ரா. கிரிதரன்

ரா. கிரிதரனின் காற்றோவியம் நூல் குறித்து பானுமதி

காற்றிசை ஆறு. பொங்குமாங் கடல் போன்ற பிரமிக்கவைக்கும் பிரவாகம்.

அகலமும், ஆழமுமான இசையறிதலெனச் சொல்லலாம். வரலாறும், இசைப் பிரிவுகளும், இசையின் நுணுக்கங்களைப் பற்றிய அறிவுமின்றி இதை எழுத முடியாது. இக்கட்டுரை பல நினைவுகளை எழுப்பியது.

பள்ளி இளம் பருவத்தில் சினிமாப் பாடல்களும், வானொலி கச்சேரிகளும், வீதியில் வரும் கல்யாண ஊர்வலங்களில் வாசிக்கப்படும் நாகஸ்வரம் மற்றும் பேண்ட் இசையும், சிவன் கோயில் ஓதுவார் பாடும் தேவரங்களுமென இசை ஒரு சிறு வட்டத்தில் இருந்தது. சென்னை வானொலி ‘பி’ ஒலிபரப்பிய ஆங்கில மேற்கத்திய இசை’அல்ஜீப்ரா’ போல பயமுறுத்தியது. ஆனால், கல்லூரியில் சேர்ந்த பிறகு இந்துஸ்தானி இசையும், பாப், ராக்,,பீட்டில்ஸ் போன்றவற்றிலும் பிடித்தம் வந்தது. திரையரங்குகளில் காட்சிக்கு முன் இசைக்கப்படும் ஆங்கிலத் திரைப்பட இசை கால்களால் தாளமிட வைத்தது. ஆனால், அது தொடரவில்லை. எப்படியோ விட்டுப் போய்விட்டது. பங்கஜ் உதாஸ், ரவிசங்கர், பனாரஸ் கரானா மற்றும் குவாலியர் கரானா, குமார கந்தர்வா, பீம் சென் ஜோஷி, ஜஸ்ராஜ், கௌசிகா சக்ரவர்த்தி, சுபா முத்கல், மன்னா டே, முகம்மது ரஃபி, சங்கர் மஹாதேவன், பிஸ்மில்லா கான், அல்லாராக்கா,(இடம் கருதி பலப் பெயர்களைக் குறிப்பிடவில்லை) சில நேரங்களில் ரவீந்திர நாத்தின் சங்கீதம் எல்லாமே, ஆகாஷ்வாணி சங்கீத சம்மேளனத்தில், முடிந்த போது கேட்டவை தான். தமிழகத்தில் பெரும் தலைகளைத் தவிர எம்.பி சீனிவாசன் போன்ற பரிசோதனையாளர்களும் அதிகம் கவர்ந்தார்கள். பால முரளி க்ருஷ்ணா, எம்.எஸ் கோபாலக்ருஷ்ணன், குன்னக்குடி, எம் எல் வி போன்றவர்கள் எப்போதுமே பிடித்தமானவர்களானார்கள். அதிலும் கிரஹ பேதம், ஸ்ருதி பேதம், தாள மாற்றம் செய்வது பாலமுரளிக்குக் கைவந்த கலை. அவர் அதைச் செய்கிறார் எனப் புரிவதற்கே எனக்கு நேரமெடுக்கும். ஆனாலும், தமிழ், ஹிந்தி திரையிசைப் பாடல்களும், கர்னாடகசங்கீதமும் தான் மிகப் பிடித்தமாக இன்று வரை இருக்கின்றன.

இனி ரா. கிரிதரனின் நூலைப் பற்றி.

செல்லோ இசைப் புரட்சி: மிகவிரிவாகவும், தெளிவாகவும்,எழுதப்பட்டுள்ள சிறந்தகட்டுரை இது. பார்சலோனா, பாப்லோ கசல்ஸ் என்ற பேராளுமை உருவெடுக்க உதவுகிறது. பாக்கின் செல்லோவைத் தேடிய கடும் பயணம் மெய் சிலிர்க்க வைத்தது. பாரிஸ் ஒபரா அரங்கத்தின் வெளியே அவர் வாசித்தது எனக்கு தில்லானா மோகனாம்பாளில் மதுரை மணியின் நோட்ஸை ஷண்முக சுந்தரம் வாசித்ததை நினைவு படுத்தியது.

அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் சூழல்களிலிருந்து கலைஞன் தப்பிப்பது சற்றுக் கடினம். கசல்ஸ் விதிவிலக்கல்ல. இன்றளவும் காடெலோனியா தனித்தன்மையைக் கோரிக்கொண்டு இருக்கிறது. அவரது ‘Expressive Intonation’ பற்றி ஒரு சிறு சித்திரம் மனதில் எழுந்தது. நான்கு தந்திகளிலும் விரல்களை ஒருங்கே வைத்து வெவ்வேறு ஸ்தாயீயில் வீணை வாசித்த பாலசந்தர் நினைவிற்கு வந்தார். உலகப் போர்களும், தாய் நாட்டுப் பற்றும் கசல்சை அலைக்கழித்ததில் வியப்பில்லை, பெரும் வருத்தம்தான். உலகம் இப்படித்தான்; கலையை அவனது திறனிற்காக மதிக்காது ‘இஸம்’களின் பின்னே ஒட்ட வைக்கும் மனிதப் புரிதல். கானிக்யூ மலையடிவாரம் அவரை ஆற்றுப்படுத்தியிருக்கும். அலெக்ஸாண்டர் ஸ்னெய்டர் செய்த அருஞ்செயலால் இன்று கசல்ஸ், பாக், அதைப் பற்றி எழுதும் கிரிதரன் ராஜகோபாலனைத் தெரிந்து கொண்டேன்.

மாபெரும் ஆபரா

நம் சேர்ந்திசையில் மேல் கீழ் ஸ்ருதியில் பாடுவது வழக்கம் தான். சரியான ஒத்திசைவு இல்லாவிட்டால் அது ஒலிக்கேடாகிவிடும். நம் இசை நாடகங்கள் தேய் மொழி,தொல் கதையில் சிக்குண்டு கால மாற்றங்களைக் கருத்தில் கொள்ளவில்லையெனத் தோன்றுகிறது. பள்ளியில் இசையைப் பயிற்றுவிப்பது சீனாவைப் போல் இங்கே கட்டாயமாக்கப்பட்டால், அரசியல் வெகு வேகமாக அதில் நுழைந்து விடும். கனவுகளுக்குத் தடையில்லை, அவ்வளவுதான். ஒரு கருத்து சொல்லியிருக்கிறார் ஆசிரியர் – இந்திய இசை மேற்கிசை பாணியைப் பின்பற்றினால் மட்டுமே ஆபரா எனும் வடிவத்தில் அமரும். ஏ.ஆர். ரெஹ்மானுக்குக் கேட்கிறதா?

லண்டன் கலை நிகழ்ச்சிகள்

முதலில் கட்டுரையாளரின் அலுவலுகத்தை நினைத்து பொறாமை வந்தது. பின்னர் தோன்றியது- நேரமிருந்தாலும் அதைச் சரியாகப் பயன்படுத்தும் திறன் வேண்டுமே? இசைக்கெனவே கட்டப்பட்டுள்ள தேவாலயப் பகுதிகள், கேட்பதை அனுபவமென மாற்றும் அந்த நோக்கம் மிகச் சிறந்தது. ஆதார ஸ்ருதியும், மற்ற ஸ்வரங்கள் அதிலிருந்து கிளம்பி திசை மாறிப் பயணித்து பின்னர் ஆதாரத்தில் சேர்வதை அழகாக எழுதியுள்ளார்.

மொசார்ட் உலக அளவில் அறியப்பட்டவர்- என்னைப் போன்றவர்களுக்கு பெயர் மட்டும் தெரியும். செயிண்ட் சான்ஸ் பெத்தொவனுக்கு இணையானவர் என்று இதில் அறிந்து கொண்டேன். ‘அடோனல்’ என்ற பெயரே கற்பனைக் கதவுகளைத் தட்டுகிறது. வயலினும், பியானோவும் உரையாடுவதை, குன்னக்குடியும், ராஜேஷ் வைத்யாவும், சஞ்சய் சுப்ரமணியமும் தங்கள் கச்சேரிகளில் செய்து வருகிறார்கள்.

லட்சண இசை, லட்சிய இசை இரண்டைப் பற்றிய விளக்கம் சிறப்பு.

டெபுஸியின் இசையைக் கேட்பதற்கே ஒரு மன நிலை தேவைப்படும் போலிருக்கிறதே! வாக்னர் பின்பற்றிய பாணியல்லவா? எதுவாக இருந்தாலும் அபஸ்வரத்தை மேற்கிசை என்பதால் இரசிக்க முடியுமா என்ன? கால் மாத்திரை ஸ்ருதி விலகினாலே இந்துஸ்தானியில் பொறுக்க மாட்டார்கள். ‘ச’வில் தொடங்குவது ‘ரி’ யில் தொடங்கலாம், ஆனால், ஆதாரத்தை விட்டு விலகக் கூடாதல்லவா? இந்திய சங்கீதத்தின் அடிப்படை சாம வேதம் என்று சொல்வார்கள். இராகங்கள், அதன் ஸ்பரூபங்கள், கமகங்கள், பிர்க்காக்கள், தொனி, லயம் போன்றவை கிருதிகளுடன் இணைந்து நம்முள் கலந்து விடுகின்றன. இந்துஸ்தானி சங்கீதத்தில் விளம்ப காலமும், மூன்று ஸ்தாயிகளும் அடிப்படை. ஆதார ஸட்ஷமம்தான் (ச) தொடக்கம் என்பதில்லை அதில். ஆனால், ஸ்வர ஸ்தானங்கள், அதாவது அந்த இராகத்தின் ஜீவ தாதுக்கள், அனுஸ்வரங்கள் மிக மிக முக்கியம். ஒரு கச்சேரி கேட்ட நினைவு; பாடகரும், ஆர்மோனியமும் பாடவும், வாசிக்கவும் நடுவில் சந்தூர் புகுந்து அதிசயமான கோர்வையைக் கொடுத்தது. சரத்(பாலமுரளியின் சீடர்), சேஷ கோபாலன் இவ்வகையைக் குரலிலேயே கொண்டு வரும் விற்பன்னர்கள். வட இந்திய இசையின் தோடி நமது சுபபந்துவராளி; நம்முடைய தோடி அங்கே பைரவி தட். சில ஸ்வரங்கள் சேரும் இராகங்களை எடுத்துக்கொண்டு இரு இசைப் பிரிவைச் சேர்ந்தவர்களும் ஃப்யூஷன் இசையை முயற்சிக்கிறார்கள். ஜுகல் பந்தியில் இராக ஒற்றுமைகளை எடுத்துக் கொள்கிறார்கள். அசாத்தியமாக ஸ்ரீராம் பரசுராம் ‘காந்தம் ஸ்கொயர்’ என்று ஒரு நிகழ்ச்சியில் கர்னாடக, ஹிந்துஸ்தானி பாடல்களை ஜோடியாய் இணைந்த இராகங்களிலும், ஸ்வரங்களிலும் பாடிப் பரவசமூட்டினார்.(முத்ரா நிகழ்ச்சி டிச 2019)

திரும்ப நினைவுபடுத்தக்கூடிய சொற்கட்டுகள், இசைத் துணுக்குகள் அடிப்படைத் தேவையே! ஹிந்தோள ராகமா, மாமவது ஸ்ரீ ஸரஸ்வதி பாட்டா, இரண்டில் எது சுலபமாக நினைவில் நிற்கிறது? இளையாராஜா, ஷூபர்டின் முடிவடையாத சிம்பொனி பற்றிய குறிப்பு அபாரம்.

வாக்னர், மாஹ்லர் போன்றவர்கள் வட துருவமென்றால், மாக்ஸ் ஜேகப், புலென், ராஜா தென் துருவமெனப் புரிந்து கொண்டேன். நவீன டாங்கோ பகுதியில் இடம் பெற்றுள்ள பேட்டி சிறியதாக இருந்தாலும் முக்கியமான கேள்விகளும், பதில்களுமாக நிறைவாக இருந்தது.

லண்டன் கலைமையம் அமைந்துள்ள இடத்தைப் பற்றிய இவரது வர்ணனைகள் உள்ளே இருக்கும் எழுத்தாளரின் கைவண்ணம். டேட் காலரி வாசலில் பிள்ளையார் கோயில்! விரைவில் வந்தாலும் வந்துவிடும். தேங்காய் பழக் கூடையுடன் அடுத்தமுறை தயாராகச் செல்லுங்கள்!! கிளாரினெட் தரும் இறுக்கம் சற்று அதிகம் தான் எப்போதும்.

‘ஹெள டு நேம் இட்?’ வந்த போது என் சகோதரி அந்த வயலினைக் கேட்டு அழுது விட்டாள். அவள் தான் அதை முழுதாக உள் வாங்கியவள் எங்கள் குடும்பத்தில். ஆனால், ஒரு உறவினருடன், வி.எஸ். நரசிம்மனை அவரது சென்னை இல்லத்தில் பல வருடங்களுக்கு முன் நேரில் சந்தித்தது நான் தான். என் உறவினரும் அவரும் இசை நுணுக்கங்களை விரிவாக விவாதித்துக்கொண்டிருக்க நான் கருவறை முன் நிற்கும் பாமரனாக இருந்தேன். கடைசி வரை ஒரு வார்த்தை என்னால் பேச முடியவில்லை. அவருடனான ஆசிரியரின் பேட்டி ஒரு பொக்கிஷம். நரசிம்மனை நான் சந்தித்ததும் ஒரு முறைதான். ஹார்மெனியும், மெலடியுமான கலவை அவர்.

