கட்டுரை

ரிச்சர்ட் சிஸ்மாரின் (Richard Chizmar) ‘சேஸிங் த பூகிமேன்’ (Chasing the Boogeyman) – செமிகோலன்

ரிச்சர்ட் சிஸ்மாரின் (Richard Chizmar) Chasing the Boogeyman நூலில் நான்கு கொலைகள் நிகழ்கின்றன. ஆனால் இது ‘தொடர் கொலைகாரனை’ (serial killer) பற்றிய நூல் அல்ல. எண்பதுகளின் இறுதியில் தான் பிறந்து, வளர்ந்த சிறு நகரில் நடந்த இந்தக் கொலைகளைப் பற்றிய ஆவணப் பாணியில் ரிச்சர்ட் சொல்லப் போவதாக அவர் கூறுவதால், நேர்காணல்கள், குற்றம் நடந்த இடங்களின், பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் போன்ற வடிவ யுத்திகள் நூலில் உள்ளதால்  இது ‘I’ll Be Gone in the Dark’ போல் உண்மை குற்ற (True Crime) நூலும் அல்ல. மெட்டா-பிக்க்ஷனும் அல்ல. சிறு நகரப் பின்னணியில் நிகழும் எண்ணற்ற திகில்/குற்றப் புனைவு நாவல்களின் ஒன்றோ, அந்த நிலவியல், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வியல் விவரிக்கப் படுவதால் இது ‘பொது’ நாவலோ அல்ல. ரிச்சர்டின் பால்ய/இளமைக் காலத்தை பற்றி பேசுகிறது என்பதாலேயே இது ‘வெறும்’ நினைவுக் குறிப்பும் கூட அல்ல.

1988ஆம் ஆண்டின் கோடையில், இதழியல் பட்டப் படப்பை முடித்து சொந்த ஊரான எட்ஜ்வுட்டிற்கு ரிச்சர்ட் திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன், அவருடைய வீட்டிற்கு ஓரிரு தெருக்கள் தள்ளி ஒரு பதின் பருவப் பெண் கொல்லப்படுகிறாள். நெருங்கிய தொடர்பில்லையென்றாலும்,  கடையில், தெருவில் பார்த்தால் சிரித்து, ஓரிரு வார்த்தை பேசுவது மட்டுமின்றி, சிறு நகரத்தில் இருபது வருடங்கள் அருகருகே வசித்தால் உருவாகும் பரிச்சயம் அந்தப் பெண்ணின் குடும்பத்துடன் ரிச்சர்ட் மற்றும் அவர் பெற்றோருக்கு உள்ளது. அப்பெண்ணின் சகோதரன், ரிச்சர்டுடன் படித்தவன். துயர நிகழ்வுகள் எப்போதுமே அலைகழிப்பவை என்றாலும், அதனால் பாதிக்கப்பட்டவருடன் கொஞ்சமேனும் பரிச்சயம் இருந்தால் அதன் தாக்கம் இன்னும் அதிகம்.

இதழியல் படித்தவர் என்பதால் மட்டுமே இந்தக் கொடுங்கொலை ரிச்சர்ட்டை கவனத்தை ஈர்த்தது என்று சொல்ல முடியாது. ஏனெனில், ரிச்சர்ட்டின் லட்சியம், அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதென்றால்

That’s right, I’m talking about the bane of every real journalist’s existence—the hippy-dippy, Peter Pan world of Make Believe: fiction.

But wait, it’s even worse than that. I’m talking about genre fiction. Crime, mystery, suspense, and that black sheep of them all: horror.

சரி, திகில் புனைவுகள் வாசிப்பதில்/எழுதுவதில் அதி ஆர்வம் கொண்டவர் என்பதால் மட்டுமே இந்தக் குற்றத்தை பற்றிய செய்திகளை சேகரிக்கத் தொடங்குகிறார் என்று சொல்ல முடியுமா? பரிச்சயமான குடும்பத்தில் நேரும் துயரம், இதழியில் பயிற்சி, திகில் ஆர்வம், இத்தகைய நிகழ்வுகளால் ஈர்க்கப்படும் மனித இயல்பு இவை எல்லாமும் சேர்ந்து தான் அவருடைய – அடுத்த சில மாதங்களுக்கான – செயல்களை வடிவமைத்தன என ஆரம்பித்திலேயே புரிய வருகிறது.

இத்தகையை புனைவுகளின் இரு போது அம்சங்களை உணரலாம். ஒன்று, தொடர் கொலைகளைப் புரிபவன், தான் எண்ணியதை துல்லியமாக நிறைவேற்றுபவனாக, காவல்துறையினரை முட்டாள்கள் போல் எண்ண வைப்பவனாக, மற்றவர்கள் நெருங்க முடியாத அதி மானுடனாக, அவனைக் குறித்த சித்திரம் உருவாவது. இறுதியில் அவன் பிடிபட்டாலும், இத்தகைய கோணம் உருவாவது -ஆசிரியர் அப்படி யோசித்திருக்காவிட்டாலும் – தவிர்க்க இயலாததாகி விடுகிறது. அடுத்தது, அவனுக்கு பலியானவர்கள், பிறசேர்க்கையாக, அவனுடைய தீய மேதமையை வாசகன் உணர மட்டுமே உதவுபவர்களாக மட்டுமே தங்கி விடும் அபாயமும் உள்ளது.

இந்த இரு அம்சங்களையும் முற்றிலும் தவிர்த்து விடும் ரிச்சர்ட், பலியாகும் நான்கு பெண்களை தன் கதையாடலின் மையத்தில் வைக்கிறார். அந்தப் பெண்களின் இயல்புகளை, கனவுகளை விரிவாக பதிவு செய்கிறார். தன் நெருங்கிய தோழியுடன் ஒரே கல்லூரியில் கால்நடை மருத்தவப் படிப்பு படித்து, ஐந்து வருடங்கள் வேலை செய்த பின், சொந்த க்ளினிக் தொடங்கும் கனவுடன் ஒருத்தி, சிறு வருடங்களுக்கு முன் போதை பழக்கம், வீட்டை விட்டு ஓடுதல் என்றிருந்த தன் வாழ்க்கையை முயற்சி செய்து சரிபடுத்தி, கல்லூரியில் சேர்வதை எதிர்நோக்கியிருந்த மற்றொருத்தி. பலியானவர்கள் மட்டுமா? கணவனை இழந்தப் பின் தனியாக இரு பெண்களை வளர்க்கும் தாய், தன் மூத்த மகளை இழக்கும் போது அனுபவிக்கும் வலி. இவர்களனைவரின் கனவுகளை சிதைத்தவனை தன்னிச்சையாக கூட வியக்க முடியாது இல்லையா.

ஆம், இதிலும், அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க வைக்கும், பதற்றப்படச் செய்யும் நிகழ்வுகள், கணங்கள் உள்ளன. ஆனால் அவை ஒரு சிறு நகரின், அதில் வசிப்பவர்களின், ரிச்சர்ட்டின் உணர்வுகளாக உள்ளனவேயன்றி வாசகன் கொலைகாரனை கண்டுபிடிக்க தன் மனதில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஆடுபுலியாட்டமாக இல்லை.  

ஒரு நிகழ்வு. ஓரிரவு ரிச்சர்ட் வீட்டு கழிவுகளை, தெருவின் குப்பைக் கூளத்தில் போட வெளியே வருகிறார். அங்கு வைத்த பின் திரும்ப எத்தினிப்பவருக்கு தன்னை யாரோ கவனித்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. எந்த வாகனமும் செல்லாத, சன்னமான தெரு விளக்குகளின் ஒளி மட்டுமே உள்ள இருள், அதனூடே உற்றுப் பார்க்கப் படுவது. ரிச்சர்டால் திரும்ப முடியவில்லை, இப்போது இருளில் ஒளிந்து கொண்டிருப்பவன் நினைத்தால் அருகில் வந்து என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். இப்படி எவ்வளவு நேரம் அசைவற்று இருந்தார் ரிச்சர்ட்? சில நொடிகளாக இருக்கலாம் அல்லது பல நிமிடங்களாக இருக்கக் கூடும். தெருவை கடக்கும் வாகனத்தின் முகப்பு விளக்கொளி அவரை மீட்கிறது. வீட்டிற்குள் ஓடிச் செல்கிறார். எந்த உயர் திகில், குற்றப் புனைவிலும் காணக் கூடிய ‘இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும்’ கணம் இது. ஆனால் இதனூடே நான் உணர்வது ரிச்சர்டின் பயத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த எட்ஜ்வுட்டின் மனநிலையையும் தான்.

