்த்தால் திகைக்கக்கூடும். பேசும் மொழியின் நுண்ணிய வேறுபாடுகள்கூட விருப்பு வெறுப்புகளை மாற்றியமைக்க முடிவதையும் நாவல் பதிவுசெய்கிறது.

மாமியார்- மருமகள் பிரச்சனையை ஆசிரியர் அணுகும் விதம் அலாதியானது. ‘உங்க அம்மா ஒண்ணுக்குப் போயிட்டு ஏன் பத்தும் பத்தாததுமா தண்ணி ஊத்திட்டு வராங்க? தண்ணிக்கு என்ன பஞ்சமா? சுத்தம்னா என்னன்னு தெரியவேண்டாமா?’ என்று பொருமும் மனைவியின் புகாரைத் தன் புகாராக மாற்றி அன்னையிடம் சொல்லும் பழனிக்குமாருக்கு, ‘கங்காதேவிய அப்பிடி கண்டபடி செலவுபண்ணக் கூடாதுப்பா’ என்று அறிவுரை கிடைக்கிறது. ‘ஏன் பழைய புடவையை ஒட்டுப்போட்டுக் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்? அவமானம்’ என்ற புகாருக்கு, ‘எவ்வளவு நாள் நமக்கு உழைச்சது. அப்படி தூக்கிப்போட மனசு வல்லப்பா’ என்ற பதில் கிடைக்கிறது. அவரவருக்கு அவரவர் நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால் நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்ததாயிற்றே இந்த உலகம். யாரையும் தன் போக்கில் செல்ல அது விட்டுவிடுவதில்லை. நேற்றிருந்தான் இன்று இல்லை என்று பொருள்கொள்வதைவிட நேற்றிருந்ததைப் போல் அவன் இன்று இல்லை என்று பொருள்கொள்வது நிலையாமையை இன்னும் ஆழப்படுத்தவே செய்கிறது. ஏதோ ஒரு எதிர்பாராத நிகழ்ச்சியின் மூலம் நம்பிக்கை துளிர்க்கக்கூடும். அப்படி அவனுக்கும் நடக்கிறது. குடும்பத் தலைவனில்லாத ஓர் ஏழைக்குடும்பத்தின் எதிர்காலமாக நிற்கிறது ஒரு சினையாடு. வயிற்றிலேயே குட்டிகள் இறந்துவிட்டதால் கால்நடை மருத்துவரால் கைவிடப்பட்ட அந்த ஆட்டைப் பிழைக்கச்செய்வதன் மூலம் அக்குடும்பத்தைப் பிழைக்கச்செய்யும் அவனுக்கு நன்றிக்காகச் செலுத்தப்படும் ஒரு வாழைத்தார் வாசகர் கண்களில் நீரரும்பச் செய்வதோடு பழனிக்குமாருக்கும் வேற்றுமண்ணில் வேர்விட ஒரு புதிய துவக்கத்தைக் கொடுக்கிறது. ஆட்டைப் பிழைக்கச்செய்ய பழனிக்குமார் எடுக்கும் முயற்சியில் அவனும், ஆடும், அக்குடும்பமும் படும் பாடுகளை வாசிக்கையில் நமக்குக் கைகால்கள் வெலவெலத்துப் போகின்றன. காட்சிகள் அவ்வளவு தத்ரூபம்.

‘ஆட்டம்’ என்றொரு குறுநாவல். ஒருமுறை முழுதாக வாசித்தது போதாமல் ஆங்காங்கே தாவித்தாவி சில பகுதிகளை மீண்டும் மீண்டும் வாசிக்கவைத்தது ஆட்டம். குறிப்பாகக் கபடி ஆட்டம் நிகழும் ஓர் அத்தியாயம் ஆட்ட நுணுக்கங்களின் அரிய ஆவணம். எப்படியெல்லாம் விதவிதமாகப் பாடிச்செல்வார்கள் என்பதுமுதல் விழுந்துபுரண்டபின் காயங்களில் ஒட்டியிருக்கும் நுண்கற்களை குளிக்கும்போது கவனமில்லாமல் தேய்த்துவிட்டால் காந்தல் எடுத்துவிடும் என்பதுவரை வரிக்கு வரி தகவற்குவியல்கள். அவற்றைத் துருத்திக்கொண்டிருக்கும் ஒட்டுத்தகவல்களாக இல்லாமல் வடிவேல் கதாபாத்திரத்தின் மூலமாக இயல்பாகப் பதிவுசெய்து வாசகர் கண்முன்னே கபடி ஆட்டமும் சூடுகுறையாமல் நிகழச்செய்தது மலைக்கச்செய்த எழுத்து நேர்த்தி.

இன்னொரு வகையில் காமம் நம் அனைவரின் மீதும் கபடி ஆடிவிட்டுச் சென்றுவிடுவதையும் ‘ஆட்டம்’ சித்திரமாக வரைந்து காட்டுகிறது. உயிரே அவள்தான் என்று வடிவேலை நினைக்கச்செய்வதும் சரி, ஒரு கட்டத்தில் அவள் உயிரை எடுத்துவிட்டால் என்ன என்று வெம்பச்செய்வதும் சரி வெவ்வேறு இடங்களில் உயிர்கொள்ளும் காமத்தின் வேர்களே. உயிரின் செயல்பாடுகள் அனைத்துக்கும் உந்துவிசையாவது இந்த ஆதாரக் காமம். மற்ற உயிர்களைப் போலல்லாது சமூக விலங்குகளான மனிதர்கள் தங்களுக்காகத் தாங்களே உருவாக்கிக் கொண்டுள்ள அற, ஒழுக்க விதிகளுக்குட்பட்டு அந்த உயிரியல் விசையின் கொந்தளிப்புக்கு ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. ஒருபக்கம் மலைப்பாறைகளில் சுரந்து வெளியேறும் நீரூற்றுபோல் பிரவாகிக்கும் காமத்தின் அளப்பரிய ஆற்றல். மறுபக்கம் அதன் மனவிகாரங்களைத் தவறு, கெட்டது, பாவம், குற்றம், சுற்றம் என்று பல அணைகளைக் கட்டித் தேக்கும் மனிதனின் முயற்சி. பல சமயங்களில் முன்னது வெல்கிறது. சில நேரங்களில் பின்னது உதவுகிறது. வாழ்க்கை ஆடித்தீர்த்துவிட முடியாத ஆட்டம் என்பதையும் அந்த ஆட்டத்திலிருந்து விலகிக்கொள்ள நினைப்பது எவ்வளவு அபத்தம் என்பதையும் பல பாத்திரங்களின் வழியாக உக்கிரம் குறையாமல் எழுதிக்காட்டியிருக்கிறார்.

‘இரட்சணியம்’ குறுநாவலிலும் காமம் பேசப்படுகிறது, பதினெட்டு வயதுப் பையனின் மனம் வழியாக. கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த அவனுக்குள் இயல்பாகப் பொங்கும் காமம் கீழ்த்தரமான பாவம் என்று போதிக்கப்படுவதால் அவன் கடும் குற்ற உணர்ச்சிக்காளாகிறான். குளியலறையில் எட்டிப்பார்க்க முயன்று முடியாத நிலையில் பெண்ணின் உடலைத்தொட்டு வழிந்துவரும் தண்ணீரைப் பார்த்ததுமே அவனுக்கு உடல் கனன்று தகிக்கிறது. சினிமாவில் எப்படிக் காதலனும் காதலியும் அருகருகே அமர்ந்து சாதாரணமாகப் பல விஷயங்களைப் பேசிக்கொள்கிறார்கள்? தனக்கு மட்டும் ஏன் எந்தப்பெண்ணைப் பார்த்தாலும் காமம் பீரிட்டுக்கிளம்புகிறது? போன்ற கேள்விகள் அவனை வதைக்கின்றன. +2 தேர்வில் தோல்வியடைவது கூட ஒருவேளை இந்த பாவத்தின் சம்பளமாக இருக்குமோ என்று அவனுக்குத் தோன்றுகிறது.

இந்த நாவல் என்னைக் கவர்ந்தது வேறொரு தளத்தில். பதின்வயது காமக் கிளர்ச்சியை அதன் தெறிப்புகளுடன் பதிவு செய்திருக்கும் ஆசிரியர், கவனமாக வாசகர் அதில் தன்னை இழந்துவிடாமல் அதேநேரம் புறவயமாகக் காமத்தை உற்றுநோக்க வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். காமத்துக்குக் கட்டுப்பாடுகள் தேவைதான் என்று வாசகரே விழிப்புடன் ஒரு முடிவை நோக்கி மெல்லச் செல்லவைக்கும் வகையில் சம்பவங்களை அமைத்திருக்கிறார். பாவம் குறித்த போதனைகள் காமத்தைக் கட்டுப்படுத்த பயன்படாமல் போகும் அதே தருவாயில் விழிப்புடன் காமத்தைப் புரிந்துகொள்ள வாசகரையே சாட்சியாக்கியிருக்கிறார். கம்பிமேல் நடப்பதுபோன்ற கவனத்தைக் கோரும் இக்கதை கீழே விழுந்துவிடாமல் சாதுர்யமாக காப்பாற்றியிருக்கிறார்.

