சு.வேணுகோபால் எழுதிய “ஆட்டம்” குறுநாவல் மேலோட்டமாகப் பார்க்கையில் பிரிவைப் பற்றிய கதை என்றாலும் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளின் போது தனி மனித மனம் கொள்ளும் ஊசலாட்டங்களைப் பேசும் படைப்பாகவும் அமைந்திருக்கிறது. பிரிவின் துயரை ஏற்க மறுக்கும்போதும், அதை உண்டாக்கியவர்கள் மீது அதீத வெறுப்பும், கோபமும் உண்டாக்கும் மனதின் அனத்தல்கள் மீது வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. பலதரப்பட்ட படைப்புகளில் கையாளப்பட்ட கருவாக இருந்தாலும் சு.வேணுகோபால் பயணம் செய்யும் வழிகளும், அடையும் முடிவுகளும் அவருக்குரிய முறையில் தனித்துவமாக இருக்கின்றன.
பிரிவின் துயர் பற்றிய பேசுபொருள் தமிழுக்குப் புதிய கதைக்களன் அல்ல. நம் காவியங்களிலும் பிரிவு மிக விரிவாகக் கையாளப்பட்டுள்ளது. நெய்தன் நிலப்பறவையான அன்றிலின் பிரிவு, தென் அமெரிக்கப் பறவையான Candor அனுபவிக்கும் பிரிவு என மனிதன் உட்பட ஒவ்வோர் விலங்கும் பிரிவின் வேதனையை வெவ்வேறு விதத்தில் ஏற்றுக்கொள்கின்றன. சங்கம் முதல் காப்பியங்கள், சிலம்பு, நவீன ஆக்கங்கள் வரை பிரிவின் துயர் பற்றிப் பல பெருங்கதைகள் உள்ளன. ராமன் தற்கொலைக்கு முயல்கிறான், சாமானியளான கண்ணகி அரசவை நுழைகிறாள் – ஒவ்வொருவரும் அவரவருக்குரிய வகையில் பிரிவின் துயரை எதிர்கொள்கிறார்கள். பல கதைகளில் பிரிவு என்பது பெருநிகழ்வுக்கான முகாந்திரமாக இருக்கிறது. கொந்தளிப்பான சமூக நிகழ்வாகவும், அறமீறலின் எதிர்ப்பைக் காட்டவேண்டிய அவசியத்தை பிரிவுகள் உணர்த்துகின்றன. இவ்வகையில் “ஆட்டம்” குறுநாவல் பிரிவின் விசாரணையை பல தளங்களில் மேற்கொள்கிறது.
“ஆட்டம்” எனும் குறுநாவலின் கதை மாந்தர்கள் தேனி மாவட்டத்தின் வீரபாண்டி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். முல்லையாற்றின் நிலப்பகுதி. ஊரெங்கும் சோளக்குருத்துகளும் வாகை மற்றும் பூவரச மரங்களும் நிரம்பியிருக்கும் செழிப்பான பூமி. மழைக்குப் பஞ்சமில்லாததால் விளைநிலங்களுக்கும் குறைவில்லை. வீரபாண்டியில் பிரதானமான விளையாட்டு கபடி ஆட்டம். குஞ்சு குளுவான்கள் முதல் வயதான மூதாட்டிகள் வரை ஆட்டம் என்றால் கபடிதான். தேனிப்பகுதியைச் சுற்றியிருக்கும் ஊர்களிலிருந்து பல கபடி குழுக்கள் வீரபாண்டியில் சந்தித்து போட்டிபோடும். அவர்களுக்கு அது பெருமை தரும் விஷயம். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தாலும் கபடி போட்டியில் வீரபாண்டிக்கு இருக்கும் அதிகாரம் தேனி பகுதியில் வேறு ஊருக்கு இல்லை.
அப்பேற்பட்ட வீரபாண்டியில் வடிவேல் கபடி விளையாட்டில் தெய்வமென மதிக்கப்பட்டவன். வடிவேல் ஆடுகிறான் என்றால் ஐந்து வயது குழந்தை முதல் பல் போன கிழவர்கள் வரை கோமாரியம்மன் திடலில் கூடிவிடுவார்கள். பதினெட்டு வயது முதல் கபடி வீரனாகத் திகழ்ந்த வடிவேலுவின் கதையைச் சுற்றிப் பின்னப்பட்டது இந்த குறுநாவல். பதினெட்டு வயது முதல் இருபத்து நான்கு வயது வரை கபடி மட்டுமே அவனது நினைப்பாக இருந்தது. வைரமணி, பிரேம்குமார், காளையன் எனும் நண்பர்களோடு நான்கு கட்டங்களில் நடத்தும் சாகஸங்கள் தேனி மாவட்டம் முழுவதும் மிகப் பிரபலம்.