‘இது உங்க சொந்த அனுபவமா’, ‘இது நிஜமாக நடந்ததா’ போன்ற கேள்விகளை க்ரிஸ்டியோ அல்லது வேறு எந்த குற்றப் புனைவு/திகில் எழுத்தாளரோ எதிர்கொண்டிருக்க வாய்ப்பு குறைப்பு. ஆனால் இவை ரிச்சர்டை நோக்கி கேட்கப் படும் வாய்ப்புள்ளது. இதற்கு நூலின் வடிவம் சார்ந்த கட்டமைப்பு -நேர்காணல்கள், புகைப்படங்கள் – மட்டும் காரணமல்ல. அவருடைய நினைவோடை பாணியும் இந்த சந்தேகத்தை எழுப்பக் கூடும். ஒருவர் தன் கடந்த காலத்தை பற்றி, தான் வளர்ந்த நிலவியல், வசித்த மக்கள் பற்றி எழுதினால், ‘என்ன நடந்ததோ’ அதை எப்போது அப்படியே அவர் பிரதி எடுக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டியதோ, ‘நடந்ததை எழுதுதல்’ என்ற, நாம் உருவாக்கியிருக்கும்  அரக்கனை/Boogeymanஐ தேட வேண்டுமென்றோ கட்டாயமில்லை.  உண்மையில் புனைவில் எந்தளவுக்கு உண்மையுள்ளது என்பதை, எந்தளவிற்கு வாசகனை உள்நுழைய அனுமதித்துள்ளார் என்பதை எழுத்தாளர் மட்டுமே அறிவார். இந்த நூலிலும், ரிச்சர்டின் பால்யத்தின் சில பகுதிகளை – பகுதிகளாக அவர் முன்வைப்பதை – நான் அறிகிறோம், நூலின் காலகட்டமான 1988ன் பதிவுகளும் – அவருடைய சிறுவயது நகரத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள்- உள்ளன. இவை ‘நிஜத்தில்’ நடந்தவையா என்பது இங்கு அலசப்பட வேண்டியது அல்ல,   அந்த சில மாதங்களின் கொடுநிகழ்வுகளுக்கு, மனித முகத்தை அளிக்கின்றன என்பது தான் முக்கியம். கடந்த கால நிஜம், கடந்த கால புனைவு இரண்டிற்கும் இடையிலான இலக்கிய ஊசலாட்டமாக, அது இயங்கக் கூடிய, வெளிப்படக் கூடிய விதங்களைப் பற்றிய சிந்தனைகளாக இந்த நினைவுக் குறிப்பு யுத்தியை பார்க்கலாம்.

பலியாகும் பெண்கள், அவர்களின் குடும்பம் தவிர நாம் சந்திக்கும் முக்கியமான மனித முகங்கள்,நிருபராக வேலை பார்க்கும் ரிச்சர்டின் தோழி கார்லி, தொடர் கொலைகளை விசாரிக்க அனுப்பப்படும் காவல்துறை அதிகாரி ஹார்ப்பர், ரிச்சர்டின் பெற்றோர் ஆகியோர்.

கொலைகளை தடுக்க முடியாத இயலாமை, அது உருவாக்ககூடிய உளைச்சல், அதன் நீட்சியான மனச்சோர்வை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விசாரணை செய்து வந்த, இந்த நிகழ்வுகள் நின்று பல்லாண்டுகள் ஆன பின்பும், ஓய்வு பெரும் வரை அதை மனதிலிருந்து நீக்க முடியாத ஹார்ப்பர் ஒரு புறமென்றால், ‘கறுப்பின அதிகாரி தலைமையில் விசாரணை, மூன்று வெள்ளையினப் பெண்கள் கொலை, வேறென்ன எதிர்பார்க்க முடியும்’ என்று ஹார்ப்பரின் நிறத்தை வைத்து அவருடைய திறமையை, நேர்மையை முடிவு செய்யும் வெள்ளையின நகரவாசியொருவன் மற்றொரு புறம். எட்ஜ்வுட்டின் மற்றொரு முகத்தை காட்டும் நிகழ்வு.

கார்லி, ரிச்சர்ட் இருவரும்  கொலைகள் குறித்து தகவல்கள் திரட்டி, அதன் வழியாக ஏதேனும் கண்டறிய முடியுமா என்று முயற்சிக்கிறார்கள். ஆனால், காவல்துறை கோட்டை விட, தொழில்முறையில்லாத துப்பறியும் ஆசாமிகள் உண்மையை பிடிப்பது போல் எதுவும் நடப்பதில்லை. காவல்துறை அறியாத ஏதேனும் தடயம் இவர்களிடம் கிடைத்ததா என்று கூட உறுதியாக கூற முடியாது. ரிச்சர்ட் வீட்டிற்கு அடிக்கடி தொலைபேசி அழைப்பு விடுத்து, எதுவும் பேசாமல், பலமாக மூச்சை மட்டும் விட்டு வைத்து விடுபவன் தான் கொலைகாரனா அல்லது ரிச்சர்டின் ஆர்வத்தை அறிந்து அவனை பயமுறுத்த, கிண்டல் செய்ய விரும்பும் ஏதேனும் ஆசாமியா. கார்லி வீட்டின் வாசலில் சாத்தானின் குறியீடான 666ஐ எழுதி வைத்தவன் யார்? இவர்களுடைய இணை விசாரணையின் பலன்/பலனின்மை, ரிச்சர்டின் அதீத ஆர்வம் வாசகனுக்குள் எழுப்பும் கேள்விகள் – துயர நிகழ்வை தனதாக்கிக் கொள்ளும் சுயநல விழைவோ? – நூலின் கதைசொல்லலுக்கு இன்னும் நம்பகத்தன்மையை அளிக்கிறது.

இதழியல் படித்த மகனின் ‘எழுத்தாளர்’ லட்சியத்தை சிறுமைப்படுத்தாத, அவன் இந்தக் கொலைகள் மீது அதீத ஆர்வம் கட்டுவது அச்சுறித்தனாலும், அதை தடை செய்ய முயற்சிக்காத ரிச்சர்டின் பெற்றோர்

குற்றவாளி பல்லாண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்படுகிறான். ஆனால் அது, மகளை இழந்தவர்களின் குடும்பத்திற்கும், ரிச்சர்டிற்கும், ஏதேனும் வகையில் 1988-89ஆம் ஆண்டுகளை முடிவுக்கு கொண்டு வரும் (closure) என்று கூற முடியாது. அவர்களுக்கும், வாசகனுக்கும் தெரிய வருவது ‘தீமையின் அற்பத்தன்மையை’ (banality of evil) தான் நினைவுறுத்துகிறது. கூடவே இந்த அற்பத்தன்மை, அழியாதது, வேறு வேறு உருவத்தில்  எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற அயற்சியையும்.

பல ழானர் எழுத்தின் கூறுகளை கொண்டிருந்தாலும், Chasing the Boogeyman முற்றிலும் தனித்தன்மையுடைய ஆக்கம். நல்லெழுத்து, ழானர் எல்லைகளை கடந்து தனக்கான இருப்பை உருவாக்கி, தனக்கான இடத்தை நிறுவிக் கொள்ளும் என்பதை இந்த நூலின் மூலம் மீண்டும் உறுதி செய்கிறார் ரிச்சர்ட்.