‘உருமால் கட்டு’ குறுநாவல் கிராமத்து மனிதர்களின் ஆசாபாசங்களை, ஒரு குறிப்பிட்ட சாதியின் திருமண முறைகளை, பேசுகிற சாக்கில் ஒரு முக்கியமான கேள்வியையும் கேட்கிறது. காலம் யார் யாரையோ மேலே தூக்கிச்செல்கிறது. அதில் ஏன் ஒரு விவசாயியைக்கூடக் கண்கொண்டு காணவில்லை? யார் பிழை அது? பழைய குடும்பப்பகையை மனதிற்கொண்டு எப்படிப்பொங்கி வெடிப்பாரோ என்று பலவித ஊகங்களுடன் தன் திருமண உருமால்கட்டுக்கு பத்திரிகை வைக்கப்போகும் குபேந்திரனைத் தாய்மாமா கதிரய்யா வீட்டுக்குள் அழைத்துச்சென்று, படித்து வேலையில்லாமல் இருக்கும் தன் பேரனை ‘மெட்ராஸ் பக்கம் ஏதும் தெரிஞ்ச கம்பெனியில சேர்த்துவிட’க் கோரிக்கை வைக்கும்போது அவன் மனதில் குடிகொண்டிருந்த அவரது கம்பீரம் நொறுங்குகிறது. அக்கணத்தில் அவனுக்குள் பிறக்கும் கேள்வியே அது. பெரிய சம்சாரிகளையும் கூலிவேலை செய்யவைத்துவிடுகிறதே காலம். விவசாயக் குடும்பத்துப் பையன்கள் படித்துத் தகுதியிருந்தும் அரசாங்க வேலையைக்கூட அடிமைத் தொழிலாக நினைத்த காலம் எப்படி இவ்வளவு விரைவில் – ஒரே தலைமுறையில் – தலைகீழாகிப் போனது?

‘நாளைக்கு ஒரு செழிப்பு வராமயா போகும்’ என்ற எதிர்பார்ப்பில் மட்டுமே இவர்கள் வாழ்வு நகர்ந்துகொண்டிருப்பதைக் கதையாக்கியுள்ளார். ஏழ்மை, முறுக்குள்ளவர்களைப் பணியச்செய்கிறது. பணம், அறிவாளிகளைக்கூட சுயநலவாதிகளாக்கி விடுகிறது. பணமிருந்தாலும் சொந்தபந்தங்களை விட்டுவிடாமல் நடக்கிறார் என்று அவன் நினைத்திருந்த அப்பாவும்கூட மனதார மற்ற சொந்தங்கள் பொருளாதார ரீதியாக முன்னேறுவதை விரும்பவில்லை. தன் நல்ல நிலைமையை வெளிக்காட்டிக்கொள்ள அவருக்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள். அதைப் பகட்டாகச் செய்யாமல் பக்குவமாகச் செய்கிறார் அவ்வளவுதான்.

‘திசையெல்லாம் நெருஞ்சி’ நாவல் இருபத்தைந்து பக்கங்களுக்குள் இவ்வளவு சொல்லமுடியுமா என்ற வியப்பைத்தான் முதலில் தந்தது. வேணுகோபாலின் அனைத்து நாவல்களிலும் கிராமங்கள் உண்டு. கிராமங்களின் சில அம்சங்களை அவர் மறுப்பதோ மாற்றுவதோ இல்லை. சாதி அதில் ஒன்று. கதையின் மையத்திலோ ஓரத்திலோ சாதி அதன் வீச்சோடு காண்பிக்கப்பட்டுவிடுகிறது. கண்ட இடங்களில் மலஜலம் கழித்து வைத்திருப்பது மற்றொன்று. நான் வாசித்த ஏழு நாவல்களிலும் ஒருவரியேனும் இதைக்குறித்த வர்ணனை இல்லாமலில்லை. அதனால் நாம் கனவுகாணக்கூடிய உட்டோப்பிய கிராமங்களல்லாத நிஜ கிராமங்கள் கண்முன் விரிகின்றன. இவை எழுத்தின் நம்பகத்தன்மையையும் கூட்டுகின்றன.

கிராம நாவிதன் பழநி அந்த ஊருக்கு வந்து இருபது வருடமானாலும் அவன் – சாதியின் பொருட்டு – அவர்களில் ஒருவனல்ல என்பதைக் காட்டக் கிடைக்கும் சிறுவாய்ப்புகளையும் ஊர்க்காரர்கள் யாரும் நழுவ விடுவதில்லை. அவர்களில் சிலருக்குக் கடன் கொடுக்கும் நிலையில் தான் வளர்ந்திருப்பதைக் குறித்து உள்ளூர அவனுக்குப் பெருமிதமிருந்தாலும் பணத்தைத் திரும்பக் கேட்பதைக்கூடக் குறுகிமருகித்தான் செய்ய வேண்டியிருக்கிறது. ஏச்சுக்களையும் வாங்க வேண்டியிருக்கிறது. கொடுத்த காசைக் கேட்டதற்கு மனைவியைக் குறித்த இழிசொற்களுடன் அறையப்படும்போது ஆத்திரத்தில் பழநி தன்னிலை இழந்து திருப்பியடித்துவிடுகிறான். உடனே இங்கு சாதி நுழைந்துவிடுகிறது. மற்ற நியாயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அம்பட்டையன் எப்படி நம்மில் ஒருவரை அடிக்கலாம் என்பதே பிரதான பிரச்சனையாகி ஊரைவிட்டுப் போய்விட அவனுக்குக் கெடு விதிக்கப்படுகிறது. அவன் நினைவுகள் வழியாக ஊரார்களுக்குக் கைவைத்தியம் செய்து வியாதிகள் தீர்த்தது முதல் கைகால் விழுந்துபோன இளைஞனுக்கு அந்தரங்கப் பகுதிகளில் சுத்தம் செய்துவந்தது வரை அனைத்தும் நமக்குச் சொல்லப்படுகிறது. இவ்வளவு செய்துகொண்டிருக்கும் ஒருவனைச் சாதி என்ற ஒன்றுக்காக – பலருக்கு விருப்பமில்லாவிட்டாலும் – ஏன் தூக்கியெறியத் தயாராக இருக்கிறார்கள் என்ற கேள்வியை வாசகர் தானாகவே வந்தடையட்டும் என்று விட்டிருக்கிறார்.

‘பால்கனிகள்’ குறுநாவல் ஆணாகப்பிறந்து பெண்ணாக மாற்றமடையும் ஒருவரின் கதையைப் பேசுகிறது. அதன் ஒவ்வொரு கட்டத்தையும் உடல், மன, குடும்ப, சமூகக் கோணங்களில் நுணுக்கமாக எழுதியிருக்கிறார். என்னதான் கற்பனை வளமிருந்தாலும் வெறும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவர் இவ்வளவு உணர்வுபூர்வமாக எழுதிவிட இயலுமா என்று மலைப்பு தட்டுகிறது. உண்மையில் அந்த மலைப்பு நான் வாசித்த ஆசிரியரின் எல்லா நாவல்களிலுமே உண்டானது; அதன் அளவில் மெல்லிய வேறுபாடுகள் அவ்வளவுதான். எதையும் எளிதாகத் தள்ளிவிட முடியவில்லை.

‘பால்கனிகள்’ கதையில் வரும் திவ்யா பால்குடி மறக்காத தன் பிள்ளையை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகம் செல்லும் முதல் நாள் படும் அவஸ்தைகள் அணுஅணுவாக விவரிக்கப்படுகின்றன. இதற்குமேல் முடியாதென்று அலுவலகத்திலிருந்து புறப்பட்டு வீட்டை அடைகையில், மஞ்சுளாவாக மாறிக்கொண்டிருந்த தன் தம்பி கிட்ணன் குழந்தைக்கு முலையூட்டிக் கொண்டிருப்பதைக் காணும் இடத்திலேயே கதை உச்சமடைந்து விடுகிறது. தன்னுடைய பால் இதுவென்று உணரும் அவன், அதன் நியாயத்தைத் தனக்குள் சுரக்கும் தாய்மையிலிருந்து பெறுகிறான். வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டுப் பின்னாளில் திவ்யாவை எதிர்பாராமல் கண்டு பேசும்போது, ‘ஏமாத்துறதுதானக்கா மனுசனோட இயல்பு’ என்று அவளுக்கே சமாதானம் சொல்லும்போதும், ‘என்னோட வேதனையை சொன்னாலும் யாருக்கும் புரியாதுக்கா’ என்று குமையும்போதும், வாழ்க்கையை இப்படி வெறும் நரகமாக மட்டுமே அனுபவிக்க இவர்கள் செய்த குற்றமென்ன என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. இக்கதையை வாசிக்கும் ஒருவர் திருநங்கைகளைக் கேலிப்பொருட்களாகப் பார்க்கும் பொதுப்புத்தியின் பகுதியாக இருந்ததை எண்ணி வெட்கமடையக்கூடும். அதுவே மாற்றத்தின் விதை.