நான்கு திசைகளில் சென்றுவிட்ட நண்பர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் வலிகளையும் பேசத்தொடங்கும் கதை நெடுக அவர்களது ஆட்டத்தின் திண்மையும் வெளிப்படுகிறது. வடிவேல் காதலில் விழுகிறான்; ஆனால் தோற்பதில்லை. திருமணத்தில் முடியும் காதல் ஒரு கட்டத்தில் கைநழுவுகிறது. நான்கு கட்டத்துக்குள் தனது சாகஸ ஆட்டத்தை நிகழ்த்தி வெற்றி வீரனாக வந்தவன் வாழ்க்கையின் போராட்டங்களை திருமணம் முடிந்த பின் சந்திக்கிறான். காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத பெண் வீட்டு முறைமாமனை தாக்கிவிட்டு இருபத்து நான்கு வயதில் ஜெயிலுக்குச் செல்கிறான். சில வருடங்களில் வெளியே வந்தவன் தன் மனைவியின் காதல் கழன்றுவிட்டதை உணர்கிறான். பிள்ளைகள் ரெண்டான பின்னும் அவனது மனைவி கனகத்துக்கு வேறொருவனுடன் தொடர்பிருப்பதைக் கண்டு பதறுகிறான். அவன் வாழ்க்கையிலிருந்து ஆட்டத்தையும், ஆட்டத்திலிருந்து வாழ்க்கையையும் பற்றிவிடமுடியும் எனும் எண்ணத்தோடு தனது முப்பத்து ஐந்தாவது வயதில் மீண்டும் கபடிப்பயிற்சி செய்யத் தொடங்குகிறான்.
நிகழ்காலமும் பழைய நிகழ்வுகளும் பின்னிப்பிணைந்து வளரும் கதையில் வடிவேலுவின் சமூக உறவு தத்ரூபமாக வெளிப்பட்டிருக்கிறது. இளவயதில் கபடி ஆடும்போது அவனுடைய நண்பர்களான காளையன், பிரேம்குமார், சுருளி போன்றோர் காதலுக்கும் அவனுடைய விளையாட்டுக்கும் மிக்க உறுதுணையாக இருக்கிறார்கள். அவனுடைய ஒவ்வொரு நினைப்பும் விளையாட்டில் தனது உடலின் பெளதிக இருப்பைக் கடந்து சாகஸங்கள் நடத்தும் கனவில் திளைக்கிறது. உடலைக் கட்டுமஸ்தாக மாற்றுவது ஒரு பயிற்சி என்றாலும் மனதின் அமைதியும் ஆட்டத்துக்கு இன்றியமையாத ஒன்றுதான். உடலும் மனமும் ஒருமுகத்தோடு இயங்கும்போது அவனால் பெளதிக இருப்புகளைக் கடக்க முடிகிறது. லயத்துடன் கூடிய சீர்மை அவனுக்குள் மட்டுமல்ல அவனைச் சுற்றியிருக்கும் சமூக உறவுகளிலும் பிரதிபலிக்கிறது. நண்பர்களுடனான உறவின் இனிமையிலும், அவர்களது சுகதுக்கங்களில் ஒருங்கிணைய முடியும் இயல்பும் வடிவேலின் ஆதார குணங்களாக வெளிப்படுகின்றன.
ரயில் தண்டவாளத்தில் நடக்கும் சைக்கிள் போட்டியில் திறமைவாய்ந்த பிரேம்குமார் ரயில் ஓட்டத்தில் சிக்கி இறப்பதும், உடல் உறுதியை சித்தியினுடனான உறவில் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வாழ்க்கையைத் தொலைத்த காளையனின் இழப்பு, தாயைக் காணாது வீட்டிற்கும் ரோட்டிற்கும் திரியும் வடிவேலின் நாயின் அலைக்கழிப்பு என ஒவ்வொருவரின் வாழ்க்கைப் போராட்டமும் கதையில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. உடலை போகப்பொருளின் உச்சகட்டமாக நினைத்து அதை மட்டுமே போஷித்து சிற்றின்பங்களில் ஈடுபடுபவர்கள் தங்களுக்குள் சீர்மையற்ற மன ஆட்டத்தை வாழ்வின் ஒரு கட்டத்தில் உணர்கிறார்கள். நடக்க முடியாமல் உடல் வீங்கிப் போகும் காளையன், ரெண்டாம் முயற்சியாக ஆட்டத்தைத் தொடங்கியிருக்கும் வடிவேல், முதல் உறவின் வழியே ஒரு பெண்ணைப் பெற்ற வடிவேலுவின் தாய் போன்றோர் நடுவயதில் வாழ்வின் அலைகழிப்புகளுக்கு ஆளாகிறார்கள். உடலின் ஆசைகளை நெடுகப்பற்றி வாழ்வு மீதான நம்பிக்கை மீது கவனத்தை கூட்டாது சிதறவிட்ட தருணங்கள் நாவலில் நிறைய உண்டு.