எஸ்.ராஜம் மிக அபூர்வமானவர். முழுமையான கலைப் பார்வை கொண்டவர். இன்றும் கர்னாடக மும்மூர்த்திகளை அவரது ஓவியத்தின் வழிதான் அறிகிறோம். சிலப்பதிகார ஆபரா, சத்யஜித் ரே இயக்கிய பால சரஸ்வதி படம் போல எடுபடவில்லை போலிருக்கிறது. ராஜத்தைப் பற்றிய அரிய செய்திகளை இக்கட்டுரையின் மூலம் தெரிந்து கொண்டேன்.

கலைஞன் மண் சார்ந்தவன்; ஆனால், கலை அப்படியல்ல. இதை வாக்னரின் நிலை உணர்த்துகிறது. இசை நாடக உலகின் தந்தை, ஹிட்லர் விரும்பிய இசையாளர், நிகரற்ற பெய்ஹோய்ட் அரங்கத்தை அமைத்தவர், இனச் சார்பு தன்மையால் யூத வெறுப்பாளரென அடையாளப் படுத்தப் படுபவர், ஆனாலும் அவர் கலைஞர்.

தொழில் நுட்பம் சார்ந்த சவால்களால் நிரம்பியிருக்கும் சிம்பொனியில் ஜீவன் இருக்குமா என்பது எனக்குப் புரியாத ஒன்று. வடிவமைக்கப்பட்ட இசையில் கச்சிதம் இருக்கலாம், இனிமை இழையலாம், லயங்கள் பொருந்தலாம், மனோதர்மம் வடிவமைக்கையில் இருந்திருக்கலாம், அதில் ‘ஸ்பான்டேனிடி’ இருக்குமா எனக் கேள்வி எழுகிறது. ஆனால், நான் சிம்பொனி ஒன்றைப் பொருந்திக் கேட்டதில்லை. என் கேள்விகள் தவறாக இருக்கலாம். விரிவாக்கம் என்பது இதற்கு மிக அவசியம் எனப் புரிந்து கொள்கிறேன்.

இளையராஜாவை கர்னாடக சங்கீதக்காரர்கள் பலரும், ஒரு சிலரைத் தவிர நேசித்துக்கொண்டே வெறுத்தார்கள், வெறுத்துக்கொண்டே நேசித்தார்கள். அந்த மாபெரும் கலைஞனின் அபார ஞானம் இவர்களைப் பயமுறுத்தியிருக்கலாம். நாட்டுப்புற இசை, இராக சங்கீதம், மேற்கத்திய இசை என சரிவிகிதத்தில் கலந்து கொடுத்து திரையிசையின் போக்கினையையே மாற்றியவர். இராக ரூபம் சிதையாமல் சிறு மாற்றம் செய்து அதையே மெலடியெனக் காட்டியவர். ஒரே பாடலில் பலராகங்கள் வரும், ஆனால், ராக மாலிகை அல்ல. அவரது திரைப் பாடல்களைப் போல், தனியான ஆல்பங்கள் பெரும் வரவேற்பைப் பெறவில்லை. திருவாசகம் கூட அருமையான படைப்பு. சுஜாதா ‘நான் ஏற்கெனவே ஆழ்வாரில் மயங்கியதால், வாசகத்திற்கு உருகவில்லை’ என்று அனியாயமாக எழுதினார். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை, அல்லவா? கல்யாணி ராகத்தை ராஜா பலவிதமாகக் கையாண்டுள்ளார். தியாகராஜ ஸ்வாமிகளை அவர் வரவேற்ற ‘Chamber welcomes Thyagaraja’ என்ற குறிப்பு நெகிழ்த்தியது.

ராகசாகா எனக்கு மிகவும் பிடித்த பகுதி. பட்டிணப் பிரவேசம் என்ற படத்தில் வான் நிலா நிலா அல்ல என்ற ஒரு பாடலில் வயலின் தான் பிரதானம். அதை இசைத்தவர் நரசிம்மனா? முதலில் மட்டுமல்ல இன்றும் இனிக்கும் இசை அது.

சிபேலியஸ் கட்டுரையில் ஒரு முக்கிய விஷயம் உள்ளது. ரசனைகள் விமர்சனங்களால் உருவாக்கப்படுகின்றன. இசை ஆர்வலர்களின் தற்சார்பிற்கும் அதிக இடம் இதில் உள்ளது. அவர் வாழ்வு பாம்பு-ஏணி ஆட்டமாக ஆகிவிட்டது. அன்னப் பறவைகளைக் கண்டு அவர் அமைத்த சிம்பொனி பற்றிய செய்தி எனக்கு இயற்கை ஒலிகளைக் கொண்டு இயற்கைச் சூழலில் டி.எம்.க்ருஷ்ணா பாடிய ஒரு இசைத் தொகுப்பை நினைவில் கொண்டு வந்தது.

நிசப்தத்திலிருந்து சப்தத்திற்குச் செல்லும் இசை, மனதின் சத்தத்தைக் குறைத்து அமைதிப்படுத்துவது ஆச்சர்யம். இசை வழி சமாதானம் ஏற்படலாமே? இஸ்ரேல்- பாலஸ்தீன அரசியல் களேபரங்களின் இடையே அவ்விரண்டு இசையையும் இணைக்கும் முயற்சி மகத்தானது. இசை ஒருங்கிணைப்பாளர்களின் பங்கு இவ்வகையில் அத்தியாவசியமானது.

கலை வேர்களைக் கண்டறிந்து வெளிக் கொணர்பவர்கள் காலத்தை நம்முன் நிகழ்த்திவிடுகிறார்கள். ஜி.என்.பியின் நூற்றாண்டு மலர் பற்றிய கட்டுரை சுவையானது.

நல்ல இசையமைப்பாளராக வந்திருக்க வேண்டியவர், நல்ல இசை ஒருங்கிணைப்பாளராக ஆகிப்போனார் என்ற எண்ணம் சுபின் மேத்தா கட்டுரையில் எனக்கு வந்தது.

சூசன் டோம்ஸ் மென்மையாகப் பியானோவைத் தொட்டதைப் படிக்கையில் வயலின் தந்திகளை அளவிற்கு அதிகமாக அழுத்தி சுகத்தைக் கெடுக்கும் சிலர் நினைவிற்கு வந்தனர்.

மெதுவாகத் தொடங்கி நிதானமாகப் பயணித்து மத்திம காலம் அமைத்து சரணத்தில் சிறு சரணத்தை வேகமாக அமைத்து முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஒவ்வொரு பாடலிலும் இசைப் பகுதிகளை மாறுபட அமைத்துள்ளார். வட இந்திய இராகங்களை, கர்னாடக இசைக்குக் கொண்டு வந்தவர் அவரே. பல்வேறு தாளக்கட்டுகளை தனது நவக்ரஹ கிருதிகளில் அமைத்துள்ளார். இவரது கிருதிகள் மற்றும் அமைப்பு முறைகளை எடுத்துக்கொண்டு சரத், ஸ்ரீராம் பரசுராம், சிக்கில் குருசரண், பாம்பே ஜெயஸ்ரீ, மாண்டலின் ராஜூ மற்றும் அவர் மனைவி நாகமணி, புல்லாங்குழல் ஷசாங், கிடார் பிரசன்னா, ரவிகிரண், கணேஷ் குமரேஷ், ராஜேஷ் வைத்யா, கடம் கார்த்திக், மிருதங்கம் சிவராமன், சௌராசியா, சிவகுமார் பண்டிட், கௌசிகா சக்ரவர்த்தி, ஜாஹீர் ஹூசேன், செல்வ கணேஷ் போன்றவர்கள் இணைந்து செயல்பட்டால் நம்மால் ஒரு ஆபராவைக் கொண்டு வர முடியலாம்.

இசை கேட்டால் மட்டுமல்ல, இசையைப் பற்றி தரமாக எழுதினாலும் கூட, புவி அசைந்தாடுமென அறிந்து கொண்டேன். கட்டுரைத் தொகுப்பில் ஃப்யூஷன், ஜூகல்பந்தி போன்றவற்றைப் பற்றி ஒரு பகுதி வந்திருக்கலாம். இசைப்பவர்கள், இசை விமர்சகர்கள், இசை ஆர்வலர்கள், இசை அமைப்பாளர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூலாக இதைச் சொல்வேன். அட்டை முகப்புப்படமும், கட்டுரைகளின் இறுதியில் இடம் பெற்றுள்ள காணொலி இணைப்புகளும் நூலோடு இணக்கமாக உள்ளன.

காற்றோவியம் என்னைப் புரட்டிப் போட்டது. என் மன அலைவுகளைப் பதியச் சொன்னது.

புத்தகம் வாங்க: அமேசான் கிண்டில்

ரா.கிரிதரனின் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை சிறுகதை குறித்து வை.மணிகண்டன்

ரா.கிரிதரனின் “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை”,2009 ல் தொடங்கி 2019 வரை வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டுள்ள பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம்.

புத்தக தலைப்பாய் அமைந்துள்ள “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” சிறுகதை ஜெர்மன் சிறையில் நடந்த ஒரு இசை அரங்கேற்றம் குறித்து எழுதப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வரலாற்று பின்புலம் எதுவும் அறியாது நாம் வெறுமனே இந்தக்கதையை வாசிக்கையில் எழும் அடிப்படையான கேள்வி “நாம் ஏன்  கடினமான சூழல்களில் இசையை நாடி செல்கிறோம் ? ” என்பது.

நடந்த இசை அரங்கேற்ற  நிகழ்ச்சியின் பின் புலம் குறித்து, வரலாறு  குறித்து  ஒரு புத்தகமே எழுதப்பட்டுள்ளது – For the End of Time: The Story of the Messiaen Quartet – Rebecca Rischin என்னும் ஒரு clarinet கலைஞரால் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. . இந்த சிறுகதை உண்மையில் நடந்த  நிகழ்ச்சியின் பிரதியாக இருப்பதால், நிகழ்ச்சியை விட இந்நிகழ்ச்சி குறித்து விளக்க ஆசிரியர் எடுத்துள்ள தேர்வுகளே நாம் கணக்கில் கொள்ள வேண்டியது.

கடினமான சிறை சூழல் , ஒரு இசை மேதைமை குறித்த வியப்பு அதே நேரத்தில் அந்த இசை மேதைமையை இறுக்கமான சூழலோடு பொருத்தி பார்த்து எடை போடும் தன்மை , இசைமேதையின் பதில் – இதுவே இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் சிறுகதையின் வடிவம் -கதையில் சிறை சூழலின் புற விவரிப்பு நன்றாக அமைந்து வந்திருக்கிறது,  அதே நேரத்தில் வாசகனுக்கு இவ்வரலாற்று நிகழ்வு குறித்த அனுமானங்களை வலிந்து வந்து கூறுவது போல் கட்டுரை போல் அமைந்து விட்டது , இந்தக் கதையில் ஆலிவர் போன்ற இசை மேதை அல்லாது வேறு ஒரு பெயர் அறியாத கலைஞன் இசைத்திருந்தால் ?அந்த இசை தொகுப்பு ” quartet for the end of time ” போல் அல்லாது யாருமறியா ஒரு இசை கலைஞனின் ஆத்ம சங்கீதமாக இருந்திருந்தால் ? இங்கு நாம் “மோகமுள்” நாவலில் வரும் ஒரு வடக்கத்திய பாடகரையும் அவரது மகனையும் நினைவு கூறலாம்.

இந்தத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை ” நந்தாதேவி” என் கணிப்பில் இச்சிறுகதை தொகுப்பின் தலைப்பாக வைத்திருக்க பட வேண்டிய ஒன்று . இந்திய ராணுவத்தின் மலையேற்ற குழுவின் அனுபவம் குறித்து அட்டகாசமான நிகழ்த்து தன்மையுடன் அமைந்துள்ள சிறுகதை – ஜாக் லண்டன் முதல் அசோகமித்திரனின் “மிருகம்” வரை மனித வாழ்வின் விளிம்புகளை நினைவூட்டும் தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது,

“நீர் பிம்பத்துடன் ஒரு உரையாடல் ” – நூறு ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகளின் சரளமான தொகுப்பு போல் அமைந்துள்ளது – ஆசிரியர் தேர்ந்தெடுத்து இருக்கும் உத்தி முறை ரசிக்கும் வண்ணம் அமைந்திருந்தது தொடர் நிகழ்வுகளின் அவலங்களின் சித்திரத்தை அதே நேரத்தில் எந்த ஒரு பார்வையையும்  கோணத்தையும்  வலிந்து திணிக்காது கால மாற்றத்தின் மௌன சாட்சி போல் அமைந்துள்ளதே இந்தக் கதையின் சிறப்பு. நீண்ட நீண்ட வாக்கியங்களை படிக்கையில் தமிழின் சிறந்த நாவல்களின் ஒன்றான ” தாண்டவராயன் கதை ” நினைவுக்கு வந்தது – வரலாற்று நிகழ்வுகளின் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து எழுதப்படும் கதைகள் ஒரு புறம் , வரலாற்றையே ஒரு மாபெரும் புனைவு வெளியாக்கி எழுதப்படும் கதைகள் இன்னொரு புறம் , பின்னதின் சாயலில் அமைந்துள்ள ” நீர் பிம்பத்துடன் ஒரு உரையாடல் ” எந்த ஒரு இலக்குமற்று எதேச்சையின் கரங்களால் உந்தப்பட்டு செல்லும் காலம் குறித்த நினைவலைகலாக அமைந்துள்ளது.

