கவிதை

இல்லாதது

ரகுராவணன்

வராத வாந்தி தலைசுற்றல் மயக்கம்
புளிக்காத மாங்காய்
தீராத சாம்பல்
வெளுத்துப் போன பாய்
அலுத்துப் போன உடல்
சலித்துப் போன சாமி
கொழுத்துப் போன டாக்டர்
நீளாத மாதம்
ஓயாத வாய்கள்
ஆட்டாத தொட்டில்
தூக்காத குழந்தை
போகாத கல்யாணம் காதுகுத்து
பெயர் சூட்டு பிறந்தநாள் விழாக்கள்.
இன்று பக்கத்து வீட்டில் சீமந்தம்.
அழுகின்ற குழந்தைக்கு ஆறுதல்
கூறுகிறான் கணவன்

ஏடாதி கவிதைகள்

ஏடாதி

1.

திறந்திருக்கும் வாசல்
சுழட்டிப் பெய்யும் மழை
கட்டற்ற வெளியில்
கட்டியணைக்கும் இருள்
யானைக் காதின்
மடல் அது போல
வீசும் காற்றில்
வருடும் மேனியில்
முளைவிடும் வித்துக்கள்
வேர்களை ஆழ ஊன்றுகிறது
ஒத்த வீட்டின்
மேவிய குழிமேட்டில்…

2.

எத்தனிக்கும்
களைந்த மதியத்தில்
இளைப்பாறும் கனத்தில்
கிணத்து மேட்டில்
கீற்றசைக்கும் தென்னை
விரித்துகாயும்
அவள் நரையை
அள்ளி வருடியது

புற்றிலிருந்து
தப்பிவந்து
அசந்துறங்கும்
நடைஎறும்பாய்
முற்றிலும் துறவு பூண்ட
புத்தனைப் போல
ஆழ்ந்துறங்குகிறாள்
ஆளாங்குளத்தி

3.

இடையபட்டியில்
கிடையமர்த்தியவனுக்கு
உடைந்தது மண்டை
அடைக்கலம் கேட்டதனால்…

ஒரே வழித்தட பேருந்து
இனம் பிரித்தது
மகளிருக்காக மட்டுமென்று…

சாக்கடையிலும் கூட
தனியாக ஓடியது
மேலத்தெருவும் கீழத்தெருவும்…

பாவம் என்ன செய்தது
குடிசை வீடு
உறங்கும் நெடிய இரவில்
பற்ற வைத்தது
சிறகில்லாத மின்மினி…

4.

கதவு திறக்கையில்
தலை தட்டும்
மிளகாய் கொத்தும்
வேம்புக் கரித்துண்டும்
நிதம் தூவுகிறது அட்சதை….
துவைத்து போட்ட
அம்மாவின் நூற்சேலை
உறங்குகிறது அலமாரியில்
நீள் நாட்களாக
அணைத்துப் போர்த்தினேன்
அம்மாவின் கதகதப்பு
ஒட்டிக் கொண்டது

5.

வெட்டிவைத்த வாழைத்தார்
ஊதிப் பழுக்கிறது
மூடிய உழவர் சந்தையால்…

நிரம்பி வழிகிறது
கழணித் தண்ணீர்
சந்தைக்குப் போகும் வத்துபால்மாடு…

நடைஎறும்பின் வழியே
நானும் சென்றேன்
பக்கத்தில் புற்று…

நேற்று மேய்ந்த ஆடு
வத்தலாய் காய்கிறது இன்று
ஊர் பொங்கல்…

சிலுவையின் ஆணிகளிலிருந்து புறப்படும் கருணை

பா. சிவகுமார் 

காடோடி நாடோடி
பரிணாம வளர்ச்சியில்
வீடு கட்டி ஓரிடத்திலுறைந்து
திண்ணையைத் தனக்கொதுக்கி
வெற்றிலையை வாயிலதக்கி
ஊர்கதையைத் மென்றுத்தின்று
அடுக்களையைப் பெண்களுக்கு
தள்ளிவிட்டதில் இன்னமும்
இறக்கப்படாமலேயே இருக்கிறது
ஏற்றப்பட்ட சிலுவை

புதியதாக வாங்கப்பட்ட
வில்லாவில் உனக்கான
மாடூலார் கிச்சனைப் பார்
என்றவாறு சிலுவையில்
ஏற்றப்படுகின்றன
மென்ணாணிகள்

ஞாயிறந்தி
ஈருருளியில் சுற்றி
இரவுணவை உணவகத்தில்
கழிக்கலாமென்பதில்
சிலுவையின் ஆணிகளிலிருந்து
புறப்படுப்படுகிறது
அருட்பெருங்கருணை!

மக்கிரி நிறைய

தேஜஸ்

மக்கிரி நிறைய
பிரியங்களைக் குவித்து காத்திருக்கிறேன்..
தினை திருடும் கிளியாய்
பதுங்கிப் பறக்கும் உன் வருகை..
வேலன் வெறியாட்டு
வேட்கையோடே நிகழ்ந்தகன்ற பின்
விழா முடிந்த
கோயில் திடல் போல்
வெறிச்சோடிக் கிடக்கிறது மனசு..

புத்த வீர சாமி

காஸ்மிக் தூசி 

 

பிக்குகளின்
கனவில் வந்த பெருமழை
அவர்களை
ஆற்றைக் கடக்க விடாமல்
கரையில் நிறுத்தி விட்டது

பழைய
மேலாடைக்கு
குழந்தையின் குருதி ஊற்றி
நிறம் ஏற்றிக்கொண்டிருக்கிறான்
ஒரு முதிர்ந்த பிக்கு

கை தளர்ந்து
தாமரை மடிந்த ஆசனத்தின்
குமிழ் சிரிப்பில்
புத்தன் சிலை
குமிழி எழ ஆற்றின்
ஆழம் அமிழ,

காற்றில் துடி துடிக்கும்
குருதி நிறத் துணி போர்த்தி
மறுகரையில்
புதிதாய் எழுகிறார்,

விரிந்த பெருமார்புடன்
மீசை முறுக்கி,
முறைத்த விழியுடன் –

தோள் புடைக்க
கொடுவாள்
ஏந்தும்,
புத்த வீர
சாமி.