‘இழைகள்’ கீழ்ச்சாதியில் பிறந்து, எத்தனையோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் படித்து ஆசிரியராகி, ஓய்வு பெறப் போகும்போது நல்லாசிரியர் விருது பெற்றுவிடும் ஒருவரின் கதை. உளவியல் தளத்தில் சிந்தனைப் பாய்ச்சல்கள் நிகழ்ந்துள்ள கதை இது. விருதுபெற்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் ஓடிப்போய்ச் செய்தியை அச்சில் பார்த்துவிட ஆவல் துடிப்பினும், நெஞ்சு படபடக்க ஆனால் பொறுமையாகச் சென்று செய்தித்தாளை சத்தம் வராமல் புரட்டிப் பார்ப்பதிலிருந்து தொடங்குகிறது வேணுகோபாலின் உளவியல் அவதானிப்புகள். அடுத்தவர்களுக்குக் கிடைத்த போதெல்லாம் விருதை இழித்துரைத்த மனம் தற்போது பெருமிதத்தில் விம்முகிறது. தனக்குப் பெருமை கிடைத்தவுடன் அதைப் பகிர்ந்துகொள்ள ஆட்களை எண்ணத்தில் வரிசைப்படுத்தும் மனம், அடுத்த கணம் தான் அவர்களை உறிஞ்சி வளர்ந்ததைத் தவிர அவர்களுக்கு எதுவுமே செய்யவில்லையோ என்ற குற்ற உணர்ச்சி மேலிட்டுவிடுவதால் அவதியுறுகிறது. நல்லாசிரியர் என்றவுடன் தான் உண்மையில் நல்லவன்தானா என்ற கேள்வி எழுந்து வாலிபத்தில் சந்தர்ப்பவசத்தால் செய்த காரியங்களைக்கூட அசைபோட்டுப் பெருமூச்செறிய வைக்கிறது. அம்மாவின் நினைவு வரும்போதெல்லாம் அவள் ஆடுகளுடன் வரும் உருவம்தான் தெரிகிறது. அவள் உயிர்க்குயிரான அவ்வாடுகளை ஆசிரியப் பயிற்சிப் படிப்புக்கு அவசரத் தேவை என்று பொய்சொல்லி விற்கவைத்தது இப்போது குத்துகிறது. ‘நானும் வாங்கிட்டண்டா’ என்று சில சாதிப்பித்தர்களின் முன்னால் இறுமாப்புடன் நடக்கமுடியும் என்ற ஒன்றைத்தவிர உள்ளுக்குள் எல்லாம் நெருடலாகவே இருக்கிறது. ஆசிரியராக இருந்து ஜனாதிபதியான ராதாகிருஷ்ணனைப் பற்றி ஏதாவது கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். நல்லாசிரியர் விருது வாங்கியிருக்கீங்க ஆனா இது தெரியாம இருக்கீங்க என்று யாரும் கேட்டுவிடக்கூடும் என்ற பயமும் எழுகிறது.

நாவல்களில் பொதுவாக சில அவதானிப்புகளைச் செய்ய முடிந்தது.

பால்கனிகளைத் தவிர மற்ற குறுநாவல்கள் ஆண் கதாபாத்திரங்களின் வழியாகச் சொல்லப்படுபவை. இதன் காரணமாகவோ என்னவோ அக்கதைகளில் காமம் பேசப்படும் இடங்களெல்லாம் பெரும்பாலும் பெண்களே முதல் தூண்டிலாகவோ தூண்டுதலாகவோ இருக்கிறார்கள். ஒருவகையில் அப்படி தூண்டப்படும் ஆண்கள் தாம் பயன்படுத்தப்பட்டு விட்டோம் என்ற உணர்வை பின்னாளில் வந்தடைகிறார்கள். அதேசமயம் பால்கனிகள் பெண் கதாபாத்திரம் வழியாகச் சொல்லப்படுகையில் ஆண்கள் தூண்டுகிறார்கள்; திருநங்கை பயன்படுத்தப்பட்டதாக உணர்கிறார். இதைப் பொருந்தாக் காமத்தின் இயல்பைக் குறித்து ஆசிரியர் காட்டும் உட்குறிப்பாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது காமம் சார்ந்த பொதுவான சமூக ஒழுக்க விதிகளை மீறும்போது அதில் ஈடுபடும் அனைவருமே பால்பேதமின்றி குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள். இன்பம் துய்த்தபின் வந்து கவிழ்ந்து கொள்ளும் இக்குற்றவுணர்ச்சியைப் போக்கிக்கொள்ள இயல்பாக இருவருமே அதை மற்றவர்தான் தன்னைப் பயன்படுத்திக்கொண்டார் என்று கருதிக்கொள்வதால் சுய இரக்கத்தின் மூலம் ஆறுதல் கொள்ள முயல்கின்றனர்.

தமிழில் சாதி பேசப்படும் புனைவுகளில் உக்கிரம் நீர்த்துப் போய்விடக்கூடாது என்று கருதியோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பொதுவாக மேல்சாதியிலிருந்து ஒரு நல்ல உள்ளம்கூட இல்லாத நிலை இருப்பதுபோலவே கதைக்களங்களை அமைக்கிறார்கள். உண்மை நிலை அதுவல்ல என்பது அனைவருக்கும் தெரியும். வேணுகோபால் எழுத்துக்களில் தன் சாதிக்கு எதிராகத் துணிந்து பேசமுடியாத அதேநேரம் மனசாட்சிக்கு விரோதமாக நியாயத்துக்கு எதிராகச் செயல்படவும் முடியாத கையறு நிலையில் தள்ளப்படும் மேல்சாதிக்காரர்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள். நியாயத்தைப் பேச விரும்பும் படைப்பாளிகள் எல்லாத் தரப்பின் இண்டுஇடுக்குகளிலும் மறைந்துள்ள நிதர்சனத்தையும் தேடிப்பாரத்து பேசுவதுதான் நியாயம். அதுவே சாதி வேற்றுமைகளைக் குறித்து தார்மீகக்கோபம் கொள்வதற்கான அடிப்படைத் தகுதியும் கூட.

மற்றவற்றைவிட முக்கியமான ஒரு பொது அம்சம் – பலவிதமான சிக்கல்கள் பேசப்பட்டாலும் நம்பிக்கைக் கீற்றோடு நாவல்களை முடிப்பதுதான். திசையெல்லாம் நெருஞ்சியில் மட்டும் முடிதிருத்தும் பழநி கடைசியில் ஊர் தன்னை ஏற்றுக்கொண்டுவிடும் என்ற நம்பிக்கையை இழந்துவிடுகிறான். ஆயினும் அவன் மனைவி நம்பிக்கை இழக்காதவளாகவே இருக்கிறாள். குழந்தைகளுக்கு அம்மை போட்டுவிடுவதைக்கூட அந்நிலையில் ஊரைக் காலிசெய்யச் சொல்ல மாட்டார்கள் என்பதால் சாதகமான விஷயமாகப் பார்க்கிறாள். மானுடத்தின் சிக்கல்களுக்கு மகத்தான ஒரே பொதுத்தீர்வு இருக்கக்கூடுமென்றால் அது அச்சிக்கல்களைத் தீர்த்துவிடமுடியும் என்ற நம்பிக்கை மட்டும்தான் அல்லவா?

நாஞ்சில் நாடனின் ‘பாம்பு’ சிறுகதை புகழ்பெற்றது. ஒரு தமிழ்ப்பேராசிரியரின் வீட்டிற்குள் நுழைந்துவிடும் பாம்பு ஒன்று அவருடைய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படிக்க நேர்ந்து, தொல்தமிழ்க்குடிக்குச் செய்யும் சேவையாக இருக்கட்டும் என்று முடிவெடுத்து, ‘வக்காளி வரட்டும்’ என்று காத்திருப்பதாக அந்தக் கதையை முடித்திருப்பார். தமிழ்ப் பேராசிரியர்களின் எழுத்துக்கள் அந்த அளவுக்குப் படைப்பாளிகளை பாதித்திருக்கின்றன. அவ்வகையில் பெருமாள்முருகன் விதிவிலக்கு என நான் நினைத்துக் கொள்வதுண்டு. சு.வேணுகோபாலும் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிவதை அறிந்து மகிழ்ந்தேன். தமிழ் இவர் வார்த்தைகளில் இன்னும் ஆழமாக வேர்பிடிக்கிறது. ஏன் வம்பு என்று தொடாமலோ அல்லது பட்டும்படாமலோ சொல்லிப்போகப்படும் விஷயங்களை ஆதியந்தமாக அணுகும் இவரின் வேரெழுத்துக்கள் ஊடுருவும் ஆழங்கள் சொற்களில் விவரிக்க முடியாததாக இருக்கிறது. தமிழ் வாசகப்பரப்பும் படைப்பாளிகளும் இவ்வெழுத்துக்களைக் கூர்ந்து கவனித்தால் தமிழும் புனைவும் மேலும் வளம்பெறும்.

வாழ்வு கொள்ளாத துயரம்

மாயக்கூத்தன்

படம்: www.nhm.in

இரண்டு நாவல்களையும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் கொண்டு தான் சு.வேணுகோபால் படைப்புகளை இங்கு அணுகுகிறேன். அவருடைய படைப்புகளில் ஒரு சிறு பகுதி தான் இவை என்றாலும் அவருடைய கதையுலகத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.