“நான் இந்தப் பரிசை அதற்கு எதிராகவே திருப்ப வேண்டும்” – புக்கர் புனைவிலக்கிய பரிசு வென்ற ஜான் பெர்கரின் ஏற்புரை, 23, நவம்பர், 1972.

எனக்கு இந்தப் பரிசு அளித்துள்ள நீங்கள், இது எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்பதை சற்று விரிவாக அறிந்து கொள்ள விரும்பலாம்.

பரிசுகளில் நிலவும் போட்டிச் சூழல் அசூயை அளிக்கும் ஒன்று. இந்தப் பரிசு பொறுத்தவரை, பரிசு பெறுபவர்களின் குறும்பட்டியல், வலிந்து விளம்பரம் செய்யப்பட்ட சஸ்பென்ஸ், சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் குறித்த குதிரைப் பந்தய ஊகங்கள், வெற்றி பெற்றவர்கள் தோற்றுப் போனவர்கள் என்று பிரமாதப்படுத்தப்படுவது, இவை போலியானவை, இலக்கியச் சூழலுக்கு பொருந்தாதவை.

இருந்தாலும்கூட பரிசுகள் ஒரு தூண்டுதலாய் செயல்படுகின்றன- எழுத்தாளர்களுக்கு என்றல்ல, பதிப்பாளர்கள், வாசகர்கள், புத்தக வியாபாரிகள். எனவே, ஒரு பரிசின் அடிப்படை கலாச்சார மதிப்பீடு என்பது அது எதன் தூண்டுதலாய் இயங்குகிறது என்பதைச் சார்ந்தது. சந்தைக்கும் சராசரி ஒருமித்த கருத்துக்கும் இணங்கிப் போதல்; அல்லது, வாசகர் மற்றும் எழுத்தாளர் தரப்பில் கற்பனையின் சுதந்திரத்துக்கு இடமளித்தல். பரிசு கருத்து இணக்கத்தை மட்டுமே தூண்டுகிறது என்றால் எது வெற்றி பெறும் என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதோ அதற்கான உத்திரவாதமாய் மட்டுமே செயல்படுகிறது. வெற்றிக்கதையின் வேறு எந்த அத்தியாயத்துக்கும் மாறுபட்டது அல்ல இது. கற்பனைச் சுதந்திரத்தைத் தூண்டுகிறது என்றால் மாற்றுக்களைத் தேடும் மனத்திட்பத்தை ஊக்குவிக்கிறது. அல்லது, மிக எளிமையாய்ச் சொல்வதானால், மனிதர்களை கேள்வி கேட்க ஊக்குவிக்கிறது.

நாவல் ஏன் அவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்றால், வேறு எந்த இலக்கிய வடிவமும் எழுப்ப முடியாத கேள்விகளை நாவல் கேட்கிறது: தனி மனிதன் தன் விதியை தீர்மானித்துக் கொள்வது பற்றிய கேள்விகள்; தன்னுடையது உட்பட வாழ்வில் அடையக்கூடிய பயன்கள் பற்றிய கேள்விகள். இந்தக் கேள்விகளை அது அந்தரங்கமான முறையில் எழுப்புகிறது. நாவலாசிரியரின் குரல் அந்தரங்கக் குரல் போல் இயங்குகிறது.

இதை நான் சொல்வது ஒரு வகையில் பொருத்தமற்றதாகத் தோன்றலாம் எனினும், இந்த ஆண்டின் தேர்வுக்குழு இவ்விஷயத்தில் சுதந்திரமாகவும் பொறுப்புடனும் நடந்து கொண்டமைக்கு வணங்கவும் நன்றி கூறவும் விரும்புகிறேன். இக்குழுவினர் தேர்ந்தெடுத்த குறும்பட்டியலில் உள்ள நான்கு நூல்களுமே நான் பேசும் இணக்கமற்ற கற்பனையினை வெளிப்படுத்துகின்றன. என் புத்தகத்துக்கு பரிசு கொடுத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது- காரணம், அது ஒரு எதிர்வினை நிகழந்திருப்பதைக் குறிக்கிறது, பிற எழுத்தாளர்களின் எதிர்வினை.

‘ஜி’ எழுத எனக்கு ஐந்து ஆண்டுகள் ஆயின. அதன் பின் என் வாழ்வின் அடுத்த ஐந்து ஆண்டுகள் குறித்து திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். ஐரோப்பாவின் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தகவல் சேகரிக்கத் துவங்கியிருக்கிறேன். நூலின் இறுதி வடிவம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஒரு நாவலாக இருக்கலாம். எந்த வகைமைக்கும் உட்படாத புத்தகமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது தெரியும்: ஐரோப்பாவில் பதினொரு மில்லியன் புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் குரல்கள், அவர்களுடைய குடும்பமாகிய, உடனில்லாத இந்தத் தொழிலாளர்களின் கூலியை நம்பி வாழும், நாற்பது மில்லியனுக்கும் மேற்பட்டவர்களின் குரல்களில் சில, இந்த நூலின் பக்கங்களுக்கு பின்னிருந்தும் பக்கங்களிலும் பேச வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் தங்கள் இடங்களையும் கலாச்சாரங்களையும் விட்டு வெளியேறி, ஐரோப்பாவின் தொழில்மயமாகிவிட்ட பிரதேசங்களில் மிகக் குறைந்த ஊதியத்துக்கு மிக மோசமான வேலைகளைச் செய்கிறார்கள், அங்கு இவர்கள் தேவைக்கேற்ப பயன்படும் தொழிலாளர் தொகையாகவும் விளங்குகிறார்கள். இந்த உலகை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள்? தங்களைக் குறித்து என்ன எண்ணம் கொண்டிருக்கிறார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? தாம் சுரண்டப்படுவதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?

இந்தப் பணி நிமித்தமாக பல இடங்களுக்குச் சென்று தங்கியிருப்பது அவசியப்படுகிறது. துருக்கிய மொழி பேசும் நண்பர்களை, அல்லது போர்ச்சுகீசிய நண்பர்களை அல்லது கிரேக்கர்களை, சில சமயம் அழைத்துச் செல்ல வேண்டியிருக்கலாம். கிராம மருத்துவர் பற்றிய நூல் எழுதும்போது என்னுடன் இணைந்து பணியாற்றிய புகைப்பட நிபுணர், ழான் மோருடன் நான் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன். நாங்கள் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்பதற்கேற்பவே வாழ்ந்து, மிகக் குறைவான கட்டணத்தில் பயணம் செய்தாலும்கூட இந்த நான்காண்டு பணி முடிக்க கிட்டத்தட்ட பத்தாயிரம் பவுண்டுகள் ஆகலாம். இந்தப் பணத்துக்கு எங்கே போவது என்பது எனக்குப் புரியாமல் இருந்தது. என்னிடம் எதுவும் இல்லை. இந்த புக்கர் பரிசு ஒரு துவக்கத்தை சாத்தியப்படுத்தியுள்ளது.

ஆனால் இந்தப் பரிசின் ஐந்தாயிரம் பவுண்டுகள் எப்படிப்பட்ட பொருளாதாரச் செயல்பாடுகளில் ஈட்டப்பட்டன என்பதைக் கண்டறியும் நோக்கத்தில் மிக நுட்பமான தொடர்புப் பின்னல்களைத் தேடிச் செல்ல நாம் நாவலாசிரியராக இருக்க வேண்டியதில்லை. கரீபியன் பகுதியில் புக்கர் மக்கானல் நூற்று முப்பது ஆண்டுகளுக்கும் மேல் பரவலான வர்த்தக உறவுகள் கொண்ட அமைப்பு. இது மற்றும் இது போன்ற சுரண்டல்களின் நேரடி விளைவாகவே கரீபியனின் நவீன வறுமை தோன்றியுள்ளது. இந்த கரீபிய ஏழ்மையின் பின்விளைவுகளில் ஒன்றாகவே நூறாயிரங்களில் மேற்கிந்தியர்கள் பிரிட்டன் நோக்கி புலம் பெயர்ந்து வரும் கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய என் புத்தகம், அவர்கள், அல்லது அவர்களின் உறவினர்கள் மற்றும் மூதாதையர்களிடமிருந்து நேரடியாக ஈட்டப்பட்ட லாபத்தின் நிதியால் எழுதப்படும்.

