புத்த வீர சாமி

காஸ்மிக் தூசி 

 

பிக்குகளின்
கனவில் வந்த பெருமழை
அவர்களை
ஆற்றைக் கடக்க விடாமல்
கரையில் நிறுத்தி விட்டது

பழைய
மேலாடைக்கு
குழந்தையின் குருதி ஊற்றி
நிறம் ஏற்றிக்கொண்டிருக்கிறான்
ஒரு முதிர்ந்த பிக்கு

கை தளர்ந்து
தாமரை மடிந்த ஆசனத்தின்
குமிழ் சிரிப்பில்
புத்தன் சிலை
குமிழி எழ ஆற்றின்
ஆழம் அமிழ,

காற்றில் துடி துடிக்கும்
குருதி நிறத் துணி போர்த்தி
மறுகரையில்
புதிதாய் எழுகிறார்,

விரிந்த பெருமார்புடன்
மீசை முறுக்கி,
முறைத்த விழியுடன் –

தோள் புடைக்க
கொடுவாள்
ஏந்தும்,
புத்த வீர
சாமி.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.