‘நிலம் எனும் நல்லாள்’ நாவல் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவனுடைய கதை. நாவல் முழுக்க முழுக்க அவன் தனக்கும் தன் குடும்பத்திற்கும் நேர்ந்த அசந்தர்ப்பமான நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டேயிருக்கிறான். தம்பியின் மரணம், விவசாயத்தின் வீழ்ச்சி- இது எல்லாவற்றையும் விட, அணுக்கமில்லாத மனைவி. கவலைகளுக்கு குறைவில்லாத வாழ்வு. மனச்சோர்வில் விழுந்தவன் போல, ஒன்றை விட்டு மற்றொன்றைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறான். தன்னுடைய கடந்த கால வாழ்வையும் தற்கால வாழ்வையும் மாறி மாறி அசைபோடும் பழனிக்கு, அவன் தேடும் பிடிமானம் சிக்குவதில்லை. நமக்குமே கூட.

நாவல் முழுக்க முழுக்கவே பழனியின் கவலைகளோடும் புலம்பல்களோடுமே வளர்கிறது. நல்லவிதமாக நகரும் விஷயங்களும்கூட கடைசியில் துயரத்தையும் சண்டைகளையுமே சந்திக்கின்றன. முதன் முதலில் பழனியும் அவன் மனைவியும் சண்டை போடும் போதே, அவர்கள் பரிமாறிக் கொள்ளும் வார்த்தைகளைக் கொண்டே, அவர்களுக்கு இடையிலான உறவின் தன்மை நமக்குப் புரிந்துவிடுகிறது. ஆனால், அவர்கள் திரும்பத் திரும்ப சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வாழ்க்கையில் இப்படிதான் இருக்கும் என்றாலும் வாழ்பவர்க்ளுக்குக் கிடைக்காத புரிதல்கள் வாசகர்களுக்கு சீக்கிரம் பிடிபட்டுவிடுகின்றன. எனவேதான், நாவலின் இறுதி வரை, ஒரு நோக்கமுமில்லாமல் தம்பதிகளுக்குள் சண்டை, பழனியின் கவலைகள் என்று மாறி மாறி சொல்லப்பட்டிருப்பது சலிப்பைத் தருகிறது.

இந்நாவலின் மிக நல்ல பகுதிகள் என்று சொல்லக்கூடியவை, விவசாய முறைகளைப் பற்றியும் மனிதர்களின் இடப்பெயர்வு பற்றியும் ஆசிரியர் எழுதியிருப்பவை. என்னுடைய தேவைக்காக, வேணுகோபால் விவரித்திருக்கும் மிளகாய் சாகுபடி நுட்பத்தைக் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். நமக்கு உதவினாலும், பல இடங்களில் இம்மாதிரியான விரிவான குறிப்புகள்/விவரணைகள் கதையோடு ஒட்டாமல் அதன் ஓட்டத்திற்கு தடைபோடுகின்றன. குறிப்பாக இப்படிப்பட்ட ஒரு இடம்- பழனி தெருவில் போய்க் கொண்டிருக்கும் போது ஒருவர் வீட்டில் மாடு இருக்குமே என்று யோசிக்கிறான், பிறகு அதற்கு அவன் வைத்தியம் பார்த்தது விரிவாகச் சொல்லப்படுகிறது. எதற்கு அவசியமேயில்லாமல் இது போன்ற விவரணைகள் என்று புரியவில்லை. தம்பதியர் மீண்டும் மீண்டும் சண்டை போட்டுக் கொள்வதிலாவது ஒரு யதார்த்தம் இருக்கிறது.

ஆழமான மனச்சோர்வு கொண்ட பழனி கதையின் கடைசியில் தனக்குக் கிடைக்கும் ஒரு சிறிய அங்கீகாரத்தைக் கொண்டு வாழ்வு முழுமைக்கும் நிம்மதி அடைவான் என்று நினைக்க முடியவில்லை. பொதுவாக, வேணுகோபாலின் கதைகள் சில இது போன்ற ஒரு புதிய புரிதல் அல்லது தெளிவு அல்லது உணர்த்தல் அல்லது தரிசனத்தில் வந்து முடிவதை நிறைய பேர் பாராட்டியிருக்கிறார்கள். இத்தனை காலமாய் துயரம் நிறைந்திருந்த வாழ்க்கையையே முழுசாக மாற்றிவிடும் என்ற நம்பிக்கை ஒளியை வாசகர் உள்ளத்தில் இது போன்ற முடிவுகள் பாய்ச்சுகின்றன. ஆனால் நிம்மதியாய் தூங்கி எழுந்ததும் தொற்றிக் கொள்ளும் கவலைகள் போல் புறவுலக அழுத்தங்கள் கதையின் முடிவுக்குப்பின் இன்னும் வீரியமாக தொடரத்தானே போகின்றன.

‘ஆட்டம்’ வேணுகோபாலின் மற்றொரு நாவல். கதை அமைப்பில் இவ்விரண்டு நாவல்களும் ஒரே மாதிரியே எழுதப்பட்டிருக்கின்றன. கருப்பொருள்தான் வேறு. ‘நிலம் எனும் நல்லாள்’ஐக் காட்டிலும் ஆட்டம் இன்னும் மேலான படைப்பு. நாயகர்களுக்கு திடீரென்று ஏற்படும் மனத் தெளிவு போன்ற சில ஒற்றுமைகள் இவ்விரு நாவல்களுக்கு இடையே உண்டு. ஒற்றுமை என்று சொல்லும்போது இன்னும் ஒரு விஷயம்- வேணுகோபாலின் நாவல்கள், கதாபாத்திரங்களின் எண்ணங்கள் மூலமே சொல்லப்படுகின்றன. கதாபாத்திரத்தின் குரல், ஆசிரியரின் குரல் என்று பிரித்தறிய முடிவதில்லை. அப்படி இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. ஆனால், இங்கே எழுத்தாளர் உருவாக்கும் ஒரு கதாபாத்திரத்தின் கருத்தை எழுத்தாளருடையது என்று நினைத்துவிட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

மனைவி தன்னை விட்டுப் போய்விட்ட ஒருவனுக்கு தன்னை மீண்டும் மதிக்கத் தகுந்தவனாக ஆக்கிக் கொள்ள ஏதாவது செய்தாக வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் வடிவேலுக்கு எப்படியாவது தன்னை நிரூபித்தாக வேண்டும். வடிவேல் அவன் முன்பு கொடிகட்டிப் பறந்த கபடியின் மூலம் இழந்த தன்மானத்தை மீட்டு விட முயற்சிக்கிறான். அதிலும் கூட கபடியின் மூலம் யாரையாவது தனக்குப் பெண் கொடுக்க வைத்துவிட வேண்டும் என்று விரும்புகிறான். அவனுடைய உடைந்த தன்மானத்திற்கு இன்னொரு பெண் வந்துவிட்டால் போதும் என்று தோன்றுகிறது. ஆனால், கதையின் போக்கில் அவனுடைய எண்ணங்கள் மாறுகின்றன.

கோமாரி திருவிழா பற்றியும் நரிக்குறவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் இந்நாவலில் விரிவாக எழுதியிருக்கிறார். வேணுகோபால் மிகத் துல்லியமாக எழுதுபவர். அவருடைய கதையில் ஒரு விஷயம் நடந்தால் அது எங்கே நடக்கிறது என்பது வரை அவருடைய கவனம் போகிறது. ”கடக்கும் போதாவது ஓரக்கண்ணால் பார்ப்பாள் என்று நினைத்தான். ஆளற்ற தெருவில் நடந்து போவது போலக் கடந்து சென்றாள். பார்க்கவே இல்லை. நான்கு எட்டு வைத்ததும் ஞானசேகரன் அஸ்திவாரம் எழுப்பி மண்மெத்திப் போட்டிருந்த அடிச்சுவர் ஓரம் போய் காளை சுவர்தொட்டு நின்றான். அடுத்து கருவேல மரத்தடியில் பசுமாடு கட்டிக் கிடக்கிறது. இந்தப் பக்கம் பாண்டி ஆசாரியின் இடிந்து போன வீடு. குலுங்கிக் குலுங்கி அழுந்தான்”. வேணுகோபாலின் பலம் இந்த விவரணைகள் என்பதில் சந்தேகமேயில்லை.

நாவல்களை விட்டுவிட்டு சிறுகதைகளுக்கு வந்தோமென்றால், சு.வேணுகோபாலின் கதையுலகம் விரிகிறது. அங்கும் இங்கும் அலைபாயும் நாவல்களைவிட அவருடைய சிறுகதைகள் கச்சிதமாக ஒரு சட்டகத்திற்குள் வருகின்றன. ’களவு போகும் புரவிகள்’ தொகுப்பில் அவருடைய வீச்சு எவ்வளவு அதிகம் என்பதைப் பார்க்கமுடிகிறது. ’வெகுதூரம் விலகி…’ கதை ஒரு சிற்றூர் மருத்துவரைப் பற்றிய கதை. இதில் மலைவாழ் மக்களின் மருத்துவ முறைகளைப் பற்றி விவரணைகள் வருகின்றன. எதுவும் கதையை மீறி துருத்திக் கொண்டிருக்கவில்லை. அவ்வளவு அருமையான கதை.