இதைக் காட்டிலும் பெரிய ஒரு தொடர்புண்டு. தொழில் புரட்சி, அதைத் தொடர்ந்த கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல், அதனால் உருவான நவீன ஐரோப்பியா துவக்கத்தில் அடிமை வர்த்தகத்தின் லாபத்தை முதலாய்க் கொண்டது. ஐரோப்பாவுக்கும் பிற உலகுக்கும், கருப்புக்கும் வெள்ளைக்கும் உள்ள உறவின் இந்த அடிப்படை இயல்பு இன்னும் மாறவில்லை. ‘ஜி’ நாவலில் சங்கிலி கொண்டு பிணைக்கப்பட்ட நான்கு மூர்களின் சிலை நூலின் மிக முக்கியமான ஒற்றைச் சித்திரம். இதனால்தான் நான் இந்தப் பரிசை அதற்கு எதிராகவே திருப்ப வேண்டும். இதைக் குறிப்பிட்ட ஒரு வகையில் பகிர்ந்வதைக் கொண்டு இதைச் செய்வதாக இருக்கிறேன். நான் கொடுக்கும் பாதி, எடுத்துக் கொள்ளும் பாதியின் தன்மையை மாற்றும்.

முதலில் என் நிலைப்பாட்டின் தர்க்கத்தை தெளிவாகவே சொல்கிறேன். இது குற்றவுணர்ச்சி, அல்லது, மனசாட்சியின் உறுத்தல் தொடர்புடைய கேள்வியல்ல. இது நிச்சயம் பரோபகாரமுமல்ல. முதலாகவும் முதன்மையாகவும் அரசியல் விஷயம் என்று கூட சொல்ல முடியாது. ஒரு எழுத்தாளனாய் நான் தொடர்ந்து வளர்வது பற்றிய கேள்வி இது: எனக்கும் என்னை உருவாக்கிய கலாச்சாரத்துக்கும் இடையில் நிலவும் உறவு எப்படிப்பட்டது என்பதே கேள்வி.

அடிமை வர்த்தகம் துவங்குவதற்கு முன், ஐரோப்பியர்கள் தம் மனிதத்தன்மையை இழப்பதற்கு முன், அவர்கள் தம் வன்முறையில் தம்மையே பிணைத்துக் கொள்வதற்கு முன், கறுப்பும் வெளுப்பும் சமமானவர்களாய் வாழும் சாத்தியக்கூற்றின் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நெருங்கிய கணமொன்று இருந்திருக்க வேண்டும். அக்கணம் கடந்து விட்டது. அதன்பின் எப்போதும் உலகம் அடிமைகளாகும் சாத்தியம் கொண்டவர்களுக்கும் ஆண்டான்களாகும் சாத்தியம் கொண்டவர்களுக்கும் இடையில் பிளவுபட்டது. ஐரோப்பியன் இந்த மனநிலையை தனது சமூகத்துக்கும் கொண்டு சென்றான். இது அவன் அனைத்தையும் காணும் பார்வையின் ஒரு கூறானது.

தனிமனிதனுக்கும் வரலாற்றுப் போக்குக்கும் இடையில் நிலவும் ஊடாட்டமே நாவலாசிரியனின் அக்கறை. நம் காலத்தின் வரலாற்று கட்டாயம் தெளிவடையத் துவங்கி விட்டது. ஒடுக்கியவர்களால் தம் உள்ளத்தினுள் எழுப்பப்பட்ட மௌனச் சுவற்றை உடைத்துக் கொண்டு ஒடுக்கப்பட்டவர்கள் தம்மை வெளிப்படுத்துகிறார்கள். சுரண்டலுக்கும் நவகாலனியத்துக்கும் எதிரான தம் போராட்டத்தில்- ஒன்றுபட்ட போராட்டத்தின் காரணமாகவும் அதன் மூலமாகவும் மட்டுமே-, அடிமையும் ஆண்டானும் ஒருவரையொருவர் சமத்துவச் சாத்தியத்தின் திகைப்பும் நம்பிக்கையும் கூடியவர்களாய் நெருங்கி வர முடியும்.

எனவேதான் கரீபியனிலிருந்தும் கரீபியனிலும் தாம் சுரண்டப்படுவதற்கு எதிராக போராடி வரும் மேற்கிந்தியர்களுடன் நான் இப்பரிசை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். கரீபியனில் புக்கர்களும் பிற கம்பெனிகளும் உருவாக்கியவற்றின் எலும்புகளிலிருந்து எழுந்த அமைப்புதான் பிளாக் பாந்தர் இயக்கம்: இப்பரிசை நான் கருஞ்சிறுத்தை அமைப்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். காரணம், அவர்களே கறுப்பர்களாகவும் உழைப்பாளர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் மேலும் சுரண்டப்படுவதற்கு எதிராக போராடி வருகிறார்கள். புக்கர் மக்கானலின் செல்வத்தின் தோற்றுகையான கயானாவிலும் ட்ரினிடாடிலும் கரீபியன் நெடுகிலும் போராடி வருபவர்களுடன் இவர்கள் கறுமக்கள் தகவல் மையம் வழியே தொடர்பு வைத்திருக்கிறார்கள்: இப்படிப்பட்ட தொழிலாதாரங்கள் அனைத்தின் செல்வத்தையும் நாட்டுடமை ஆக்குவதே இப்போராட்டத்தின் நோக்கம்.

இது ஒரு இலக்கிய பரிசு என்பதைத் தவிர்த்து ஒரு கணம் சிந்தித்தால், இந்தப் பரிசின் தொகை மிகச் சொற்பம் என்பது என்னைப் போலவே உங்களுக்கும் தெரியும். ஐரோப்பாவின் குடியேற்றத் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வுக்கு பணம் மிக அவசியமாக இருக்கிறது. கருஞ்சிறுத்தைகளுக்கும் தம் செய்தித்தாள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால், பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்வது எம் இருவரின் நோக்கமும் ஒன்றே என்பதைக் குறிக்கிறது. அந்த ஒரு விஷயத்தை இனங்காண்பதால் பல விஷயங்கள் தெளிவடைகின்றன. முடிவில்- துவக்கத்திலும்தான்- பணத்தை விட தெளிவே முக்கியத்துவம் வாய்ந்தது.

நன்றி : Verso 

கலைஞர்கள் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும் – இவையே இறுதி நாட்கள் என்பது போல் நாம் எழுத வேண்டும் – பென் ஓக்ரி

 

உலக நிலவரத்தையும் அதை ஏற்க மறுப்பதன் ஆழத்தையும் எதிர்கொள்கையில், நமக்கு தொடர்ந்து கிட்டும் தரவுகளை எதிர்கொள்கையில், உயர்தளத்தில் களிப்புக் கொண்டாட்டங்கள் மேலும் மேலும் ஓங்கி ஒலிக்கையில் பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கப்பலில் இருக்கும் உணர்வை எதிர்கொள்கையில், ‘இருத்தல் சார்ந்த படைப்பூக்கம்’ என்று நான் அழைக்கும் வகைப்பட்ட எழுத்து முறைமையையும் பார்வையையும் வளர்த்துக் கொள்ளும் தேவையை உணர்கிறேன். காலத்தின் முடிவுக்குத் தக்க படைப்பூக்கம் இது.