நாவலில் பொருந்தாத சித்திரம் வடிவேலு காமத்தைப் பற்றி அனத்தும் பகுதிகள் எனத் தோன்றியது. சித்தி நாகமணிக்கும் காளையனுக்கும் இருந்த உறவு தகாத காமத்தின் பயனாகத் தொடங்கிய ஒன்று. காளையனின் இளமையை கடைசி சொட்டு வரை உறிந்து ஐம்பது வயதிலும் தனது உடலைக் கட்டுக்கோப்பு குலையாது வைத்திருக்கும் நாகமணி கொன்று உண்ணும் யட்சி போன்றவள். காமத்தில் பிறந்து நிராகரிப்பிலும் நம்பிக்கை துரோகத்திலும் முதிர்ந்த இந்த உறவு நாவலில் மிக உயிர்ப்பானப் பகுதி. அதே நேரத்தில், காதலில் பிறந்து காதலைத் தக்கவைக்கப் போராடும் வடிவேலு – கனகம் உறவில் காமத்தின் ஏக்கம் ஆசிரியரை மீறி ஒட்டவைத்த ஒன்றாகவே தோன்றியது. வயதான பின்னர் ஆட்டத்தில் தோற்பதும், கனகுவின் கள்ளக்காதல் தன் மூக்குக்குக் கீழே நடப்பதை கண்டும் தடுக்க முடியாமல் தவிப்பதும் தனது செயலின்மையால் என நினைத்தாலும் உடலுறவில் அவள் மீதான ஆதிக்க நினைப்புக்கு கதையில் எந்த முகாந்திரமும் இல்லை என்றே சொல்லவேண்டும். ஒரு விதத்தில் நடுத்தர வயதில் மீண்டும் பயிற்சியைத் தொடங்கும் வடிவேலு தனது வாழ்க்கையையும் கனகுவையும் மீட்டு விடலாம் என எண்ணுகிறான். நேரடியாக இல்லாவிட்டாலும் அவனது முயற்சியில் இளமையை மீட்ட நினைக்கும் சாத்தியங்கள் காதலின் தேவையை உணர்வதால் மட்டுமே எனத் தோன்றுகிறது. நாகமணி மீதான காம இச்சை கூட இக்காதல் கைகூடாத இயல்பினால் விளைந்த எரிச்சல் தான்.
கோமாரியம்மன் திருவிழா சமயங்களில் பக்கத்து ஊரில் வசிக்கும் தனது அக்காவின் ஆசிர்வாதத்தை வாங்கும் வடிவேலு இம்முறையும் அதற்காகக் காத்திருக்கிறான். முதல் உறவில் பிறந்தவளை அவனது தாயும் ஒவ்வொரு வருடமும் திருவிழாவின்போதுதான் சந்திக்கிறாள். குடும்பத்தில் அனைவருக்கும் தெரிந்த ரகசியமாக இது இருந்தாலும், அக்காவின் ஆசிர்வாதம் நம்பிக்கையை கூட்டும் என வடிவேலு நினைக்கிறான். கனகம் தனது கள்ளக்காதலனுடன் பெங்களூரில் வாழ்வதாகத் தெரிந்துகொண்டவன் அவளை சந்திக்க ஊருக்குப் போகலாமா என நினைக்கிறான். கோமாரியம்மன் கோவில் திருவிழாவின் போது அக்காவிடம் இதைப் பற்றி கேட்கத் தயாராகும்போது அவள் வரவேயில்லை. வடிவேலுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கையும் தவிடுபொடியாகும் நிலையில் மனசஞ்சலத்துடன் வீட்டுக்குத் திரும்புகிறான். ஒவ்வொரு வருடமும் தீச்சட்டி தூக்கி பிள்ளை வரம் கேட்டு வரும் அக்கா அந்த வருடம் ஏன் வரவில்லை? தாயன்பை எதிர்பார்த்து வருடாவருடம் வரும் அவளை சந்திக்கும்போதெல்லாம் வடிவேலுவின் தாய் பரிமளம் தன்னியல்பை மறந்திருப்பாள். சந்திக்க முடியாமல் போகும்போது அவள் இத்தனை காலமாகத் தேடி வந்ததன் அர்த்தம் புரியாமல் குழம்புகிறான்.
