(Ashenden சிறுகதை தொகுப்பில் சாமர்செட் மாம் எழுதிய ஓரு முன்னுரையை இங்கு மொழியாக்கம் செய்துள்ளேன். இதில் கதை என்றால் என்ன என வரும் விளக்கஙகள் நன்றாக இருப்பதால் இதைச் செய்திருக்கிறேன். வாசக நண்பர்கள் ஒரு முறை வாசித்துப் பார்க்கலாம்.)
யுத்த காலத்தில் என் உளவுத்துறை அனுபவத்தைக் கொண்டு இந்த புத்தகத்தை எழுதியிருந்தாலும் புனைவுக்காக சில நிகழ்வுகளை முன்னும் பின்னுமாக மாற்றி உள்ளேன். தகவல்கள் பலகீனமான கதைசொல்லி. அது கதையைத் தொடக்கத்துக்கு மிக முன்னாலிருந்து தொடங்கி, எங்கெங்கோ அலைந்து திரிந்தபின், தீர்க்க முடியாத சில சிக்கல்களை அந்தரங்கத்தில் தொங்கவிட்டு ஒற்றை வரித்தடமாக நீர்த்துபோய் முடிந்துவிடும். மிக சுவாரஸ்யமான நிகழ்வுக்கான பீடிகையோடு தொடங்கிவிட்டு சம்பந்தமற்ற ஏதோ ஒரு புள்ளிக்குத் தாவிவிடும். முடிவுக்குத் தேவையான உச்சகட்டங்களை அது உதாசீனப்படுத்துவிடுகிறது. இதுவே புனைவுக்கான சிறந்த மாதிரி எனச்சொல்லும் புதினாசிரியர்களின் பள்ளியும் உண்டு. நமது வாழ்க்கை எவ்விதமான திட்டங்களுக்குள்ளும் அடங்காமால் காட்டாறு போல நம்மை கொண்டு செல்கிறது எனும்போது புனைவு மட்டும் ஏன் அப்படி இருக்கக்கூடாது; வாழ்வை பிரதி செய்வதல்லவா அது? வாழ்வில் காரணக் காரிய தொடர்பற்று நடக்கும் சம்பவங்கள் போலப் புனைவும் இருக்கலாம். முடிவை நோக்கி செல்லும் எந்த பயணத்துக்கான சாத்தியக்கூறையும் அது மீறியபடி செல்லலாம். முடிவில் வரும் எதிர்பாரா திருப்பம் அல்லது திடுக்கிடலால் எழுத்தாளர்கள் சில சமயம் வாசகர்களை ஆச்சர்யப்படுத்துவது போல் வேற எதுவும் இவர்களை புண்படுத்தாது. அப்படி ஒரு சந்தர்பம் அவர்கள் எழுதும் கதையில் வந்தாலும் அதை சாமர்த்தியமாக விலக்கப்பார்ப்பார்கள். உங்களுக்கு ஒரு கதையை அவர்கள் தருவதில்லை. மாறாக நீங்களே ஒரு கதையை உற்பத்தி செய்துகொள்வதற்குத் தேவையான பொருட்களைத் தருகிறார்கள். சிலசமயம் குழப்படியான நிகழ்வு என நினைக்கும்படியான சம்பவத்தை நமக்குத் தந்துவிட்டு அதிலுள்ள முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள அழைப்பு விடுப்பார்கள். சில சமயங்களில் கதாபாத்திரத்தை மட்டும் தந்துவிட்டு விலகிவிடுவார்கள். சமையல் சாமான்களைத் தந்துவிட்டு சமைக்க எதிர்பார்ப்பார்கள். இது கதை எழுதுவதற்கான ஒரு வழிமுறை என்பதோடு பல நல்ல கதைகளும் இவ்வகையில் எழுதப்பட்டுள்ளன. செகாவ் இதில் கைதேர்ந்தவர். பெரிய கதையைவிட மிகச் சிறிய கதைக்கு இது இன்னும் சிறப்பாகப் பொருந்தும். உணர்வுநிலை பற்றிய விவரணை, சூழ்நிலை அல்லது சூழல் போன்றவை ஆறு பக்கங்களுக்கு நம் கவனத்தை ஈர்த்துவைக்கலாம். ஆனால் ஐம்பது பக்கக் கதை என்றால் இந்த விவரணைகளைத் தாங்குவதற்கு ஒரு முதுகெலும்பு