காலத்தின் முடிவு நெருங்குவதை உணரும் ஆற்றல் ஒரு சிலருக்கே அளிக்கப்படுகிறது. அட்லாண்டிஸ்சில் வாழ்ந்தவர்களில் சிலர் அதை உணர்ந்திருக்கலாம். பொம்பெய்யின் சாதுக்கள், அத்தகையவர் அங்கிருந்திருந்தால், அதை முன்கூட்டியே அறிந்திருக்கலாம். கடல் வழி படையெடுத்து வந்தவர்களால் சிதைக்கப்படவிருந்த சமூகங்களுக்கு உரிய நாகரீகங்கள் ஒரு வேளை இந்த உணர்வுக்கு ஆளாகி இருந்திருக்கலாம். ஆனால் அழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற தரவுகள் அறியப்பெற்றவர்கள், ஒவ்வொரு நாளும் அது குறித்த விபரங்கள் அருவியாய் வீழக் கண்டும் எல்லாம் எப்போதும் போல் இருப்பது போல் வாழ்ந்தவர்கள் யாரும் இருந்ததாய் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

ஆல்பெர் காமு, இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் எழுதிக் கொண்டிருக்கும்போது, தன் காலத்துக்குரிய அதிதீவிர உண்மைகளை அளிக்கக்கூடிய புதிய தத்துவத்தின் தேவையை உணர்ந்தார். அங்குதான் அபத்த இலக்கியம் பிறந்தது. அதிதீவிர இடர்ப்பாடுகளின் பிடியில் தத்தளித்த உலகில்தான் இருத்தலியலும் பிறந்தது. ஆனால் நாம் இதுவரை எதிர்கொண்ட இடர்ப்பாடுகளில் மிகப் பெரியதன் விளிம்பில் இதோ நாம் நிற்கிறோம். இக்காலத்துக்குரிய, மானுட வரலாற்றின் இறுதிக்கு அருகாமையில் நிற்கும் இக்கணத்துக்குரிய, புதிய தத்துவம் நமக்குத் தேவைப்படுகிறது,

இந்த உணர்விலிருந்தே நான் இருத்தல் சார்ந்த படைப்பூக்கத்தை முன்வைக்க விரும்புகிறேன். அதை எவ்வாறு வரையறுத்துக் கொள்கிறேன்? எதையும் வீணாக்காத படைப்பூக்கம் அது. ஓர் எழுத்தாளனாய் நான் எழுதும் ஒவ்வொன்றும் மானுட இனமென நாம் வந்து நிற்கும் பேராபத்து நிலை குறித்து நம் கவனத்தை ஈர்க்கும் உடனடி நோக்கம் கொண்டதாய் இருக்க வேண்டும் என்று இது பொருள்படுகிறது. அலங்காரங்கள் இல்லாத எழுத்து என்பது இதன் அர்த்தம். இது உண்மை மட்டுமே பேச வேண்டும். இந்த உண்மை அழகாகவும் இருக்க வேண்டும். இது மிகவும் சிக்கனமான எழுத்தைக் கோருகிறது. நான் செய்வதெல்லாம் ஒற்றை நோக்கம் கொண்டதாய் இருக்க வேண்டும் என்றாகிறது.

இவையே நான் எழுதும் கடைசி விஷயங்கள் என்பது போல் நான் எழுத வேண்டும் என்றும் பொருள்படுகிறது, நம்மில் யார் எழுதக்கூடியவற்றிலும் இறுதிச் சொற்கள் இவை. மானுடக் காதையின் இறுதி நாட்களில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்றால், நீங்கள் என்ன எழுதுவீர்கள்? எப்படி எழுதுவீர்கள்? உங்கள் அழகியல் எதுவாக இருக்கும்? தேவைக்கு மேல் சொற்களைப் பயன்படுத்துவீர்களா? கவிதையின் உண்மை வடிவம் எதுவாக இருக்கும்? நகைச்சுவையின் கதி என்ன? நம்மால் சிரிக்க முடியுமா, இறுதி நாட்கள் வந்துவிட்டன என்ற உணர்வுடன்?

எல்லாம் முடிந்து விட்டது என்று கற்பனை செய்து பார்க்கக் கூடியவர்களாய் நாம் இருக்க வேண்டும் என்று சில சமயம் நினைத்துப் பார்க்கிறேன். நாம் எதைக் கற்பனை செய்கிறோமோ, அதைக் கடந்து செல்வதையும் நாம் கற்பனை செய்ய முடியும். மானுடம் தன் முடிவை நினைத்துப் பார்க்க இயலாததாய் இருப்பதே என் கவலைகளில் மிகப் பெரியது. சாதாரண, நல்லெண்ணம் கொண்ட குடிமக்கள் பருவ மாற்றத்தின் நிதர்சனங்களை எதிர்கொள்ள மறுப்பதை வேறு எப்படி விளக்க முடியும்? நாம் எதிர்கொள்ள மாட்டோமென்றால், மாற்ற மாட்டோம். நாம் மாற்ற மாட்டோமென்றால், தடுத்து நிறுத்தக்கூடிய விஷயங்களை செய்யத் துவங்க மாட்டோம். ஆக, நாம் எதிர்கொள்ள மறுக்கும் விஷயங்களே நாம் என்ன நடக்கக்கூடாது என்று நினைக்கிறோமோ அது நடப்பதை உறுதி செய்யும்.

நாம் ஒரு புதிய கலை கண்டாக வேண்டும், நாம் வாழும் உலகம் பிழைக்க வேண்டுமென்றால் அதற்குத் தேவையான மாற்றங்கள் செய்வதைத் தடுக்கும் அக்கறையின்மை மற்றும் மறுதலிப்பை துளைத்துச் செல்லக்கூடிய புதிய உளவியல் காண வேண்டும். நம் மீது கவியும் பேராபத்து குறித்தும் அது விஷயமாக நாம் இப்போதும் ஏதாவது செய்ய முடியும் என்பதையும் உணர்த்தும் புதிய கலை நமக்கு தேவைப்படுகிறது.

நாம் எதை மிகவும் அஞ்சுகிறோமோ அதைக் கற்பனை செய்து பார்க்கும் ஆற்றல் ஒரு திறன். அச்சங்களைக் கடந்து செல்ல இயற்கை நமக்கு அளித்துள்ள பரிணாம வளர்ச்சிக் கருவி அது. மிக மோசமான உலகங்களைக் கற்பனை செய்து பார்ப்பது அவற்றை உண்மையாக்கி விடும் என்ற நினைப்பு எனக்கில்லை. மிக மோசமான நிலையை நினைத்துப் பார்ப்பது அப்படியொன்று நிகழாது தடுக்கும் கூறுகளில் ஒன்றாக இருக்கக்கூடும். பிறழ் உலகங்கள் மற்றும் பொன்னுலகங்களின் பயன் அதுவே: ஒன்று நாம் போகக்கூடாத இடத்தின் மெய்த் தோற்றம் அளிக்கிறது, மற்றது சாத்தியமாகக் ஒரு எதிர்காலத்தை நமக்காக கற்பனை செய்து பார்க்கிறது. ஏழ்மை குறித்த அச்சத்தால் பலர் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள். மரணம் குறித்த அச்சம் பலரின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றியிருக்கிறது, தாம் எப்படி வாழ்கிறோம் என்பது குறித்து அறிவோடு நடந்து கொள்ளச் செய்திருக்கிறது.

நம்பிக்கைக்கு ஒரு காலமுண்டு, நிதர்சனத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஒரு காலமுண்டு. ஆனால் நம்பிக்கைக்கும் இயல்புவாதத்துக்கும் அப்பாற்பட்ட ஒன்றே இப்போது வேண்டியது. மானுட பிரக்ஞையிலும் நம் வாழ்வு முறையிலும் மிகப் பெரிய நகர்வை சாத்தியப்படுத்துவதற்கு நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டிய காலம் இது. பரிணாம வளர்ச்சியில் பிரக்ஞைப்பூர்வமாய் ஒரு தாவலை நிகழ்த்த நாம் சங்கல்பம் செய்து கொண்டாக வேண்டும். நாம் இதுவரை இருந்த மனிதர்களாய் இனி இருக்க முடியாது: வீண் செய்பவர்கள், முன்யோசனை இல்லாதவர்கள், சுயநலமிகள், அழிப்பவர்கள். நாம் இதுவரை இல்லாத அளவு படைப்பூக்கம் கொண்டவர்களாய் இருக்க வேண்டிய வேளை இது, மிகவும் தொலை நோக்கு பார்வை கொண்டவர்களாய், மிகவும் யதார்த்தமானவர்களாய், மிகவும் விழிப்பு நிலையில், தன்னலமற்றவர்களாய் இருக்க வேண்டிய வேளை இது. இதுவரை இவ்வளவு பெரிய இழப்பை எதிர்கொண்டதில்லை, இனி இது போன்ற ஒரு இழப்பை எதிர்கொள்ளப் போவதில்லை.