நாவலின் ஆழமானப் பகுதிகளில் ஒன்றாக இந்த அக்கா, அம்மா, வடிவேலு உறவு இருக்கிறது.கனகம், அம்மா, அக்கா எனத் தன்னைச் சுற்றியிருக்கும் பெண்களிலெல்லாம் எதைத் தேடுகிறான் வடிவேலு? நிச்சயம் காமம் அல்ல. காமத்தின் பல அலகுகளையும் அதன் தாக்கங்களையும் நண்பர்களின் வாழ்விலிருந்து அறிந்துகொண்டுவிட்டிருந்தான் வடிவேலு. கனகம் திரும்ப வந்தாலும் அவளோடு தினமும் கூடியிருந்து தன்னுடைய ஆண்மையை நிரூபிக்க நினைக்கிறான். அந்த நினைப்பு கூட அவனது நிறைவேறாத காமத்தினால்லாமல் அவள் மீதிருக்கும் கோபத்தால் விளைந்த ஒன்றுதான்.
திருவிழாவின்போது அக்கினிப்பெண்கள் ஏந்தி வரும் தழல்களைச் சுற்றி ஊர் திரண்டிருக்கும் காட்சி வடிவேலுவுக்கும் பெண்களுக்குமான உறவை மிகக் கச்சிதமாகக் காட்டுகிறது. அப்பெண்களில் சாமி ஏறுவதை ஊரே திரண்டு பயபக்தியோடு பார்க்கிறது. அவர்களது உதடுகள் ஊடறுத்து வாய்ப்பூட்டு போடப்பட்டிருக்கிறது. உறுமியும் கொட்டும் முழங்க அந்த ஏழைப் பெண்கள் நெருப்பேந்திச் செல்கிறார்கள். பொதுவாகவே யாரும் மதிக்காத குழுவினர். கூட்டத்தில் வடிவேலு அவர்களைப் பார்த்தபடி நிற்கிறான். அவன் முன்னால் தழலேந்தி வரும் அக்கா சட்டென கண்கள் விரிய நிற்கிறாள். அவன் தடுமாறுகிறான். சாமி நம்பிக்கை இல்லாதவனாகக் காட்டப்பட்டவன் தடுமாறுகிறான். ஆனால் தப்பி ஓடவில்லை, “கண்ணைத் திற” என்றாள் அக்கா. அவன் நிலைகுலைந்து பார்க்கிறான். அங்கு வேறு யாருமில்லை என்பது போல அவர்கள் இருவரும் அத்தனை சத்தத்துக்கு இடையே நிற்கிறார்கள். “இந்த ஆத்தா இருக்காடா உனக்கு”, தன் மார்பில் அறைந்து சொன்னபடி அவள் விலகுகிறாள்.
இங்கிருந்து கதை வேறு திசையில் பரவத் தொடங்குகிறது. கதையின் மிகத் தீவிரமானப் பகுதியும் இதுதான் என்றாலும் இதுகாறும் வளர்த்த கதையின் போக்கை முற்றிலும் மாற்றிவிடுகிறது. அதுமட்டுமல்லாது, ஆசிரியரின் குரலிலும் வடிவேலுவின் சிக்கலுக்கான தீர்வை அளிக்கும் நோக்கமும் வெளிப்பட்டுவிடுகிறது. குறத்தி ஒருத்தி குழந்தையைச் சுமந்தபடி தூளியை வேடிக்கை பார்க்கிறாள். தீ ஏந்தி வரும் பெண் அவள் முன்னே தடுமாறி விழப்போகும்போது, குறத்தி “எந்திரி சாமி, நட நான் கொண்டு விடறேன்”, என சாமியை வழிநடத்திச் செல்கிறாள். குறத்தி முதுகில் சாய்ந்திருந்த குழந்தை தாயின் பிடி இல்லாது அவளை இறுகப்பற்றிக்கொள்கிறது. அவர்களோடு வடிவேலுவும் நடந்து செல்கிறான். சாமியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத குறத்தியின் சுமையை தன்னால் சுமக்க இயலும் எனச் சொல்கிறான். அவள் விடாப்பிடியாகக் குழந்தையையும் தீ ஏந்தி வந்த சாமியையும் கைத்தாங்கலாக கோயிலுக்கு வெளியே கொண்டு விடுகிறாள். வெளியே அக்கா தென்படாதிருந்தாலும் உள்ளே செல்லாமல் குறத்தியோடு நின்று விடுகிறான் வடிவேலு.