இசை குறித்தும் வரலாற்று பின்புலத்தில் அமைந்துள்ள கதைகள் யாவும் தகவல் செறிவு காரணமாகவும் நிகழ்ச்சியின் முக்கியத்துவம் காரணமாகவும் கவனத்தை கோருகின்றன , அதே நேரத்தில் அரசியல் சரி நிலைகள் குறித்த பிரக்ஞை காரணமாக நிகழ் தன்மை குறைந்து கட்டுரை போல் நீளும் இடங்கள் ஆசிரியர் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

இருள் முனகும் பாதை – நாவலாக வந்திருக்க வேண்டிய சிறுகதை – ஷுமன் கிளாரா என்னும் இசை துருவங்கள் குறித்த ஒரு கோட்டு சித்திரமாக அமைந்து விட்டது – பென்னட் என்னும் பார்வையாளன் ஷுமனின் மேதைமையை புரிந்து கொண்டவன் , இயந்திரத்தனமான வெற்றியை நோக்கி பயணித்த கிளாரா,பென்னெட்டிடம் , தன் மொத்த இருப்பின் பொய்மையை உணர்ந்து உருகுகிறாள்,  இயந்திரம் Vs இயற்கை என்று சட்டகம் வழியே கதையை அணுக நினைக்கையில் ஷுமன் என்னும் காதலன் தன் காதல் கடிதங்களை நமக்கு வாசிக்க அளிக்கிறான் , கடைசி ஸ்டாப்பை அறிந்திருந்தாலும்  , கடைசிக்கு முந்தைய ஸ்டாப்பில் எந்த ஒரு பெரிய கலைஞனும் இறங்கி விடுவான் என்பதின் சாட்சியாக ஷுமன் கிளாரா காதல். இந்த இடத்தில சங்கர ராமசுப்ரமணியனின் இந்த கட்டுரை மிக முக்கியமானது , அனைத்துக்கும் ஆசைப்பட்டபடியே அத்வைதம் போதிக்கும் கலைமனதை உணர்கையில் மேலும் நாம் ஷுமனின் தவிப்பை புரிந்து கொள்ள முடியும் – (https://www.shankarwritings.com/2019/12/blog-post_26.html?m=1)

பலி மற்றும் மௌன கோபுரம் சிறுகதைகளில் தலைப்பு மற்றும் குறிப்புகள் சுட்டும் விஷயங்கள் நேரடியாக உள்ளது. பலி சிறுகதை ஒரு “abstract ” தன்மையுடன் அழகாக உள்ளது ,” பலி” என்னும் தலைப்பு வலிந்து வந்து ஆசிரியர் கூற விரும்புவதை சுட்டுகிறது , வேறு ஒரு மெல்லிய உருவக தலைப்பு பொருத்தமாக இருக்கக் கூடும் – இவ்விடத்தில் ஆல்பர்ட் காம்யுவின் ” The guest ” குறித்து இணைத்து வாசிக்க சில விஷயங்கள் உள்ளன – ” கதாபாத்திரத்தின் பெயர் நேரடியாக ” அரபி” என்றும் தலைப்பு ” தி கெஸ்ட் ” என்றும் உள்ளது – இக்கதையில் சுமி மற்றும் லியோன் , கதையின் தலைப்பு “பலி” – இந்த வலிய தலைப்பு எதிர்மறை அம்சம் கொண்டதாக உள்ளது – மொத்த கதையின் சாரமும் ஏன் இரண்டு அல்லது மூவர் சேர்ந்து இருக்க முடிவதில்லை ஸ்தூலம் இல்லாத எதோ ஒன்று எப்படியோ அதை ஏன் தடுத்துவிடுகிறது என்ற கேள்வியில் இருக்கிறது , இந்த சிறுகதை Godard ன்  Bande à part  திரைப்படத்தை நினைவூட்டியது.

வரலாறு இசை மற்றும் புலம் பெயர் வாழ்வு என்கிற வெவ்வேறான தளங்களில் ஒரு நிறைவான வாசிப்பு அனுபவமாக “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” சிறுகதை தொகுப்பு அமைந்துள்ளது

காலம் குறித்து கார்லோ ரோவேலியுடன் ஒரு நேர்முகம்- மார்க் வார்னர், எமானுவல் மொஸ்காடோ: ரா. கிரிதரன் தமிழாக்கம்

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: 

காலமும் இலக்கியமும்

எனக்குக் காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது ரெண்டுமே இல்லை. என்னைப் பொறுத்ததுதான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுத்தது என்று ஏற்படும்போதுதான் காலம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரை ரெயில் நின்றுகொண்டிருக்க்கிறது.

– அசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்

காலம் என்பது இயற்பியலுக்கு எந்தளவு தேவையான கருத்தாக இருக்கிறதோ அதேயளவு நெருக்கமான கருத்தாக கலை இலக்கியத்துறைக்கும் இருந்து வந்திருக்கிறது. காலம் நிலத்தடி நீராக ஒவ்வொரு கலைப்படைப்பின் கீழும் இருக்கிறது. செவ்வியல் படைப்புகளில் காலம் ரெட்டை மாட்டு வண்டியைப் போல நிதானமாக ஊர்ந்து செல்லும். சில நேரங்கள் காலம் என்பது நின்றுவிட்ட உணர்வையும் எழுத்தாளர் உருவாக்கிவிடுவார். அதை வெற்றிகரமாகச் செய்து காட்டிய நவீன சிறுகதைகளில் அசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ முக்கியமான ஒன்றாகும். இங்கு ஒருவன் ரயிலைப் பிடிக்க ஓடுகிறான். இன்னும் ஐந்து நிமிடத்தில் அவன் ஏற வேண்டிய வண்டி புறப்பட்டுவிடும். வீட்டிலிருந்து கிளம்பிய நேரத்திலிருந்து வழி நெடுக தடங்கல்கள் பல. ஒவ்வொரு தடங்கலும் அவனைப் பொறுத்தவரை காலத்தை நிறுத்துகிறது, பின்னோக்கி ஓட வைக்கிறது. தடை உருவானதும் சிந்தனை வேறொரு காலத்தில் அந்தத் தடையைப் பிந்தொடர்கிறது. எல்லையற்ற மனோவேகம் வேறொரு காலத்தில். இவன் பெரிய மூட்டையைத் தூக்கிக்கொண்டு அதிலிருக்கும் தம்ளர் விலா எலும்பை நோகும்படி ஓடுகிறான். அவனைச் சுற்றி காலம் வேறொரு வேகத்தில் இருக்கிறது. தெரு ஓரப் பிச்சைக்காரர்கள் தங்களது ஐந்து குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காலத்தை நிறுத்திவிட்டதாக அவன் நினைக்கிறான். போதாத நேரமாக காலமற்ற கடவுள் அவன் எதிரே வந்து தாமதத்துக்கான காரணங்களை நினைத்துப் பார்க்கச் சொல்கிறார். அவன் கடவுளை, “அந்தாலே போ,” எனச் சொல்லிவிட்டு ஓடி வரும்போது ரயில் புறப்பட்டு விடுகிறது. ஒரு கணம் திகைத்து நிற்பவன், தன் உளநிலையே காலம் எனும் முடிவுக்கு வரும்போது ரயில் அங்கேயே நிற்பதைப் பார்க்கிறான். நிதானமாக ஏறி உட்கார்ந்து கொள்கிறான். தம்ளர் இடித்த விலா எலும்பின் வலியில் குறைவில்லை.

மிக எளிமையான கதையாக இருந்தாலும், காலம் எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையில் அமைந்திருக்கிறது எனும் வகையில் உள்ள ஒரு கதையாக இது இருக்கிறது. ஆனால், கதையில் வரும் காலத்தை எல்லாம் ஒட்டுமொத்தமாகத் தொகுக்கும் வகையில் புனைவின் கால வேகம் அமைந்திருக்கிறது. சம்பவங்களைக் கோர்த்துச் செல்லும்போது ஒரு நீண்ட ஜரிகையாக எல்லாமே அமைந்திருக்கின்றன – பலவேறு காலங்களில் நடந்தாலும் கூட.

அறிவியல்பூர்வமாக பார்க்காமல் இதை தத்துவ வழியில் அணுக முடியும். தத்துவமும் இன்று உண்மையான காலத்தையும் அவரவருக்கு சார்புள்ள காலத்தையும் தனித்தனியே ஆராய்ந்து வந்தாலும்கூட, தத்துவம் எப்போதும் தனிமனித காலத்துக்கும் உலகளாவிய காலம் எனும் கருத்துக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை முன்வைத்தபடிதான் இருக்கிறது. இதனாலேயே பிரத்யட்ச உண்மைக்கு வலிமை இருந்தாலும், நம் அறிதல்முறை காலத்தைக் கடந்து ‘இன்றைய’ காலத்தில் அல்லாது அனுமானங்களையும் உண்மையாகக் கொள்கிறது.

கார்லோ ரொவேலி இந்தக் கட்டுரையில் சொல்வது போல காலத்தை நாம் ஒரு துறையின் அறிவைக்கொண்டு முழுவதும் அறிந்துகொள்ள முடியாது. இலக்கியம், நரம்பியல் துறை, தத்துவம், உளவியல் என பல துறைகளை முழுமையாக இணைக்கும் அறிதல் முறை நமக்கு அவசியமாகிறது. தனித்தனியாக துறைகள் நிபுணத்துவம் அடைந்து வரும் காலத்தில் Integrated thought systems நாம் அறிந்த அனைத்தையும் ஒன்று சேர்க்க உதவும். அப்படி அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு துறையாக நாம் இலக்கியத்தைப் பார்க்க முடியும்.

இனி நேர்முகம்.

oOo

உங்களுடைய ‘காலத்தின் ஒழுங்கு’ எனும் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்கள் நேரடியாகவும், உலகளாவிய உண்மையாகவும், இருக்கும் காலத்தைப் பற்றி இத்தனை தீவிரமான அக்கறை அவசியமா என வியக்க மாட்டார்களா? ஒரு இயற்பியலாளருக்கு ஏன் காலம் மீது ஆர்வம் வர வேண்டும்?

உலகத்தின் உண்மை இயல்பு பற்றி யாருக்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. ஆனால் நம் அனுபவ அறிவுக்கு முற்றிலும் வேறொரு வகையில் காலம் இயங்குவது உண்மை. இத்தனை சிக்கலில்லாமலும் இயல்பாகவும் இருக்கும் ஒன்று நம் அறிதலுக்கு முற்றிலும் புறம்பானதொரு வகையில் செயல்படுவதை ஆர்வத்துடனும் ஆச்சர்யத்துடனும் பார்க்க வேண்டியுள்ளது.

காலத்தைப் பற்றிய நமது அடிப்படை புரிதல் தவறு என்கிறீர்களா? அல்லது அது உலகளாவிய ஒன்றாக இருப்பதில்லையா?

நமது அனுபவ எல்லைக்குள் வரும் காலத்தை ஊதிப்பெருக்கி உண்மை ரூபமான காலத்தின் மீது போட்டுப் பார்க்கும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. தட்டையான உலகம் எனும் படிமம் அழகான ஒன்று. லண்டனின் பூமி சமதளமானது எனச் சொல்வதில் தவறில்லை. ஒரு கட்டிட வல்லுநர் வீடு கட்டும்போது பூமி சமதளத்தில் இருக்கிறது எனும் முன் அனுமானத்தோடு மட்டுமே அணுக வேண்டும். வீடு விழாது. ஆனால் தூரத்திலிருந்து உலகத்தைப் பார்க்கும்போது அது தட்டையாக இல்லை. இந்த முரண் உங்களுக்குத் தெளிவாகப் புரிகிறது. நமது கண்ணோட்டம் தவறல்ல, ஆனால் முழுமையானதாக இல்லை. நம்மைச் சுற்றி இருக்கும் உலகின் புரிதலைக் கொண்டு அண்டம் முழுவதையும் அறியத் தொடங்குவது தவறாகும்.

சரி, காலத்தை நாம் எப்படி முழுமையாகப் புரிந்துகொள்வது? தட்டையான உலகத்துக்கான உங்கள் படிமம் என்ன? வளைந்திருக்கும் உலகத்தைப் பார்க்க நாம் சற்றே விலகிச் செல்ல வேண்டியதாக இருக்கிறது. அது போல உண்மையான காலத்தைப் புரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

நாம் யுத்தம் புரிந்து ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளாமல் உலகத்தில் தொடர்ந்து வாழ முடிந்தால், ஒரு நாள் ஒளியைவிட வேகமான பயணம் செய்த ஒருவர் தன் குழந்தைகளைவிடச் சிறுவனாக மாறி திரும்ப முடிவது நம் முன்னே நடப்பதோடு மட்டுமல்லாது அது மிகச் சாதாரண அனுபவமாகவும் இருக்கும்! காலம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேகத்தில் செல்கிறது எனும் உண்மை புரிந்துகொள்ள எளிமையானதாகிவிடும். அப்போது, இறுக்கமான காலத்தின் பிடியில் நமது உடல்கள் சிக்கிக் கொண்டிருக்கிறது எனும் அறிவு உலகம் தழுவிய உண்மையாக இருக்காது.

காலத்தைப் பற்றி நமக்கு ஏற்கனவே என்ன தெரியும்? நம் அறிதலின் நிலை என்ன?

ஐன்ஸ்டீனின் பொது சார்பு நிலை கொள்கையில் விவரிப்பதைக் கொண்டு நமக்கு ஏற்கனவே நிறைய தெரியும். குவாண்டம் இயற்பியலின் புரிதலைப் போல, துகள் இயற்பியல் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பிரித்துப் பார்க்கவில்லை என்பதும் நமக்கு நன்றாகத் தெரியும். அதாவது கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் விரிபார்வையில் மட்டுமே புலப்படும் நிகழ்வு..

காலத்தைப் பற்றி நமக்குத் தெரியாததில் எது எளிமையானது?