இவ்வுலகு சார்ந்து ஒரு தனி வகை நேசம் தேவைப்படுகிறது. இதோ இழக்கப் போகிறோம் என்பதை அறிந்த காரணத்தால் உயிரின் நுண்மதிப்பை அறிய வந்தவர்களின் நேசம் அது. உலகங்களில் மிக அழகானதும் அபூர்வமானதுமான இவ்வுலகு, அண்டம் எங்கிலும் ஓர் அதிசயம், ஆன்மாக்களின் வளர்ச்சிக்குரிய அகம், அண்ட வெளியின் வளமைகளில் ஒரு சிறு சுவர்க்கம், இங்குதான் நாம் வாழ்ந்து வளர்ந்து மகிழ்ச்சி காண வேண்டும் என்று அளிக்கப்பட்ட இவ்வுலகை இழக்கும் நிலையின் விளிம்புக்கு வந்து விட்டோம், இந்த உலகை நாம் ஒவ்வொரு நாளும் ஆகாயத்தில் சுழலும் வறண்ட கல்லாக்கிக் கொண்டிருக்கிறோம்.

எனவே ஒரு புதிய இருத்தலியல் தேவைப்படுகிறது. எதிர்மறைத்தன்மை கொண்டதும் துவளாது தாளும் தன்மை கொண்டதுமான காமு மற்றும் இழான் பவுல் சார்த்தரின் இருத்தலியல் அல்ல, தீரமும் தரிசனத்தன்மையும் நிறைந்த இருத்தலியல் இது. இங்கு களைஞர்களாய் நம் நாம் வாழ்வை வேறொரு சமூகத்தை உருவாக்கும் கனவுக்கு அர்ப்பணித்துக் கொள்கிறோம். நாம் வலுவான கனவுகள் கொண்டவர்களாய் இருக்க வேண்டும். சிந்திக்க முடியாத கேள்விகள் எழுப்ப வேண்டும். நாம் ஏன் இப்படி எல்லாம் தின்று அழிக்கும் உயிரினமாய் இருக்கிறோம், மிகையான அளவு போட்டி போடுகிறோம், பிறவற்றை வெற்றி காணும் உந்துதலால் செலுத்தப்படுகிறோம், படிநிலைகளை அமைத்துக் கொள்கிறோம், என்ற கேள்விகளின் வேர்களுக்குச் செல்ல வேண்டும்.

பணம், அதிகாரம், பசி, இவற்றைக் குறித்து கேள்விகள் எழுப்ப வேண்டும். அடிப்படையில் எல்லாருக்கும் தேவையான எல்லாம் போதுமான அளவு இருக்கிறது என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். இப்புவி நாம் வாழ்வதற்கான எல்லாம் வைத்திருக்கிறது. இனியும் ஆழமற்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. நாம் யார் என்பதன் மையத்துக்கு நாம் ஏன்கள் செல்ல வேண்டும். அதன்பின் நம்மை மாற்றிக் கொள்ளும் பயணம் துவங்க வேண்டும். நாம் நம்மை மீளுருவாக்கம் செய்து கொள்ள வேண்டும். ஏனோ நாகரீகம் தவறான திசையில் திரும்பி விட்டது, நாம் கூட்டாக நம் இலக்கைத் திருத்திக் கொள்ள வேண்டும், நம் பயணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். மானுட அழிவின் விளிம்பு வரை சென்று நிற்க இரண்டாம் வாய்ப்பு கிடைக்காது. இந்த விளிம்பைப் பிழைத்து விட்டால், நமக்காக காத்திருக்கும் யுகச்சந்தியை நெருங்காது பின்வாங்க முடியுமென்றால், புவி முழுமைக்கு, புவியில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஜீவிதமும் நீதியும் அழகும் அளிக்கும் உலகளாவிய திசை கண்டாக வேண்டும்.

நமக்கு இருக்கக்கூடிய மிகச் சிறந்த, மிக இயல்பான வீடு இதுவாகவே இருக்க முடியும். அதற்குரிய தகுதி கொண்டவர்களாய் நாம் இருக்க வேண்டுமென்றால் புதிய மனிதர்களாய் மாற வேண்டும். அதை மீள்கனவு காண நாம் புதுக்கலைஞர்களாய் மாறியிருக்க வேண்டும். எனவேதான் இருத்தல் சார்ந்த படைப்பூக்கத்தை முன்வைக்கிறேன், நாம் காலத்தின் தவிர்க்க இயலாத உண்மைக்கு ஊழியம் செய்வதற்கு என்று. எனவேதான் தரிசன இருத்தலியல் வேண்டுமென்கிறேன், சுற்றுச்சூழல் பேரழிவின் விளிம்பிலிருந்து நாம் மீட்டெடுக்கக் கூடிய எதிர்காலத்துக்கு ஊழியம் செய்வதற்கு என்று.

இன்று நாம் எதிர்கொள்ளும் உண்மையின் ஆழத்திலிருந்து மட்டுமே எதிர்காலத்தை வளர்த்தெடுக்க முடியும்.

நன்றி – The Guardian 

’எம்மை’ என்றனென் யானே’

வளவ. துரையன்

 

ஐங்குறுநூற்றில் ஓர் அழகான காட்சியைப் பார்க்க முடிகிறது. தலைவனும் தலைவியும் சந்திக்கின்றனர். ஒருவரை ஒருவர் விரும்பி மனம் பறிகொடுக்கின்றனர். தனிமையில் சந்தித்துப் பழகுகின்றனர். இது ஊர் முற்றும் பரவுகிறது. அவனையும் அவளையும் இணைத்துப் பேசுகின்றனர். இதைச் சங்க இலக்கியம் அலர் தூற்றுதல் என்று கூறுகிறது. இன்றோ அவள் ஓடிப்போய்விட்டாள் எனக் கொச்சையாகக் கூறுவர். சூழலைப் பொருத்து ஆணவக் கொலையும் கூட விழும். தலைவியின் செவிகளிலும் அலர் தூற்றல் விழுகிறது. அவளின் அன்னையும் இச்செய்தியைக் கேள்விப்படுகிறாள்.

தலைவி தன் தோழியிடம் இது பற்றி, “தோழியே! உனக்குத் தெரியுமா? நேற்று ஊரார் கடற்கரைத் துறைவர்க்கு என்னை மனைவி என்று கூறினார்களாம். அது கேட்ட என் அன்னை சினந்தாள். நேராக என்னிடம் வந்தாள். என்னிடம், “நீ என்ன அவனுக்கு மனைவியா? அத்தன்மையானவளா? என்று கேட்டாள். நான் மெல்லிய குரலில் ”ஆமாம்! ஊரார் சொல்வதெல்லாம் என்னைத்தான்” என்று மொழிந்தேன்” என்று கூறினாள்.

ஊராருக்கும் ஏதோ அச்சம்; இவர்கள் மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்றே அவர்கள் எண்ணுகிறார்கள். அதனால்தான் இன்னும் மணமாகலே இருப்பவளை அவன் மனைவி எனக் கூறுகிறார்கள். அத்துடன் அவனைப் பற்றிச் சொல்லும்போது, “வெண்மணலைச் சிதைக்கும் கடற்கரைத் துறைவன் என அவன் குணம் பற்றி உரைக்கிறார்கள். ”அவன் இவளை மறந்து போய்விடப் போகிறானே” என்று அவர்கள் அஞ்சுவது இதன் மூலம் தெரிகிறது.