அவசியம். அப்படிப்பட்ட ஒரு முதுகெலும்பு தான் கதை. கதைக்கென இருக்கும் சில பிரத்யேக குணாதிசயங்களிலிருந்து நாம் தப்ப முடியாது. கதைக்கென ஒரு தொடக்கம், மத்திமப்பகுதி மற்றும் முடிவு இருக்கும். தனக்குள் முழுமையாக அமைந்திருக்கும். தொடக்கத்தில் வரும் நிகழ்வுகளுக்கான காரணங்களை கணக்கில் கொள்ளாது அவற்றின் விளைவுகளால் நிகழும் பிற சந்தர்ப்பங்களை கணக்கில் கொண்டு முடிவு வரை செல்லும்போது வாசகர்களுக்கு ஒரு புள்ளிக்கு பின்னே மேலதிக சந்தர்ப்பங்கள் தேவைப்படாது போகும்படி திருப்தி உண்டாகும். அதாவது ஒரு கதை ஒரு புள்ளியில் தொடங்கியபின்னே ஒரு புள்ளியில் முடிவடைய வேண்டும். தேவையற்ற திசைகளில் விரிந்து செல்லாது, முடிவை நோக்கிய ஒரு திட்டவட்டமான பாதையில் வளைந்து செல்லவேண்டும். படம் வரைந்து காட்டவேண்டுமென்றால் ஒரு அரைவட்டப்பாதையை நீங்கள் காட்டாலாம். முடிவில் ஒரு திருப்பத்தையோ ஆச்சர்யமான திடுக்கிடும் சம்பவத்தையோ செய்வதில் தவறில்லை; அதைச் சரியாகச் செய்யும்போது. செகாவை போலி செய்யும்படி மோசமாக எழுதப்படும் திருப்பங்கள் மோசமானவையாக முடிந்துவிடும். கதையின் முழுமைக்குப் பங்குபெறும்படியான முடிவுகள் மிகச் சிறப்பான தர்க்க ஒழுங்குடன் இணைந்துகொள்ளும். உச்சகட்ட முடிவுகளில் தவறொன்றும் இல்லை. சொல்லப்போனால் அது வாசகர்களைத் திருப்தி செய்யும்படியான கோரிக்கையும் கூட. இயல்பான சம்பவத்தொடர்ச்சி மூலம் ஒழுங்காக இணையாத முடிவுளே தவறானவையாக மாறிவிடுகின்றன. உச்சகட்ட முடிவுகளைச் சேர்ப்பதென்பது நடைமுறை இயல்புக்கு மீறிய செயல்தான் என்றாலும் வாசகர்களை ஈர்த்து வசியப்படுத்துவதற்கு இன்றியமையாத ஒன்று.
வாழ்க்கையை புனைவு நகல் செய்கிறது என்பது கேள்விக்குட்படுத்தத் தேவைப்படாத வாதமல்ல. மற்றொன்றைப் போல இதுவும் ஒரு இலக்கியக் கோட்பாடாகும். சொல்லப்போனால், வாழ்க்கையை கச்சாப்பொருளாகப் பயன்படுத்தி புனைவு புது வடிவங்களை உருவாக்குகிறது எனும் இன்னொரு கோட்பாடும் சாத்தியமே. ஓவியம் தீட்டுவதிலிருந்து ஒரு ஒப்புமையை நாம் அடையமுடியும். பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலவெளி ஓவியர்களுக்கு இயற்கையை உள்ளது உள்ளபடி வரைவதில் அதிக ஈடுபாடு இருந்ததில்லை. அதை ஒரு அலங்கார ஆடம்பரம் என்றே அவர்கள் நினைத்தனர். ஒரு காட்சியை பார்வைக் கட்டமைப்பின் கண்ணோட்டத்தோடு அமைத்தனர். அதாவது, மரம் இருக்கும் எதிரில் சமன்செய்வதற்காக மேகத்தை வரைவார்கள். இருளும் வெளிச்சமும் சீராக உருவாக்கி கண்ணுக்கு ஒரு சமன்பாட்டை ஏற்படுத்துவார்கள். ஒரு நிலக்காட்சியை வரைய வேண்டும் என்பது அவர்கள் எண்ணமல்ல மாறாக கலைப்படைப்பை உருவாக்க வேண்டும் என்பதே அவர்கள் எண்ணுவது. வேண்டுமென்றே ஒரு வெளியை