கடந்த கால புகைப்படங்கள் இருக்கும்போது எதிர்காலப் படங்கள் ஏன் இல்லை? முட்டாள்தனமான கேள்வியாகத் தோன்றினாலும் இது அத்தனை முட்டாள்தனமானது அல்ல. இயல்பான உலகம் காலத்தால் வரையறுக்கப்படுவது – அதாவது கடந்த காலம் முடிந்தது என்றும், எதிர்காலம் திறந்த ஒன்று என்றும் சொல்லப்படுகிறது. நமக்கு இருக்கும் ஞாபகங்களும், கடந்த காலப் படங்களும் எதிர்காலத்தை அல்ல, நடந்து முடிந்தவற்றை சேகரித்து வைத்திருக்கின்றன. ஆனால் இயற்பியலில் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் ரெண்டுக்கும் வித்தியாசங்களைத் தேடத் தொடங்கினால் நாம் குழப்பமான இடத்துக்கு சென்று சேருவோம். கடந்த காலத்தில் உலகம் நூதனமான நிலையில் இருக்கிறது. இயற்பியலாளர்கள் அதை குறைவான குலைதி (Entropy) என்கிறார்கள் (குலைவுறும் தன்மை/நிலைகுலையும் தன்மையின் அளவையியல் என்ற பொருளில் நான் இங்கு பயன்படுத்துகிறேன்). கடந்த கால அண்டத்தில் குலைதி குறைவு என்பதாலேயே இது மட்டுமே எதிர்காலத்துக்கும் கடந்த காலத்துக்கும் வித்தியாசமாக இருக்க முடியும். குறைவான குலைதி என்பது ஒழுங்கமைதியுள்ள அமைப்பைச் சுட்டி நிற்பதால் இதுவும் ஒரு குறைபாடுள்ள விளக்கமே.

இயல்பாகவே வஸ்துக்களின் ஒழுங்கமைதி குலைகின்றன என்பது  மட்டுமே எதிர்காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் உள்ள வேறுபாடு என்றால் நமக்குப் பல கேள்விகள் தோன்றுகின்றன: கடந்த காலத்தில் ஏன் நிகழ்வுகள் ஒழுங்கமைதி கொண்டிருந்தன? அச்சீரமைப்பை உருவாக்கியவர் யார்? இது இன்றுவரை பதிலில்லாத கேள்வி.

காலத்தைப் பற்றி நமது எதிர்காலப் புரிதல் எப்படிப்பட்டதாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

என்னைப் பொருத்தவரை காலம் ஒரு குழப்பமான கருதுகோள். அது ஒற்றைப் படைத்தன்மை கொண்டதல்ல. அது பல்வேறு கோணங்களில் அணுகக்கூடிய வகையில் பல தளங்கள் கொண்ட அமைப்பு. அதனால்தான் என் புத்தகங்களில் இலக்கியம், நிறைய தத்துவங்கள், உளவியல் மற்றும் சொந்த அனுபவங்களைக் கொண்டு எழுதுகிறேன். நாம் அவற்றின் பல கோணங்களை இணைக்க வேண்டியிருக்கிறது. பல துறைகளும் தேவைக்கு அதிகமாகப் பிரிந்து கிடப்பதே என்னைப் பொருத்தவரை இன்றைய காலத்தின் குறைபாடாக இருக்கிறது. காலம் போன்ற சிக்கலான கருதுகோளைப் புரிந்துகொள்ள நம் நரம்பியல் நிபுணர்கள், தத்துவவாதிகள், இயற்பியலாளர்கள், ஏன் இலக்கியங்கள் கூட ஒன்றுடன் ஒன்று கலந்துரையாடல் நடத்த வேண்டும். என் புத்தகத்தில் நான் ப்ரெளஸ்ட் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன்.

காலம் என்பதை உணர்வுத்தளத்திலும் நாம் அனுபவிக்கிறோம். உணர்வுரீதியான பாதிப்பை நமக்கு காலம் அளிக்கிறது. காலம் பற்றிய உரையாடல்களில் நாம் காலம் குறித்த உணர்வு ரீதியான பாதிப்பு இல்லாமல் பேச முடியாது. காலம் கடக்கும்போதெல்லாம் நாமும் கடந்து போகிறோம் என்பதும் ஒரு காரணம். ஒரு இயற்பியலாளராகச் சிந்திக்கும்போதுகூட நாம் உணர்வுத்தளத்தை மறந்தோமென்றால் குழம்பிப் போவோம். ஏனென்றால் கடந்து போகும் காலம் குறித்த கவலையற்ற இயற்பியல் துறையில்கூட நாம் உணர்ச்சிரீதியான உரையாடலை எதிர்பார்க்கிறோம். நம் நரம்பு மண்டலத்துடன், நமது உணர்வு ரீதியான வாழ்க்கையுடன் தொடர்புடையது காலம். இது இயற்பியல் அல்ல. காலம் கடக்கும் எனும் உணர்வு நமது மூளையை பாதிக்கிறது. ஆகவே இயற்பியலாளருடையது அல்லாது நரம்பியல் வல்லுனரின் சிக்கலாக மாறுகிறது. இயற்பியல் தளத்தில் காலம் என்பது மிகவும் பலகீனமானது என்பதால் இப்படிப்பட்ட கருதுகோள்களின் மீது தத்துவத்துறை புது வெளிச்சத்தை பாய்ச்சக்கூடும்.

காலத்தின் உணர்வு ரீதியான கட்டமைப்பு உங்கள் சிந்தனையை பாதித்திருக்கிறதா?

ஆமாம். தத்துவவியலாளர்கள் எழுதி இதுவரை வெளியான புத்தகங்களிலேயே மிகச் சிறப்பான புத்தகத்தை எழுதிய ஹான்ஸ் ரெய்ன்பாக் எனும் தத்துவவாதி, காலாதீதமான கருதுகோளைத் தேடுவது காலத்தைக் கண்ட பயத்தினால் விளைந்த தத்துவம் என்கிறார். எல்லையற்ற மாற்றங்களுடனான சமரசமே காலத்தைப் பற்றிய அறிதலின் பயணம் எனத் தோன்றுகிறது. புத்த தத்துவத்தின் நிலையற்ற கருதுகோள் போல அசைவில் அசைவற்ற நிலை. காலத்தை கவனித்து வருபவனாக வாழ்வை கழித்து வரும் நான், எதுவும் நிலையானதல்ல எனும் நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டேன். இது நான் அறிவியல் படிப்பதால் வந்த மாற்றமா அல்லது வயதானதாலா எனத் தெரியவில்லை.

 எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் இரு கோட்பாடுகள்

நம் அண்டத்தைப் புரிந்துகொள்வதில் நம்மிடையே இருக்கும் சிறப்பான இரு கோட்பாடுகளைப் பற்றிப் பேசலாம். சிறிய துகள்களின் இயங்குவிதிகள் பற்றிய குவாண்டம் இயற்பியல் மற்றும் அதிக எடையுள்ள பொருட்களின் இயங்குவிதிகளை பற்றிய பொதுச்சார்புக்கொள்கை. இரண்டு கோட்பாடுகளுக்கிடையே பல முரண்பாடுகள் உள்ளன. ரெண்டுமே அதனதன் தளங்களில் உண்மைக்கு நெருக்கமாக உள்ளன. ஆனால் அந்த உண்மைகளுக்கிடையே பல முரண்கள் உண்டு. இரண்டு கோட்பாடுகளையும் இணைக்கும் முயற்சிகள் பல நடந்துள்ளன. லூப் குவாண்டம் ஈர்ப்புக்கோட்பாடும் , இழைக்கொள்கையும் அம்முயற்சியில் இறங்கியுள்ளன. அவற்றைப் பற்றி மேலும் விவரங்கள் சொல்ல முடியுமா?

இவ்விரண்டும் பொது சார்புக்கொள்கையையும், குவாண்டம் இயற்பியல் கருதுகோளையும் இணைக்கும் உத்தேசமான கோட்பாடுகளாகவே கருதப்படுகின்றன. நமக்குப் புரிந்தவரை இவ்விரண்டில் ஒன்று மட்டுமே உண்மையாக இருக்க முடியும். இவ்விரண்டில் இழைக்கொள்கை பெரிய கேள்விகளை நோக்கி பயணம் செய்கிறது. எல்லாவற்றையும் ஒரே சமன்பாட்டில் அடைக்கும் பெரு முயற்சியில் உள்ளது. நமது தூலப்பொருட்களின் அடிப்படைக் கட்டுமான துகள்களான எலெக்ட்ரான், குவார்க் போன்ற அனைத்துமே இழைகளால் அமைந்தவை எனும் ஆதாரக்கொள்கையின் அடிப்படையில் இழைக்கோட்பாடு இயங்குகிறது. ஒரே கோட்பாட்டின் மூலம் அனைத்தையும் இணைக்கும் முயற்சி. லூப் குவாண்டம் ஈர்ப்புக் கொள்கைக்கு பெரிய குறிக்கோள்கள் இல்லை. குவாண்டம் இயற்பியலின் புரிதலைக்கொண்டு பொதுச் சார்புக்கொள்கையை விவரிக்கப் பார்க்கிறது. வெளி மற்றும் காலத்தின் கொள்கைக்கு குவாண்டம் வடிவம் கொடுக்கும் கோட்பாட்டு முயற்சி மட்டுமே. நம்மைச் சுற்றியிருக்கும் வெளி தொடர்ச்சியான ஒன்றாக அல்லாமல் சிறு துணுக்குகளின் தொகையாக (குவாண்டம்) இருப்பதாக கணிக்கும்போது சிறு சிறு குவாண்டம்களாய் உள்ள வெளி, அதாவது, சிறு சிறு துகள்களாலான வெளி, இந்தத் துகள்களும் சின்னஞ்சிறு லூப்களாக உள்ளன என்று அமைத்துக் கொள்ள முடியும். இந்த குவாண்டம் வெளித் துகள்கள் வெளி எனும் வெற்றிடத்தை நிறைக்காமல் இவையே வெளியாக அமைகின்றன – சிறு சிறு பஞ்சு இழைகள் சேர்ந்து நாம் அணியும் சட்டையாவது போல இந்த குவாண்டம் வெளித் துகள்கள் வெளியென்ற ஒன்றாகின்றன.

இழைக்கொள்கைக்குப் பெரிய குறிக்கோள்கள் இருந்தாலும் முற்றிலும் புதிய ஒன்றை அது முன்வைக்கவில்லை. இழைகள் வெளியினில் நகர்வதால் காலத்துக்கும் வெளிக்கும் இடைவெளி இருப்பதை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில், இருக்கும் இடமோ இருக்கும் காலமோ இல்லையாதலால், அனைத்துமே குவாண்டா என்று அழைக்கப்படும் துணுக்குகளாய் தோன்றுகின்றன. அதாவது காலமும் வெளியும் இருவேறு கருதுகோள்கள் அல்ல; ரெண்டுமே ஒன்றிலிருந்து விளைந்தவை எனும் புதுமையை இது முன்வைக்கிறது. இவற்றில் எது சரியானது என நமக்கு இப்போது தெரியாது. ஆனால் விஞ்ஞானம் பலவேறு கோட்பாடுகளுக்கிடையே பெரிய உரையாடல்களை நிகழ்த்தியபடி முன்னகர்ந்துள்ளதால் இதுவும் நல்லதுதான். இந்த சிக்கலைத் தீர்க்காதவரை எந்த ஒரு ஒற்றைக்கொள்கையும் நமது சுதந்திரமான சிந்தனைக்கு இடையூறாக இருப்பதில்லை.

லூப் குவாண்டம் ஈர்ப்புக் கோட்பாட்டை சரியானது என ஏன் நினைக்கிறீர்கள்? இழைக் கொள்கையின் சிக்கல் என்ன? கறாரான சோதனை முடிவுகளைக் கேட்கவில்லை, உங்கள் உள்ளுணர்வு இதைப் பற்றி என்ன சொல்கிறது?

சோதனை மூலம் வெற்றி கண்ட ஐன்ஸ்டீனின் பொதுச்சார்புக் கொள்கையின்படி காலமும் வெளியும் ஈர்ப்பலையின் வெவ்வேறு வடிவங்களே. என்னைப் பொருத்தவரை என்றென்றும் அழியாத கண்டுபிடிப்பாக இது இருக்கும். அண்டத்தின் மையத்தை நாம் கண்டடைந்தது போன்றது இது. அறிந்து கொண்டதும் நாம் உலகத்தை புதுவிதமாகப் புரிந்துகொள்கிறோம்.

என்னுடைய உள்ளுணர்வைப் பற்றிக் கேட்டீர்கள் – வெளிச்சம் ஒரு மின்னணு அலை மட்டுமல்ல, ஃபோட்டான்களால் உருவானதுமாகும். வெளியும் ஈர்ப்பலையினால் உருவானது மட்டுமல்லாது குவாண்ட்டாக்களாகவும் இருக்கும், வெளிச்சத்தைப் போல. வெளியை குவாண்டாக்களாகப் பிரிக்கும்போது வெளி என்பது வெளித்துகள்களின் வரிசையாகவும் இருக்கும் – இது என்னுடைய ஆழமான உள்ளுணர்வு.

அதாவது நாம் பார்க்கும் வெளி தொடர்ச்சியான ஒன்றாக இல்லாமல் சிறுத் குவாண்டாக்களாலான வெளி என்று அறிவோம் இல்லையா? இதை எப்படி சோதித்துப் பார்க்க முடியும்? எவ்விதமான சோதனை முடிவுகளின் மூலம் காலம், குவாண்டம் ஈர்ப்பு பற்றி சரியான திசையில் ஆய்வுகள் நடத்த முடியும்?