ஒவ்வொரு சித்தரிப்பாக இல்லாமல் முன்னும் பின்னுமாக ஆடும் நாவலில் இப்பகுதி மிக நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. முல்லை ஆற்றை சுற்றி இருக்கும் கோயிலில் நடக்கும் திருவிழா. கோமாரித் திருவிழா. நோய் நொடி வரும்போது கோமாரியின் காலடியில் மண்டிக்கிடக்கும் ஊர். மதுரைக்குப் போன கண்ணகியும் இந்த நதியைக் கடந்து கோமாரியை வணங்கியிருப்பாள் எனும் வரி நாவலில் பொருந்தாதது போல இருந்தாலும், கற்பிழந்ததாக வரும் பாத்திரங்கள் சூழ்ந்திருக்கும் நாவலில் இச்சித்திரம் சட்டெனப் பொருந்திப்போகிறது. பண்டைய காலம் முதல் கற்பென்னும் பெரு நெருப்பு பெண்களின் இருப்பை சூழ்ந்திருந்தாலும் நிறை குறை இல்லாது பெண் என்றால் தாய் எனும் அறிதல் சாதாரணமாகத் தோன்றும் சித்திரம் அல்ல. வடிவேலுவின் தாய், மனைவி கனகம், காளையனின் சித்தி என அவனைச் சுற்றியிருப்போர் எல்லாருமே கற்பிழந்த பெண்கள் எனும்போது தெய்வத்தின் சந்நிதியில் எல்லாருமே கண்ணகிதான் என ஆசிரியர் குரல் நாவலை வேறொரு தளத்துக்கு உயர்த்தி விடுகிறது.
தகாத உறவுகளின் வலையில் சிக்கி வாழ்க்கையை இழந்திருக்கும் வடிவேலு தன் உடல் சக்தியின் பெளதிகச் சாத்தியங்களைக் கடப்பதன் வழி அவன் காதலித்துத் திருமணம் செய்த கனகத்தை மீண்டும் அடைய நினைக்கிறான். ஆனால் உடலின் சாத்தியங்களுக்கு எல்லை உண்டு எனும் உண்மையை இளைஞர்களோடு விளையாடும் போட்டியில் உணர்ந்துகொண்டாலும் அதை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை. எப்படியும் பயிற்சி மூலம் போட்டியையும், வெற்றியின் வழி கனகத்தையும் அடைந்துவிடலாம் எனும் எண்ணம் கோமாரியம்மன் திருவிழாவில் தவிடுபொடியாகிறது. கருவறைக்கு வந்தாலும், நிறை குறையற்ற கற்பு அமைந்தாலும் எல்லா பெண்களும் தாய் வடிவமே, அவர்கள் அனைவரும் சாமி பிம்பங்களே என உணர்ந்ததும் “சிறிய அளவில் சோள வியாபாரத்தைத் தொடங்கலாம்..தாய்ப்பறவை. குஞ்சுகள் பசியோடு காத்திருக்கும்”, எனத் தன் குழந்தைகளுக்கு ஒரு எதிர்காலத்தை அளிக்கவேண்டி வேறொரு ஆட்டத்தைத் ஆடத் தயாராகிறான். இந்த ஆட்டத்தில் தவறிழக்காமல் ஆடி ஜெயிப்பான் என்பது நிச்சயமல்ல, ஆனாலும் “தோற்றாலும் ஓட வேண்டும். ஓடாமல் நிற்பதில்தான் தோல்வி”, எனும் அறிதலின் விதை அவனுள் முளைத்துவிட்டபின் ஆடும் ஆட்டம் இது. மனதில் வேட்கைக்கும் உடலின் சாத்தியங்களுக்கும் இடையே முளைத்த போராட்டத்தின் விதியை தீர்மானிக்கும் ஆட்டம்.
One comment