தலைவியும் தன் காதலைத் தெரிவிக்க இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறாள். அதனால்தான் துணிவாக அதே நேரத்தில் பைய, அதாவது பெண்களுக்கே உரிய நாணம் வர மெல்லிய குரலில் ஊரார் என்னைத்தான் சொல்வதாகத் தாயிடம் கூறுகிறாள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை பெண்மையின் அணிகலன்களாக அக்காலத்தில் கருதப்பட்டன. தோழிக்குரைத்த பத்து எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்பகுதியில் உள்ளப் பத்துப் பாடல்களுமே தலைவி கூற்றாகத்தான் இருக்கின்றன. அதில் மூன்றாம் பாடல் இதுவாகும்.

”அம்ம வாழி, தோழி! நென்னல்
ஓங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவற்கு,
ஊரார், பெண்டுஎன மொழிய, என்னை,
அதுகேட்டு ‘அன்னாய்’ என்றனள், அன்னை;
பைய ‘எம்மை’ என்றனென் யானே”

[நென்னல்=நேற்று; உடைக்கும்=சிதைக்கும்; பெண்டு=மனைவி; அன்னாய்=அத்தன்மையவள்; பைய=மெதுவாக]

மற்றுமொரு நாடகக் காட்சியையும் ஐந்தாம் பாடலில் பார்க்கலாம்.

”அம்ம வாழி, தோழி! பல்மாண்
நுண்மணல் அடைகரை நாமோடு ஆடிய
தண்ணம் துறைவன் மறைஇ
அன்னை அருங்கடி வந்து நின்றோனே”

[மரைகி=மறைந்து; அருங்கடி=அரிய காவல்; மாண்=சிறப்பு]

முன்பு அவன் வந்தான். அவளுடன் கலந்தான். இருவரும் கடலில் ஆடினார்கள். அன்னைக்கு இது தெரிந்தது. அவள் அச்சப்பட்டாள். அன்னையர் எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரிதான் போலும். பெண்ணைக் காத்துக் கடிமணம் செய்து வைத்தல் அரிய செயல்தானே? எனவே அன்னை தன் மகளை வீட்டிலேயே சிறை வைத்தாள். அவன் விடுவானா? இப்பொழுதும் பார்க்கவேண்டி மனைப்புறத்தில் வந்து நிற்கிறான். இதைக்கண்ட தலைவி தன் தோழியிடம் கூறுவதுதான் இப்பாடல். அவன் வந்து நிற்பது அவளுக்கு மகிழ்ச்சியாகவும் அச்சமாகவும் இருப்பதைப் பாடல் மறைமுகமாக விளக்குகிறது.

எக்காலத்திலும் ஆடவர் பெண்களை விரும்புவார்கள். ஆனால் உடன் மணம் புரிய எண்ணாமல் காலம் தாழ்த்துவார்கள் போலும். ”அவன் இன்னும் மணம் புரிய ஆர்வமில்லாமல் இருக்கிறான் தோழி! திருமணத்திற்கு வேண்டிய செயல்களையும் செய்யவில்லை. புறம்பானவற்றைச் செய்கிறான். அதனால் அவன் என் மீது அன்பு இல்லாதவன் போலத் தோன்றுகிறான்” என்கிறாள் தலைவி இப்பத்தின் இறுதிப்பாடலில்.

”அம்ம வாழி, தோழி! நன்றும்
எய்யா மையின் ஏதில பற்றி,
அன்புஇலன் மன்ற பெரிதே
மென்புலக் கொண்கன் வாரா தோனே.”

[எய்யாமை=அறியாமை; ஏதில=தொடர்பற்ற]

தலைவன் இப்படி அறியாமையில் இருக்கிறானே எனத் தலைவி வருந்துவதும், ஏதிலவற்றைச் செய்பவனாகவும் இருக்கிறானே எனத் தலைவி கவலைப்படுவதும் பாடலில் தெளிவாகிறது. அதே நேரத்தில் அவன் புறம்பாக என்ன செய்தான் எனக் கூறவில்லை. அவனை இந்த நிலையிலும் தலைவி அதிகமாகக் குறை கூறாததுதான் அவள் செம்மையைக் காட்டி அவளை மேலும் மேலும் உயர்த்துகிறது எனலாம்.

 

அன்னது ஆகலும் அறியாள்

வளவ. துரையன்

வயலும் வயலைச் சார்ந்த இடங்களும் மருதம் என வகைப் படுத்தப்பட்டது. சங்கப் பாடல்களில் மருத நிலத்தின் இயற்கைக் காட்சிகள் அழகாகப் புனைந்துரைக்கப்பட்டுள்ளன. ஒரு வயலில் தானியங்கள் விளைந்து முற்றி இருக்கின்றன. அவற்றைத் தின்ன வரும் பறவைகளைப் பறைகொட்டி விரட்டுகின்றனர். அவர்களை “அரிப்பரை வினைஞர்” எனப் பாடல் காட்டுகிறது. அந்த வயலில் குருகுகள் நிறைய மேய்கின்றன. அக்குருகுகள் அவ்வயலில் இருக்கும் ஆமைகளைப் பிடித்துத் தின்கின்றன. அந்த ஆமைகளின் வெண்மையான தசையை முழுதும் உண்ணாமல் மிச்சம் வைத்துவிட்டுப் போகின்றன. பறை கொட்டுபவர்கள் அந்த மிச்சத்தைத் தங்கள் உணவாக உண்கின்றனர்.

இக்காட்சியைச் சொல்லிப் பரத்தை தலைவனின் பாங்காயினர் கேட்கக் கூறுகிறாள். “மிகுதியான அழகான மலர்களால் பொய்கை அழகு பெறும் வளங்கொண்ட நாடன் ஊரனே! நீ என்னை விரும்புகிறேன் என்று உரைக்கிறாய்; இதைக் கேட்டால் உன் மனைவி மிகவும் வருந்துவாள்”

குருகு உண்ட மிச்சத்தை உண்ணும் பறை கொட்டுபவர் போல தலைவன் தன் மனைவியை விட்டுவிட்டுப் பரத்தையிடம் வந்து இன்பம் துய்க்கிறான் என்பது உள்ளுறைப் பொருளாகும். ஐங்குறுநூறில் உள்ள மருதத் திணையில் புலவி விராய பத்தின் முதல் பாடலில் இதைக் காணமுடிகிறது. புலவி என்பது ஊடலைக் குறிக்கும். இப்பகுதியின் பாடல்கள் எல்லாம் ஊடலின் பொருட்டு எழுந்தவையாகும். தலைவி, தோழி, மற்றும் பரத்தை ஆகியோரின் கூற்றுகளாக அமைந்துள்ளன. இப்பாடல்கள் தாங்களே கண்டவற்றை உரைப்பனவாகவும், தூது வருபவர்களிடம் மறுப்புரை கூறுவதாகவும் அமைந்துள்ளதால் இப்பகுதி ”புலவி விராய பத்து” என்று பெயர் பெற்றுள்ளது. பாடல் இதோ:

”குருகுஉடைத்து உண்ட வெள்அகட்டு யாமை
அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும்,
மலர்அணி வாயில் பொய்கை, ஊரநீ
என்னை ‘நயந்தனென்’ என்றிநின்
மனையோள் கேட்கின், வருந்துவள் பெரிதே”.

தலைவி கூற்றாக வரும் ஒரு பாடலைப் பார்ப்போம். இப்பாடல் தலைவி தலைவனிடம் சினம் கொண்டு ஊடி உரைப்பது போல் உள்ளது. அவள் தலைவனிடம் அனைப்பற்றி நேரடியாகவே குற்றம் கூறுகிறாள். “நீ என்னை மணந்துகொண்ட கணவன்; ஆனால் நீ என்மீது அன்பு செலுத்தவில்லை” என்கிறாள். பாடலில், “மணந்தனை அருளாய் ஆயினும்” எனும் சொற்கள் இதைக் காட்டுகின்றன. மேலும் அவள் பொய்க்கோபமாக, “நீ குளிர்ச்சியாக நீர்த்துறைகள் உள்ள உன்னுடைய ஊருக்குச் செல்வாயாக. அங்கே வாழும் பரத்தையர்களிடம் சேர்ந்து அவர்களும் உன் பெண்டிரே என ஊரார் மொழியும் அளவிற்கு என்னை விட்டுப் பிரிந்து செல்வாயாக” எனக் கூறுகிறாள்.