ரெண்டு திசைகளில் இந்த ஆய்வு சுவாரஸ்யமாகச் செல்லக்கூடும். முதலாவது நமது அண்டத்தின் பெருவெடிப்பு. அண்டவியல் வளர்ந்து கொண்டிருக்கும் துறை. கிட்டத்தட்ட 13 அல்லது 14 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்த நூதனமான நிகழ்வான பெருவெடிப்பை நாம் இன்னும் முழுவதுமாகப் புரிந்துகொள்ளவில்லை. அண்டவியல் தகவல்கள், வானவியல் கண்காணிப்புகள், பெருவெடிப்பில் எஞ்சியவை போன்றவற்றை லூப் குவாண்டம் ஈர்ப்புக் கோட்பாட்டின் கணக்குகள் கொண்டு ஆராய்வது அந்தக் கோட்பாட்டை நிரூபணம் செய்யும் முடிவுகளை அடைவதற்கு நல்ல வழிமுறையாகும்.

மற்றொரு குவாண்டம் ஈர்ப்பு ஆய்வுக்கான தளம் எனக்குத் தனிப்பட்ட வகையில் ஆர்வமூட்டக்கூடியது – கருந்துளை. அண்டம் முழுவதும் கருந்துளை நிரம்பியிருப்பதை நாம் அறிவோம். சிறியதும் பெரியதுமாகப் பல கருந்துளைகள். முப்பது வருடங்களுக்கு முன்னர் அண்டத்தில் இவை இருப்பதை நாம் அறியவில்லை. தற்பொழுது அண்டம் முழுவதும் மிகப்பெரிய கருந்துளைகள் குவாண்டம் கோட்பாட்டின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் சாத்தியங்கள் உள்ளன. அவை வெடித்துச் சிதரும்போதும் ஆவியாக காணாமல் போகும்போதும் சிறு தடயங்களை விட்டுச் செல்லும்.

கருந்துளையிலிருந்து வெண்துளையாக மாறும்போது வெளியாகும் கதிர்களை ஆய்வு செய்யும் வழிமுறையில் என் சகாக்களுடன் ஈடுபட்டு வருகிறேன். இது போன்ற கதிர்களை முன்னரே கவனித்திருந்தாலும் தெளிவான முடிவுகளை எட்ட முடியவில்லை. ஆய்வுகள் முன்னேறியபடி உள்ளன. நாம் இன்னும் சென்று சேரவில்லை என்றாலும் எங்கும் முட்டியும் நிற்கவில்லை .

நான் ஆய்வு மாணவனாக இருந்தபோது தத்துவ நோக்கில்லாததால் பல புதிய தரிசனங்களை புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கிறோம் என சந்தேகித்திருக்கிறேன். இன்றைய விஞ்ஞான சொல்லாடல்கள் மிகவும் குறுகிவிட்டதாக நினைக்கிறீர்களா? நாம் சரியான கேள்விகளைக் கேட்கிறோமா?

இதில் நானும் உங்கள் பக்கம்தான். பெரும்பாலான நேரங்களில் முன்னேற்றம் விஞ்ஞான தர்க்கத்தில் இல்லாமல் கோட்பாடு சார்ந்தே இருக்கிறது. குறிப்பாக விஞ்ஞான வளர்ச்சியின் வரலாற்றையும் அங்கு நடந்த பெரிய பாய்ச்சல்களையும் பார்க்கும்போது இந்த எண்ணம் வராமல் இல்லை. நியூட்டன், ஃபாரடே, ஐன்ஸ்டீன், ஏன் மாக்ஸ்வெல் அல்லது ஷ்ரோடிங்கர் அல்லது ஹைசென்பர்க் என யாரை எடுத்துக்கொண்டாலும் சரியான சமன்பாடு கண்டுபிடித்தது மட்டுமே மிகப்பெரிய பாய்ச்சலாக மாறவில்லை. பெருமளவு நேரங்களில் மிகவும் வித்தியாசமான கோணத்தில் அணுகுவதால் பிரச்சனையின் அடிப்படை மாறிவிட்டிருந்தது. இதுவே அவர்களது வெற்றி. விஞ்ஞானத்தில் முன்னேற்றம் என்பது நமது மூளைகளை திறந்து வைத்திருப்பதால் மட்டுமே உருவாவதல்லாது துறை அதிநிபுணத்தனத்தால் உருவாவது அல்ல எனும் என் நம்பிக்கை மீண்டும் உறுதியாகி இருக்கிறது.

உங்கள் புத்தகத்தினால் ஆர்வமேற்பட்டு மேற்கொண்டு படிக்க நினைக்கும் இளம் வாசகருக்கு நீங்க பரிந்துரைக்கும் புத்தகங்கள் என்னென்ன?

நான் எல்லாவற்றையும் படிக்கும்படி சொல்லுவேன். தன்னைச் சுற்றிலும் கவனிப்பதுடன் தொடர்ந்து படிப்பது மட்டுமே நம் அறிவைத் திறக்கும். நான் சிறு வயதில் வரையறை இல்லாமல் சகலத்தையும் படிப்பவனாக இருந்தேன். ஒரு இளைய வாசகன் தன்னை மெலிதாகக்கூட ஈர்க்கும் எல்லாவற்றையும் படித்து மூளையில் ஏற்றிவிடவேண்டும். பின்னர் மறந்துவிடும் என்றாலும் உள்ளே மூளைக்குள் எல்லாமே பயன்பாட்டில் இருக்கும், நாம் மறந்தால்கூட. நாம் படித்த அத்தனையையும் மறந்தபின் எஞ்சி இருப்பதுதான் கலாச்சாரம் என யாரோ சொல்லியிருக்கிறார்கள்.

நன்றி: The Spectator

 

 

 

பேராசிரியர் கி. நடராசனின் ‘கம்பனும் ஷேக்ஸ்பியரும்’- ரா. கிரிதரன் நூல் மதிப்பீடு

ரா கிரிதரன்

கம்பராமாயணத்தைப் பற்றிய திறனாய்வு புத்தகங்கள் நிறைய இருந்தாலும், உலக இலக்கியத்தை ஒப்பிட்டு ஆய்வு நூலை முதலில் எழுதியவர் வ.வே.சு ஐயர். அவரது ‘Kambaramayanam – A Study’ எனும் நூல் கிரேக்க இலக்கியங்களில் வரும் கதாபாத்திரங்களை ராமாயணத்தோடு ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் ஆய்வாகும். காவிய அழகியலை மேலோட்டமாகத் தொட்டுப் பேசியிருந்தாலும் வ.வே.சு. ஐயரின் நூல் பாத்திரங்களின் உணர்வு நிலைகளை ஒப்பிட்டுப் பேசுவதை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கிறது. தனது வாழ்நாளில் இந்த ஆய்வை அவரால் முடிக்க முடியவில்லை என்பதால் முழுமையாக அவர் எழுத நினைத்ததை நாம் கற்பனை மட்டுமே செய்ய முடிகிறது. வ.வே.சு. ஐயர் வாழ்ந்த காலத்திலேயே சென்னையில் இருந்த பேராசிரியர் சி.பி. வெட்கட்ராம ஐயர் 1913 ஆம் ஆண்டு ‘Kamban and His Art’ எனும் ஆய்வு நூலை எழுதியுள்ளார். காவிய ரசனை சார்ந்த அழகியல் நுணுக்கங்களில் அமைந்திருக்கும் இந்த பெருங்காப்பியத்தின் தொகுப்புப்போக்கை நயம்பட ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த வரிசையில் சமீபத்தில் நான் ரசித்துப் படித்த நூல் பேராசிரியர் கி. நடராசன் எழுதிய ‘கம்பரும் ஷேக்ஸ்பியரும்’ (பாவை வெளியீடு, ராயப்பேட்டை, சென்னை)

கன்னனொடு கொடை போயிற்று, உயர் கம்பநாடனோடு கவிதை போயிற்று என பாரதி சொன்னதுபோல அனைத்துவிதமான சந்தங்களிலும் அமையும் இந்த பெருங்காப்பியத்துக்கு இணையான காப்பியம் தமிழில் இதுவரை இல்லை. மொத்தம் 96 வகையான சந்தங்களில் விருத்தப்பாடல்களாக கம்பராமாயணம் அமைந்துள்ளது. கானகத்தில் கிடைத்த கனி என வால்மிகி ராமாயணம், அக்கனியை கீறி தேன் தடவி உண்ணுவது கம்பநாடகம் என்று நாமக்கல் கவிஞர் எழுதியுள்ளார். சோழ ராஜ்ஜியம் தமிழக வரலாற்றின் மகுடம் எனச் சொல்லும்போது கோவிற்கலை, ஓவியம் மற்றும் இசைக்கலை போன்றவற்றுடன் கம்பனின் தீந்தமிழ் காவியத்தையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கம்பநாடகம் பாடப்பெற்ற வரலாறு இன்று கம்பமண்டபமாக ஶ்ரீரங்கத்தில் அமையப்பெற்றிருக்கிறது. இத்தனை சிறப்புபெற்ற கம்பராமாயணம் நம் தமிழர் வாழ்வில் எந்தளவுக்குக் கலந்திருந்தது? சங்கப்பாடல்களில் வரும் சில ராமாயண நிகழ்வுகள் வால்மிகியில் கூட இல்லை எனும்போது தமிழர் வாழ்வில் ராமாயணத்தைப் பற்றிய ஈடுபாடு கம்பருக்கு பல காலம் முன்பிலிருந்து இருந்தது எனலாம்.

கம்பநாடகம் தென் தமிழ்நாட்டில் நாடகமாக இயற்றப்பட்ட வரலாறு அ.கா. பெருமாள், ஸ்டுவேர்ட் ப்ளாக்பெர்ன் போன்ற ஆய்வாளர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. தோல்பாவைக்கூத்து, ராக்கூத்து எனும் வடிவங்களில் கம்பனின் வரிகள் எட்டு நூற்றாண்டுகளாக நிகழ்காவியமாக மேடையேறிக் கொண்டிருக்கின்றன என்றாலும் திரளான மக்கள் கண்டு களித்தார்கள் எனச் சொல்வதற்கில்லை. ராவணவதம், கும்பகர்ணனின் கதை, சுந்தரகாண்டம் எனச் சில நிகழ்வுகள் கூத்துகளில் நிகழ்த்தப்பட்டன என்றாலும் தொல்பாவைக்கூத்து அளவு வேறெந்த நிகழ்வும் விரிவாக அமையவில்லை. இன்று வரை வட கேரளத்தில் மட்டுமே தொல்பாவைக்கூத்து நிகழ்த்தப்பட்டுவருகிறது. இதைப்பற்றி ஸ்டுவேர்ட் ப்ளாக்பெர்ன் ‘Inside the Drama House’ எனும் சுட்டு நூலை எழுதியுள்ளார்.

கி. நடராஜனின் நூலில் ஒப்பிடப்படும் மற்றொரு மேதையான ஷேக்ஸ்பியரின் 37 நாடகங்கள் அவர் வாழ்ந்த காலம் தொடங்கி இன்றுவரை மக்கள் நாடகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எத்தனை நவீன, பின் நவீன நாடகங்கள் வந்தாலும் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் மீதான வரவேற்பு குறைவதில்லை. ஒவ்வொரு வருடமும் இங்கிலாந்தின் பல நாடக அரங்குகளிலும் அவருக்காகவே உருவாக்கப்பட்ட லண்டனின் குளோப் அரங்கிலும் (Globe Theatre) திரளான கூட்டத்துக்கு இடையே அவரது நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன. குறிப்பாக, குளோப் அரங்கின் மேடை நாடக அமைப்பைப் பற்றி தனி கட்டுரை தான் எழுதவேண்டி வரும். ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், குளோப் அரங்கில் நடக்கும் நாடக நடிகர்கள் பார்வையாளர்களையும் கதைக்குள் ஒரு அங்கமாக்கிவிடுவார்கள். பார்வையாளர்கள் ஆக்ரோஷமாகத் தங்கள் கருத்துகளை தெரிவித்தபடி நாடகத்தில் பங்கு பெறுவதை நான் பார்த்திருக்கிறேன். முதல் பத்து நிமிடங்களிலேயே பார்வையாளர்கள் யார் பக்கம் எனத் தெரிந்துவிடும். அந்தளவுக்கு மக்கள் நாடகமாக ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அமைந்திருக்கின்றன.

இப்படி இருவேறு வகையான வரவேற்பைப் பெற்ற காவியங்களை எழுதிய ஆசிரியர்களை ஒப்பிடும்போது சிக்கல்கள் பலதும் ஏற்படும். நாடகாசிரியரும், காவிய கர்த்தாவும் ஒப்பிடக்கூடியவர்களா? வெவ்வேறு மொழியில் கவிதை எழுதியவர்களை எந்தத் தராசு கொண்டு அளவிடுவது? 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இருவரைப் பற்றியும் உரை நிகழ்த்தி வரும் பேராசியர் கி. நடராசன் மிகக்கவனமாக கதாபாத்திரங்களையும், அவர்களது பண்பாட்டின் குணாதிசயங்களையும் மட்டுமே கருத்தில் கொள்கிறார். கால வித்தியாசங்களைக் கருத்தில் கொள்ளாது பாத்திரங்களின் உணர்ச்சி நிலை, நெடும் பண்பாட்டு உரையாடலில் அவ்வுணர்ச்சிகளின் இடம், இயற்கை விவரணைகள், நாடகத்தின் உச்சகட்ட தருணங்கள் என காவிய அழகைக்கொடுக்கும் ரசனையை மட்டும் ஒப்பிடுகிறார். இதனால் கி. நடராசன் காட்டும் உண்மைகள் மானுடம் தழுவிய உண்மைகளாக அமைந்திருக்கின்றன. கால தேச வர்த்தமானங்களைக் கடந்து இரு மகா கலைஞர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுகோலாகவும் கச்சிதமாக அமைந்துவிடுகின்றது.