அங்கு நிகழ்த்திக்காட்டுகிறார்கள். பார்வையாளர்களின் யதார்த்தத்தேடலை மீறிவிடாமல் இயற்கைக்காட்சிகளை இடமாற்றித் தருகிறார்கள். உள்ளது உள்ளபடியே படம்பிடிப்பதை இம்பிரஷனிஸ்டுகளுக்காக விட்டு வைத்திருந்தனர். சூரியஒளியின் தீர்க்கம், நிழலின் வண்ணங்கள், காற்றின் ஒளியமைப்பு என இயற்கையின் உன்னத அழகை மட்டும் உருவாக்கிக்காட்டுவதற்கு அவர்கள் முயன்றனர். உண்மையை மட்டும் குறிக்கோளாகக் கொண்டனர். கையும் கண்ணும் மட்டும் கொண்டவர்களாக மாற ஓவியர்கள் விரும்பினர். புத்திகூர்மையை அவர்கள் வெறுத்தனர். அவர்களது ஓவியங்களை இன்று கிளாட்டின் ஓவியத்தோடு நிரையில் வைக்கும்போது எத்தனை கற்பனையற்ற சித்திரங்களாக அவை இருக்கின்றன என ஆச்சர்யமாக உள்ளது. கிளாடின் வழிமுறையும் சிறுகதை ஆசிரியர்களில் உச்சகட்டமானவராக கய் தெ மாப்பஸானின் வழிமுறையும் ஒன்றுதான். அது அற்புதமான ஒன்று என்பதால் பிறவற்றை விட மேலும் அதிக காலம் நீடிக்கும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. மத்தியவர்க்க ருஷ்யர்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே எப்படி இருந்தனர் என்பது பற்றிய அக்கறை குறைந்து வரும்போதும் மற்றும் செகாவின் கூற்றை விட அதில் வரும் மனிதர்களே அதிகம் கவர்கிறவர்களாக இருக்கும்போதும் இந்த வழிமுறை மேலும் உபயோகமாக இருக்கும். நான் சொல்லும் வழிமுறையில் வாழ்க்கையை நகல் செய்யும் முயற்சி இல்லை மாறாக வாழ்விலிருந்து தேர்ந்தெடுக்கும் சுவாரஸ்யமாவை, நாடகத்தனமானவை இருக்கும். அப்படித் தேர்ந்தெடுத்தவற்றை வாழ்வுக்கு நெருக்கமாக வாசகர்களை அந்நியப்படுத்திவிடாத மனதுக்கு நெருக்கமான காட்சிப்படுத்துதல் இருக்கும். தகவல்களிலிருந்து ஒரு நேரடியான அழகமைப்பு உருவாகி இருக்கும். முடிவில் வரும் படைப்பு என்பது எழுத்தாளரின் உணர்ச்சி மனநிலையின் பிரதிபலிப்பாகவும் இருக்கும். ஏனென்றால் ஒரு எல்லை வரை அது அவனே தான். வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டி, ஈர்த்து வைத்திருக்கும். அதில் வெற்றிபெற்றால் வாசகன் அதை உண்மை என ஏற்றுக்கொள்வான். அவனுடையதாகக்கொள்வான்.
இந்த புத்தகம் ஒரு புனைவு என என் வாசகர்களுக்கு நிறுவுவதற்காகவே நான் இதையெல்லாம் சொல்கிறேன். அதே சமயம் கடந்த சில வருடங்களாக புனைவு எனும் பெயரில் வந்த பல கதைகளை நான் அப்படி தைரியமாகச் சொல்ல மாட்டேன். அவை உண்மைக்கு நெருக்கமான நினைவுகள். உளவாளியின் வேலை மிகவும் சலிப்பூட்டக்கூடியது. மிக அன்றாடத்தனம் கொண்ட தேவையில்லாத வேலைகள். கச்சாப்பொருட்களாக அவை அளிப்பது பெரும்பாலும் தேவையில்லாத தகவல்கள்தான். தன்னால் முடிந்தளவு எழுத்தாளர் அவற்றை தங்குதடையின்றி, புனைவுச்சங்களுடன் இயல்பாகச் சொல்ல வேண்டும்.
