அர்ஜூன் ராச்
ஒருநாள்
மனதில் கல்லெறிந்து கொள்ளாமலும்
மனதை கல்லாக்கிக் கொள்ளாமலும்
இருந்தேன்
நினைவுகளின் வலியை
சொரிந்து கொள்ளாமலும்
கனவின் விடியொளியில்
நிலா காயாமலுமிருந்தேன்
யாரையும் பகைத்தோ நேசித்தோ வைக்காமாலிருந்தேன்
சந்தித்தும் பேசாமலும்.
தொலைத்துக் கொள்ளலாம் அல்லது
ஞாயிலாகிக் கொள்ளலாம் என்றெண்ணி
வேண்டாமென
காணாமல் போனதாக இருந்துவிட்டேன்
ரோட்டைப் பார்த்து வண்டியோட்டுவது போலவும்
நாவிதரின் சவரப்பணிக்கு கட்டுப்படுவது போலவும்
ஒரு முகம் ஒப்புவித்திருந்தேன்
நிரம்பிய தண்ணீர் குடத்தோடு
நடை சென்றுவரும் வரை
இரண்டாவது குடம்
நிரவலாக விடுவது போல்
பசியைப் பார்த்துக் கொண்டேன்
அன்றிரவு நின்மதியாக
உறங்கி விடிந்ததும்
இமைப்பிரித்துப் பார்க்க
சூக்கும நிலையில்
கண்கள் கனவுத் தடங்களற்ற
குருடாக இருந்தன
எல்லோருமிருந்திருந்திருந்த
இடத்தினில் யாருமே
இல்லாமலிருந்ததுபோல் எனக்கு
இருள்மயமாக இருந்தது
“திடீரென அலன்று
பயமாக இருக்கிறதென்று சொன்னேன்
கெட்டகனவு கண்டிருப்பீர்
அமைதியாக இமை பொருத்திக் கொள்ளச் சொன்னாள்
இல்லை.
அது இனிதாகத்தானிருந்ததென்று
சொல்வதற்குள்
அலறியதைப் பற்றிக் குழம்பிக்கொண்டே
நா குழற படுத்துக்கொண்டேன்
இப்போது தூல நிலை துலங்கித்தர
கனவு வருவதுபோல்
கனவுகள் வரலாம்
ஆயினும் நான்
அலறாமலிருந்திருக்கலாம்