முதலில் நூல் தோற்றம் குறித்த ஒப்பீட்டில் கம்பனும் ஷேக்ஸ்பியரும் தங்கள் மூதாதைகள் காட்டிய வழியைப் பிந்தொடர்வதில் ஒற்றுமை கிட்டுகிறது. வான்மீகியிலிருந்து ராம காதையையும், தமிழ் சங்க நூல்களிலிருந்து துறை ரசனையையும் எடுத்துக்கொண்ட கம்பர், சந்தங்களின் ரசனைக்குப் பல சைவ பாடல்களையும், வைணவ பாசுரங்களையும் நிழலெனத் தொடர்ந்திருக்கிறார். கிரேக்க மற்றும் ரோமானியக் காவியங்கள் மற்றும் இங்கிலாந்து நாட்டின் பழங்கதைகளிலிருந்து தனது நாடகங்களுக்கான பாத்திரங்களையும், கருக்களையும் தொடர்ந்த ஷேக்ஸ்பியர் கம்பனைப் போலப் பல புதிய சொல்லாட்சிகளை உருவாக்கியுள்ளார்.

எளிமை, இனிமை, இயல்பான உரையாடல்கள், மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், எல்லாவற்றையும் ஷேக்ஸ்பியரின் பாத்திரங்கள் இயல்பான நகைச்சுவை உணர்வோடு அலசி ஆராய்வதாக அமைந்திருக்கின்றன. இது மக்களிடம் நேரடியாக உரையாடியது. கலகத்தை உண்டு செய்தது. கோபத்தையும் கண்ணீரையும் வரவழைத்தது. மக்கள் தங்களில் ஒருவராக பாத்திரங்களோடு பயணம் செய்தனர். இதற்கு நேர்மாறாக, கம்பனின் காப்பியம் அதீதங்களின் ருசியை படிப்பவருக்கு அளிக்கவல்லது. அன்றாட வாழ்வின் ரசனைக்கு இடம் கொடுத்தாலும், உணர்ச்சிகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. காட்சிகளில் பிரம்மாண்டமும், உயர்வுநவிற்சி அணியும் அதிகமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதால் படிப்பவரின் முயற்சி மூலம் காவியகர்த்தாவை எட்டிப்பிடித்து தொடரும் நிலையில் கம்பனின் காப்பியம் உள்ளது. ஷேக்ஸ்பியரின் சானெட்டுகள் போல இறங்கி மக்களுக்கு அருகே வருவதில்லை. நாடகம் என்பதால் அதன் உணர்ச்சிகள் அதீதமாக இருந்தாலும், மக்களிடம் கடத்தும் தன்மையில் அது சமநிலை மாறாமல் இருக்கிறது என கி. நடராசன் சொல்கிறார்.

Shall I compare thee to a summer’s day
..my mistress’s eyes are nothing like the sun

என மிகச் சாதாரணமாக அணிகளைப் பயன்படுத்துகிறார் ஷேக்ஸ்பியர்.

இதை சீதையை வர்ணிக்கும் இடத்தோடு ஒப்பிடும்போது:

கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம்
வெல்லும் வெல்லும் என மதர்க்கும் விழி கொண்டாள்
சொல்லும் தன்மைத்து அன்று இது குன்றும் கவரும் திண்
கல்லும் புல்லும் கண்டுருகப் பெண் கனி நின்றாள்

எனவும், பொய்யோ எனும் இடையாளோடும் எனும் உவமைகளைக் கொண்டு விவரிப்பது அதீத அணிகளைக் கொண்ட விவரிப்பு என்பதாகிறது.

இதைப் படிக்கும்போது நமக்கு ஒன்று தோன்றலாம். ஒரு காவியகர்த்தாவையும், நாடக ஆசிரியரையும் நாம் ஒப்பிட முடியுமா?அப்படியே ஒப்பிடுவது நாம் இருவருக்கும் செய்யும் நியாயமாக அமையுமா? இப்படிப்பட்ட கேள்விகளை ரெண்டு விதமாக நாம் அணுக முடியும். இரு மொழிகளின் உச்சகட்ட கவிகளை ஒப்பிடுவது இருவேறு கலாச்சாரப் பின்னணியில் வளர்ந்த ரசனையை அணுகுவதற்குச் சிறந்த முறை. ரெண்டாவதாக, அழகியல் ரீதியில் காப்பியச் சுவையை செறிந்த நாடக கதாபாத்திரங்களின் அனுபவத்தோடு சேர்த்துக்கொடுத்ததில் கம்பருடன் ஒப்பிடக்கூடிய தகுதி ஷேக்ஸ்பியருக்கு உள்ளது என்கிறார் கி. நடராசன்.

கம்பராமாயணம் universal brotherhood எனும் தத்துவத்தை வலியுறுத்தும் காவியம். தன்னலங்கருதாத தியாகத் திருவுருவாக, நட்பின் அணிகலனாக, ஒரு தொண்டனாக என ஒவ்வொரு மனித குணநலனுக்கும் ஒரு பாத்திரம் கம்பராமாயணத்தில் அமைந்துள்ளது. ‘Merchant of Venice’, ‘Two Gentlemen of Verona’ என பல நாடகங்களிலும் ஷேக்ஸ்பியர் வலியுறுத்தும் நட்பும் உறவும் கம்பனின் தத்துவத்துக்கு அருகே வருகின்றன. கம்பன் இதையும் மீறி நிற்கும் இடங்கள் பல உண்டு. பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என ‘இன்று போய் நாளை வா’ எனும் சரண் என்றால் மன்னிக்கும் தத்துவம் கம்பனுக்கு மட்டுமே உரிய ஒன்று.

மாயங்கள் நிரம்பிய கருக்களை இரு காவிய ஆசிரியர்களும் படைத்துள்ளனர். மாயா சனகப்படலம், இந்திரஜித்தனின் மாயங்கள், மாயமான் என கம்பனின் காவியத்தில் பல இடங்கள் மாயங்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக மாயத்தை ஒரு உத்தியாக மட்டும் பயன்படுத்தாது, பாத்திரங்களின் தனித்தன்மையை வெளிக்கொணரும் நாடக தருணங்கள் பலவற்றை கம்பன் இயற்றியுள்ளார்.

மாயா சீதைப் படலத்தில், சனகன் இறந்தது போல ஒரு மாயை உருவாக்கி சீதையைக் கலங்கச் செய்யும் செய்யுளில்

எந்தையே எந்தையே என் பொருட்டினால் உனக்கும் இக்கோள்
வந்ததே என்னைப் பெற்று வாழ்ந்தவாறு இதுவே மண்ணோர்
தந்தையே தாயே செய்த தருமமே தவமே தவமே என்னும்
வெந்துயர் வீங்கு தீவிழ் விறகு என வெந்து வீழ்வாள்

சீதையின் வருத்தத்தைக் கண்டு ராவணனின் சித்தம் கலங்குகிறது. அவனது காம உணர்ச்சிகள் மதி மயக்கத்தை உண்டு செய்கிறது. சித்தம் கலங்கியவன் , ‘உனது தந்தையைக் கொல்ல மாட்டேன் அழாதே’ என உண்மையை உடைத்துவிடுகிறான். மனம் இறங்கி உண்மையை சொல்லிவிடுகிறான். அதன் மூலம் இது ஒரு மாயை என அவள் அறிகிறாள். இங்கு மாயை ஒரு வித்தைக்காக மட்டும் அல்லாமல், ராவணனின் உடையும் பனிக்கட்டி போன்ற பலகீனமான உணர்ச்சியை நமக்குக் காட்டவும் பயன்படுகிறது.

ஷேக்ஸ்பியரில் வரும் மாயங்கள் ஒரு கதையை விளக்கவோ, மாயத்தைக் காட்டி பிறரை மயக்கவோ மட்டுமே பயன்படுகிறது என்பதால் கம்பன் அளவுக்கு மாயக்காட்சிகள் கதையின் போக்கை செறிவுபடுத்தாமல் போய்விடுகிறது என்பது ஆசிரியரின் அபிப்ராயம்.

சில நேரங்களில் பாத்திரங்கள் பேசும் பாணியிலிருந்து அவர்களின் உணர்ச்சிகளை கம்பன் உணர்த்திவிடுகிறார். உதாரணமாக குகனுக்குத் தன் தாய் கைகேயியை அறிமுகப்படுத்த விரும்பாத பரதன் அவளது முறை வரும்போது தன் எல்லையற்ற வெறுப்பை வெளிப்படுத்தி அவளை அறிமுகப்படுத்துவதாக கம்பன் காட்சி அமைப்பான்.

இந்நின்றாள் என்னை ஈன்றாள்

என மூன்று வார்த்தைகளில் சொல்லிக் கடத்திவிடுகிறார்.

one may smile and smile and be a villain

எனச் சுருக்கமான வரிகளின் மூலம் படிப்பவரின் மனதில் கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் உணர்ச்சி வேகத்தையும் குறிப்பிடுவதில் இருவருக்கும் கடும்போட்டி உண்டு.

காவியத்தில் புலம்பல்கள் என்பது ரசனையைக் கூட்டிக்காட்டும் செயல். படிப்பவர்கள் மனதில் தனிப்புலம்பல்கள் மிகப்பெரிய நாடகக்காட்சியை உருவாக்கிக் காட்டிவிடும். தனிப்புலம்பல்கள் அமைப்பதில் கம்பனும் ஷேக்ஸ்பியரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களல்ல. அதுவும் soliloquy எனும் வடிவத்தின் பிதாமகனாகவே ஷேக்ஸ்பியர் காணப்படுகிறார். அவருக்கு முன் கிரேக்க துன்பியல் நாடகங்களில் மட்டுமே இப்படிப்பட்ட நீண்ட தனிப்புலம்பல்கள் வந்துள்ளன.

மண்டோதரியின் புலம்பல் காவியத்தின் ஓலம். விந்தையான சொற்சித்திரத்தை கம்பர் நமக்குக் காட்டுகிறார்.

வெள் எடுக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த
திருமேனி மேலும் கீழும்
எள் இருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும்
இடம் நாடி இழைத்தவாறே
கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும் எனக் கருதி உடல் புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி!

வாளி – அம்பு

சீதை மேலிருக்கும் காதலை உள் புகுந்து தேடியிருக்கிறது ராமனின் அம்பு எனப் புலம்புகிறாள் மண்டோதரி. ஆரம்பத்திலிருந்து ராவணன் மீது கோபத்தில் இருந்தவள் தன் கையறு நிலையை தனிப்புலம்பலாக்கியிருக்கிறாள். சீதை மீது கொண்ட காமம், தன்னைத்தாண்டிச் சென்ற காமம் எனும் tragic flaw தனது கணவனை வீழ்த்தியிருக்கிறது. இங்கு ராவணனின் காமத்தை பகிர்ந்திருந்த மண்டோதரிக்கு அவனை வீழ்த்தியிருந்த அம்பு காமத்தைத் தேடியிருப்பதாகப் பட்டிருக்கிறது.

அண்ணனின் உடலைக் கண்ட வீடணன்,

உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு
சனகி என்னும் பெரு நஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே போக்கியதே
உயிர் நீயும் களப்பட்டாயே!
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனித்தான்
எண்ணுதியோ எண் இல் ஆற்றல்
அண்ணனே அண்ணாவோ அசுரர்கள் தம்
பிரளயமே அமரர் கூற்றே

சீதை எனும் பெரு நஞ்சு நீ பார்த்த நேரத்திலேயே உன்னில் கலந்து உயிரைக் குடித்துவிட்டது எனப் புலம்புகிறான் வீடணன். இங்கு நாம் காண்பது சீதை எனும் பூமாதேவி மீது இருக்கும் அளவில்லாத பக்தி.

கம்பனின் தசரதனையும், ஷேக்ஸ்பியரின் மகத்தான கதாபாத்திரமான லியர் மன்னனையும் ஆசிரியர் ஒப்பிடுகிறார்.

காதோரம் நரை தெரிந்த காலத்தில் தனக்குப் பின்னால் குழந்தைகள் இல்லை எனும் வேதனையோடு பிள்ளைப்பேறுக்காக வேண்டி நின்றவர் தசரதன். முதுவயதில் தனது அதிகாரத்தை பகிர்ந்து அளித்துவிட்டு தன் மகள்களுடன் வாழலாம் என முடிவெடுக்கிறார் முதியவர் லியர். உண்மையான பாசத்தை உடையவரை அடையாளம் காணத்தெரியாத குருடனாக லியரின் சரிவு நமக்கும் தசரதனின் வாழ்வைவிட திருதிராஷ்டிரனின் வீழ்ச்சியையே ஞாபகப்படுத்துகிறது.

பிறிதொரு குறையிலை யெற்பின் வையகம்
மறுகுறு மென்பதோர் மறுக்க முண்டரோ

ஆனால், லியரைக் காட்டிலும் தசரதன் தயாநிதியானவர். அதிகாரத்தைப் பகிர்ந்தளித்த பின்னரும் தனக்கென ஒரு படையும், தன் சொல் கேட்டு நடக்கும் பிள்ளைகளும் வேண்டுமென அதிகாரத்தை விட்டுக்கொடுக்க இயலாத கிழவர் லியர். மாறும் உலகத்தைக் கண்டும் காணாமலிருக்கும் குருட்டுத்தனமும், அதிகாரத்தை கைவிடமுடியாத அகங்காரமும் நிறைந்தவர்.