நாவல்களின் நாயகர்கள் கவலையில் உழன்றால், அவருடைய சிறுகதைகள் பெரும்பாலும் வீழ்ச்சியைப் பேசுபவை. இயலாமையைப் பேசுபவை. அதுவே அவருடைய கதைகளைப் பலருக்கு பிடிக்க வைத்திருக்கின்றன என்று தோன்றுகிறது. பல தலைமுறைகளாக உருகி உருகிக் கதை கேட்டவர்கள் நாம். தோல்விகளில் துவளும் ஒரு இளம் விவசாயி (மண்ணைத் தின்றவன்), கணவனால் நீர்பந்திக்கப்பட்டு மீண்டும் மீண்டும் கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண் (வட்டத்திற்குள்), ஓர் பாலியல் தொழிலாளி (மீதமிருக்கும் கோதும் காற்று), முப்பத்தைந்து வயதில் கல்யாணம் செய்து கொண்டு தான் நினைத்த வண்ணம் உறவு கொள்ள முடியாத ஒருவன் (சங்கிலி) இவை இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளின் பிரதான பாத்திரங்கள். இந்தக் கதைகளை வாசிக்கும்போது இவர்கள் மீது நமக்குப் பரிதாபம் ஏற்படுகிறது. ஆனால், இந்தக் கதைகள் அத்தோடு நின்றுவிடுகின்றன. மண்ணைத் தின்றவன் கதையில், இசக்கியினுடைய தோல்விகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே வந்து கடைசியில் அவனுடைய சாதி சுட்டிக் காட்டப்பட்டு மேலும் குறுகிப் போவதாக வருகிறது. இதைப் போலவே மற்ற கதைகளும். உண்மையில் இந்தக் கதைகள் நிறைய பேரின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. ஆனால், அதில் என்ன சவால் இருக்கிறது என்று தெரியவில்லை. அடுக்கடுக்கான துயரங்களை விவரித்து அதன் முடிவில் மேலும் ஒரு இடியை இறக்குவதையும் அல்லது ஒரு வெளிச்சக் கீற்றைக் காட்டுவதையும் தாண்டி எழுத்துக்கு இருக்கும் சாத்தியங்கள் நிறைய.

வேணுகோபாலின் நாவல்களாகட்டும் சிறுகதைகளாகட்டும், அவற்றில் திருமண பந்தத்திற்கு வெளியே நிகழும் ஆண்-பெண் உறவுகள் அதிகம் எழுதப்பட்டிருக்கின்றன. ‘ஆட்டம்’ நாவலே வடிவேலின் மனைவி கனகம் அவனையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறொருவனுடன் போவதிலே தான் நிகழ்கிறது. அதே நாவலில் வடிவேலின் நண்பன் காளையனுக்கும் அவனுடைய சித்திக்குமான உறவு பேசப்படுகிறது. ’நிலம் எனும் நல்லாள்’ நாவலிலும் இப்படிப்பட்ட உறவு பேசப்படுகிறது. இதைக் குறையாகச் சொல்ல முடியாது என்றாலும் எனக்கு இதில் இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன. ஒன்று, ஒரு குறிப்பிட்ட சமூக பொருளாதார வட்டத்தில் இருக்கும் மக்களைப் பற்றி இப்படி எழுதும்போது அவர்களோடு தொடர்பிலே இல்லாத ஒரு வாசகன் அவர்களைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வான்? நாம் செய்தித்தாள்களில் தினம் தினம் படிப்பது வேறு. அதே விஷயங்களை இலக்கியத்தில் படிப்பது வேறு. செய்திகள் பிறர் வாழ்வை நம்மிடம் கொண்டு வந்து கொடுத்தால், இலக்கியம் நம்மை அவர்களின் இடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அது போதுமான அளவில் நிகழ்கிறதா அல்லது வேறு யாருக்கோ நடக்கும் விஷயங்களை வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்கிறோமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது, அதுதான் என் இரண்டாவது பிரச்சினை.

அங்கீகரிக்கப்பட்ட உறவுமுறைகளுக்கு அப்பால் ஏற்படும் தொடர்பு மாதிரியான விஷயங்களில் உள்ள என் குறுகுறுப்பு இன்னமும் எனக்குக் குறையவில்லை என்பதால், இந்தக் கதைகளில் இந்த உறவுகளின் நோக்கம் என்ன என்பது புரியவில்லை. வேணுகோபால் இத்தகைய உறவுகளை நிறைய எழுதியிருக்கிறார். ஆனாலும், இவ்வுறவுகளின் காரண காரியங்களை அவர் பேசவில்லை. இந்த உறவுகள் இருக்கின்றன, ஆனால் திருமண பந்தத்தை உடைத்துக் கொண்டு போகும் அளவிற்கு மனிதர்களை ஈர்ப்பது எது? காமம் மட்டும்தானா? எதிர்காலமே தலைகீழாகிவிடும் நிலையிலும் மனிதர்கள் ஏன் அதற்கு துணிகிறார்கள்? ‘ஆட்டம்’ நாவலின் ஒரு பெரும் புள்ளியே இதுதான் என்றாலும், அங்கும் இதன் தாக்கம் மட்டுமே பேசப்படுகிறது. ஏனோ, எழுத்தாளர் இந்த உறவுகளை விவாதிக்கவில்லை. அதனால் அவை ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்துவதோடு நின்றுவிடுகின்றன. ஒரு உயிர் இன்னொரு உயிரை அணைத்துக் கொள்ள வேண்டும் என்பது இயற்கைத் துடிப்புதான். ஆனால், நம் சமூக உறவுக் கட்டுமானங்கள் இவ்வளவு மெலிதாகவா இருக்கின்றன?

வெறும் புகழ்ச்சியில் அர்த்தமில்லை என்பதால்தான் விவாதத்துக்குரிய சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். நாம் ஒரு கலைஞனை மதிக்கும்போது நாம் முரண்படும் இடங்களைச் சொல்வது அவசியமாகிறது. சு.வேணுகோபாலுடைய மொழி அவருக்கே உரித்தானது. அவருடைய அனுபவங்கள் தனித்தன்மையானவை. சொல்ல வருவதை அப்படியே எழுத்தில் கொண்டு வருவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அவருடைய படைப்புகள் இன்னும் அதிகம் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படும்போதுதான் அவை இன்னும் அதிகம் அர்த்தமளிக்கும்.

சு. வேணுகோபால் என்னும் இலக்கிய மேதைமை

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

srirangam v mohanarangan

மிழ் இலக்கியம், குறிப்பாக சிறுகதை, கவிதை, நாவல் போன்ற துறைகள்தாம் எத்துணை முன்னேற்றம் கண்டுள்ளன! எத்தகைய உயிர் விகாசங்கள் பொலிய தமிழ் மொழியின் செறிவில் வகைபாடுகள் கூடுபூரிக்கின்றன! இவ்வண்ணம் நான் வியக்கக் காரணமாய் இருந்தவர்கள் சிலர். அதுவும் சு வேணுகோபாலைப் படித்ததும் இந்த எண்ணம் உரத்து எழுகின்றது. இதுவரை வெகுசில இலக்கிய ஆளுமைகளே சாதித்திருக்கும் அளவிற்கு உணர்வின் துல்லிய துலாக்கோல் துடிப்பில் சன்னத்தமாகி எழும் எழுத்தின் கச்சிதம், இலக்கியத்திற்கும் வாழ்விற்குமான ஊடாட்டப் புணர்வு சு வேணுகோபாலில் சாத்தியப்படுகிறது.

யதார்த்தமான மானிடத்தின் இயல்பான எழுச்சியும், பிறழ்வும், நொடிப்பும் பாவனை இன்றி வெளிப்படும் எழுத்து திரு வேணுகோபாலின் எழுத்து. படிப்பவர்கள் அவர் எழுத்தின் புதினவெளியில் இருக்கின்றார்கள்தான், சக மனிதர்களாக மட்டுமே. அவர்கள், பார்வையாளர்களாகவோ, ரசிகர்களாகவோ, ஆமோதிப்போ, மறுதலிப்போ தரும் முகாந்தரங்களாகவோ அவருடைய எழுத்து ஏற்படுத்தும் உலகில் இடம் பெறுவதில்லை. அவரவர் கவலைகளில் விரைந்தவண்ணம் வாழ்வில் பங்கு கொள்ளும் யதார்த்தமான சக மனிதர்களாக மட்டுமே வாசகர்களை அவருடைய எழுத்து வகைப்படுத்திக் கொள்கிறது. அதுவும் அவர் கருதிச் செய்வது என்று இல்லாமல், அவர் தமக்கு இயல்பான இடத்தை இயற்கையில் தம் எழுத்தில் இணங்கி அமர்வதால், வாசகர்களும் அவர்களுக்கேயான இயல்பான இடங்களில் சுதந்திரமாக விடப்படுகிறார்கள். அவருடைய நோக்கிலும், கருத்திலும் எதிர்பார்ப்புகளின் மேடைகளோ, திரைகளோ இல்லாத காரணத்தால், பாவனையற்ற எழுத்தின் வெட்ட வெளியில் வாசகர்கள் இயல்பாக நடமாட முடிகிறது.