1917 ஆம் ஆண்டு நான் ரஷ்யா சென்றேன். போல்ஷுவிக் போராட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்காகவும் ரஷ்யாவை உலக யுத்தத்திலேயே தொடர்ந்து ஈடுபட வைக்கவும் என்னை அனுப்பினார்கள். என் முயற்சிகள் பயன்தரவில்லை என்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். பெறோகிராடிலிருந்து லாடிவோஸ்டாக் சென்றேன். ஒரு நாள், சைபீரியா வழி சென்றபோது ரயில் ஒரு நிலையத்தில் நின்றது. வழக்கம்போல சிலர் இறங்கினர், சிலர் தேநீர் போட்டுக்கொள்ள நீரைத் தேடி சென்றனர், சிலர் சாப்பாடு வாங்கி வரவும், காலை நீட்டிக்கொள்ள சிலரும் இறங்கினர். கண் தெரியாத ஒரு வீரர் காத்திருப்பு இருக்கையில் அமர்ந்திருந்தான். அவனருகே அமர்ந்தனர் சில வீரர்கள். சிலர் பின்னே நின்றனர். இருபது முப்பது வீரர்கள் இருக்கலாம். அவர்களது உருப்புகள் கரைபடிந்து கிழிந்திருந்தன. பெரிய உருவம் கொண்டவனான கண் தெரியாத வீரன் மிகவும் சிறியவன். மெல்லிய தாடி அவன் இதுவரை மழித்திறாத தாடையில் மென்மையாகத் தெரிந்தது. பதினெட்டு வயது கூட நிரம்பியிருக்காது என நினைக்கிறேன். அகலமான சப்பை முகம். நீளமான மூக்கு மற்றும் நெற்றியில் அவனைக் குருடாக்கிய குண்டு விட்டுச்சென்ற பெரிய காயத்தடம். மூடிய கண்கள் சலனமற்ற பாவத்தைத் தந்திருந்தன. அவன் பாடத்தொடங்கினான். இனிமையான தடித்த குரல். அக்கார்டியன் வாசித்தபடி பாடினான். ரயில் காந்திருந்தபடியால் அவன் ஒவ்வொரு பாடலாகப் பாடிக்கொண்டிருந்தான். அவனது பாடல் வரிகள் எனக்குப் புரியாவிட்டாலும் அவனது பாடலில் தெரிந்த தனிமையும் பதனப்படாத தன்மையும் எனக்கு கைவிடப்பட்டவர்களின் ஓலமாகக் கேட்டது. தனிமையான பள்ளத்தாக்குகள், முடிவடையாத காடுகள், ரஷ்யாவின் அகலமான நதிகள், கிராமப்புரத்தின் கரடுமேடுகள், உழப்படும் நிலங்கள், சோளத்தின் பதியக்காலம், பெர்ச் மரக்கிளைகளில் புகுந்து வரும் காற்றோசை, பனிக்காலத்தின் நீள இரவுகள், கிராமங்களில் நடனமாடும் பெண்கள், அந்தியில் கலங்கிய ஓடைகளில் குளிக்கும் இளைஞர்கள் என உணர்ந்தேன். யுத்தத்தின் கொடூரம், யுத்த களங்களின் தனித்த இரவுகள், புழுதி படிந்த சாலையில் நெடிய நடை, யுத்தகளத்தின் அச்சுறுத்தல்களும், வெறுமையும், இறப்பும் என் நினைவில் உறைந்துவிட்டன. அது கொடுமையான அனுபவம். என்னை அசைத்துப்பார்த்த தருணம். பாடகனின் காலருகே இருந்த குல்லாவில் வீரர்கள் பணம் நிரப்பினர். அவர்கள் அனைவரையும் அதே உணர்வு தொற்றியிருக்கும். தாளயியலாத பரிவும், புரிபடாத பயமும் சேர்ந்த ஒரு உணர்ச்சி. ஏனென்றால் கண் தெரியாத வீரனின் முகத்தில் ஏதோ ஒன்று எங்களை அச்சுறுத்தியது. அவனது முகபாவத்தில் தெரிந்த உணர்ச்சியிலிருந்து அவன் தனிமைப்பட்டவனாக, சுகமான உலக வாழ்விலிருந்து அறுபட்ட ஆன்மா என்பதை உணர்வீர்கள். அவன் மனிதனைப் போலவே இல்லை. வீரர்கள் மெளனமாக தங்களை ஒப்புகொடுத்து நின்றிருந்தனர். கண் தெரியாத பயணியின் உரிமைக்காக ஒன்றாக நிற்பவர்கள் போலிருந்தது அவர்களது உடல்மொழி. அவர்களது முகங்களில் எல்லாவற்றையும் தூக்கிபோட்டுவிடும் கோபமும், எங்கள் முகங்களில் அளவிடமுடியாத இரக்கமும் தெரிந்தாலும், அவை எதுவும் நிர்கதியற்ற அந்த குருடனின் வலியைப் போக்கவியலாது எனும் நிலையை உணர்ந்திருந்தோம்.
Image Credit : Existential Ennui