சு.வேணுகோபால் எழுத்தின் எல்கை

ராஜ சுந்தரராஜன்

raja sundararajan

டால்ஸ்டாய் சிறந்த எழுத்தாளரா, அல்லது தொஸ்தொயேவ்ஸ்கியா? இப்படி ஒரு கணிப்புச்சிக்கல் உலகில் உண்டு.

தொஸ்தொயேவ்ஸ்கியின் எழுத்தில் ஒரு தெருமரல் (thriller) இயல்பு உண்டு; டால்ஸ்டாயில் அப்படியல்லாத ஓர் ஒழுங்கமைதி. அதனால், டால்ஸ்டாயே சிறந்த எழுத்தாளர் என்பது ஒரு கணிப்பு.

நான் ஆனால் தொஸ்தொயேவ்ஸ்கியின் ஆள். முதன்மையாக அவருடைய குணவார்ப்புகளின் மனச்சிடுக்குகளே காரணம் என்றாலும் அதற்கும் அப்பால் அவருடைய சொல்முறையால் ஈர்க்கப்பட்டவன். இன்றைக்கு நாமெல்லாம் எழுதுகிறோமே, வாசிக்கிறோமே, விளைவை முன்சொல்லி வினையைப் பின்சொல்லும் – அதாவது ‘the effect first and the cause thereafter’ பாணி – அதை உலகுக்கே முதன்முதலில் உருவாக்கித் தந்தவர் தொஸ்தொயேவ்ஸ்கி என்பது வரலாறு. நிகழ்ச்சி வர்ணனைகள் மட்டுமல்ல, அவரது வாக்கியங்கள் ஓரொன்றுமே அப்படியானதொரு கட்டுமானத்தில் அமைந்தவை. (மொழிபெயர்ப்பில் அதை இழந்திருப்போம்). அத்தகையதோர் எழுத்துநடை காரணமாகவே, அவரது எழுத்தில் அந்த நாடகவழக்கு.

மொழிவிளையாட்டில் ஈர்ப்புள்ள நான், அப்படி, தொஸ்தொயேவ்ஸ்கியின் ரசிகனாக இருந்ததில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் அது சு.வேணுகோபாலை வாசிக்கிற வரைக்கும்தான்.

சு.வே. ஒன்றும் எழுத்தில் சிலம்பாடுகிறவர் அல்லர். மிகச் சாதாரணமான எழுத்துநடை அவருடையது. ஆனால் அவரை வாசிக்கவாசிக்க, டால்ஸ்டாயின் சிறப்பு என்ன என்பது அதுவாகவே புலர்ந்து விடிந்தது. படித்தவற்றில் இருந்தல்லாமல் பட்டவற்றில் இருந்து எழுதுகிறாரே அதுவா என்றால், ‘ரஷ்யன் மாஸ்ட்டர்ஸ்’ எல்லாருமே அப்படித்தானே? இது வேறு விசயம்.

சு.வே.யின் எழுத்துநடை மிகச் சாதாரணமானது என்றேனா? என்றால் அது சற்று எளிமைப்படுத்தல்தான். துல்லியத்தை விவரணையில் அணுகும் ஜெயமோகனுடைய, அல்லது குட்டையைக் குழப்பி அகத்துள்ளதை புறப்பரப்பில் வாய்பிளக்க எழுப்பும் கோணங்கியினுடைய எழுத்துநடை போன்றதோ அல்ல சு.வே.யினுடையது என்றுதான் சொல்லவந்தேன்.

இந்த இடத்தில், சு.வே.யின் “சாபநினைவுகள்” கதை நினைவுக்கு வருகிறது. ”பீம்பீடகா பாறையில் உருகிவரும் நீர்முள்ளிச்சாறு பாறைக் கத்தியில் பட்டுப் பளபளக்கப் பாயும் கல்குதிரை வீரனின் பிதுங்கும் கண்களில் பீறிடும் ஒளியென தலைமுடியில் புகுந்து நரைக்கிறது…” என்றிப்படிப் புறத்துவரும் அந்தக் கதைநாயகியின் கூற்றுகள், ஒரு பகடி போன்று, யாரைச் சுட்டுகின்றன என்பதை யூகிக்க முடியும். ஆனால் அவை பகடி அல்ல; ஒரு மேதை, போதாமை மிக்க இச் சமூகச் சூழலில், எப்படி அந்நியப் பட நேர்கிறது என்பதான இதயத்தின் ரத்தக்கசிவுகள்.