தசரதன் இரு முறை தன்முடி துறக்கத் தயாராக இருந்தவர். காடு சென்று தவமேற்கும் வாழ்வை மேற்கொள்வதற்காக ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய எடுத்த முயற்சி ஒரு முறை. கைகேயி மனம் மாறியபின்னர், பெற்ற வரங்களைத் திரும்பப்பெற்று ராமன் காடேறுவதைத் தடுக்கும் பொருட்டு அதிகாரத்தை துறக்க நினைத்தது ரெண்டாம் முறை. இரு சமயங்களிலும் தான் பெற்ற பிள்ளைகளின் மீது அதீதப்பாசம் கொண்டவராகவே தசரதன் வருகிறார். நிலைமை கைமீறிப்போகும்போது கைகேயியை மனைவி இல்லை எனவும் பரதன் மகனல்ல எனவும் கோபத்தில் முடிவெடுப்பது தவிர ராமனின் தயாள குணம் மொத்தமும் தசரதனிடமும் குடி கொண்டிருக்கிறது.

Lear: better thou
Hads’t not been born the not to have
pleased me better

என்னைப் பாராட்டாத நீ பிறக்காமலேயே இருந்திருக்கலாம் என மூன்றாவது மகளான கார்டெலியாவைப் பார்த்துக் கூறும் லியரளவு பரதனை பிள்ளையல்ல எனும் போது தசரதன் தாழ்கிறார். மற்றபடி லியரிடம் இருந்த அதிகார போதை துளியளவு கூட இல்லாதவர்.

சொன்னேன் இன்றே இவள் என் தாரமல்லன் துறந்தேன்
மன்னே யாவான் வருமப் பரதன் தனையும் மகன் என்று
உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக் கென்றான்

என கைகேயியையும், பரதனையும் துறந்துவிடுகிறார் தசரதன்..

முடிவில் மீட்சிப்படலத்தில், தசரதனிடம் மீண்டும் பரதனையும், கைகேயியையும் ஏற்றுக்கொள்ளும்படி ராமன் சொல்லும்போது ராம காவியம் லியரின் காவியத்தை எஞ்சிவிடுகிறது.

ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்றுரை என
தீயள் என்று நீதுறந்த என் தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக எனத் தாழ்ந்தான்.

கம்பராமாயணத்தில் வரும் சகோதர பாத்திரங்களைப் போல நல்லவை மட்டும் நிறைந்த சகோதர பாத்திரங்கள் ஒன்று கூட ஷேக்ஸ்பியரில் இல்லை. பரதனும் லஷ்மணனும் கோபம் நிறைந்தவர்கள் என்றாலும் நியாயம் இருக்கும் இடங்களில் கோபத்தைக் காண்பிப்பதில்லை.

தாய் எனும் பெயர் என்னைத் தடுக்கற் பாலதோ?

தாய் எனும் உறவில் இருப்பதால் உன்னைக்கொல்ல முடியாமலாகிறது என பரதன் கைகேயியிடம் கோபப்படுகிறான்.

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் துன்பியல் நாடகங்களே இன்று வரை புகழ்பெற்றவையாக இருக்கின்றன. அவற்றில் மாக்பெத் நாடகம் மிகுந்த சிறப்பைப் பெற்றது. பேராசை எப்படி ஒரு மனிதனை அடியோடு சாய்த்துவிடும் எனக் காட்டும் நாடகம். லேடி மாக்பெத் பெண்மையின் எந்த இலக்கணமுமின்றி மாக்பெத்தை தூண்டிவிட்டு கொடிய கொலைகளை செய்யவைக்கிறாள். அவளைப் போல நயவஞ்சகியாக கூனியும், கைகேயியும் இல்லாதது ஒருவகையில் ராமாயண காப்பியத்தை நடுநிலையோடு அணுக வைப்பதோடு, கதாபாத்திரங்களின் இயல்புக்கு ஆழத்தையும் அளிக்கிறது. கைகேயியை ‘தீயவையாவையினும் சிறந்த தீயாள்’ என விவரித்தாலும் அவளது தீயச்செயல் பஞ்சமாபாதகங்களில் ஒன்றாக அமைவதில்லை. சூழ்நிலையினால் மனம் தடுமாறிப் போனவள் – இராவணனின் காமமயக்கம் போலொரு திரிபு நிலை. அதாவது, கதாபாத்திரங்கள் அடிப்படை குணத்தில் வஞ்சகர்களாக அல்லாது, சூழ்நிலை அவர்களை அப்படி மாற்றும் விதமாக கதையைக் கையாள்வதில் ராமாயணத்துக்கு ஈடில்லை.

மாக்பெத் நாடகத்தில்,

I have given suck and know
How tender tis to love the babe that milks me
I would, while it was smiling in my face
Have plucked my nipple from his boneless gums
And dashed the brains out, had I so sworn as you
Have done to this

பிள்ளையைத் தரையில் அடித்து முக்குளத்தை சிதறவைக்க வேண்டுமென்றாலும் செய்துவிட்டு என் வேலையைத் தொடருவேன் என்கிறாள் லேடி மாக்பெத். லேடி மாக்பெத் பெண்ணே அல்ல அவள் ஒரு அரக்கி என விமர்சகர்கள் கருதுமாக இது போல பல நிகழ்வுகளும் மாக்பெத்தில் உண்டு.

ராமாயணத்தில் சூர்ப்பனகை கூட இப்படிப்பட்ட அரக்கக் குணத்தோடு வருவதில்லை. அவள் ராம லஷ்மணன் இருவர் மீது கொண்ட காமத்தைக் கணக்கில் கொண்டால் கூட அவள் சூழ்ச்சி செய்து இராவணனை ஏவி விட்டாளே தவிர கொடூர செயல்களில் இறங்கவில்லை.

Tragic Hero வரிசையில் இந்திரஜித்துக்கு நம் மரபில் பெரிய இடமுண்டு. சொல்லப்போனால் இராவண ராமரிடையே நடந்த போரை விட கிட்டத்தட்ட இருமடங்கு பாடல்கள் இந்திரஜித் லஷ்மணன் இருவருக்கும் இடையே நடந்த போரைப் பற்றி கம்பர் எழுதியுள்ளார். மாய வித்தைகளில் இராவணனை விட மிகவும் திறமை உள்ளவன் இந்திரஜித். மாயா ஜனகப் படலத்தில் ஜனகரைப் போல மாய உருவைப் படைத்து சீதையை மனங்கலங்கச் செய்தவன். அதே போல, சீதாதேவி இறந்தவிட்டதைப் போன்ற மாயத்தை ராமர், லஷ்மணர் முன்னே நிகழ்த்திக் காட்டியவன். ஒரே நேரத்தில் பல இடங்களில் உருவங்களை ஏற்படுத்துவதோடு, இயற்கை சீற்றங்களையும் அமைத்துக்காட்டுகிறான். கண் இமைக்காத தேவர்கள் கூட சிதறி ஓடும் விதமாக உலகம் தெறிக்கிறது.

அவனது ஆற்றலை லஷ்மணனே கண்டு வியந்து நிற்கும்போது இந்திரஜித்தனின் மாயப்போர் பற்றி வீடணன் உரைக்கிறான்

தேரினைக் கடாவி வானிற் செல்லினுஞ் செல்லுஞ் செய்யும்
போரினைக் கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும் போய்க்
காரினைக் கடந்து வஞ்சங் கருதினுங் கருதும் காண்டி
வீரமெய் பகலினல்லால் விளிகிலனிருளின் வெய்யோன்

அரக்கருக்கு சக்தி இருளில் எனும்படியாக இந்திரஜித்தின் வீரம் பகலில் அல்லாது இருளின் சூரியன் போல இரவில் பலங்கொண்டு எழுவான் என்கிறான் வீடணன். இராவணனை எதிர்த்து இந்திரஜித் பெண் பாவத்தின் கெடுதல்களை சொல்ல முயன்றான். கும்பகர்ணன், மண்டோதரி, மகோதரன், இந்திரஜித் என இராவணனைச் சுற்றி இருந்த அனைவருமே அவனது தீய எண்ணத்தின் விளைவுகளைப் பற்றி அவனுடனேயே விவாதித்தவர்கள். யார் சொல்லையும் கேட்கத் தயாராக இல்லாதபடி காமம் அவனது கண்களை மறைந்திருந்தது. கடைசிவரை அது அவனுக்கு சரியான வழ புகட்டவில்லை.

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வரும் தீயவர்கள் நம்மைப் போன்ற சாதாரணமான உணர்ச்சிகளுக்கு ஆட்படும் சாமானியர்கள். புரூட்டஸ், லேடி மாக்பெத் போன்ற எதிர் நாயகர்கள் மனித உணர்ச்சிகளை ஒரு நிலையில் வைக்கத் தெரியாதவர்கள். ஆனால் வஞ்சினத்தில் இந்திரஜித்தின் மாயத்தைப் போன்றவர்கள். இவ்விதத்தில், மனித மனதின் ஆழமான இருட்டை காட்டியவர்களாகிறார்கள்.

வாழ்நாள் முழுவதும் தோய்ந்து கிடக்கும்படியான நாடக தருணங்களும், ரசனையும் அமையும்படி படைப்புகள் கம்பன் ஷேக்ஸ்பியர் இருவரிலும் இருக்கின்றன. ஷேக்ஸ்பியரின் பாத்திரங்கள் இயல்பான நடையில், உயிர்ப்பாக அமைந்திருக்கும். கம்பனின் காட்சிகளும், உணர்வுகளும் பிரம்மாண்டமான பின்புலத்தில் அமைந்திருக்கும். மேலோட்டமான பார்வையில் இருவேறு வகையினராகத் தெரிந்தாலும் கவித்திறனிலும் கற்பனைவளத்திலும் இருவரும் ஒப்புநோக்கத் தக்கவர்கள் என்பதை இந்த நூலில் பேராசியர் கி. நடராஜன் நிறுவியுள்ளார். கம்பன் மற்றும் ஷேக்ஸ்பியரின் ரசனையின் ஒரு துளியைப் பருக நினைப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

கதைகளுக்கு ஓர் அறிமுகம் – சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம்

ரா கிரிதரன்

(Ashenden சிறுகதை தொகுப்பில் சாமர்செட் மாம் எழுதிய ஓரு முன்னுரையை இங்கு மொழியாக்கம் செய்துள்ளேன். இதில் கதை என்றால் என்ன என வரும் விளக்கஙகள் நன்றாக இருப்பதால் இதைச் செய்திருக்கிறேன். வாசக நண்பர்கள் ஒரு முறை வாசித்துப் பார்க்கலாம்.)

யுத்த காலத்தில் என் உளவுத்துறை அனுபவத்தைக் கொண்டு இந்த புத்தகத்தை எழுதியிருந்தாலும் புனைவுக்காக சில நிகழ்வுகளை முன்னும் பின்னுமாக மாற்றி உள்ளேன். தகவல்கள் பலகீனமான கதைசொல்லி. அது கதையைத் தொடக்கத்துக்கு மிக முன்னாலிருந்து தொடங்கி, எங்கெங்கோ அலைந்து திரிந்தபின், தீர்க்க முடியாத சில சிக்கல்களை அந்தரங்கத்தில் தொங்கவிட்டு ஒற்றை வரித்தடமாக நீர்த்துபோய் முடிந்துவிடும். மிக சுவாரஸ்யமான நிகழ்வுக்கான பீடிகையோடு தொடங்கிவிட்டு சம்பந்தமற்ற ஏதோ ஒரு புள்ளிக்குத் தாவிவிடும். முடிவுக்குத் தேவையான உச்சகட்டங்களை அது உதாசீனப்படுத்துவிடுகிறது. இதுவே புனைவுக்கான சிறந்த மாதிரி எனச்சொல்லும் புதினாசிரியர்களின் பள்ளியும் உண்டு. நமது வாழ்க்கை எவ்விதமான திட்டங்களுக்குள்ளும் அடங்காமால் காட்டாறு போல நம்மை கொண்டு செல்கிறது எனும்போது புனைவு மட்டும் ஏன் அப்படி இருக்கக்கூடாது; வாழ்வை பிரதி செய்வதல்லவா அது? வாழ்வில் காரணக் காரிய தொடர்பற்று நடக்கும் சம்பவங்கள் போலப் புனைவும் இருக்கலாம். முடிவை நோக்கி செல்லும் எந்த பயணத்துக்கான சாத்தியக்கூறையும் அது மீறியபடி செல்லலாம். முடிவில் வரும் எதிர்பாரா திருப்பம் அல்லது திடுக்கிடலால் எழுத்தாளர்கள் சில சமயம் வாசகர்களை ஆச்சர்யப்படுத்துவது போல் வேற எதுவும் இவர்களை புண்படுத்தாது. அப்படி ஒரு சந்தர்பம் அவர்கள் எழுதும் கதையில் வந்தாலும் அதை சாமர்த்தியமாக விலக்கப்பார்ப்பார்கள். உங்களுக்கு ஒரு கதையை அவர்கள் தருவதில்லை. மாறாக நீங்களே ஒரு கதையை உற்பத்தி செய்துகொள்வதற்குத் தேவையான பொருட்களைத் தருகிறார்கள். சிலசமயம் குழப்படியான நிகழ்வு என நினைக்கும்படியான சம்பவத்தை நமக்குத் தந்துவிட்டு அதிலுள்ள முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள அழைப்பு விடுப்பார்கள். சில சமயங்களில் கதாபாத்திரத்தை மட்டும் தந்துவிட்டு விலகிவிடுவார்கள். சமையல் சாமான்களைத் தந்துவிட்டு சமைக்க எதிர்பார்ப்பார்கள். இது கதை எழுதுவதற்கான ஒரு வழிமுறை என்பதோடு பல நல்ல கதைகளும் இவ்வகையில் எழுதப்பட்டுள்ளன. செகாவ் இதில் கைதேர்ந்தவர். பெரிய கதையைவிட மிகச் சிறிய கதைக்கு இது இன்னும் சிறப்பாகப் பொருந்தும். உணர்வுநிலை பற்றிய விவரணை, சூழ்நிலை அல்லது சூழல் போன்றவை ஆறு பக்கங்களுக்கு நம் கவனத்தை ஈர்த்துவைக்கலாம். ஆனால் ஐம்பது பக்கக் கதை என்றால் இந்த விவரணைகளைத் தாங்குவதற்கு ஒரு முதுகெலும்பு அவசியம். அப்படிப்பட்ட ஒரு முதுகெலும்பு தான் கதை. கதைக்கென இருக்கும் சில பிரத்யேக குணாதிசயங்களிலிருந்து நாம் தப்ப முடியாது. கதைக்கென ஒரு தொடக்கம், மத்திமப்பகுதி மற்றும் முடிவு இருக்கும். தனக்குள் முழுமையாக அமைந்திருக்கும். தொடக்கத்தில் வரும் நிகழ்வுகளுக்கான காரணங்களை கணக்கில் கொள்ளாது அவற்றின் விளைவுகளால் நிகழும் பிற சந்தர்ப்பங்களை கணக்கில் கொண்டு முடிவு வரை செல்லும்போது வாசகர்களுக்கு ஒரு புள்ளிக்கு பின்னே மேலதிக சந்தர்ப்பங்கள் தேவைப்படாது போகும்படி திருப்தி உண்டாகும். அதாவது ஒரு கதை ஒரு புள்ளியில் தொடங்கியபின்னே ஒரு புள்ளியில் முடிவடைய வேண்டும். தேவையற்ற திசைகளில் விரிந்து செல்லாது, முடிவை நோக்கிய ஒரு திட்டவட்டமான பாதையில் வளைந்து செல்லவேண்டும். படம் வரைந்து காட்டவேண்டுமென்றால் ஒரு அரைவட்டப்பாதையை நீங்கள் காட்டாலாம். முடிவில் ஒரு திருப்பத்தையோ ஆச்சர்யமான திடுக்கிடும் சம்பவத்தையோ செய்வதில் தவறில்லை; அதைச் சரியாகச் செய்யும்போது. செகாவை போலி செய்யும்படி மோசமாக எழுதப்படும் திருப்பங்கள் மோசமானவையாக முடிந்துவிடும். கதையின் முழுமைக்குப் பங்குபெறும்படியான முடிவுகள் மிகச் சிறப்பான தர்க்க ஒழுங்குடன் இணைந்துகொள்ளும். உச்சகட்ட முடிவுகளில் தவறொன்றும் இல்லை. சொல்லப்போனால் அது வாசகர்களைத் திருப்தி செய்யும்படியான கோரிக்கையும் கூட. இயல்பான சம்பவத்தொடர்ச்சி மூலம் ஒழுங்காக இணையாத முடிவுளே தவறானவையாக மாறிவிடுகின்றன. உச்சகட்ட முடிவுகளைச் சேர்ப்பதென்பது நடைமுறை இயல்புக்கு மீறிய செயல்தான் என்றாலும் வாசகர்களை ஈர்த்து வசியப்படுத்துவதற்கு இன்றியமையாத ஒன்று.