பரத்தையர் பற்றிப் பொறாமையுடன் சினந்து கூறும்போது கூடத் தலைவி, அவர்களை, “ஒண்தொடி” என்ற சொல்லால் ஒளி பொருந்திய வளையல்களைப் பூண்டவர்கள் என வருணிக்கும் பாங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் ”நீ அவர்களைச் சேர்ந்தால் மணந்த தலைவியை விட்டுவிட்டு இவர்களிடம் சேர்ந்திருக்கிறானே” என்று ஊரார் பழிப்பர் என்பதை மறைபொருளாக அவனுக்குத் தெரிவிக்கிறாள். புலவி விராய பத்தின் மூன்றாம் பாடல் இது.

”மணந்தனை அருளாய் ஆயினும், பைபயத்
தணந்தனை ஆகி, உய்ம்மோ நும்ஊர்
ஒண்தொடி முன்கை ஆயமும்
தண்துறை ஊரன் பெண்டுஎனப் படற்கே”

இப்பத்தின் நான்காம் பாடல் தோழி கூற்றாக அமைந்துள்ளது. அக்காலப் பெண்டிர் தம் கூந்தலை ஐந்தாக வகுத்துப் பின்னி இருந்தனர் என இப்பாடலில் உள்ள ஐம்பால் மகளிர்” எனும் சொல் காட்டுகிறது.

”செவியின் கேட்பினும் சொல்இறந்து வெகுள்வோள்,
கண்ணின் காணின், என்ஆ குவள்கொல்
நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போல,
பலர்படிந்து உண்ணும்நின் பரத்தை மார்பே?”

பெண்கள் தைத் திங்களில் குளிர்ச்சி பொருந்திய குளங்களில் நீராடும் வழக்கம் இருந்ததையும் இப்பாடல் காட்டுகிறது. மேலும் அக்குளமானது தலைவனின் மார்புக்கு உவமையாகச் சொல்லப்படுகிறது. “பலர் வந்து நீராடும் குளம் போல உன் மார்பு பரத்தையர் வந்து படியும் தன்மை உடையது என ஊரார் பேசுகின்றனர். அதைக் காதால் கேட்டாலே உன் தலைவி சினம் அடைகிறாள். நீ இப்பொழுது பரத்தை இல்லில் தங்கிய குறிகளுடன் வந்திருக்கிறாய்; தலைவி இப்பொழுது உன்னைக் கண்ணால் கண்டால் என்ன ஆவளோ?” எனத் தலைவி கூறுகிறாள்.

அடுத்த பாடலில் தலைவி, தலைவனைப் பார்த்து, “ஊரனே! உன் செயல் சிறுபிள்ளைகள் செய்வதைப் போல இருக்கிறது. இதைக் கண்டு ஊர்ப்பெரியவர்கள் எள்ளி நகையாட மாட்டார்களா?” எனக் கேட்கிறாள். மேலும் உன் ஊரில் சம்பங்கோழி அதன் பெடையோடு இணைந்து வாழ்கிறது என்று கூறி பறவையே அப்படி வாழ்கையில் அது போல நீ இருக்க வேண்டாமா எனக் குறிப்பாகக் கூறுகிறாள். கம்புள் என்பது சம்பங்கோழியைக் குறிக்கும். சம்பங்கோழியைக் கூட வெண்மையான நெற்றி உடையது எனும் பொருளில், “வெண்நுதல்” என வருணிக்கும் பாங்கு குறிப்பிடத்தக்கது.

இதோ ஐந்தாம் பாடல்:

”வெண்நுதல் கம்புள் அரிக்குரல் பேடை
தண்நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்
மறுஇல் யாணர் மலிகேழ் ஊரநீ
சிறுவரின் இனைய செய்தி;
அகாரோ பெருமநின் கண்டிசி னோரே”

பரத்தை கூற்றாக புலவி விராய பத்தின் எட்டாம் பாடல் விளங்குகிறது.

”வண்துறை நயவரும் வளமலர்ப் பொய்கைத்
தண்துறை ஊரனை, எவ்வை எம்வயின்
வருதல் வேண்டுதும் என்பது
ஒல்லேம் போல்யாம் அதுவேண் டுதுமே.”

”பரத்தையானவள் தன்னிடம் தலைவன் வந்து சேர்வதை விருப்பம் இல்லாதது போலக் காட்டுவாள்; ஆனால் அவள் விரும்பிக் கொண்டிருக்கிறாள்: அதுபோலிருக்கத் தன்னல் இயலாது” எனத் தலைவி கூறுகிறாள். அதைக் கேட்ட பரத்தை ‘ஆமாம்; நாங்கள் விரும்புகின்றோம். ஆனால் அதை வெளியில் சொல்லமாட்டோம். அதற்கு உடன்படாத்து போலக் காட்டி மனத்துள் உடன்படுகின்றோம்” எனக் கூறுகிறாள்.

வண்டானது மலர்விட்டு மலர் சென்று தேன் உண்ணுதலை தலைவன் பரத்தையரிடம் சென்று இன்பம் துய்த்தலுக்கு உவமையாகப் பல பாடல்களும் இது போல் சொல்லி இருக்கின்றன. தலைவன் ஊரில் வண்டுகள் தங்கும் வளமான மலர்கள் உள்ளன என்று இங்கு குறிப்பாக மறைபொருளாகச் சொல்லப்படுகிறது. தலைவியை உறவு முறையாகப் பரத்தை தமக்கை என்றழைக்கிறாள். ’எவ்வை’ எனும் சொல் அதைக் காட்டுகிறது.

இது பத்தாம் பாடல்:

மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல்?
வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல்?
அன்னது ஆகலும் அறியாள்,
எம்மொடு புலக்கும்அவன் புதல்வன் தாயே”

இப்பாடலில் பரத்தை ’புதல்வனின் தாய்’ எனத் தலைவியைக் காட்டுவதிலிருந்து மணமாகி சில ஆண்டுகள் தலைவியுடன் வாழ்ந்த பின் புதல்வனும் பிறந்தபின்னர் தலைவன் பரத்தை இல் சென்றுள்ளான் எனபது புலனாகிறது. இப்பாடலிலும் பல மலர்களுக்குச் சென்று வரும் வண்டு தலைவனுக்கு உவமையாகக் கூறப்படுகின்றது. தன்னிடமிருந்து தலைவனைப் பரத்தைதான் விலக்குகின்றாள் எனத் தலைவி கூறுவதைக் கேட்ட பரத்தை கூறுவது போல் அமைந்த பாடல் இதுவாகும்.

”வண்டு பல மலர்களிடம் சென்று தேனை உண்ணல் மரபு. தலைவனும் அதே போன்று பல பரத்தையரிடம் சென்று இன்பம் துய்க்கிறான். தலைவன் குணத்தை வண்டுகள் பெற்றனவா? இல்லை வண்டின் குணத்தைத் தலைவன் பெற்றானா என்பது தெரியவில்லை; அப்படி இருக்கத் தலைவனுடன் கலந்து புதல்வனைப் பெற்ற தலைவி எம்மைக் குறை கூறுகிறாளே” என்பது பரத்தை கூற்றாகும்.

சில ஆண்டுகள் பழகியபின்னரும் தலைவனின் குணத்தைத் தலைவி அறியவில்லையே என்பதை மறைமுகமாகக் காட்டவே இந்த இடத்தில் புதல்வனைக் குறிப்பிடுகின்றாள். “அன்னது ஆகலும் அறியாள்” என்ற சொறோடர் இதைத் தெரியப்படுத்துகிறது.

இவ்வாறு இயற்கைக் காட்சிகளைக் காட்டி அவற்றின் வழி தலைவன் மற்றும் பரத்தை போன்றோரின் வாழ்முறைகளையும் ஐங்குறு நூறு காட்டுகிறது எனலாம்.