அதேதான், சு.வே.யின் எழுத்துகள் எதுவுமே ஒற்றைப் பரிமாணத்திலானது இல்லை. “வட்டத்திற்குள்ளே”, அதன் நாயகி ‘வயர் கூடை’ பின்ன முடியாததைப் பற்றிய கதையன்று, அது உலக வாழ்க்கைக்கு வாக்கப்பட்ட ஒரு கலைஞனின் தோல்வி பற்றியது. அப்படி வாசித்தால்தான் அதில் வரும் கருக்கலைப்புகள் இரண்டும் கூடுதல் அர்த்தம் பெறும். அப்படி வாசிக்கத் தெரியாத வாசகர்களுக்கு சில கதைகள் மொட்டையாய் முடிவன போலவும் தோற்றம்தரக் கூடும்.

ஆக, சு.வே.யின் எழுத்துகள் மேலோட்டமாகத்தான் சாதாரணமானவை; உட்கிடையில் மிக ஆழமானவை.

அப்புறம், சு.வே. வேளாண் தொழில்சார்ந்த எழுத்துகளில் வல்லவர் என்றொரு படிமம் உருவாக்கித் தரப்படுகிறது. ஒரு கோணத்தில் அது உண்மை என்றாலும், அவர் வேளாண்மைச் சூழலை எதற்கான கருப்பொருளாகப் பயன்படுத்துகிறார் என்று புரிந்துகொள்ளும் ‘ஐவேசு’ உள்ளவர்களால் மட்டுமே அதன் ஆழத்துக்குள் போக முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு தோட்டத்தில் மிளகாய்ச் செடிகள் இலைகறுத்துச் செழித்து நிற்கின்றன. ஒரு தாய் அவற்றைப் பார்க்கிறாள். தன் முலைகளைக் கட்டவிழ்த்து, நீரோடிப் பாயும் வாய்க்காலில் பால் பீய்ச்சி விடுகிறாள். அக்கணமே தோட்டத்தின் அத்தனை செடிகளும், வான்நிறைந்த தாரகைகள் என, பூத்துப் பொலிகின்றன. இது மேஜிக்கல் ரியலிசம். மார்க்குவெஸை மேற்கோள் காட்டுவதன்றி வேறொன்றும் சாதிக்க முடியாதவர்கள் வெட்கப்படத்தக்க ‘ஒரிஜினல் இந்தியன் மேஜிக்கல் ரியலிசம்’. ஆனால் சு.வே. அப்படி ஓர் இலக்கியக் கொள்கைக்காக வலிந்து இதை எழுதவில்லை என்பது விசயம் அறிந்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். (1) மிளகாய்ச்செடி பூக்காமல் இலைகறுத்துச் செழித்துக்கொண்டே போனால் அதன் விளைச்சல் பற்றிய கவலை எந்த ஒரு தோட்டக்காரனையும் தொற்றிவிடும். (2) போலவே, உடல்செழித்தும் பூப்பெய்தாத பெண்கள் பற்றிய கவலையும்.

ஆக, சு.வேணுகோபாலின் அக்கறையும் பொருள்முடிபும் வேறு.

காந்தாலட்சுமி அம்மையாரின் பெண்ணியத்தை ஆதரித்துப் பேசும் “சப்பைக்கட்டு” கதை நாயகன், தன் நண்பரின் மகன் அந்த அம்மையாரின் மகளைப் பெண்பார்க்க வந்து நிற்கையில், “பொம்பள ராஜ்ஜியம் பிடிச்ச குடும்பம்டா. ஆணாதிக்கம் அது இதும்பாளுக… வேற நல்ல எடமா பார்க்கலாம்.” என்று வெட்டி விடுகிற அந்த இடத்தில் கதை முடிகிறதில்லை. ‘திடீரென நேற்றைய கனவு நினைவுக்கு வந்தது,’ என்று இன்னொரு மட்டத்துக்கு நகர்ந்து முடியும்போது, மனித மனத்தின் கீழ்மைகளைப் பற்றி எழுதுவதில் இவர்க்கு இணை இவரேதான் என்று நமக்குத் தோன்றிவிடும்.