சு வேணுகோபாலின் ‘உற்பத்தி’ சிறுகதை பல முறை படித்தது என்றாலும் விட்டுப் போன ஒரு கோணம் தொட்டுக் கொண்டே இருக்கிறது. சிறுகதை என்ற இலக்கிய வடிவைக் கச்சிதமாகக் கடைந்து வனைவதில் ஓர் அநாயாசமான நிபுணன் வேணு. அழகாகத் தோன்றும் வாழ்க்கை எங்கோ ஓர் ஓரத்தில் விகாரம் அடைவதையும் வக்கிர விளம்பரத்தனம் இன்றி இயல்பின் வேர்ப்பற்று பிசகாமல் சொல்வதில் வேணுகோபாலுக்கு இணை கிடையாது. இரையைத் தேடும் மிருகத்தின் அசைவுகளில் தெரியும் அமைதியான தயவுதாட்சண்யமின்மை மொழிநடையில் துலங்க வரிகளை விதைத்துச் செல்கிறார் வேணு.

நிலத்தடி நீரும் நிலங்களை வளைத்துப் போட்டு அந்நிய முதலீடு கட்டிய தொழிற்சாலைக் கழிவுகளும் சொல்லின் மௌனக் கதையின் பாத்திரங்கள். இயற்கையும், மனிதரும், தொழிற்சாலை நோக்கும் ஒன்றொடு ஒன்று சேராத பிணக்கில் நிலத்தடி நீர் பலியாகிறது. அதன் இறப்பைத் தாவரங்களும், பறவைகளும், விலங்குகளும் தம்மில் நிகழக் காட்டுகின்றன. இயற்கை எங்கும் மயான அமைதி மெய்ப்பாடு கொள்ளும் என்பதைச் செம்பூத்துகளும் வெகுவாக முயன்று காட்டிவிட்டுச் சாகின்றன. தன் எழுத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்மில் ஏதோ ஒன்று, இறப்பை வெற்றி கொள்ளப் படும் அவஸ்தையை உக்கிரமாக்கிக் கடைசியில்

‘இறகுகள் சிலிர்த்து தலை கொணங்கிய செம்பூத்தைக் கட்டுக்காப்பில் போட்டுவிட்டு வெந்த புல்வரப்பில் நடந்தோம். கையகல நிலத்திலே ஆதி ஜீவன்கள் அழியத் தொடங்கிவிட்ட காலம் தெரிந்தது. ஓடைக்கரையில் ஏறியபடி அதிகம் பேசாத நைனா “ஹிரோசிமாவில் அணுகுண்டை மேலிருந்து போட்டான்னா எல்லா எடத்திலயும் அப்பிடிதான் போடணுமெங்கிறதில்ல. சத்தமில்லாம கீழ இருந்தும் போடலாம். பூமாதேவி செத்துப் போச்சுன்னு தோணுது” என்றார். கருகிய காகித வார்த்தைகளாய் காற்றில் நொறுங்கிப் போனது நைனா சொன்னதும். பாதச்சுவட்டில் நெமுறும் குறுமணல் ஓசையோடு ஓடையில் நடக்கலானோம். கரையில் ஏறி நின்றதும் தொழிற்சாலையின் சங்கு ஆங்காரமாய் ஒலிக்கத் தொடங்கியது.”

என்று முடிக்கும் போது சங்கொலியின் மெய்ப்பாடு, அத்தனை வேதனை, விரசம், வாழ்வின் தோல்வி, நீரின் கேடு என்று வந்த வேலை முடிந்த எக்காளமாய் நம் சினத்தில் சூல் கொள்கிறது. (சிறுகதை குறிப்பு: ‘உற்பத்தி’, பூமிக்குள் ஓடுகிறது நதி – சு வேணுகோபால், தமிழினி, டிசம்பர் 2000)

’மறைந்த சுவடுகள்’ என்னும் சிறுகதை, சிறுகதையில் மட்டுமே சில பிரக்ஞைகளை எட்ட முடியும் என்பதை நிரூபிக்கும் ஒன்று. கவிதை என்னும் மொழியின் சுயமார்ந்த இயக்கத்தோடு போட்டி போடக்கூடிய தகுதி சிறுகதைக்கு மட்டுமே உண்டு என்பதையும் ’மறைந்த சுவடு’களில் வரும் ஞான வள்ளி என்னும் வரைவு சான்று பகர்கிறது.

காதலன் ஏமாற்றியதால் ஒரு வித வக்கிரமான பழிவாங்கும் முனைப்பாக தன் அழிப்பு என்பதையே தேர்ந்தெடுக்கும் மூர்க்கம் கையாலாகாத நிலையில் தள்ளப்படும் பெண்ணுக்குச் சில சமயம் ஏற்படலாம். அப்படி ஏற்படும் போது அது எத்தகைய உள் வேதனையில் வாடுகிறது என்பதைத் தொனிப் பொருளாகவே மட்டும் காட்டி மிகத் திறமையாக அமைகிறது ஆசிரியரின் மொழிதல் ஓட்டம். மனித வாழ்க்கையாகிய கிராமத்தில் சாத்தியப்படும் எத்தனை விதமான உள்ளம் என்னும் நிஜத்தின் முனைகளைத் தொட்டு காட்ட முடிகிறது திரு வேணுகோபாலால் என்பது என்னை மயக்கும் சிந்தனையாக இருக்கிறது.

குழந்தைமையிலிருந்து தன்னைத் தூக்கிக் கொஞ்சியவள் என்னும் போதும், அவள் எழில் கட்டுடன் இருக்கக் காண்கையில் தழுவத் துடிக்கும் ஆண் மனம், நோயில் படுத்து உருக்குலைந்து காண்பதற்கு ஆள் விட்டனுப்பி, சேர்ந்து வெளியில் சற்றுக் காற்றாடப் போய் வரவெண்டும் என்று வேட்குங்கால் ஊர்ப்பார்வைக்கு நாணி அவளைத் தவிர்க்க வேண்டி சினிமாவிற்குச் சென்று தப்பும் நேரத்தில், கெஞ்சிய அவளின் உயிர் பிரிகிறது என்று காட்டும் போது தயக்கம் இன்றி முகம் சுளிப்பு இன்றி மன மெய்ம்மையின் ரணங்களை அறுவைக் கத்தியால் நேர்த்தியாகக் கிழித்துக் காட்டும் உள இயல் மருத்துவராகத் தோற்றம் தருகிறார் வேணு.

‘ஏங்க சொல்லிட்டுப் போக வேணாமா?… என் கிருஷ்ணாவை இன்னும் காணலையேன்னு, பஸ்கள்ல அடிபட்டிட்டானோன்னு அழுக ஆரம்பிச்சுடுச்சு. சாகுறப்ப யாருமே இல்லிங்க,’

ஞான வள்ளி இறந்துவிட்டாள்.

சு வேணுகோபால் இப்படி இந்தச் சிறுகதையை முடிக்கிறார் –

“வாழ்ந்ததற்கான சுவடற்றுப் போகும் வாழ்க்கை. வரலாற்றில் கால் பதியாது ஓடும் தொன்ம நதியில் கலந்த கோடானுகோடி ஜீவன்களில் ஒருத்தி.”

பெரும் பெரும் சித்தாந்தங்களுக்கெல்லாம் பரிந்துகொண்டு திரு வேணுகோபாலின் எழுத்து எழுவதாகத் தெரியவில்லை. அவருக்கு என்று தனிப்பட்ட சித்தாந்தப் பிடிப்புகளும் இருக்கலாமாக இருக்கும். ஆனால் அவருடைய எழுத்து எங்கும் எதற்கும் அடமானமாகப் போகாத எழுத்து என்று அவரது ஒவ்வொரு கதையின் மூச்சிரைப்பிலும் சான்று படுகிறது. கதைகளாக முருடு தட்டிப் போகும், வாழ்க்கையில் விதியில் முரண்களாகவும் ரணங்களாகவும் வெடிக்கும் வேதனைகளையும், கீழ்மைகளையும் அவற்றின் கொதியோடு இலக்கியம் ஆக்குவது கருதிச் செயல் என்பதைவிடத் தன்னுள் நடக்கும் இயக்கமாக வெளிப்பாடு காண்கிறார் சு வேணுகோபால் என்றுதான் தோன்றுகிறது. இதை சித்தாந்தப்படுத்த முடியாது என்பதுதான் இந்த வெளிப்பாட்டின் வலிமை. வாழ்க்கை எதிலும் கூறுபடக் கூடுமெனில் இதுவும் கூடுமாகலாம். இப்படியும்  இருக்குமோ என்று ஐயம் எழுமானால் நிச்சயம் அவரது ‘வெண்ணிலை’ தொகுதி அதற்கான விளக்கமாக இருக்கும். ‘தொப்புள்கொடி’யில் மனநிலை பிறழ்ந்து திரியும் பெண்ணின் கருவாய்த்த குழந்தையைப் பேணுவதாக நினைத்து அது இறந்தபின்னும் தூக்கித் திரியும் தாய்மையின் தொப்புள் கொடியும், ’வெண்ணிலை’ யில் இறந்த தந்தையின் உடலை எடுத்துச் செல்ல உதவி நாடி நிற்கும் பெண்ணும் வெறும் கதையாக ஒரு நாளும் ஆகிவிட முடியாத உணர்வின் உறுத்தல்கள். அவற்றையும், அது போல் பலவற்றையும் தன் எழுத்தால் கைபொறுக்கும் சூடாக ஆக்காமல் எப்படி முழு மெய்மையுடன் திரு வேணுகோபாலால் தர முடிகிறது என்பது வியப்புதான்.