வாழ்க்கையை புனைவு நகல் செய்கிறது என்பது கேள்விக்குட்படுத்தத் தேவைப்படாத வாதமல்ல. மற்றொன்றைப் போல இதுவும் ஒரு இலக்கியக் கோட்பாடாகும். சொல்லப்போனால், வாழ்க்கையை கச்சாப்பொருளாகப் பயன்படுத்தி புனைவு புது வடிவங்களை உருவாக்குகிறது எனும் இன்னொரு கோட்பாடும் சாத்தியமே. ஓவியம் தீட்டுவதிலிருந்து ஒரு ஒப்புமையை நாம் அடையமுடியும். பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலவெளி ஓவியர்களுக்கு இயற்கையை உள்ளது உள்ளபடி வரைவதில் அதிக ஈடுபாடு இருந்ததில்லை. அதை ஒரு அலங்கார ஆடம்பரம் என்றே அவர்கள் நினைத்தனர். ஒரு காட்சியை பார்வைக் கட்டமைப்பின் கண்ணோட்டத்தோடு அமைத்தனர். அதாவது, மரம் இருக்கும் எதிரில் சமன்செய்வதற்காக மேகத்தை வரைவார்கள். இருளும் வெளிச்சமும் சீராக உருவாக்கி கண்ணுக்கு ஒரு சமன்பாட்டை ஏற்படுத்துவார்கள். ஒரு நிலக்காட்சியை வரைய வேண்டும் என்பது அவர்கள் எண்ணமல்ல மாறாக கலைப்படைப்பை உருவாக்க வேண்டும் என்பதே அவர்கள் எண்ணுவது. வேண்டுமென்றே ஒரு வெளியை அங்கு நிகழ்த்திக்காட்டுகிறார்கள். பார்வையாளர்களின் யதார்த்தத்தேடலை மீறிவிடாமல் இயற்கைக்காட்சிகளை இடமாற்றித் தருகிறார்கள். உள்ளது உள்ளபடியே படம்பிடிப்பதை இம்பிரஷனிஸ்டுகளுக்காக விட்டு வைத்திருந்தனர். சூரியஒளியின் தீர்க்கம், நிழலின் வண்ணங்கள், காற்றின் ஒளியமைப்பு என இயற்கையின் உன்னத அழகை மட்டும் உருவாக்கிக்காட்டுவதற்கு அவர்கள் முயன்றனர். உண்மையை மட்டும் குறிக்கோளாகக் கொண்டனர். கையும் கண்ணும் மட்டும் கொண்டவர்களாக மாற ஓவியர்கள் விரும்பினர். புத்திகூர்மையை அவர்கள் வெறுத்தனர். அவர்களது ஓவியங்களை இன்று கிளாட்டின் ஓவியத்தோடு நிரையில் வைக்கும்போது எத்தனை கற்பனையற்ற சித்திரங்களாக அவை இருக்கின்றன என ஆச்சர்யமாக உள்ளது. கிளாடின் வழிமுறையும் சிறுகதை ஆசிரியர்களில் உச்சகட்டமானவராக கய் தெ மாப்பஸானின் வழிமுறையும் ஒன்றுதான். அது அற்புதமான ஒன்று என்பதால் பிறவற்றை விட மேலும் அதிக காலம் நீடிக்கும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. மத்தியவர்க்க ருஷ்யர்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே எப்படி இருந்தனர் என்பது பற்றிய அக்கறை குறைந்து வரும்போதும் மற்றும் செகாவின் கூற்றை விட அதில் வரும் மனிதர்களே அதிகம் கவர்கிறவர்களாக இருக்கும்போதும் இந்த வழிமுறை மேலும் உபயோகமாக இருக்கும். நான் சொல்லும் வழிமுறையில் வாழ்க்கையை நகல் செய்யும் முயற்சி இல்லை மாறாக வாழ்விலிருந்து தேர்ந்தெடுக்கும் சுவாரஸ்யமாவை, நாடகத்தனமானவை இருக்கும். அப்படித் தேர்ந்தெடுத்தவற்றை வாழ்வுக்கு நெருக்கமாக வாசகர்களை அந்நியப்படுத்திவிடாத மனதுக்கு நெருக்கமான காட்சிப்படுத்துதல் இருக்கும். தகவல்களிலிருந்து ஒரு நேரடியான அழகமைப்பு உருவாகி இருக்கும். முடிவில் வரும் படைப்பு என்பது எழுத்தாளரின் உணர்ச்சி மனநிலையின் பிரதிபலிப்பாகவும் இருக்கும். ஏனென்றால் ஒரு எல்லை வரை அது அவனே தான். வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டி, ஈர்த்து வைத்திருக்கும். அதில் வெற்றிபெற்றால் வாசகன் அதை உண்மை என ஏற்றுக்கொள்வான். அவனுடையதாகக்கொள்வான்.

இந்த புத்தகம் ஒரு புனைவு என என் வாசகர்களுக்கு நிறுவுவதற்காகவே நான் இதையெல்லாம் சொல்கிறேன். அதே சமயம் கடந்த சில வருடங்களாக புனைவு எனும் பெயரில் வந்த பல கதைகளை நான் அப்படி தைரியமாகச் சொல்ல மாட்டேன். அவை உண்மைக்கு நெருக்கமான நினைவுகள். உளவாளியின் வேலை மிகவும் சலிப்பூட்டக்கூடியது. மிக அன்றாடத்தனம் கொண்ட தேவையில்லாத வேலைகள். கச்சாப்பொருட்களாக அவை அளிப்பது பெரும்பாலும் தேவையில்லாத தகவல்கள்தான். தன்னால் முடிந்தளவு எழுத்தாளர் அவற்றை தங்குதடையின்றி, புனைவுச்சங்களுடன் இயல்பாகச் சொல்ல வேண்டும்.

1917 ஆம் ஆண்டு நான் ரஷ்யா சென்றேன். போல்ஷுவிக் போராட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்காகவும் ரஷ்யாவை உலக யுத்தத்திலேயே தொடர்ந்து ஈடுபட வைக்கவும் என்னை அனுப்பினார்கள். என் முயற்சிகள் பயன்தரவில்லை என்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். பெறோகிராடிலிருந்து லாடிவோஸ்டாக் சென்றேன். ஒரு நாள், சைபீரியா வழி சென்றபோது ரயில் ஒரு நிலையத்தில் நின்றது. வழக்கம்போல சிலர் இறங்கினர், சிலர் தேநீர் போட்டுக்கொள்ள நீரைத் தேடி சென்றனர், சிலர் சாப்பாடு வாங்கி வரவும், காலை நீட்டிக்கொள்ள சிலரும் இறங்கினர். கண் தெரியாத ஒரு வீரர் காத்திருப்பு இருக்கையில் அமர்ந்திருந்தான். அவனருகே அமர்ந்தனர் சில வீரர்கள். சிலர் பின்னே நின்றனர். இருபது முப்பது வீரர்கள் இருக்கலாம். அவர்களது உருப்புகள் கரைபடிந்து கிழிந்திருந்தன. பெரிய உருவம் கொண்டவனான கண் தெரியாத வீரன் மிகவும் சிறியவன். மெல்லிய தாடி அவன் இதுவரை மழித்திறாத தாடையில் மென்மையாகத் தெரிந்தது. பதினெட்டு வயது கூட நிரம்பியிருக்காது என நினைக்கிறேன். அகலமான சப்பை முகம். நீளமான மூக்கு மற்றும் நெற்றியில் அவனைக் குருடாக்கிய குண்டு விட்டுச்சென்ற பெரிய காயத்தடம். மூடிய கண்கள் சலனமற்ற பாவத்தைத் தந்திருந்தன. அவன் பாடத்தொடங்கினான். இனிமையான தடித்த குரல். அக்கார்டியன் வாசித்தபடி பாடினான். ரயில் காந்திருந்தபடியால் அவன் ஒவ்வொரு பாடலாகப் பாடிக்கொண்டிருந்தான். அவனது பாடல் வரிகள் எனக்குப் புரியாவிட்டாலும் அவனது பாடலில் தெரிந்த தனிமையும் பதனப்படாத தன்மையும் எனக்கு கைவிடப்பட்டவர்களின் ஓலமாகக் கேட்டது. தனிமையான பள்ளத்தாக்குகள், முடிவடையாத காடுகள், ரஷ்யாவின் அகலமான நதிகள், கிராமப்புரத்தின் கரடுமேடுகள், உழப்படும் நிலங்கள், சோளத்தின் பதியக்காலம், பெர்ச் மரக்கிளைகளில் புகுந்து வரும் காற்றோசை, பனிக்காலத்தின் நீள இரவுகள், கிராமங்களில் நடனமாடும் பெண்கள், அந்தியில் கலங்கிய ஓடைகளில் குளிக்கும் இளைஞர்கள் என உணர்ந்தேன். யுத்தத்தின் கொடூரம், யுத்த களங்களின் தனித்த இரவுகள், புழுதி படிந்த சாலையில் நெடிய நடை, யுத்தகளத்தின் அச்சுறுத்தல்களும், வெறுமையும், இறப்பும் என் நினைவில் உறைந்துவிட்டன. அது கொடுமையான அனுபவம். என்னை அசைத்துப்பார்த்த தருணம். பாடகனின் காலருகே இருந்த குல்லாவில் வீரர்கள் பணம் நிரப்பினர். அவர்கள் அனைவரையும் அதே உணர்வு தொற்றியிருக்கும். தாளயியலாத பரிவும், புரிபடாத பயமும் சேர்ந்த ஒரு உணர்ச்சி. ஏனென்றால் கண் தெரியாத வீரனின் முகத்தில் ஏதோ ஒன்று எங்களை அச்சுறுத்தியது. அவனது முகபாவத்தில் தெரிந்த உணர்ச்சியிலிருந்து அவன் தனிமைப்பட்டவனாக, சுகமான உலக வாழ்விலிருந்து அறுபட்ட ஆன்மா என்பதை உணர்வீர்கள். அவன் மனிதனைப் போலவே இல்லை. வீரர்கள் மெளனமாக தங்களை ஒப்புகொடுத்து நின்றிருந்தனர். கண் தெரியாத பயணியின் உரிமைக்காக ஒன்றாக நிற்பவர்கள் போலிருந்தது அவர்களது உடல்மொழி. அவர்களது முகங்களில் எல்லாவற்றையும் தூக்கிபோட்டுவிடும் கோபமும், எங்கள் முகங்களில் அளவிடமுடியாத இரக்கமும் தெரிந்தாலும், அவை எதுவும் நிர்கதியற்ற அந்த குருடனின் வலியைப் போக்கவியலாது எனும் நிலையை உணர்ந்திருந்தோம்.

Image Credit : Existential Ennui