ஒரு சக்கிலியக்குடி மாணவன் தன்னோடு படிக்கும் ஜெயசுதாவின் முன் நல்ல உடுப்பு உடுத்தி அசத்தவேண்டும் என்று ஆசைப்படுகிறான். (எவ்வளவு இயல்பான ஆசை பாருங்கள்!) ஆனால் அதற்காக தன் அம்மா ஆசையாக வளர்க்கும் ஆடு குட்டிகளை விற்கும் அளவுக்கு படிப்புக்குப் பணம் வேண்டும் என்று பொய்க்காரணம் சொல்கிறான். அந்த ஆடு, குட்டிகள் பற்றிய வர்ணனைக் காட்சிகளைப் பாருங்கள்:

||குட்டிகள் தெருவில் ஏறி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்துக் கத்தின. ஓட்டமும் நடையுமாகக் குட்டிகளைப் பார்த்துக் கத்திக்கொண்டே நிறைந்த வயிற்றைத் தூக்கி நாலுகாலில் தடக்தடக்கென தாண்டித்தாண்டி ஓட்டத்தில் வந்தது தாயாடு. பனங்காய் போன்ற கனத்த மடியும் புடைத்த காம்புகளும் தொடையில் இடித்து இடித்து வேகத்தைத் தடுத்தன. ஓடிவந்த ஆடு அடித்தொண்டையிலிருந்து வந்துவிட்டேன் வந்துவிட்டேன் என்ற குரலை எழுப்பியது. தவ்வாளமிட்டுச் சென்ற குட்டிகள், நடுத்தெருவில், தாய்மடியில் முட்டி மண்டியிட்டன. கால்களை முட்டுக்கு ஏற்ற விதத்தில் அகட்டி வைத்த ஆடு, குட்டிகளின் ஆடுகின்ற வாலை முகர்ந்து நக்கியது. குட்டிகள் மண்டியிட்டு காம்புகளை உறிஞ்சின.||

||”என் படிப்பே போச்சு. ஆடு ஆடுன்னு சாவுறே. நான் நாசமாப் போறேன்,” என்று சண்டையிட்டான்.||

||750 ரூபாய்க்கு தாயோடு குட்டிகளை சேர்த்து விற்று, கயிறு மாற்றி, “நல்லா இருக்கணும்; பல்கிப் பெருகணும்!” என்று வாங்கியவருக்கு வாழ்த்துச் சொல்லித் தந்தாள். அம்மாவின் உதடுகள் கோணிக்கொண்டன. வாங்கியவன் இழுக்க இழுக்க அவன் பின்னால் செல்லாமல் அம்மாவைப் பார்த்துக் கழுத்தை இழுத்துக் கத்தியது கருங்கண்ணி. தொடைப்பக்கம் பிடிகயிற்றை போட்டு இழுத்துச் செல்ல பின்னங்கால்களைத் தேக்கிக்கொண்டே முகத்தை மட்டும் அம்மா பக்கம் திருப்பி, பா பா என்று கத்திக்கொண்டு போனது.||

||அம்மாவின் அடிவயிறு வெட்டிவெட்டித் துடித்தது. பற்களிடையே எச்சில் நூல் பிணைய மெல்ல வாய்திறந்து அழுது பரிதவித்தாள். ஒரு பைசா தொடாமல், “நைனா, பார்த்துச் செலவு பண்ணுடா! தம்பி தங்கச்சி எல்லாம் ஒன்ன நம்பி இருக்கு நைனா! நல்லாப் படிக்கணும் நைனா!” என்று தந்தாள்.||

இதை, “இழைகள்” குறுநாவலிலிருந்து, இடைப்பகுதிகளை வெட்டிவெட்டித்தான் ஒட்டியிருக்கிறேன். அப்படியும் கண்ணில் நீர்சோரத்தான் தட்டச்சி முடித்தேன்.

இதே போல “ஆட்டம்” நாவலில், ஒரே தாய்க்கு இன்னொரு தந்தையில் பிறந்தவள் என்றாலும் அக்கா என்றொரு உறவு வருகிறது. வாசிக்கையில் தவித்துப் போவோம். ஆனால், ஓர் ஆண் எழுத்தாளர்க்கு அம்மா அல்லது அக்கா பற்றி எழுதுவதும் ஒரு பெண் எழுத்தாளர்க்கு அப்பா (“பழையன கழிதலும்” நாவலின் அப்பா குணவார்ப்புக்காக சிவகாமியைப் பாராட்டுகிறேன்) அல்லது அண்ணன் பற்றி எழுதுவதும் பெரிய சாதனை ஆகாது என்றுதான் கருதுகிறேன்.