அவருடைய நூல்கள் ‘பூமிக்குள் ஓடுகிறது நதி’, ’வெண்ணிலை’, திசையெல்லாம் நெருஞ்சி, ஒரு துளி துயரம், பால்கனிகள், ‘ஆட்டம்’ (என்னிடம் இருப்பவை, சில விடுபட்டிருக்கலாம்) என்னும் எந்தத் தொகுப்பிலுமே, எந்தக் கதையிலும், குறுநாவலிலும் அவருடைய இலச்சினை மாற்றுக் குறைவு இல்லாமல் அவையவை தன்னிச்சையாய் இயல முடிந்தது என்பது அவருடைய இலக்கிய மேதைமை எப்படி வாழ்வின் ஊற்றுக்கண்ணில் வேர் விட்டு நிற்கிறது என்பதைத்தான் காட்டுகிறது போலும்.

இலக்கியம் என்பது மனித உள்ளத்தின் அகத்தில் அடைந்துபோய் விட்டிருக்கும் கீழ்மை, மாசு, கெடுதல் முதலியவற்றைத் தயவு தாட்சண்யமின்றி வெளிப்படுத்தி, மறுக்க இயலாத கவனத்தில் கொண்டு வந்து உணர்வில் நிறுத்தி, அதனால், மனித உள்ளத்தைத் தூய்மையுறச் செய்யும் ஒரு மார்க்கம் என்னும் பொருள்பட ‘Catharsis’ என்று அரிஸ்டாடில் கூறும் இயக்கத்தை சு வேணுகோபாலில் முழுமையாகக் காணலாம்.

சு வேணுகோபாலைப் படிக்காமல் நம்காலத்துத் தமிழ் இலக்கியம் படித்திருப்பதாக ஒருவர் சொன்னால் அவருடைய நவீன தமிழிலக்கியப் படிப்பு முழுமை பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் திரு வேணுகோபாலுடைய இலக்கியப் படைப்பு என்பது வாழ்வு என்னும் முடிவற்ற மூலக்கருவிலிருந்து முகச்சாயம் கூடப் பூசாமல் உருவெடுத்து வந்து நம்மைச் சந்திக்கும் சுய கௌரவம் மிக்க எழுத்துகள். ஏதோ வழிவழியாகச் சொல்லிச் சொல்லிப் பலரும் பலருக்குச் சொல்லச் சொல்லி வந்து சேர்ந்த புராணங்களில் உருவியெடுத்து, அவற்றுக்கு அரிதாரம் பூசி உலவ விடும் எழுத்துகள் மலிந்து போன வழிவழி இலக்கியச் சூழல்களில் உண்மையும், உணர்ச்சிகளின் வேதனையும் உள்ளத்தில் அருளும் வாழ்வில் விதியும் மனித அறிவின் எல்லைகளும் ஒன்றுற முயங்கும் கணத்தில் கூடு பொரித்த உயிரான எழுத்துகளாய் அவை நம்மை நோக்கி விழிக்கின்றன. அந்த யதார்த்தத்தின் பசுமை நம் நினைவிலும் படர்கிறது. அன்றாட வாழ்க்கையின் தன்மையைப் புதுப்பித்தது போன்ற ஒரு நிம்மதி படிப்பின் பிற்றை நிலையாய் நாம் உணரக் கிடைக்கிறது.

சிறு குழந்தைகள் நாய்க்குட்டிகளைக் கண்டால் அவற்றைக் கொஞ்சுவதும் வளர்க்க விழைவதும் இயல்பு. அவ்வாறு இய்லபான ஒரு கணத்தைத்தான் பூமிகா என்னும் பெண் குழந்தையின் மழலையில் நமக்குக் காட்டுகிறார் ‘புற்று’ என்னும் சிறுகதையில். ஆனால் பெண்ணியம் இதுவரை உணர்த்திவிட முடியாத கடுமையுடனும் மெய்மையுடனும் கணிசமான சமுதாயம் பெண் குழந்தையை எப்படி நோக்குகிறது என்பதை பூமிகாவிடமிருந்து நயமாக அந்தப் ‘பெண் நாய்க் குட்டியை’ பூமிகாவின் மாமா வாங்கி ஓடும் வண்டியிலிருந்து விட்டெறியும் கணத்தில், அப்பொழுது பூமிகா படும் வேதனையில், அதற்கு மாமா சொல்லும் அலட்சியமான தேற்றுதலில் சொல்லாமல் உணர்த்திவிட முடிகிறது வேணுவால் என்றால் இலக்கியம் எங்கு இருக்கிறது ! —

“தங்கம், பொட்ட குட்டிய யாராவது வளப்பாங்களாடா? வீட்டுக்கு வீரமா ஆண் குட்டிய வளக்குறதவிட்டு….”
…………

கிராமங்களில் பொட்டைக் குட்டிகளை புற்றில் விடுவதுண்டு. …
……………………

பின்கதவைத் திறந்தவுடன் காலால் சட்டென எத்திவிட்டான். குட்டி கரணமடித்து விழுந்து வீச்சென கத்தியது. சட்டென எழுந்து வண்டிக்குப் பின்னாக ஓடி வர முயன்றது, பூமிகாவுக்கு செத்துப்போய் விடலாமெனக் குமுறியது மனசு. வரவர பின் தங்கிப் போகும் குட்டியைப் பார்த்துப் பார்த்து தேம்பித் தேம்பி அழுதாள். “எங்கயாவது கோயில்ல விடு மாமா. பசிக்கு அது என்ன பண்ணும்? பாவம் மாமா. அதுக்கு யாருமில்ல. பயப்படும் மாமா” உதடுகள் கோணி தழுதழுத்தது.

……………….

பூமிகாவை அம்மாவால் சமாதானப்படுத்த முடியவில்லை…..

“அம்மா நான் ஒங்கூடயே இருக்கேம்மா. என்னைய தொலச்சிடாதம்மா”

:”பூமிகா எங் கண்ணுல்ல… நீ அம்மா செல்லந்தான்… என்னாச்சு உனக்கு… அழக்கூடாது” வாரியெடுத்தாள்.

“சொல்லுமா, என்னைய எங்கயாவது தள்ளிவிட்டுறமாட்டயே. சாகுந்தண்டியும் ஒங்கூடவே இருக்கேம்மா. ப்ளீஸ்மா”

வாழ்க்கையின் தயவுதாட்சண்யமற்ற ஆட்டத்தைக் கபடியாட்டத்தினால் குறியீடாக்கிக் காட்டும் குறுநாவல் சு வேணுகோபாலின் ’ஆட்டம்.’ திறமையின் வெளிப்பாட்டில் திளைக்கும் வடிவேல் காதல், மனைவாழ்க்கை, மனைவியின் துரோகம் என்ற வளைக்கும் சுழலில் மாட்டி, வீழ விரும்பாத வீரமாய்த் தன்னை மீட்டெடுக்கும் முயற்சியில் படும் அவஸ்தை. இயல்பான ஆட்டம் கூடிவர, காலத்தால் தான் விழுந்துவிட்ட பள்ளத்தினின்றும் செங்குத்து ஏற்றமாய், பழைய நினைவுகளின் சாகசமாய்ப் படுத்தும் வேதனை. விட்டவளை மீண்டும் பிடிக்க விளையாட்டைப் பயன் கொள்ள முயலுங்கால் அது வினையாட்டாய் மாறி நிற்கும் முரண். கனகம் மீண்டும் தன்னிடம் வரவேண்டும் என்பது தன் ஆண்மைக்கே சவால் என்னும் போது, ‘மீண்டும் அம்மா வந்துடுவாங்களாப்பா’ என்று கேட்கும் குழந்தைகளின் குரலும் தன் வேதனைப்படும் மனத்தின் இடைவெளிகளின் ஊடே நுழைந்து ஒலிக்கும் உள்ளத்தின் ஏக்கம்தான் என்பதை உணரும் கணம்; தாயைப் போல் தாரம் என்ற பழமொழியின் எதிர்நீச்சுபோல் தாரத்தைப் போலவே நிகழ்ந்த தாயின் வாழ்விலும் ஒரு மிச்சம், தன்னை ஆதுரம் காட்டும் அக்காவின் அன்பாய்த் தீச்சட்டி எடுக்கும் வாழ்வின் ஒரு புது கோணம்; உடலிலிருந்துதான் பழைய தன்னை மீட்டெடுக்க வேண்டும் என்பதை உணரும் கணத்திலேயே, உடல் தனக்கென்று கற்பனைச் சுகவழியாய்க் கனவு காணும் நாகமணியென்னும் காமப் புதைகுழியின் சாத்தியம்; தயவுதாட்சண்யமின்றிப் பிரிக்கப்படும் தாய்மைக்கும் சேய்க்கும் இடையே வலிகண்டு திரியும் நாயின் முனகோலம், வெகுஅலட்சியமாகத் தாய்மையால் பெண்ணைக் கழுவேற்றித் தூக்கிலிட்டுக் கவலையே இல்லாமல் தன்வழியே போகும் ஊர்வாய், – என்று வாழ்க்கையின் கருணையற்ற கபடியாட்டத்தை நெடுக சுழல் ஆட்டமாகக் காட்டும் திரு வேணுகோபாலின் திறன் வியப்பிற்குரியது. இதில் அவ்வப்பொழுது ஆசிரியரின் குரலாக, மனித விழுமியங்களைப் பற்றிய சொல்லாடல் கதை உலகத்திற்குச் சற்று அந்நியப்பட்டு ஒலிப்பது போல் தோன்றினாலும், அதையும் திருவிழாவில் ஒலிக்கும் கிராமபோன் ஒலியாக்கி நகர்கிறது சற்றும் குறையாத மூர்க்கத்துடன் கதை அணியின் மாறு ஆட்டம்.