இந்த எல்லை விளிம்பில்தான் சு.வேணுகோபால் ஒரு நெடுந்தாவல் தாவுகிறார். “ஆட்டம்” நாவலில் குறவர்கூட்டம் பற்றிய வர்ணனைகள், மேலும் ஒரொரு கதைகளிலும் பெண்களின் பிரச்சனைகளுக்குள் உள்ளிறங்குவது; மாதவிடாய், பேறுகாலம், கருக்கலைப்பு, பால்கட்டிக்கொள்ளுதல் இன்ன சிக்கல்கள் மட்டுமல்ல, கத்திமேல் நடப்பது போன்ற ஆகும் ஆகாத் ‘தொடுப்பு’களுக்குள் விழுந்து நம்மை அலைக்கழிப்பதின் வழியாக இந்த சமூக அமைப்பின் சிக்கலான இருட்டு மூலைகளையும் சுட்டிக் காட்டுகிறார். “நிலம் என்னும் நல்லாள்” காட்டும் மனைவிதான் இன்றைக்கு நடைமுறை உண்மை. ஆனால் நம்மைப் பழைமைக்குள் வற்புறுத்தாமல், பழைமை தொட்டு, நிகழ்காலத்துக்குள் ஆற்றுப்படுத்துகிறார் பாருங்கள், அங்குதான் சு.வேணுகோபால் இன்றியமையாமை என்னும் நிலையை எட்டுகிறார்.

புதுமைப்பித்தன் போன்ற மேதைகள் கதை எழுதிய மொழி இது. தொன்றுதொட்டு வந்த தமிழ்க்குடிகளில் பிறந்து வந்தவர்கள் மட்டுமன்று, வந்தேறிய பிறகு இதனைத் தம் மொழியாக வரித்தவர்களும் எழுதிவருகிறார்கள். “நிலம் என்னும் நல்லாள்”, அப்படி, தெலுங்கர்களைப் பற்றிய கதை. ஆனால் அந்தக் கதைமாந்தர்களுடைய நிலப்பற்று, வேட்கையைப் பாருங்கள்!

சு. வேணுகோபாலின் தாய்மொழி இன்னதென்று அறியேன். ஆனால் இன்றுவரை எழுதிய தமிழ் எழுத்தாளர்களில் இவருக்கு இணை என்று சொல்ல எவரும் இல்லை என்றே தோன்றுகிறது. காரணம், வேறொருவரும் இவரைப்போல் எதிர்பாலினரை ஊடறுத்துக் காட்டும் நுணுக்கம் பெற்றிலர். கு.அழகிரிசாமி ஓரளவுக்குத் தேறுகிறார்; தி.ஜானகிராமன் தன் வேட்கைகளை எதிர்பாலில் ஏற்றியவர் அவ்வளவே.

தொஸ்தொயேவ்ஸ்கியின் குருஷெங்க்கா தேருகிறாள்; மற்றொரு பெண்ணும் என் நினைவில் இல்லை. ஆனால் டால்ஸ்டாயின் அன்னா, கிட்டி, மர்யா, நடாஷா, ஸோன்யா இப்படி…

இப்படித்தான் டால்ஸ்டாய் சிறந்த எழுத்தாளர் என்னும் முடிவுக்கு வந்தேன்.

-oOo-

3 comments

  1. இன்றுதான் பார்க்க நேர்ந்தது.எனது ரசனைக்கு நல்ல
    தீனி. வாழ்த்துக்கள்!

  2. மிக நல்ல பேட்டி. ஆனால் ஸ்பாரோ அமைப்பில் எழுத்தாளர்களுக்கு விருது தருவது சென்ற ஆண்டிலிருந்துதான். நான் அவரைக் கூப்பிட்டது அவர் விவசாயம் பற்றி எழுதிய ஒரு கட்டுரையையும் அவர் கதையையும் பாராட்டத்தான் என்று நினைக்கிறேன். ஒரே நாளில் பலமுறைகள் கூப்பிட்ட நினைவில்லை. அப்படி கூப்பிடக்கூடியவள்தான் நான்! ஆனால் ஒரு விருது குறித்து இவ்வளவு முறை மாற்றி மாற்றிக் கூறுபவள் இல்லை!ஒரு வேளை வேறு ஒரு நபருடன் என்னைப் போட்டுக் குழம்புகிறார் என்று நினைக்கிறேன். நான் மூலிகைச் செடிகள் வளர்க்க விருப்பம் என்றெல்லாம் அவரிடம் பேசினேன் நீண்ட நேரம் என்ற நினைவு. எந்த விருது தரும் இலக்கிய அமைப்பிலும் அப்போது நான் இல்லை. இப்போதும் இல்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.