திரு வேணுகோபால் அவர்களின் இலக்கிய மேதைமைக்கு ஓர் உதாரணம் அவருடைய ‘பால்கனிகள்’ என்னும் நூல். இரு குறுநாவல்கள் – பால்கனிகள், இழைகள், இரண்டும் சேர்ந்த நூல். இரண்டிலும் அவர் எடுத்துக்கொண்டு புதினமாக்கியிருக்கும் பொருள் மிகவும் உருக்கும் சமுதாய அவலங்கள். ட்ரான்ஸ்ஜெண்டர் எனப்படும் மாற்றுப் பாலியல் பிறவியர் குறித்த மிக நுட்பமான துயர வாழ்க்கையைப் பற்றிய கவனத்தை ‘பால்கனிகள்’ என்பதில் தருகிறார். கூடப் பிறந்த சூழல்களே, சமுதாயமே, வேலை வாய்ப்பு தருவோரே அவர்களுடைய வாழ்க்கையை எவ்வளவு மனிதத்தன்மை அற்ற விதத்தில், மரியாதையும் இரக்கமும் இன்றி நலிகிறார்கள் என்பதைத் தமக்கே உரிய இலக்கிய லாகவத்தோடு திரு வேணுகோபால் படிப்பவர்களின் உச்ச பட்ச அக்கறைக்கு இலக்காக ஆக்கிவிடுகிறார்.

மரபுகளாலும், வழிவழிச் சமுதாயத்தாலும் சாதி என்ற பெயரால் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த ஒரு பள்ளியாசிரியர் எப்படிப்பட்ட சூழல்களில் தம் வாழ்க்கையின் கதியோடு துவண்டு, நிமிர்ந்து, பொருது, நிதானித்து, தாங்கி நடத்திச் செல்ல வேண்டியிருக்கிறது என்பதை மிக நெருக்கமான பார்வையாகக் காட்டி, படிப்பவர்களின் நியாய உணர்வைத் தூண்டி விடுகிறார்.

வளர்ந்து வரும் பருவத்து மாணவன், உடற்கூறில் விழித்தெழும் பாலியல் உணர்வுகள், கல்வியின் கடமை, யேசுவின் இரட்சண்யத்தில் விசுவாசித்த குடும்பம், பைபிளிலிருந்து உபதேசிக்கும் பாஸ்டராகத் தந்தை, ஒன்றுவிட்டு ஒன்று திறந்து கொண்டே இருக்கும் பாபத்தின் வாயில்கள், இவற்றின் ஊடாக இரட்சண்யத்தின் கரம் எதிர்வீட்டு ஜெபராணியின் குழந்தையின் கரமாக வருவதை அமைக்கும் விதம் ‘இரட்சண்யத்தின்’ அழகு. இதற்கும், முன்னால் மரித்த குழந்தையின் நினைவு மீண்டெழுகையாய், கண்ணீர் துடைக்கும் குழந்தையின் கரம் இரட்சண்யமாக ஆகிறது என்று காட்டும் நுட்பம் வேணுவிற்கே கைவந்த கலை.

மிக யதார்த்தமான கிராமத்தின் மாற்றக் கோடுகளை ‘உருமால்கட்டு’ தெளிவுறக் காட்டுகிறது. கிராமத்தின் இயற்கைவாய்ப்புகள் குறைய புதிய வாழ்வின் கதவுகளைக் கல்வி திறக்க, மூடும் என்று நினைத்த படல்கள் திறக்கின்றன. திறந்த வாயில்களும் மூடவும் கூடும் என்பதை குபேந்திரன் மாமன்மார்களை அழைப்பதில் வைத்துக் காட்டுகிறார். ‘இனி என்ன பிடிவாதம் வேண்டிக் கிடக்கு’ என்னும் மாமன்களும், ‘நொப்பமா இருக்கணும்டா… எது எக்கேடு கெட்டுப் போனா நமக்கென்ன?’ என்னும் அப்பாவும் கிராமத்தின் மாற்ற ஓட்டத்தின் இரு சுழிகளாய், படிப்பில் மெய்ப்பாடு கொள்ளவைக்கிறார் சு வேணுகோபால்.

சாதியின் ஈவு இரக்கமற்ற கொடிய முகத்தைத் தயவுதாட்சண்யமின்றி, பந்தம் கொளுத்திக் காட்டுபவர் வேணு. இதற்கு அருமையான உதாரணம் அவருடைய ‘திசையெல்லாம் நெருஞ்சி’. ‘எப்படி இவர்கள் இதில் மட்டும் ஒற்றுமையாக ஒரு பக்கம் நின்றுகொள்கிறார்கள் என்று விளங்கவில்லை’ என்று பழநி சொல்வது இந்திய சமுதாய அவலங்களின் வரலாற்றின் மீதே ஒட்டு மொத்த காயும் குரலாக ஒலிப்பது, படிப்பில் யதேச்சையாக நிகழும் உருவெளித்தோற்றமன்று, உள்ளபடியான ஒன்றின்பால் உறுத்து எழும் சீற்றத்தின் கோட்டுச் சித்திரம்தான். சமுதாய அவலங்களுக்கு உள்ளான கதாபாத்திரங்களை வரையும் பொழுதெல்லாம் தம் எழுத்தில் நடுநிலைப் பாவனையைச் செய்ய மறுக்கும் திரு வேணுகோபாலின் அறச்சீற்றம் அவருடைய உள்ளத்திற்குப் பொய்க்காத எழுத்தின் நாடி அதிர்வாய்த் துடிக்கிறது. சான்றாண்மை மிக்கோனின் குரலாகப் படிப்பவர்களின் உள்ளத்தில் பதிவாகிறது.

பொதுவாக வேணு அவர்களின் கதைகள் கவனத்தின் கூர்மையில் விரியும் கதைகளாய் இருக்கின்றன. கற்பனையின் புகை மூட்டங்களில் மறைந்து யூக பிம்பங்களாய் மயக்குவதை விட அவரது கதைகள் விடியலில் ஸ்வச்சமாகத் தெரியும் காய்ந்த நிலத்தில் பட்டுப் போக மறுத்து மூர்க்கமாக நின்று முறைக்கும் செடிகளின் பழுப்பு கலந்த பசுமையின் பல வேறு அனுமானங்களாய் நம் நெஞ்சில் பதிகின்ற காட்சிகள். அவை ஆகாயத்தை நிலத்தின், அதுவும் காய்ந்த வெடித்த நிலத்தின் அத்தனை முருடுகள், நெளிவுகள், முறிவுகள், அத்தனையோடும்தான் கலந்த ஒரு சாத்திய வெளியாய்ப் பார்க்கின்றன. நிலத்தையே மறந்த நெட்டுக் குத்துப் பார்வையில் ஒரே பாங்காய் கண்ணில் பூசும் வான வெளி அன்று அவருடைய கதைகள் காட்ட முனைவது. வேணுவின் கதைகளை நினைக்கும் போது, Classic Short Story என்னும் நூலில் Florence Goyet கூறும் கருத்துக்கு நேர் எதிர்மாறான சித்திரம்தான் தோன்றுகிறது.

The objective social distance which we have identified between the readers of short stories and their characters is galvanized in the feeling of that distance. In their ferocious and ludicrous struggle for a grotesque object, the characters establish their distance from the reader who would not for the world have it cluttering his room. (pp 123) (The Classic Short Story1870 -1925, Florence Goyet, Open Book Publishers)

வேணுவின் கதைகள் நம் அறைக்குள் வந்து அடைபட மறுக்கின்றன. அவற்றின் புற மெய்மையிலும் அவை நம் கண்ணுக்குப் பட்டும் படாமலும் போக்கு காட்டுகின்றன. ஆனால் அவருடைய புதினவெளியில் அவை கட்டாந்தரையை விட கனத்த மெய்மையுடன், நம் கவனத்தின் கூர்மையில் விரிய, பல்வேறு தொடர்ப்பாடுகளில் சங்கதிகளைச் சொல்லிய வண்ணம் நமக்காக என்றும் காத்திருக்கின்றன.

***